Sunday, December 13, 2009

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 1


ரஜினியின் பிறந்த நாளும் சாருவின் நூல்வெளியீட்டு விழாவும் ஒரே தேதியில் அமைந்தது தற்செயலாகத்தானிருக்க வேண்டும். ஏனெனில் ரஜினியின் படங்களில் வழக்கமாக சலிப்பேயின்றி அடங்கியிருக்கும் 'கிளிஷே'க்கள் போலவே சாருவின் நூல் வெளியீட்டு விழாவும் அதனுடைய பிரத்யேக 'கிளிஷே'க்களுடன் நடந்து முடிந்தது. இதைப் பற்றி பின்னால் எழுதுகிறேன்.

நேரடியாக அல்லாமல் சாருவை ரஜினியுடனும் ஜெயமோகனை கமலுடனும் ஒப்பிட்டு நேசகுமார் முன்னர் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வேடிக்கையான ரீதியில் இருந்தாலும் அதில் சற்று உண்மை இருக்கிறது. வேறெந்த இலக்கிய எழுத்தாளருக்கும் இல்லாத அளவிற்கு இந்த நூல் வெளியீட்டிற்கு அரங்கு நிறைந்த கூட்டம். ரஜினி திரைப்படக்காட்சி போலவே. மாத்திரமல்ல பெரும்பாலோனோருக்கு அமர இடமில்லாத நிலையிலும் விழா முடிய இரவு 10.00 மணிவரையான நிலையிலும் பெரும்பாலான கூட்டம் அப்படியே இருந்தது.

நான் சென்ற போது (சுமார் மாலை 06.45) மதன்பாப் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். ஒன்றும் புரியவில்லை. "மேடையில் எதை வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள்: என்று சாருவே சொன்னதாக சொல்லிக் கொண்டிருந்தார். சா.கந்தசாமி பேசிவிட்டு அமர்ந்துவிட்டார் என்று யூகிக்க முடிந்தது.

இந்த மாதிரி நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளும் கூட்டங்களுக்கு ஒரளவாவது சாப்பிட்டு விட்டுச் செல்வது நலம். இல்லையெனில் சற்று தாமதமானவுடனேயே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். எனவே நான் உடனே தீர்மானித்து வெளியே வந்து விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்த சிற்றுண்டி மேஜையை அடைந்த போது இரண்டு வடைகளே மீதமிருந்தது. அதில் ஒன்றையும் ஒரு கோப்பை காப்பியையும் அருந்திவிட்டு மீண்டும் சென்றேன்.

(Disclaimer: இனி சிறப்புரையாளர்களின் பேச்சில் நினைவில் இருப்பதை என்னுடைய மொழியில் தொகுத்து எழுதுகிறேன். எவ்விதமான குறிப்பும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. உரையாடல்களிலிருந்து விலகி கருத்துப் பிழையுடனான குறிப்புகள் ஏதாவது இங்கு பதியப்பட்டிருந்தால் அது உரையாடினவர்களின் தவறல்ல ; என்னுடைய நினைவுப் பிசகின் விளைவே).

()

'தாந்தேயின் சிறுத்தை' நூல் பற்றி அழகிய பெரியவன் உரையாடினார். "சாருவின் எழுத்து ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக இருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்திக் கூட இங்கு கட்டுரை எழுதப்படுகிறது. சமகால பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு எழுத்தாளரும் பெரிதாக எழுதவில்லை. திண்ணியத்தில் தலித் ஒருவரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்த போதும் மேல்வளவு முருகேசன் படுகொலை சம்பவத்தைப் பற்றியும் எந்த இலக்கியவாதியும் எழுதினாகத் தெரியவில்லை" என்றார். ஜெயமோகனுக்கும் சாருவிற்கும் இடையேயான சர்ச்சைகளைப் பற்றி குறிப்பிடும் போது "ஜெயமோகன் 'தலித் அரசியல்' கட்டுரைகளில் அம்பேத்கர் பற்றி உண்மைக்கு மாறானவைகளை எழுதுகிறார். அவர் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே எழுதுவது மோசமானது. அவரை கேரளத்தில் பைங்கிளி எழுத்தாளர் என்கிறார்கள்."

ஷாஜி ஆங்கிலத்தில் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தமிழிலேயே நன்றாகவே பேசினார். மொழியை சரியாக அறியாத தன்னுடைய குறைபாட்டை நகைச்சுவையின் மூலம் கடந்து வந்தார். ஷாஜி இவ்வளவு நகைச்சுவையுடன் பேசுவார் என்பது நான் எதிர்பாராதது. மோகன்லாலை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளம் சற்றே அறிந்த ஒரு இயக்குநருடன் சென்ற சம்பவத்தைச் சுவாரசியமாக விளக்கினார். கேரள பத்திரிகைகளின் எழுதுமுறையைப் பற்றி குறிப்பிடும் போது "நான், எனது என்கிற மாதிரி அங்கே எழுத முடியாது. இந்தக் கட்டுரையை எழுதுகிற இந்த ஆள்..." என்று பணிவாகத்தான் எழுத முடியும். ஆனால் சாருவின் எழுத்தில் அம்மாதிரியான பணிவெல்லாம் கிடையாது. 'நான்' என்பதுதான் தீர்மானமாகவும் அவரது எழுத்துக்களின் பிரதானமாகவும் இருக்கிறது. அவரது எழுத்துக்களின் மோசமான மலையாள மொழிபெயர்ப்புத் தடையைத் தாண்டியும் அவரது எழுத்து அங்கே மிகுந்த செல்வாக்கை பெற்றிருக்கிறது. அந்தளவிற்கு வீர்யமானது சாருவின் எழுத்து" என்றார்.

வசந்தபாலனின் பேச்சு தோழமையானதாகவும் வெளிப்படையாகவும் இருந்தது. "பொதுவாக சாரு தமிழ் சினிமாக்களை கிழிகிழியென்று கிழிக்கிறார். அதனாலேயே அவருடன் நட்பு பாராட்ட பயமாய் இருக்கிறது. அவருக்கு ஒரு படத்தை பிடித்து விட்டால் ஓகோவென கொண்டாடுகிறார். பிடிக்கவில்லையென்றால் மரண அடிதான். என்னுடைய வெயில் படத்தை அவர் பாராட்டவேயில்லை. அதில் உள்ள சிறந்த பாடல்களையும் அவர் கண்டு கொள்ளவில்லை. இன்றைக்கு தமிழ் சினிமாவை தர்க்கப்பூர்வமாகவும் ஆழமாகவும் விமர்சனம் செய்ய ஆளில்லை. அந்தத் தேவையை சாரு பூர்த்தி செய்கிறார். தமிழ் சினிமா மீது அவருக்கிருக்கும் ஈடுபாடும் அக்கறையுமே அவர் பால் என்னை நெருங்கிவரச் செய்கிறது"

ரெண்டாம் ஆட்டம் நாடகம் தொடர்பான நூலைப்பற்றி திருநங்கை கல்கி பேசினார். "ஒரினப்புணர்ச்சி பற்றி 1992-ல் இந்த நாடகத்தில் நிகழ்த்தப்பட்ட போது எழுந்த எதிர்ப்பும் வெளிப்பட்ட வன்முறையுமான நிலை இன்று வரை மாறாதிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக சாரு தொடர்ந்து எழுதுகிறார். அவரை எங்களின் பிரதிநிதியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். மணிரத்னம், பாலா போன்றவர்களைத் தவிர பெரும்பாலான இயக்குநர்கள் திருநங்கைகளை பாலியல் ரீதியாகத்தான் சித்தரிக்கின்றனர். (சமீபத்திய திரைப்படமான 'நினைத்தாலே இனிக்கும்' காட்சிகளை குறிப்பிட்டுப் பேசுகிறார்) இந்நிலை மாற வேண்டும்."

'ராமையாவின் குடிசை' ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், சாருவின் அரசியல் கட்டுரைகளைப் பற்றி முற்போக்கு முகாம்களில் ஒலிக்கும் பாவனைகளோடு பேசினார். நகைச்சுவையாக ஆரம்பித்த இவரது பேச்சு போகப் போக தீவிர பாவனையுடன் தொடர்ந்தது. 'கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி அப்போது எந்தவொரு எழுத்தாளரும் எழுதவோ, குரல் கொடுக்கவோ இல்லை" கும்பகோண தீவிபத்தில் இறந்த போன குழந்தைகளைப் பற்றின சம்பவத்தைப் பற்றி இவரது அடுத்த ஆவணப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது பேச்சின் இடையில் தெரிய வந்தது.

'மலாவி' என்றொரு தேசம்' நூலைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார். இவர் பேச்சு எனக்கு சற்று அதிர்ச்சியைத் தந்தது. ஏனென்று சொல்கிறேன். அதற்கு முன் எஸ்.ராவைப் பற்றி என்னுடைய பார்வையை சொல்லியாக வேண்டும். உலக சினிமா மீது எனக்கு தீவிர ஆர்வமேற்பட்டதற்கு எஸ்.ராவின் பல சினிமா கட்டுரைகளுக்கு கணிசமான பங்குண்டு. பொதுவாக இவரது கட்டுரைகளில் தெரியும் கடலின் ஆழமான அமைதியும் கட்டுரையின் மையத்திலிருந்து விலகாத நேர்த்தியும் உணர்வு பூர்வமான மொழியும் உணர்ச்சி வசப்படாத நியாயமான மதிப்பீடுகளும் எனக்குப் பிடிக்கும். எனவேதான் இவரது எழுத்துக்களை தொடர்ச்சியாகவும் சிரத்தையாகவும் வாசிப்பேன். இணையத்தில் புழங்கும் பெரும்பாலான மற்ற எழுத்தாளர்கள், இணையத்தில் எழுதுபவர்களை "முதிர்ச்சியற்றவர்கள்" என்கிற ரீதியில் விமர்சிக்கும் போது எஸ்.ரா மாத்திரமே தன்னுடைய வலைப்பக்கத்தில் ஆரோக்கியமான பதிவுகளை அடையாளங் காட்டி நம்பிக்கை ஏற்படுத்துகிறவர் என்கிற முறையில் அவர் மீது எனக்கு மரியாதையுண்டு.

எஸ்.ரா தனது பேச்சில் இணையத்தில் எழுதுபவர்களைப் பற்றின தன்னுடைய மதிப்பீட்டை பகிர்ந்து கொண்டார். 'இணையத்தில் எழுதும் பல பேர் இங்கு வந்துள்ளனர். வாசகன் என்கிற நிலை இன்று குறைந்திருக்கிறது. எல்லோருமே எழுத்தாளர்கள்தான்." பின்பு, இணையத்தின் மூலம் ஏற்பட்ட இரண்டு நட்புகளைப்பற்றி விவரிக்கிறார். "ஒருவர் தான் எப்போது ஒரு கட்டுரையை எழுதினாலும் உடனே தொடர்பு கொண்டு "இப்பத்தான் இதப் பத்தி யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள். என்பார். இது தொடர்ந்த போது அவர்தான் நானோ என்ற குழப்பங்கூட ஏற்பட்டது. ஜப்பானில் வசிக்கும் இன்னொரு நண்பர் எப்போதும் தமிழ்ப்படங்களைப் பற்றியும் அவற்றின் குறுந்தகடுகள் எங்கே கிடைக்கும் என்பது பற்றியே பேசிக் கொண்டிருப்பார். நான் ஜப்பானில் உள்ள சிறந்த எழுத்தாளர் பற்றியோ சிறந்த திரைப்பட இயக்குநர் பற்றியோ உரையாட ஆரம்பத்தில் அதில் அவருக்கு ஆர்வமும் அக்கறையும் இருக்காது" என்று தொடர்கிற எஸ்.ரா, மலாவி தேசத்தைப் பற்றி சாருவுடன் உரையாடின ஆனந்த்தையும் இதே வரிசையில் வைக்கிறார்.

"தன்னுடைய வாசகருடன் ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றத்தை புத்தகமாக வெளியிட்டது இந்தியாவிலேயே சாருவாகத்தான் இருக்க முடியும். வாசகரின் அறியாமைக் குரலையும் மீறி சாரு நேசக்கரம் நீட்டுகிறார். என்னால் அது இயன்றிருக்காது. இதில் அவரது வாசகரான ஆனந்த் மலாவி தேசத்தைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொன்றிலும் அவரைப் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி எழுதுவதற்கு மலாவியை ஒரு அடிப்படையாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மாறாக சாரு மலாவியிலுள்ள உன்னதமான அம்சங்களைப் பற்றி உரையாடும் போதும் கேட்கும் போதும் ஆனந்த் அதற்கு தன்னைப் பிரதானமாகக் கொண்ட பதிலையே எழுதுகிறார். சாரு மலாவியில் வாழ்கிறார்; ஆனந்த் மயிலாப்பூரில் வாழ்கிறார் என்றுதான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மலாவியிலுள்ள மிகப்பெரிய ஏரி ஒன்றைக் குறிப்பிட்டு சாரு கேட்கும் போது ஆனந்த்தோ 'அந்த ஏரியில் அமர்ந்து காபி அருந்திய படி 'அலைபாயுதே கண்ணா' பாடலை கேட்பதாக' எழுதுகிறார். மலாவி பற்றின சித்திரத்தை சாருதான் பொறுமையாக ஒருபுறம் தீட்ட வேண்டியிருக்கிறது."

(இங்கு எஸ்.ராவுடன் நான் சற்று மாறுபட வேண்டியிருக்கிறது).

தொடரும்....


suresh kannan

10 comments:

Cable சங்கர் said...

ahaa.. உங்களை பார்க்கணுமினு ரொம்ப நாளா நினைச்சிட்டுஇருந்தேன்.. மிஸ் பண்ணிட்டேனே.. நானும் மதன்பாப் பேசும் போதுதான் வந்தேன். வடை போயிருச்சு தலைவரே..

யதிராஜ சம்பத் குமார் said...

அருமையான நடையில், விழாவை கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.

Anonymous said...

எனது தல சாருவுக்கு அன்பான வேண்டுகோள் ! இப்படி சாராயத்தோட இருந்து பெருமையா போஸ் கொடுக்கிறமாதிரி நீங்க பெண்களோட இருக்கும் போது எடுத்த போட்டக்களையும் வெளியிட்டால் நம் சமூகம் திளைக்கும். மேலும் பின் நவீனத்துவம் என்ற பெயரில் நீங்கள் ஆண்கலோடேயே பின்னுக்கு செய்யும் (இந்த சுரேஷ் போன்றவர்களோடு) போட்டோக்களையும் போட்டு ஓரினச் சேர்க்கைக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்துமாறு அன்புடன்வேண்டுகிறேன்

மணிஜி said...

நானும் உங்களை சந்திக்க ஆவலாயிருந்தேன்.93400 89989

செ.சரவணக்குமார் said...

மிக அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பரே.

லேகா said...

நிகழ்ச்சியில் உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.

//ஆனந்த்தோ 'அந்த ஏரியில் அமர்ந்து காபி அருந்திய படி 'அலைபாயுதே கண்ணா' பாடலை கேட்பதாக' எழுதுகிறார். மலாவி பற்றின சித்திரத்தை சாருதான் பொறுமையாக ஒருபுறம் தீட்ட வேண்டியிருக்கிறது."//

கொஞ்சம் கோபமாகவே எஸ்.ரா பேசியதாக தோன்றியது. எல்லோருடைய பார்வையும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதில்லை.எனது புரிதலில் பிழையா என தெரியவில்லை.

Anonymous said...

"சாருவின் எழுத்து ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக இருக்கிறது"

Charu writes about pet dogs of the rich and powerful and not about the real underdogs or about dalits or about the labourers.What does he know about the lives of contract labor or about the lives of families of farmers who committed suicide.

Unknown said...

அடுத்தப் பகுதிக்குக் காத்திருக்கேன் சுரேஷ்

நிலாரசிகன் said...

ஆனந்த் அண்ணாமலையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்..
எஸ்.ராவின் விமர்சனத்தில் காரம் கொஞ்சம் அதிகமே.

நல்ல பகிர்வுக்கு நன்றி தோழரே.

ஜெ. ராம்கி said...

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஜெயமோகனும், சாருவும் எதிரெதிர் துருவத்தில் இருக்கிறார்போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் ஒருவரை ஒருவர் ஆதரித்தும் இந்த இடத்திற்கு வேறெவரையும் வரவிடாமலும் செய்து வருகிறார்கள் - இது கூட்டுச் சதியெல்லாம் இல்லை, இயல்பாகவே இப்படி தமிழ்ச்சமுதாயத்தில் நிகழ்ந்து விடுகிறது. ஆரிய மாயை - திராவிட மாயை, எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய்-சூர்யா இப்படி தொடர்ந்து நிகழ்ந்து வருவது தமிழ் மண்ணின் இலக்கணமாகவே இருக்கிறது. இதில் தற்காலத் தமிழிலக்கியத்தில் ஜெயமோகனும் – சாரு நிவேதிதாவும் இரு துருவங்களாக இருந்து தனக்கென ஒரு ரசிகர் படையை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.....

....
இதுதான் நீங்கள் சுட்டும் திண்ணை கட்டுரையில் வரும் சம்பந்தப்பட்ட பகுதிகள்.

இதில் சாருநிவேதிதாவை ரஜினியோடு ஒப்பிட்டு ரஜினியை கேவலப்படுத்தும் வரிகளை நேசகுமார் எங்கே எழுதியிருக்கிறார்?

இதை சுரேஷ் கண்ணனோ அல்லது நேசகுமாரோ விளக்குவார்களா?

ராம்கி