Saturday, January 31, 2009

அஞ்சலி : நாகேஷ்

Photobucket


'தமிழ்த் திரையுலகில் இருக்கிற அளவிற்கு அதிகமாக மற்ற மாநிலங்களில் நகைச்சுவை நடிகர்கள் இல்லை' என்று ஒரு முறை குறிப்பிட்டார் இயக்குநர் மகேந்திரன். உண்மைதான். சம்பிரதாயமாக என்.எஸ்.கிருஷ்ணன் முதற்கொண்டு இப்போதைய சந்தானம் வரை பட்டியலிட்டால் அது ஒர் நீளமான பட்டியலாக இருக்கும். தமிழர்களிடம் உள்ள ஆழமான பிரத்யேக நகைச்சுவை உணர்ச்சியே இதற்கு காரணம். (என்ன, அவர்களின் புனித பிம்பங்களின் அருகே மாத்திரம் போகக்கூடாது) தொலைக்காட்சி ஊடகங்கள் 24 மணி நேரமும் வாரியிறைத்துக் கொண்டிருக்கும் நகைச்சுவைக் காட்சிகளே இதற்கு சாட்சி.

அப்படியான நகைச்சுவை நடிகர்களி்ல் என்னை பிரதானமாக கவர்ந்தவர் நாகேஷ். நகைச்சுவை நடிப்பிற்கு மிகவும் அவசியமான 'டைமிங்'கில் அதிகில்லாடி. 'நாய்க்கு பேரு வெச்சியே, சோறு வெச்சியா' என்ற வசனம் இன்றளவும் பிரபலம். 'மிமிக்ரி' நடிகர்கள் அதிகம் உபயோகிக்காதது இவர் குரலாகத்தான் இருக்கும். அந்தளவிற்கு நகல் செய்ய முடியாத சாதாரண ஒரு குரலை வைத்துக் கொண்டு இவர் திரையில் புரிந்திருக்கும் வர்ண ஜாலங்கள் இன்றைக்கும் பிரமிப்பை ஏற்படுத்துபவை.

தந்திரமும் நகைச்சுவையும் கலந்ததொரு பாத்திரமான 'வைத்தி'யை (தில்லானா மோகனாம்பாள்) நாகேஷைத் தவிர வேறு யாராவது இவ்வளவு திறமையாக நடித்திருக்க முடியாது என்றே நான் தீர்மானமாக நம்புகிறேன். slapstick நகைச்சுவையிலும் திறமையான இவருடன் ஒப்பிடக்கூடியவர் சந்திரபாபு மட்டுமே. பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகரான norman wisdom-மின் பாதிப்பு நாகேஷீக்கு பெருமளவில் இருந்தது.

பின்புறத்தில் எட்டி உதைப்பது, வசவு வார்த்தைகளில் அர்ச்சிப்பது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது போன்ற எந்தவித கோணங்கித்தனங்களுமில்லாமல் தரமான நகைச்சுவையை வழங்கியவர்களில் நாகேஷ் பிரதானமானவர். நகைச்சுவையைத் தாண்டி குணச்சித்திர பாத்திரங்களில் இவரை பாலச்சந்தர் ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தாலும் கமலின் 'நம்மவர்' திரைப்படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அசாத்தியமானது. 'கல்கி' வாரஇதழில் தொடராக வந்த இவர் சுயசரிதையை வாசித்திருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் 24 மணி நேரமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உடல்நலம் பாதிக்கும் அளவிற்கு பணியாற்றியிருக்கிறார். தங்களுக்கென பிரத்யேக ரசிகர்களை வைத்திருந்தாலும் எம்.ஜி.ஆரும்,சிவாஜியும் கூட இவரை தவிர்க்க இயலவில்லை.

நாகேஷின் மறைவு உண்மையாகவே வருத்தத்தை ஏற்படுத்தியது. அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலி.

suresh kannan

Wednesday, January 28, 2009

"ஸ்லம்டாக் மில்லியனர்' படம் பார்க்காதீர்கள்"

இன்றைய தினமணி நாளிதழைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் பார்க்காதீர்கள்" என்றொரு தலைப்பை அடங்கிய விளம்பரத்தைப் பார்த்தேன். 'சன்டே இந்தியன்' என்றொரு வாரஇதழின் விளம்பரத்தில் அதன் ஆசிரியர் அரிந்தம் செளத்ரி 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தைப் பற்றி வலிமையான மொழியில் எழுதின காரசாரமான விமர்சனக் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

'இந்தியாவில் இருப்பதைதானே வெளிநாட்டு துரைமார்கள் படத்தில் காட்டியிருக்கிறார்கள்" என்று சப்பைக்கட்டு கட்டும் கனவான்கள் இந்த கட்டுரையை அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலிருக்கும் குறைபாடுகளை திரைப்படத்தில் சித்தரிப்பதில் தவறில்லை. ஆனால் 'இதுதான் இந்தியா' என்று படமெடுத்து சர்வதேச அரங்கில் முன்நிறுத்தும் முதல் உலக நாடுகளின் அரசியலை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

இப்போதே இந்தப் படம் குறித்த ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களின் கூச்சல் தாங்க முடியவில்லை. ரஹ்மானின் பெயர் இந்தப்படத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே இது இந்தியாவில் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இல்லையென்றால் பத்தோடு பதினொன்றான ஆங்கிலப்படங்களுடன் கலந்திருக்கும்.

ஏற்கெனவே கமல் சொல்லியிருப்பது போல 'ஆஸ்கர் விருது' என்பது அமெரிக்கத்தரம்தான். அதற்காக நாம் ஏன் இவ்வளவு மாரடிக்கிறோம் என்று தெரியவில்லை. 2006-ம் ஆண்டின் சிறந்த படமாக தேர்வு பெற்ற 'The Departed' திரைப்படம் ஒரு குப்பை. அதன் இயக்குநர் Martin Scorsese திறமையானதொரு இயக்குநர்தான். ஆனால் இந்த குறிப்பிட்ட படம் அவரது முந்தைய சிறந்த படங்களுள் ஒன்றான 'Taxi driver'-ன் தரத்தோடு ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை.

அரிந்தம் செளத்ரியின் ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க இங்கே செல்லவும்.

ஆனால் ஒன்று. இந்த மாதிரியான விமர்சனக் கட்டுரைகளும் குறிப்பிட்ட படத்தைப் பார்க்கும் ஆவலைத்தான் அதிகப்படுத்தும் என்று தோன்றுகிறது.

suresh kannan

Saturday, January 24, 2009

கோடீஸ்வர சேரிநாய்

இந்திய இசையமைப்பாளர் ஒருவர் சர்வதேச விருதான Golden Globe Award பெற்றிருக்கிற ஒரு சாதனை அடையாளமாக இந்தப் படத்தை சுட்டிக் காட்டினால் எளிதில் இனங்காணலாம். Slumdog Millionaire. இப்போது அகாதமி விருதுக்கும் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது, இந்திய சினிமா ரசிகர்கள் நீண்டகாலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் ஆஸ்கர் விருதின் தாகத்தை ஒருவேளை தீர்த்து வைக்கலாம். (கமல் இப்போது கொஞ்சம் பெருமூச்சும் வயிற்றெரிச்சலும் பட்டுக் கொள்ளலாம்). விகாஸ் ஸ்வரூப்பின் நாவலான Q & A-ஐஅடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் Danny Boyle.

Photobucket

மும்பை சேரியைச் சேர்ந்த ஒருவன் காவல் துறையினரால் நையப் புடைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறான். அவன் செய்த குற்றம்? கோன் பனேகா குரோர்பதி போன்றதொரு விளையாட்டில் உச்சப்புள்ளியை அடைந்து ஜெயித்தது. குறுக்கு வழியில் இந்த வெற்றியை அடைந்திருப்பானோ என்று போட்டியை நடத்துபவர்களுக்கே சந்தேகம் ஏற்படுகிறது. அதானே? சேரியில் சுற்றித் திரியும், கால் சென்டரில் டீ சப்ளை செய்யும் ஒரு நாயால் மன்னிக்கவும்....இளைஞனால் எப்படி இவர்கள் ஏசி அறையில் மண்டையை உடைத்துக் கொண்டு உருவாக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும்? நியாயமான சந்தேகம்.

ஆனால் இந்தப் படத்தின் ஆதாரமான கதையோட்டம் இந்திய திரைப்பட ரசிக மனங்களுக்கு மிகவும் பரிச்சயமானதொன்றுதான். தனது பால்ய வயதில் நேசிக்கும் பெண்ணை ஒரு இளைஞன் பல இன்னல்களுக்கிடையிலும் பல வருடங்களுக்குப் பிறகும் - அவள் கற்பு எனச் சொல்லப்படுகிற சமாச்சாரத்தை இழந்திருந்தாலும் - அடைய நினைப்பதுதான். ('கற்றது தமிழ்' நினைவு வருகிறதா?).

()

விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலின் மையத்தை ஒரு நூல் அளவு எடுத்துக் கொண்டு Simon Beaufoy எழுதியிருக்கும் மிகத் திறமையான திரைக்கதை இந்தப்படத்தின் மிகப் பெரிய பலம். (திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது இந்தப்படத்திற்கு கிடைக்கலாமென எதிர்பார்க்கிறேன்). எடிட்டர் Chris Dickens-ம் இதற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார்.

