Monday, December 19, 2016

Inside Out - ரைலியின் மனதிற்குள் என்ன நடக்கிறது?





ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இன்பம், துன்பம், பயம், கோபம் போன்ற உணர்ச்சிகள் இருப்பது நமக்குத் தெரியும். அவை உருவமில்லாதவை. நம்மால் உணரக்கூடியவை மட்டுமே. ஆனால் அவற்றிற்கு உருவம் இருந்து நம்மால் பார்க்க முடியும் என்றால் எப்படியிருக்கும்? சுவாரசியமான கற்பனை அல்லவா? இதை அடிப்படையாக வைத்து 2015-ல் உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம்தான் Inside out.


***

அமெரிக்க நகரின் மினசோட்டா மாநிலத்தில் ஓர் அழகான பெண் குழந்தை பிறக்கிறது. அதன் பெயர்  ரைலி. அவளுக்குள் இருக்கும் இன்பம், துன்பம், கோபம், பயம், அருவெறுப்பு ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் அதற்குப் பொருத்தமான வண்ணங்களில் நமக்கு உருவங்களாக காண்பிக்கப்படுகின்றன. இந்த உணர்ச்சிகள் அவளுடைய தலைமைச் செயலகமான மூளைக்குள், அதாவது மனதின்  செயல்களாக அவளைக் கட்டுப்படுத்துவதை நாம் பார்க்கிறோம். இதில் இன்பமே பிரதானமான பங்காற்றுகிறது. எனவே ரைலி பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

அவளுடைய குடும்பம் சான்பிராஸிஸ்கோ நகருக்கு இடம் பெயர்கிறது. அதிலிருந்து பிரச்சினைகள் துவங்குகின்றன. புதிய இடம் அவளுக்கு அத்தனை இன்பத்தைத் தரவில்லை. அவளுடைய தந்தைக்கு தொழில்ரீதியாக பிரச்சினை ஏற்படுவதால் வழக்கம் போல்  இவளிடம் பிரியமாக இல்லாமல் விலகி இருக்கிறார்.  எனவே ரைலி மகிழ்ச்சியைத் தவிர இன்ன பிற உணர்ச்சிகளால் அதிகம் ஆட்படுகிறாள்.

***

புதிய பள்ளி, புதிய நண்பர்கள். வகுப்பின் முதல் நாளன்று ஆசிரியை ரைலியை விசாரிக்கும் போது அவள் துன்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறாள். அப்போது தலைமைச் செயலகத்திற்குள் துன்பம் என்கிற பாத்திரம் கோளாற்றை ஏற்படுத்தி விட இன்பமும் துன்பமும் அங்கிருந்து வெளியேறும் நிலைமை ஏற்படுகிறது. எனவே ரைலி, இன்ன பிற உணர்ச்சிகளான கோபம், பயம், அருவெறுப்பு ஆகிய உணர்ச்சிகளால் மட்டுமே ஆட்பட்டிருக்கிறாள். இந்த மூன்று உணர்ச்சிகளும் நிலைமையை சமாளிக்க முயல்கின்றன. என்றாலும் இயலவில்லை.

இந்த நிலையில் தன் பெற்றோருக்குத் தெரியாமல் ரைலி, தான் பிறந்த ஊருக்கே தனியாக திரும்பிச் செல்ல  முடிவெடுக்கிறாள். அவள் ஒவ்வொரு மீறலையும் நிகழ்த்தும் போது அவளுக்குள் இருந்த நற்பண்புகள், நல்ல நினைவுகள் ஆகிய உருவங்கள் இடிந்து ஆழ்மனதிற்குள் சென்று விழுகின்றன.

இன்பம் என்கிற பாத்திரம் தலைமைச் செயலகத்திற்குள் திரும்பினால்தான் ரைலி வழக்கமான இயல்பிற்கு திரும்ப முடியும். பல்வேறு தடைகளுக்கும் சிக்கல்களுக்கும்  பின்னர் இன்பமும், துன்பமும் அங்கு திரும்பி வருகின்றன. ரைலி  வழக்கம் போல் இன்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் திரும்பும் மகிழ்ச்சியோடு படம் நிறைகிறது.


***

இந்த திரைப்படம் நல்ல கற்பனைதான் என்றாலும் நம் மனம் பல்வேறு உணர்ச்சிகளால் இயங்குவதை வண்ண மயமான உருவங்களாக காண்பிக்கிறது. எனவே நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. நம்முடைய ஒவ்வொரு உணர்ச்சிக்கும் நாமேதான் காரணமாக இருக்கிறோம். நம்மை இன்பம் ஆக்ரமிக்க வேண்டுமா அல்லது இன்ன பிற உணர்ச்சிகளா என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம் என்பதை இத்திரைப்படம் மிக அழுத்தமாக நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் இது தெரியாமல் நம்மை வேறு எவரோ கட்டுப்படுத்துகிறார்கள் என்கிற நினைப்பில் மகிழ்ச்சியைத் தவிர இன்ன பிற உணர்ச்சிகளுக்கு தேவையில்லாமல் ஆட்பட்டு அவஸ்தைப்படுகிறோம். சுருக்கமாகச் சொன்னால் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' ஒவ்வொரு உணர்ச்சியுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தின் கிராஃபிக்ஸ், நுட்பத்தின் உச்சம் எனலாம். ரைலியின் மனதிற்குள் நிகழும் ஒவ்வொரு உணர்ச்சியின் செயற்பாடும் அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சுவாரசியமான திரைப்படம் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் கூட இதில் பாடம் உள்ளது.

ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற இத்திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள்.

(உயர்நிலைப் பள்ளியொன்றின் News Letter-க்காக எழுதிய திரைப்பட அறிமுகக் கட்டுரை)

suresh kannan

Monday, November 28, 2016

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமையும் நவீனமுமான ஒரு கதைசொல்லி




வருடம் 1985. நான் பத்தாம் வகுப்பில் இருக்கும் போது தமிழ்  இரண்டாம் தாளில் சில சிறுகதைகள் பாடத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. என்னவென்று தெரியாமலேயே அதிலுள்ள ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வட்டார வழக்கு தடைகளையும் தாண்டி அதன் சுவாரசியத்தை அந்த இளம் வயதிலேயே உணர முடிந்தது.

நடுத்தர வர்க்க வாழ்வின் அவல நகைச்சுவையை  நையாண்டியுடன் சித்தரிக்கிற சிறுகதையது  என்பதும்  அதை எழுதியவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவரான  'புதுமைப்பித்தன்' என்பது புரிவதற்கும்  அறிவதற்கும் சில வருடங்கள் கடக்க வேண்டியிருந்தாலும் அப்போதைய முதிரா வாசிப்பில் சிறுகதையில் வரும் சிறுமியின் சித்திரம் மிகவும் பிடித்திருந்தது. வர்க்க பேதத்தை உணராமல் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டு வீட்டில் விட அடம் பிடிக்கும் காட்சியும், விருந்தாளியை 'பல்லு மாமா' என்றழைக்கும் குறும்புத்தனமும் அந்தச் சிறுகதையை மறக்க முடியாமல் செய்தன.


***

சிறுகதை எனும் வடிவம் மேற்கிலிருந்து தமிழிற்கு  இறக்குமதியானது என்றாலும் அந்த வடிவம் இங்கு பரவலாக அறிமுகமாவதற்கு முன்பே அதில் உள்ள பல சாத்தியங்களை புதுமைப்பித்தன் முயன்று பார்த்து விட்டார் என்பது பிரமிப்பிற்கு உரியது. உலக இலக்கியத்தில் பரிச்சயம் கொண்டிருந்த அவர், வேறு வேறு பாணிகளில் நிறைய சிறுகதைகளை தமிழில் எழுதினார்.  நடுத்தர வர்க்க வாழ்வின் அவலம், விளிம்பு நிலை மக்களின் நுண்மையான சித்தரிப்புகள், இதிகாச கதையின் மீளுருவாக்கம்  என்று பல வகைகள்.

'அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்து சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.' (மகாமசானம்) என்பது  போன்ற  இன்றைக்கும் நவீனமாகத் தோன்றுகிற வாக்கியங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

புதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்புகள் பல்வேறு வடிவங்களில் வந்து விட்டன.  நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை கையாள்வது பற்றி கேட்பாரே இல்லை. 'சிறந்த சிறுகதைகள்' 'பத்து முத்துகள்' என்ற தலைப்புகளில் இஷ்டம் போல் அடித்து தள்ளுவது ஒரு மோசமான வணிக உத்தியாக மாறி விட்டது. ஒரு முன்னோடி எழுத்தாளரின் படைப்புகளை கால வரிசையில் தொகுத்து பிழையின்றி செம்மை பதிப்பாக கொண்டு வர வேண்டும் என்கிற நாணயமும் அர்ப்பணிப்பும் பெரும்பாலான பதிப்பாளர்களிடம் இல்லை. சில  பதிப்பகங்களே அந்த  நியாயங்களைச் செய்கின்றன. அந்த வகையில் ஆ.இரா.வேங்கடாசலபதியை பதிப்பாசிரியராக கொண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்ட செம்மை பதிப்பு குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் அன்னம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கும் 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுப்பு முக்கியமானது. இது எந்த வகையில் முந்தைய  முயற்சிகளிலிருந்து வேறுபட்டது?

சிறுகதையின் தன்மையைக் கொண்டு அதை ஒரு குறிப்பிட்ட வகைமையில் பகுத்து கீழ்கண்ட  பதினோரு பகுப்புகளாக பிரித்து இந்த தொகுப்பை உருவாக்கியிருக்கிறார். சி.மோகன். மிகுந்த உழைப்பையும் நுண்ணுணர்வுடனான வாசிப்புத் தன்மையையும் கோரும் விஷயம் இது.

1) மாயப் புனைவு, 2) விந்தைப் புனைவு, 3) வேதாந்த விசாரம், 4) புராண, இதிகாசங்கள் - மீள்பரிசீலனை, 5) துப்பறியும் கதைகள், 6) குழந்தை-சிறுவர் - இளைஞர் உலகம், 7) விளிம்பு நிலை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை, 8) எழுத்தாளர் வாழக்கை 9) கால யதார்த்தமும் மனித மனமும், 10) சமூக யதார்த்தமும் காதல் மனமும், 11) தாம்பத்யம்.

சில சிறுகதைகளை ஒரு குறிப்பிட்ட வகைமையில் அடக்க முடியாமல் தவித்த அவஸ்தை உள்ளிட்ட பல விவரங்களை முன்னுரையில் விஸ்தாரமாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான தொகுப்பு நூல் என்று இதைச் சொல்லலாம்.

**

வருடம் 2016. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகளின் தமிழ் பாட நூலை தற்செயலாக புரட்டிப் பார்த்தேன். என் இளம்வயதில் நான் வாசித்து ரசித்த அதே சிறுகதை - 'ஒரு நாள் கழிந்தது', இதிலும் இருந்தது.

"பிடிச்சிருந்துதா?" என்று கேட்டேன்.. "பல்லு மாமா கதைதானே? ம்.." என்றாள் உற்சாகமாய். காலம் அப்படியே உறைந்து நின்றது போன்ற பிரமை.  புதுமைப்பித்தன் எழுத்தின் சாஸ்வதத்திற்கு இதுவொரு சிறிய உதாரணம்.

**

புதுமைப்பித்தன் சிறுகதைகள் / பகுப்பு: சி.மோகன் /முதற்பதிப்பு மே 2016 / 
 வெளியீடு: அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007. 
விலை. ரூ.500/-

நன்றி: அலமாரி - புத்தக மதிப்புரை இதழ்

suresh kannan

Sunday, November 27, 2016

மீண்டும் பூக்கும் (புதினம்) - ஜெ. பானு ஹாருன்



வளரிளம் பருவத்தில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் போன்றவை வாசிக்கும் போது இஸ்லாமியக் கதைகள் கண்ணில் படும். ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்புக் கதைகள் வெளிவரும். ஆனால் அவற்றை வாசிப்பதில் சில இடையூறுகள் இருந்தன. அந்தச் சமூகத்திற்கேயுரிய வழக்குச் சொற்களும் அரபிப் பெயர்களும் வட்டார வழக்குளும் புரியாமல் தடுமாற வைக்கும். எனவே வாசிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு தாண்டிப் போக வேண்டியிருக்கும். சில படைப்புகளின் இறுதியில் வழக்குச் சொற்களின் பொருள் தந்திருப்பார்கள். எனவே ஏணியில் ஏறி இறங்கும் விளையாட்டு போல, திரைப்படத்தின் சப்டைட்டிலை கவனித்துக் கொண்டே பார்ப்பது போல சொற்களின் அர்த்தத்தை கவனித்துக்  கொண்டே வாசிக்க வேண்டியதிருக்கும்.

அந்த வயதில் கூடவே கோலியும் பம்பரமும் விளையாடும் நண்பர்களில் சாகுலும், இப்ராஹிமும் இருந்தாலும் இந்தப் புரிதலில் கலாசார சுவர் தடையாய் இருந்தது நடைமுறை உண்மை. ஏன் அவர்கள்  உறவினர்களை ‘அத்தா.. காக்கா.. ‘ என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கும். கேட்டால் சிரித்துக் கொண்டே விளக்குவார்கள் என்றாலும் அந்தக் கலாசாரம் முழுக்கவும் புரியாது.

ஆனால் பிற்பாடு வாசிப்பின் ருசி கூடிய பிறகு குறிப்பிட்ட சமூகத்தின், வழக்குச் சொற்கள் கலாசார கலப்பின் அடையாளம் என்பதும் அவை அந்தப் புதினங்களுக்கு பிரத்யேகமான சுவையைக் கூட்டுகின்றன, அடையாளத்தை தருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக வட்டார வழக்குச் சொற்களின் ருசி என்னுள் இறங்குவதற்கு கி.ராவின் நாட்டார் இலக்கியங்கள் காரணமாக இருந்தது. தோப்பில் முகம்மது மீரானின் புதினங்களை வாசிக்கும் போது இஸ்லாமிய சமூகத்தின் வழக்குச் சொற்கள் வாசிப்பிற்கு தடையாய் இல்லை. வாக்கியத்தின் தொடர்ச்சியோடு அவற்றின் பொருள் தன்னிச்சையாக புரிந்து போகும் அனுபவம் கூடியது.

**

ஜெ. பானு ஹாருன் அவர்கள் வாசிக்க அனுப்பித் தந்த புதினமான ‘மீண்டும் பூக்கும்’ நூலை சமீபத்தில் வாசித்தேன். பிரபல யுனானி மருத்துவரும் எழுத்தாளருமான எம்.ஏ.ஹாரூனின் துணைவியார் இவர்.

பாலின சமத்துவமற்ற சூழலில், மற்ற துறைகளைப் போலவே ஆண்மைய சிந்தனைகளே நிறைந்திருக்கும் படைப்புலகத்தில் பெண்களின் பங்களிப்பு பரவலாக நிகழத் துவங்குவது  எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியைத் தரும் விஷயம். அதிலும் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் தடைகளும் உள்ள இஸ்லாமிய சமூகத்தில் இருந்து பெண் படைப்பாளிகள் உருவாவது, அவர்களின் தரப்பு இடம் பெறுவது மிக அவசியமானது. பாலின நோக்கில் பெண் எழுத்தாளர்களை தனித்து அடையாளப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லையென்றாலும் பெண்களின் சில பிரத்யேகமான பிரச்சினைகளை, அகச்சிக்கல்களை பெண்கள்களால்தான் நுட்பமாகவும் உண்மையானதாகவும் வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்.

எனவே பெண்களின் இவ்வாறான வருகையை துவக்க கட்டத்திலேயே விமர்சன நோக்கில் ‘முதிரா முயற்சிகள்’ என கறாராக புறந்தள்ளுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது பெண் என்பதால் தரப்படும் சிறப்புச் சலுகையல்ல. சமூகத்தின் பின்னுள்ள பண்பாட்டுச் சிக்கல்களை இணைத்து அணுகுவது,  புரிந்து கொள்வது கறாரான விமர்சனத்தை விடவும் முக்கியமானது என நினைக்கிறேன்.

பானு ஹாருனின் புதினம் சுவாரசியமான வாசிப்பனுபவத்தைக் கொண்டது. ஒரு மாத நாவலை வாசிப்பது போன்று இரண்டு மூன்று பயண நேரத்தில் வாசித்து முடித்து விட முடிந்தது. இந்த சுவாரசியமே இவரது அடிப்படையான எழுத்து திறனின் வெற்றியாக கருதுகிறேன்.

**

ஸக்கியா என்கிற பெண்ணின் துயர வாழ்வை விவரித்துச் செல்லும் நாவல் இது. அவளது வாழ்க்கையில் நிகழும் பல துயரங்களுக்குப் பிறகு காலம் கடந்து ஒரு வசந்தம் பிறக்கிறது. அதைத்தான் தலைப்பு உணர்த்துகிறது ‘மீண்டும் பூக்கும்’

முதலாளிகளிடம் அடியாளாக வேலை செய்து பிழைக்கும் குடிகார கணவனிடம் சிக்கி ஸக்கியா துன்பப்படும் சித்தரிப்புகளோடு நாவல் துவங்குகிறது.  அநாதையான ஸக்கியாவிற்கு பெரியம்மாதான் ஆதரவு. தனது சொந்த மகள்களை நன்கு படிக்க வைத்து, வசதியான இடங்களில் திருமணம் செய்து தரும் பெரியம்மா, இவளை மட்டும் வேற்றூரில் ஓர் எளிய உழைப்பாளிக்கு திருமணம் செய்து அனுப்பி விடுகிறார். ஸக்கியாவிற்கும் படிப்பதை விடவும் பெரியம்மாவின் அருகாமையில் இருந்து சேவை புரிவதே திருப்தியாக இருக்கிறது. ஆனால் கல்வி கற்காமல் போனதின் விலையை திருமணத்திற்குப் பிறகு அவள் தரவேண்டியிருக்கிறது.

அடியாள் வேலைக்குச் சென்ற கணவன் எதிரிகளால் கொலைசெய்யப்படுவதால் மறுபடியும் பெரியம்மாவை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஸக்கியாவிற்கு. ஆனால் அங்கும் துரதிர்ஷ்டம் இவளை துரத்துகிறது. பெரியம்மாவின் மரணச் செய்தியைத்தான் அங்கு அறிந்து கொள்ள முடிகிறது.

எதிர்காலம் குறித்த கவலை ஒருபக்கம் இருந்தாலும் அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள் ஸக்கியா. இவளுடைய சேவையும் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தக் குடும்பத்தின் இரண்டு மகள்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறாள்.

அந்த வீட்டின் பெரியவருக்கு இறக்கும் தருவாயில்தான் ஸக்கியாவின் நிராதரவற்ற நிலை அதிகம் உறுத்துகிறது. ‘தங்கள் வீட்டின் மகள்களைப் போல் அல்லாமல் இவளை வசதி குறைவான இடத்தில், தவறான நபருக்கு திருமணம் செய்து தந்து இவளின் வாழ்வை பாழடித்து விட்டோமே என்று குற்றவுணர்ச்சியின் தத்தளிப்பிற்கு ஆளாகிறார்.  ஸக்கியாவின் எதிர்காலத்திற்கு ஆதாரமான சில விஷயங்களை பிடிவாதத்துடன் செய்கிறார்.

