Friday, November 22, 2013

இறைந்து கிடக்கும் புத்தகங்கள்


எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர்,  இறைந்து கிடக்கிற புத்தகங்களுக்கு நடுவிலிருக்கும் புகைப்படங்களை  சமீபத்தில் பார்த்ததும் சஹஹிருதயர்களைப் பார்த்த அளவில்லா சந்தோஷம் ஏற்பட்டது. நான் தனியனில்லை என்கிற சந்தோஷமும். என்னளவில், வாசிக்கிறோமோ இல்லையோ அது ஒருபுறம். ஆனால்  புத்தகக் குவியல்களின் நடுவில் சும்மா  இருப்பதே சொல்லவியலாத மகிழ்ச்சியையும் நல்ல அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது. அவைகைள வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதே நமக்கு பிடித்த பெண்களை பிடித்தமான கோணங்களில் கவனித்துக் கொண்டிருக்கும் இன்பத்தை அளிக்கிறது. 'வாயேன் என்னை வந்து வாசியேன்' என்று சுற்றியுள்ள புத்தகங்கள் அழைத்துக் கொண்டேயிருக்கும் குரல்களைக் கேட்பது தனி இன்பம்.

என் படுக்கையறையின் கட்டில் முழுக்க புதத்கங்களால் இறைந்து கண்கொள்ளா காட்சியாக இருக்கும். என் மனைவி என் மீது எரிச்சலும் கோபமும் கொள்ளும் பல விஷயங்களில் இதுவுமொன்று. (வாக்கியங்களுக்கு இடையி்ல் வாசிக்காதீர்கள்). சமையலறையும் வரவேற்பறையும் தேவையற்ற வஸ்துகளால் இறைந்திருக்கும் உண்மையைச் சுட்டிக் காட்டி அவரை பழிவாங்கி விடுவதில் சற்று திருப்தியாக இருக்கும்.  புத்தகங்களை கண்ணாடிச் சிறையில் அடைத்து விருந்தினர்கள் நம்மீது மதிப்பு கொள்வதற்காக காட்டும் வீண் ஜம்பங்களை விட புத்தகங்கள் இப்படி இறைபட்டு விருப்பமான நேரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதை உடனே வாசிப்பதே சிறந்த காரியம். புத்தகங்கள் மாத்திரமல்ல, எவற்றையுமே உபயோகிக்காமல் வீணாக வைத்திருப்பதால் பல கேடுகள் விளையும்.

வீட்டில் மாத்திரமல்ல, என் அலுவலக மேஜையும் (அங்கும் கூட புத்தகங்கள்) காகிதங்களாலும் கோப்புகளாலும் நி(இ)றைந்திருக்கும். என் பாஸ் இதை என்னிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சொல்லி அலுத்து விட்டு விட்டார். இப்படியாக அஃறிணைகள் ஒழுங்கின்மைகளோடு இறைந்திருக்கும் ஒழுங்குதான் எனக்கு பிடித்திருக்கிறது. இப்படி இறைந்திருந்தால் சட்டென்று தேடி எடுப்பதும் எளிதாக இருக்கிறது.  பொருட்களை இப்படியாக இறைத்து வைத்திருப்பவர்களின் மனோநிலை,  பிசிறுகளும் குழப்பங்களும் நிறைந்ததாக இருக்கலாம்  என்று உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்தும் நிரூபித்தும் இருக்கிறார்களாம். அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை இந்த குப்பைகளின் கீழ் ஒளித்து வைத்தால் போகிறது. அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை.

அது போல் புத்தகங்களை வாசிக்கும் சிலர் அதில் அடிக்கோடிட்டும் குறிப்புகள் எழுதியும் தாம் வாசித்ததை நிரூபிக்கும் ஆவேசத்துடன் செயல்படுவார்கள். என்னைப் பொறுத்தவரை எத்தனை முறை வாசித்தாலும் அந்தப் புத்தகங்கள் அச்சிலிருந்து வெளிவந்த அதே புத்தம்புது அழகுடனும் வாசனையுடனும் தூய்மையுடனும் இருப்பதைத்தான் சரியாக எண்ணுவேன்.

புத்தகங்களை நாமறியாமல் காலால் தொட்டு விட்டால் அதைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் மரபு சார்ந்த பழக்கம் நம்மிடமிருக்கிறது. விவரம் அறியாத வயதுகளில் நானும் செய்திருக்கிறேன். ஆனால் நான் மிக மதிக்கும் புத்தகங்களின் மீது எவ்வித குற்றவுணர்வும் தயக்கமுமின்றி என்னால் கால் வைத்து ஏறி நிற்க முடியும். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்துதான் எனக்கு மதிப்பே ஒழிய அச்சிடப்பட்டிருக்கும் காகிதங்கள் குறித்தல்ல. பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய 'புலிநகக் கொன்றை' புதினத்தில், உடலுறவு கொள்ளும் வசதிக்காக தடித்தடியான புத்தகங்களான கார்ல்மார்க்ஸின் 'மூலதனத்தை' பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பாத்திரம் நினைவிற்கு வருகிறது.

இவையெல்லாம் ஏதோ முற்போக்குத்தனமாக சிந்தித்து அவை சார்ந்தவைகளை அவற்றை ஒரு ஜம்பத்துடன் வெளியிட்டும்  அந்தப் பழக்கங்களை முரட்டுத்தனமாக தனக்குள் திணித்துக் கொள்வது என்பதல்ல. சற்று பகுத்தறிவுடன் சிந்தித்தாலே இவைதான் சரி என்பது இயல்பாக எல்லோருக்கும் தோன்றிவிடுவதுதான் இது. நம்முள் திணிக்கப்பட்டிருக்கும் மரபு சார்ந்த பல கற்பிதங்களின் காரணமாகவும் ஆழ்மன வினைகளை மறுக்க முடியாத காரணங்களினாலும்தான் இவைகள் ஆச்சார மீறலாகவும் தவறுகளாகவும் நமக்கு தெரிகின்றன.

அ,முத்துலிங்கத்தின் முகநூல் குறிப்பு. 

suresh kannan

Sunday, November 17, 2013

ஆறு மெழுகுவர்த்திகள்


இயக்குநர் துரையின் 'ஆறு மெழுகுவர்த்திகள்' பார்த்தேன்.

