Sunday, September 10, 2023

ஜெயிலர் – பாதிக் கிணறு மட்டுமே தாண்டியிருக்கும் பரிதாபம்

 
தனது ஆஸ்தான டைரக்டர்களிடம் இருந்து விலகி சந்தையில் முந்தி நிற்கும் இளம் இயக்குநர்களிடம் கூட்டணி வைக்க ரஜினிகாந்த் எப்போதும் தயங்கியதில்லை. இதைப் போலவே ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தனது வயதுக்கேற்ற பாத்திரங்களைத் தேர்வு செய்யவும் ஆரம்பித்தார். இளம் நடிகைகளுடன் டூயட் பாடுவதை அவரது ரசிகர்களே விரும்பவில்லை என்கிற நிதர்சனம் ரஜினிக்குப் புரிந்து விட்டிருக்கலாம். இதெல்லாம் அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுகள். தவிர்க்க முடியாத முடிவுகளும் கூட.

அப்போதைக்கு டிரெண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களை நம்பி தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் ரஜினியின் முடிவு பல சமயங்களில் சரியாகவும் அமைந்திருக்கிறது. சில சமயங்களில் சொதப்பலாகவும் முடிந்திருக்கிறது. ‘தர்பார்’, ‘அண்ணாத்தே’ என்று அவரது சமீபத்திய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்த நிலையில் நெல்சனுடன் புதிய கூட்டணி அமைத்திருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?

*

முத்துவேல் பாண்டியன் தனது ரிடையர்ட் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனைவி, மகன், மருமகள், பேரன் என்று பாசமான குடும்பத்துடன் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கும் மகன், சர்வதேச நெட்வொர்க்கில் இயங்கும் ஒரு சிலைக்கடத்தல் கும்பலைப் பிடிக்க முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் மகன் இறந்து விட்ட செய்தி மட்டுமே மழுப்பலாக கிடைக்கிறது. “உங்க நேர்மையும் இந்த மரணத்துக்கு ஒரு காரணம்’ என்று துயரத்தில் இருக்கும் மனைவி குற்றம் சாட்ட, முத்துவேல் பாண்டியனுக்குள் இருக்கும் இன்னொரு பிம்பம் ஆவேசமாக விழிக்கிறது. தனது மகனைக் கொன்றவர்களை வேட்டையாட கிளம்புகிறார். அந்தப் பயணம், பர்மிட் வாங்கிய லாரி மாதிரி இந்தியா முழுக்க எங்கெல்லாம் அவரைக் கொண்டு சேர்க்கிறது என்பதுதான் இந்தப் படம்.

சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்’ முதல் கமலின் சமீபத்திய ‘விக்ரம்’ வரையான சில திரைப்படங்களை அப்பட்டமாக நினைவுப்படுத்தும் திரைக்கதை. மகனின் மரணத்திற்கு தந்தை பழிவாங்க கிளம்பும் அரதப்பழசான கதை. என்னதான் வழக்கமான மசாலா கதையாக இருந்தாலும் தனித்தன்மையுடன் கையாள்வதின் மூலம் ஓர் இயக்குநரால் அதை வித்தியாசமான திரைப்படமாக்கி விட முடியும். வெற்றியை ஈட்டி விட முடியும். இந்த முயற்சியில் நெல்சன் பாதி கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார். முதல் பாதி சுவாரசியமாக அமைந்தாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதை அநாவசியமாக எங்கெங்கோ அலைந்து பார்வையாளர்களுக்குச் சோர்வையும் சலிப்பையும் அளிக்கிறது.

*

ரஜினியின் ‘ஸ்கீரின் பிரசன்ஸ்’ இன்னமும் சேதமுறாமல் அப்படியே இருக்கிறது என்பதற்கு ஜெயிலர் படமும் ஓர் உதாரணம். வீட்டிற்கு காய்கறி வாங்கி வரும் சமர்த்தான பெரியவர் பாத்திரத்தில் வரும் ரஜினி ஒரு பக்கம் கவர்கிறார் என்றால் சட்டையை மடித்துக் கொண்டு இன்னொரு அவதாரம் எடுக்கும் பரிமாணத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். ஒரு அறையில் அவரது பாதி உருவம் தெரியும் காட்சிக்கே அரங்கம் அதிர்கிறது. ஆனால் இந்த ஆவேசத்தை மிகையாக்கி விடாமல் ஒரு குறிப்பிட்ட மீட்டரில் துல்லியமாக அடக்கி வாசிக்க வைத்திருப்பதில் இயக்குநர் நெல்சனின் தனித்தன்மை தெரிகிறது.