ஸக்கியாவின் அதுவரையான துயரக்காலக்கட்டம் ஓய்ந்து வருங்காலத்தின் நம்பிக்கை வெளிச்சம் பிறக்கும் நல்ல செய்தியோடு நாவல் நிறைகிறது.

**

இஸ்லாமிய சமூகம் குறித்து இதர  சமூகங்களின் பொதுப்புத்தியில் நல்லதும் கெட்டதுமாக நிறைய முன்தீர்மான சித்திரங்கள் உள்ளன. மேலைய நாட்டவர்கள் பெரும்பாலும் கற்பு குறித்து அக்கறை கொள்ளாதவர்கள் என்கிற மேலோட்டமான புரிதல் இங்கு இருப்பதைப் போல ‘அவங்க நாலு திருமணம் கூட செய்துக்குவாங்க’ என்று இஸ்லாமிய சமூகத்தை சர்வசாதாரணமாக கூறி விடுவதைப் போன்ற அர்த்தமற்ற சித்திரங்கள்.

இது மட்டுமல்லாது சினிமாவும் ஊடகங்களும் இன்னபிற அமைப்புகளும் இது சார்ந்து பல ஆபத்தமான மதீப்பீடுகளை இங்கு உருவாக்குகின்றன. இஸ்லாமியர் என்பவர்கள், மதம் சார்ந்த தீவிரப்பற்றுவள்ளவர்கள், பிற்போக்கானவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என்பது போன்ற பல ஆபத்தான கருத்துக்கள் பொதுச்சமூகத்தின் மையத்திற்குள் வீசப்படுகின்றன. மத அரசியல் திட்டமிட்டு இவற்றை ஊதிப் பெருக்குகிறது.

ஜெ. பானு ஹாருன் முன்வைக்கும் இந்தப் புதினத்தின் மூலம் ஒரு சராசரியான இஸ்லாமிய குடும்பத்தின் இயக்கத்தை, அதன் போக்கை நாம் நெருங்கி நின்று கவனிக்க முடிகிறது. அந்தக் குடும்பத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகிய இரண்டையுமே சமநிலையுடன் விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். அவர்களும் ஏனைய சமூகத்தினரைப் போன்று அறம் சார்ந்த விழுமியங்களுக்கு கட்டுப்படுபவர்கள்தான். மனச்சாட்சியுடன் இயங்குகிறவர்கள்தான்.

மற்றவர்களைப் போல் தன் கணவன் கடல் கடந்து சம்பாதித்து வராத அங்கலாய்ப்புடன் இருக்கிறாள் ஜம்ஷித்தின் மனைவி. இதனாலேயே அந்த உறவில் விலகல் ஏற்படுகிறது. இன்னொரு திருமணத்திற்கான வாய்ப்பு இருந்தும் தன்னுடைய மகள்களின் எதிர்காலத்தையும் ஊருக்குச் செய்யும் சேவையையும் மட்டுமே நினைத்து காலம் கடத்துகிறான் ஜம்ஷித். இறுதிக் கட்டத்தில் பெரியவர்களின் நெருக்கடிக்கும் தன் மகள்களின் கோரிக்கைக்கும் செவிசாய்த்து நிராதரவாக நிற்கும் ஸக்கியாவை திருமணம் செய்ய  சம்மதிக்கிறான். ‘நாலு திருமணம் கூட’ செய்து கொள்ள வாய்ப்பிருக்கும் சமூகமாக கருதப்படுவதிலுள்ள பொதுப்புத்தியின் மேலோட்டமான கருத்தை ஜம்ஷித்தின் நிதானமான பாத்திரம் சிதறடிக்கிறது.

ஜம்ஷித்தின் இரண்டாவது மகளுக்கு கல்வியின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளால், அடக்குமுறைகளால் அவளது கனவை தடுக்க முடியவில்லை. ‘கல்விதான் தன் விடுதலைக்கான ஆயுதம்’ என்கிற முதிர்ச்சியும் புரிதலும் அவளுக்கு இருக்கிறது. பழமையிலிருந்து விடுதலையாகத் துடிக்கும் ஒரு நவீன இஸ்லாமிய பெண்ணின் சித்திரம்.

திருமண நிகழ்வு ஒன்றின் மூலம் அதன் சம்பிரதாயங்கள், நடைமுறைகள், சடங்குகள் போன்றவற்றை அபாரமாக விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். வடகரை இஸ்லாமிய சமூகத்தின் பண்பாட்டு சார்ந்த நுண்விவரங்கள் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன.

**

அது எந்தவொரு சமூகமாக இருந்தாலும், தேசமாக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஒரு சராசரியான பெண்ணின் இயக்கமும் வாழ்வும் ஆணாதிக்க சமூகம் உண்டாக்கும் பல அல்லல்களுக்கும் தடைகளுக்கும் இடையே நீந்திக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. ஸக்கியா அம்மாதிரியான பிரதிநிதித்துவத்தை எதிரொலிக்கும் ஒரு பிம்பம். ஆனால் அவளின் வாழ்வை துயரத்தில் மூழ்கடித்து விடாமல் நம்பிக்கைக் கீற்றோடு நிறைவுறச் செய்திருப்பது சிறப்பான விஷயம்.

**

‘மீண்டும் பூக்கும்’ (புதினம்)
-    ஜெ. பானு ஹாருன்
அபு பப்ளிகேஷனஸ், வடகரை
பக்கம் 132, விலை – ரூ.70
suresh kannan

ஆதவன் தீட்சண்யாவின் எட்டு வெடிகுண்டுகள்





இலக்கிய வாசிப்பு அனுபவமுள்ள நண்பரொருவருடன் 'ஆதவன் தீட்சண்யா' வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவரை 'தலித் படைப்பாளி' என்கிற வகைமைக்குள் சுருக்க முயன்றார். தலித் என்கிற சொல்லாடல் இன்னமும் இங்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அது சாதிய நோக்கிலான சொல்லாகவே இங்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வர்க்க அரசியலுடனும் தொடர்புள்ளது அது. சாதிய படிநிலை மட்டுமல்லாது, பொருளாதார படி நிலையிலும் கீழேயுள்ள மக்கள், அதிகார வலுவற்ற சமூகம், விளிம்பு நிலையிலுள்ளவர்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கும் சொல்லாக உள்ள மதிப்பு இங்கு உணரப்படவில்லை. மராத்தியில் உருவான இந்தச் சொல்லுக்கு அழுத்தப்பட்டவர்கள் என்கிற பொருளே உண்டு.

இன்னுமொன்று, அரசாங்கப் பதிவேடுகளில் தலித் என்கிற சொல் இல்லை. அட்டவணை சாதிகள் என்கிற குறிப்பே உண்டு. ஆனால் பொருளாதாரத்தில் மேம்பட்ட பிரிவில் உள்ள சில சமூகத்தினரும் இடஒதுக்கீட்டின் சலுகைகளை குறுக்குவழியில் பெற தம்முடைய சமூகத்தை அட்டவணை சாதிப்பிரிவில் இணைப்பதற்காக நிகழ்த்தும் போராட்டங்களையும் பார்க்கிறோம். தலித் சமூகத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தலித் இலக்கியத்தை எழுத முடியும் என்கிற குரலும் ஒருபக்கம் ஒலிக்கிறது.

இவ்வாறான அரசியல் காரணங்களை வைத்து கலைஞர்களை வரையறையோ பாகுபாடோ செய்ய முடியாது. தலித் அல்லாத சமூகத்தில் பிறந்த காரணத்தினாலேயே ஒடுக்கப்பட்டவர்களின் வலியை ஓர் எழுத்தாளன் உணர முடியாது என்பது அபத்தமானது. அதை உறுதியாக மறுப்பதற்கான முன்னுதாரண படைப்புகள் உள்ளன. கலைஞன் கூடுவிட்டு கூடு பாயும் வல்லமையும் இந்தப் பாகுபாடுகளைக் கடந்து மானுட குலத்தை பரந்து பட்ட நோக்கில் காணக்கூடிய கருணை மனமும் பரிவும் கொண்டவன்.

***

ஆதவன் தீட்சண்யாவின் 'சொல்லவே முடியாத கதைகளின் கதை' என்கிற சிறுகதை தொகுப்பு இதைத்தான் நிரூபிக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் சமூக அநீதிகளை அடித்து நொறுக்குவதற்கான வெடிகுண்டுகளைப் போலவே வன்மையான மொழியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. சாதியைக் காரணம் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல் மத அரசியலாலும் வர்க்க அரசியலாலும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களின் துயரங்களைப் பற்றி தார்மீக ஆவேசத்துடன் அவருடைய கதைகள் உரையாடுகின்றன.

அரசியல் சார்ந்த எழுத்து என்கிற போதிலும் அதிலுள்ள கலைநயம் எவ்விதத்திலும் குறைந்து போவதில்லை. முன்குறிப்பில் ஓடை. பொ.துரைஅரசன், ஆதவன் தீட்சண்யாவின் எழுத்து குறித்து  கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது மிக சரியானது.

'...சார்பு நிலைப் படைப்பாளிகளின் பிரதிகளில் அழகியலைக் காட்டிலும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் துறுத்திக் கொண்டு மேலோங்கி நிற்கும் என்பது காலங்காலமாக எதிர்கொள்ளப்படும் பொதுவான விமர்சனம். ஆனால் ஆதவன் தீட்சண்யாவின் எந்தப் பிரதியிலும், அதன் மூலை முடுக்குகளில் எங்கு நுழைந்து பார்த்தாலும் அவரது அரசியலையும் அழகியலையும் பிரிக்கும் எல்லைக்கோட்டைக் காண முடியாது. அவரது பிரதிகளில் அவர் சார்ந்துள்ள அரசியலும் ஊடும் பாவுமாயப் பின்னிப் பிணைந்துள்ளது.'..

***

இந்த தொகுப்பில் எட்டு சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு சிறுகதையுமே அதனதன் நோக்கில் சாதியால், மதத்தால், அதிகாரத்தால், பொருளாதார அரசியலால் ஒடுக்கப்படும் மக்களைப் பற்றிய உரையாடல்களை தன்னுடைய வலிமையான, எளிமையான மொழியால் முன்வைக்கின்றன.

'பொங்காரம்' என்கிற சிறுகதை கொத்தடிமைகளாக அவதிப்படும் உழைக்கும் மக்களின் வாழ்வியல் துன்பங்களை அதன் நுண்மைகளுடன் விவரிக்கிறது.'பரதேசி' திரைப்படத்தைப்  போன்று, வறுமை காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கிராம மக்கள் கூட்டத்தை ஆசைகாட்டி அழைத்துச் செல்கிறான் கங்காணி. பரம்பரையாக கல்லுடைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பங்காளிக்கூட்டமொன்று, கல்லுடைப்பதற்கும் இயந்திரம் வந்து வி்ட்ட காரணத்தினால் வேலை குறைந்து வறுமை சூழ்ந்த காரணத்தினால் கங்காணியின் வாக்குறுதியை நம்பி முன்பணம் வாங்கிக் கொண்டு கிளம்புகின்றனர். எங்கே என்று தெரியாத அத்துவானக்காட்டைப் போன்றதொரு இடத்தில் அவர்களின் உழைப்பு கணக்கில்லாமல் உறிஞ்சப்படுகிறது. ஒரு பக்கம் உழைப்புச் சுரண்டல், இன்னொரு பக்கம் பெண்களின் மீதான பாலியல் சீண்டல் ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்ளாத அந்தக் கூட்டம் கங்காணியையும்  உடுப்புக்காரனையும் ஓர் ஆவேசமான கணத்தில்  கொல்வதோடு தடயம் தெரியாமல் தப்பிச் செல்கிறது.

ஊரிலுள்ள கடன்காரர்களுக்கு பதில் சொல்லவும் இழந்த தங்கள் வாழ்வை மறுபடி உயிர்ப்பிப்பதற்காககவும் மறுபடியும் எங்காவது ஒரு பணிக்கு சென்றுதான் ஆக வேண்டும். அதற்கு சற்று முன்பணம் வேண்டும் என்கிற குறிப்புடன் இக்கதை நிறைகிறது.  உழைக்கும் மக்களுக்கு விடியல் என்பதே கானல் நீராக உள்ளது; நெருப்பிலிருந்து தப்பி எரிமலைக்குள் சென்று விழுவதைப் போல அவர்களின் துயரம் ஒரு சுழற்சியாக அவர்களை துரத்திக் கொண்டேயிருக்கிறது என்பதை ஆதவன் தீட்சண்யா நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

இக்கதை முழுவதுமே அடித்தட்டு மக்களின் பேச்சு மொழியில் உரையாடிச் செல்வது மிகப் பொருத்தமானது. சில ஆண்டுகளுக்கு முன் ஆதவனின் ஏதோ ஒரு படைப்பில் வாசித்த 'விளக்கெண்ணையில் குண்டியைக் கழுவினாற் போல' என்கிற சொற்பிரயோகம் அதன் நகைச்சுவை நயத்திற்காகவே இன்னமும் நினைவிலிருந்து அகல மறுக்கிறது. பல இடங்களில் அதை நான் மேற்கோள் காட்டியுள்ளேன். இந்தச் சிறுகதையிலும் அவ்வாறான பல சுவையான சொற்பிரயோகங்கள் உள்ளன.  இந்த ஒரு பத்தியை கவனியுங்கள். கிராமத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் வறுமை சார்ந்து அவரவர் நோக்கில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளைப் பற்றி உரையாடும் புலம்பலின் ஒரு பகுதியிது.

'ஆளாளுக்கொரு பிக்கலிருக்கு. அரசனுக்கு அவன்பாடு ஆண்டிக்குத் தம்பாடு. காத்தில்லாத வூட்ல கையுங்காலும் கட்டிப் போட்டாப்பல ஆயிருச்சு. எங்கயும் காசு கண்ணி பொரளுல. அப்பப்ப அள்ளையில வாங்குன கடனுங்களும் அரிக்குது சீலப்பேனாட்டம். இன்னிக்கு நேத்திக்கு இப்படியாகல, காலம் முச்சூடும் இப்படியேதான். நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டிக்குப் பொழப்பு மாறலேன்னு காலங்கழியுது. மீள்றதுக்கும் வழி தெரியல, மாள்றதுக்கும் குழி தெரியல.

இப்படி எளிய மக்களின் வாழ்வியல் துயரங்கள் அதனுடைய இயல்பான சொலவடைகளில் விவரிக்கப்படுகின்றன. தொகுப்பின் தலைப்பில் அமைந்துள்ள 'சொல்லவே முடியாத கதைகளின் கதை'  பெண்களைத் தொடரும் கண்காணிப்பு சமூகத்தைப் பற்றி விவரிக்கிறது. பெண்களால் வெளிப்படையாக உரையாட முடியாத கதைகளின் கதை. கதை சொல்லியிடம் ஒரு கிராமப்புறத்து பெண் உரையாடுவதைப் போன்ற பாவனையில் அமைந்திருக்கிறது. ஆனால் அவளால் தன் கதையை அவனிடம் முழுக்க தொடர்ச்சியாக, சாவகாசமாக சொல்ல முடியவில்லை. பணியிடத்தில் ஆண்டைகளால் கண்காணிக்கப்படுகிறாள்; வீட்டில் கணவன் சந்தேகப்படுவானோ என்று அஞ்சுகிறாள். இவளுடைய துயரம் சிசுக்கொலையிலிருந்து தப்பித்த அவளது இரண்டாவது மகள் வரைக்குமாக நீள்கிறது.

'கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்' என்பது ரகளையான இருண்மை நகைச்சுவையுடன் கூடிய சிறுகதை. மலமள்ளும் தொழிலாளர்களுக்கெல்லாம் ஜனாதிபதிக்கு நிகரான சம்பளமும் சலுகையும் தரும் ஒரு சூழல் உருவானால் அது சமூகத்தில் எம்மாதிரியான தலைகீழ் மாற்றங்களையெல்லாம் உண்டாக்கும் என்பதை விளக்கிச் செல்கிறது இச்சிறுகதை. மலம் அள்ள கற்றுத் தருவதற்கான பல்கலைகழகங்கள், அது சார்ந்த கல்வித்திட்டங்கள், அதற்கான போட்டிகள் ஆகியவற்றைச் சிரிக்கச் சிரிக்க சொல்கிறார் ஆதவன். ஆனால் இந்த சிரிப்பின் ஊடே இந்தக் கற்பனையின் பின்னுள்ள யதார்த்தத்தின் நிஜம் உறைத்து அந்தப் புன்னகைகளை உறைய வைக்கிறது.

'நான் நீங்கள் மற்றும் சதாம்' என்ற சிறுகதை மத அரசியலின் வன்முறை சார்ந்த குற்றவுணர்வில் அமிழ்ந்திருக்கும் ஒருவனைப் பற்றி பேசுகிறது. 'இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை' என்கிற சிறுகதை, வரலாற்றில் பதியப்படாமல் அதன் இருளுக்குள் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராளிகளின் போராட்டங்களைப் பற்றி உரையாடுகிறது.

***

இதிலுள்ள எட்டு சிறுகதைகளும் அதனதன் நோக்கில் மிக முக்கியமான பதிவுகள். சமூகச் சொரணையொடும் அதன் மீதான அக்கறையுடனும் கூடிய ஆவேசத்தில் எழுதப்பட்ட புனைவுகள். ஆதவன் தீட்சண்யாவின் இதர சிறுகதைகளை தேடி வாசிக்க வேண்டுமென்கிற பேராவலை இந்தச் சிறுகதை எழுப்புகிறது.

சொல்லவே முடியாத கதைகளின் கதை
(ஆதவன் தீட்சண்யா) சிறுகதை தொகுப்பு
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் 128 - ரூ.50/-

('குறி' சிற்றிதழில் பிரசுரமானது - நன்றி: 'குறி')

suresh kannan

Friday, November 25, 2016

குமுதம் - உலக சினிமா தொடர் - 25வது வாரம்



நண்பர்களே,

குமுதம் வார இதழில் வெளிவந்து கொண்டிருக்கும்  'வாரம் ஒரு உலக சினிமா' என்கிற தொடரில் (ஃபிலிம் காட்டலாமா) இது 25வது வாரத் திரைப்படம்.



Chef (2014)




suresh kannan

Tuesday, October 11, 2016

மலர் டீச்சர்: சாய்பல்லவி Vs ஸ்ருதிஹாசன்



கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் தெலுங்கு திரைப்படத்தின், சில நிமிடங்கள் ஓடும் பாடல் டீஸர் ஒன்று இணையத்தில் வெளியானது. மலையாளத்தில் வெளியாகி அதிரிபுதிரியாக ஓடி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற ‘பிரேமம்’ திரைப்படத்தின் தெலுங்கு வடிவ முன்னோட்டக் காட்சிதான் அந்த டீஸர்.

