Showing posts with label நூல் வெளியீட்டு விழா. Show all posts
Showing posts with label நூல் வெளியீட்டு விழா. Show all posts

Thursday, January 08, 2015

குறத்தியாறு - கெளதம சன்னா - நூல் வெளியீட்டு விழா - 07.01.2015


உயிர்மை பதிப்பகத்தின், கெளதம சன்னா எழுதிய புதினமான 'குறத்தியாறு' நூல் வெளியீட்டு விழாதான் என்றாலும் நான் பிரதானமாக சென்றது கோணங்கி பேசுவதைக் காண.

புகைப்படங்களிலும் சில விழாக்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேனே தவிர அவர் மேடையில் பேசுவதை இதுவரை கண்டதில்லை, கேட்டதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு விழா மேடையில் கோணங்கியைப் பார்க்கும் ஓர் அபூர்வமான நிகழ்வு என்று மனுஷ்யபுத்திரன் தன்னுடைய வரவேற்புரையில் குறிப்பிட்டார்.. போலவே எழுத்தாளர் ஜெயமோகனையும் கோணங்கியையும் ஒரே மேடையில் காண்பது தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே (?!) இதுவே முதன்முறையாக இருந்தது போலும்.

கோணங்கி பேசிக் கொண்டிருந்ததை கவனிக்கவே அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் தனக்கேயுரிய பிரத்யேக சங்கேத மொழியில் நூல்களில் தான் காணும் தொன்மங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். ஒலிப்பெருக்கி இருக்கும் திசையை நோக்கி உரையாடினால்தான் பார்வையாளர்களுக்கும் தெளிவாக கேட்கும் என்கிற மேடை நடைமுறை விதிகளெல்லாம் அவரைக் கட்டுப்படுத்தவில்லை. அவருக்கான பிரத்யேகமான அந்தரங்க உலகத்திலேயே எப்போதும் புழங்கிக் கொண்டிருக்கும் மனிதர் என்பதாக தோன்றியது. நல்ல அனுபவம்.

கெளதம சன்னா என்கிற பெயரை நான் அறிந்தது, ஜெயமோகனின் வெள்ளையானை நூல் வெளியீட்டு விழாவின் போதுதான். அந்த விழாவில் நாவலைப் பற்றியும் பழைய சென்னையின் வரலாற்றுத் தகவல்களையும் இணைத்து பல நுட்பமான விஷயங்களைப் பேசியது அத்தனை ஆச்சரியமாக இருந்தது. அரசியல் அமைப்பைச் சார்ந்த ஒரு நபரிடமிருந்து இத்தனை ஆழமான விஷயங்களை அறிந்த ஓர் இலக்கியவாதியை நான் எதிர்பார்க்கவில்லை. எனவே அவருக்காகவும் இந்த விழாவிற்கு சென்றிருந்தேன். பொதுவாக தீவிரமான அரசியல் கட்டுரைகளை எழுதுபவரிடமிருந்து இலக்கிய நயம் வாய்ந்த ஒரு புதினத்தை அவரை நன்றாக அறிந்தவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதாகவே இந்த விழாவின் மூலம் அறிந்தது.

கடந்த வருடமே வெளியாக வேண்டியிருந்த இந்த நூல், ஒவியம் சந்ருவின் கோட்டோவியங்களோடுதான் வெளியாக வேண்டும் என்று அவருக்காக ஒரு வருடம் காத்திருந்து பல நினைவூட்டல்களுக்குப் பின் ஓவியங்களை இணைத்த பிறகே இந்த நூலை வெளியிடப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து சன்னாவின் பிடிவாதமான கலையார்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக நூலாசிரியரும் ஓவியரும் இணைந்து புதினத்தின் பின்புலமாக அமைந்துள்ள இடங்களுக்கு சென்ற அனுபவத்திற்குப் பின் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. 'இந்த நாவல் சன்னாவும் சந்ருவும் இணைந்து எழுதியது' என்பதாக கோணங்கி குறிப்பிட்டது இதைப் பற்றிதான் இருக்க வேண்டும். ஓவியர் சந்ரு அவர்களையும் இந்த விழாவில்தான் முதன்முறையாக பார்த்தேன். குச்சி குச்சியான சிறுநரைமுடிகளோடும் முக்கால் வேட்டியோடும் ஓர் அசல் நாட்டுப்புற மனிதர் போல் அத்தனை எளிமையாக இருந்தார். அவரது உடல்மொழியும் அத்தனை வெள்ளந்திதனமாக இருந்தது. அவரின் ஓவியங்களைக் கண்டபிறகும் உரையாற்றும் போதுதான் அவரது மேதமையைக் உணர முடிந்தது.   இவ்வாறான எளிமையான மேதைகளை அவ்வளவாக கண்டுகொள்ளாமல் வெற்றுப் படோபடங்களின் பின்னால் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஜெயமோகன் பேசும் போது "தலித் இலக்கியத்தின் மிக முக்கியமான திருப்புமனையை இந்த நாவல் ஏற்படுத்தும் என கருதுகிறேன். இதுவரையான தலித் இலக்கிய படைப்புகள் யதார்த்த வகை படைப்புகளாகத்தான் உருவாகி வந்திருக்கின்றன. ஆனால் தொன்மத்தின் அழகியலுடனும் காவிய  மரபு மொழியில் இந்நூல் உருவாகியிருப்பது தலித் இலக்கியத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அமைந்திருக்கும்" என்றார். விழாவின் துவக்கத்தில் ஒவியர் நட்ராஜ், இந்த நாவலின் சில பகுதிகளை வாசித்துக் காண்பிக்கும் போது அது கோணங்கியின் மொழியின் அடையாளத்துடன் அமைந்திருப்பதாகத் தோன்றியது.

தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், சிறுகதைகள், நாவல் போன்ற புனைவு வகை இலக்கியங்களை நான் வாசிப்பதில்லை எ்னறார். ஏனெனில் அவை நம்மை கனவுலகத்தில் ஆழ்த்தி மயக்குபவை. மாறாக யதார்த்தவகை இலக்கியங்களான வரலாற்று, தத்துவ வகை நூல்களே நம்மை விழிப்பாக இருக்க வைப்பவை. என்றாலும் நான் முழுமையாக வாசிக்கவிருக்கும் முதல் நாவலாக இந்த 'குறத்தியாறு' இருக்கும் என்றார். மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்த இடைவெளி தருணத்தில் விழா மேடையிலேயே வாசித்து விட்ட சில பக்கங்களை மிக நிதானமாக விவரித்து சிலாகித்து மகிழ்ந்தார்.

ஏற்புரை வழங்கிய கெளதம சன்னா விரிவாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்துக் கொண்டார். 'சிலர் கருதுவது போல இதை வெறுமனே அழகியல் நோக்கத்தில் எழுதவில்லை. எனக்கென்று உள்ள அரசியல் பார்வையில்தான் இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறேன்" என்றார்.

விழா முடிந்ததும் வெளியே நண்பர்கள் சிவராமன், சிறில் அலெக்ஸ், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர்களோடு அமைந்த உரையாடல் விழாவில் கல்ந்து கொண்டதைத் தவிர மேலதிக நிறைவைத் தந்தது.

Sunday, January 04, 2015

உயிர்மை - காலச்சுவடு நூல் வெளியீட்டு விழா - 03.01.2015


டிசம்பர்-ஜனவரி மாதங்கள் வந்தாலே சென்னைக்கு புதுநிறம் வந்து விடுகிறது. ஒருபுறம் கர்நாடக இசை விழா, இன்னொரு புறம் சர்வதேச திரை விழா, புத்தக கண்காட்சி, நூல் வெளியீட்டு விழாக்கள் என்று பல்வேறு கலாசார நிகழ்வுகள் காற்றில் மிதக்க ஆரம்பித்து விடுகின்றன. ஒரே சமயத்தில் இரண்டு விருப்பமான நிகழ்வுகள் நடைபெறும் போது எதற்குப் போக வேண்டும் என்று குழப்பம் வந்து விடுகிறது. பிலிம் பெஸ்டிவல் சமயத்தில் இவ்வாறு சற்று அல்லாடினேன். ஒரே சமயத்தில் நிகழும் இரண்டு நிகழ்ச்சிகளுமே முக்கியம் என நினைக்கும் போது பரத்தையிடம் ஜாலி செய்யப் போயிருக்கும் நண்பனை பொறாமையுடன் நினைத்துக் கொண்டே சாமியார் பிரசங்கத்தில் அவஸ்தையுடன் அமர்ந்திருப்பவன் கதை போல அல்லாடும் இரட்டை மனதுடன் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பதிப்பக அரசியல், எழுத்தாள அரசியல், குழு அரசியல் ஆகியவற்றில் நம்பிக்கையும் ஆதாயமும் உள்ளவர்களுக்கு இம்மாதிரியான எவ்வித குழப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறார்கள். இவ்வாறான அரசியல்களைத் தாண்டி  படைப்புகளின் மூலமாக மாத்திரமே ஓர் எழுத்தாளரை அணுகும் அப்பாவி இலக்கியத் தொண்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நூல் வெளியீட்டு விழாக்களைப் பற்றி இப்போதெல்லாம் புகைப்படங்கள் போடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அங்கு என்ன உரையாடப்பட்டது என்று பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை என்று எம்.டி.முத்துக்குமாரசாமி சமீபத்தில் முகநூலில் எழுதியிருந்தார். உண்மைதான். சமூகவலைத்தளங்களின் மூலம் மைக்ரோ பிளாக்கிங் வகையான சுருக் எழுத்துக்களைத் தாண்டி நீளமான பதிவுகளை வாசிக்க எவருக்கும் பொறுமையும் நேரமும் ஆர்வமும் இருப்பதில்லை. அப்படி வெட்டியாக பதியுமளவிற்கு நூல் வெளியீட்டு விழாக்களில்அப்படியொன்றும் உன்னதமாக யாரும் பேசி விடுவதில்லை என்பதும் இன்னொரு விஷயம். 'நான் இந்த நூலை இன்னமும் வாசிக்கவில்லை' என்கிற அசட்டுத்தனமான பெருமையுடன் கூடிய ஒப்புதல் வாக்குமூலத்துடன்தான் பொதுவாக துவங்குகிறார்கள். வெற்றுத்தனமான சம்பிரதாயங்களுடன்தான் இம்மாதிரியான நிகழ்வுகள் முடிகின்றன. அசலான இலக்கியத்தில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நபர்களின் மூலம்தான் அற்புதமான, ஆத்மார்த்தமான பேச்சுகள் அபூர்வமாக நிகழ்கின்றன.

***

உயிர்மை பதிப்பகத்தின் பத்து நூல்களின் வெளியீட்டு விழா ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள புக் பாயிண்ட் நூல் அரங்கில் நடைபெற்றது. உள்ளே நுழையும் போதே, நீண்ட நாட்களாக பாாக்க நினைத்திருந்த 'மெல்லிய கண்ணாடி அணிந்திருந்த பூனை' யான போகன் சங்கரை பார்க்க நேர்ந்தது நல்ல சகுனம். கூடவே டயட்டில் இருக்கும் இராமசாமி கண்ணன். 'பிசாசு படத்துல அப்படி என்னய்யா இருக்கு...சொல்லுங்க பார்க்கலாம்' என்கிற அதிரடியான கேள்வியுடன் வரவேற்றவரை 'வணக்கம் ஐயா' என்று கூறி விடைபெற்றேன். சிவராமன், விநாயக முருகன், அருண் (தமிழ் ஸ்டுடியோ), உமா மஹேஸ்வரன் என்று இன்னமும் சில நண்பர்களை சந்திக்க முடிந்தது. அதிஷாவை கூப்பிட்டு வெளியிடப்படவிருக்கும் அவரது நூலுக்காக வாழ்த்து சொன்னேன். அதிஷாவின் எழுத்தை அதன் துவக்கத்திலிருந்தே இணையத்தில் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எளிமையான ஆனால் நுட்பமான நகைச்சுவையும், அவதானிப்பும் அவற்றை இன்னமும் எளிமையான எழுத்தில் வெளிப்படுத்தும் லாகவமும் என ஓர் எழுத்தாளரின் திறமைளைக் கொண்டிருக்கிறார். இன்னமும் தீவிரமாக முயன்றால் அவரால் கவனத்துக்குரிய எழுத்தாளராக மலர முடியும் என்பது என் நம்பிக்கை.

மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தியோடர் பாஸ்கரனின் நூலைப்பற்றி (சோலை எனும் வாழிடம்) முன்னாள் நீதியரசர் சந்துரு பேசினார்.

'பொதுவாக சினிமா விமர்சனம் எழுதுபவர்கள், தாம் பார்க்கும் சினிமாக்களில் உள்ள பலவீனங்களை பட்டியலிட்டு இயக்குநரை நோக்கின உரையாடலாகத்தான் தமது பதிவுகளை எழுதுகிறார்கள். மாறாக என்னுடைய பதிவுகள் ஒரு பார்வையாளனின் நோக்கில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கும்' என்று தன்னுடைய நூலைப் பற்றி (தமிழ் சினிமா: காட்டப்படுவதும் காண்பதுவும்) குறிப்பிட்டார் பேரா. அ.ராமசாமி.

அ.ராமசாமியின் நூலைப் பற்றி பேசிய தியோடர் பாஸ்கரன், 'சினிமாவைப் பற்றிய சிறந்த விமர்சன நூல்கள் தமிழில் குறைவாகத்தான் இருக்கின்றன. சினிமா நுட்பங்களைப் பற்றிய கலைச்சொற்கள் தமிழில் பெரிதும் உருவாகாமல் இருப்பதே இதற்கொரு காரணம். 'Casting' என்பதை தமிழில் எவ்வாறு குறிப்பிடுவீர்கள். சினிமா பற்றிய அ.ராமசாமியின் பார்வை நுட்பமானதாகவும் தனித்துவமானதாகவும் இருக்கிறது' என்றார்.

'தடித்த கண்ணாடி அணிந்த பூனை' என்கிற போகன் சங்கரின் கவிதை நூலைப் பற்றி பேசின எழுத்தாளர் சுகுமாரன், "சுமார் ஒரு மணிநேரத்திற்கொரு கவிஞர்கள் உருவாகி விடுகிற சமகால சூழலில் நான் கவனித்த வரை போகன் சங்கர் முக்கியமானதொரு கலையாளுமையாக தெரிகிறார்" என்று பாராட்டி சங்கரின் இரண்டு கவிதைகளை வாசித்தார்.

