Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Thursday, June 23, 2022

பெங்களூர் இரவிச்சந்திரன் சிறுகதைகள் - மீள்பிரசுரம் - முன்னுரை


பெங்களூர் இரவிச்சந்திரனின் சிறுகதைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொகுக்ககப்பட்டு ஒரு புதிய பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.

oOo


நண்பர்களே….

எழுத்தாளர் இரவிச்சந்திரனை அறிந்து கொள்ளுங்கள். பெங்களூர் இரவிச்சந்திரன் என்றால், எண்பதுகளில் இலக்கியம் வாசித்த அன்பர்கள் சிலருக்கு சட்டென்று ஞாபகம் வரக்கூடும். அவர்களின் நினைவுகளில் இரவிச்சந்திரனின் பெயர் இன்னமும் கூட மங்காமல் பசுமையாக இருக்கக்கூடும்.

மற்றபடி தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் வரிசையில், காலத்தில் புதைந்து போன, அவசியம் மீட்டெடுத்தே ஆக வேண்டிய, சமகால வாசகர்களால் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஏராளமான நல்ல எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் இரவிச்சந்திரன் முக்கியமானவர். ‘மிடில் சினிமா’ மாதிரி, வெகுசன எழுத்தின் சுவாரசியமும் இலக்கியத்தின் மெல்லிய ஆர்வமும் கொண்ட வசீகரமான கலவைதான் இரவிச்சந்திரனின் எழுத்து

எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பால் எழுத வந்த இளம் எழுத்தாளர்கள், தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேராவது இருப்பார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர், சுஜாதாவின் எழுத்துப் பாணியை தேசலாக நகலெடுக்க முயன்று அந்த ஸ்டைலில் சிக்கி தேங்கி மறைந்து போயிருப்பார்கள். தனக்குப் பிடித்த ஆதர்சமான எழுத்தாளனை பின்பற்றுவது வேறு; அவனை நகலெடுக்க முயன்று தொலைந்து போவது வேறு. இந்த நோக்கில் பார்த்தால் சுஜாதாவின் பாதிப்பால் எழுத வந்தாலும் தனக்கென்று ஒரு பிரத்யேகமான பாதையை கண்டுபிடித்து அமைத்துக் கொண்டவர் இரவிச்சந்திரன். சுஜாதாவின் ஏறத்தாழ அதே துள்ளலான நடையும், பாய்ச்சலும், வேகமும், சுவாரசியமும் இருந்தாலும் இரவிச்சந்திரனின் எழுத்து வேறு விதமான ருசியைத் தரக்கூடியது.

சுஜாதாவின் நாவல்களில் வரும் ‘கணேஷ் மற்றும் வசந்த்’ பாத்திரங்களைப் பற்றி நமக்குத் தெரியும். சுஜாதாவிற்குள் ஒளிந்துள்ள இரண்டு எதிர்முனை ஆளுமைகளின் பிரதிபலிப்பு அது. கணேஷ் புத்திசாலி; விவேகமானவர். கணேஷிற்கு நிகராக வசந்த்தும் புத்திசாலிதான். ஆனால் தனக்கேயுரிய குறும்புகளைக் கொண்டவன். “டேய் சும்மா இர்ரா’ என்று கணேஷால் அவ்வப்போது அதட்டப்படும் அளவிற்கு பெண்களைக் கிண்டலடிப்பவன்; பின்தொடர்பவன். வசந்த் என்கிற இந்தப் புனைவுப்பாத்திரம் ஒருவேளை சிறுகதை எழுத வந்தால் அது இரவிச்சந்திரனைப் போல் இருக்குமோ என்று எனக்குள் தோன்றுவதுண்டு. அந்த அளவிற்கு துள்ளலான நகைச்சுவை இவரது எழுத்தில் உத்தரவாதமாக இருக்கும்.

oOo

இரவிச்சந்திரனின் ஊர் மல்லேஸ்வரம். தாய்மொழி தெலுங்கு. என்றாலும் பல தமிழர்களே வெட்கப்படும் அளவிற்கு இந்த மொழியை அத்தனை லாகவமாகப் பயன்படுத்தியவர். ‘தமிழை கற்றுத் தந்தது கவிஞர் புவியரசு’ என்று தன்னை கவிஞரின் மாணவனாக சொல்லிக் கொள்ளும் இரவிச்சந்திரன், ‘தமிழைப் பழக்கியது சுஜாதா’ என்கிறார். ‘இந்தத் தொகுப்பு மட்டுமல்ல, இனி வரவிருக்கும் அனைத்துத் தொகுப்புகளும் சுஜாதாவிற்கு சமர்ப்பணம்” என்று ஒரு முன்னுரையில் விசுவாசமாக எழுதுகிறார். அத்தனை உயர்வான நட்பையும் மரியாதையையும் சுஜாதா மீது வைத்திருக்கிறார்.

நானறிந்த வரை, இதுவரை வெளிவந்திருக்கும் இரவிச்சந்திரனின் சிறுகதைத் தொகுப்புகள் நான்கு. இந்திராகாந்தியின் இரண்டாவது முகம், சிந்து சமவெளி நாகரிகம், இந்திய பாஸ்போர்ட், இனி ஒரு விதி செய்வோம். இதில் முதல் இரண்டு தொகுப்புகளின் அனைத்துக் கதைகளையும் இந்த நூலில் நீங்கள் வாசிக்க முடியும். இது தவிர, ‘இன்று கொலை நாளை விலை’ என்றொரு நாவலையும் இரவிச்சந்திரன் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.

‘பிரபலம் தரும் போதைக்காகத்தான் எழுதுகிறேன். தமிழில் சிறுகதைகள், நாவல்கள் இன்னமும் குப்பையாகத்தான் இருக்கின்றன. அதற்கு என் எழுத்தே சாட்சி’ என்று தன்னைப் பற்றி இரவிச்சந்திரன் சுயபரிசீல நேர்மையுடன் சொல்லிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் அவரே ‘எதுவெல்லாம் இரண்டாம் முறை வாசிக்கத் தூண்டுகிறதோ, அவையெல்லாம் இலக்கியம்’ என்றும் சொல்கிறார். பிந்தைய அளவுகோலின்படி இரவிச்சந்திரனின் சில சிறுகதைகள் உன்னதமானவை என்று சொல்ல முடியும். எண்பதுகளில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதைகளை இன்றைய தேதியில் வாசித்தாலும் அத்தனை இளமையாகவும் புத்துணர்ச்சி தருவதாகவும் இருக்கிறது. வாசித்த பிறகு நீங்களும் என்னுடன் உடன்படுவீர்கள் என்கிற நம்பிக்கையுண்டு.

oOo

‘மத்தியதர வாழ்க்கையின் பிரச்சினைகளைப் பற்றி விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்’ என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டாலும், இந்த நூலில் உள்ள இரவிச்சந்திரனின் கதைகள் வெவ்வேறு வண்ணங்களில், விதங்களில், பாணிகளில் இருப்பது சுவாரசியமூட்டுவதாக இருக்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றிய பல்வேறு பிம்பங்களை நாம் அறிந்திருந்தாலும் சட்டென்று நினைவுக்கு வருவது ‘எமர்ஜென்சி’ என்கிற கசப்பான காலக்கட்டம்தான்.  என்றாலும் அந்த இரும்புப் பெண்மணிக்குள் பூ மாதிரி இருக்கிற இன்னொரு பிம்பம், ‘இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்’ என்கிற சிறுகதையில் சிறப்பாக பதிவாகியிருக்கிறது. கணவரை இழந்த ஒரு பெண், நாட்டின்  பிரதமரை சந்திக்கச் செல்லும் சூழலை மிகுந்த நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார் இரவிச்சந்திரன். கதையின் இறுதி வரியை வாசிக்கும் போது உங்கள் மனதில் தன்னிச்சையான சலனமும் நெகிழ்வும் ஏற்படக்கூடும்.

ஒரு வளரிளம் சிறுவனின் சாகசங்கள், விடலைக் காதல்கள் என்கிற வகையில் சில சிறுகதைகள் சுமாராக பயணிக்கும் போது அதன் எதிர்முனையில் ‘சிந்து வெளி நாகரிகம்’ என்கிற கதை முற்றிலும் வேறு வகையிலான பின்னணியில் இயங்கி ஆச்சரியமூட்டுகிறது. ‘கோதை பிறந்த ஊர்’ என்பது இன்னொரு வசீகரமான கதை. ‘சந்திரலேகா’ நிச்சயம் பெண்ணியவாதிகளுக்கு ஆட்சேபம் ஏற்படுத்தக்கூடிய விவகாரமான கதை. அப்துல்ரகுமானின் புதுக்கவிதையுடன் துவங்கும் ‘சுயம்வரம்’ கதையில் நிச்சயம் ஒரு அட்டகாசமான மின்சாரம் இருக்கிறது.

தமிழ் ஈழப் பிரச்சினை என்பது எண்பதுகளில் கொதிநிலையுடன் இருந்த ஒரு துயரம். அந்தத் துயர ஆவேசத்தில் தமிழகத் தமிழர்களும் உணர்வுபூர்வமாக இணைந்திருந்தார்கள். இதன் ஆத்மார்த்தமான பிரதிபலிப்பை ‘காத்திருந்தார்கள்’ என்று ஒற்றை வார்த்தையுடன் துவங்கும் ‘சொந்தச் சகோதரர்கள்’ என்கிற கதையில் காண முடியும். ‘முற்றிலும் இந்திய அரசுக்குச் சொந்தமானது’ என்கிற கதையில் நாம் பலமுறை பழகியிருக்கும் ஒரு அழகான துரோகம் வெளிப்படுகிறது.

சுஜாதா சொன்னது மாதிரி இரவிச்சந்திரனிடம் அடுத்த வார்த்தையில் அனைத்தையும் சொல்லி விட வேண்டும் என்கிற துடிப்பும் பாய்ச்சலும் இருக்கிறது. இந்த மாயத்தை அவரது எழுத்தால் அநாயசமாக நிகழ்த்தி விட முடிகிறது. இதுவே இரவிச்சந்திரனின் ஆதாரமான பலம். இளம் எழுத்தாளர்களுக்கு அவசியப்படுவதும் கூட.

oOo

எனக்கு இரவிச்சந்திரன் அறிமுகம் ஆகியது, சுஜாதாவின் வாசகர் ஒருவரின் மூலம். சுஜாதாவைப் பற்றி அவரிடம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது ‘எனில் இரவிச்சந்திரனை வாசித்திருக்கிறீர்களா? உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்’ என்று இந்திய பாஸ்போர்ட் தொகுப்பை கையில் திணித்தார். வாசித்தேன். எனக்கு உடனே உடனே பிடித்து விட்டது. (இப்படி இரண்டு ‘உடனே’வை போடுவது இரவிச்சந்திரனின் ஸ்டைல்).  ‘இந்தப் பையனிடம் ஒரு ஸ்பார்க் இருக்கு’ என்று எங்கோ சுஜாதா குறிப்பிட்ட நினைவும் இருக்கிறது. சுஜாதா அடையாளம் காட்டிய பெரும்பாலோனோர் சோடை போனதில்லை. அதற்கான தடயத்தை இரவிச்சந்திரனிடம் அழுத்தமாக காண முடிகிறது.

2006-ம் ஆண்டு என் வலைப்பதிவில் இரவிச்சந்திரனைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை எழுதி, அவருடைய அற்புதமான சிறுகதையான ‘சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே’ என்கிற படைப்பை மெனக்கெட்டு தட்டச்சி இட்டேன். அதை அப்போது நூறு பேர் கவனித்திருந்தால் என் அதிர்ஷ்டம். (கவனிக்க, வாசித்திருந்தால் என்று எழுதவில்லை). பிறகு நினைவு வரும் போதெல்லாம் இவரைப் பற்றி இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பேன்.

இன்றைக்கும் கூட இணையத்தில் இவரைப் பற்றி தேடிப் பார்த்தால் சொற்பமான குறிப்புகளே கிடைக்கும். ஜீவானந்தன், ஆர்.பி.ராஜநாயஹம் உள்ளிட்ட சிலர்தான் இரவிச்சந்திரனைப் பற்றிய குறிப்புகளை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். மற்றபடி தமிழ் கூறும் நல்லுலகம் இவரை ஒட்டுமொத்தமாக மறந்து போனதாகவே தோன்றுகிறது.  

க்ளப்ஹவுஸ் என்கிற App-ல் ‘சிறுகதை நேரம்’ என்கிற அறையில், செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான ஃபாத்திமா பாபு, தினமும் ஒரு சிறுகதையை வாசித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த இலக்கியப் பணியை அவர் செய்து வருகிறார்.  அந்த அறையில் ‘சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே’ சிறுகதையை பரிந்துரை செய்து வாசிக்க வைத்தேன். அதைப் பற்றிய கலந்துரையாடலும் பிறகு நடைபெற்றது. இப்படியாக இரவிச்சந்திரனை மீண்டும் சமீபத்தில் உயிர்பெற வைத்தேன்.

அதைத் தொடர்ந்து, ‘இரவிச்சந்திரனின் சிறுகதைகள் தொகுப்பாக வந்தால் நன்றாக இருக்கும்’ என்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பு எழுதி வைத்தேன். அது பதிப்பாளர் அசோக் சாய் ரமணா தம்புராஜின் கண்களில் பட்டது என்னுடைய அதிர்ஷ்டம். மளமளவென வேலைகள் ஆரம்பமாகின. என்ன செய்தாரோ, தெரியாது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு இரவிச்சந்திரனின் இரண்டு தொகுப்புகளை மீள்பிரசுரம் காண்பதற்கு ஏற்பாடு செய்து விட்டார். புதைந்து போயிருக்கும் நல்ல எழுத்துக்களை வெளிக்கொணர வேண்டும் என்கிற அவரின் தீராத ஆர்வம்தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அதற்காக அவருக்கு நன்றி. சிறப்பாக வடிவமைத்திருக்கும் நண்பர் பொன்.வாசுதேவனுக்கும் நன்றி.

oOo

‘என் புத்தகங்கள் நூறு வருஷம் வரை முக்கி முனகி தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு’ என்று ஒரு முன்னுரையில் எழுதியிருக்கிறார் இரவிச்சந்திரன். ஆனால் முப்பது வருடங்களை கடப்பதற்கு முன்பாகவே அவை மங்கிப் போய் விட்டன. சினிமாவை சுவாசிக்கும் தமிழ்நாடு போன்ற பிரதேசங்களில் இப்படி நடக்காவிட்டால்தான் அது ஆச்சரியம். இப்படி காலத்தில் புதைந்து போன எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் தமிழில் உள்ளார்கள். இரவிச்சந்திரனுக்கு அத்தகைய விபத்து நடக்காமல் ஜெய்ரிகி பதிப்பகம் காப்பாற்றியிருக்கிறது.

இந்தக் கதைகளை வாசியுங்கள். இரவிச்சந்திரனின் இதர எழுத்துக்களையும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற ஆவல் உங்களுக்குள் ஏற்படும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தொகுதியை வாசிக்கப் போகும் உங்களுக்கு என் நன்றியும் அன்பும்.

 
வெப்பம் தகிக்கும் சென்னையின் ஒரு மாலை

28 மே 2022                                                                                  

 சுரேஷ் கண்ணன்                





Wednesday, May 13, 2015

மறுவாசிப்பில் சுந்தர ராமசாமி - இலக்கிய வீதி


நூல் வெளியீடுகள், எழுத்தாளர்களின் உரைகள் உள்ளிட்ட  பெரும்பாலான இலக்கிய நிகழ்வுகள் பொதுவாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நிகழ்வதை மற்ற நகரங்களில் வசிக்கும் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் ஒரு காலத்தில் பெருமூச்சுடன் கவனிப்பதை உணர்ந்திருக்கிறேன். (இப்போது மற்ற நகரங்களிலும் நிகழ்வதால் பெருமூச்சின் அளவு குறைவு) ஆனால் சென்னையிலேயே வசித்தும் கூட இம்மாதிரியான பல நிகழ்வுகளுக்கு என்னால் செல்ல முடியாத சில நடைமுறைச்சிக்கல்கள் சில.

தொழில் சார்ந்து நான் இயங்கும் பணியானது ஏறக்குறைய வெட்டியானுக்கு இணையானது என்பதால் எந்த நேரம் பிணம் விழுந்து அழைப்பு வருமோ அப்போது உடனே ஓட வேண்டியிருக்கும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு  செல்ல பெரும்பாலும் ஆசைப்படுவதில்லை. மீறி திட்டமிட்டால்,  இயலாத சமயங்களில் அது ஒரு கழிவிரக்கமான கசப்பாக உள்ளே படிந்து செய்யும் பணி சார்ந்த மனத்தடைகளை உருவாக்கும். இன்னொன்று, எனக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாததால். பொதுப் போக்குவரத்தை நம்பி குறுகிய நேரத்தில் வெவ்வெறு இடங்களின் நிகழ்விற்கு நேரத்திற்குள் செல்ல முடியாது, வீடு திரும்ப தாமதமாகும் என்பது போன்றவை.

நுகத்தடி சுமையல்லாத ஒரே விடுதலை நாளான ஞாயிற்றுக்கிழமையை வெளியே நகராமல் வாசிப்பு, திரைப்படம் என்று கழிப்பதற்கான சுயநல சோம்பேறித்தனம் மற்றும் இன்ன பிற லெளகீகச் சிக்கல்கள்.

இவைகளைத் தாண்டி செல்ல முடியாத குற்றவுணர்வு மட்டுமே மிச்சமிருக்கும்.

இலக்கிய நிகழ்வுகளுக்கு கூட்டம் வருவதில்லை என்கிற அமைப்பாளர்களின் புகாருக்கு என் தனிப்பட்ட அனுபவம் சார்ந்து சில காரணங்களை கண்டுபிடிக்க முயன்றிருக்கிறேன். தவிரவும் சனி,ஞாயிறின் ஒரே மாலையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எங்கே செல்வது என்கிற உப குழப்பம். இவற்றையெல்லாம் மீறி கூட்டங்களில் கலந்து கொண்டு அவற்றை வெற்றி பெறச்செய்யும் நல்லிதயங்களை நிச்சயம் வாழ்த்திப் பாராட்ட வேண்டும். சோர்வடையாமல் தைரியத்துடன் கூட்டங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்பவர்களுக்கும் பாராட்டு.

