Sunday, April 14, 2019

ஊழல், உளவு, அரசியல்






சங்கர் எழுதிய ‘ஊழல் – உளவு – அரசியல்’ நூலை வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற சுவாரசியத்துடன் ஏறத்தாழ ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது புனைவு அல்ல. மூர்க்கமான அரசு இயந்திரத்துடன் மோதி ஜெயித்த ஒரு சாமானியன் எதிர்கொண்ட திகிலும் பயங்கரமும் கொண்ட அனுபவங்களின் தொகுப்பு. அரசு இயந்திரத்தின் ஒரு உதிரியே அந்த இயந்திரத்தின் மோசடியை வெளிப்படுத்தத் துணிந்த துணிச்சலும் நேர்மையும் இந்த நூலின் பக்கங்களில் பதிவாகியுள்ளன.

தந்தையின் மறைவு காரணமாக 16 வயதிலேயே அரசுப் பணியில் இணையும் சங்கர், ஒரு விடலை இளைஞனின் அப்பாவித்தனமான பார்வையில் விரியும் அலுவலக அனுபவங்களை யதார்த்தமாக விவரித்துள்ளார். மெல்ல மெல்ல தன்னை முன்னேற்றிக் கொள்ளும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் பதிவாகியுள்ளன. அங்கு நிகழும் அநீதிகளை, ஊழல்களை, மோசடிகளை நடைமுறை விவரங்களுடன் விவரித்துள்ளார். அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டே இவற்றை நேரடியாக எதிர்க்க முடியாத சூழலில் மறைமுகமானதொரு யுத்தத்தைத் துவங்குகிறார். கோபமும் குதர்க்கமும் கொண்ட ஒரு பலமான குத்துச்சண்டை வீரனை எதிர்த்து ஐந்து வயது சிறுவன் சண்டைக்கு இறங்குவதற்கு நிகரான காரியம் இது.

எனவே இதன் எதிர்விளைவுகளையும் இவர் பிறகு எதிர்கொள்ள நேர்கிறது. காவல்துறை இழைத்த சித்திரவதைகளை இவர் இயல்பாக விவரிக்கும் போது மனம் கலங்கிப் போகிறது. சராசரி நபராக இருக்கும் ஒவ்வொருவரும் தாமே அங்கு மாட்டிக் கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறார். இவரது சிறை அனுபவங்கள் பல திரைப்படங்களை நினைவுப்படுத்துகின்றன. ஆனால் அதையும் தாண்டிய நடைமுறை நுண்விவரங்கள். பார்ப்பதற்கு பயங்கரமாகத் தோற்றமளிக்கும் ஒருவர் எவ்வாறு வெள்ளந்தியாக உதவுகிறார் என்கிற விஷயம் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிறகு தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கை சங்கர் எதிர்கொள்கிறார். நீதித்துறையும் காவல்துறையும் அதிகார வர்க்கமும் எத்தனை மெத்தனத்தையும் அலட்சியத்தையும் சார்புகளையும் சுயநலத்தையும் கொண்டு இயங்குகிறது என்பதற்கான சாட்சியங்கள் இந்தப் பக்கங்களில் விரிகின்றன.

தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து விவரிக்கும் போது அவை வாசகர்களிடம் எவ்வித இரக்கத்தையும் கோரிவிடக்கூடாது என்பதில் சங்கர் கவனமாக இருக்கிறார். கழிவிரக்கத்தின் தடயங்கள் இல்லை. அதே சமயத்தில் தான் ஒரு ஹீரோ என்கிற சாகச பெருமிதமும்  அவரிடமும் இல்லை. ஒரு சாமானியனாக தான் எதிர்கொண்ட வயிற்றைப் பிசையும் முந்தைய அனுபவங்களை விலகி நிற்கும் எள்ளலோடு எழுத்தில் விவரிக்கிறார். ஆனால் அதையும் மீறி உண்மை நிலவரத்தை கற்பனை செய்து பார்க்கவே நமக்குத்தான் அத்தனை பயமாக இருக்கிறது.

ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்குமே மனச்சாட்சி, நேர்மை போன்ற நல்லியல்புகள் அடிப்படையாக இயற்கையில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் குரல் எழுப்பும் எச்சரிக்கையை பலர் காது கொடுத்துக் கேட்டு தங்களின் கீழ்மைகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். 

ஆனால் சிலர் இவற்றையெல்லாம் கழற்றி ஓரமாகப் போட்டு விட்டு சுயநலம், பேராசை, தன் வளர்ச்சியை பாதிப்பவற்றின் மீதான அச்சம், எனவே அவற்றுடன் இயைந்து போதல், அதற்காக எந்தவொரு அப்பாவியையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் கருணையற்ற தன்மை போன்றவற்றுடன் இயங்குகிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. ஒட்டு மொத்த அரசுத்துறையே இப்படித்தான் இயங்குகிறது.  குறிப்பாக காவல்துறை இயங்கும் விதம் அவர்களின் இயந்திரத்தனமான மிருகத்தனத்தை உறுதி செய்கிறது.

அரசியல்வாதிகளை விடவும் அதிகார வர்க்கம் எத்தனை பலம் வாய்ந்தது என்கிற நடைமுறை இந்த நூலில் நுண்விவரங்களுடன் பதிவாகியிருக்கிறது. அதே சமயத்தில் அப்போதைய ஆளுங்கட்சியின் நோக்கத்தை திருப்தி செய்வதற்காக எந்த வித சர்க்கஸ் வித்தைகளையும் செய்ய இவர்கள் தயாராகவும் இருக்கிறார்கள் என்கிற முரணும் பதிவாகியுள்ளது. ஆட்சி மாறியவுடன் உடனே பச்சோந்திகளாக மாறவும் இவர்கள் தயங்குவதில்லை.

இவர்கள் கற்ற கல்வி, பெற்ற அனுபவம் எல்லாம் குற்றங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் எப்படி மூடி மறைத்து திறமையாக செய்யலாம் என்பதற்கே பயன்படுகிறது. அரசியல்வாதிகளையாவது ஐந்து வருடத்தில் துரத்தி விடலாம். ஆனால் ஓய்வு பெறும் வரை இவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும் சுயஆதாயங்களுக்காக செய்யும் அநீதிகளையும் கட்டுப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. 

() () () 


ஆனால் இருளே நிறைந்திருக்கும் பிரதேசத்தில் நம்பிக்கையின் வெளிச்சம் இல்லாமல் போகாது. நூலாசிரியர் முதற்கொண்டு அவரது அலுவலகத்தில் பணிபுரியும் சில நல்ல மனிதர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள் போன்றோரின் துணையுடன்தான் தன் மீது சுமத்தப்பட்டிருந்த முள்கீரிடத்தை ஒருவாறாக இவர் கழற்ற முடிகிறது. ஆனால் அது எத்தனை எளிதான பாதையாக இல்லை. சங்கரின் குடும்பமே வழக்கு விசாரணையால் அலைக்கழிக்கப்படுகிறது. உதவி செய்த நண்பர்கள் மிரட்டலுக்கும் நெருக்கடிக்கும் ஆளாகிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ரமணா திரைப்படத்தில் ஒரு விஷயம் வரும். ஊழலும் மோசடியும் நிறைந்திருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் நேர்மையாகவும் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டும் இயங்கும் ஒன்றிரண்டு நபர்களாவது இல்லாமல் போக மாட்டார்கள். அப்படியொரு மனிதராகவே சங்கர் காட்சி தருகிறார். அவருக்கு உதவி செய்யும் நண்பர்களும் தெரிகிறார்கள். அரிய விதிவிலக்குகள்.

இத்தனை கசப்பான அனுபவங்களுக்கு ஆளாகி மீண்ட சங்கர் செய்த குற்றம்தான் என்ன? அரசு இயந்திரத்தில் நிகழும் அநீதிகளின் முக்கியமானதொரு  துளியை மட்டும் வெளிப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் ஒட்டு மொத்த இயந்திரமே இவர் மீது மூர்க்கமாக பாய்ந்து இவருடைய வாயை அடைக்க, சாம, தான, பேத, தண்டம் என்று அனைத்து வழிகளையும் முயல்கிறது. ஏனெனில் அது பெரிய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தொடர்பான ஒரு கண்ணியாக இருக்கிறது.

சங்கர் எதிர்கொண்ட அனுபவங்களை வாசிக்கும் போது ஒரு சராசரி நபராக எனக்குள் அச்சமே பரவியது. சமூகக் கோபத்தில் ஃபேஸ்புக்கில் எதையாவது எழுதி வைத்திருப்பேனோ என்பது போன்ற திகிலான எண்ணங்கள் உருவாகின. ஆனால் அதே சமயத்தில் சமூக அநீதிகளை எதிர்ப்பதற்கான ஒரு துளி செயலையாவது செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தருகிறது.

காவல் துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்த காரணத்தினால் அது சார்ந்த நடைமுறை அனுபவங்கள், சட்டவிதிகளின் அடிப்படைகள் போன்வற்றின் சிலவற்றையாவது சங்கர் அறிந்துள்ளார். எனவே அவற்றின் துணை கொண்டு எதிர்கொள்ள சங்கரால் இயன்றிருக்கிறது. ஆனால் இவை எதுவுமே இல்லாத ஒரு சாமானியன் என்ன செய்வான்? எளிய குற்றங்களைச் செய்து விட்டு வறுமையின் காரணமாக பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவே பலர் சிறையில் இருக்கும் அவலத்தையும் சங்கர் பதிவு செய்துள்ளார்.

சிறை என்பது ஒரு தனிப்பட்ட அரசாங்கமாகவே இயங்குகிறது. லஞ்சம்தான் அதன் ஆதார இயங்குசக்தி. பல வருடங்களாகவே நீடிக்கும் இந்த நிலைமை அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் நீதித்துறைக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர இவற்றை கறாராக மாற்றியமைக்க ஏன் எவருமே நடவடிக்கையும் முயற்சியும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பல்வேறு விதமான ஒழுங்கீனங்களுடன் இயங்குவதுதான் ‘சிஸ்டம்’ என்பதை பலரும் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டார்களா?

() () () 



இந்த நூலை நிச்சயம் வாசிக்க வேண்டுமென்று அனைவருக்கும் பரிந்துரைப்பேன். ஒட்டுமொத்த அரசுத் துறையே ஊழலிலும் மோசடியிலும் அதிகாரதுஷ்பிரயோகத்திலும் புரையோடிப் போயிருக்கும் அவலத்தின் ஒரு துளி சித்தரித்தை இந்த நூல் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பெயர்கள் அப்படியே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒளிவும் மறைவும் இல்லை. குறிப்பாக அரசியல் கட்சித் தலைவர்களை தங்களின் ஆதர்சங்களாக கருதிக் கொண்டிருக்கும் அப்பாவி தொண்டர்கள், விசுவாசிகள் படித்த புத்திசாலிகள் போன்றோர் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும். அவர்கள் அறிந்திருக்கும் ஆளுமைகளின் நேர்மறையான வெளிச்சத்திற்குப் பின்னால் இருளும் கொடூரமும் நிறைந்திருக்கும் உலகு நிறைந்திருக்கிறது என்பதை நிச்சயம் அறிய வேண்டும்.

ஒருவர் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் தன் மீதும் தன்னைச் சார்ந்தவர்களின் மீதும் உள்ளவர்களின் குற்ற வழக்குகளையும் விசாரணைகளும் குழி தோண்டிப் புதைப்பதற்கான காரியங்களை விரைவாக நிறைவேற்றுகிறார். அதே சமயத்தில் தனது எதிரிகளின் மீதான வழக்கு முகாந்திரங்கள், அவற்றிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதல் போன்றவற்றி முழு மூச்சாக ஈடுபடுகிறார். அரசு இயந்திரம் பெரும்பாலும் இதற்கு துணை போக வேண்டியிருக்கிறது. எதிர் தரப்பில் இருந்தவர் ஆட்சிக்கு வந்ததும் அவரும் இதையே செய்கிறார். இப்படியொரு விஷச்சுழற்சியில் தேசம் பிடிபட்டிருக்கிறது. இதை எதிர்ப்பவர்கள் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்படுகிறார்கள். சங்கரின் அனுபவங்களும் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.

சங்கரின் துணிச்சலுக்காகவும் நேர்மைக்கும் அவருக்குள் இயங்கும் ஆதாரமான அறவுணர்விற்காகவும் அவரைப் பாராட்ட விரும்புகிறேன். சராசரி நபர்களின் பிரதிநிதியாக அவரை மகிழ்ச்சியுடன் அரவணைக்க விரும்புகிறேன். “சங்கர் யார் தெரியுமா, அவருடைய பின்னணி, நோக்கம் தெரியுமா?” என்பது போல் சிலர் ஐயம் எழுப்பக்கூடும். ஆனால் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் சமூக நடப்புகளையே பிரதிபலிக்கின்றன. கற்பனையாக எதுவும் எழுதப்படவில்லை. அந்த ஆதார உணர்வும் அறமும் இருப்பதை உணர முடிகிறது.  







suresh kannan