இந்திய ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியைக் கூட அடையாளம் காணமுடியாத ஜமாலுக்கு அமெரிக்க டாலரில் பிரசுரமாகியிருக்கும் நபரை எளிதில் அடையாளங்காண முடிகிறது. அதிர்ஷ்டவசமாக குரோர்பதி விளையாட்டிலும் இது தொடர்பான கேள்வி கேட்கப்பட எளிதாக இதற்கு பதில்கூற முடிகிறது. 'பள்ளிப் புத்தகங்களை விட வாழ்க்கை அனுபவங்கள் ஒரு சிறந்த ஆசிரியன்' என்பதை இந்தக் காட்சிகள் உணர்த்துகின்றன. தனது வாழ்க்கையில் வன்முறையாலும் ஏழ்மையினாலும் கலவரத்தினாலும் எதிர்கொண்ட விஷயங்களே மிக தற்செயலாக குரோர்பதி விளையாட்டிலும் கேள்விகளாக முன்வைக்கப்படும் போது அந்த இளைஞனுக்கு பதிலளிப்பதில் சிரமேதும் இருக்கவில்லை. உதாரணமாக "கடவுள் ராமர் தன் வலதுகையில் வைத்திருப்பது என்ன?" என்பது விளையாட்டின் ஒரு ஆரம்ப கேள்வி. இந்து மத வெறியர்கள் ஏற்படுத்தும் கலவரத்தில் கண் முன்னாலேயே தன் தாயை இழக்கும் ஜமாலுக்கு ராமர் வேடம் பூண்டிருக்கும் ஒரு சிறுவனை காண நேர்கிற போது கையில் வைத்திருக்கும் ஆயுதம் அவன் விரும்பாமலேயே மனதில் கசப்பான ஆழமாக பதிந்து பதிலை இயல்பாக சொல்ல முடிகிறது. இவ்வாறு கேள்வியின் பின்னாலிருக்கும் பதில்களின் மூலமாகவே ஜமாலின் வாழ்க்கைச் சம்பவங்களை நகர்த்திச் சென்றிருப்பது சுவாரசியமான திரைக்கதை உருவாக்கம்.

Photobucket

குரோர்பதி விளையாட்டின் அரங்கமும் இசையும் அனில் கபூரின் உடல் மொழியும் நிஜமான விளையாட்டை அட்சரம் பிசகாமல் பாவனை செய்திருக்கின்றன. விளையாட்டை நடத்தும் பிரேம்குமாராக அனில் கபூர் நடித்திருக்கிறார். ஜமால் ஆரம்ப தொகையை அடைந்தவுடனேயே "இத்தோடு நீ வீட்டுக்குப் போய்விடுவது நல்லது" என்று ரகசியமாக அறிவரை கூறி அவன் தன்னம்பிக்கையை குலைக்க முயல்கிறார். உச்சபட்ச தொகையை அடைவதற்கு சில படிகள் இருக்கும் போது தவறான பதிலை ஜமாலுக்கு குறிப்பால் உணர்த்தி அவனை திசை திருப்ப முயல்கிறார். தேநீர் சப்ளை செய்யும் பையன் சரியான பதில்களாக கூறிக் கொண்டு வருவதை அவரால் சகிக்க முடியவில்லை. எனவேதான் அவனை காவல்துறையினரிடம் ஒப்படைத்து விசாரிக்க சொல்கிறார். நாம் தொலைக்காட்சிகளில் பளபளப்பான அரங்குகளில் ஆர்வமும் பரவசமும் பதட்டமுமாய் பார்க்கும் நிகழ்ச்சிகளின் பின்னே இருக்கும் அரசியலை இந்தக் காட்சிகள் எதிரொலிக்கின்றன.

இந்தப்படத்தின் ஆரம்பக் காட்சி ஒன்றில் வெகுஜன சினிமாவின் இந்திய ரசிகர்களை கிண்டலடித்திருக்கிறார் இயக்குநர். சேரியின் அருகே படப்பிடிப்பிற்கு வரும் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை பார்ப்பதற்கும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கும் அலைபாயும் சிறுவன் ஜமால் அதற்காக மலம் நிறைந்திருக்கும் ஒரு குழியில் விழுவதற்கும் தயங்காமல் உடலெங்கும் மலம் அப்பியிருக்க நடிகரைப் பார்க்க ஓடுகிறான். வெகுஜனப் படங்களின் நடிகர்களை வெறும் நடிகர்களாகப் பார்க்காமல் அவர்களை ஏதோ தங்களை ரட்சிக்க வந்த மெஸைய்யாவைப் போல் ஆராதிக்கும் ரசிகர்கள் இந்தக் காட்சியைப் பார்த்தாலாவது திருந்துவார்களா என்று தெரியவில்லை.

படத்தை மிகுந்த அழகியல் உணர்வுடன் கூடிய ரசனையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கும் Anthony Dod Mantle-ம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.

இசை ஏ.ஆர். ரஹ்மான். ஆஸ்கர் விருது பற்றி நாம் மிகவும் அலட்டிக் கொள்கிறோம்தான் என்றாலும் சர்வதேச திரைப்படப் பரப்பில் இந்தியர்களின் மீதான கவனம் குவிய காரணமாக இருக்கிற ரஹ்மான் நிச்சயம் போற்றுதலுக்குரியவர். இந்தி சினிமா பாடல்களிலிருந்து தமக்கான இசையை திருடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் நிலையை தலைகீழாக மாற்றிக் காட்டியவர். இசைக்கருவிகளின் ஒலியை மிகுந்த நவீனத்துடன் பயன்படுத்தி பாடல்களின் கேட்பனுபவத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் சென்றதில் இவரின் பங்கு முக்கியமானது. இந்தப்படத்தின் ஆரம்பப் பாடலும் (O Saya) இறுதிப் பாடலும் (Jai ho) மேற்கத்தியர்களுக்கு வித்தியாசமான அனுபவமாயிருக்கும். (இந்த இரண்டு பாடல்களும் ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறது). அதைத்தவிர அல்கா யாஹ்னிக்கும் இலா அருணும் பாடிய 'ரிங்கா ரிங்கா' பாடலும் குறிப்பிடத்தகுந்ததாய் இருககிறது. ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் அது நிச்சயம் நல்லதொரு தொடக்கமாய் இருக்கும். (இதற்கு முன்னால் இரண்டு இந்தியர்கள் இதை சாதித்திருக்கிறார்கள். 'காந்தி' திரைப்படத்தின் சிறந்த ஆடைவடிவமைப்பிற்காக பானு ஆதித்யாவும் 'வாழ்நாள் சாதனை'க்காக சத்யஜித்ரேவும் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார்கள்.). ஆனால் இதை விடவும் சிறந்த பாடல்களை ரஹ்மான் இந்தியத் திரைப்படங்களில் அளித்திருக்கிறார்.

()

இந்தப்படத்தில் சில நெருடல்களும் இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான ஊடகங்களின் ஆரவாரங்களில் இவை எடுபடுமா என்றாலும் அவற்றை சொல்ல வேண்டிய கடமை நமக்குண்டு. எப்படி மேற்கத்தியர்கள் "யாருடனும் படுத்துக் கொள்வார்கள்" என்ற அபத்தமான பிம்பத்தை நாம் நம்புகிறோமோ அப்படியே நம்மைப் பற்றிய பிம்பமும் மேற்கத்தியர்களுக்கு உண்டு. இந்தியா என்பது சாமியார்களும் பாம்பாட்டிகளும் நிறைந்த நாடு என்பதுதான் அது. இன்று தகவல் தொழில்நுட்ப துறையில் பல இந்தியர்கள் சர்வதேச அளவில் உயர்நிலைகளில் இருந்தாலும் (இப்போதும் இதை சொல்லலாமா?) பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் இந்தியர்களைப் பற்றிய பிம்பத்தை மாற்றியமைப்பது மிகக் கடினம்.

நிலைமை இவ்வாறிருக்க சர்வதேச அளவில் கவனம் பெறும் இந்தியப்படங்கள் இந்தியாவின் ஏழ்மையையும் இந்தியக்குடிமகன்கள் வெளிநாட்டினரை ஏமாற்றுவதற்கென்றே பிறந்திருக்கின்ற பிரகஸ்பதிகள் போலவும் சித்தரிப்பது இந்தியாவை தவறான கோணத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ என்கிற நெருடல் ஏற்படுகிறது. எனக்கு தேசபக்தி போன்றவற்றில் நம்பிக்கையில்லையெனினும் நான் வாழ்கின்ற நிலப்பகுதியின் அருகாமை குறித்த நேசம் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

மிருகத்தனமான காவல்துறையினர், குழந்தைகளின் கண்களை குருடாக்கி பிச்சையெடுக்க வைத்து சம்பாதிக்கும் கும்பல், வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் பறிக்கும் சிறுவர்கள், பாலியல் தொழிலுக்கென்றே தயாரிக்கப்பட்டு வளர்க்கப்படும் சிறுமிகள், அழுக்கான சேரி மனிதர்கள், தன் இளைய சகோதரன் விரும்பும் பெண்ணுடன் படுக்க அவனுக்கு எதிராக துப்பாக்கியை தூக்கும் பதிமூன்று வயதுச் சிறுவன் ... என்று இந்த படத்தின் மனிதர்கள் பெரும்பாலும் எதிர்மறைக் குணங்களை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள், குரோர்பதி விளையாட்டை நடத்தும் 'பெரிய மனிதர்' உட்பட. இந்தியர்கள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற பிம்பத்தை இந்தப்படம் சர்வதேச பார்வையாளர்களிடையே ஏற்படுத்துவதில் குறிப்பிட்ட சதவீத அளவில் செயலாற்றக்கூடும். ஒரு திரைப்படத்தைக் கொண்டு ஒரு நாட்டைப் பற்றின பிம்பத்தை விருதுப் படங்களை பார்க்குமளவிற்கு தகுதி கொண்ட பார்வையாளர்கள் ஏற்படுத்திக் கொள்வார்களா என்கிற கேள்வி உள்ளூர எழலாம்தான் என்றாலும் இந்த பிம்பங்கள் ஆழ்மனதில் பதிந்து தேவையான நேரத்தில் எதிரொலிக்கலாம்.

சத்யஜித்ரே தனது முதல் படமான 'பதேர் பாஞ்சாலியில்' ஒரு இந்தியக் கிராமத்தின் வறுமையை காட்டியதாக அப்போது குற்றஞ்சாட்டப்பட்டாலும் அது குரூரமான முறையில் இல்லாமல் மிகுந்த கலையுணர்ச்சியுடனும் மிகைப்படுத்தப்படாத தன்மையுடனும் வெளிப்பட்டிருந்தது. மீரா நாயரின் 'சலாம் பாம்பேவும்' மும்பை சேரிச் சிறுவர்களைப் பற்றின படமாக அமைந்திருந்தது. (இந்தப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களின் பிரிவில் அப்போதைய ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்தது.) இந்தியப் படம் என்றாலே உடனே சேரிகளையும் ஏழ்மையில் உழலும் சிறுவர்களையும் காண்பிக்கும் திட்டத்தோடு வெளிநாட்டு இயக்குநர்கள் யோசிப்பதின் மர்மம் தெரியவில்லை. மூன்றாம் உலக நாடுகளின் நிலைமையை பொதுமைப்படுத்தி யோசிக்கும் இந்தச் சிந்தனை தவிர்க்க வேண்டியது.

ஒரு பக்கம் டைட்டல் பார்க்குகளும் பிட்சா கார்னர்களுமாக இருக்க மறுபுறம் சிக்னலில் நின்று பிச்சையெடுக்கும் அழுக்குச் சிறுவர்களும் இருப்பதை யாரும் மறுக்க முடியாதுதான். இங்கேதான் தடுப்பூசிக்காக போடப்படும் மருந்தின் பாதிப்பில் குழந்தைகள் இறந்து போகின்றனர். அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு கண்டுகொள்வதில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவற்றையே பிரதானப்படுத்தி 'இதுதான் இந்தியா' என்று கவனகுவிப்பாக சர்வதேச மேடையில் முன்நிறுத்துவது விரும்பத்தகாதது.

சேரிச் சிறுவர்கள் முதற்கொண்டு போலீஸ் கான்ஸ்டெபிள் வரை நிகழ்த்தும் ஆங்கில உரையாடல்கள் சர்வதேச பார்வையாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் காட்சிகளின் நம்பகத்தன்மையோடு ஒப்பிடும் போது மிக மோசமான விளைவைத் தருகிறது. இதற்குப் பதில் அவர்களை இந்தியிலேயே பேசவிட்டு முழுப்படத்திற்கும் ஆங்கில சப்-டைட்டில்களை போட்டிருக்கலாம். அப்படியென்றால் இது இந்தியத் திரைப்படமாயிருக்கும். ஆங்கிலத் திரைப்படமாக இருந்திருக்காது. ரொம்பவும் புத்திசாலிகள்தான்.

()

இந்தப்படத்தைக் குறித்த சர்ச்சைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. அமிதாப்பச்சன் இந்தப்படத்தைப் பற்றின தன் குற்றச்சாட்டை வைத்திருந்ததாக செய்திகள் முதலில் வெளியாயின. ஆனால் இதை அமிதாப் பிறகு மறுத்திருக்கிறார். Slumdog என்று படத்தின் பெயரை வைத்ததற்காக சேரிவாழ்குடியிருப்பு சங்கம் ஒன்று அனில்கபூர் மீதும் ரஹ்மான் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

சிறந்த தொழில்நுட்ப சமாச்சாரங்களைக் கொண்டிருக்கிற இந்தப்படத்தை ஊடகங்கள் ஆரவாரம் செய்கிற அளவிற்கு அப்படியொன்றும் சிறந்த படமாக என்னால் கருத முடியவில்லை.

Photobucket

இந்த ஆரவாரங்களுக்கிடையில் ஆஸ்கரின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இன்னொரு இந்திய பங்களிப்பு பரவலான கவனம் பெறவில்லை. Megan Mylan இயக்கியிருக்கும் 'Smile Pinky' என்கிற ஆவணப்படம் குறும்படங்களுக்கான போட்டிப் பிரிவில் தேர்வு பெற்றுள்ளது. இந்த 39 நிமிடப் படம் உதட்டுப் பிளவு குறைபாட்டைப் பற்றியது.

suresh kannan

Tuesday, January 20, 2009

தோப்பில் முஹம்மது மீரானின் "துறைமுகம்"

துறைமுகம் - புதினம் - தோப்பில் முஹம்மது மீரான்
அடையாளம் - பக்கம் 350 - விலை ரூ.175/-

Photobucket

மீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக் கொண்டிருக்கும் அறியாமையில் உழலும் இசுலாமியர்கள். காந்தி என்றொருவர் இந்தியா என்ற நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு போராட்டத்தினை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்ற தங்களின் சமகால வரலாற்று நிகழ்வுகளின் எதிரொலி கூட எட்டாத அறியாமையின் தொலைவில் இருப்பவர்கள். அப்படி ஒரளவு அறிந்தவர்களுக்குக் கூட காந்தியை விட இசுலாமியர் என்பதாலேயே ஜின்னாவின் மேல் பிரியம்.

"அவன் இப்பம் காங்கிரசாக்கும்"

"அப்படீண்ணா"

"காந்திக்கெ கச்சி. வெள்ளக்கானுவளெ வெரட்டனுமெண்ணு செல்லுத கச்சி"

"ஓஹோ அப்படியா சங்கதி?"

"அவன் காங்கிரசானதினாலே நம்மொ முஸ்லீம்களெல்லாம் லீக்காவணும்"

"அதென்னவா¡ர்க்கும் சங்கதி மனசிலாவல்லியே...."

"ஜின்னாக்கெ கச்சி"

"நல்ல மூளைதான் ஹபீபே, ஜின்னா நம்மொ இஸ்லாமான ஆளுதானா?"

"பின்னே பத்தரமாத்து".

()

பத்திரிகை படித்தால் ஹராம், தலையில் முடி வைத்திருந்தால் ஹராம், காபிர்களைப் போல் ஆங்கிலம் படித்தால் ஹராம் என்று தங்கள் தலையில் தாங்களே மதத்தின் பெயரால் மண்ணை வாரிப் போட்டிக் கொண்டிருக்கும் அவர்களின் மத்தியில் காசிம் என்ற இளைஞனே ஒரளவு படித்தவன். படிப்பில் ஆர்மிருந்தாலும் வறுமை காரணமாக அவனது படிப்பு தட்டுத்தடுமாறி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவனின் ஆங்கிலப்படிப்பு காரணமாக ஊரார் அவன் தந்தை மீரான் பிள்ளையை அது குறித்து எச்சரிக்க, படிப்பு முற்றிலுமாக நின்று போய்விடுகிறது. 'நான்தானே நரகத்துக்குப் போகப் போறேன். அதனால இவங்களுக்கு என்ன கஷ்டம், இந்திய சுதந்திரத்திற்குப் போராடிய ஆங்கிலம் படித்த மெளலானா முகம்மது அலியும் நரகத்துக்குப் போவாரா?...என்று அவனுக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாருமில்லை.

மீரான் பிள்ளை கொழும்புவிற்கு மீன்களை ஏற்றுமதி செய்து அவர்கள் அனுப்பப் போகும் பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவியாபாரி. அங்கிருந்து வரும் கடிதத்தை படிப்பதற்கு கூட அவார் தனது மகனைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. கடலில் மீன்பாடு இல்லாததினால் கிராமமே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் முதலாளிமார்கள், கப்பல் சரக்குகள் மூழ்கிப் போய்விட்டன அல்லது வீணாகிப் போய்விட்டன அல்லது மார்க்கெட் விலை குறைந்துவிட்டது என்று தந்தியனுப்பி ஏமாற்றிவிடுகின்றனர். இவ்வாறு ஈனா பீனா கூனா முதலாளி போன்றவர்களின் துரோகத்தினால் அந்தக் கிராமத்தின் பல சிறுவியாபாரிகள் ஓட்டாண்டிகளாகி வறுமையில் தவிக்கின்றனர்.

காசிம் வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரப் போராட்த்தில் பங்கு பெறுகிறான். ஊருக்கு திரும்பி அவன் தலையில் முடி வைத்திருப்பதனால் ஊரார் கூடி அவனை மொட்டையடித்து அவமானப்படுத்த விரும்புகின்றனர். ஊரே அவன் அவமானப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது காலரா பரவுகிறது. பலர் இறந்து போகின்றனர். பரீது பிள்ளை முதலாளி காணாமற் போகின்றார். காசிம் எங்கிருந்தோ அழைத்துக் கொண்டு வரும் மருத்துவரிடம் ஊர்மக்கள் ஊசி போட்டுக் கொள்ள மறுக்கின்றனர்.

"காபிரான ஒருத்தனெ எங்கெயிருந்தோ கூட்டீட்டு வந்திரிக்கான். ஈமானும் இஸ்லாமும் உள்ள பொம்புளியளுக்கக் கையெப் புடிச்சு ஊசி குத்த. நல்ல ஏற்பாடுதானே? எடையோடு எட இவனுக்கும் இத்திப் போலக் கையத் தொடலாமோ, பாத்தியளா ஹராம் பெறப்பே? ... இவனுக்க உம்மாக்கக் கையிலேயும் தங்கச்சிக்க கையிலேயும் அந்தக் காபிர் பயலைக் கொண்டு ஊசி குத்தப்படாதா?.. பெண்கள் கேட்டனர். "அந்தத் தலை தெறிப்பான். எக்க ஊட்லே அவனைக் கூட்டிட்டு வரட்டு. பழந்தொறப்பெயேடுத்துச் சாத்துவேன்" பெண்கள் சபதம் எடுத்தனர்.


மீரான் பிள்ளையின் வீடு ஈனா பீனா கூனா முதலாளியின் அநியாயமான கடனில் மூழ்கிப் போய் பெண், பிள்ளைகளுடன் வெளியேற்றப்படுகின்றனர். இதே போல் வெளியேற்றப்படுகிற இன்னொரு குடும்பம் மம்மாத்திலுடையது. பொறம்போக்கு நிலத்தில் தங்கும் அவர்களை அங்கிருந்தும் விரட்டியடிக்கிறது பணக்கார வர்க்கம். காசிம் கைது செய்யப்படுகிறான். மம்மாத்திலின் சிறிய மகன் பீரு தங்களை இந்த நிலைக்கு தள்ளியவர்களை பழிவாங்குவேன் என்று உறுதியளிக்கும் நம்பிக்கையுடன் நிறைகிறது புதினம்.