ஒரு வாசகனாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் கிடைக்கும் ஆதாயம் என்னவெனில் லெளகீகச் சிக்கல்களில் திசைமாறி அமிழ்ந்து போன வாசக மனம் சற்று தெளிந்து விழித்துக் கொள்ளும் என்பதுதான். இல்லையெனில் விழா முடிந்து வீட்டுக்குப் போய் நள்ளிரவில் நாற்காலி போட்டு மேலே ஏறி 'ஒரு புளிய மரத்தின் கதை' கிடைக்கிறதா, என்று புத்தக குவியலை துழாவிக் கொண்டிருந்தது எந்தக் காரணத்தினால் என்று நினைக்கிறீர்கள்?

வாசிப்பின் இலக்கிய ருசியுள்ளவர்களும் அது மழுங்கிப் போனவர்களும் புதுப்பிக்க விரும்புபவர்களும் அல்லது புதிதாக உருவாக்கி கொள்ள விரும்புபவர்களும் இது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தன் அந்தரங்க மனதிற்கான தூண்டுதல்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எழுத்திலே மட்டும் சந்திக்கும் படைப்பாளிகளை பெளதீக ரீதியாக சந்திப்பதும் அவர்களின் உடல்மொழியைக் கவனிப்பதும் ஒருவகை மகிழ்ச்சியே.

()

எனவேதான் இலக்கிய வீதி நடத்தும் நிகழ்விற்கு செல்ல வேண்டும் என்றெழுந்த தூண்டுதலை பத்திரமாக கைப்பற்றிக் கொண்டேன். இனியவன் பல வருடங்களாக தொடர்ந்து நிகழ்த்தும் இலக்கியச் செயற்பாடுகளை அறிந்திருந்தாலும் சென்றது இதுவே முதன்முறை. 'இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்' என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் உரை நடத்தி, எழுத்தாளர்களுக்கு விருதும் தருகிறார்கள். இந்த மாதம் சுந்தரராமசாமி என்பதால் எனக்கு கூடுதல் சுவாரசியம். 

அது என்னமோ இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறவர்கள் சுலபமானது என்பதால் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, அங்கு என்னென்ன பேசப்பட்டது என்பதைப் பற்றி எழுதுவது இப்போதெல்லாம் குறைந்து விட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்களாவது, குறைந்த பட்சம் அதன் காணொளிகளை தரமான விதத்தில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றி வைக்கலாம். உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் பார்க்க ஏதுவாக இருக்கும்.

()


பாரதிய வித்யா பவன். மைலாப்பூர் களையுடனான முதியவர்களும் மாமிகளும் நிறைந்திருந்த கூட்டத்தைப் பார்க்க சற்று ஆச்சரியம். நான் சென்ற போது ஞானக்கூத்தன் தலைமை உரையாற்றிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் நுழைந்ததால் எதைப் பற்றி என்று தெரியவில்லை. மறுவாசிப்பு பற்றியது என்று அனுமானம். ஆனால் அவர் சித்தரித்த ஒரு சம்பவம் சுவாரசியமாக இருந்தது.

சு.ரா, க.நா.சு, ஞானக்கூத்தன் கோயிலுக்குச் சென்றிருந்தார்களாம். கடவுள் நம்பிக்கையல்லாத சு.ரா. வெளியிலேயே நின்று விட்டார். ஐயரின் தட்டில் ஞானக்கூத்தன் பத்து ரூபாய் போட்டாராம். இருவரும் கோயிலில் இருந்து வெளியே வந்ததும் க.நா.சு.. தன் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து "ஏன் நீங்கள் அவசரப்பட்டு போட்டீர்கள். எனக்கேதும் புண்ணியம் சேராது அல்லவா, எனவே இந்த ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஞானக்கூத்தனிடம் அளித்து விட்டாராம். படைப்பாளிக்கும் ஆசாமிக்கும் உள்ள அகரீதியான வித்தியாசங்களை வாசகர்கள் அனுமானிக்காவிட்டால் குழப்பம்தான். 

யுவன்சந்திரசேகருக்கு 'அன்னம் விருது' அளித்தார்கள். தோற்றத்தில் மணிரத்னத்தை நினைவுப் படுத்துவது போலவே இருந்த அவர் பேச்சையும் அவ்வாறே சுருக்கமாக முடித்துக் கொண்டார். "ஏற்புரையெல்லாம் தர மாட்டேன் என்கிற உத்திரவாதத்தின் பேரில்தான் வந்தேன். எனது எழுத்துக்களுக்கு ஆதரவான கருத்துக்கள், எதிர்வினைகளிலிருந்து நான் சொல்ல என்ன இருக்கிறது. ஏதாவது பிடிக்காத விஷயம் இருந்தால் சொல்லுங்கள். அதைப் பற்றி இரண்டுமணி நேரமாவது உரையாடலாம்" என்றார்.

பிறகு காலச்சுவடு கண்ணன். 

'ஓர் எழுத்தாளரும் அவரது  வாசகர்களுக்கும் கூடும் சபையில், அவரது குடும்பத்தாருக்கு ஏதும் வேலை ஏதும் இல்லை என நினைக்கிறேன். அது இடைஞ்சலை ஏற்படுத்தலாம்' என்று தொடர்ந்தவர், சு.ரா வுடனான தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். புதிய இளம் வாசகர் முதற்கொண்டு எந்தவொரு நபரும் சு.ரா.வின் வீட்டில் வருவதற்கு தடையேதும் அல்லாத சூழலை சு.ரா. உருவாக்கி வைத்திருந்தார் என்பது பற்றிய பகுதியில் சலபதி ஒரு முறை கூறியதாக கண்ணன் தெரிவித்தது, சுவாரசியமானதாக இருந்தது. 'சு.ரா. வின் வீட்டில் எழுத்தாளர்களும் வாசகர்களும் தயக்கம் ஏதுமில்லாமல் உள்ளே நுழைவார்கள். ஆனால் உறவினர்கள்தான் தயங்கி தயங்கி வருவார்கள்'. 

அரவிந்தன்:

சு.ராவோடு பழகியவன் என்கிற முறையில் அவரைப் பற்றியும் அவருடைய நூல்களை வாசித்தவன் என்ற முறையில் அவைகளைப் பற்றியும் எளிதாக பேசிவிடலாம் என்கிற அபார நம்பிக்கை முதலில் இருந்தது. ஆனால் அழைப்பிதழ் வந்தவுடன்தான் அதன் தலைப்பில் 'மறுவாசிப்பில் சுந்தரராமசாமி' என்று போட்டிருந்ததைப் பார்த்ததும் சற்று தயக்கமாகி  விட்டது. ஏனெனில் மறுவாசிப்பு என்பது ஒரு படைப்பை மீண்டும் வாசிப்பது அல்ல, வேறு கோணத்தில் ஒரு புதிய திறப்பாக வாசிப்பது. எனவே கடந்த இரண்டு நாட்களில் சுமார் ஆயிரம் பக்கங்களை வாசித்தேன்.......

என்றவர் சு.ராவின் சிறுகதைகள், கட்டுரைகள், (சு.ரா எனக்காக இரங்கல் கட்டுரை எழுதுவார் என்றால் நான் இப்போதே இறக்கத் தயாராக இருக்கிறேன் என்றாராம் ஓர் எழுத்தாளர்)  நாவல்கள் என்று ஒரு பறவைப் பார்வையில் சு.ராவின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் துவங்கினார், பிறகு மறுவாசிப்பு நோக்கில் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் நாவல்களின் நுட்பங்களைப் பற்றி நீண்ட உரையாற்றினார்.  அவருடைய நேர்மையான, அபாரமான உழைப்பு அவருடைய உரையில் தெரிந்தது.  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் கூறியதைப் போன்று எவ்வித குறிப்பும் அல்லாமல் நினைவிலிருந்து இத்தனை விஷயங்களை மேடையில் உரையாற்ற வேண்டுமெனில் சு.ராவின் படைப்புகளில் அத்தனை ஊறிய வாசகராக இருக்க வேண்டும். சு.ரா.வின் மற்ற இரண்டு நாவல்களைப் போலவே 'ஆண்கள், பெண்கள்,குழந்தைகள்' மிக முக்கியமான படைப்பு. அதைப் பற்றி அதிகமான உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்பது அரவிந்தனின் ஆதங்கம். 

(புளியமரத்தின் கதை வெளியான காலத்திலேயே அது எழுதப்பட்ட பிரதியாக மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவிற்குப் பிந்தைய தேசத்தின் குறியீட்டு  நோக்கில் அதன் உட்பிரதி உரையாடல்களும் விவாதங்களும் அப்போதே நிகழ்ந்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். என்றாலும் அறிமுக வாசகர்களுக்கு அரவிந்தனின் உரை புதிய வெளிச்சங்களை அளித்திருக்கலாம்).

()

அவரை புன்னகைக்க வைப்பது ஒரு சவாலான பணியோ என் எண்ண வைக்கும் இயந்திர முகபாவத்துடன் மேடையில் அமர்ந்திருக்கும் அரவிந்தன், உரை நிகழ்த்தும் போது வேறு மனிதராக மாறி நீர்வீழ்ச்சி போல பொங்கி வழிகிறார். நிகழ்வு முடிந்த பிறகு இவரைச் சந்தித்து சில வார்த்தைகள் பேச முடிந்தது. போலவே யுவன் சந்திரசேகரையும். "சார், மே 17 அன்று உங்களுடைய நூல்களைப் பற்றி பேசவிருக்கிறோம். கிருஷ்ணா சொல்லியிருப்பாரே, நீங்கதான் என்னை விஷ் பண்ணணும்" என்றேன். "அட, இது நல்லாயிருக்கே.. வாங்க நல்லா பேசலாம்" என்றார். நிகழ்வில் பேசுவது குறித்து என்னுள் இருந்த தயக்க குமிழ் யுவனின் சகஜபாவத்தால் அந்தக் கணத்தில் உடைந்தது. 

இலக்கிய வீதி நிகழ்த்தும் இந்த தொடர்கூட்டத்தில் அடுத்த நிகழ்வில் ஜெயகாந்தனைப் பற்றி உரையாடப் போகிறார்களாம். வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

suresh kannan

Friday, January 23, 2015

அனந்தியின் டயறி - அனந்தி என்கிற சிநேகிதியின் டைரிக்குறிப்புகள்






16.11.2014

பொ.கருணாகரமூர்த்தியின் 'அனந்தியின் டயறி' நூல் வந்து சேர்ந்தது. உடனே வாசிக்க ஆரமபித்திருக்கிறேன்.


இதைப் புதினம் என்று வகைப்படுத்த முடியுமா என தெரியவில்லை. சேகுவாராவின் 'பொலிவியின் டயறி'யை புதினம் என்றா அழைக்க முடியும்? அனந்தி என்கிற இளம்பருவத்து பெண் தொடர்ந்து அவளது டயறியில் எழுதும் குறிப்புகளின் தொகுப்பாகத்தான் இந்நூலின் வடிவமிருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' எனும் நூல் அவரது தன்வரலாற்று குறிப்புகளின் அடிப்படையில் இருந்தாலும் ஒருவகையில் அதனை புதினமாக பாவிக்க முடியும். ஆனால் இது? இந்த வடிவத்தின் முன்னோடி ஏதும் இல்லையென்றால் இதையே டயறிக் குறிப்புகளின் தொகுப்பாக வந்த முதல் தமிழ் நூல் என்று வகைப்படுத்த முடியும். வெங்கட் சாமிநாதனின் முன்னுரை, தென்அமெரிக்காவில் காலங்காலமாக வசித்து வந்தாலும் சரவணபவன் சாம்பாரை தாண்டாத தமிழர்களின் எழுத்துக்கலையை கிண்டலடிக்கிறது, சில விதிவிலக்குகள்தான் என்கிற பெருமூச்சுடன். கருணாகரமூர்த்தி 'என்னுரையில்' குறிப்பிட்டிருப்பது போன்று ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞனின் புகைப்பட ஆல்பத்தை புரட்டுவது போன்றே இந்த நூலும் கலைடாஸ்கோப் வழிகாட்சிகள் போன்று சட்சட்டென்று மாறும் காட்சிகள் பார்க்கிறதொரு சுவாரசியமான அனுபவத்தை தருகிறது.


19.11.2014

பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் இரவில் போர்வையை இழுத்துப் போார்த்திக் கொண்டு நூலொன்றை வாசிப்பது அபாரமான அனுபவம்.

 'அனந்தியின் டயறி' நூலை கால் சதவீதம் கடந்து விட்டேன். இந்நூலை முதலில் இருந்து தொடர்ச்சியாக வாசிப்பதுதான் ஒருவகையில் சரிதான் என்றாலும் அவ்வாறுதான் வாசிக்க வேண்டுமென்கிற கட்டாயமேதும் ஏதும் இல்லாததே இந்நூலின் சிறப்பு. தோன்றுகிற பக்கத்தை பிரித்து எங்கிருந்து வேண்டுமானாலும் வாசித்துக் கொண்டு போகலாம். வாசிப்பதை சற்று நிறுத்தி பொ.கருணாகரமூர்த்தி என்கிற பெயரை முதன் முதலில் எங்கு கேள்விப்பட்டேன் என்று சற்று யோசித்துப் பார்த்தேன்.

பழைய கணையாழியில் 'தி.ஜானகிராமன் நினைவு விருது' குறுநாவல் போட்டிக்காக தொடர்ச்சியாக குறுநாவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. எனக்கு குறுநாவல் எனும் வடிவம் சற்று பிடிபட்டது அப்போதைய வாசிப்பில்தான். (இந்த குறுநாவல்கள் தொகுப்பாக வந்திருக்கிறதா என்று தெரியவில்லை, வந்திருந்தால் நல்லது).

அந்த வரிசையில்  'ஒரு அகதி உருவாகும் நேரம்' என்ற குறுநாவல் யாழ்ப்பாணத் தமிழில் அமைந்திருந்தது. பொ.கருணாகரமூர்த்தி என்கிற பெயரும் சட்டநாதன் என்கிற ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் மனதில் அழுத்தமாக பதிந்தது அந்தச் சமயத்தில்தான். உலகிலிருக்கும் மஹா அசடுகளை பட்டியலிட்டால் அதில் திருவாளர் சட்டநாதன் நிச்சயம் பத்துக்குள் வந்து விடுவார். அப்படியொரு மனிதர். தலைமாற்றி கள்ள பாஸ்போர்டில் ஆட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் குழுவொன்று சட்டநாதனை விதம் விதமாக மாற்றி மாற்றி அனுப்ப முயல்கிறது. ஆனால் மனிதரோ, துரத்தப்பட்ட கரப்பான்பூச்சி போல துரத்தியவரிடமே மிக வேகமாக வந்து சேர்கிறார்.

இயந்திர வாழ்வின் சிடுக்குகளில் இருந்து அவல நகைச்சுவையை பிரித்தறிந்து எழுதுவதென்பது நுட்பமான காரியம். பொ.கருணாகரமூர்ததிக்கு இது மிக எளிதாக கைவரப் பெற்றிருக்கிறது. புலம்பெயர் மக்களுக்கான பிரத்யேக துயரங்களை நேரடியாக புலம்பிக் கொட்டாமல் வாழ்க்கையனுபவங்களின் துளிகளிலிருந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். இது போன்ற அவல நகைச்சுவையை திறம்பட வெளிப்படுத்துவர், இன்னொரு ஈழ எழுத்தாளரான அ.முத்துலிங்கம். தலைப்பு நினைவில் பிடிபடாத அவரது சிறுகதையொன்றில், வழக்கம் போல் தம்முடைய இளமைப்பருவ நினைவுகளை சுவாரசியமான தொனியில் பதிவு செய்து கொண்டே போகும் முத்துலிங்கம், சிறுகதையின் இறுதியில் சிங்கள ராணுவத்தினரின் நுழைவு எழுதப்பட்டிருக்கும் சொற்ப வரிகளின் மூலம் அச்சிறுகதையின் நிறத்தையே வேறு வகை துயரமாக மாற்றி விடுகிறார்.

25.11.2014


பனிக்காலத்தினால் ஏற்பட்டிருக்கும் ஜலதோஷமும் காதடைப்பும். மருத்துவரின் அறையின் முன்பான வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கு போனாலும் பாழாய்ப்போன இந்த வரிசை. கையில் புத்தகம் வைத்திருந்தது நல்லதாய்ப் போயிற்று...

'அனந்தியின் டயறி' வாசிப்பு மிக சுவாரசியமாகப் போகிறது. இது அனந்தி என்கிற மாணவியின், காளிதாஸ் என்கிற புலம்பெயர் தமிழரின் மகளின் நோக்கில் விரிகிற டைரிக்குறிப்புகள் என்றாலும், நூலாசிரியராகிய கருணாகரமூர்த்தியும் அனந்தியுனுள் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பது வெளிப்படை. நூலாசிரியர் மகளுடன் கலந்து ஆலோசித்து எழுதினாரோ அல்லது எழுத்தாளர்களுக்கேயுரிய கூடுபாயும் திறமையுடன் எழுதினாரோ தெரியவில்லை, இளம்பருவத்து பெண்ணுக்குரிய தன்மைகளும் கனிவுகளும் குறும்புகளும் குழப்பங்களும் அந்த டயறிக் குறிப்புகளில் துல்லியமாக வெளிப்படுகின்றன. ஜெர்மனியில் அடைக்கலமாகியிருக்கும் தமிழ்க்குடும்பம் என்பதால் இருநாட்டு மக்களின் கலாசாரக் குறிப்புகளும் அதன் Cross Culture தன்மையோடு இயல்பாக பதிவாகியிருக்கின்றன. இரு தேசத்து பண்பாட்டுப் பின்புலத்தை குறுக்குவெட்டு சித்திரமாக வெளிப்படுத்தும் நூல்இது என்றும் சொல்லலாம். மாத்திரமல்லாமல் தமிழர்கள், தங்களுக்கு என்று பிரத்யேகமாகயுள்ள சில வழக்கங்களை அட்லாண்டிக் கடலுக்குள் குடிபுகுந்தால் கூட கைவிட மாட்டார்கள் என்கிற உண்மை இந்த நூலின் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.


04.12.2014


உடல்நலக்குறைவால் நூல் வாசிப்பதை தள்ளிவைக்க வேண்டியிருந்தது. என்றாலும் மனதினுள் காளிதாஸூம் அனந்தியும் கடம்பனும் மாறியோவும் உலவிக் கொண்டேதானிருக்கிறார்கள்...

டைரிக்குறிப்புகளைக் கொண்ட நூல் என்பதால் எந்தப் பக்கத்திலும் நுழைந்து எந்தப் பக்கத்தின் வழியாகவும் வெளியேறும் தன்மையை இந்த நூல் கொண்டிருக்கிறது. இதிலொரு பிரச்சினையும் உண்டு. புதினம் மாதிரியல்லாமல் ஒரு தனிநபரின் டைரியைப் போலவே ஒரே மாதிரியான, ஒரே விஷயத்தின் தொடர்ச்சியான சம்பவங்களின் குறிப்புகள் இடம்பெறுவதால் ஒருவிதமான சலிப்புத்தன்மையையும் இந்த நூல் ஏற்படுத்துகிறது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். ஒரு பெரிய இனிப்புத் துண்டை தொடர்ந்து சாப்பிடும் போது ஏற்படும் திகட்டல் போல. ஆகவே வெவ்வேறு இடைவெளிகளில் இந்த நூலை வாசிப்பதுதான் சரியானதாக இருக்கும். நானும் அவ்வாறுதான் இதை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.


07.12.2014


சமீபத்தில் மறைந்து போன இயக்குநர் ருத்ரய்யாவின் நினைவாக அவரின் திரைப்படமான 'அவள் அப்படித்தான் - ஐ பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் தூக்கம் வரவில்லை. எனவே அனந்தியின் டயறி.....ஒரு வழியாக இன்று நூலை வாசித்து முடித்து விட்டேன்..

ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் பொருள் தேடும் அனந்தியின் டிக்ஷனரி குறிப்புகள், சமயங்களில் வெறுப்பேற்றும் தம்பி கடம்பனின் lateral thinking கேள்விகள், அனந்தி முகநூலில் வாசித்த கவிதைகள், சக மாணவிகளின் குணாதிசயங்கள், வாசித்த நூலைப் பற்றிய குறிப்புகள், பார்த்த சினிமாக்கள், Frau. Stauffenberg -க்கு பணிவிடை செய்யும் அனுபவங்கள், சீட்டு பிடித்தலில் ஏமாந்து நிற்கும் அம்மாவின் அப்பாவித்தனங்கள், காதல் முறைப்பாடு செய்யும் கண்ணியமானதொரு இளைஞனான 'மாறியோவிடம்'  'தமிழர் வாழ்வியலை' சற்று விளக்கி அவனை தள்ளி நிற்கச் செய்யும் சாமர்த்தியங்கள்...அவசரத்திற்கு பணம் வாங்கி பிறகு தராமல் ஏமாற்றும் தமிழர்களின் பிரத்யேக சிறுமைத்தனங்கள்...வீட்டுக்கடன் பயமுறுத்தல்கள்.... பாலுறவு குறித்து பாசாங்கு ஏதுமில்லாமல் இயல்பாக சிந்திக்கும் மேற்குலகின் முதிர்ச்சித்தனங்கள் என்று கலந்து கட்டி வரிசையாக வரும் இனிமையான யாழ்ப்பாணத் தமிழ் குறிப்புகளின் மூலம் அனந்தியின் குடும்பத்தை மிக நெருக்கமாக உணர முடிகிறது.

பொ. கருணாகரமூர்த்தி ஏற்கெனவே எழுதிய முந்தைய சில சிறுகதைகள் (கஞ்சத்தனம் கொண்ட மாணவி) இதில் மீண்டும் அப்படியே மீண்டும் வந்திருப்பது ஒருவகையில் இயல்புதான் என்றாலும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.  வாசிப்பதற்கு மிக மிக சுவாரசியமானதொரு நூல். அனந்தியுடன் சிநேகிதம் கொள்வதற்காவாவது தமிழுலகம் இந்நூலை வாசித்தாக வேண்டும். 

மதிப்புரை.காம் -ல் வெளியானது. (நன்றி: மதிப்புரை.காம்)

suresh kannan

Thursday, January 08, 2015

குறத்தியாறு - கெளதம சன்னா - நூல் வெளியீட்டு விழா - 07.01.2015


உயிர்மை பதிப்பகத்தின், கெளதம சன்னா எழுதிய புதினமான 'குறத்தியாறு' நூல் வெளியீட்டு விழாதான் என்றாலும் நான் பிரதானமாக சென்றது கோணங்கி பேசுவதைக் காண.

புகைப்படங்களிலும் சில விழாக்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேனே தவிர அவர் மேடையில் பேசுவதை இதுவரை கண்டதில்லை, கேட்டதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு விழா மேடையில் கோணங்கியைப் பார்க்கும் ஓர் அபூர்வமான நிகழ்வு என்று மனுஷ்யபுத்திரன் தன்னுடைய வரவேற்புரையில் குறிப்பிட்டார்.. போலவே எழுத்தாளர் ஜெயமோகனையும் கோணங்கியையும் ஒரே மேடையில் காண்பது தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே (?!) இதுவே முதன்முறையாக இருந்தது போலும்.

கோணங்கி பேசிக் கொண்டிருந்ததை கவனிக்கவே அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் தனக்கேயுரிய பிரத்யேக சங்கேத மொழியில் நூல்களில் தான் காணும் தொன்மங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். ஒலிப்பெருக்கி இருக்கும் திசையை நோக்கி உரையாடினால்தான் பார்வையாளர்களுக்கும் தெளிவாக கேட்கும் என்கிற மேடை நடைமுறை விதிகளெல்லாம் அவரைக் கட்டுப்படுத்தவில்லை. அவருக்கான பிரத்யேகமான அந்தரங்க உலகத்திலேயே எப்போதும் புழங்கிக் கொண்டிருக்கும் மனிதர் என்பதாக தோன்றியது. நல்ல அனுபவம்.

கெளதம சன்னா என்கிற பெயரை நான் அறிந்தது, ஜெயமோகனின் வெள்ளையானை நூல் வெளியீட்டு விழாவின் போதுதான். அந்த விழாவில் நாவலைப் பற்றியும் பழைய சென்னையின் வரலாற்றுத் தகவல்களையும் இணைத்து பல நுட்பமான விஷயங்களைப் பேசியது அத்தனை ஆச்சரியமாக இருந்தது. அரசியல் அமைப்பைச் சார்ந்த ஒரு நபரிடமிருந்து இத்தனை ஆழமான விஷயங்களை அறிந்த ஓர் இலக்கியவாதியை நான் எதிர்பார்க்கவில்லை. எனவே அவருக்காகவும் இந்த விழாவிற்கு சென்றிருந்தேன். பொதுவாக தீவிரமான அரசியல் கட்டுரைகளை எழுதுபவரிடமிருந்து இலக்கிய நயம் வாய்ந்த ஒரு புதினத்தை அவரை நன்றாக அறிந்தவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதாகவே இந்த விழாவின் மூலம் அறிந்தது.

கடந்த வருடமே வெளியாக வேண்டியிருந்த இந்த நூல், ஒவியம் சந்ருவின் கோட்டோவியங்களோடுதான் வெளியாக வேண்டும் என்று அவருக்காக ஒரு வருடம் காத்திருந்து பல நினைவூட்டல்களுக்குப் பின் ஓவியங்களை இணைத்த பிறகே இந்த நூலை வெளியிடப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து சன்னாவின் பிடிவாதமான கலையார்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக நூலாசிரியரும் ஓவியரும் இணைந்து புதினத்தின் பின்புலமாக அமைந்துள்ள இடங்களுக்கு சென்ற அனுபவத்திற்குப் பின் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. 'இந்த நாவல் சன்னாவும் சந்ருவும் இணைந்து எழுதியது' என்பதாக கோணங்கி குறிப்பிட்டது இதைப் பற்றிதான் இருக்க வேண்டும். ஓவியர் சந்ரு அவர்களையும் இந்த விழாவில்தான் முதன்முறையாக பார்த்தேன். குச்சி குச்சியான சிறுநரைமுடிகளோடும் முக்கால் வேட்டியோடும் ஓர் அசல் நாட்டுப்புற மனிதர் போல் அத்தனை எளிமையாக இருந்தார். அவரது உடல்மொழியும் அத்தனை வெள்ளந்திதனமாக இருந்தது. அவரின் ஓவியங்களைக் கண்டபிறகும் உரையாற்றும் போதுதான் அவரது மேதமையைக் உணர முடிந்தது.   இவ்வாறான எளிமையான மேதைகளை அவ்வளவாக கண்டுகொள்ளாமல் வெற்றுப் படோபடங்களின் பின்னால் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஜெயமோகன் பேசும் போது "தலித் இலக்கியத்தின் மிக முக்கியமான திருப்புமனையை இந்த நாவல் ஏற்படுத்தும் என கருதுகிறேன். இதுவரையான தலித் இலக்கிய படைப்புகள் யதார்த்த வகை படைப்புகளாகத்தான் உருவாகி வந்திருக்கின்றன. ஆனால் தொன்மத்தின் அழகியலுடனும் காவிய  மரபு மொழியில் இந்நூல் உருவாகியிருப்பது தலித் இலக்கியத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அமைந்திருக்கும்" என்றார். விழாவின் துவக்கத்தில் ஒவியர் நட்ராஜ், இந்த நாவலின் சில பகுதிகளை வாசித்துக் காண்பிக்கும் போது அது கோணங்கியின் மொழியின் அடையாளத்துடன் அமைந்திருப்பதாகத் தோன்றியது.

தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், சிறுகதைகள், நாவல் போன்ற புனைவு வகை இலக்கியங்களை நான் வாசிப்பதில்லை எ்னறார். ஏனெனில் அவை நம்மை கனவுலகத்தில் ஆழ்த்தி மயக்குபவை. மாறாக யதார்த்தவகை இலக்கியங்களான வரலாற்று, தத்துவ வகை நூல்களே நம்மை விழிப்பாக இருக்க வைப்பவை. என்றாலும் நான் முழுமையாக வாசிக்கவிருக்கும் முதல் நாவலாக இந்த 'குறத்தியாறு' இருக்கும் என்றார். மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்த இடைவெளி தருணத்தில் விழா மேடையிலேயே வாசித்து விட்ட சில பக்கங்களை மிக நிதானமாக விவரித்து சிலாகித்து மகிழ்ந்தார்.

ஏற்புரை வழங்கிய கெளதம சன்னா விரிவாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்துக் கொண்டார். 'சிலர் கருதுவது போல இதை வெறுமனே அழகியல் நோக்கத்தில் எழுதவில்லை. எனக்கென்று உள்ள அரசியல் பார்வையில்தான் இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறேன்" என்றார்.

விழா முடிந்ததும் வெளியே நண்பர்கள் சிவராமன், சிறில் அலெக்ஸ், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர்களோடு அமைந்த உரையாடல் விழாவில் கல்ந்து கொண்டதைத் தவிர மேலதிக நிறைவைத் தந்தது.

Sunday, January 04, 2015

உயிர்மை - காலச்சுவடு நூல் வெளியீட்டு விழா - 03.01.2015


டிசம்பர்-ஜனவரி மாதங்கள் வந்தாலே சென்னைக்கு புதுநிறம் வந்து விடுகிறது. ஒருபுறம் கர்நாடக இசை விழா, இன்னொரு புறம் சர்வதேச திரை விழா, புத்தக கண்காட்சி, நூல் வெளியீட்டு விழாக்கள் என்று பல்வேறு கலாசார நிகழ்வுகள் காற்றில் மிதக்க ஆரம்பித்து விடுகின்றன. ஒரே சமயத்தில் இரண்டு விருப்பமான நிகழ்வுகள் நடைபெறும் போது எதற்குப் போக வேண்டும் என்று குழப்பம் வந்து விடுகிறது. பிலிம் பெஸ்டிவல் சமயத்தில் இவ்வாறு சற்று அல்லாடினேன். ஒரே சமயத்தில் நிகழும் இரண்டு நிகழ்ச்சிகளுமே முக்கியம் என நினைக்கும் போது பரத்தையிடம் ஜாலி செய்யப் போயிருக்கும் நண்பனை பொறாமையுடன் நினைத்துக் கொண்டே சாமியார் பிரசங்கத்தில் அவஸ்தையுடன் அமர்ந்திருப்பவன் கதை போல அல்லாடும் இரட்டை மனதுடன் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பதிப்பக அரசியல், எழுத்தாள அரசியல், குழு அரசியல் ஆகியவற்றில் நம்பிக்கையும் ஆதாயமும் உள்ளவர்களுக்கு இம்மாதிரியான எவ்வித குழப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறார்கள். இவ்வாறான அரசியல்களைத் தாண்டி  படைப்புகளின் மூலமாக மாத்திரமே ஓர் எழுத்தாளரை அணுகும் அப்பாவி இலக்கியத் தொண்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நூல் வெளியீட்டு விழாக்களைப் பற்றி இப்போதெல்லாம் புகைப்படங்கள் போடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அங்கு என்ன உரையாடப்பட்டது என்று பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை என்று எம்.டி.முத்துக்குமாரசாமி சமீபத்தில் முகநூலில் எழுதியிருந்தார். உண்மைதான். சமூகவலைத்தளங்களின் மூலம் மைக்ரோ பிளாக்கிங் வகையான சுருக் எழுத்துக்களைத் தாண்டி நீளமான பதிவுகளை வாசிக்க எவருக்கும் பொறுமையும் நேரமும் ஆர்வமும் இருப்பதில்லை. அப்படி வெட்டியாக பதியுமளவிற்கு நூல் வெளியீட்டு விழாக்களில்அப்படியொன்றும் உன்னதமாக யாரும் பேசி விடுவதில்லை என்பதும் இன்னொரு விஷயம். 'நான் இந்த நூலை இன்னமும் வாசிக்கவில்லை' என்கிற அசட்டுத்தனமான பெருமையுடன் கூடிய ஒப்புதல் வாக்குமூலத்துடன்தான் பொதுவாக துவங்குகிறார்கள். வெற்றுத்தனமான சம்பிரதாயங்களுடன்தான் இம்மாதிரியான நிகழ்வுகள் முடிகின்றன. அசலான இலக்கியத்தில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நபர்களின் மூலம்தான் அற்புதமான, ஆத்மார்த்தமான பேச்சுகள் அபூர்வமாக நிகழ்கின்றன.

***

உயிர்மை பதிப்பகத்தின் பத்து நூல்களின் வெளியீட்டு விழா ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள புக் பாயிண்ட் நூல் அரங்கில் நடைபெற்றது. உள்ளே நுழையும் போதே, நீண்ட நாட்களாக பாாக்க நினைத்திருந்த 'மெல்லிய கண்ணாடி அணிந்திருந்த பூனை' யான போகன் சங்கரை பார்க்க நேர்ந்தது நல்ல சகுனம். கூடவே டயட்டில் இருக்கும் இராமசாமி கண்ணன். 'பிசாசு படத்துல அப்படி என்னய்யா இருக்கு...சொல்லுங்க பார்க்கலாம்' என்கிற அதிரடியான கேள்வியுடன் வரவேற்றவரை 'வணக்கம் ஐயா' என்று கூறி விடைபெற்றேன். சிவராமன், விநாயக முருகன், அருண் (தமிழ் ஸ்டுடியோ), உமா மஹேஸ்வரன் என்று இன்னமும் சில நண்பர்களை சந்திக்க முடிந்தது. அதிஷாவை கூப்பிட்டு வெளியிடப்படவிருக்கும் அவரது நூலுக்காக வாழ்த்து சொன்னேன். அதிஷாவின் எழுத்தை அதன் துவக்கத்திலிருந்தே இணையத்தில் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எளிமையான ஆனால் நுட்பமான நகைச்சுவையும், அவதானிப்பும் அவற்றை இன்னமும் எளிமையான எழுத்தில் வெளிப்படுத்தும் லாகவமும் என ஓர் எழுத்தாளரின் திறமைளைக் கொண்டிருக்கிறார். இன்னமும் தீவிரமாக முயன்றால் அவரால் கவனத்துக்குரிய எழுத்தாளராக மலர முடியும் என்பது என் நம்பிக்கை.

மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தியோடர் பாஸ்கரனின் நூலைப்பற்றி (சோலை எனும் வாழிடம்) முன்னாள் நீதியரசர் சந்துரு பேசினார்.

'பொதுவாக சினிமா விமர்சனம் எழுதுபவர்கள், தாம் பார்க்கும் சினிமாக்களில் உள்ள பலவீனங்களை பட்டியலிட்டு இயக்குநரை நோக்கின உரையாடலாகத்தான் தமது பதிவுகளை எழுதுகிறார்கள். மாறாக என்னுடைய பதிவுகள் ஒரு பார்வையாளனின் நோக்கில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கும்' என்று தன்னுடைய நூலைப் பற்றி (தமிழ் சினிமா: காட்டப்படுவதும் காண்பதுவும்) குறிப்பிட்டார் பேரா. அ.ராமசாமி.

அ.ராமசாமியின் நூலைப் பற்றி பேசிய தியோடர் பாஸ்கரன், 'சினிமாவைப் பற்றிய சிறந்த விமர்சன நூல்கள் தமிழில் குறைவாகத்தான் இருக்கின்றன. சினிமா நுட்பங்களைப் பற்றிய கலைச்சொற்கள் தமிழில் பெரிதும் உருவாகாமல் இருப்பதே இதற்கொரு காரணம். 'Casting' என்பதை தமிழில் எவ்வாறு குறிப்பிடுவீர்கள். சினிமா பற்றிய அ.ராமசாமியின் பார்வை நுட்பமானதாகவும் தனித்துவமானதாகவும் இருக்கிறது' என்றார்.

'தடித்த கண்ணாடி அணிந்த பூனை' என்கிற போகன் சங்கரின் கவிதை நூலைப் பற்றி பேசின எழுத்தாளர் சுகுமாரன், "சுமார் ஒரு மணிநேரத்திற்கொரு கவிஞர்கள் உருவாகி விடுகிற சமகால சூழலில் நான் கவனித்த வரை போகன் சங்கர் முக்கியமானதொரு கலையாளுமையாக தெரிகிறார்" என்று பாராட்டி சங்கரின் இரண்டு கவிதைகளை வாசித்தார்.