படம் முழுவதும் வரும் ரஜினியின் பிரத்யேகமான பல மேனரிசங்கள் கவர்கின்றன. பிளாஷ்பேக்கில் திகார் சிறையின் ஜெயிலராக வரும் ‘டைகர்’ அவதாரமும் சிறப்பு என்றாலும் அதில் போதுமான அழுத்தம் இல்லாததால் எடுபடவில்லை. படத்தின் தலைப்பில் மட்டும்தான் ‘ஜெயிலர்’ இருக்கிறாரே தவிர, படத்திற்குள் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காணவில்லை.

ஹீரோவின் காலை மட்டும் காட்டுவது, பின்னணி இசை அதிர ஸ்லோ மோஷனில் ஹீரோ நடந்து வருவது போன்றவை ஒரு ‘மாஸ்’ திரைப்படத்தின் தவிர்க்க முடியாத ஃபார்முலா காட்சிகள். ஆனால் இவற்றை மட்டுமே நம்பி ஒரு படத்தை ஒப்பேற்றி விட முடியுமா? ரசிகர்கள் விசிலடிப்பார்கள் என்பதெல்லாம் சரி. ஆனால் பொதுவான பார்வையாளர்களைக் கவர சுவாரசியமான திரைக்கதையும் இருப்பது அவசியம். தனது மகனின் மறைவிற்கு காரணமாக இருந்தவர்களை முத்துவேல் பாண்டியன் துரத்தி வீழ்த்தும் முதல் பகுதியோடு படத்தின் சுவாரசியமும் முடிந்து விடுகிறது. அதன் பிறகு வில்லன் தரும் ‘டார்கெட்டிற்காக’ ஹீரோ நடத்தும் நீண்ட டிராமாவும் அதில் வரும் ‘காவாலா’ போன்ற இடைச்செருகல்களும் கொட்டாவியை வர வைக்கின்றன.

*

ரஜினியைத் தவிர ‘காமியோ’ ரோலில் வரும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்களான சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகிய மூவருக்கான காட்சிகளும் திறமையாக இணைக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் ஒரு கிம்மிக்ஸ்தான் என்றாலும் படத்தின் சுவாரசியத்திற்கு உபயோகமாகியிருக்கிறது. இதில் சிவ ராஜ்குமார், மோகன்லால் வரும் காட்சிகளில் ரஜினிக்கு நிகரான கைத்தட்டல் கிடைக்கிறது. மெயின் வில்லன் வர்மாவாக நடித்திருக்கும் விநாயகனின் தோற்றமும் நடிப்பும் மிரட்டலாக இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் டெரராக வரும் வில்லன் போகப் போக பலவீனமாகி விடுவதால் திரைக்கதையும் கூடவே தொய்ந்து விடுகிறது.

ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார். படையப்பாவில் நீலாம்பரியாக கலக்கியவர், இதில் சராசரி மனைவியாக சில காட்சிகளில் மட்டும் வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார். மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, தனது பாத்திரத்தை தேவைக்கேற்றவாறு கையாண்டிருந்தாலும் ஒரே மாதிரியான முகபாவத்துடன் இருப்பது அசுவாரசியம். பேரனாக வரும் சிறுவன் ரித்விக், சமகாலத்து இளைஞர்களின் ‘இணைய வீடியோ’ மோகத்தையும் அதன் அலப்பறைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறான்.

இது தவிர, மூச்சு திணறுமளவிற்கு ஏராளமான நடிகர்கள். சில காட்சிகளில் புன்னகைக்க வைத்திருக்கும் யோகி பாபு இன்னமும் கூட சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். விடிவி கணேஷின் காமெடி எடுபடவில்லை. ரெடின் கிங்ஸ்லி தன் வழக்கமான மாடுலேஷனையும் எக்ஸ்பிரஷனிலும் வருகிறார். இந்த வண்டி எத்தனை நாளைக்கு ஓடுமோ? ‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்துவின் எண்ட்ரி காட்சியில் கூட கைத்தட்டல் வருகிறது. ஆனால் அவருடைய கேரக்ட்டரும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடந்து போகிறது. ‘வர்மா.. உனக்காக உயிரை கொடுக்கற நண்பன்டா நானு’ என்று எக்ஸ்ட்ண்ட்ரிக்தனமாக நடித்திருக்கும் அர்ஷத் தனித்துத் தெரிகிறார். ‘பிளாஸ்ட்’ மோகனாக வரும் சுனில் பாத்திரத்தின் மூலம் ‘டாப் ஸ்டார்’ நடிகர்களின் கோணங்கித்தனங்களை கிண்டலடித்திருக்கிறார்கள்.

பிராய்லர் கோழியாக வந்து தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல், ஆடியோவாக ‘ஹி்ட்’ ஆன அளவிற்கு வீடியோவாக எடுபடவில்லை. தமன்னாவின் காதல் டிராமா எல்லாம் படத்திற்கு தொடர்பேயில்லாத, தேவையில்லாத ஆணி. ரஜினியைத் தவிர வேறு எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக வடிவமைக்கப்படாதது படத்தின் பெரிய பலவீனம். குறைந்தபட்சம் மெயின் வில்லனாவது வலிமையாக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

*

ஒரு சராசரியான மிடில் கிளாஸ் குடும்பம், மாஃபியா உலகின் பிடியில் சிக்கிக் கொண்டால் என்னவாகும் என்பதுதான் நெல்சன் வழக்கமாக உருவாக்கும் கதையுலகம். ஸ்பானிஷ் முதற்கொண்டு பல வெப்சீரிஸ்களின் தாக்கமும் தழுவலும் அதில் இருக்கும். ஜெயிலர் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. முதற்பாதியில் ஓரளவிற்கு சீராக ஓடும் முத்துவேல் பாண்டியனின் வண்டி, பிறகு பிரேக் பிடிக்காத புல்டோஸர் மாதிரி எங்கெங்கோ சுற்றியலைவது படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியத்தை பாழ்படுத்தி விடுகிறது.

ரஜினியின் படம் என்றாலே ரசிகர்களைத் தாண்டி அதுவொரு குடும்பத் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். பெண்களும் குழந்தைகளுமாக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குச் செல்வார்கள். ஆனால் ‘ஜெயிலர்’ படத்தில் முகஞ்சுளிக்க வைக்கும் அளவிற்கு வன்முறைக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சுத்தியலால் மண்டையை உடைப்பது, காதை அறுப்பது போன்ற கொடூரமான காட்சிகளை மழுப்பாமல் அப்படியே நேரடியாக காட்டியிருப்பது மனம் பதைக்க வைக்கிறது. இது போன்ற வன்முறைக்காட்சிகள் இளம் மனங்களில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற பொறுப்புணர்ச்சி இயக்குநருக்கும் ஹீரோவிற்கும் இருக்க வேண்டும். இது தவிர ரஜினி ஸ்டைலாக சுருட்டு பிடிக்கும் காட்சியும் வருகிறது. ‘குடிச்சுக் கெட்டுப் போயிடாதாதீங்க’ என்று இசை வெளியீட்டு விழாவில் கரிசனத்துடன் உபதேசம் சொன்ன ரஜினி, திரைக்கு உள்ளேயும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றியிருக்கலாம்.

*

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையும் ‘உக்கூம்’ பாடலும் படத்தை பெருமளவு தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஆனால் எத்தனை தடவை ஐயா.. இதைத் தொடர்ந்து கேட்பது?! ஹைடெஸிபலில் வரும் சத்தம் காதுகளை பஞ்சர் ஆக்கியிருக்கும் விபத்தை அனிருத் தவிர்த்திருக்கலாம். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் வரும் அமைதியான காட்சிகளுக்கும் பிறகு நிகழும் அதிரடி காட்சிகளுக்கும் கணிசமான வித்தியாசம் காட்டியிருக்கிறார். எடிட்டர் ஆர்.நிர்மல் இன்னமும் சுதாரிப்பாக செயல்பட்டு அநாவசிய ஆணிகளைக் கழற்றியிருக்கலாம். ஸ்டன் சிவா வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கின்றன. ஆனால், தன் குடும்பத்தை அவமானப்படுத்தும் இரண்டு ரவுடிகளை இருட்டு மூலையில் ரஜினி வீழ்த்துவதில் உள்ள சூடும் விறுவிறுப்பும், ஸ்னைப்பர் ஷாட்களிலும் கன்டெய்னர் லாரிகள் வானத்தில் பறப்பதிலும் ஏற்படவில்லை.

