Monday, November 24, 2008

முற்போக்கு பதிவு: சில விளக்கங்கள்

என்னுடைய பதிவுகளின் இயல்பிற்கு மாறாக தமிழ்மண பரிந்துரை பட்டியலில் பரமபதம் மாதிரி மேலும் கீழும் ஏறி இறங்கி பிறகு பெரிய பாம்பு வழியாக ஒரேடியாக கீழே இறங்கிய என்னுடய முந்தைய பதிவின் உள்ளடக்கம் குறித்து சில நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்; எரிச்சல் பட்டார்கள்; கோபப்பட்டார்கள்; தங்கள் எண்ணங்களை எதிரொலிப்பதாக பாராட்டினார்கள். இணையப் பரப்பில் இந்தப் பதிவு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அதுவல்ல என் நோக்கம். இது குறித்து இன்னும் உங்களுடன் நிறைய பேச வேண்டிய சூழலை பின்னூட்டங்களில் உள்ள சில கேள்விகள் எழுப்பியிருக்கின்றன. கோர்வையாகவோ இல்லாமலோ இருக்கும் இந்தப் பதிவை பொறுமையும் சாவகாசமான மனநிலையும் உள்ளவர்கள் மாத்திரம் வாசிக்கத் தொடர வேண்டுகிறேன். இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களின் கனவுகளில் நமீதாவும் ஜெயமாலினியும் இணைந்து நடனமாடும் வண்ணக்காட்சிகள் வர வேண்டுமென்று எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கிறேன்.

()

நாகரிகத்தின் உச்சியை நாம் அடைந்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் காலகட்டத்திலும் பல விதமான மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும், கொலைகளும், மனித உயிர் மீதுள்ள அலட்சியத்தின் காரணமாக பல்வேறு விபத்துகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் அவற்றை நாம் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் அவற்றில் சில நிகழ்வுகள்தான் நம் மனதிற்கு மிக நெருக்கமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை விளக்க தெளிவான பிரத்யேகமான காரணங்கள் எதையும் கூற முடியாது என்றே நம்புகிறேன். அவ்வாறு என்னுள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய சம்பவமாக சில வருடங்களுக்கு முன் கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்து போன கொடூரமான சம்பவத்தைச் சொல்லுவேன். மனித உடல்கள் போலன்றி ஏதோ தீயில் கருக்கப்பட்ட மரக்கட்டைகள் மாதிரி கிடந்த அந்தக் குழந்தைகளின் வண்ணப் புகைப்படங்களை செய்தித் தாள்களில் காண நேர்ந்த போது மனம் 'ஒ'வென்று கதறியது. நம் தோல் பரப்பின் மீது விழும் எரியும் மெழுகுவர்த்தியின் ஒற்றைத் துளியே நம்மை சிறிது விநாடிகளாவது துடிக்க வைக்கும் போது முழு உடலும் நெருப்பினுள் நனையும் கொடூரக் கணங்களை அந்த பிஞ்சுக் குழந்தைகள் எவ்வாறு எதிர்கொண்டிருக்கும் என்பதை கையாலாகத்தனமான கற்பனையுடன் யூகித்துப் பார்த்த போது அழுகைதான் வெடித்துச் சிதறியது.

அதற்கு அடுத்த சம்பவமாக சட்டக்கல்லூரியில் நிகழ்ந்த வன்முறையைச் சொல்லலாம். தொலைக்காட்சியில் மிக அலட்சியமாக பார்க்கத் துவங்கின அந்தக் கணங்கள் என்னுள் மிக பதட்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அந்த வன்முறையின் பின்னணி குறித்தெல்லாம் அப்போது 'அறிவுஜீவித்தனமாக' என்னால் யோசிக்க முடியவில்லை. யாராவது அந்த வன்முறையை உடனடியாக தடுக்க மாட்டார்களா என்ற எண்ணம்தான் என்னை முழுதாக அப்போது ஆக்ரமித்தது. அந்த பதட்டத்தின் வெளிப்பாடுதான் 'சட்டம் பயிலும் மிருகங்கள்' என்றெழுதிய அந்தப் பதிவு. (கண்ணுக்கே தெரியாத சாதி என்கிற ஒரு விஷயத்திற்காக ஒரு சகமனிதனை சாகடிக்கத் துடிக்கும் கேவலமான மனிதர்களோடு இயற்கையின் விதியின் ஒழுங்குப்படி இயங்கும் மிருகங்களை ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்தியது தலைப்பிட்டது தவறுதான்).

ஆனால் இணையத்தில் அந்த வன்முறையைச் சம்பவத்தின் சாதிய பின்னணிகளை விளக்கி 'இந்தச் சம்பவம் நிகழ்ந்தது நியாயமானதும் இயல்பானதும் ஆகும்' என்ற தொனியில் வன்முறையை நியாயப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட சில ' போலி அறிவுஜீவித்தனமான' பதிவுகளை வாசிக்க நேர்ந்த போது மகா எரிச்சல் ஏற்பட்டது. அபத்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் நம்முடைய அடுக்கடுக்கான சாதிய அமைப்பு காரணமாக அடுத்தடுத்த அடுக்கில் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மீது பல்வேறு விதமான வன்முறைத் தாக்குதல்களும், மனரீதியான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் ஆதிக்கச் சாதியினரால் பல ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் காரணம் சொல்லி இந்த வன்முறையை நியாயப்படுத்தி எழுதுவதை அடிப்படை மனச்சாட்சி உள்ளவர்கள் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவ்வாறான உடனடியான எண்ணங்களை வெளிப்படுத்தியவர்களை 'பொதுப்புத்தியினர்' என்று கிண்டலடித்தும் அவர்களை ஆதிக்க சாதியினர் என்ற வட்டத்திற்குள் தள்ள முயன்றும் எழுதப்பட்ட பதிவுகள் முறையற்ற செயலாக எனக்குத் தோன்றியது. 'வெற்று மனிதாபிமானக் கூச்சல்' என்று இந்த உணர்வை இடது கையால் தள்ளின ஒரு பதிவின் வரி எனக்குள் கடுப்பை ஏற்படுத்தியது.

இந்த போலி அறிவுஜீவிகளை நான் கேட்க விரும்புபவதெல்லாம் ஒன்றுதான்: "சம்பந்தப்பட்ட வன்முறைக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது உங்களின் சாதிய கற்பிதங்கள் கழன்று போய் சக மனிதனின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டு ஒரு கணமாவது உங்கள் மனம் பதறவில்லையா?" அப்படி பதறியதாக ஒப்புக்கொண்டால் இன்னும் நாம் இழந்திருக்காத மனிதத்தின் மீது நம்பிக்கை வருகிறது என்று ஆறுதல் கொள்ளலாம்.

()

நவீன அறிவின் குறியீடான கணினி நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளில் கலந்து விட்டிருந்தாலும் கூடவே ஆதிகால மூடநம்பிக்கைகளும் 'கம்ப்யூட்டர் ஜோசியம்' என்ற பரிணாமத்தில் நம்முடன் தொடர்வது எவ்வாறு அபத்தமானதாக இருக்கிறதோ, அப்படித்தான் இருக்கிறது இணையத்தில் சாதிய/மத/இன உணர்வுடன் மற்ற பிரிவுகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வெளிப்படும் பெரும்பாலான பதிவுகளும் உரையாடல்களும். அரசாங்க கழிவறைகளுக்கு நிகரான வாசனையுடன் பின்னூட்டப் பெட்டிகளில் உமிழப்படும் ஆபாசமான வார்த்தைகளும் தாக்குதல்களும் மிகுந்த அருவருப்பை ஏற்படுத்துகின்றன. நன்றாக கல்வி கற்று சுயசிந்தனைகளை வளர்த்துக் கொண்டு நாகரிக மனிதர்களாக உலவும் நம்மாலேயே இன்னமும் நம்முள் புதைந்திருக்கும் சாதிய உணர்வுகளை கைவிட முடியவில்லையெனில், கல்வியறிவு பெறாத ஒரு வட்டத்திற்கு மேல் சிந்திக்க இயலாமல் அருவாளை தூக்கி ஓடும் ஒரு கிராமத்தானின் செயலை ஆட்சேபிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆனால் இவ்வாறான சாதியக் கூச்சல்கள்தான் இணையத்தில் பரபரப்பாகவும் அதிகமாகவும் கவனிக்கப்படுகிறது. இவர்கள்தான் 'முற்போக்காளர்' என்ற அடையாளத்துடன் பலரால் சிலாகிக்கப்படுகின்றனர். இவர்களை ஆதரிக்கும் கும்பலால் எழுதப்படும் பின்னூட்டங்கள் இவர்களை இன்னமும் உற்சாகப்படுத்தி ஆவேசமாக கூச்சலிட வைக்கின்றன. மாறாக ஆக்கப்பூர்வமாக எழுதுகிறவர்களின் - சாதியப்பிரச்சினைகள் உட்பட்ட - பதிவுகள் சொற்பானமானவர்களாலேயே வாசிக்கப்படுகிறது. இவ்வாறான பாசாங்குத்தனமான முற்போக்காளர்களின் கூச்சல்களை வெகுநாட்களாகவே அருவருப்புடன் கவனித்து வருகிறேன். அவ்வாறான அருவருப்பை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றது சட்டக்கல்லூரி வன்முறை தொடர்பான ஒரு பக்கச் சார்பான பதிவுகள்.

மேற் குறிப்பிட்ட வன்முறைச் சம்பவத்தை கண்டிக்கும் போது இந்த 'அறிவுஜீவிகள்' அதை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் மீதான வன்முறைச் சம்பவங்களோடு ஒப்பிட்டு பட்டியலிட்டு "ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவன் தாக்கப்படும் போது மாத்திரம் கூவுகிறார்கள். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார்கள்' என்றதொரு செயற்கையாக கட்டமைக்கப்பட்ட உணர்ச்சி உருண்டையை மேலே எறிகின்றனர். அய்யா சாமிகளா! ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை மாத்திரம் யார் ஆதரித்தது? வன்முறை எந்த ரூபத்தில் நிகழ்ந்தாலும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அதை எதிர்ப்பதும் கண்டிப்பதும்தான் 'ஒரு மனிதனின்' இயல்பான செயலாக இருக்க முடியும். சட்டக்கல்லூரி வன்முறையில் தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருந்தாலும் அதையும் கண்டித்துதான் இணையத்தில் நடுநிலையானவர்களின் பதிவுகள் வெளிப்பட்டிருக்கும். மாறாக இந்த போலி முற்போக்குவாதிகள் முன்வைக்கிற மாதிரி அது கண்டுகொள்ளாமலோ நியாயப்படுத்தப்பட்டோ இருந்திருக்காது.

வன்முறை என்பது இயற்கையானது; அதை நாம் மறுதலிக்க முடியாது என்பதுதான் என்னுடைய தீர்மானமான எண்ணமாக இதுவரை இருந்தது. முன்னர் எழுதிய ஒரு பதிவில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.

"...........என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்........."


ஆங்கிலேயர்களிடம் போரிட்டுதான் நாம் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. அந்த காரணத்தினால்தான் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் எல்லாத் துறைகளிலும் நாம் பொறுப்பின்றியும் நமது தேசத்தின் மீதான பற்றுமின்றி இருக்கிறோமோ என்ற கேள்வி எனக்குண்டு. ஆனால் சட்டக் கல்லூரி சம்பவத்தை பார்த்த கணத்தில் வன்முறை என்கிற அம்சம் மனித நாகரிகத்தின் அடிப்படைக்கு எதிரானதோ என்று தோன்றுமளவிற்கு அந்தச் சம்பவம் என்னை அசைத்துப் போட்டது. நாடகத்தனமாக தோன்றினாலும் அதுதான் உண்மை. அபூர்வமான சமயங்களில் குடும்ப உறுப்பினர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் என்னுடைய பழக்கத்தை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் தோன்றியிருக்கிறது.

என்றாலும் மிக அவசியமான சந்தர்ப்பங்களில் வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள முடியும் என்பதும் நடைமுறையான உண்மை என்பதை மறுக்க முடியாது.

()

யாருமே தன்னுடைய மதத்தை/ஜாதியைக் கடந்து வரமுடியாது என்பது இவர்களின் தீர்மானமான அபிப்ராயம். சொல்லப்படும் கருத்தை விட அதை யார் சொல்கிறார்கள் என்றுதான் ஆராய்கிறார்கள். இதனால் நடக்கும் விவாதங்கள் கருத்து மோதல்களுடன் நின்றுவிடாமல் தனிப்பட்ட வகையிலும் அதையும் தாண்டி இதைப்பற்றி எதுவுமே அறியாத பதிவருடைய அப்பாவி குடும்ப உறுப்பினர்கள் மீதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சி பாய்கிறது. கருணாநிதியின் இறப்பைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஒரு பதிவில் எரிச்சலோடு குறிப்பிட்ட போது அதற்கு பழிவாங்கும் விதமாக என்னுடைய குழந்தைகளின் மரணத்தோடு அதை ஒப்பிட்டு ஒரு பின்னூட்டம் வந்தது. அடிப்படை மனித உணர்ச்சியைக் கூட இழக்குமளவிற்கு இவர்களின் மதமும் சாதிய உணர்வும், அரசியல் பக்தியும் கல்வி கற்ற இவர்களை ஆட்டிப் படைக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமும் பரிதாபமுமே வருகிறது.

அரசாங்கக் காகிதங்களில் இயலவில்லையெனினும் நான் மனதளவில் மத/ஜாதிய உணர்வுகளைக் கடந்து வந்துவிட்டேன் என்பதை ஆத்மசுத்தியோடு என்னால் சொல்ல முடியும்.

நகரத்தில் பிறந்த நான் சாதியக் கொடுமைகளை என்னுடைய அனுபவத்தில் துளி கூட அனுபவத்ததில்லை. ஆனால் அது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்துவதற்கும் அதிலிருந்து வெளியே வருவதற்கும் என்னுடைய தாயார் முக்கியமான ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார். கிராமத்தில் பிறந்த கல்வியறிவு இல்லாத அவருக்கு பார்ப்பனியர்களின் செயல்பாடுகள் குறித்து பிரமிப்பான மயக்கம் இருக்கும். தொலைக்காட்சியில் யாராவது ஒரு சிவப்பான சிறுமி நன்றாகப் பாடிக் கொண்டிருந்தால் " நிச்சயம் அது பாப்பாரப் பொண்ணாத்தான் இருக்கும்" என்பார். வறுமையான பிராமணர்கள் கூட நன்றாக படித்து நல்ல வேலைகளில் சேர்ந்துக் கொண்டிருப்பதை பாராட்டி பேசுவார். ஆனால் தலித்கள் குறித்து அவருக்கு நேர்மாறான அபிப்ராயம் இருந்தது. அவர்களின் சுத்தமில்லாத நடவடிக்கையும் வாழ்வுச் சூழலும் பேச்சும் அவருக்கு அருவருப்பை ஏற்படுத்தும். நான் இதை ஆட்சேபித்து, சமூகத்தின் பெரும்பாலான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக அவர்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழ்வுச் சூழலை விளக்கி, அவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மற்றவர்களை போல் செயல்பட முடியும் என்று விளக்க முற்படும் போதெல்லாம் அவர் சொல்வது 'அட போடா! நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்'.. என்கிற சொற்றொடரைத்தான். நான் வளர்ந்த வீடு சேரிக்கு அருகே அமர்ந்திருந்ததினால் எனக்கு அப்போது பல தலித் நண்பர்கள் இருந்தார்கள். உண்மையாகவும் பாசாங்கின்றி பழகும் விதத்தில் மற்ற பிரிவு நண்பர்களை விட தலித் நண்பர்களே சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பது என் தனிப்பட்ட அனுபவம். அவை எனக்கு நடைமுறை உண்மையை உணர்த்தியது.

என் தாயார், யாரென்றே தெரியாத ஒரு தொலைக்காட்சி சிறுமியை பாராட்டத் துணிவதும் அதே போல் இன்னொரு பிரிவினரை இகழத் துணிவதற்கும் 'சாதி' என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு நச்சுக்கிருமி காரணமாக இருப்பது குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை விளக்கினாலும் அவருக்கு புரியாததற்கு அவர்கள் வளர்க்கப்பட்ட முறையும் கல்வி இல்லாத சூழலும் காரணமாயிருப்பதை கண்டு பரிதாபமாக இருந்தது. ஆனால் முறையாக கல்வி பெற்ற நம் சமகாலத்து மனிதர்களே சாதிய மனோபாவத்திலிருந்து வெளிவராததைக் காணும் போது கல்விக்கும் சிந்தனைக்கும் பெரும்பாலும் சம்பந்தேமேயில்லையோ என்றும் தோன்றுகிறது. கணினி படித்தவர்கள் எல்லாம் தேவலோகத்திலிருந்து இறங்கியவர்கள் என்கிற மனோபாவம் பாமரர்களிடம் இருக்கிறது. ஆனால் கணினி படித்தவர்களும் இணையத்தில் பாமரர்களை விடவும் மோசமாக சாதிய உணர்வோடு மோதிக் கொள்வதை காணும் போது அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.

முற்போக்கான பார்வை என்றாலே அது ஒடுக்கப்பட்ட சாதிக்கு ஆதரவாக பேசுவதுதான் என்றிருக்கும் இவர்களது புரிதல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் ஆதிக்கச் சாதி என்றாலே அது பார்ப்பனர்கள் மாத்திரம்தான் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதி குறித்த எந்தவொரு பதிவுமே பார்ப்பனர்களைச் சாடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. அடுக்கடுக்காக அமைந்திருக்கும் நம் சாதிய அமைப்பை மிக வசதியாக அப்போது இவர்கள் மறந்து விடுகிறார்கள். எந்த வன்முறைச் சம்பவம் என்றாலும் அதனை நியாயமாக அணுகுவதை விட்டு விட்டு 'முயலுக்கு மூன்று கால்' என்பது போல தன்னுடைய வசதிக்கேற்ற சார்புப் பார்வையோடு வெளிப்படுத்துகிறார்கள். தலித் பிரிவினர் அனைவருமே அப்பாவிகள் போலவும் தொடர்ச்சியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிற பிம்பத்தை கட்டமைப்பதில் இவர்கள் காட்டும் அவசரம் நேர்மையானது அல்ல.

ஆதிக்க சாதி என்று குறிப்பிட்டு அந்தப் பிரிவில் உள்ள அனைத்து மனிதர்களையும் காழ்ப்புணர்ச்சியோடு பார்ப்பதும் அணுகுவதும் முறையானதல்ல. தலித் பிரிவிலும் ஆதிக்க மனோபாவத்தோடு செயல்பாடுகிறவர்கள் இருக்கிறார்கள். இதையும் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்ல முடியும்.

()

எல்லா சாதி மனிதர்களும் புழங்கும் ஒண்டுக்குடித்தனத்தில் அதிலுள்ள சங்கடங்களோடும் சண்டைகளோடும் மகிழ்ச்சிகளுடனும் இடையூறுகளுடன் வாழ்ந்தவன் நான். அப்போதைய உரிமையாளரிடமிருந்து நாங்கள் குடியிருந்த வீட்டை புதிதாக விலைக்கு வாங்கியவர் தலித் பிரிவைச் சார்ந்தவர். அப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவர் அந்த வட்ட அளவில் அதிகாரம் பொருந்திய பதவியில் இருந்தார். தொழிற்சங்கத்திலும் பெரிய பொறுப்பில் இருந்தார். வீட்டை வாங்கியவுடன் அவர் செய்த முதல் பணி எல்லோரையும் காலி செய்யச் சொல்லி மறைமுகமாகவும் நேரடியாகவும் தந்த கொடுமைகள். இவருடைய மிரட்டலுக்குப் பயந்த சில வீட்டினர் காலி செய்து விட்டனர். ஆனால் மிகுந்த வறுமையில் வாழ்ந்த என்னுடைய குடும்பத்தினரைப் போன்றவர்கள் மாத்திரம் உடனே வேறிடத்திற்கு செல்ல முடியாமல் அந்தக் கொடுமைகளை சகித்துக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை அந்த வீட்டுக் கட்டிடத்திற்குள் எதற்கோ அவசரமாய் நுழைந்த போது எதிரே வந்த அவரைக் கவனியாமல் முட்டிக் கொண்டேன். "எதிரே வருகிற என்னைக் கண்டு மரியாதையாக ஒதுங்கி நிற்காமல் இடிக்கிறாற் போல் வருகிறாயே" என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது சுமார் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்த எனக்கு 'என்ன தப்பு செய்தேன்' என்று அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் ஒரு முறை குடியிருந்தவர்கள் அனைவரையும் எதையும் விளக்காமல் ஏதோ ஒரு பத்திரத்தில் கையெழுத்திடச் சொன்னார். என்னுடைய வீட்டின் சார்பில் நான் ஒரளவிற்கு படித்தவன் என்பதால் என்னை அழைத்து கையெழுத்திடச் சொன்னார்கள். எதற்கென்று நான் தயக்கத்துடன் கேட்க முயன்ற போது கையில் பெரிய கல் ஒன்றை தூக்கி கொலை வெறியுடன் எறிய வந்தார். நான் பயந்து ஓடி வந்துவிட்டேன்.

நிற்க. தலித்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்பதை நிறுவுவதற்காக இதைச் சொல்ல வரவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு ஒரு பிரிவினரையே அபத்தமாக நான் பொதுமைப்படுத்த மாட்டேன். எல்லாப்பிரிவுகளிலும் மனிதாபிமானம் இல்லாமல் மற்றவர்களை கொடுமைப்படுத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. அதிகாரம் கையில் வரும் போது எந்தவொரு மனிதர்களுக்கும் மற்றவர்களை ஆதிக்கம் செய்யும் மனோபாவம் வந்துவிடுவதை குறிப்பிடுவதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே தலித்கள் எல்லோருமே அப்பாவிகள் அல்ல என்பதையும் மற்ற பிரிவுகளில் உள்ள அனைவருமே கொடுமைக்காரர்கள் அல்ல என்பதையும் (அவ்வாறான பிம்பத்தைத்தான் இணையத்தில் காண முடிகிறது) அழுத்திச் சொல்வதற்காகத்தான் என்னுடைய முந்தைய பதிவில் சில விஷயங்களை கிண்டலான தொனியில் சொல்ல வேண்டியிருந்தது.

ஆனால் இந்தப் பதிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 'வந்தாயா வழிக்கு' என்ற தொனியில் சிலர் எழுதும் பின்னூட்டமிட்டத்தை நான் ஏற்க மாட்டேன். இது அவர்களின் பிரச்சினைதானே ஒழிய, என்னுடையதில்லை. எவனொருவன் தன்னுடைய சாதிய/மத/இன கற்பிதங்களை பெருமிதமாக சொல்லிக் கொள்கிறானோ, அதன் காரணமாகவே மற்ற பிரிவினரை இகழ்வாக நோக்குகிறானோ அவன் என் கண்ணுக்கு மலத்தில் நெளியும் புழுவாகவே தெரிகிறான். (இது எல்லாப்பிரிவினருக்கும் பொருந்தும்).

()

மற்றபடி....

குறிப்பிட்ட சில பதிவர்களை நான் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக அவர்களின் பெயர்களை குறிப்பிட்டே சிலர் பின்னூட்டமிட்டிருக்கின்றனர். அதில் ஒரளவிற்குத்தான் உண்மையிருக்கிறது. செயற்கையான ஆவேசத்துடனும் மற்றவர்களை கவனத்தை கவர உபயோகப்படும் இகழ்வான உத்திகளுடன் அவர்களின் பதிவில் குறிப்பிடப்படும் ஆபாச வார்த்தைகளைப் பற்றின எரிச்சல் என்னிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அதைத்தான் சுட்ட விரும்பினேன். ஆனால் அவர்களைச் சுட்டிக்காட்டி என்னை ஏதோ ஒரு புனிதன் என்று காட்டிக் கொள்வது அல்ல என் நோக்கம். என்னுடைய பதிவிலும் அவ்வாறான வார்த்தைகள் சில சமயங்களில் இடம் பெற்றிருக்க்கூடும். இதைத் தவிர்த்து மற்ற சில விவாதங்களுக்காகவும் மாற்று எழுத்துக்களாகவும் அவர்களின் பதிவை தொடர்ந்து படித்துக் கொண்டுதானிருக்கிறேன். சினிமா பற்றிய வரிகளில் நான் குறிப்பிட்டது போல பிடிக்காவிடில் ஏன் தொடர்ந்து படிக்கிறாய் என்று அவர்களும் கேள்வி எழுப்ப முடியும்தானே?

()

(முந்தைய) பதிவின் ஆரம்பத்தில் கழிசடைகள், பன்றிக்குட்டிகள் என்று சக பதிவர்களைப் பற்றி எழுதியிருந்ததாக அதிஷா உள்ளிட்ட சில நண்பர்கள் பின்னூட்டத்தில் மறைமுகமாக வருத்தப்பட்டிருந்தனர். இந்தப் பதிவு முழுதுமே ஒரு போலி முற்போக்காளனின் குரல். அவன் பார்வையில் மற்ற பதிவர்களின் தோற்றம் பற்றித்தான் எழுத முயன்றிருந்தேன். அதை என்னுடைய பார்வை என்பது போல அவர்கள் புரிந்து கொண்டதற்கு நான் தெளிவற்ற முறையில் எழுதியதும் காரணமாக இருந்திருக்கலாம். பதிவின் இடையில் என்னைப் பற்றிய சுய எள்ளல் சார்ந்த தடங்களையும் அவர்கள் கண்டிருக்கக்கூடும். எந்தவொரு தனி மனிதரையும் நான் தாழ்ச்சியாக நினைப்பதில்லை. இதையும் மீறி அவர்கள் புண்பட்டிருந்தால் அதற்காக என் மன்னிப்பை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அந்தப் பதிவு பல பதிவர்களின் நடுநிலை சார்ந்த மனோநிலையை, எண்ணங்களை எதிரொலித்திருக்கின்றது என்பதை பல பின்னூட்டங்களின் மூலம் உணரும் போது 'நான் தனியனல்ல' என்கிற சந்தோஷம் ஏற்படுகிறது.

என்னுடைய அலைவரிசையில் இயங்குகிற நண்பர்களின் தோழமை கிடைக்காமல் நான் பல வருடங்கள் அவஸ்தைப் பட்ட போது அதைத் தீர்த்தது இணையம்தான் என்ற வகையில் இந்த ஊடகத்தின் மீது எனக்கு மிக நன்றியுண்டு. சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதில் ஏற்படும் சந்தோஷமும் அதனால் கிடைக்கும் பாராட்டின் காரணமாக இன்னும் நிறைய விஷயங்களை தேடிக் கண்டடைந்து பகிர வேண்டும் என்கிற உணர்வை ஊட்டி என்னுடைய தேடல் விரிவாக ஊக்கமளித்தது இணையம்தான்.

என்னுடைய பதிவை சராசரியாக தினமும் குறைந்தது முந்நூறு நபர்களிலிருந்து ஐந்நூறு நபர்களாவது வாசிக்கிறார்கள் என்பதை google analytics மூலம் அறிய முடிகிறது. ஒரு சிற்றிதழோ அல்லது இடைநிலை இதழுக்கோ சாத்தியப்படாத வாசக வட்டமிது. மேலும் எந்தவிதமான அரசியல் தலையீடோ, இடப்பிரச்சினையோ இல்லாமல் மிகச்சுதந்திரமாக என்னுடைய எண்ணங்களை இங்கே பகிர முடிகிறது. இணையத்தின் ஆக மிகப் பெரிய பலம் அது. அதுவே என் பொறுப்புணர்ச்சியை இன்னும் அதிகமாக்குகிறது. என்னுடைய பதிவுகளில் ஒரு சதவீத உருப்படியான விஷயத்தையாவது வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம்.

இந்த சக்தியை சாதிய/மத/இன உணர்வு சார்ந்த மோதல்களுடான சார்பு நிலை சார்ந்த விவாதங்களின்/வாசிப்புகளின் மூலம் வீணாக்க நான் விரும்பவில்லை. அவ்வளவுதான்.

suresh kannan

Friday, November 21, 2008

முற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்

ஒரு கணினியும் இணையத் தொடர்பும் இருந்தால் போதும், கண்ட கழிசடைகள் எல்லாம் (இருங்கள், இந்த ஆரம்பத்திற்கே சங்கடப்படாதீர்கள், இன்னும் நிறைய இருக்கிறது) வலைப்பூ ஆரம்பித்து எழுதித் தள்ளி இணைய எழுத்தாளர்கள் பன்றிக் குட்டிகள் போல் பெருகிவிட்டார்கள். இதன் நடுவிலே நாம் என்னதான் சிறந்த செய்திகளை சொந்தமாகவோ ஊடகங்களிலிருந்து நகல் செய்தோ பிரசுரித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லையே என்றும் என்ன செய்தும் தம்மை ஒரு முற்போக்குவாதி என்று யாரும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்களே என்றும் கவலைப்படுகிறீர்களா?

கவலையை விடுங்கள். மனச்சாட்சியையும், சூடு சொரணைகளையும் சற்று ஒத்தி வைத்து விட்டு உங்களை முற்போக்குச் சாயத்தில் முக்கியெடுத்த செவ்வாய் கிரகவாசியான பிரகஸ்பதி போன்றதொரு வடிவில் கட்டமைத்துக் கொண்டு அதன் மூலம் இணையப்பரப்பில் பரவலான கவனத்தைப் பெற கீழ்கண்ட வழிகள் ஒருவேளை உங்களுக்கு உதவக்கூடும்.

(1)

முதலில் உங்கள் வலைப்பூவின் பெயரே கலகத்தன்மையுடன் இருத்தல் அடிப்படையானது. பூங்குருவி, தென்றல் காற்று என்றெல்லாம் அழகியல் உணர்ச்சியுடன் பெயர் வைத்திருந்தால் உங்களை ஏதோ வாரமலரின் பின்பக்கத்தில் கவிதை எழுதுகிற தயிர்வடை ஆசாமி என்று புறக்கணித்து விடுவார்கள். இந்த வலைப்பூவின் தலைப்பையே உதாரணத்திற்கு பாருங்கள். பிச்சைப்பாத்திரத்தில் என்ன இருக்கும்? மனிதர்கள் தங்களின் ஜாதிய கற்பிதங்களை கழற்றி வைத்து விட்டு கூடும் ஒரே இடமான பாலியல் தொழிலாளியின் யோனி மாதிரியானது அது. ஜாதிமதமில்லாத ஜீவத்துளிகள் நிறைந்திருப்பது போல பிச்சைப் பாத்திரத்திலும் எல்லோர் வீட்டு மிச்ச, சொச்ச உணவு அடங்கியிருக்கும். அந்த மாதிரியான ஒரு கலேஜியான பிரதேசத்தை குறியீடாகக் கொண்ட வார்த்தையை உங்கள் வலைப்பூவின் பெயர் எதிரொலிக்க வேண்டும். ஆனால் வாசகர்களின் கவனத்தைக் கவர இந்த மிதவாதம் கூட உதவாது. இன்னும் கூட காத்திரமாக கூடவே சற்று இலக்கியச் சாயலுடன் இருப்பது உத்தமம். 'விந்துத்துளியின் பிரபஞ்ச வெளி' என்பது போலவோ 'பெருங்கதையாடலில் விரியுமென் யோனி' என்பது போலவோ அமைந்திருத்தல் நன்று. 'தீப்பொறி ஆறுமுகம்" "வெற்றிகொண்டான்" போன்ற திராவிடப் பேச்சாளர்களின் காத்திரமான உரையாடல்களை தொடர்ந்து கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது இதற்கு உதவக்கூடும். சிற்றிதழ் வட்டாரத்தில் கலகவாதிகளாக அறியப்படுகிறவர்கள் தலைமையேற்கும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் அதற்கு ஒப்பானது.

(2)

பதிவு ஆரம்பித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது முற்போக்காளர்களுக்குள் நிலவும் பல முகாம்களில் ஏதாவது ஒரு முகாமிற்கு அடைக்கலம் தேடிச் செல்வது. வணிக இதழ்கள் முதற்கொண்டு சிற்றிதழ்கள் வரை இந்த முகாம்களின் எண்ணிக்கை அதிகம். ஏதாவதொரு முகாமோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் காத்திரமாக செயல்படுவது என்பது பெண்கள் நடிக்காத சீரியல் வெற்றி பெறுவது போல சாத்தியமேயில்லாத ஒரு காரியம். முற்போக்கு எழுத்தாளர்களை எப்படி அடையாளம் கொள்வது என்று குழப்பமா? எந்த பதிவிலாவது ஙோத்தா... லவ்டேகோபால்... என்ற வார்த்தைகள் தென்பட்டால் அவரை தயக்கமின்றி உடனே முற்போக்கு எழுத்தாளராக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஏதாவது ஒரு முகாமை தேர்வு செய்தவுடன் அந்த முகாமில் இருப்பவர்களின் பதிவிற்குச் சென்று 'சூப்பர் அண்ணே. &*||*^#! சேர்ந்தவர்களின் முகமுடிகளை கிழித்தெறிந்து அம்மணமாக்கி விட்டீர்கள். இப்படி செருப்பால் அடித்தால்தான் அவர்களுக்கு புத்திவரும்' என்றோ ' பின்னி விட்டீர்கள் &|*^#! நாய்களின் கொட்டம் இதன் மூலமாவது அடங்கும்' என்றோ ஆவேசமான வசவு வார்த்தைகளுடன் இணைத்து பின்னூட்டமிட்டு பதிவெழுதுவர்களையே அசத்தி அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இம்மாதிரியான செயல்களின் மூலம் அவர்களும் உங்களின் பதிவிற்கு வந்து அதே மாதிரியான மொழியில் பின்னூட்டமிட்டு உங்களின் புகழைப் பரப்ப வலிகோலுவார்கள். பிற்காலத்தில் அவர்கள் உங்களை அவர்களின் வாரிசாக அறிவிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. பின்நவீனத்தின் கோமணத்தையே அவிழ்த்து ஆராய்வதாக சொல்லிக் கொள்ளும் முற்போக்குவாதிகள், பழமைவாதிகள் தங்கள் சமூகத்தை தொடர்ச்சியாக கட்டமைக்க ஏற்படுத்திய வாரிசு முறையை மாத்திரம் ஏன் பின்பற்றுகிறார்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள்.


(3)

உங்கள் பதிவின் உள்ளடக்கம் என்பது எப்போதும் பொதுப்புத்தியை செருப்பால் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது நீங்கள் எழுதும் பதிவுகள் பொதுப்புத்தி கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கு பொதுப்புத்தி (common sense) என்பதே இருக்கக்கூடாது. புரிகிறாற் போலவும் நேர்க்கோட்டிலமைந்த வாக்கியங்களாகவும் எழுதினால் உங்களுக்கு முற்போக்கு எழுத்தாளராக இருக்க அடிப்படைத்தகுதி கூட இல்லையென்று பொருள். ஓசியில் கிடைக்கிறதே என்று பத்து கட்டிங்கை தொடர்ச்சியாக அடித்து விட்டு டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடப்பவனின் உளறலோடு ஒத்திசைவான ஒரு தாளகதியான மொழியில் எழுதத் தெரிந்திருத்தல் நன்று. புரியும்படி சொன்னால் அல்லது புரியாதபடி சொன்னால் உங்கள் ஆழ்மனதின் ஒப்பனை செய்யப்படாத எண்ணங்களை இலக்கிய மொழியின் சாயலோடு வடிவமைத்து கலக வார்த்தைகளில் பதிவு செய்வதே முற்போக்கு எழுத்தின் பாலபாடம். தமிழில் இருக்கும் அத்தனை வசவு வார்த்தைகளையும் பதிவின் இடையில் உபயோகிப்பது மிக முக்கியம். வாசிக்கிறவர்கள் யாரும் முகஞ்சுளிக்க மாட்டார்களா என்ற கேள்வி உங்களுக்குள் ஒருவேளை எழலாம். இப்படியான வசவு வார்த்தைகளை படிப்பதிலும் சொல்லிப் பார்ப்பதிலும் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு ரகசிய கிளர்ச்சி இருக்கிறது என்பது அடிப்படை உளவியல் உண்மை. எனவே மேலுக்குள் அதை அருவருத்தாலும் உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பார்கள் என்பது எட்டாம் நூற்றாண்டிலிருந்தே நிறுவப்பட்ட ஒரு வரலாற்று ரகசியம்.

(4)

செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் தொடர்ந்து கவனித்து சிறுபான்மையினர்கள் சம்பந்தப்பட்ட அவர்கள் மீதான தாக்குதல் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளை (அதற்குத்தான் இந்தியாவில் பஞ்சம் கிடையாதே) சிவப்பு மையால் குறித்து வைத்துக் கொள்வது முக்கியம். பின்பு புலனாய்வுப் பத்திரிகைளும் சிறப்பு செய்தியாளர்களும் மத அடிப்படையாளர்கள் நடத்தும் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கும் தரவுகளை மிகக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றை உங்களின் பார்வை போல கலந்து கட்டி ஆவேசமான தொனியில் மறுபிரசுரம் செய்வது உங்களை முற்போக்காளர்களின் வரிசையின் முன்னணியில் நிற்க வைப்பதற்கு நிச்சயம் உதவும். இதில் தலித்கள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் திண்ணியத்தில் மலம் திணிக்கப்பட்ட சம்பவத்தை நிச்சயம் சேர்த்துக் கொள்வது இன்றியமையாதது. அந்த மலம் உலராமல் பார்த்துக் கொள்வது முற்போக்காளராகிய உங்களின் முக்கியமான கடமை. வருங்காலத்தில் தலித்களே இதை மறக்க முயற்சித்தாலும் இதை அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்து அவர்களின் தாழ்வுணர்ச்சியையும் பதட்டத்தையும் இழக்காமல் வைத்திருக்க வேண்டியது நீங்கள் முற்போக்காளராக தொடர்ந்து செயல்படுவதற்கு தேவையான அடிப்படை என்பதை மறக்கக் கூடாது. சுருங்கச் சொன்னால் நீங்கள் முற்போக்காளர் தகுதியை நீட்டித்துக் கொண்டே இருப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பிரச்சினையை உணர்ச்சிகரமாக எழுதி உங்கள் முற்போக்காளர் இமேஜை நீங்கள் பஸ் பாஸ் போல் renewal செய்து கொண்டே இருக்க முடியும்.

இன்னொரு அடிப்படையையும் மறக்கக்கூடாது. 'ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அனைவருமே கொடூரமானவர்கள், வன்முறையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை தொடுத்து கொண்டிருப்பவர்கள். அவர்களில் சிலர் தங்களின் ஜாதிய கற்பிதங்களை உணர்ந்து அதைக் கடந்து வெளியே வரமுயற்சித்தாலும் அவர்களின் சட்டைக்குள் கயிற்றைத் தேடிப்பார்த்து அடையாளத்தை உணர்ந்து அவர்களை மறுபடியும் ஜாதியக் கூண்டுக்குள் திருப்பித்தள்ளி விடுவது முற்போக்காளனின் கடமை.

எல்லா கருமாந்திர ஜாதிகளிலும் நல்லவர்களும் அயோக்கியர்களும் வன்முறையாளர்களும் மனிதாபிமானம் கொண்டவர்களும் கலந்தேதான் இருப்பார்கள் என்பது கடைந்தெடுக்கப்பட்ட பொய் என்பதை முற்போக்காளர்கள் உணர வேண்டும். ஒரு வன்முறை நிகழ்வை "எவ்வாறு புரிந்து கொள்வது" என்பதற்கு நிறைய பயிற்சிகள் தேவைப்படுகிறது. எங்காவது ஒரு வன்முறைச்சம்பவம் நிகழ்ந்தால் அது ஆதிக்கச் சாதியினராலேயாதான் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று முன்கூட்டிய தீர்மானத்துடன் நம்புவதுதான் சிறந்த புரிதல்.

(5)

சினிமா விமர்சனம் எழுதுவது ஒரு கூடுதல் தகுதி. தமிழில் வந்த சினிமா எதுவுமே உருப்படியானது அல்ல என்று முப்பாத்தம்மன் கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்வது அடிப்படை. உலக சினிமா என்பது இந்திய துணைக்கண்டத்தின் வெளியில் உருவாக்கப்படுவது என்பதை மறந்து விடக்கூடாது. புகழ்பெற்ற, பொதுவாக பரவலாக அறியப்பட்ட உலகத் திரைப்படங்களை பற்றி எழுதுவது உங்களின் தனித்தன்மைக்கு வேட்டு வைக்கும் செயல். பழங்குடிகளின் தொன்மையான மொழியில் வெளிவந்து திரைப்பட விழாக்களில் மொத்தமே பத்து நபர்கள் மாத்திரமே பார்த்திருக்கும் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதே உன்னதம். இந்தத் திரைப்படங்களின் போக்கு மக்களின் புரட்சி, எழுச்சி ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. இம்மாதிரியான விமர்சனங்களின் போது சம்பந்தப்பட்ட படத்தை மாத்திரம் ஒற்றைப் பரிமாண பார்வையோடு எழுதுவது அறிவீனம். சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பல்வேறு திரைப்பட இயக்குநர்களின் பெயர்களையும் படத்தலைப்புகளையும் (வெறுமனே பெயர்களை தெரிந்து வைத்திருத்தால் போதும்) ஆங்காங்கே உதிர்த்துக் கொண்டே செல்வது கூடுதல் தகுதி. படிக்கும் வாசகன் உங்களை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வாயைப் பிளந்து பிரமிக்க இது உதவும்.

உலக சினிமாக்களை காண ஆங்கில மொழியின் போதாமை குறித்து கவலைப்படுகிறீர்களா? பரவாயில்லை, இதை வெளியே காண்பித்துக் கொள்ள வேண்டாம். உள்ளுர்ப் படங்களுக்கு வருவோம். நமது உள்ளுர் சினிமா நாயகர்கள் அரிவாள்களை தலைக்கு உயரே தூக்கும் வணிகப்படங்களை வெளிவந்த முதல் நாளே முண்டியத்துக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு பார்த்தாலும் அந்தப் பிரியத்தை உள்ளுக்குள் ஒளித்து அவர்களையும் அந்தப்படங்களையும் கன்னாபின்னாவென்று திட்டி எழுதுதலின் மூலம் முற்போக்குச் சாயத்தை அழுத்தமாக பூசிக் கொள்ளலாம். விமர்சனப் பதிவின் தலைப்பை மிக அழுத்தமாக வைப்பது அதிக வாசகர்களைப் பெறுவதற்கு மிகுதியாக உதவும். "பார்ப்பனிய மலத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட தூமைத் துணி' 'சீழ்பிடித்த ஆண்குறியில் வழித்தெழிக்கப்பட்ட நாற்றமடிக்கும் விந்துக்குருதி' என்று கலகத்தன்மையுடனோ அல்லது 'பெருங்கதையாடலின் குறுநகை' என்று இலக்கிய வாசனையுடனோ இருத்தல் முக்கியம். பதிவின் உள்ளடக்கத்தில் பட இயக்குநரையோ பிரதான நடிகரையோ "தேவடியாப் பையன்" என்றோ அவர்களின் "ஆண்குறிகளை வெட்டுதல்" குறித்தோ கொண்ட வரிகளை மறக்காமல் சேர்ப்பது வாசகர்கள் கிளர்ச்சியடைந்து "இவ்வாறெல்லாம் கூட பொதுப்பரப்பில் கலக்ததன்மையோடு செயல்பட முடியுமா" என்று உங்களை பிரமிப்புடன் காண உதவும்.

தமிழ்ப்படங்கள்தான் குப்பை என்று தெரிகிறதே, அப்புறம் ஏன் அதை முதல் நாளே பார்த்துவிட்டு வந்து இப்படி இணையப் பரப்பை நீங்கள் எடுக்கும் வாந்தியாலும் அபான வாயுவாலும் நிரப்புகிறீர்கள் என்று யாரும் உங்களை கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். அவர்கள்தான் கோமியம் தெளிக்கப்பட்டு புனிதமாக்கப்பட்ட உங்களின் கலகவார்த்தைகளில் பிரமிப்படைந்து வாயடைத்து நிற்கிறார்களே.

(6)

திரையரங்கில் படம் வெளிவந்த முதல்காட்சி அனுமதிச் சீட்டுக்காக வரிசையில் முண்டியத்து முன்னால் நிற்கிற இருபது பேரின் கவனத்தை திசைமாற்றி தாண்டிப் போய் சீட்டை வாங்கியதுதான் உங்களின் வாழ்வில் நீங்கள் செய்த ஒரே புரட்சியாக இருந்திருக்கும். பரவாயில்லை. ஆனால் உங்களின் பதிவுகளில் இம்மாதிரியான சில்லறைத்தனமான செயல்களின் தடங்கள் பதியாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். மார்க்ஸ், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற ஆவேசமான புரட்சி சம்பந்தப்பட்ட பெயர்களும் மேற்கோள்களும் உங்கள் பதிவின் இடையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காலையில் தவறாமல் வாக்கிங் சென்று காய்கறி வாங்கித் திரும்பும் மிடில்கிளாஸ் கேணையனாக உங்களை சித்தரித்துக் கொள்வது உங்களின் முற்போக்கு பிம்பத்தை கட்டமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். டாஸ்மாக்கில் ஓசியில் குடித்து வாந்தியெடுத்ததைப் பற்றியோ போதையில் எதிரே இருப்பவனுடன் நடந்த கைகலப்பு பற்றியோ புளகாங்கிதத்துடன் அதை விவரித்து எழுதுதல் நலன் பயக்கும். திரையில் தங்கள் நாயகர்களை ஆராதிக்கும் அப்பாவி விசிலடிச்சான் குஞ்சுகள் அதே முறையில் உங்களின் இந்த புரட்சிச் செயல்களில் கிளர்ச்சியடைந்து உங்களை ஆதர்சமாக ஏற்றுக் கொண்டு உங்களின் அல்லக்கைகளாக மாற வாய்ப்புண்டு.

(7)

சர்வதேச அறிவுஜீவிகளின் கட்டுரைகளை இணையத்தில் தேடிக் கண்டெடுத்து சமீபத்தில் அதை வாசித்ததாக போகிற போக்கில் அலட்சியமாக தெரிவிப்பது உடனடி பலனை ஏற்படுத்தக் கூடியது. குருட்டாம் போக்கில் கட்டுரையின் சில வரிகளை அடிக்கோடிட்டு காண்பித்து இந்த வரிகளுடன் தாம் மிகவும் உடன்படுவதாகவோ அல்லது கட்டுரையாளரின் மேதாவித்தனத்தை மறுதலிப்பதாகவோ தெரிவிப்பது 'நம்மாளு இண்டர்நேஷனல் லெவல்ல பைட் பண்றாரே' என்று வாசகனின் மனத்தில் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடும்.

வேற்று மொழி அறிவுஜீவிகளின் கட்டுரைகளை நேர்காணல்களை சற்று சிரமம் மேற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதும் உதவக்கூடியதுதான். பதிவின் கீழே சிறியதாக தமிழில் ...... என்று உங்கள் பெயரை விரும்பினால் நிரப்பிக் கொள்ளலாம். சாளேஸ்வர வாசகர்கள் இதைக் கவனிக்காமல் முழுக் கட்டுரையும் உங்களாலேயே எழுதப்பட்டது என்று தவறாக (உங்களைப் பொறுத்தவரை சரியாக) புரிந்து கொள்வதற்கு அது உதவக்கூடும். மொழிபெயர்க்கும் கட்டுரையின் தொனி அசல்கட்டுரையின் படியேதான் வரவேண்டுமென்கிற கட்டாயமெல்லாம் ஒன்றில்லை. இடையே உங்களின் கைச்சரக்கையும் கலந்து அடிக்கலாம். இம்மாதிரி பதிவையெல்லாம் யாரும் பிரக்ஞையுடன் வாசிப்பதில்லை என்பதால் யாரும் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. அரவாணிகள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி நிஜ வாழ்க்கையில் நீங்கள் கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருக்கலாம். அவர்களுக்காக உங்கள் பிருஷ்டத்தை ஒரு அங்குலம் கூட நகர்த்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் எழுத்து, பொதுவாழ்க்கை என்று வரும் போது அவர்களைப் பற்றியே தொடர்ந்து எழுதுவது, பேசுவது, கவலைப்படுவது போன்ற செயல்கள் உங்களின் முற்போக்கு இமேஜ் வளர்வதற்கு பெரிதும் உதவக்கூடியது.

(8)

பிடித்த எழுத்தாளர்களாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், அனுராதா ரமணன் என்று ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களை யாரும் சீந்த மாட்டார்கள். சிறுபத்திரிகைகளில் மாத்திரமே ரகசியமாக உலவும் எழுத்தாளர்களை (குறைந்தபட்சம் பெயர்களையாவது) அறிந்து கொள்வது நல்லது. அவர்களின் படைப்புகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வந்து அதில் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய சங்கதி இருந்தால் (இல்லையென்றால் நாமே செயற்கையாகவும் அதைக் கட்டமைக்கலாம்) கப்பென்று பிடித்துக் கொண்டு அதை வைத்து 'இது சிறுபான்மையினரை அவமதிக்கும் நோக்கில் எழுதப்பட்டது' என்ற ஆவேசமான தொனியில் பரபரப்பான கட்டுரை ஒன்றை எழுதலாம். (காதலான திரைப்படத்தில் பெரியாரின் சிலைக்கோணத்தை அரசியலாக்கிய கட்டுரையை இங்கு நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது). பொதுப்புத்திக்கு தெரியாத / உறைக்காத கோணத்தை இந்த முற்போக்காளர் விழிப்புடன் கூர்மையாக அவதானித்து கண்டுபிடித்து விட்டாரே என்று உங்களுக்கு பாராட்டு மழை பொழியும். சாணக்குகியா, அசிங்கபெரியவன் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். எனவே வெற்றிமோகன், பாரு போன்ற முன்னணி சிற்றிதழ் படைப்பாளிகளை அவ்வப்போது சீண்டிக் கொண்டோ அல்லது அவர்கள் தங்களுக்குள் சீண்டிக் கொள்வதை கண்டித்து காறித்துப்பியோ தொடர்ந்து பதிவெழுதுதலும் நன்று.


()

மேற்கண்ட வழிகளை கவனமாகப் பின்பற்றுவதின் மூலம் 'நீங்களும் ஒரு முற்போக்காளர்' என்ற தகுதியையும் ஆளுமையையும் இணையப் பரப்பில் நீங்கள் உடனடியாகவும் சிறப்பாகவும் பெறுவதற்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். "நீங்களும் இதைப் பின்பற்றுகிறீர்களா?" என்று என்னை நோக்கி அபத்தமாக யாரும் கேள்வியெழுப்பக் கூடாது. இது ஒரு சுயவாக்குமூலமோ என்று சந்தேகப்படுபவர்கள் நிச்சயம் நரகத்துக்குத்தான் செல்வார்கள்.

முப்பது வழிகள் என்று குறிப்பிட்டு விட்டு எட்டு வழிகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே என்று முணுமுணுப்பவர்கள் முற்போக்கு முகாமிற்குள் நுழைய அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள். சொல்லப்பட்டதின் ஒழுங்கை பின்பற்றாததே கலகத்தின் குறியீடு என்று இதற்குள் யூகித்திருந்தவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புண்டு. (நியுமராலஜிப் படி எட்டாம் எண்தான் எனக்கு ராசியானது என்பதால்தான் எட்டு விதிகளுடன் இந்தப் பதிவு முடிக்கப்பட்டிருக்கிறது என்று காற்றுவாக்கில் வரும் உறுதியில்லாத தகவல்களை நம்பாதீர்கள்).

வாழ்க முற்போக்கு! வளர்க கலகவாதிகள்! ஒழிக பொதுப்புத்தி!


(முக்கியமான பின்குறிப்பு: விளிம்பு நிலை மனிதர்களுக்காகவும் சிறுபான்மையினருக்காகவும் நிஜமான அக்கறையுடன் சாய்வில்லாத மனப்பாங்குடன் இயங்கும் படைப்பாளிகள், களப்பணியாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவ்வாறான பாவனையில் போலித்தனமாக இயங்கி மற்றவர்களின் கவனத்தில் தம்மை எப்போதும் வைத்துக் கொள்ள நினைக்கும் அற்பர்களை கிண்டலடிக்க முயல்வதே இந்தப் பதிவின் நோக்கம்.)

பதிவு நீண்டுவிட்டதால் பின்னதொரு சாவகாசமான நேரத்தில் இன்னும் சில வழிமுறைகளும் விதிமுறைகளுமாக இந்தப் பதிவு update செய்யப்படலாம்.

தொடர்புடைய பதிவு

புகழ் பெற்ற சாமியாராக சில குறுக்கு வழிகள்

suresh kannan

Saturday, November 15, 2008

மழையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு

சந்திப்பு முடிந்து உடனே அலுவலகம் வரவேண்டியிருந்ததால் இந்தப் பதிவை எழுதச் சாத்தியமாயிற்று. இல்லையென்றால் திங்கட்கிழமைதான் எழுத முடிந்திருக்கும். முந்தைய பதிவில் கூறியிருந்தபடி சட்டக்கல்லூரி விவகாரம் குறித்து என்னுடைய புரிதலை இன்னும் விரிவாக்கிக் கொள்ளமென விரும்பியதால் அது குறித்து நடக்கவிருந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குச் சென்றிருந்தேன். யார் யார் வந்திருந்தார்கள், என்னென்ன சாப்பிட்டோம் என்ற சம்பிரதாயமான விஷயங்களை எழுத விரும்பவில்லை; அவகாசமுமில்லை.

நான் சென்ற போது ஏற்கெனவே குழுமியிருந்தவர்கள் (சுமார் 20 பேர்) இது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். ரவிஷங்கர் மற்றும் இராம.கி அருகில் அமர்ந்தேன். அப்போதே மழை தூறிக் கொண்டிருந்தது. எனவே எல்லோரும் எழுந்து அருகிலிருந்த மரத்தினடியில் கூடினோம். இது அருகிலிருந்த காவலர் துறையினரின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். "பிரதான சாலையின் அருகே கும்பலாக நிற்காதீர்கள், கலைந்து செல்லுங்கள், அல்லது மணல்பரப்பிற்கு உள்ளே சென்று பேசுங்கள்" என்று அவர்கள் சொல்வதாக பாலபாரதி சொன்னதையடுத்து எல்லோரும் சற்று உள்ளே சென்றோம். அப்போதும் அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் "ஒன்றும் பிரச்சினையில்லையே?" என்று நட்பாக (?) கேட்டு விட்டுச் சென்றார்.

இந்தக் குழப்பத்தினால் பேச வேண்டிய பிரச்சினை குறித்தான இயல்பான தயக்கம் பொதுவாக எழுந்தது. தெளிவான குரலில் வளர்மதி பேசியதை மாத்திரம் சற்று சொல்ல விரும்புகிறேன். (ஏதேனும் கருத்துப்பிழை இருந்தால் வளர்மதியோ இதர நண்பர்களோ திருத்தலாம்). 1988கள் முதல் சட்டக்கல்லூரியில் அவர் இருந்ததையொட்டியும் அப்பிரச்சினையை அப்போதிலிருந்து தொடர்ச்சியாக அவதானித்தது குறித்ததுமான அனுபவத்தில் அவர் சொன்னது:

()

"தலித் மாணவர்களுக்கும் இதர பிரிவினருக்கும் குறிப்பாக தேவர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னரே பிரச்சினை இருந்து கொண்டிருந்தது. தேவர் ஜெயந்தி விழா போஸ்டரில் கல்லூரியின் பெயரை குறிப்பிடும் போது திட்டமிட்டே அம்பேத்கர் பெயரை விடுபடச் செய்ததினால் (இதுவே ஒரு தீண்டாமையின் குறியீடு) தலித் மாணவர்கள் கோபமாக இருந்தார்கள். தேர்வு நாளன்று காலை தேர்வு முடிந்தவுடன் வெளியே வந்த சித்திரைச் செல்வன் (?) என்ற தலித் மாணவரை தேவர் இன மாணவர்கள் கத்தியால் தாக்கியதில் அவர் காது அறுந்து போய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இந்தச் சம்பவம் எந்த மீடியாவிலும் வெளியே வரவில்லை. அவரைச் சந்திக்க எந்த பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிர்வினையாகத்தான் மாலையன்று தலித் மாணவர்கள் தேவர் இன மாணவர்களை சூழந்து தாக்கினார்கள். எனவே மீடியாக்களிலும் பொதுமக்களாலும் பெரிதும் பேசப்பட்ட இந்த சம்பவம் ஒரு reaction. மூல காரணமான action-ஐ பற்றி யாருக்குமே தெரியாது. எனவே அது குறித்து யாரும் பேசவில்லை. தலித் மாணவர்கள் வன்முறையாளர்கள் என்பதை நிறுவுவதற்காக இந்தச் சம்பவத்தை சில அரசியல் சக்திகள் (குறிப்பாக தேவர் பேரவை, சென்னையிலிருக்கும் தேவர் எம்.எல்.ஏ. ஒருவர்) பயன்படுத்திக் கொள்கின்றன.

பத்திரிகையும், பொதுமக்களும், பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்பிரச்சினையை ஆழமாக அன்றி மேலோட்டமாக உடனே எதிர்வினையாற்றும் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதுகின்றனர். இது தவறு. ஒரு பிரச்சினை எழும் போது உடனே எதிர்வினையாற்றாதீர்கள். அது குறித்த பின்னணிகளையும் சற்று கவனித்துப் பாருங்கள்."

()

'கண்ணெதிரே நடந்த வன்முறையை தடுக்காமல் நின்றிருந்த காவல்துறையினரை'ப் பற்றி பதிவர் நர்சிம் கேள்வி எழுப்பினார். ஆனால் காவல்துறையினருக்கும் இருக்கும் சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் முன்னர் அனுபவங்களில் சட்டக்கல்லூரி பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினையை எதிர்கொண்டதைப் பற்றியும் உரையாடல் தொடர்ந்தது.

"தலித் மாணவர்கள் குறித்து நீங்கள் சொன்ன பின்னணி சரி. ஆனால் அதையெல்லாம் சொல்லி இந்த வன்முறையை நீங்கள் நியாயப்படுத்த விரும்புகிறீர்களா? என்று நான் வளர்மதியிடம் கேள்வியெழுப்பிதற்கு "நிச்சயமாக இல்லை. ஆனால் வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள நேரிடுகிறது. இது தவிர்க்கவியலாதது" என்று பதில் சொன்னார்.

இந்தச் சம்பவம் குறித்து எழுதப்பட்ட சில பதிவுகளின் தலைப்புகளில் 'மிருகங்கள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை ஒரு நண்பர் ஆட்பேசித்தார்.

பின்னர் மழை சற்று பலமாக செய்ததால் வேறு வழியின்றி உரையாடலை தொடர இயலாமல் போயிற்று.

பின்னர் தனித்தனி குழுவாக உரையாடல் சிறிது நேரம் தொடர்ந்தது. காவல்துறையினருக்கு இருக்கும் சில கட்டுப்பாட்டு பயிற்சி குறித்தும் அதனை மீறினால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் எனவே இவ்விஷயத்தில் பெரும்பாலோர் காவல்துறையினரை குறைகூறுவது சரியாகாது என்று பதிவர் கும்கி கூறினார்.

பின்னர் வளர்மதியிடமும் ஜோவ்ராம் சுந்தரிடமும் இன்ன பிற நண்பர்களிடமும் நிகழ்ந்த சொற்ப நேர உரையாடலோடு நான் விடைபெற்றேன்.

வளர்மதி சொன்ன சம்பவம் குறித்து (சித்திரைச் செல்வன் தேவர் இன மாணவர்களால் தாக்கப்பட்டது) ஏன் எந்த பத்திரிகையோ தலித் அமைப்போ இன்னும் வெளிவரச் செய்யவில்லை என்றும் குழப்பத்தோடும் நான் அலுவலகம் வந்தடைந்து இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது குறித்து இன்னும் நிறைய உரையாடவும் சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது என்பது மாத்திரம் புரிந்தது.

இதர வலைப்பதிவு நண்பர்கள் இந்தச் சந்திப்பை இன்னும் விரிவாகவும் சுவாரசியமாகவும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன். பதிவர் சந்திப்பு இனிமையாக நிறைவுற்றது என்று சம்பிரதாயமாக சொல்லமுடியாமல் மழை தன் கடமையைச் செய்தது.

(அவசரத்தில் எழுதுவதால் முழுமை பெறாத பதிவிது என்று எனக்கே புரிகிறது. என்றாலும் இந்தச் சந்திப்பைப் பற்றி முதலில் எழுதினேன் என்ற அசட்டுப் பெருமையை பெற விரும்பியதால் இதை தவிர்க்க முடியவில்லை. :-)

suresh kannan

கலவரங்களும் சம்பிரதாயங்களும்

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் தாக்குதல் விவகாரத்தை எதிர்பார்த்த படியே தமிழக அரசு தனது வழக்கமான சம்பிதாயங்களுடன் எதிர்கொண்டிருக்கிறது. காவல்துறை ஆணையர் மாற்றம், அதிகாரிகளின், கல்லூரி முதல்வரின் தற்காலிக பணிநீக்கம், விசாரணை கமிஷன் ஆகிறவற்றுடன் அடிபட்ட மாணவர்களுக்கான மருத்துவ வசதி என்ற தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் கண்ணுக்கெதிரே நடந்த மனித உரிமை மீறலை ஏன் காவல்துறையினர் தடுக்க முயற்சிக்கவில்லை என்பது பற்றியோ அவர்கள் செயல்படாததற்கு பின்னணயில் உள்ள சக்திகள் பற்றியோ (விசாரணை கமிஷன் அறிக்கை வெளிவந்தாலும் கூட) யாருக்கும் தெரியப்போவதில்லை. மேலும் இவ்வாறான சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்காக அரசு இயந்திரம் எடுக்கப்போகும் முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள், முயற்சிகள் குறித்தும் அரசு யோசிக்குமா அல்லது இவர்களேதான் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. அடுத்ததொரு பரபரப்பான சம்பவத்தில் மக்கள் இதை மறந்து போவார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் தற்காலிக நிவாரணங்களை வைத்து மழுப்பியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு 'இது ஒரு சிறிய சம்பவம்' என்று என்று சட்டசபையில் வருணித்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். குறைந்த பட்சம் இரண்டு பேராவது செத்திருந்தால்தான் அதை கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு விதிகள் ஏதாவது சொல்கிறதா என்பது பற்றி தெரியவில்லை.

Photobucket

இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிக கவனம் பெற்றதிற்கு தொலைக்காட்சி ஊடகங்கள்தான் பிரதான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தாக்குதலின் சலனக்காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்த அனைவருக்குமே ஏதோவதொரு பாதிப்பை அது ஏற்படுத்தியிருக்கும். இதை விடவும் எத்தனையோ கொடுமையான நிகழ்வுகள், மனித உரிமை மீறல்கள், தாக்குதல்கள், மரணங்கள்... போன்றவை வெளிஉலகத்தின் கவனத்தைப் பெறாமலேயே போயிருக்கும்தான். ஆனாலும் ஜெயா தொலைக்காட்சி குழுமம் இந்தக் காட்சிகளை மக்களிடம் திரும்பத் திரும்ப காட்டி ஊடக வன்புணர்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திவிட முடியும் என்ற வருங்கால திட்டத்துடன் இந்த மூளைச்சலவை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வன்முறைக் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஜெயா தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுவது குறித்து இப்போதைய ஆளுங்கட்சி ஆட்சேபிக்கிறது. ஆனால் கருணாநிதி கைதுக் காட்சிகள் சன்டிவியில் திரும்பத்திரும்ப காண்பிக்கப்படுவதை இப்போதைய எதிர்க்கட்சி அப்போது எதிர்த்தது. தனக்கென்று வரும்போது அறத்தை தலைகீழாக திருப்பிப் பிடித்து பார்ப்பது அரசியல் அநாகரிகங்களுள் ஒன்று.

இந்த மாதிரியான வன்முறை நிகழ்வுகளை கண்டிக்க தமிழகத்தின் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அருகதையோ தகுதியோ இல்லை. வன்முறையின் ஊற்றுக் கண்களே இந்த அரசியல் கட்சிகள்தான். மற்றவர்களை கைநீட்டி குற்றஞ்சாட்டுவதன் மூலம் தன்னை சுத்தமாக காட்டிக் கொள்ளும் யுக்தி இது என்பதை பொதுமக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

()

சட்டக்கல்லூரி மாணவர்கள் மாத்திரமல்ல, சட்டம் படித்து முடித்து வழக்கறிஞர்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களே பெரும்பான்மையான சம்பவங்களில் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு குற்றத்தில் கைது செய்யப்படும் வழக்கறிஞரை, சக வழக்கறிஞர் குழு வன்முறையில் ஈடுபடுவதின் மூலமும் தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கை வைத்து காவல்துறையினரை மிரட்டுவதின் மூலம் மீட்டுக் கொண்டு வருவது தொடர்ந்து நிகழும் விஷயமாகிவிட்டது. தொழில்தர்மம் என்ற அடிப்படையில் பெரும்பாலான ரவுடிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பை இவர்களே ஏற்படுத்தித் தருகிறார்கள்.

பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றின் உற்பத்திப்பிரிவில் பணியாற்றும் ஒருவர், சாவதானமாக பிஸ்கெட்டுகளை எடுத்து சாப்பிடும் உரிமையை தவறில்லை என்று தன்னிச்சையாக நினைக்கிறாரோ, அவ்வாறே சட்டரீதியான செயல்களில் புழங்கும் வழக்கறிஞர்கள் சட்டத்தை தாம் மதிக்கத் தேவையில்லை, அது மற்றவர்களுக்குத்தான் என்றான ஒரு மனப்பான்மையை தன்னிச்சையாக பெற்றிருக்கிறார்களோ என்ற கேள்வியையும் இம்மாதிரியான நிகழ்வுகள் எழுப்புகின்றன.

இது எல்லாத்துறையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே அதை மீறுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. ஹெல்மேட் அணிய வேண்டும், சாலைவிதிகளை மீறக்கூடாது என்று உபதேசிக்கும், மற்றவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள போக்குவரத்து காவல்துறையினரே அவற்றை மீறுவது நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் ஒன்று. இந்த மாதிரியான போக்குகளை தடுக்க பயிற்சிக்காலத்திலேயே அவர்களுக்கு தாம் பங்காற்றும் துறை பற்றின முக்கியத்துவத்தை அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும். பணிக்காலத்தில் அவர்களின் விதிமீறல்களில் ஈடுபடவொட்டாமல் கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

()

கல்லூரி மாணவர் மோதல் சம்பவத்தை ஏதோ கல்லூரி மாணவர்களின் தகராறு என்றோ அல்லது போஸ்டரில் அம்பேத்கரின் பெயரை போடாததற்காக ஏற்பட்ட சில்லறைத்தகராறு என்றோ எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் பின்னணியில் இயங்கக்கூடிய சாதீயக் கூறுகளையும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட பிரிவினர் தாங்கள் படுகிற அவமானத்தை தாங்குகிற சுயபச்சாதாபத்தை மீறி ஆதிக்க சாதியினர் மீது வன்மமும் வெறுப்புமாக சமூகக் கோபத்தோடு பொங்கி வரக்கூடிய தருணங்களும் அமையும்தான். அது இயற்கைதான். அப்படியானதொரு தருணமாகத்தான் இந்தச்சம்பவத்தை பார்க்க நேரிடுகிறது என்றாலும் அதையே காரணம் காட்டி வன்முறை கலாச்சாரத்தை நியாயப்படுத்த முடியாது. அடிபடுவது ஆதிக்க இனத்தைச் சேர்ந்தவனாலும் இருந்தாலும் சரி; தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவனாலும் சரி இரண்டுமே தவறுதான். அடிபட்ட கதாநாயகன் வில்லனை திருப்பி அடிப்பது போன்ற உணர்ச்சியோடு இதை அணுகக்கூடாது. நாம் இன்று நாகரிகத்தின் உச்சியில் நவீனத்தின் குறியீடான கணனி முன் அமர்ந்திருந்தாலும் நம் ஆழ்மனதில் ஒரு காட்டுமிராண்டி உயிர்ப்போடு அமர்ந்திருக்கிறான் என்பதைத்தான் இம்மாதிரியான சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

சில புத்திஜீவிகள் பொதுப்புத்தியின் மூலம் இப்பிரச்சினையை அணுகுவது குறித்து விமர்சிக்கின்றனர். சரியான பார்வையாக இருந்தாலும் அது பொதுப்புத்தியின் வெளிப்பாடு என்கிற காரணத்தினாலேயே அதிலிருந்து மாறுபட வேண்டும் இந்த புத்திஜீவிகள் செயற்கையான தங்கள் சிந்தனையோட்டத்தை தயாரிக்கின்றனர். "இத்தன நாளா அடிவாங்கிட்டு இருந்தவன், இன்னிக்கு திருப்பி அடிக்கறான். இதுல என்ன தப்பு" என்கிறார் புத்திஜீவி நண்பரொருவர். அவர் ஜாதிக்கலாச்சாரத்தை வெறுப்பவராக இருந்தாலும் பிறப்பால் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவரான அவருக்கு அந்த ஒரு காரணத்திற்காகவே அவர் மீது வன்முறை தாக்குதல் நேர்ந்தால் அப்போதும் இதே மாதிரியான புத்திஜீவித்தனத்தோடு பார்ப்பாரா என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. ஆக.. அரசியல்வாதிகளுக்கும் இம்மாதிரியான புத்திஜீவிகளுக்கும் வித்தியாசமில்லை. மற்றவர்களுக்கு என்றால் ஒருமாதிரியும் தனக்கு என்றால் வேறுமாதிரியும் யோசிப்பார்கள்.

()

நாடகத்தனமாக இருந்தாலும் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் என் முன் பிரம்மாண்டமாய் நின்றிருக்கும் இந்தக் கேள்வியை கேட்க விரும்புகிறேன். படிக்காதவர்களை விட்டுத்தள்ளுவோம். (சில சமயம் படிக்காதவர்களே புத்திஜீவிகளை விட முறையாய் யோசிக்கிறார்கள்.) நன்றாகப் படித்த, பல்வேறு சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட சான்றோர்களே ஏன் ஜாதி, இனம், தேசம் போன்ற கற்பிதங்களை கடந்து வரமுடியாமல் குறுகிய மனப்பான்மையோடு இருக்கிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது? அவர்கள் கற்ற கல்வி இவ்வாறான கற்பிதங்களின் அபத்தம் குறித்து சிந்திக்க தூண்டவில்லையா? அல்லது சம்பாதிக்கும் நோக்கங்களுக்காக மட்டும்தான் நாம் கல்வி கற்கிறோரோமா? நம் கல்விமுறையின் அடிப்படையே தவறா?.

ஒரு வங்கியில் உயர்அதிகாரியாக பணியாற்றும் ஒருவரை அலுவலக பணி நிமித்தமாக சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் கேட்கும் சிடுசிடுப்பான கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்தேன். என்னுடைய சார்பில் சொல்ல வேண்டிய விளக்கங்களை தெளிவாக எடுத்துரைத்தேன். என்னிடம் உள்ள எல்லா பொறுமையையும் செலவழித்து விட்ட கணத்தில் அவர் சொல்கிறார். "உங்க பாஸ் பிராமின்றதாலதான் இந்த ஆர்டரை உங்களுக்கு தர்றேன். நீங்களும் பிராமினா?"

அவர் முகத்தில் காறித்துப்பும் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகையுடன் பதில் சொன்னேன். "இல்ல". நான் சென்றது அலுவலகம் சார்பாக என்பதால் என்னுடைய வழமையான கோபத்தை மிகுந்த சிரமத்தோடு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்டர் பேப்பரை அவர் முகத்திலேயே விட்டெறிந்து வந்து விடலாமா என்று கூட பிற்பாடு தோன்றியது. ஆனால் சாவகாசமாக யோசித்துப் பா¡க்கும் போது 'அவர் சிறுவயதிலேயே தன்னுடைய ஜாதி குறித்த பெருமையோடும் பிற ஜாதிகள் குறித்த வெறுப்போடும் அருவருப்போடும் வளர்க்கப்பட்டிருக்கலாம்.' இன்னும் கூட அந்த குறுகிய மனப்பான்மையை விட்டு வெளியே வராத அல்லது வரவிரும்பாதவரைக் கண்டு பரிதாபமே ஏற்பட்டது. சில கொள்கைகளை நாம் தீர்மானமாக பின்பற்ற விரும்பினாலும் நடைமுறையில் அது அவ்வளவு சாத்தியமில்லை என்பதை உணாத்தியது இந்தச் சம்பவம்.

()

கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொண்ட வன்முறையின் மீதான சம்பவம் குறித்து சில புரிதல்களை ஏற்படுத்துவதற்காக இன்று நடக்கவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பை பயன்படுத்தப் போவதாக லக்கிலுக் பதிவு மூலம் தெரிகிறது. இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இணையத்தில் எழுத வந்த புதிதில் இம்மாதிரியான சந்திப்புகளை நானும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பெரும்பான்மையான சந்திப்புகள் போண்டாவில் ஆரம்பித்து போலி டோண்டு போன்ற அபத்தமான சமாச்சாரங்களைப் பற்றி உரையாடுவதே தங்களின் பிரதான அஜெண்டாவாக வைத்துக் கொண்டு முடிந்து போவதினால் ஏற்பட்ட சலிப்பில் வலைப்பதிவர் சந்திப்பு என்றாலே அலர்ஜி தரும் சமாச்சாரமாகிவிட்டது. சில முக்கியமான ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்களை பெற்றதை மாத்திரம் இணையத்தினால் ஏற்பட்ட நன்மையாக சொல்லலாம்.

ஆனால் இதிலிருந்து விடுபட்டு முக்கியமானதொரு topical பிரச்சினை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என்ற தொனி லக்கியின் பதிவில் காணப்படுவதால் அதில் கலந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

suresh kannan

Thursday, November 13, 2008

சட்டம் பயிலும் மிருகங்கள்

'இளகிய மனதுடையவர்கள் இதைப் பார்க்க வேண்டாம்' என்ற முன்னெச்சரிக்கையுடனே அந்த செய்தித் துணுக்கு சன் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டாலும் 'என்ன இப்படி பயமுறுத்துகிறார்கள்' என்ற அலட்சியத்துடன்தான் தொடர்ந்து கவனித்தேன். ஆனால் அந்தக் காட்சிகளை பார்த்த கணத்தில் உடம்பெல்லாம் வெலவெலத்துப் போய்விட்டது. சற்று நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல் அமர்ந்தேன்.

Photobucket

சென்னை சட்டக்கல்லூரியில் இருபிரிவு மாணவர்களிடையே இருந்த விரோதப் போக்கு நேற்று கலவரமாக வெடித்தது. மாணவன் ஒருவனை இன்னொரு மாணவர்கள் குழு தாக்கிக் கொண்டிருந்தது. அவனை மீட்க கத்தியுடன் வந்த இன்னொரு மாணவன் அந்தக் குழுவை தாக்க முயன்றான். அந்தக் குழு தனியாக மாட்டிக் கொண்ட அந்த மாணவனை உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக அடித்தனர். அவன் விழுந்த அடியை தாங்க முடியாமல் கல்லூரியின் கேட்டிற்கு அருகாமையில் கீழே சாய்ந்த போதும் கூட மிருகவெறி கொண்ட அவர்கள் பிரக்ஞையின்றி கிடந்த அவனை ஓங்கி ஓங்கி உருட்டுக்கட்டையால் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தனர். அருகாமையிலேயே இருந்த காவல்துறையினர் இதை ஒதுங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்களே ஒழிய ஒருவன் உயிரிழக்கும் அபாயம் நேரக்கூடிய அந்தச் செயலை தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பதைபதைத்துப்போன பொதுமக்களும் பத்திரிகையாளர்களும்தான் காவல்துறையின் இந்த அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர்.

விடுதியில் தங்கியிருக்கும் தலித் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே தேவர் ஜெயந்தி விழா போஸ்டரில் பெயர் போடாததற்காக விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கலவரம் ஏற்படக்கூடிய சூழல் குறித்து காவல்துறையினருக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் முன்னமே தெரியும் என்றும் கூறப்படுகிறது. என்றாலும் இந்தக் கொடூரத்தை முன்னமே தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் யாரும் எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. தேர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பயங்கர ஆயுதங்களுடன் உலவிக் கொண்டிருந்த மாணவர்களையும் ஏன் காவல்துறை முன்னமே கைது செய்யவில்லை என்பதும் புரியவில்லை.

செய்தகளில் பதிவாகாமல் போன இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் எத்தனையோ?