நான் மிக மதிக்கும் ரகசியமாக காதலிக்கும் படைப்பாளுமைகளுள் ஒருவர் சுகுமாரன். அவரிடமிருந்து வாழ்த்தும் பாராட்டும் பெறுவது மிக முக்கியமானது. போகன் சங்கர் மீது பொறாமையாகவும் பெருமிதமாகவும் இருந்தது. கவிதை என்கிற வடிவம் என் இளமைக்காலத்திலிருந்தே ஒவ்வாமையை அளிக்கும் விஷயமென்றாலும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகும் சங்கரின் சில கவிதைகளை வாசித்து வியந்ததுண்டு. இப்போது சுகுமாரனின் பாராட்டிற்குப் பிறகு அவரின் எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

பள்ளி மாணவி போல் தோற்றமளித்த மனுஷியின் கவிதை நூலைப் பற்றி அபிலாஷ் சந்திரன் பேசினார். 'அட்டையில் இவரது பெயரை எடுத்து விட்டால் இந்தக் கவிதைகள் ஓர் ஆணினால் எழுதப்பட்டதோ என்று நினைக்குமளவிற்கு, பொதுவாக பெண் எழுத்தாளர்களின் கவிதைகளில் உள்ள மென்மை, இளகும் தன்மை ஆகியவை இவைகளில் இல்லை' என்றார்.

செந்தில்குமாரின் சிறுகதைகளைப் பற்றி எழுத்தாளர் பாவண்ணன் பேச எழுந்தார்.


என்றாலும் பெருமாள் முருகனின் நாவல் தொடர்பாக சமீபத்தில் எழுந்த சர்ச்சை குறித்த எண்ணங்களே என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்ததாலும் அருகில் அமைந்திருக்கும் இன்னொரு அரங்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலச்சுவடின் ஏழு புனைவு நூல் வெளியீட்டில் அவருடைய பங்களிப்பும் இருந்ததாலும் அதைக் கவனிக்கலாமே என்று எழுந்து சென்றேன். மெட்ரோ ரயில்காரர்களின் ஆக்ரமிப்பினால் போருக்குப் பிந்தைய காட்சிகள் போல் கொந்தப்பட்டிருக்கும் அண்ணாசாலையின்  சாலைகளை அபாயகரமாகக் கடந்து குறிப்பிட்ட அரங்கம் எங்கே இருக்கிறது என தேடினேன். நான் முன்னர் அதிகம் சென்றிராத, எனக்கு அவ்வளவாக பிடித்திராத சூழலைக் கொண்டிருந்த பழைய ஆனந்த் திரையரங்கு கட்டிடத்தை மனதில் கொண்டே தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் அது இடிக்கப்பட்டு பல்லடுக்கு அலங்கார மாளிகையாக உருமாறியிருந்ததை பிறகுதான் கண்டுகொண்டேன்.. பளபளப்பான லிஃப்ட்டில் ஏறி ஒரு கார்ப்பரேட் மீட்டிங் நடக்கக்கூடிய இடம் மாதிரியான நவீன தோற்றத்தில் இருளும் வெளிச்சமுமாக இருந்த 'உமாபதி கலையரங்கில்'  நுழையும் போது மிகச் சரியாக பெருமாள் முருகன் உரையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அரவிந்தனின் 'பயணம்' எனும் புதினத்தைப் பற்றியதாக பெருமாள் முருகனின் பேச்சு அமைந்திருந்தது. ஓர் ஆசிரமத்தில் நிகழும் முறைகேடுகளை, ஊழல்களைப் பற்றியதாக அரவிந்தனின் புதினம் இருக்கலாம் என்பது அந்தப் பேச்சிலிருந்து நான் கொண்ட யூகம்.

 'அரவிந்தன், தன்னுடைய நாவலில் கோவையில் உள்ள ஒரு ஆசிரமம் என்று பொதுவாக குறிப்பிடுகிறார். தவிரவும் சாதியைப் பற்றிய இடங்களைப் பற்றிய நேரடியான விவரங்களை தவிர்த்து விடுகிறார். இந்த ஒரு அம்சத்தை அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது'  என்று சமீபத்தில் தமக்கேற்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களின் எதிரொலியாக பெருமாள் முருகன் பேசிய போது அந்தக் கசப்பான நகைச்சுவையை அரங்கில் இருந்தவர்களும் ரசித்தார்கள். தவிரவும் தம்முடைய புதிய நாவலின் முன்னுரையில் எழுதியிருந்த ஒரு disclaimer -ஐ பெருமாள் முருகன் வாசித்துக் காட்டிய போது கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

அவருடைய உரை நிறைந்த பிறகு எழுத்தாளர் சுகுமாரன் மேடைக்கு வந்து (ஆம் டூயல் ரோல்) சமீபத்திய சர்ச்சையால் பெருமாள் முருகன் தாம் எதிர்கொண்டிருக்கும் சங்கடமான அனுபவங்களைப் பகிர்வார்' என்று அறிவித்த பிறகு பெருமாள் முருகன் அதைப் பற்றி பேசத் துவங்கினார். (என் நினைவிலுள்ளதை வைத்து எழுதுகிறேன்).

'இந்தப் புதினம் குழந்தைப் பேறில்லாத ஒரு தம்பதியினரின் சிக்கல்களையும் அதற்குத் தீர்வாக நமது பண்பாட்டின் தொன்மையிலேயே காணக்கிடைக்கும் ஒரு வழக்கத்தையும் இணைத்து எழுதப்பட்டது. தியோடர் பாஸ்கரன், அ.கா.பெருமாள் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்கள் பண்டைய சமூகத்தில் நிலவும் இது போன்ற வழக்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நாவல் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு - பாஜக மைய அரசில் பொறுப்பேற்ற பிறகு - சில சாதிய அமைப்புகளும் பக்தி வழிபாட்டு சங்கத்தினரைச் சேர்ந்தவர்களும், பிஜேபி,ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த நபர்களும் இந்தப் புத்தகத்தை எரித்தும் என்னுடைய புகைப்படத்தை செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் இரவு என்று கூட பாராமல் வீடுதேடி வந்து விளக்கம் கேட்டனர்.  புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு விளக்கம் சொல்லத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் புரிந்து கொள்ள விரும்பாமல் அரசியல் ஆதாயத்திற்காகவும் கவனஈர்ப்பிற்காகவும் செய்யப்படும் இது போன்ற சம்பவங்களால் மிகுந்த சங்கடத்திற்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறேன்.

தமுஎச உடனே இது குறித்த தனது கண்டனத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. நண்பர்களிடமிருந்தும் அறிவுசார் சமூகத்திடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும். எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு ஆறுதலைத் தருகிறது. இதை கடந்து போகும் துணிச்சலையும் தருகிறது. இது போன்ற  ஆதரவுகளுக்குப் பின்னர் பிஜேபி,ஆர்எஸ்எஸ் நபர்கள் இந்தப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். நாவலை தடை செய்ய வேண்டும், எழுத்தாளரை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை விலக்கிக் கொண்டனர். ஆனால் சில சாதிய அமைப்புகளும் வழிபாட்டு இயக்கங்களும் இந்தப் பிரச்சினையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய கோரிக்கை என்னவென்பதே தெளிவாக தெரியவில்லை. இந்த நாவலின் சில பக்கங்களை மாத்திரம் ஆயிரம் நகல்கள் எடுத்து கோயிலுக்கு வருபவர்களிடம் ஒரு துண்டறிக்கையுடன் விநியோகிப்பதாக அறிகிறேன். அந்தப் பக்கங்களை மாத்திரம் வாசித்தால் இந்த நாவல் சமகாலத்து பின்னணியில் எழுதப்பட்டது போன்ற தோற்றத்தை தரும். இதற்குப் பின்னர் பிஜேபி அரசியல் நபர்கள் மறைமுகமாக இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இந்த சர்ச்சை துவங்கப்பட்டது முதல் சொந்த ஊரில் தங்க முடியாமல் தலைமுறைவாக ஆங்காங்கே சென்று கொண்டிருக்கிறேன்.

இது ஏதோ என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை என்பதாக அறிவுசார் சமூகம் கருதி விடக்கூடாது. இனி மேல் எந்தவொரு படைப்பிலும் எந்தவொரு சாதியைப் பற்றியோ அதன் வழக்கங்கள் பற்றியோ எழுத முடியாமல் போகும். கருத்துச் சுதந்திரத்தை எதிரான ஆபத்தை இட்டுச் செல்லக்கூடியது இது."

இவ்வாறாக அவரது உரை அமைந்திருந்தது.


***

பெருமாள் முருகன் மீதான எதிர்ப்பும் போராட்டமும் மிரட்டல்களும் ஏதோ உதிரி அமைப்புளைச் சார்ந்த நபர்களால் செய்யப்படுவது என்பதாக நாம் கருதி புறக்கணித்து விட முடியாது என்பதாக எனக்குத் தோன்றுகிறது. எழுத்தாளராகவும் ஒரு தனிநபராகவும் அவர் எதிர்கொள்ளும் மனஉளைச்சலையும் அது அவரது பிந்தைய படைப்பாற்றலை பாதிக்கக்கூடிய ஆபத்தையும் நம்மால் யூகிக்க முடியும். எனவே அறிவுலகம் சார்ந்து இயங்கும் அனைத்து படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் நபர்களும், தங்களின் அரசியல்களை, கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாவது ஒதுக்கி - ஓரணியாக நின்று எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு தங்களின் ஆதரவை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


suresh kannan

Sunday, December 01, 2013

வெள்ளை யானை - நூல் வெளியீட்டு விழா


ஜெயமோகனின் 'வெள்ளை யானை (வெள்ளையானை?) நூல் வெளியீட்டு விழா. அரங்கு நிறைந்த கூட்டம்.

நான் இன்னும் இந்த நாவலை வாசிக்கவில்லை என்பதே இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முக்கிய தகுதியுடன் கூடிய அடையாளம். ஏனெனனில் சமகால நூல்வெளியீட்டு விழாக்களில் முக்கிய பேச்சாளர்கள் 'நான் இன்னும் இந்த நூலை வாசிக்கவிலலை' என்றுதான்  வெட்கமேயின்றி தன் உரையைத் துவங்குவார்கள். அதை விடவும் முக்கியமான பணிகள் கொண்டவர் அவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நூலுக்கு சிறிதும் தொடர்புமின்றி மைக்கை விட்டுத்தர மனமின்றி பின்னர் அந்த உரை சுயபிரதாபங்களுடன் நீளும். கூட்டத்தின் வாயிலிருந்து சிரிப்பைப் பிடுங்கும்  நோக்கத்துடன் அசட்டுத்தனமான நகைச்சுவைகளும் கைத்தட்டலை பெற்று விடும் நோக்கத்துடன் ஆவேசக் கூவல்களும்தான் பொதுவெளி மேடை உரையாடல்களின் அடையாளங்கள் என்றாகி நீண்ட வருடங்களாகி விட்டன.

மாறாக இந்த நூல் வெளியீட்டு விழா பெரும்பாலும் நூலுக்குத் தொடர்புடைய உரையுடனும் தன்மையுடனும் காணப்பட்டது ஆசுவாசமாக இருந்தது. 'அம்பேத்கர்' பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் பலத்த கைததட்டல்களும்,  இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் என்று முன்னுரையில் இடப்பட்டிருக்கும் பெயர் வரிசையை மாற்ற வேண்டும் என்கிற வேண்டுகோள் போன்றவையாக இந்தக் கூட்டத்தின் உரையாடல்களும் மனோநிலையும் தலித் ஆதரவுத்தன்மையுடன் அமைந்திருந்தது இயல்பான ஒன்று. ஏனெனில் 'வெள்ளை யானை' பிரதியின் மையம் அப்படியானது. 'இந்துவத்துவத்தின் குரல்' என்கிற அபத்தமான புரிதலுடன் அறியப்படும் ஜெயமோகன் எழுதிய இந்த சமீபத்திய  படைப்பை தலித் ஆதரவாளர்கள் நெருங்கி வரக்கூடிய, மனவெழுச்சியை ஏற்படுத்தக்கூடிய நுட்பமான வித்தியாசத்துடன் கூடிய தருணம்.

எழுத்தாளர் இமையம், அவர் ஏற்கெனவே எழுதிய 'தி இந்து'வில் வெளியான மதிப்புரையின் சுருக்கப்படாத வடிவத்தை வாசித்தார். பேராசிரியை சரஸ்வதி, ஒரு கல்வியாளருக்கேயுரிய கறாரான தன்மையுடனும் பாடப்புத்தகங்கள் ஏற்படுத்தும் வறட்சியான சலிப்புடனும் நூலைப் பற்றி குறிப்புகளுடன் பேசினார். 'பழைய வரலாற்றை பற்றி அறிந்தால்தான் புதிய வரலாற்றைப் படைக்க முடியும்' என்கிற அம்பேத்கரின் மேற்கோளுடன் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செ.கு.தமி்ழரசன், தலித் மக்களே தங்களின் வரலாற்று அறியாமையுடன் இருப்பது  குறித்த ஆதங்கத்தைப் பதிவு செய்தார். ஆதிநந்தன் லெமூரியர், வரலாற்றில் மறைக்கப்பட்ட, புதைக்கப்பட்ட இவ்வாறான பல வரலாற்று உண்மைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தலித் எழுத்தாளர்களினால் எழுதப்பட்டால் அது சுயசார்புத்தன்மையுடன் எழுதப்பட்டது என பொதுவாக கருதப்படக்கூடிய அபாயம் இருப்பதால் பொதுவானவர்களும் ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றின ஆய்வு நூல்களை எழுத வேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மைய மாநிலச் செயலாளர், கெளதம சன்னா சென்னையின் வரலாற்றுப் பின்புலத்தோடு இந்த நூலை ஆய்வு நோக்கில் பல அரிய தகவல்களுடன் கூடிய ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். சென்னையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் 'லோன் ஸ்கொயர்' என்று அழைக்கப்படும் பகுதியின் பெயர்க்காரணம் உள்ளி்ட்ட பல புதிய தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை இவரது உரை நிகழ்த்தியது. வெள்ளை யானையில் விவரிக்கப்படும் 1870-களில் நிகழ்ந்த ஐஸ்அவுஸ் போராட்டம், தமிழகத்தில் நிகழ்ந்த முதல் தலித் போராட்டம் என்று கருதப்பட்டாலும் 1777-ல் நிகழ்ந்த ஒரு கொலையைத் தொடர்ந்த நிகழ்வுகளே தலித்திய மக்களின் போராட்டத்தின் துவக்கம் என்பதும் இது குறித்த சில வரிகள் அயோத்திதாச பண்டிதரின் நூலில் காணப்படுகிறது என்பதும் கெளதன சன்னாவின் உரையிலியிருந்து அறிய முடிந்தது.

ஜெயமோகனின் ஏற்புரையின் மூலம் நம்முடைய வரலாற்றை ஆவணப்படுத்துதலில் எத்தனை அறியாமையுடனும் பின்தங்கியும் இருந்தி்ருக்கிறோம், இருக்கிறோம் என்கிற அதிர்ச்சிகரமான அவமானத்தை மீண்டும்  மீண்டும் அறிய முடிந்தது. கடந்த சமீபத்திய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்த இந்த மிகப் பெரிய  பஞ்சத்தைப் பற்றி, செயற்கையாக நிகழ்த்தப்பட்ட பஞ்சத்தின் மூலம் நிகழ்ந்த படுகொலைகளைப் பற்றி நம்மிடையே எவ்வித ஆவணமுமில்லை. நிழலாக சில தடயங்கள் மாத்திரமே. மாறாக மேறகத்திய உலகில் வரலாற்று ஆவணங்களை பதிவதிலும் பாதுகாப்பதிலும் எத்தனை கவனத்துடனும் அக்கறையுடனும் இருக்கிறார்கள் எ்னகிற நிதர்சனம் அவமானமானதொரு வடுவாக நம் முன் நிற்கிறது.

90-களிலேயே இதை எழுத திட்டமிட்டிருந்தாலும் இந்த நாவலை யாருடைய நோக்கில் எந்த மொழியில் எழுதுவது என்பது குறித்து இந்த நூலாசிரியருக்கு தயக்கமிருந்திருக்கிறது. ஏனெனில் சென்னையைப் பற்றியோ அப்போதைய பேசுமொழியைப் பற்றியோ அறிந்திருக்காத நிலையில் இத்தயக்கம். 'தென்தமிழ்நாட்டில் நிகழ்ந்த சம்பவமென்றால் தன்னம்பிக்கையுடன் எழுதி முடித்திருப்பேன்' என்கிறார். எனவேதான் மூன்றாவது முயற்சியில் இறுதி வடிவத்தை எட்டிய இந்த நாவலில் இந்தப் பிரதேசத்தைப் பற்றி அறிந்திராத எய்டனின் பார்வையில் இந்த நாவல் விரிகிறது. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி என்கிற புதினம், சந்தனக்கடத்தல் வீரப்பனை தேடுகிற வேட்டையில் வனக்காவல் அதிகாரிகள், பழங்குடி மக்களை எப்படியெல்லாம் பலவகைகளில் துன்புறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர்ச்சிகரமாக விவரித்துச் சென்றாலும் பாத்திரங்கள் உரையாடும் செயற்கைத்தனம் காரணமாகவே அதன் இலக்கிய மதிப்பை இழக்கிறது. தரவுகள் எளிதில் கிடைக்க்ககூடிய சமகாலத்திய பிரச்சினையைப் பற்றி உரையாடும் பிரதியே இத்தனை அலட்சியமாக உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் ஒரு பிரதியின் நம்பகத்தன்மைக்காக ஜெயமோகன் முன்வைக்கும் உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நாவலை விரைவில் வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலையும் அதற்கும் மேலாக முந்தைய வரலாற்று ஆய்வு நூல்களை (குறிப்பான சென்னையின்) வாசித்தறிய வேண்டும் என்கிற மிகப் பெரிய ஆர்வத்தையும்  இதுவரையிலான வாசிப்பின் போதாமையையும் இந்த நூல் வெளியீட்டு விழா ஏற்படுத்தியிருக்கிறது.

Wednesday, February 03, 2010

அஞ்சுவண்ணம் தெரு

தோப்பில் முஹம்மது மீரானின் இன்னுமொரு சுவாரசியமான புதினம்.

நாஞ்சில் நாட்டின் பிரத்யேக வட்டார மொழியும் இசுலாமியச் சமூகப் பின்னணியில் இயங்குகிற காரணத்தால் ஆங்காங்கே இரைந்திருக்கிறஅரபிச் சொற்களும் வாசகனை ஒரு வேளை ஆரம்பத்தில் திணறடிக்கலாம். ஆனால் அது அதிகாலை குளிர் குளத்தில்  நீராடுவதைப் போலத்தான். மனதைத் திடப்படுத்தி முதல் முங்கை போட்டுவிட்டால் பிறகு எழுந்திருக்க மனதே வராத ஆனந்தத்தை மீரானின் புதினத்தின் மூலமாக அனுபவிக்க முடிகிறது.

