Showing posts with label உபயோகமற்ற குறிப்புகள். Show all posts
Showing posts with label உபயோகமற்ற குறிப்புகள். Show all posts

Thursday, April 14, 2011

buzz-ல் பஸ் பற்றி, சாய்பாபா பொங்கல், மனப்பாட இலக்கியம்

சமீபத்தில் Google buzz-ல் கிறுக்கியவை இவை. தஞ்சாவூர் கல்வெட்டுக்களில் இடமில்லாததால் இங்கே பதிந்து வைக்கிறேன். 
***


சென்னை மாநகர 'பல்லவன்' பஸ்களின் நவீன உள்வடிவம் குறித்த அதிருப்தி நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இங்கு அதைப் பற்றி எழுதுவதால் ஒரு உரோமமும் ஆகப் போவதில்லை என்றாலும் நடுத்தரவர்க்கத்தின் மன நமைச்சலாவது சற்று குறையலாம் என்றுதான்.

சமீபத்திய பேருந்துகளின் உள்வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்த அறிவிலி அதிகாரி குழுமம் யாரென்று தெரியவில்லை. வெளிநாட்டு பேருந்துகளின் வடிவத்தை காப்பியடித்ததெல்லாம் சரி.. ஆனால் அது மக்கள் தொகை பெருக்கம் அதிகமுள்ள இந்தியாவிலுள்ள நகரங்களுக்கு பொருந்துமா என்பதை சற்று யோசித்திருக்கலாம். அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கான திட்டங்களை ஏஸி அறையில் மாத்திரமே இருந்து பழகியவர்கள் போடுவதால் வரும் கொடுமைகளில் இதுவொன்று.

இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டுதான் அமர வேண்டியிருக்கிறது. மேலும் பெரிதும் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வில்லாத சூழலில் கலோரி மலைகள் நிறைந்த நகரத்தில் இது மேலதிக யதார்த்த சிக்கல்களை முன்வைக்கிறது. சில இருக்கைகளில் (ஓட்டுநரின் பின்புள்ள இருக்கைகள் மற்றும் சக்கரப்பகுதிகளின் மேலுள்ள இருக்கைகள்) அமர்வதற்கு ஏணி தேவைப்படுகிறது. அப்படியே ஏறி அமர்ந்தாலும் உயரமான ஒட்டுத் திண்ணையில் தொங்கிக் கொண்டிருக்கிற அபாயம் போலவே இருக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கைகளுக்கு இடையே நிற்பவர்களின் பகுதி இன்னும் குறுகலாகியிருக்கிறது. இடிராஜாக்கள அசெளகரியப்படக்கூடாது என்பதற்காக இந்த சிறப்பு ஏற்பாடு போல. கற்பு, தமிழர் பண்பாடு, பெண் தெய்வம் என்றெல்லாம் வாய் கிழிய பேசும் பாசாங்குக்காரர்களை இந்தப் பேருந்துகளில் பயணிக்க வைக்கலாம். வயது வித்தியாசமின்றி பெண்கள் தங்கள் கற்பிதக் கற்பை தவணை முறையில் இழக்குமிடங்களில் நகரப் பேருந்துகளுக்கு முதலிடம் தரலாம்.

பேருந்து எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை நின்று பயணிக்கும் நபர்கள் நெரிசலான நேரங்களில் கவனிப்பதற்கு அடிமைப் பெண் எம்.ஜிஆர் மாதிரியே குனிந்து நோக்கிக் கொண்டே வரவேண்டியிருக்கும். அப்படியாக பக்கவாட்டுப் புறங்களை இன்னும் கீழாக மறைத்து வைத்திருக்கிறார்கள். இதனால் காற்று உள்ளே வருவதும் தடைபடுகிறது. சில பேருந்துகளில் தானியங்கி கதவு அமைத்து அந்த வழியையும் இறுக்க மூடி விடுகிறார்கள். (படியில் பயணிக்க முடியாதபடி உள்ளபாதுகாப்பு ஒன்றுதான் இதிலுள்ள பயன்) பேருந்தின் மேலே அமைக்கப்பட்டிருக்கும் வென்ட்டிலேட்டர்களும் கோளாறால் மூடிக் கொண்டிருந்தால் வெயில் காலங்களில் நரகம்தான்.

சாதாரணக் கட்டணங்களை கொண்ட பேருந்துகளை எளிதில் பார்க்கவே முடியாது. அதிலும் M என்ற போர்டு வைத்து அதிகம் காசு வசூலிக்கிறார்கள். ஆனால் அதே பேருந்து நிறுத்தங்கள்தான். M என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டார் நண்பர். வேறென்ன MONEYதான். விரைவு்ப் பேருந்து என்பதெல்லாம் மறைமுகமாக அதிக காசு வசூலிப்பதற்குதான் பயன்படுகிறதே ஒழிய நகர நெரிசலான போக்குவரத்தில் அதுவொரு நகைச்சுவையே.

எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது பேருந்துகளின் பழைய வடிவமே எவ்வளவோ தேவலை. நான் நகரத்திற்குள் செல்ல மின்ரயில்களையே பெரும்பாலும் உபயோகிக்கிறேன். புதிதாக் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் மினரயில் வழி உள்ளதா என்பதையே முதலில் யோசிக்க வேண்டியிருக்கிறது. செலவும் குறைச்சல் என்பதோடு பேருந்து அலுப்பு என்பதும் கிடையாது.

நகரத்தில் புழங்குவதற்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியாதது மிகப் பெரிய குறைபாடாக இருக்கிறது.
  ***
இன்றைய சூழலில் கூட ஒரு கவிதையையோ, செய்யுளையோ, பாடலையோ மனப்பாடமாக சொல்லக்கூடியவன்தான் சிறந்த வாசகன், ரசிகன் என்று அபத்தமாக நம்புகிறார்கள். குறிப்பாக பட்டிமன்றங்களில் உரத்த சப்தத்தோடு செயற்கையான உணர்ச்சியோடு சங்கப்பாடலை சொல்லிவிட்டால், பார்வையாளர்கள் புரியவில்லையென்றாலும் சொல்லப்பட்ட விதம் காரணமாகவே பரவசத்தோடு கையைத் தட்டும் பழக்கம் இன்னும் போகவில்லை.

அச்சு வடிவம் இல்லாத காலத்தில் ஒரு படைப்பை நினைவில்தான் இருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஞாபகத்திலிருந்து சொல்லி வாய்மொழியாகத்தான் அது பரவ வேண்டியிருந்தது. அதற்குத் தோதாக எதுகையும் மோனையும் ஓசை நயங்களுடன் கூடிய சுருக்கமான வார்த்தைகள் 'ரூம் போட்டு யோசித்து' கருத்துக்களும் கற்பனைகளும் அதில் திணிக்கவோ அமரவோ வைக்கப்பட்டன.

அச்சுவடிவம் பரவலாக புழங்கின பிறகு, சுருக்க வடிவம் தேவையில்லாத உரைநடை புழக்கத்திற்கு வந்தே பல வருடங்கள் கடந்து விட்டன. கவிதையை ரசிப்பதென்பது அதை மனப்பாடமாக சொல்ல முடிவதே என்னும் சிலரின் (மூட) நம்பிக்கை சரியா என்பது விவாதத்திற்கு உரியது.
 
 ***  இன்றைய புலம்பல்: :)

நேற்று ஒரு வேலையாக குடும்பத்துடன் மைலாப்பூர் சென்றிருந்தோம். திரும்பும் வழியில் மனைவி சாய்பாபா கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நச்சரித்தார். அவர் சாய்பாபாவின் மித பக்தை. அங்கு தரப்படும் பிரசாதங்கள் சுவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்ததால் நானும் ஒப்புக் கொண்டேன். பெரும்பாலும் கீழ்/உயர் நடுத்தர குடும்பங்கள், நபர்கள். பக்தர்கள்.

எனக்கு வழிபடும் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாததால், குடும்பத்தினரை உள்ளே அனுப்பி விட்டு நுழைவு வாயிலுக்கு முன்னதாக பக்தர்கள் அமரும் பகுதியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அமைதியான அந்த சூழலே சற்று மனதைக் கவர்ந்தது. இந்துக் கோயில்களில் நான் வெறுக்கும் விஷயங்களில் பிரதானமானது அதன் சப்தம். சிறுமணியொலியாக ஒலித்துக் கொண்டிருந்த பாரம்பரியம், இயந்திரங்களுக்கு மாறி தணார் தணார் என்று ஒலிக்க ஆரம்பித்து விட்ட பெரும்பாலான கோயில்களில் காற்று வரும் வசதியின்றி, கூட்டத்தின் வியர்வை கசகசப்பும், வம்புப் பேச்சுகளும், குழந்தைகளின் அழுகைகளும், உரத்த உரையாடல்களும், குருக்களின் அலட்டல்களும் விரட்டல்களும் என எரிச்சலாக இருக்கும். நல்ல வேளையாக இங்கு அப்படியில்லை. (வியாழக்கிழமையன்று அப்படி இருக்குமோ என்னமோ. செவ்வாய் என்றால் அந்தோணியார், வெள்ளி என்றால் காளிகாம்பாள்... என்று ஒரு நாளை சரியாக குறித்துக் கொண்டு மொத்த ஜனமும் அன்று இடித்து நெரித்து ஆன்மீகத்தை வளர்ப்பதில் நம்மவர்களுக்கு அத்தனை ஈடுபாடு).

