Monday, December 19, 2005

சேரனும் விருதுக்கான தவமும்

வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு பிரதிபலிப்பதுதான் ஒரு நல்ல சினிமாவின் அடிப்படையாக இருக்க வேண்டும்; மறுக்கவில்லை. ஆனால் சேரன் இதை வேறு விதமாய் புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. கலைப்படங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் திரைப்படங்கள் பற்றி சினிமாவின் தீவிர ரசிகர்கள் அல்லாதவர்களிடம் ஒரு பிம்பம் உள்ளது. "ஒருத்தன் பல்லு வெளக்கறான்னா... அதை அரைமணி நேரம் காட்டுவானுங்கடா". சேரன் அந்த அளவிற்கு போகவில்லையென்றாலும் கூட கதையை ஒவ்வொரு கட்டத்திலும் சுவாரசியமாக நகர்த்திக் கொண்டே போவது திரைக்கதையின் அடிப்படை என்பதை மறந்து போய் உணர்ச்சிகரமான சம்பவங்களினாலேயே நிதானமாக இந்தப் படத்தை நகர்த்திச் செல்ல முடிவு செய்து விட்டார்.

மென்மையான படங்களுக்கு நிதானமான காட்சியமைப்புகள் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் பயன்படுத்தி மற்ற காட்சிகளை ஒரு தவளைப் பாய்ச்சலில் சொல்ல வேண்டும். தனது மூத்த மகனிடம் ஏற்கெனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் இளைய மகனிடம் 'நீ தனிக்குடித்தனம் போயிடுப்பா' என்று சொல்லும் போது "அவ்வாறில்லை. உங்களுக்கு ஏற்கெனவே தந்த துன்பத்திற்கு ஆறுதலாக உங்களிடமேதான் இருக்கப் போகிறேன்' என்று சேரன் மென்மையாகவும் அழுத்தமாகவும் அதை மறுக்கும் இடத்திற்கு நிச்சயம் அந்த நிதானம் தேவைதான்.

சேரன் தன்னுடைய 'ஆட்டோகிராப்' பட வெற்றியின் பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதையே 'தவமாய் தவமிருந்து' உணர்த்துகிறது. ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதையின் நினைவுகளை, வலி, வேதனைகளை, சந்தோஷங்களை அசை போட்டுப் பார்ப்பது சுகமான அனுபவம்தான். ஆனால் முந்தைய வெற்றி தந்த அனுபவத்தைக் கொண்டு மீண்டும் அதே பாணியை பயன்படுத்துவது சரியானது அல்ல. (இந்த இடத்தில் மற்றொரு இயக்குநர் லிங்குசாமியின் நினைவு வருகிறது. 'ஆனந்தம்' என்கிற குடும்பப் பாங்கான வெற்றிப் படத்தை கொடுத்து விட்டு அடுத்ததாக அதிலிருந்து விலகி 'ரன்' என்கிற ஆக்ஷன் படத்தை தந்த தைரியத்தை வியந்தேன்)

()

இந்தப் படக்கதையின் அவுட்லைன் என்னவென்று உங்களில் பலருக்கு அநேகமாய்த் தெரிந்திருக்கும். ஒரு பாசமுள்ள தகப்பனின் 35 ஆண்டுகால வரலாற்றை அவனுடனே பயணம் செய்து நமக்கு காட்சிகளாய் விரித்திருக்கும் படம். பொதுவாகவே படைப்புகளிலும் திரைப்படங்களிலும் தாய்ப்பாசமே எப்போதும் பிரதானப்படுத்துவதுண்டு. தாய் 'பத்து மாசம் சொமந்து பெத்ததே' பெரிதாகப் பேசப்பட்டாலும் அந்த மகனோ அல்லது மகளோ ஆளாகி தன் சுயக்காலில் நிற்கும் வரையும் - அதற்கும் பின்னாலும் கூட - அவனை தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் தகப்பன்மார்களின் சிரமங்கள் அவ்வளவாக பேசப்படுவதில்லை. அந்தக்குறையை இந்தப் படம் நீக்கியிருக்கிறது.
என்றாலும் இந்தப்படம் தகப்பனின் பெருமையை மாத்திரமே பேசுவதாய் நான் நினைக்கவில்லை. மாறாக, இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித்தீவாகி சக மனிதனை ஒரு போட்டியாளனாகவே பார்த்து, உறவுகளை அறுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாய் விலகுவதில் உள்ள அபத்தத்தையும், உறவுகளின் மேன்மையையும், அவசியத்தையுமே சொல்தாய் நான் நினைக்கிறேன்.