கடலோர கிராமத்தின் கதை,  சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் தவிர்த்து தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் மனிதர்கள் இருந்தாலும் இந்தப் புதினத்தின் மையம் அவர்களைப் பற்றியல்ல. தொன்மங்களும் நம்பிக்கைகளும் நவீன காலத்தின் பரிணாமத்தில் மெல்ல சிதறுண்டுப் போவதை இந்தப் புதினம் விவரிக்கிறது. தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார் மீரான். இந்தச் சமூகப் புதினத்தை துப்பறியும் நாவல் போல் மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்து முடித்தேன்.


மலையாளத்து மகாராஜா சோள (?) பாண்டிய நாட்டிலிருந்து ஐந்து நெசவுக் குடும்பங்களை தருவித்து அவர்களுக்கான நிலத்தையும் ஒதுக்கி குடியமர்த்துகிறார். எனவேதான் அந்தத் தெருவின் பெயர் இயல்பாக 'அஞ்சு வண்ணம் தெரு'வாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்'தான் அந்தத் தெரு மனிதர்களுக்கு தெய்வமாக இருக்கிறது. நாட்டார் மரபில் சிறு தெய்வங்கள் தோன்றும் அதே பின்னணிதான். மகாராஜா உலாவரும் போது அவரை மறைந்திருந்து பார்த்த தஞ்சாவூர் தாயும்மாவின் (ஹாஜரா) அழகில் மயங்கி மணம் முடிக்க தூது அனுப்புகிறார். ஒரு காபிருக்கு இசுலாமிய பெண்ணை மணம் முடிப்பதாவது? தந்தை கேட்கிறார் " மன்னன் உன்னை மனைவியாக்கி விடுவான். நீ காபிராக இறக்கப் போகிறாயா? ஈமானுள்ள முஸ்லிமாக இறக்க விரும்பிறியா?" மகள் சொல்கிறாள் "ஈமானுள்ள முஸ்லிமாக". "அப்படியானால் இந்த குழியில் இறங்கம்மா". மதத்திற்காக உயிருடன் புதைக்கப்படுவதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் அவள் 'அடக்கம் செய்யப்பட்ட தாய்' ஸ்தானத்தை அடைந்த புராதன நிகழ்வு அஞ்சுவண்ணம் தெருவின் ஆதி வரலாறு தெரிந்தவரான பக்கீர் பாவா சாகிப் மூலமாக வாப்பாவிற்கும் தெரிவிக்கப்படுகிறது.

அஞ்சுவண்ணம் தெருவில் ஜரிகை தாவணியும் அங்கவஸ்திரமும் பட்டு வேட்டியும் நெய்யக்கூடிய ஒரே தறிக்காரனான அப்பாஸ் முதலியின் மண்வீட்டை இடித்து ஷேக் மதார் சாகிப் 'நபீசா மன்ஸிலை' கட்டுகிறார்.  அந்தத் தெருவிலுள்ள தைக்கப்பள்ளியை விட அந்தக் கட்டிடம் உயரமாக இருப்பது ஆபத்து என்று பள்ளிவாசலை பராமரிக்கும் மைதீன் பிச்சை மோதீன் முதற்கொண்டு தெருவாசிகள் அனைவரும் சொல்கின்றனர். ஆனால் இதற்கொரு பரிகாரமுண்டு. தைக்காப்பள்ளியின் மேலே ரெண்டு மினாராக்கள் கட்டிக்கொடுப்பதுதான் அது. ஆனால் தொழில் சுணங்கியிருப்பதாலும் ஷேக் மதாப் சாகிப்பிற்கு விருப்பமில்லாததாலும் அதை நிறைவேற்ற முடிவதில்லை. தொழில் நொடித்து வீட்டில் அமீனா புகும் நிலை ஏற்படுகிறது. தெய்வத்தின் சாபம் என்றே தெருவாசிகள் இதைக் கருதுகின்றனர்.

பிறகு பாழடைந்த அந்த வீட்டினுள் பெண் தற்கொலையொன்று நிகழ்வதாலும் பேய்கள் இருப்பதாலும் யாரும் அதனருகே செல்வதில்லை. மகளுக்காக வீடொன்றை வாங்க முயலும் 'வாப்பா' எதிர்ப்பையும் மீறி அதை வாங்கி வீட்டின் பெயரை 'தாருல் சாஹினா' வாக மாற்றினாலும்  அவருடைய மகளும் மருமகனும் அதிருப்தியோடும் தெருக்காரர்கள் கிளப்பிவிடும் பீதியுடனும் அங்கு வாழ்கிறார்கள். இந்த இடத்திலிருந்து புதினம் நிகழ்காலத்தில் இயங்கத் துவங்குகிறது. அதன் பின்னர் அஞ்சுவண்ணம் தெருவில் ஏதேதோ சம்பவங்கள் நடக்கின்றன. மதத்தின் புராதனத்தன்மையும் நவீனத்தன்மையும் மோதிக் கொள்கின்றன. தைக்காப்பள்ளி கவனிப்பாரின்றி பாழாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்க்கு' விளக்கேற்றவோ சந்தனத்திரி கொளுத்துவதற்கோ ஆளில்லை. மைதீன் பிச்சை மோதீன் மர்மப்பாம்பு கடித்து பள்ளிவாசலிலேயே இறக்கிறார்.

()

மீரான் இயல்பான வட்டார மொழியில் காலத்தை முன்னும் பின்னுமாக கடக்கின்ற உத்தியோடு இந்தப் புதினத்தை நகர்த்திச் செல்கிறார். மத நம்பிக்கைச் சார்ந்த ஆனால் பகுத்தறிவிற்கு ஒட்டாத விஷயங்களை தன்னுடைய மேதமையை நுழைக்காமல் அதனின் இயல்பிலேயே விவரித்திருப்பது நன்றாக இருக்கின்றது. பள்ளி வாசலை பராமரிக்கிற பாவப்பட்ட பாத்திரமொன்று மீரானின் படைப்புகளில் தொடர்ந்து சித்தரிக்கப்படும். இதிலும் அது 'மைதீன் பிச்சை மோதீனாக' வருகிறது. தைக்காப்பள்ளியில் தொடர்ந்து விளக்கு எரிவதற்கு தெருவாசிகளிடம் இரந்து கொண்டேயிருக்கிறார். "அடக்கம் செய்யப்பட்ட தாய் இன்னு இருட்டிலையாக்கும்" மம்முதம்மா என்றொரு பாத்திரம் இதில் முக்கியமானதும் சுவாரசியமாக சித்தரிக்கப்பட்டதுமாகும். அஞ்சுவண்ண தெருவின் பெரும் சண்டைக்காரியாக குழாயடியை கைப்பற்றியிருக்கும் அவள் தெருவாசிகளின் அந்தரங்கங்களை சண்டையில் போட்டு உடைக்கிறாள். 'எப்படி இவளுக்குத் தெரிந்தது' என்று தெருவாசிகள் திகைப்படைகிறார்கள்; ஆச்சரியப்படுகிறார்கள்; ஜின்னுவின் துணையுடன்தான் இது சாத்தியமாகும். அவளுடைய வரலாறு மைதீன் பிச்சை மோதீன் மூலமாக வாப்பாவிற்கு தெரியப்படுத்தப்படும் போது நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்திற்காவும் தன்னுடைய மதத்திற்காகவும் உயிரை முன்வந்து இழந்த ஒரு தியாகியின் மகள். வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களில் இவ்வாறு ஆயிரக்கணக்கான சித்திரங்கள் உள்ளன.  

பொதுவாக எல்லாப் படைப்புகளிலும் பிரதியை உருவாக்குகிற ஆசிரியனும் ஒரு பாத்திரமாக உள்நுழைந்திருப்பான். அப்படியாக இதில் 'வாப்பா'வரும் பாத்திரம் நூலாசிரியர் மீரானாக இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். இசுலாமிய மதத்தின் சில கூறுகளை அறியாமையில் ஏற்பட்டிருக்கிற மூடத்தனம் என்ற புரிதல் இவருக்கு இருக்கிறது. தைக்காப்பள்ளிக்கு மினாராக்கள் கட்டிக் கொடுக்காததால்தான் வீட்டில் துன்பங்கள் நிகழ்கின்றன என்று தீவிரமாக நம்பும் மகளையும் மருமகனையும் இவர் தெளிவுப்படுத்த முயன்று கொண்டேயிருக்கிறார். அவர்கள் தரும் எரிச்சலையும் சலிப்பையும் அறிவின் துணையுடன் கடக்கிறார். அதன்படியே அந்தக்குடும்பம் முதலில் சில பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டாலும் பின்னர் நல்ல நிலைமைக்கு ஆளாகிறது.

நாவலின் பிற்பகுதி கசப்பான வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது. மதத்தை நவீனப்படுத்துவதாகச் சொல்லும்   ஒரு கூட்டத்திற்கும் மரபின் மீதான நம்பிக்கைவாதிகளும் மோதல் நிகழ்கின்றன. இரு குழுக்களின் மோதலில் வேம்படி பள்ளி நீதிமன்றத்தின் கைக்குப் போகிறது. நீதிமன்றத்தின் சார்பாக ரீசிவராக நியமிக்கப்படுபவர் ஓர் இந்து. எல்லா வரவு செலவுகளையும் அவரிடம் ஒப்படைக்கவும் எந்தவொரு அனுமதிக்கும் அவரை நம்பியிருக்கவும் வேண்டியிருக்கிறது. இதிலுள்ள முரண்நகையை பூடகமாகச் சொல்லியிருக்கிறார் மீரான். எந்தவொரு வன்முறைச்சம்பவத்திற்கும் அப்பாவி இசுலாமியர்கள் பலிகடாக்களாக முன்நிறுத்தப்படுவதையும் சில நிகழ்வுகள் சொல்லிச் செல்கின்றன.

தறியின் நெசவு போலவே புரானத்தோடும் மத ஆன்மீகத்தோடும் இயைந்து இயைந்து கதை சொல்லியிருக்கும் மீரானின் படைப்புத் திறமைக்காகவும் வட்டார மொழிச் சுவைக்காகவும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய புதினம் - அஞ்சுவண்ணம் தெரு.

அஞ்சுவண்ணம் தெரு,(நாவல்) அடையாளம் வெளியீடு, 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம்,621310 , முதல் பதிப்பு , 2008, விலை ரூ.130/ -

நாவல் குறித்த  ஜெயமோகனின் பதிவு
                                
                                 அ.ராமசாமியின் பதிவு
                           
                                 களந்தை பீர்முகம்மதுவின் பதிவு

மீரானின் 'துறைமுகம்' நாவல் குறித்த பதிவு

suresh kannan

Monday, January 18, 2010

சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள்

ரொம்பவும் சுவாரசியமான புத்தகம்.

நாட்டார் வழக்காற்றியலின் (Folklore) முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவரான அ.கா.பெருமாள் கள ஆய்வின் போது தமக்கேற்பட்ட அனுபவங்களை தொகுத்துத் தந்திருக்கும் நூல் - சுண்ணாம்பு கேட்ட இசக்கி. நூலாசிரியர் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், இடர்ப்பாடுகள், வாய்மொழி கதைகள், சிறுதெய்வங்கள், அவற்றின் பின்னணிகள், வழிபாடுகள்,  நாட்டார் கலைஞர்கள்.. என சுவையான பல தகவல்கள் நூலில் நிறைந்துள்ளன.



உயர் படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்காகவும் அதற்கான ஆதாயங்களைத் தேடியும் பெரும்பாலும் நாற்காலியை விட்டு நகராமல் மற்ற நூல்களைச் சார்ந்து ஆய்வில் ஈடுபடுபவர்கள் ஒருவகை. சுய விருப்பத்தின் காரணமாக அதற்கான உந்துதல்களோடு நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வில் ஈடுபடுபவர்கள் இன்னொருவகை. பெருமாள் இதில் இரண்டாவது வகை என்பதை நூலை வாசிக்கும் போது  உணர முடிகிறது.

அணிந்துரை எழுதியிருக்கும் பேராசிரியர் நா.இராமச்சந்திரன் ஆய்வாளர்களுக்கான சில அடிப்படை யோசனைகளைத் தந்துள்ளார். அவற்றின் ஒரு பகுதி..

.. நாட்டார் வழக்காற்றுத் தகவல்களைச் சேகரிப்பது எளிதானதன்று. நான் சென்றவுடன் தகவலாளிகள் தயாராக வைத்திருக்கும் தரவுகளைக் கை நிறைய அள்ளித் தந்துவிடுவார்கள் என்று கருதி விடக்கூடாது. நாம் ஆய்வு செய்து பலனடைவதற்கு அவர்கள் நமக்குத் தரவுகளைத் தரவேண்டும் என்று எந்த உடன்பாடும் செய்யப்படவில்லை. பல ஆய்வாளர்கள் தகவலாளிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை...

. ஆய்வுக்களம் என்பது பரந்து விரிந்தது. வாய்மொழி வழக்காறுகளும், நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், பொருள்சார் பண்பாடுகளும், நிகழ்த்து கலைகளும், சடங்குகளும், தெய்வங்களும், நிகழ்வுகளும், ஊடாட்டங்களும், விளக்கங்களும் விரவித் தொடர்ந்து வருவது பண்பாட்டின் இயல்பாகும். ஆனால் ஆய்வாளர் ஏதேனும் ஒன்றிரண்டு வாய்மொழி வழக்காறுகளையோ அல்லது ஒருசில மரபுவழிப் பண்பாட்டுப் பொருள் குறித்த செய்திகளையோ தெய்வங்கள் பற்றிய செய்திகளையோ விவசாய முறைகளையோ சாதி குறித்த தகவல்களையோ சேகரிக்கச் செல்வார். தாம் நினைக்கும் வழக்காறு தவிர மேற்குறிப்பிட்ட பிற பண்பாட்டுக் கூறுகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். தாம் சேகரிக்கும் வழக்காறுகளுடன் நேரடித் தொடர்பு கொண்ட பிற வழக்காறுகளைக் கூட அவர் சேகரிக்க மாட்டார். தற்கால ஆய்வாளர்களின் நிலை இதுதான். ஆனால் பண்பாட்டுக் கூறுகள் எல்லாமே ஒன்றையொன்று தொடர்பு கொண்டவை-தனித்தியங்க இயலாதவை என்பதை ஒவ்வொரு ஆய்வாளரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ...

மாத்திரமல்லாமல் நூலின் முக்கிய சாரத்தை தம்முடைய அணிந்துரையில் சுருக்கமாகப் பட்டியலிட்டுள்ளார் இராமச்சந்திரன்

()

அ.கா.பெருமாளின் நேரடி ஆய்வு அனுபவங்கள் ஆய்வாளர்களுக்கு மாத்திரமல்லாமல் பொதுவான வாசகர்களுக்கும் சுவையாக அமையுமாறு பகிரப்பட்டுள்ளன.

நூலின் தலைப்பு ஆவியைப் பற்றியதொரு நாட்டார் கதையைக் குறிக்கிறது. .. இசக்கி வேப்ப மரத்துக்கு கீழே வடக்கே நின்னுக்கிட்டிருக்கா. சிவப்பு சேல உடுத்திருக்கா. சுண்டெல்லாம் சிவப்பு. தலமுடி ஒருபாகமா நீண்டு கெடக்கு. நாடாரு வண்டில வாராரு. காளமணி ஜல்ஜல்ன்னு கேக்குது. காளக் கண்ணுக்கு அவளத் தெரிஞ்சு போச்சு. கொஞ்சம் கலய ஆரம்பிச்சுச்சு. நாடாரு உடன சுதாரிச்சுட்டாரு. வண்டி அவ பக்கத்துல வந்தததும் தானா நின்னுது. கைய நீட்டி சுண்ணாம்பு இருக்குதான்னு சிரிச்சுக்கிட்டே கேக்குதா...

தகவலாளிகள் பேச்சின் இடையில் தெரிவிக்கும் சம்பவங்களும், பழமொழிகளும் பெரும்பாலும் நாட்டார் கதைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. அந்தக் கதைகளை விவரிக்கச் சொல்லி அதை நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார் பெருமாள்.

இன்னொரு அத்தியாயத்தில் பல்வேறு வடிவங்களில் நிலவிவரும் நீலிக்கதையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. வயிற்றுப் பிள்ளையோடு ஒரு பெண் இறந்தால் வயிற்றை அறுத்து அவளின் குழந்தையை தனியாக எரிக்கும் வழக்கம் சில பிரிவினரிடமும் இருப்பதை அறிய முடிகிறது. வழக்கமாக மற்றவர்கள் காண இயலாத அந்தச் சடங்கை நூலாசிரியர் காணச் சென்ற சம்பவம் திகிலுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

'கடத்தப்பட்ட கணியான்' என்கிற அத்தியாயம் கிராமப் புறங்களில் இன்றும் நிலவி வரும் சாதி ரீதியான தீண்டாமை எனும் விருட்சத்தின் ஒரு கிளையை அறிய உதவுகிறது. விஷயம் இதுதான். தாம் நடத்தும் கோவில் திருவிழாவில் கணியான் ஆட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றனர் தலித் மக்கள். ஆனால் கலைஞர் வருவதாயக் காணோம். விசாரித்த போது பேருந்தில் இருந்து இறங்கின அவரை 'அந்த' சாதிக்காரர்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் தகவல் தெரிகின்றது. தம்முடைய கோயில்களில் கூத்து நடத்தும் அதே கலைஞர் தலித் கோவிலிலும் ஆட்டத்தை நிகழ்த்துவதை பிற சாதிப் பிரிவினர் விரும்பவில்லை. தீட்டு பட்டுவிடும் என நினைக்கின்றனர். பிறகு ஒருவழியாக பேசி அவரை அழைத்து வந்து விடுகின்றனர். நிகழ்ச்சி நடக்கிறது.

இதுமாதிரியான பல அனுபவங்களோடு நாட்டார் கலைஞர்களைப் பற்றின தனிப்பட்ட தகவல்கள், விளிம்பு நிலையில் தவிக்கும் அவர்களின் சமூகம், குடித்தே அழியும் அவர்களின் பரம்பரைச்சுமை, புராதன கலையை தொடர விரும்பாத வாரிசுகள் என பல விஷயங்கள் நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

()

நூலாசிரியரின் அனுபவங்களிலிருந்து ஒரு ஆய்வாளர் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.