வெண்பளிங்கில் அமர்ந்திருந்த பெரிய அளவு சாய்பாபா சிலையை தரிசிக்க இரண்டு U அருகருகே வைத்தாற் போன்ற வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓர் உயர்நடுத்தர குடும்பம் வரிசையில் திரும்பும் சமயத்தில் சடக்கென்று எதிர்வரிசையின் இடைவெளியின் உள்ளே புகுந்தது. பின்னர் அவர்களின் உறவினர்களை அழைக்க, அவர்களும் குறுக்கே இருந்த சங்கிலியை உயர்த்திக் கொண்டு அவர்களுடன் இணைந்தனர். சபரிமலை, திருப்பதி என்று...இது போல் பல இடங்களில் எரிச்சலுடன் இதைக் கவனித்திருக்கிறேன்.

திரையரங்கில் அனுமதிச் சீட்டைப் பெற முண்டியடித்துக் கொண்டு வரிசையை மீறுவதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. நாமே கடவுள், வழிபாடு, ஜேஜா கண்ணைக் குத்திடும் என்றெல்லாம் நம்பிக் கொண்டு ஒரு வளாகத்திற்குள் நுழைகிறோம். அங்கு கூட குறைந்தபட்சம் நம்முடைய அயோக்கியத்தனங்களை, கீழ்மைகளை கைவிட முடியவில்லையெனில் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? மேற்குறிப்பிட்ட வரிசையின் பின்னால் கைக்குழந்தைகளுடன், பல சிறு குழந்தைகளும் வரிசையில் வந்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு சிலர் புகுவதால் அவர்கள் இன்னும் சில அதிக நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த சிறு நியாய உணர்வு கூடவா வரிசையில் புகுபவர்களுக்குத் தோன்றாது.... என்னமோ கடவுளின் அருள் ஒரு குழாயில் வடிந்து கொண்டிருப்பது போலவும், இவர்கள் போவதற்குள் அது காலியாகி விடப் போவது போலவுமான அலைபாய்தல் ஏன்?

பல வருடங்களுக்கு முன்பான அனுபவம். திருப்பதியில், விலங்குகள் போல் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டு மனிதர்கள், இன்னொரு கூண்டிற்கு மாற வேண்டிய தருணத்தில் அடித்து பிடித்துக் கொண்டு ஓடினார்கள். முதியவர்கள் உட்பட சிலர் கீழேயும் விழுந்தார்கள். முதன்முறையாக அப்போதுதான் நம்முடைய வழிபாட்டு சடங்குகளின் அபத்தம் குறித்தான கேள்வி முதன்முறையாக என்னுள் புகுந்தது.

இந்த எரிச்சலை சற்று தணித்தது அங்கு தரப்பட்ட பிரசாதம். சுடச்சுட கணிசமான அளவு வெண்பொங்கல். எனக்காக மகள் சென்று வாங்கி வந்தாள். அபாரம். கூட கொஞ்சம் தேங்காய் சட்டினி இருந்திருந்தால் ரகளையாக இருந்திருக்கும். இது போல் ரவா கேசரி, சாம்பார் சாதம் என்று வேளா வேளைக்கு பலதும் தருகிறார்களாம். இனி மயிலை பக்கம் செல்லும் போதெல்லாம் கோயிலுக்குச் செல்வதை துணைவியார் மறந்தால் கூட நானே ஞாபகப்படுத்துவேன்.

suresh kannan

Wednesday, April 06, 2011

விதிகளை மீறும் விளையாட்டு


 (டிஸ்கி 1: இணைய விலகல் அறிவிப்பு buzz-ல்  வெளியிடப்பட்டவுடன் அதற்கு செய்யப்பட்ட ஒர் எதிர்வினை என்னை மிகவும் மன வருத்தமடையச் செய்தது. அதைக் குறித்து இறுதியில் காண்போம்).

(டிஸ்கி 2: இணைய விலகல் தொடர்பாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த பதிவு தொடர்பான விளக்கப்பதிவு இது. இதன் வளவளா வரலாற்றுப் பின்னணிகளைத் தாண்ட விரும்புபவர்களும் நேராக இறுதிப் பகுதிக்குச் சென்று விடலாம்).


நண்பர்களுக்கு

முன்னர் மடற்குழுமங்களிலும் பின்பு 2004 முதல் வலைப்பதிவிலும் இயங்கிக் கொண்டிருந்தாலும் 2006 ஏப்ரலில்தான் முதன்முதலில் அந்த நாசகார எண்ணம் தோன்றியது. ஏப்ரல் 1-க்காக நண்பர்களை சற்று ஏமாற்றிப் பார்த்தாலென்ன?

பொதுவாக எனக்கு  இவ்வகையான ஆபத்தில்லாத சிறுகுறும்புகளை அவ்வப்போது செய்யப்பிடிக்கும். சில நண்பர்களுக்கு என் எழுத்தை முன்னிட்டு எப்படியோ என் மீது 'தீவிரவாதி' எண்ணம் தோன்றியிருக்கிறது. 15 தினங்களுக்கு ஒருமுறைதான் அரைசென்டி மீட்டர் சிரிப்பவன் என்று நினைத்துக் கொண்டிரு்க்கிறார்கள். ஒரு மனிதனின் அகச்சித்திரத்தைப் பற்றி (ஆரம்பிச்சிட்டான்யா) அவனே முழுமையாக அறிவானா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது அதை மற்றவர் அறிந்து கொள்ள இயல்வது அதில் சில துளிகளாத்தான் இருக்கும். ஓர் இலக்கியக் கூட்டத்தில் கவனித்தேன். இரண்டு சமகால பெரிய எழுத்தாளர்கள் அருகருகே அமர்ந்திருந்தும் ஒருவரையொருவரை பார்த்து புன்னகை கூட செய்யவில்லை.  'உர்'ரென்று அமர்ந்திருந்த அந்த இருவரும் கூட்டம் முடிவதற்குள் 'ஏன்யா, எனக்கு வெச்சிருந்த தண்ணி பாட்டிலை எடுத்தே' என்று மோதிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்குமளவிற்கு இருந்தது அவர்களின் உடல்மொழி. இவர்களுக்கு சிரிக்கக் கூட தெரியுமா என்று சந்தேகமாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு குழுமத்தின் மூலம் அவர்களுக்குள் பொதிந்திருந்த அபாரமான நகைச்சுவையுணர்வையும் அற்புதமான  நட்பையும் அறிந்து கொள்ள முடிந்தது. பின்னர் அந்த நகைச்சுவையில் ஒன்று பெரிய சர்ச்சையாகியது வரலாற்றின் காவிய சோகங்களில் ஒன்று. ஒருவரை சில சதவீதங்களேனும் புரிந்து கொள்ள முடிவது அத்தனை எளிதல்ல என்று அப்போது தோன்றியது.

என்னுள் எஞ்சியிருக்கும் குழந்தைமையை நான் எப்போதும் இழக்க விரும்பியதேயில்லை. என் குழந்தைகளிடம் குழந்தையாக இணைந்து குறும்புத்தனமாக விளையாட்டுவதில் அலாதியான இன்பமுண்டு. இதை முன்னிட்டு எழும் மற்றவர்களின் விநோதமான பார்வைகளை நான் பொருட்படுத்துவதில்லை. இவை பல சமயங்களில் இன்பத்தையளித்தாலும் சமயங்களில் வினையாகி விடுவதும் உண்டு.

ஒரே ஓர் உதாரணம் சொல்கிறேனே. அன்று இரவு அசைவ உணவு சமைக்க இருப்பதாக மதியம் தொலைபேசியில் சொல்லியிருந்தார் மனைவி. என்ன மெனு என்பதையெல்லாம் சொல்லி எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தார்.  நல்ல பசியிருந்தாலும் அன்று வீட்டிற்குக் கிளம்ப நேரமாகி விட்டது. வீட்டை அடைய பத்து நிமிடமிருக்கும் போதுதான் அந்த 'சுயசூன்ய' யோசனை குறுக்கிட்டது. மொபைலில் வீட்டை அழைத்து 'திடீரென்று தெரிவிக்கப்பட்ட நண்பனின் பிறந்த நாள் ஒனறில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் வருவதற்கு தாமதமாகும் என்றும், இரவு உணவு தேவையில்லை என்றும்'  போலித் தயக்கத்துடன் கெத்தான குரலில் சொல்லி முடித்தேன். 'காச் மூச்' செனறு எதிர்முனையிலிருந்து வசவொலி. இதைத்தானே எதிர்பார்த்தோம்?

ஏழெட்டு நிமிடங்களுக்குள் வீட்டை அடைந்து 'டொட்டடொய்ங்க்' என்ற ஒலியுடன் நுழைந்து சொன்ன வசவையெல்லாம் நினைவுப்படுத்தி அவரை அசடு வழியச் செய்யும் திட்டம். எதிர்பாராதவிதமாக டிராபிக்கினால் வீட்டை அடைய சில நிமிடங்கள் அதிகமாகி விட்டது. உறுப்பினர்கள் உறங்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிக் கொண்டிருக்க, சமையலறையில் காலி பாத்திரங்கள் என்னை வரவேற்றன. 'உணவு வேண்டாம்' என்கிற செய்தி ஏற்படுத்தின வெறுப்பில் அத்தனையையும் வாட்ச்மேனிடம் அத்தனை சீக்கிரம் தந்து விட்டிருக்கிறார் மகராசி. 'ஒவ்வொரு அரிசிப் பருக்கையிலும் அதை சாப்பிடவுள்ளவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்' என்கிற பொன்மொழியின் மீது அழுததமாக நம்பிக்கை ஏற்பட்டது அன்றுதான். வாட்ச்மேன் அவர்கள் செட்டிநாடு சிக்கன் கிரேவியையும் நண்டுப் பொரியலையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, பிரெட் ஜாமுடன் தலைவிதியையும்  தடவி வெறுப்புடன் சாப்பிட்டேன்.

2006- ஏப்ரலில் இருந்து டிராக் மாறி விட்டேன்.

நண்பர்களை ஏமாற்றுவதற்காக என்னையும் அறியாமல் ஒரு கொடூரமான திட்டம் உள்ளே எழுந்தது. ஒரு தொலைக்காட்சி தொடரில் நான் நடிக்கவிருப்பதாகவும் மறுநாள் இரவு அதைப் பார்க்கலாம் என்பதாக அறிவித்தேன்.  என் எதிரிக்கும் தரக்கூடாத தண்டனைதான். வழக்கத்திற்கு மாறாக பல நண்பர்கள் அன்று தொடரை பார்த்து விட்டு மறுநாள் கடுப்புடன் தொலைபேசினார்கள். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுவிட்டேன்.

(இந்த அறிவிப்பில் விளையாட்டுத்தனமாக எழு்ததாளர் பாஸ்கர் சக்தியின் பெயரை இணைத்தது மிகப் பெரிய தவறாகப் போய் விட்டது. பின்னூட்டத்தில் அவரே வந்து கோபித்துக் கொண்டார். அங்கேயே நான் அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் 'பிடித்த எழுத்தாளர் ஒருவரை புண்படுத்தி விட்டோமே' என்று இது பெரிய குற்றவுணர்வாகவே என்னுள் அமிழ்ந்து கிடந்தது. அவரை நேரில் சந்திக்கும் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். புத்தகக் காட்சியில் சில முறை அவரை பார்க்க நேர்ந்தாலும் என்ன தயக்கத்தினாலோ சந்திப்பதை தவிர்த்து விட்டேன். பிறகு டோண்டு அவர்களின் பதிவின் மூலம் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அறிந்தேன். சமீபத்திய புத்தகக் காட்சியில் அந்த பிரியமான மனிதரைச்  சந்தித்தேன். இணையம் அப்போது அவருக்கு புதிது என்பதால் 'என்னவோ ஏதோ' என்று கருதி விட்டதாகவும் எனவேதான் அவ்வாறு கடுமையாக பின்னூட்டமிட்டதாகவும் இப்போது யோசித்துப் பார்க்கையில் அது சங்கடத்தை அளிப்பதாகவும் என்னை ஆற்றுப்படுத்தினார்).

()
 
இப்போது 2011- ஏப்ரலில் மறுபடியும் அதே போன்ற நாசகார எண்ணம். 

'இணையத்திலிருந்து விலகுகிறேன்' என்றொரு அரதப்பழசான மொக்கை ஐடியாவை பஸ்ஸில் மெலிதாக நூல் விட்டு பார்த்தேன். ஆனால் அது சிறிது எடுபடும் என்று தோன்றியது. ஏனெனில் அதற்கு முன்புதான் மிக தற்செயலாக அதற்குத் தோதானதொரு பதிவை buzz-ல் எழுதியிருந்தேன். இணையத்தில் வெளிப்படும் வன்மம், காழ்ப்பு மற்றும் ஆபாசமான மொழியில் வெளிப்படும் உரையாடல் குறித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கும் அது குறித்து பகிர உத்தேசம்.  எந்தவொரு உருப்படியான விவாதத்தையும உரையாடலையும் கைப்பற்றி அதை பாழ்படுத்துவது, உரையாடல் பொதுவானதொன்றைப் பற்றி இருந்தாலும் அதை தனிநபர் அவதூறுகளை நோக்கி இழுத்துச் செல்வது, மறைமுகமாகவும் சமயங்களில் நேரடியான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது என்று இணையத்தில் சிலர் செயல்படுகிறார்கள். எண்ணிக்கையில் இவர்கள் சொற்பமாக இருந்தாலும்  பொதுவெளியில் ஒட்டுமொத்த இணையத்தின் முகமே கோரமாகவும் ஆபாசமாகவும் தெரிவதற்கு இவர்களே காரணம்.

இதில் என்னை ஆச்சரியப்படுத்தும், எரிச்சலூட்டும் விஷயம் என்னவெனில், உள்ளுர் பிரச்சினையிலிருந்து சர்வதேச பிரச்சினை வரை அனைத்தையும் 'தார்மீக அறத்துடனும் ஆவேசத்துடனும்' அலசும் பதிவர்களும் டிவிட்டர்களும், இந்த ஆபாச வியாதிகளை கண்டும் காணாமல் போவதுதான். 'நமக்கேன் வம்பு' என்று ஒரு மெலிதான எதிர்ப்பை கூட பதிவு செய்யாமல் நழுவுகிறார்கள். உருப்படியாக எழுதும், உரையாட விரும்புபவர்கள் கூட இந்த ஆபாச வியாதிகளினால் தங்களின் செயற்பாட்டை சுருக்கிக் கொள்கிறார்கள் அல்லது காணாமற் போகிறார்கள்.

இணையச் செயற்பாட்டை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புவர்கள் இவர்களை அடையாளங்கண்டு முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும், தேவையெனில் இவர்களின் வெற்றுச் சவடால்களுக்கு அஞ்சாமல் தம்முடைய எதிர்ப்பை நாகரிகமாக முன்வைக்க வேண்டும் என்பதையும் அந்த buzz-ல் தெரிவித்திருந்தேன். இதற்குப் பொருள், ஆபாச மொழிகளிலிருந்து விலக்கி என்னை 'நாகரிகமானவனாக' முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியல்ல. வடசென்னையில் பிறந்து வளர்ந்த நான் முழுக்க புழங்குவதே இதையும் விட மோசமான ஆபாச மொழிகளின் இடையில்தான். (ஆனால் அவர்கள் பெரும்பாலும் கல்வியறிவும் நுண்ணுர்வும் இல்லாதவர்கள் என்பதால் பரிதாபத்துக்குரியவர்கள்.) அந்தப் பாண்டியத்துடன் துணை கொண்டு மேற்குறிப்பிட்ட ஆபாசவியாதிகளுடன் சரிக்குச் சரியாக மல்லுக்கட்டி சாக்கடையில் சஙகமமாக முடியும். ஆனால் அது இந்த ஆபாசக் கலாசாரத்திற்கு துணை போவதாகவே அமையும்.

மேலும் சமயங்களில் ஆபாச மொழி எனக் கருதப்படுபனவற்றை அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக அல்லாமல் ஒரு வலிமையான ஆயுதமாகக் கூட பயன்படுத்த முடியும். சமீபத்தில் சென்னை சங்கமம் சார்பில் நடைபெற்ற திரைப்பட கருத்தரங்கில் பேசிய எடிட்டர் லெனின் அரசின் சில அபத்தமான விதிகளை கசப்புடன் பேசிக் கொண்டிருந்தவர், அதன் தொடர்ச்சியாக ரெளத்திரத்துடன்  'தூ'.... என்று சொல்லிச் சென்றார். அவர் பேசியிருந்ததின் தொடர்ச்சியோடு யோசிக்கும போது அது மிக இயல்பாகவும் கம்பீரமான வசவாகவும் இருந்தது. (நான் கடவுள் திரைப்படத்தில் விக்ரமாதித்யன் பேசும் வசனம் போல).

மறுபடியும் சற்று டிராக் மாறியதற்கு மன்னிக்கவும்.

இந்த சர்ச்சை தொடர்பாக  எழுதின பஸ்ஸிற்கு பதிவிற்கு அடுத்து 'இணைய விலகல்' அறிவிப்பை செய்யும் யோசனை தற்செயலாக அமைந்ததால் அது பொருத்தமாக இருக்கும் என்று யோசனை செய்தேன். ஆனால் முதலில்  சில நண்பர்கள்  வருத்தம் தெரிவித்தாலும் சில எமகாதக நண்பாகள் இந்த விளையாட்டை எளிதில் கண்டுபிடித்து விட்டனர். எனவே இதை சற்று தீவிரப்படுத்தி வலைப்பதிவிலும் அறிவிக்கலாம் என்று தோன்றியது.