அவரின் முதல் படமான 'முகவரி' எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. தன்னுடைய கனவுக்குள் லட்சிய வேகத்துடன் நுழைய விழையும் இளைஞன் தன் முன்னால் எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தமான இடையூறுகளைக் கண்டு சோர்ந்து கடைசியில் அதனிடம் சரணடைந்து விடுவதான திரைப்படம். வணிகத் திரைப்படங்களின் சாத்தியத்திற்குள் கதையின் மையம் பெரிதும் சிதைவுறாதவாறு மிக நுட்பமான கலவையில் சிறப்பாகவே உருவாக்கியிருந்தார் துரை. சினிமாத்துறையில் வாய்ப்பு கேட்கச் செல்லுமிடத்தில் உதவி இயக்குநர்கள் சேர்ந்து அஜித்தை மது வாங்கி வரப் பணிக்கும் காட்சி என்னால் மறக்க இயலாதது. சினிமாவில் நுழையத்துடிக்கும் பல இளைஞர்கள், எதிர்கொண்டிருக்கும் அவமானங்களின், சுயமரியாதைக்குச் சவாலாக நிகழும் ஆனால் அதற்கு அடிபணிய வேண்டியிருக்கும் பரிதாபமான கணங்களின் ஒரு துளி அந்தக்காட்சிக் கோர்வை.

ஆனால் அவரின் பிந்தைய படங்கள் எதுவும் அத்தனை சிலாக்கியமாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இல்லை. வேறு வழியில்லை. ஓர் இயக்குநர் நிலைக்கு உயர்ந்த பின் திரும்பி வர முடியாமல் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள போட வேண்டிய பல முகமூடிகள்தான் அவரது பிந்தைய படங்கள் என நினைக்கிறேன். என்றாலும் 'ஆறு' மெழுகுவர்த்திகள் திரைப்படத்தைப் பற்றி ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதின கட்டுரை, படத்தைப் பற்றின ஆவலை மூட்டியது. அதில் இயக்குநரின் மனவோட்டங்களாக விவரிக்கப்பட்டிருந்த வார்த்தைகள், அவரது லட்சியத்திரைப்படத்தை குறைந்த சமரசங்களுடன் உருவாக்கப் போராடுவதாக எழுதப்பட்டிருந்தது படத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்தியது. வீங்கிய கண்களுடன் கூடிய ஷாமின் புகைப்படமும்.

என்றாலும் படத்தைப் பார்த்து முடித்தவுடன் அத்தனை ஆர்வமும் நம்பிக்கையும் வடிந்து உள்ளுக்குள் ஏமாற்றமும் கசப்பும் மாத்திரமே மிஞ்சியது. இதற்கா இத்தனை தம்பட்டம? இந்தப் படத்தின் மிக முக்கியமான எதிர்மறை அம்சமே இதன் ஹீரோயிசம்தான். நடுத்தரவர்க்க ஆசாமியாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர், இந்தியாவிலுள்ள மாநிலவாரியான நிழலுலக ஆசாமிகளுடன் மோதும் சண்டைக்காட்சிகள் இதன் தரத்தை அதல பாதாளத்திற்கு தள்ளி விட்டுவிட்டன். மாறாக 'மகாநதியில்' கமல், கொல்கத்தா பாலியல் தொழில் நடைபெறும் பகுதியிலிருந்து தன் மகளை மீட்பதற்காக, ஒரு சாதாரண தந்தையாக நடித்திருக்கும் யதார்த்ததிற்கு நெருக்கமான காட்சிகள், இதனோடு ஒப்பிடும் போது எவ்வளவோ தேவலை.  மற்றபடி குழந்தைகளைக் கடத்தி பிச்சையெடுப்பதற்காகவும் கொத்தடிமைகளாகவும் பாலியல் தொழிலாளிகளாவும் பயன்படுத்தும் மாஃபியா உலகின் கொடூரம், சாத்தியப்பட்ட எல்லைக்குள் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது.



ஜெயமோகன், இதன் இசை வெளியீட்டு விழாவில் கூறிய படி, ஒரு தனிமனிதனின் இயல்பு எந்தக்கணத்திலும் உடைந்து போகக்கூடிய நீர்க்குமிழியின் நிலையற்றத்தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது திரைப்படம். கடவுள் நம்பிக்கை உள்ளவென்றால், இதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டிருந்து சும்மாவா இருப்பார் என்கிற கசப்பான யோசனை எழும். யதார்த்தமான ஆசாமியாக இருந்தால், இத்தனை பெரிய அரசியல் அமைப்பு, அதிகாரிகள், காவல்துறை போன்றவையெல்லாம் இயங்கிக் கொண்டுதானிருக்கிறதா அல்லது இந்த மாஃபியா வலைப்பின்னலின் ஒரு பகுதிதான் அவைகளா என்கிற சந்தேகம் எழும். எல்லா தனிநபர்களுக்குமே அவர்களுக்கான குழந்தைகளும் பாசமும் இருக்கும் போது எப்படி அவர்களால் இந்தக் கொடூர உலகினுள் இயங்க முடிகிறது என்பதற்கான விடையை, இதில் வாகன ஓட்டுநராக வரும் ஒரு பாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

இத்திரைப்படத்தைக் காண்பதற்கான ஆர்வமூட்டும் அம்சங்களில் ஒன்றாக ஷாமின விநோதமான தோற்றமும் படவெளியீட்டிற்கு முன் பிரதானப்பட்டிருந்தது. ஆனால் இதை படத்தில் இயக்குநரால் - நாடகத்தன்மை கூடியாவது - அழுத்தமாக உணரவைக்க முடியவில்லை. 'சேது' திரைப்படத்தில் ஒட்டி உலாந்த, மொட்டையடிக்கப்பட்டிருக்கும் விக்ரமின் உருவத்தை பார்வையாளனுக்கு திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்படுத்துமளவிற்கான அறிமுகத்தை கச்சிதமாக நிகழ்த்தியிருப்பார் பாலா. அதற்கு முரணாக விக்ரமின் முந்தைய தோற்றமும் பாத்திர வடிவமைப்பும் சரியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் ஷாமின் இந்த அளவிற்கான மெனக்கெடல், இயக்குநரால் சரியாக பயன்படுத்தப்பட முடியாமற் போனது துரதிர்ஷ்டம்.

ஆனால் இத்திரைப்படத்திற்கு ஜெயமோகன் தேவைதானா என்கிற கேள்வி இயல்பாக எனக்குள் எழுந்தது. 'ஏழாம் உலகம்' எழுதின ஒரே காரணத்திற்காவே ஜெயமோகனை இதில் பயன்படுத்திக் கொள்வதற்கான எண்ணம் இயக்குநருக்கு தோன்றியிருக்கலாம். கடத்தல் தொழிலின் ஒரு கண்ணியாக இருக்கும் கால் ஊனமுற்றவர் பேசும் ஒரு வசனத்திலும், பெண்தன்மையுடன் பாவனை செய்யும் ஓர் ஆசாமி பழிவாங்கும் உணர்ச்சியுடன் பேசும் வசனத்திலும் தவிர வேறு எங்கும் ஜெயமோகனைக் காணமுடியவில்லை. மாறாக இயக்குநர் இதை வணிக நோக்குத் திரைப்படங்களுக்குரிய சமரசங்களுடன் உருவாக்குவதிலே அவருடைய நோக்கம் பிரதானமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. அதைக் குறை சொல்ல முயலவில்லையென்றாலும், தனது லட்சியத் திரைப்படமாக இதைக்கருதும் போது சமரசங்களின் அளவைக் குறைத்திருந்தால் தமிழ்த் திரையில் இதுவோர் குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக உருவாக்கியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. 


suresh kannan

Wednesday, November 13, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்


தமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ஆறுதலான விஷயம். உரைநடைத் தமிழில் உரையாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை  யதார்த்த தமழில்  பேச வைத்த ஸ்ரீதர், செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் அரங்குகளுக்குள் இயங்கிக் கொண்டிருந்ததை அசலான திறந்த வெளிக்குள் இழுத்துப் போட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்த பாரதிராஜா, வசனங்களின் சிக்கனத்தையும் காட்சிகளின் நவீனத்தையும் அறிமுகப்படுத்திய மணிரத்னம் போன்றவர்கள் தமிழ் சினிமாவின் ஆச்சாரங்களைக் கலைத்து வேறொரு பரிமாணத்திற்குள் பயணிக்க வைத்தார்கள். தங்களால் ஆன மாற்றங்களை இவர்களால் சாத்தியப்படுத்த இயன்றாலும் தமிழ் சினிமாவின் சில பிரத்யேகமான சம்பிதாயங்களிலிருந்து இவர்களால் வெளிவரவே முடியவில்லை. எவ்வித வணிக சமரசங்களும் அல்லாமல், சராசரியான தமிழ் சினிமா பார்வையாளனின் புரிதல்களை கருத்தில் கொண்டு காட்சிகளில் செய்த சமரசங்கள் அல்லாமல், எவ்வித தடைகளும் அல்லாமல் ஓர் இயக்குநர் தான் உருவாக்க விரும்பினபடியான கறாரான ஒரு படைப்பையாவது இதுவரை தமிழ் சினிமாவில் சாத்தியப்படுத்த இயன்றிருக்கிறதா என்றால் யோசிக்க வேண்டியிருக்கிறது. வீடு,சந்தியா ராகம் என்று திரும்பத் திரும்ப சில பெயர்களிலேயேதான் ஒரு யூகமாகத்தான் நிலைகொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது எந்தவொரு ஆடும் மந்தையிலிருந்து முழுமையாக விலகவில்லை என்பதுதான் சோகமும் ஆதங்கமும்.

இம்மாதிரியான வேலிகளைத் தாண்ட முயலும் சமீபத்திய ஆடு மிஷ்கின். சில ஆதாரமான விஷயங்களை அவரின் துவக்கப் படைப்பிலிருந்து கவனித்தால் தமிழ் சினிமாவின் சலித்துப் போன வடிவமைப்பிலிருந்து அவர் தொடர்ந்து மீற முயற்சித்துக் கொண்டேயிருப்பதைக் கவனிக்கலாம். குறிப்பாக திரைமொழியை அவர் பயன்படுத்தும் விதம் நுட்பமானது. ஆனால் தமிழ் சினிமாவிலுள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால் இவற்றில் சிறந்த படங்களாக கருதப்படுபவற்றை இன்னொரு சக தமிழ் சினிமாவுடன்தான் ஒப்பிட்டுக் கொள்ள முடியும். உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் என்று அறியப்படுபவற்றுக்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ளது ஓர் அகண்ட துன்பியல் இடைவெளி. எந்தவொரு மற்ற சிறந்த படைப்புகளிலும் உள்ள கதை உள்ளிட்ட சிறந்த அம்சங்களை தமிழ் சினிமா நகலெடுக்கும் போது அதை தன்னுடைய வார்ப்பிற்குள்ளாக செரித்துக் கொள்ளும்படி இயங்குவதும் இன்னொரு துன்பியல் சமாச்சாரம்.

அந்த வகையில் மிஷ்கினின் மூலாதாராமான விருப்பங்கள், நகல்கள் ஏதாவதொரு ஜப்பானிய, கொரிய திரைப்படங்களின் விதைகளிலிருந்து முளைத்திருக்கலாம் என்றொரு யூகம். ஓ.ஆ -விலும் மருத்துவ கல்லூரி மாணவனின் தோற்றம், கொரியத் திரைப்படங்களின் மனிதர்களை  நினைவுப்படுத்துவது தற்செயலா அல்லது இயக்குநரின் ஆழ்மனதிலிருந்து விளைந்த தன்னிச்சையான செயல்பாடா என்று யோசிக்கலாம்.   'நந்தலாலா' வை டகேஷி கிட்டனோவிற்கு செய்த காணிக்கை என மிஷ்கின் நம்பிக் கொண்டிருப்பது அவர் விருப்பம். இரண்டு பிரதியையும் கண்டிருப்பவர்களால் 'கிகுஜிரோவில்' இருந்த கலையமைதி மிஷ்கினின் படைப்பில் இல்லை என்பதையும் அது தமிழ் சினிமாவுக்குள்ள சில குணாதியங்களிலிருந்து விலகவில்லை என்பதையும் எளிதாகவே உணரமுடியும்.

