Monday, December 29, 2014

கத்தி - போலி ஆயுதத்தின் வெற்று இரைச்சல்



உலகமயமாக்க காலகட்டத்திற்குப் பிறகு இங்கு சந்தைப் படுத்துதலின் தந்திரங்களும் நுட்பங்களும் இன்னமும் கூர்மை பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களை தாழ்வுணர்வில் அமிழ்த்தியும் பொறாமைப்பட வைத்தும் நெகிழ வைத்தும் உணர்ச்சிவசப்பட வைத்தும் ஆசையை காட்டியும் வணிக வெற்றியைப் பெறும் நுகர்வுக் கலாச்சார உத்திகள் அதன் உச்சத்தை அடைந்துள்ளன. அடித்தட்டு மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள், முதலாளித்துவமும் அதிகார வர்க்கமும் ஆதாய அரசியலும் அச்சமூகத்தின் மீது நிகழ்த்தும் கூட்டு வன்கலவிகள், சாதியக் கொடுமைகள், உழைப்புச் சுரண்டல்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதற்கும் கூட சந்தை மதிப்பும் வணிக ஆதாயமும் உள்ளன. தமிழ் சினிமா இந்த கச்சாப் பொருளை நுட்பமாக கைப்பற்றியே பல ஆண்டுகள் ஆகி விட்டது.

சந்தைப்படுத்துவதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் ஒரு முக்கியமான விஷயம், ஒரு வர்த்தக்குறியின் படிமத்தை வலுவானதாகவும் நிலையானதாகவும் நம்பகத்தன்மையுடையவதாகவும நிறுவுவதும் பரப்புவதும். அறிந்தோ அறியாமலோ இந்த விஷயத்தை தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் அவரது பயணத்தின் துவக்கத்திலிருந்தே மிகத் திறமையாக செயல்படுத்தினார். தன்னை ஏழைகளின் அவதார புருஷராகவும் பெண்களின் பாதுகாவலராகவும் எவ்வித குணக்கேடுகளும் அல்லாத கனவானாகவும் திரையில் சித்தரித்துக் கொண்டதை உண்மை என்றே மக்கள் நம்பினார்கள். இதன் மூலம் அதிகாரத்தையும் கைப்பற்றி தன்னுடைய பிம்பத்தை பெரும்பாலும் எவ்வித சேதங்களும் அல்லாமல் கடைசி வரையிலும் பாதுகாத்துக் கொள்ள அவரால் முடிந்தது. சினிமாவிற்கும் அரசியலுக்குமான இந்தப் பாலத்தில் வெற்றிகரமான பயணத்தை நிகழ்த்தின அவரின் உதாரணத்தை குறுகிய கால பகற்கனவுகளுடன் பின்பற்ற விரும்பிய பல நடிகர்கள் பாலத்தில் தடுக்கி படுகுழியில் விழுந்த உதாரணங்களையும் பார்க்கிறோம்.

இச்சமூகத்தின் பெரும்பான்மையான சதவீதம் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களைக் கொண்டிருப்பதால் தங்களின் வாடிக்கையாளர்களின் சராசரி மனநிலையை  திருப்திப்படுத்தவும் சுகமாக சொறிந்து தருவதற்கு ஏற்றபடிதான்  பெரும்பாலான தமிழ் சினிமாக்களின் கதையுருவாக்கங்களும் காட்சிகளும் அமைந்துள்ளன. சாலையில் நொண்டிக் கொண்டே வரும் ஒரு ஏழைப் பெண்ணை காரில் வரும் பணக்கார இளைஞன் அகம்பாவத்தோடு இடித்து தள்ளி விட்டு திமிராகப் பேசுவதையும் அங்கு வரும் நாயகன் பணக்கார இளைஞனை தண்டித்து ஏழைப் பெண்ணைக் காப்பாற்றும் காட்சிகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள், திமிர் பிடித்தவர்கள், சமூகக் கேடர்கள் எனும் பொதுமனநிலையின் பிம்பத்தை தமிழ் சினிமாவும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எல்லா சமூகத்திலும் எல்லா குணாதிசயங்களுடன் கூடிய கலவையில்தான் மனிதர்கள் இருப்பார்கள் என்கிற யதார்த்த உண்மையை மறைக்கிறது. ஏழைகள் நல்லவர்கள், பணக்காரர்கள் கெட்டவர்கள் என்கிற எளிமையான சூத்திரத்தை தொடர்ந்து நிறுவுகிறது. ஆனால் வர்க்க ரீதியாக கீழே இருப்பவர்கள் ஒரு புறம் பணக்காரர்களை பொறாமையுடன் திட்டிக் கொண்டே ஆனால் அடைய விரும்பும் இடம் எதுவென்று பார்த்தால் அது பணக்காரர்களின் இடமாகத்தான் இருக்கிறது. புரிந்து கொள்ளக்கூடிய மிக இயல்பான முரண்தான் இது.

அடித்தட்டு சமூகத்தை சேர்ந்த நாயகன் எதிர்ப்பதற்கு உயர்தட்டு சமூகத்தை சேர்ந்த ஒரு வில்லன் வேண்டும். திமிர்பிடித்த பண்ணையார்களை எதிர்க்கும்  விவசாயி எம்.ஜி.ஆர் காலம் தொட்டே இந்த வடிவம் மாறவில்லை. இந்த 'வில்லன்' வடிவம் 'கார்ப்பரேட் கம்பெனி அதிபர்' என்கிற ஒற்றைத்தன்மை கொண்டதாக இருப்பதின் மூலம் தமிழ் சினிமாவின் வழக்கமான கதையாடலில் இருந்து இம்மியும் பிசகாமல் பயணிக்கிறது, கத்தி திரைப்படம்.

வெகுஜன கதையாடலில் 'சமூகப் பிரச்சினைகளை' பற்றி உரையாடுவதாக பாவனை செய்யும்  இந்த வடிவத்தில் மிகுபுனைவுத் தன்மையைக் கூட்டி நவீன பார்வையாளர்களுக்கு தன்னுடைய திரைப்படத்தை ஒரு கவர்ச்சிகரமான பொட்டலமாக தரும் பாணியை உருவாக்கி அதை வணிகரீதியாக வெற்றிகரமாக்கினவர் ஷங்கர். ஒரு வழக்கமான வெகுஜன திரைப்படத்தின் வார்ப்புருவை விட்டு விலகாமல் ஆனால் சமூகத்தின் முக்கியமான பிரச்சினை ஒன்றை தீவிரமான தொனியில் விவாதிப்பதாக பாவனை செய்யும் திரைப்படங்கள் இவை. முருகதாஸும் ஷங்கரின் நீட்சியாகத்தான் திகழ்கிறார் என்பதை அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் உணர்த்துகின்றன.  உண்மையில் கீழ்தரமான மசாலா திரைப்படங்களை விட 'சமூகப் பிரச்சினையை உரையாடுவதான' மாயையை ஏற்படுத்தும் இந்த அதிநவீன மசாலாக்கள் ஆபத்தானவை.

ஒரு சமூகத்தின் பொதுமனம் சமகாலத்தில் நிகழும் ஊழல்களையும்  சமூகப் பிரச்சினைகளின் ஊற்றுக் கண்களையும் மெல்ல அவதானித்தபடியே இருக்கிறது. இதன் காரணங்கள் அச்சமூகத்தின் ஆழ்மனங்களில் மெல்ல மெல்ல படிந்த படியே இருக்கின்றன. அதிகாரத்தை எதிர்த்து உரையாட முடியாத இயலாமையின் காரணமாக இந்த அழுத்தங்கள் அடுக்கடுக்காக உள்ளுற உறைந்தபடியே இருக்கின்றன. ஏதாவது ஒரு வலுவான புரட்சிப்புயலின் ஒலியால் கச்சிதமாக தூண்டப்பட்டால் தொகுக்கப்பட்ட இந்த அழுத்தங்கள் இணைந்து ஒரே கணத்தில் வெடித்து விடும் நிலை ஏற்படலாம். அதிகாரத்தை தூக்கியெறிந்த மக்கள் புரட்சியெல்லாம் அப்படித்தான் உருவானதை சர்வதேச வரலாற்று முன்னுதாரணங்களோடு அறிய முடியும். ஆனால் துரதிர்ஷ்டமாக நம் சூழலில் அவ்வாறான முன்னுதாரணங்கள் பெரிதாக இல்லையென்பதால் தேர்தல் காலங்களில் மாத்திரமே ஒரு மெளன கோபமாக இந்த அழுத்தங்கள் வெளிப்படுகின்றன . 'என்ன அநியாயம் சார்?' என்று பேருந்துப் பயணங்களின் போது நிகழும் அன்றாட உரையாடல்களில் மெல்ல மெல்ல கசிகின்றன.

சமூகப்பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதாக பாவனை செய்யும் இது போன்ற திரைப்படங்களும் அந்த அழுத்தங்களை விடுவிக்கும் பணியைத்தான் செய்கின்றன. கொதிநிலையில் இருக்கும் ஒரு குக்கரின் மூடியைத் திறந்து விடுவது போல. தம்முடைய மனதின் கோபங்களுக்கான வடிகால்களை திரையில் சந்திக்கும் பார்வையாளன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த அழுத்தங்களிலிருந்து சற்று விடுபடுகிறான். பிரச்சினையின் குவிமையத்தை நோக்கி அவன் கவனம் நகர்வதை தடுத்து போதைப் பொருளிலிருந்து கிடைக்கும் தற்காலிக நிவாரணம் போன்றதொரு நிலையை இம்மாதிரியான திரைப்படங்கள் தருகின்றன. ஒரு சமூகத்தில் இம்மாதிரியான போதை விஷயங்கள்தான் மக்களை புரட்சியைச் சிந்திக்காத மந்தநிலையை ஏற்படுத்தி அதிகார சக்திகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவாக இயங்குகின்றன.

()

விஜய் திரைப்படங்களின் வழக்கமான வார்ப்புருவோடுதான் இயங்குகிறது கத்தி. ஆனால் கூடுதலாக விவசாயிகளின் பிரச்சினையைப் பற்றி உரையாடுவதான பாவனையைக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வது பற்றியும் அவர்களின் கடன்சுமைகள் பற்றியும் நாயகன் ஐந்து நிமிடம் ஆவேசமாக உரையாற்றுவதோடு இந்தக் காட்சி நகர்ந்து விடுகிறது. மீதமெல்லாம் அவனின் சாகசங்களும் கும்மாளங்களும்தான்.  விவசாயிகளின் இந்தப் பிரச்சினைக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் அதிபரை வில்லனாக்குவதன் மூலம்தான் படம் இயங்குகிறது. இதற்குக் காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் மாத்திரம்தானா?

தேசிய குற்ற ஆவண காப்பகம்  (National Crime Records Bureau) 2013ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரத்தி்ன்படி 1995 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தொன்னூறுகளில் திடீரென்று அதிகரிப்பதற்கு துவக்கப்புள்ளியாய் அமைந்தது விதர்பாவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைகள்.  அரசின் தாராளமயமாக்க பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் அப்போது உள்ளே நுழைந்தன. மரபணு மாற்ற விதைகள் மூலம் அதிக உற்பத்தி பெறலாம் என்று ஆசை காட்டி பாரம்பரிய நிலங்களின் வளத்தை அழித்து காப்புரிமை பெற்ற விதைகளை வாங்க வேண்டியதின் மூலம் விவசாயிகள் மேலும் கடன் வாங்கி பொருளாதார நிலையில் நசிந்து நெருக்கடியும் கடன்சுமையும் தாங்காமல் அவர்களை தற்கொலை செய்து கொள்ள வைத்தன. இன்னொருபுறம் அவர்களின் விளைநிலங்களை ஆசைகாட்டியும் மிரட்டியும் கைப்பற்றி தங்களின் தொழிற்சாலைகளுக்காக பயன்படுத்திக் கொண்டன. நாட்டின் இயற்கை வளங்களை திட்டமிட்டு சுரண்டின. இதை முறைப்படுத்தி தடுக்க வேண்டிய அரசும் அதிகார வர்க்கமும் காவல்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளாக நின்றதில் நிர்க்கதியான நிலையை விவசாயிகள் அடைந்தனர். விவசாயக் கடன்களுக்காக செய்யப்பட்ட தள்ளுபடிகளும் உண்மையான பயனாளிகளைச் சென்றடையாமல் இடைத்தரகர்களுக்கும் முதலாளிகளுக்குமே சென்றது. தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான நியாயமான முறையிலான லாபத்தைப் பெற முடியாமல் இடையில் நிற்கும் வணிகர்கள் கொள்ளையடித்தனர். வறுமை தாங்காமல் நிலங்களை விற்று விவசாயிகள் என்கிற நிலையிலிருந்து விவசாயத் தொழிலாளிகளாக மாறினார்கள். இன்னும் பலர் விவசாயத்தைக் கைவிட்டு  நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து கூலித் தொழிலாளிகளாக ஆனார்கள். ஆக.. அரசின் தவறான விவசாயக் கொள்கைகள், கட்டுப்படுத்த முடியாத இடைத்தரகர்களின் கொள்ளை லாபம், அதை முறைப்படுத்த தவறிய அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகளின் ஊழல்களும் அலட்சியமும், இதற்குப் பின்னணியில் நிழலாக இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிவற்றின் கூட்டுக்கலவிக்குப் பலியானதுதான் விவசாயிகளின் வீழ்ச்சி.

பன்முக பரிமாணங்கள் கொண்ட இந்த விவசாயிகள் பிரச்சினையை ஒரு கார்ப்பரேட் வில்லனிடம் சண்டையிட்டு ஜெயிப்பதின் மூலம் தீர்த்துவிட முடியும் என்கிற எளிய தீர்வின் மூலம் இதை மலினப்படுத்தியுள்ளது கத்தி திரைப்படம். வெகுஜன கதையாடலின் மூலம் ஒரு சமூகப் பிரச்சினையை அணுகுவது தவறா, வெறுமனே மசாலா திரைப்படத்தை விட அதன் இடையே ஒரு சமூகப்பிரச்சினையை உரையாடுவது மேலானதுதானே என்கிற கேள்வி எழலாம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஒரு வழமையான வணிகதிரைப்படத்தை விட சமூகப் பிரச்சினையை தீவிரமாக உரையாடுவதாக செய்யும் பாவனை மூலம் அதை நீர்த்துப் போகவும் திசை திருப்பவும் செய்யும் இம்மாதிரியான திரைப்படங்கள் தவறானவை. மேலும் இந்த இயக்குநர்களுக்கு சமூகப் பிரச்சனை என்பது அவர்களது கதையாடலுக்கான ஒரு கச்சாப் பொருள், அவ்வளவே. விவசாயிகளின் பிரச்சினையைப் பேசுகிறேன் பேர்வழி என்று இடையில் 'உம்மா' பாடலை சொருகுவது என்பது அப்பட்டமான வணிகத்தனம். மேலும் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பிற்கு பின் நிற்பது பன்னாட்டு நிறுவனங்கள்தான் என்பதும் ஒரு சுவாரசியமான முரண்நகை. இவைகளிலிருந்தே இம்மாதிரியான திரைப்படங்கள் உருவாக்கப்படும் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

சில வருடங்களுக்கு முன்பு கோக் விளம்பரத்தில் நடித்து பொருளீட்டிய விஜய், இதில் தமிழகத்தின் நீர்வளத்தை கொள்ளையடிக்கும் அதே குளிர்பான நிறுவனத்தைப் பற்றி ஆவேசமாக வசனம் பேசும் இரட்டை நிலையைக் கண்டித்து சில விமர்சன குரல்கள் எழுவது நியாயமே. எல்லாமே தொழில்சார்ந்த நடிப்புதானே என்று இதை எளிதில் கடந்து போக முடியாது. சமூகத்தில் ஒரு கருத்தை பிரபலப்படுத்துவதிலும் அதன் மூலம் மக்களிடம் செல்வாக்கை ஏற்படுத்துவதிலும் நடிகர்களின் குரல்களுக்கு பிரத்யேகமான மதிப்புண்டு. அவர்கள் செயல்படுத்தும் தவறான பிரதிநிதித்துவம் சமூகத்தில் பலவகையான பாதிப்புகளை உருவாக்கலாம். இதை உணரும் தார்மீக பொறுப்பும் பிரக்ஞையும் ஒவ்வொரு பிரதான நடிகருக்கும் இருக்க வேண்டும். கமல், ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் எந்தவொரு வணிகப் பொருளிற்காகவும் விளம்பரங்களில் தோன்றாமலிருப்பதின் மூலம் அதற்க பொதுவில் ஆதரவளிக்காமலும் அதன் அடையாளங்களாக மாறாமல் இருக்கும் காரணத்திற்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

2010-ல் Peepli Live என்கிற  இந்தி நகைச்சுவை திரைப்படம் வந்தது. முக்ய பிரதேஷ் எனும் கற்பனையான பிரதேசத்தின் 'பீப்லி' கிராமத்தைச்  சேர்ந்த வறுமையில் வாடும் விவசாய சகோதரர்கள் நத்தா, புதியா. வங்கிக் கடனை அடைக்க முடியாமல் தங்களின் விவசாய நிலம் பறிபோகும் சூழ்நிலையில் உள்ளூர் அரசியல்வாதியிடம் உதவி கேட்டுச் செல்ல, அவனுடைய உதவியாளன் அவர்களைத் தவிர்க்கும் பொருட்டு "தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறது' என்ற பொய் செய்தியை போகிற போக்கில் சொலகிறான்.உடனே அப்பாவியான தம்பி  நத்தா 'தற்கொலை செய்வதென முடிவு எடுக்கிறான். இதை யதேச்சையாக கேள்விப்படும் செய்தி நிறுவனங்கள் அந்தக் கிராமத்தை புயலென சூழ்ந்துகொள்ள தேசம் முழுக்க அந்த தற்கொலை செய்தி பரவுகிறது. விவசாயிகளின் தற்கொலை செய்து கொள்வதற்கான பின்புலத்தை அங்கத நகைச்சுவையாக அணுகினாலும் எங்கும் விலகாமல் அதை மையப்படுத்தியே இத்திரைப்படம் அமைந்திருந்தது. நடிகர் அமீர்கான் இதை தயாரித்திருந்தார். இந்த நகைச்சுவைப் படைப்பு முன்னெடுத்திருந்த தீவிரத் தொனியைக் கூட கத்தி திரைப்படம் கொண்டிருக்கவில்லை என்பதுதான் சோகம். ஆனால் இவை போன்றவைதான் நம் சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களாக இங்கு அறியப்படுவதுதான் மிகப் பெரிய அவல நகைச்சுவை.

suresh kannan

Sunday, December 28, 2014

பெருமாள் முருகனும் போலி கலாசார காவலர்களும்




சில நாட்களுக்கு முன் பெருமாள்முருகனின் 'மாதொரு பாகன்' புதினத்தை வாசித்தவுடன் முதலில் தோன்றியது இதுதான்.