சீரியஸான காட்சிகளின் இடையில் சட்டென்று காமெடியை இணைப்பது, காமெடியான சூழலை தீவிரத்துடன் முடிப்பது போன்றவற்றை ‘டார்க் காமெடி’ என்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரளவிற்கு இந்தப் பாணியை சிறப்பாக பயன்படுத்தும் இயக்குநர்களில் நெல்சனும் ஒருவர். ஆனால் அவரது முந்தைய படங்களில் இருந்த நகைச்சுவை கூட ‘ஜெயிலரில் போதுமான அளவிற்கு இல்லை. சீரியஸான சூழலின் பின்னணியில் அதிரடியான பாடலை ஓடவிட்டு ஜாலியாக நடனம் ஆடுவதெல்லாம் ‘டார்க் காமெடியில்’ வராது.

ஒரு மசாலா சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் இயன்றவரை காட்சிகளில் நம்பகத்தன்மையைக் கூட்டினால்தான் படத்துடன் பார்வையாளர்களால் ஒன்ற முடியும். ஜெயிலர் திரைப்படத்தில் கன்னாபின்னாவென்று லாஜிக் மீறல்கள். தேசமெங்கும் உள்ள கேங்க்ஸ்டர்கள், ஜெயிலரைப் பற்றி அறிந்திருக்கும் போது 40 வருடங்களாக கடத்தல் தொழிலில் இருக்கும், தன்னை ‘புரொபஷனல்’ என்று சொல்லிக் கொள்ளும் விநாயகன் கேரக்கட்டருக்கு தெரியாமல் இருப்பது விநோதம். தன் அப்பாவைப் பற்றி மிக துல்லியமாக அறிந்திருக்கும் வசந்த் ரவி, தான் செய்யும் மோசடியை அவர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்க்க முடியாமல் போனதும் விசித்திரம். நேர்மையாக பணியாற்றிய ஜெயிலர், எப்படி கிரிமினல்களுடன் கூட்டணி வைப்பார் என்கிற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

‘நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் எது?’ என்றொரு கேள்வி ரஜினியிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது ‘முள்ளும் மலரும்’ என்று நேர்மையான பதிலைக் கூறினார். ‘மாஸ்’ சினிமாக்களில் நடித்து ரஜினி தமிழ் சினிமாவின் வணிகத்தைக் காப்பாற்றுவது அவசியம்தான். ஆனால் ‘முள்ளும் மலரும்’ ரஜினி எங்கேயோ, எப்போதோ தொலைந்து விட்டதுதான் பரிதாபம்.

ஜெயிலர் – ஃபெயிலியர் ஆகும் விபத்தை எப்படியோ முட்டி மோதி தவிர்த்திருக்கும் ஒரு சுமாரான முயற்சி.

(குமுதம் இதழில் வெளியானது)  
 
suresh kannan

Tuesday, July 26, 2022

குமுதம் - உலக சினிமா கட்டுரைகள் - பாகம் ஒன்று

 

சுவாசம் பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியான 'சர்வதேசத் திரைப்படங்கள்' - பாகம் ஒன்று நூலிற்காக எழுதப்பட்ட முன்னுரை.

 

oOo 



அலுவலக மதிய உணவிற்குப் பிறகு சிறுநடை செல்வது என் வழக்கம். அவ்வாறாக ஒரு நாள் நான் சென்று கொண்டிருக்கையில் கைபேசி ஒலித்தது. “நான்.. குமுதம் எடிட்டர்.. பிரியா கல்யாணராமன் பேசறேன்”.

என்னுடைய இளம் வயதிலிருந்தே பரிச்சயப்பட்ட அந்த எழுத்தாளரின் பெயரை திடீரென்று போனில் கேட்டவுடன் எனக்குள் ரொமான்ஸூம் கோயில் விபூதி வாசனையும் கலந்த விநோத நினைவுகள் எழுந்தன. அவருடைய எழுத்துப் பாணி அத்தகையது. ஒருபக்கம் ‘ஜாக்கிரதை வயது 16’ போன்ற இளமை ததும்பும் சிறுகதைகளையும் எழுதுவார். இன்னொரு பக்கம் கோயில், ஆன்மீக கட்டுரைகளும் எழுதுவார். வெகுசன பாணியின் அத்தனை வகைமைகளையும் முயன்று பார்த்த எழுத்து அவருடையது.

‘ஒரு முன்னணி வார இதழின் ஆசிரியர் என்னை ஏன் அழைக்க வேண்டும்.. யாராவது அந்தப் பெயரை வைத்து விளையாடுகிறார்களா?’ என்று பல்வேறு எண்ணங்கள் எனக்குள் ஓடின. என்னுடைய திகைப்பை உணர்ந்தாரோ, என்னவோ.. அவரே தொடர்ந்தார். “கிழக்குப் பதிப்பகத்துல வெளிவந்த உங்க நூலைப் படிச்சேன். ‘உலக சினிமா சில அறிமுகங்கள்’. இன்ட்ரஸ்ட்டிங்.. நல்லா எழுதியிருக்கீங்க. ஒவ்வொரு கட்டுரையும் சுவாரசியமா, க்ரிஸ்ப்பா இருந்தது. குமுதத்திற்கும் அதே போல வாரா வாரம் வர்ற மாதிரி ஒரு கட்டுரைத் தொடர் எழுத முடியுமா?” என்றொரு கேள்வியை முன்வைத்தார். சட்டென்று எனக்குள் ஒரு பெரும் தயக்கம் எழுந்தது. ஏன்?

oOo

வெகுசன இதழ்களின் வழியாக என் வாசிப்பு துவங்கி வளர்ந்திருந்தாலும் ஒரு கட்டத்தில் சிறுபத்திரிகை இலக்கியமே என்னை ஆக்ரமித்தது. அப்போது நான் இடைநிலை இதழ்களில் சினிமா பற்றிய ஆவேசமான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தேன். வெகுசன ஊடகங்கள், திரைப்படங்கள் செய்யும் கலாசாரச் சீரழிவுகள் குறித்து நானே காரசாரமாக எழுதியிருக்கிறேன். எனவேதான் அந்தத் தயக்கம்.  வழக்கம் போல் இந்தச் சமயத்தில் எனக்கு மானசீகமாக உதவி செய்ய வந்தவர் எழுத்தாளர் சுஜாதா. பல வகைகளில் இவரையே நான் என்னுடைய முன்னோடியாக கருதுவேன்.

வெகுசன வாசகப் பரப்பு என்பது மிகப் பெரியது. அந்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டு உன்னதமான விஷயங்களை சராசரியான வாசகர்களுக்கு கடத்திச் செல்லலாம் என்பது அவர் ஏற்கெனவே போட்டு வைத்த பாதை. வெகுசன எழுத்துக்கும் இலக்கியத்திற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தவர் சுஜாதா. அவரின் மூலம் சிலபல நல்ல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்து இலக்கிய வாசிப்பின் பக்கம் நகர்ந்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.

உலக சினிமா பற்றிய அறிமுகத் தகவல்களையும் கட்டுரைகளையும் வெகுசன இதழ்களில் இன்று கூட காண்பது மிகக் குறைவுதான். 4G இணைய வேகமும், OTT பிளாட்பாரங்களும் வெப் சீரிஸ்களும் இன்று பரவலாக காணக் கிடைப்பதால் அவற்றைப் பற்றி இன்றைய தேதியில் எழுதியாக வேண்டியாக கட்டாயம் வெகுசன ஊடகங்களுக்கு இருக்கிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பான நிலைமை அப்படியல்ல. உலக சினிமா பற்றிய கட்டுரைகளை இடைநிலை இதழ்கள் மற்றும் சிறு பத்திரிகைகளில் மட்டுமே வாசிக்க முடியும். ஆனால் அதுவும் கூட ஒரு சராசரி வாசகன் எளிதில் அணுக முடியாதபடியான தீவிரமான முரட்டு மொழியில் இருக்கும்.