அந்தவகையிலேயே மிஷ்கினின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' திரைப்படத்தை உலகசினிமா என்றெல்லாம் வகைப்படுத்தி உணர்சசிவசப்படாமல் ஒரு சுவாரசியமான தமிழ் சினிமா திரில்லர்' என்கிற வகையிலேயே பார்த்தால் எந்த பிரச்சினையுமின்றி ரசிக்க முடியும். அந்த வகையில் சமீபத்திய  தமிழ் சினிமாக்களில் இது ஒரு சிறந்த வரவு. மிகுகற்பனைத் திரைப்படங்களில் தர்க்க ஒழுங்குகளின் அடிப்படையை ஒரு பார்வையாளன் எதிர்பார்க்கவே கூடாது. இயக்குநர் கறாராக தான் உருவாக்க விரும்பும் கற்பனை உலகில் கதைகேட்கும் குழந்தையின் மனோநிலையுடன் நம்மை ஒரு செயலற்ற பார்வையாளராக ஏற்றுக் கொண்டால்தான் அந்தப் படைப்பை அந்தக் கணத்தில் முழுமையாக ரசிக்க முடியும். அதிலுள்ள தர்கக ஓட்டைகளை நம் மனம் பிறகு நிதானமாக யோசிப்பது இயல்புதானென்றாலும் திரைப்படத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் இணையாக இதையும் சிநதித்துக் கொண்டிருத்தல், புணர்ச்சி நேரத்தில் மக்கள் தொகை பற்றிய புள்ளவிவரங்களை சிந்தித்துக் கொண்டிருக்கும் அபத்தத்திற்கு இணையானதாக இருக்கும். மிஷ்கினின் திரைப்படம் அவரது முந்தைய படங்களில் உள்ள தேய்வழக்குகள் சிலவற்றை பெரும்பாலும் தவிர்த்து சுவாரசியமான திரைக்கதையைக் கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் தலைப்பே குழந்தைகளின் கதைக்கான எளிமையையும் தொனியையும் கொண்டிருக்கிறது. கதையின் உள்ளடக்கமும் பழைய நீதிக்கதையொன்றின் சாரமே. இது பல திரைப்படங்களின் உள்ளடக்கமாக வந்திருக்கிறது. 'அன்புக்கு நான் அடிமை' என்றொரு திரைப்படத்தில் தன்னால் கொல்லப்பட்டு விடும் ஒரு காவல்துறை அதிகாரியின் நிராதரவான குடும்பத்திற்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் ரஜினிகாந்த் இருப்பதுதான் அதன் கதைக்களம்.  இந்த மசாலாவை ரசிக்கத்தக்க திரைமொழியின் மூலமும் சுவாரசியமான திரைக்கதையின் மூலமும் அடுத்த தளத்திற்கு நகர்த்திச் சென்றிருப்பதே மிஷ்கினின் உன்னதமான பணி. ஒரு படைப்பின் இடைவெளிகளை வாசகன் பூர்த்தி செய்து கொள்வான் என்கிற வகையிலும் அவனையும் தன்னுடைய படைப்பில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதே ஒரு நல்ல படைப்பாளியின் உருவாக்க சிந்தனையாக இருக்க முடியும். அந்த வகையில் சில விஷயங்களை மிஷ்கின் திட்டமிட்டு வேண்டுமென்றே தாண்டிச் செல்கிறார். இல்லையெனில் ஒரு கதாபாத்திரத்தின் பெயருக்கு மிக அந்நியமாக 'வுல்ஃப்' என்று அத்தனை நேரிடையாக பெயரிட முடியாது.

***

காவல்துறையால் தீவிரமாக தேடப்படும் ஒரு கொலையாளி சுடப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான் (மிஷ்கின்).  அவனை மருத்துவக் கல்லூரி மாணவனொருவன் (ஸ்ரீ) தானே சிகிச்சையளித்து காப்பாற்றுகிறான். ஆனால் கொலையாளியோ மாணவனை கடத்திக் கொண்டு பயணிக்கிறான். ஒருபுறம் காவல்துறை 'வுல்ஃப்' என்கிற அந்தக் கொலையாளியை கொல்லத் துரத்துகிறது. இன்னொருபுறம் வுல்ஃபின்  பழைய முதலாளியின் ஆட்கள் சாகடிக்கத் துரத்துகிறார்கள். இதற்கிடையில் வுல்ஃபிற்கு தப்பிப்பதை விடவும் இன்னொரு நோக்கமிருப்பது பூடகமான சில சம்பவங்களின் மூலம் தெரிகிறது. ஆக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தங்களின் உயிர்வாழ்தலுக்காக ஆபத்துக்களின் இடையில் நிகழ்த்தும் பயணமே இத்திரைப்படத்தின் மையம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தற்காலிமாக பரஸ்பரம் தங்களின் நிலைகளில் இருந்து மாறி மாறி பயணிப்பது சுவாரசியம்.

இத்திரைப்படத்தில் பாராட்டுதலுக்குரிய முக்கியமான அம்சமே, பிளாஷ்பேக் எனும் உத்தியை இயக்குநர் பயன்படுத்தாமலிருப்பது. பூடகமான காட்சிகளின் தொடர்ச்சியான இயங்குதலில் பார்வையாளனுக்கு அவற்றின் பின்னணி குறித்த ஆர்வம் அதிகமாகும். சமயங்களில் அவன் எரிச்சலடைந்து படைப்பிலிருந்து விலகுவதற்கான சாத்தியங்கள் உண்டு. இதனாலேயே இயக்குநர்கள் பார்வையாளனின் நிலையை கருத்தில் கொண்டு பொருத்தமான இடங்களில் அவற்றிற்கான தொடர்புகளை விளக்கி விடுவார்கள். ஆனால் மிஷ்கின் பார்வையாளர்களின் மீது நம்பிக்கை கொண்டு சம்பவங்களின் பின்னணிகளிலிருந்து  மெல்ல மெல்ல அவர்களே உணர்ந்து கொள்ளுமாறு திரைக்கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. என்றாலும் இது புரியாமற் போய் விடுமோ எ்னகிற சந்தேகம் காரணமாக ஒரு குழந்தைக்கு கதை சொல்லும் சாக்கில் சமபவங்களின் பின்னணியை ஒரு இடத்தில் அடுக்குகிறார். மிகச்சிறந்த காட்சி என்று பாராட்டப்படும் இதுவே திரைக்கதையின் ஒரு பலவீனமான அம்சம் என்பதாக நான் கருதுகிறேன். ஏறக்குறைய படம் நிறைவுறுவதற்கு முன்னால்தான் இ்ந்தக் காட்சி வருவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதை இல்லாமலேயே பார்வையாளனால் திரைப்படத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கலாம். அதனாலேயேதான் இதை தமிழ் சினிமாவின் பலவீனங்களுள் ஒன்றாக சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பல நுட்பமான காட்சிகள் இதை ஒரு சுவாரசியமான அனுபவமாக்குகிறது. மருத்துவக் கல்லூரி மாணவன், மருத்துவர்களுக்கு மிக அடிப்படையாக இருக்க வேண்டிய அறம் சார்ந்தவனாக இருந்தாலும், கொலையாளிக்கு சிகிச்சையளிக்கும் போது அவன் மீதே அவனுக்கு நம்பிக்கையில்லாதனாக இருக்கிறான். என்றாலும் சிக்கலான ஒரு சூழலில் கொலையாளியின் இதயத்தை உயிர்த்தெழச் செய்யும் போது அருகிலிருக்கும் மனநிலை பிறழ்ந்த ஒரு மனிதன் 'நீதான் டாக்டர்" என்கிறான். ஒரு மருத்துவரை நோயாளி அடையாளங்காட்டும் முரணை இயக்குநர் இந்தக் காட்சியில் நிகழ்த்தியிருக்கிறார்.