எல்லா விளையாட்டிற்கும் விதிகள் உண்டு. கண்ணாமூச்சி விளையாடுகிறவன் கூட கண்டுபிடிக்கப்பட்டவுடன் தோல்வியை ஒப்புக் கொள்வதே நியாயம். பஸ்ஸில் இந்த முயற்சி தோல்வியடைந்தவுடனே நான் இதை நிறுத்தியிருக்க வேண்டும். விதிகளை மீறுவதுதான் இயல்பிலேயே ஊறிப்போய் விட்டதே. அந்த தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அதையே இன்னும் தீவிரமான பாவனையுடன் வலைப்பதிவில் இட்டேன்.

அதுவரை இது விளையாட்டு என்று யூகித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட பல நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தார்கள். தனிமடல் அனுப்பினார்கள். பின்னூட்டங்களில் தங்களின் அன்பையும் ஆதரவையும தெரிவித்தார்கள். நெகிழ்ந்து போனேன். உண்மையில் இம்மாதிரியான விலகல் முடிவை சிந்திக்கும் ஒரு சூழல சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. அப்போது ஏறக்குறைய இதே நண்பர்கள் ஆதரவாகவும் அக்கறையாகவும் என் பக்கத்தில் நின்றார்கள். இம்மாதிரியான விலகல்கள் ஆபாசவியாதிகளை ஊக்கப்படுத்துமே ஒழிய பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தாது என்பதை உணரச் செய்தார்கள். அவர்களை விளையாட்டு என்ற பெயரில் ஏமாற்றுகிறோமே என்று குற்றவுணர்வே ஏற்பட்டு விட்டது.

ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் கூடிய நன்றியும், விளையாட்டுத்தனமாக ஏமாற்றியதற்காக மன்னிப்பும். விலகல் அறிவிப்பைக் கண்டவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களுக்கும் நன்றி, தங்களின் அற்பத்தனங்களை தாங்களே வெளிப்படுத்திக் கொண்டு அதன் மூலம் தங்களை அடையாளங் காட்டிக் கொண்டமையால்.

இந்தப் பதிவின் மூலம் சுருக்கமாகச் சொல்ல வருவது என்னவென்றால் இணையத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது ஏப்ரல் 1-க்கான விளையாட்டே தவிர உண்மையில்லை.

இனி இந்தத் தளத்தில் இப்படியான விளையாட்டுக்களை வருங்காலத்தில் நிகழ்த்தும் எண்ணமோ திட்டமோ எதுவுமில்லை.

(இப்படி சீரியஸா சொன்னாலும் நீங்க நம்பவா போறீங்க)

டிஸ்கி 1-க்கான விளக்கம்:

சென்ஷி என்றொரு பதிவர். இலக்கிய ஆர்வலர். குட்டி உவேசா போல் சிறந்த சிறுகதைளாக கருதப்படுபவற்றை தன் முய்றசியிலும் நண்பர்களின் மூலமாகவும் தேடித் தேடிப் பெற்று மெனக்கெட்டு தட்டச்சி இணையத்தில் பதிவு செய்பவர். பஸ்ஸில் என்னிடம் தொடர்ந்து உரையாடுபவர். விலகுவதாக அறிவித்ததும், என்ன செய்திருக்க வேண்டும். ஒருவேளை இவன் உண்மையாகவே விலகப் போகிறானோ என்கிற benefit of doubt-யாவது அளித்து ஆறுதலாக ஏதாவது சொல்லியிருக்க வேண்டுமா, இல்லையா?.

எக்பர்ட் சச்சிதானந்தத்தின் 'நுகம்' என்னும் சிறுகதையை இவரின் சேகரிப்பிற்காக ஸ்கேன் செய்து அனுப்புவதாகச் சொல்லியிருந்தேன். விலகும் சமயத்தில் ஒரு பாவனைக்காவது ஆறுதலாக ஏதாவது சொல்வதை விட்டு விட்டு 'அந்தச் சிறுகதை இன்னும் வரவில்லை' என்று கேட்டு விட்டார். இந்த ஏப்ரல் 1 விளையாட்டு நிகழ்வில் என் மனதை அதிகம் பாதிப்படையச் செய்தது சென்ஷியின் மறுமொழிதான். சென்ஷி, உங்களின் இலக்கிய ஆர்வத்திற்கு ஓர் எல்லையே இல்லையா? :)))
 
suresh kannan

Saturday, October 30, 2010

குறுந்தகடுகளுடன் ஒரு பயணம்

சும்மா ஜாலியாய் ஒரு நாஸ்டால்ஜியா மொக்கை


"சார் டிவிடி ஏதாச்சும் பாக்கறீங்களா. பிஎஃப் படம்லாம் இருக்கு சார். மலையாளம், இங்கிலீஷ்னு பக்கா பிரிண்ட். புதுப்படங்கள்லாம் கூட இருக்கு. சரியா இல்லைன்னா வந்து மாத்திக்கலாம்.  வாங்க சார்"

சென்னை பாரிஸ்கார்னர் பக்கத்தில் பர்மா பஜார் ஓரமாக நீங்கள் நடக்கும் போது யாராவது வந்து இப்படி உங்கள் காதைக் கடித்து ரகசியம் பேசினால் உடனே சரேலென்று அவரிடமிருந்து விலகி விடுங்கள். இ.வாக்களுக்காக வலை விரித்து காத்திருக்கும் புரோக்கர்கள் அவர்கள். மாறாக அதீத கற்பனையுடன் அவர் பின்னர் சென்றீர்களெனில் குருட்டுத்தனமாக தடவித் தடவி மேலாடையை கழற்றுவதற்கே ஒரு மணிநேரம் எடுத்துக் கொள்ளும் தேசலான மங்கல் பிரிண்ட்டை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். (இதுலயும் வெள்ளைக்காரன்ங்கதாம்ப்பா பெஸ்ட் என்கிறார் நண்பர்). வெறுத்துப் போய் அதற்குப் பதிலாக 'நாகூர் அனீபா பாடல்களை' மாற்றிக் கொள்ளும் நல்ல நோக்குடன் மறுபடியும் சென்றீர்கள் என்றால் நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல உங்களை புறக்கணித்து விடுவார்கள்.

நிற்க. இந்தக் கட்டுரை பர்மாபஜாரைப் பற்றின அனுபவக்கட்டுரை மாத்திரமல்ல. குறுந்தகடு என்னும் சமாச்சாரம் எப்படி என் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தது என்பதைப் பற்றியதான குறுங் கட்டுரை. குறுந்தகட்டுக் கட்டுரை என்றும் சொல்லலாம்.

()

சைக்கிளில் ரிப்ளெக்டராகவும் குழந்தைகள் உருட்டி விளையாடும் பொருளாகவும்  குறுந்தகடுகள் இன்று தன் கவர்ச்சியை பெருமளவு இழந்து விட்டாலும் நான் முதன் முதலில் எப்போது குறுந்தகட்டை பார்த்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

A, B தவிர C,D சைடெல்லாம் கூட இருக்கு.. உனக்குத் தெரியாதா?.. என்று யாராவது கேட்டிருந்தால் கூட நம்பியிருக்கக்கூடிய அளவிற்கு ஆடியோ கேசட்டே சரியாக பழகியிருக்காத நிலை. வாயில் கட்டை விரலைப் போட்டு சப்பிக் கொண்டிருக்கும் மழலை சின்னமிட்ட 'மர்பி' ரேடியோதான் இசைக்கான அப்போதைய ஒரே வழி. (இப்போது யாராவது ஒலிச்சித்திரமெல்லாம் கேட்கிறீர்களா?). என் அண்ணன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவனுடைய எல்லைப்பகுதியில் தீவிரமான ஆராய்ச்சி கொண்டிருந்த போது ஒளித்து வைத்திருந்த ஆடியோ சிடிக்கள் கண்ணில் பட்டன. அப்போது அது ஆடியோ சிடி என்பது கூட எனக்குத் தெரியாது. டேட்டா பதியப்பட்டிருக்கும் பளபளவென்ற பகுதிதான் என்னை அதிகம் கவர்ந்தது. நகத்தால் சுரண்டிப் பார்த்தேன். (இப்போது குறுந்தகட்டை யாராவது அந்தப் பகுதியில் விரல்படுகிறாற் போல் எடுத்தால் கூட எரிச்சலும் இரும்பு சிலேட்டில் ஆணியாற் கிறுக்கினாற் போல் கூச்சமும் கொள்வேன்.) கண்டுபிடித்தால் கொலைவெறியுடன் தாக்குவான் என்பது நினைவுக்கு வர இருந்தது மாதிரியே வைத்து விட்டேன்.

பின்னர் நான் சிறு வேலைகளுக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்தாலும் என்னால் அதிகபட்சமாக டபுள்டெக் டேப்ரிகார்டர்தான் வாங்க முடிந்தது. 'அடுத்து நீங்கள் கேட்கவிருக்கும் பாடல்... என்று என் குரலைப் பதிவு செய்து நானே கேட்பதில்  ஒர் அற்ப திருப்தி.

திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் கூட வாடகை வீடியோ கேசட்டுகள்தான். (இப்போது கூட வெகுஜனம்  சிடியை கேசட்டு என்றே குறிப்பிடுவது விநோதமாக இருக்கிறது). 'கண்ணழகி' நடிகையின் கேசட்டை ஆவலோடு எடுத்து வந்தால், யார் ஆண், பெண், எவர் எங்கே இருக்கிறார்கள், செய்கிறார்கள் என்றே தெரியாத தேசலான மழைபெய்யும் கேசட்டை வெறுப்புடன் திருப்பிக் கொடுத்தேன். நமட்டுச் சிரிப்புடன் அதை ஒப்புக் கொண்ட கடைக்காரர், "சரி வேறு எந்த படம் வேண்டும்?" என்றார் ஜென்டில்மென்னாய்.   இந்த சங்காத்தமே வேண்டாமென்று முடிவு செய்து "மோட்டார் சுந்தரம் பிள்ளை" இருக்கா? என்றேன் அதிரடியாய். டாஸ்மாக்கில் விண்டோஸ் சாப்ட்வேரை கேட்டவனைப் போல எல்லோருமே சற்று திடுக்கிட்டு என்னைப் பார்த்தனர். காலமே சற்று உறைந்தது.

சிவாஜி கணேசன் என்றாலே ஓவர் ஆக்டிங் என்று எப்பவும் நக்கலடிப்பவர்களுக்கு (அதில் உண்மையில்லாமலி்ல்லை) ஒன்று சொல்வேன். இந்தப்படத்தைப் பாருங்கள். சிவாஜி 'அண்டர்பிளே' செய்து நடித்த படங்களில் ஒன்று. எப்பவோ தொலைக்காட்சியில் பார்த்திலிருந்தே அதை மீண்டும் பார்க்க வேண்டும் போலிருந்தது. என்றாலும் ஒரு பத்தொன்பது வயது இளைஞன் அதைப் பொதுவில் வெளிப்படுத்தியதுதான் மக்களுக்கு சகிக்க முடியாமலிருந்தது.

பின்பு வீடியோ கேசட் கடைக்காரரே சற்று டெவலப்பாகி, சிடி மற்றும்  பிளேயரையும் வாடகைக்கு விடுமளவிற்கு உயர்ந்தார். உள்ளங்கை அளவேயிருந்த போர்ட்டபிள் சிடி பிளேயர். ஹீரோக்கள் வெடிகுண்டை செயலிழக்க வியர்வையுடனும் பதட்டமான பிஜிஎம்முடனும் போராடுவதைப் போல மஞ்சள், சிகப்பு ஒயர்களை சரியாக இணைத்து ஆடியோவும் வீடியோவும் வரவழைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.  அப்போதுதான் விசிடி எனும் சமாச்சாரத்தை முதன் முதலில் பார்த்தது. ஒரு தமிழ் திரைப்படம் நீளத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று தகடுகளில் அடங்கியிருக்கும்.

()

என்னதான் வாடகைக்கே எடுத்துக் கொண்டிருந்தாலும் சொந்தமாய் சிடி இருப்பது பெருமை என்கிற லட்சியம் நாளுக்கு நாள் பெருக, இருக்கும் கொடுமையில் பிளேயரையாவது அப்புறம் வாங்கிக் கொள்ளலாம், முதலில் சிடிக்களை வாங்கி வைத்துக் கொள்வோம் என்று அதிபுத்திசாலித்தனமாக யோசித்து விசாரித்ததில் சிடிக்கள் பர்மா பஜார் எனும் இடத்தில் சல்லிசாக கிடைக்கும் என்று தெரியவந்தது. பர்மாவிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு உதவ, பீச் ஸ்டேஷன் அருகே நிலம் ஒதுக்கி்த் தந்தது அப்போதைய அரசு. தங்களுடன் கொண்டு வந்திருந்த வெளிநாட்டுப் பொருட்களை விற்கத் துவங்கி, தமிழர்களின் வெளிநாட்டுப் பொருட்களின் மீதிருந்த அதீத மோகத்தால், இன்று பல நூறு கடைகள் பெருகி ஆறடிக்கு இரண்டடி சந்துக்கு பதினைந்தாயிரம் ரூ வாடகை என்கிற அளவில் வந்து நிற்கிறது. அதற்கே அரசியல் செல்வாககு இருந்தால்தான் முடியும்.

சரி. எஸ்.முத்தைய்யா போன்ற சென்னை வரலாற்று ஆர்வலர்களின், ஆய்வாளர்களின் ஏரியாவிற்குள் நாம் நுழைய வேண்டாம்.

பர்மா பஜார் என்றாலே 'ஆரண்ய காண்டம்' ராமாயண நூலை வாங்கப் போகிறவர்களுக்கு உபயோகப்படுத்தப்பட்ட காண்டத்தை' ஏமாற்றி விற்கும் மோசடிக்காரர்கள் புழங்கும் பிரதேசம்  என்று சிறுவயதிலிருந்தே எனக்குப் போதிக்கப்பட்டிருந்தபடியால், என் அலுவலகத்தின் அருகாமையிலே இருந்தும் கூட பல நாட்கள் அந்தப் பக்கத்தில் செல்லாமலேயே இருந்து விட்டேன்.

பணத்தை எண்ணிய களைப்பில் பில்கேட்ஸே சலித்துப் போய் விண்டோஸ் 98-ஐ கைகழுவி விட்டு அடுத்த வர்ஷனுக்கான பில்டப்பை தரும் சமயத்தில்தான் என் அலுவலகத்திற்கு கணினியே வந்தது. வின்ஆம்ப்பில் இருந்த இரண்டே இரண்டு சாம்பிள் பாடல்கள்தான். அப்போது இணையத்தில் தரவிறக்குவதைப் பற்றியெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. 'ஹலோ' என்று ஒரு வார்த்தை இ-மெயில் அனுப்பினாலே பில்லில் இரண்டு ரூ ஏறி விடும்.

mp3 என்கிற வார்த்தை அப்போது ஒரு வசீகரச் சொல்லாக எங்கும் உலவிக் கொண்டிருந்தது. கயவர்களின் பிரதேசத்திற்கு மிகுந்த தயக்கத்துடன் சென்று வேவு பார்த்தேன். ஒரு எம்பி3-ஐ எம்பி நிற்கிற உயரத்தின் விலையைச் சொன்னார்கள். எப்படியோ ஒரு சிடியை பேரம் பேசி வாங்கி வந்துவிட்டேன். இளையராஜாவின் ஹிட்ஸ். சோனி கம்பெனி சிடி மாதிரியே அச்சு அசலான நகல். (?!).

சிடியின் உள்ளே பதியப்பட்டு இருந்தது என்ன தெரியுமா?

(அடுத்த பகுதியில்)

suresh kannan

Monday, October 04, 2010

ஜெமோ மீதான ம.பு.வின் பகடி

உயிர்மை இதழைப் பிரிக்கும் போதெல்லாம் நான் பெரும்பாலும் உடனே வாசித்துவிடுவது மனுஷ்யபுத்திரனின் தலையங்கத்தை. நவீன தமிழிலக்கியத்தில் உரைநடையை சுவாரசியமாக கையாள்வதில் மபுவும் முக்கியமானவர் என்பது என் அவதானிப்பு. அவருடைய தலையங்கங்கள் விஜய்காந்த், பாகிஸ்தான் தீவிரவாதிகளை காலால் உதைக்கும் தீவிரத்தனத்துடனும் சிவாஜி கணேசன் நீண்ட வசனத்தை பேசும் நெகிழ்ச்சித்தனத்துடனும் இருக்குமென்றாலும் இறுக்கமான அவருடைய மொழிக்காகவே தலையங்கத்தை உடனே வாசித்துவிடுவேன்.

ஆனால் உயிர்மைஅக்டோபர் 2010 தலையங்கத்தோடு உள்பக்கங்களில் கூடவே இன்னும் அதிவேகமான துடிப்பான இன்னுமொரு விஜய்காந்த் காத்திருந்தார். வழக்கமான இறுக்கத்திற்கு மாறாக மபுவின் பகடியான மொழியை நான் முதன் முதலில் சந்தித்த அனுபவமிது. 'தேனீர் கோப்பையில் பெய்த மழை' எனும் அந்தக் கட்டுரையில் மபு வைத்திருக்கும் நுட்பமான கிண்டல்களும் விமர்சனங்களும் சட்டென்ற புன்னகையையும் சிரிப்பையும் ஏற்படுத்துபவை. குறிப்பாக ஜெயமோகன் குறித்த கிண்டல்கள் ஒருசில அதீதம் என்றாலும் பெருஞ்சிரிப்பை வரவழைப்பவை. ஜெமோ குறித்து தனது அடிப்பொடிகள் வாயிலாக மபு உயிரோசையில் வெளியிட்டு வந்த காழ்ப்புணர்ச்சியான கட்டுரைகளைத் தாண்டி வெளிப்படையாக நேரடியாக முன்வைக்கும் கிண்டல் இதுவே என நினைக்கிறேன். படைப்புகளைக் காட்டிலும் இம்மாதிரியான வம்புகளே அதிகம் முன்நிறுத்தப்படுகிறதென்றாலும் இலக்கியம் ஜவீத்திருக்க இவையும் மறைமுக காரணிகளே எனக் கருதுகிறேன்.