()

R.K. நாராயணின் 'மால்குடி' போல தனக்கேயுரிய உலகத்தை திறமையான சித்திரங்களுடன் படைக்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். இசுலாமியர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை உறுத்தாமல் புதினத்தின் ஊடாகவே பாத்திரங்களின் மூலம் விமர்சிக்கிறார். ரகசியங்களை காக்கும் தபால்கார அம்புரோஸ், வாழ்ந்து கெட்ட நிலையிலும் மீரான் பிள்ளைக்கு உதவ நினைக்கும் ஐதுரூஸ் முதலாளி, எப்போதும் பஞ்சப்பாட்டு பாடும் முடிவெட்டும் ஆனவிளுங்கி, ஊருக்குப் புதிதாக வந்து முடியை இழந்து அவமானப்பட்டு பின்பு இறந்து போகும் அப்பாவி மம்மதாஜி, மதத்தின் பெயரால் ஊரெங்கும் ஏமாற்றித் திரியும் முஹம்மது அலிகான் இப்னு ஆலிசன், அவனை நம்பும் மக்கள்... என சுவாரசியமான பாத்திரப்படைப்புகள்.

குமரி மாவட்டத்து மண்ணின் வாசனையுடன் தமிழும் மலையாளமும் இணைந்து அரபிச் சொற்களுடன் நீள்கிற உரையாடல்கள் வாசிப்பிற்கு இடையூறாய் நிச்சயம் இல்லை. வட்டார வழக்குகள் புரிவதில்லை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. பிரியாணி உணவு வகையில் கூட மாவட்ட வாரியாய் தேடுகிற நம் மனம் வட்டார வழக்குகளை அவற்றுக்குரிய புதிய அனுபவத்துடன் எதிர்கொள்கிற பரவசத்தை மறுப்பதில் உள்ள ரகசியம் புரியவில்லை. இருந்தாலும் புரியாத அரபிச் சொற்களுக்கான அர்த்தங்கள் அந்தந்த பக்கங்களிலேயே தரப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் தேவை பல தருணங்களில் தேவைப்படாமல் உரையாடலின் தொடர்ச்சியிலேயே அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆங்கில புதினங்களின் தயாரிப்பிற்கு இணையாக இந்தப் புதினத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறது அடையாளம் பதிப்பகம். திடுக்கிடும் திருப்பங்களை கொண்டிருக்காவிடினும் மிக சுவாரசியமானதொரு வாசிப்பனுபவத்தை வழங்கியது இந்தப் புதினம்.

suresh kannan

Thursday, January 08, 2009

சாருவும் நோபல் பரிசும்

தமிழ் நவீன இலக்கிய வாசகர்கள் பலருக்கு கிளர்ச்சி தரும் பெயர்களில் ஒன்று சாருநிவேதிதா. வெகுஜன உலகில் 'சுஜாதா' என்றால் சிற்றிதழ்களின் உலகில் அதற்கு நிகராக சாருவைச் சொல்லலாம். எனவேதான் சுஜாதாவைப் போலவே சாருவின் பத்து புத்தகங்களை ஒரே சமயத்தில் வெளியிட உயிர்மை பதிப்பகத்தால் இயன்றிருக்கிறது. சாருவை விட திறமையாகவும் சுவாரசியமாகவும் எழுதக்கூடியவர்கள் இருந்தாலும் சாருவின் அளவிற்கு புகழின் வெளிச்சம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நேற்று சென்னை புக்பாயிண்டில் நடந்த உயிர்மை புத்தக வெளியீட்டு விழா முடிய இரவு 10.00 மணி ஆகிவிட்டது. என்றாலும் பெரும்பாலான பார்வையாளர்கள் கலையாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். பாரதியும் புதுமைப்பித்தனும் ஆத்மாநாமும் ஆதவனும் தங்களுடைய படைப்புகள் தமிழ் வாசகர்களால் கொண்டாடப்படுவதை காண்பதற்குள்ளாகவே இறந்து போனார்கள். ஆனால் சாரு தன் வாழ்நாளிலேயே தன்னுடைய தகுதிக்கும் மீறிய புகழை பெற்றிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். என்றாலும் சாருவால் தான் அங்கீகரிக்கப்படுவதின் போதாமை குறித்து தொடர்ந்து செய்கிற புலம்பலை நிறுத்த இயலவில்லை. ஒரு கேரள திரைப்பட இயக்குநருடன் சென்னை நகரத்தின் வீதிகளில் சுற்றித்திரிந்த போது ஒருவரும் சாருவை சீண்டவில்லையாம். இயக்குநர் ஆச்சரியத்துடன் கேட்டாராம் "என்ன சாரு, கேரளாவில் உங்களை அப்படி கொண்டாடுகிறார்கள். ஆனால் இங்கே யாருமே உங்களை நிறுத்தி விசாரிக்கவில்லையே?".

சில வருடங்களுக்கு முன் சென்னை அண்ணாசாலையில் ஆனந்த விகடன் அலுவலகம் அருகே இருந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். உலகத்தின் துயரத்தையெல்லாம் தன் முகத்தில் தேக்கிக் கொண்டு பரிதாபமான தோற்றத்துடன் ஒரு தேசலான உருவம் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அசோகமித்திரன். ஆயிரத்திற்கும் குறைவாக விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு இலக்கியப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக சொற்ப ஊதியம் வாங்கிக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய உழைப்பை அதற்கு செலுத்திக் கொண்டு தன் வாழ்நாளெல்லாம் வறுமையுடன் இலக்கியப்பணி செய்துக் கொண்டிருந்தாரே, அவருடைய புத்தகங்கள் பத்து வேண்டாம்.. ஐந்தாவது ஒரே சமயத்தில் வெளியாகியிருக்குமா? ஞானபீடம் அல்ல, நோபல் பரிசு வாங்குமளவிற்கு கூட தகுதி படைத்த எழுத்தாளராக நான் கருதும் அசோகமித்திரனை விட சாரு அதிர்ஷ்டம் செய்தவரா இல்லையா? அப்புறம் ஏன் இந்தப் புலம்பல்.

உண்மைதான். சினிமாவை நடிக, நடிகையர்களை கொண்டாடும் தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை, வரலாற்று ஆசிரியர்களை, ஆய்வாளர்களை, நாட்டார் கலைஞர்களை, நம் கலையை போற்றி வளர்ப்பவர்களைப் பற்றிய எந்தவிதமான பிரக்ஞையும் அற்று சொரணையேயில்லாமல்தான் இருந்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய? சினிமாவும் தொலைக்காட்சியும் நம்முடைய கலாச்சார அடையாளங்களை மெல்ல மெல்ல சாகடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அபத்தமான சூழ்நிலையிலும் இலக்கியத்தை நாடி வரும் ஒரு வட்டத்தை சாரு போன்ற ஒரு எழுத்தாளர் அங்கீகரிக்கவோ பாராட்டவோ வேண்டுமா, இல்லையா?

போகட்டும்.

()

சாருவின் எழுத்துடனான முதல் பரிச்சயம் சுஜாதாவினால் ஏற்பட்டது. கணையாழியின் கடைசிப்பக்கங்களில் தமிழில் போர்னோ எழுத்து பற்றி சுஜாதா கீழ்கண்டவாறு எழுதும் போதுதான் சாருவின் பெயரையே முதன்முதலாக அறிந்தேன்.

" தமிழில் போர்னோகிரா•பி இருக்கிறதா என்று கேட்டு சில வருஷங்களுக்கு முன் இந்தப் பக்கங்களில் தமிழில் இருப்பதெல்லாம் ' ஸாப்ட் போர்னோ வகை ' என்று சொல்லியிருந்தேன். இப்போது தமிழில் போர்னோ வயசுக்கு வந்துவிட்டது. அண்மையில் வெளிவந்த சில புத்தகங்களையும் பத்திரிகைக் கதையையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். சாரு நிவேதிதாவின் ' எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும் ', கர்நாடக முரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும் ' என்ற இவ்விரு புத்தகங்களிலும் (மெட்டா •பிக்ஷன் என்கிறார்கள்) எல்லை மீறிய கெட்ட வார்த்தைகள் பிரயோகித்து இன்னது என்று இல்லா வக்ர உறவுகளும் பெய்து படிக்கிற பேரையெல்லாம் வெறுக்க வைக்கும் வீம்புடன் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகங்களை விவரிக்க வார்த்தைகள் புத்தகத்திலேயே இருக்கிறது. ' டோட்டல் டிஸ் இண்டக்ரேஷன் , டோட்டல் •பார்ம்லஸ்னஸ் '.

கி.ராஜ நாராயணன் எழுதும் ' வயது வந்தவர்களுக்கு ' என்ற கதைத் தொடர் தாய் இதழில் கொஞ்சம் ' wicked ' என்று சொல்வேன். இந்த மாதிரி வார்த்தைகளையும் கதைகளையும் நாம் தினம் தினம் கேட்காமலில்லை. தெருவில் கேட்பது , கழிப்பறைகளில் எழுதுவது அனைத்துமே அச்சில் வருவது மேல்நாட்டு இலக்கியங்களிலும் சினிமாக்களிலும் உண்டு. தமிழில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இலக்கியம் என்பது கங்கை நதிபோல ; அதில் எல்லா சங்கதிகளும் மிதந்து செல்லும் என்று சொல்வார்கள். அந்த வகையில் மேற்குறித்தவைகளும் பழுப்பாக மிதந்து செல்கின்றன. "

சுஜாதா, நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல தூக்கிப் போட்ட சாருவின் 'எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும்' என்கிற அந்த நாவலை உடனே ஆர்வத்துடன் வாங்கிப் படித்தேன். அதன் நான்-லீனியர் வடிவமும் பாசாங்கில்லாத மொழியும் எனக்குப் பிடித்திருந்தது.

சமுகத்திற்கென்று ஒரு முகமும் தனியுலகிற்கென்று ஒரு முகமும் நாம் வைத்திருக்கிறோம். தனியுலக முகத்தின் வெளிப்பாடுகளை எல்லாம் 'அந்தரங்கம்' என்று ஒளித்து வைக்கிறோம். இந்தப் பாசாங்கு எனக்கு அபத்தமாகப் படுகிறது. இந்த விகாரங்களையெல்லாம் பதிவு செய்ய வேண்டுமா என்று அருவருப்புடன் சிலர் விமர்சிக்கிறார்கள். நம்முடைய இன்னொரு பகுதியையும் பதிவதில் என்ன தவறிருக்கிறது. அதுவும் ஒருவகையான இலக்கியமே. விமர்சனங்களுக்கும் கலாசாரக் காவலர்களுக்கும் பயப்படாமல் அவ்வாறான இலக்கியத்தை எழுதுபவர்களில் பிரதானமான சாருவை இந்தக் காரணத்தினாலேயே எனக்குப் பிடித்துவிட்டது. சாருவே சொல்லிக் கொள்வது போல அவரைப் பிடிக்காவதர்களும் வெறுக்கிறவர்களும் கூட ரகசியமாகவேனும் ஒப்புக் கொள்கிற சமாச்சாரம், சாரு எழுத்தை கையாள்கிற லாகவம். என்ன, அவரது அலட்டல்களை தாங்கிக் கொண்டுதான் அவரது எழுத்துகளை கடந்துவரவேண்டியிருக்கிறது.