நான் மிக மதிக்கும் ரகசியமாக காதலிக்கும் படைப்பாளுமைகளுள் ஒருவர் சுகுமாரன். அவரிடமிருந்து வாழ்த்தும் பாராட்டும் பெறுவது மிக முக்கியமானது. போகன் சங்கர் மீது பொறாமையாகவும் பெருமிதமாகவும் இருந்தது. கவிதை என்கிற வடிவம் என் இளமைக்காலத்திலிருந்தே ஒவ்வாமையை அளிக்கும் விஷயமென்றாலும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகும் சங்கரின் சில கவிதைகளை வாசித்து வியந்ததுண்டு. இப்போது சுகுமாரனின் பாராட்டிற்குப் பிறகு அவரின் எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

பள்ளி மாணவி போல் தோற்றமளித்த மனுஷியின் கவிதை நூலைப் பற்றி அபிலாஷ் சந்திரன் பேசினார். 'அட்டையில் இவரது பெயரை எடுத்து விட்டால் இந்தக் கவிதைகள் ஓர் ஆணினால் எழுதப்பட்டதோ என்று நினைக்குமளவிற்கு, பொதுவாக பெண் எழுத்தாளர்களின் கவிதைகளில் உள்ள மென்மை, இளகும் தன்மை ஆகியவை இவைகளில் இல்லை' என்றார்.

செந்தில்குமாரின் சிறுகதைகளைப் பற்றி எழுத்தாளர் பாவண்ணன் பேச எழுந்தார்.


என்றாலும் பெருமாள் முருகனின் நாவல் தொடர்பாக சமீபத்தில் எழுந்த சர்ச்சை குறித்த எண்ணங்களே என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்ததாலும் அருகில் அமைந்திருக்கும் இன்னொரு அரங்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலச்சுவடின் ஏழு புனைவு நூல் வெளியீட்டில் அவருடைய பங்களிப்பும் இருந்ததாலும் அதைக் கவனிக்கலாமே என்று எழுந்து சென்றேன். மெட்ரோ ரயில்காரர்களின் ஆக்ரமிப்பினால் போருக்குப் பிந்தைய காட்சிகள் போல் கொந்தப்பட்டிருக்கும் அண்ணாசாலையின்  சாலைகளை அபாயகரமாகக் கடந்து குறிப்பிட்ட அரங்கம் எங்கே இருக்கிறது என தேடினேன். நான் முன்னர் அதிகம் சென்றிராத, எனக்கு அவ்வளவாக பிடித்திராத சூழலைக் கொண்டிருந்த பழைய ஆனந்த் திரையரங்கு கட்டிடத்தை மனதில் கொண்டே தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் அது இடிக்கப்பட்டு பல்லடுக்கு அலங்கார மாளிகையாக உருமாறியிருந்ததை பிறகுதான் கண்டுகொண்டேன்.. பளபளப்பான லிஃப்ட்டில் ஏறி ஒரு கார்ப்பரேட் மீட்டிங் நடக்கக்கூடிய இடம் மாதிரியான நவீன தோற்றத்தில் இருளும் வெளிச்சமுமாக இருந்த 'உமாபதி கலையரங்கில்'  நுழையும் போது மிகச் சரியாக பெருமாள் முருகன் உரையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அரவிந்தனின் 'பயணம்' எனும் புதினத்தைப் பற்றியதாக பெருமாள் முருகனின் பேச்சு அமைந்திருந்தது. ஓர் ஆசிரமத்தில் நிகழும் முறைகேடுகளை, ஊழல்களைப் பற்றியதாக அரவிந்தனின் புதினம் இருக்கலாம் என்பது அந்தப் பேச்சிலிருந்து நான் கொண்ட யூகம்.

 'அரவிந்தன், தன்னுடைய நாவலில் கோவையில் உள்ள ஒரு ஆசிரமம் என்று பொதுவாக குறிப்பிடுகிறார். தவிரவும் சாதியைப் பற்றிய இடங்களைப் பற்றிய நேரடியான விவரங்களை தவிர்த்து விடுகிறார். இந்த ஒரு அம்சத்தை அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது'  என்று சமீபத்தில் தமக்கேற்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களின் எதிரொலியாக பெருமாள் முருகன் பேசிய போது அந்தக் கசப்பான நகைச்சுவையை அரங்கில் இருந்தவர்களும் ரசித்தார்கள். தவிரவும் தம்முடைய புதிய நாவலின் முன்னுரையில் எழுதியிருந்த ஒரு disclaimer -ஐ பெருமாள் முருகன் வாசித்துக் காட்டிய போது கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

அவருடைய உரை நிறைந்த பிறகு எழுத்தாளர் சுகுமாரன் மேடைக்கு வந்து (ஆம் டூயல் ரோல்) சமீபத்திய சர்ச்சையால் பெருமாள் முருகன் தாம் எதிர்கொண்டிருக்கும் சங்கடமான அனுபவங்களைப் பகிர்வார்' என்று அறிவித்த பிறகு பெருமாள் முருகன் அதைப் பற்றி பேசத் துவங்கினார். (என் நினைவிலுள்ளதை வைத்து எழுதுகிறேன்).