()

சென்னையில் இருக்கும் கல்லூரிகளில் வன்முறை கலாச்சாரத்திற்கு பெரிதும் பெயர் போனவை பச்சையப்பன் கல்லூரியும், மாநிலக் கல்லூரியும், சட்டக் கல்லூரியும். எந்தவொரு சிறுபிரச்சினைக்கும் சாலையை மறிப்பது, பேருந்துகளை சேதப்படுத்துவது, குழுவாக அடித்துக் கொள்வது, பெண்களை கிண்டல் செய்வது, பொதுமக்களுக்கு இடையுறான காரியங்களை செய்வது போன்ற செயல்களில் காலங்காலமாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர். இவை அனைவருக்கும் தெரிந்த செய்திதான். சாதாரணனாக இருக்கும் தனியொருவன் வன்முறைக் கூட்டத்துடன் இணையும் போது அவனும் அந்தக் கூட்டத்தின் ஒரு துளியாக உருமாறுவது mob psychologyயின் அடிப்படை.

ஆனால் நேற்றைய சம்பவத்தை தொலைக்காட்சியிலும் நேரிலும் பார்த்தவர்கள் கல்மனதுடையவர்களாக இருந்தாலும் நிச்சயம் பதறிப் போயிருப்பவர். வருங்காலத்தில் வழக்குறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் வரப்போகிறவர்களின் மனதில் இவ்வளவு வன்மமும் வன்முறையும் வெறுப்பும் கலந்திருப்பதைக் காணும் போது வருங்காலத்தில் பொதுமக்களுக்கு நீதி என்கிற சமாச்சாரம் கொஞ்சமேனும் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சட்டம் பயிற்றுவிக்க்ப்படுபவர்களே சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருப்பது நகைமுரணானது மாத்திரமல்ல கொடூரமாக செயலும் கூட.

காவல்துறையினர் தலையிடாமல் ஒதுங்கி நின்ற அரசியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்பவும் குழுவாக இணைந்து கலாட்டா செய்து தலைவலியாக இருக்கின்ற மாணவர்கள் எப்படியாவது தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று நினைத்தார்களா? எப்படியாவது இருக்கட்டும். கண்ணெதிரே நடக்கின்ற - அதிலும் தடுத்திருக்கக்கூடிய ஒரு கொடுமையை - தடுக்க காவல்துறையினரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. மனச்சாட்சி உள்ள ஒரு மனிதராக இருந்தால் கூட போதும். மிருகத்தனமாக அடித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் மீது கல்லையாவது விட்டெறிந்து அவன் கவனத்தை கலைக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தோன்றியது. ஆனால் நேரில் பார்த்திருந்தால் கையாலாகாதனமாக பார்த்துக் கொண்டிருப்பேனோ என்றும் தோன்றுகிறது.

()

இந்த விபரீதமான செயலுக்கு கருணாநிதி தலையிமலான திமுக அரசு நிச்சயம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

வீடியோவில் பதிவான காட்சிகளின் மூலம் வன்முறை கொலைவெறித்தாக்குதலை நடத்திய மாணவர்களை அடையாளங்கண்டு பயங்கரவாதிகள் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினரையும் முன்னமே தடுக்கத்தவறிய கல்லூரி நிர்வாகத்தினரையும் பதவிநீக்கம் செய்து கடமையை முறையாக செய்ய தவறியதற்காக வழக்குப்போட்டு சிறையில் தள்ள வேண்டும்.

வருங்காலத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க அனுமதி விண்ணப்பத்தில் இதுகுறித்து கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்தி மாணவர்களை முன்னரே எச்சரிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் போல மாணவர்களின் இளம்பருவத்திலேயே இவ்வளவு வன்முறை சார்ந்த எண்ணங்கள் கொண்டிருப்பதும் அதை சிறிதும் மனச்சாட்சியின்றி செயல்படுத்துவதும் வருங்கால தேசம் குறித்தான கவலையை அளிக்கிறது. இதுபோன்ற வன்முறைகளை முன்னரே யூகித்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

இம்மாதிரியான வன்முறை கலாச்சாரத்திற்கு திரைப்பட ஊடகங்களின் பங்கும் பிரதானமாக இருக்கிறது. கல்லூரியில் பத்து பேரை அடித்து வீழ்த்தும் மாணவனை நாயகனாக சித்தரிப்பது, இயல்பான காட்சியமைப்பு என்ற பெயரில் அடிப்பதையும் குருதி வழிவதையும் குரூரமாக அமைப்பது போன்ற காட்சிகள் இள நெஞ்சங்களில் நஞ்சைக் கலக்கின்றன.

ஆனால் இந்த அரசு கடுமையானதொரு நடவடிக்கையை எடுக்கப் போகிறதா அல்லது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி இதை மழுப்பப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

()

போகிற போக்கில் செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் பார்க்காமல் புறக்கணிப்பதே மனநிலையை பாதிக்காமல் வைத்திருக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் பிரதானமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் படித்தவொரு காலை நேரத்தையே கலைத்துப் போட்டது. ஆர்.கே. சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த பைண்டிங் பிரஸ் தொழிலாளி ஒருவரை வாகனம் ஒன்று இடித்து தள்ளியிருக்கிறது. பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை பார்த்ததும் தள்ளியிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ சூழ்ந்து பாய்ந்து வந்திருக்கிறார்கள். வாகனத்தில் இருந்தவர்கள் 'நாங்களே இவரை மருத்துவனையில் சேர்த்து விடுகிறோம்' என்று கூறி ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் பயந்து போய் எங்கோ ஒரு பிளாட்பார்மில் கிடத்தி விட்டுச் சென்று விட்டார்கள். 'உடனே கொண்டு வந்திருந்தால் உயிர் பிழைக்க வைத்திருந்திருக்கலாம்' என்று கூறுகின்றனர் அவர் உடலை பிற்பாடு பரிசோதித்த மருத்துவர்கள்.

21-ம் நூற்றாண்டில் நாகரிகத்தின் உச்சியில் சென்று கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் நம்மிடம் இன்று நுட்பத்தின் எல்லா வசதிகளும் உண்டு. அடிப்படையான மனிதம்தான் இல்லை.

image courtesy: www.dailythanthi.com

suresh kannan

Monday, November 10, 2008

மூத்திரம் முட்டும் நகைச்சுவை

முந்தைய பதிவின் தொடர்ச்சி

Photobucket

(2) The Party (1968)

பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகரான Peter Sellers, Hrundi V. Bakshi என்ற இந்திய நடிகராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் தயாரிப்பாளர் தரும் விருந்தொன்றிற்கு பக்ஷி கலந்து கொள்வதும் அங்கு நடக்கும் கலாட்டாக்களும்தான் முழுப்படமும். விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பக்ஷிக்கு கிடைப்பதே விநோதமானதோர் நிகழ்வு.

பீரியட் பிலிம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் படப்பிடிப்பில் ஒரு இந்தியச் சிப்பாயாக நடித்துக் கொண்டிருக்கிறார் பக்ஷி. படப்பிடிப்பின் கடைசி நாளான அன்று ஒரு பெரிய மாளிகை வெடித்துச் சிதறும் காட்சி கடைசி ஷாட்டாக எடுக்கப்படவிருக்கிறது. மாளிகை வெடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிகழ்ந்து கொண்டிருக்க, பக்ஷியின் காலில் ஏதோ ஒட்டிக் கொள்வதால் தன்னிச்சையாக குண்டு வெடிப்பதற்காக அழுத்தப்படும் வால்வு மீது காலை வைத்து அதைப் பார்க்கிறார். கேமராவில் படமாகும் முன்பே மாளிகை வெடித்துச் சிதறுகிறது. அதிர்ச்சியடையும் பட இயக்குநர் பக்ஷியை அங்கிருந்து துரத்தியடிப்பதோடு பட தயாரிப்பாளருக்கு தொலைபேசி பக்ஷியை எந்தவொரு படத்திலும் பணியாற்றவொட்டாமல் தடை செய்யச் சொல்கிறார். தயாரிப்பாளர், பக்ஷியின் பெயரை அவசரத்தில் ஒரு காகிதத்தில் குறித்துக் கொள்கிறார். அந்தக் காகிதம் விருந்திற்காக அழைக்கப்படவிருப்பவர்களுக்கான பட்டியல்.

இப்படியாக தண்டனைக்குப் பதிலாக விருந்தில் கலந்து கொள்ளும் பக்ஷியின் நகைச்சுவையான நடவடிக்கைகளும் அதனால் ஏற்படும் குழப்பங்களும்தான் படம் முழுதுவதுமாக நிகழ்கிறது.

மூத்திரம் முட்ட கழிவறைக்கு நீங்கள் விரைந்து கொண்டிருக்கும் போது யாராவது உங்களை நிறுத்தி ஒரு நகைச்சுவை துணுக்கை சாவகாசமாக சொன்னால் எப்படி உணர்வீர்கள்? இந்தப் படத்தின் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகள் அப்படித்தான் ஒரு அவஸ்தைத் தன்மையோடு Black comedy போல் அமைந்திருக்கின்றன. இப்போதைய காலகட்டத்தோடு ஒப்பிடும் போது படத்தின் நகைச்சுவை சுமாராகத்தான் இருக்கிறது என்றாலும் இது 1968-ல் வெளிவந்த படம் என்பதை வைத்துப் பார்க்கும் போது அந்தக் கால கட்டத்தில் இது பெருவாரியான வரவேற்பைப் பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது.

விருந்தில் படத்தயாரிப்பாளரால் துன்புறுத்தப்படும் ஒர் ஆரம்ப நடிகையை பக்ஷி காப்பாற்றுகிறார். அவர்களுக்கிடையே ஏற்படும் மெலிதான காதலோடு படம் நிறைவுறுகிறது.

()

பாத்திரப்படி இந்திய நடிகர் என்பதால் இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் பீட்டர் செல்லர்ஸ். (சினிமாவிற்கு முன்பு வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரிந்த இவருக்கு இதே போல பல மொழிகளை அந்நந்த பிரத்யேக accent-ல் பேசத் தெரியும்.) அறிமுகமில்லாத இருவர் உரையாடிக் கொண்டிருக்கும் அபத்தமாக நுழைந்து ஏதோ பேசுவது, அசட்டுத்தனமாக சிரிப்பது, தாழ்வுணர்ச்சியுடன் செயல்படுவது என்று ஒரு சராசரி இந்தியக் குணத்தை இவர் இயல்பாக வெளிப்படுத்தினாலும் நமக்குத்தான் சங்கடமாக இருக்கிறது. கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் முகச்சாயலில் இருக்கும் இவருக்கு இந்தியனின் வேடம் மிகப் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. படத்தின் டைட்டில் காட்சிகள் இவர் சித்தார் வாசிக்கும் ஒலிப் பின்னணியில் தோன்றுகின்றன.

இந்தப்படத்தில் வெயிட்டராக நடிக்கும் துணைநடிகர் ஒருவரின் (Steven Franken) நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருப்பதோடு பல முறை சிரிப்பை வரவழைப்பதாகவும் உள்ளது. விருந்தினர்களுக்கு வழங்க வேண்டிய மதுவகைகளை யாருக்கும் தெரியாமல் குடித்துவிட்டு பார்ட்டியில் ஏற்படும் நகைச்சுவை கலாட்டாக்களுக்கு இவரும் பொறுப்பேற்கிறார்.

பீட்டர் செல்லர்ஸ் மூன்று வேடங்களில் இவர் நடித்த Dr.Strangelove மிகச்சிறப்பான படமாக பேசப்படுகிறது.

சத்யஜித்ரே ஹாலிவுட் படமாக தயாரிக்க திட்டமிருந்த The Alien படத்திற்காக பீட்டர் செல்லர்ஸைப் பற்றி கேள்விப்பட்டு அவரை தன்னுடைய படத்தில் உபயோகிக்க விரும்பியிருக்கிறார். ஆனால் The Party படத்தைப் பார்த்தவுடன் பக்ஷி இந்தியர்களை கிண்டலடிப்பதைக் கண்டு அருவருத்து தன்னுடைய திட்டத்தை மாற்றிக் கொண்டார் என்கிறது விக்கிபீடியாவிலுள்ள ஒரு தகவல்.

()

சிறந்த படம் என்று சொல்லாவிட்டாலும் Peter Sellers என்கிறதொரு சிறப்பான நகைச்சுவை நடிகரின் அறிமுகத்திற்காக இந்தப்படத்தைப் பார்க்கலாம்.

suresh kannan

Saturday, November 08, 2008

இயக்குநர் பாலா இதைப் பார்த்திருப்பாரா?

டைம்ஸ் ஆ·ப் இந்தியா நாளிதழின் வெள்ளி இணைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு சிறந்த படங்களின் dvd-ஐ பரிந்துரைப்பார்கள். கூடவே ஏதாவதொரு பிரபலமும் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அப்படியாக இந்தி திரைப்பட மதூர் பண்டார்கர் சென்ற வாரம் பகிர்ந்து கொண்ட குறிப்புகளில் காணப்பட்ட திரைப்படங்கள் (1) Midnight Express (2) Peter Sellers-ன் The Party. மதூர் எனக்குப் பிடித்தமான திரைப்பட இயக்குநர் என்பதால் அவர் பரிந்துரைத்த படங்களை தேடிக் கண்டுபிடித்துப் பார்த்தேன்.

(1) Midnight Express (1978)

Photobucket

இளைஞன் ஒருவன் பணத்திற்காக செய்யும் தவறொன்றினால் அந்நிய தேச சிறையில் கொடூரமான தண்டனையும் தனிமையையும் அனுபவிப்பதும் தன்னுடைய மனிதத்தை இழப்பதையும் இந்தப்படம் நுணுக்கமாக நம் முன் வைக்கிறது.

அமெரிக்கனான Billy Hayes போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது தீவிரவாதிகளின் தேடுதலுக்காக துருக்கி காவல்துறையினர் செயல்படும் போது விமானநிலையத்தில் பிடிபடுகிறான். (இந்தக் காட்சிகளில் பில்லிக்கு ஏற்படும் பதட்டத்தையும் பயத்தையும் பார்வையாளர்களுக்கும் ஏற்படுமாறு காட்சியமைத்திருப்பதும் அதற்கும் பின்னணி இசையாக இதயம் துடிக்கும் ஓசையை பயன்படுத்தியிருப்பது சுவாரசியம்). போதைப் பொருளை வைத்திருந்ததற்காக சுமார் 4 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கிறது. அங்கேயிருக்கும் மேற்கத்திய சிறைவாசிகளின் நட்பு கிடைக்கிறது. அவர்கள் துருக்கி மக்களின் அநாகரிகமான போக்கை கிண்டல் செய்கின்றனர். முதலில் மிகுந்த தனிமையை உணரும் பில்லி பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை ஓட்டுகிறான். என்றாலும் விடுதலையாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவனுடைய வழக்கு மீண்டும் அரசு தரப்பால் தோண்டியெடுக்கப்பட்டு சிறைத்தண்டனை 30 வருடங்களுக்கு நீடிக்கிறது. வெகுண்டெழும் பில்லி நீதிமன்றத்தில் துருக்கி மக்களை 'பன்றிகள்' எனத் திட்டுகிறான். சிறையினுள் தலைமை அதிகாரியால் நையப் புடைக்கப்படுகிறான். எல்லாச் சிறைகளையும் போலவே அங்கும் பணமிருந்தால் போதைப் பொருள் உட்பட எல்லா வசதியும் கிடைக்கிறது.

அவனுடைய சிறைத் தோழர்களுடன் அங்கிருந்து தப்பிப்பதற்காக திட்டமொன்று (சிறைவாசிகளின் சங்கேத மொழியில் Midnight Express) மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிகிறது. எப்போதும் காவல்துறையினரிடம் மற்றவர்களைப் பற்றி உளவு சொல்லி பாராட்டைப் பெறும் சமையல்காரன் இதையும் போட்டுக் கொடுத்து விடுவதில் பில்லியின் நண்பன் செமத்தியாக அடிவாங்கி உயிர்போகும் ஆபத்தை எதிர்கொள்கிறான். சமையல்காரனை சரியான இடத்தில் அடித்து பழிவாங்க நினைக்கும் பில்லி சிறைவாசிகளிடமிருந்து லஞ்சமாய்ப் பெற்று ஒளித்து வைத்திருக்கும் பணத்தை எரித்து விடுகிறான். சமையல்காரன் குய்யோ முய்யோவென்று அலறி அதிகாரியிடம் புகார் செய்கிறான். பணத்தை தேடி வரும் அதிகாரி பில்லியின் நண்பனை அழைத்துச் செல்ல கோபமுறும் பில்லி சமையல்காரனை நன்றாக அடித்து நாக்கைக் கடித்து துப்புகிறான்.

பின்பு மனநிலை பிறழ்ந்தவர்களுக்கான முகாமில் அடைக்கப்படும் பில்லி புத்தி பேதலித்துப் போய் கிடக்கிறான். வெளியில் உள்ள நண்பன் ஒருவனிடமிருந்து வந்த பணத்தை வைத்து காவல்அதிகாரியிடம் தன்னை மருத்துவமனைப் பிரிவில் சேர்க்கச் சொல்கிறான். பணத்தை வாங்கிக் கொள்ளும் அவன் பில்லியை தனியறைக்கு அழைத்துச் சென்று பளாரென்று அறைந்து அவனுடன் உறவு கொள்ள முயல்கிறான். பில்லி அவனை தள்ளவிட சுவற்றில் அறையப்பட்டிருக்கும் ஆணி தலையை தாக்கி அதிகாரி இறந்து போகிறான். பின்பு அதிகாரியின் சீருடையை அணிந்து பில்லி தப்பிப்பதோடு படம் நிறைவுறுகிறது.

()

Billy Hayes என்பவருக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை வைத்து அவர் எழுதியிருக்கும் நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் திரைக்கதையை Oliver stone எழுத Alan Parker இயக்கியிருக்கிறார். Billy Hayes-ஆக Brad Davis மிக அருமையாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளமலிருக்க அவரின் பரிதவிப்பும் சிறையின் தனிமையில் புலம்புவதும் தண்டனை நீட்டிக்கப்பட்டதும் நீதிமன்றத்தில் வெகுண்டெழுவதும் பின்பு புத்தி பேதலித்த நிலைக்கு மாறுவதும் .. என காட்சியின் தொடர்ச்சியாக அவரின் முக பாவங்களும் உடல் மொழியும் மிக அற்புதமாக மாறுகின்றன. படத்தின் பின்னணி இசையும் பல இடங்களில் மிக அற்புதமாக ஒத்துழைக்கிறது.

சிறையிலிருந்து தன் மகனை வெளியே கொண்டு வர நினைக்கும் பில்லியின் தந்தையும் அவரும் உரையாடும் இடங்களும் தன் மகனை வெளியே கொண்டு வர இயலாத தன் கையாலாகததனத்தை உணர்ந்து தந்தை வெடிக்கும் இடமும் மிக அற்புதமானவை. மனம் பேதலித்த நிலையில் இருக்கும் பில்லியை தனியறையில் காண வருகிறாள் அவனின் காதலி. அவளை கம்பிக்கு மறுபுறமடமிருந்து மேலாடையை கழற்றச் சொல்லி பில்லி சுயமைதுனம் செய்வதும் அதைக் கண்டு கதறியழும் காதலியின் சோகமுமான காட்சிகள் சற்று செயற்கையாக ஏற்படுத்தப் பட்டாற் போல தெரிந்தாலும் மனித மனம் எந்நிலையில் எவ்வாறு இயங்கும் என்பதை நாம் யூகிக்க முடியாமென்பதால் மிகைப்படுத்தப்பட்டது என்றும் சொல்ல இயலவில்லை.

சிறையில் நடக்கும் சண்டைக் காட்சிகள், பில்லி சமையல்காரனின் நாக்கை கடித்து துப்பி வெறி பிடித்தவன் போல் கூவுவது, பின்பு காட்டப் பெறும் மனநிலை பிறழ்ந்தவர்களின் காட்சிகள் போன்றவை முறையே இயக்குநர் பாலாவின் பிதாமகன், சேது ஆகியவைகளை நி னைவுப்படுத்துவது போல உள்ளது. இந்தப்படத்தினால் பாலா inspire ஆகியிருக்கலாம் என்பது என் யூகம்.

இந்தப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான அகாதமி விருது Oliver stone-க்கிற்கு கிடைத்தது. துருக்கி மக்களை இழிவுபடுத்தினாற் போல் அமைத்த காட்சிகளுக்காக பிற்பாடு அவர் துருக்கி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

()

Peter Sellers-ன் The Party என்கிற நகைச்சுவைப்படத்தைப் பற்றி அடுத்த பதிவில் எழுத முயல்கிறேன்.

suresh kannan

Thursday, November 06, 2008

எம்.ஜி.ஆரால் அடி வாங்கினேன்

தங்கநகை போல் பழைய படங்களையும் பாலீஷ் செய்து மறுவெளியீடு செய்வது தற்போதைய பேஷன். Mughal-e-Azam வண்ணத்தில் வெளிவந்த போது அந்தப்படத்தின் ரசிகர்கள் அகமகிழந்து போனார்கள். அதே போல் எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன், அடிமைப் பெண் என்று ஆரம்பித்து சமீபத்திய 'உலகம் சுற்றும் வாலிபன்' வரையான மறுவெளியீடுகளும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவதை கவனிக்கும் போது நாம் இன்னும் பழமையைப் போற்றுவதில் உள்ள குணம் தெளிவாகிறது.

வடசென்னையில் உள்ள நடராஜ் தியேட்டரை கடக்கும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் அப்போது வெளியிடப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்குக்கூட நட்சத்திர அட்டைகளும், காகித மாலைகளும் அணிவிக்கப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் கடைசிப்படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வெளிவந்தது 1978-ல் என்று நினைக்கிறேன். ஒருவர் நடிப்பதை நிறுத்தி 30 ஆண்டுகள் கழித்தும் கூட அவரது ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பது வியப்புக்குரியது. பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டு முதல்வரானது கூட இதற்கொரு துணைக்காரணமாக இருக்கலாம். 'எம்.ஜி.ஆர் இறந்து போய் பல வருடங்களாகிறது' என்று சொன்னதை நம்ப மறுத்து அவ்வாறு சொன்னவரை அடிக்கப்போன ஒரு குக்கிராமத்து மூதாட்டியைப் பற்றி எதிலோ படித்த நினைவு. இது பத்திரிகைகள் கட்டிவிட்ட கதையாக இருக்கலாம் என்றாலும் யோசித்துப் பார்க்கும் போது அது உண்மையாகக் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். பதின்ம வயதுகளில் நண்பன் ஒருவருடன் 'ஏதாவதொரு திரைப்படத்திற்கு செல்லும்' திட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது நண்பனின் நண்பன் (எனக்கு அறிமுகமில்லாதவன்) அங்கு வந்து கலந்து கொண்டான். அப்போது மறுவெளியீடாக வந்திருந்த எம்.ஜி.ஆர் படத்திற்கு செல்லலாமா என்று பேச்சு எழுந்தது. உலகத்திலேயே எனக்கு பிடிக்காதவைகளின் பட்டியலில் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பிரதான இடமுண்டு. இன்று வரை கூட எந்தவொரு எம்.ஜி.ஆரின் படத்தையும் முழுமையாக நான் பார்த்ததில்லை. அதன் அபத்தம் தாங்காமல் சில நிமிடங்களிலேயே எழுந்து சென்று விடுவேன். வேறுவழியில்லாத ஒரு சூழ்நிலையில் 'உலகம் சுற்றும் வாலிபனை' பார்க்க திரையரங்கத்திற்குச் சென்று தாங்க முடியாமல் இடைவேளையில் அலறியடித்து வெளிவந்த ஒரே ஒருவன் நான். மேலும் சிவாஜியின் படங்கள் மீது எனக்கு அப்போது பிரியமான அபிமானமுண்டு. எம்.ஜி.ஆர் vs சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொண்ட கலாச்சாரத்தின் அடுத்தகட்டம் ரஜினி vs கமலாக வளர்ந்திருந்த காலகட்டமது.

எம்.ஜி.ஆர் படங்கள் எனக்கு பிடிக்காது என்று தெரிந்திருந்தும் நண்பன் கேட்கிறானே என்ற எரிச்சலில் ''அந்த கிழபாடு படத்தையெல்லாம் எவன் பாப்பான்?" என்று எகத்தாளமாக கூறினேன். அடுத்த கணமே பலத்த சப்தம் ஒன்று கேட்டதும் என் கண்களில் பொறி பறந்து சற்று இருட்டானதும் ஒருசேர நிகழ்ந்தது. புதிதாக வந்தவன் என் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறான் என்று உணர்ந்து கொள்ள சில கணங்கள் பிடித்தது.

இன்றைக்கு Brand image பற்றி பேசுபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரிடம் பாடம் கற்க வேண்டும். அந்தளவிற்கு ஆரம்பம் முதலே மிகக் கவனமாக தனது பொது ஆளுமையை வளர்த்துக் கொண்டவர். தனக்குப் பிடிக்காதவர்களை அடிப்பார், பழிவாங்குவார் போன்ற முணுமுணுப்புகளெல்லாம் மக்களின் பிரியத்திற்கு முன்னால் அடிபட்டுப் போனது. நடிகர் எம்.ஜி.ஆரை விட அரசியல்வாதி எம்.ஜி.ஆரே எனக்கு பிடித்தமானவர். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் தரும் அவருடைய போக்கு விதிவிலக்கான ஒன்று.

சினிமாவில் கூட அவரது கவனம் அடித்தட்டு மக்களிடம் சென்று சேரவேண்டும் என்பதாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடலொன்றிற்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டி எம்.ஜி.ஆருக்கு ஒலிப்பதிவுக் கூடத்தில் போட்டுக் காட்டினாராம். (திரைப்பட உருவாக்கத்தில் இயக்குநர்களை மீறி கதாநாயகர்களின் தலையீட்டை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆராக இருக்கலாம்). உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் காரணமாக எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் மிகத்துல்லியமாக கேட்பதற்கு பிரம்மாண்டமாய் இருந்ததாம். ஆனால் இதை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர், "இந்தப்பாடல் ஒரு சாதாரண ரேடியோவில் ஒலித்தால் எப்படியிருக்குமோ, அப்படியாக அமைத்து காட்டுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால்தான் இதை ஏற்பேன்" என்றிருக்கிறார்.

()

பொதுவாக நான் பண்டிகைகளையும் பிறந்த நாட்கள் போன்றவைகளை கொண்டாடும் மனநிலையை எப்போதே இழந்து விட்டேன். முற்போக்கானதொரு பாவனையை நிகழ்த்துவதற்காக அல்ல. இயல்பாகவே இது நேர்ந்துவிட்டது. பண்டிகைகளின் போது சம்பிதாயத்திற்காகவும் பாசாங்காகவும் வாழ்த்துக்களை சொல்வதற்கோ பெறுவதற்கோ எரிச்சலாக இருக்கிறது. என்றாலும் மற்றவர்களை வருத்தப்பட வைக்கவோ, சங்கடத்திற்கு உள்ளாக்குவதோ நிகழக்கூடாது என்கிற காரணத்திற்காக முழுமையாக இதை பின்பற்ற இயல்வதில்லை. நம்முடைய கொண்டாட்ட மனநிலையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற போக்குடையவன். ஏதோ ஒரு நாளை குறித்துக் கொண்டு அதற்காக காத்திருந்து செயற்கையாக கொண்டாடுவது என்னைப் பொறுத்தவரை அபத்தமானதொன்றாக இருக்கிறது. இயந்திரத்தனமாக மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் இறுகிப் போன நம் மனநிலையை தளர்த்தும் விதமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிற பண்டிகைகளை மறுப்பது சரியா என்ற மாதிரியான கேள்விகளை எதிர்கொள்ளும் போது "நாம் கழிக்கும் ஒவ்வொரு நொடியையும் இயன்ற வரை கொண்ட முயல்வதுதான்" சிறந்த வாழ்க்கை முறையாக இருக்கும்" என்பதுதான் நான் அளிக்கும் பதிலாக இருக்கும். நடைமுறையில் இதை சாத்தியப்படுத்துவது சிரமமானதொன்றுதான் என்றாலும் இந்த மனநிலையை பின்பற்ற முயன்றால் நம் சந்ததிகளுக்கு அது இயல்பானதொன்றாக மாறிவிடும் என்று நம்புகிறேன்.

சில சமயங்களில் வீட்டிற்கு இனிப்பு வாங்கிச் செல்லும் போது "இன்றைக்கு என்ன விசேஷம்?" என்பார் மனைவி. "இனிப்பு சாப்பிடுவதற்கு என்ன விசேஷம் வேண்டியிருக்கிறது. சாப்பிட வேண்டும் போல் இருந்தது, அவ்வளவுதான்." குழந்தைகள் அந்தக் கேள்வியை கேட்பதில்லை. சந்தோஷமாக வாங்கிச் சாப்பிடுவார்கள். பல விஷயங்களை குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மழை பெய்தாலோ, மின்தடை ஏற்பட்டாலோ நம்மைப் போல் அவர்கள் எரிச்சலடைவதில்லை; அதையும் கொண்டாடுகிறார்கள்.

Photobucket

கெளதமின் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தினைப் பற்றினதோர் செய்தியைப் படிக்கும் போது எனக்கு ஓம்புரி நடித்த The King of Bollywood (2004) என்கிற இந்தி திரைப்படத்தின் ஞாபகம் வந்தது. World Movies சானலில் இந்தப் படத்தைப் பார்த்தேன். இப்பவும் எப்பவாவது போடுவார்கள்.

கரண் குமார் (சுருக்கமாக KK) என்ற கதாநாயக பாத்திரத்தில், திரையிலும் பின்னாலும் வணிகப்பட நாயகர்கள் செய்யும் அபத்தங்களையும் அலட்டல்களையும் முழுப்படத்திலும் மிகச்சிறப்பாக பகடி செய்திருப்பார் ஓம்புரி. அதில் வரும் ஒரு காட்சி என்னால் மறக்கவியலாதது. இழந்து போன தனது வணிகபிம்பத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓம்புரி ஒரு புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு கதை விவாதத்தில் ஈடுபடுவார். தந்தை, மகன் என்று இருவேடங்களில் நடிக்கும் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிடும். வெளிநாட்டிலிருந்து டாக்குமெண்டரி எடுக்க வந்து பின்னால் நடிகருக்கு நண்பராகிவிடும் ஒருத்தி, அந்தக்கதையை இன்னும் விரிவு செய்து ஒரு பேரன் கதாபாத்திரத்தையும் கொண்டு வருவார். பேரனாக நடிக்கப் போவது யார்? என்று அவள் அப்பாவித்தனமான ஒரு கேள்வியை கேட்டவுடன் ஓம்பரி உட்பட அந்த அறையில் உள்ளவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஓம்புரி இருக்கும் போது அந்தப் பாத்திரத்தையும் வேறு யார் நடிக்க முடியும்? என்பதை உணர்த்துவதாக இருக்கும் அந்தச் சிரிப்பு.

வாரணம் ஆயிரம் செய்தியும் அதையேதான் சொல்கிறது. இதில் வழக்கமான சூர்யா வயது பாத்திரத்தை தவிர தந்தை பாத்திரத்தைப் பற்றி கெளதம் சொன்ன போது உடனே சூர்யா சொன்னாராம்: "அதையும் நானே பண்றேனே". பதின்ம வயதான பாத்திரத்தைப் பற்றி இயக்குநர் சொன்ன போதும் உடனே சூர்யா சொன்னாராம்."அதையும் நானே பண்றேனே". bullshit. கமலுக்கு முற்றியிருக்கும் வியாதி சூர்யாவிற்கு பரவியிருக்கிறது போலிருக்கிறது. ஒரு நடிகனின் இவ்வளவு தீவிரமான ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்ட வேண்டியதுதான். ஆனால் பாத்திரத்தின் இயல்பிற்கும் தனக்கும் அது பொருந்துமா என்பதையும் யோசிக்க வேண்டும். "தேவர் மகன்" திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்த பாத்திரத்தையும் கமலின் வழக்கமான இயல்புப்படி அவரே ஏற்று நடித்திருந்தால் அவ்வளவு சிறப்பாக அந்தப்படம் உருவாகியிருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்.

இதே ரேஞ்சில் போய் எல்லா வணிகப்படநாயகர்கள் துணை நடிகர்களின் வேடங்களையும் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டால் நடிகர் சங்கத்தில் பத்து பதினைந்து பேர்தான் இருப்பார்கள். உண்ணாவிரதத்திற்கு ஆள் போதாது.

suresh kannan

Tuesday, November 04, 2008

உடைந்த சிறகுகள் (இஸ்ரேல் திரைப்படம்)

இப்ரூ (Hebrew) மொழியிலான இஸ்ரேல் நாட்டுத் திரைப்படம் (Broken Wings) ஒன்றை பார்த்தேன். (படம் வெளியான ஆண்டு 2002)

ஆதியில் தனித்தனியாக திரிந்த மனிதஇனம் காலப்போக்கில் சிலபல காரணங்களுக்காக, வசதிகளுக்காக திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டது. இன்று நாம் பல மூதாதையர்களைக் கொண்ட குடும்ப அமைப்பின் உறுப்பினர்கள்தான் என்றாலும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி தீவுகளே. ஒருத்தருடைய தீவில் இன்னொரு நுழைய அல்லது கடக்க முயலும் போது இன்றைய எல்லைப்பிரச்சினைகளைப் போல் போர் வெடிக்கிறது. இவ்வாறான ஒரு குடும்ப உறுப்பினர்களின் அக ரீதியான சிக்கல்களை மிகவும் அழகியலுடனும் யதார்த்ததுடனும் வலுவாக நம் முன் வைக்கிறது இத்திரைப்படம்.

Photobucket

அந்தக் குடும்பத்தின் தலைவர் சமீபத்தில்தான் இறந்து போயிருக்கிறார். விதவையான Dafna-க்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலான இயக்கத்தில் இருக்கின்றனர். படத்தின் பிரதான பாத்திரமான Maya ஆரம்பநிலை இசைக்குழுவின் திறமையான பாடகி, பாடலாசிரியை. தன்னுடைய சின்னஞ்சிறு சகோதரனையும், சகோதரியையும் தன் தலையில் கட்டிவிட்டு பணிக்குப் போகும் அம்மாவின் மீதான கோபத்தில் இருப்பவள். அவளுடைய இன்னொரு சகோதரன் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு தத்துவ ரீதியான சிந்தனைச் சிக்கலில் இருப்பவன். எல்லோரிடமும் you are not exist. you are dead என்பவன்.

Dafna மருத்துவமனையொன்றில் இரவுப்பணி புரிபவள். வீட்டையும் பணியையும் குழந்தைகளையும் ஒருசேர பார்த்துக் கொள்வதில் சலிப்புற்றிருப்பவள். சிறுவன் Ido-விற்கு உயரமான இடத்திலிருந்து குதித்து அதனை வீடியோ கருவி மூலம் பதிவு செய்து பார்ப்பதில் விருப்பம். Bahr அறியாச்சிறுமி. தான் படுக்கையில் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் குழப்பத்தில் இருப்பவள். இவ்வாறாக எல்லோருமே மற்றவர்களின் மீது வெறுப்பும் சலிப்புமாக வாழ்கிறார்கள்.

()

இசைக்குழுவில் இருப்பவனின் மீதான ஊடலில் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக தன் சக மாணவனைத் தேடிப் போய் உறவு கொள்ள முயல்கிறாள் Maya. இந்த நிகழ்வில் தன்னுடைய சகோதரியை கிண்டர் கார்டனிலிருந்து அழைத்து வரும் பொறுப்பை தவறவிடுகிறாள். அவளுடைய தத்துவச் சகோதரனும் இதே போன்றதொரு சூழ்நிலையில் இருக்கிறான். எனவே சிறுவன் Ido தன்னுடைய தங்கையை அழைத்து வர வேண்டா வெறுப்பாக செல்கிறான். இருவரும் திரும்பி வரும் போது தான் உயரத்திலிருந்து குதிப்பதை வீடியோ எடுக்கச் சொல்கிறான். ஆனால் தவறுதலாக கீழே விழுந்ததில் கோமா நிலைக்குச் சென்று விடுகிறான். இதனால் ஏற்படும் மனக்கசப்பில் தாய்க்கும் மகளுக்குமான உறவு மிக மோசமானதொரு சச்சரவின் மூலம் அறுபடுகிறது. Maya தன்னுடைய வீட்டை விட்டுப் புரிந்து போகிறாள். மருத்துவமனையிலிருக்கும் மகனை அருகிலிருந்து பார்த்துக் கொள்ளும் கடமை, சிறுமியின் பராமரிப்பு, நடுவே வீட்டைப் பிரிந்த 17 வயது மகளை தேடுதல் ஆகியவற்றினிடையே தவிக்கிறாள் Dafna.

Ido பிழைத்துக் கொண்டானா, Maya வீட்டிற்குத் திரும்பினாளா என்கிற உணர்ச்சிகரமான கேள்விகளுக்கு விடையாக திரைப்படத்தைப் பார்த்துக் கொள்ளுதல் நலம்.

()

பளுவைச் சுமக்கும் அந்த பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக Orly Zibershatz-Banai பிரமாதப்படுத்தியுள்ளார். "அப்பாவிற்கு பதில் நீ செத்துப் போயிருக்கலாம்" என்று வெறுப்பை கக்கும் பெண்ணை அறைவதும் பெண் பதிலுக்கு அறைவதில் உடைந்து போய் பலத்த மெளனத்தை எதிரொலிப்பதுமான அந்தக் காட்சி மிக உணர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

மாயா மற்றும் அவள் சக மாணவன் உறவு, அவளுடைய சகோதரன் அவனுடைய காதலியுடனான உறவு, கிண்டர் கார்டனில் காத்திருக்கும் சிறுமி, தாயின் கட்டாயத்தில் அவளை அழைத்து வர வெறுப்போது செல்லும் சிறுவன்... என்கிற இந்த நிகழ்வுகள் மிகத் திறமையாக அடுக்கடுக்கான காட்சிகள் மூலம் சொல்லப்படுகின்றன. சிறுவன் வீழ்ந்து கிடப்பதும் அவனுடைய சின்னஞ்சிறு தங்கை என்னவென்று புரியாமல் கொட்டும் மழையில் வீட்டுக்கு ஓடிவருவதும் மனம் பதைக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.

43 வயதாகும் Dafna-வின் மனஅழுத்தமான சூழ்நிலையில் ஆறுதலாக இருக்கும் ஒரு சக மருத்துவருடனான நட்பும் மெலிதான காதலும் subtle-ஆக சொல்லப்பட்டிருக்கிறது. (ஒருவேளை இந்தப்படம் தமிழில் தயாரிக்கப்பட்டால் இந்தப்பகுதிகள் கலாச்சாரத்தின் புனிதம் கருதி நிச்சயம் வெட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை)

கற்பிதமாக இருந்தாலும் மானுடர்களுக்கிடையே கட்டமைக்கப்பட்டிருக்கும் உறவின் மகத்துவத்தையும் தேவையையும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குநர் Nir Bergman.

()

இஸ்ரேல் பிலிம் அகாதமியில் 9 விருதுகளும், பெர்லின் சர்வதேச விழாவில் சிறந்த பார்வையாளர் விருதையும், Toronto திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தகுதியையும் கொண்ட இந்தப்படம் திரைப்பட பார்வையாளர்களின் மனதில் ஒரு அழுத்தமான தடத்தைப் பதிக்கும்.

suresh kannan

Monday, November 03, 2008

ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்



தமிழ்த்திரையுலகினர் தங்களுடைய வழக்கமான சம்பிரதாயத்தை மீண்டுமொரு முறை நிறைவேற்றியுள்ளனர் என்றுதான் தோன்றுகிறது. இன உணர்வோடு வீறுநடை போட்ட தமிழ்ச்சமூகமும் நயனதாரா வகையறாக்களை ஜொள்ளிட்டும் தங்களுடைய வருங்கால அரசியல் தலைவர்களின் உணர்சசிப் பெருக்கோடும் முழக்கங்களை கண்டு மெய்சிலிர்த்தும் திரும்பியுள்ளனர். தமிழ்ச்சினிமாக்களின் உலக சந்தையை கணக்கில் கொண்டு தங்களின் பிழைப்பிற்காவாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானதொரு பாவனையை செய்ய பல நடிகர்களுக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாட்டு பிரச்சினைக்காக இங்கே ஏன் போராட வேண்டும் என்று அஜீத், அர்ஜூன் போன்றோர் சொன்னதாக ஏற்பட்ட வதந்தியையொட்டி ஈழத்தமிழர்கள் அஜீத்தின் சமீபத்திய படத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். உடனே கருப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு வந்த அஜீத் 'உடல் மண்ணுக்கு - உயிர் தமிழக்கு' என்ற அரதப்பழசான இற்றுப்போன ழுழக்கத்தை செத்துப் போன குரலில் சொல்லி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார். "உங்க அரசியல்ல சினிமாக்காரங்கள இழுக்காதீங்க. ப்ளீஸ்'. அவ்வளவுதான் அவர் பேசினது. இலங்கைத்தமிழர்கள் குறித்தான அவர் பார்வையை தெரிந்து கொள்ள ஏற்கெனவே அவர் கொடுத்துள்ள பேட்டிகளைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். திரும்பவும் மேடையில் சொல்லியழ அவருக்கு 'தல' எழுத்தா என்ன?. ரஜினிகாந்த்தின் நாற்காலிக்கு ஆசைப்பட்டவரல்லவா? அப்படித்தான் பேசுவார் போலிருக்கிறது. என்றாலும் வணிகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் என்று வெளிப்படையாக சொன்ன அவரின் நேர்மையை பாராட்டியாக வேண்டும்.

யாருக்கும் புரியாது என்பதால் கமல் பேசுவது பற்றி பிரச்சினையில்லை. உணர்ச்சி வேகத்தில் உளறிக் கொட்டாமல் அறிவுப்பூர்வமாக பேசுவதால் அவர் பேச்சை யாருக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அபத்தமாக இருந்தாலும் எதையும் உணர்ச்சிகரமாக பேசுவதுதான் தமிழர்களுக்குப் பிடிக்கும். ரஜினி இதை நன்றாக புரிந்து வைத்துள்ளார். ஊடகங்கள் இவரின் உளறல்களை பிடல் காஸ்ட்ரோவின் 'வரலாறு நம்மை விடுதலை செய்யும்' என்ற முழக்கம் போல பிரதான இடமளித்து பிரசுரிப்பதின் அபத்தத்தை தாங்க முடியாமல்தான் இவர் பேசுவதை நானும் முக்கியத்துவம் அளித்து மறுக்க வேண்டியிருக்கிறது.

'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'... என்று கருணாநிதி சொல்வதை ஆவலுடன் எதிர்பார்த்து விசிலடிக்கும் கழகக்கண்மணிகள் போல் 'என்னை வாழவைக்கும் அன்பு ரசிகர்களே' என்று ரஜினி சொன்னவுடன் புல்லரித்துப்போய் (அவரை வாழ வைப்பது இருக்கட்டும், நீ எப்போதடா வாழ்ந்தாய் என்று யாரும் கேட்க மாட்டார்களா) இது உணர்வு சார்ந்த போராட்டம் என்கிற உணர்ச்சி கூட இல்லாமல் விசிலடித்து கைத்தட்டி மகிழும் கூட்டத்தைக் கண்டால் வேதனையாக இருக்கிறது.

'இந்த விழா...' என்று ஆரம்பித்தவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு நல்லவேளையாக 'உண்ணாவிரத போராட்டம்' என்று சுதாரித்துக் கொண்டார். அண்டை நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதரவாக நடக்கும் ஓர் கூட்டத்திற்குப் போகிறோம் என்பது அவரின் ஆழ்மனதில் பதிந்திருந்தால் ஏதோ குறுந்தகடு வெளியீடு போல் விழா என்று ஆரம்பித்திருந்தது நிகழாமல் இருந்திருக்கும்தானே? கவனக்குறைவு என்று அவரின் ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டினாலும். '30 ஆண்டுகளாலும் மேலாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை, நீங்கள் ஆம்பளைகளா?" என்பது அவரின் அடுத்த உதிர்ந்த முத்து. போர் என்கிற சமாச்சாரத்தை ஏதோ தாம் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு வில்லன்களை உதைக்கிறாற் போன்றதொரு விஷயம் என்று புரிந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.

போர் என்பதின் வலியையும் வேதனையையும் நாம் எவ்வளவுதான் படித்தாலும், பார்த்தாலும் அனுபவிக்காமல் அதன் குரூரத்தை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. எனவேதான் யாராவது திரியை கொளுத்திப் போட்டால் அப்போதைக்கு எரிவதும் பின்பு அடங்கிவிடுவதுமாக இந்தப் பிரச்சினை தமிழக்கதில் எதிரொலிக்கிறது.

அங்கு கூடியிருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச்சமூகமாகிய நமக்குமே இலங்கையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மைச்சித்திரம் தெரியுமா என்பது கேள்விக்குறி. தீராநதியில் ஷோபாசக்தியின் பேட்டியைப் படித்தால் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகளை குறை கூறுகிறார். ஷோபாசக்தியின் ஆளுமையை கட்டமைக்கிற முயல்கிற அ.மார்க்ஸின் போக்கு பற்றி அடுத்த இதழில் ஒரு எதிர்வினை வருகிறது. ஒரு காலகட்டத்தில் உணர்வுபூர்வமாகவும் நேர்மையாகவும் இந்தப்பிரச்சினையை கையாண்ட கருணாநிதி இன்று அரசியல் குளிர்காய பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். புலிகளின் மீதான நிலைப்பாட்டை பா.ம.க. சட்டென்று மாற்றிக் கொள்கிறது. தமிழர்களின் பிரச்சினையை விடுதலைப்புலிகள் ஆதரவு/எதிர்ப்பு என்ற பிரச்சினையாக மாற்றிவிடாதீர்கள் என்கிற தா.பாண்டியனின் குரல் தனித்து ஒலிக்கிறது.

பகுத்தறிவாளர்கள், முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்கிறவர்கள் உட்பட எல்லோரும் இனம் இனம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய ஜாதியை, மதத்தை, இனத்தை, எல்லைக்கோடுகளை கடந்துவருகிறவனே ஒரு உண்மையான முற்போக்குவாதியாய் இருக்க முடியும் என்பது என் புரிதல். தமிழர்களுக்காக மாத்திரமல்லாமல் அங்கு சாகிற சிங்களனுக்கும் சேர்த்து உலகெங்கிலும் ஆதிக்க சக்தியால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் நாம் துயரப்பட்டால்தான் உண்மையான மனிதர்களாவோம்.

suresh kannan