()

ஒரு சராசரி கிராமத்து தகப்பனை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் ராஜ்கிரண். இம்மாதிரியான நடிகர்கள் சரியாக உபயோகப்படுத்தப் படாமலிருப்பது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டமே. வயதாவதற்கேற்ப அவருடைய ஒப்பனையும், body language-ம் மாறிக் கொண்டே வருவது சிறப்பு. தீபாவளிக்கு மகன்களுக்கு சட்டை துணி வாங்கிக் கொடுக்க பணமில்லாமல் தவிக்கும் போதும், மகனை இன்ஜினியரிங் காலேஜில் சேர்க்க வட்டிக் கடைக்காரரிடம் கெஞ்சி பணம் வாங்கிக் கொண்டு கண்ணீரும், தன்னை அழுத்திக் கொண்டிருந்து துயரத்திலிருந்து விடுபட்ட உணர்வுப் புன்னகையுடனும் வெளியே வரும் போதும், எந்தப் பெண்ணுடனோ ஓடிப்போன இளையமகன் பட்டணத்தில் சிரமப்படுகிறான் என்பதை அறிந்து அவன் வீட்டுக்கு வந்து மெளனமாய் வெறித்த பார்வையுடன் காத்திருக்கும் போதும்... என்று சில பல காட்சிகளில் ராஜ்கிரண் தன் பாத்திரத்தை சரியாக உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றியிருக்கிறார். ஆனால் இவர் கதாபாத்திரத்தை ஏதோ வரலாற்று நாயகர்கள் போல் அல்லாமல் அவருக்கு இருந்திருக்கக்கூடிய இயல்பான குறைகளுடனேயே சித்திரித்திருந்திருக்கலாம்.

இன்னொரு குறிப்பிடத்தக்க பாத்திரமாக சரண்யா. அறிமுகப்படமான 'நாயகனுக்குப்' பிறகு யாரும் சரியான பாத்திரம் தராத வேளையில் இந்தப்படம் அவருக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும். அவரும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மகன்கள் கேட்கும் பட்டாசுப்பட்டியலை கணவனிடம் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதாகட்டும், 'சினிமாத் தாயாக' இல்லாமல் மருமகளை எரிச்சலும் கோபமுமாய் கடிந்து கொள்வதாகட்டும், கணவனை எதிர்த்துப் பேசும் மூத்த மகனை பாய்ந்து அடிப்பதாகட்டும், சொல்லாமல் ஓடிப் போய் காதல் திருமணம் செய்து குழந்தையுடன் வந்திருக்கும் இளையமகனைப் பார்த்து 'படாரென்று' கதவை அறைந்து மூடுவதகாட்டும்.... ஒரு சராசரித்தாயை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

சேரனின் மூத்த சகோதரனாய் வரும் நபர் இயல்பாய் நடித்திருக்கிறார். குறிப்பாக அவரின் மனைவியாக வரும் மீனாள், புது மனைவியாக கணவனிடம் கொஞ்சுவதும், மாமியார் கூப்பிடும் போது எரிச்சலடைவதும், பிற்பாடு வசதியாக வாழும் கொழுந்தனின் வீட்டை பொறாமையும் இயலாமையுமாக நோட்டமிடுவதும்.. என ஒரு சராசரி தமிழ்நாட்டு மருமகளை அப்படியே எதிரொலித்திருக்கிறார்.