இதன் ஹீரோ நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனாவிற்கு பிறந்த நாள் பரிசாக இந்த டீஸர் அந்தக் குறிப்பிட்ட நாளில் வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இணைய ரசிகர்களுக்கு இது விரும்பத்தக்க பரிசாக அமையவில்லை. ஏற்கெனவே எப்போதும் ரத்தபூமியாக கொந்தளித்துக் கொண்டிருக்கும் இணைய வெளியில் இந்த டீஸர் வெளியானவுடனே ஆவேசமான கிண்டல்களும், அதிருப்தியான எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்கத் துவங்கி விட்டன. இதன் நடிகர் தேர்வு, பாடல், இசை ஆகியவற்றை மலையாள வடிவத்துடன் ஒப்பிட்டு ரணகளமான எதிர்வினைகள் கிளம்பின.

குறிப்பாக ஒரிஜினல் படத்தில் மலர் டீச்சராக வந்த ‘சாய் பல்லவியின்’ வேடத்திற்கு ஸ்ருதிஹாசனை சிறிது கூட மகாஜனங்களால்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தெலுங்கு வடிவத்தில், ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி வெளியான நாள் முதற்கொண்டே அது சார்ந்த கிண்டல்கள் இணையத்தில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தன. இப்போது டீஸர் வெளியானவுடன் இது உச்சநிலையை அடைந்திருக்கிறது. முழுதிரைப்படம் வெளிவந்தவுடன் இன்னமும் என்னென்ன ஆகுமோ என்பது அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம். இதில் சிலபல எதிர்வினைகள் தரக்குறைவான வார்த்தைகளுடன் இருந்தன என்பது துரதிர்ஷ்டமானது.

இந்த ரணகளத்தின் இடையே ஒரு கொடுமையான கிளுகிளுப்பாக, ஓர் ஆங்கில இணைய தளம், மலையாளப் பாடலையும் சமீபத்திய தெலுங்குப் பாடலையும் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்குமாறு தன் பார்வையாளர்களைக் கேட்டுக் கொண்டிருந்தது. மலையாளப் பாடலான ‘மலரே’விற்கு ஆதரவாக 89.8 சதவீதத்தினரும் தெலுங்குப் பாடலுக்கு ஆதரவாக 10.13 சதவீதத்தினரும் வாக்களித்திருந்தனர். (ரொம்ப முக்கியம்).

‘நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது ஒரு திரைப்படத்திற்கு இத்தனை அக்கப் போரா?’ என்று சிலர் ஒருபுறம் சலித்துக் கொள்ள ‘ஒரிஜினல் பிரேமமே ஒரு சாதாரண படம்தான். அது எப்படி வந்து நாசமா போனா என்ன இப்ப?’ என்று இன்னொரு புறம் சிலர் வேறு விதமாக அலுத்துக் கொண்டார்கள். ‘இது ஆணாதிக்க மனதிலிருந்து உற்பத்தியாகும் பெண் வெறுப்பு’ என்று ஸ்ருதிஹாசனின் மீதான வசைகள் குறித்து கரடுமுரடான தமிழில் உணர்ச்சி பொங்க கட்டுரைகள் எழுத அதற்கும் லைக்குகள் பிய்த்துக் கொண்டு போனது.

தேர்தல் முடிவுகளைக் கூட சமயத்தில் சரியாக யூகித்து விட முடியும். ஆனால் இந்த இணைய மஹாஜனங்கள் எதற்கு எப்படி விதம் விதமாக பொங்குவார்கள் என்பது யூகிக்கவே முடியாத விஷயம்.

ஒரு திரைப்படத்திற்கு ஏன் இத்தனை கலாட்டா? ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’ என்கிற காமெடிக் காட்சி மாதிரி மலையாள ஒரிஜினல் மட்டும்தான் சிறந்தது என்று பிடிவாதம் பிடிக்க முடியுமா? இந்த எதிர்ப்பின் பின்னணியில் உள்ள வெகுசன உளவியல் என்ன?

சற்று ஆராய்ந்து பார்ப்போம்.


ஒரு புகழ்பெற்ற நாவல் திரைப்படமாக உருமாற்றம் ஆகப்போகிறது என்று வைத்துக் கொள்வோம். திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் அப்போதே உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அந்த நாவலைப் படித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் அதைப் பற்றி பல்வேறு கற்பனைகள் இருக்கும். தங்களின் அனுபவங்கள் மற்றும் ரசனை போன்றவைகளையொட்டி அதன் பிரதான பாத்திரங்கள், முக்கியமான சம்பவங்கள் இப்படி இருக்கும் என்று பலவிதமான கற்பனைகளை பல்வேறு விதமாக யோசித்து வைத்திருப்பார்கள். 

சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த பல்லாயிரக்கணக்கான விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை அத்திரைப்படத்தின் இயக்குநர் ஒரேயொரு வடிவத்திற்குள் கொண்டு வந்து அத்தனை பேரின் எதிர்பார்ப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டும். நடக்கின்ற காரியமா இது? இந்த எதிர்பார்ப்புகள் திரைப்படத்தின் வணிகரீதியான வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் விஷயமாகவும் அமையக்கூடும்.

இந்தச் சவாலை வெற்றிகரமாக கடந்த சில இயக்குநர்களும் இருக்கிறார்கள். சறுக்கி அதல பாதாளத்தில் விழுந்தவர்களும் இருக்கிறார்கள். இதைப் போலவேதான் ரீமேக்குகளின் கதியும்.

மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘திரிஷ்யம்’ இங்கே ‘பாபநாசமாக’ வந்த போது ‘எவருடைய நடிப்பு சிறந்தது, கமல்ஹாசனா, மோகன்லாலா’ என்று இணையத்தில் பெரிய குடுமிப்பிடி சண்டையே நிகழ்ந்தது. ‘மணிசித்ரதாழ்’ எனும் அருமையான மலையாளப்படம், இங்கே ‘சந்திரமுகி’யாகி சுமாரான ரீமேக்காக வந்தாலும் ரஜினிகாந்த் எனும் ஸ்டார் அடையாளத்திற்காகவும் வடிவேலு உள்ளிட்ட வணிகத்தனமான சுவாரசிய காரணங்களுக்காகவும் பேயோட்டம் ஓடி வெற்றி பெற்றது. ஒரிஜினல் வடிவத்தை நிறையப் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இவ்வாறான குருட்டு அதிர்ஷ்டங்களும் சமயங்களில் நிகழ்வதுண்டு.

**

ஆனால் பிரேமம் திரைப்படத்தின் விஷயம் அப்படியல்ல. இது கேரளத்தில் பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் 200 நாட்களைக் கடந்த முதல் மலையாளத் திரைப்படம் என்கிற பெருமையையும் கொண்டது. சேட்டன்களைப் போலவே தமிழர்களும் ‘மலர் டீச்சர், மலர் டீச்சர்’ என்று உருகத் துவங்கினார்கள். இத்திரைப்படம் வந்த புதிதில் இணையமெங்கும் மலர் டீச்சர் மகாத்மியம்தான். தங்களுக்கு சிறுவயதில்  கல்வி சொல்லித்தந்த டீச்சர் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்காத பிரகஸ்பதிகள் கூட மலர் டீச்சரை தங்கள் மனதில் அழுத்தமாக பச்சை குத்திக் கொண்டார்கள்.

நான் கூட எரிச்சலாகி ‘யாருடா அந்த கபாலி?’ என்கிற ரேஞ்சிற்கு ஆத்திரப்பட்டு ‘பிரேமம்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு தன்னிச்சையாக ‘மலர் டீச்சர்’ என்று உருகி அந்த வழிபாட்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.

இத்தனைக்கும் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவி பேரழகி எல்லாம் இல்லை. சன்னமான உருவம் கொண்டவர்.  முகத்தில் பருக்கள் வேறு. (இந்தப் பருக்களுக்காகவே ஆராதிக்கிற கோஷ்டி ஒன்று தனியாக இயங்குகிறது). ஆனால் படத்தின் இயல்புத்தன்மையோடு இந்தப் பாத்திரம் மிக கச்சிதமாகப் பொருந்திப் போனது என்பதுதான் இதன் வெற்றியின் ரகசியம். விரித்த கூந்தலோடு அழகான காட்டன் சேலையில் எளிமையின் ஆடம்பரத்தோடு ‘தமிழ் பெண்’ பாத்திரமாக உலா வந்த இவரை மலையாள இளைஞர்கள் மட்டுமன்றி தமிழர்களும் கொண்டாடியதில் ஆச்சரியமில்லை. 

**

இத்தனை கொண்டாடப்படும் அளவிற்கு ‘பிரேமம்’ காவியப்படமா என்ன? அப்படியெல்லாம் எதுவுமில்லை. இதுவொரு Cult Film ஆக உருமாறியது என்பதுதான் இதன் சிறப்பு.

1970-80களில்  மலையாள சினிமாவில் புதிய அலை தோன்றி அடுர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர், ஜான் ஆப்ரஹாம், K.R.மோகனன், G.S.பணிக்கர் போன்றவர்களின் பங்களிப்பின் மூலம் சிறந்த திரைப்படங்கள் உருவாகின.  உலகமயமாக்கத்திற்குப் பிறகு வணிகமே பிரதானம் எனும் நோக்கில் தமிழ் மசாலா சினிமாக்களின் வணிக வெற்றியைப் பார்த்து மலையாள சினிமாக்களும் சூடு போட்டுக் கொண்டன. மம்முட்டிகளும் மோகன்லால்களும் மூச்சு வாங்க தமிழ் ஹீரோக்களைப் போலவே சண்டை போடப் பழகினார்கள்.

ஆனால் 2010-க்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் ஒரு நவீன அலை உருவானது. பல இளம் இயக்குநர்கள் உள்ளே வந்தார்கள். புத்துணர்வுடன் பல புதிய முயற்சிகள் வந்து வெற்றி பெற்றன. பார்வையாளர்களின் ரசனையும் மாறியிருந்தது ஒரு காரணம். இந்தப் புதிய அலையின் ஒரு அடையாளம்தான் ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன். குறும்பட உலகிலிருந்து வந்த இவரின் முதல் இருமொழிப் படமான ‘நேரம்’ என்கிற திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பரவலான கவனத்தைப் பெற்றது.

அடுத்த திரைப்படம்தான் ‘பிரேமம்’. ஒரு காலக்கட்டத்தில் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களாக வந்து கொண்டு பார்வையாளர்கள் சலித்துப் போயிருக்கும் சமயத்தில் அந்த டிரெண்டிலிருந்து விலகி ஒரு மென்மையான காதல் கதை மற்றும் நல்ல பாடல்களை கொண்ட ஒரு திரைப்படம் வந்தால், அது சாதாரணமானதாகவே இருந்தாலும் கூட சூழலில் ஒரு புத்துணர்வை உண்டாக்கிய காரணத்திற்காகவே பிய்த்துக் கொண்டு ஓடும்.

தமிழிலும் 80-களில் ‘ஒரு தலை ராகம்’ என்றொரு திரைப்படம் வந்தது. அது அந்தக் காலத்தில் எதற்காக அப்படி பேயோட்டம் ஓடியது என்கிற ரகசியம் இன்னமும் கூட எவருக்கும் பிடிபடவில்லை. இன்றைய இளைஞர்கள் பார்த்தால் ஒருவேளை விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய அந்த திரைப்படம் அக்கால இளைஞர்களுக்கு ஒரு காதல் காவியப் படமாக இருந்தது. இதன் எல்லாப்பாடல்களும் பயங்கர ஹிட். இன்றைய மொழியில் சொன்னால் தெறிமாஸ்.

காதலை வெளிப்படுத்தவும் ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிற, காவியச்சோகத்தோடு நிறைவுறுகிற திரைப்படம் அது.

ஓர் இளம் ஆண், சகவயது பெண்ணிடம் ‘டைம் என்னங்க ஆச்சு?’ என்று கேட்பது கூட ஒரு சாகசமான செயலாக கருதப்பட்ட காலத்தில் நாயகன், நாயகியிடம் தன் காதலை சொல்ல மென்று மென்று முழுங்குவதும் அவள் ஏற்கத் தயங்கியதும் அப்போதைய கலாச்சார சூழலை எதிரொலித்த படியாக இயங்கியது. பார்வையாளர்களும் ஏற்றுக் கொண்டார்கள். சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே ஃபேஸ்புக் பிரெண்டாகி ‘what’s ur plan tonight?’ என்று கேட்கிற பெருநகரத்தைச் சார்ந்த நவீன இளம் தலைமுறைக்கு இந்தப் படத்தின் வெற்றி ஆச்சரியத்தை தரக்கூடும்.

**

‘பிரேமம்’ திரைப்படமும் இப்படியான மெல்லுணர்வுகளைக் கொண்ட படைப்புதான். நம்ம ஊர் சேரன் நடித்து இயக்கிய ‘ஆட்டோகிராஃப்’  திரைப்படத்தின் ஒற்றுமைகளைக் கொண்டது. (சேரனின் திரைப்படமும் இத்தாலிய இயக்குநர் Michelangelo Antonioni-ன் 1995- வெளிவந்த Beyond the Clouds –ன் பாதிப்பில் உருவானது).

ஓர் ஆணின் வளரிளம் பருவத்தில் துவங்கி வெவ்வேறு காலக்கட்டத்தில் அவன் எதிர்கொள்ளும் பெண்களைப் பற்றிய திரைப்படம். பிரதான ஆண் பாத்திரமாக நிவின் பாலி நடித்திருந்தார். அந்தந்த காலக்கட்டத்தின் வயதுக்குரிய உடல்மொழியை அற்புதமாக பிரதிபலித்திருந்தார். இத்திரைப்படத்தில் வரும் மூன்று பெண் பாத்திரங்களுமே ரசிகர்களின் இடையே புகழ் அடைந்தவைகளாக மாறின. இதன் சில காட்சிகளில் வரும் ரெட் வெல்வெட் கேக் கூட ஒரு நினைவுச் சின்னமாக, ரசிகர்களின் கவனத்திற்குரியதாக மாறியது.

என்றாலும் அனைத்தையும் விட ரசிகர்களின் மனதில் அழுத்தமாகப் படிந்தது ‘மலர் டீச்சர்’ பாத்திரம்தான். பிரேமம் என்கிற இந்த திரைப்படத்தின் பெயரைச் சொன்னவுடன் இணைக்கோடாக இந்தப் பாத்திரத்தின் பெயரும்  சாய்பல்லவியின் உருவமும் சட்டென்று நினைவில் பெருகி வருமளவிற்கு அத்திரைப்படத்தின் மிக முக்கியமானதொரு அம்சமாய் மாறி விட்டார் ‘மலர் டீச்சர்’

நாயகியின் பாத்திரப் பெயரையொட்டி முதல் படத்திலேயே இத்தனை கொண்டாடப்பட்ட முன்உதாரண நடிகை வேறு எவரும் இருக்கிறார்களா என தெரியவில்லை. ‘சில்க்’ ஸ்மிதாவைச் சொல்லலாம். ஆனால் தனது வசீகரமான தோற்றத்திற்காக முதல் படத்திலேயே ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் நதியா முதல் ஆலயம் கட்டி வழிபடப்பட்ட குஷ்பு வரை பல முன்உதாரணங்கள் உண்டு.


**

ஆனால் இந்த திரைப்படம் தெலுங்கில் மறுஆக்கமாக உருவாக்கப்படும் போது ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தில் ஸ்ருதிஹாசனை ஏன் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?

பிரேமம் திரைப்படத்தில் ‘மலர் டீச்சராக’ நடித்த சாய்பல்லவிக்கு அதுதான் முதல் திரைப்படம்.  ஓர் அழகான பாத்திரத்துடன் எளிமையான அழகில் மிளர்ந்த புதுமுகமாக அறிமுகமாகிய சாய்பல்லவியை அந்தப் பாத்திரத்துடன் எளிதில் இணைத்து ரசிகர்கள் எளிதில் ஏற்றுக் கொண்டார்கள். அவரின் இயல்பான நடிப்பும் இதற்குக் காரணமாக இருந்தது. புதுமுகம் என்கிற தகுதியே இதற்கான கூடுதல் பலமாக அமைந்தது.

ஆனால் ஸ்ருதிஹாசன் திரையுலகில் ஏற்கெனவே நிறுவப்பட்ட, பல திரைப்படங்களில் நடித்த ஒரு வணிகமுகம். புகழ் பெற்ற நடிகரின் மகள் என்கிற பின்னணியுடன் திரைத்துறையில் நுழைந்தாலும் தனது தனித்தன்மையான பங்களிப்பினால் குறுகிய காலத்திலேயே பல தென்னிந்திய படங்களில் நடிக்கும் அளவிற்கு முன்னேறியவர். இசையமைப்பாளர் என்கிற கூடுதல் தகுதியும் உண்டுதான். ஆனால் இவரது பிரபலமான அடையாளமே, ரசிகர்களுக்கு மனத்தடையை ஏற்படுத்தக்கூடிய தகுதியின்மையாக மாறி விடக்கூடிய ஆபத்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

வணிகக் காரணங்களுக்காக பிரபலமான நடிகை ஒருவரை இந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்க இதன் தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்திருப்பார்கள் என்றாலும் இது அந்தப் பாத்திரத்திற்கு செய்த துரோகமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அந்த அளவிற்கு ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு பொஸஸிவ்னஸ் இருக்கிறது. மட்டுமல்லாமல் வெளிவந்த டீஸர் பாடலில் ஸ்ருதிஹாசனின் ஆடம்பர உடல்மொழியானது, மலர் டீச்சரின் எளிமையான அழகிற்கு முன் பொருந்தவேயில்லை என்பதும் ரசிகர்களின் கருத்து. சில நிமிடங்கள் மட்டுமே வெளிவந்திருக்கும் இந்தப் பாடலை வைத்து மட்டும் முழு திரைப்படத்தை தீர்மானிக்க முடியாது என்றாலும் இந்த சில நிமிடங்களையே  எங்களால் தாங்க முடியவில்லையே என்று அவர்கள் கதறுகிறார்கள்.

மலர் டீச்சர் பாத்திரத்தின் தெலுங்கு வடிவத்திற்கு எளிமையின் அழகியலைக் கொண்ட ஒரு புதுமுக நடிகையை ஒருவேளை  அறிமுகப்படுத்தியிருந்தால் ரசிகர்கள் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். மற்ற இரு பெண் பாத்திரங்களுக்கும் மலையாளத்தில் நடித்த அதே நடிகைகளையே தெலுங்கிலும் பயன்படுத்த முடிவு செய்திருந்ததைப் போல ‘மலர் டீச்சரின்’ பாத்திரத்திற்கும் சாய்பல்லவியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஒரு திரைப்படத்தின் பாத்திரம்தான் என்றாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தங்களின் மனதில் பதிந்து விட்ட ஒரு சித்திரம் சற்று முரண்பட்டாலும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது நுண்ணுணர்வு சார்ந்த விஷயம். இதை தயாரிப்பாளர் தரப்பு சிந்தித்திருக்க வேண்டும்.