  • தாம் ஆய்வு நடத்தச் செல்லும் மக்களின் நம்பிக்கைகளுடன் நாம் முரண்படலாம். அதற்காக அவற்றை விவாதம் செய்யக் கூடாது. அது ஆய்விற்கும் சமயங்களில் ஆய்வாளருக்கும் சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
  • விவரங்களைத் தரச் சொல்லி தகவலாளியைக் கட்டாயப்படுத்தக் கூடாது. முறையான பேட்டிகளை விட இயல்பான உரையாடல்களில் பல சுவையான தகவல்கள் வெளிப்படலாம். கூடவரும் நண்பர்கள் சில வேளைகளில் வந்திருக்கும் நோக்கத்தினை பாழ்படுத்திவிடலாம்.
  • செல்லுமிடங்களில் கூடுமானவரை உள்ளூர் நபர்களின் அறிமுகத்துடன் செல்வது நல்லது. இல்லையெனில் ஊர் மக்களின் சந்தேகத்தில் விழ நேரிடும். பொதுவாக கிராமத்தவர்களின் முதல் கேள்வியே "தம்பி யாரு" என்பதாகத்தான் அமையும். அதில் 'தம்பி என்ன சாதி?" என்கிற கேள்வியும் அடக்கம். அவர்களின் பின்னணியில் இயல்பான அந்தக் கேள்வியை புரிந்து கொண்டு நாம்தான் பதமாக பதிலளிக்க வேண்டும் முற்போக்குத்தனமாக "மனுஷ சாதி" என்றெல்லாம் சினிமா வசனம் பேசினால் அந்த ஊரின் மருத்துவரையும் ஒரு வேளை காண நேரிடும்.
  • ஆய்வாளர் உணர்ச்சிவசப்படாமல் இருத்தல் நல்லது. உள்ளூர் விவகாரங்களில் தலையிடவோ மாட்டிக் கொள்ளவோ கூடாது.
  • ஆய்வாளர்கள் புத்தகங்கள் எழுதி நிறையச் சம்பாதிக்கிறார்கள் என்கிற எண்ணம் தகவலாளியின் அல்லது பொதுவான அபிப்ராயமாக இருக்கிறது. இதை முறையாக கையாள வேண்டும். பெருமாளின் மாணவி ஒருவர் தம்முடைய ஆய்வின் போது தகவலாளிகளுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இனிப்புகள், உடைகள் என்று வாங்கித் தர இதைப் பிடிக்காதவர்கள் 'அவர் கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்திருக்கிறார்" என்று கிளப்பிவிட அவரை வீட்டுச் சிறைப் பிடித்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
  • ஆய்வு முடிவுகளை தொகுத்து தரும் போது சாதி, சமூக வழக்கம் போன்ற சென்சிட்டிவ்வான விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். சுந்தரலிங்கம் என்கிற பெயர் பிற்பாடான கலவரத்திற்கு விதையாக இருந்ததை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அது போல் குறிப்பிட்ட இனத்தினவரின் சமூகப் பழக்கங்களை தவறாக புரிந்து கொண்ட ஒரு ஆய்வாளர் அதை விபச்சாரத்தோடு தொடர்புப்படுத்தி எழுதிவிட அது பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவந்து சம்பந்தப்பட்ட இனத்தினர் காவல்துறையினரின் தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆய்வாளர்களுக்கு உதவக்கூடிய இவ்வாறான பல தகவல்கள் கட்டுரைகளின் ஊடாக நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன.

()

பின்ணிணைப்பாக உள்ள சொல்புதிது பேட்டியில் அ.கா பெருமாள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு விஷயம் என் கவனத்தைக் கவர்ந்தது. 'நாட்டார் வழக்காற்றியலுக்கும் செவ்விலக்கியத்துக்கும் உள்ள உறவு குறித்த நிலை என்ன?' என்பது ஒரு கேள்வி. .. நீலி கதையின் கூறுகள் சம்பந்தர் காலத்திலிருந்து தொடர்ந்து செவ்விலக்கியங்களில் வருவதும் பெரியாழ்வார் தாலாட்டு வடிவத்தைப் பயன்படுத்தியதும் பிற்காலத்தில் இது பிள்ளைத் தமிழ் வகையில் தனிப்பருவமாக வெளிப்பட்டது போன்ற பல தகவல்களை இந்தக் கேள்விக்கான பதிலில் காண முடிகிறது.

ஏற்கெனவே கூறியபடி ஆய்வு மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மாத்திரமல்லாது ஒரு பொதுவான -குறிப்பாக நகர்ப்புற - வாசகனுக்கு உபயோகமுள்ள பல சுவையான தகவல்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.

நூல் விவரம்:

சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள்
யுனைடெட் ரைட்டர்ஸ்
முதல் பதிப்பு: நவ 2006
விலை ரூ.85/-

image courtesy: http://www.udumalai.com/





suresh kannan

Tuesday, December 22, 2009

ஜெயமோகன் நூல் வெளியீட்டு விழா 19.12.09


பத்து நூல்கள். தேவநேய பாவாணர் நூலக அரங்கம்.

பின்நவீனத்துவ சூழலுக்கு ஏற்றாற் போல் அடுக்குகளில் புத்தகங்கள் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு மரபை கட்டுடைக்கும் இந்த நூலகத்திற்கு அவ்வப்போது செல்வது வழக்கமெனினும் பக்கத்திலிருக்கும் இந்த அரங்கத்திற்கு செல்வது அபூர்வம். காதல் தோல்வியடைந்தவனின் கவிதைப் புத்தகம் மாதிரி அழுது வடிந்து கொண்டிருக்கும் அந்த அரங்கு, இப்போது அறிமுகப்படுத்தப்படும் சினிமா நாயகி போல் பளபளவென்றும் (ஏசி) குளிர்ச்சியோடுமிருந்தது.

(நூலகங்களில் புத்கக அடுக்கு முறை பற்றிப் பேசும் போது The Shawshank Redemption திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக்காட்சி நினைவுக்கு வருகிறது. தொடர்ச்சியான போராட்டத்தைத் தொடர்ந்து அதிகாரிகளின் அனுமதியுடன் சிறையில் நூலகம் ஒன்றை அமைப்பார் Tim Robbins. சக சிறைவாசிகளின் உதவியோடு புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு ஆங்கில புதினத்தைக் காட்டி 'அது எதைப் பற்றியது?' என்று கேட்பார் ஒருவர். "சிறையிலிருந்து தப்பிப்பதற்காக தொடர்ச்சியாக முயலும் ஒருவரைப் பற்றின புதினம்" என்று பதிலளிப்பார் Tim Robbins. "அப்படியென்றால் அதை 'Education' என்ற அடுக்கில் வைத்து விடவா?" என்று குறும்பாக கேட்பார் Morgan Freeman.)

நான் சென்ற போது ஏறக்குறைய அரங்கு நிறைந்து பதிப்பாளர் மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரை நிகழந்து கொண்டிருந்தது. 'எழுத்தாளன் படைப்பிலக்கியத்தைத் தாண்டி எல்லாத் துறையையும் பற்றி கருத்து சொல்ல வேண்டுமா? எனக் கேட்கப்படுகிறது. இன்றைய மெளன சூழ்நிலையில் எழுத்தாளன்தான் அனைத்தையும் பற்றி உரையாட வேண்டியிருக்கிறது' என்று வெளியிடப்படயிருக்கிற நூல்களின் உள்ளடக்கங்களை தர்க்கப்படுத்திக் கொண்டிருந்தார். தலைமை உரை ஆற்றிய டாக்டர் வி.ஜீவானந்தம், (பசுமை இயக்கம்) ஈரோட்டில் மாற்று மருத்துவனை ஒன்றை நடத்திக் கொண்டிருப்பதும், ஜெ.மோவின் நீண்ட கால நண்பர் என்பதும் தெரிந்தது.

மென்மையான குரலில் எனக்கும் புரியும்படியான எளிய ஆங்கிலத்தில் உரையாற்றினார் கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக். (ஜெயமோகனின் மொழிபெயர்ப்பில் இவரது சில சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு அவரது தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததை வாசித்த போது தமிழின் சமகால சிறுகதை உலகம் கிணற்றை விட்டு வெளியே வரவேண்டிய தருணம் ஏற்பட்டிருப்பதை உணர முடிந்தது.) உலகமயமாக்கத்தின் விளைவாக கன்னட சூழ்நிலையில் புத்தக வாசிப்பில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவையும் ஜெ.மோவுடனான நீண்ட கால நட்பையும் விவரித்தார்.

வீட்டுச் சோபாவில் சாய்ந்து கொண்டு 'ஊரின் வெள்ளாமை' பற்றி எச்சில் தெறிக்க விவரிக்கும் விவசாய 'பெரியப்பா' மாதிரி பார்வையாளர்களோடு மிகுந்த அன்யோன்ய மலையாளத்தில் உரையாடினார் கல்பற்றா நாராயணன்.

அப்போது நிகழ்நத ஒரு அதிசயத்தைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். அவர் மலையாளத்தில் உரையாடுவதை குறித்துக் கொண்டு உடனுக்குடன் அதை தமிழில் இலக்கிய வாசனையுடன் கூடிய வாக்கியங்களாக அமைத்து பார்வையாளர்கள் விளங்கிக் கொள்ளும்படி சொன்னார் ஜெயமோகன். கிறிஸ்துவ மதப்பிரச்சாரக் கூட்டங்களின் நினைவு வந்தாலும், என்னைப் பொறுத்தவரை இதை மொழியாளுமை கொண்டவரின் ஒரு சாதனையாகவே காண்கிறேன்.

..அந்தரங்க உறவுகளே சில காலத்திற்குப் பிறகு சலித்துப் போகிற சூழ்நிலையில் ஜெயமோகனுக்கும் தமக்கும் உள்ள நட்பும் உறவும் எவ்வித தடங்கல்களுமின்றி தொடர்கிறதைப் பற்றி விவரித்த கல்பற்றா நாராயணன், எப்போதும் சலிப்பில்லாத உற்சாகத்தோடு இயங்கும் ஜெமோவின் எழுத்து 'தசாவதார' வடிவங்களில் வெளிப்படக்கூடிய வீர்யமுள்ளது" என்றார்.

எப்போது வாசித்தாலும் அப்போதைய காலகட்டத்திற்கு பொருந்திப் போகிற, ஜெமோவின் எழுத்துக்களில் உள்ள நிரந்தரத் தன்மையைப் பற்றி வியந்துப் போற்றின யுவன் சந்திரசேகர் அதை நூலில் உள்ள பொருத்தமான வாக்கியங்களோடு விளக்கினார். 'புன்னகைக்கும் பெருவெளி' என்ற கட்டுரையை மிக அவசியமான பரிந்துரையாக முன்வைத்தார். இணையத்திலிருந்து விலகியே நிற்கும் யுவனை யாராவது விமர்சித்து எழுதினால் மாத்திரமே அதை நண்பர்கள் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வருவதாக சொன்னார். யுவனின் கவனத்தைக் கவருவதின் எளிய வழி, அவரை உச்சமாக திட்டி எழுதுவதே என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

வசந்தபாலனை சாய்ஸில் விட்டுவிடுவோம்.

பர்வீன் சுல்தானா தாம் ஜெமோவின் எழுத்துக்களினால் பாதிக்கப்பட்டிருப்பதை பிரத்யேக பட்டிமன்ற 'உரத்த' குரலில் வெளிப்படுத்தினார். 'உரத்த சிந்தனை' எனும் சொல்லாடல் பட்டிமன்ற பேச்சாளர்களிலிருந்து கிளைத்ததாக இருக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்டார்.

இளைஞரான பெரியாரியவாதி செல்வ புவியரசன், ஜெயமோகன் தம்முடைய எழுத்துக்களில் பெரியாரைப் பற்றியும் திராவிட இயக்கத்தை குறித்தும் திரித்து எழுதினதாக கருதியவைகளை ஆவேசமான குரலில் மறுத்தார். "ஜெயமோகன் ஒரு சினிமா வசனகர்த்தா' என்று சொல்வது எப்படி அபத்தமாக இருக்குமோ அப்படியே 'பெரியார் ஒரு சீர்திருத்தவாதி' என்று அவரை குறுகிய பார்வையில் நோக்குவது". என்றாலும் இவரின் பேச்சில் ஆவேசம் இருந்த அளவிற்கு அழுத்தமோ, உரையாடலில் கோர்வையோ இல்லாமலிருந்ததாக எனக்குத் தோன்றியது. (மொக்கையாக இருந்தாலும் அது தமக்கான ஜால்ராப் பதிவாக இருந்தால் அதை மாத்திரமே தம்முடைய தளத்தில் வெளியிடும் சாரு போன்றவர்கள் மாற்றுச் சிந்தனைகளை அங்கீகரிக்கும் அடிப்படை பாடத்தை இந்நிகழ்விலிருந்து கற்றுக் கொள்ளலாம் என்பதும் தோன்றியது).

வழக்கத்திற்கு மாறாக மதனின் பேச்சு சுவாரசியமாக இருந்தது. சில ஆளுமைகளைப் பற்றியும் சில சமாச்சாரங்களைப் பற்றியும் எளிதில் கருத்து சொல்ல முடியாத ஒரு கட்டுப்பெட்டியான, அராஜகமான சூழ்நிலை தற்போது இருப்பதாகவும் குறைந்தபட்சம் எழுத்தாளர்களாவது அந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்கும் பணியை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்பது இவர் உரையாடலின் சாரமாக இருந்தது.

()

தர்க்கத்தின் அடிப்படையிலேயே உண்ணும் உறங்கும் எழுதும் ஜெயமோகன், ஏற்புரையில் மற்றவர்களின் கருத்துரைகளைப் பற்றி எதிர்வினை செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் முன்னரே தயாரிக்கப்பட்ட பத்து (ரெடிமேட்) சட்டைகளோடு தம்முடைய பேச்சை முடித்துக் கொண்டார். ஜெமோவை சந்தித்து ராட்சசத்தனமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய எழுத்துக்களின் வேகத்தையும் விழாவில் வெளிப்பட்ட உடனடி மொழிபெயர்ப்பின் நேர்த்தியையும் வியந்தேன். நண்பர் சிவராமனின் உதவியோடு ஏற்கெனவே அறிமுகமிருக்கிற சக பதிவர்களோடு உரையாட முடிந்ததோடு சில புதிய பதிவர்களின் அறிமுகமும் நிகழ்நதது. கவிஞர் ராஜசுந்தரராஜனையும் யுவன் சந்திரசேகரையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். தேநீர் அருந்தும் சம்பிராதயத்தோடு அன்றைய நாள் நிறைந்தது.

சாரு மற்றும் ஜெயமோகன் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளிலிருந்த வித்தியாசங்களையும் அவற்றின் பின்னேயிருக்கும் சமூகக் காரணங்களை இன்றைய நுகர்வு கலாசார பின்னணியில் யோசிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. சாரு தம்முடைய நூல் வெளியீட்டு நிகழ்வு இளமைக் கொண்டாட்டமாக நிகழ்ந்ததாக புளகாங்கிதப்படுகிறார். இன்றைய தலைமுறையினர் தம்முடைய இளமை உற்சாகத்தை செலவழிக்க ஒன்றுமில்லாத பரபரப்பான புள்ளிகளை நோக்கி மாத்திரமே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் பின்பு யதார்த்தம் முகத்தில் அறைந்ததும் தெளிந்து அங்கிருந்து விலகி விடுகிறார்கள் என்பதும் தொடர்ச்சியான சமூக நிகழ்வு. சாரு இதிலெல்லாம் மயங்கிப் போகாமல் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிற தம்முடைய எழுத்துக்களை பலப்படுத்திக் கொள்வதன் மூலம்தான் தன்னை மீட்டுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தால் சரி.

துரதிர்ஷ்டவசமாக எஸ்.ரா நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்ல முடியாமலிருந்தது. சென்றிருந்தால் ஞாநி குறித்த சாருவின் இந்த திரித்தல் பேச்சையும் கண்டு கொள்ள இயன்றிருக்கும்.

disclaimer: (நிகழ்வில் உரையாடப்பட்டவை என்னுடைய நினைவிலிருந்து எழுதப்படுவது; கருத்துப் பிழைகள் இருக்கலாம்)

image courtesy: original uploader


suresh kannan

Sunday, December 13, 2009

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 2



முதல் பதிவின் தொடர்ச்சி...

இணையப் பதிவர்கள் குறித்து எஸ்.ரா முன் வைத்த பொதுவான விமர்சனம் எனக்கு ஏற்புடையது. பொதுவாக, தமிழக்ப் பதிவர்களைப் போலவே அயல் மாநில/நாட்டுத் தமிழர்களின் தேடலும் ஆர்வமும் வெகுஜன சினிமா குறித்தும் அரட்டை அரசியல் குறித்தும் அதன் தொடர்ச்சியான வீண் விவாதங்களுமாகத்தான் இருக்கிறது. பெளதீக ரீதியாக அவர்கள் தங்களின் சொந்த ஊர்களிலிருந்து விலகி இருந்தாலும் அவர்களின் எண்ணங்களும் தேடல்களும் தமிழகத்தின் பொதுப்புத்தி சார்ந்த விஷயங்களைச் சுற்றி மாத்திரமே அமைந்துள்ளது. அடிப்படையாக இதில் தவறில்லையெனினும் தான் தற்போது வாழ்கின்ற பிரதேசங்களின் பிரத்யேக கலாச்சாரம் குறித்தும் அங்குள்ள சிறந்த இலக்கியம், சினிமா, சிறந்த மனிதர்கள், மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றைப் பற்றியும் அவர்கள் பதிவு செய்வது ஆரோக்கியமான இணையப்பயன்பாட்டிற்கு உதவும். திரைப்படங்களிலும் நூல்களிலும் காணப்படாத, பதியப்படாத கலாசார பண்பாட்டு விஷயங்களை உள்ளூர் வாழ் மக்களின் மூலமாகத்தான் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும். இது சரிதான்.

ஆனால் ஆனந்த் மீது எஸ்.ரா வைத்த விமர்சனம் எனக்கு ஏற்புடையதல்ல.

சாருவின் இணைய தளத்தில் மலாவி குறித்து ஆனந்த் எழுதிய தொடர் பதிவுகளின் மூலம் அப்பிரதேசத்தின் மக்களைப் பற்றியும் கலாசாரத்தைப் பற்றியும் நிறையவே என்னால் அறிய முடிந்தது. எப்படி இந்தியா என்றொரு நாடு இருக்கிறது என்பதையே உலகப் பந்தின் சில பகுதிவாசிகள் அறியாமல் இருக்கிறார்களோ, அப்படியே நானும் இப்படியொரு தேசம் இருக்கிறது என்பதையே ஆனந்தின் பதிவுகள் மூலம்தான் அறிந்து கொண்டேன். பதிவுகளின் கூடவே அவர் தன்னுடைய வாழ்க்கைத் துளிகளையும் இடையில் பகிர்ந்து கொண்டார் என்பது உண்மைதான். தொழில் முறை அல்லாத அதிகம் அனுபவமில்லாத எழுத்தாளருக்கு இயல்பாக ஏற்படும் விபத்துதான் இது. அதற்காகவே ஆனந்த்தை முழுக்க எஸ்.ரா. புறக்கணித்தது ஏற்க முடியாததாக இருந்தது. ஆனந்தின் மொழி மிகுந்த நுண்ணுணர்வோடும் லாகவமாகவும் ஏன் அவர் உரையாடிக் கொண்டிருந்த சாருவையும் சில இடங்களில் தாண்டிச் சென்ற சுவாரசியத்தோடும் அமைந்திருந்தது. இப்போதும் கூட சாருவின் இணையத்தளத்தில் வாசிக்கக் கிடைக்கும் ஆனந்தின் பதிவுகளை திறந்த மனத்துடன் வாசிக்கும் எவருமே இதை உணர முடியும். பொதுவாக அதீதமான விமர்சனங்களை முன்வைக்காத எஸ்.ரா., இதை தவறவிட்டதுதான் எனக்கு சற்று திகைப்பை ஏற்படுத்தியது.

அடுத்ததாக வந்தார் மிஷ்கின். சாருவின் கேள்வி-பதில் நூலைப் பற்றி இவர் பேச வேண்டும். ஆனால் அதைத் தவிர மற்ற அனைத்தையும் பேசினார். நந்தலாலா குறித்த புலம்பலே இவர் பேச்சில் அதிகம் இருந்தது. முழுவதும் நாடகத்தனமான பேச்சு. (சாருவின் முந்தியதொரு நூல் வெளியீட்டு விழாவில் பேசின பார்த்திபனின் நினைவு வந்தது.) அவரின் முந்தைய இருபடங்களும் மற்ற திறமையான விஷயங்களுக்காக பேசப்பட்டதை விட அதிலிருந்த 'குத்துப் பாடல்களுக்காக'வே அதிகம் சிலாகிக்கப்பட்டதை கறுப்பு நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார். 'நந்தலாலா'விற்காக இளையராஜாவை அணுகிய போது அவரும் 'அப்ப.. நானும் ஒரு குத்துப் பாட்டு போட்டுத்தரவா?' என்றாராம். (ராஜாவின் அதீத ரசிகர்கள் கவனிக்க) இவர் "நம்ம நட்ப வேணா இப்பவே முறிச்சுக்கலாம். நான் உங்க கிட்ட வந்ததே நான் காட்சிரீதியாக அதிகம் அமைத்திருக்கும் பல பகுதிகளை உங்களின் இசையால்தான் நிரப்ப வேண்டும்" என்றிருக்கிறார். சாருவின் சினிமா விமர்சனங்களைப் பற்றி முதலில் எதிர்மறையாகத்தான் கேள்விப்பட்டிருந்தாராம். எனவேதான் சாருவிற்கு 'நந்தலாலா'வை திரையிட்டுக் காட்டினாராம். சாரு அவருடைய தளத்தில் இதைக் கொண்டாடியது இவருக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியததாம். 'ஒரு எழுத்தாளனின் பாராட்டை என்ன பெரிய விருது தேவை? இனி இந்தப் படம் வெளிவரவில்லையென்றால் கூட பரவாயில்லை' என்கிற அளவிற்கு சாருவின் விமர்சனம் அவருக்கு திருப்தியை அளித்ததாம். "சாரு புகழ்ந்த அளவிற்கு 'நந்தலாலா' ஒன்றும் சிறப்பான படமில்லை. ஆனால் நீங்க நிச்சயம் பாருங்க".

"மற்ற கூட்டங்களில் செயற்கையாக பேச வேண்டியதிருக்கும். இந்த மேடையில்தான் உண்மையாக இருக்க முடிந்தது. மற்ற கூட்டங்களில் 'கைத் தட்டுங்க' என்றால் உடனே suggestive ஆக கைத்தட்டுவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அனைவரும் ஜீனியஸ்" என்றவர் ஒரு கட்டத்தில் அபூர்வ ராகங்கள் நாகேஷ் மாதிரி "இந்த இடத்துல நீங்க கைத்தட்டணும்" என்றார். கூட்டமும் விவஸ்தையில்லாமல் கைத்தட்டியது. என்ன எழவோ.

(சாருவின் நேர்காணல்கள் நூல் குறித்து பவா.செல்லத்துரை பேசப்போவதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது நிகழ்த்தப்பட்டதாக தெரியவில்லை. அவருக்குப் பதிலாக வேறு யாராவது இதைப் பற்றி பேசினார்களா என்பது குறித்தும் அறியேன். விழாவிற்கு வந்திருந்த மற்ற இணைய நண்பர்கள் யாராவது இதை தெளிவாக்கலாம்.)

ஏற்புரையும், நன்றியுரையும் நிகழ்த்த வந்தார் சாரு. அவர் பேச்சின் சாரம் பெரும்பாலும் அவர் இணையத்தில் சமீபத்தில் எழுதியவைதான். எனவே திரும்பவும் அவற்றைக் கேட்க சலிப்பாக இருந்தது. 'நந்தலாவை' இன்னும் கூடுதலாகப் புகழ்ந்தவர், "இதை ஒரு ஜப்பானியப்படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜீலியட்டின் ஒரே நாடகம், ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களாக வெவ்வேறு படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு படைப்பால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தம்முடைய ஒன்லைனை எடுத்து தம்முடைய பாணியில் அதை விரிவாக்குவதில் தவறில்லை. ஆனால் அமீர் அயல்மொழித் திரைப்படத்தினை காட்சிக்கு காட்சி அப்பட்டமாக உருவியிருக்கிறார். ஏன் தமிழ்ப்படத்தின் கதாநாயகி லுங்கி கட்டியிருக்கிறார், தமிழ்நாட்டுப் பெண்கள் பொதுவாக லுங்கி கட்டுவதில்லையே என்று யோசித்தேன். மூலத்திரைப்படத்தைப் பார்த்ததும்தான் தெரிந்தது. அந்தப் படத்தின் பெண்ணும் லுங்கி கட்டியிருக்கிறார்" என்றார்.

[இங்கு என்னுடைய இடைச் செருகல் ஒன்று. 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது நான் குறிப்பிட மறந்து போன ஒன்று. கமல் மொட்டை மாடியில் 'சாண்ட்விட்ச்' சாப்பிடுவார். படத்தின் மற்ற பகுதிகளை 'தமிழ்ப்படுத்தியவர்' ஏன் இந்த உணவு விஷயத்தை வடநாட்டு பாணியில் அமைத்திருந்தார் என்று யோசித்தேன். அப்புறம்தான் புரிந்தது. இந்தித் திரைப்படத்திலும் நஸ்ருதீன் ஷா 'சாண்ட்விட்ச்' சாப்பிடுவார். அடப்பாவிகளா! இப்படியா செட் பிராப்பர்டி முதற்கொண்டு நகலெடுப்பார்கள்? அது மாத்திரமல்ல அந்த 'சாண்ட்விட்ச்' கூட இந்தித் திரைப்படத்தில் உபயோகப்படுத்தின அதே சாண்ட்விட்ச்சாக இருக்குமோ என்கிற சந்தேகம் கூட எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் சாப்பிடுவதற்கு முன் அதை முகர்ந்து பார்ப்பார் கமல். இதையும் தமிழ்ப்படுத்தி ஏன் ஒரு சாம்பார் சாதமோ, இட்லியோ ('தயிர் சாதம்' வேண்டாம். நமது கட்டுடைப்பு விமர்சனவாதிகள் இதையும் எப்படியாவது தங்களுக்குச் சாதகமான 'பார்ப்பன எதிர்ப்பு' சட்டகத்தில் இட்டு இன்னும் அதிகம் கமலை திட்டியிருப்பார்கள்) பயன்படுத்தவில்லை என்று புரியவில்லை.]

சாருவின் இந்தக் கருத்து ஏற்படுத்துடையது என்றாலும் 'நந்தலாலா' 'Kikujiro'வின் பாதிப்பினால் உருவான படம்தான் என்று மிஷ்கின் வெளிப்படையாக அறிவிப்பாரா என்று தெரியவில்லை. இல்லையெனில் அமீருக்கு ஒரு நீதி, மிஷ்கினுக்கு ஒரு நீதியா? என்ற இயல்பான கேள்வி சாருவை நோக்கி எழுவதை தவிர்க்க முடியாது.


()

வாசிப்பு உணர்வும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிற தற்கால சூழ்நிலையில் ஒரு பதிப்பகம் 90 நூற்களை வெளியிடுவது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் இதை நுகர்வுப்பண்டம் போல் இப்படி அவசரம் அவசரமாக நிதானமில்லாமல் ஒரே சமயத்தில் அடித்துத் தள்ள வேண்டும் என்பதுதான் புரியவில்லை. இன்னொரு வகையில் இந்த வகையான வணிகப் போட்டியே ஒரு gimmicks ஆக தெரிகிறது. மேலும் சிறப்புரை ஆற்றி நூலை அறிமுகப்படுத்த வந்தவர்கள் பெரும்பாலும் (எஸ்.ரா, அழகிய பெரியவன் நீங்கலாக) நூலையொட்டின தம்முடைய உரையை முன்வைக்கவில்லை. சிலர் நூல் மிகத் தாமதமாகத்தான் தம்முடைய கைக்குக் கிடைத்தது என்றார்கள். இதைக்கூட நியாயமான காரணமாக ஒப்புக் கொள்ளலாம். ஆனால் பொதுவாக நூல் வெளியீட்டு விழாக்களில் தாம் வெளியிடப் போகும் அல்லது உரையாடப் போகும் நூலைப் பற்றி எதுவும் அறிந்திருக்க வேண்டாம் அல்லது அதை வாசித்திருக்க வேண்டாம் என்பதுதான் பேச்சாளர்களின் முக்கியத் தகுதியாக இருக்கிறது. (சா.கந்தசாமி நிச்சயம் நூலைப் பற்றி மட்டும்தான் பேசியிருப்பார் என்று முன்அனுபவங்களின் அடிப்படையில் யூகிக்கிறேன்).

மிஷ்கின் மற்றும் சாருவின் பேச்சு மிகுந்த நாடக்த்தனமாக அமைந்திருந்தது. இதைத்தான் 'கிளிஷே' என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். இருவருமே தங்களின் குடிப்பழக்கத்தை கிளர்ச்சியுடனான பாவனையுடன் மேடையில் வெளிப்படுத்தினார்கள். தங்களிடமுள்ள கெட்ட பழக்கங்களை (கெட்ட பழக்கம் என்கிற வார்த்தையை பொதுப்புத்தி சார்ந்து உபயோகிக்கிறேன்) பொது வெளியில் மறைப்பது ஒரு காலகட்டத்து பழக்கமாக இருந்தது. ஆனால் மரபை உடைப்பதாக தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள், இது ஒளிக்க வேண்டிய அவசியமில்லை. இதுவும் நமது வாழ்வியலின் ஒரு அங்கம்தான். இதை ஆரோக்கியமாகவும் வெளிப்படையாகவும் விவாதிப்போம் என்றனர். (வழக்கமாக நடிகர்கள் செய்யாத ஒன்றாக, ரஜினி தம்முடைய குடிப்பழக்கத்தை வெளிப்படையாக தெரிவித்ததின் காரணத்திற்காகவே 'இன்னா நல்லவருப்பா. எதையும் மறைக்கறதில்லை' என்று பொதுவெளியில் சிலாகிக்கப்பட்டார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது). ஏனெனில் பொதுவாக நாம் அனைவருமே இம்மாதிரியான ஏதாவது ஒரு சமூகத்தால் அறமற்றதாக முன்வைக்கப்பட்டிருக்கிற பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறோம். இதையே ஒரு பிரபலம் பகிரங்கமாக சமூகத்தின் முன்வைக்கும் போது இயல்பாக அவருடன் ஒரு நேசமான மனநிலை நமக்கு உருவாகிறது.

ஆனால் இப்போது இந்தக் காலகட்டத்தையும் தாண்டி வந்துவிட்டோம் என்றுதான் நம்புகிறேன். வணிகமயமாக்ப்பட்ட தற்போதைய நிலையில் வணிகரீதியாகவும் நட்புரீதியாகவும் நடத்தப்பெறுகிற மதுவிருந்துகள் நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன். முரண்நகையாக, மதுப்பழக்கம் இல்லாதவர்கள்தான் சமூகத்தின் முன் கோமாளிகளாக சித்தரிக்கப்படும் நிலை தோன்றியே பல காலம் ஆகிவிட்டது. இந்நிலையில் சாருவும், மிஷ்கினும் தங்களின் குடிப்பழக்கத்தை ஏதோ புரட்சி செய்வதான பாவனையுடனும் ரகசியக் கிளுகிளுப்புடனும் மேடையில் வெளிப்படுத்துவது காமெடியாக உள்ளது. சாரு தன்னுடைய பேச்சின் இடையில் நிறுத்தி 'கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கறேன்' என்ற நாடகத்தனமான காட்சியை என்னவென்று சொல்வது?. தன்னைப் பற்றி குடிகாரன் என்கிற பிம்பமே பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிந்திருப்பது குறித்து சாருவின் சலிப்பு வேறு. அடப் போங்கப்பா..

இவ்வாறாக நூல் வெளியீட்டு விழா இனிதே நடந்தேறியது.

()

பாரதி மணி அவர்களுடன் சற்று நேர உரையாடல், ஷாஜி அவர்களுடன் ஒரு கைகுலுக்கல் ஆகியவற்றுக்குப் பின் இணையத்தில் பைத்தியக்காரன் என்று அறியப்படுகிற சிவராமனையும், யாழிசை என்ற வலைப்பூவில் எழுதிவரும் லேகாவையும் இன்னபிற இணைய நண்பர்களையும் சந்திக்க முடிந்தது. இதில் சிவராமனைப் பற்றி சற்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு திரையிடல்களின் போதும் சிறுகதைப் போட்டி மற்றும் பட்டறைகளின் போதும் தொடர்ச்சியாக சலிக்காமல் என்னை அழைப்பார்; தொலைபேசியில் பேசுவார். ஆனால் ஒவ்வொரு முறையும் பணி அழுத்தம் காரணமாகவோ சோம்பேறித்தனத்தின் காரணமாகவோ என்னால் செல்ல முடியாமலே இருக்கும். ஆனால் அவர் இதனால் சற்றும் எரிச்சலடையாமல் முதல் முறை பேசின அதே நட்பான தொனியிலேயே எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பார். நான் அவராக இருந்திருந்தால் 'போய்யா சொங்கி' என்று எப்போதோ நட்பை முறித்துக் கொண்டிருப்பேன்.

இப்போதுதான் முதன்முறையாக அவரைச் சந்திக்கிறேன். பலத்த மழை ஓயும் வரையில் இருவரும் பொதுவாக நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அந்தத் தாமதமான இரவிலும் சென்னையின் தெற்குப்புறமுள்ள அவர் வடக்குப் பக்கத்தில் உள்ள என்னை அவருடைய வண்டியில் இறக்கிவிட்டுச் சென்றார். எவ்வித எதிர்பார்ப்புமில்லாத இந்த மாதிரியான மனிதர்களின் அன்பும் பண்பும் என்னை வெட்கப்படவும் திருத்திக் கொள்ளவுமான சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. அதற்காக சிவராமனுக்கு நன்றி.

(சாருவின் கடந்த நூல்விழா பற்றிய பதிவு)

image courtesy: original uploader

suresh kannan

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 1


ரஜினியின் பிறந்த நாளும் சாருவின் நூல்வெளியீட்டு விழாவும் ஒரே தேதியில் அமைந்தது தற்செயலாகத்தானிருக்க வேண்டும். ஏனெனில் ரஜினியின் படங்களில் வழக்கமாக சலிப்பேயின்றி அடங்கியிருக்கும் 'கிளிஷே'க்கள் போலவே சாருவின் நூல் வெளியீட்டு விழாவும் அதனுடைய பிரத்யேக 'கிளிஷே'க்களுடன் நடந்து முடிந்தது. இதைப் பற்றி பின்னால் எழுதுகிறேன்.

நேரடியாக அல்லாமல் சாருவை ரஜினியுடனும் ஜெயமோகனை கமலுடனும் ஒப்பிட்டு நேசகுமார் முன்னர் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வேடிக்கையான ரீதியில் இருந்தாலும் அதில் சற்று உண்மை இருக்கிறது. வேறெந்த இலக்கிய எழுத்தாளருக்கும் இல்லாத அளவிற்கு இந்த நூல் வெளியீட்டிற்கு அரங்கு நிறைந்த கூட்டம். ரஜினி திரைப்படக்காட்சி போலவே. மாத்திரமல்ல பெரும்பாலோனோருக்கு அமர இடமில்லாத நிலையிலும் விழா முடிய இரவு 10.00 மணிவரையான நிலையிலும் பெரும்பாலான கூட்டம் அப்படியே இருந்தது.

நான் சென்ற போது (சுமார் மாலை 06.45) மதன்பாப் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். ஒன்றும் புரியவில்லை. "மேடையில் எதை வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள்: என்று சாருவே சொன்னதாக சொல்லிக் கொண்டிருந்தார். சா.கந்தசாமி பேசிவிட்டு அமர்ந்துவிட்டார் என்று யூகிக்க முடிந்தது.

இந்த மாதிரி நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளும் கூட்டங்களுக்கு ஒரளவாவது சாப்பிட்டு விட்டுச் செல்வது நலம். இல்லையெனில் சற்று தாமதமானவுடனேயே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். எனவே நான் உடனே தீர்மானித்து வெளியே வந்து விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்த சிற்றுண்டி மேஜையை அடைந்த போது இரண்டு வடைகளே மீதமிருந்தது. அதில் ஒன்றையும் ஒரு கோப்பை காப்பியையும் அருந்திவிட்டு மீண்டும் சென்றேன்.

(Disclaimer: இனி சிறப்புரையாளர்களின் பேச்சில் நினைவில் இருப்பதை என்னுடைய மொழியில் தொகுத்து எழுதுகிறேன். எவ்விதமான குறிப்பும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. உரையாடல்களிலிருந்து விலகி கருத்துப் பிழையுடனான குறிப்புகள் ஏதாவது இங்கு பதியப்பட்டிருந்தால் அது உரையாடினவர்களின் தவறல்ல ; என்னுடைய நினைவுப் பிசகின் விளைவே).

()

'தாந்தேயின் சிறுத்தை' நூல் பற்றி அழகிய பெரியவன் உரையாடினார். "சாருவின் எழுத்து ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக இருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்திக் கூட இங்கு கட்டுரை எழுதப்படுகிறது. சமகால பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு எழுத்தாளரும் பெரிதாக எழுதவில்லை. திண்ணியத்தில் தலித் ஒருவரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்த போதும் மேல்வளவு முருகேசன் படுகொலை சம்பவத்தைப் பற்றியும் எந்த இலக்கியவாதியும் எழுதினாகத் தெரியவில்லை" என்றார். ஜெயமோகனுக்கும் சாருவிற்கும் இடையேயான சர்ச்சைகளைப் பற்றி குறிப்பிடும் போது "ஜெயமோகன் 'தலித் அரசியல்' கட்டுரைகளில் அம்பேத்கர் பற்றி உண்மைக்கு மாறானவைகளை எழுதுகிறார். அவர் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே எழுதுவது மோசமானது. அவரை கேரளத்தில் பைங்கிளி எழுத்தாளர் என்கிறார்கள்."

ஷாஜி ஆங்கிலத்தில் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தமிழிலேயே நன்றாகவே பேசினார். மொழியை சரியாக அறியாத தன்னுடைய குறைபாட்டை நகைச்சுவையின் மூலம் கடந்து வந்தார். ஷாஜி இவ்வளவு நகைச்சுவையுடன் பேசுவார் என்பது நான் எதிர்பாராதது. மோகன்லாலை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளம் சற்றே அறிந்த ஒரு இயக்குநருடன் சென்ற சம்பவத்தைச் சுவாரசியமாக விளக்கினார். கேரள பத்திரிகைகளின் எழுதுமுறையைப் பற்றி குறிப்பிடும் போது "நான், எனது என்கிற மாதிரி அங்கே எழுத முடியாது. இந்தக் கட்டுரையை எழுதுகிற இந்த ஆள்..." என்று பணிவாகத்தான் எழுத முடியும். ஆனால் சாருவின் எழுத்தில் அம்மாதிரியான பணிவெல்லாம் கிடையாது. 'நான்' என்பதுதான் தீர்மானமாகவும் அவரது எழுத்துக்களின் பிரதானமாகவும் இருக்கிறது. அவரது எழுத்துக்களின் மோசமான மலையாள மொழிபெயர்ப்புத் தடையைத் தாண்டியும் அவரது எழுத்து அங்கே மிகுந்த செல்வாக்கை பெற்றிருக்கிறது. அந்தளவிற்கு வீர்யமானது சாருவின் எழுத்து" என்றார்.

வசந்தபாலனின் பேச்சு தோழமையானதாகவும் வெளிப்படையாகவும் இருந்தது. "பொதுவாக சாரு தமிழ் சினிமாக்களை கிழிகிழியென்று கிழிக்கிறார். அதனாலேயே அவருடன் நட்பு பாராட்ட பயமாய் இருக்கிறது. அவருக்கு ஒரு படத்தை பிடித்து விட்டால் ஓகோவென கொண்டாடுகிறார். பிடிக்கவில்லையென்றால் மரண அடிதான். என்னுடைய வெயில் படத்தை அவர் பாராட்டவேயில்லை. அதில் உள்ள சிறந்த பாடல்களையும் அவர் கண்டு கொள்ளவில்லை. இன்றைக்கு தமிழ் சினிமாவை தர்க்கப்பூர்வமாகவும் ஆழமாகவும் விமர்சனம் செய்ய ஆளில்லை. அந்தத் தேவையை சாரு பூர்த்தி செய்கிறார். தமிழ் சினிமா மீது அவருக்கிருக்கும் ஈடுபாடும் அக்கறையுமே அவர் பால் என்னை நெருங்கிவரச் செய்கிறது"

ரெண்டாம் ஆட்டம் நாடகம் தொடர்பான நூலைப்பற்றி திருநங்கை கல்கி பேசினார். "ஒரினப்புணர்ச்சி பற்றி 1992-ல் இந்த நாடகத்தில் நிகழ்த்தப்பட்ட போது எழுந்த எதிர்ப்பும் வெளிப்பட்ட வன்முறையுமான நிலை இன்று வரை மாறாதிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக சாரு தொடர்ந்து எழுதுகிறார். அவரை எங்களின் பிரதிநிதியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். மணிரத்னம், பாலா போன்றவர்களைத் தவிர பெரும்பாலான இயக்குநர்கள் திருநங்கைகளை பாலியல் ரீதியாகத்தான் சித்தரிக்கின்றனர். (சமீபத்திய திரைப்படமான 'நினைத்தாலே இனிக்கும்' காட்சிகளை குறிப்பிட்டுப் பேசுகிறார்) இந்நிலை மாற வேண்டும்."

'ராமையாவின் குடிசை' ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், சாருவின் அரசியல் கட்டுரைகளைப் பற்றி முற்போக்கு முகாம்களில் ஒலிக்கும் பாவனைகளோடு பேசினார். நகைச்சுவையாக ஆரம்பித்த இவரது பேச்சு போகப் போக தீவிர பாவனையுடன் தொடர்ந்தது. 'கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி அப்போது எந்தவொரு எழுத்தாளரும் எழுதவோ, குரல் கொடுக்கவோ இல்லை" கும்பகோண தீவிபத்தில் இறந்த போன குழந்தைகளைப் பற்றின சம்பவத்தைப் பற்றி இவரது அடுத்த ஆவணப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது பேச்சின் இடையில் தெரிய வந்தது.

'மலாவி' என்றொரு தேசம்' நூலைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார். இவர் பேச்சு எனக்கு சற்று அதிர்ச்சியைத் தந்தது. ஏனென்று சொல்கிறேன். அதற்கு முன் எஸ்.ராவைப் பற்றி என்னுடைய பார்வையை சொல்லியாக வேண்டும். உலக சினிமா மீது எனக்கு தீவிர ஆர்வமேற்பட்டதற்கு எஸ்.ராவின் பல சினிமா கட்டுரைகளுக்கு கணிசமான பங்குண்டு. பொதுவாக இவரது கட்டுரைகளில் தெரியும் கடலின் ஆழமான அமைதியும் கட்டுரையின் மையத்திலிருந்து விலகாத நேர்த்தியும் உணர்வு பூர்வமான மொழியும் உணர்ச்சி வசப்படாத நியாயமான மதிப்பீடுகளும் எனக்குப் பிடிக்கும். எனவேதான் இவரது எழுத்துக்களை தொடர்ச்சியாகவும் சிரத்தையாகவும் வாசிப்பேன். இணையத்தில் புழங்கும் பெரும்பாலான மற்ற எழுத்தாளர்கள், இணையத்தில் எழுதுபவர்களை "முதிர்ச்சியற்றவர்கள்" என்கிற ரீதியில் விமர்சிக்கும் போது எஸ்.ரா மாத்திரமே தன்னுடைய வலைப்பக்கத்தில் ஆரோக்கியமான பதிவுகளை அடையாளங் காட்டி நம்பிக்கை ஏற்படுத்துகிறவர் என்கிற முறையில் அவர் மீது எனக்கு மரியாதையுண்டு.

எஸ்.ரா தனது பேச்சில் இணையத்தில் எழுதுபவர்களைப் பற்றின தன்னுடைய மதிப்பீட்டை பகிர்ந்து கொண்டார். 'இணையத்தில் எழுதும் பல பேர் இங்கு வந்துள்ளனர். வாசகன் என்கிற நிலை இன்று குறைந்திருக்கிறது. எல்லோருமே எழுத்தாளர்கள்தான்." பின்பு, இணையத்தின் மூலம் ஏற்பட்ட இரண்டு நட்புகளைப்பற்றி விவரிக்கிறார். "ஒருவர் தான் எப்போது ஒரு கட்டுரையை எழுதினாலும் உடனே தொடர்பு கொண்டு "இப்பத்தான் இதப் பத்தி யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள். என்பார். இது தொடர்ந்த போது அவர்தான் நானோ என்ற குழப்பங்கூட ஏற்பட்டது. ஜப்பானில் வசிக்கும் இன்னொரு நண்பர் எப்போதும் தமிழ்ப்படங்களைப் பற்றியும் அவற்றின் குறுந்தகடுகள் எங்கே கிடைக்கும் என்பது பற்றியே பேசிக் கொண்டிருப்பார். நான் ஜப்பானில் உள்ள சிறந்த எழுத்தாளர் பற்றியோ சிறந்த திரைப்பட இயக்குநர் பற்றியோ உரையாட ஆரம்பத்தில் அதில் அவருக்கு ஆர்வமும் அக்கறையும் இருக்காது" என்று தொடர்கிற எஸ்.ரா, மலாவி தேசத்தைப் பற்றி சாருவுடன் உரையாடின ஆனந்த்தையும் இதே வரிசையில் வைக்கிறார்.

"தன்னுடைய வாசகருடன் ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றத்தை புத்தகமாக வெளியிட்டது இந்தியாவிலேயே சாருவாகத்தான் இருக்க முடியும். வாசகரின் அறியாமைக் குரலையும் மீறி சாரு நேசக்கரம் நீட்டுகிறார். என்னால் அது இயன்றிருக்காது. இதில் அவரது வாசகரான ஆனந்த் மலாவி தேசத்தைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொன்றிலும் அவரைப் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி எழுதுவதற்கு மலாவியை ஒரு அடிப்படையாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மாறாக சாரு மலாவியிலுள்ள உன்னதமான அம்சங்களைப் பற்றி உரையாடும் போதும் கேட்கும் போதும் ஆனந்த் அதற்கு தன்னைப் பிரதானமாகக் கொண்ட பதிலையே எழுதுகிறார். சாரு மலாவியில் வாழ்கிறார்; ஆனந்த் மயிலாப்பூரில் வாழ்கிறார் என்றுதான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மலாவியிலுள்ள மிகப்பெரிய ஏரி ஒன்றைக் குறிப்பிட்டு சாரு கேட்கும் போது ஆனந்த்தோ 'அந்த ஏரியில் அமர்ந்து காபி அருந்திய படி 'அலைபாயுதே கண்ணா' பாடலை கேட்பதாக' எழுதுகிறார். மலாவி பற்றின சித்திரத்தை சாருதான் பொறுமையாக ஒருபுறம் தீட்ட வேண்டியிருக்கிறது."

(இங்கு எஸ்.ராவுடன் நான் சற்று மாறுபட வேண்டியிருக்கிறது).

தொடரும்....


suresh kannan

Saturday, December 12, 2009

சாருவும் டி.ராஜேந்தரும்



முன்பொரு காலத்தில் டி.ராஜேந்தர் என்றொரு இசையமைப்பாளர் இருந்தார். (இன்னும் பலவும் செய்து வந்தார் என்று சொல்வார்கள்) பிறந்ததிலிருந்தே இவருக்கு தாடியிருந்ததோ என்னுமளவிற்கு "தோன்றிற் தாடியுடன் தோன்றிய" இவரை தாடியில்லாமல் பார்த்த சிலர் இன்னும் மனநல சிகிச்சை எடுத்து வருவதாக கேள்வி. 'ஒரு தலை ராகம்' திரைப்படம் வெளியானவுடன் இதன் பாடல்கள் அந்தக்காலத்தில் காட்டுத்தீ போல் தமிழ்நாட்டில் பரவியது. என்னுடைய பள்ளி நாட்களில் வளாகத்துக்குள்ளே நடைபெறும் விழாக்களில் 'மன்மதன் ரட்சிக்கணும்' ஜாலியான குரலின் பாடல் நிச்சயம் இடம்பெறும். இவரது இசையமைப்பில் 'வைகைக் கரை காற்றே நில்லு' பாடல் எம்.எஸ்.விஸ்வநாதனாலேயே சிலாகிக்கப்பட்டது. ஒரு ஏகாந்தமான மனநிலையில் கேட்டால் இப்போதும் கூட அது ஒரு நல்ல பாடல். அதன் இசைக்கோர்வை கேட்பதற்கு இதமாக இருக்கும். 'மாலை எனை வாட்டுது' இன்னொரு ரத்தினம்.

எதற்கு இத்தனை விஸ்தாரமாக டி.ஆரின் இசையைப் பற்றி சொல்கிறேன் என்றால் மற்ற துறைகளில் அவர் மக்களால் பொதுவாக காமெடியனாகவே பார்க்கப்பட்டார். "தங்கச்சி.. நான் என்ன சொல்றேன்னா.." என்று அவர் அழுது புலம்பி நடித்திருப்பதை இப்போதிருக்கும் ரசிகர்கள் துளிக்கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாடலில் இதயம் என்ற ஒரு வார்த்தை வந்தால் உடனே பெரிய பெரிய அளவில் இதய வடிவ உருவத்தை பாடல்களில் நகர்த்திக் காட்டுவார். இந்த ஒரு விஷயத்தில் பொதுமக்களை விட தச்சர்கள், பெயிண்டர்கள் இவரை மிக அதிக அளவில் விரும்பினார்கள் என்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது. இன்றும் கூட 'டண்டணக்கா' என்றால் டிஆரே நினைவுக்கு வரும் வகையில் காமெடி நிகழ்ச்சிகளில் இவரை கதறக் கதற பிழிந்து விடுகிறார்கள். ஒரு நல்ல அல்லது சுமாரான இசையமைப்பாளர் மற்ற துறைகளில் நிகழ்த்தின் அபத்தச் சுவடுகளின் பின்னால் மறைக்கடிக்கப்படுவது அல்லது மறக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

ஏறக்குறைய இதே புள்ளியில் எழுத்தாளர் சாருநிவேதிதாவை நிறுத்திப் பார்க்கிறேன். அவரது எழுத்தை கணையாழி குறுநாவல் (நினைவில் புதர்ச்சரிவுகளிலிருந்து) போட்டிக் காலத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். பாலியல் எழுத்தின் மீது கவிந்திருக்கும் பாசாங்குகளை முற்றிலுமாக களைந்து விடுகிற, வாசகனிடம் நேரடியான எளிமையில் உரையாடுகிற, மற்றவர் தொடக்கூட தயங்கும் விஷயங்களை உக்கிரமான ஆழத்தில் இறங்குகிற, நவீன மரபில் உதாசீனப்படுத்தப்படுகிற உடலைக் கொண்டாடுகிற, அயல் இலக்கியங்களை இசையை தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிற விஷயங்களுக்காக கொண்டாடப்படுவதை விட, அவர் மேம்பாக்காக எழுதுகிற, விரும்பியே சர்ச்சையில் ஈடுபடுகிற, புனிதப்பசுக்களின் பீடத்தை தாக்குகிற, சில சக எழுத்தாளர்களை இடுப்பின் கீழ் தாக்குகிற எழுத்துக்களுக்காக அதிகம் வெறுக்கப்படுகிறவராகவும் காமெடியனாக பார்க்கப்படுகிறவராகவும் இருக்கிறார்.



சாருவின் 'கடவுளும் நானும்' எனும் கட்டுரைத் தொகுதியை சமீபத்தில் படித்துப் பார்த்தேன். ஏற்கெனவே இணையத்தில் அவசரமாக படித்ததுதான் என்றாலும் சாவகாசமாக புத்தகத்தில் படிப்பது இன்னும் சுவாரசியமாக இருந்தது. 'ஆன்மீகம்' எனும் சமாச்சாரம் சமகால சூழலில் அதன் உண்மைக்கு மாறாக பல பரிமாணங்களில் புரியப்பட்டும் குழப்பப்பட்டும் இருக்கிற நிலையில் சாருவின் ஆன்மீகம் என்ன என்பதைப் பற்றின அடிப்படை வடிவத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. பாபா படத்திலிருந்த விபூதி கொட்டுகிற காமெடிகளையெல்லாம் (உண்மையில் சுவற்றின் காரை பெயர்ந்து விழுந்திருக்கலாம்) அவர் ஆன்மீகச் சட்டகத்தில் இட்டு நம்பிக் கொண்டிருக்கட்டும். ஆனால் இதில் என்னைக் கவர்ந்தது அதுவல்ல. அரபி இசையைப் பற்றியும் சூ·பிக்களை பற்றியும் சாரு எழுதிக் கொண்டு போகிறார். எனக்குத் தெரிந்து நவீன தமிழ் இலக்கியம் இந்த எல்லையை அதிகம் தொட்டதில்லை. De saz இசைக்குழு, ஹெடோனிஸம், ஹ·பீஸின் கஜல் பாடல்கள், சூ·பி கதைகள், பிஸ்மில்லா கான், பட்டினத்தார் போன்றவற்றைப் பற்றி சாருவைத் தவிர வேறு யாரும் எழுதினாக எனக்குத் தெரியவில்லை. வேறு யாரேனும் எழுதியிருந்து பரவலாக அறியப்படாமல் போயிருக்கலாம். அல்லது வாசகனை நெருங்க விடாத மொழியில் நிறுத்தி வைத்திருந்திருக்கலாம். வெறுமனே பெயர்களை உதிர்க்கிறவர் என்ற புகாரும் அவர் மீதுண்டு. அது ஒருவேளை உண்மையாகவே இருந்தாலும் அந்த எளிய வேலையைச் செய்யக்கூட சாரு போன்றோரைத் தவிர வேறு யாரும் எனக்குத் தென்படவில்லை. சாரு அறிமுகப்படுத்துகிற அந்த ஆரம்பப்புள்ளியைப் பற்றிக் கொண்டு மேலேறிச் செல்வது வாசகனின் கடமையே ஒழிய எழுதுபவரே அனைத்தையும் புட்டுப் புட்டு வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையற்றது.

இந்த ஒரு காரணத்திற்காகவே சாருவை நான் பாராட்ட விரும்புகிறேன்; அவரது சில அலட்டல்களைத் தாண்டியும் அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கிறேன்.

கடவுளும் நானும் (கட்டுரைத் தொகுதி)'
உயிர்மை பதிப்பகம் பக்கம் 80 ரூ.40/-

image courtesy: original uploader & uyirmmai


suresh kannan