()

நேற்றைய விழாவில் சாரு தன்னுடைய ஏற்புரையில் சொன்ன விஷயத்தைப் பற்றிப் பேசிவிட்டு மற்ற விஷயங்களுக்குள் செல்லலாம்.

"நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ரா., ஆகியோர்களுக்கு அடுத்த மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவருராக சாகித்ய அகாதமி விருது வழங்க வேண்டும்" என்று சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பாரதிமணி சொல்லிவிட்டாராம். இதை உண்மைதமிழனின் பதிவில் படித்த போது எனக்கும் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. என்ன இது ஏதோ ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் பாரத்தில் எழுதுவது போல் சொல்லியிருக்கிறாரே என்று. ஆனால் பாவம் பாரதிமணி. சாரு பொங்கி விட்டார். (நினைவிலிருந்து எழுதுகிறேன்).

"யாருக்கு வேண்டும் சாகித்ய அகாதமி. இப்ப ஏதோ மேலாண்மை பொன்னுச்சாமின்றவருக்கு கொடுத்திருக்காங்க. கேவலம் பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்க. நான் பைவ் ஸ்டார் ஓட்டல்ல ஒரு வேளைக்கு சாப்பிடறதுக்கு ஆகிற செலவு. இந்த லிஸ்ட்ல போய் ஏன் எஸ்.ராமகிருஷ்ணணையும் சேத்திருக்கீங்க? ஜெயமோகனுக்கும் நாஞ்சில் நாடனுக்கும் 'கலைமாமணி விருதோ' என்னவோ கொடுத்துப் போகட்டும். ஆனா நம்ம சில எழுத்தாளர்கள் நோபல் பரிசு வாங்குகிற அளவிற்கு தகுதியானவங்கன்னு நான் ரொம்ப வருஷமா சொல்லிட்டு வரேன். (அசோகமித்திரன், ஆதவன். இ.பா., ந.முத்துசாமி... என்று சில எழுத்தாளர்களை சொல்கிறார்). உலகத்துல இருக்கற அத்தனை சிறுகதைகளிலும் சிறந்ததாக 20 தேர்ந்தெடுத்தா அதுல எஸ்.ராவின் 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' சிறுகதையும் ந.முத்துசாமியுடைய 'நீர்மை'யும் வரும். அப்பேர்ப்பட்ட படைப்பாளிகளை சாகித்ய அகாடமி கொடுத்து கேவலப்படுத்த சொல்றீங்களா, வெக்கமாயில்லை. இம்பாக்-னு ஒரு விருது. ஒன்றரை கோடி ரூபா பரிசு. நோபல் பரிசுக்கும் மேல. அடுத்த வருஷம் அந்த விருதுப் பட்டியல்ல என்னோட பேர் இருக்கும்னு உறுதியா என்னால சொல்ல முடியும்.

()

சாரு தன்னுடைய சக எழுத்தாளர்கள் குறித்தும் தன்னைக்குறித்தும் இப்படியொரு உயர்வான அபிப்ராயம் வைத்திருப்பது குறித்து சந்தோஷம்தான். இவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் சிந்திப்பவர் ஏன் நாஞ்சில் நாடன் குறித்தும் ஜெயமோகன் குறித்தும் இவ்வளவு காழ்ப்புணர்ச்சியை கொண்டிருக்க வேண்டும்? தனக்கும் தன்னுடைய சக எழுத்தாளர்களுக்கும் சர்வதேச அளவில் நியாயமானதொரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிற சாரு, அந்தச் சமயத்தில் மாத்திரமாவது தனிப்பட்ட மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பாரபட்சமற்ற ஒரு பட்டியலை தருவதுதானே முறையான செயலாக இருக்கும்? எப்படி சாருவை விமர்சிப்பவர்கள் கூட அவர் எழுத்தின் சுவாரசியத்தை ஒப்புக் கொள்வார்களோ, அதே போல மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களை விமர்சிப்பவர்கள் கூட அவர்கள் சாருவிற்கும் மேலானதொரு இலக்கிய மதிப்பை கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளவார்கள். இதை ஏன் சாரு அங்கீகரிக்க மறுக்கிறார் என்பது தெரியவில்லை. நோபல் பரிசிற்கும் மேலானதொன்றிற்கு தன்னுடைய பெயரை மாத்திரம் சொன்னால் எங்கே சவட்டி எடுத்துவிடுவார்களோ என்று போனால் போகிறது என்று மற்ற சில எழுத்தாளர்களின் பெயர்களையும் பாதுகாப்பாக துணைக்கு அழைத்துக் கொள்கிறாரோ என்கிற சந்தேகம் இதனாலேயே எழுகிறது.

மேலும் ஒரு விருது தரப்படுவது என்பது ஒரு படைப்பாளி அங்கீகரிக்கப்படுவதற்கான அடையாமே. அதனுடன் தரப்படும் பணத்தை வைத்துத்தான் அந்த விருதின் மதிப்பை சாரு அளக்க விரும்புகிறாரா என்று தெரியவில்லை.

எந்தவொரு படைப்பையும் எழுத்தாளனையும் கறாராக அங்கீகரிப்பதோ நிராகரிப்பதோ காலம்தான். சில வருடங்களுக்குப் பின் இலக்கிய தளத்தில் சாருவின் இடம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் சாருவே கூறுகிற மாதிரி நம்முடைய தகுதி குறித்து நமக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. எப்படி கமல் படம் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்று காலங்காலமாக அபத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறோமோ, அப்படியேதான் இந்த சர்வதேச விருதுகளும். கருணாநிதியும், வைரமுத்துவும் வேறு இந்த வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். என்னென்ன விபரீதங்கள் நடக்கப் போகிறதோ?

()

சாருவின் உரை தந்த எரிச்சலில் விழாவின் நிகழ்வுகளைப் பற்றி அதிகம் சொல்ல இயலவில்லை. சிலவற்றை மாத்திரம் முயற்சிக்கிறேன். 10 புத்தகங்களையும் இந்திரா பார்த்தசாரதி வெளியிட்டார். புத்தகங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்களுடைய அபிப்ராயத்தை வெளிப்படுத்தினர். (நினைவிலிருப்பற்றை மாத்திரம் எழுதுகிறேன். இந்தப் பதிவு முழுவதிலும் மற்றவர்கள் சொன்னதாக எழுதினதில் ஏதேனும் கருத்துப் பிழை ஏற்பட்டிருந்தால் அது என் நினைவுப் பிசகினால் ஏற்பட்டதே. [அடைப்புக்குறிகளுக்குள் எழுதியிருப்பது என்னுடைய கருத்து].

* சாருவின் சிறுகதைத் தொகுதியைப் பற்றி (மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்) பேசின சுதேசமித்திரன், "சாருவின் தற்கால எழுத்து ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் அவருடைய பழைய சிறுகதைகள் (முள், திரிலோக்புரி போன்றவை) உயிர்ப்புடன் உள்ளன. பழைய முனியாண்டி காணாமற் போய்விட்டார். அவர் மீண்டும் வர வேண்டும். எனக்கு அஞ்சலில் வந்த சாருவின் புத்தகம் அவரது எழுத்துக்களைப் போலவே நிர்வாணமாக அட்டையில்லாமல் வந்து சேர்ந்தது. (இந்த நிர்வாண மேட்டரை பின்னால் வந்த பலரும் பிடித்துக் கொண்டனர்).

* ந.முத்துசாமி உரையாற்றும் போது "ஒரு இலக்கியக் கூட்டத்தில் நான் பேசி முடித்து அமர்ந்த போது சாரு எழுந்து 'இதுவரை முத்துசாமி செய்த கதாகாலட்சேபம் முடிந்ததற்கு நன்றி' என்று கூறினார். அவர் கிண்டலாகக் கூறினதாக எடுத்துக் கொள்வதா, அல்லது கதாகாலட்பேசத்தை உயர்வான தொனியில் வைத்து பாராட்டாக எடுத்துக் கொள்வதா என்று குழப்பமாக இருந்தது. புத்தகம் நிர்வாணமாக வந்தது என்று இதற்கு முன் பேசிய நண்பர் சொன்னார். நான் கேட்கிறேன், அப்படியென்றால் அது ஆண் உடலா, பெண் உடலா?. சாருவின் புத்தகம் என்பதனாலேயே எனக்கும் இவ்வாறெல்லாம் பேசத் தோன்றுகிறது. அதுதான் சாருவின் எழுத்து.

[என்னிடம் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன். புத்தகத்தின் தலைப்பிலேயே 'மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்' என்கிருக்கிறது. அப்புறம் என்ன அது ஆணா, பெண்ணா என்றொரு கேள்வி?].

* 'தீராக் காதலி' என்ற சினிமாக் கட்டுரைகளைப் பற்றி பேசின இ.பா., "இந்தக் காலத்தில் நிறைய காசு செலவழித்து யாரையெல்லாமோ சூப்பர் ஸ்டார் என்கின்றனர். ஆனால் அந்தக் கால உண்மையான சூப்பர் ஸ்டார்கள் என்றால் அது எம்.கே.டி., கிட்டப்பா போன்றோர்கள்தான். பொதுமக்கள் பாகவதர் படங்கள் திரையிடப்படும் அரங்குகளுக்கு வெளியே அமர்ந்து அவருடைய பாடல்களை ரசிப்பார்கள். அப்படியொரு உயர்வான ரசனையை இன்று நாம் தொலைத்துவிட்டோம். கிட்டப்பா-கே.பி.சுந்தராம்பாள் இடையிலான காதல் மிக உன்னதமானது.