'இந்தப் புதினம் குழந்தைப் பேறில்லாத ஒரு தம்பதியினரின் சிக்கல்களையும் அதற்குத் தீர்வாக நமது பண்பாட்டின் தொன்மையிலேயே காணக்கிடைக்கும் ஒரு வழக்கத்தையும் இணைத்து எழுதப்பட்டது. தியோடர் பாஸ்கரன், அ.கா.பெருமாள் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்கள் பண்டைய சமூகத்தில் நிலவும் இது போன்ற வழக்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நாவல் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு - பாஜக மைய அரசில் பொறுப்பேற்ற பிறகு - சில சாதிய அமைப்புகளும் பக்தி வழிபாட்டு சங்கத்தினரைச் சேர்ந்தவர்களும், பிஜேபி,ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த நபர்களும் இந்தப் புத்தகத்தை எரித்தும் என்னுடைய புகைப்படத்தை செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் இரவு என்று கூட பாராமல் வீடுதேடி வந்து விளக்கம் கேட்டனர்.  புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு விளக்கம் சொல்லத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் புரிந்து கொள்ள விரும்பாமல் அரசியல் ஆதாயத்திற்காகவும் கவனஈர்ப்பிற்காகவும் செய்யப்படும் இது போன்ற சம்பவங்களால் மிகுந்த சங்கடத்திற்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறேன்.

தமுஎச உடனே இது குறித்த தனது கண்டனத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. நண்பர்களிடமிருந்தும் அறிவுசார் சமூகத்திடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும். எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு ஆறுதலைத் தருகிறது. இதை கடந்து போகும் துணிச்சலையும் தருகிறது. இது போன்ற  ஆதரவுகளுக்குப் பின்னர் பிஜேபி,ஆர்எஸ்எஸ் நபர்கள் இந்தப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். நாவலை தடை செய்ய வேண்டும், எழுத்தாளரை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை விலக்கிக் கொண்டனர். ஆனால் சில சாதிய அமைப்புகளும் வழிபாட்டு இயக்கங்களும் இந்தப் பிரச்சினையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய கோரிக்கை என்னவென்பதே தெளிவாக தெரியவில்லை. இந்த நாவலின் சில பக்கங்களை மாத்திரம் ஆயிரம் நகல்கள் எடுத்து கோயிலுக்கு வருபவர்களிடம் ஒரு துண்டறிக்கையுடன் விநியோகிப்பதாக அறிகிறேன். அந்தப் பக்கங்களை மாத்திரம் வாசித்தால் இந்த நாவல் சமகாலத்து பின்னணியில் எழுதப்பட்டது போன்ற தோற்றத்தை தரும். இதற்குப் பின்னர் பிஜேபி அரசியல் நபர்கள் மறைமுகமாக இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இந்த சர்ச்சை துவங்கப்பட்டது முதல் சொந்த ஊரில் தங்க முடியாமல் தலைமுறைவாக ஆங்காங்கே சென்று கொண்டிருக்கிறேன்.

இது ஏதோ என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை என்பதாக அறிவுசார் சமூகம் கருதி விடக்கூடாது. இனி மேல் எந்தவொரு படைப்பிலும் எந்தவொரு சாதியைப் பற்றியோ அதன் வழக்கங்கள் பற்றியோ எழுத முடியாமல் போகும். கருத்துச் சுதந்திரத்தை எதிரான ஆபத்தை இட்டுச் செல்லக்கூடியது இது."

இவ்வாறாக அவரது உரை அமைந்திருந்தது.


***

பெருமாள் முருகன் மீதான எதிர்ப்பும் போராட்டமும் மிரட்டல்களும் ஏதோ உதிரி அமைப்புளைச் சார்ந்த நபர்களால் செய்யப்படுவது என்பதாக நாம் கருதி புறக்கணித்து விட முடியாது என்பதாக எனக்குத் தோன்றுகிறது. எழுத்தாளராகவும் ஒரு தனிநபராகவும் அவர் எதிர்கொள்ளும் மனஉளைச்சலையும் அது அவரது பிந்தைய படைப்பாற்றலை பாதிக்கக்கூடிய ஆபத்தையும் நம்மால் யூகிக்க முடியும். எனவே அறிவுலகம் சார்ந்து இயங்கும் அனைத்து படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் நபர்களும், தங்களின் அரசியல்களை, கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாவது ஒதுக்கி - ஓரணியாக நின்று எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு தங்களின் ஆதரவை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


suresh kannan

Monday, December 02, 2013

பொதுவெளியின் எளிய வாசகர்

சனிக்கிழமையன்று ஜெயமோகனின் 'வெள்ளை யானை' நூல் வெளியீட்டு விழா முடிந்து கிளம்பும் போது கடும் பசி. வழக்கமான வேலை நாட்களில் இவ்வாறு அத்தனை பசிக்காத வயிறு, வெளியே செல்லும் நாட்களில் உடலின் ஓவர்டைம் காரணமாகவாகவோ என்னவோ, விரைவில் பசிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனாலேயே விழா நிகழ்வுகளை ஒருமித்த மனநிலையில் கவனிக்க முடிவதில்லை. அதனாலேயே அவசரமாக எதையாவது திணித்து விட்டு ஓடுவேன். அன்று இயலவில்லை.