'இந்த நூலில் உள்ள ஒரு விவகாரமான சமாச்சாரம் ஏன் போலி கலாசார காவலர்களின் கண்களில் இன்னமும் ஏன் படவில்லை?' அப்படியாவது எழுத்தாளரின் மீதும் அவரின் படைப்புகளின் மீதும் மேலதிக கவனம் குவியாதா என்கிற நப்பாசைதான் அதற்கு காரணம். நம்முடைய கலாசார தொன்மங்களின் பண்பாட்டு வழக்கங்களின் சொச்சங்களை  திணிக்கப்பட்டதின் மூலம் அறிகிறோம் அல்லது கண்மூடித்தனமாக பின்பற்றுகிறோமே ஒழிய அதை ஆய்வு நோக்கில் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக எவ்வித ஆர்வத்தையும் காட்டாத அதில் ஈடுபடாத ஓர் உழைப்பற்ற, சொரணையற்ற சமூகமாகத்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். மிகுந்த உழைப்பிற்கும் ஆர்வத்திற்கு பின்னும் எழுதப்படும் ஆய்வுகள் அதன் மீது அமைந்த புதினங்களும் கவனிக்கப்படாமலேயே மறைந்து போகின்றன. ஆய்வாளர்களுக்கு சோர்வளிக்கின்றன.

ஆனால் இவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தங்களின் அடிப்படைவாத கண்ணாடிகளின் மூலமே மேம்போக்காக தெரிந்து கொண்டு அவைகளை சர்ச்சையாக்கும் எதிர்க்கும் கும்பலும் இருக்கிறது. அப்படியாக திருச்செங்கோட்டில் இந்த நாவலை எரித்தும் தடைசெய்யக் கோரியும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் தொடர்பான செய்தியை வாசித்தேன். சிலர் எழுத்தாளரின் வீடு தேடி சென்று மிரட்டியதாகவும் தெரிகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் தம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக காவல்துறையிடம் மனுவொன்றையும் அளித்திருக்கிறார்.

பெருமாள் முருகன் கொங்கு சமூகம் சார்ந்து பல ஆய்வுகளையும் அதன் கலாசாரக் கூறுகள் விரவிக் கிடக்கும் புதினங்களையும் எழுதியிருக்கும் பண்பட்ட எழுத்தாளர். கொங்கு வட்டாரச் சொல்லகராதி ஒன்றை தொகுத்தளித்திருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கல்லூரியல் பேராசிரியராக பணியாற்றுகிறவர். கண்டனம் தெரிவித்திருக்கும் கும்பல் இவரின் இந்த அரிய பணிகளுக்காக இதற்கு முன் ஒருமுறையாவது பாராட்ட முன்வந்திருக்குமா என்று தெரியாது. அதைச் செய்ய வேண்டுமென்றால் எழுத்தாளர் எழுதிய நூல்களை எல்லாம் படித்திருக்க வேண்டும். அது கடினமான விஷயம். அதை விடவும் ஒரு நூலின் ஒரு பகுதியை மாத்திரம் தவறாக வாசித்து விட்டு அல்லது வேண்டுமென்றே தவறாக சித்தரித்து கும்பலில் கத்துவதும் நூலை எரிப்பதும் அதன் மூலம் அரசியல் செய்வதும் எளிதான விஷயம். இம்மாதிரி செய்வதில் எந்த மதத்தின் அடிப்படைவாதிகளின் முட்டாள்தனங்களும் விதிவிலக்கல்ல. சாத்தானின் வேதமும் லஜ்ஜாவும் டாவின்சிகோடும் ஆழிசூழ்உலகும் உதாரணங்கள்.

பெருமாள் முருகனின் நாவலில் அப்படி என்னதான் பிரச்சினை? ஆங்கிலேய ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தின் கொங்கு சமூக பின்புலத்தில் இயங்கும் இந்த நாவலில் குழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதியினரின் சிக்கல்கள் மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுகின்றன. இவ்வாறு குழந்தைப் பேறு இல்லாத பெண்களின் குறையைப் போக்குவதற்காக அச்சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகளிலேயே ஒரு தீர்வு உள்ளது. அதன்படி ஒரு திருவிழாவின் 13 வது நாளில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்தவொரு ஆணும் பெண்ணும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் பாலுறவு கொள்ள முடியும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் சாமி தந்த பிள்ளைகள் என்பது ஐதீகம். இதில் பங்கேற்கும் ஆண்கள் சாமிகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

இந்த விஷயத்தை தமது நாவலில் மிகுந்த கலையுணர்வுடனும் அழகியலுடனும் மிக ஜாக்கிரதையாக கையாண்டுள்ளார் எழுத்தாளர் பெருமாள்முருகன். நாவலை பரபரப்பாக்குவதற்காக ஆபாசமாக கையாளவில்லை என்பது நாவலை வாசிப்பவர்கள் உணர முடியும். நாவலில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பகுதியை எழுத்தாளர் ஏதோ கற்பனை செய்து எழுதவில்லை. தாம் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிப்பட்ட விஷயத்தை வைத்தே எழுதியுள்ளார். மேலும் எழுத்தாளர் இது போன்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதன் மூலம் கவனஈர்ப்பு பெறும் மலினமான உத்திகளை கையாள்வதில் நம்பிக்கை கொண்டவரில்லை என்பதை முன்னுரையின் இந்தப் பகுதியை வாசித்தாலே விளங்கும்.
என் நாவல்கள் பற்றிய பரபரப்புகளை உருவாக்குவதில் எப்போதுமே நான் முனைவதில்லை. முந்தைய என் நாவல்கள் மிக மெதுவாகவே வாசகர்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. 'கங்கணம்' வெளியாகி மூன்றாண்டுகளுக்குப் பின் இப்போதுதான் பரவலாக கவனம் பெறுகின்றது. எனக்கும் ஒன்றும் அவசரமில்லை. இந்நாவல் தொடர்பாகவும் அதே மனநிலையில்தான் இருக்கின்றேன்.


வருகிற புத்தக கண்காட்சியில் இந்த நூலின் விற்பனையைப் பெருக்குவதற்காகத்தான் இந்த சர்ச்சை ஊதிப்பெருக்கப்படுகிறது என்று பெருமாள் முருகனின் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்ட முயல்கிறவர்கள் இந்த நூலையோ அல்லது எழுத்தாளரின் முந்தைய பணிகளின் மூலமோ அவரைப் புரிந்து கொள்ள முயல்வது நல்லது. கலைப் படைப்புகளின் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் இம்மாதிரியான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியன. ஒரு பத்திருபது பேர் கொண்ட அமைப்பு இணைந்து இம்மாதிரியான ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தி விடுவதின் மூலம் எத்தனை பதற்றத்தையும் கவனஈர்ப்பையும் செய்து விட முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களால் ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை தடுத்து விட முடிகிறது, சென்சார் ஆனதிற்குப் பின்னரும் அதை தாங்கள் பார்த்தபின்தான் அனுமதியளிக்க வேண்டும் என்று சாதிக்க முடிகிறது, அதன் பின் தங்களின் பேரங்களையும் அரசியல் ஆதாய லாபங்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது என்பது போன்ற செயல்களெல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள்தான். இம்மாதிரியான போலியான நபர்களின் போராட்டங்கள் குறைந்த பட்சம் கூட வெற்றி பெறுவதை அனுமதிக்கவே கூடாது. இம்மாதிரியான நபர்கள் செய்யும் மலினமான போராட்டங்களின் மூலம் இவர்களின் ஒட்டுமொத்த அமைப்பையும் பொதுச்சமூகம் கேலியாகத்தான் பார்க்கும் என்கிற எளிய உண்மையையாவது இவர்கள் உணர்வது நல்லது.

திருவள்ளுவரின் காமத்துப் பாடல்களிலிருந்து சங்கப்பாடல்கள்,, ஆண்டாளின் ஏக்கங்களில் வழிந்த அற்புதப்பாடல்கள் என்று காமத்தைக் கொண்டாடின கலாசார தொடர்ச்சியின் சமூகம் நாம். ஆனால் அதையெல்லாம் இடையில் பாசாங்குகளால் மூடிவிட்டு தங்களை பண்பாட்டு காவலர்களாக சித்தரித்துக் கொண்டு ஒருபுறம் பாலியல் வறட்சியால் துன்புற்றுக் கொண்டு இருட்டுப் பிரதேசங்களில் பெண்களின் மீதான பாலியல் வன்முறை நிகழ்த்திக் கொண்டு எத்தனை போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

எழுத்தாளர் பெருமாள் முருகனின் மீது நிகழும் இந்த கருத்து மற்றும் பெளதீக ரீதியான தாக்குதல்களும் தரப்படும் மனஉளைச்சல்களும் அறிவுசார் சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். ஓரணியாக இணைந்து அவருக்கு ஆதரவு தர வேண்டும். மாதொருபாகன் நாவலின் முன்னுரையில் "இந்த ஆயவில் கிடைத்திருக்கும் தரவுகளை வைத்து விரிவானதொரு ஆய்வு நூல் எழுதவிருக்கும் திட்டத்தைப் பற்றி" எழுத்தாளர் தெரிவித்திருந்தார். ஆனால் இது போன்ற எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் அந்த முயற்சிகளை ஒருவேளை சோர்வடையச் செய்ய வைக்கக்கூடும் ஆபத்துக்களையும் நாம் கவனிக்க வேண்டும். அதன் மூலம் ஏற்படும் கலை இழப்புகள் இச்சமூகத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்களிடம் நான் வேண்டிக் கொள்வது இதுதான். மாதொருபாகன் புதினத்தின் தொடர்ச்சியாக அதன் இரு வேறு பரிமாணத்தில் இரண்டு புதிய புதினங்களை பெருமாள்முருகன் எழுதியுள்ளதாக தெரிகிறது. வருகிற புத்தக கண்காட்சியில் அவை வெளியாகலாம். மாதொருபாகன் நுலோடு இணைத்து இந்த இருநூல்களையும் நண்பர்கள் வாங்கி வாசிக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம்தான் எழுத்தாளருக்கு ஆதரவு தருவதோடு இதன் எதிர்ப்பாளர்களுக்கு நாம் தரும் பதிலாகத்தான் அது அமையும்.

என்னுடைய இந்த வேண்டுகோளை பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.

(பின்குறிப்பு: இந்தியர்களின் இணையத் தேடல்கள்கள் தொடர்பாக நிகழ்ந்த ஒரு ஆய்வின் முடிவின் படி இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதன்மையிடத்தைப் பிடித்துள்ளவர் பார்ன் வீடியோக்களில் நடித்துள்ள தோழர் சன்னி லியோன். இந்த தேடலில் மதஅடிப்படைவாதிகளுக்கும் கலாசார காவலர்களுக்கும் பங்கிருக்காது என நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் மானஸ்தர்கள்).


suresh kannan

Monday, December 22, 2014

தமிழும் உலக சினிமாவும்




இந்தியாவில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பற்றின கட்டுரைகளில்  பொதுவாக எந்தெந்த இயக்குநர்கள் தொடர்ந்து உரையாடப்படுவார்கள் என்று ஒரு பட்டியலை சற்று Random ஆக யோசித்துப் பார்ப்போமா?  சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், கெளதம் கோஸ், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன்,பத்மராஜன், புட்டண்ணா கனகல், கிரிஷ் கர்னாட், கிரிஷ் காசரவல்லி போன்ற பெயா்களே மீண்டும் மீண்டும் அந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்படும். பிரதேச அரசியலை முன்வைப்பது எனது நோக்கமில்லையென்றாலும் இது போன்ற பட்டியல்களில் ஏன் தமிழ் சினிமாக்களைப் பற்றியோ அதன் இயக்குநர்களைப் பற்றியோ நடிகர்களைப் பற்றியோ இதர நுட்பக் கலைஞர்களைப் பற்றியோ பெரிதும் உரையாடப்படுவதில்லை? சர்வதேச தரத்திற்கு இணையான அளவில் தமிழில் படைப்பாளிகளோ அல்லது படைப்போ இல்லையா, அல்லது அரசியல் காரணமாக தமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்படுகிறதா? உலகப் புகழ் பெற்ற நடிகர்களுக்கு  இணையான திறமை கொண்டவர்கள் தமிழில் இல்லையா? சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

19-ம் நூற்றாண்டில் சினிமா என்கிற நுட்பம் மேற்குலகில் அதன் ஓரளவிற்கான வளர்ச்சி நிலையை அடைந்த சில ஆண்டுகளிலேயே தமிழிற்கும்  வந்து விட்டது. 1916-ல் முதல் மெளனப்படம் நடராஜ முதலியாரால் தமிழில் உருவாக்கப்பட்டு விட்டது. பிறகு புராணங்களை அடிப்படையாகக் கொண்ட  நாடகங்கள் அப்படியே செல்லுலாயிட் வடிவத்திற்கு மாறி காமிராக் கருவி அசைக்கப்படாமல் குறிப்பிட்ட இடத்திற்குள் நடிகர்களின் அசைவுகள் மாத்திரம் அப்படியே பதிவாக்கப்பட்டன. சினிமா நுட்பம் குறித்த அறிமுகமும் கற்றலும் அப்போது இங்கு பெரிதும் இல்லாத சூழலில் அது இயல்புதான். ஆனால் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டைக் கடந்த பிறகும் கூட அந்த நுட்பம் அதற்குரிய சாத்தியமான உள்ளடக்கத்துடன் தமிழ் சினிமாவில்  பயன்படுத்தப்படுகிறதா என்றால் ஒரு பெருமூச்சுடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. வசனங்கள் தொடர்ந்து இறைக்கப்படும் திரைக்கதைகளுடன் திரும்பத் திரும்ப மேடை நாடக பாணிகளே ஹை-டெக்  விரயங்களுடன் இங்கு உருவாக்கப்படுகின்றன.

புராண அலை சற்று ஓய்ந்தவுடன் சமூகக் கதைகளைப் பற்றிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. இவைகளிலிருந்து  வணிகரீதியாக ஒரு வெற்றிப்படத்திற்கான சூத்திரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த வடிவமைப்பிலேயே மசாலா சினிமாக்கள் தொடர்ந்து உதிர்ந்து கொண்டேயிருந்தன. அதாவது தமிழ் சினிமா என்பது பெரும்பாலும் அச்சமூகத்தின் கலாசார வெளிப்பாட்டு சாதனமாக, மக்களின் வாழ்வியலை யதார்த்தத்திற்கு நெருக்கமாக  பதிவு செய்யும் ஊடகமாக, அங்குள்ள அரசியலை அதன் பிரச்சினைகளை ஆவணமாக்கும் பிரதிகளாக அமையவேயில்லை. புறவடிவத்தில் அது தமிழ் சமூகத்தின் சாயல்களைக் கொண்டிருந்ததே ஒழிய பெரும்பாலான திரைப்படங்களின் நோக்கமும் மையமும் வணிகம் சார்ந்தும் பொழுதுபோக்கை சார்ந்தும் ஒருவகை போதைப் பொருட்களாக மாத்திரமே இருந்தன. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து விவாதங்களின் மூலம் 'செய்யப்பட்ட' கதைகள், பிறசினிமாக்களின் தழுவல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழல்கள், அசட்டுத்தனமான அழுகை மெலோடிராமாக்கள், திணிக்கப்பட்ட பாடல்கள் என்று  வணிக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பிரத்யேகமான ஃபேன்டசி உலகில் இயங்கின. எனவேதான் உலக சினிமா எனும் மதிப்பீட்டிலும் அளவுகோலிலும் ஒப்பிடப்படும் போது தமிழ் சினிமா என்பது ஒரு பிரதேசத்தின் மக்களின் யதார்த்தமான வாழ்வியலிலும் கலாசாரத்தில் இருந்தும் விலகி நின்று அசட்டுத்தனமான கற்பனாவாத உலகில் இயங்குவதால் பெரும்பாலும் கேலிக்குரியதாகவும்  உள்ளீடற்றதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

உண்மையில் உலக சினிமா என்கிற பதத்தை மிகக் கறாராகவும் தெளிவாகவும் வரையறை செய்ய முடியுமா, அல்லது அதுவொரு கற்பிதந்தானா?  தமிழ்ப்பிரதேசமும் உலகப்பந்தினுள் இருக்கும் போது  அங்கிருந்து உருவாகும் சினிமாக்கள் உலக சினிமா என்பதற்குள் வராதா? என்பது போன்ற கேள்விகள் எழலாம்.

உலகமெங்கும் வணிகநோக்கத்திற்காக மாத்திரமே உருவாக்கப்படும் சினிமாக்களைத் தவிர்த்து ஒரு மெல்லி்ய இணைகோடாக கலை சார்ந்து உருவாக்கப்படும் படைப்புகளும் கூடவே உருவாகின்றன. இவை அந்தந்த பிரதேசங்களின் கலாசாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றின் அசலான கூறுகளை நுட்பமாக பதிவு செய்கின்றன.அந்தப் பிரதேசத்திற்கு தொடர்பில்லாத பார்வையாளர்கள் முழுமையாக அணுகுவதற்கு  மொழி உள்ளிட்ட தடைகள் இருந்தாலும் அவை மானுட குலத்தின் ஆதாரமான பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது உலகத்திலுள்ள வேறு எந்தவொரு நுண்ணுணர்வு கொண்ட மனதினாலும் அந்த தடைகளைத் தாண்டி அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. திரைப்பட வரலாற்றில்  ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்கிய 'நியூவேவ்' திரைப்படங்களின் துவக்க கால இத்தாலிய படைப்பான 'பைசைக்கிள் தீவ்ஸ்''ஸில் தன்னுடைய அன்றாட வாழ்வாதாரத்திற்கு உபயோகப்படும் முக்கிய கருவியான சைக்கிளை இழந்து விட்டு தேடி அல்லாடும் ஒரு மனிதனின் துயரத்தையும் வறுமையையும் அந்தப் பிரதேசத்திற்கு தொடர்பேயில்லாத இன்னொரு சமூகத்தின் அடித்தட்டு மனிதனால் கலாசார தடைகளைத் தாண்டி எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவ்வகையான திரைப்படங்களின் மையம், அவை இயங்கும் விதம், உருவாக்கப்படும் பாணி, நோக்கம், வடிவம் ஆகியவை சார்ந்து தன்னிச்சையாக பல ஒற்றுமைகள் உண்டு. இந்த வகையில் அவற்றை உலக சினிமா என்ற வகைமையில் இணைக்க முடியும்.