[இந்தக் கட்டுரைகள் உயிர்மையில் வெளிவந்த போது நான் நினைத்தது. 'இதை எழுத சாருநிவேதிதா தேவையில்லை. பிலிம் நியூஸ் ஆனந்தனே போதும். கலகக்குரலாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த சாருவின் எழுத்து நீர்த்துப் போவது இம்மாதிரியான எழுத்துகளால்தான்]

* அரசியல் கட்டுரைகளைப் பற்றி எழுத்தாளர் சிவகாமி, IAS பேசினார். 'தலித் எழுத்துக்களில் வெளிப்படும் ஆபாசங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருமாவளவனும் ரவிக்குமாரும் கூறினதை சாரு விமர்சித்து எழுதியிருக்கிறார். ஆபாச எழுத்துகளுடன் எழுதப்பட்ட ஒரு தலித் படைப்பு வெற்றி பெற்று விட்ட காரணத்தினாலேயே மற்றவர்களும் இதை நகல் செய்யும் விதமாக ஒரு வித செயற்கைத்தனத்தடன் ஆபாச வார்த்தைகளைப் புகுத்தி எழுதி வருகின்றனர். இதை மட்டுப்படுத்தும் விதமாகவே திருமாவும் ரவிக்குமாரும் அவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்று நான் யூகிக்கிறேன்.

[திரைப்பட இயக்குநர்கள் அமீரும், சசிகுமாரும் புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை என்றனர். அமீருக்கு புத்தகங்கள் படிக்கும் வழக்கமே இல்லையாம். சமகால தமிழ்ச்சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் என்கிற வகையில் அவர்களை நான் மதிக்கிறேன். ஆனால் எதற்காக வாசிப்பில் நாட்டமே இல்லாத இம்மாதிரியான பிரபலங்களை ஜோக்கர்கள் போல் நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று புரியவில்லை. விழாவிற்கு கவர்ச்சியை கூட்டவா? ஏற்புரையின் போது சாரு அழைக்கப்பட்டவர்கள் மீது கொண்ட காதலால் அவர்களை அழைத்தேன் என்றார். அப்படியென்றால் அவர்களை சிறப்பு பார்வையாளர்களாக அழைக்கலாமே, புத்தகங்களை படிக்காமலேயே அதை பெற்றுக் கொண்டு மேடையில் ஒரு சம்பிதாயத்திற்காக எதையோ பேசிவிட்டுப் போக ஏன் அவர்கள் தேவை என்பது புரியவில்லை. இன்னொரு உயிர்மை விழாவிலும் இதே போல் பார்த்திபன் கலந்து கொண்டு தத்துபித்தென்று எதையோ உளறிச் சென்றார்].

* 'அரவாணிகளைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதும் போது 'பெண்களை விட அழகாக இருந்தார்கள்" என்று எழுதுகிறார் சாரு. 'ஆண்களை விட அழகானவர்கள்' என்று ஏன் அவருக்கு எழுதத் தோன்றவில்லை? என்று கேட்டார் தமிழச்சி. (இதற்கு ஏற்புரையில் பதிலளித்த சாரு.. சீச்சி.. I hate men" என்றார்).

* ஒரு மாறுதலுக்கு சாருவை விளாசி தள்ளிவிட்டார் மதன். "திரைப்பட விமர்சனங்களை எழுதும் போது மிகவும் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். ஒரு திரைப்படம் என்பது மிகுந்த சிரமத்திற்குப் பின்னும் பல்வேறு உழைப்புகளுக்குப் பின் உருவாவது. அதனால் தமது விமர்சனத்தை முன்வைக்கும் போது சற்று கனிவு காட்டுவது நல்லது. உதாரணமாக பாலுமகேந்திராவைப் பற்றி ஒரு இடத்தில் எழுதும் போது " சந்தியாராகம், வீடு போன்ற படங்களை தர முடிந்த பாலுவால் எப்படி "Julie Ganapathi" என்றதொரு மூன்றாந்தர திரைப்படத்தைத் தர முடிந்தது' என்று எழுதியிருக்கிறீர்கள். இது மிகவும் கடுமையான விமர்சனம். இதற்கு பாலுவிடம் ஏதேனும் ஒரு காரணமிருக்கலாம். மேலும் அந்தப்படம் மோசம் என்று ஒரே வரியில் போகிற போக்கில் சொல்லாமல், ஏன் அது மோசம் என்று விளக்க வேண்டும். "வெள்ளித்திரை என்ற படத்தைப் பார்த்துவிட்டு இடைவேளையிலேயே ஓடிவந்துவிட்டேன்' என்று எழுதியிருக்கிறீர்கள். இடைவேளைக்குப் பின் அந்தப் படம் நன்றாக இருந்திருக்கலாம். ஒரு திரைப்பட இயக்குநருக்கும் நாம் தரும் குறைந்த பட்ச மரியாதை அந்த திரைப்படத்தை முழுதும் பார்ப்பதுதான்.

[மதனின் இந்தப் பார்வையுடன் என்னால் உடன்பட முடியவில்லை. அவர் தொலைக்காட்சியில் செய்யும் விமர்சனத்தில் சிம்பு, விஷால் போன்ற பேர்வழிகளை அமர வைத்து 'நல்லதொரு படத்தை தந்திருக்கிறீர்கள்' என்று மழுப்புவார். அந்த மாதிரி 'கனிவை'த்தான் எதிர்பார்க்கிறாரோ, தெரியவில்லை. வெகுஜன பத்திரிகைகளின் சாதகமான விமர்சனங்களையே சிற்றிதழ்களிலும் எதிர்பார்க்கிறாரா என்று தெரியவில்லை. இதையே பின்னால் பேச வந்த பிரபஞ்சனும் குறிப்பிட்டார்.]

* எந்தத் தயாரிப்பாளரையும் குப்பையாக படம் எடுக்கச் சொல்லி நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எனவே எங்களை பாராட்டியோ கனிவாகவோ எழுதச் சொல்லி தயவு செய்து கட்டாயப்படுத்தாதீர்கள். இம்மாதிரியான விமர்சனங்களும் ஒருபுறம் எழுதப்படட்டும். மறைந்த சுப்ரமண்யராஜூ ஒரு திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதினார்.

'அவன் அவளைப் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள். இருவரின் புத்தகங்களும் கீழே விழுந்தன. குனிந்து எடுக்கும் போது இருவரின் தலைகளும் முட்டிக் கொண்டன. கட் செய்தால் இருவரும் பாடும் டூயட். இடைவேளை. இடைவேளைக்கு அப்புறம்?

எவன் பார்த்தான்?'

இந்த விமர்சனத்தினாலேயே இரண்டு லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சாவி கூறினார். தயாரிப்பாளர் விளம்பரத்தை நிறுத்தி விட்டாராம்.

- இது பிரபஞ்சன்.

()

மற்றபடி விழா பெரும்பாலும் இறுக்கமின்றி கலகலப்பாகவே இருந்தது. சாருவின் ஏற்புரையில் அவருக்கே உரித்தான நையாண்டியும் உணர்ச்சியும் தூக்கலாகவே இருந்தது. மேடையில் இருந்தவர்கள் பெரும்பாலும் சாரு 'யூத்' என்பதாக குறிப்பிட்டது சற்று அதீதம்தான். 'அராத்தான' தன்னை பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்ட தம்முடைய குடும்ப உறுப்பினர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சாரு. நல்லதொரு முன்னுதாரணம் இது. ந.முத்துசாமியின் 'நீர்மை' சிறுகதை தன்னை ரொம்பவும் பாதித்தாகவும் அந்தக் கதையின் தாக்கமே பெரும்பாலும் தன்னுள் ஓடிக் கொண்டிருப்பதாகவும் ந.முத்துசாமியை தன்னுடைய தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பதாகவும், இதுவரை வெளிப்படுத்த முடியாமலிருந்ததை இப்போது வெளிப்படுத்துவதற்குள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் கடந்து விட்டன என்றார் உணர்ச்சிகரமாக.

()

விழாவில் 'தம்பி' என்கிற பெயரில் எழுதுகிற சக வலைப்பதிவரை சந்தித்தேன். விழாவை தொகுத்து அளித்தது 'முரளி கண்ணன்' என்கிற வலைப்பதிவர். அறிவிப்பாளர்கள் பொதுவாக பேசுகிற 'தமில்' இவருக்கு நன்றாகவே வருகிறது. fm வானொலிக்கோ, தொலைக்காட்சிக்கோ முயற்சி செய்யலாம். (சும்மா ஜாலிக்கு சொன்னது, கோச்சுக்காதீங்க முரளி.).

வாஸ்து, ஜோதிடம் என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கும் பதிப்பாளர்களிடையே நல்ல இலக்கியத்தை தேடிப் பதிப்பிக்கும் உயிர்மைக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் பாராட்டுகள்.

suresh kannan

Wednesday, January 07, 2009

கெளதம் மேனனின் auto biography

அனுபவமில்லாமல் காமா சோமாவென்று ஏதோவொரு திரைப்படத்தை உருவாக்குபவர்களைப் பற்றி எம்.ஆர்.ராதா ஒரு முறை சொன்னார்: "ஆமாடா...! கொஞ்சம் பணம் வெச்சுருக்கறவன் தன்ன போட்டோ எடுத்து பாக்கெட்ல வெச்சுக்கறான். நெறைய வெச்சுருக்கறவன் சினிமாப்படம் எடுத்து ரீலா வுட்றான்".

இயக்குநர் கெளதமும் இதே போல் அழகிரியின் 'கோடியை' வைத்து தன்னுடைய சுயசரிதையை திரைப்படமாக 'தோரணம் ஆயிரம்' கட்டியிருக்கிறார் போலிருக்கிறது. நட்சத்திர ஹோட்டல்களில் விஸ்கி வாசனையுடன் 'செய்யப்படாமல்' திரைப்படம் என்பது யதார்த்தமான அனுபவங்களிலிருந்துதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் அது வெறுமனே நிகழ்வுகளாக அல்லாமல் ஒரு வலுவான கதைத்துளியை சுவாரசியமான திரைக்கதையில் கலந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால் கெளதமின் சமீபத்திய திரைப்படம் நிகழ்வுகளின் தோரணங்களாக மாத்திரமே அமைந்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது.

Photobucket

தமிழ்ச்சினிமாக்களில் அதிகமாக கவனிக்கப்படாத தந்தை-மகன் உலகத்தை பிரதானப்படுத்துவதுதான் கெளதமின் நோக்கம் எனில் அவர் தோற்றுப் போயிருக்கிறார் என்றே சொல்வேன். நாடகத்தனமாக இருந்தாலும் சேரனின் 'தவமாய் தவமிருந்து' திரைப்படம் இந்த வகையில் முந்தியிருக்கிறது எனலாம். அதுவும் 'வாரணம் ஆயிரம்' போன்றே தந்தையின் மரணத்தின் வாசனையுடன் தொடங்கி சேரனின் நினைவலைகள் மூலமாக பார்வையாளர்களுக்கு எல்லா நிகழ்வுகளும் விவரிக்கப்படுகின்றன. பரதனின்... மன்னிக்கவும்.. கமலின் 'தேவர் மகனிலும்' ஒரளவிற்கு இது சிறப்பாக வெளிப்பட்டிருப்பதை காண முடியும்.

சூர்யாவின் சிக்ஸ்-பேக், சமீரா ரெட்டியின் இளமை, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தவிர ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்பட்டது போன்ற மேலோட்ட பூச்சுக் காரணிகளே இந்தப்படத்தைப் பற்றி பார்வையாளனிடையே ஓர் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன. ஆழமான நோக்கில் பார்த்தால் இது அவனுக்கோர் ஏமாற்றத்தையே அளித்திருப்பதை உணர முடியும்.

()

'மின்னலே' தொடங்கி கெளதமின் படங்களில் தொடர்ச்சியாக வந்து கிளிஷேவாகவே மாறிவிட்ட சமாச்சாரங்கள் இதிலும் உள்ளன. நாயகியை கண்டவுடன் நாயகன் கொள்கிற instant காதல், நாயகனின் mind voice மூலமாக கதை கூறுதல், நாயகி செத்துப் போதல், மறுகாதல்... என்று இதைச் சொல்லாம். [மாறுதலான முயற்சியாக derailed நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த 'பச்சைக்கிளி முத்துச்சரம்' ஏன் அதிகமாக பேசப்படவில்லை என்று தெரியவில்லை]. இந்த கிளிஷேக்களிலிருந்து கெளதம் வெளிவர வேண்டிய தருணம் வந்துவிட்டது. படத்தின் நிகழ்வுகள் பல நம்பகத்தன்மையை இழந்து பல்லை இளிக்கின்றன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் ஆக்ஸ்போர்ட் ஆங்கிலத்தில் உரையாடுவது, ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் தந்தை, ரயிலில் சந்தித்த காதலிக்காக சூர்யா அமெரிக்கா வரை செல்வது, நடுவில் பொறுப்பு வந்து சொந்தவீட்டை கட்டுவது, கடத்தப்பட்ட சிறுவனை சினிமா பாணியில் மீட்பது, ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் போன்றவை அனைத்துமே 'நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தமிழ் சினிமா' என்பதை மீண்டும் மீண்டும் பார்வையாளனுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

இவற்றையும் மீறி சூர்யா-சமீரா ரெட்டி சம்பந்தப்பட்ட முதல் சந்திப்புக் காட்சிகள் மிக இயல்பாக அமைந்துள்ளன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும் யாவருமே தங்கள் பதின்ம வயது நினைவுகளை மிக நெருக்கமாக மீட்டுக் கொள்ள முடியும். அவளைப் பார்த்த கணத்திலேயே பிரமிப்படைந்து 'இதோ இவள்தான் என் மனைவி' என்று உள்ளுணர்வு தீர்மானிப்பது அந்த வயதுக்குரியே அபத்தங்களில் ஒன்று. [கண்டவுடனே காதல் என்கிற சமாச்சாரம் பெண்களுக்கும் உண்டென்றாலும் இதை சட்டென்று வெளிப்படுத்த விடாதபடி அவர்களின் இயல்பான ஜாக்கிரதை உணர்ச்சி தடுக்கிறது.] இந்தப் பதட்டத்தை சூர்யா மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். [இதற்கு மாறாக தந்தை சூர்யாவும் 'இளமைப்படுத்தப்பட்ட' சிம்ரன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் எரிச்சலையே ஏற்படுத்துகின்றன]. படத்தின் இறுதிக்காட்சியில் பழைய திரைப்படங்களின் பாணியில் படத்தின் தலைப்பு செயற்கையாக வருமாறு வசனம் அமைத்திருப்பது ஒரு காமெடி.

இன்னும் எத்தனை படங்களில்தான் பயங்கரவாதிகள், கடத்தல்காரர்கள் என்றாலே அவர்கள் இசுலாமியர்கள் என்பதை திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்களோ, தெரியவில்லை. பழைய நம்பியார் திரைப்படங்களில் வில்லன்களின் பெயர் 'கபாலி, மாயாண்டி' போன்றவைகளாக இருக்கும். அவை கூட பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த இந்துக்களின் பெயர்கள்தான் என்பதையும் கவனிக்க வேண்டும். அது இன்று வேறொரு பரிணாமத்தில் திசை திரும்பியிருக்கிறது. 'இசுலாமியத் தீவிரவாதிகள்' என்பதே ஏதோ அங்கீகரிக்கப்பட்ட வார்த்தை போல் மாறிவிட்ட சூழ்நிலையில் சிறுபான்மையினரின் சிக்கல்களை கவனத்தில் கொண்டு தம்முடைய ஆழ்மனதில் பதிந்திருக்கும் சிந்தனைகளை உதறிவிட்டு பொறுப்புடன் காட்சிகளை அமைக்க வேண்டும் என்பது இன்றைய திரைப்பட இயக்குநர்கள் கற்க வேண்டிய பாடங்களில் ஒன்று. பெரும்பான்மையான படங்களில் இவ்வாறாக சிறுபான்மைமயினர் சித்தரிக்கப்படுவதால்தான் இதை சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

()

இப்படியொரு சொதப்பலான படத்திற்கு சூர்யா அளித்திருக்கும் வீணாகிப் போன உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பதின்ம வயது இளைஞன் தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டிருப்பதும் தந்தை -மகன் ஆகிய வேடங்களை குறிப்பிடும் அளவிலான உடல் மொழியுடன் வித்தியாசப்படுத்தியிருப்பதும் பாராட்ட வைக்கிறது. இயக்குநரின் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளும், தன்னுடைய பாத்திரங்களின் இயல்பிற்காக மிகவும் மெனக்கெட்டிருப்பதுமான நடிகர்களில் சூர்யாவும் முக்கியமானவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இயக்குநர் இத்தனை உழைப்பையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் முன்னமே ஒரு பதிவில் குறிப்பிட்டது போன்று தந்தை பாத்திரத்திற்கு வேறொரு திறமையான நடிகரை பயன்படுத்தியிருந்தால் திரைப்படத்தின் உருவாக்கம் இன்னும் சிறப்பாக வந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு இடையூறாக நிற்கும் பாடல்களே இந்தப் படத்திற்கு பிரதான சுவாரசிய காரணியாய் அமைந்துவிட்டது. ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளலான இசையமைப்புடன் அமைந்துள்ள பாடல்கள் இல்லாவிட்டால் இந்தத் திரைப்படம் இன்னும் சீக்கிரமாகவே திரையரங்குகளை விட்டு ஓடியிருக்கும். பீய்ச்சியடிக்கப்பட்ட ஷாம்பெயின் போல உற்சாகமான பாடல்கள் திரைப்படங்களின் நடுவே பொங்கி வழிந்து கொண்டேயிருக்கின்றன. குறிப்பாக 'முன்தினம் பார்த்தேனே' பாடலை நான் இதுவரை குறைந்தது ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன். நரேஷ் ஐயரின் குரல் பாறை இடுக்குகளின் வழியே வழிந்தோடும் நதியலை போல எதிர்பாராத இடங்களில் திரும்பி திரும்பி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டின் சிறந்த திரைப்பட ஆல்பமாக இந்தப்படத்தின் பாடல்களைச் சொல்லலாம். பாடலாசிரியர் தாமரையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வாத்திய சப்தங்களுக்கிடையே காணமாற் போய் பல வருடங்களாகி விட்ட பாடல்வரிகள், 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' என்று தெளிவாக கவித்துவத்துடன் ஒலிக்கும் போது கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. டோரா புஜ்ஜிக்கு அடுத்தபடியான என்னுடைய மகளின் பிடித்தமானவைகளின் பட்டியலில் இருப்பது 'அஞ்சலை' பாட்டு.

கடத்தப்பட்ட பெண்ணை ராணுவம் மீட்டும் இறுதிக் காட்சிகளின் செழுமை, பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப்படம்தானா என்கிற மயக்கத்தை ஏற்படுத்துமளவிற்கு ரத்னவேலுவின் காமிரா திறமையாக பதிந்திருக்கிறது. இரண்டு சூர்யாக்களும் வரும் காட்சிகளில் எந்தவிதமான தொழில்நுட்ப பிசிறும் தெரியாத அளவிற்கு முன்கூட்டியே காட்சிகளை மிகுந்த தீர்மானத்துடன் யோசித்திருப்பது பாராட்ட வைக்கிறது.

()

எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் போன்ற மசாலாப்பட மன்னர்கள் பின்னியெடுத்துக் கொண்டு தமிழ்ப்படங்களின் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் பார்வையாளர்களை அதிலிருந்த மீட்டெடுக்கும் விதமாக திரைக்கதை உருவாக்கத்திலும் காட்சியமைப்பிலும் ஒரு புதிய காற்று போல் நுழைந்து அந்தக் கலாசாரத்தையே ஒரு காலத்தில் மாற்றியமைத்தார் மணிரத்னம். விக்ரமன்களும், ரவிகுமார்களும் மீண்டும் மாசுபடுத்த முனையும் வேளையில் மணியின் நீட்சியாக வந்தவர் கெளதம் என்றே நான் கருதுகிறேன். வெறும் தொழில்நுட்பமும் சந்தைப்படுத்தும் உத்திகளுக்காக செய்யப்படும் கோணங்கித்தனங்களுமே வெற்றிப் படத்தை உருவாக்க முடியாது. உலக சினிமாவின் தாக்கத்தில் பார்வையாளர்கள் விழிப்பாக இருக்கும் இவ்வேளையில் அவர்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதை தமிழ்ச்சினிமா இயக்குநர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
suresh kannan

Monday, January 05, 2009

நூலகங்கள்... பதிப்பகங்கள்... அரசு...

