Saturday, May 16, 2020

The Tiger: An Old Hunter's Tale (2015) - . 'புலி வேட்டை'






திரைப்பட மேக்கிங்கில் தென்கொரியர்கள் அசத்துகிறார்கள் என்பதை சொல்லி சொல்லி அலுத்து விட்டது. இதுவும் அப்படியொரு அபாரமான திரைப்படம். புலி ஓடும் காட்சியை எத்தனையோ படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அது கத்தியை காற்றில் சுழற்றி வீசிய மாதிரி இத்தனை அதிவேகமாக ஓரிடத்தைக் கடந்து செல்லக்கூடும் என்பதை இந்தப் படத்தில்தான் உணர முடிகிறது.

**

வருடம் 1925. கொரியா இரண்டாக பிரிவதற்கு முன்பிருந்த காலக்கட்டம். Chun Man-duk என்பவர் மிகத் திறமையான வேட்டைக்காரர். தன் இளமைக்காலத்தில் ஒரு புலியை மிக அருகிலிருந்து சுட்டு வீழ்த்தும் சாகசக் காட்சியோடு படம் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் அவர் வேட்டையை நிறுத்தி விடுகிறார். அதற்கான காரணம் என்ன?

கொரியா அப்போது ஜப்பானின் பிடியில் இருக்கிறது. அங்குள்ள புலிகள் எல்லாம் ஜப்பானிய வீரர்களால் வேட்டையாடப்படுகின்றன. ஆனால் படைத்தளபதிக்கு இதில் திருப்தியில்லை. அங்குள்ள மிகப்பெரிய ஒரு புலியின் மீதுதான் அவருக்கு ஆர்வம். மலைக்கடவுளாக கருதப்படும் அந்தப் புலியை வேட்டையாடுவது அத்தனை சுலபமான பணியில்லை. அது பல வருடங்களாக எவர் கண்ணிற்கும் படுவதில்லை. ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும்’ என்பது போல் அந்தப் புலியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவிடுகிறார். இதற்காக எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் அனுப்பத் தயாராக இருக்கிறார்.

**

வேட்டைக்காரர் Man-duk –க்கிற்கு ஒரு மகன். அவரது மனைவி புலியால் கொல்லப்பட்டு விடுவதால் மகனை பாசத்தோடு வளர்த்து வருகிறார். தன் தந்தை மற்றவர்கள் போல் நகரத்தில் வாழாமல், பணத்தை சம்பாதிக்க விரும்பாமல் மூலிகையை விற்று காட்டின் நடுவில் ஏன் வாழ்கிறார் என்று அவனுக்கு குழப்பமாக இருக்கிறது. ‘இயற்கைதான் நம்முடைய கடவுள்’ என்று உபதேசிக்கிறார் மான்-டக்.

வளரிளம் பருவத்தில் இருக்கும் அவனுக்கு ஒரு காதலி. அவளை வேறு இடத்தில் மணம் செய்து தரவிருக்கும் செய்தியைக் கேட்டு துடித்துப் போய் விடுகிறான். ‘பணமில்லாமல் வெறும் வேட்டைக்காரனாக இருக்கும் உனக்கு யார் பெண் தருவார்கள்?’ என்கிறார்கள்.

**

எத்தனை வீரர்கள் சென்றாலும் பெரிய புலியை வேட்டையாட முடியவேயில்லை. அது பெரும்பாலானவர்களை ஆவேசத்துடன் கொன்று விடுகிறது. தோல்வியுடன் திரும்புகிறார்கள். வேட்டையாடுவதில் அனுபவஸ்தனான மான்-டக் இருந்தால்தான் அது சாத்தியம் என்பது உறுதியாகிறது. அவரால் புலியின் தடயங்களை அறிய முடியும்.

ஆனால் மான்-டக் தன்னால் இனி வேட்டையாட முடியாது என்று மறுத்து விடுகிறார். நிறையப் பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டினாலும் அவர் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மான்-டக்கின் மகன் தான் வருவதாகச் சொல்கிறான். ‘நான் சிறந்த வேட்டைக்காரனின் மகன். என்னால் முடியும்’ என்கிறான். பணம் கிடைத்தால் திருமணம் நடக்கும் என்பது அவனின் நோக்கம். தன் தந்தைக்குத் தெரியாமல் வேட்டைக்காரர்களுடன் கிளம்புகிறான். ‘அவன் ஒருசிறுவன், விட்டு விடலாம்’ என்று ஒரு முதியவர் சொல்வதை குழுத்தலைவன் ஏற்பதில்லை. எப்படியாவது அந்தப் புலியை வெல்வது என்கிற வெறி மட்டுமே அவனுக்கு இருக்கிறது. தன் மகனைத் தேடி மான்-டக் வருவார் என்பதும் அவனது திட்டம்.