எனில் உலக சினிமா பற்றி ஒரு வெகுசன வாசகன் அறிவதற்கு என்னதான் வழி?! இதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தவர் பிரியா கல்யாணராமன். குமுதம் போன்ற லட்சக்கணக்கான சர்க்குலேஷன் கொண்ட ஒரு முன்னணி இதழில் உலக சினிமாக்கள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தருவதற்கு ஒரு வாய்ப்பை அவர் தரும் போது அதை ஏன் நான் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?

இத்தனை எண்ணவோட்டமும் சில நொடிகளுக்குள் என் மூளைக்குள் நடந்து முடிய, உடனே உடனே ‘ஓகே’ சொன்னேன்.

oOo


ஜூன் 2016-ல் இந்தக் கட்டுரைத் தொடர் குமுதம் வார இதழில் வெளிவரத் துவங்கியது. தொடர்ந்து 60 வாரங்களுக்கு வெளிவந்தது. தொடர் ஆரம்பித்து மூன்று வாரங்களுக்குப் பின்பு என்னை அழைத்தார் பிரியா கல்யாணராமன். “படத்தோட முடிவு என்னன்னு சொல்லாமலேயே கட்டுரையை முடிச்சுடறீங்களே.. சார்.. அதையும் கூடவே எழுதிடுங்க. ஒரு சிறுகதை ஃபார்மட்ல வந்துடும். அதைத்தான் வாசகர்களும் விரும்புவாங்க” என்றார்.

Spoiler எனப்படும் சமாச்சாரம் பற்றி எனக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. ஏன், அதில் உடன்பாடு இல்லை என்று கூட சொல்லி விடலாம். ஆனால் ஒரு திரைப்படத்தில் முக்கியமான திருப்பங்களை, முடிவுகளை வெளிப்படுத்தி, படம் பார்க்கவிருக்கிறவரின் ஆவலைக் கெடுத்து விடக்கூடாது என்று பொதுவான கருத்து இருக்கிறது. சிலர் எரிச்சலுடன் பதறி ஆட்சேபம் கூட செய்வார்கள். ஒருவகையில் அதுவும் நியாயமே.

ஆனால் என்னைப் பொறுத்தவரை, முழுக்கதையும் தெரிந்தாலும் கூட ஓர் இயக்குநர் எவ்விதமான திரைமொழியினால், திரைக்கதையினால், நுட்பங்களால் தனது சினிமாவை உருவாக்குகிறார் என்பதைத்தான் ஆதாரமான அளவுகோலாக பார்ப்பேன். ஆனால் என் தனிப்பட்ட அபிப்ராயத்தை பொது வாசகனுக்கும் பொருத்திப் பார்க்க முடியாதே?!

“அப்படி முடிவு சொல்லிட்டா தப்பு சார்..” என்றேன் தயக்கமாக. “அந்தத் தப்பையும் செஞ்சு பார்த்துடுவோம். என்ன இப்ப?” என்கிற பலத்த சிரிப்பொலி எதிர்முனையில் கேட்டது. அதுதான் வெகுசன இதழ்களின் வெற்றியின் அடையாளம். சிறு தயக்கத்துடன் சம்மதித்தேன். இந்த ஒரு விஷயம் தவிர, எவ்வித குறுக்கீடும் செய்யாமல் சுதந்திரமான மொழியில் என்னை எழுத அனுமதித்தார் குமுதம் ஆசிரியர்.

ஒவ்வொரு வாரமும் என்னுடன் தொடர்பில் இருந்து நினைவுப்படுத்தி, வழிநடத்தி, கட்டுரைகளை வாங்கி ஒருங்கிணைத்த நண்பர் அருண் சுவாமிநாதனை இந்தச் சமயத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் போஸ்டர்களை தேடியெடுத்து வசீகரமான லேஅவுட் உடன் சிறப்பாக பிரசுரம் செய்த குமுதம் பணியாளத் தோழர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 
 