***

தமிழ் சினிமாவிலும் சர்வதேச தரத்திற்கான படைப்பாளிகளும் நடிகர்களும் நுட்பக் கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அதற்கான தடயங்களை  அபூர்வமாக மலரும் சில நல்ல படைப்புகளில் காண முடியும். மகேந்திரன் உருவாக்கிய 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தின் உச்சக்காட்சியை சற்று யோசித்துப் பாருங்கள்.  எந்தவொரு சர்வதேச தரத்திலான சினிமாவுக்கும் சவால் விடக்கூடிய அளவிற்கு கலைத்தன்மையும் நுண்ணுணர்வுத்தன்மையும்  நுட்பமும் வாய்ந்தது அது. ஏறத்தாழ பெரும்பாலான நடுத்தரவர்க்கத்தினரின் கனவில் உள்ள 'சொந்த வீடு' எனும் லட்சியத்தையும் அது சுயநல அதிகாரத்தினால் சிதையும் துயரத்தையும் முன்வைத்த பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படம் எவ்வகையில் குறைந்தது? ஒரு பெண்ணின் அகவுலகு சார்ந்த உறவுச் சிக்கல்களை உளவியல் பார்வையில் தமிழ் சினிமாவில் அதற்கு முன்னும் பின்னும் இல்லாத அளவிலான, ஐரோப்பிய பாணியிலான திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக சிறப்புடன் உருவாக்கிய, சமீபத்தில் மறைந்து போன ருத்ரைய்யா (அவள் அப்படித்தான்) எந்த அளவிற்கு மற்ற உலக இயக்குநர்களை விட சாமான்யர்?, எம்.ஆர்.ராதா, பாலையா, சந்திரபாபு, நாகேஷ் .... என்று எந்தவொரு உலகப்புகழ் பெற்ற நடிகர்களின் திறமைக்கும் சளைக்காத திறமைசாலிகள்  நம்மிடமும் இருந்துள்ளார்கள். ஆனால் இவர்கள் பெரும்பாலும் தவறான சூழலுக்குள் சிக்கிக் கொண்ட சரியான நபர்கள் என்பதுதான் துரதிர்ஷ்டமானது. தமிழ் சினிமா எனும் காலியான சட்டிக்குள் சாத்தியமான அளவில் தங்களின் திறமைகளை அள்ளி ஊற்றி விரயமான அகப்பைகள்தான் இவர்கள்.

ஏனெனில் சினிமா என்கிற வலிமையான ஊடகத்தை அந்த நுட்பத்திற்குரிய சாத்தியங்களுடனோ, திரை மொழியுடனோ, ஒரு கலை சாதனமாகவோ அல்லது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி  உரையாடும் அரசியல் ஆயுதமாகவோ, தமிழ் சூழலின் பண்பாட்டை பதிவு செய்யும் ஆவணமாகவோ பயன்படுத்தும் பிரக்ஞையும் ரசனையும் கொண்ட சூழல் இங்கு மலரவே இல்லை. அபூர்வமாக சில விதிவிலக்குகள் உண்டுதான். ஆனால் அது ஒரு போக்காக மலராமல் போனது தமிழ் சினிமாவின் மிக துரதிர்ஷ்டமான நிலை. அந்த நிலைக்குப் போனதற்கு பல காரணங்கள் உண்டு.

ஓர் ஆளுமையை பீடத்தில் அமர்த்தி கண்மூடித்தனமாக வழிபடுவது என்பது தமிழ் சமூகத்தின் கூட்டு உளவியலுக்கு மிகவும் பிடித்தமானது. எனவே அது தமிழ் சினிமாவிலும் நீடித்தது இயல்பானது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எப்போதுமே இருபெரும் ஆளுமைகள் பிரதானமாக இருந்ததை அறிவோம். அதில் ஒருவர் எப்போதுமே சற்று மேலான நிலையில் இருப்பார். தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யூ சின்னப்பா ஒரு காலத்தை ஆண்டார்கள். இருவருமே அவர்களின் இசைத்திறமை காரணமாக புகழப்பட்டாலும் பாகவதர் தன்னுடைய தோற்றத்தின் கவர்ச்சி காரணமாக கூடுதல் புகழைப் பெற்றிருந்தார். எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆளுமையின் வளர்ச்சிக்கு மிக திட்டமிட்டு சினிமாவை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். தீய பழக்கங்கள் ஏதுமற்றவராக பெண்களின் பாதுகாவலராக ஏழைகளை அரவணைக்கும் அவதாரமாக பல விதங்களில் தன் சித்திரத்தை வெற்றிகரமாக நிறுவிக் கொண்டார். இதன் மூலம் இவரை விடவும் திறமையான சமகாலத்திய நடிகரான சிவாஜி கணேசன் அடைய முடியாத இடத்தை அடைந்து அதிகாரத்தை கைப்பற்றினார். பிறகு ரஜினிxகமல், விஜய்xஅஜித் என்பதாக இந்த வரிசை தொடர்கிறது.

எனவே தமிழ் சினிமா ஏறக்குறைய அதன் துவக்கத்திலிருந்தே கதாநாயகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரும்பாலும் ஆண்மைய கருத்தாக்கங்களை மையப்படுத்தும் கதைகளாகவும் காட்சிகளாகவும் அமைய முடிந்ததே ஒழிய அந்த வட்டத்தை தாண்டி இன்றும் கூட வர முடியவில்லை. தன்னை ஆராதிக்கும் முறையில் 'உருவாக்கப்பட்ட' கதை,  தன்னுடன் நடிக்கவிருக்கும் சக நடிகர்கள், இசையமைப்பாளர்கள்,இதர நுட்பக் கலைஞர்கள் என்று அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்களாக இந்த கதாநாயகர்கள் இருக்கும் அவலம் இருப்பதால் தமிழ் சினிமாவும் இவர்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் ஒரு திரைப்படம் என்பது அதன் இயக்குநரின் கட்டுப்பாட்டில் அனைத்தையும் அவர் தீர்மானிக்கும் நிலையயில் அல்லவா இருந்திருக்க வேண்டும்?. ஆனால் திரையிசையின் ஒரு மெட்டைக் கூட அதன் ஹீரோவி்ன ஒப்புதல் இன்றி பயன்படுத்தமுடியாத சூழலே இங்கு நிலவுகிறது. சினிமாவிலுள்ள மேலோட்டமான அறிவைக் கொண்டு ஆனால் அதன் எல்லாத் துறையிலும் முடிவுகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நாயகர்களே தக்கவைத்துக் கொண்டு இயக்குநர்கள் என்பவர்கள் அவர்களின் பலியாடுகளாக இருக்கும் போது எவ்வாறு சிறந்த திரைப்படங்கள் உருவாகும்?  இந்த நிலையை  ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்றவர்களால் சிறிதுதான் மாற்ற முடிந்தது, அவ்வளவே. எனில் எப்படி இங்கு உலக சினிமாக்கள் உருவாகும்?

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக அறியப்படுபவர் சிவாஜி கணேசன் என்பதும் தமிழ் சினிமா இயக்குநர்கள் அவரை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் உண்மைதான். என்றாலும் மிகையான நடிப்பை வழக்கமாக முன்வைப்பவர் என்று அவர் மீது விமர்சகர்கள் வைக்கும் புகாரிலும் உண்மையில்லாமல் இல்லை. அதைத் தவிர்த்து அவரால் இயல்பாகவும் நடிக்க இயலும் என்பதை 'மோட்டார் சுந்தரம் பிள்ளை, முதல் மரியாதை, தேவர் மகன்' போன்ற சில திரைப்படங்கள் நிரூபித்துள்ளன. சோ தன்னுடைய நேர்காணல்களில் வழக்கமாக நினைவுகூரும் சம்பவம் நினைவுக்கு வருகிறது. சோவும், சிவாஜியும் நடிக்கும் ஒரு படப்பிடிப்பு அது. ஒருவர் இறந்து விட்ட சோகம் தாங்காமல் சிவாஜி அழ வேண்டும். இது அவருடைய பிரத்யேகமான பிடித்த ஏரியா என்பதால் ரவுண்டு கட்டி அடிக்கிறார். காட்சி முடிந்ததும் படப்பிடிப்பில் உள்ளவர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டுகிறார்கள். சோ மாத்திரம் அமைதியாக இருக்கிறார். இதைக் கவனித்த சிவாஜி அவரை தனியாக அழைத்து "ஏன் என் நடிப்பு பிடிக்கவில்லையா?' என்று கேட்கிறார். "இல்லைண்ணே.. நீங்க நடிச்சது மிகையா இருந்தது போல பட்டது" என்று சோ பதிலளிக்கிறார். "சரி. இப்ப, பாரு இந்த சீனை வேற மாதிரி செய்யறேன்" என்று அதே காட்சியின் சூழலை அந்த தனியறையில் இயல்பாக நடித்துக் காட்டியிருக்கிறார். சோ -விற்கு மிக ஆச்சரியம். "ஆனா இந்த மாதிரி நடிச்சா இங்க ஒரு பய பார்க்க மாட்டான். இவங்களுக்கு இப்படித்தான் பிடிக்கும்" என்று தன் செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் சிவாஜி.

தெருக்கூத்து மரபிலிருந்து உருவான நாடக உலகிலிருந்து சினிமாவிற்கு வந்தவர் சிவாஜி கணேசன். ஒலிப்பெருக்கிகள் இல்லாத காலத்தில் கடைசி வரிசையில் உள்ள பார்வையாளனும் அசெளகரியம் கொள்ளாத படி உரத்த குரலிலும் மிகையான உடல் மொழியிலும் நடிக்க வேண்டிய அவசியம் அப்போதிருந்தது. ஆனால் சினிமாவின் நுட்பம் வேறு. அண்மைக்காட்சிகளை கேமிரா பதிவு செய்யக்கூடியதின் மூலம் ஒரு நுட்பமான முகபாவத்தைக் கூட பார்வையாளனால் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த சாத்தியத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் மிகையாக நடித்து 'அதுதான் சிறந்த நடிப்பு' என்பது போல தோற்றத்தை ஏற்படுத்தி அதற்குப் பின்னால் வருபவர்களும் அதையே பின்பற்றி தமிழ் சினிமா பின்னடைவின் காரணத்திற்கு சிவாஜியும் ஒரு வகையில் காரணமாய் இருந்தது துரதிர்ஷ்டம்தான். மேலும் இயல்பான நடிப்பு எது என்பதை தெளிவாகவே உணர்ந்திருக்கும் அவர், சர்வதேச திரைப்படத்தின் தகுதிகளோடும் இலக்கணங்களோடும் சில படங்களையாவது உருவாக்குவதற்கு -  ஒருவேளை நிகழக்கூடிய வணிகரீதியான நஷ்டங்களையும் கணித்து -  தன் பங்களிப்பை செலுத்தாதது ஏன்? ஒரு காலகட்டத்திய தமிழ் சினிமாவையே ஆக்ரமித்துக் கொண்டிருந்த அவருக்கு இது எளிதான விஷயம்தானே? 'வரலாறு முக்கியம் அமைச்சரே' எனும் தத்துவத்தைக் கூடவா அவர் உணராமல் இருந்திருப்பார்?

மகேந்திரன் தன்னுடைய சினிமா பற்றிய நூலில் எழுதும் போது இளமைக்காலத்தில் நிகழ்ந்த ஒரு கல்லூரி பேச்சு நிகழ்வில் 'தமிழ் சினிமா மக்களின் வாழ்வியலில் இருந்து விலகி எத்தனை போலித்தனமாக இருந்திருக்கிறது' என்பதைப் பற்றி ஆவேசமாக பேசிய போது அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.ஜி.ஆர் 'நன்றாகப் பேசினீர்கள்' என்று பாராட்டச் செய்கிறார். பிற்காலத்தில் மகேந்திரன் 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தை உருவாக்கிய போது அதை ஒரு திரையிடலில் பார்த்த எம்.ஜி.ஆர் "அன்று தமிழ் சினிமாவின் மீது முன்வைத்த குறையை நீங்களே போக்கி விட்டீர்கள்" என்று உணர்ச்சிவசப்பட்டு பாராட்டியிருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் தாம் நடித்த காலத்தில் எல்லாம் எவ்வாறான திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். அது மாத்திரமல்ல, அவர் அதிகாரத்திற்கு வந்தவுடன்  'உதிரிப்பூக்கள்' திரைப்படம் போன்ற இன்னும் சில திரைப்படங்கள் மலர்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்க முடியும். ஏன் செய்யவில்லை? சமகாலத்திய வணிக சினிமாவின் உச்ச அடையாளம் ரஜினிகாந்த். அவரிடம் 'நீங்கள் நடித்ததிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?": என்று அவருடைய குருநாதர் பாலசந்தர் ஒரு திரை நிகழ்ச்சியில் கேட்கும் போது சட்டென்று 'முள்ளும் மலரும்' என்ற ரஜினி பதிலளிக்கிறார்.

ஆக....தமிழ் திரையுலகை ஆக்ரமித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எது நல்ல சினிமா என்பது தெளிவாகவே உள்ளூற தெரிந்திருக்கிறது. ஆனால் அந்தத் துறையின் மூலமே செல்வத்தையும் செல்வாக்கையும் பெற்றவர்கள், தாம் சார்ந்திருந்த துறையின் வளர்ச்சிக்காகவும் மேம்படுவதற்காகவும்  போகிற போக்கில் சிறிதாக கூட எதையுமே ஏன் செய்யவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது. நல்ல சினிமாவை உருவாக்கி விட முடியுமென்கிற கனவுகளுடனும் லட்சியங்களுடனும் ஆயிரம் இளம் இயக்குநர்கள் வாய்ப்பில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரையாவது ஆதரித்து தமிழ் சினிமாவின் வரலாற்றை திசை திருப்பும் படியும் சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாக்களைப் பற்றிய உரையாடல் பெருமையோடும் அமையும்படியும் ஆவதற்கான சில விஷயங்களையாவது தமிழ் சினிமாக்களை தீர்மானிக்கும் சக்திகள் செய்திருக்கலாமே என்று ஆதங்கத்துடன் யோசிக்க மாத்திரமே முடிகிறது.


***


தமிழ் சினிமாவிற்கென்று சில குறிப்பிட்ட தேய்வழக்குகள் (Cliches) உள்ளன. அவைகளிலிருந்து பெரும்பாலும் தமிழ் சினிமா வெளிவந்ததேயில்லை.  புகழ்பெற்ற ஹீரோ என்று கூட அல்ல, சாதாரண ஹீரோவாக இருந்தால் கூட அவரின் மீது யாருமே கைவைத்து விட முடியாது. வில்லன்களும் அடியாட்களும் வரிசையில் வந்து அடிவாங்கி செல்ல வேண்டும். ஹீரோவாக விருப்பப்பட்டால் ஒழிய பெருந்தன்மையுடன் இரண்டு அடிகளை முதலில் வாங்கிக் கொள்ள முன்வருவார். படத்தின் இறுதியில் ஹீரோ சாகக்கூடாது. பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். படம் ஓடாது. எத்தனை சிக்கல்கள் வந்தாலும் படத்தின் இறுதியில் அவையெல்லாம் நீங்கி அனைவரும் புன்னகைக்கும் காட்சியுடன்தான் படம் நிறைவுற வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்கள் மனநிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் திரையரங்கை விட்டு செல்வார்கள். படத்தில் வரும் பெண் பாத்திரங்களுக்கு என்று எவ்வித முக்கியத்துவமோ பிரத்யேகமான பின்புலமோ இருக்கக்கூடாது. காதலி என்றால் நாயகனுடன் ஆடிப்பாட வேண்டும். தாய் என்றால் நாயகனுக்கு பெருமை சேர்க்கும்படி அம்மா சென்ட்டிமென்ட் காட்சிகளில் தோன்றி மறைய வேண்டும். நாயகன் விரும்பாவிட்டாலும் சில பெண்கள் அரைகுறை ஆடையுடன் வலிந்து வந்து அவனை கவர முயல்வார்கள்.

இதெல்லாம் தமிழ் சினிமாக்களில் உள்ள அபத்தங்கள் குறித்தான சிறு பட்டியல்தான். இப்படி வணிகரீதியாக பல சமரசங்களுடனும் செயற்கையான கட்டுப்பாடுகளுடனும் இயங்கினால் எப்படி நல்ல சினிமாக்கள் தமிழில் உருவாகும்?

ஹீரோக்கள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்ததைப் போலவே ஓர் இசையமைப்பாளர்  தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலமும் இருந்தது. அவருடைய புகைப்படத்தை படபூஜை விளம்பரத்தில் போட்டால் படம் எப்படியாவது வியாபாரமாகி விடும் என்கிற நிலை இருந்தது. அவரும் திறமையான இசையமைப்பாளர்தான். அந்தக் காலத்தில் ஓய்வு ஒழிச்சலின்றி மாய்ந்து மாய்ந்து உழைத்துக் கொண்டிருந்தார். அவரது இசையிலிருந்து பல ரத்தினங்களும் சில கற்களும் கலந்துதான் வெளியாகிக் கொண்டிருந்தன. சில வருடங்களுக்கு முன் அந்த இசையமைப்பாளர் பணியாற்றிய திரைப்படம் ஒன்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு அதன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளருடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் ஓர் இயக்குநர் சொன்ன சம்பவம்தான் படு சுவாரசியமானது.

அ்நத இசையமைப்பாளரை தங்கள் படத்தில் பணியாற்றச் சொல்லி பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அன்புத்தொல்லையும் நெருக்கடியும் தருகிறார்கள். அவர் படத்தைப் போட்டாலே வியாபாரமாகி விடுகிறதே? ஒரு சமயத்தில் நெருக்கடியைத் தவிர்க்க இசையமைப்பாளர் பொதுவில் ஒரு நிபந்தனையைப் போடுகிறார். 'என்னிடம் சிறந்த ஐந்து மெட்டுக்கள் உள்ளன. அந்த மெட்டுக்களுக்கு ஏற்ப எந்த இயக்குநர் ஒரு கதையை எழுதிக் கொண்டு வருகிறாரோ,அவருடன் பணியாற்ற சம்மதிக்கிறேன்'. மேற்குறிப்பிட்ட சம்பவத்தை பகிர்ந்த இயக்குநரும் ஒரு கதையை 'உருவாக்கி' இசையமைப்பாளரிடம் ஒப்புதல் வாங்கி இசையைப் பெற்று படத்தையும் வெளியிடுகிறார். அதாவது தமிழ் சினிமாவில் அதுவரை மெட்டுக்கு பாட்டு எழுதியதுதான் வழக்கமாக இருந்திருக்கும். ஆனால் மெட்டுக்கேற்ப ஒரு திரைப்படமே உருவாகின அதிசய அபத்தமெல்லாம் தமிழ் சினிமாவில்தான் சாத்தியம்.  இதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த திரைப்படம் வெளியாகி மகத்தான வெற்றியும் பெற்றது. இப்படியிருக்கிறது நம்முடைய ரசனை. ஒரு திரைப்படத்திற்கு தேவைப்படும் இடங்களில் துணையாக அடிநாதமாக பயணிக்க வேண்டிய கூறுகளுள் ஒன்று இசை. ஆனால் இயக்குநர் பின்னுக்குத் தள்ளப்பட்டு இசையும் இசையமைப்பாளருமே திரைப்படத்தின் உருவாக்கங்களை தீர்மானிக்ககூடிய இடத்தில் இருப்பது என்னவொரு துரதிர்ஷ்டமான நிலை? சினிமா எனும் கலையில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் இது போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் என்னதான் கலை கலை என்று கூப்பாடு போட்டாலும் சினிமா என்பது பெரும் பொருளை கோரியும் வணிகத்தை சார்ந்தும் நிற்கிற விஷயம். எந்தவொரு ஊடகத்தையும் விட வலிமையுள்ளதாக தமிழ் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக  நிழல் நாயகர்களை நிஜமென்று நம்பி அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க கூடிய செல்வாக்குள்ளதாக சினிமா ஊடகம் திகழ்கிறது. எனவே, ஒன்றைப் போட்டால் பத்தை எடுக்கலாம் என்கிற வணிக நோக்குச் சிந்தனையாளர்களாலும் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முயலும் குறுக்கு வழியாக சினிமாவைப் பார்க்கிறவர்களாலும் இது ஈர்க்கப்படுவது இயல்புதான். எனவே இவர்கள் உருவாக்கும் திரைப்படங்களும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி அவர்களிடமிருந்து காசு பிடுங்கும் உற்பத்தி பொருள்களாக  மாத்திரமே இருக்கும். வாடிக்கையாளர்கள் மாறினால் உற்பத்தியாளர்களும் அதற்கேற்ப மாறித்தான் ஆக வேண்டும் என்கிற சந்தை விதிக்கேற்ப, தமிழ் பார்வையாளர்கள் தேய்வழக்கு மசாலா திரைப்படங்களை கறாராக புறக்கணித்து நல்ல முயற்சிகளை மாத்திரம் தொடர்ந்து ஆதரித்து வந்தால் தமிழ் சினிமாவின் போக்கும் அதற்கேற்ப மாறும். சினிமா ரசனை என்பதை பள்ளிக் கல்வித் திட்டத்திலேயே இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒற்றைக் குரலாக ஒலித்துக் கொண்டேயிருந்த பாலுமகேந்திராவின் கருத்தும் இந்த சூழலை எதிர்பார்த்துதான் அமைந்திருக்கிறது. எனவே ரசனை மாற்றம் என்பதுதான் தமிழ் சினிமாவின் சிறப்பான எதிர்காலத்திற்கான வழி.

மேலும், இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற சத்யஜித்ரே போன்ற, சமரசத்திற்கு உட்படாத இயக்குநர்கள் தமிழிலும் வருங்காலத்தில் தோன்றினால் தமிழ் சினிமாவையும் அதன் சாதனையாளர்களையும் பற்றிய உரையாடல்கள் மேற்குறிப்பிட்ட கட்டுரைகளில் பதிவாவது தன்னாலேயே நிகழும். 

- உயிர்மை - டிசம்பர் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Thursday, December 11, 2014

சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்



நண்பர்களே,

ரஜினிகாந்த் நடித்து 2007-ல் வெளிவந்த சிவாஜி திரைப்படம் வெளியிடப்படும் தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரையிது. இந்த 2014-ன் இறுதியில் வெளியாகும் லிங்கா திரைப்படத் தருணத்திலும் இக்கட்டுரை பொருத்தமாக அமைந்திருப்பதாகவே கருதுகிறேன். 

***

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பரபரப்பை ஏற்படுத்தவோ அல்லது ரஜினி ரசிகர்களை சங்கடத்திலோ, கோபத்திலோ ஆழ்த்துவதற்காகவோ இந்த பதிவு எழுதப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது. ஆபாச வசைச் சொற்களைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தும் இந்தப்பதிவு எழுதப்படுவதின் நியாயத்தை, திறந்த மனதுடன் வாசிக்கும் எவரும் பதிவின் இறுதியில் உணர்வார்கள் என்று நிச்சயமாகவே நம்புகிறேன்.

()

தமிழில் திரைப்படங்கள் தோன்றும் போது அது அப்படியே நாடகத்தின் கூறுகளை, தாக்கங்களை முழுவதுமாக உள்வாங்கி பிரதிபலித்தது. காட்சியமைப்புகள், ஆடை அணிகலன்கள், அரங்க அமைப்புகள், இசைப் பாடல்கள் என்று நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏதுமில்லை. சுருங்கக்கூறின் நாடகங்களின் சுருள்வடிவமே திரைப்படம் என்பதாக இருந்தது. காளிதாஸ் (1931) ஹரிச்சந்திரா (1932) சீதா கல்யாணம் (1933) தொடங்கி புராணங்களின் உபகதைகளை கொண்டு தமிழ்ச் சினிமா பயணித்தது. பின்பு எம்.கே.தியாகராஜ பாகவதர், (ஹரிதாஸ் - 1944) பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா போன்ற இசையும் நடிப்புத்திறமையும் இணைந்த நாயக நடிகர்களின் துணை கொண்டு வளர்ந்தது. இடையே விடுதலைப் போராட்டத்தின் எதிரொலியாக காலனியாதிக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் (நாம் இருவர் - 1947) எதிர்த்து திரைப்படங்கள் தோன்றின.

ஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் புராண மறுஉருவாக்க படங்களும் (திருவிளையாடல் - 1965) கண்களைப் பிழிய வைக்கும் பீம்சிங்கின் மிகை உணர்ச்சிப் படங்களும் (பாசமலர் 1964) வெளிவந்தன. புராணப்படங்கள் தேய்ந்து போய் சமூகக் கதைகள் (நல்லவன் வாழ்வான்; கெட்டவன் வீழ்வான் என்பதை அடிச்சரடாகக் கொண்டு) பெரும்பாலான படங்கள் வெளிவந்தன. இதிலிருந்து மாறுபட்டு ஸ்ரீதர் (தேன்நிலவு 1961) கே.பாலச்சந்தர் (சர்வர் சுந்தரம் 1964; நாணல் - 1965) போன்றவை வெளியாகின. தமிழ்த்திரையுலகின் முதல் கலகக்குரலாக (அன்றைய சூழ்நிலையில்) கே.பாலச்சந்தரை குறிப்பிடுவேன். அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்கள், மக்களை கனவுலகிலிருந்து மீட்டு யதார்தத்தின் வெளிச்சத்திற்கு அழைத்து வந்த ஆரம்பப் புள்ளிகளாக அமைந்து சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.

()

1975-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை "தமிழ்த்திரையுலகின் பொற்காலம்" எனக்கூறலாம். பதினாறு வயதினிலே, சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), அவள் அப்படித்தான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) அழியாத கோலங்கள், உதிரிப்பூக்கள், நூல்வேலி, பசி, (1979), இவர்கள் வித்தியாசமானவர்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்க்ள், மழலை பட்டாளம், மூடுபனி, (1980) என்று களம், பின்னணி, திரைக்கதையமைப்பு, இசை போன்ற பிரதான துறைகளில் வித்தியாசமான அமைப்பை கொண்டு வந்திருந்தன. எல்லா காலகட்டத்திலும் வணிக சினிமா, ரசனை சார்ந்த சினிமா என்பது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தக் காலகட்டத்திலும் பெரும்பான்மையான ரசனை சார்ந்த சினிமா உருவாகின. இதன் மூலம் சர்வதேச திரைப்படங்களைப் பற்றின தேடலும், விவாதங்களும், விழிப்புணர்வும் சாத்தியமாக்கியது. நல்ல திரைப்படங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதால் வித்தியாசமான முயற்சிகளை கொடுக்கும் துணிவு இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.

திரைவிமர்சகர்கள் தமிழ்த்திரையுலகின் வரலாற்றை எழுதும் போது இந்த காலத்தை ஏக்கப்பெருமூச்சுடன் நினைவு கூர்கிறார்கள். இந்தப் படங்கள் பொதுமக்களின் பரவலான கவனத்தைப் பெற்றதோடு வணிக ரீதியான வெற்றியையும் பெற்றன. இதே நிலை தொடர்ந்திருந்தால், தமிழ்த்திரையுலகத்தின் முகமே மாறிப் போய் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள் பெற்றிருந்த ரசனை வளர்ச்சியை நாமும் பெற்றிருக்கக்கூடும்.

ஆனால் 1982-ல் ஏவி.எம்.எம். நிறுவனத்திலிருந்து வெளிவந்த "சகலகலா வல்லவன்" என்கிற திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த வளர்ச்சியை அடியோடு மாற்றியது. உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்போடு இதை ஒப்பிடலாம். குறிப்பிட்ட படத்தின் வணிகரீதியான மிகப் பெரிய வெற்றி மேற்சொன்ன சூழ்நிலையை குரூரமாக குலைத்துப் போட்டது. ஆபாசம், வன்முறை, நாயக புகழ்ச்சி, மிகை உணாச்சி, பாசாங்கு என்று எல்லாவிதமான செயற்கைத்தனங்களுடன்தான் பிற்காலத்திய படங்கள் வெளிவந்தன. இடையிடையில் மாற்று முயற்சிகள் வந்தாலும் அவை பெரும்பான்மையான கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழ் சினிமாவின் முக்கியமான மறுமலர்ச்சிப் படமான "நாயகனை" (1987) உருவாக்கிய மணிரத்னம், பிற்பாடு "தளபதி" (1991) போன்ற வணிகரீதியான சினிமாவை கொடுக்க நேர்ந்தது. தரமான திரைப்படங்களை பார்த்து உள்வாங்கி வெளிவந்த திரைப்படக் கல்லூரி மாணவர்களும் (ஊழை விழிகள் - இதே போன்ற படங்களையே அளிக்க முடிந்தது. விக்ரமன் போன்றோரது படங்கள் மோசமான முன்மாதிரிகளாகவே இருந்தன.

()

இப்போதைய காலகட்டத்திற்கு திரும்புவோம். தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" படங்களை பார்த்து சலித்துப் போனதும், சர்வதேச சினிமா குறித்து அறிவுஜீவிகள் தவிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு எழுந்ததாலும், ஊடக வளர்ச்சி காரணமாக சினிமாவின் தொழில்நுட்பம் குறித்து பாமரனும் அறிய முடிந்ததாலும் மக்கள் மாற்று முயற்சிகளை மெலிதாக வரவேற்றனர். காதல் என்று ஆரம்பிக்கிற பெயரில் நிறைய கண்ராவிப் படங்கள் வந்திருந்தாலும், பாலாஜி சக்திவேலின் "காதல்" திரைப்படம் (2004) ஒரு பெரிய ஆசுவாசமாக அமைந்தது. நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை இளம் இயக்குநர்களுக்கு பிறந்தது. இதனின் சமீபத்திய தொடர்ச்சியாக அழகிய தீயே, வெயில், மொழி, பருத்தி வீரன் என்று குறைவான வணிக சமரசங்களோடு படங்கள் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றியையும் பெற முடிந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முன் குறிப்பிட்ட பொற்கால சூழ்நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் படங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. (வணிகரீதியான அம்சங்கள் குறைவாக இருந்தாலே, அது நல்ல படம் என்று நாம் பேச ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றாலும், நிஜமாகவே நல்ல படங்களை எடுப்பதற்கு இவைகளை ஆரம்ப முயற்சிகளாக கொண்டு வரவேற்கலாம்)

ஆனால் இந்த ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை சிவாஜி திரைப்பட வரவு குறித்த அதீத பரபரப்பு, முன்னர் குறிப்பிட்ட அதே மாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சகலகலா வல்லவன் போன்றே சிவாஜியும் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது என்பதுதான் நகைமுரண். சினிமாப் பத்திரிகைகள் தொடங்கி ஜோதிடப் பத்திரிகைகள் வரை எதுவுமே "சிவாஜி"யைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது என்கிற அளவிற்கு இத்திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (இதே போன்று முன்னர் பரபரப்பை ஏற்படுத்தின "பாபா"வின் கதியும் நினைவிற்கு வருகிறது). வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் வணிக ரீதியான விற்பனையின் தொகை பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. ஆடியோ விற்பனையே 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எத்தனையோ வணிகரீதிப்படங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கவில்லையா, சிவாஜி வருவதால்தான் ஆக்கப்பூர்வமான சூழ்நிலை மாறிவிடுமா? என்னய்யா அபத்தமாக இருக்கிறது? என்று உங்களில் சிலருக்கு தோன்றக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நான் அஞ்சுவது இந்தப்படத்தின் பரபரப்பு குறித்தும், ஆர்ப்பாட்டம் குறித்தும்தான். ஒருவேளை இந்தப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றால், மீண்டும் வணிகரீதியான படங்களுக்கு மவுசு கூடி, வணிகரீதி இயக்குநர்கள் பிசியாகி விடுவார்கள். மாற்று முயற்சிகளின் பிரகாசம் மங்கிப் போய், நாளடைவில் தேய்ந்து போய்விடவும் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். மீண்டும் இந்த சூழ்நிலை மலர எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?


()

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வருடத்திற்கு சுமார் 1000 படங்கள் தயாரிக்கும் ஒரு தேசத்திலிருந்து சர்வதேச தரத்திற்கு இணையான படங்களின் சதவீதம் மிக மிகக்குறைச்சலே. ஆஸ்கருக்காக ஏங்கிப் போய், அது கிடைக்காத விரக்தியில், அது உலகத்தரம் அல்ல, அமெரிக்கத்தரம் என்று பேசுவது "சீசீ இந்தப் பழம் புளிக்கும்" என்கிற கதையைத்தான் நினைக்க வைக்கிறது. ஆஸ்கர் விருது கிடைப்பது ஒரு புறம், அதன் நாமினேஷன் பட்டியிலில் இடம் பெறுவதற்கே நாம் மல்லாட வேண்டியிருக்கிறதே? cannes film festival-ல் திரையிடுவதற்கு கூட பெரும்பான்மையான திரைப்படங்கள் லாயக்கில்லாதவை. இந்த நிலை குறித்து நாம் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா? ஈரான் போன்ற கைக்குட்டை தேசங்கள் கூட சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனிப்பை பெறும் போது நம் நிலை என்ன?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி" என்று பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதில் மாத்திரம் புண்ணியமில்லை. காலத்திற்கேற்ப நம் தரத்தையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் ரசனை மேம்பாடும், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பும் மேம்பாடும் முக்கியமானவை. எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங்கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

(மீள்பதிவு) 

suresh kannan

Wednesday, December 03, 2014

கதாநாயகிகளின் ஆயுள்ரேகை


 தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி. தென்னிந்திய சினிமாவின் முதல் கனவுக்கன்னியும் கூட. தனது 40வது வயது வரை நடித்தவர். கே.ஆர்.விஜயா, சாவித்திரி, சரோஜாதேவி, பானுமதி, தேவிகா.... என்றுஅப்போதைய காலத்து கதாநாயகிகள் பெரும்பாலும்  தங்களின் இளமைக்காலத்தைக் கடந்த பிறகும் கூட நாயகிகளாக நடிக்க முடிந்தது. இவர்களில் பெரும்பாலும் அண்டைய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே. சினிமாவில் நடிப்பது ஒழுக்கத்திற்குப் புறம்பானது என்று கருதப்பட்ட காலத்தில் அழகும் திறமையும் இருந்தாலும் துணிவுடன் நடிக்க முன்வருபவர்கள் குறைவாக இருந்ததால் ஒரு சில குறிப்பிட்ட நபர்களே தொடர்ந்து நாயகிகளாக நடித்துக் கொண்டிருந்தார்கள். கொடியிடையும் இளமையும் கொண்ட பெண்தான் நாயகியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சாத்தியம் இல்லாததால் இடுப்பின் சுற்றளவு அசாதரணமான அளவில் இருந்தவர்கள் கூட 'அம்மா.. நான் காலேஜூக்குப் போயிட்டு வரேன்' என்று பேசிய வசனங்களை ரசிகர்கள் பெரிதும் நெருடலாக எடுத்துக் கொள்ளாமல் ரசித்தார்கள்.

ஆனால் நிலைமை இப்போது வெகுவாக மாறி விட்டது. ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டே நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. பாக்கெட் மணிக்காக சினிமாவில் நடிக்க வருபவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் திரைத்துறையில்  இயங்கும் இவர்களின் காலஅளவு சொற்பமானதாக இருக்கிறது. இரண்டு மூன்று ஆண்டுகளைக் கடப்பதே சிரமம். நவீன திரைப்படங்களில் பிரேம்கள் சட்சட்டென்று மாறுபவதைப் போலவே நாயகிகளும் உடனுக்குடன் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ரசிகர்களின் ரசனையும் அதைப் போலவே மாறிக் கொண்டிருக்கிறது.  ஒரேயொரு தமிழ் திரைப்படத்தில் நடித்து விட்டு பின்பு காணாமற்போன நாயகிகளின் எண்ணிக்கை அதிகம். கமலுடன் இணைந்து நடித்த 'குணா' திரைப் படத்தின் நாயகி ரோஷிணி, அஜித்துடன் 'காதல் மன்னன்' திரைப்படத்தில் நடித்த மானு போன்றவர்கள் உடனடி நினைவுக்கு வருகிறார்கள்.

சமூகத்தின் எல்லாத்துறையையும் போலவே சினிமாவும் ஆணாதிக்கத்தன்மை கொண்டதாக இருப்பதில் வியப்பேதுமில்லை. ஐம்பது, அறுபதைக் கடந்த நடிகர்கள் கூட இன்னமும் டோப்பா முடியுடனும் கூலிங்கிளாஸூடனும் ஹீரோவாக நடிக்கும் அவலம் மாறவில்லை. ஒரு பெண் குழந்தை ஹீரோவுடன் நடிக்கும்.பின்பு அதுவே மகளாக நடிக்கும். பின்பு நாயகியாகவும். பின்பு நாயகி ரிடையர்டு ஆகி அண்ணி, அம்மா வேடத்திற்கு நகர்ந்த பிறகும் டோப்பா முடியும் கூலிங்கிளாஸூம் அதே இடத்தில் நகராமல் ஹீரோவாக இருக்கும். இவர்கள் சுட்டிக்காட்டுபவர்கள்தான் ஹீரோயினாக நடிக்க இயலும் கொடுமையும் மாறவில்லை. விதிவிலக்காக பானுமதி போன்ற அபூர்வமான பன்முக திறமைசாலிகள் தங்களின் தனித்தன்மையால் ஆண்களின் ஆதிக்க உலகின் இடையே  தனி நட்சத்திரமாக ஜொலித்தார்கள். தான் நடிக்க ஒப்புக்கொண்ட படம் ஒன்றிற்காக  அப்போதைய ஆண் நடிகர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத ஊதியத்தைப் பெற்றார் கே.பி.சுந்தராம்பாள். ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திய ஆக்ஷன் நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்தார் விஜயசாந்தி.

ஆகவே தங்களின் சொற்ப ஆயுள் காலத்தைப் புரிந்து கொள்ளும் சமகால கதாநாயகிகள் இயன்ற வரை அதிக படங்களை ஒப்புக் கொண்டு அதற்கான சமரசங்களை விலையாக கொடுத்துக் கொண்டு அழகுப் பதுமையாக டூயட் ஆடி முடிப்பதோடு தங்களின் சேவையை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள். விதிவிலக்காக சில நாயகிகள் மாத்திரம்தான் ரசிகர்களின் நீண்ட கால அன்புக்கு பாத்திரமாக முடிகிறது. அந்த அன்பு  கோயில் கட்டும் அபத்தம் வரை கூட நீள்கிறது.  ஆணாதிக்க ஆக்ரமிப்புள்ள உள்ள சூழலில்  சமகால நாயகிகளில்  நயனதாரா, திரிஷா, அனுஷ்கா போன்றவர்கள் பத்தாண்டுகளைத் தாண்டியும் இன்னமும் களத்தில் நீடிப்பது ஆச்சரியமான விஷயம் மாத்திரமல்ல, பாராட்டப்பட வேண்டியதும் கூட. இது எப்படி சாத்தியமாகிறது?

திறமையான நடிப்பின் மூலமோ அசத்தலான கவாச்சியின் மூலமோ குழப்பமான சர்ச்சைகளின் மூலமோ, எப்படியோ.. எப்போதும் மஞ்சள் வெளிச்சத்தின் கீழேயே இருப்பது அவசியமாக இருக்கிறது. சிலர் அவர்களாகவே தங்களைப் பற்றிய வம்புச் செய்திகளையும் கிசுகிசுக்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் பரப்புவதாகச் சொல்கிறார்கள். எப்போதும் மக்களின் கவனத்திலேயே தங்குவதற்கு இவை அவசியமானதாக இருக்கின்றன. நடிப்பின் மூலமாக அல்லாமல் புற அழகின் மூலமாகவே ஒரு நடிகையின் இருப்பும் வாய்ப்பும் உறுதி செய்யப்படுவதால் உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள பல தியாகங்களை செய்ய வேண்டியிருக்கிறது. தாங்கள் தோ்ந்தெடுக்கும் திரைப்படத்தின் கதையையும் அதில் தங்களின் பங்கையும் விட அதில் நடிப்பவர் முக்கியமான, வெற்றிகரமான ஹீரோவா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கு மாறாக ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து விட்டு பிறகு தங்களது சந்தை வாய்ப்பை இழக்கும் நடிகைகளின் பாடு பரிதாபகரமானது. அதுவரை அனுபவித்துக் கொண்டிருந்த உயர்நிலை அந்தஸ்துகளையும் சொகுசுகளிலிருந்து இறங்கவும் இழக்கவும் முடியாமல் தங்களின் செல்லுலாயிட் கதாநாயகன்களுக்கே அக்காவாகவும் அம்மாவாகவும் நடிக்க வேண்டிய கொடுமை. தங்களின் சம்பாத்தியம் குறைந்தவுடனேயே அவர்கள் உளரீதியான தாக்குதல்களையும் அழுத்தங்களையும் மனஉளைச்சல்களையும் எதிர்கொள்வது முதலில் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட சுற்றத்தார்களிடமிருந்தே. நடிகையாக தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்தவர்கள் ஒரு நாள் ஓய்ந்து திரும்பிப் பார்க்கும் போது தம்மைச் சுற்றியிருந்தவர்கள் தனக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றிருந்த எண்ணத்திற்கு மாறாக தன்னுடைய பணத்திற்கு மாத்திரமே பாதுகாப்பாக இருந்தவர்கள் என்கிற உண்மையை நேரடியாக எதிர்கொள்ளும் போது அகரீதியான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பந்தயக் குதிரைக்கு காயம் பட்டவுடனே சுட்டுக் கொல்லப்படுவதைப் போன்றதொரு நிலைமை.

இளமைக்காலங்கள் என்கிற திரைப்படம் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த சசிகலா என்பவர் தனது இறுதிக்காலத்தில்  நோயுற்று எவர் துணையுமின்றி அநாதையாக இறந்து போன அதிர்ச்சிகரமான செய்தியை நாளிதழ்களில் வாசித்திருப்போம். சுற்றத்தார்கள் தரும் அழுத்தம் தாங்காமல் சிலர் வேறுவழியின்றி பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளில் சென்று பின்பு பிடிபட்டு ஊடகங்களின் கட்டம் கட்டிய வம்புச் செய்திகளுக்கு தீனியாகிறார்கள். இந்தக் காரணங்களினாலேயே இவர்களது சிலரது திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையாமல் திசை திரும்பி விடுகிறது. இவையெல்லாம் பத்திரிகைகளில் வந்த உதாரணங்கள் மட்டுமே. வெளிவராத பரிதாபங்கள் எத்தனையோ இருக்கலாம். இம்மாதிரியான ரிடையர்டு நடிகைகளின் உடனடி புகலிடம் தொலைக்காட்சி சீரியல்கள். சினிமாவில் மீந்து போன புகழை வைத்துக் கொண்டு சீரியல்களில் கண்களை உருட்டி யாரையாவது பளார் பளார் என்று அறைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? பஞ்ச் டயலாக் நாயகர்கள் மாத்திரமே பெரும்பான்மையாக உலா வரும் தமிழ் திரையுலகில் பெண்களை பிரதான பாத்திரங்களாகவும் அவர்களது உலகை, சிக்கலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் பெரும்பான்மையாக வெளிவரவோ அல்லது ரசிகர்களால் வரவேற்கப்படவோ இல்லை என்பதே. கதாநாயகிகள் பிரதான பாத்திரங்களாக சித்தரிக்கப்படும் திரைப்படங்களுக்கென ஒரு சந்தை கிடையாது. எல்லாமே ஹீரோக்களைச் சுற்றித்தான் இயங்குகிறது. பெண்களை முக்கியத்துவப்படுத்தி படமெடுத்த இயக்குநர்கள் பாலச்சந்தர், மகேந்திரன் போன்றவர்கள் இன்று ஜீவிக்க முடியாது.

பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் திரைப்படங்கள் இப்போது அபூர்வமாகவே கவனதிற்குள்ளாகின்றன. பல வருடங்கள் கழித்து திரையுலகிற்கு திரும்பிய ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது . போலவே சமீபத்தில் மஞ்சு வாரியர் நடித்த 'How old are you?' என்கிற மலையாள திரைப்படமும் கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. இரண்டு திரைப்படங்களுமே திருமணத்திற்குப் பின் தங்களின் தனித்தன்மைகளை இழந்து சமையலறைக்குள் அடைந்து போய் அதனாலேயே தங்களின் குடும்பத்தினரால் பத்தாம்பசலிகளாக பார்க்கப்படும் நடுத்தரவயதுப் பெண்கள் தங்களின் கூடுகளிலிருந்து பொருளாதார தன்னிறைவோடும் தன்னம்பிக்கையோடும் சுதந்திரமாக பறக்கும் தகுதியைப் பெறுவதைப் பற்றி உரையாடுகின்றன. கங்கனா ராவத் நடித்த 'Queen' என்கிற இந்தி திரைப்படத்தையும் இதனுடன் இணைக்கலாம். இந்த மாற்றம் இன்னமும் தொடர்ச்சியாக நிகழ வேண்டும்.

நடிகை என்பதன் அடையாளம் ஒரு பெண்ணுடலாகவும் அழகுப் பதுமையாகவும் மாத்திரம் அல்லாமல் ரத்தமும் சதையும் கொண்டதொரு ஆன்மாவாக சித்தரிக்கப்படும் திரைப்படங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு அவை வணிகரீதியாகவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் ஆணாதிக்க திரைப்படங்கள் ஒடுங்கி பெண்களுக்காக பெண்களே உருவாக்கப்படும் படைப்புகள் அதிகமாகும். பெண் இயக்குநர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இத்தனை வயது வரை மட்டும்தான் ஒரு பெண் பிரதான பாத்திரத்தில் நடிக்க முடியும் என்கிற மாயையான வேலிகள் உடைபடும்.சினிமா ரசிகர்களிடம் ஏற்பட வேண்டிய ரசனை மாற்றமும் இதற்கு ஆதரவாக இருக்கும். இருக்க வேண்டும்.

'தி இந்து' தீபாவளி மலரில் வெளியான கட்டுரை. (நன்றி: தி இந்து)

suresh kannan

Monday, December 01, 2014

காவியத்தலைவன் - ஒற்றை வரி நிராகரிப்புகள்

காவியத்தலைவன் திரைப்படம் அல்லது அது போன்ற முயற்சிகள் வெளியாகும் போது அவை குறித்து இணையத்தில் வரும் ஒருவரி விமர்சனங்களையும் எள்ளல்களையும் இடக்கை புறந்தள்ளல்களையும் பார்க்கிறேன். இயல்புதான். முன்பு திரையரங்கு வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலித்த அசல் நிர்வாணமான உண்மையான விமர்சனங்கள் இவை. இப்போது இணையத்தில் ஒலிக்கின்றன. தமிழ் திரைப் படைப்பாளிகள் இவற்றைக் குறித்து எரிச்சல் கொள்வதோ புறக்கணிப்பதோ, குறை சொல்வதோ கூடாது. மாறாக இவ்வகையான உண்மை விமர்சனங்களை அவர்கள் கருத்தில் கொள்வதே அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. (மிஷ்கின் இந்த விஷயத்தில்தான் தவறு செய்கிறாார்). ஏனெனில் தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இவர்களே. இவர்களை பெரும்பாலும் மனதில் இருத்தித்தான் இயக்குநர்களும் படைப்புகளை அதற்கேற்ற சமரசங்களுடனும் உருவாக்குகிறார்கள் என்பது வெளிப்படை.

ஆனால் பாருங்கள், திரையரங்கின் வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலிக்கின்ற குரல்களை அவர்களின் பின்புலத்தில் வைத்து ஒருவாறு யோசிக்க முடிகிறது. ஆனால் ஏறத்தாழ அதே மாதிரியான குரல்கள் கல்வியறிவு பெற்ற ஓரவிற்கான சமூக உணர்வு கொண்ட இணைய கனவான்களிடையேயும் ஒலிக்கிற போதுதான் நெருடுகிறது. இன்று தமிழ் சினிமா பெரும்பாலும் பஞ்ச் வசன நாயகர்களிடம் சிக்கி மசாலா சகதியில் மூழ்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். இதிலிருந்து விலகி நல்ல சினிமாக்கள் வந்து விடக்கூடாதா என்று நாம்தான் ஏங்குகிறோம். ஆனால் காவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகள் வரும் போது அவற்றிலுள்ள குறைகளை ஊதிப்பெருக்கி  கருணையேயில்லாமல் ஏளனம் செய்கிறோம். இதன் மூலம் அவ்வாறான படங்கள் மேலும் வரவிடாமல் செய்யும் சூழலுக்கு நாமே ஒருவகையில் காரணமாய் இருக்கிறோம். (இவ்வகையான விமர்சனங்கள் ஒரு திரைப்படத்தின் வணிகவெற்றியை பாதிக்குமளவிற்கு இருக்குமா என்பது இன்னொரு கேள்வி. ஏனெனில் அஞ்சான் போன்ற திரைப்படங்களைப் பற்றி என்னதான எதிர்விமர்சனங்கள் எழுந்தாலும் அவைகளை உருவாக்கியவர்கள் பேராசையுடன் எதிர்பார்த்த லாபத்தை சற்று குறைக்கலாம் என்றாலும் நிச்சயம் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்காது).

இவ்வாறான முயற்சிகள் மிகுந்த சிரமங்களுக்குப் பின் உருவாகும் விதங்களைப் புரிந்து கொண்டு அவற்றைப் பற்றிய நிறைகளை பாராட்டியும் குறைகள் எனக் கருதுபவைகளை மென்கண்டிப்புடன் எழுதப்படும் விமர்சனங்களைக் குறித்து ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால் விடலைத்தனங்களுடன் போகிற போக்கில் குரலெழுப்பிச் செல்லும் ஒற்றை வரி அபத்தங்கள் நீங்கி அவைகளுக்கான பொறுப்புணர்வுடன் வெளிப்பட வேண்டும் என்பதுதான் நம் ஆதங்கம். 

குறைந்த பட்ஜெட்டில் என்றால் கூட ஒரு சினிமாவை உருவாக்குவதற்கு எத்தனை பொருளியல் தேவையும் மனித உழைப்புகளின் தேவையும் இருக்கின்றன என்பதை நாம் சரியாக அறியத் தேவையில்லையென்றாலும் ஓரளவிற்காவது அதை யூகிக்க முடியும். இன்று சினிமா எடுப்பதற்கு ஈடான உழைப்பை அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் செய்ய வேண்டியிருக்கிறது. நல்ல முயற்சியாக இருந்தாலும் அதைச் சரியாக சந்தைப்படுத்தா விட்டால் மக்களிடம் சென்று சேராததோடு பொருளிழப்பும் ஏற்படும் அபாயமுண்டு. இந்திய சர்வதேச திரைவிழாவில் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்ட படமான 'குற்றம் கடிதல்' என்கிற திரைப்படத்தைப் பற்றி இந்த விழாவிற்கு முன் எத்தனை பேருக்கு தெரியும்? இன்றும் கூட எத்தனை பேர் அதைப் பார்த்திருப்பார்கள்?

தெளிவான வணிக நோக்குடன் ' தோராயமாக இத்தனை கோடி லாபம் சம்பாதிக்கப் போகிறோம்' என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப திரைப்படம் உருவாக்குபவர்கள் ஒருவகை. ஆனால் இதிலிருந்து சலித்து விலகி தம்முடைய மனச்சாட்சியின் குரலுக்கேற்ப அதை ஒரளவிற்காவது திருப்திப்படுத்தும் வகையில் நல்லதொரு படைப்பை தந்து விட வேண்டும் என்கிற உந்துதலுடன் செயல்படுபவர்கள் ஒருவகை. காவியத்தலைவன் போன்ற முயற்சிகள் இவ்வகையான உந்துதல்களின் மூலம் சாத்தியப்படுபவையே. இவைகள் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம் சூழல் மாற்றடைந்து, சில உலக சினிமாக்களைப் பார்த்து 'ஏன் தமிழில் இவ்வாறெல்லாம் உருவாக்கப்படவில்லை?" என்று நாம் ஆதங்கம் கொள்கிறோமே,   அந்த மாதிரியான படங்கள் உருவாகும் சூழல் இங்கும் ஏற்படக்கூடும்.

ஆனால் இவை குறித்து ஒரளவிற்காவது புரிதல் உள்ள நாம் இம்மாதிரியான முயற்சிகள் வளர்வதற்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம். இம்மாதிரியான இணைய விமர்சனங்கள் பெருமுதலீட்டுப்படங்களை ஒன்றும் செய்யவியலாது என்பது  நிதர்சனம் எனினும் சிறு முதலீட்டுப்படங்களை படகில் விழுந்த ஓட்டை போன்று ஒருவேளை மூழ்கடித்து விடலாம். இவ்வகையான அசட்டு விமர்சனங்களை நம்பி வாசிக்கும் ஒருபகுதியினராவது இவ்வாறான திரைப்படங்களை புறக்கணிக்க முடிவு செய்தால் ஒருவகையில் அது இழப்பே. 

தமிழிலும் நல்ல சினிமாக்கள் வெளிவரவேண்டும் என்று உண்மையாகவே ஆர்வமும் ஆதங்கமும் கொள்ளும் நாம், அந்த நிலைக்கு நகர்ந்து செல்லும் அடையாளங்களைக் கொண்ட முயற்சிகளை, அவற்றில் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல், ஆதரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இத்தனை காலமாக பெரும்பாலும் மசாலா குட்டையில் ஊறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு ஒரே நாளில் விடிவு வந்து விடாது. மெல்ல மெல்லத்தான் மாற முடியும். வணிக சினிமாவின் பெரும்பான்மையான சம்பிதாயங்களை கைவிட முடியாமல்தான் இந்த மாற்றங்கள் நிகழ முடியும். வங்காளத்திலும் கேரளத்திலும் இதை விட தீவிரமான இடைநிலை சினிமாக்கள் உருவாகி அவை வெற்றியும் பெறுகிறதென்றால் அங்குள்ள பார்வையாளர்களும் இணைந்து இந்த இணக்கமான சூழலை சாத்தியப்படுத்துகிறார்கள் என்பதை நாம் நினைவில் வைப்பது நல்லது. 

காவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகளை ஒற்றைவரியில் 'மொக்கைடா மச்சான்' நிராகரிக்கும் கும்பல், ஒருவேளை இதை விடவும் சிறந்த சினிமாக்களை ஆதரிக்கிறார்களோ என்று பார்த்தால், லிங்கா போன்றவைகளுக்கு  'வீ ஆர் வெயிட்டிங் தலைவா' என்று உற்சாக கூக்குரலிடுகிறார்கள். உண்மையில் நாம் நிராகரிக்கவும் புறக்கணிக்கவும் செய்ய வேண்டியவை, தமிழ் சினிமாவை தின்று கொழுக்கும் அவ்வாறான வணிகத் திமிங்கலங்களையே. மிகத் தெளிவாக திட்டமிட்டு, புழுத்துப் போன ஒரே மசாலாவை வெவ்வேறு பாக்கிங்கிலும் பிராண்ட்டிலும் சந்தைப்படுத்தி மயக்கத்திலிருக்கும் பார்வையாளர்களின் பாக்கெட்டுகளில் கையை விட்டு பணத்தைக் கொள்ளையடிக்கும் வணிக நோக்குத் திரைப்படங்களே நம் கடுமையான விமர்சனத்திற்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாக வேண்டியவை. இடைநிலை சினிமாக்கள் அல்ல.

suresh kannan

Saturday, November 22, 2014

ஜீவா - சாதிய அரசியலின் விளையாட்டு





"இப்பல்லாம் யாரு சார் ஜாதி பார்க்கறாங்க"  -

பாசாங்குடனோ அல்லது அறியாமையுடனோ நம் அன்றாட உரையாடல்களில் அடிக்கடி கேட்கக்கூடியது இது. ஒருவரின் சாதி குறித்து அறிய கிராமப்புறங்களிலும் சிறுநகரங்களிலும் நேரடியாகவோ அல்லது சுற்றி வளைத்தோ எப்படியோ கேட்டு விடுவார்கள்..'தம்பி எந்த ஊரு? எந்த ஆளுங்க?" என்று.  ஒருவரை பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவே  மதிப்பிடக்கூடிய பெருநகரங்களில் சாதி குறித்த பிரக்ஞையும் உரையாடலும் அதற்கான சாவகாசமும்  சற்று குறைவுதான் என்றாலும் இந்தக் கேள்வி பெரும்பாலும் வெளியே கேட்கப்படாவிட்டாலும் மனதிற்குள் ஊசலாடிக் கொண்டு நீறு பூத்த நெருப்பு போலதான் இருக்கும். நாசூக்கான செய்கைகளில் அது வெளிப்பட்டு விடும். சிறு பொறியில் கூட அதற்கான நெருப்பு பற்றிக் கொண்டு விடும். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல சாதிய உணர்வும் அது சார்ந்த பெருமிதமும் அல்லது தாழ்வுணர்வும் நிறைந்த சமூகமாகத்தான் இந்திய சமூகம் இருக்கிறது.சட்டைக்குள் பூணூல் தெரிகிறதா என்று படித்தவர்கள் பார்க்கும் நாசூக்கான பார்வை மிதமான முறை என்றால் வாயில் மலத்தைத் திணித்தல், தலையில் செருப்பால் அடித்தல், ஆட்களைக் கொன்று வீட்டைக் கொளுத்துதல் என்று பாமரர்கள் நிகழ்த்தும் உக்கிரமான முறையிலும் அது நீளும்.

பொதுவாக  மாணவப்பருவத்தில் எவரும் சகமாணவர்களுடன் சாதி பார்த்து பழகுவதில்லை. ஆனால் எந்தச் சமயத்தில் அந்த உணர்வு பெருமிருகம் போல் நம் மனதில்  நுழைகிறது என்று தெரியவில்லை. சமீபத்தில், விருதுநகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவனொருவன் கைகடிகாரம் கட்டி வந்தான் என்கிற காரணத்திற்காக அதைப் பொறுக்க முடியாத ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த சக மாணவர்கள் அவனுடைய கையை கத்தியால் தாக்கி காயப்படுத்தினார்கள் என்கிற செய்தியை வாசிக்கும் போது மனம் பதைக்கிறது. பெற்றோர் உள்ளிட்ட தங்களைச் சுற்றியுள்ளவர்கள் சாதியப் பெருமிதங்களுடன் உரையாடுவதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்களை இழிவாக நடத்துவதும் உரையாடுவதும் இளமனங்களில் பதிந்து அதுதான் சரியானது என்றும் இயல்பென்றும் தோன்றி விடுகிறது. எனவேதான் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பத்து வயது சிறுவன் கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எழுபது வயது மனிதரைக் கூட தன்னிச்சையாக  'டேய்' போட்டு அழைக்கும் துணிவைத் தருகிறது.

சுதந்திரத்திற்குப் பின் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம் உயாந்ததாலும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சாதியத்தின் கொடுமைகளைதொடர்ந்து உரையாடியதாலும் உயர்சாதி சமூகங்களில் அது குறித்த பெருமித உணர்வு மட்டுப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு அதற்கு மாறாக குற்றவுணர்வையும் தாழ்த்தப்பட்டவர்களை சரிசமமாக நடத்த வேண்டிய உணர்வையும் கட்டாயத்தையும் அவை ஏற்படுத்தின. பெயருக்குப் பின்னால் பெருமையாக போடப்பட்டிருந்த சாதியப் பெயர்கள் உதிர்ந்து போயின. ஆனால் இந்தியாவெங்கிலும் தேசிய அரசியலுக்கு மாற்றாக பிராந்தியக் கட்சிகள் தலைதூக்கிய போது அவை சாதியுணர்வை தங்களின் வலிமையான ஆயுதமாக முன்வைத்தன. சாதிக்கட்சி மாநாடுகள், அது சார்ந்த அரசியல் வன்மங்கள், மோதல்கள், வெற்றிகள் போன்றவைகளைக்குப் பிறகு கல்வியறிவு பெற்ற சமூகம் கூட 'தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன்' என்பதை பொதுவில் பெருமையாக உரையாடுமளவிற்கு மாறிப் போனதையும் சாதிய அரசியல் மெல்ல வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதையும் காண வேதனையாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள கல்விமுறை என்பது சுயசிந்தனை, பகுத்தறிவு, சமூக அரசியல் போன்றவைகளை ஒரு தனிநபரிடம் வளர்க்காமல் தன்னுடைய சமூக அந்தஸ்தையும் மதிப்பையும் செல்வத்தையும் பெற்றுக் கொள்ளும் ஒரு கருவியாக மாத்திரம் கல்வி பயன்படுத்தப்படும் அவலம் நீடிக்கிறது. எனவேதான் உயர்கல்வி கற்றவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், வருங்கால சந்ததிகளின் வளர்ச்சியையும் கனவுகளையும் தீர்மானிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட பிற்போக்குத்தனமான சிந்தனையுடையவர்களாகவும் சுயசாதி அபிமானத்திலும் இருப்பதாலும் அது சார்ந்த மனச்சாய்வுகளிலிருந்தும் பாரபட்சங்களில் இருந்தும் விலக முடிவதில்லை. முற்போக்கு சார்ந்த சிந்தனைகளுடன் கூடிய மனிதனாக மலர்வதற்கு அவர்கள் கற்ற கல்வி உதவுவதேயில்லை என்பதுதான் சோகம்.

***

ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுக்களில் இந்தியாவால் அதிகம் சாதிக்க முடியாத போது "ஏறத்தாழ 120 கோடி பேர் இருக்கோம். ஒரு தங்கம் கூட வாங்க முடியலையே சார்" என்கிற பெருமூச்சுக்களை இங்கு கேட்க முடியும். அதற்குக் காரணம் நம்மிடம் திறமையில்லை என்பது அர்த்தமில்லை. முன்பே குறிப்பிட்டது போல இங்குள்ள கல்விமுறையும் சமூக சூழலும் ஒரு நபரின் தனித்தன்மைகளையும் விருப்பங்களையும் அழித்து அல்லது புதைத்து 'எந்த துறை சார்ந்து கல்வி கற்றால்  நல்ல சம்பளத்துடன் வருங்காலத்தில் வசதியாக வாழலாம்' என்கிற தேடலுடன் அது சார்ந்து மாத்திரமே ஆட்டு மந்தைகளாக ஓட வைக்கிறது. பாடத்திட்டம் சார்ந்து கற்பதைத் தவிர ஒரு மாணவனின் வேறு எந்த விருப்பங்களும் கனவுகளும் அவனுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. வருங்கால வளம் குறித்த கவலையில்லாத செல்வந்தர்களுக்கே அது சாத்தியமாகிறது. 'ஒரு மாணவன் விளையாட்டுத் துறையிலோ அல்லது கலை சார்ந்த துறைகளிலோ ஆர்வம் கொண்டு அது சார்ந்து தொடர்ந்து இயங்க முடிவு செய்வானாயின், 'உருப்படாத அல்லது பிழைக்கத் தெரியாத' மாணவனாகவே பார்க்கப்பட்டு அது சார்ந்த அனுதாபப் பார்வைகளையும் ஏளனங்களையும்தான் சந்திக்க முடியும். 'தங்கம் வாங்கலையே சார்'  என்று பெருமூச்சு விட்ட அந்த நடுத்தர வர்க்க நபர், அவருடைய மகன் தன்னுடைய கனவை மறைத்து வைத்து விட்டு  பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான்' என்கிற உண்மையை அறியாமல் இருக்கக்கூடும். அல்லது அவரே அதற்கான தடைகளை இட்டவராக இருக்க்கூடும்.

இந்த நடைமுறை தடைகளைத் தாண்டி ஒருவன் தன்னுடைய கனவு சார்ந்த துறைகளுக்குச் செல்ல முயன்றால் கூட எங்கும் நிறைந்திருப்பதைப் போன்று அங்கும் நீண்டிருக்கும் பல்வேறு அரசியலையும் சமாளித்தால்தான் தன்னுடைய பயணத்தை தொடர முடியும். சாதிய அரசியலுக்கு பலியாகும் ஒரு விளையாட்டு வீரனின் துயரத்தையும் அவனுடைய நீண்ட கால கனவு நொறுங்கிப் போகும் பரிதாபத்தையும் தமிழ் சினிமாவுக்கேயுரிய சம்பிரதாயங்களுடன் விவரிக்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'ஜீவா' திரைப்படம். தமிழ்நாட்டு கிரிக்கெட் அமைப்பில் நிலவும் பிராமண சமூகத்தின் ஆதிக்கத்தையும் அது சார்ந்த அரசியல் இயங்குவதையும் மிக நேரடியான குறிப்புகளுடன் அப்பட்டமாக முன்வைக்கிறது இத்திரைப்படம்.

இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் கனவுகளுடன் வளர்கிறான் ஜீவா. தமிழ் சினிமாவில் ரஜினி போல கிரி்க்கெட்டின் உச்சநட்சத்திரம் சச்சின்தானே? எனவேதான் சச்சின்தான் அவனது லட்சியநாயகன். தேசிய அணியில் இணைந்து இந்தியாவிற்காக கிரிக்கெட் ஆடவேண்டுமென்பது அவனது ஆவல். அதற்காக கடுமையாக உழைக்கிறான். நடுத்தர வர்க்கத்தினருக்கேயுரிய நடைமுறை தடைகளைத் தாண்டி ரஞ்சி டிராபிக்கு தேர்வான செய்தி அவனுக்கு குறுகிய கால மகிழ்ச்சியைத் தான் வருகிறது. ஏனெனில் தமிழ்நாட்டு கிரிக்கெட் கிளப்பில் நீண்டகாலமாக நிலவும் சாதிய அரசியல். அங்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மாத்திரமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதர சமூகத்தைச் சார்ந்தவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் மறைமுகமாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இந்த அரசியலுக்குப் பலியாகும் ஜீவாவின் நண்பன் மனஉளைச்சலினால் தற்கொலை செய்து கொள்கிறான். ஜீவாவும் விரக்தியின் உச்சியை அடையும் போது 'கடுமையான உழைப்பாளிகளை எதுவும் தடைசெய்ய முடியாது. அவர்களது உழைப்பு நிச்சயம் ஒருநாள் பயனளிக்கும்' என்கிற தங்கவிதியின் காரணமாக அதிர்ஷ்டவசமாக அவனுக்கு இன்னொரு கதவு திறக்கிறது. அதன் மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்து தன் கனவை அடைகிறான் ஜீவா.

***

'இந்த இயக்குநரின் திரைப்படங்களுக்கு நம்பிச் செல்லலாம். மோசமாக இருக்காது' என்று பார்வையாளர்கள் முன்கூட்டியே நம்பிக்கை வைக்கிற இயக்குநர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் சுசீந்திரன். 'ராஜபாட்டை' தவிர அவரது அத்தனை திரைப்படங்களும் சுவாரசியமான திரைக்கதையையும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதாகவும் அமைந்திருக்கிறது. இவரது முதல் திரைப்படமான வெண்ணிலா கபடிக் குழுவில் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் மாத்திரமே இன்னமும் ஜீவிக்கும் கபடி விளையாட்டையும் இடைநிலை சாதியைச் சார்ந்தவர்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கபடி வீரனொருவன் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை நுட்பமாக தொட்டுச் சென்றிருப்பார். ஆனால் 'ஜீவா' திரைப்படத்தில் கிரிக்கெட்டில் நிலவும் பிராமண சமூகத்தின் அரசியலை அதற்குரிய அடையாளங்களுடன் தெளிவாகப் புரிவது போல நேரடியாகவே உரையாடியிருக்கிறார். ஒரே மாதிரியான விமர்சனத்தை ஒரு படத்தில் முணுமுணுக்கும் குரலிலும் இன்னொரு திரைப்படத்தில் உரத்த குரலிலும் அமைத்திருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இது இயக்குநரின் வளர்ச்சியைக் காட்டுகிறதா அல்லது பிராமண சமூகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களினால் பெரிய அளவில் எதிர்ப்பு வராது என்கிற நடைமுறை உண்மையை இயக்குநர் புரிந்து கொண்டிருக்கிறாரா என்கிற கேள்வியும் எழுகிறது.

சாதியம் தொடர்பான பல்வேறு சமூகப் போரட்டங்களுக்கும் விழிப்புணர்வுகளுக்கும் பின் பிராமண சமூகத்தின் ஒருகாலத்திய ஆதிக்கம் இன்று தளர்ந்து போயுள்ளது என்றாலும் கூட அதனுடைய சூட்சுமக் கயிறுகள் இன்னமும் அதிகாரத்தின் பின்னால் அமர்ந்து மறைமுகமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்கிற உண்மையை உரத்த குரலில் முழங்கியிருக்கும் இயக்குநரைப் பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் பிராமண சமூகம் விட்டுச் சென்றிருக்கும் அதிகாரத்தையும் துவேஷங்களையும் இன்று இடைநிலை சாதிகள் கைப்பற்றியிருக்கும் நடைமுறை உண்மையையும் தமிழ் திரை துணி்ச்சலாக பதிவு செய்ய வேண்டும்.

'ஒரு விளையாட்டு வீரனின் கனவை சாதிய அரசியல் எப்படிச் சிதைக்கிறது' என்பது இத்திரைப்படத்தின் மையம். எனவே அது தொடர்பான காட்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் தந்து அதை மையமாகக் கொண்டுதான் இத்திரைப்படம் பயணித்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத காதல், அது சார்ந்த கேளிக்கைப் பாடல்கள், இன்ன பிற அபத்தங்கள் ஆகியவற்றை இத்திரைப்படமும் கைக்கொண்டிருக்கிறது என்பதுதான் சோகம். மற்ற காட்சிகள் கூடாது என்பதல்ல. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டும் உருவாகும் ஹாலிவுட் திரைப்படங்களை உதாரணமாகக் கொண்டால் அவை திரைப்படத்தின் மையத்தை நோக்கி விரைவாக நகரும், அதற்கு முக்கியத்துவம் தரும் காட்சிகளை பிரதானமாகக் கொண்ட திரைக்கதையைக் கொண்டிருக்கும். இந்தியாவில் உருவான, ஷாரூக்கான் நடித்த 'சக்தே' திரைப்படத்தையும் உதாரணமாகக் கொள்ளலாம். விளையாட்டுப் போட்டி தொடர்பான காட்சிகள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்படி அதற்குரிய பரபரப்பான கோணங்களுடனும் சூழல்களுடனும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். 'ஜீவா' ஒரளவிற்கே இதை சாத்தியப்படுத்தியுள்ளது.

மேலும் 'கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் உள்ள சாதிய அரசியல்' என்கிற ஒற்றைத்தன்மையுடைய பார்வையைத்தான் இத்திரைப்படம் முன்வைக்கிறது. இந்த விளையாட்டு சமூகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் இதர ஆபத்துக்களைப் பற்றி உரையாடவேயில்லை. இந்தியாவிலுள்ள பல்வேறு பாரம்பரியமான விளையாட்டுக்களை விழுங்கி விட்டுதான் கிரிக்கெட் எனும் விளையாட்டு இன்று அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டே  இதை ஊதிப் பெருக்கி தங்களுக்கான வணிக வாய்ப்பை வளர்த்துக் கொள்கின்றன. ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் ஏறக்குறைய கடவுளுக்கு இணையாக இங்கு வழிபடப்படுகின்றனர். விளம்பரங்களில் தோன்றி தங்களின் முதலாளிகளுக்கு சாதகமாக இயங்குகின்றனர். இவர்கள் விளையாட்டில் சரியாக பங்களிக்காவிட்டால் கடந்த கால சாதனைகள் ஒரே நாளில் மறக்கப்பட்டு மறுநாளே இந்த கடவுள்கள் தூக்கி எறியப்படும் உணர்ச்சி சார்ந்த அபத்தங்களும் நிகழ்கின்றன. நீக்கவே முடியாத ஒரு மதமாக கிரிக்கெட் இந்தியச் சமூகத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த விளையாட்டிற்குப் பின் இயங்கும் பெரும் சூதாட்டமும் பணத்திற்காக நிகழ்த்தப்படும் முன்கூட்டியே திட்டமிட்ட நாடகங்களும் அம்பலமாகியும் கூட  இதன் மீதான பிரேமை குறையவில்லை என்பது நம்முடைய கண்மூடித்தனமான அறியாமையையே சுட்டிக் காட்டுகிறது. கிரிக்கெட் மீது 'ஏற்படுத்தப்பட்டிருக்கும்' பிரியம் அனைவரின் கண்களையும் மறைக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் நிகழும் விளையாட்டுப் போட்டிகள் ஏறக்குறைய போர் சார்ந்த பதட்டத்தையும் மதம் சார்ந்த துவேஷங்களையும் வெளிப்படுத்துகின்றன. வரவேற்பறைகளின் உரையாடலில் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஒரு அந்தஸ்திற்காக கிரிக்கெட்டைக் காணும் கூட்டமும் இருக்கிறது. எப்போதும் குளிரும் மழையும் நீடித்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து போன்ற பிரதேசங்களில் வெயில் காலம் என்பது அவர்கள் மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பு. எனவே வெயிலில் அதிக நேரம் நிற்கும்படியான ஒரு விளையாட்டை உருவாக்குவது தன்னிச்சையாகவே அங்கு  நிகழ்ந்திருக்கும். இதை உணராமல்  உச்சி வெயிலிலும் மண்டை காய்ந்து கொண்டு ஒரு அந்தஸ்திற்காக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களைக் காண வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

கிரிக்கெட் தவிர இன்னபிற விளையாட்டுக்களும் அது சார்ந்த வாய்ப்புகளும் இந்தியாவில் இருக்கிறதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும்படி இது அங்கிங்கெனாபடி எங்கும் நிறைந்துள்ளது. கிராமத்திலுள்ள சிறுவர்கள் கூட கில்லி, பம்பரம், காற்றாடி போன்றவைகளை தூக்கிப் போட்டு விட்டு சிறிய குச்சிகளை வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை பார்த்துப் பழகியே நீண்டகாலமாகி விட்டது. இதர விளையாட்டுக்களில் சாதிக்கும் வீரர்கள் ஊடகங்களாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு மெளன துயரத்துடன் கடந்து செல்கிறார்கள். 'மேரி கோம்' என்கிற திரைப்படம் வந்த பிறகுதான் அப்படியொரு குத்துச்சண்டை வீராங்கனை நம்மிடையே உள்ளார் என்கிற உண்மையே நமக்குத் தெரியவருகிறது.

இப்படி அசுரத்தனமாக வளர்க்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு சமூகத்தின் பல்வேறு கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் அவலத்தையும் அதன் பரிமாணங்களோடு இயக்குநர் இத்திரைப்படத்தில் சித்தரித்திருக்கலாம் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சாதிய அரசியலால் தன்னுடைய விளையாட்டுக் கனவு சிதைக்கப்பட விருந்த துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நாயகன், தன்னுடைய திருமணத்திற்காக தான் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்படும் ஒரு தருணத்தை, அது சார்ந்த மத அரசியலை மிக எளிமையானதொரு மேம்போக்கான உரையாடலில் தாண்டிச் செல்லும் முரணை புரிந்து கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் எனும் மதமே அவனை முழுவதுமாக ஆக்ரமித்திருக்கிறதா?

'பிறநாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகுதான் தோற்றுப் போகிறார்கள். ஆனால் இங்கு வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்றுப் போகிறார்கள்' என்று ஜீவா உச்சக்காட்சியில் முன்வைக்கும் வசனத்தில் உண்மையிருந்தாலும் இங்குள்ள மதம் மற்றும் சாதிய அரசியல் போலவே மேற்கத்திய நாடுகளில் நிற அரசியல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். இது தொடர்பாக பல அயல்சினிமாக்கள் உருவாகியுள்ளன. உதாரணமாக 42 என்கிற ஆங்கிலத் திரைப்படத்தை குறிப்பிடலாம். பேஸ்பால் எனும் விளையாட்டில் நிலவிய நிறவெறி அரசியலை உடைத்துக் கொண்டு சாதித்த கருப்பின இளைஞரான ஜாக்கி ராபின்சன் எனும் முன்னோடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவான திரைப்படமது.

பிரதேச அரசியலில் நிலவும் சாதிய தடைகளைத் தாண்டி ஜீவா, தேசிய கிரிக்கெட் அணியில் இணைந்து விடுவதோடு இத்திரைப்படம் நிறைவுறுகிறது. ஆனால் அங்கும் நிலவும் மத அரசியல், வர்க்க அரசியல் என்று உள்ளிட்ட பல அரசியல் தடைகளயும் அவர் தாண்ட வேண்டியிருக்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சச்சினின் பிரகாசத்திற்குப் பின்னால் கோடிக்கணக்கான சச்சின்கள் வாய்ப்புக் கூட கிடைக்காமல் பல்வேறு திசைகளின் இருளில் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர் என்கிற நிசர்சனத்தை முன்வைக்கும் ஒரு படைப்பை உருவாக்கினதற்காக இயக்குநர் சுசீந்திரனை மனமாரப் பாராட்டலாம்.

(காட்சிப் பிழை, நவம்பர் 2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)    

suresh kannan

Sunday, November 16, 2014

மெட்ராஸ் - தகர்க்கப்பட வேண்டிய சுவர்கள்




சுவர்கள் மனிதர்களுக்கான அந்தரங்க வெளிகளை உறுதிப்படுத்துபவை. பாதுகாப்பை ஏற்படுத்துபவை. அதே சமயத்தில் அவர்களுக்குள் பிரிவினைகளையும் உண்டாக்குபவை. பலவிதமான வண்ணங்களையும் செய்திகளையும் தாங்கியவை. பெர்லின் சுவர் முதற்கொண்டு உத்தப்புரத்தின் தீண்டாமைச் சுவர் வரை அவைகளுக்கான அரசியல் பின்னணிகளும் இடிக்கப்பட வேண்டிய காரணங்களும் உண்டு.

அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு சுவர், அதன் பின்னுள்ள அரசியல், அதைக் கைப்பற்ற, தக்கவைத்துக் கொள்ள தலைமுறை தாண்டியும் மோதிக் கொண்டேயிருக்கும் சக்திகள்... இவற்றின் பின்னணியில் கைவிட முடியாத தமிழ் சினிமாவின் சில சம்பிதாயங்களோடு  அடித்தட்டு மக்களுக்கான ஓர் அரசியல் சினிமாவை உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். பல்லக்குத் தூக்கிகள் காலம்பூராவும் எவரையாவது சுமந்து கொண்டேயிருப்பது அவசியம்தானா என்கிற உண்மையை அவர்களே கேட்டுக் கொள்ளும்படியான சிந்தனையைத் தூண்டும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். இதுவரையிலும்  ஆதிக்கச் சாதிகளால் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் உழைப்புச் சுரண்டல்களுக்கு ஆட்பட்டு பலியாடுகளாக இருக்கும் விளிம்புகள் மையத்தை நோக்கி நகர வேண்டியதின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார். அறியாமை எனும் இருளில் இருந்து அகல கல்வி என்பதையும் தாண்டி சமூக அரசியலையும் அது சார்ந்த விழிப்புணர்வையும் பெற வேண்டிய தேவையை பதிவு செய்திருக்கிறார்.

வடசென்னையின் கலாசாரத்தை பின்புலமாகக் கொண்டு அதன் கச்சாத்தன்மையோடு இதுவரை எந்தவொரு தமிழ் திரைப்படமும் உருவாக்கப்படவில்லை என்பது, பிறந்ததில் இருந்தே அந்த நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவன் என்கிற முறையில் என்னுடைய நீண்ட கால மனக்குறையாக இருந்தது. அவ்வாறு சித்தரிக்கப்பட்டதாக முன்னர் வெளியான சில திரைப்படங்களைப் பற்றி  கூறப்பட்டாலும் அவை பாரதிராஜா தம்முடைய திரைப்படங்களில் பகற்கனவுகளின் கூறுகளோடு சித்தரித்த கிராமங்களைப் போலவே போலித்தனமானவை. சில தேசலான அடையாளங்களை பாவனை  கொண்டு பாவனை செய்தவை.  அதுகாறும்  முந்தைய திரைப்படங்கள்  ஏற்படுத்தி வைத்திருந்த தேய்வழக்குகளிலிருந்து பெரிதும் மீறாதவை. சோ, லூஸ் மோகன் முதற்கொண்டு கமல்ஹாசன் வரை பேசும் பாணியே வடசென்னை  மக்களின் தமிழ் என்று நிறுவப்பட்டுக் கொண்டும் நம்பப்பட்டுக் கொண்டுமிருந்தது.  ('பொல்லாதவன்' திரைப்படத்தில் குறுகிய நேரத்தில் கடந்து போகும் செண்ட்ராயன் பேசும் ஒரு வசனம் மாத்திரமே அதுவரையான தமிழ் சினிமாவில் நான் கேட்ட அசலான வடசென்னையின் குரல்). இவ்வகையான  போலித்தனங்களிலிருந்து விலகி தனது மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் சமகால வடசென்னையின் கலாசார முகத்தை இன்னமும் துலக்கமாக்கி இயன்ற வரையில் அசலாக சித்தரித்து சில அடிகள் முன்னே நகர்ந்து சென்ற காரணத்திற்காக இயக்குநர் இரஞ்சித்தைப் பாராட்டலாம்.

பொதுவாக சென்னை என்றாலே அதுவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் எல்.ஐ.சி. கட்டிடத்தையும் மெரினா கடற்கரையையுமே தமிழ் சினிமாவின் காமிராக்கள் காட்டிக் கொண்டிருந்தன.  சென்னையின் வடதுபுறம் அதன் பார்வைக்கு படவே படாது. அப்படியே வடசென்னை பக்கம் திரும்பினாலும் அது ரவுடிகளும் வன்முறையாளர்களும் அரசியல் அடியாட்களும் பல்விதமான குற்றங்களை புரிபவர்களும் பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்களும் பிச்சையெடுப்பவர்களும் என்று அதை உதிரிகள் நிறைந்த ஒரு லும்பன் சமூகமாகத்தான் இதுவரை சித்தரித்திருக்கிறது. இதிலிருந்து விலகி அங்கிருந்து  ஒரு சாஃப்ட்வேர் நிறுவன இளைஞன் வருகிறான் என்கிற நடைமுறை உண்மையின் மூலம் அதை முன்னேறிக் கொண்டிருக்கிற சமூகத்தின் அடையாளமாக சித்தரித்த விதம் சிறப்பானது. குடித்து விட்டு வீட்டுப் பெண்களை ஓயாது அடித்து ஆபாச வசைகளை வீசும் ஆண்களாகவே காட்டப்பட்டுக் கொண்ட வடசென்னையின் அடித்தட்டு சமூகத்தில், அங்கும் எல்லா சமூகத்தையும் போலவே ஊடலும் கூடலும் அன்பும் கொண்ட ஓர் இயல்பான ஆண் கொண்ட குடும்பத்தை அதன் அழகியலோடு  காட்சிப்படுத்தியதற்காக இயக்குநரை பாராட்ட வேண்டும். வறுமையின் துயரமும் அழுகையுமாக சித்தரிக்கப்பட்டதிலிருந்து விலகி, கால்பந்தும் கேரமும் விளையாடும் இளைஞர்கள், மேற்கத்திய நடனம் பயிலும் சிறுவர்கள், சிரிப்பும் கும்மாளமுமாக ஒருவரையொருவர் சீண்டிக் கொள்ளும் இளைஞர்கள் என்று ஒரு கொண்டாட்ட சமூகமாக அதை முன்வைத்ததற்காகவும்.

***

அடித்தட்டு சமூக இளைஞர்களை அதுவரையான தமிழக அரசியல் எப்படியெல்லாம் சுரண்டிக் கொண்டிருந்தது என்பதை முன்வைத்து இதுவரை சில அரசியல் சினிமாக்கள் வந்திருக்கின்றன. பாரதிராஜாவின் என்னுயிர் தோழன், சுரேஷ் கிருஷ்ணாவின் சத்யா (ராம்கோபால் வர்மாவின் 'இந்தி' சத்யாவும்) செல்வராகவனின் புதுப்பேட்டை போன்று சில படங்கள். ஏறக்குறைய அதே மாதிரியான கதைக்களனைத்தான் 'மெட்ராஸூம்' கொண்டிருக்கிறது. ஆனால் முந்தைய திரைப்படங்களில் அந்த இளைஞர்களின் பின்னணியைப் பற்றிய துல்லியமான சித்திரம் எதுவுமிருக்காது. மேலும் அரசியல் கட்சிகளையும் ஜாக்கிரதையாக மஞ்சள் கட்சி. பச்சை கட்சி என்று ஒரு மாதிரி மையமாக குறிப்பிட்டு ஒப்பேற்றியிருப்பார்கள். ஆனால் மெட்ராஸ்-ஸின் புள்ளி எங்கே விலகியும் தனித்தும் நிற்கிறது என்றால் இதில் வரும் பிரதான பாத்திரங்களான அன்புவும் காளியும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கான தடயங்கள் படத்தில் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன. 'தமிழ் தமிழ் -னு சொல்றவங்க எல்லாம் சாதி, மதம் -னு வந்தா மட்டும் கத்தியை தூக்கிடறாங்க' என்று கடந்து போகும் ஒரேயொரு வசனம், அதுவரையான தமிழக அரசியலின் மீது பலத்த விமர்சனமாகவும் அடியாகவும் விழுகிறது.  இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் இயல்பாக தேசிய அரசியலின் கைகளில் இருந்த அதிகாரத்தை திராவிடக் கட்சிகள் மொழி, இன உணர்வுகளைப் பயன்படுத்தி கைப்பற்றி அடித்தட்டு சமூகத்தை ஓட்டு வங்கியாகவும் அடியாட்களாகவும் தேர்தல்பணி தொண்டர்களாகவும் உபயோகப்பட்டுக் கொண்டு வந்ததையும், அதன் பிறகு சாதிய உணர்வுகளை பயன்படுத்தி மேலெழுந்த இடைநிலை சாதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் கலவரங்களுக்கு காரணமாக இருந்து தாழ்த்தப்பட்ட சமூகங்களின் மீது நிகழ்த்திய வன்கொடுமைகளையும் அந்த ஒற்றை வசனம் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. இந்த வன்முறைகளிலிருந்து விடுபடவும் சமூகத்தில் மேம்படவும் தாழ்த்தப்பட்ட சமூகமானது சமூக அரசியலை கற்பதன் மூலம் ஒன்று திரண்டு அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்பது ஒட்டுமொத்தமான கச்சிதமான செய்தியாக இத்திரைப்படத்தில்  வெளி்ப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படம் 1990-களிலிருந்து துவங்குவது ஒருவகையில் மிகப் பொருத்தமே. தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது 1989-ல். வி.பி. சி்ங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை செய்தது 1990. தமிழகத்தில் தலித் சமூகத்தை சார்ந்த அரசியல் கட்சிகள் ஒரு பெரும்சக்தியாக மேலெழுந்ததும் அடையாளம் காணப்பட்டதும் 1990-களில். நவீன தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்பது ஒரு வகைமையாக உருவாகியதும் தொன்னூறுகளிலேயே நிகழ்ந்தது. உயிர்மையின் கடந்த இதழ் கட்டுரையொன்றில் மராத்திய சினிமாவான ஃபன்றி திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது  ஒரு கால கட்டத்திற்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் தலித் வகைமையிலான படைப்புகள் பரவலாக அடையாளங் காணப்பட்டதைப் போல இடைநிலைச் சாதிகளின் பிம்பங்களை விதந்தோதிக் கிடக்கும் தமிழ் சினிமாவில் தலித் சினிமா உருவாக வேண்டியதின் அவசியத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதை சாத்தியப்படுத்தும் நம்பிக்கை தரும்  துவக்க அடையாளமாக 'மெட்ராஸ்' உருவாகியிருப்பது குறித்து மகிழ்ச்சி. இந்த இயக்குநரின் முந்தைய திரைப்படமான 'அட்டகத்தி'யும் தலித் சமூகத்தின் பின்புலத்தில் உருவாகியிருந்தாலும் அதன் மையம் காதல் குறித்தது. 'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' என்று பம்மாத்து செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் போலித்தனமான மதிப்பீடுகளை தனக்கேயுரிய பகடிகளுடன் கலைத்துப் போட்டது அத்திரைப்படம். ஆனால் மெட்ராஸ் அதிலிருந்து நகர்ந்து அரசியல் பற்றின உரையாடலை முன்வைக்கிறது.

வணிக சினிமாவிற்கும் கலை சார்ந்த சினிமாவிற்குமான இடையிலான புள்ளியில் இயங்குகிறது மெட்ராஸ். ஒவ்வொரு காட்சிக் கோர்வையும் அதன் சிறப்பான துவக்கமும் நிறைவுமாக கச்சிதமாக திட்டமிடப்பட்ட அழகியலுடன் நகர்கின்றன. சட்டகங்களில் நிறைந்திருக்கும்  முகங்கள் அதனதன் முக்கியத்துவத்துடனும் இயல்புடனும் பதிவாகியிருக்கின்றன. அன்பு மற்றும் காளி என்கிற இரு இளைஞர்களின் வாழ்க்கைக்குள் சென்று திரும்பிய உன்னத அனுபவத்தை ஏற்படுத்துகிறது இத்திரைப்படம். கார்த்தி இத்திரைப்படத்தின் நாயகனாக அறியப்பட்டாலும் துணைப்பாத்தி்ரமாக வரும் அன்புவே (கலையரசன்) படத்தின் முற்பகுதி முழுதும் நிறைந்திருக்கிறான். ஒரு குறிப்பிட்ட காட்சியில் கார்த்தி ஏதோ அட்மாஸ்பியருக்காக நிற்க வைக்கப்பட்ட உதிரிப்பாத்திரம் போல் பின்னணியில் நின்று கொண்டிருக்க அன்புவும் மாரியும் பிரதானமாக உரையாடும் காட்சியைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரும்பாலான பிரேம்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் பஞ்ச் டயலாக் நாயகர்களின் சினிமாவே இங்கு  தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் போது இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சினிமாவைக் காண ஆறுதலாக இருக்கிறது.

அது மாத்திரமல்ல, பிரதான பாத்திரமான காளியும் (இறுதிக் காட்சியைத் தவிர) அவனுடைய நாயகத்தன்மை நீக்கம் செய்யப்பட்ட ஓர் இயல்பான மனிதனாகத்தான் பதிவாகியிருக்கிறான். அவனுக்கு காதலிக்க பெண் கிடைப்பதில்லை. பெண்களுடன் பழக அவனுக்குத் தெரியவில்லை. திருமணத்திற்காக பார்க்கப்படும் பெண்களையெல்லாம் அவனது தாய் ஏதோவொரு சொத்தையான காரணம் சொல்லி நிராகரிக்கிறாள். தனக்குத் திருமணமே ஆகாது என்று அவனுக்குத் தோன்றி விடுகிறது. தான் விரும்பிய பெண் தன்னை நிராகரித்து விட்டாள் என்பதற்காக குடித்து விட்டு புலம்பி அழுகிறான். பலி வாங்கும் சுவர் என்று நம்பப்பட்ட இடத்தின் முன் தனது பைக் நின்று போன விநோதத்தை எண்ணி உள்ளூர அச்சம் கொள்கிறான். தற்செயலாக ஒருவனை கொன்று விட நேர்ந்த பிறகு 'அய்யோ.. நான் ஜெயிலுக்கு போகணுமே.. என் எதிர்காலமே வீணாகி விட்டதே' என்று அழுகிறான். தன்னுடைய அம்மா சொல்லிதான் தான் விரும்பியவள் தன்னை காதலித்தாள் என்பதை பிறகு அறிய அசட்டுச்சிரிப்புடன் அதை ஏற்கிறான். நாயகர்களும் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட  மிகைப்படுத்தப்பட்ட அபத்தங்களும் கோலோச்சுகிற தமிழ் சினிமாவில் இப்படியான சித்தரிப்புகள் மிக அபூர்வமான விஷயம்.

***

'இந்த நிமிஷத்தை சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்' என்கிற இயல்புவாத தன்மையோடு இயங்குகிறவன் காளி. சட்டென்று கோபம் கொள்ளக்கூடியவனாக இருந்தாலும் புறவடிவங்கள் சார்ந்தும் உணர்ச்சி சார்ந்தும் அரசியலை அணுகுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. அவனுடைய உயிர்நண்பன் அன்பு. தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்காக உண்மையாக உழைப்பவன். அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய முயலும் என்கிற லட்சியவாத தன்மையோடு இயங்குகிறவன். சுவரைக் கைப்பற்றுவது என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதின் குறியீடாக எண்ணுபவன். அன்புவிற்கு உரிய அரசியல் நிதானமும் முதிர்ச்சியும் காளிக்கு இல்லை. இவர்களிடையே நிகழும் முரணியக்கம்தான் படத்தின் முதற்பகுதியை நகர்த்திச் செல்கிறது. அன்புவைப் போன்ற லட்சியவாத தொண்டர்கள் உலகமயமாக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேநீர் மாத்திரம் குடித்துக் கொண்டு தேர்தல் பணிகளை உற்சாமாக செய்த அர்ப்பணிப்பு உணர்வு சார்ந்த தொண்டர்கள் முந்தைய காலத்தில் இருந்தார்கள். அரசியலும் ஒருவகையான மிகச்சிறந்த வணிகம் என்பதைப் புரிந்து கொண்ட மக்களும்  இன்று அதற்கேற்பதான் எதிர்வினை புரிகிறார்கள்.

இத்திரைப்படத்தினுள் புழங்கும் மனிதர்கள் ஏறத்தாழ அசலான வாழ்க்கைக்கு நெருக்கமான மனிதர்களாக இருக்கிறார்கள். 'காளியம்மனுக்கு வேண்டி வரம் வாங்கி வந்த புள்ளடா நீ' என்று தொண தொணத்துக் கொண்டேயிருக்கும் காளியின் அம்மா (என்னுயிர் தோழன் நாயகி ரமா), இவருடைய வாய்க்குப் பயந்து அடங்கும் கணவர், வெற்றிலைபாக்கு வாங்க காசு கிடைப்பதற்கேற்ப எதிர்வினையாற்றும் பாட்டி, "லேட்டா கல்யாணம் பண்ணா உனக்குப் பொறக்கற குழந்த தாத்தா -ன்னு தான் கூப்பிடும்' என்று கலாய்க்கிற நண்பர்கள், பேசுவது புரியாவிட்டாலும் உடல்மொழியாலேயே கவர்கிற, காவல்துறையின் வன்கொடுமை காரணமாக மனநிலை பிறழ்ந்த ஜானி, (ஹரிகிருஷ்ணன்) கடவுள்மறுப்பு கொள்கையுடைய தனித்தன்மையுடன் கூடிய நாயகி, (காத்ரின் தெரசா), அவளுக்கு தோசை சுட்டுப் போடுகிற கட்சிக்காரர் அப்பா, உடன்பிறப்புகளையும் ரத்தத்தின் ரத்தங்களையும் நினைவுப்படுத்துகிற வசனம் போல  "நீ என் புள்ள மாதிரிடா" என்று நெக்குருகி பிறகு  துரோகம் செய்கிற அரசியல்வாதி மாரி, "எங்க அப்பா படத்தை எப்படியாவது சுவத்துல வரைஞ்சுடணும்" என்று அது குறித்த ஏக்கத்திலேயே தொடர்ந்து இயங்கும் இன்னொரு அரசியல்வாதி கண்ணன், அவருடைய மகன் பெருமாள், 'இந்த ஏரியாவிலேயே நான்தான் கெத்தா இருக்கணும்' என்கிற குறிக்கோளுடன் அரசியல் அடியாளாக இயங்குகிற விஜி,  'நீ குத்துக்கல்லு மாதிரி இருந்தியன்னா என் தலைவனுக்குத்தான் முத்தம் கொடுக்கணும்" என்று கணவனை சீண்டுகிற மேரி (ரித்விகா), பெற்றோரின் ரொமான்ஸை பக்கத்து வீட்டு மாமாவிடம் போட்டுக் கொடுக்கும் சிறுவன் ரொனால்டோ, 'சுவத்தை எப்படியாவது பிடிக்கணும்டா" என்கிற குறிக்கோளுடன் துரோக அரசியலுக்குப் பலியாகும் அன்பு, (கலையரசன்), 'சுவத்தைப் பிடிச்சுட்டா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடுமா" என்று யதார்த்தம் பேசுகிற காளி (கார்த்தி) என்று ஏறத்தாழ அத்தனை பாத்திரங்களுமே பார்வையாளர்களின் மனதில் நிரந்தரமாக உறைந்து விடுவது தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் நிகழ்கிற அதிசயம்.

இத்திரைப்படத்தின் பற்றி இசை பற்றி பிரத்யேகமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். புதிய அலை இயக்குநர்களைப் போலவே அவர்களுடன் இணைந்து கவனிக்கத்தக்கதொரு  இசையமைப்பாளராக உருவாகிக் கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அவர்களின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு உறுதுணையாகவும் அவைகள் புதிய வண்ணங்களில் தோற்றம் கொள்வதற்கும் இவரது இசை முக்கியமான காரணியாக இருக்கிறது. தமிழ் திரையிசையில் ஒவ்வொரு காலகட்டத்தையும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செய்து வந்ததைப் போலவே வருங்கால தமிழ் சினிமாவை ஆக்ரமிப்பு செய்யப் போகும் தனித்தன்மையுடனும் புத்துணர்ச்சியான படைப்புகளுடன் மேலெழுந்து வந்து கொண்டிருக்கிறார் சந்தோஷ். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் பாடல்கள் என்பவை திணிக்கப்பட்டவைகளாகவும் வேகத்தடைகளாகவும் அமைந்து எரிச்சலூட்டுபவை. ஆனால் இத்திரைப்படத்தில் பாடல்கள் மிக இயல்பான தருணங்களில் மிக அழகாக பொருந்தியிருப்பதை கவனித்தேன்.

கானா பாடல் என்பது அதுவரை பெரும்பாலும் குத்தாட்டப்பாடல்களாகத்தான் தமிழ் சினிமாவில் உபயோகப்படுத்தப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனால் யதார்த்தத்தில் அவை இறப்பு,பிறப்பு, துயரம், மகிழ்ச்சி, தத்துவம், காதல், அது சார்ந்த தோல்வியின் சோகம் என்று அடித்தட்டு மக்களின் வாழ்வில் பல்வேறு தருணங்களில் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. உழைக்கும் மக்கள் தங்களின் உணர்வுகளை எளிய வரிகளோடும் இசையோடும் வெளிப்படுத்தும் இசையது. கிராமங்களில் உருவாகும் நாட்டுப்புறப் பாடல்களைப் போன்று இது சென்னையின் பிரத்யேகமான அடையாளம். இது இத்திரைப்படத்தில் ஏறத்தாழ அத்தன்மையின் இயல்போடு பதிவாகியிருக்கிறது. புளியந்தோப்பு பழனி, மரண கானா விஜி, கானா பாலா என்று ஒரு காலத்தில் அடித்தட்டு மக்களின் சூழலில் மாத்திரமே ஒலித்துக் கொண்டேயிருந்த இசை இன்று மைய நீரோட்ட வெளிகளில் ஒலிக்கும் போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அது போலவே இதன் பின்னணி இசையும். தேவையான இடங்களில் மாத்திரம் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டு முக்கியமான தருணங்களின் காட்சிகள் அழுத்தமாக பதிவாக பின்னணி இசை பெரிதும் உதவியிருக்கிறது. படம் முழுவதும் ஏறக்குறைய ஒரு கதாபாத்திரமாக வரும் சுவரும் அதில் பதியப்பட்டிருக்கும் உருவமும் (கவிஞர் ஜெயபாலன்) பார்வையாளர்களின் மனதில் பிரத்யேகமாக பதிவாக அதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் கருப்பொருள் இசை (Theme Music) உதவுகிறது. 'ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா' என்கிற அற்புதமான படிமங்களுடன் கூடிய வரிகள் இதற்கு துணையாக நிற்கின்றன.

அதைப் போலவே முரளியின் ஒளிப்பதிவும். பறவைக்கூடுகள் போல் ஒடுங்கியிருக்கும் வீடுகளின் சிறிய இடத்தில் வெளிப்படும் மனிதர்களின் காதலையும் கோபங்களையும் ஆவேசங்களையும் துயரங்களையும் இயல்புமாறாமல் பதிவாக்கியிருக்கிறது. வடசென்னையின் நிலப்பரப்பும் அதன் கலாசாரமும் முழுமையான அளவில் இல்லையென்றாலும் சாத்தியமான அளவில் வெளிப்பட்டிருக்கிறது. சண்டைகளும் துரத்தல்களுமான இரவுக் காட்சிகள் அதன் பிரத்யேகமான அழகுடனும் இயல்புடனும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. (அச்சமயங்களில் அது தனித்து விடப்பட்ட நகரம் போல் இருப்பதுதான் முரணாக இருக்கிறது). ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற பிரவீண், காட்சிகளின் தாள லயம் கெடாமல் ஒழுங்குப்படுத்தியிருக்கிறார். சமகால சினிமாக்களில் தமிழ் நவீன இலக்கியத்தோடு தொடர்புள்ளவர்கள் அதிகம் பங்குபெறுவது மகிழ்ச்சி. அவ்வகையில் இத்திரைப்படத்தில் எழுத்தாளர் ஜே.பி.சாணக்யா இணை இயக்குநராக தன் பங்களி்ப்பை செய்திருக்கிறார்.

மிகுந்த பொருட்செலவை கோரி நிற்கிற கலை சினிமா என்பதால் அது தொடர்பான சமரசங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாதுதான். என்னதான் இயக்குநர் நுண்ணுணர்வுகளுடன் கூடிய திறமைசாலியாக இருந்தாலும் அவரது கனவுப் படைப்பிற்கும் சமரசங்களுக்கும் உள்ள இடைவெளிதான் ஒரு திரைப்படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. அவ்வாறே இந்த இடைநிலை சினிமாவில் சில சமரசங்களும் குறைகளும் இருக்கலாம். உதாரணமாக நாயகனும் நாயகியும் இத்திரைப்படத்தின் பின்புலத்திற்கு பொருந்துகிற தோற்றத்தையும் உடல்மொழியையும் கொண்டிருக்கவில்லை. 'அட்டகத்தி'யில் தினேஷ் கச்சிதமாகப் பொருந்தியது போல இதில் நிகழவில்லை. மேரியைப் போல கலையரசி பிரகாசிக்கவில்லை. என்றாலும் இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயன்ற அளவிற்கான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் கார்த்தி நடித்திருக்காவிட்டால் இத்திரைப்படம் இத்தனை பரவலான கவனத்தைப் பெற்றிருக்குமா என்பது குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. நாயகியின் அந்நிய தோற்றம்  குறித்தும் விமர்சனங்கள் எழுகின்றன. ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இயக்குநர் இரஞ்சித் இது குறித்து விளக்குகிறார். 'இத்திரைப்படத்தை தெலுங்கிலும் சந்தைப் படுத்த வேண்டிய காரணத்திற்காக அங்கு ஏற்கெனவே புகழ்பெற்றிருக்கும் ஐந்து நடிகைகளில் ஒருவரைத்தான் தேர்வு செய்கிற நெருக்கடி இயக்குநருக்கு ஏற்படுகிறது. அதைப் போலவே இத்திரைப்படத்தின் அரசியல்தன்மையையும் சாதி குறித்த பின்னணிகளையும் துல்லியமாக்கினால் அது குறித்த சிக்கல்களையும் தடைகளையும் இத்திரைப்படம் சந்திக்கக்கூடும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டிருக்கலாம். இத்தனை பிரச்சினைகளையும் மீறித்தான் ஒரு சுமாரான திரைப்படமாவது தமிழ் சூழலில் வெளிவரக்கூடிய அவலமான நிலை நிகழ்கிறது. திரைத்துறை படைப்பாளிகள் சுதந்திரமாக இயங்க வேண்டுமெனில் பார்வையாளர்களின் ரசனை முதிர்ச்சியடைந்து நல்ல முயற்சிகளை மாத்திரமே ஆதரிக்கும் சூழல் ஏற்பட வேண்டும். அப்போதுதான் இடைநிலை திரைப்படங்கள் நகர்ந்து இயக்குநர்கள் தாம் உருவாக்க விரும்புகிற கலை சார்ந்த திரைப்படங்களுக்கு அவை இட்டுச் செல்லும்.

***

மெட்ராஸ் திரைப்படத்தைப் போன்று சமீபத்தில் விமர்சகர்களின்  கவனத்திற்கு உள்ளான வேறெந்த திரைப்படமும் இருப்பதாகத் தெரியவில்லை. 'சேது' திரைப்படத்தில் 'சீயான்' என்கிற வார்த்தைக்கு ஆளாளுக்கு அர்த்தம் தேடுபவர்களைப் போலவே இது வழக்கமான தமிழ் திரைப்படமா அல்லது ஒரு நல்ல முயற்சியா என்றும் இது தலித் சமூக எழுச்சி சார்ந்த சினிமாவா அல்லது அதற்கான தெளிவில்லாமல் அடித்தட்டு மக்களை மாத்திரம் சித்தரிக்கிற சினிமாவா என்று ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இத்திரைப்படம் பெற்று வரும் கவனமும் பாராட்டும் ஒரு சாராரை பதட்டப்பட வைக்கிறது என்பது மாத்திரம் தெளிவு.

பிராமணர்கள் ஆதிக்கம் செய்த சினிமாவை இடைநிலை சாதி இயக்குநர்கள் கைப்பற்றி அதற்குரிய போற்றிப்பாடுதல்களுடன் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது அந்த சூழலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் கூறுகளை முன்வைக்கும் சினிமாக்கள் நுழைவதை ஆதிக்கசாதி உணர்வுள்ளவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.  இதில் நுட்பமாக வெளிப்பட்டிருக்கும் தலித் அடையாளங்களைத் துடைத்து விட்டு சாதி அரசியல் நீக்கம் செய்யப்பட்ட உள்ளீடற்றதொரு படைப்பாக இதை முன்வைப்பதற்காக சொல்லப்படும் காரணங்களும் விமர்சனங்களும்  நகைப்பை ஏற்படுத்துகின்றன. இத்திரைப்படம், உருவாகிக் கொண்டிருக்கும் இன்னொரு தமிழ் திரைப்படத்தின் நகல் என்று நிறுவ முயற்சிக்கும் தீர்ப்புகள் அவசரம் அவசரமாக எழுதப்படுகின்றன. 'மாட்டுக்கறி உண்பதைப் பற்றி' புனைவுகளில் எழுதப்படும்  வரிகள்  கூட வெகுஜன ஊடகங்களில் மறுக்கப்பட்டு மாற்றி எழுதப்படும்  நவீன தீண்டாமை கொண்ட சூழலே நிலவுகிறது. உத்தப்புர சுவர் மாத்திரமல்ல, ஆதிக்க மனங்களிலுள்ள தீண்டாமை சுவர்களும் அகற்றப்பட வேண்டியதே.

'அடங்குடா' என்று இத்திரைப்படத்தில் ஓர் இளைஞன் ஆதிக்கசாதி நபரால் அதட்டப்படும் போது 'அடங்கறதெல்லாம் அந்தக்காலம்' என்று அந்த இளைஞன் ஆவேசத்துடன் பதிலுரைப்பதைப் போன்று தொடர்ந்த போராட்டங்களின் மூலம் மேலெழுந்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் படைப்புலகில் 'தலித் இலக்கியம்' என்றொரு வகைமை தனக்கான அடையாளத்தையும் கவனத்தைப் பெற்றது போன்ற திரைத்துறையிலும் 'தலித் சினி்மா' என்றொரு வகைமை உருவாகும் என்கிற நம்பிக்கைக்கான துவக்கத்தை தந்திருக்கிறது 'மெட்ராஸ். இதை சாத்தியப்படுத்திய இரஞ்சித்திற்குப் பாராட்டுக்கள். 

- உயிர்மை - நவம்பர் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)


suresh kannan

Saturday, November 01, 2014

Instructions Not Included (2013) தாயும் ஆனவன்

 
ஒரு தமிழ் சினிமாவை எடுப்பதற்கான அத்தனை மெலோடிராமா கூறுகளும் இந்த ஸ்பானிய திரைப்படத்தில் உள்ளன. ஆனால் தமிழ் திரைப்படம் மாதிரி எடுக்கவில்லை என்பதுதான் முக்கியமான செய்தியும் ஆறுதலும். ஓர் ஆணுக்கும் பெண் குழந்தைக்கும் உள்ள அற்புதமான அன்பையும் உறவையும் சொல்லும் திரைப்படம். தந்தை என்று சொல்லாமல் ஏன் ஆண் என்று சொல்கிறேன் என்பது படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.
 
வேலன்டின், பார்க்கிற பெண்களிடம் எல்லாம் உறவு வைத்துக் கொள்கிறவன். (உடனே டவுன்லோட் லிங்க்கை தேடாதீர்கள், இந்தக் காட்சிகள் துவக்கத்தில் மிக சொற்பமாகவே வரும்). ஒரு நாள் திடீரென்று அவனுடைய அறையில் நுழைகிற ஒரு பெண் "இந்தக் குழந்தை உன் மூலம்தான் பிறந்தது. வைத்திரு. இதோ வருகிறேன்" என்று சொல்லி காணாமற் போகிறாள். பெண் குழந்தையை வைத்து அவதிப்படும் வேலன்டின்  தாயிடம் ஒப்படைக்க வேண்டி அவளைத் தேடி லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு வருகிறான். சந்தர்ப்பவசமாக அவனுக்கு சினிமாத் துறையில் ஸ்டன்ட்மேன் வேலை கிடைக்கிறது. (இயற்கையில் பயந்த சுபாவமுள்ள அவனை, அவனது தந்தை எப்படி பயத்தைப் போக்குகிறார் என்பது ஒரு சுவாரஸ்யமான ப்ளாஷ்பேக்). வேலன்டினும் பெண் குழந்தையுமான மாகியும் ஒருவரோடு ஒருவர் அந்நியோன்யமாகிறார்கள். மிகுந்த சிரமத்துடன்  அவளை வளர்க்கிறான். தாயணைப்பின் ஏக்கத்தை அவள் உணரக்கூடாது என்பதற்காக, அம்மா எழுதியது போலவே பல கடிதங்களை எழுதுகிறான். அவளுக்காக போலியாக ஒரு பெண்ணை தாயாக நடிப்பதற்கு தயார் செய்யும்போது உண்மையான தாயான ஜூலி திரும்ப வந்து விடுகிறாள்.
 
குழந்தையும் அம்மாவைக் கண்டவுடன் ஒட்டிக் கொள்கிறது. ஆனால் அவள் தற்காலிகமாகத்தான் வந்திருக்கிறாள். அவளிடம் ஓர் உண்மையை சொல்ல முயன்று தோற்றுப் போகிறான் வேலன்டின்.(இந்த பூடகமான உண்மை என்ன என்பது கிளைமாக்சில்தான் வெளிப்படுகிறது)  ஒரு வாரம் கழித்து திரும்பப் போய்விடும் ஜூலி, மறுபடியும் வக்கில் நோட்டிஸூடன் வருகிறாள், குழந்தையை அவளிடம் ஒப்படைக்கச் சொல்லி. ஒருவார பழக்கத்தில் குழந்தையை மறக்க முடியவில்லை என்பது காரணம். வேலன்டின், ஸ்டண்ட்மேன் எனும் ஆபத்தான பணியில் இருப்பதால் எப்படி அவனால் குழந்தையை தொடர்ந்து வளர்க்க முடியும் என்பது உப காரணம். வழக்கும் பாசப் போராட்டங்களும் நிகழ்கின்றன.
 
தீர்ப்பு வேலன்டினுக்கு சாதகமாக வந்தாலும் இன்னொரு காரணத்தினால் தோற்றுப் போகிறான். (அது என்ன காரணம் என்பதும் சஸ்பென்ஸ்). தாயுடன் செல்ல மறுத்து மனம் மாறிய குழந்தையுடன் சொந்த ஊருக்கு தப்பிப் போகிறான். அங்கும் வருகிறாள் ஜூலி. இருவரும் ஒருமாதிரியான உடன்படிக்கைக்கு வரும் போதுதான் எதிர்பாராத (அல்லது எதிர்பார்த்திருந்த) அந்த மரணம் நிகழ்கிறது.

()
 
இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையில் அமைந்துள்ள இயல்பான நெருடாத திருப்பங்களும், வேலன்டின் தொடர்பான மென்நகைச்சுவைக்காட்சிகளும் இதை ஓர் அற்புதமான அனுபவமாக்குகிறது. குறிப்பாக மாகியாக நடித்துள்ள அந்த பெண் குழந்தை அசத்தியிருக்கிறாள். இயக்குநர் எப்படி காட்சிகளை அவளுக்கு விவரித்து வேலை வாங்கியிருப்பார் என்பதை யூகித்தாலே பிரமிப்பாக இருக்கிறது. இது ஒருவேளை கடத்தப்பட்டு தமிழில் வெளிவந்தால் அதில் நிச்சயம் இருக்கப் போகும் பாடலுக்காக நான் யோசித்து வைத்திருக்கும் ஓர் அட்டகாசமான பல்லவி வரியை இலவசமாக தருகிறேன் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.
 
வார இறுதிக்கேற்ற ஓர் அற்புதமான ஃபீல் குட் திரைப்படம். 

suresh kannan