இன்னொரு காட்சி. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் சந்தேகத்திற்குரிய இளைஞன் ஒருவனை நிறுத்தி விசாரிக்கிறார்கள். அவனை சோதனை செய்யும் கான்ஸ்டபிள் ஒருவர் அவனிடமிருக்கும் துப்பாக்கியைப் பார்த்து 'ஐயா' என்று அலறுகிறார். பின்னாலேயே வரும் இன்னொருவன், இளைஞனை காப்பாற்றும் நோக்கில் காவலர்களை சுட்டுத் தள்ளியவுடன் அவனை நோக்கியும் 'ஐயா' என்று விளித்து சல்யூட் அடிக்கும் நிலையில் விறைப்பாக நிற்கிறார். அவர்கள் தப்பித்து போகும் போது இவரையும் சுட்டு விட்டுப் போக ''ஐயா' என்ற படியே கீழே விழுகிறார்.

ஜெயந்தனின் 'முனுசாமி' என்றொரு சிறுகதை. நிலப்பிரபுத்துவ காலத்தில் எவ்வாறு அடிமைகள் உருவாக்கப்பட்டு, அவர்கள் அடிமை மனோநிலையுடனேயே வாழ்கிறார்கள் என்பதை சிறப்பாக உணர்த்தும் கதை. ஓர் அலுவலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் கடைநிலைச் சிப்பந்தியான முனுசாமி,  எவ்வாறு தனக்கு விசுவாசம் உடையவனாக இருக்கிறான் என்று அகமகிழ்ந்து போவார் ஓர் அதிகாரி. அந்த அளவிற்கு பணிவிடைகள் செய்வதில் விசுவாசமாக இருப்பான் முனுசாமி. ஆனால் அதிகாரி பணிமூப்பு அடைந்த கடைசி நாளன்று, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரி அழைத்தவுடன் முனுசாமி தனது விசுவாசத்தை சட்டென்று இடமாற்றம் செய்வதைக் கண்டு திகைத்துப் போய் விடுவார். முனுசாமி அளித்த விசுவாசம் அவருக்கு அளிக்கப்பட்டது அல்ல, அவருடைய பதவிக்காக அளிக்கப்பட்டது என்பதை அவருடைய நண்பரொருவர் விளக்கிச் சொல்வார். மேலே குறிப்பிட்ட கான்ஸ்டபிளின் 'ஐயா' விளிப்பைக் கண்டவுடன் இச்சிறுகதை நினைவிற்கு வந்தது. இந்தக் காட்சியில் குற்றவாளிகள் தப்பிப்பது மிக மிக நிதானமாக காட்டப்பட்டிருக்கும். சில நிமிடங்கள் வந்து போகும் பாத்திரங்களைக் கூட இயக்குநர் சுவாரசியமாக வடிவமைத்திருந்தது பாராட்டப்பட வேண்டியது.

***

எழுத்தாளராகவும் இசை விமர்சகராகவும் அறியப்பட்டிருக்கும் ஷாஜி, இ்த்திரைப்படத்தில் ஒரு நடிகராக புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறார். அதுவரையிலான தமிழ் சினிமாக்கள், காவல்துறை அதிகாரிகள் என்றாலே வழக்கமாக சித்தரிக்கும் பிம்பங்களையும் நாயகத்தனங்களையும் மிகைகளையும் தொடர்ச்சியாக மிஷ்கின் உடைத்திருக்கிறார். இதில் காவல்துறையாக வரும் ஷாஜியின் பாத்திர வடிவமைப்பும், மிஷ்கினின் முந்தைய திரைப்படங்களான அஞ்சாதே (பொன்வண்ணன்), யுத்தம் செய் (சேரன்) ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. காவல்துறை எனும் அமைப்பே அவரவர் அதிகாரிகளின் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து இயங்கும் இயந்திரங்களாக இருக்க, குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து சுயமாக சிந்திக்கும் அதிகாரிகளே, மிஷ்கின் சித்தரிக்க விரும்பின அதிகாரிகளாக இருக்கிறார்கள். விலகின ஆடுகள்.

மிகையுணர்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமாவின் ரசனை, சில படைப்பாளிகளை கடவுளின் நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கிறது. அவர்கள் மீது வைக்கப்படும் எந்தவொரு மெல்லிய விமர்சனத்திற்கு கூட துடிதுடித்து பதைபதைத்து விமர்சிப்பவர்களை ஆபாச வசைகளால் எதிர்கொள்வது தமிழ் மரபு. அந்த வரிசையில் ஒரு முக்கியமான படைப்பாளி இளையராஜா. இணையம் என்கிற சமாச்சாரம் தமிழுலகத்தில் நுழைந்த நாள் துவங்கியே இளையராஜா பற்றிய விவாதங்களில் நிகழும் அடிதடிகளும் ரத்தகாயங்களும் இதற்கொரு உதாரணம். நல்ல கலையை ரசிப்பதின் மூலம் தன்னுடைய கீழ்மைகளிலிருந்து வெளிவந்து உயர்ந்த அனுபவங்களுக்கு, எவரையும் நேசிக்க சாத்தியப்படும் ஆன்மிக நிலைக்கு ஒருவரை பயணப்பட வைப்பதே கலையின் ஒருவகையான செயல்பாடு என்று நம்பிக் கொண்டிருக்கும் சூழலில், நல்ல இசையை ரசிப்பவர்களாக கூறிக் கொள்கிறவர்கள் அதற்கு முரணாக விமர்சிப்பவர்களின் மீது பாயும் முரணிற்கு பின்னாலுள்ள உளவியல் விநோதமானது. அந்த வகையில் இளையராஜாவைப் பற்றி விமர்சித்து எழுதுவது ஓநாய்களின் கூட்டத்தில் மாட்டிக் கொள்வதற்கு சமம்.

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே பின்னணி இசைக்கு ஒரு தனித்துவத்தையும் கவனிப்பையும் ஏற்படுத்துவதன் மூலம் அதற்கொரு அந்தஸ்தை ஏற்படுத்தியவர் என்கிற வகையில் இளையராஜாவின் மேதைமையை மறுக்கவே முடியாது.  ஓ.ஆ -விலும் காட்சிகளின் வெற்றிடத்தை நிரப்பி பார்வையாளர்கள் அந்தக் காட்சிகள் தொடர்பாக மேலதிக மனவெழுச்சி பெறுவதில் இளையராஜாவின் பங்கு உறுதியாகவும் அடிப்படையாகவும் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் மெளனமாக கடந்திருந்தாலும் இன்னமும் சிறப்பாக ஆகியிருக்கும் காட்சிகளில் கூட அவர் தன்னுடைய இருப்பை நினைவுருத்திக் கொண்டேயிருக்கும் குறுக்கீட்டை தவிர்த்திருக்கலாம். சமயங்களில் இந்த இடையூறு எரிச்சலூட்டும் அளவிற்கு நரம்பு வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.