**

எம்ஜிஆர் வில்லனின் ஆட்களை ஸ்டைலாக அடித்துப் போடுவது போல, அனுபவமுள்ள படைவீரர்கள் பலரையும் புலி ஆவேசமாக குதறிப் போடுகிறது. தெறித்துப் பயந்து ஓடித் தப்பிக்கிறார்கள். மான்-டக் கின் மகன் தாக்குதலுக்கு உள்ளாகிறான். குற்றுயிராக கிடக்கும் நிலையில்தான் தன் தந்தையின் அருமையை உணர்கிறான். அவனுடைய உடலை ஓநாய்கள் இழுத்துப் போகின்றன. பெரிய புலி அங்கு வந்து ஓநாய்களை உறுமித் துரத்தி விட்டு சிறுவனின் உடலிற்கு காவலாய் நிற்கிறது.

தன் மகனைக் காணாமல் எங்கெங்கோ தேடும் மான்-டக் சோர்வுடன் வீட்டில் வந்து விழுகிறார். விநோதமான சப்தம் கேட்டு திரும்பும் அவர் அந்தக் காட்சியைப் பார்க்கிறார். அவருடைய மகனின் உடலை புலி வந்து போட்டு விட்டு திரும்பிப் போகிறது.

இப்போது பிளாஷ் –பேக்.  திரைப்படத்தின் துவக்க காட்சியில் மான் –டக் ஒரு புலியை சுட்டு வீழ்த்துகிறார் அல்லவா, அதன் கூட இரண்டு குட்டிகள் உள்ளன. அவை மான் –டக்கை நோக்கி ஆவேசமாய் உறுமுகின்றன. கூட இருக்கிறவர்கள் அந்தக் குட்டிகளையும் கொன்று எடுத்துச் செல்லலாம் எ்னகிறார்கள். ஆனால் மான்-டக் அதை உறுதியாக மறுத்து விடுகிறார். அந்தக் குட்டிகளின் துயரம் அவரை வெகுவாய் மாற்றி விடுகிறது.  இரண்டு குட்டிகளையும் தூக்கிச் சென்று ஒரு பாதுகாப்பான குகையில் விட்டு தினமும் உணவு தருகிறார். அந்தக் குட்டிகளில் ஒன்றுதான் இப்போது பெரிய புலியாக வளர்ந்து அவனது மகனது உடலை எடுத்து வந்திருக்கிறது.

**

இத்தனை படை வீரர்கள் சென்றும் புலியைப் பிடிக்க முடியாததால் படைத்தளபதி கோபமடைகிறார். இன்னமும் அனுபவம் வாய்ந்த வீரர்களைத் திரட்டுகிறார். புலியை வீழ்த்துவதை கவுரவ பிரச்சினையாகவே எடுக்கிறார். காடு பூராவும் வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. பல மரங்கள் வீழ்கின்றன.

மான்-டக் மிக சிரமப்பட்டு ஒரு மலையுச்சியை ஏறி அடைகிறார். புலியும் அங்கு வருகிறது. முன்கூட்டிய ஒப்பந்தம் போல இருவரும் நிற்கிறார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு தன் துப்பாக்கியை எடுக்கும் மான்-டக், எழுதப்பட்ட நாடகத்தின் படி தன்னை நோக்கி பாய்ந்து வரும் புலியை சுட்டு வீழ்த்துகிறார். பிறகு மலையுச்சியின் ஓரத்தில் நின்று புலியை அழைக்கிறார். புலி மறுபடியும் பாய்ந்து வர இரண்டு பேருமே மலையுச்சியில் இருந்து கீழே விழுகிறார்கள்.

இயற்கையை மதிக்கும் மனிதனை இயற்கையும் நேசிக்கும் என்கிற செய்தியைச் சொல்வது போல இருவரின் உடல்களும் பிணைந்தபடி கிடக்கின்றன.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: