Monday, December 29, 2014

கத்தி - போலி ஆயுதத்தின் வெற்று இரைச்சல்



உலகமயமாக்க காலகட்டத்திற்குப் பிறகு இங்கு சந்தைப் படுத்துதலின் தந்திரங்களும் நுட்பங்களும் இன்னமும் கூர்மை பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களை தாழ்வுணர்வில் அமிழ்த்தியும் பொறாமைப்பட வைத்தும் நெகிழ வைத்தும் உணர்ச்சிவசப்பட வைத்தும் ஆசையை காட்டியும் வணிக வெற்றியைப் பெறும் நுகர்வுக் கலாச்சார உத்திகள் அதன் உச்சத்தை அடைந்துள்ளன. அடித்தட்டு மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள், முதலாளித்துவமும் அதிகார வர்க்கமும் ஆதாய அரசியலும் அச்சமூகத்தின் மீது நிகழ்த்தும் கூட்டு வன்கலவிகள், சாதியக் கொடுமைகள், உழைப்புச் சுரண்டல்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதற்கும் கூட சந்தை மதிப்பும் வணிக ஆதாயமும் உள்ளன. தமிழ் சினிமா இந்த கச்சாப் பொருளை நுட்பமாக கைப்பற்றியே பல ஆண்டுகள் ஆகி விட்டது.

சந்தைப்படுத்துவதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் ஒரு முக்கியமான விஷயம், ஒரு வர்த்தக்குறியின் படிமத்தை வலுவானதாகவும் நிலையானதாகவும் நம்பகத்தன்மையுடையவதாகவும நிறுவுவதும் பரப்புவதும். அறிந்தோ அறியாமலோ இந்த விஷயத்தை தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் அவரது பயணத்தின் துவக்கத்திலிருந்தே மிகத் திறமையாக செயல்படுத்தினார். தன்னை ஏழைகளின் அவதார புருஷராகவும் பெண்களின் பாதுகாவலராகவும் எவ்வித குணக்கேடுகளும் அல்லாத கனவானாகவும் திரையில் சித்தரித்துக் கொண்டதை உண்மை என்றே மக்கள் நம்பினார்கள். இதன் மூலம் அதிகாரத்தையும் கைப்பற்றி தன்னுடைய பிம்பத்தை பெரும்பாலும் எவ்வித சேதங்களும் அல்லாமல் கடைசி வரையிலும் பாதுகாத்துக் கொள்ள அவரால் முடிந்தது. சினிமாவிற்கும் அரசியலுக்குமான இந்தப் பாலத்தில் வெற்றிகரமான பயணத்தை நிகழ்த்தின அவரின் உதாரணத்தை குறுகிய கால பகற்கனவுகளுடன் பின்பற்ற விரும்பிய பல நடிகர்கள் பாலத்தில் தடுக்கி படுகுழியில் விழுந்த உதாரணங்களையும் பார்க்கிறோம்.

இச்சமூகத்தின் பெரும்பான்மையான சதவீதம் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களைக் கொண்டிருப்பதால் தங்களின் வாடிக்கையாளர்களின் சராசரி மனநிலையை  திருப்திப்படுத்தவும் சுகமாக சொறிந்து தருவதற்கு ஏற்றபடிதான்  பெரும்பாலான தமிழ் சினிமாக்களின் கதையுருவாக்கங்களும் காட்சிகளும் அமைந்துள்ளன. சாலையில் நொண்டிக் கொண்டே வரும் ஒரு ஏழைப் பெண்ணை காரில் வரும் பணக்கார இளைஞன் அகம்பாவத்தோடு இடித்து தள்ளி விட்டு திமிராகப் பேசுவதையும் அங்கு வரும் நாயகன் பணக்கார இளைஞனை தண்டித்து ஏழைப் பெண்ணைக் காப்பாற்றும் காட்சிகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள், திமிர் பிடித்தவர்கள், சமூகக் கேடர்கள் எனும் பொதுமனநிலையின் பிம்பத்தை தமிழ் சினிமாவும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எல்லா சமூகத்திலும் எல்லா குணாதிசயங்களுடன் கூடிய கலவையில்தான் மனிதர்கள் இருப்பார்கள் என்கிற யதார்த்த உண்மையை மறைக்கிறது. ஏழைகள் நல்லவர்கள், பணக்காரர்கள் கெட்டவர்கள் என்கிற எளிமையான சூத்திரத்தை தொடர்ந்து நிறுவுகிறது. ஆனால் வர்க்க ரீதியாக கீழே இருப்பவர்கள் ஒரு புறம் பணக்காரர்களை பொறாமையுடன் திட்டிக் கொண்டே ஆனால் அடைய விரும்பும் இடம் எதுவென்று பார்த்தால் அது பணக்காரர்களின் இடமாகத்தான் இருக்கிறது. புரிந்து கொள்ளக்கூடிய மிக இயல்பான முரண்தான் இது.

அடித்தட்டு சமூகத்தை சேர்ந்த நாயகன் எதிர்ப்பதற்கு உயர்தட்டு சமூகத்தை சேர்ந்த ஒரு வில்லன் வேண்டும். திமிர்பிடித்த பண்ணையார்களை எதிர்க்கும்  விவசாயி எம்.ஜி.ஆர் காலம் தொட்டே இந்த வடிவம் மாறவில்லை. இந்த 'வில்லன்' வடிவம் 'கார்ப்பரேட் கம்பெனி அதிபர்' என்கிற ஒற்றைத்தன்மை கொண்டதாக இருப்பதின் மூலம் தமிழ் சினிமாவின் வழக்கமான கதையாடலில் இருந்து இம்மியும் பிசகாமல் பயணிக்கிறது, கத்தி திரைப்படம்.

வெகுஜன கதையாடலில் 'சமூகப் பிரச்சினைகளை' பற்றி உரையாடுவதாக பாவனை செய்யும்  இந்த வடிவத்தில் மிகுபுனைவுத் தன்மையைக் கூட்டி நவீன பார்வையாளர்களுக்கு தன்னுடைய திரைப்படத்தை ஒரு கவர்ச்சிகரமான பொட்டலமாக தரும் பாணியை உருவாக்கி அதை வணிகரீதியாக வெற்றிகரமாக்கினவர் ஷங்கர். ஒரு வழக்கமான வெகுஜன திரைப்படத்தின் வார்ப்புருவை விட்டு விலகாமல் ஆனால் சமூகத்தின் முக்கியமான பிரச்சினை ஒன்றை தீவிரமான தொனியில் விவாதிப்பதாக பாவனை செய்யும் திரைப்படங்கள் இவை. முருகதாஸும் ஷங்கரின் நீட்சியாகத்தான் திகழ்கிறார் என்பதை அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் உணர்த்துகின்றன.  உண்மையில் கீழ்தரமான மசாலா திரைப்படங்களை விட 'சமூகப் பிரச்சினையை உரையாடுவதான' மாயையை ஏற்படுத்தும் இந்த அதிநவீன மசாலாக்கள் ஆபத்தானவை.

ஒரு சமூகத்தின் பொதுமனம் சமகாலத்தில் நிகழும் ஊழல்களையும்  சமூகப் பிரச்சினைகளின் ஊற்றுக் கண்களையும் மெல்ல அவதானித்தபடியே இருக்கிறது. இதன் காரணங்கள் அச்சமூகத்தின் ஆழ்மனங்களில் மெல்ல மெல்ல படிந்த படியே இருக்கின்றன. அதிகாரத்தை எதிர்த்து உரையாட முடியாத இயலாமையின் காரணமாக இந்த அழுத்தங்கள் அடுக்கடுக்காக உள்ளுற உறைந்தபடியே இருக்கின்றன. ஏதாவது ஒரு வலுவான புரட்சிப்புயலின் ஒலியால் கச்சிதமாக தூண்டப்பட்டால் தொகுக்கப்பட்ட இந்த அழுத்தங்கள் இணைந்து ஒரே கணத்தில் வெடித்து விடும் நிலை ஏற்படலாம். அதிகாரத்தை தூக்கியெறிந்த மக்கள் புரட்சியெல்லாம் அப்படித்தான் உருவானதை சர்வதேச வரலாற்று முன்னுதாரணங்களோடு அறிய முடியும். ஆனால் துரதிர்ஷ்டமாக நம் சூழலில் அவ்வாறான முன்னுதாரணங்கள் பெரிதாக இல்லையென்பதால் தேர்தல் காலங்களில் மாத்திரமே ஒரு மெளன கோபமாக இந்த அழுத்தங்கள் வெளிப்படுகின்றன . 'என்ன அநியாயம் சார்?' என்று பேருந்துப் பயணங்களின் போது நிகழும் அன்றாட உரையாடல்களில் மெல்ல மெல்ல கசிகின்றன.

சமூகப்பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதாக பாவனை செய்யும் இது போன்ற திரைப்படங்களும் அந்த அழுத்தங்களை விடுவிக்கும் பணியைத்தான் செய்கின்றன. கொதிநிலையில் இருக்கும் ஒரு குக்கரின் மூடியைத் திறந்து விடுவது போல. தம்முடைய மனதின் கோபங்களுக்கான வடிகால்களை திரையில் சந்திக்கும் பார்வையாளன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த அழுத்தங்களிலிருந்து சற்று விடுபடுகிறான். பிரச்சினையின் குவிமையத்தை நோக்கி அவன் கவனம் நகர்வதை தடுத்து போதைப் பொருளிலிருந்து கிடைக்கும் தற்காலிக நிவாரணம் போன்றதொரு நிலையை இம்மாதிரியான திரைப்படங்கள் தருகின்றன. ஒரு சமூகத்தில் இம்மாதிரியான போதை விஷயங்கள்தான் மக்களை புரட்சியைச் சிந்திக்காத மந்தநிலையை ஏற்படுத்தி அதிகார சக்திகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவாக இயங்குகின்றன.

()

விஜய் திரைப்படங்களின் வழக்கமான வார்ப்புருவோடுதான் இயங்குகிறது கத்தி. ஆனால் கூடுதலாக விவசாயிகளின் பிரச்சினையைப் பற்றி உரையாடுவதான பாவனையைக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வது பற்றியும் அவர்களின் கடன்சுமைகள் பற்றியும் நாயகன் ஐந்து நிமிடம் ஆவேசமாக உரையாற்றுவதோடு இந்தக் காட்சி நகர்ந்து விடுகிறது. மீதமெல்லாம் அவனின் சாகசங்களும் கும்மாளங்களும்தான்.  விவசாயிகளின் இந்தப் பிரச்சினைக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் அதிபரை வில்லனாக்குவதன் மூலம்தான் படம் இயங்குகிறது. இதற்குக் காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் மாத்திரம்தானா?

தேசிய குற்ற ஆவண காப்பகம்  (National Crime Records Bureau) 2013ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரத்தி்ன்படி 1995 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தொன்னூறுகளில் திடீரென்று அதிகரிப்பதற்கு துவக்கப்புள்ளியாய் அமைந்தது விதர்பாவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைகள்.  அரசின் தாராளமயமாக்க பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் அப்போது உள்ளே நுழைந்தன. மரபணு மாற்ற விதைகள் மூலம் அதிக உற்பத்தி பெறலாம் என்று ஆசை காட்டி பாரம்பரிய நிலங்களின் வளத்தை அழித்து காப்புரிமை பெற்ற விதைகளை வாங்க வேண்டியதின் மூலம் விவசாயிகள் மேலும் கடன் வாங்கி பொருளாதார நிலையில் நசிந்து நெருக்கடியும் கடன்சுமையும் தாங்காமல் அவர்களை தற்கொலை செய்து கொள்ள வைத்தன. இன்னொருபுறம் அவர்களின் விளைநிலங்களை ஆசைகாட்டியும் மிரட்டியும் கைப்பற்றி தங்களின் தொழிற்சாலைகளுக்காக பயன்படுத்திக் கொண்டன. நாட்டின் இயற்கை வளங்களை திட்டமிட்டு சுரண்டின. இதை முறைப்படுத்தி தடுக்க வேண்டிய அரசும் அதிகார வர்க்கமும் காவல்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளாக நின்றதில் நிர்க்கதியான நிலையை விவசாயிகள் அடைந்தனர். விவசாயக் கடன்களுக்காக செய்யப்பட்ட தள்ளுபடிகளும் உண்மையான பயனாளிகளைச் சென்றடையாமல் இடைத்தரகர்களுக்கும் முதலாளிகளுக்குமே சென்றது. தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான நியாயமான முறையிலான லாபத்தைப் பெற முடியாமல் இடையில் நிற்கும் வணிகர்கள் கொள்ளையடித்தனர். வறுமை தாங்காமல் நிலங்களை விற்று விவசாயிகள் என்கிற நிலையிலிருந்து விவசாயத் தொழிலாளிகளாக மாறினார்கள். இன்னும் பலர் விவசாயத்தைக் கைவிட்டு  நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து கூலித் தொழிலாளிகளாக ஆனார்கள். ஆக.. அரசின் தவறான விவசாயக் கொள்கைகள், கட்டுப்படுத்த முடியாத இடைத்தரகர்களின் கொள்ளை லாபம், அதை முறைப்படுத்த தவறிய அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகளின் ஊழல்களும் அலட்சியமும், இதற்குப் பின்னணியில் நிழலாக இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிவற்றின் கூட்டுக்கலவிக்குப் பலியானதுதான் விவசாயிகளின் வீழ்ச்சி.

பன்முக பரிமாணங்கள் கொண்ட இந்த விவசாயிகள் பிரச்சினையை ஒரு கார்ப்பரேட் வில்லனிடம் சண்டையிட்டு ஜெயிப்பதின் மூலம் தீர்த்துவிட முடியும் என்கிற எளிய தீர்வின் மூலம் இதை மலினப்படுத்தியுள்ளது கத்தி திரைப்படம். வெகுஜன கதையாடலின் மூலம் ஒரு சமூகப் பிரச்சினையை அணுகுவது தவறா, வெறுமனே மசாலா திரைப்படத்தை விட அதன் இடையே ஒரு சமூகப்பிரச்சினையை உரையாடுவது மேலானதுதானே என்கிற கேள்வி எழலாம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஒரு வழமையான வணிகதிரைப்படத்தை விட சமூகப் பிரச்சினையை தீவிரமாக உரையாடுவதாக செய்யும் பாவனை மூலம் அதை நீர்த்துப் போகவும் திசை திருப்பவும் செய்யும் இம்மாதிரியான திரைப்படங்கள் தவறானவை. மேலும் இந்த இயக்குநர்களுக்கு சமூகப் பிரச்சனை என்பது அவர்களது கதையாடலுக்கான ஒரு கச்சாப் பொருள், அவ்வளவே. விவசாயிகளின் பிரச்சினையைப் பேசுகிறேன் பேர்வழி என்று இடையில் 'உம்மா' பாடலை சொருகுவது என்பது அப்பட்டமான வணிகத்தனம். மேலும் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பிற்கு பின் நிற்பது பன்னாட்டு நிறுவனங்கள்தான் என்பதும் ஒரு சுவாரசியமான முரண்நகை. இவைகளிலிருந்தே இம்மாதிரியான திரைப்படங்கள் உருவாக்கப்படும் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

சில வருடங்களுக்கு முன்பு கோக் விளம்பரத்தில் நடித்து பொருளீட்டிய விஜய், இதில் தமிழகத்தின் நீர்வளத்தை கொள்ளையடிக்கும் அதே குளிர்பான நிறுவனத்தைப் பற்றி ஆவேசமாக வசனம் பேசும் இரட்டை நிலையைக் கண்டித்து சில விமர்சன குரல்கள் எழுவது நியாயமே. எல்லாமே தொழில்சார்ந்த நடிப்புதானே என்று இதை எளிதில் கடந்து போக முடியாது. சமூகத்தில் ஒரு கருத்தை பிரபலப்படுத்துவதிலும் அதன் மூலம் மக்களிடம் செல்வாக்கை ஏற்படுத்துவதிலும் நடிகர்களின் குரல்களுக்கு பிரத்யேகமான மதிப்புண்டு. அவர்கள் செயல்படுத்தும் தவறான பிரதிநிதித்துவம் சமூகத்தில் பலவகையான பாதிப்புகளை உருவாக்கலாம். இதை உணரும் தார்மீக பொறுப்பும் பிரக்ஞையும் ஒவ்வொரு பிரதான நடிகருக்கும் இருக்க வேண்டும். கமல், ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் எந்தவொரு வணிகப் பொருளிற்காகவும் விளம்பரங்களில் தோன்றாமலிருப்பதின் மூலம் அதற்க பொதுவில் ஆதரவளிக்காமலும் அதன் அடையாளங்களாக மாறாமல் இருக்கும் காரணத்திற்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

2010-ல் Peepli Live என்கிற  இந்தி நகைச்சுவை திரைப்படம் வந்தது. முக்ய பிரதேஷ் எனும் கற்பனையான பிரதேசத்தின் 'பீப்லி' கிராமத்தைச்  சேர்ந்த வறுமையில் வாடும் விவசாய சகோதரர்கள் நத்தா, புதியா. வங்கிக் கடனை அடைக்க முடியாமல் தங்களின் விவசாய நிலம் பறிபோகும் சூழ்நிலையில் உள்ளூர் அரசியல்வாதியிடம் உதவி கேட்டுச் செல்ல, அவனுடைய உதவியாளன் அவர்களைத் தவிர்க்கும் பொருட்டு "தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறது' என்ற பொய் செய்தியை போகிற போக்கில் சொலகிறான்.உடனே அப்பாவியான தம்பி  நத்தா 'தற்கொலை செய்வதென முடிவு எடுக்கிறான். இதை யதேச்சையாக கேள்விப்படும் செய்தி நிறுவனங்கள் அந்தக் கிராமத்தை புயலென சூழ்ந்துகொள்ள தேசம் முழுக்க அந்த தற்கொலை செய்தி பரவுகிறது. விவசாயிகளின் தற்கொலை செய்து கொள்வதற்கான பின்புலத்தை அங்கத நகைச்சுவையாக அணுகினாலும் எங்கும் விலகாமல் அதை மையப்படுத்தியே இத்திரைப்படம் அமைந்திருந்தது. நடிகர் அமீர்கான் இதை தயாரித்திருந்தார். இந்த நகைச்சுவைப் படைப்பு முன்னெடுத்திருந்த தீவிரத் தொனியைக் கூட கத்தி திரைப்படம் கொண்டிருக்கவில்லை என்பதுதான் சோகம். ஆனால் இவை போன்றவைதான் நம் சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களாக இங்கு அறியப்படுவதுதான் மிகப் பெரிய அவல நகைச்சுவை.

suresh kannan

Sunday, December 28, 2014

பெருமாள் முருகனும் போலி கலாசார காவலர்களும்




சில நாட்களுக்கு முன் பெருமாள்முருகனின் 'மாதொரு பாகன்' புதினத்தை வாசித்தவுடன் முதலில் தோன்றியது இதுதான்.

'இந்த நூலில் உள்ள ஒரு விவகாரமான சமாச்சாரம் ஏன் போலி கலாசார காவலர்களின் கண்களில் இன்னமும் ஏன் படவில்லை?' அப்படியாவது எழுத்தாளரின் மீதும் அவரின் படைப்புகளின் மீதும் மேலதிக கவனம் குவியாதா என்கிற நப்பாசைதான் அதற்கு காரணம். நம்முடைய கலாசார தொன்மங்களின் பண்பாட்டு வழக்கங்களின் சொச்சங்களை  திணிக்கப்பட்டதின் மூலம் அறிகிறோம் அல்லது கண்மூடித்தனமாக பின்பற்றுகிறோமே ஒழிய அதை ஆய்வு நோக்கில் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக எவ்வித ஆர்வத்தையும் காட்டாத அதில் ஈடுபடாத ஓர் உழைப்பற்ற, சொரணையற்ற சமூகமாகத்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். மிகுந்த உழைப்பிற்கும் ஆர்வத்திற்கு பின்னும் எழுதப்படும் ஆய்வுகள் அதன் மீது அமைந்த புதினங்களும் கவனிக்கப்படாமலேயே மறைந்து போகின்றன. ஆய்வாளர்களுக்கு சோர்வளிக்கின்றன.

ஆனால் இவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தங்களின் அடிப்படைவாத கண்ணாடிகளின் மூலமே மேம்போக்காக தெரிந்து கொண்டு அவைகளை சர்ச்சையாக்கும் எதிர்க்கும் கும்பலும் இருக்கிறது. அப்படியாக திருச்செங்கோட்டில் இந்த நாவலை எரித்தும் தடைசெய்யக் கோரியும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் தொடர்பான செய்தியை வாசித்தேன். சிலர் எழுத்தாளரின் வீடு தேடி சென்று மிரட்டியதாகவும் தெரிகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் தம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக காவல்துறையிடம் மனுவொன்றையும் அளித்திருக்கிறார்.

பெருமாள் முருகன் கொங்கு சமூகம் சார்ந்து பல ஆய்வுகளையும் அதன் கலாசாரக் கூறுகள் விரவிக் கிடக்கும் புதினங்களையும் எழுதியிருக்கும் பண்பட்ட எழுத்தாளர். கொங்கு வட்டாரச் சொல்லகராதி ஒன்றை தொகுத்தளித்திருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கல்லூரியல் பேராசிரியராக பணியாற்றுகிறவர். கண்டனம் தெரிவித்திருக்கும் கும்பல் இவரின் இந்த அரிய பணிகளுக்காக இதற்கு முன் ஒருமுறையாவது பாராட்ட முன்வந்திருக்குமா என்று தெரியாது. அதைச் செய்ய வேண்டுமென்றால் எழுத்தாளர் எழுதிய நூல்களை எல்லாம் படித்திருக்க வேண்டும். அது கடினமான விஷயம். அதை விடவும் ஒரு நூலின் ஒரு பகுதியை மாத்திரம் தவறாக வாசித்து விட்டு அல்லது வேண்டுமென்றே தவறாக சித்தரித்து கும்பலில் கத்துவதும் நூலை எரிப்பதும் அதன் மூலம் அரசியல் செய்வதும் எளிதான விஷயம். இம்மாதிரி செய்வதில் எந்த மதத்தின் அடிப்படைவாதிகளின் முட்டாள்தனங்களும் விதிவிலக்கல்ல. சாத்தானின் வேதமும் லஜ்ஜாவும் டாவின்சிகோடும் ஆழிசூழ்உலகும் உதாரணங்கள்.

பெருமாள் முருகனின் நாவலில் அப்படி என்னதான் பிரச்சினை? ஆங்கிலேய ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தின் கொங்கு சமூக பின்புலத்தில் இயங்கும் இந்த நாவலில் குழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதியினரின் சிக்கல்கள் மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுகின்றன. இவ்வாறு குழந்தைப் பேறு இல்லாத பெண்களின் குறையைப் போக்குவதற்காக அச்சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகளிலேயே ஒரு தீர்வு உள்ளது. அதன்படி ஒரு திருவிழாவின் 13 வது நாளில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்தவொரு ஆணும் பெண்ணும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் பாலுறவு கொள்ள முடியும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் சாமி தந்த பிள்ளைகள் என்பது ஐதீகம். இதில் பங்கேற்கும் ஆண்கள் சாமிகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

இந்த விஷயத்தை தமது நாவலில் மிகுந்த கலையுணர்வுடனும் அழகியலுடனும் மிக ஜாக்கிரதையாக கையாண்டுள்ளார் எழுத்தாளர் பெருமாள்முருகன். நாவலை பரபரப்பாக்குவதற்காக ஆபாசமாக கையாளவில்லை என்பது நாவலை வாசிப்பவர்கள் உணர முடியும். நாவலில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பகுதியை எழுத்தாளர் ஏதோ கற்பனை செய்து எழுதவில்லை. தாம் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிப்பட்ட விஷயத்தை வைத்தே எழுதியுள்ளார். மேலும் எழுத்தாளர் இது போன்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதன் மூலம் கவனஈர்ப்பு பெறும் மலினமான உத்திகளை கையாள்வதில் நம்பிக்கை கொண்டவரில்லை என்பதை முன்னுரையின் இந்தப் பகுதியை வாசித்தாலே விளங்கும்.
என் நாவல்கள் பற்றிய பரபரப்புகளை உருவாக்குவதில் எப்போதுமே நான் முனைவதில்லை. முந்தைய என் நாவல்கள் மிக மெதுவாகவே வாசகர்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. 'கங்கணம்' வெளியாகி மூன்றாண்டுகளுக்குப் பின் இப்போதுதான் பரவலாக கவனம் பெறுகின்றது. எனக்கும் ஒன்றும் அவசரமில்லை. இந்நாவல் தொடர்பாகவும் அதே மனநிலையில்தான் இருக்கின்றேன்.


வருகிற புத்தக கண்காட்சியில் இந்த நூலின் விற்பனையைப் பெருக்குவதற்காகத்தான் இந்த சர்ச்சை ஊதிப்பெருக்கப்படுகிறது என்று பெருமாள் முருகனின் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்ட முயல்கிறவர்கள் இந்த நூலையோ அல்லது எழுத்தாளரின் முந்தைய பணிகளின் மூலமோ அவரைப் புரிந்து கொள்ள முயல்வது நல்லது. கலைப் படைப்புகளின் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் இம்மாதிரியான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியன. ஒரு பத்திருபது பேர் கொண்ட அமைப்பு இணைந்து இம்மாதிரியான ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தி விடுவதின் மூலம் எத்தனை பதற்றத்தையும் கவனஈர்ப்பையும் செய்து விட முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களால் ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை தடுத்து விட முடிகிறது, சென்சார் ஆனதிற்குப் பின்னரும் அதை தாங்கள் பார்த்தபின்தான் அனுமதியளிக்க வேண்டும் என்று சாதிக்க முடிகிறது, அதன் பின் தங்களின் பேரங்களையும் அரசியல் ஆதாய லாபங்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது என்பது போன்ற செயல்களெல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள்தான். இம்மாதிரியான போலியான நபர்களின் போராட்டங்கள் குறைந்த பட்சம் கூட வெற்றி பெறுவதை அனுமதிக்கவே கூடாது. இம்மாதிரியான நபர்கள் செய்யும் மலினமான போராட்டங்களின் மூலம் இவர்களின் ஒட்டுமொத்த அமைப்பையும் பொதுச்சமூகம் கேலியாகத்தான் பார்க்கும் என்கிற எளிய உண்மையையாவது இவர்கள் உணர்வது நல்லது.

திருவள்ளுவரின் காமத்துப் பாடல்களிலிருந்து சங்கப்பாடல்கள்,, ஆண்டாளின் ஏக்கங்களில் வழிந்த அற்புதப்பாடல்கள் என்று காமத்தைக் கொண்டாடின கலாசார தொடர்ச்சியின் சமூகம் நாம். ஆனால் அதையெல்லாம் இடையில் பாசாங்குகளால் மூடிவிட்டு தங்களை பண்பாட்டு காவலர்களாக சித்தரித்துக் கொண்டு ஒருபுறம் பாலியல் வறட்சியால் துன்புற்றுக் கொண்டு இருட்டுப் பிரதேசங்களில் பெண்களின் மீதான பாலியல் வன்முறை நிகழ்த்திக் கொண்டு எத்தனை போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

எழுத்தாளர் பெருமாள் முருகனின் மீது நிகழும் இந்த கருத்து மற்றும் பெளதீக ரீதியான தாக்குதல்களும் தரப்படும் மனஉளைச்சல்களும் அறிவுசார் சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். ஓரணியாக இணைந்து அவருக்கு ஆதரவு தர வேண்டும். மாதொருபாகன் நாவலின் முன்னுரையில் "இந்த ஆயவில் கிடைத்திருக்கும் தரவுகளை வைத்து விரிவானதொரு ஆய்வு நூல் எழுதவிருக்கும் திட்டத்தைப் பற்றி" எழுத்தாளர் தெரிவித்திருந்தார். ஆனால் இது போன்ற எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் அந்த முயற்சிகளை ஒருவேளை சோர்வடையச் செய்ய வைக்கக்கூடும் ஆபத்துக்களையும் நாம் கவனிக்க வேண்டும். அதன் மூலம் ஏற்படும் கலை இழப்புகள் இச்சமூகத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்களிடம் நான் வேண்டிக் கொள்வது இதுதான். மாதொருபாகன் புதினத்தின் தொடர்ச்சியாக அதன் இரு வேறு பரிமாணத்தில் இரண்டு புதிய புதினங்களை பெருமாள்முருகன் எழுதியுள்ளதாக தெரிகிறது. வருகிற புத்தக கண்காட்சியில் அவை வெளியாகலாம். மாதொருபாகன் நுலோடு இணைத்து இந்த இருநூல்களையும் நண்பர்கள் வாங்கி வாசிக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம்தான் எழுத்தாளருக்கு ஆதரவு தருவதோடு இதன் எதிர்ப்பாளர்களுக்கு நாம் தரும் பதிலாகத்தான் அது அமையும்.

என்னுடைய இந்த வேண்டுகோளை பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.

(பின்குறிப்பு: இந்தியர்களின் இணையத் தேடல்கள்கள் தொடர்பாக நிகழ்ந்த ஒரு ஆய்வின் முடிவின் படி இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதன்மையிடத்தைப் பிடித்துள்ளவர் பார்ன் வீடியோக்களில் நடித்துள்ள தோழர் சன்னி லியோன். இந்த தேடலில் மதஅடிப்படைவாதிகளுக்கும் கலாசார காவலர்களுக்கும் பங்கிருக்காது என நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் மானஸ்தர்கள்).


suresh kannan

Monday, December 22, 2014

தமிழும் உலக சினிமாவும்




இந்தியாவில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பற்றின கட்டுரைகளில்  பொதுவாக எந்தெந்த இயக்குநர்கள் தொடர்ந்து உரையாடப்படுவார்கள் என்று ஒரு பட்டியலை சற்று Random ஆக யோசித்துப் பார்ப்போமா?  சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், கெளதம் கோஸ், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன்,பத்மராஜன், புட்டண்ணா கனகல், கிரிஷ் கர்னாட், கிரிஷ் காசரவல்லி போன்ற பெயா்களே மீண்டும் மீண்டும் அந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்படும். பிரதேச அரசியலை முன்வைப்பது எனது நோக்கமில்லையென்றாலும் இது போன்ற பட்டியல்களில் ஏன் தமிழ் சினிமாக்களைப் பற்றியோ அதன் இயக்குநர்களைப் பற்றியோ நடிகர்களைப் பற்றியோ இதர நுட்பக் கலைஞர்களைப் பற்றியோ பெரிதும் உரையாடப்படுவதில்லை? சர்வதேச தரத்திற்கு இணையான அளவில் தமிழில் படைப்பாளிகளோ அல்லது படைப்போ இல்லையா, அல்லது அரசியல் காரணமாக தமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்படுகிறதா? உலகப் புகழ் பெற்ற நடிகர்களுக்கு  இணையான திறமை கொண்டவர்கள் தமிழில் இல்லையா? சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

19-ம் நூற்றாண்டில் சினிமா என்கிற நுட்பம் மேற்குலகில் அதன் ஓரளவிற்கான வளர்ச்சி நிலையை அடைந்த சில ஆண்டுகளிலேயே தமிழிற்கும்  வந்து விட்டது. 1916-ல் முதல் மெளனப்படம் நடராஜ முதலியாரால் தமிழில் உருவாக்கப்பட்டு விட்டது. பிறகு புராணங்களை அடிப்படையாகக் கொண்ட  நாடகங்கள் அப்படியே செல்லுலாயிட் வடிவத்திற்கு மாறி காமிராக் கருவி அசைக்கப்படாமல் குறிப்பிட்ட இடத்திற்குள் நடிகர்களின் அசைவுகள் மாத்திரம் அப்படியே பதிவாக்கப்பட்டன. சினிமா நுட்பம் குறித்த அறிமுகமும் கற்றலும் அப்போது இங்கு பெரிதும் இல்லாத சூழலில் அது இயல்புதான். ஆனால் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டைக் கடந்த பிறகும் கூட அந்த நுட்பம் அதற்குரிய சாத்தியமான உள்ளடக்கத்துடன் தமிழ் சினிமாவில்  பயன்படுத்தப்படுகிறதா என்றால் ஒரு பெருமூச்சுடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. வசனங்கள் தொடர்ந்து இறைக்கப்படும் திரைக்கதைகளுடன் திரும்பத் திரும்ப மேடை நாடக பாணிகளே ஹை-டெக்  விரயங்களுடன் இங்கு உருவாக்கப்படுகின்றன.

புராண அலை சற்று ஓய்ந்தவுடன் சமூகக் கதைகளைப் பற்றிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. இவைகளிலிருந்து  வணிகரீதியாக ஒரு வெற்றிப்படத்திற்கான சூத்திரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த வடிவமைப்பிலேயே மசாலா சினிமாக்கள் தொடர்ந்து உதிர்ந்து கொண்டேயிருந்தன. அதாவது தமிழ் சினிமா என்பது பெரும்பாலும் அச்சமூகத்தின் கலாசார வெளிப்பாட்டு சாதனமாக, மக்களின் வாழ்வியலை யதார்த்தத்திற்கு நெருக்கமாக  பதிவு செய்யும் ஊடகமாக, அங்குள்ள அரசியலை அதன் பிரச்சினைகளை ஆவணமாக்கும் பிரதிகளாக அமையவேயில்லை. புறவடிவத்தில் அது தமிழ் சமூகத்தின் சாயல்களைக் கொண்டிருந்ததே ஒழிய பெரும்பாலான திரைப்படங்களின் நோக்கமும் மையமும் வணிகம் சார்ந்தும் பொழுதுபோக்கை சார்ந்தும் ஒருவகை போதைப் பொருட்களாக மாத்திரமே இருந்தன. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து விவாதங்களின் மூலம் 'செய்யப்பட்ட' கதைகள், பிறசினிமாக்களின் தழுவல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழல்கள், அசட்டுத்தனமான அழுகை மெலோடிராமாக்கள், திணிக்கப்பட்ட பாடல்கள் என்று  வணிக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பிரத்யேகமான ஃபேன்டசி உலகில் இயங்கின. எனவேதான் உலக சினிமா எனும் மதிப்பீட்டிலும் அளவுகோலிலும் ஒப்பிடப்படும் போது தமிழ் சினிமா என்பது ஒரு பிரதேசத்தின் மக்களின் யதார்த்தமான வாழ்வியலிலும் கலாசாரத்தில் இருந்தும் விலகி நின்று அசட்டுத்தனமான கற்பனாவாத உலகில் இயங்குவதால் பெரும்பாலும் கேலிக்குரியதாகவும்  உள்ளீடற்றதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

உண்மையில் உலக சினிமா என்கிற பதத்தை மிகக் கறாராகவும் தெளிவாகவும் வரையறை செய்ய முடியுமா, அல்லது அதுவொரு கற்பிதந்தானா?  தமிழ்ப்பிரதேசமும் உலகப்பந்தினுள் இருக்கும் போது  அங்கிருந்து உருவாகும் சினிமாக்கள் உலக சினிமா என்பதற்குள் வராதா? என்பது போன்ற கேள்விகள் எழலாம்.

உலகமெங்கும் வணிகநோக்கத்திற்காக மாத்திரமே உருவாக்கப்படும் சினிமாக்களைத் தவிர்த்து ஒரு மெல்லி்ய இணைகோடாக கலை சார்ந்து உருவாக்கப்படும் படைப்புகளும் கூடவே உருவாகின்றன. இவை அந்தந்த பிரதேசங்களின் கலாசாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றின் அசலான கூறுகளை நுட்பமாக பதிவு செய்கின்றன.அந்தப் பிரதேசத்திற்கு தொடர்பில்லாத பார்வையாளர்கள் முழுமையாக அணுகுவதற்கு  மொழி உள்ளிட்ட தடைகள் இருந்தாலும் அவை மானுட குலத்தின் ஆதாரமான பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது உலகத்திலுள்ள வேறு எந்தவொரு நுண்ணுணர்வு கொண்ட மனதினாலும் அந்த தடைகளைத் தாண்டி அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. திரைப்பட வரலாற்றில்  ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்கிய 'நியூவேவ்' திரைப்படங்களின் துவக்க கால இத்தாலிய படைப்பான 'பைசைக்கிள் தீவ்ஸ்''ஸில் தன்னுடைய அன்றாட வாழ்வாதாரத்திற்கு உபயோகப்படும் முக்கிய கருவியான சைக்கிளை இழந்து விட்டு தேடி அல்லாடும் ஒரு மனிதனின் துயரத்தையும் வறுமையையும் அந்தப் பிரதேசத்திற்கு தொடர்பேயில்லாத இன்னொரு சமூகத்தின் அடித்தட்டு மனிதனால் கலாசார தடைகளைத் தாண்டி எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவ்வகையான திரைப்படங்களின் மையம், அவை இயங்கும் விதம், உருவாக்கப்படும் பாணி, நோக்கம், வடிவம் ஆகியவை சார்ந்து தன்னிச்சையாக பல ஒற்றுமைகள் உண்டு. இந்த வகையில் அவற்றை உலக சினிமா என்ற வகைமையில் இணைக்க முடியும்.


***

தமிழ் சினிமாவிலும் சர்வதேச தரத்திற்கான படைப்பாளிகளும் நடிகர்களும் நுட்பக் கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அதற்கான தடயங்களை  அபூர்வமாக மலரும் சில நல்ல படைப்புகளில் காண முடியும். மகேந்திரன் உருவாக்கிய 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தின் உச்சக்காட்சியை சற்று யோசித்துப் பாருங்கள்.  எந்தவொரு சர்வதேச தரத்திலான சினிமாவுக்கும் சவால் விடக்கூடிய அளவிற்கு கலைத்தன்மையும் நுண்ணுணர்வுத்தன்மையும்  நுட்பமும் வாய்ந்தது அது. ஏறத்தாழ பெரும்பாலான நடுத்தரவர்க்கத்தினரின் கனவில் உள்ள 'சொந்த வீடு' எனும் லட்சியத்தையும் அது சுயநல அதிகாரத்தினால் சிதையும் துயரத்தையும் முன்வைத்த பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படம் எவ்வகையில் குறைந்தது? ஒரு பெண்ணின் அகவுலகு சார்ந்த உறவுச் சிக்கல்களை உளவியல் பார்வையில் தமிழ் சினிமாவில் அதற்கு முன்னும் பின்னும் இல்லாத அளவிலான, ஐரோப்பிய பாணியிலான திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக சிறப்புடன் உருவாக்கிய, சமீபத்தில் மறைந்து போன ருத்ரைய்யா (அவள் அப்படித்தான்) எந்த அளவிற்கு மற்ற உலக இயக்குநர்களை விட சாமான்யர்?, எம்.ஆர்.ராதா, பாலையா, சந்திரபாபு, நாகேஷ் .... என்று எந்தவொரு உலகப்புகழ் பெற்ற நடிகர்களின் திறமைக்கும் சளைக்காத திறமைசாலிகள்  நம்மிடமும் இருந்துள்ளார்கள். ஆனால் இவர்கள் பெரும்பாலும் தவறான சூழலுக்குள் சிக்கிக் கொண்ட சரியான நபர்கள் என்பதுதான் துரதிர்ஷ்டமானது. தமிழ் சினிமா எனும் காலியான சட்டிக்குள் சாத்தியமான அளவில் தங்களின் திறமைகளை அள்ளி ஊற்றி விரயமான அகப்பைகள்தான் இவர்கள்.

ஏனெனில் சினிமா என்கிற வலிமையான ஊடகத்தை அந்த நுட்பத்திற்குரிய சாத்தியங்களுடனோ, திரை மொழியுடனோ, ஒரு கலை சாதனமாகவோ அல்லது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி  உரையாடும் அரசியல் ஆயுதமாகவோ, தமிழ் சூழலின் பண்பாட்டை பதிவு செய்யும் ஆவணமாகவோ பயன்படுத்தும் பிரக்ஞையும் ரசனையும் கொண்ட சூழல் இங்கு மலரவே இல்லை. அபூர்வமாக சில விதிவிலக்குகள் உண்டுதான். ஆனால் அது ஒரு போக்காக மலராமல் போனது தமிழ் சினிமாவின் மிக துரதிர்ஷ்டமான நிலை. அந்த நிலைக்குப் போனதற்கு பல காரணங்கள் உண்டு.

ஓர் ஆளுமையை பீடத்தில் அமர்த்தி கண்மூடித்தனமாக வழிபடுவது என்பது தமிழ் சமூகத்தின் கூட்டு உளவியலுக்கு மிகவும் பிடித்தமானது. எனவே அது தமிழ் சினிமாவிலும் நீடித்தது இயல்பானது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எப்போதுமே இருபெரும் ஆளுமைகள் பிரதானமாக இருந்ததை அறிவோம். அதில் ஒருவர் எப்போதுமே சற்று மேலான நிலையில் இருப்பார். தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யூ சின்னப்பா ஒரு காலத்தை ஆண்டார்கள். இருவருமே அவர்களின் இசைத்திறமை காரணமாக புகழப்பட்டாலும் பாகவதர் தன்னுடைய தோற்றத்தின் கவர்ச்சி காரணமாக கூடுதல் புகழைப் பெற்றிருந்தார். எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆளுமையின் வளர்ச்சிக்கு மிக திட்டமிட்டு சினிமாவை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். தீய பழக்கங்கள் ஏதுமற்றவராக பெண்களின் பாதுகாவலராக ஏழைகளை அரவணைக்கும் அவதாரமாக பல விதங்களில் தன் சித்திரத்தை வெற்றிகரமாக நிறுவிக் கொண்டார். இதன் மூலம் இவரை விடவும் திறமையான சமகாலத்திய நடிகரான சிவாஜி கணேசன் அடைய முடியாத இடத்தை அடைந்து அதிகாரத்தை கைப்பற்றினார். பிறகு ரஜினிxகமல், விஜய்xஅஜித் என்பதாக இந்த வரிசை தொடர்கிறது.

எனவே தமிழ் சினிமா ஏறக்குறைய அதன் துவக்கத்திலிருந்தே கதாநாயகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரும்பாலும் ஆண்மைய கருத்தாக்கங்களை மையப்படுத்தும் கதைகளாகவும் காட்சிகளாகவும் அமைய முடிந்ததே ஒழிய அந்த வட்டத்தை தாண்டி இன்றும் கூட வர முடியவில்லை. தன்னை ஆராதிக்கும் முறையில் 'உருவாக்கப்பட்ட' கதை,  தன்னுடன் நடிக்கவிருக்கும் சக நடிகர்கள், இசையமைப்பாளர்கள்,இதர நுட்பக் கலைஞர்கள் என்று அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்களாக இந்த கதாநாயகர்கள் இருக்கும் அவலம் இருப்பதால் தமிழ் சினிமாவும் இவர்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் ஒரு திரைப்படம் என்பது அதன் இயக்குநரின் கட்டுப்பாட்டில் அனைத்தையும் அவர் தீர்மானிக்கும் நிலையயில் அல்லவா இருந்திருக்க வேண்டும்?. ஆனால் திரையிசையின் ஒரு மெட்டைக் கூட அதன் ஹீரோவி்ன ஒப்புதல் இன்றி பயன்படுத்தமுடியாத சூழலே இங்கு நிலவுகிறது. சினிமாவிலுள்ள மேலோட்டமான அறிவைக் கொண்டு ஆனால் அதன் எல்லாத் துறையிலும் முடிவுகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நாயகர்களே தக்கவைத்துக் கொண்டு இயக்குநர்கள் என்பவர்கள் அவர்களின் பலியாடுகளாக இருக்கும் போது எவ்வாறு சிறந்த திரைப்படங்கள் உருவாகும்?  இந்த நிலையை  ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்றவர்களால் சிறிதுதான் மாற்ற முடிந்தது, அவ்வளவே. எனில் எப்படி இங்கு உலக சினிமாக்கள் உருவாகும்?

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக அறியப்படுபவர் சிவாஜி கணேசன் என்பதும் தமிழ் சினிமா இயக்குநர்கள் அவரை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் உண்மைதான். என்றாலும் மிகையான நடிப்பை வழக்கமாக முன்வைப்பவர் என்று அவர் மீது விமர்சகர்கள் வைக்கும் புகாரிலும் உண்மையில்லாமல் இல்லை. அதைத் தவிர்த்து அவரால் இயல்பாகவும் நடிக்க இயலும் என்பதை 'மோட்டார் சுந்தரம் பிள்ளை, முதல் மரியாதை, தேவர் மகன்' போன்ற சில திரைப்படங்கள் நிரூபித்துள்ளன. சோ தன்னுடைய நேர்காணல்களில் வழக்கமாக நினைவுகூரும் சம்பவம் நினைவுக்கு வருகிறது. சோவும், சிவாஜியும் நடிக்கும் ஒரு படப்பிடிப்பு அது. ஒருவர் இறந்து விட்ட சோகம் தாங்காமல் சிவாஜி அழ வேண்டும். இது அவருடைய பிரத்யேகமான பிடித்த ஏரியா என்பதால் ரவுண்டு கட்டி அடிக்கிறார். காட்சி முடிந்ததும் படப்பிடிப்பில் உள்ளவர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டுகிறார்கள். சோ மாத்திரம் அமைதியாக இருக்கிறார். இதைக் கவனித்த சிவாஜி அவரை தனியாக அழைத்து "ஏன் என் நடிப்பு பிடிக்கவில்லையா?' என்று கேட்கிறார். "இல்லைண்ணே.. நீங்க நடிச்சது மிகையா இருந்தது போல பட்டது" என்று சோ பதிலளிக்கிறார். "சரி. இப்ப, பாரு இந்த சீனை வேற மாதிரி செய்யறேன்" என்று அதே காட்சியின் சூழலை அந்த தனியறையில் இயல்பாக நடித்துக் காட்டியிருக்கிறார். சோ -விற்கு மிக ஆச்சரியம். "ஆனா இந்த மாதிரி நடிச்சா இங்க ஒரு பய பார்க்க மாட்டான். இவங்களுக்கு இப்படித்தான் பிடிக்கும்" என்று தன் செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் சிவாஜி.

தெருக்கூத்து மரபிலிருந்து உருவான நாடக உலகிலிருந்து சினிமாவிற்கு வந்தவர் சிவாஜி கணேசன். ஒலிப்பெருக்கிகள் இல்லாத காலத்தில் கடைசி வரிசையில் உள்ள பார்வையாளனும் அசெளகரியம் கொள்ளாத படி உரத்த குரலிலும் மிகையான உடல் மொழியிலும் நடிக்க வேண்டிய அவசியம் அப்போதிருந்தது. ஆனால் சினிமாவின் நுட்பம் வேறு. அண்மைக்காட்சிகளை கேமிரா பதிவு செய்யக்கூடியதின் மூலம் ஒரு நுட்பமான முகபாவத்தைக் கூட பார்வையாளனால் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த சாத்தியத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் மிகையாக நடித்து 'அதுதான் சிறந்த நடிப்பு' என்பது போல தோற்றத்தை ஏற்படுத்தி அதற்குப் பின்னால் வருபவர்களும் அதையே பின்பற்றி தமிழ் சினிமா பின்னடைவின் காரணத்திற்கு சிவாஜியும் ஒரு வகையில் காரணமாய் இருந்தது துரதிர்ஷ்டம்தான். மேலும் இயல்பான நடிப்பு எது என்பதை தெளிவாகவே உணர்ந்திருக்கும் அவர், சர்வதேச திரைப்படத்தின் தகுதிகளோடும் இலக்கணங்களோடும் சில படங்களையாவது உருவாக்குவதற்கு -  ஒருவேளை நிகழக்கூடிய வணிகரீதியான நஷ்டங்களையும் கணித்து -  தன் பங்களிப்பை செலுத்தாதது ஏன்? ஒரு காலகட்டத்திய தமிழ் சினிமாவையே ஆக்ரமித்துக் கொண்டிருந்த அவருக்கு இது எளிதான விஷயம்தானே? 'வரலாறு முக்கியம் அமைச்சரே' எனும் தத்துவத்தைக் கூடவா அவர் உணராமல் இருந்திருப்பார்?

மகேந்திரன் தன்னுடைய சினிமா பற்றிய நூலில் எழுதும் போது இளமைக்காலத்தில் நிகழ்ந்த ஒரு கல்லூரி பேச்சு நிகழ்வில் 'தமிழ் சினிமா மக்களின் வாழ்வியலில் இருந்து விலகி எத்தனை போலித்தனமாக இருந்திருக்கிறது' என்பதைப் பற்றி ஆவேசமாக பேசிய போது அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.ஜி.ஆர் 'நன்றாகப் பேசினீர்கள்' என்று பாராட்டச் செய்கிறார். பிற்காலத்தில் மகேந்திரன் 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தை உருவாக்கிய போது அதை ஒரு திரையிடலில் பார்த்த எம்.ஜி.ஆர் "அன்று தமிழ் சினிமாவின் மீது முன்வைத்த குறையை நீங்களே போக்கி விட்டீர்கள்" என்று உணர்ச்சிவசப்பட்டு பாராட்டியிருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் தாம் நடித்த காலத்தில் எல்லாம் எவ்வாறான திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். அது மாத்திரமல்ல, அவர் அதிகாரத்திற்கு வந்தவுடன்  'உதிரிப்பூக்கள்' திரைப்படம் போன்ற இன்னும் சில திரைப்படங்கள் மலர்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்க முடியும். ஏன் செய்யவில்லை? சமகாலத்திய வணிக சினிமாவின் உச்ச அடையாளம் ரஜினிகாந்த். அவரிடம் 'நீங்கள் நடித்ததிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?": என்று அவருடைய குருநாதர் பாலசந்தர் ஒரு திரை நிகழ்ச்சியில் கேட்கும் போது சட்டென்று 'முள்ளும் மலரும்' என்ற ரஜினி பதிலளிக்கிறார்.