அரசின் பொது நூலகத்துறையின் அலட்சியத்தையும் பதிப்பகங்களின் பிரச்சினைகளையும் பற்றி பிரசன்னா சில விஷயங்களை வெளிப்படையானதொரு பதிவாக எழுதியிருக்கிறார். (காலச்சுவடு கட்டுரையை இன்னும் நான் படிக்கவில்லை).

அரசின் எல்லாத்துறைகளையும் போலவே பொது நூலகத்துறையிலும் ஊழலும் பொறுப்பின்மையும் நிறைந்துள்ளது என்று இதை பொருட்படுத்தாமல் விட்டு விட முடியாது. பொறுப்பான சமூகத்தின் உருவாக்கத்திற்கு புத்தகங்களின் பங்கு என்ன என்பதை யாரும் விரிவாக சொல்லத் தேவையில்லையாமலே அதை நாம் புரிந்து கொள்ள முடியும். கல்விக்கூடங்களில் சிலபஸ் தாண்டியும் அறிந்து கொள்ள விஷயங்களை நூலகங்களின மூலம்தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் புத்தகங்களை காசு கொடுத்து வாங்க இயலாத, நூலகங்களை நம்பியிருப்பவர்களின் கதி என்ன? என் அனுபவத்தைச் சொல்கிறேன்.

பெரும்பாலான பள்ளிகளில் உள்ள நூலகர்கள் புத்தகங்களை மாணவர்களுக்குத் தராமல் பூட்டியே வைத்திருப்பர். (கிழியாமல் பத்திரமாக இருக்குமாம்). அதை மீறியும் தரப்படும் புத்தகங்கள் சிறுவர் நீதிக் கதைகளாக இருக்கும்.

இது இப்படியென்றால் தனியார் நூலகங்கள் வேறு மாதிரி. ஆராய்ச்சியாளர்களை மாத்திரமே அனுமதிக்கும் ரோஜா முத்தையா நூலகங்களில் உள்ளே நுழைவதற்கான விதிமுறைகள் புழல் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடச் செல்வதற்கான விதிமுறைகளை ஒத்தது என்கிறார்கள். சிறுவயதில் நான் முதன்முதலாக மறைமலையடிகள் நூலகத்திற்கு சென்றபோது உயரம் குறைவான ஒருவர் என்னை அகதி போல வெறுப்புடன் பார்த்து 'என்ன வேண்டும்?' என எரிச்சலுடன் கேட்டார். 'கத்தரிக்காய் கால் கிலோ' என்று மனதிற்குள் சொல்லிவிட்டு பயந்து போய் ஓடியே வந்து விட்டேன். என்றாலும் விடாப்பிடியாக மீண்டும் ஒருவாரம் கழித்து சென்றேன். நல்லவேளையாக இன்னொரு பொறுமையான மனிதர் இருந்தார். வாசிப்பின் மீதான என்னுடைய ஆர்வத்தைக் கண்டு சில கேள்விகள் கேட்டுவிட்டு உறுப்பினராக அனுமதித்தார். முதல் புத்தகமாக பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' தேர்ந்தெடுத்த ஞாபகம். வீட்டிற்குச் சென்று உடனே படித்துவிட்டு மதியமே போய் இன்னொரு புத்தகத்திற்காக நின்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்தவர், ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்தான் அனுமதிக்கப்படும். இன்று போய் நாளை வா என அனுப்பவி்ட்டார். பின்பு அரிதான சமயங்களில் நூலகத்திலேயே அமர்ந்து படித்திருக்கிறேன். யுனெஸ்கோ போன்ற அறிவியல் இதழ்களை அங்கேதான் பார்த்தேன். தடிமனான புத்தகங்களை வைத்து சிலர் குறிப்பேடுகளுடன் வேறு உலகத்தில் ஆழந்திருப்பர். நான் கவிதைப் புத்தகத்தை படித்து பிரமித்துப் போய் 'வாலி, நீங்கள் கவிதைகளை அள்ளி அள்ளித் தரும் வாளி' என்று பின்னட்டையில் எழுதிக் கொண்டிருப்பேன். (இப்போதென்றால் வேறு மாதிரியாக எழுதக்கூடும்). அந்த நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து அப்போது நான் அறியவில்லை. (இப்போது இது கன்னிமரா நூலகத்துடன் இணைக்கப்பட்டு விட்டது).

அரசு நூலகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெரும்பாலான பொது நூலகங்களில் முனைவர் பட்டத்திற்காக எழுதப்பட்ட நூற்களும் (குப்பைகளே) பாலகுமாரன், ரமணிசந்திரன் போன்றவைகளும் பொத்தாம் பொதுவாக தலைப்புகளில் உள்ளடக்கம் முறையாக பதிப்பிக்கப்படாத புத்தகங்களே நிறைந்திருக்கும். பிரத்யேகமான தலைப்பில், பொருளில் ஆழமாக எழுதப்பட்ட புத்தகங்கள் சொற்பமானவையே. அவ்வாறான புத்தகங்களும் பொதுவாக நூலகத்தில் கிடைக்காது. அப்படியே இருந்தாலும் நமக்குத் தேவையான நூலை பொறுமையாக எல்லா அடுக்குகளிலும் தேட வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படும். அதிர்ஷ்டமிருந்தால் அது நமக்கு கிடைக்கக்கூடும். நூலகர்களுக்கே புத்தகங்களைப் பற்றின அறிவு சுத்தமாக இருக்காது.

பல கிளை நூலகங்களில் புத்தகங்களில் இருட்டான அடுக்குகளில் துசிபடிந்து தொல்பொருள் ஆராய்ச்சியினருக்காக காத்திருப்பதை வேதனையுடன் பார்த்திருக்கிறேன். பிரபல வாரப்பத்திரிகைகள் எதையும் நூலகத்தினுள் நீங்கள் பார்க்க முடியாது. அவை நூலகத்தினரின் வீட்டில் பத்திரமாக இருக்குமோ என்னவோ. அரசு நூலகங்களில் உறுப்பினராக ஆவது கவுன்சிலர் சீட் மாதிரி மிகக்கடினம். அவர்கள் வேலைப்பளுவினை குறைக்க பெரும்பாலும் தவிர்க்கவே பார்ப்பர். காவல்துறை மாதிரி ஏரியா பிரச்சினைகளும் உண்டு. எனது அலுவலத்திற்கு அருகில் உள்ள நூலகத்தில் உறுப்பினராக விரும்பியபோது எனது வீடு எங்கே இருக்கிறது? எனக்கேட்ட அலுவலர் அப்போது அங்கேயே உறுப்பினராகிக் கொள்ளுங்கள்' என்றார். நீங்கள் செல்லும் தினத்தன்று நூலகர் இருந்தால் அன்று உங்கள் அதிர்ஷ்ட தினம்.

மக்களின் வரிப்பணத்தில் நூலகங்களுக்காக வாங்கப்படும் புத்தகங்கள் சிறிது காலத்திற்குள்ளாகவே பழைய புத்தகக்கடைகளில் நூலக முத்திரையுடனேயே விற்பதையும் நாம் பார்க்க முடியும்.

நகரத்தில் செயல்படும் நூலகங்களிலேயே இவ்வாறான நிலைமை என்றால் கிராமங்களில் செயல்படும் நூலகங்களைப் பற்றி கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறித்தான் ஒரு வாசகன் தன்னுடைய சிந்தனையை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

()

அரசின் அலட்சியமான செயல்பாடுகள் தவிர பதிப்பகங்கள் செயல்படும் விதமும் நம்பிக்கை தருவதாக இல்லை.பெரும்பாலான பதிப்பகங்கள் நூலக ஆர்டரை நம்பியே தம்முடைய பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. நூற்கள் தயாரிப்பதில் பல முறைகேடுகளும் நடப்பதாக தெரிகிறது. பழைய பதிப்புகளை நூலாசிரியரின் கவனத்திற்கு கொண்டுவராமல் மாற்றி அச்சடிப்பது, பழைய நூற்களை முறையான அனுமதி பெறாமல் தயாரிப்பது, (எழுத்தாளர் பெருமாள் முருகன் இவ்வாறான பல தகிடுதத்தங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறார்) எழுத்தாளர்களுக்கு விற்பனை பற்றிய முறையான கணக்குகளை காட்டாமல் ராயல்டி தராமல் அவர்களை ஏதோ நன்கொடை பெற வந்தவர்கள் போல் நடத்துவது, புத்தகங்களின் உள்ளடக்கம் பற்றிய அறிவு பதிப்பகத்தார்க்கே இல்லாமலிருப்பது, நூலக ஆர்டரை பெற எந்த வழிமுறையையும் பின்பற்றுவது, கவர்ச்சியான தலைப்புகளின் மூலம் வாசகர்களை ஏமாற்றுவது போன்றவைகளிலேயே அவர்களின் பெரும்பாலான கவனமும் சக்தியும் செலவாவதால் வாசகர்களுக்கு கிடைப்பது புத்தகங்கள் என்ற பெயரில் காகிதக் குப்பைகளே. சுருங்கக்கூறின் மற்ற சேவைத்துறைகளைப் போலவே பதிப்பகத் துறையும் முற்றிலும் வணிக சிந்தனையோடு யோசிக்கத் தொடங்கி பல வருடங்களாயிருப்பது கவலையை அளிக்கிறது.

மிகச் சொற்பமான பதிப்பகங்களே அரசாங்கத்தின் தயவை எதிர்பார்க்காமல் நல்ல விஷயங்களை வாசகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற கொள்கைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நூற்களின் அருமை தெரிந்தவர் முதல்வராய் இருக்கும் போதே இந்த லட்சணம் என்றால் ...

suresh kannan