Friday, June 17, 2016

நூல் வாசிக்க ஓர் ஆலோசனை





 உண்மையாகவே புத்தக வாசிப்பை சாத்தியமாக்க விரும்புபவர்களுக்காக ஓர் உபாயத்தை சொல்ல விரும்புகிறேன். விரும்புவர்கள் பின்பற்றி பார்க்கலாம்.

புத்தகங்களை வாங்கி அடுக்கிவிட்டு பெருமையடைவதோடு பலரின்  கடமை முடிந்து விடுகிறது. இது நிலவுடமை சிந்தனையின் மீதான ஒரு போக்கு. ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது பலரும் பாராட்டுகிறார்கள் என்பதாலோ அது சார்ந்த கவர்ச்சியும் வசீகரமும் ஒரு நூலின் மீது நமக்கு ஏற்படுகிறது. அந்த நூல் உண்மையிலேயே முக்கியமானதா, அதன் உள்ளடக்கம் என்ன? அது நம்முடைய சிந்தனைப் போக்கிற்கு இணக்கமானதா, ஆக்கப்பூர்வமானதா. வாசித்து முடிக்கக்கூடியதா என்கிற ஆராய்ச்சியில் பலரும் ஈடுபடுவதில்லை.

உலக மயமாக்க காலக்கட்டத்திற்கு பிறகு விலை கொடுத்து வாங்கும் வசதியும் (அதிலும் இணைய விற்பனை வந்து விட்ட பிறகு இன்னமும் எளிது) அச்சு நுட்பமும் பரவலாக வந்து விட்ட பிறகு மிக எளிதில் நூலை ஆர்டர் தந்து வாங்கி புத்கக அடுக்கில் வைத்து அழகு மட்டும் பார்க்கும் ஒரு பழக்கம் படிந்து விடுகிறது. (லெண்டிங் லைப்பரிகள் பெருமளவில் குறைந்தது இதனால்தான்).

அந்த நூலை அடைந்து விட்ட பிறகு அதன் மீதான கவர்ச்சி குறைந்து விடுகிறது., திருமணத்தைப் போல (vice versa) பிறகு அடுத்த நூலின் மீதான கவனம். இப்படி சேர்த்து வைத்த புத்தகங்களை 'என்றாவது ஒரு நாள்' வாசித்து விடுவோம் என்று  பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு 'அந்த நாள்' பெரும்பாலும் வரவே வராது. தினமும் கட்டாயமாக சில பக்கங்கள் என்று வாசிக்காதவரை அது சாத்தியப்படவே படாது.

இன்னும் பலர் இணையம் சார்ந்த பொது உரையாடல்களில், அல்லது வரவேற்பறை உரையாடல்களில் 'இந்த நூலை வாங்கி வைத்திருக்கிறேன்' என்று பெருமை பேசுவதற்காகவே நூல் வாங்குபவர்கள். அந்த உரையாடலில் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், அறிவுஜீவி வாசனையைப் பூசிக் கொள்வதற்காகவும் நூல் வாங்குபவர்கள்.

இவ்வாறான பாவனையில் தவறில்லை. என் வாசிப்பு பழக்கமும், திரைப்படம் தொடர்பான தேடுதலும் உயர்ந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. இந்த பாவனை ஒரு நல்ல நூலை, சிந்தனையை நோக்கி அழைத்துச் செல்லும் வாசல்களில் ஒன்றாக இருக்க முடியும். ஆனால் அந்தப் பாதை நீளாமல் அது வெறும் பாவனையாகவே பலருக்கு  நின்று விடுவதுதான் சிக்கல். பலர் இந்த அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

'எங்கே சார் நேரம் இருக்கு' என்கிற சலிப்பின் மூலம் நூல் வாசிக்காமலிருப்பதின் நியாயங்களை வளர்த்துக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால் ஒரு நாளின் எத்தனை மணி நேரத்தை நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை சற்று நிதானமாக சுய விசாரணையுடன் கறாராக பரிசீலித்துப் பார்த்தாலே தெரியும். பயணத்தில், வங்கியில் என்று எங்கெல்லாம் காத்திருக்கும் நேரமிருக்கிறதோ அதையெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஆலோசனை பல்லாண்டுகளாக சொல்லப்பபட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் பின்பற்றப்படுவதில்லை. அதிலும் இந்த ஸ்மார்ட் போன் கலாச்சாரம் வந்த பிறகு எதிரேயுள்ள மனிதனின் முகத்தை நிமர்ந்து கூட பார்க்காமலிருக்கும் அவல நிலையை நோக்கி  நாகரிகம் என்ற பெயரில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