ஆக....தமிழ் திரையுலகை ஆக்ரமித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எது நல்ல சினிமா என்பது தெளிவாகவே உள்ளூற தெரிந்திருக்கிறது. ஆனால் அந்தத் துறையின் மூலமே செல்வத்தையும் செல்வாக்கையும் பெற்றவர்கள், தாம் சார்ந்திருந்த துறையின் வளர்ச்சிக்காகவும் மேம்படுவதற்காகவும்  போகிற போக்கில் சிறிதாக கூட எதையுமே ஏன் செய்யவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது. நல்ல சினிமாவை உருவாக்கி விட முடியுமென்கிற கனவுகளுடனும் லட்சியங்களுடனும் ஆயிரம் இளம் இயக்குநர்கள் வாய்ப்பில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரையாவது ஆதரித்து தமிழ் சினிமாவின் வரலாற்றை திசை திருப்பும் படியும் சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாக்களைப் பற்றிய உரையாடல் பெருமையோடும் அமையும்படியும் ஆவதற்கான சில விஷயங்களையாவது தமிழ் சினிமாக்களை தீர்மானிக்கும் சக்திகள் செய்திருக்கலாமே என்று ஆதங்கத்துடன் யோசிக்க மாத்திரமே முடிகிறது.


***


தமிழ் சினிமாவிற்கென்று சில குறிப்பிட்ட தேய்வழக்குகள் (Cliches) உள்ளன. அவைகளிலிருந்து பெரும்பாலும் தமிழ் சினிமா வெளிவந்ததேயில்லை.  புகழ்பெற்ற ஹீரோ என்று கூட அல்ல, சாதாரண ஹீரோவாக இருந்தால் கூட அவரின் மீது யாருமே கைவைத்து விட முடியாது. வில்லன்களும் அடியாட்களும் வரிசையில் வந்து அடிவாங்கி செல்ல வேண்டும். ஹீரோவாக விருப்பப்பட்டால் ஒழிய பெருந்தன்மையுடன் இரண்டு அடிகளை முதலில் வாங்கிக் கொள்ள முன்வருவார். படத்தின் இறுதியில் ஹீரோ சாகக்கூடாது. பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். படம் ஓடாது. எத்தனை சிக்கல்கள் வந்தாலும் படத்தின் இறுதியில் அவையெல்லாம் நீங்கி அனைவரும் புன்னகைக்கும் காட்சியுடன்தான் படம் நிறைவுற வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்கள் மனநிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் திரையரங்கை விட்டு செல்வார்கள். படத்தில் வரும் பெண் பாத்திரங்களுக்கு என்று எவ்வித முக்கியத்துவமோ பிரத்யேகமான பின்புலமோ இருக்கக்கூடாது. காதலி என்றால் நாயகனுடன் ஆடிப்பாட வேண்டும். தாய் என்றால் நாயகனுக்கு பெருமை சேர்க்கும்படி அம்மா சென்ட்டிமென்ட் காட்சிகளில் தோன்றி மறைய வேண்டும். நாயகன் விரும்பாவிட்டாலும் சில பெண்கள் அரைகுறை ஆடையுடன் வலிந்து வந்து அவனை கவர முயல்வார்கள்.

இதெல்லாம் தமிழ் சினிமாக்களில் உள்ள அபத்தங்கள் குறித்தான சிறு பட்டியல்தான். இப்படி வணிகரீதியாக பல சமரசங்களுடனும் செயற்கையான கட்டுப்பாடுகளுடனும் இயங்கினால் எப்படி நல்ல சினிமாக்கள் தமிழில் உருவாகும்?

ஹீரோக்கள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்ததைப் போலவே ஓர் இசையமைப்பாளர்  தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலமும் இருந்தது. அவருடைய புகைப்படத்தை படபூஜை விளம்பரத்தில் போட்டால் படம் எப்படியாவது வியாபாரமாகி விடும் என்கிற நிலை இருந்தது. அவரும் திறமையான இசையமைப்பாளர்தான். அந்தக் காலத்தில் ஓய்வு ஒழிச்சலின்றி மாய்ந்து மாய்ந்து உழைத்துக் கொண்டிருந்தார். அவரது இசையிலிருந்து பல ரத்தினங்களும் சில கற்களும் கலந்துதான் வெளியாகிக் கொண்டிருந்தன. சில வருடங்களுக்கு முன் அந்த இசையமைப்பாளர் பணியாற்றிய திரைப்படம் ஒன்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு அதன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளருடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் ஓர் இயக்குநர் சொன்ன சம்பவம்தான் படு சுவாரசியமானது.

அ்நத இசையமைப்பாளரை தங்கள் படத்தில் பணியாற்றச் சொல்லி பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அன்புத்தொல்லையும் நெருக்கடியும் தருகிறார்கள். அவர் படத்தைப் போட்டாலே வியாபாரமாகி விடுகிறதே? ஒரு சமயத்தில் நெருக்கடியைத் தவிர்க்க இசையமைப்பாளர் பொதுவில் ஒரு நிபந்தனையைப் போடுகிறார். 'என்னிடம் சிறந்த ஐந்து மெட்டுக்கள் உள்ளன. அந்த மெட்டுக்களுக்கு ஏற்ப எந்த இயக்குநர் ஒரு கதையை எழுதிக் கொண்டு வருகிறாரோ,அவருடன் பணியாற்ற சம்மதிக்கிறேன்'. மேற்குறிப்பிட்ட சம்பவத்தை பகிர்ந்த இயக்குநரும் ஒரு கதையை 'உருவாக்கி' இசையமைப்பாளரிடம் ஒப்புதல் வாங்கி இசையைப் பெற்று படத்தையும் வெளியிடுகிறார். அதாவது தமிழ் சினிமாவில் அதுவரை மெட்டுக்கு பாட்டு எழுதியதுதான் வழக்கமாக இருந்திருக்கும். ஆனால் மெட்டுக்கேற்ப ஒரு திரைப்படமே உருவாகின அதிசய அபத்தமெல்லாம் தமிழ் சினிமாவில்தான் சாத்தியம்.  இதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த திரைப்படம் வெளியாகி மகத்தான வெற்றியும் பெற்றது. இப்படியிருக்கிறது நம்முடைய ரசனை. ஒரு திரைப்படத்திற்கு தேவைப்படும் இடங்களில் துணையாக அடிநாதமாக பயணிக்க வேண்டிய கூறுகளுள் ஒன்று இசை. ஆனால் இயக்குநர் பின்னுக்குத் தள்ளப்பட்டு இசையும் இசையமைப்பாளருமே திரைப்படத்தின் உருவாக்கங்களை தீர்மானிக்ககூடிய இடத்தில் இருப்பது என்னவொரு துரதிர்ஷ்டமான நிலை? சினிமா எனும் கலையில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் இது போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் என்னதான் கலை கலை என்று கூப்பாடு போட்டாலும் சினிமா என்பது பெரும் பொருளை கோரியும் வணிகத்தை சார்ந்தும் நிற்கிற விஷயம். எந்தவொரு ஊடகத்தையும் விட வலிமையுள்ளதாக தமிழ் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக  நிழல் நாயகர்களை நிஜமென்று நம்பி அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க கூடிய செல்வாக்குள்ளதாக சினிமா ஊடகம் திகழ்கிறது. எனவே, ஒன்றைப் போட்டால் பத்தை எடுக்கலாம் என்கிற வணிக நோக்குச் சிந்தனையாளர்களாலும் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முயலும் குறுக்கு வழியாக சினிமாவைப் பார்க்கிறவர்களாலும் இது ஈர்க்கப்படுவது இயல்புதான். எனவே இவர்கள் உருவாக்கும் திரைப்படங்களும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி அவர்களிடமிருந்து காசு பிடுங்கும் உற்பத்தி பொருள்களாக  மாத்திரமே இருக்கும். வாடிக்கையாளர்கள் மாறினால் உற்பத்தியாளர்களும் அதற்கேற்ப மாறித்தான் ஆக வேண்டும் என்கிற சந்தை விதிக்கேற்ப, தமிழ் பார்வையாளர்கள் தேய்வழக்கு மசாலா திரைப்படங்களை கறாராக புறக்கணித்து நல்ல முயற்சிகளை மாத்திரம் தொடர்ந்து ஆதரித்து வந்தால் தமிழ் சினிமாவின் போக்கும் அதற்கேற்ப மாறும். சினிமா ரசனை என்பதை பள்ளிக் கல்வித் திட்டத்திலேயே இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒற்றைக் குரலாக ஒலித்துக் கொண்டேயிருந்த பாலுமகேந்திராவின் கருத்தும் இந்த சூழலை எதிர்பார்த்துதான் அமைந்திருக்கிறது. எனவே ரசனை மாற்றம் என்பதுதான் தமிழ் சினிமாவின் சிறப்பான எதிர்காலத்திற்கான வழி.

மேலும், இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற சத்யஜித்ரே போன்ற, சமரசத்திற்கு உட்படாத இயக்குநர்கள் தமிழிலும் வருங்காலத்தில் தோன்றினால் தமிழ் சினிமாவையும் அதன் சாதனையாளர்களையும் பற்றிய உரையாடல்கள் மேற்குறிப்பிட்ட கட்டுரைகளில் பதிவாவது தன்னாலேயே நிகழும். 

- உயிர்மை - டிசம்பர் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Thursday, December 11, 2014

சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்



நண்பர்களே,

ரஜினிகாந்த் நடித்து 2007-ல் வெளிவந்த சிவாஜி திரைப்படம் வெளியிடப்படும் தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரையிது. இந்த 2014-ன் இறுதியில் வெளியாகும் லிங்கா திரைப்படத் தருணத்திலும் இக்கட்டுரை பொருத்தமாக அமைந்திருப்பதாகவே கருதுகிறேன். 

***

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பரபரப்பை ஏற்படுத்தவோ அல்லது ரஜினி ரசிகர்களை சங்கடத்திலோ, கோபத்திலோ ஆழ்த்துவதற்காகவோ இந்த பதிவு எழுதப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது. ஆபாச வசைச் சொற்களைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தும் இந்தப்பதிவு எழுதப்படுவதின் நியாயத்தை, திறந்த மனதுடன் வாசிக்கும் எவரும் பதிவின் இறுதியில் உணர்வார்கள் என்று நிச்சயமாகவே நம்புகிறேன்.

()

தமிழில் திரைப்படங்கள் தோன்றும் போது அது அப்படியே நாடகத்தின் கூறுகளை, தாக்கங்களை முழுவதுமாக உள்வாங்கி பிரதிபலித்தது. காட்சியமைப்புகள், ஆடை அணிகலன்கள், அரங்க அமைப்புகள், இசைப் பாடல்கள் என்று நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏதுமில்லை. சுருங்கக்கூறின் நாடகங்களின் சுருள்வடிவமே திரைப்படம் என்பதாக இருந்தது. காளிதாஸ் (1931) ஹரிச்சந்திரா (1932) சீதா கல்யாணம் (1933) தொடங்கி புராணங்களின் உபகதைகளை கொண்டு தமிழ்ச் சினிமா பயணித்தது. பின்பு எம்.கே.தியாகராஜ பாகவதர், (ஹரிதாஸ் - 1944) பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா போன்ற இசையும் நடிப்புத்திறமையும் இணைந்த நாயக நடிகர்களின் துணை கொண்டு வளர்ந்தது. இடையே விடுதலைப் போராட்டத்தின் எதிரொலியாக காலனியாதிக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் (நாம் இருவர் - 1947) எதிர்த்து திரைப்படங்கள் தோன்றின.

ஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் புராண மறுஉருவாக்க படங்களும் (திருவிளையாடல் - 1965) கண்களைப் பிழிய வைக்கும் பீம்சிங்கின் மிகை உணர்ச்சிப் படங்களும் (பாசமலர் 1964) வெளிவந்தன. புராணப்படங்கள் தேய்ந்து போய் சமூகக் கதைகள் (நல்லவன் வாழ்வான்; கெட்டவன் வீழ்வான் என்பதை அடிச்சரடாகக் கொண்டு) பெரும்பாலான படங்கள் வெளிவந்தன. இதிலிருந்து மாறுபட்டு ஸ்ரீதர் (தேன்நிலவு 1961) கே.பாலச்சந்தர் (சர்வர் சுந்தரம் 1964; நாணல் - 1965) போன்றவை வெளியாகின. தமிழ்த்திரையுலகின் முதல் கலகக்குரலாக (அன்றைய சூழ்நிலையில்) கே.பாலச்சந்தரை குறிப்பிடுவேன். அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்கள், மக்களை கனவுலகிலிருந்து மீட்டு யதார்தத்தின் வெளிச்சத்திற்கு அழைத்து வந்த ஆரம்பப் புள்ளிகளாக அமைந்து சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.

()

1975-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை "தமிழ்த்திரையுலகின் பொற்காலம்" எனக்கூறலாம். பதினாறு வயதினிலே, சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), அவள் அப்படித்தான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) அழியாத கோலங்கள், உதிரிப்பூக்கள், நூல்வேலி, பசி, (1979), இவர்கள் வித்தியாசமானவர்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்க்ள், மழலை பட்டாளம், மூடுபனி, (1980) என்று களம், பின்னணி, திரைக்கதையமைப்பு, இசை போன்ற பிரதான துறைகளில் வித்தியாசமான அமைப்பை கொண்டு வந்திருந்தன. எல்லா காலகட்டத்திலும் வணிக சினிமா, ரசனை சார்ந்த சினிமா என்பது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தக் காலகட்டத்திலும் பெரும்பான்மையான ரசனை சார்ந்த சினிமா உருவாகின. இதன் மூலம் சர்வதேச திரைப்படங்களைப் பற்றின தேடலும், விவாதங்களும், விழிப்புணர்வும் சாத்தியமாக்கியது. நல்ல திரைப்படங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதால் வித்தியாசமான முயற்சிகளை கொடுக்கும் துணிவு இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.

திரைவிமர்சகர்கள் தமிழ்த்திரையுலகின் வரலாற்றை எழுதும் போது இந்த காலத்தை ஏக்கப்பெருமூச்சுடன் நினைவு கூர்கிறார்கள். இந்தப் படங்கள் பொதுமக்களின் பரவலான கவனத்தைப் பெற்றதோடு வணிக ரீதியான வெற்றியையும் பெற்றன. இதே நிலை தொடர்ந்திருந்தால், தமிழ்த்திரையுலகத்தின் முகமே மாறிப் போய் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள் பெற்றிருந்த ரசனை வளர்ச்சியை நாமும் பெற்றிருக்கக்கூடும்.

ஆனால் 1982-ல் ஏவி.எம்.எம். நிறுவனத்திலிருந்து வெளிவந்த "சகலகலா வல்லவன்" என்கிற திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த வளர்ச்சியை அடியோடு மாற்றியது. உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்போடு இதை ஒப்பிடலாம். குறிப்பிட்ட படத்தின் வணிகரீதியான மிகப் பெரிய வெற்றி மேற்சொன்ன சூழ்நிலையை குரூரமாக குலைத்துப் போட்டது. ஆபாசம், வன்முறை, நாயக புகழ்ச்சி, மிகை உணாச்சி, பாசாங்கு என்று எல்லாவிதமான செயற்கைத்தனங்களுடன்தான் பிற்காலத்திய படங்கள் வெளிவந்தன. இடையிடையில் மாற்று முயற்சிகள் வந்தாலும் அவை பெரும்பான்மையான கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழ் சினிமாவின் முக்கியமான மறுமலர்ச்சிப் படமான "நாயகனை" (1987) உருவாக்கிய மணிரத்னம், பிற்பாடு "தளபதி" (1991) போன்ற வணிகரீதியான சினிமாவை கொடுக்க நேர்ந்தது. தரமான திரைப்படங்களை பார்த்து உள்வாங்கி வெளிவந்த திரைப்படக் கல்லூரி மாணவர்களும் (ஊழை விழிகள் - இதே போன்ற படங்களையே அளிக்க முடிந்தது. விக்ரமன் போன்றோரது படங்கள் மோசமான முன்மாதிரிகளாகவே இருந்தன.

()

இப்போதைய காலகட்டத்திற்கு திரும்புவோம். தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" படங்களை பார்த்து சலித்துப் போனதும், சர்வதேச சினிமா குறித்து அறிவுஜீவிகள் தவிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு எழுந்ததாலும், ஊடக வளர்ச்சி காரணமாக சினிமாவின் தொழில்நுட்பம் குறித்து பாமரனும் அறிய முடிந்ததாலும் மக்கள் மாற்று முயற்சிகளை மெலிதாக வரவேற்றனர். காதல் என்று ஆரம்பிக்கிற பெயரில் நிறைய கண்ராவிப் படங்கள் வந்திருந்தாலும், பாலாஜி சக்திவேலின் "காதல்" திரைப்படம் (2004) ஒரு பெரிய ஆசுவாசமாக அமைந்தது. நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை இளம் இயக்குநர்களுக்கு பிறந்தது. இதனின் சமீபத்திய தொடர்ச்சியாக அழகிய தீயே, வெயில், மொழி, பருத்தி வீரன் என்று குறைவான வணிக சமரசங்களோடு படங்கள் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றியையும் பெற முடிந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முன் குறிப்பிட்ட பொற்கால சூழ்நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் படங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. (வணிகரீதியான அம்சங்கள் குறைவாக இருந்தாலே, அது நல்ல படம் என்று நாம் பேச ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றாலும், நிஜமாகவே நல்ல படங்களை எடுப்பதற்கு இவைகளை ஆரம்ப முயற்சிகளாக கொண்டு வரவேற்கலாம்)

ஆனால் இந்த ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை சிவாஜி திரைப்பட வரவு குறித்த அதீத பரபரப்பு, முன்னர் குறிப்பிட்ட அதே மாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சகலகலா வல்லவன் போன்றே சிவாஜியும் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது என்பதுதான் நகைமுரண். சினிமாப் பத்திரிகைகள் தொடங்கி ஜோதிடப் பத்திரிகைகள் வரை எதுவுமே "சிவாஜி"யைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது என்கிற அளவிற்கு இத்திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (இதே போன்று முன்னர் பரபரப்பை ஏற்படுத்தின "பாபா"வின் கதியும் நினைவிற்கு வருகிறது). வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் வணிக ரீதியான விற்பனையின் தொகை பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. ஆடியோ விற்பனையே 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எத்தனையோ வணிகரீதிப்படங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கவில்லையா, சிவாஜி வருவதால்தான் ஆக்கப்பூர்வமான சூழ்நிலை மாறிவிடுமா? என்னய்யா அபத்தமாக இருக்கிறது? என்று உங்களில் சிலருக்கு தோன்றக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நான் அஞ்சுவது இந்தப்படத்தின் பரபரப்பு குறித்தும், ஆர்ப்பாட்டம் குறித்தும்தான். ஒருவேளை இந்தப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றால், மீண்டும் வணிகரீதியான படங்களுக்கு மவுசு கூடி, வணிகரீதி இயக்குநர்கள் பிசியாகி விடுவார்கள். மாற்று முயற்சிகளின் பிரகாசம் மங்கிப் போய், நாளடைவில் தேய்ந்து போய்விடவும் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். மீண்டும் இந்த சூழ்நிலை மலர எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?