விழா முடிந்து நண்பர்களிடம் சிறிது உரையாடி விட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் அடைந்து வீட்டை அடைவதற்குள் பசி அதன் உக்கிரத்தை அடைந்திருந்தது. ஓளவையார் சொன்னது போல் இடும்பை கூர் வயிறு. கடுமையான பசியை உணர்ந்திருந்தால்தான் இந்த நாவலில் விவரிக்கப்படும் பஞ்சத்தின் விவரணைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று விழாவில் கெளதம சன்னா (?) சொன்னது நினைவிற்கு வந்தது. (ஒருவேளை பசிக்கே இதெல்லாம் ஓவர்ப்பா தம்பி).

வீட்டின் அருகிலிருக்கும் ஓர் அசைவ உணவகத்திற்கு சென்று அவசரமாய் பிரியாணி ஆர்டர் செய்தேன். காத்திருக்கும் நேரத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில் வாங்கிய உயிர்மையைப் புரட்டி ஷாஜியின் கட்டுரையை ஆவலாக வாசித்துக் கொண்டிருந்தேன். (தன்னடக்கத்தை கவனியுங்கள், என் கட்டுரையை வாசிக்கவில்லை). அப்போதுதான் அது நிகழ்ந்தது.

அங்கு சர்வராக பணிபுரியும் ஒருவர் என்னை அணுகி 'இந்த மாச உயிர்மை இத்தனை சீக்கிரம் வந்துடுச்சுஙகளா?" என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் தினத்தந்தி, ராணிமுத்து வகையறாக்களைத் தாண்டி இலக்கிய நூல்கள், சிற்றிதழ்கள், காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலை இதழ்கள் ஆகியவற்றை வாசிக்கின்ற சகஹிருதயர்களை அபூர்வமாகவே கண்டிருக்கிறேன். அநாமயதேயராக இருந்தாலும் அவர் மீது இனம் புரியாத காரணமறியாத பிரியம் ஏற்பட்டு விடும். சமயங்களில் லஜ்ஜையை கைவிட்டு அவர் வாசிக்கும் நூல் என்னவென்று எட்டிப்பார்ப்பதும் உரையாட கூட முயல்வதும் கூட உண்டு.

ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் ஒருவர் இலக்கிய இதழைப் பற்றிக் கேட்டது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. (ஏன் ஹோட்டல் சர்வர் இலக்கியம் படிக்க்ககூடாதா, இதைத்தான் மேட்டிமை மனப்பான்மையின் ஆழ்மன விளைவு  என்று ருஷ்ய அறிஞர் மிகாச்சேவ் காபுரா சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் என்னை தாக்க முனையாமல் அந்த சூழ்நிலையின் யதார்த்தத்தோடு புரிந்து கொள்ளுங்கள்). அவரைப் பற்றி ஆவலாக விசாரித்தேன். பெயரையும் ஊரையும் பற்றி சொன்னார். இது போன்ற இதழ்களை தொடர்ந்து வாசிப்பதாகவும் தெரிவித்தவுடன் என் பசியும் சற்று மறைந்து அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

அவர் என்னைப் பற்றி விசாரித்தவுடன் என் பெயரைச் சொன்னேன். அவர் உடனே என் கையிலிருந்த இதழையும் பெயரையும் கச்சிதமாக இணைத்து யோசித்து 'சமீபத்தில் இதில் தொடர்ந்து எழுதுவது நீங்கள்தானே?' என்றார். 'ஆமாம்'

'கடந்த மாத  இதழில் மிஷ்கின் திரைப்படத்தைக் குறித்த கட்டுரையைப் பற்றி ' நல்லாயிருந்ததுங்க' என்று ஆரம்பித்து  'ஏன் இதைப் பற்றி எழுதவில்லை, ஏன் அதை எழுதவில்லை" என்று பல கேள்விகளால் திணறடித்து விட்டார். இதற்குள் நான் ஆர்டர் செய்த உணவும் வந்துவிட்டது. ஆனால் அதை கடும்பசியில் உண்ண இயலாமல் அவரின் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. உள்ளே கிச்சனில் வறுபட்டுக் கொண்டிருந்த கோழி கூட அத்தனை துன்பப்பட்டிருக்காது. அந்தச் சங்கடத்தையும் மீறி சினிமா குறித்த அவரின் ஆர்வம் என்னை பிரமிப்படையச் செய்தது. மிஷ்கின் திரைப்படத்தின் பல காட்சிகளை உதாரணம் காட்டிக் கொண்டேயிருந்தார். நான் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் கூட அவர்  ஞாபகம் வைத்திருந்தது உண்மையில் என்னை நெகிழ வைத்தது. 'என்னுடைய பூர்வீகம் சென்னைதானா? என்பதை மறுபடி மறுபடி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். சென்னையில் பிறந்தவர்கள் எழுத்தாளராக எப்படி ஆக முடியும் என்பதை அவர் உறுதியாக நம்பினது போலிருந்தது.

எதற்காக இத்தனை சுயபிரதாபம் என்றால், இத்தனை வருட இணையப் பொதுவாழ்க்கையில் வசைகள் உட்பட பல வாசகர் கடிதங்களை மின்னஞ்சலில் பெற்றிருக்கிறேன். (வாசகர் கடிதங்களை இணையத்தில் பிரசுரிப்பதில்லை. தன்னடக்கம்தான் காரணம்) இணையப் பரிச்சயத்தின் மூலம் பல நண்பர்களின் அன்பையும் சில நண்பர்களின் கசப்பையும்  பெற்றிருக்கிறேன். நூல் வெளியீட்டு விழாக்களில் புத்தக கண்காட்சிகளில் சில நண்பர்களின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறேன்.

ஆனால் பொதுச் சமூகத்தில் என்னிடம் எவ்வித முன்தொடர்பும் கொள்ள இயன்றிருக்காத ஓர் அநாயமதேய எளிய நபரை வாசகராக சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. இவரின் அறிமுகத்தின் மூலம் அன்றைய தருணம், வயிறை விடவும் மனம் அதிகமாக நிறைந்திருந்தது.

இதை போல் நூல் வெளியீட்டு விழா இறுதியில் வெளியே கிருஷ்ணமூர்த்தி என்கிற ஆர்வமுள்ள இளைஞரை சந்தித்தேன். திருவண்ணாமலையிலிருந்து இந்த விழாவிற்காகவே வந்திருக்கிறார். இரவு தங்க இடமிருந்தால் மறுநாள் நடக்கவிருந்த வாசகர் கலந்துரையாடலிலும் கூட கலந்து கொள்ள விருப்பம் ஆனால் இரவு கிளம்பினால்தான் மறுநாள் ஊர் அடைய முடியும் என்கிற வருத்தம். கணினி ஏதுமில்லையென்றாலும் கூட கைபேசியிலேயே ஜெயமோகன் தளத்தின் அனைத்துக் கட்டுரைகளையும் வாசித்து விடுவாராம். ஜெயமோகன் படைப்பொன்றைப் பற்றி கட்டுரை கூட எழுதி வைத்திருக்கிறார். பவாவிடம் சொல்லி திருவண்ணாமலையில் நிகழும் இலக்கிய சந்திப்பில் ஜெயமோகனிடம் சேர்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் இருக்கிறார். அவர் உடல்மொழியிலும் கண்களிலும் தெரிந்த பரவசத்தைக் காண நெகிழ்ச்சியாக இருந்தது. கணினி ஒன்றிருந்தால் அவர் எழுத்துக்களை இணையத்திலேயே பதிப்பிக்க முடியும் என்று யோசனை சொன்னேன். ஆனால் அவரிடம் சொந்தமாக கணினி இல்லை.

இவ்வாறான எளிய வாசர்களின் மூலம்தான் இலக்கியம் எனும் வஸ்து குற்றுயிரும் குலையுறுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறது. 


suresh kannan

Tuesday, December 06, 2011

சாரு - எக்ஸைல் - நூல் வெளியீட்டு விழா



காமராஜர் அரங்கம். மாலை சுமார் 6 மணி. அவ்வளவு பெரிய அரங்கத்தில் ஆங்காங்கே மக்கள் பரவலாக அமர்ந்திருக்க 'இச்சு இச்சு இச்சு கொடு' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, பரங்கிமலை ஜோதி வகையறா பிட்டு திரையரங்கங்களை நினைவுப்படுத்தினாலும் தமிழ் மேடைகளின் வழக்கமான அபத்த மரபுகளைக் கலைத்துக் கொண்டு ஒரு நூல் வெளியீட்டு விழா துவக்கத்திற்கு முன்பு 'வொய் திஸ் கொலைவெறி' போன்ற ஜாலியான பாடல்கள் ஒலித்தது எனக்கு பெரிய ஆறுதலைத் தந்தது உண்மை.

மேடையின் பின்னணி பேனரில் பெரிய அளவு சாரு, மெரூன் நிற சட்டையில் குறுந்தாடியில் புன்னகைத்துக் கொண்டிருக்க அதன் மினியேச்சர் போல் அதே போல மெரூன் நிற சட்டையணிந்த நிஜ சாரு கீழே உலவிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது இதே போல் எங்கோ ஏற்கெனவே பார்த்திருக்கிறோமே என்று நெருடியது. 'நாடோடிகள்' என்கிற திரைப்படத்தில் ஓர் அரசியல்வாதி வருவார். அவர் யாருக்காவது உதவி செய்கிற மறு கணமே அவரது ஆதரவாளர்கள் அந்தக் காட்சியைப் புகைப்படமாக எடுத்து கட்அவுட் வைத்து அசத்தி விடுவார்கள் . சாரு வாசகர் வட்டத்தினரும் தீயாய் வேலை செய்கிறார்கள் என்பதறிய மகிழ்ச்சி. சிறிது நேரத்திலேயே  கோட், சூட் அணிந்து CEO போல சாரு வந்தது, ஒரு MNC பிராடக்டின் அறிமுகப்படுத்தும் வணிக விழா போல் இருந்தது. தவறில்லை. ஜோல்னாப் பையும் கதர் சட்டையுமாகத்தான் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று யார் சொன்னது.

'உலகமயமாக்கத்தின் காலகட்டத்தில் இம்மாதிரியான மாற்றங்களைத்  தவிர்க்க முடியாது' என்று நண்பர் சிவராமன் கூறினாலும் இம்மாதிரியான கிம்மிக்கிஸ்களுக்கு இடையில்தான் தமிழ் இலக்கியம் ஜீவித்தாக வேண்டும் என்பது சற்றே பீதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

வாலி மொக்கைதான் போடுவார் என்று ஏற்கெனவே சர்வநிச்சயமாக எதிர்பார்த்திருந்ததால் ஏமாற்றமெதுவும் ஏற்படவில்லை. ஸ்ரீரங்கத்தில் நடத்திய கையெழுத்துப் பத்திரிகை முதல் சுயபுராணத்தை ஆரம்பித்தாலும் நாவலை 150 பக்கங்கள் வரை வாசித்திரு்ந்தாலும் நாவலின் மையத்தைப் பற்றி அவர் பேசவில்லை. ஆனால் இபாவும் சற்று மொக்கை போட்டதுதான் ஆச்சரியம். 'செக்ஸ் குற்றம் என்று நினைப்பவர்களுக்களுக்கானதல்ல இந்த நாவல். இது 'சாப்ட் போர்னோகிராபி அல்ல, ஹார்டு போர்னோகிராபி' என்றார் இ.பா.  'உச்சா' கூட போகத் தோன்றாமல் நாவலை ஏறக்குறைய முழுவதும் வாசித்திருந்த திடீர் பேச்சாளரான மதன்தான் நாவலைப் பற்றின அவுட்லைனை அடிக்கோடிட்டுப் பேசினார். இவர்கள் உரையாடின வரை வைத்துப் பார்த்தவரை சாருவின் தனிமனித அனுபவங்கள், வாசித்ததில் உருவியவை, வம்பு, கிசுகிசுக்கள் போன்றவைகளின் காக்டெயிலாகத்தான் 'எக்ஸைல்' இருக்கும் என்று தோன்றுகிறது. அது தவறா என்பதை நூலை வாசித்த பின்புதான் அறிய முடியும். ஆனால் எத்தனை பெரிய அறிவுஜீவிகளாயிருந்தாலும் மேடையேறின உடனே மிகுந்த பரவசத்துடன் 'விழா நாயகரை' பாராட்டி 'சர்வதேச படைப்பு' என்று உணர்ச்சிவசப்படும் தமிழ் மேடைகளின் மர்மம்தான் இன்னும் விளங்கவில்லை.

'தேகம்' ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த சூட்டின் விளைவாக இந்த நாவலை உடனே வாசிக்கவோ வாங்கவோ தோன்றவி்ல்லை. இத்தனைக்கும் அந்த நாவலை 'நான் இதுவரை எழுதினதிலேயே மிகச் சிறந்த எழுத்து' என்று தேகத்தைப் பற்றி சாருவே முன்னர் பிரகடனப்படுத்தியிருந்தாலும் நாவல் என்கிற பெயரில் அவர் செய்த பம்மாத்து அது என்பதுதான் என் அபிப்ராயம். எனவே பரவலான விமர்சனங்களுக்குப் பின்புதான் 'எக்ஸைலை' வாசிப்பது பற்றி முடிவு செய்ய முடியும்.

சாருவின் வாசகர் வட்டம் இந்த விழாவை மிகுந்த ஆர்வத்துடன் சிறப்பாக நடத்தியது பாராட்டத்தக்க விஷயம். அப்படியே சாருவையும் நன்றாக எழுதச் செய்யும் நெருக்கடியையும் அவர்கள் தரலாம். சாரு தன் உரையாடலில் தன்னுடைய பிரத்யேக பாணியில் பாசாங்குகளைக் களைந்த சில தருணங்களை வெளிப்படுத்தினார். முகமூடிகளையே அடையாளமாக்கிக் கொண்டிருக்கும் வழக்கமான சூழலில் இம்மாதிரியான சுவாரசியங்களே சாருவின் மீது இன்னும் நம்பிக்கையை இழக்கச் செய்யாமலிருக்கிறது. 

image courtesy: http://twitpic.com/photos/haranprasanna

தொடர்புடைய பதிவுகள்




suresh kannan