சேரன் அதிக காட்சிகளில் அழுகிறார் என்ற மாதிரி விமர்சனம் இருந்தது. எனக்கு அப்படித் தோன்றவில்லை. தேவையான காட்சிகளில் மட்டுமே அவர் அழுதாலும், அவர் முகம் அதற்கு ஒத்துழைக்காமல் கோணலும் மாணலுமாய் போவதால் நமக்கு அனுதாபத்திற்கு பதில் சிலசமயம் எரிச்சலே வருகிறது.

ராஜ்கிரணனின் அச்சகத்திற்கு உதவியாளராக வரும் இளவரசு, வட்டிக்கு பணம் தருபவர், சேரன் வேலை செய்யும் அச்சக உரிமையாளர் (வி.கே.டி.பாலன்) என்று சிறுசிறு பாத்திரங்கள் கூட இயல்பாய் வலம் வந்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் மிக முக்கியமான பங்கு கலை இயக்குநர் ஜே.கேவுடையது. 1970-ல் இருந்து சமகாலம் வரும் நடைபெறும் இந்தப் படத்தின் காலச்சூழலுக்கேற்ப ஒவ்வொரு களத்தையும் அமைத்திருப்பது சிறப்பு. ( அந்தந்த கால சினிமா போஸ்டர்கள், பட்டாசு, மார்க்கெட், என்று பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார்). சேரனின் கல்லூரி நண்பர்கள் group study செய்யும் அந்த பிரம்மாண்டமான 'நகரத்தார் டைப்' வீட்டின் பிரம்மாண்டமும் கலைநயமும் அந்தக்காலத்தில்தான் மனிதர்கள் 'வாழ்ந்திருக்கிறார்கள்' என்று உணர்த்துகிறது.

இசை ஸ்ரீகாந்த் தேவா. 'உன்னைச் சரணைந்தேன்' என்கிற பாடலும் சேரன் தன் பெற்றோர்களை மகிழ்வாக வாழவைக்கும் காட்சிகளின் 5 நிமிட க்ளாசிகல் பின்னணி இசையும் என மெருகூட்டியிருந்தாலும் இளையராஜா போன்றவர்களின் கூட்டணி இருந்திருந்தால் இந்தப் படம் இன்னும் உயரத்திற்கு சென்றிருக்குமே என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

()

சேரன் இந்த படத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அந்தந்த கால கட்டத்தை வானொலி சினிமாப்பாடல்கள், மற்றும் சம்பவங்கள் மூலம் உணர்த்துவது, தன் காதல் மனைவியுடன் குடிபோகும் அந்த அடித்தட்டு மக்களின் குடியிருப்பின் யதார்த்தமான இயல்பு, என்று பல காட்சிகளில் சிறப்பாக அமைத்திருந்தாலும் வேலை கிடைக்காமல் கைவண்டி இழுப்பது போன்ற நாடகத்தன்மையை தவிர்த்திருக்கலாம்.

ஆனால் இவ்வளவு மெனக்கெட்டிருக்கிற சேரன் அந்தக்காலத்து 'பீம்சிங்' மற்றும் 'கே.எஸ் கோபாலகிருஷ்ணன்' காலத்து பாணி குடும்பப் பாங்கான படங்களையே மறுபடி தூசிதட்டி கொடுத்திருக்கிறார் எனும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. கதாநாயக ஆதிக்க ஆக்ஷன் படங்களையே அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிற சமகால சூழ்நிலைக்கு இந்த படம் வித்தியாசமாய் காட்சியளித்தாலும் உள்ளடக்கத்தில் எந்தவித வித்தியாசமுமில்லை. அடுத்த படத்தை 'அண்ணன் தங்கை' பாசமலராக சேரன் எடுக்காமல் இதிலிருந்து இன்னொரு கோணத்தில் சிறப்பான படத்தை தருவரார் என்று நம்புவோம். அவரால் அது நிச்சயம் இயலும்.

'ஆட்டோகிராப்' தந்த விருதுகளின் வெற்றி மயக்கத்தில் அதே மாதிரியானதொரு படத்தை தந்து இன்னும் அதிக விருதுகளுக்காக 'தவமாய் தவமிருக்கும்' சேரன் விழித்தெழுந்து தன்னுடைய இயல்பு பாணிக்கு மாற எல்லாம் வல்ல இயற்கையை பிராத்திக்கிறேன்.

Saturday, December 17, 2005

கால்கள் இல்லாத கஸ்தூரி மான்

எப்பவோ பார்த்த படத்திற்கு மிக தாமதமாய் விமர்சனம். பரவாயில்லை, இந்தப் படத்தை நீங்கள் பார்க்காமலிருப்பதனால் ஒன்றையும் இழந்து விடவில்லை. வித்தியாசமான கதை மற்றும் களம் என்று எந்த எழவுமில்லை. நாயகனுக்காக தன்னையே மெழுகுவர்த்தி போல் (மன்னிக்கவும், நவீன உவமை எதுவும் கிடைக்கவில்லை) தியாகம் செய்யும் நாயகியின் கதை.

இந்தப் படத்தின் இயக்குநர் லோகிதாஸ் மலையாளத்தில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்தாலும், நான் இதுவரை பார்த்திருக்கிற பெரும்பாலான மலையாளப் படங்கள் எல்லாம் குறிப்பிட்ட சில "ஐந்து நிமிட" காட்சிகளுக்காக மட்டும் என்பதால் இவரைப் பற்றி அறிந்திருக்கவிலலை. என்றாலும் இவரைப் பற்றி நான் சமீபத்தில் பத்திரிகைகள் மூலம் அறிய நேர்ந்தது "மீரா ஜாஸ்மீனுடன் கசமுசா" என்பது போன்ற மலிவான செய்தியின் மூலமாக என்பதால் அத்தனை சிலாக்கியமாக இல்லை. 'நம்மூர் பாலச்சந்தர் போல்' என்று ஒரு பேட்டியில் இந்தப்படத்தின் நாயகன் பிரசன்னா சொன்னார். இந்தப்படத்தை பார்க்க என்னை தூண்டியது, இவர் தமிழ்த்திரைக்கு முதன்முதலாக வந்தது என்கிற செய்தி என்றாலும், உபரி காரணங்கள், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார் என்பதும், 'செம டாப்பா இருக்கு' என்கிற பத்திரிகைகளின் அதிசயமான அதீதமான விமர்சனங்களும்தான்.

()

ஒரு காலத்தில் வெற்றி பெற்ற சினிமாப்பட தயாரிப்பாளராக இருந்து இப்போது நொடித்துப் போய் தன்னுடைய செல்வ வாழ்க்கையின் அந்திமக்காலத்தில் இருக்கும் சரத்பாபுவின் மகன் பிரசன்னா பொறுப்பான நல்ல பிள்ளை; படிப்பில் தீவிர கவனம் செலுத்துபவன்; தன் சம்பாத்தியத்தின் மூலம் குடும்பத்தின் இழந்து போன பெருமையை மீட்க நினைப்பவன். இவன் படிக்கும் கல்லூரியிலேயே படிக்கும் மீராஜாஸ்மின் ஒரு பயங்கர கலாட்டா பேர்வழி. இருவருக்கும் அடிக்கடி மோதல். கதையின் சிறு திருப்பமாக, பின்னர்தான் பிரசன்னாவிற்கு தெரியவருகிறது, மீரா ஜாஸ்மினுக்கு பின்னால் உள்ள சோகம். அவர் ஓர் ஏழை என்பதும், குடும்பச் செலவுகளை சமாளிக்க நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் பகுதி நேர நர்சாக வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படிக்கிறார் என்பது. மேலும் அவருடைய அக்கா கணவரின் பாலியல் நோக்கத்துடனான அத்துமீறல்கள் வேறு.

வறுமை காரணமாக படிப்பைத் தொடர சிரமப்படும் பிரசன்னாவிற்கு, மீரா ஜாஸ்மின் தன்னுடைய சிரமங்கங்களுக்கிடையில் உதவி படிப்பை தொடர உதவுகிறார். இதன் காரணமாக இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. தன் படிப்பு முடிந்ததும் மீராவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுகிறான் பிரசன்னா. அதன் படியே இருவரும் இணைந்தார்களா என்பதை கொஞ்சம் ரத்தம் சிந்தும் கிளைமாக்சுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

()

மோகன், முரளி போன்ற மென்மையான நாயகர்களின் காலியிடத்தை கச்சிதமாக இட்டு நிரப்புதற்கேற்றவாறு இருக்கிறார் பிரசன்னா. திறமையான இயக்குநர்களிடம் மாட்டினால் சிறப்பாக தன் பணியை வெளிப்படுத்துவது போல் எந்த வித இமேஜீம் இல்லாமல் புத்தம்புது களிமண்ணாக, Blank-ஆக இருக்கிறார். (இயக்குநர் சுசி கணேசன் தனது 'பைவ் ஸ்டார்' படத்திற்காக புதுமுகங்களை தேடி விஜய் டி.வி யில் நேர்முகத் தேர்வு நடத்திய போது அதில் கலந்து கொண்ட பிரசன்னாவை பார்த்த போதே "இந்தப் பையன் நிச்சயம் தேர்வு செய்யப்படுவான்" என்று எனக்கு தோன்றியது).

பொதுவான கதாநாயகிகளின் வாட்டசாட்ட தோற்றத்திலிருந்து விலகி, சோளக்கொல்லை பொம்மை போலிருக்கும் மீரா ஜாஸ்மின் தனது நடிப்புத் திறமையால் பல இடங்களில் நம்மை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறார், குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் காட்சியில். நூல்நிலையத்தில் பிரசன்னாவை கலாட்டா செய்யும் போதும், "நம் பண்பாட்டிற்கேற்றவாறு உடையணிந்து வாயேன்" என்று கண்டிக்கும் கல்லூரி முதல்வரின் உத்தரவையேற்று, கொசுவம் வைத்து கட்டிய கண்டாங்கி சேலையும், தலை நிறைய பூவும், வாய் நிறைய வெற்றிலையுமாய் வந்து நக்கல் செய்யும் போதும் நம்மை குதூகலிக்க வைக்கிறார்.

என்றாலும் இதில் சிறப்பான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர்களாக இருவரை மட்டுமே சொல்வேன். ஒருவர், மீரா ஜாஸ்மினின் சகோதரியின் கணவரின் தாயாராக வரும் ஒரு கிழவி. சற்றே அருவருப்பான தோற்றத்துடன் அதை விட அருவருப்பான பாஷையும் பாவனையுமென ஏதாவது ஒரு சேரியில் நாம் நிச்சயம் சந்திக்க சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கிற ஒரு கிழவியை பிரதிபலித்திருக்கிறார். (ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலின் ஆரம்பக்கட்டத்தில் அறிமுகமாகும் ஒரு கதாபாத்திரத்தையே இந்தக் கிழவி பாத்திரம் நினைவுபடுத்தியது). இன்னொன்று கிரைம் பிராஞ்ச் கான்ஸ்டபிளாக 'நடையடி நாகராஜன்' என்கிற பட்டப் பெயருடன் வரும், மேற்சொன்ன கிழவியின் மகன். (இவர் மலையாள நடிகர் திலகனின் மகனாமே!) மலையாள நடிகர் என்றாலும் அதற்குரிய உடலசைவுகளோ, பாஷை உச்சரிப்போ இல்லாமல், வழக்கமாக மலையாள நடிகர்கள் தமிழிற்கு வரும் போது வெளிப்படும் அசெளகரியங்களை இவரிடம் பார்க்க முடியாத அளவிற்கு அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்.