பின்னணி இசை என்றே காலங்காலமாக அறியப்பட்டுக் கொண்டிருந்த ஒரு தொழில்நுட்பத்திற்கு இத்திரைப்படத்தில் 'முன்னணி இசை' என்று அடையாளப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதன் மூலம் இளையராஜாவை அவர் பகடி செய்திருக்கிறாரோ என்று எண்ணுமளவிற்கு இசை பல இடங்களில் மிகையாக துருத்திக் கொண்டு 'முன்னணி'யில் செயற்கைத்தனமாக நின்று கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் சுவாரசியத்தை முழுமையாக்குவது இதன் ஒளிப்பதிவு (பாலாஜி ரங்கா). படத்தின் பெரும்பான்மையும் (ஒரே) இரவில் நிகழும் காட்சிகளின் கோர்வை என்பதால் இருளின் அழகியலுடன் நிதானமாக நகரும் காட்சிகள் வசீகரிக்கின்றன.

இரை தேடுதலுக்கும் உயிர் வாழ்தலுக்குமான போராட்டத்தில் இடையில் தத்தளிக்கும் வாழ்க்கையின் நிதர்சனத்தையும் பாவத்திற்கும் மனந்திரும்புதலுக்குமான ஆன்மிக இடைவெளியையும் மிஷ்கின் பல காட்சிகளின் மூலமாக  சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். உயிர்களுக்கிடையே கானகத்தில் நிகழும் போராட்டத்தைப் போலவே இதன் கதைக்களம் அமைந்திருக்கிறது. காட்டிலாவது, புலி மானைத் தின்னும், யானை புல்லைத் தின்னும் எனும் தெளிவான இயற்கை விதிகளும் அடையாளங்களும் உள்ளன. உயிர்களும் தங்களின் இயல்புகளை எப்போதும் மீறுவதில்லை. ஆனால் காங்கீரிட் காட்டில் நிகழும் இந்தப் போராட்டத்தில் எது ஓநாய் எது ஆடு. எது புலி என்று  தெரிவதில்லை. காவல்துறைக்குள் குற்றவாளிக்கு சாதகமாக இயங்கும் ஓநாய் ஒளிந்திருக்கிறது. 'அப்பாவி இளைஞன் இறந்தாலும் பரவாயில்லை.கொலையாளியை சுட வேண்டும்' என்று குரூரமான புலித்தனத்தைக் காட்டுகிறது காவல்துறை. திருந்திய ஓநாயும் ஓநாயாக மாறுகிற ஆடும், இவர்களுக்கிடையிலான அப்பாவி ஆட்டுக்குட்டிகளும் என ஒரு குரூரமான சாகச விளையாட்டை தனது பிரத்யேகமான திரைமொழியின் நிகழ்த்திக் காட்டியுள்ளார் மிஷ்கின். (என்றாலும் எண்ட் கார்டில் A for Apple என்பது போல யார் ஓநாய், யார் புலி என்பதையெல்லாம் நடிகர்களின் பெயர்களோடு இணைத்து அடையாளப்படுத்தியிருக்க வேண்டியதில்லை).


இத்திரைப்படத்திலுள்ள தர்ககப் பிழைகளையும் யதார்த்தத்தை விட்டு விலகுகிற விஷயங்களையும் பற்றி ஒரு பட்டியலே போடலாம். கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதில் உள்ள ஒழுங்கற்ற தன்மையையும் சொல்லலாம். உதாரணத்திற்கு ஒரு காட்சியில் மருத்துவக் கல்லூரி மாணவன், கொலையாளியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒரு குழந்தையை கொல்வதாக மிரட்டி பணிய வைக்கிறான். இவன்தான் மருத்துவத்தின் மீதுள்ள பிரியம் காரணமாக, காவல்துறை பற்றிய பயத்தையும்  மீறி கொலையாளியை முன்னர் அறுவைச் சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான். அது மாத்திரமல்ல, ஒரு சிக்கலான சூழலிலும் காலில் சுடப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு முதலுதவி செய்கிறான். எனில் உயிரைக் கொல்லும் துணிவோ வன்மமோ இவனுக்கு எப்போதும் வராது என்பது 'மிகுந்த புத்திசாலியாக' சித்தரிக்கப்படும் கொலையாளிக்குத் தெரியும். எனினும் ஏன் அந்த இளைஞனுக்கு பணிய வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பிப் பார்ககலாம். ஆனால் இத்தனை கேள்விகளையும் எழுப்ப விடாமல் மிஷ்கினின் அற்புதமான திரைக்கதையும் திரைமொழியும் இதை அற்புதமான ஒரு அனுபவமாக ஆக்கியிருக்கிறது என்பதாலேயே இத்திரைப்படத்தை எளிதில் புறக்கணித்து விட முடியாது.

முன்னரே குறிப்பிட்டபடி மிஷ்கினின் இந்தத் திரைப்படத்தை மற்ற தமிழ் திரைப்படங்களுடன் மாத்திரமே ஒப்பி்ட்டு ஆறுதலடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனெனில் ஹாலிவுட், கொரியத் திரைப்படங்கள் எல்லாம் உள்ளடகத்திலும்,  உருவாக்கத்திலும், காட்சியமைப்புகளிலும், இந்தியத் திரைப்படங்கள் துரத்தி துரத்தி தங்களின் மோசமான வார்ப்பில் நகலெடுக்க கோருகிற அசாத்தியமான உயரத்தில் இருக்கின்றன. தமிழ் திரைப்படமும் ஒரு நாள் அந்த உயரத்தை தொட முடியும் என்கிற நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்திருப்பதே மிஷ்கினின் சாதனை. 

- உயிர்மை - நவம்பா 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)     

suresh kannan

Tuesday, November 12, 2013

ஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'


உலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ஒரு முறை கூட பெற முடியவில்லை என்பது ஒரு முரண்நகை. ஆஸ்கர் என்பது அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டு அமெரிக்கத் திரைப்படங்களுக்கு தரப்படுவதுதான் என்றாலும் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்கிற பிரிவில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான 'ஈரான்' கூட ஒரு விருதைப் பெற்றிருக்கும் நிலையில் இந்தியாவால் மூன்றே முறைதான் இறுதிப்பட்டியலிலேயே வர முடிந்திருக்கிறது. (மதர் இந்தியா -1957, சலாம் பாம்பே - 1988, லகான் 2001).

கடந்த பல வருடங்களாகவே இந்தியாவின் ஆஸ்கர் கனவு நீடித்துக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது தவறிப் போய் விடும் வருத்தத்தால் 'சீச்சி இந்தப் பழம் புளிக்கும்' என்பதன் மூலம் ஆறுதல் பெற்றுக் கொள்கிறது. ஆஸ்கர் நாயகன் என்ற அடைமொழியில் அழைக்கப்படும் கமல்ஹாசன், இந்த விருதைப் பெற்றுத்தருவார் என்று சில முறை எதிர்பார்க்கப்பட்டு சோர்ந்த நிலையில், ஹாலிவுட் படமொன்றிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்ற போது அந்த இரவல் பெருமையை  கொண்டாடியதின் மூலம் நமக்கு சிறிய ஆறுதல் கிடைத்தது.

இந்த நிலையில் 86வது வருட அகாதமி விருதிற்காக, இந்தியாவின் சார்பில் அனுப்ப தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குஜராத்தி திரைப்படமான 'The Good Road'. கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த தேர்வு குறித்து நிறைய சர்ச்சைகளும் முணுமுணுப்புகளும் இந்த வருடத்தில் எழுந்துள்ளன. The Lunchbox , Bhaag Milkha Bhaag, English Vinglish, Celluloid, Vishwaroopam உள்ளிட்ட இருபது திரைப்படங்கள் தேர்விற்கான பட்டியலின் வரிசையில் இருந்த போது, சுமாரான  படமாக கருதப்படும்  'The Good Road' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது திரை ஆர்வலர்கள், விமா்சகர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கருக்காக அனுப்பப்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று இவர்களில் பெரும்பான்மையோர் சுட்டிக்காட்டுவது 'The Lunch Box' திரைப்படத்தையே. தேர்வுக்குழுவின் தலைவராக இருக்கும் இயக்குநர் கெளதம் கோஷ், 'தன்னுடைய தனிப்பட்ட விருப்பமும் 'The Lunch Box' தான் என்றாலும் தேர்வுக்குழுவின் பெரும்பான்மையான முடிவின்படிதான் 'The Good Road' தேர்ந்தெடுக்கப்பட்டது' என்கிறார். இத்திரைப்படத்தின் விநியோகஸ்தராக Sony Pictures இருப்பதால் சர்வதேச அரங்கில் இதை முன்வைப்பது எளிதாக இருக்கும் என்கிற நடைமுறை காரணமும் கூறப்படுகிறது. இத்திரைப்படம் Cannes மற்றும் Toronto திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருப்பதும் கூடுதல் தகுதியாக முன்வைக்கப்படுகிறது. Ship of Theseus -ம் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.

விருதுகளில் உள்ள அரசியல்களைத் தாண்டி, அரசியல் அல்லாமல் விருது சர்ச்சைகள் நிறைவுறாதல்லவா? சிறந்த திரைப்படங்களாக கருதப்பட்டவைகளைத் தாண்டி இந்த குஜராத்தி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் காரணங்களால் என கூறப்படுகிறது. குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோதி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் தற்போதைய மத்திய அரசான காங்கிரஸ், பாஜகவிற்கு பொதுத் தேர்தலில்  பின்னடைவை ஏற்படுத்தும் முயற்சிகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. 'பெண் குழந்தைகள்' பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கப்பட்டிருப்பது, குஜராத்தின் வறட்சி தொடர்பான காட்சிகள் 'The Good Road'-ல் இருப்பதே காரணம். இதன் மூலம் குஜராத்தைப் பற்றிய எதிர்மறையான சித்திரத்தை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாக சொல்கிறார்கள்.

ஜீன்ஸ், இந்தியன், குரு போன்ற திரைப்படங்கள் கடந்த வருடங்களில் தேர்வு செய்து அனுப்பப்பட்டதான விபத்துக்கள் நேர்ந்திருக்கும் நிலையில் 'The Good Road' இந்தியாவின் ஆஸ்கர் கனவை பூர்த்தி செய்யுமா?

***

Gyan Correa இயக்கியிருக்கும் முதல் திரைப்படமே ஆஸ்கரின் கதவைத் தட்ட போயிருப்பது, அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். மாநில அளவிலான 2013-ன் தேசிய விருதையும் இது பெற்றிருப்பது கூடுதல் தகுதி. சுமார் 2 கோடி ரூபாயில், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தை NFDC தயாரித்துள்ளது.

இது ஒரு Road Movie.  பப்பு என்கிற லாரி டிரைவர் சட்டவிரோத நிழலான ஒரு பணிக்காக அமர்த்தப்பட்டு தனது உதவியாளருடன் குஜராத்தின் சிறுநகரான கட்ச் எனும் பகுதியின் நெடுஞ்சாலையில் பயணிக்கிறார். ஒரு நடுத்தரவர்க்க தம்பதியினர் தங்களது 7 வயது மகனுடன் விடுமுறைக் கொண்டாட்டத்திற்காக பயணிக்கிறார்கள். பூனம் என்கிற சிறுமி தன்னுடைய பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக மும்பையிலிருந்து தனியாக பயணிக்கிறாள். இந்த மூன்று பயண இழைகளில் நேரும் சம்பவங்களையும் சங்கடங்களையும் ஆபத்துக்களையும் அடுத்தடுத்த காட்சிகளால் நேர்த்தியாக அடுக்கியிருக்கிறார் இயக்குநர்.

நிழலான காரியங்களைச் செய்யும் நபர்களை 'வில்லன்களாக' மட்டுமே சித்தரிக்கும் திரைப்படங்களிடையே அவர்களிடையேயும்  உள்ளுறையாக அன்பும் மனிதநேயமும் உண்டு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக காட்சிகள் நகர்கின்றன. தம்பதியினரிடமிருந்து தொலைந்து போகும் சிறுவனை தன்னுடைய பாதுகாப்பில் கவனமாக அழைத்துச் செல்கிறார், லாரி டிரைவர் பப்பு. சிறுவனைப் பிடிக்காத அவருடைய உதவியாளர் இதை எதிர்த்துக் கொண்டே வந்து இறுதியில் அச்சிறுவனுடன் இணக்கமாகிறார். கணவன்,மனைவி போன்று டிரைவருக்கும் க்ளீனருக்கும் இருக்கும் உறவும் புரிதலும், க்ளீனருக்கு உள்ள குருபக்தியும் இந்தப் பாத்திரங்களிடையே சிறப்பாக வெளிப்படுகிறது.