பிரியா கல்யாணராமன்

 
இந்தத் தொடர் வெளிவந்த முதல் வாரத்திலிருந்து எனக்கு கிடைத்த எதிர்வினைகளும் பாராட்டுக்களும் நம்ப முடியாத அளவில் இருந்தன. இந்த உற்சாகம் வாசகர்கள் கடிதங்களில் எதிரொலித்தன. இணையத்திலும் ஃபேஸ்புக்கிலும் கூட நல்ல வரவேற்பு. நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத, என்னை எப்போதும் கண்டு கொள்ளாத ஓர் உறவினர் கூட கைபேசியில் அழைத்து “உன் போட்டோ பார்த்தேன்.. நீதான் எழுதறியா?” என்று விசாரித்த போதுதான், வெகுசன பரப்பின் வீச்சு விளங்கியது. “இந்தக் கொரியன் படத்தை பற்றி நல்லா எழுதியிருந்தீங்க. இதை எப்படி பார்க்கறது?” என்று வாட்சப்பில் கேட்ட ஒரு முன்னணி படத்தயாரிப்பாளர் முதல் “நீங்க சொல்லித்தான் இந்தப் படத்தை பார்த்தேன். மிக்க நன்றி” என்று சொன்ன நண்பர்கள் வரை விதம் விதமான எதிர்வினைகள் வந்தன.

இந்தத் தொடர் முடிந்தவுடன், “குமுதம் தீராநதி இதழில் உங்க ஆசைப்படி விரிவான கட்டுரைகள் எழுதுங்க” என்று பச்சைக்கொடி காட்டினார் பிரியா கல்யாணராமன். ‘குமுதம் உலக சினிமா கட்டுரைகள் நூலாக வந்தால் நன்றாக இருக்கும்” என்கிற விருப்பத்தை பல நண்பர்கள் அப்போது தெரிவித்தார்கள். எனக்கும் கூட விருப்பம்தான். ஆனால் அதற்கேற்ற சூழல் அமையவில்லை. நானும் இதற்கு பெரிதாக மெனக்கெடவில்லை.

ஆனால் ஒரு நல்ல விஷயம் என்றேனும் நடந்தே தீரும் என்பார்கள். என்னுடைய முந்தைய நான்கு நூல்கள் வெளிவருவதற்கு அடிப்படையான காரணமாக இருந்த நண்பர் ஹரன் பிரசன்னாவே, இந்த நூல் வருவதற்கும் முக்கிய காரணமாக இருக்கிறார். இந்த வகையில் அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவருடைய புதிய பதிப்பக முயற்சியின் மூலம் ‘குமுதம் சினிமா கட்டுரைகள்’ ஒரு தொகுப்பாக வெளிவருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!.

இந்த நூலை குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனுக்கு சமர்ப்பிப்பதற்காக ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த முன்னுரையை நான் எழுதிக் கொண்டும் நேரத்தில் அவர் நம்முடன் இல்லை என்கிற செய்தி துயர் கொள்ள வைக்கிறது. ஆம், 22-06-2022 அன்று இயற்கையில் கலந்து விட்டார் பிரியா கல்யாணராமன்.

oOo

‘சர்வதேசத் திரைப்படங்கள் – பாகம் ஒன்று’ என்கிற இந்த நூலை வாசிக்க முடிவெடுத்த உங்களுக்கு நன்றி. 2010-க்கு பிறகு, பல்வேறு ஆண்டுகளில் வெளியான சர்வதேச திரைப்படங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை இந்த நூல் உங்களுக்குத் தரும். சம்பந்தப்பட்ட திரைப்படத்தை தேடிப் பார்த்தேயாக வேண்டும் என்கிற ஆவலை இந்தக் கட்டுரைகள் நிச்சயம் உங்களுக்குள் எழுப்பும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தொடர் எழுதப்பட்டதின் நோக்கமே அதுதான். இதன் மூலம் நல்ல சினிமாக்களைப் பார்க்கும் ரசனை மேலதிகமாக பெருகும். இந்த ரசனை மாற்றம் நல்ல சினிமாக்கள் வெளிவருவதற்கும் காரணமாக இருக்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. அந்த மாற்றத்திற்கு ஒரு துளியாக இருக்கப் போகும் உங்களுக்கும் என் பாராட்டும் நன்றியும்.

வாருங்கள்! சிறந்த சினிமாக்களைக் கொண்டாடுவோம்!


சென்னையின் ஒரு சோம்பலான மதியம்
29-06-2022                                                                                        சுரேஷ் கண்ணன்