()

இளையராஜா இந்தப் படத்திற்கு தன்னுடைய இடது கையினால் இசையமைத்திருப்பார் போலிருக்கிறது அல்லது இந்தப் படத்திற்கு இவ்வளவு போதும் என்று கூட நினைத்திருக்கலாம். பாடல்களும் பின்னணி இசையையும் எங்கோ கேட்ட மாதிரியே இருந்தது. ஒரு படத்தின் வசனகர்த்தா எந்த இடத்திலும் தன் தலையை தூக்கி எட்டிப்பார்க்காமல் கதாபாத்திரங்களை இயல்பாக பேசவிடுவது நல்லது. ஜெயமோகன் இதை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டிருந்தாலும் "ஐஸ்கட்டி மேல சாயம் பூச டிரை பண்ணாத தம்பி" "வாழைத்தண்டும் யானைத்தந்தமும் பாக்க ஒரேமாதிரிதான் இருக்கும்" போன்ற இடங்களில் சற்று சறுக்கியிருக்கிறார்.

படங்களின் முக்கியமான குறை காட்சிகளின் மற்றும் குணாசியங்களின் நம்பகத்தன்மையின்மை. ஒரு முட்டை வாங்கக் கூட வசதியில்லாமற் காட்டப்படும் பிரசன்னாவின் குடும்பத்தின் வீட்டின் உள்அமைப்பு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சற்றும் குறைவில்லாமல் காட்டப்படுகிறது. புதிது, புதிதான சட்டை அணிந்து வரும் பிரசன்னா ஊசிப்போன சாப்பாட்டை மதியத்திற்கு எடுத்துவருவதாக சொல்லப்படும் போது சிரிக்கத்தான் தோன்றுகிறது. இப்படியானப்பட்ட இவர்கள் ஏதோ ஒரு கிராமத்து ஓட்டு வீட்டில் தங்கியிருக்கும் மீரா ஜாஸ்மின் நர்சாக வேலை செய்து தரும் பணத்தை படிப்பு செலவிற்கு வாங்கிக் கொள்வார்களாம். இந்த மாதிரியான யதார்த்தமின்மையாக சித்தரிக்கப்படும் காட்சிகளால் நம்மால் படத்துடன் ஒன்றிப் பார்க்க இயலவில்லை.

()

மலையாள இயக்குநர்கள் தமிழில் படம் செய்யும் போது அவர்களையும் அறியாமல் மலையாள நேட்டிவிட்டி, காட்சிகளிலும் மொழி உச்சரிப்புகளிலும் காட்சி நடைபெறும் களங்களிலும் வந்துவிடும். பாசில், பிரியதர்ஷன், சித்திக், வினயன் என்று ஒரு பட்டியலே உண்டு. லோகிதாஸீம் இதற்கு விதிவிலக்கில்லாமல் இது தமிழ்ப்படமா அல்லது மலையாள படமா என்கிற குழப்பத்தை ஏற்படுகிறார். நவநாகரிமாக காட்டப்படும் கல்லூரி இருக்கும் இடமும் கிராமத்தை நினைவுபடுத்தும் மீராவின் வீடும் முரணாக இருக்கிறது. ஆனால் ஒன்று... நம் தமிழ்ப்பட இயக்குநர்க¨ளைப் போலவே கல்லூரி காட்சிகளை வகுப்பறையில் காண்பிக்காமலிருந்து அவர்களுடன் ஒத்துப் போகிறார்.

சிறப்பாக துள்ளியிருக்க வேண்டிய இந்த கஸ்தூரி மான் இவ்வாறான குறைகளினால் சுகந்தமே இல்லாமல் ஓட முடியாமல் முலையில் அமர்ந்து பரிதாபமாய் விழிக்கிறது.