()

இதிலிருந்து விடுபட என்னளவில் நான் உத்தேசிக்கும் உபாயம் ஒன்றுள்ளது. அது நூலகத்தில் உறுப்பினராவது. அரசு நூலகமான தேவ நேய பாவாணர் நூலகம் முதல் சென்னை கன்னிமரா நூலகம் வரை பல நூலகங்கள் உள்ளன. இது தவிர லெண்டிங் லைப்பரிகளும். அரசு சார்ந்த நூலக இயக்கத்தில் சில பல குறைகள் இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும்  நாம் அணுகுவதற்கான நூலகம் இருக்கிறது.

அதில் உறுப்பினராகி விடுங்கள்.

இவ்வாறான நூலகத்தில் உறுப்பினராவதின் மூலம் அந்த நூல்களை ஒரு சில நாட்களுக்குள் திருப்பித் தந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  இல்லையெனில் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அந்தக் கட்டாயம் நமக்கு அந்த நூலை வாசித்தாக வேண்டும் என்கிற நினைவூட்டலையும் உத்வேகத்தையும், நெருக்கடியையும் தந்தபடியே இருக்கும். சொந்தமாக வாங்கிய நூல்களை 'எப்போது வேண்டுமானலும் வாசித்துக் கொள்ளலாம். என்ன இப்போ?'' என்று ஏற்படுகிற அலட்சியம் இதில் ஏற்பட வாய்ப்பு குறைவு.

மட்டுமல்லாமல் நூலகத்திற்கு செல்லப் போகிறோம் என்கிற உணர்வு, அங்குள்ள பல நூறு புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பதில் ஏற்படும் பரவசம், நிறைய பேர் நூல்ளை வாசித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதால் கிடைக்கும் அதிர்வு போன்றவை நூல் வாசிப்பு தொடர்பான உணர்வை புதுப்பித்துக் கொண்டேயிருக்கும்.

'இதுக்கெல்லாம் எங்க சார் நேரம்?' என்று மறுபடியும் ஆரம்பிக்காதீர்கள். நல்ல விஷயத்திற்காக செலவு செய்யப்படும் ஒவ்வொரு மணித்துளியும் வீணல்ல.

என்னிடம் வாசித்து முடிக்காமலிருக்கும் நூல்கள் இருந்தாலும் கூட வலுக்கட்டாயமாக நூலகத்திற்கு செல்லும் வழக்கத்தை விடாமலிருப்பது இந்தக் காரணங்களினால்தான். சமயங்களில் அபராத தொகையைத் தவிர்ப்பதற்காகவே நூல்களை விரைவில் வாசித்து முடித்து விடுவேன்.

இன்னொரு முக்கிய காரணம், தனிநபர் ஒருவரிடம் அதிக நூல்கள் குவிந்து அவை அவருக்கும் பயனின்றி, மற்றவர்களுக்கு பயனின்றி வீணே மக்கி அழிவது ஒரு மோசமான கலாசாரம். இத்தனை நூல்களை சேர்த்து வைத்திருக்கிறேன் என்கிற பெருமைக்காகவே நூல்கள் பாதுகாக்கப்படுவது ஒரு மோசமான போக்கு. சுற்றுச்சூழலில் பாதிப்பை உண்டாக்கி உருவாக்கப்படும் புத்தகங்கள் அவை உருவாக்ப்பட்ட நோக்கத்தை கூட பூர்த்தி செய்யாமல் வீணே வைக்கப்பட்டிருப்பது முறையல்ல. நூலக வாசிப்பின் மூலம் மேலதிக புத்தகங்கள் சேராமலிருக்கும் ஆதாயத்தையும் கவனித்துப் பார்க்கலாம். 


suresh kannan

No comments: