Showing posts with label முற்போக்கு. Show all posts
Showing posts with label முற்போக்கு. Show all posts

Monday, November 24, 2008

முற்போக்கு பதிவு: சில விளக்கங்கள்

என்னுடைய பதிவுகளின் இயல்பிற்கு மாறாக தமிழ்மண பரிந்துரை பட்டியலில் பரமபதம் மாதிரி மேலும் கீழும் ஏறி இறங்கி பிறகு பெரிய பாம்பு வழியாக ஒரேடியாக கீழே இறங்கிய என்னுடய முந்தைய பதிவின் உள்ளடக்கம் குறித்து சில நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்; எரிச்சல் பட்டார்கள்; கோபப்பட்டார்கள்; தங்கள் எண்ணங்களை எதிரொலிப்பதாக பாராட்டினார்கள். இணையப் பரப்பில் இந்தப் பதிவு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அதுவல்ல என் நோக்கம். இது குறித்து இன்னும் உங்களுடன் நிறைய பேச வேண்டிய சூழலை பின்னூட்டங்களில் உள்ள சில கேள்விகள் எழுப்பியிருக்கின்றன. கோர்வையாகவோ இல்லாமலோ இருக்கும் இந்தப் பதிவை பொறுமையும் சாவகாசமான மனநிலையும் உள்ளவர்கள் மாத்திரம் வாசிக்கத் தொடர வேண்டுகிறேன். இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களின் கனவுகளில் நமீதாவும் ஜெயமாலினியும் இணைந்து நடனமாடும் வண்ணக்காட்சிகள் வர வேண்டுமென்று எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கிறேன்.

()

நாகரிகத்தின் உச்சியை நாம் அடைந்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் காலகட்டத்திலும் பல விதமான மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும், கொலைகளும், மனித உயிர் மீதுள்ள அலட்சியத்தின் காரணமாக பல்வேறு விபத்துகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் அவற்றை நாம் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் அவற்றில் சில நிகழ்வுகள்தான் நம் மனதிற்கு மிக நெருக்கமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை விளக்க தெளிவான பிரத்யேகமான காரணங்கள் எதையும் கூற முடியாது என்றே நம்புகிறேன். அவ்வாறு என்னுள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய சம்பவமாக சில வருடங்களுக்கு முன் கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்து போன கொடூரமான சம்பவத்தைச் சொல்லுவேன். மனித உடல்கள் போலன்றி ஏதோ தீயில் கருக்கப்பட்ட மரக்கட்டைகள் மாதிரி கிடந்த அந்தக் குழந்தைகளின் வண்ணப் புகைப்படங்களை செய்தித் தாள்களில் காண நேர்ந்த போது மனம் 'ஒ'வென்று கதறியது. நம் தோல் பரப்பின் மீது விழும் எரியும் மெழுகுவர்த்தியின் ஒற்றைத் துளியே நம்மை சிறிது விநாடிகளாவது துடிக்க வைக்கும் போது முழு உடலும் நெருப்பினுள் நனையும் கொடூரக் கணங்களை அந்த பிஞ்சுக் குழந்தைகள் எவ்வாறு எதிர்கொண்டிருக்கும் என்பதை கையாலாகத்தனமான கற்பனையுடன் யூகித்துப் பார்த்த போது அழுகைதான் வெடித்துச் சிதறியது.

அதற்கு அடுத்த சம்பவமாக சட்டக்கல்லூரியில் நிகழ்ந்த வன்முறையைச் சொல்லலாம். தொலைக்காட்சியில் மிக அலட்சியமாக பார்க்கத் துவங்கின அந்தக் கணங்கள் என்னுள் மிக பதட்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அந்த வன்முறையின் பின்னணி குறித்தெல்லாம் அப்போது 'அறிவுஜீவித்தனமாக' என்னால் யோசிக்க முடியவில்லை. யாராவது அந்த வன்முறையை உடனடியாக தடுக்க மாட்டார்களா என்ற எண்ணம்தான் என்னை முழுதாக அப்போது ஆக்ரமித்தது. அந்த பதட்டத்தின் வெளிப்பாடுதான் 'சட்டம் பயிலும் மிருகங்கள்' என்றெழுதிய அந்தப் பதிவு. (கண்ணுக்கே தெரியாத சாதி என்கிற ஒரு விஷயத்திற்காக ஒரு சகமனிதனை சாகடிக்கத் துடிக்கும் கேவலமான மனிதர்களோடு இயற்கையின் விதியின் ஒழுங்குப்படி இயங்கும் மிருகங்களை ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்தியது தலைப்பிட்டது தவறுதான்).

ஆனால் இணையத்தில் அந்த வன்முறையைச் சம்பவத்தின் சாதிய பின்னணிகளை விளக்கி 'இந்தச் சம்பவம் நிகழ்ந்தது நியாயமானதும் இயல்பானதும் ஆகும்' என்ற தொனியில் வன்முறையை நியாயப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட சில ' போலி அறிவுஜீவித்தனமான' பதிவுகளை வாசிக்க நேர்ந்த போது மகா எரிச்சல் ஏற்பட்டது. அபத்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் நம்முடைய அடுக்கடுக்கான சாதிய அமைப்பு காரணமாக அடுத்தடுத்த அடுக்கில் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மீது பல்வேறு விதமான வன்முறைத் தாக்குதல்களும், மனரீதியான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் ஆதிக்கச் சாதியினரால் பல ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் காரணம் சொல்லி இந்த வன்முறையை நியாயப்படுத்தி எழுதுவதை அடிப்படை மனச்சாட்சி உள்ளவர்கள் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவ்வாறான உடனடியான எண்ணங்களை வெளிப்படுத்தியவர்களை 'பொதுப்புத்தியினர்' என்று கிண்டலடித்தும் அவர்களை ஆதிக்க சாதியினர் என்ற வட்டத்திற்குள் தள்ள முயன்றும் எழுதப்பட்ட பதிவுகள் முறையற்ற செயலாக எனக்குத் தோன்றியது. 'வெற்று மனிதாபிமானக் கூச்சல்' என்று இந்த உணர்வை இடது கையால் தள்ளின ஒரு பதிவின் வரி எனக்குள் கடுப்பை ஏற்படுத்தியது.

இந்த போலி அறிவுஜீவிகளை நான் கேட்க விரும்புபவதெல்லாம் ஒன்றுதான்: "சம்பந்தப்பட்ட வன்முறைக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது உங்களின் சாதிய கற்பிதங்கள் கழன்று போய் சக மனிதனின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டு ஒரு கணமாவது உங்கள் மனம் பதறவில்லையா?" அப்படி பதறியதாக ஒப்புக்கொண்டால் இன்னும் நாம் இழந்திருக்காத மனிதத்தின் மீது நம்பிக்கை வருகிறது என்று ஆறுதல் கொள்ளலாம்.

()

நவீன அறிவின் குறியீடான கணினி நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளில் கலந்து விட்டிருந்தாலும் கூடவே ஆதிகால மூடநம்பிக்கைகளும் 'கம்ப்யூட்டர் ஜோசியம்' என்ற பரிணாமத்தில் நம்முடன் தொடர்வது எவ்வாறு அபத்தமானதாக இருக்கிறதோ, அப்படித்தான் இருக்கிறது இணையத்தில் சாதிய/மத/இன உணர்வுடன் மற்ற பிரிவுகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வெளிப்படும் பெரும்பாலான பதிவுகளும் உரையாடல்களும். அரசாங்க கழிவறைகளுக்கு நிகரான வாசனையுடன் பின்னூட்டப் பெட்டிகளில் உமிழப்படும் ஆபாசமான வார்த்தைகளும் தாக்குதல்களும் மிகுந்த அருவருப்பை ஏற்படுத்துகின்றன. நன்றாக கல்வி கற்று சுயசிந்தனைகளை வளர்த்துக் கொண்டு நாகரிக மனிதர்களாக உலவும் நம்மாலேயே இன்னமும் நம்முள் புதைந்திருக்கும் சாதிய உணர்வுகளை கைவிட முடியவில்லையெனில், கல்வியறிவு பெறாத ஒரு வட்டத்திற்கு மேல் சிந்திக்க இயலாமல் அருவாளை தூக்கி ஓடும் ஒரு கிராமத்தானின் செயலை ஆட்சேபிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆனால் இவ்வாறான சாதியக் கூச்சல்கள்தான் இணையத்தில் பரபரப்பாகவும் அதிகமாகவும் கவனிக்கப்படுகிறது. இவர்கள்தான் 'முற்போக்காளர்' என்ற அடையாளத்துடன் பலரால் சிலாகிக்கப்படுகின்றனர். இவர்களை ஆதரிக்கும் கும்பலால் எழுதப்படும் பின்னூட்டங்கள் இவர்களை இன்னமும் உற்சாகப்படுத்தி ஆவேசமாக கூச்சலிட வைக்கின்றன. மாறாக ஆக்கப்பூர்வமாக எழுதுகிறவர்களின் - சாதியப்பிரச்சினைகள் உட்பட்ட - பதிவுகள் சொற்பானமானவர்களாலேயே வாசிக்கப்படுகிறது. இவ்வாறான பாசாங்குத்தனமான முற்போக்காளர்களின் கூச்சல்களை வெகுநாட்களாகவே அருவருப்புடன் கவனித்து வருகிறேன். அவ்வாறான அருவருப்பை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றது சட்டக்கல்லூரி வன்முறை தொடர்பான ஒரு பக்கச் சார்பான பதிவுகள்.

மேற் குறிப்பிட்ட வன்முறைச் சம்பவத்தை கண்டிக்கும் போது இந்த 'அறிவுஜீவிகள்' அதை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் மீதான வன்முறைச் சம்பவங்களோடு ஒப்பிட்டு பட்டியலிட்டு "ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவன் தாக்கப்படும் போது மாத்திரம் கூவுகிறார்கள். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார்கள்' என்றதொரு செயற்கையாக கட்டமைக்கப்பட்ட உணர்ச்சி உருண்டையை மேலே எறிகின்றனர். அய்யா சாமிகளா! ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை மாத்திரம் யார் ஆதரித்தது? வன்முறை எந்த ரூபத்தில் நிகழ்ந்தாலும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அதை எதிர்ப்பதும் கண்டிப்பதும்தான் 'ஒரு மனிதனின்' இயல்பான செயலாக இருக்க முடியும். சட்டக்கல்லூரி வன்முறையில் தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருந்தாலும் அதையும் கண்டித்துதான் இணையத்தில் நடுநிலையானவர்களின் பதிவுகள் வெளிப்பட்டிருக்கும். மாறாக இந்த போலி முற்போக்குவாதிகள் முன்வைக்கிற மாதிரி அது கண்டுகொள்ளாமலோ நியாயப்படுத்தப்பட்டோ இருந்திருக்காது.

வன்முறை என்பது இயற்கையானது; அதை நாம் மறுதலிக்க முடியாது என்பதுதான் என்னுடைய தீர்மானமான எண்ணமாக இதுவரை இருந்தது. முன்னர் எழுதிய ஒரு பதிவில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.

"...........என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்........."


ஆங்கிலேயர்களிடம் போரிட்டுதான் நாம் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. அந்த காரணத்தினால்தான் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் எல்லாத் துறைகளிலும் நாம் பொறுப்பின்றியும் நமது தேசத்தின் மீதான பற்றுமின்றி இருக்கிறோமோ என்ற கேள்வி எனக்குண்டு. ஆனால் சட்டக் கல்லூரி சம்பவத்தை பார்த்த கணத்தில் வன்முறை என்கிற அம்சம் மனித நாகரிகத்தின் அடிப்படைக்கு எதிரானதோ என்று தோன்றுமளவிற்கு அந்தச் சம்பவம் என்னை அசைத்துப் போட்டது. நாடகத்தனமாக தோன்றினாலும் அதுதான் உண்மை. அபூர்வமான சமயங்களில் குடும்ப உறுப்பினர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் என்னுடைய பழக்கத்தை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் தோன்றியிருக்கிறது.

என்றாலும் மிக அவசியமான சந்தர்ப்பங்களில் வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள முடியும் என்பதும் நடைமுறையான உண்மை என்பதை மறுக்க முடியாது.

()

யாருமே தன்னுடைய மதத்தை/ஜாதியைக் கடந்து வரமுடியாது என்பது இவர்களின் தீர்மானமான அபிப்ராயம். சொல்லப்படும் கருத்தை விட அதை யார் சொல்கிறார்கள் என்றுதான் ஆராய்கிறார்கள். இதனால் நடக்கும் விவாதங்கள் கருத்து மோதல்களுடன் நின்றுவிடாமல் தனிப்பட்ட வகையிலும் அதையும் தாண்டி இதைப்பற்றி எதுவுமே அறியாத பதிவருடைய அப்பாவி குடும்ப உறுப்பினர்கள் மீதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சி பாய்கிறது. கருணாநிதியின் இறப்பைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஒரு பதிவில் எரிச்சலோடு குறிப்பிட்ட போது அதற்கு பழிவாங்கும் விதமாக என்னுடைய குழந்தைகளின் மரணத்தோடு அதை ஒப்பிட்டு ஒரு பின்னூட்டம் வந்தது. அடிப்படை மனித உணர்ச்சியைக் கூட இழக்குமளவிற்கு இவர்களின் மதமும் சாதிய உணர்வும், அரசியல் பக்தியும் கல்வி கற்ற இவர்களை ஆட்டிப் படைக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமும் பரிதாபமுமே வருகிறது.

அரசாங்கக் காகிதங்களில் இயலவில்லையெனினும் நான் மனதளவில் மத/ஜாதிய உணர்வுகளைக் கடந்து வந்துவிட்டேன் என்பதை ஆத்மசுத்தியோடு என்னால் சொல்ல முடியும்.

நகரத்தில் பிறந்த நான் சாதியக் கொடுமைகளை என்னுடைய அனுபவத்தில் துளி கூட அனுபவத்ததில்லை. ஆனால் அது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்துவதற்கும் அதிலிருந்து வெளியே வருவதற்கும் என்னுடைய தாயார் முக்கியமான ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார். கிராமத்தில் பிறந்த கல்வியறிவு இல்லாத அவருக்கு பார்ப்பனியர்களின் செயல்பாடுகள் குறித்து பிரமிப்பான மயக்கம் இருக்கும். தொலைக்காட்சியில் யாராவது ஒரு சிவப்பான சிறுமி நன்றாகப் பாடிக் கொண்டிருந்தால் " நிச்சயம் அது பாப்பாரப் பொண்ணாத்தான் இருக்கும்" என்பார். வறுமையான பிராமணர்கள் கூட நன்றாக படித்து நல்ல வேலைகளில் சேர்ந்துக் கொண்டிருப்பதை பாராட்டி பேசுவார். ஆனால் தலித்கள் குறித்து அவருக்கு நேர்மாறான அபிப்ராயம் இருந்தது. அவர்களின் சுத்தமில்லாத நடவடிக்கையும் வாழ்வுச் சூழலும் பேச்சும் அவருக்கு அருவருப்பை ஏற்படுத்தும். நான் இதை ஆட்சேபித்து, சமூகத்தின் பெரும்பாலான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக அவர்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழ்வுச் சூழலை விளக்கி, அவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மற்றவர்களை போல் செயல்பட முடியும் என்று விளக்க முற்படும் போதெல்லாம் அவர் சொல்வது 'அட போடா! நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்'.. என்கிற சொற்றொடரைத்தான். நான் வளர்ந்த வீடு சேரிக்கு அருகே அமர்ந்திருந்ததினால் எனக்கு அப்போது பல தலித் நண்பர்கள் இருந்தார்கள். உண்மையாகவும் பாசாங்கின்றி பழகும் விதத்தில் மற்ற பிரிவு நண்பர்களை விட தலித் நண்பர்களே சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பது என் தனிப்பட்ட அனுபவம். அவை எனக்கு நடைமுறை உண்மையை உணர்த்தியது.

என் தாயார், யாரென்றே தெரியாத ஒரு தொலைக்காட்சி சிறுமியை பாராட்டத் துணிவதும் அதே போல் இன்னொரு பிரிவினரை இகழத் துணிவதற்கும் 'சாதி' என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு நச்சுக்கிருமி காரணமாக இருப்பது குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை விளக்கினாலும் அவருக்கு புரியாததற்கு அவர்கள் வளர்க்கப்பட்ட முறையும் கல்வி இல்லாத சூழலும் காரணமாயிருப்பதை கண்டு பரிதாபமாக இருந்தது. ஆனால் முறையாக கல்வி பெற்ற நம் சமகாலத்து மனிதர்களே சாதிய மனோபாவத்திலிருந்து வெளிவராததைக் காணும் போது கல்விக்கும் சிந்தனைக்கும் பெரும்பாலும் சம்பந்தேமேயில்லையோ என்றும் தோன்றுகிறது. கணினி படித்தவர்கள் எல்லாம் தேவலோகத்திலிருந்து இறங்கியவர்கள் என்கிற மனோபாவம் பாமரர்களிடம் இருக்கிறது. ஆனால் கணினி படித்தவர்களும் இணையத்தில் பாமரர்களை விடவும் மோசமாக சாதிய உணர்வோடு மோதிக் கொள்வதை காணும் போது அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.

முற்போக்கான பார்வை என்றாலே அது ஒடுக்கப்பட்ட சாதிக்கு ஆதரவாக பேசுவதுதான் என்றிருக்கும் இவர்களது புரிதல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் ஆதிக்கச் சாதி என்றாலே அது பார்ப்பனர்கள் மாத்திரம்தான் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதி குறித்த எந்தவொரு பதிவுமே பார்ப்பனர்களைச் சாடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. அடுக்கடுக்காக அமைந்திருக்கும் நம் சாதிய அமைப்பை மிக வசதியாக அப்போது இவர்கள் மறந்து விடுகிறார்கள். எந்த வன்முறைச் சம்பவம் என்றாலும் அதனை நியாயமாக அணுகுவதை விட்டு விட்டு 'முயலுக்கு மூன்று கால்' என்பது போல தன்னுடைய வசதிக்கேற்ற சார்புப் பார்வையோடு வெளிப்படுத்துகிறார்கள். தலித் பிரிவினர் அனைவருமே அப்பாவிகள் போலவும் தொடர்ச்சியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிற பிம்பத்தை கட்டமைப்பதில் இவர்கள் காட்டும் அவசரம் நேர்மையானது அல்ல.

ஆதிக்க சாதி என்று குறிப்பிட்டு அந்தப் பிரிவில் உள்ள அனைத்து மனிதர்களையும் காழ்ப்புணர்ச்சியோடு பார்ப்பதும் அணுகுவதும் முறையானதல்ல. தலித் பிரிவிலும் ஆதிக்க மனோபாவத்தோடு செயல்பாடுகிறவர்கள் இருக்கிறார்கள். இதையும் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்ல முடியும்.

()

எல்லா சாதி மனிதர்களும் புழங்கும் ஒண்டுக்குடித்தனத்தில் அதிலுள்ள சங்கடங்களோடும் சண்டைகளோடும் மகிழ்ச்சிகளுடனும் இடையூறுகளுடன் வாழ்ந்தவன் நான். அப்போதைய உரிமையாளரிடமிருந்து நாங்கள் குடியிருந்த வீட்டை புதிதாக விலைக்கு வாங்கியவர் தலித் பிரிவைச் சார்ந்தவர். அப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவர் அந்த வட்ட அளவில் அதிகாரம் பொருந்திய பதவியில் இருந்தார். தொழிற்சங்கத்திலும் பெரிய பொறுப்பில் இருந்தார். வீட்டை வாங்கியவுடன் அவர் செய்த முதல் பணி எல்லோரையும் காலி செய்யச் சொல்லி மறைமுகமாகவும் நேரடியாகவும் தந்த கொடுமைகள். இவருடைய மிரட்டலுக்குப் பயந்த சில வீட்டினர் காலி செய்து விட்டனர். ஆனால் மிகுந்த வறுமையில் வாழ்ந்த என்னுடைய குடும்பத்தினரைப் போன்றவர்கள் மாத்திரம் உடனே வேறிடத்திற்கு செல்ல முடியாமல் அந்தக் கொடுமைகளை சகித்துக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை அந்த வீட்டுக் கட்டிடத்திற்குள் எதற்கோ அவசரமாய் நுழைந்த போது எதிரே வந்த அவரைக் கவனியாமல் முட்டிக் கொண்டேன். "எதிரே வருகிற என்னைக் கண்டு மரியாதையாக ஒதுங்கி நிற்காமல் இடிக்கிறாற் போல் வருகிறாயே" என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது சுமார் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்த எனக்கு 'என்ன தப்பு செய்தேன்' என்று அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் ஒரு முறை குடியிருந்தவர்கள் அனைவரையும் எதையும் விளக்காமல் ஏதோ ஒரு பத்திரத்தில் கையெழுத்திடச் சொன்னார். என்னுடைய வீட்டின் சார்பில் நான் ஒரளவிற்கு படித்தவன் என்பதால் என்னை அழைத்து கையெழுத்திடச் சொன்னார்கள். எதற்கென்று நான் தயக்கத்துடன் கேட்க முயன்ற போது கையில் பெரிய கல் ஒன்றை தூக்கி கொலை வெறியுடன் எறிய வந்தார். நான் பயந்து ஓடி வந்துவிட்டேன்.

நிற்க. தலித்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்பதை நிறுவுவதற்காக இதைச் சொல்ல வரவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு ஒரு பிரிவினரையே அபத்தமாக நான் பொதுமைப்படுத்த மாட்டேன். எல்லாப்பிரிவுகளிலும் மனிதாபிமானம் இல்லாமல் மற்றவர்களை கொடுமைப்படுத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. அதிகாரம் கையில் வரும் போது எந்தவொரு மனிதர்களுக்கும் மற்றவர்களை ஆதிக்கம் செய்யும் மனோபாவம் வந்துவிடுவதை குறிப்பிடுவதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே தலித்கள் எல்லோருமே அப்பாவிகள் அல்ல என்பதையும் மற்ற பிரிவுகளில் உள்ள அனைவருமே கொடுமைக்காரர்கள் அல்ல என்பதையும் (அவ்வாறான பிம்பத்தைத்தான் இணையத்தில் காண முடிகிறது) அழுத்திச் சொல்வதற்காகத்தான் என்னுடைய முந்தைய பதிவில் சில விஷயங்களை கிண்டலான தொனியில் சொல்ல வேண்டியிருந்தது.

ஆனால் இந்தப் பதிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 'வந்தாயா வழிக்கு' என்ற தொனியில் சிலர் எழுதும் பின்னூட்டமிட்டத்தை நான் ஏற்க மாட்டேன். இது அவர்களின் பிரச்சினைதானே ஒழிய, என்னுடையதில்லை. எவனொருவன் தன்னுடைய சாதிய/மத/இன கற்பிதங்களை பெருமிதமாக சொல்லிக் கொள்கிறானோ, அதன் காரணமாகவே மற்ற பிரிவினரை இகழ்வாக நோக்குகிறானோ அவன் என் கண்ணுக்கு மலத்தில் நெளியும் புழுவாகவே தெரிகிறான். (இது எல்லாப்பிரிவினருக்கும் பொருந்தும்).

()

மற்றபடி....

குறிப்பிட்ட சில பதிவர்களை நான் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக அவர்களின் பெயர்களை குறிப்பிட்டே சிலர் பின்னூட்டமிட்டிருக்கின்றனர். அதில் ஒரளவிற்குத்தான் உண்மையிருக்கிறது. செயற்கையான ஆவேசத்துடனும் மற்றவர்களை கவனத்தை கவர உபயோகப்படும் இகழ்வான உத்திகளுடன் அவர்களின் பதிவில் குறிப்பிடப்படும் ஆபாச வார்த்தைகளைப் பற்றின எரிச்சல் என்னிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அதைத்தான் சுட்ட விரும்பினேன். ஆனால் அவர்களைச் சுட்டிக்காட்டி என்னை ஏதோ ஒரு புனிதன் என்று காட்டிக் கொள்வது அல்ல என் நோக்கம். என்னுடைய பதிவிலும் அவ்வாறான வார்த்தைகள் சில சமயங்களில் இடம் பெற்றிருக்க்கூடும். இதைத் தவிர்த்து மற்ற சில விவாதங்களுக்காகவும் மாற்று எழுத்துக்களாகவும் அவர்களின் பதிவை தொடர்ந்து படித்துக் கொண்டுதானிருக்கிறேன். சினிமா பற்றிய வரிகளில் நான் குறிப்பிட்டது போல பிடிக்காவிடில் ஏன் தொடர்ந்து படிக்கிறாய் என்று அவர்களும் கேள்வி எழுப்ப முடியும்தானே?

()

(முந்தைய) பதிவின் ஆரம்பத்தில் கழிசடைகள், பன்றிக்குட்டிகள் என்று சக பதிவர்களைப் பற்றி எழுதியிருந்ததாக அதிஷா உள்ளிட்ட சில நண்பர்கள் பின்னூட்டத்தில் மறைமுகமாக வருத்தப்பட்டிருந்தனர். இந்தப் பதிவு முழுதுமே ஒரு போலி முற்போக்காளனின் குரல். அவன் பார்வையில் மற்ற பதிவர்களின் தோற்றம் பற்றித்தான் எழுத முயன்றிருந்தேன். அதை என்னுடைய பார்வை என்பது போல அவர்கள் புரிந்து கொண்டதற்கு நான் தெளிவற்ற முறையில் எழுதியதும் காரணமாக இருந்திருக்கலாம். பதிவின் இடையில் என்னைப் பற்றிய சுய எள்ளல் சார்ந்த தடங்களையும் அவர்கள் கண்டிருக்கக்கூடும். எந்தவொரு தனி மனிதரையும் நான் தாழ்ச்சியாக நினைப்பதில்லை. இதையும் மீறி அவர்கள் புண்பட்டிருந்தால் அதற்காக என் மன்னிப்பை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அந்தப் பதிவு பல பதிவர்களின் நடுநிலை சார்ந்த மனோநிலையை, எண்ணங்களை எதிரொலித்திருக்கின்றது என்பதை பல பின்னூட்டங்களின் மூலம் உணரும் போது 'நான் தனியனல்ல' என்கிற சந்தோஷம் ஏற்படுகிறது.

என்னுடைய அலைவரிசையில் இயங்குகிற நண்பர்களின் தோழமை கிடைக்காமல் நான் பல வருடங்கள் அவஸ்தைப் பட்ட போது அதைத் தீர்த்தது இணையம்தான் என்ற வகையில் இந்த ஊடகத்தின் மீது எனக்கு மிக நன்றியுண்டு. சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதில் ஏற்படும் சந்தோஷமும் அதனால் கிடைக்கும் பாராட்டின் காரணமாக இன்னும் நிறைய விஷயங்களை தேடிக் கண்டடைந்து பகிர வேண்டும் என்கிற உணர்வை ஊட்டி என்னுடைய தேடல் விரிவாக ஊக்கமளித்தது இணையம்தான்.

என்னுடைய பதிவை சராசரியாக தினமும் குறைந்தது முந்நூறு நபர்களிலிருந்து ஐந்நூறு நபர்களாவது வாசிக்கிறார்கள் என்பதை google analytics மூலம் அறிய முடிகிறது. ஒரு சிற்றிதழோ அல்லது இடைநிலை இதழுக்கோ சாத்தியப்படாத வாசக வட்டமிது. மேலும் எந்தவிதமான அரசியல் தலையீடோ, இடப்பிரச்சினையோ இல்லாமல் மிகச்சுதந்திரமாக என்னுடைய எண்ணங்களை இங்கே பகிர முடிகிறது. இணையத்தின் ஆக மிகப் பெரிய பலம் அது. அதுவே என் பொறுப்புணர்ச்சியை இன்னும் அதிகமாக்குகிறது. என்னுடைய பதிவுகளில் ஒரு சதவீத உருப்படியான விஷயத்தையாவது வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம்.

இந்த சக்தியை சாதிய/மத/இன உணர்வு சார்ந்த மோதல்களுடான சார்பு நிலை சார்ந்த விவாதங்களின்/வாசிப்புகளின் மூலம் வீணாக்க நான் விரும்பவில்லை. அவ்வளவுதான்.

suresh kannan

Friday, November 21, 2008

முற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்

ஒரு கணினியும் இணையத் தொடர்பும் இருந்தால் போதும், கண்ட கழிசடைகள் எல்லாம் (இருங்கள், இந்த ஆரம்பத்திற்கே சங்கடப்படாதீர்கள், இன்னும் நிறைய இருக்கிறது) வலைப்பூ ஆரம்பித்து எழுதித் தள்ளி இணைய எழுத்தாளர்கள் பன்றிக் குட்டிகள் போல் பெருகிவிட்டார்கள். இதன் நடுவிலே நாம் என்னதான் சிறந்த செய்திகளை சொந்தமாகவோ ஊடகங்களிலிருந்து நகல் செய்தோ பிரசுரித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லையே என்றும் என்ன செய்தும் தம்மை ஒரு முற்போக்குவாதி என்று யாரும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்களே என்றும் கவலைப்படுகிறீர்களா?

கவலையை விடுங்கள். மனச்சாட்சியையும், சூடு சொரணைகளையும் சற்று ஒத்தி வைத்து விட்டு உங்களை முற்போக்குச் சாயத்தில் முக்கியெடுத்த செவ்வாய் கிரகவாசியான பிரகஸ்பதி போன்றதொரு வடிவில் கட்டமைத்துக் கொண்டு அதன் மூலம் இணையப்பரப்பில் பரவலான கவனத்தைப் பெற கீழ்கண்ட வழிகள் ஒருவேளை உங்களுக்கு உதவக்கூடும்.

(1)

முதலில் உங்கள் வலைப்பூவின் பெயரே கலகத்தன்மையுடன் இருத்தல் அடிப்படையானது. பூங்குருவி, தென்றல் காற்று என்றெல்லாம் அழகியல் உணர்ச்சியுடன் பெயர் வைத்திருந்தால் உங்களை ஏதோ வாரமலரின் பின்பக்கத்தில் கவிதை எழுதுகிற தயிர்வடை ஆசாமி என்று புறக்கணித்து விடுவார்கள். இந்த வலைப்பூவின் தலைப்பையே உதாரணத்திற்கு பாருங்கள். பிச்சைப்பாத்திரத்தில் என்ன இருக்கும்? மனிதர்கள் தங்களின் ஜாதிய கற்பிதங்களை கழற்றி வைத்து விட்டு கூடும் ஒரே இடமான பாலியல் தொழிலாளியின் யோனி மாதிரியானது அது. ஜாதிமதமில்லாத ஜீவத்துளிகள் நிறைந்திருப்பது போல பிச்சைப் பாத்திரத்திலும் எல்லோர் வீட்டு மிச்ச, சொச்ச உணவு அடங்கியிருக்கும். அந்த மாதிரியான ஒரு கலேஜியான பிரதேசத்தை குறியீடாகக் கொண்ட வார்த்தையை உங்கள் வலைப்பூவின் பெயர் எதிரொலிக்க வேண்டும். ஆனால் வாசகர்களின் கவனத்தைக் கவர இந்த மிதவாதம் கூட உதவாது. இன்னும் கூட காத்திரமாக கூடவே சற்று இலக்கியச் சாயலுடன் இருப்பது உத்தமம். 'விந்துத்துளியின் பிரபஞ்ச வெளி' என்பது போலவோ 'பெருங்கதையாடலில் விரியுமென் யோனி' என்பது போலவோ அமைந்திருத்தல் நன்று. 'தீப்பொறி ஆறுமுகம்" "வெற்றிகொண்டான்" போன்ற திராவிடப் பேச்சாளர்களின் காத்திரமான உரையாடல்களை தொடர்ந்து கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது இதற்கு உதவக்கூடும். சிற்றிதழ் வட்டாரத்தில் கலகவாதிகளாக அறியப்படுகிறவர்கள் தலைமையேற்கும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் அதற்கு ஒப்பானது.

(2)

பதிவு ஆரம்பித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது முற்போக்காளர்களுக்குள் நிலவும் பல முகாம்களில் ஏதாவது ஒரு முகாமிற்கு அடைக்கலம் தேடிச் செல்வது. வணிக இதழ்கள் முதற்கொண்டு சிற்றிதழ்கள் வரை இந்த முகாம்களின் எண்ணிக்கை அதிகம். ஏதாவதொரு முகாமோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் காத்திரமாக செயல்படுவது என்பது பெண்கள் நடிக்காத சீரியல் வெற்றி பெறுவது போல சாத்தியமேயில்லாத ஒரு காரியம். முற்போக்கு எழுத்தாளர்களை எப்படி அடையாளம் கொள்வது என்று குழப்பமா? எந்த பதிவிலாவது ஙோத்தா... லவ்டேகோபால்... என்ற வார்த்தைகள் தென்பட்டால் அவரை தயக்கமின்றி உடனே முற்போக்கு எழுத்தாளராக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஏதாவது ஒரு முகாமை தேர்வு செய்தவுடன் அந்த முகாமில் இருப்பவர்களின் பதிவிற்குச் சென்று 'சூப்பர் அண்ணே. &*||*^#! சேர்ந்தவர்களின் முகமுடிகளை கிழித்தெறிந்து அம்மணமாக்கி விட்டீர்கள். இப்படி செருப்பால் அடித்தால்தான் அவர்களுக்கு புத்திவரும்' என்றோ ' பின்னி விட்டீர்கள் &|*^#! நாய்களின் கொட்டம் இதன் மூலமாவது அடங்கும்' என்றோ ஆவேசமான வசவு வார்த்தைகளுடன் இணைத்து பின்னூட்டமிட்டு பதிவெழுதுவர்களையே அசத்தி அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இம்மாதிரியான செயல்களின் மூலம் அவர்களும் உங்களின் பதிவிற்கு வந்து அதே மாதிரியான மொழியில் பின்னூட்டமிட்டு உங்களின் புகழைப் பரப்ப வலிகோலுவார்கள். பிற்காலத்தில் அவர்கள் உங்களை அவர்களின் வாரிசாக அறிவிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. பின்நவீனத்தின் கோமணத்தையே அவிழ்த்து ஆராய்வதாக சொல்லிக் கொள்ளும் முற்போக்குவாதிகள், பழமைவாதிகள் தங்கள் சமூகத்தை தொடர்ச்சியாக கட்டமைக்க ஏற்படுத்திய வாரிசு முறையை மாத்திரம் ஏன் பின்பற்றுகிறார்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள்.


(3)

உங்கள் பதிவின் உள்ளடக்கம் என்பது எப்போதும் பொதுப்புத்தியை செருப்பால் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது நீங்கள் எழுதும் பதிவுகள் பொதுப்புத்தி கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கு பொதுப்புத்தி (common sense) என்பதே இருக்கக்கூடாது. புரிகிறாற் போலவும் நேர்க்கோட்டிலமைந்த வாக்கியங்களாகவும் எழுதினால் உங்களுக்கு முற்போக்கு எழுத்தாளராக இருக்க அடிப்படைத்தகுதி கூட இல்லையென்று பொருள். ஓசியில் கிடைக்கிறதே என்று பத்து கட்டிங்கை தொடர்ச்சியாக அடித்து விட்டு டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடப்பவனின் உளறலோடு ஒத்திசைவான ஒரு தாளகதியான மொழியில் எழுதத் தெரிந்திருத்தல் நன்று. புரியும்படி சொன்னால் அல்லது புரியாதபடி சொன்னால் உங்கள் ஆழ்மனதின் ஒப்பனை செய்யப்படாத எண்ணங்களை இலக்கிய மொழியின் சாயலோடு வடிவமைத்து கலக வார்த்தைகளில் பதிவு செய்வதே முற்போக்கு எழுத்தின் பாலபாடம். தமிழில் இருக்கும் அத்தனை வசவு வார்த்தைகளையும் பதிவின் இடையில் உபயோகிப்பது மிக முக்கியம். வாசிக்கிறவர்கள் யாரும் முகஞ்சுளிக்க மாட்டார்களா என்ற கேள்வி உங்களுக்குள் ஒருவேளை எழலாம். இப்படியான வசவு வார்த்தைகளை படிப்பதிலும் சொல்லிப் பார்ப்பதிலும் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு ரகசிய கிளர்ச்சி இருக்கிறது என்பது அடிப்படை உளவியல் உண்மை. எனவே மேலுக்குள் அதை அருவருத்தாலும் உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பார்கள் என்பது எட்டாம் நூற்றாண்டிலிருந்தே நிறுவப்பட்ட ஒரு வரலாற்று ரகசியம்.

(4)

செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் தொடர்ந்து கவனித்து சிறுபான்மையினர்கள் சம்பந்தப்பட்ட அவர்கள் மீதான தாக்குதல் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளை (அதற்குத்தான் இந்தியாவில் பஞ்சம் கிடையாதே) சிவப்பு மையால் குறித்து வைத்துக் கொள்வது முக்கியம். பின்பு புலனாய்வுப் பத்திரிகைளும் சிறப்பு செய்தியாளர்களும் மத அடிப்படையாளர்கள் நடத்தும் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கும் தரவுகளை மிகக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றை உங்களின் பார்வை போல கலந்து கட்டி ஆவேசமான தொனியில் மறுபிரசுரம் செய்வது உங்களை முற்போக்காளர்களின் வரிசையின் முன்னணியில் நிற்க வைப்பதற்கு நிச்சயம் உதவும். இதில் தலித்கள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் திண்ணியத்தில் மலம் திணிக்கப்பட்ட சம்பவத்தை நிச்சயம் சேர்த்துக் கொள்வது இன்றியமையாதது. அந்த மலம் உலராமல் பார்த்துக் கொள்வது முற்போக்காளராகிய உங்களின் முக்கியமான கடமை. வருங்காலத்தில் தலித்களே இதை மறக்க முயற்சித்தாலும் இதை அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்து அவர்களின் தாழ்வுணர்ச்சியையும் பதட்டத்தையும் இழக்காமல் வைத்திருக்க வேண்டியது நீங்கள் முற்போக்காளராக தொடர்ந்து செயல்படுவதற்கு தேவையான அடிப்படை என்பதை மறக்கக் கூடாது. சுருங்கச் சொன்னால் நீங்கள் முற்போக்காளர் தகுதியை நீட்டித்துக் கொண்டே இருப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பிரச்சினையை உணர்ச்சிகரமாக எழுதி உங்கள் முற்போக்காளர் இமேஜை நீங்கள் பஸ் பாஸ் போல் renewal செய்து கொண்டே இருக்க முடியும்.

இன்னொரு அடிப்படையையும் மறக்கக்கூடாது. 'ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அனைவருமே கொடூரமானவர்கள், வன்முறையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை தொடுத்து கொண்டிருப்பவர்கள். அவர்களில் சிலர் தங்களின் ஜாதிய கற்பிதங்களை உணர்ந்து அதைக் கடந்து வெளியே வரமுயற்சித்தாலும் அவர்களின் சட்டைக்குள் கயிற்றைத் தேடிப்பார்த்து அடையாளத்தை உணர்ந்து அவர்களை மறுபடியும் ஜாதியக் கூண்டுக்குள் திருப்பித்தள்ளி விடுவது முற்போக்காளனின் கடமை.

எல்லா கருமாந்திர ஜாதிகளிலும் நல்லவர்களும் அயோக்கியர்களும் வன்முறையாளர்களும் மனிதாபிமானம் கொண்டவர்களும் கலந்தேதான் இருப்பார்கள் என்பது கடைந்தெடுக்கப்பட்ட பொய் என்பதை முற்போக்காளர்கள் உணர வேண்டும். ஒரு வன்முறை நிகழ்வை "எவ்வாறு புரிந்து கொள்வது" என்பதற்கு நிறைய பயிற்சிகள் தேவைப்படுகிறது. எங்காவது ஒரு வன்முறைச்சம்பவம் நிகழ்ந்தால் அது ஆதிக்கச் சாதியினராலேயாதான் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று முன்கூட்டிய தீர்மானத்துடன் நம்புவதுதான் சிறந்த புரிதல்.

(5)

சினிமா விமர்சனம் எழுதுவது ஒரு கூடுதல் தகுதி. தமிழில் வந்த சினிமா எதுவுமே உருப்படியானது அல்ல என்று முப்பாத்தம்மன் கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்வது அடிப்படை. உலக சினிமா என்பது இந்திய துணைக்கண்டத்தின் வெளியில் உருவாக்கப்படுவது என்பதை மறந்து விடக்கூடாது. புகழ்பெற்ற, பொதுவாக பரவலாக அறியப்பட்ட உலகத் திரைப்படங்களை பற்றி எழுதுவது உங்களின் தனித்தன்மைக்கு வேட்டு வைக்கும் செயல். பழங்குடிகளின் தொன்மையான மொழியில் வெளிவந்து திரைப்பட விழாக்களில் மொத்தமே பத்து நபர்கள் மாத்திரமே பார்த்திருக்கும் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதே உன்னதம். இந்தத் திரைப்படங்களின் போக்கு மக்களின் புரட்சி, எழுச்சி ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. இம்மாதிரியான விமர்சனங்களின் போது சம்பந்தப்பட்ட படத்தை மாத்திரம் ஒற்றைப் பரிமாண பார்வையோடு எழுதுவது அறிவீனம். சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பல்வேறு திரைப்பட இயக்குநர்களின் பெயர்களையும் படத்தலைப்புகளையும் (வெறுமனே பெயர்களை தெரிந்து வைத்திருத்தால் போதும்) ஆங்காங்கே உதிர்த்துக் கொண்டே செல்வது கூடுதல் தகுதி. படிக்கும் வாசகன் உங்களை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வாயைப் பிளந்து பிரமிக்க இது உதவும்.

உலக சினிமாக்களை காண ஆங்கில மொழியின் போதாமை குறித்து கவலைப்படுகிறீர்களா? பரவாயில்லை, இதை வெளியே காண்பித்துக் கொள்ள வேண்டாம். உள்ளுர்ப் படங்களுக்கு வருவோம். நமது உள்ளுர் சினிமா நாயகர்கள் அரிவாள்களை தலைக்கு உயரே தூக்கும் வணிகப்படங்களை வெளிவந்த முதல் நாளே முண்டியத்துக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு பார்த்தாலும் அந்தப் பிரியத்தை உள்ளுக்குள் ஒளித்து அவர்களையும் அந்தப்படங்களையும் கன்னாபின்னாவென்று திட்டி எழுதுதலின் மூலம் முற்போக்குச் சாயத்தை அழுத்தமாக பூசிக் கொள்ளலாம். விமர்சனப் பதிவின் தலைப்பை மிக அழுத்தமாக வைப்பது அதிக வாசகர்களைப் பெறுவதற்கு மிகுதியாக உதவும். "பார்ப்பனிய மலத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட தூமைத் துணி' 'சீழ்பிடித்த ஆண்குறியில் வழித்தெழிக்கப்பட்ட நாற்றமடிக்கும் விந்துக்குருதி' என்று கலகத்தன்மையுடனோ அல்லது 'பெருங்கதையாடலின் குறுநகை' என்று இலக்கிய வாசனையுடனோ இருத்தல் முக்கியம். பதிவின் உள்ளடக்கத்தில் பட இயக்குநரையோ பிரதான நடிகரையோ "தேவடியாப் பையன்" என்றோ அவர்களின் "ஆண்குறிகளை வெட்டுதல்" குறித்தோ கொண்ட வரிகளை மறக்காமல் சேர்ப்பது வாசகர்கள் கிளர்ச்சியடைந்து "இவ்வாறெல்லாம் கூட பொதுப்பரப்பில் கலக்ததன்மையோடு செயல்பட முடியுமா" என்று உங்களை பிரமிப்புடன் காண உதவும்.

தமிழ்ப்படங்கள்தான் குப்பை என்று தெரிகிறதே, அப்புறம் ஏன் அதை முதல் நாளே பார்த்துவிட்டு வந்து இப்படி இணையப் பரப்பை நீங்கள் எடுக்கும் வாந்தியாலும் அபான வாயுவாலும் நிரப்புகிறீர்கள் என்று யாரும் உங்களை கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். அவர்கள்தான் கோமியம் தெளிக்கப்பட்டு புனிதமாக்கப்பட்ட உங்களின் கலகவார்த்தைகளில் பிரமிப்படைந்து வாயடைத்து நிற்கிறார்களே.

(6)

திரையரங்கில் படம் வெளிவந்த முதல்காட்சி அனுமதிச் சீட்டுக்காக வரிசையில் முண்டியத்து முன்னால் நிற்கிற இருபது பேரின் கவனத்தை திசைமாற்றி தாண்டிப் போய் சீட்டை வாங்கியதுதான் உங்களின் வாழ்வில் நீங்கள் செய்த ஒரே புரட்சியாக இருந்திருக்கும். பரவாயில்லை. ஆனால் உங்களின் பதிவுகளில் இம்மாதிரியான சில்லறைத்தனமான செயல்களின் தடங்கள் பதியாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். மார்க்ஸ், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற ஆவேசமான புரட்சி சம்பந்தப்பட்ட பெயர்களும் மேற்கோள்களும் உங்கள் பதிவின் இடையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காலையில் தவறாமல் வாக்கிங் சென்று காய்கறி வாங்கித் திரும்பும் மிடில்கிளாஸ் கேணையனாக உங்களை சித்தரித்துக் கொள்வது உங்களின் முற்போக்கு பிம்பத்தை கட்டமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். டாஸ்மாக்கில் ஓசியில் குடித்து வாந்தியெடுத்ததைப் பற்றியோ போதையில் எதிரே இருப்பவனுடன் நடந்த கைகலப்பு பற்றியோ புளகாங்கிதத்துடன் அதை விவரித்து எழுதுதல் நலன் பயக்கும். திரையில் தங்கள் நாயகர்களை ஆராதிக்கும் அப்பாவி விசிலடிச்சான் குஞ்சுகள் அதே முறையில் உங்களின் இந்த புரட்சிச் செயல்களில் கிளர்ச்சியடைந்து உங்களை ஆதர்சமாக ஏற்றுக் கொண்டு உங்களின் அல்லக்கைகளாக மாற வாய்ப்புண்டு.

(7)

சர்வதேச அறிவுஜீவிகளின் கட்டுரைகளை இணையத்தில் தேடிக் கண்டெடுத்து சமீபத்தில் அதை வாசித்ததாக போகிற போக்கில் அலட்சியமாக தெரிவிப்பது உடனடி பலனை ஏற்படுத்தக் கூடியது. குருட்டாம் போக்கில் கட்டுரையின் சில வரிகளை அடிக்கோடிட்டு காண்பித்து இந்த வரிகளுடன் தாம் மிகவும் உடன்படுவதாகவோ அல்லது கட்டுரையாளரின் மேதாவித்தனத்தை மறுதலிப்பதாகவோ தெரிவிப்பது 'நம்மாளு இண்டர்நேஷனல் லெவல்ல பைட் பண்றாரே' என்று வாசகனின் மனத்தில் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடும்.

வேற்று மொழி அறிவுஜீவிகளின் கட்டுரைகளை நேர்காணல்களை சற்று சிரமம் மேற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதும் உதவக்கூடியதுதான். பதிவின் கீழே சிறியதாக தமிழில் ...... என்று உங்கள் பெயரை விரும்பினால் நிரப்பிக் கொள்ளலாம். சாளேஸ்வர வாசகர்கள் இதைக் கவனிக்காமல் முழுக் கட்டுரையும் உங்களாலேயே எழுதப்பட்டது என்று தவறாக (உங்களைப் பொறுத்தவரை சரியாக) புரிந்து கொள்வதற்கு அது உதவக்கூடும். மொழிபெயர்க்கும் கட்டுரையின் தொனி அசல்கட்டுரையின் படியேதான் வரவேண்டுமென்கிற கட்டாயமெல்லாம் ஒன்றில்லை. இடையே உங்களின் கைச்சரக்கையும் கலந்து அடிக்கலாம். இம்மாதிரி பதிவையெல்லாம் யாரும் பிரக்ஞையுடன் வாசிப்பதில்லை என்பதால் யாரும் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. அரவாணிகள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி நிஜ வாழ்க்கையில் நீங்கள் கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருக்கலாம். அவர்களுக்காக உங்கள் பிருஷ்டத்தை ஒரு அங்குலம் கூட நகர்த்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் எழுத்து, பொதுவாழ்க்கை என்று வரும் போது அவர்களைப் பற்றியே தொடர்ந்து எழுதுவது, பேசுவது, கவலைப்படுவது போன்ற செயல்கள் உங்களின் முற்போக்கு இமேஜ் வளர்வதற்கு பெரிதும் உதவக்கூடியது.

(8)

பிடித்த எழுத்தாளர்களாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், அனுராதா ரமணன் என்று ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களை யாரும் சீந்த மாட்டார்கள். சிறுபத்திரிகைகளில் மாத்திரமே ரகசியமாக உலவும் எழுத்தாளர்களை (குறைந்தபட்சம் பெயர்களையாவது) அறிந்து கொள்வது நல்லது. அவர்களின் படைப்புகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வந்து அதில் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய சங்கதி இருந்தால் (இல்லையென்றால் நாமே செயற்கையாகவும் அதைக் கட்டமைக்கலாம்) கப்பென்று பிடித்துக் கொண்டு அதை வைத்து 'இது சிறுபான்மையினரை அவமதிக்கும் நோக்கில் எழுதப்பட்டது' என்ற ஆவேசமான தொனியில் பரபரப்பான கட்டுரை ஒன்றை எழுதலாம். (காதலான திரைப்படத்தில் பெரியாரின் சிலைக்கோணத்தை அரசியலாக்கிய கட்டுரையை இங்கு நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது). பொதுப்புத்திக்கு தெரியாத / உறைக்காத கோணத்தை இந்த முற்போக்காளர் விழிப்புடன் கூர்மையாக அவதானித்து கண்டுபிடித்து விட்டாரே என்று உங்களுக்கு பாராட்டு மழை பொழியும். சாணக்குகியா, அசிங்கபெரியவன் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். எனவே வெற்றிமோகன், பாரு போன்ற முன்னணி சிற்றிதழ் படைப்பாளிகளை அவ்வப்போது சீண்டிக் கொண்டோ அல்லது அவர்கள் தங்களுக்குள் சீண்டிக் கொள்வதை கண்டித்து காறித்துப்பியோ தொடர்ந்து பதிவெழுதுதலும் நன்று.


()

மேற்கண்ட வழிகளை கவனமாகப் பின்பற்றுவதின் மூலம் 'நீங்களும் ஒரு முற்போக்காளர்' என்ற தகுதியையும் ஆளுமையையும் இணையப் பரப்பில் நீங்கள் உடனடியாகவும் சிறப்பாகவும் பெறுவதற்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். "நீங்களும் இதைப் பின்பற்றுகிறீர்களா?" என்று என்னை நோக்கி அபத்தமாக யாரும் கேள்வியெழுப்பக் கூடாது. இது ஒரு சுயவாக்குமூலமோ என்று சந்தேகப்படுபவர்கள் நிச்சயம் நரகத்துக்குத்தான் செல்வார்கள்.

முப்பது வழிகள் என்று குறிப்பிட்டு விட்டு எட்டு வழிகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே என்று முணுமுணுப்பவர்கள் முற்போக்கு முகாமிற்குள் நுழைய அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள். சொல்லப்பட்டதின் ஒழுங்கை பின்பற்றாததே கலகத்தின் குறியீடு என்று இதற்குள் யூகித்திருந்தவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புண்டு. (நியுமராலஜிப் படி எட்டாம் எண்தான் எனக்கு ராசியானது என்பதால்தான் எட்டு விதிகளுடன் இந்தப் பதிவு முடிக்கப்பட்டிருக்கிறது என்று காற்றுவாக்கில் வரும் உறுதியில்லாத தகவல்களை நம்பாதீர்கள்).

வாழ்க முற்போக்கு! வளர்க கலகவாதிகள்! ஒழிக பொதுப்புத்தி!


(முக்கியமான பின்குறிப்பு: விளிம்பு நிலை மனிதர்களுக்காகவும் சிறுபான்மையினருக்காகவும் நிஜமான அக்கறையுடன் சாய்வில்லாத மனப்பாங்குடன் இயங்கும் படைப்பாளிகள், களப்பணியாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவ்வாறான பாவனையில் போலித்தனமாக இயங்கி மற்றவர்களின் கவனத்தில் தம்மை எப்போதும் வைத்துக் கொள்ள நினைக்கும் அற்பர்களை கிண்டலடிக்க முயல்வதே இந்தப் பதிவின் நோக்கம்.)

பதிவு நீண்டுவிட்டதால் பின்னதொரு சாவகாசமான நேரத்தில் இன்னும் சில வழிமுறைகளும் விதிமுறைகளுமாக இந்தப் பதிவு update செய்யப்படலாம்.

தொடர்புடைய பதிவு

புகழ் பெற்ற சாமியாராக சில குறுக்கு வழிகள்

suresh kannan