லாரி டிரைவாக நடித்திருக்கும் ஷாம்ஜி, உண்மையிலேயே ஒரு லாரி டிரைவர். ஏறக்குறைய ஒரே மாதிரியான சிக்கனமான முகபாவங்களை பெரும்பாலான காட்சிகளில் இவர் காட்டியிருந்தாலும்  அது காட்சிகளின் பின்னணிகளுக்கு மிகப் பொருத்தமானதாக இயக்குநரால் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. நவரசங்களையும் ஒரே பிரேமில் காட்டத்துடிக்கும் மிகையான நடிப்புகளுக்கு சவால் விடுவது போலிருக்கிறது இவரின் எளிமையான நடிப்பு. வீட்டைப் பிரிந்து  ஒரே மாதிரியான பணியை வருடம் பூராவும் செய்ய வேண்டியிருக்கும் லாரி டிரைவர்களின் உலகத்தின் சலிப்பான ஒரு சிறுபகுதி இவரின் மூலமாக வெளிப்படுகிறது. தனக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களையும் மீறி சிறுவனை அழைத்துச் செல்வதும் அவனின் மீது அன்பு செலுத்துவதற்குமான காரணங்கள் முதலிலேயே நிறுவப்பட்டு விடுகின்றன.

பாட்டி வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் சிறுமி வழியில் இறக்கி விடப்பட்டு பசியுடன் தற்செயலாக அவள் செல்லுமிடம், சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்யுமிடமாக இருக்கிறது. அதை நடத்துபவர் சிறுமியின் மீது பரிதாபப்பட்டு 'இது விவகாரமான இடம். உடனே நீ வெளியேற வேண்டும்' என்கிறார். அங்குள்ள சிறுமிகளில் ஒருவர், பூனத்திற்கு ஆதரவாக இருக்கிறார். அங்குள்ள சிறுமிகளுக்கு தாங்கள் ஈடுபடுத்தப்படும் தொழில் குறித்த வருத்தம் இல்லாமலிருப்பதிற்கு காரணமாக  அதன் பின்னணியில் உறைந்திருக்கும் வறுமையும் அறியாமையும்  பார்வையாளனைச் சங்கடத்திற்குள்ளாக்கிறது. இந்தச் சிறுமியின் மீது பரிவும் பரிதாபமும் காட்டும் தொழில் நடத்துபவர், அதே பரிவை மற்ற சிறுமிகளிடம் ஏன் காட்டுவதில்லை எ்ன்கிற முரண் எழுகிறது. ஜெயமோகனின் நாவலான 'ஏழாம் உலகத்தில்' உடற்குறையுள்ள மனிதர்களை பிச்சையெடுக்க வைத்து பொருளீட்டும் போத்தி, தன்னுடைய மகள் தொடர்பான துன்பம் நேரும் போது தன்னிச்சையாக 'நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்' என்று புலம்புவது நினைவிற்கு வருகிறது.

தொலைந்து போகும் சிறுவனாக நடித்திருக்கும் கேவல் கட்ரோடியாவின் பங்களிப்பு முக்கியமானது. சிறு அசெளகரியத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாத சலிப்புடன் நடுத்தர வர்க்க சிறுவர்களின் பிரதிநிதியாக முதலில் காட்டப்படும் சிறுவன், பயணத்தின் அனுபவங்கள் தரும் முதிர்ச்சியிலும் லாரி டிரைவர் தரும் அன்பிலும் சிக்கலானதொரு சமயத்தில் சமயோசிதமாக நடந்து கொள்கிறான். இதன் மூலம் தன்னிடம் வெறுப்பைக் காட்டிக் கொண்டேயிருக்கும் க்ளீனரின் அன்பையும் சம்பாதித்து விடுகிறான். ஒரு விடலைச் சிறுவன், பெரிய மனிதர்களின் உலகில் நுழைவதற்கான மாயம் எந்த நுண்ணிய இடைவெளியில் நிகழ்கிறது என்கிற கேள்வியின் அடிப்படையில் எழுத்தாளர் சுஜாதா, நிலா நிழல் என்கிற புதினத்தை எழுதியிருப்பார். வெளியுலக அனுபவங்களும் பயணங்களும் ஒருவனை எத்தனை முதிர்ச்சியும் பரந்த மனப்பான்மையுள்ளவனாகவும் உருமாற்றுகின்றன என்பதை சிறுவனின் மூலமாக நாமும் உணர முடிகிறது . படத்தின் இறுதியில் சிறுவனை திரும்பப் பெறும் போது அவனின் தந்தையும் 'கவனித்தாயா? நம் மகன் வளர்ந்து விட்டது போல் தோன்றுகிறான்? என்று தன் மனைவியுடன் சொல்கிறார். 'மூன்றாம்பிறை' யின் ...ச்சுப்பிரமணி .. போலவே இதிலும் ஒரு துறுதுறு நாயக்குட்டி அற்புதமாக நடித்திருக்கிறது.

படத்தில் பிரதானமாக கவர்வது அதன் ஒளிப்பதிவு. நிதானமாக நகரும் கச்சிதமான சட்டகங்கள். அந்த சிறுநகரத்தின் நிலப்பிரதேச வெளியை அற்புதமாக உள்வாங்கியிருக்கிறது ஒளிப்பதிவு. ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி இதற்கு ஒலிப்பதிவு செய்திருக்கிறார். மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரமே பி்ன்னணி இசை ஒலிக்கிறது. (ரஜத் தோலாக்கியா). தமிழ்த் திரைப்படங்களில் இசை வாத்தியங்களை ஓய்வெடுக்க விடாமல் இடையூறு செய்யும் இசைமன்னர்கள் கவனிக்க வேண்டிய சமாச்சாரம் இது.

சத்யஜித்ராயின் 'பதேர் பாஞ்சாலி', மீரா நாயரின் 'சலாம் பாம்பே' போன்ற திரைப்படங்கள் சர்வதேச திரைவிழாக்களில் பரவலான கவனத்தைப் பெற்ற போது, 'அவை இந்தியாவின் வறுமையை கண்காட்சியாக்கி வியாபாரமாக்குவதன் மூலம் இந்தியாவைப் பற்றின மோசமான சித்திரத்தை சர்வதேச நாடுகளின் முன் காட்டுகிறது' என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு சமூகத்தின் பிரச்சினையை மிகை உணர்வின்றி அதனுடைய அசலான நிறத்துடன் காட்டுவதுதான் ஒரு கலைஞனின் கடமை' என்கிற ரீதியில் இந்தக் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்தாலும், 'இந்தியா என்றால் பாம்பாட்டிகளும் பழங்குடிகளும்' என்று இன்னமு்ம கூட மேற்கத்திய உலகில் நிலவும் கற்பனைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. 'The Good Road' -ம் இத்தகைய குற்றச்சாட்டிற்கு உட்படலாம்.

சமூகத்தின் எல்லாவிதமான இருளுக்குள்ளும் அன்பும் மனிதநேயமும் ஒரு தூய வெளிச்சமாக படர்ந்திருக்கிறது என்கிற நம்பிக்கையான செய்தியை முன்வைக்கும் இத்திரைப்படம், 'ஆஸ்கர் விருது' வெல்லும் என்று அதே நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

(காட்சிப் பிழை, நவம்பர் 2013-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)

suresh kannan