ஆனால் இந்தக் கலாட்டாக்களின் இடையில் ஆறுதலான ஒரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ஆண் ரசிகர்கள்தான் ‘மலர் டீச்சரின்’ உருவத்தில் சாய்பல்லவியைத் தவிர இன்னொரு நபரை ஏற்றுக் கொள்ளாமல் ரகளை செய்கிறார்கள். ஆனால் பெண் ரசிகர்கள் அப்படியல்ல. மலையாளத்தில் வந்த நிவின் பாலியையும் ரசித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் தெலுங்கில் வரும் நாக சைதன்யா பற்றியும் அவர்களுக்கு எவ்வித புகாரும் முணுமுணுப்பும் இல்லை. இது சார்ந்த கண்டனங்கள் எதையும் அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ‘ஆண்களின் காதல்களைச் சொல்லும் திரைப்படங்கள் மட்டும்தான் வரவேண்டுமா? எங்களுக்கும் அம்மாதிரியான காதல் கதைகள் இல்லையா?’ என்றெல்லாம் கேட்டும் ஆண்களைச் சங்கடத்திற்கு ஆளாக்கவில்லை.

என்ன இருந்தாலும் பெண்கள் பெருந்தன்மையானவர்கள். 

(ஜன்னல், செப் 15-30 இதழில் வெளியானது - நன்றி: ஜன்னல்) 

suresh kannan

Saturday, August 20, 2016

தர்மதுரை - சினிமா விமரிசனம்

 
 
 
நண்பா்களே,

சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து 19.06.2016 அன்று வெளியான 'தர்மதுரை' திரைப்படத்திற்கு நான் எழுதிய விமர்சனம், தினமணி.காம் -மில் வெளிவந்துள்ளது.
 
 


தினமணி.காம் -மிற்கு நன்றி.

வாசித்து விட்டு உங்கள் அன்பான பின்னூட்டங்களை தாருங்கள்.

இந்த லிங்க்கை உங்கள் பக்கத்திலும் பகிர்ந்து உதவுங்கள். :)

***

வாழ்க்கையில் பழைய விஷயங்களை மறக்கக்கூடாது என்கிற செய்தியை உலகத்துக்குச் சொல்வதற்காக தாம் எல்.கே.ஜி படிக்கும்போது போட்ட ஃபிராக்குகளை, நாயகியான பிறகும் பெரும்பாலான திரைப்படங்களில் அணிந்து வெறுமனே கவர்ச்சிப் பொம்மையாக இதுவரை வந்து கொண்டிருந்த தமன்னாவுக்குப் புடவையணிவித்து அவரை உருப்படியாக நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி.

திரைப்படத்தின் பிற்பகுதியில், தோல்வியடைந்த தமன்னாவின் திருமண வாழ்க்கையை விஜய் சேதுபதியின் வருகை சரிசெய்வதும் இவரைக் கொடுமைப்படுத்தின கணவனைப் போட்டுப் புரட்டியெடுப்பதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் வரவழைத்த காட்சிகள்.


suresh kannan

Sunday, August 14, 2016

Onnum Mindathe - ஒன்றும் சொல்லாமல் - மலையாளம்






‘ஒண்ணும் மிண்டாதே’ (ஒரு வார்த்தையும் சொல்லாமல்) என்கிற மலையாளப் படம் பார்த்தேன் (2014). மிக எளிமையான திரைக்கதை. கற்பு மீற நினைக்கும் ஒரு நடுத்தர வர்க்க கணவன் கொள்ளும் மனச்சிக்கல்களைக் கொண்ட நுண்ணிய கதைதான். 

கூடி வாழும் விலங்காக திருமணம், குடும்பம் எனும் நிறுவனங்களை அமைத்துக் கொண்ட பின்னரும் கூட ஒவ்வொரு மனிதனும் தனித்தனித் தீவுகள்தான். தங்களின் சுயவிருப்பங்களுக்கு இந்த நிறுவனங்களின் விதிகள் தடையாய் இருப்பதை எண்ணி மருகுகிறார்கள், மீற விழைகிறார்கள், பின்பு அது குறித்த குற்றவுணர்வுடன் கண்ணீர் மல்குகிறார்கள். நீண்ட மரபைக் கொண்ட, உலகளாவிய தன்மையைக் கொண்ட, நிறையப் பேசப்பட்ட கருப்பொருளைக் கொண்டு உருவாகியிருந்தாலும் இதன் எளிமையான உருவாக்கம் காரணமாகவே இத்திரைப்படம் என்னை வசீகரித்தது.

**

ஜெயராம் ஒரு சராசரியான நடுத்தர வர்க்க மனிதன். அதற்குரிய பிரத்யேக குணாதியங்களைக் கொண்டவன். மனைவி, ஒரு மகள் என்கிற பிரியமான, அன்பான வாழ்க்கை. அதைக் கலைப்பது போல் நுழைகிறான் ஒரு பழைய நண்பன். சாத்தானின் நிழல் போல. அவன் ஒரு பெண் பித்தன். பார்க்கும் அழகான பெண்களையெல்லாம் வசீகரமாகப் பேசி தனக்கு இணங்க வைத்து விடும் திறமையுள்ளவன்.

ஜெயராமின் அலுவலகத்தில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருத்தியை சில நொடிகளுக்குள் அவன் அவ்வாறு கவர வைத்து விடுவது ஜெயராமிற்கு ஒருபக்கம் எரிச்சலாகவே இருக்கிறது. என்றாலும் பால்ய நண்பன் என்பதால் சகித்துக் கொள்கிறான்.

ஆனால் நாட்கள் கடக்க கடக்க நண்பனின் இந்த திறமை மீது அவனுக்கு பொறாமையும் பிரமிப்பும் வருகிறது. அந்த தீமையின் ருசியை நாமும் தீண்டிப் பார்த்தாலென்ன என்கிற ஆசை உண்டாகிறது. சில காரணங்களால் மனைவி இவனை இரவில் அனுமதிக்காமலிருப்பதால் தீயின் வேகம் இன்னும் பரவுகிறது.

இவனுடைய விருப்பத்தை உணர்ந்து கொள்ளும் நண்பன், விலைமகளிர் ஒருத்தியை ஏற்பாடு செய்து தருகிறான். இவனுக்கு ஆசை ஒருபக்கம் இருந்தாலும் அது குறித்தான பயமும் குற்றவுணர்வும் இருக்கிறது. என்றாலும் ஆசை எனும் உணர்வு முந்த, மனைவியிடம் பொய் சொல்லி விட்டு ஹோட்டலுக்குச் செல்கிறான். ஆனால் கடைசி நிமிடத்தில் மனச்சாட்சி உறுத்த எந்த சாகசமும் இல்லாமல் அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன்தான் அவனுக்கு ஆசுவாசம் ஏற்படுகிறது. ஆனால் அவசரத்தில் கிளம்பி வந்ததால் செய்த தவறின் காரணமாக அவனுடைய குட்டு வெளிப்பட்டு விடுகிறது. கோபம் கொள்ளும் மனைவி அவனிடம் நீண்ட நாட்களாக பேசாமலேயே இருக்கிறாள். (படத்தின் தலைப்பு இதைத்தான் சொல்கிறது). இந்த நிராகரிப்பை அவனால் பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை. எப்படியாவது தன் நிலையை எடுத்துச் சொல்லலாம் என்றால் மனைவி அதற்கான சந்தர்ப்பமே அளிப்பதில்லை. சில பல நாடகத் தருணங்களுக்குப் பிறகு காட்சிகள் சுபமாய் நிறைகின்றன.

**

ஒரு டெலிடிராமா போல பெரும்பாலும் உட்புறக் காட்சிகளிலேயே நகரும் திரைப்படம்தான். நிதானமாக நகர்ந்தாலும் படம் அதன் சுவாரசியதன்மையை இழக்கவில்லை. ஒரு துளி கதையென்றாலும் சிறப்பான நடிகர்களால் அதை கச்சிதமாக சுமந்து சென்று நல்ல அனுபவமாக்க முடியும் என்பதற்கு இத்திரைப்படம் ஓர் உதாரணம். பொருத்தமான casting இத்திரைப்படத்தின் பலம் எனலாம். 

குறிப்பாக ஜெயராம் இந்தப் பாத்திரத்திற்கு அத்தனை கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இயற்கை விவசாயம் குறித்து இவர் தொலைக்காட்சியில் பேசுவதற்காக தயங்கி தயங்கி தயாராவதும், படப்பிடிப்புக் குழுவில் உள்ள ஒருவன் அனுமதி கேட்காமல் சட்டென்று இவர் சட்டையை தூக்கி மைக்கை செருக முயல, இவர் கூச்சத்துடன் தடுப்பதும் என துவக்க காட்சிகளிலேயே இவரது நடுத்தர வர்க்க குணாதிசயம் சிறப்பாக நிறுவப்பட்டு விடுகிறது.

நண்பனின் சாகசங்களைக் கண்டு தனக்கும் அந்த விருப்பம் மெல்ல மெல்ல எழுவது தொடர்பான தடுமாற்றங்களையும் வழிசல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய குற்றம் மனைவியால் கண்டுபிடிக்கப்பட்டவுடன் குளியலறையில் இருந்து வெளிவராமல் தவிப்பது நல்ல நடிப்பிற்கான சான்று. மனைவியின் நிராகரிப்பை தாங்க முடியாமல் உளைச்சல் அடைவதும் அவள் தற்கொலை செய்து கொள்வாளோ என்ற பதட்டத்துடன் செய்யும் செய்கைகளும் ஜெயராம் எத்தனை சிறந்த, இயல்பான நடிகர் என்பதை நிறுவுகின்றன.

ரன் படத்தில் துள்ளிக் குதித்த துறுதுறு பெண்ணா இவர் என்று ஆச்சரியமூட்டும்படி இருக்கிறார் மீரா ஜாஸ்மின். அளவான, நிறைவான நடிப்பு. தீமையின் ருசியை நண்பனுக்கு அறிமுகப்படுத்த முயலும் மனோஸ் கே ஜெயனின் பெண் விளையாட்டு சாகசங்களும் பின்பு மனைவிக்கு பயந்து நடுங்கும் காட்சிகளும் சுவாரசியமாக உள்ளன.

ஒழுக்க மீறலில் உள்ள ஈர்ப்பு ஒருபுறம் இருந்தாலும் தன்னைப் போலவே மனைவியும் அவ்வாறு யோசித்தால் என்னாகும் என்கிற பதட்டமே பல ஆண்களை கற்பு நிலையில் நிறுத்துகிறதோ என்கிற மறைபொருளையும் இந்தப் படம் உரையாடுவதாக தோன்றுகிறது.

கவர்ச்சி எனும் வணிக அம்சத்தை இதில் திணிப்பதற்கான வாய்ப்பு நிறைய இருந்தாலும் இயக்குநர் அதை செய்வதில்லை. ஏறத்தாழ இதே வகைமையிலான  திரைக்கதைதான் பாக்யராஜின் 'சின்ன வீடு'. அதில் எத்தனை கவர்ச்சி செருகப்பட்டிருந்தது என்பதை ஒப்பிட்டால்தான் இது புரியும். நாடகத்தனங்கள் நிறைந்திருந்தாலும் ஒரு நிறைவான அனுபவத்தைத் தந்தது இத்திரைப்படம்.

suresh kannan

Monday, July 18, 2016

பஞ்ச பூதம் - புதினம் - இலங்கையில் ஒரு 'மினி' கோணங்கி





தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும் அவாதம் படைப்புகளும்  தமிழகத்திலேயே பெரும்பாலும் அறியப்படாத சூழலில் இலங்கை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி இங்குள்ள நிலைமையை சொல்லவே தேவையில்லை. இலக்கிய வாசிப்புள்ள  குறுகிய எண்ணிக்கையிலான நபர்கள் உள்ள  தமிழக சூழலில் கூட இலங்கை தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமோ உரையாடலோ இங்கு அதிகம் நிகழ்வதில்லை. சில திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மட்டுமே தமிழ் சூழலில் இலங்கை எழுத்தாளர்களை துவக்கத்திலிருந்து தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள். வெகுசனப் பரப்பில் சில நல்ல ஈழக் கவிஞர்களை சுஜாதா அறிமுகம் செய்தார். நூல் பரிவர்த்தனைகள் மூலம் இரண்டு உலகங்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்ட பத்மநாப ஐயரின் பங்களிப்பு  இதில் குறிப்பிடத்தக்கது. திறனாய்வாளர் கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் காசி ஆனந்தன் போன்று ஒரு சிலரின் பெயர்களும் படைப்புகளும் மட்டுமே இங்கு அறியப்பட்டிருக்கின்றன. போலவே சமகால எழுத்தாளர்களிலும் அ.முத்துலிங்கம் உள்ளிட்ட சில பெயர்கள் மட்டுமே. இதில் பெரும்பாலும் ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.

இலங்கை எழுத்தாளர்களிடையே ஈழத்து எழுத்தாளர்கள், மலையக எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள், சிங்கள எழுத்தாளர்கள் போன்ற பிரிவுகள் இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் குறித்தான பிரக்ஞை இங்கு இருப்பதாக தெரியவில்லை. தமிழ்  படைப்புலகின் இயக்கத்தை இலங்கை எழுத்தாள சமூகம் கூர்ந்து கவனிப்பதைப் போல் இங்கு பெரிதும் நிகழ்வதில்லை என்பது துரதிர்ஷ்டமானது. தமிழில் நூல்களை சிறப்பாக பதிப்பித்த இயக்கங்களுள் முன்னோடியானது 'வாசகர் வட்டம்'. அவற்றின் வெளீடுகள் இங்கு பெருமளவில் வரவேற்கப்படவில்லை என்று கூறும் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, அவற்றுக்கான சில சலுகைத்திட்டங்களை அறிவித்த போது ஈழத்திலுள்ள வாசகர்கள் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள் என்றும் தமிழ் சூழலில் அவை போதிய கவனம் பெறவில்லை என்றும் ஒரு நேர்காணலில் வருந்துகிறார்.

பரவலாக அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர்களின் எண்ணிக்கையே இங்கு  சொற்பமாக இருக்க  இளம் எழுத்தாளர்களைப் பற்றி ஏதும் இங்கு அறியப்படாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இலங்கைப் பிரச்சினையை வெறும் உணர்வு சார்ந்த அரசியல் கோஷமாக அணுகும் தமிழ் சமூகம் அங்கு நிகழும் கலாசார பரிமாணங்களைப் பற்றிய அறிய ஆர்வம் ஏதும் கொள்வதில்லை. இந்த சூழலில்தான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று எனும் கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து வெளியாகியிருக்கும், ஏஎம்.சாஜித் அஹமட் எழுதிய 'பஞ்சபூதம்' எனும் புதினத்தை வாசிக்க நேர்ந்தது.

***

சில நாட்களுக்கு முன் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் தங்களின் நூல்களை அனுப்பித்தந்தால் என் வலைப்பதிவில் அதைப் பற்றி எழுதுவேன் என்று அறிவிப்பொன்று தந்திருந்தேன். ஃபேஸ்புக்கின் மூலம் நண்பர் சாஜித் என்னைத் தொடர்பு கொண்டு தான் எழுதிய புதினமொன்றை அனுப்புவதாகவும் அதை வாசித்து எழுதினால் மிகவும் மகிழ்வேன் என்றும் ஒரு தகவல் அனுப்பியிருந்தார். 'அனுப்புங்கள்' என்றேன். சில நாட்களைக் கடந்தும் நூல் வரவில்லை. அவரும் அதை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார். எதிர்பாராத ஒரு நாளில் நூல் வந்து சேர்ந்தது. ஆனால் அது இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து வரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

முன்பே சொல்லியபடி தமிழ் சூழலில் இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய கவனமும் அவதானிப்பும் இல்லாத பெரியண்ணன் மனோபாவத்தில் அலட்சியமாக இங்குள்ளவர்கள் இயங்கும் போது  அதற்கு மாறாக இலங்கை படைப்பாளிகள் இங்குள்ள சூழலை தொடர்ந்து கவனிக்கின்றனர். அதற்கான உறவுகளை பேண நினைக்கிறார்கள் என்பதற்கு இதை ஒரு சிறிய உதாரணமாக கொள்ளலாம். தமிழ் சூழலில் நான் பரவலாக அறியப்பட்டவனோ, பெரிய எழுத்தாளரோ கூட கிடையாது. ஆனால் இங்குள்ள ஒருவர் தம் நூலை வாசித்து அதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிற சாஜித்தின் எல்லைகளைக் கடந்த ஆர்வம் உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

'பஞ்சபூதம்' - மிகச்சிறிய நூல்தான். சென்னை தாம்பரம் புறநகர் ரயிலில் ஏறினால் கிண்டியைத் தாண்டுவதற்குள்  சில நிமிடங்களில் வாசித்து முடிக்கக்கூடிய அளவிலான சிறிய புதினம்தான். ஆனால் இதை செரித்துக் கொள்ள முயல்வதற்குத்தான் அதிக நாட்கள் தேவைப்படும் போலிருக்கிறது. அத்தனை கனமுள்ள எழுத்து.

இதற்கு இடைப்பட்ட நாட்களில் உட்பெட்டியின் வழியாக 'வாசித்தாயிற்றா' என்று நினைவுப்படுத்தும் படியான புன்னகைக்குறிகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார் சாஜித். நானும் பதிலுக்கு சால்ஜாப்பாக பதில் புன்னகைகளை அனுப்பி சமாளித்துக் கொண்டேயிருந்தேனே தவிர உண்மையில் இந்த நூலைப் பற்றி என்ன எழுதுவது என்பது குழப்பமாகவே இருந்தது.

****

'பஞ்சபூதம்' பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட ஒரு சிறிய புதினம். குறியீட்டு மொழியால் இயங்கும் ஒரு கனவுப் பயணம். இதையொரு மெட்டா பிக்ஷன் எனலாம். 'முதல் மூச்சு' 'இரண்டாம் மூச்சு' என்று துவங்கி  பத்து மூச்சுகள் பல்வேறு வகையான பத்து அத்தியாயங்களாக விரிகின்றன. வாசித்து முடிப்பதற்குள் நமக்குத்தான் மூச்சு முட்டுகிறது. இலங்கையில் ஒரு 'மினி' கோணங்கி இருக்கிறார் என்பதே நாம் இதிலிருந்து அறிய வேண்டிய செய்தி.

வாசகர்களுக்கு எவ்வித வேலையும் வைக்காமல் 'ஸ்பூன் ஃபீடிங்' பாணியில் எழுதுவது ஒரு வகை. பொதுவாக வெகுசன எழுத்துமுறை இவ்வகையானது. வாசகனின் நுண்ணுணர்வு சார்ந்த தகுதியை மனதில் கொண்டு இடைவெளிகளை அவன் நிரப்பிக் கொள்வான் என்கிற பரஸ்பர மரியாதையில் எழுதப்படுவது ஒரு வகை. பெரும்பாலான நல்ல நவீன இலக்கியங்கள் உருவாவது இந்த முறையில். ஆனால் வாசகனையும் தம்முடைய எழுத்துக்குள் இழுத்துப் போடுவது, அந்தப் பயணத்தில் அவனுடன் உரையாடுவது, எழுத்தின் ஒரு பங்காக, பாத்திரமாக வாசகனையும் இயங்க வைப்பது போன்ற முயற்சிகளை நிகழ்த்துவது நவீன காலக்கட்டத்திற்கு பிந்தைய எழுத்து வடிவம்.

'எனதன்பின் வாசகனனே, இப்பஞ்சபூதப் பிரதியினை வாசிப்பதற்கு முன் நீ இருக்கும் இடத்தினை ஒருகணம் சுற்றிப்பார்.. என்னால் ஏவிவிடப்பட்ட ஆத்மாக்கள் உனது கழுத்திலும், கண்களிலும், உதடுகளிலும் உயிர்ப்பிக்கத் தொடங்குகின்றன..' என்கிற முன்குறிப்புடன் வாசகனை தயார்படுத்தும் நூலாசிரியர், பிரதி இயங்கும் ஒரு கணத்தில் வாசகனையும் அதற்குள் இழுத்துச் செல்கிறார்.

அரசவையில் இசை பாட வந்திருக்கும் ஒரு கலைஞன் தன் இசையால் ஏற்படும் விபரீதங்கள் நிகழாமலிருக்க வேண்டுமானால் இந்த நூலை எழுதும் சாஜித்தை கொல்ல வேண்டும் என்கிற விநோதமான முறையீட்டை முன் வைக்கிறான். அவனைக் கொன்று விட்டால் 'மன்னனாகிய என்னைப் பற்றியும் நிகழவிருக்கிற உன் இசையைப் பற்றியும் யார் எழுதுவார்? என்பதற்கு மன்னர் கேட்க 'அதெல்லாம் வேறு எழுத்தாளர்களை வைத்து எழுதிக் கொள்ளலாம். இவனைக் கொல்ல உடனே வீரர்களை அனுப்பு' என்கிறான். இவை அனைத்தும் நிகழ்வது கடலுக்குள். அதற்கொரு காரணமும் இருக்கிறது.

இந்தப் பிரதியை எழுதிக் கொண்டிருக்கும் சாஜித்தின் காதுகளில் வீரர்களின் துரத்தும் ஓசை விழுகிறது. அங்கிருந்து தப்பித்து மணற்பரப்பிற்கு ஓடுகிறார். இவ்வாறாக சிறார்களின் ஃபேண்டசி பாணியில் எழுதப்பட்டிருந்த புதினமாக மேற்பார்வைக்கு இருந்தாலும் தனது கூர்மையான சொற்களால் இதையொரு அரசியல் விமர்சன பிரதியாகவும் மாற்றியிருக்கிறார் சாஜித்.

சிங்கள பேரினவாதத்தின் கொடுமைகளாால் நசுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்து அதனுடன் போரிட்ட புலிகள், இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் மீது செலுத்திய வன்முறைகளின் மூலம் தாமும் இனவாத பயங்கரத்தில், இனச்சுத்திகரிப்பு முயற்சிகளில்  ஈடுபட்டது ஒரு வரலாற்று முரண். ஹிட்லரின் வெறுப்பு பிரச்சாரத்தினால் நாஜிகளால் உலகெங்கிலும் துரத்தப்பட்டுபல்வேறு வன்முறைகளை சந்தித்த யூத சமூகம், தனக்கான ஒரு பிரதேசத்தை கட்டமைத்துக் கொண்ட பின் பாலஸ்தீனியர்களின் மீது நிகழ்த்தும் வன்முறையைப் போன்றது இது. சாஜித் உருவாக்கிய இந்த குறியீட்டு புதினத்தில் புலிகள் பற்றிய குறிப்புகளும் மிகப் பூடகமான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஓரு கனவுப்பிரதேசத்திற்குள் பயணித்த ஒரு மாயாஜால உணர்வை இந்தப் புதினம் தருகிறது. தலையை உலுக்கிக் கொண்டே நிமிர்ந்தாலும் இதன் சொற்கள் நம் அகத்திற்குள் சுழன்றடித்துக் கொண்டே இருக்கின்றன.


***

பஞ்சபூதம் (நாவல்) -ஏ.எம்.சாஜித் அஹமட்
பெருவெளி பதிப்பகம்

31C, உபதபாலக வீதி, பதுர்நகர், அக்கரைப்பற்று,
அக்கரைப்பற்று 01, இலங்கை

ஆசிரியர்  .பேஸ்புக் பக்கம்: sajeeth amsajeeth

suresh kannan

Monday, July 11, 2016

தொலைந்து போய்க் கொண்டிருக்கும் சந்தானம்?



சந்தானத்தின் ரசிகன் நான் என்று சொன்னால் உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம். ஒரு நடிகனை, படைப்பாளியை, எழுத்தாளனை அவனுடைய சில பிரத்யேகமான திறமைகளுக்காக சமகாலத்தில் கொண்டாடுவது தவறு என்பது தமிழ் மரபின் வழக்கம். இயங்கும் காலத்தில் அவனுடைய குறைகளுக்காக திட்டித் தீர்ப்பதும் அவன் மறைந்த பிறகு, அல்லது ஓய்ந்த பிறகு தெவசப்படையல் போல அவனுடைய சிறப்பம்சங்களை தொகுத்து மிகையாக கொண்டாடி அவனை ஒரு திருவுருக்குவாக்கி மகிழ்வதும் இதே மரபின் வழக்கம். அதற்கான உதாரணம் கவுண்டமணி.

சந்தானம் ஒருவகையில் கவுண்டமணியின் ‘இடக்கான நக்கல் எதிர்வினை’ என்னும் கவுண்ட்டர் பாணியை பின்பற்றுபவர் என்றாலும் சமகால இளைஞர்களின் கலாய்த்தல் முறையை கச்சிதமாக எதிரொலிப்பவர். லொள்ளு சபா காலத்திலிருந்தே அவரை நான் பார்த்து, ரசித்து வருகிறேன். 

இந்த நிலையில் அவர் தன்னை நாயகராக நிலைநிறுத்திக் கொள்கிற பயணத்தின் முயற்சிகளுக்கு அவரை வாழ்த்த விருப்பம்தான் என்றாலும் சந்தானத்தின் அந்த பிரத்யேகமான நகைச்சுவையை இழந்து கொண்டிருக்கிறோமோ என்றும் ஒருபக்கம் கவலையாகவும் இருக்கிறது. 

ஏற்கெனவே வடிவேலு இட்டு வைத்திருக்கும் வெற்றிடத்தை, அவரோடு ஒப்பிட முடியாதவர் என்றாலும் ஓரளவிற்காவது நிரப்பிக் கொண்டிருந்த சந்தானமும் கதாநாயகப் பயணத்தில் தன் நிலையை இழந்து தன்னையே பலி கொடுத்துக் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதன் சமீபத்திய உதாரணம் ‘தில்லுக்கு துட்டு’

மக்களிடமிருந்து கிடைக்கும் ஆரவாரமான புகழ் வெளிச்சத்தில் மயங்கி அடுத்த நிலைக்கு நகர்வதாக எண்ணி பல காரணங்களினால் தங்களின் ஆதாரமான திறமைகளை இழந்து மீண்டும் திரும்பவும் முடியாமல் அவதிப்பட்ட தமிழ் நகைச்சுவை நடிகர்கள் பலர் உண்டு. சந்திரபாபு துவங்கி வடிவேலு வரை பல நடிகர்களை சொல்ல முடியும். கவுண்டமணி கூட சில படங்களில் நாயகராக நடித்து சுதாரித்து உடனே திரும்பி விட்டார். ஆனால் தன் நிலையை சரியாக உணர்ந்து அதிலேயே நீடித்து சாதித்தவர்களில் நாகேஷ் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

பாலச்சந்தரின் மூலம் நாகேஷிற்கும் ஏறத்தாழ நாயக அந்தஸ்து கொண்ட சில வெற்றித் திரைப்படங்கள் கிடைத்தன. ஏனெனில் அதன் திரைக்கதைகள் நாகேஷின் பிம்பத்திற்கு சரியாகப் பொருந்தும் என்று இயக்குநர் தீர்மானித்ததும் அதற்கேற்ப மாறுதல் செய்ததும் போன்ற காரணங்களினால் கிட்டிய வெற்றியது. ஆனால் அந்தப் புகழ் நாகேஷை அதிகம் பாதிக்காமல் இருந்தது நாகேஷ் மற்றும் தமிழ் சினிமாவின் நல்லூழ்.

நகைச்சுவை பிம்பம் ஆழமாக பதிந்து போன நடிகர்களை, வழக்கமான நாயகர்களின் சித்திரத்தில் பொருத்திப் பார்க்க ரசிக மனம் அவ்வளவாக விரும்புவதில்லை. இது இயல்பானதுதான். தண்ணீரில்தான் முதலையின் பலம் அதிகம் எனும் போது அது தரையில் குதித்து தள்ளாடுவதை எவர்தான் ரசிப்பார்கள்?

சந்தானத்தின் வளர்ச்சி மெல்ல மெல்ல நடைபெற்றாலும் அவருடைய nuances-களை சரியாக உணர்ந்து அதற்கேற்ப கச்சிதமாக உபயோகப்படுத்தியவர் என்று இயக்குநர் ராஜேஷை குறிப்பாக சொல்ல முடியும். சிவா மனசுல சக்தி தொடங்கி அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் இன்றும் கூட ரசிக்கக் கூடியதாக அமைந்திருப்பதற்கு சந்தானத்தின் பங்கு முக்கியமானது. குறிப்பாக ஆர்யாவுடனான காம்பினேஷன் பொருத்தமாக அமைவதையும் கவனிக்கலாம்.

அறை எண்.305-ல் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக ஏறத்தாழ நாயகன் போன்ற பாத்திரம் என்கிற வளர்ச்சி அமைந்தாலும், சந்தானம் பிரத்யேகமாக தனி நாயகனாக துவங்கிய திரைப்படம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ராஜ்மெளலியின் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக். அதன் சப்ஜெக்ட் ஒரு நகைச்சுவை நாயகனுக்கு பொருத்தமானது என்பதால் பெரிய அளவிற்கான நெருடல் எதையும் ஏற்படுத்தவில்லை. ரசிக்கவும் வைத்தது. போலவே அடுத்த நாயகத் திரைப்படமான ‘இனிமே இப்படித்தான்’ என்று தலைப்பிலேயே தன் நாயகப் பயணத்தைப் பற்றி சூசகமாக சொன்னாலும் அந்தப்படமும் கூட தேவலையாகவே இருந்தது. இரண்டுமே சந்தானத்தின் தயாரிப்பில் அமைந்த திரைப்படங்கள்.

ஆனால் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தில் தன்னுடைய பிரத்யேகமான நகைச்சுவைத்தன்மையை பெரும்பாலும் கைவிட்டு ஒரு வழக்கமான ஹீரோவாகும் முயற்சியில் ‘அறிமுகப்பாட்டு’ சண்டை, டூயட் என்று இறங்கியிருப்பது நிச்சயம் அவருக்கு பொருந்தவேயில்லை. அதிலும் தொடர்ச்சியான படங்களாக வந்து சலிக்கத் துவங்கியிருக்கும் ஹாரர் காமெடி வகையில் தாமதமாக இணைந்து கொண்ட கொடுமை வேறு.

இத்தனைக்கும் இத்திரைப்படத்தை எடுத்தவர் யார் என்று பார்த்ததில் இந்தக் கொடுமையின் துயரம் அதிக அளவில் கூடிப் போனது. லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா.

நாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எல்லாவற்றிலும் கலாய்ப்புத்தன்மையும் அபத்த நகைச்சுவைத்தன்மையும் கொண்டவரால்தான் ‘லொள்ளு சபா’ போன்ற தொடரை உருவாக்க முடியும். அப்படியொரு குணாதிசயத்தைக் கொண்டவர், அதிலும் சந்தானத்தை துவக்கத்தில் வடிவமைத்தவர் இப்படியொரு வகைமையைத் தேர்வு செய்து சறுக்கியதுதான் பெரிய ஆச்சரியம். துயரமும் கூட.

‘நான் பார்த்தா பேசறண்டா’ என்று பிராமண அப்பாவித்தனமான குரலோடு பேசிய சந்தானத்தை இந்த நாயக விருப்பம் விழுங்கி விடக்கூடாது என்கிற கவலை தோன்றியிருக்கிறது. 

suresh kannan

Sunday, July 03, 2016

முகநூல் குறிப்புகள் - 5

இயக்குநர் முத்தைய்யா எடுத்த சமீபத்திய திரைப்படம் 'மருது' முந்தைய திரைப்படம் குட்டிபுலி.

இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப் பிடிப்பவை. அவற்றை பெருமையாக முன்வைப்பவை. மிகவும் ஆபத்தான போக்கை சமூகத்தில் விதைத்துச் செல்பவை. இவற்றின் சாதிய அடையாளங்கள் அது குறித்த பெருமைகளுடன் இந்தப் படங்களில் துல்லியமாகவே சுட்டிக்காட்டப்படுகின்றன. அது குறித்த கூச்சம் அல்லது சமூக உணர்வு ஏதும் துளி கூட இயக்குநருக்கு இருப்பதாக தெரியவில்லை.

முத்தைய்யா போன்ற இயக்குநர்கள் உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும்.

தேவர்மகன் போன்ற படைப்பின் மையத்தை விளங்கிக் கொள்ளாதவர்கள் அவற்றை கடுமையான எதிர்க்கும் ஒருபகுதியை கூட அதை விட அதிகமான ஆபத்தை உற்பத்தி செய்யும் இம்மாதிரியான பயங்கரவாத படைப்புகளை அதிகம் கண்டுகொள்வதில்லை என்பது சோகம்.

இது போன்ற படைப்புகளை தமிழக மக்கள் ஆதரிக்கவே கூடாது.


***


இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'தரமணி' திரைப்படத்தைப் பற்றி பல சினிமா செய்திகளை வாசித்திருந்தாலும் 'ஐ.டி. இளைஞர்களைப் பற்றிய கதை' என்பதை தவிர எந்தவொரு பிரத்யேக அபிப்ராயமும் இதுவரை என்னுள் உருவாகவில்லை.

ஆனால் இதன் டீஸரை இன்று கவனித்தவுடன் துல்லியமாக ஒரு சித்திரம் உருவாகத் துவங்கியிருக்கிறது. அதுவே இத்திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஆண் -பெண் உறவுச்சிக்கல்கள் எத்தனை காலத்திற்கு பேசினாலும் இன்னமும் தீராதது. ஓர் பெண்ணின் அகத்தை அதன் விசித்திரங்களை, விநோத நியாயங்களை முழுமையாகப் புரிந்து கொண்ட ஆண் இன்னமும் பிறக்கவேயில்லை. பிறக்கவும் முடியாது.

நிலவுடமை சமூக மதிப்பீடுகள் சார்ந்து பெண்ணின் மீது ஆண் உருவாக்கிய கண்காணிப்பும் கலாசாரக் காவலும் இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. இந்தக் கண்காணிப்பு கலாசாரத்தின் புற அடையாளங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் அகத்தன்மை அப்படியே உறைந்திருக்கிறது. ஒரு சமகால, நவீன இளைஞனின் மூலம் இந்தப் புதிர்த்தன்மையை உணர்த்துகிறார் இயக்குநர்.

"உனக்கு மட்டும் ஃபேஸ்புக்ல ஏன் அத்தனை பிரெண்ட்ஸ் என்கிற இன்றைய ஜீன்ஸ் இளைஞன் கேள்வியும் தன் மனைவியை வெறிக்க சைட் அடிக்கும் முரட்டு இளைஞனை கண்டிக்கத் துணிவில்லாமல் "ஏண்டி அவன் உன்னையே வெறிக்கிறான்" என்று மனைவியையே கண்டித்து உதைக்கும் முந்தைய தலைமுறை வேட்டி இளைஞனும் மனதளவில் அப்படியேதான் இருக்கிறார்கள்.

தமிழ் நவீன இலக்கியத்தில் ஆண்-பெண் உறவுச்சிக்கல்களின் மீதான நவீன மனம் இயங்கும் முறையை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் தேர்ந்த மொழியில் எழுதியவர் என்று ஆதவனைச் சொல்லுவேன். அவர் படைப்புலகத்தில் மிக முக்கியமான அம்சம் இது.

போலவே நவீன தமிழ் சினிமாவில் மிகச் சிறப்பாக கையாள்பவர் செல்வராகவன்.

இந்தப் புதிய அடையாளத்திற்குள் ராம் பயணிப்பது உற்சாகத்தை தருகிறது. இயக்குநர் ராமை, மிகையாக பாராட்டுபவர்கள் அல்லது கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் என்று இருதுருவ ரசிக மனோபாவத்தையே காண்கிறேன். இது ஏன் என்பது தெரியவில்லை. அவருடைய தமிழ் தேசிய அடையாளம் ஒரு காரணமாக இருக்கலாமா? அவருடைய 'தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு ஒரு சாராரிடமிருந்து எழுந்த மூர்க்கமான எதிர்ப்பு உண்மையில் என்னை திகைக்க வைத்தது.

அவருடைய திரைப்படங்கள் முன்வைக்கும் கருத்துகள், சமூக மதி்ப்பீடுகள் குறித்து நாம் விவாதிக்கலாம், உரையாடலமே தவிர ராம் நிராகரிக்கக்கூடிய இயக்குநர் அல்ல. திரைமொழியின் இலக்கணமும் நுண்மையும் அறிந்த மிக அரிதான தமிழ் இயக்குநர்களுள் ராம் ஒருவர் என்கிற வகையில் அவருடைய தரமணி திரைப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

பொசசிவ்னஸ் என்பது ஒருவகையில் அன்பை அடித்தளமாகக் கொண்டது என்றாலும் அதுவே மிகையாகப் போகும் போது மனநோயாக மாறி விடுகிறது. நாம் அன்பை செலுத்துபவர்கள் மீது அதற்கு மாறாக வன்மத்தையும் வெறுப்பையும் பகைமையையும் கொள்ளும் எதிர்திசைக்கு இட்டுச் செல்கிறது.

தனிப்பட்ட வகையில் நானும் அந்தக் குறைபாட்டிற்குள் விழுந்தவன் என்கிற வகையில் இந்த டீஸரில் வரும் இளைஞனை நெருக்கமாக உணர்கிறேன். இதன் எதிர்முனையில் இயங்கும் ஆண்ட்ரியா பாத்திரமும் திறமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தன்மதிப்பும், நுண்ணுணர்வும் உள்ள சமகால இளம் பெண் இப்படித்தான் இந்த அவமதிப்பை எதிரொலிப்பாள். இதையும் என் தனிப்பட்ட அனுபவத்திலேயே சொல்கிறேன்.

அந்த வகையில் சமகால நவீன இளைஞர்களின் அகவுலகத்தை அதன் சிக்கல்களை இத்திரைப்படம் மிகச் சிறப்பாக பிரதிபலிக்கும், சித்தரிக்கும் என நம்புகிறேன்.


***


இரா.முருகனின் நூல் வெளியீட்டு விழாவில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். நான் சென்ற போது கிரேசி மோகன் பேசிக் கொண்டிருந்தார். அரங்கெங்கும் சிரிப்பலை. நூல்களின் ஓவியங்களை வரைந்த ஒரு பெண்மணியும் இன்னொருவரும் பேசினார்கள். ஒரே ஊதுபத்தி, விபூதி மணம். சாரு சொன்னது போல் சட்டென்று ஒரு ஆன்மீக மேடை போல தோற்றம். சுடச்சுட வெண் பொங்கல் கூட தருவார்கள் என்று தோன்றியது.

சாரு பேச ஆரம்பித்தவுடன் கூட்டம் சற்று தளர்ந்து சிரிக்கத் துவங்கியது. அவர் என்ன பேசினார் என்று ஆவலடைய வேண்டாம். அவர் கலந்து கொண்ட வேறு எந்த நிகழ்வின் வீடியோவையாவது பார்த்துக் கொள்ளுங்கள். அதேதான். நோபல் பரிசு. ஞான பீட பரிசு. அசோகமித்திரன்.. இங்கு எழுத்தாளர்கள் கவனிக்கப்படுவதில்லை. என்று இவருடையது வேறு வகை காலட்சேபம்.

கிளம்பி வந்து விட்டேன். உரையின் துவக்கத்தில் முருகனின் 'மனை' குறுநாவல் குறித்து ஒரு வரி பேசியது விதிவிலக்கு.

()

இரா.முருகனை ராயர் காப்பி கிளப் மடற்குழும காலத்திலிருந்து பழக்கம். இலக்கியவாதிகளை கிண்டலடித்து நான் போட்ட ஒரு மடலுக்கு சட்டென்று கோபித்துக் கொண்டார். இலக்கியத்தின் பால் உண்மையான அக்கறை கொண்டவரின் கோபம் அது.

அதற்கும் முன்னால் இந்தியா டுடேவில் வெளியான அவருடைய சிறுகதையை வாசித்திருக்கிறேன். அலுவலகத்தின் வரவேற்பறையில் வாடிக்கையாளனின் சிலையை வடிவமைத்திருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். சிலைக்கும் அங்கு உழைப்பவனுக்கும் சட்டென்று வித்தியாசமில்லை என்பது போல் செல்லும் சிறுகதை என ஞாபகம்.

அதற்கும் முன்பாக வாத்யார் சுஜாதா மூலம்தான் முருகனின் பெயரை அறிந்தேன். 'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' என்கிற அவரின் புகழ்பெற்ற கவிதையை சுஜாதா அடையாளங்காட்டி சிலாகித்தது இன்னமும் நினைவிருக்கிறது.

முருகன் சுஜாதாவின் நீட்சி என்பதில் ஒருபகுதி உண்மையிருக்கிறது. முதலில் கவிதை, சிறுகதை, குறுநாவல், தொடர்கதை, நாவல், சயின்ஸ் பிக்ஷன், கணிப்பொறிவியல் தொடர்பான படிப்பு, அது தொடர்பான சுவாரசியமான நுட்பக் கட்டுரைகள், ஹைக்கூ, சினிமா வசனம், கமல்ஹாசன் என்று இரண்டு பேருக்கும் சில பொதுவான அடையாளங்கள் உள்ளன. ஆனால் இப்படி பொதுப்படையாகவும் முருகனை வகைப்படுத்தி விட முடியாது.

முருகனின் எழுத்து மிகவும் பிரத்யேகமானது. பதினெட்டாம் நூற்றாண்டு மனிதர்களின் புராதன வாசனையில் கூட அவர் உரைநடை கச்சிதமாகப் புகுந்து கொள்ளும். மாய யதார்த்தம் என்கிற இலக்கிய பாணியை தமிழில் நிறைய பயன்படுத்தி எழுதியவர். சுவாரசியம் என்பதற்கு உத்தரவாதம் இருக்கும் அதே சமயத்தில் உள்ளடக்கத்திலும் எவ்வித சமரசமும் இருக்காது. தமிழின் இடைநிலை எழுத்தாளர்களில் இரா.முருகன் மிக முக்கியமானவர். என்னவொன்று குழாயடிச் சண்டைகளில் ஈடுபடும் ஆர்வமும் சாமர்த்தியமும் இல்லாமிருப்பதால் குறிப்பிட்ட வாசக வட்டத்தை தவிர சமகால தலைமுறைக்கு அதிகம் அறியப்படாமலிருக்கிறார்.

இன்று வெளியிடப்பட்ட அவரது அனைத்து நூல்களும் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். ராயர் காப்பி கிளப் கல்லாவில் உட்கார்ந்த அதே காலக்கட்ட தோற்றத்திலேயே எப்படி இன்றும் இருக்கிறார் என்பது இலக்கியத்தை தாண்டிய உப ஆச்சரியம்.


***


ஜெ பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை குறித்து இணைய திமுகவினர், அனுதாபிகள் கண்ணீர் கசிந்த போது சற்று நகைச்சுவையாகவே இருந்தது.

காதுகுத்து விழாவில் பெரியப்பாவை 'வாங்க' என்று கண்டு கொள்ளாததால் அது 'இனி உன் வூட்ல கை நெனப்பனா -னனு என்று தொடங்கி வெட்டுக்குத்து வரை செல்லும் உள்ளூர் நிகழ்வும் அரசாங்கத்தின் தற்செயலான அல்லது உள்நோக்கமுடைய இயந்திர விதிகளின் வழியாக இயங்கும் ப்ரோட்டாகால்களும் ஒன்று என்பது போலவா அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

கா விடும் பள்ளிப்பிள்ளைகளை விட கேவலமான சிறுபிள்ளைத்தனத்துடன் நடந்து கொள்ளும் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி நமக்கு பழகி விட்டது.

பின்னிருக்கையில் அமர்வது அத்தனை அகெளரவமானதா என்ன?

ஒரு சிறிய இலக்கிய நிகழ்வுதான். எடிட்டர் லெனின்தான் தலைமை. ஆனால் அவர் பாட்டிற்கு உள்ளே நுழைந்து ஒரு துணி தோள்பையுடன் கடைசி இருக்கையில் கோயிஞ்சாமி மாதிரி அமர்ந்து கொண்டார். வேர்க்கடலையை ஊதி ஊதி சிவாஜி ஒரு பாட்டில் நடந்து சொல்வாரே, அப்படியொரு ஞானச் சிரிப்பு. அப்புறம் முன்னே அழைத்துக் கொண்டார்கள்.

ஸ்டாலினும் லெனினும் ஒன்றா என்று கேட்காதீர்கள். ரஷ்யாவில் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள்தான். :)

இது ஏதோ இணையத்தில் கண்கலங்கி வீறாப்பு பேசும் விஷயம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது இப்போது ஜெ. அரசு அறிக்கை விடும் போதுதான் இந்த அளவிற்கு பெரிதானது என்று தெரிந்தது.

அம்மா எவரையாவது திரும்பிப் பார்க்க கழுத்தை திருப்புவதையே பெரிய சாதனையாக முன்நிறுத்தும் அதிமுக உபிக்களும் அதற்காக கண்கசியும் தமிழக அப்பாவிகளும் நிறைந்திருக்கும் சூழலில் ஜெ இப்படியொரு நேரடி சமாதான அறிக்கை விட்டிருப்பது நிச்சயம் பெரும் மாற்றம்தான்.

ஆனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது அவரின் பெருந்தன்மை மட்டுமல்ல. தந்தையால் ஏற்படுத்த முடியாத இந்த மாற்றத்தைக் கூட ஏற்படுத்திய மகனின் இணக்கமான அணுகுமுறைதான்.

நல்ல துவக்கம். இனியாவது முகம் பார்த்து சிரியுங்கள் தமிழக அரசியல்வாதிகளே.


***


ஏனோ மனம் சோர்வாக, படபடப்பாக இருந்தது. இது போன்ற சமயங்களில் இலகுவான எழுத்து, திரைப்படம், நகைச்சுவைக் காட்சி என்று அதைக் கடந்து வர முயல்வேன். பல சமயங்களில் சுஜாதாதான் உதவுவார்.

இப்போது Srimanthudu தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியை (?!) ரசித்துப் பார்த்து சிரித்தேன்.

சமீபமாகவே மகேஷ்பாபுவை அதிகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. மற்ற தெலுங்கு நடிகர்கள் போல .. ரேய்.. என்று கண்சிவந்து உரத்த குரலில் பஞ்ச் பேசாமல் .. அந்த சொட்டைத் தலையனைப் பாரேன்.. காமெடியா இல்ல.. என்று காதில் ரகசியம் பேசும் விதத்தில் பேசும் அவரது நிதானமும் ஓர் அழகுதான்.

ஒண்டு குடித்தன வாழ்க்கையில் எவர் வீட்டில் டிவி இருக்கிறதோ அங்கு அடித்துப்பிடித்து ஓடி இடம் பிடித்து டைட்டில் காட்சிகள் ஓடும் போதே 'சண்டையமைப்பு' என்கிற வார்த்தை வருகிறதா என்று ஆவலுடன் பார்த்து இருந்தால் 'அப்பாடா' என்று மகிழ்ந்து இல்லையென்றால் இடம் போய் விடுமோ என்கிற பயத்தில் எழுந்து கொள்ளாமல் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மூக்கு விடைத்த வசனங்களை் வெறுப்பாக கேட்டு, இடையில் தூங்கிப் போய்..

சண்டைக்காட்சிகள் என்றால் இளம் வயதில் அத்தனை விருப்பமாய் இருந்தது. ஜெய்சங்கர் போடும் சண்டைகளைக் கூட வியந்த அப்பாவித்தனம் கொண்ட வயது. இப்போதும்தான். ஆனால் அது எந்தவிதத்திலாவது வித்தியாசமாக இருக்க வேண்டும்.

ஆனால் பல சமகால தமிழ் திரைப்படங்களில் அது செத்தவன் கையில் வெத்தலை பாக்கு வைப்பது போல அத்தனை சொரணையற்று 'வைத்துத் தொலைக்க வேண்டுமே' என்கிற சம்பிரதாயத்துடன் இருக்கும்.

சண்டைக்காட்சிகளுக்கு மிக முக்கியமே அதற்கான முன்னோட்டம்தான். நாயகன் அவர்களை அடித்து துவைக்க வேண்டும் எ்னகிற வெறி நமக்கே ஏற வேண்டும். அப்படியில்லையெனில் வீண். அவ்வாறான வெறி எனக்கு வந்தது சில சமயங்களில்தான்.

சுவாரசியமாகவும் வித்தியாசமானதாகவும் சண்டைக்காட்சிகளை அமைப்பது என்பது அந்தந்த மாஸ்டர்களுக்கு நிச்சயம் சவாலான விஷயம்தான். அவர்களும்தான் எத்தனை முறைதான் செட் போட்ட மார்க்கெட்டில் தக்காளிக் கூடைகளை தள்ளி விழுவார்கள்?

இந்தக் காட்சியைப் பாருங்கள்.

அர்னால்ட்.. (அதற்கப்புறம் ஏதோ வருமே) போல அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கஞ்சி போட்ட சட்டை போல விறைப்புடன் ஆனால் ஸ்டைலிஷாக சண்டை போடும் இந்த மகேஷ்பாபுவையும் இதை வடிவமைத்த மாஸ்டரையும்அப்படி பிடித்துப் போய் விட்டது. செயற்கைதான். எம்ஜிஆர் மான்கொம்பு சண்டையெல்லாம் பார்த்து பழகிய கலாசாரம்தானே நமது?

(எம்ஜிஆருக்கு உண்மையாகவே மான்கொம்பு சண்டை தெரியுமாமே? மான்களைத்தான் அவருக்கு நன்றாகத் தெரியும் என்று நினைத்திருந்தேன். அவர் சம்பந்தப்பட்ட பக்திக் கட்டுரைகளில் எப்படியாவது இப்படியொரு உட்டாலக்கடியான புல்லரிக்கும் தகவல்கள் வந்து விழுந்து விடுகின்றன)

உலக சினிமா கட்டுரைகளும் எழுதிக் கொண்டு தெலுங்கு மசாலாக்களையும் எப்படி பார்க்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டு டென்ஷன் செய்யாதீர்கள். எல்லோருக்குமே ஆல்டர் ஈகோ என்கிற இன்னொரு மனமும் ரசனையும் இருக்கிறது. சிலருக்கு நாலைந்து கூட.

நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்வேன். சிலர் மகேஷ்பாபு போலவே விறைப்பாக நடந்து செல்வார்கள். அவ்வளவுதான் விஷயம்.


***

சமீபத்தில் வெளிவந்த நூல் ஒன்றிற்கு 'நந்தனின் பிள்ளைகள்' என்ற தலைப்பு சூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். ஒரு பார்வைக்கு பொருத்தமான, கவர்ச்சிகரமான தலைப்பு போல் தோன்றியது.

ஆனால் அதன் பின்னால் உள்ள சாதிஅரசியலையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. 'பறையர்களின் வரலாறு' என்று பின்னால் வருகிற குறிப்பிற்கு ஓர் அலங்கரிக்கப்பட்ட முன்னொட்டாக இந்த தலைப்பு - நந்தனின் பிள்ளைகள். ஏன் இந்த சுத்திகரிக்கப்பட்ட தலைப்பு?

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அதீதமான சிவ பக்தியினால் இறைவனைக் காண மிகவும் விரும்பி ஆலயத்திற்குச் சென்று உள்ளே புக முடியாமல் மனம் புழுங்க சிவன் தோன்றி செய்த உபதேசத்தின் பெயரில் தீயில் புகுந்து பிராமணரான பின்னர் நாயன்மார்களில் ஒன்றாரானார் என்பது புராண வரலாறு.

எனில் நந்தனின் பிள்ளைகளும் சைவ சமய விசுவாசத்துடன் தீயில் புகுந்து தம்மை சுத்தப்படுத்திக் கொண்டால்தான் நந்தனின் நீட்சிகளாக மாற முடியுமா? இன்றும் கூட சைவ ஆலயங்களில் தலித் சமூகத்தினர் நுழைய முடியாமல் அதற்கு போராட்டம் நடத்தும் சூழல்தானே நீடிக்கிறது?

நூலின் தலைப்பை பூசி மெழுகாமல் 'பறையர்களின் வரலாறு' என்று நேரடியாக வைக்கலாமே?

இது என் சந்தேகம். நண்பர்கள் தெளிவுப்படுத்தலாம்.


***


கே டிவியில் கரு.பழனியப்பன் இயக்கிய 'பார்த்திபன் கனவு' சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன அபாரமான திரைக்கதை. தான் பார்த்து பார்த்து ஆசைப்பட்ட, ஆனால் பேசிப் பழகாத ஒரு பெண், அதிசயமாக பெற்றோரால் நிச்சயிக்கப்படும் போது, அட!பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக இருக்கிறதே என்று மனம் மகிழ்ந்து திருமணம் செய்து கொள்கிறான் அந்த இளைஞன்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் தெரிகிறது, தன் மனைவி தான் காதலித்த பெண்ணின் தோற்ற ஒற்றுமையில் இருப்பவர் என்று, பிறகென்ன, மண வாழ்க்கை இவனுக்கு கசந்து போகிறது. தற்செயலாக இவன் முன்னர் விரும்பிய பெண்ணே, இவன் வாழ்க்கையில் வருகிறாள். அதனால் எழும் சிக்கல்களுக்குள் கதை நகர்கிறது. பிறகு ஒரு நல்ல நிறைவு.

இப்படியொரு நாட் தோன்றியவுடனே ஒரு படைப்பாளிக்கு எப்படியிருக்கும்? உணவு பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை கண்டவுடன் 'இதை உண்ணப் போகிறோம்' என்கிற நிறைவுடனும் மகிழ்ச்சியடனும் அமர்வார்கள் அல்லவா? அவ்வாறே ஒரு படைப்பாளிக்கு ஒரு நல்ல கருப்பொருள் மாட்டினால் மிக சந்தோஷமாக அதை விரிவு படுத்திக் கொண்டேயிருப்பான் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாான்.. சமயங்களில் தூங்கக் கூட முடியாது. உணவு உண்ண முடியாது. அந்தச் சமயத்தில் யாராவது தொந்தரவு செய்தால் பயங்கர கோபம் வரும்.

என் இளம் வயதில் நண்பன் ஒருவன் அவனுடைய கல்லூரிக்காக நாடகம் எழுதச் சொல்லிக் கேட்டான்

(முகநூலில் இருக்கிறான். tag செய்கிறேன். Ravi Chandra Jiddu Jrc ரவி, நினைவிருக்கிறதா? :)

அப்போதைய வயதில் என்ன எழுத வரும்? பார்த்துக் களித்த கிரேசி மோகன், சேகர் வகையறா நகைச்சுவை நாடகங்கள்தான். ஒரு போலி டாக்டரைப் பற்றிய நாடகம். அவனிடம் பேசி விட்டு இரவு வீட்டில் சென்று படுக்கிறேன். மனம் அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறது. ஓர் அவுட்லைன் உருவாகியது.. யோசிக்க யோசிக்க நகைச்சுவை துணுக்குகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.என்னால் படுக்கவே முடியவில்லை. உடனே எழுந்து ரஃப் நோட்டை எடுத்து மனம் சென்ற படி அதை எழுதிக் கொண்டேயிருந்தேன்.

எதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்றால் புதுமுக இயக்குநர்கள் தங்கள் முதல் படங்களை பல வருடங்களாக அப்படி யோசித்து யோசித்து இழைப்பார்கள். அதன் உண்மையான உழைப்பு ஸ்கிரிப்டில் தெரியும்.

அவர்களைப் பற்றிய எவ்வித அறிமுகமும் இல்லாமல் இம்மாதிரியான இயக்குநர்களின் முதல் படங்களை திரையரங்கில் பார்க்கும் போது மனம் ஆச்சரியத்தில் பொங்கி வழியும். கரு.பழனியப்பனின் இந்த படம், பாார்த்திபனின் புதிய பாதை, சுசி கணேசனின் .ஃபைவ் ஸ்டார், வெற்றிமாறனின் 'பொல்லாதவன்" ' ராஜகுமாரனின் 'நீ வருவாய் என' .. இப்படியொரு பட்டியலைச் சொல்ல முடியும்.

ஆனால் இவர்கள் அடுத்து சில படங்களிலேயே காணாமல் அல்லது நீர்த்துப் போய் விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் இவர்கள் சொந்தமாகவே யோசிக்க வேண்டும் என்பது கூட இல்லை. நல்ல கதாசிரியர்களை, திரைக்கதையாசிரியர்களை அழைத்துக் கொண்டால் கூட போதும். ஷங்கர் போன்றவர்கள் இந்த விஷயத்தில் கில்லியாக இருக்கிறார்கள்.

பழைய படத்தின் தலைப்பைக் கொண்ட இந்தப் படத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இது இயக்குநரின் சொந்த திரைக்கதையாக இருக்குமா? அல்லது வேறு எந்த படத்திலிருந்தாவது இன்ஸ்பையர் ஆனதா என்று வேறு தோன்றி விட்டது. தமிழ் என்றால் மட்டம் என்கிற தாழ்வுணர்வினால் அல்ல. சிலர் அப்படி கெடுத்து வைத்திருக்கிறார்கள்.


***


இன்று புறநகர் ரயிலில் வந்து கொண்டிருக்கும் போது பிரமிளின் இலக்கியக்கட்டுரைகள் தொகுதி நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். (சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள் புதினத்தை அடித்து துவம்சம் செய்திருக்கிறார் பிரமிள். கட்டுரையின் தலைப்பு: புதிய புட்டியில் பழைய புளுகு).

பின்னாலிலிருந்து எவருடைய மொபைலில் இருந்தோ இளையராஜாவின் சில அற்புதமான 80-களின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இதை சொல்வதற்காக மன்னிக்கவும் "வேண்டுமென்றே இழுக்கிறான்' என்று ராஜா ரசிகர்கள் கோபிக்க வேண்டாம். இளையராஜாவின் அற்புதமான இசை எனும் போதே அது எண்பதுகளின் இசை என்பதை மனது தன்னிச்சையான பின்னொட்டாக இணைத்துக் கொள்கிறது.

அந்தப் பாடல்களின் வரிசையில் குறிப்பாக 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'யில் 'உச்சி வகுந்தெடுத்து'. அதன் இடையிசையில் ஓர் அற்புதமான தாலாட்டு இசை பெண் குரலில் ஹம்மிங்காக வரும். பாடிப்பார்த்தால் சற்று சிரமமானது. தொடர்ந்து வரும் ஷெனாயின் எளிமையான ஆனால் அபாரமான இசைத்துணுக்கும்.

நான் சிரமப்பட்டு நூலில் கவனம் செலுத்த முயன்றாலும் கவனம் தன்னிச்சையாக இசையின் மீதே சென்றது. பிரமிளின் உரைநடையை வாசிப்பதே ஒரு சவால். சில வாக்கியங்களை இரண்டு மூன்று முறை வாசித்தால் கூட ஜீரணிப்பது கடினம்.

புத்தகத்திற்கும் இசைக்கும் இடையில் தத்தளித்தேன். நல்ல பசியுடன் ஒரு விருந்திற்கு சென்றவன், அங்கு பரிமாறப்பட்டிருக்கும் விதம் விதமான உணவு வகைகளை கண்ணால் பார்த்ததிலேயே மனம் நிறைந்து அதனால் சரியாக உண்ண முடியாமல் ஒரு நிறைவின்மையை அடைவான் அல்லவா, அப்படி ஆகி விட்டது இந்த காலைப் பொழுது.


***


அபிலாஷ் எழுதிய இந்தப் பதிவில் எழுப்பப்பட்ட கேள்வி எனக்கும் கூட தோன்றியிருக்கிறது. எப்படி சில எழுத்தாளர்களால் அவர்கள் எந்தக் காலத்திலோ நுகர்ந்த படைப்புகளைக் கூட எப்படி பசுமையாக நினைவில் வைத்திருக்கிற முடிகிறது? சமீபத்திய பதிவுகளிலும் துல்லியமாக நினைவிற்கு கொண்டு வர முடிகிறது?

அபிலாஷ் விளக்கியதை தவிர்த்து என்னளவில் நானும் சில விஷயங்களை சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சிறிய பாதை, இரண்டு பெரிய பாதை. இரண்டு பாதைகளுக்குமே சற்று முன் தயாரிப்பும் உழைப்பும் வேண்டும். சிறிய பாதைக்கு நிறையவும் பெரிய பாதைக்கு சுமாராகவும். ஏனெனில் அதில் உழைப்பு முன்னமே செலுத்தப்பட்டிருப்பதால்.

முதலில் சிறிய பாதை

பேயோன் எழுதிய பழைய ட்வீட் ஒன்று நினைவிற்கு வருகிறது. (நினைவிலிருந்து)

இலியாசோ பினாகோவின் திரைப்படம் நேற்று பார்த்தேன். யாரு பெத்த பிள்ளையோ. இப்போது1982--லேயே இதைப் பார்த்ததாக கட்டுரை எழுத வேண்டும்'

சிறிய பாதை என்பது இந்தக் கிண்டலில் சொல்லப்படுவதைப் போல பெயர்களை மட்டுமே உதிர்த்துச் செல்வது. அல்லது நாவலின், திரைப்படத்தின் கதைச்சுருக்கத்தை வாசித்து விட்டு அதனை முன்னமே வாசித்து ஆராய்ந்திருப்பதைப் போன்ற உணர்வுடன் ஒரு பாவ்லா.

இலக்கியத்திற்குள் அப்போதுதான் நுழைகிற எளிய வாசகன் நிச்சயம் இந்த ஜோடனையில் மயங்கி விழுவான். ஆனால் சம்பந்தப்பட்ட படைப்பை ஊன்றி படித்திருந்தவர்கள் இந்தப் போலிகளை உடனே அடையாளங் கண்டு கொள்வார்கள்.

இரண்டாவது பெரிய பாதை.

நிச்சயம் இதற்கான நிறைய உழைப்பும் நுண்ணுணர்வும் வேண்டும். உண்மையாகவே அந்தப் படைப்பை நீங்கள் வெவ்வேறு இடைவெளிகளில் ஊன்றி வாசித்திருக்க வேண்டும். அதனுடன் வாழ்ந்திருக்க வேண்டும். என்றாலும் கூட சில வருடங்கள் கழித்து அதை மேற்கோள் காட்ட விரும்பினால் சில விஷயங்கள் மங்கலாகத்தான் தெரியும். மேற்கோள் காட்டுவதற்கு முன்னால் அவசரம் அவசரமாக மீள்வாசிப்பு செய்தாலும் அதன் ஒட்டுமொத்த அனுபவத்தை ஓரளவிற்கு நினைவிற்கு கொண்டு வரலாமே ஒழிய அதன் நுண்தகவல்களை, உணர்வுகளை நினைவிலிருந்து கொண்டு வருவது கடினம்.

இதற்கான ஒரு வழி இருக்கிறது.

அது நீங்கள் எந்தவொரு படைப்பை வாசித்தாலும், திரைப்படத்தைப் பார்த்தாலும் அவற்றை பற்றிய உங்களின் எதிர்வினையை, அனுபவத்தை ஒரு சிறிய குறிப்பாக வரிசைப் படுத்தி எழுதி வைத்து விட வேண்டும். சோம்பேறித்தனமல்லாமல் உடனுக்குடன் செய்தாக வேண்டும். அடுத்தடுத்த வாசிப்புகளில் இதை இன்னமும் மேம்படுத்தி வைத்துக் கொள்ளலாம்..

பிறகு எத்தனை வருடங்கள் கழித்து இந்த படைப்பை மீள்நினைவு செய்ய வேண்டியிருந்தாலும், இந்தக் குறிப்புகளை மட்டும் கூட வாசித்தால் போதும். ஒரு பெரிய நூல் கண்டிலிருந்து ஒரு நுனியை மட்டும் இழுத்தால் அந்த பெரிய நூல் வந்து கொண்டேயிருப்பது போல அந்த படைப்பைப் பற்றிய அனுபவத்தை பசுமையாக ஏறத்தாழ வெளியே கொண்டு வர முடியும்.


***


அரசியலில் இருந்து விலகப் போவதாக தமிழருவி மணியன் தெரிவித்திருந்த கருத்தையொட்டி பல நகைப்புக் குறிகளும் கேலி ஆரவாரங்களும் இணையத்தில் நிறைந்திருப்பதைக் கண்டேன்.

தமிழருவி மணியன் பல்வேறு சமயங்களில் முரண்பட்ட, நடைமுறை அரசியலுக்கு ஒவ்வாத லட்சியவாத கருத்துக்களைக் கூறியிருக்கலாம். அவருடைய நோக்கில் அதற்கான நியாயங்கள் இருக்கலாம். அவருக்கு அரசியல் சாதுர்யங்கள் இல்லாமலிருக்கலாம். ஜனநாயக வெளியில் இதற்கான வெளி அனுமதிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை.

ஆனால் அவர் அடிப்படையில் நேர்மையான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டவர். அதிலும் சமகால அரசியலின் ஊழல்களையும் வெளிப்படையான முறைகேடுகளையும் காணும் போது இவ்வாறான நேர்மைகளின் மதிப்பு அதிகமாக நமக்கு உறைக்கிறது. இவ்வாறான விதிவிலக்குகளின் இருப்பாவது நமக்கு தேவையானதாக இருக்கிறது.

ஆனால் இவ்வாறானவர்கள் அரசியலில் விரக்தியற்று வெறுப்புற்று விலகுவதாக அறிவிப்பதும் அதற்கு பொதுவெளியில் இருந்து மகிழ்ச்சியும் வரவேற்பும் இருப்பதும் ஒருவகையில் ஆபத்தான போக்கு. நேர்மையான தனிநபர்கள் அரசியலில் இயங்க லாயக்கு அற்றவர்கள், நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறவர்கள் என்கிற தொனி வருங்காலத்தில் நேர்மை என்பதே அரசியலில் துளியும் இல்லாத ஒரு நிலைக்கு இட்டுச்செல்லும். இது போன்றவர்களின் தோல்வியும் விரக்தியும் இளைய தலைமுறை நேர்மையாளர்களையும் பாதிக்கும், பின்னடையச் செய்யும்.

அர்விந்த் கெஜ்ரிவால் -ஆம் ஆத்மி போல ஒரு மாற்று அரசியல் இங்கு மலரப்படாமலேயே கூட போய் விடும்.

சூது கவ்வும் திரைப்படத்தில் வரும் ஒரு நேர்மையான அரசியல்வாதியை ஒரு நகைச்சுவையாளராக நாம் பார்க்கும் போக்கு நிஜத்திலும் தொடர்வது சமூகத்திற்கு நல்லதல்ல.


***


ரஹ்மானின் புதுப்பாடலை முதல் இரண்டு முறைகளிலேயே கேட்டு மதிப்பிட முயல்வது அறியாமை. மனைவி கொண்டு வரும் புது ரெசிப்பியை நன்றாக உள்ளது அல்லது இல்லை என்று சொல்ல முடியாத தடுமாற்றம் ஏற்படும். இரண்டிற்குமே கடுமையான பின்விளைவுகள் உண்டு. என்றாலும் சமீபத்திய ராசாளியை பார்க்க முயல்வோம்.

முதலில் ஒன்றை சொல்ல வேண்டும். இது ஒரு அட்டாசமான fusion. செவ்வியல் இசையையும் நவீன இசையையும் ஒலிகளையும் உறுத்தாமல் மிகப் பொருத்தமாக கலந்து அபாரமான இசை விருந்து படைக்கிறார் ரஹ்மான். பல்லவியை முதலில் கேட்ட போது இந்திப் படத்திற்கு முயலப்பட்ட மெட்டோ என்று ஏனோ தோன்றிற்று. போலவே ஆண் குரல் ஹரிசரண் என்று முதலில் நினைத்து ஏமாந்தேன். பிறகுதான் சத்யபிரகாஷ் என்று தெரிந்தது. மனிதர் உயர் ஸ்தாயிகளில் அநாயசமாக உலவும் லாகவம் பிரமிக்க வைக்கிறது. ஷாஷாவின் குரலும் அபாரம்.

ரஹ்மானின் சமீபத்திய பாடல்களை முழுக்க முழுக்க அவர் விருப்பப்படி உருவாக்குகிறார் என யூகிக்கிறேன். அதாவது வணிகரீதியாக வெற்றியடைய வேண்டும் என்கிற கட்டாயத்திற்கோ பதட்டத்திற்கோ உட்படாமல் சுதந்திரமாக விளையாடுகிறார். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பாடலின் இடையிசைகள் இரண்டுமே இசை விமர்சகர்களால் கொண்டாடித் தீர்க்கப்படப் போகின்றன. இந்த நவீன ஒலிகளை கச்சேரிகளில் reproduce செய்ய முடியாமல் இசைக்குழுக்கள் தடுமாறப் போகிறார்கள். முதல் இடையிசையில் சட்டென்று திருவையாறில் நிற்கின்ற பரவச அனுபவம் கிடைக்கிறது. இந்தப் பாடலின் சிறப்பை உணர முக்கியமான அளவுகோல், எங்கே இது செவ்வியலில் இருந்து நவீனத்திற்கு மாறி மாறிச் செல்கிறது என்பதைக் கவனித்தாலே போதும் என்று தோன்றுகிறது.

முதல்பகுதியில் அருணகிரிநாதரின் 'முத்தைத்திரு' பாணி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. வேகமாக நகரும் இந்த சந்தங்கேற்ப பாடல் வரிகள் எழுதுவது மிக கடினம். தாமரை எவ்வித நெருடலும் இல்லாமல் பொருத்தமான சொற்களால் அநாயசமாக இதைக் கடந்து செல்கிறார். யார் சொல்வது அன்பை, யார் எய்வது அம்பை.. போன்ற திரைசாயல்களுடன் கூடிய வரிகளிலும் கவர்கிறார்.

எனக்கு நினைவுள்ளவரை இம்மாதிரியான fusion இசை பாணிப்பாடல் கெளதமின் படங்களில் இதுவரை உபயோகப்படுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன். இதுவே கதைச்சூழல் குறித்த ஆர்வத்தை ஊட்டுகிறது. நாயகன் மற்றும் நாயகியின் மெல்லிய ஈகோ மோதல் அது சார்ந்த ஊடல் இதன் பின்னணியாக இருக்கலாம்.

'தள்ளிப் போகாதே'விற்கு பிறகு இந்த ராசாளியை விட்டு தள்ளிப் போக முடியாமலிருப்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.


***


தமிழ் சினிமாக்களில் என்றல்ல மையநீரோட்ட இந்தியச் சினிமாக்களில் வசனம் அதிகமாக இருக்கிறது என்பதற்கான ஒரு நடைமுறை உதாரணத்தை நீண்ட காலமாக உணர்கிறேன்.

இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சில அயல் சினிமாக்களை சப் -டைட்டில் சரியாக பொருந்துகிறதா என்று தற்காலிகமாக ஓட்டிப் பார்ப்பது வழக்கம். சப்-டைட்டில் சரியாகப் பொருந்தாத படங்களை வைத்துக் கொண்டு சமயங்களில் பைத்தியம் பிடிப்பது போல் அவற்றை சரிசெய்ய முயன்றிருக்கிறேன்; தேடியிருக்கிறேன்.

இவ்வாறாக ஓட்டிப் பார்க்கும் போது காட்சிகளும் பின்னணி இசையும்தான் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்குமே ஒழிய வசனம் பேசும் பகுதி சட்டென்று வராது. அது வந்தால்தானே சப் -டைட்டில் சரியாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்?

ச்சீ. நாய்களா பேசித் தொலைங்க.. என்று சமயங்களில் எரிச்சலே வந்து விடும். முன்னும் பின்னுமாக நகர்த்துவதில் எங்காவது பேசுவார்கள். சப் -டைட்டில் சரியாக பொருந்தியவுடதான் அப்பாடா என்றிருக்கும்.

ஆனால் இந்தியத் திரைப்படங்களில் இவ்வாறில்லை.

சற்று நகர்த்தினாலே போதும், கிராமப்புறங்களில் சொல்லப்படும் பழமொழியைப் போல 'ஓலைப்பாயில் நாய் மோண்ட கதையாக' சளசளவென்று பேசத் துவங்கி விடுவார்கள்.

அந்த மாதிரி பிரச்சினையே கிடையாது.


***



தமிழ் படத்தின் இயக்குநர்கள் தங்கள் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் சபீனா கொண்டு கழுவி பின்பு கொலோன் போட்டு துடைத்தது போல் DI -ல் பளிச்சென்று ஆக்குகிறார்கள். வண்ணங்கள் கண்ணைப் பறிக்கின்றன.

ஆனால் இந்த கதை, திரைக்கதை என்கிற ஆதார வஸ்துவில் மாத்திரம் நூற்றாண்டு தூசி படிந்திருக்கிறது.

இந்த மனைவிமார்கள் அவசர உப்புமாவைக் கிளறி தட்டில் வைத்து கடாசி விட்டு அவசரமாக சென்று சீரியலில் கண்ணைப் பொருத்திக் கொள்வது போல இந்த தமிழ் இயக்குநர்கள் தாங்கள் செய்த உப்புமாவை செய்தவுடன் ஒரு வாய் ருசி கூட பார்க்க மாட்டார்களா?


***

வீட்டில் வாசிக்காமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்து 'நேரமில்லையே'' என்று பெருமூச்சோடு தினமும் கடந்து செல்வது 'வேலைக்கு ஆகாது' என்று கடந்த ஒரு வாரமாக ஒரு புதிய வாசிப்பு முறையை எனக்குள் நானே அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அதன்படி தினமும் ஒரு புத்தகத்தை Random ஆக எடுத்து அதிலிருந்து ஒரு சிறுகதையையோ, கட்டுரையையோ, நாவல் என்றால் ஓர் அத்தியாயத்தையோ என நூலின் பகுதியை வாசித்து விட்டு வைப்பது.

இதை அனுதினமும் கட்டாயமாக பின்பற்றியே ஆவது என்று எனக்குள் டைம்பாம் செட் செய்து கொண்டிருப்பது நல்ல பலனைப் பெற்றுத் தருகிறது.

()

இன்று கிடைத்தது, எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்கிற பழைய சிறுகதைத் தொகுதி. நூலாசிரியரே ஒரு விழாவில் அன்பளிப்பாக தந்தது. கூட ஒரு கவிதைத் தொகுதியும் (கவிதை என்றாலே இலவச இணைப்பு மாதிரி சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளக்கூடாது).

சிறுகதைத் தொகுதியில் இருந்து பைபிளைப் பிரித்து ஒரு வாசகத்தை படிப்பது போல நூலைப் பிரித்து தற்செயலான ஒரு சிறுகதையைப் படித்தேன்.

'எங்கேயோ பார்த்த ஞாபகம்' - இது சிறுகதையின் தலைப்பு.

வெகுசன இதழ்களின் பாணியை நினைவுப்படுத்தும் நடை.. நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் இலக்கியப் பயணம் இதிலிருந்து நகர்ந்து எவ்வளவோ முன்னகர்ந்து விட்டது. எனவே இப்போது அவர் எப்பவோ எழுதிய இந்த நூலின் உரைநடையை நினைவுகூர்வதினால் அவருக்கு ஒருவேளை சங்கடம் நேரலாம். என்றாலும் இது 'மூக்கில் சளி ஒழுகிக் கொண்டிருந்த' அவருடைய மகனின் பழைய புகைப்படம்தானே? பிரியம் இருக்கத்தானே செய்யும்? :)

()

சுவாரசியமான நடை. கதையின் உள்ளடக்கம் இதுதான்.

ஒரு சினிமாவின் படபூஜை. இருபத்தைந்து வருடங்களாக தொடர்ந்து வெற்றியையே காணும் ஒரு சூப்பர் ஸ்டார்தான் அந்தப் படத்தின் நாயகன். எனில் அவனுடைய வயதை உத்சேதமாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தப் படத்திற்கு இரண்டு இளம் நாயகிகள். அதில் ஒரு நாயகியின் வனப்பும் இளமையும் இவனைக் கவர்கிறது. என்றாலும் அவளை எங்கேயோ பார்த்த ஞாபகமும் வருகிறது. நினைவு பிடிபடவில்லை. தன் பி.ஏ. விடம் கண்காட்டி விட்டு நகர்கிறான்.

அது ஒரு உயர் ரக ரிஸார்ட். நடிகன் அங்குதான் வழக்கமாக தனக்குப் பிடித்த பூக்களை முகர்ந்து கசக்குவது வழக்கம். இளம் நடிகைக்காக காத்திருக்கிறான். அவள் வர சற்று தாமதமாகிறது. சற்று எரிச்சலுடன் 'ஏன்?" என கேட்கிறான். நாயகி சற்று மூக்கைச் சிந்திக் கொண்டே "என் அம்மாவிடம் பர்மிஷன் வாங்க தாமதமாகி விட்டது" என்று சொல்லி விட்டு கூடுதலாக ஓர் அதிர்ச்சி தகவலையும் சொல்கிறாள். "நான் உங்களுக்கு மகள் முறை வேண்டும்" .

அவளுடைய தாயின் பெயரைச் சொல்கிறாள். ஃபீல்டில் இருந்து முன்பே ஒதுங்கி விட்ட பழைய நடிகை அவள். நடிகனுடன் பழக்கம் உண்டு.

இளம் நாயகி பின்பு இதையும் சொல்வதுதான் யதார்த்தமான, பரிதாபமான நகைச்சுவை

'இதற்காக என்னை இந்தப் படத்திலிருந்து தூக்கி விடாதீர்கள். இதிலிருந்துதான் என் எதிர்காலமே துவங்க வேண்டும்' என்று சொல்லி கோ'வென்று அழுகிறாள்.

()

மகள் பாத்திரம், பிறகு அதே பெண்ணுடன் நாயகி பாத்திரம், பின்பு நாயகிக்கு வயதானவுடன் அவளுடைய மகளுடன் நாயகி பாத்திரம் என்று இளம் பெண்களுடன் மட்டுமே நடிக்கும் கிழட்டு கதாநாயகர்களை செருப்பால் அடித்த கதை இது.


***


லக்கேஜை தோளுக்கு மேல் சிரமப்பட்டு தூக்கி மேலேயுள்ள லாஃப்டிற்குள் எப்படியாவது அடித்துப் பிடித்து திணித்து பெருமூச்சுடன் இறங்கி வருவதைப் போல இசையமைப்பாளரின் சிக்கலான மெட்டிற்குள் தமிழை மடக்கி ஒடித்து துண்டித்து கொலை செய்து திணிக்கும் 'மீட்டர்' பாடலசிரியர்களின் இடையே அந்த வணிக சிக்கல்களுக்குள்ளும் தங்களால் இயன்றவரைக்குமான கவித்துவத்தையும் கதைச் சூழலுக்கான பொருத்தமான வார்த்தைகளையும் இட்டு மேலதிக அழகு செய்யும் பாடலாசிரியர்களும் இன்னமும்் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பாலாஜி சக்திவேலின் 'காதல்' திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் எனக்கு பிடித்தமானது. கேட்பவர்களின் மனதையும் உயிரையும் கரைக்கும் சோகத்தின் பாவம் இதில் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கும். ஹரிசரண் அற்புதமாக பாடியிருப்பார். இதற்கு அபாரமாக இசையமைத்த ஜோஷ்வா SRIDHAR ஏன் பிறகு காணாமற் போய் விட்டார் என்று தெரியவில்லை..

இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். சமயங்களில் கண்கசியவும். ஆனால் இன்று காலையில் கேட்கும் போது இந்த ஒரு வரியின் பொருத்தமும் அழகும் என்னை பிரமிக்க வைத்தது.

'மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்'

இந்தப் பாடலின் சூழல் நமக்கு தெரியும். ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியை தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞன் கூட்டிக் கொண்டு ஓடுகிறான். தன்னை நம்பி வந்து விட்ட அவளை ஆறுதல்படுத்தும் நோக்கில் அந்த இளைஞன் பல நம்பிக்கையான வார்த்தைகளை கூறுகிறான்.

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

இது பொதுவாக ஆண் சொல்லும் நம்பிக்கையான உறுதிமொழிகள்தான்.

ஆனால் முன்னர் குறிப்பிட்ட வரியின் பொருள் மிகவும் ஆழமானது. பொருளியல் உலகைக் கூட எப்படியாவது எதிர்கொள்ள முடியும். ஆனால் சாதிமறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக, தாம் எதிர்கொள்ளவிருக்கும் சாதி ஆவணக் கொலைகளின் பயங்கரத்தை அந்த இளம் காதலர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

சுற்றிலும் ஆபத்து. எவர் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கலாம், தகவல் சொல்லலலாம். இதற்கிடையில்தான் வாழ்ந்தாக வேண்டும்.

என்றாலும் கூட அந்த நம்பிக்கையை இளைஞன் ஊட்டுகிறான்.

'மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்'

சுற்றிலும் உயர்அழுத்த மின்சாரம் பாயும் கொலைகாரக் கம்பிகள் இருந்தாலும் காகங்களும், மைனாக்களும் அதன் இடையில்தான் ஊடாடுகின்றன, கூடுகட்டுகின்றன, வாழ்கின்றன. அதிர்ஷ்டம் இல்லாத பறவைகள் மின்சாரத்தில் கருகி சாகின்றன. என்றாலும் வாழும் நம்பிக்கையை அவை விடுவதில்லை.

சாதி வெறியர்களின் ஆபத்தை மின்சாரத்திற்கும் அதற்கு இடையில் வாழ வேண்டிய காதலர்களை கூட்டுப்பறவைகளுக்கும் உவமையாக எழுதிய நா.முத்துகுமாரை வியக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=E-cQMjx0HNg


***

'நீ எந்த அரசியல்?' என்கிறார்கள். இடதா வலதா? எல்லா அரசியல்களிலுமே அவரவர்களுக்கான சார்புகளும் சாதகங்களும் நல்லவைகளும் தீயவைகளும் சுதந்திரமும் ஃபாஸிஸமும் உண்டு.

குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் ஒரு குறிப்பிட்ட அரசியலுக்குள் புகுந்து கொண்டு மற்றவற்றை கண்மூடித்தனமாக புறக்கணிக்கும், நிராகரிக்கும், வெறுக்கும் அரசியல் என்னுடையதில்லை.

அன்னப்பறவை போல எல்லாவற்றிலும் உள்ள சாதகங்களை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் இதற்கு என்ன பெயரென்று தெரியவில்லை. குழப்ப அரசியலாக இருக்கலாம்.


suresh kannan

Friday, June 17, 2016

நூல் வாசிக்க ஓர் ஆலோசனை





 உண்மையாகவே புத்தக வாசிப்பை சாத்தியமாக்க விரும்புபவர்களுக்காக ஓர் உபாயத்தை சொல்ல விரும்புகிறேன். விரும்புவர்கள் பின்பற்றி பார்க்கலாம்.

புத்தகங்களை வாங்கி அடுக்கிவிட்டு பெருமையடைவதோடு பலரின்  கடமை முடிந்து விடுகிறது. இது நிலவுடமை சிந்தனையின் மீதான ஒரு போக்கு. ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது பலரும் பாராட்டுகிறார்கள் என்பதாலோ அது சார்ந்த கவர்ச்சியும் வசீகரமும் ஒரு நூலின் மீது நமக்கு ஏற்படுகிறது. அந்த நூல் உண்மையிலேயே முக்கியமானதா, அதன் உள்ளடக்கம் என்ன? அது நம்முடைய சிந்தனைப் போக்கிற்கு இணக்கமானதா, ஆக்கப்பூர்வமானதா. வாசித்து முடிக்கக்கூடியதா என்கிற ஆராய்ச்சியில் பலரும் ஈடுபடுவதில்லை.

உலக மயமாக்க காலக்கட்டத்திற்கு பிறகு விலை கொடுத்து வாங்கும் வசதியும் (அதிலும் இணைய விற்பனை வந்து விட்ட பிறகு இன்னமும் எளிது) அச்சு நுட்பமும் பரவலாக வந்து விட்ட பிறகு மிக எளிதில் நூலை ஆர்டர் தந்து வாங்கி புத்கக அடுக்கில் வைத்து அழகு மட்டும் பார்க்கும் ஒரு பழக்கம் படிந்து விடுகிறது. (லெண்டிங் லைப்பரிகள் பெருமளவில் குறைந்தது இதனால்தான்).

அந்த நூலை அடைந்து விட்ட பிறகு அதன் மீதான கவர்ச்சி குறைந்து விடுகிறது., திருமணத்தைப் போல (vice versa) பிறகு அடுத்த நூலின் மீதான கவனம். இப்படி சேர்த்து வைத்த புத்தகங்களை 'என்றாவது ஒரு நாள்' வாசித்து விடுவோம் என்று  பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு 'அந்த நாள்' பெரும்பாலும் வரவே வராது. தினமும் கட்டாயமாக சில பக்கங்கள் என்று வாசிக்காதவரை அது சாத்தியப்படவே படாது.

இன்னும் பலர் இணையம் சார்ந்த பொது உரையாடல்களில், அல்லது வரவேற்பறை உரையாடல்களில் 'இந்த நூலை வாங்கி வைத்திருக்கிறேன்' என்று பெருமை பேசுவதற்காகவே நூல் வாங்குபவர்கள். அந்த உரையாடலில் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், அறிவுஜீவி வாசனையைப் பூசிக் கொள்வதற்காகவும் நூல் வாங்குபவர்கள்.

இவ்வாறான பாவனையில் தவறில்லை. என் வாசிப்பு பழக்கமும், திரைப்படம் தொடர்பான தேடுதலும் உயர்ந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. இந்த பாவனை ஒரு நல்ல நூலை, சிந்தனையை நோக்கி அழைத்துச் செல்லும் வாசல்களில் ஒன்றாக இருக்க முடியும். ஆனால் அந்தப் பாதை நீளாமல் அது வெறும் பாவனையாகவே பலருக்கு  நின்று விடுவதுதான் சிக்கல். பலர் இந்த அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

'எங்கே சார் நேரம் இருக்கு' என்கிற சலிப்பின் மூலம் நூல் வாசிக்காமலிருப்பதின் நியாயங்களை வளர்த்துக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால் ஒரு நாளின் எத்தனை மணி நேரத்தை நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை சற்று நிதானமாக சுய விசாரணையுடன் கறாராக பரிசீலித்துப் பார்த்தாலே தெரியும். பயணத்தில், வங்கியில் என்று எங்கெல்லாம் காத்திருக்கும் நேரமிருக்கிறதோ அதையெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஆலோசனை பல்லாண்டுகளாக சொல்லப்பபட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் பின்பற்றப்படுவதில்லை. அதிலும் இந்த ஸ்மார்ட் போன் கலாச்சாரம் வந்த பிறகு எதிரேயுள்ள மனிதனின் முகத்தை நிமர்ந்து கூட பார்க்காமலிருக்கும் அவல நிலையை நோக்கி  நாகரிகம் என்ற பெயரில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

()

இதிலிருந்து விடுபட என்னளவில் நான் உத்தேசிக்கும் உபாயம் ஒன்றுள்ளது. அது நூலகத்தில் உறுப்பினராவது. அரசு நூலகமான தேவ நேய பாவாணர் நூலகம் முதல் சென்னை கன்னிமரா நூலகம் வரை பல நூலகங்கள் உள்ளன. இது தவிர லெண்டிங் லைப்பரிகளும். அரசு சார்ந்த நூலக இயக்கத்தில் சில பல குறைகள் இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும்  நாம் அணுகுவதற்கான நூலகம் இருக்கிறது.

அதில் உறுப்பினராகி விடுங்கள்.

இவ்வாறான நூலகத்தில் உறுப்பினராவதின் மூலம் அந்த நூல்களை ஒரு சில நாட்களுக்குள் திருப்பித் தந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  இல்லையெனில் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அந்தக் கட்டாயம் நமக்கு அந்த நூலை வாசித்தாக வேண்டும் என்கிற நினைவூட்டலையும் உத்வேகத்தையும், நெருக்கடியையும் தந்தபடியே இருக்கும். சொந்தமாக வாங்கிய நூல்களை 'எப்போது வேண்டுமானலும் வாசித்துக் கொள்ளலாம். என்ன இப்போ?'' என்று ஏற்படுகிற அலட்சியம் இதில் ஏற்பட வாய்ப்பு குறைவு.

மட்டுமல்லாமல் நூலகத்திற்கு செல்லப் போகிறோம் என்கிற உணர்வு, அங்குள்ள பல நூறு புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பதில் ஏற்படும் பரவசம், நிறைய பேர் நூல்ளை வாசித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதால் கிடைக்கும் அதிர்வு போன்றவை நூல் வாசிப்பு தொடர்பான உணர்வை புதுப்பித்துக் கொண்டேயிருக்கும்.

'இதுக்கெல்லாம் எங்க சார் நேரம்?' என்று மறுபடியும் ஆரம்பிக்காதீர்கள். நல்ல விஷயத்திற்காக செலவு செய்யப்படும் ஒவ்வொரு மணித்துளியும் வீணல்ல.

என்னிடம் வாசித்து முடிக்காமலிருக்கும் நூல்கள் இருந்தாலும் கூட வலுக்கட்டாயமாக நூலகத்திற்கு செல்லும் வழக்கத்தை விடாமலிருப்பது இந்தக் காரணங்களினால்தான். சமயங்களில் அபராத தொகையைத் தவிர்ப்பதற்காகவே நூல்களை விரைவில் வாசித்து முடித்து விடுவேன்.

இன்னொரு முக்கிய காரணம், தனிநபர் ஒருவரிடம் அதிக நூல்கள் குவிந்து அவை அவருக்கும் பயனின்றி, மற்றவர்களுக்கு பயனின்றி வீணே மக்கி அழிவது ஒரு மோசமான கலாசாரம். இத்தனை நூல்களை சேர்த்து வைத்திருக்கிறேன் என்கிற பெருமைக்காகவே நூல்கள் பாதுகாக்கப்படுவது ஒரு மோசமான போக்கு. சுற்றுச்சூழலில் பாதிப்பை உண்டாக்கி உருவாக்கப்படும் புத்தகங்கள் அவை உருவாக்ப்பட்ட நோக்கத்தை கூட பூர்த்தி செய்யாமல் வீணே வைக்கப்பட்டிருப்பது முறையல்ல. நூலக வாசிப்பின் மூலம் மேலதிக புத்தகங்கள் சேராமலிருக்கும் ஆதாயத்தையும் கவனித்துப் பார்க்கலாம். 


suresh kannan

Sunday, June 05, 2016

இறைவி - முதல் பார்வை




இறைவி -

படம் ஆஹா ஓஹோ அல்லது மிக சுமார் என்னும் இருதுருவ எதிர்வினைகளை இது குறித்து காண்கிறேன். பத்து நிமிடத்திலேயே கணித்து விடும் மேதாவிகள் முதற்கொண்டு இடது கையால் புறக்கணித்துச் செல்லும் பாவனைகளின் அபத்தங்கள் வரை பலதரப்பட்ட கருத்துகள். என்னதான் ஒரு திரைப்படம் விமர்சனம் அபாரமாக எழுதப்பட்டிருந்தாலும் அது ஒரு தனிநபரின் கண்ணோட்டம் மட்டுமே. சமூகத்தின் மனவோட்டத்தை துல்லியமாக பிரதிபலிப்பதாகாது. தேர்தல் முடிவுகளை கவனித்திருப்பீர்கள்தானே?

குழம்பித் தவிக்கும் நண்பர்களுக்காக என் பங்கு உப்பையும் அள்ளிப் போடுகிறேன்.

ஒரு திரில்லர் திரைப்படம், ஓர் அவல நகைச்சுவை திரைப்படம் என்கிற முந்திய வகைமைகளிலிருந்து முற்றிலும் எதிர்திசையிலான ஒரு முயற்சியை செய்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜை பாராட்ட வேண்டும். தனது முன்னோடிகளிடமிருந்து இன்னும் சற்று உயர்ந்து ஓர் அடுத்தக் கட்ட பாய்ச்சலை இயக்குநர் நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமாவின் இப்போதைய சூழலில் இதைத்தான் செய்ய முடியும். தேவர் மகன் சிவாஜி சொல்வது மாதிரி ' அவன் மெதுவாத்தேன் வருவான்'.

இதையும் கூட செய்யாமல் பாதுகாப்பான பாதையிலேயே வண்டியை செலுத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்களைக் கூட கொண்டாடத் தயாராகும் இருக்கும் நாம், மந்தையிலிருந்து சற்று விலக நேரும் ஓர் இளம் ஆட்டை உடனடியாக பிரியாணி போட முயல்வது அநியாயமா இல்லையா நண்பர்களே?

முக்காடு போட்டுக் கொண்டே ரிகார்டு டான்ஸ் பார்த்து விட்டு திரும்பிய பெரிசுகள் மாதிரி.. "ஆக்சுவலி.. இது பெண்ணியம் படம் பத்தின படம் கிடையாது' என்று மழுப்பலாக மறைத்துக் கொண்டு பேசுகிறவர்களைக் கண்டால் நகைச்சுவையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆணின் அகங்கார உலகையும் சற்று அசைத்துப் பார்ப்பதில் படம் வெற்றி பெற்றிருக்கிறது. பார்வையாளர்களுக்கு ஸ்பூன் பீடிங் செய்யும் சில எரிச்சல்களைத் தவிர்த்து கூடுமானவரை இதை பிரச்சார தொனியின்றி சொல்ல முயன்ற இயக்குநருக்குப் பாராட்டு.

படத்தின் திரைக்கதையில் ஒரு கோர்வையின்மை தெரிகிறது. படத்தின் உண்மையான ஆட்டம் இரண்டாம் பகுதியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. .இந்த சமநிலையின்மையை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். முதல் பாதியில் லக்ஸரியாக செலவழிக்கப்பட்டிருந்த அபத்தங்களை துண்டித்து கச்சிதமாக்கியிருக்கலாம். இதனாலேயே நிறையப் பேர் இதை வெறுக்கிறார்கள் என யூகிக்கிறேன்.

படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பலரும் ஆஹா ஓஹோவென்பது எனக்கு ஆச்சரியம். ஒருவேளை திருந்தி விட்ட பையனை சற்று மிகையாகவே தட்டிக் கொடுத்து பாராட்டுவார்களே அப்படியா என தெரியவில்லை. ஓர் ஆசாமி நடிக்கிறார் என்பது வெளியே தெரியாமல் நடிப்பதுதான் அசலான பங்களிப்பு. அந்த வகையில் அஞ்சலி, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, ராதாரவி என்கிற உத்தேசமான ஆர்டரில் இவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக பாபி சிம்ஹாவின் பாத்திரம் மிகச்சிக்கலானதொன்று. அதை சரியாக வடிவமைக்க முயன்ற இயக்குநரையும் வெளிப்படுத்த முயன்ற நடிகரையும் வியக்கிறேன்.

மனம் திருந்தி மீண்டும் வாழ முயலும் ஒரு தம்பதியினரைக் காட்டும் கேமரா நகர்ந்து சென்று குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும் தூளியின் இடையில் நின்று அவர்களைக் காண்பிக்கிறது. இந்த நிலையில் காமிராவின் நகர்வுகள் தற்செயலானதாக அல்லாமல் பிரக்ஞைபூர்வமானதாக திட்டமிட்ட புத்திசாலித்தனத்துடன் இயங்குகிறது.

தமிழ் சினிமாவில் அபூர்வமாக நிகழும் அடுத்தக் கட்ட நகர்வுகளை ஆதரியுங்கள் நண்பர்களே.. கருவிலேயெ கொன்று போடாதீர்கள்.

தயங்கித் தவிக்கும் நண்பர்கள் நிச்சயம் இதை திரையரங்கில் சென்று காணுங்கள். படத்தின் சில தருணங்கள் உங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும். அதற்கு நான் உத்தரவாதம்.

விரிவான பதிவு வெளிவரக்கூடும்.





suresh kannan