...கூட்டத்திற்கு முன்னதாகப் பல்வேறுவிதமான யூகங்களைக் கிளப்பும் பதிவுகளை அக்கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்டிருந்த ஜெயமோகன் தனது வலைப்பதிவில் எழுதி வந்தார். உயிர்மை கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கிறேன் என்று அவர் எழுதிய விளக்கம் மிகவும் சுவாரசியமானது. உலகெங்கும் உள்ள தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்ப்பை சமாதானப்படுத்தி 'கவலைப்படாதீர்கள்... இது ஷாஜியின் நட்புக்காக.. மனுஷ்யபு்த்திரனுக்கு இனி என் வாழ்க்கையில் இடமில்லை என்று வாக்குறுதி அளித்துக் கொண்டிருந்தார். (அருண்மொழி நங்கைக்கு அடுத்தபடியாக எனக்கும் ஜெயமோகனின் வாழ்க்கையில் இடமிருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது). ஜெயமோகனின் பார்வதிபுர இல்லத்தின் முன்பும் நாகர்கோவில் ஜங்ஷனிலும் ஜெயமோகன் உயிர்மை கூட்டத்திற்குப் போகக்கூடாது என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயமோகன் விமானம் மூலமாக சென்னை வரவேண்டியதாயிற்று....
மனுஷ்யபுத்திரனை புன்னகையுடன் கண்டிக்கிறேன். :)

suresh kannan

Sunday, June 07, 2009

கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..

நண்பர் ஒருவருக்காக சாலையில் ஐந்து நிமிடம் காத்திருந்தேன். அந்த ஐந்து நிமிடத்தை பொறுமையாக கடக்க என்னால் இயலவில்லை. முதல் நிமிடத்தில் இன்னொரு நண்பருக்கு தொலைபேசினேன். 'பிஸியாக இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன். மன்னிக்கவும்" என்று பதில் வந்தது. பிறகு மொபைலில் இருக்கிற தேவையில்லாத மெசேஸ்களை அழித்தேன். சாலையைப் பார்த்தேன். நண்பர் வருவதாய் காணோம். மூன்றாவது நிமிடத்திலேயே என் பொறுமை தொலைய ஆரம்பித்தது. தாமதிக்கிற நண்பர் மீது எரிச்சலாய் வந்தது. வீட்டிற்கு தொலைபேச முயன்று தொடர்பு கிடைக்காததால் எரிச்சல் இன்னும் கூடியது. சற்று நேரம் சாலையின் போக்குவரத்தை வேடிக்கை பார்த்தேன். திரும்பவும் நண்பர் வருகிறாரா என்று ஒரு தொலைநோக்கு பார்வை பார்த்தேன். வருவதாய் காணோம்.

எரிச்சலின் உச்சக்கட்டத்தில் நண்பருக்கே தொலைபேசி, "என்னங்க, எவ்ளோ நேரம்" என்றேன் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன். என் குரலில் தெரிந்த குரூரம் எனக்கே பீதியூட்டியது.

()

பிறகு சாவகாசமாக யோசித்துப் பார்த்துப் பேர்து ஏன் அவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. அலுவலகத்தில் கணினியில் வேலை முடிந்த பிறகும் தேவையேயில்லாமல் எதையோ நோண்டிக் கொண்டிருக்கிறேன். சற்று நேரம் இணையத் தொடர்பிலோ அல்லது மின்தொடர்பிலோ துண்டிப்பு ஏற்பட்டால் கை நடுக்கத்துடன் எப்போது அது சரியாகும் என்ற பதட்டம் ஏற்படுகிறது. தொலைக்காட்சி பார்க்கும் போது கூட ஒரு சானலில் சற்று நேரம் தொடர்ந்து தங்கவிடாமல் ரிமோட்டை மாற்றி மாற்றி அழுத்தத் தோன்றுகிறது. திரைப்பாடல்களின் ஒரு தொகுப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே மனம் சட்டென்று இன்னொரு தொகுப்பில் உள்ள பாடல் ஒன்றை கேட்டு தாவச் சொல்கிறது.

"சும்மா இரு" என்று தத்துவார்த்த ரீதியில் சொல்லப்படும் வார்த்தையைக் கடைப்பிடிப்பது என்பது கேட்ட கணத்தில் எளிதாக தோன்றினாலும் நடைமுறையில் அதை சாத்தியப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது புலனாகிறது.

(மீள்பதிவு. http://sureshkannan.posterous.com/-69-ல் பிரசுரமானது)

suresh kannan

Friday, June 05, 2009

நான்தான் 'தருமி' நாகேஷ்


'இருக்கறதுலேயே காமெடி பண்றதுதான் ரொம்பக் கஷ்டம்' என்று கமல்ஹாசன் முதற்கொண்டு பல நடிகர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் சொல்லி வருகிற விஷயத்தை நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் போதே உணர்ந்து கொண்டு விட்டேன். எப்படி? சொல்கிறேன்.

ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்று முடிவாகிவிட்ட பிறகு எங்கள் வகுப்பு டீச்சர் 'திருவிளையாடல்' திரைப்படத்தின் பகுதியை தேர்ந்தெடுத்தார்கள். தற்போது முப்பது அல்லது முப்பத்தைந்து வயதைக் கடந்திருக்கிறவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் எந்தவொரு கோயில்விழா என்றாலும் பெரும்பான்மையாக ஒளிபரப்படுவது 'திருவிளையாடல்' ஒலிச்சித்திரம். காட்சியின் ஒருபகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் கோடுகிழித்த அடையாளமாக டுடுடுய்ய்ய்ங்ங்ங் என்று வினோதமான சப்தத்துடன் ஒளிபரப்பாகும் அந்த வசனங்கள் நிறைய பேருக்கு நமீதா பாட்டுக்கு இடையில் எழுப்பி கேட்டாலும் ஒப்பிக்கிற அளவிற்கு மனப்பாடமாகவே ஆகிவிட்டிருக்கும். இதே போன்றதொரு இன்னொரு திரைப்படம் பாலாஜியின் 'விதி'. திருவிளையாடல் வசனங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கக்கூடியது சிவாஜி மற்றும் நாகேஷ் சம்பந்தப்பட்ட நகைச்சுவை. எவர்கிரீன் காமெடி அது. நாகேஷின் டைமிங் சென்ஸ்சிற்கு உச்சமாக இந்தக் காட்சிகளைச் சொல்லலாம்.

(சம்பந்தப்பட்ட திரைப்படக் காட்சிகளின் உருவாக்கத்தின் போது சிவாஜியின் நடிப்பை விட நாகேஷின் நடிப்பு பிரமாதமாய் அமைந்து போனதில் எரிச்சலைடந்த சிவாஜயின் அல்லக்கைகள் சிலர், சிவாஜியிடம் இதைப் பற்றி போட்டுக்கொடுத்து நாகேஷின் பகுதிகளை குறைக்கச் சொல்லி யோசனை சொல்ல, சிவாஜி அதை மறுத்து 'இப்படியே இருக்கட்டும். அவன் நல்லா பண்ணியிருக்கான்' என்றாராம். நாகேஷே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது இது.)

எங்களுடைய வகுப்பு சார்பாக ஆண்டுவிழாவில் இந்த நகைச்சுவைக் கோர்வையை நடித்துக் காட்டலாம் என்று டீச்சர் முடிவு செய்ததில் எனக்கு நாகேஷ் வேடம் கிடைத்தது. ஆச்சரியமில்லை. நன்றாக சீவின பென்சிலில் மெலிதாக போட்ட கோடு போல் இருந்தவனுக்கு 'இதுதான் பொருத்தமாக இருக்கும்' என்று டீச்சர் நினைத்திருக்கலாம். சிரிப்பும் கும்மாளமும் வெட்கமுமாக பிராக்டீஸ் நடந்தது. ஒரு காகிதத்தில் அந்த வசனங்களை எழுதி டீச்சர் கொடுத்துவிட்டாரே தவிர எப்படி அதை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. ஏற்கெனவே பிரபலமான வசனங்கள்தானே, பசங்களுக்கு தெரியாதா என்று அவர் நினைத்திருக்கலாம்.

அதுவரை உருப்போட்டிருந்ததையெல்லாம் வாந்தியெடுக்க வேண்டிய அந்த நாளும் வந்தது. 'நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி' என்று அறிவிப்பு வந்தவுடன் "ஏம்ப்பா பரிசுத் தொகை எவ்வளவுன்னு சொன்னே?" என்று நான் பதைபதைப்பாகவும் அவசரமாகவும் கேட்க வேண்டும். நான் ஏதோ "காப்பி போட்டாச்சா?" என்ற அன்றாட காரிய தொனியில் சாதாரணமாக கேட்க சபையில் யாருமே சிரிக்கவில்லை. என்னுடைய வகுப்புத் தோழர்கள் பிரத்யேகமாக சிரித்தது, என்னுடைய ஓணான் உடலைப்பார்த்தும் நான் கட்டியிருந்த வேட்டி எப்போது விழும் என்ற ஆவலிலும்தான் இருக்க வேண்டும். "முதல்ல இந்த பால்காரன் கணக்க தீர்க்கணும்" என்று நான் நாகேஷ் மாதிரியே சொன்ன போது மாத்திரம் கூட்டம் மெலிதாக சிரித்தது. சிறப்பாக (?!) நடித்ததற்காக சோப்பு டப்பா பரிசாக கிடைத்து. சிவனாக நடித்தவனுக்கு கொஞ்சம் பெரிய டப்பா.

நகைச்சுவையை அதனின் பிரத்யேக அம்சங்களோடு வழங்காவிட்டால் அது எடுபடாது என்று இதனால் புரிந்தது.

()

என்னுடைய பால்ய நண்பனொருவன் அவனுடைய கல்லூரி சார்பாக ஒரு நகைச்சுவை நாடகம் எழுதித்தரவேண்டுமென்று என்னிடம் கேட்டான். நான் அப்போது உலகத்தையே புரட்டிப் போடும் உத்தேசத்தில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதை பத்தாய் நூறாய் அவனிடம் மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டிருந்ததில் என்னை ஒரு எழுத்தாளன் என்றே அவன் நம்பி விட்டான். சென்னை வானொலியின் இரண்டாவது அலைவரிசையில் 'இளையபாரதம்' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாகவும் அதில் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படுவதாகவும் அந்த வகையில் நண்பன் படிக்கும் கல்லூரி தேர்வாகியிருப்பதாகவும் அவன் மூச்சு வாங்கச் சொல்ல, நான் என்ன எழுதுவது என்று மனதுக்குள் மூச்சு வாங்க ஆரம்பித்தேன். நகைச்சுவை நாடகம் எழுதுவது என்று முடிவாயிற்று. ஒரு போலி டாக்டர் கிளினிக் வைத்து ஏமாற்றுவதும் கடைசியில் பிடிபடுவதும் என்பதுதான் ஒன்லைனர். பத்திரிகையில் வந்த, சினிமாவில் பார்த்த, எங்கேயோ கேட்ட, கொஞ்சம் சொந்தமான... என்று எல்லா நகைச்சுவைத்துணுக்குகளையும் கலந்து கட்டி மிக்சியில் போட்டு அடித்து நாடகமாக அவனிடம் சமர்ப்பித்தேன்.

போலீஸ் வாக்கிடாக்கி மாதிரி கமறிக் கொண்டிருந்த அந்த ரேடியோவில் சென்னை இரண்டாவது அலைவரிசையை தேடிக் கண்டுபிடிக்கவே அரைமணி நேரமாயிற்று. 'கரகர' சத்தத்தின் இடையில் குத்துமதிப்பாக நாடகத்தை கேட்டு மகிழ்ந்தோம். (டாக்டர்: "இந்த ஞாபக மறதி நோய் எத்தனை வருஷமா இருக்கு?" நோயாளி: "ம்.... ஞாபகம் இல்லீங்களே..). ஆனால் நாடகத்தின் இறுதியில் அதை எழுதியவரின் பெயராக நண்பனின் பெயர் ஒலித்ததில் மிகவும் வெறுத்துப் போனேன். மாணவர்கள் அல்லாதவர்கள் எழுதினால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அப்படிச் செய்ததாக நண்பன் மன்னிப்பு கேட்டதில் அடுத்த ஆண்டு அவர்கள் கல்லூரியில் நடந்த கலைவிழாவிற்காக ஒரு நாடகம் எழுதித்தந்தேன். நியூமராலஜியில் அதீத (மூட) நம்பிக்கை கொண்ட ஒருவர் அதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார் என்பதான நாடகமது. நண்பன் விழாவிற்கு என்னையும் அழைத்திருந்தான். "பூச்சி மாதிரி இருக்கற... நீயா எழுதின. நல்லா இருந்ததுப்பா" என்றார்கள் அவனுடைய நண்பர்கள். இதற்காகவே பிரத்யேக ஒப்பனையெல்லாம் பூசி நடுத்தர வர்க்கத்து நடுத்தர வயது மனிதர்களாக மாறிப் போயிருந்தார்கள்.

.. அடுத்த நிகழ்ச்சி... வணிகவியல் மூன்றாமாண்டு மாணவர்கள் சார்பாக நாடகம்... என்று அறிவிக்கப்பட்டு எழுதியவரின் பெயராக என்னுடைய பெயர் ஒலிக்கப்பட்டது. அப்போதைய உணர்வை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. நான் தனியாக அமர்ந்து எதையோ யோசித்து எழுதி.. அதை சிலர் மனப்பாடம் செய்துபடித்து... மேடையேறப்போவதை சிலநூறு பேர் கவனிக்கப் போகிறார்கள் என்கிற உணர்வே எனக்கு மிகுந்த பரவசத்தைத் தந்தது. ஆனால் அந்தப் பரவசத்தை சிறிது நேரத்திலேயே காணாமற் ஆக்கினா¡ர்கள் நாடகத்தில் பங்கேற்றவர்கள். மூடநம்பிக்கைகளை கிண்டலடிக்கும் அந்த நகைச்சுவை நாடகத்தை கொஞ்சம் கூட டைமிங் இல்லாமல் ஆளாளுக்கு ஒரு திசையில் கொஞ்சம் சொந்த சரக்கையும் இணைத்து மாடுலேஷனே இல்லாமல் பேசியதில்... அது எடுபடவே இல்லை. அடுத்து வந்த ஒரு மாணவர் குழு எந்த வித ஒப்பனை பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக மேடையேறி... சொத்தை ஜோக்குகளை ஆனால் மிக டைமிங்குடன் பேசியதில் சபை ஆர்ப்பரித்தது.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில்...

பதிவின் முதல் வரியைப் படிக்கவும்.

suresh kannan

Friday, February 13, 2009

உபயோகமற்ற குறிப்புகள்

பொம்மலாட்டம் என்றொரு படம் பார்த்தேன். 'சிவப்பு ரோஜாக்கள்' என்கிற அற்புதமான psychological thriller தந்த பாரதிராஜாவின் படமா இது? படத்தின் இறுதிக்காட்சியில் பார்வையாளர்களுக்காக காத்திருந்த அந்த இத்தினியூண்டு சஸ்பென்ஸ¥க்காக இரண்டு மணி நேர இழுவையை பா.ரா. தந்திருப்பது அநியாயம். நானா படேகர் ஏதோ அதிசயம் புரிந்திருக்கிறார் என்று பாரதிராஜாவின் பேட்டிகளில் படித்திருந்ததை வைத்து ஆர்வத்தோடு பார்த்தால்... நானா, நடிப்பது நானா என்கிற மாதிரி மந்திரித்து விட்டவர் போல் உலவுகிறார். பாவம். அர்ஜூன். Intellectual Menopause என்றொரு வார்த்தையை எங்கேயோ படித்தேன். பாரதிராஜாக்களுக்கும் பாலச்சந்தர்களுக்குமாக கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தை போலிருக்கிறது.

*

ஜன.09 உயிர்எழுத்து இதழில் காலச்சுவடு கண்ணனின் பேட்டியை படித்தேன். ஏதோ 49வது வட்ட செயலாளர் அரசியல் கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்களை வரிசையாக திட்டுவதை கேட்பது போல் ஓர் உணர்வு. கண்ணனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இரண்டு பிரிவினர்தாம் இருக்கிறார்கள் போலிருக்கிறது. ஒரு பிரிவினர் காலச்சுவடிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள்.

*

தமிழ்நாட்டை முழுவதுமாக உருப்படியில்லாமல் ஆக்குவதற்கு சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியினர் தீர்மானமானதொரு ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. தான் தயாரிக்கும் குப்பைத் திரைப்படங்களை எல்லாம் காசாக்குவதற்காக நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் மேல் அவற்றின் காட்சித் துணுக்குகளை எறியும் சன், இப்போது முழு நேர நகைச்சுவை சானல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. டோரா புஜ்ஜியைக் கூட சற்று ஒத்தி வைத்து விட்டு குழந்தைகள் இதில் ஆழ்ந்திருக்கின்றன. சற்று நேரம் நான் பார்த்தவரை முழுக்க முழுக்க விவேக்கும் வடிவேலுவும் மாத்திரமே காட்சியளிக்கிறார்கள். போனால் போகிறதென்று கவுண்டமணியும். நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு போன்ற கருப்பு-வெள்ளைக் காலத்தினரும் நகைச்சுவை நடிகர்கள்தான் என்பதை இவர்களுக்கு யாராவது சொன்னால் தேவலை.

Photobucket

சிவமணியின் 'மகா லீலா' ஆல்பம் கேட்டேன். ஒவ்வொரு இசைத்துணுக்கும் ஒவ்வொரு அலைவரிசையில் வித்தியாசமாக இருக்கிறது. தன்னுடைய பிறந்த குப்பமான Basin Bridge-ஐ கூட மறக்காமல் அதற்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார். அதகளம். ரஹ்மானின் பல பாடல்களின் தாளஇசை பிரமாதமாக அமைந்ததற்கு சிவமணி பிரதான காரணியாய் அமைந்திருப்பார் என்பது இந்த தனி ஆல்பத்திலிருந்து உணர முடிகிறது. இதை வார்த்தைகளில் எழுதி நேரத்தில் வீணடித்துக் கொண்டிருப்பதை கேட்டு அனுபவிப்பது மேல்.

*

என்னைக் கவர்ந்த சமீபத்திய sms ஜோக்:

அமெரிக்க பேராசிரியரும் இந்திய பேராசிரியரும் தங்களுடைய மாணவர்களின் வீரம் குறித்து உரையாடிக் கொண்டிருந்த உச்சத்தில் மோதலாகி அமெரிக்க பேராசிரியர் தன்னுடைய மாணவர்கள் இருவரை அழைத்து சுறாக்கள் நீந்தும் கடலில் குதிக்கச் சொல்கிறார். இரண்டு மாணவர்களும் மறுபேச்சில்லாமல் 'டொடாய்ங் என்று குதித்துவிடுகிறார்கள். அ.பே. பெருமையாக பார்க்கிறார்.

இந்திய பேராசிரியரும் தன்னுடைய இரண்டு மாணவர்களை அழைத்து அதே போல் குதிக்கச் சொல்கிறார். இருவரும் கோரஸாக "முடியாது போடா" என்று சொல்லி விட்டு பின்னிணைப்பாக *(*&$#*(@|)*^ என்கின்றனர்.

இ.பே., அ.பே. வை நோக்கி "பார்த்தீர்களா, எங்களுடைய மாணவர்களின் வீரத்தை?"

*

ஜெயமோகனின் இணைய தளத்தில் ஒரு அன்பர் 'நான் கடவுள்' தொடர்பாக வலைப்பதிவர்கள் எழுதின பதிவுகளையெல்லாம் தொகுத்து ஜெ.மோ. முன் சமர்ப்பித்து விட்டு எழுதுகிறார்.

'நான் பத்தாண்டுகளாக சினிமாவில் வேலைபார்ப்பவன் என்பதனால் இந்த இணைய விமரிசனங்களில் பலர் சினிமாவை எடுப்பவரின் கோணத்தில் ஷாட், பிஜிஎம் , லைட்டிங் எல்லாம் தெரிந்ததுபோல பேசியிருப்பது அபத்தமாக இருக்கிறது என்று தோன்றியது. டிவிடி பார்த்து சினிமாவின் டெக்னிக் தெரிந்தது போல சொல்லிக்கொள்கிறார்கள். ரசிகர்கள் தங்களை ரசிகர்களாக மட்டுமே எண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.'


சம்பந்தப்பட்ட அன்பருக்கு நான் சொல்ல விரும்புவது: ஒரு காலத்தில் தமிழ்த் திரைப்படங்கள் ரசிகர்களால் எம்.ஜி.ஆர் படம், சிவாஜி படம்' என்ற வகையிலேதான் அடையாளங் காணப்பட்டன. அதே நிலை இன்றும் நீடிக்க வேண்டும் என்றுதான் நீங்கள் விரும்புகிறீர்களா? அந்தக்காலத்தில் சினிமா படப்பிடிப்புகளை குறிப்பாக சண்டைக்காட்சிகள் சம்பந்தமானவற்றை ஸ்டூடியோவிற்கு வெளியே எடுக்க தயங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சினிமா பற்றிய மயக்கங்கள் பார்வையாளரிடமிருந்து நீங்கிவிடக்கூடாது என்பதற்காக. சங்கப்பாடல்களிலும் சித்தர் பாடல்களிலும் பண்டிதர்கள் தமிழை ஒளித்து வைத்த நிலைமை மாறிவிட்டது. கதாநாயகன் பத்தடி மேலே பறந்து வில்லனின் தோளில் பறவை போல் வந்து அமரும் போது தியேட்டரில் சிரிப்பை கட்டுப்படுத்த சிரமப்படுகிறார்கள்.

திரைக்கு பின்னால் உள்ளவர்களைப் பற்றி அறியும் ஆர்வம் இப்போது அதிகரித்திருக்கிறது. நடிகர்களுக்கென்று திரிந்த ரசிகர் கூட்டத்தின் ஒரு பகுதி ஸ்ரீதருக்கும் பாலச்சந்தருக்குமாக முன்னேற்றம் பெற்றது. திரையில் தோன்றும் பாலா, இளையராஜா பெயருக்கு பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல்கள் கிடைக்கின்றன். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கும் மதுஅம்பாட்டுக்கும் கூட இந்த மரியாதை கிடைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். சினிமாவின் 'கதை சொல்லல்' என்கிற ஆதாரமான சமாச்சாரத்தைத் தாண்டி அதனுடைய நுட்பங்ககளை அறிவதற்கான, உரையாடுவதற்கான ஆவலும் பார்வையாளர்களிடையே எழுந்திருக்கிறது. அபத்தமாக இருந்தாலும் பரவாயில்லை, அவற்றைப் பற்றி அவர்களும் உரையாடட்டும். அந்த அபத்தமான ஆரம்பப் புள்ளியிலிருந்து நகர்ந்து அவர்களிடமிருந்து கூட நாளைய இயக்குநர்கள் உருவாகி இதுவரை நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் குப்பைக் கோபுரங்களை தரை மட்டமாக்கலாம்.

எப்போதும் கண்ணாடிக்குப் பின்புறமிருந்தே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

*

கையில் இரும்பு வளையம் அணிவது மாதிரி, காதில் கடுக்கன் போட்டுக் கொள்வது மாதிரி புரட்சி செய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பட்டியலில் பிரதானமானது 'பார்ப்பனிய எதிர்ப்பு'. ஆதிக்க சாதி என்னும் போது அதன் பல்வேறு அடுக்குகளை செளகரியமாக மறந்து அதன் உச்சத்தில் இருக்கிற பார்ப்பனர்களின் ஞாபகம் மாத்திரமே வருவது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராட வேண்டியதுதான்; எழுத வேண்டியதுதான். ஆனால் மின்சாரம் தடை ஏற்பட்டால் கூட 'இது பார்ப்பனிய சதி' என்று கூக்குரலிடுவது அபத்தமாக இருக்கிறது.

கவிதாசரண் பிப்-மார்ச் 09 இதழில் "பகுத்தறிவை மூடநம்பிக்கையாக்கும் புதிய பார்ப்பனர்கள்' என்ற கட்டுரையின் ஒரு பகுதி:

...இன்று மதம் ஒரு செலாவணிப் பண்டம் போலவும் அரசியல் களத்தில் செல்லுபடியாகிறது. கிழக்குப் பதிப்பகம், மருதன் எழுதிய 'விடுதலைப் புலிகள்'என்னும் புத்தகத்தை வெளியிட்டு விற்றுப் பணம் பண்ணுகிறது. கிழக்குப் பதிப்பகத்துக்கும், மருதனுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பந்தம், வெறும் லாப வணிகத்தைத் தவிர? அதே போலத்தான் மதமும் இன்று வணிகப் பண்டமாக விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. 'நாங்கள் பெரும்பான்மையானவர்கள்' என்னும் தெனாவெட்டில் இந்து மதவாதிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ...


கி.ப., விமர்சிக்கப்பட வேண்டியது இந்த அடிப்படையில் அல்ல.

*

சுஜாதாவின் நினைவு நாள் இந்த மாத இறுதியிலோ என்னவோ வரப்போவதை நினைத்தால் இப்போதே கிலியாக இருக்கிறது. .. நீங்கள் மறைந்து ஓராண்டு உருண்டோடி விட்டாலும் எங்கள் நெஞ்சங்களில் நீங்காமல் வாழ்ந்து... blah.. blah... என்று எழுதப்படப் போகும் அபத்தமான 'தெவசப்' பதிவுகளை நினைத்தால் இப்போதே வயிற்றைப் பிசைகிறது. இம்மாதிரியான சடங்குகளையெல்லாம் தம் வாழ்நாள் முழுக்க கிண்டலடித்துக் கொண்டேயிருந்தவர் சுஜாதா. பெரியாருக்கு சிலை அமைத்து மாலையிடுகிற அரசியல் கோணங்கித்தனம் போல் சுஜாதா குறித்த அழுகைக் கட்டுரைகளையெல்லாம் தயவு செய்து எழுதாதீர்கள் என்று முன் எச்சரிக்கையாக இப்போதே வேண்டுகிறேன். சுஜாதாவின் படைப்புகளை முக்கியமாக non-fictionகளை அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு சிறப்பாக அறிமுகப்படுத்துவதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

*

குறிப்புகள் தொடரலாம்.

suresh kannan