()

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வருடத்திற்கு சுமார் 1000 படங்கள் தயாரிக்கும் ஒரு தேசத்திலிருந்து சர்வதேச தரத்திற்கு இணையான படங்களின் சதவீதம் மிக மிகக்குறைச்சலே. ஆஸ்கருக்காக ஏங்கிப் போய், அது கிடைக்காத விரக்தியில், அது உலகத்தரம் அல்ல, அமெரிக்கத்தரம் என்று பேசுவது "சீசீ இந்தப் பழம் புளிக்கும்" என்கிற கதையைத்தான் நினைக்க வைக்கிறது. ஆஸ்கர் விருது கிடைப்பது ஒரு புறம், அதன் நாமினேஷன் பட்டியிலில் இடம் பெறுவதற்கே நாம் மல்லாட வேண்டியிருக்கிறதே? cannes film festival-ல் திரையிடுவதற்கு கூட பெரும்பான்மையான திரைப்படங்கள் லாயக்கில்லாதவை. இந்த நிலை குறித்து நாம் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா? ஈரான் போன்ற கைக்குட்டை தேசங்கள் கூட சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனிப்பை பெறும் போது நம் நிலை என்ன?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி" என்று பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதில் மாத்திரம் புண்ணியமில்லை. காலத்திற்கேற்ப நம் தரத்தையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் ரசனை மேம்பாடும், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பும் மேம்பாடும் முக்கியமானவை. எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங்கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

(மீள்பதிவு) 

suresh kannan

Wednesday, December 03, 2014

கதாநாயகிகளின் ஆயுள்ரேகை


 தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி. தென்னிந்திய சினிமாவின் முதல் கனவுக்கன்னியும் கூட. தனது 40வது வயது வரை நடித்தவர். கே.ஆர்.விஜயா, சாவித்திரி, சரோஜாதேவி, பானுமதி, தேவிகா.... என்றுஅப்போதைய காலத்து கதாநாயகிகள் பெரும்பாலும்  தங்களின் இளமைக்காலத்தைக் கடந்த பிறகும் கூட நாயகிகளாக நடிக்க முடிந்தது. இவர்களில் பெரும்பாலும் அண்டைய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே. சினிமாவில் நடிப்பது ஒழுக்கத்திற்குப் புறம்பானது என்று கருதப்பட்ட காலத்தில் அழகும் திறமையும் இருந்தாலும் துணிவுடன் நடிக்க முன்வருபவர்கள் குறைவாக இருந்ததால் ஒரு சில குறிப்பிட்ட நபர்களே தொடர்ந்து நாயகிகளாக நடித்துக் கொண்டிருந்தார்கள். கொடியிடையும் இளமையும் கொண்ட பெண்தான் நாயகியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சாத்தியம் இல்லாததால் இடுப்பின் சுற்றளவு அசாதரணமான அளவில் இருந்தவர்கள் கூட 'அம்மா.. நான் காலேஜூக்குப் போயிட்டு வரேன்' என்று பேசிய வசனங்களை ரசிகர்கள் பெரிதும் நெருடலாக எடுத்துக் கொள்ளாமல் ரசித்தார்கள்.

ஆனால் நிலைமை இப்போது வெகுவாக மாறி விட்டது. ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டே நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. பாக்கெட் மணிக்காக சினிமாவில் நடிக்க வருபவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் திரைத்துறையில்  இயங்கும் இவர்களின் காலஅளவு சொற்பமானதாக இருக்கிறது. இரண்டு மூன்று ஆண்டுகளைக் கடப்பதே சிரமம். நவீன திரைப்படங்களில் பிரேம்கள் சட்சட்டென்று மாறுபவதைப் போலவே நாயகிகளும் உடனுக்குடன் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ரசிகர்களின் ரசனையும் அதைப் போலவே மாறிக் கொண்டிருக்கிறது.  ஒரேயொரு தமிழ் திரைப்படத்தில் நடித்து விட்டு பின்பு காணாமற்போன நாயகிகளின் எண்ணிக்கை அதிகம். கமலுடன் இணைந்து நடித்த 'குணா' திரைப் படத்தின் நாயகி ரோஷிணி, அஜித்துடன் 'காதல் மன்னன்' திரைப்படத்தில் நடித்த மானு போன்றவர்கள் உடனடி நினைவுக்கு வருகிறார்கள்.

சமூகத்தின் எல்லாத்துறையையும் போலவே சினிமாவும் ஆணாதிக்கத்தன்மை கொண்டதாக இருப்பதில் வியப்பேதுமில்லை. ஐம்பது, அறுபதைக் கடந்த நடிகர்கள் கூட இன்னமும் டோப்பா முடியுடனும் கூலிங்கிளாஸூடனும் ஹீரோவாக நடிக்கும் அவலம் மாறவில்லை. ஒரு பெண் குழந்தை ஹீரோவுடன் நடிக்கும்.பின்பு அதுவே மகளாக நடிக்கும். பின்பு நாயகியாகவும். பின்பு நாயகி ரிடையர்டு ஆகி அண்ணி, அம்மா வேடத்திற்கு நகர்ந்த பிறகும் டோப்பா முடியும் கூலிங்கிளாஸூம் அதே இடத்தில் நகராமல் ஹீரோவாக இருக்கும். இவர்கள் சுட்டிக்காட்டுபவர்கள்தான் ஹீரோயினாக நடிக்க இயலும் கொடுமையும் மாறவில்லை. விதிவிலக்காக பானுமதி போன்ற அபூர்வமான பன்முக திறமைசாலிகள் தங்களின் தனித்தன்மையால் ஆண்களின் ஆதிக்க உலகின் இடையே  தனி நட்சத்திரமாக ஜொலித்தார்கள். தான் நடிக்க ஒப்புக்கொண்ட படம் ஒன்றிற்காக  அப்போதைய ஆண் நடிகர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத ஊதியத்தைப் பெற்றார் கே.பி.சுந்தராம்பாள். ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திய ஆக்ஷன் நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்தார் விஜயசாந்தி.

ஆகவே தங்களின் சொற்ப ஆயுள் காலத்தைப் புரிந்து கொள்ளும் சமகால கதாநாயகிகள் இயன்ற வரை அதிக படங்களை ஒப்புக் கொண்டு அதற்கான சமரசங்களை விலையாக கொடுத்துக் கொண்டு அழகுப் பதுமையாக டூயட் ஆடி முடிப்பதோடு தங்களின் சேவையை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள். விதிவிலக்காக சில நாயகிகள் மாத்திரம்தான் ரசிகர்களின் நீண்ட கால அன்புக்கு பாத்திரமாக முடிகிறது. அந்த அன்பு  கோயில் கட்டும் அபத்தம் வரை கூட நீள்கிறது.  ஆணாதிக்க ஆக்ரமிப்புள்ள உள்ள சூழலில்  சமகால நாயகிகளில்  நயனதாரா, திரிஷா, அனுஷ்கா போன்றவர்கள் பத்தாண்டுகளைத் தாண்டியும் இன்னமும் களத்தில் நீடிப்பது ஆச்சரியமான விஷயம் மாத்திரமல்ல, பாராட்டப்பட வேண்டியதும் கூட. இது எப்படி சாத்தியமாகிறது?

திறமையான நடிப்பின் மூலமோ அசத்தலான கவாச்சியின் மூலமோ குழப்பமான சர்ச்சைகளின் மூலமோ, எப்படியோ.. எப்போதும் மஞ்சள் வெளிச்சத்தின் கீழேயே இருப்பது அவசியமாக இருக்கிறது. சிலர் அவர்களாகவே தங்களைப் பற்றிய வம்புச் செய்திகளையும் கிசுகிசுக்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் பரப்புவதாகச் சொல்கிறார்கள். எப்போதும் மக்களின் கவனத்திலேயே தங்குவதற்கு இவை அவசியமானதாக இருக்கின்றன. நடிப்பின் மூலமாக அல்லாமல் புற அழகின் மூலமாகவே ஒரு நடிகையின் இருப்பும் வாய்ப்பும் உறுதி செய்யப்படுவதால் உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள பல தியாகங்களை செய்ய வேண்டியிருக்கிறது. தாங்கள் தோ்ந்தெடுக்கும் திரைப்படத்தின் கதையையும் அதில் தங்களின் பங்கையும் விட அதில் நடிப்பவர் முக்கியமான, வெற்றிகரமான ஹீரோவா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கு மாறாக ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து விட்டு பிறகு தங்களது சந்தை வாய்ப்பை இழக்கும் நடிகைகளின் பாடு பரிதாபகரமானது. அதுவரை அனுபவித்துக் கொண்டிருந்த உயர்நிலை அந்தஸ்துகளையும் சொகுசுகளிலிருந்து இறங்கவும் இழக்கவும் முடியாமல் தங்களின் செல்லுலாயிட் கதாநாயகன்களுக்கே அக்காவாகவும் அம்மாவாகவும் நடிக்க வேண்டிய கொடுமை. தங்களின் சம்பாத்தியம் குறைந்தவுடனேயே அவர்கள் உளரீதியான தாக்குதல்களையும் அழுத்தங்களையும் மனஉளைச்சல்களையும் எதிர்கொள்வது முதலில் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட சுற்றத்தார்களிடமிருந்தே. நடிகையாக தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்தவர்கள் ஒரு நாள் ஓய்ந்து திரும்பிப் பார்க்கும் போது தம்மைச் சுற்றியிருந்தவர்கள் தனக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றிருந்த எண்ணத்திற்கு மாறாக தன்னுடைய பணத்திற்கு மாத்திரமே பாதுகாப்பாக இருந்தவர்கள் என்கிற உண்மையை நேரடியாக எதிர்கொள்ளும் போது அகரீதியான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பந்தயக் குதிரைக்கு காயம் பட்டவுடனே சுட்டுக் கொல்லப்படுவதைப் போன்றதொரு நிலைமை.

இளமைக்காலங்கள் என்கிற திரைப்படம் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த சசிகலா என்பவர் தனது இறுதிக்காலத்தில்  நோயுற்று எவர் துணையுமின்றி அநாதையாக இறந்து போன அதிர்ச்சிகரமான செய்தியை நாளிதழ்களில் வாசித்திருப்போம். சுற்றத்தார்கள் தரும் அழுத்தம் தாங்காமல் சிலர் வேறுவழியின்றி பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளில் சென்று பின்பு பிடிபட்டு ஊடகங்களின் கட்டம் கட்டிய வம்புச் செய்திகளுக்கு தீனியாகிறார்கள். இந்தக் காரணங்களினாலேயே இவர்களது சிலரது திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையாமல் திசை திரும்பி விடுகிறது. இவையெல்லாம் பத்திரிகைகளில் வந்த உதாரணங்கள் மட்டுமே. வெளிவராத பரிதாபங்கள் எத்தனையோ இருக்கலாம். இம்மாதிரியான ரிடையர்டு நடிகைகளின் உடனடி புகலிடம் தொலைக்காட்சி சீரியல்கள். சினிமாவில் மீந்து போன புகழை வைத்துக் கொண்டு சீரியல்களில் கண்களை உருட்டி யாரையாவது பளார் பளார் என்று அறைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? பஞ்ச் டயலாக் நாயகர்கள் மாத்திரமே பெரும்பான்மையாக உலா வரும் தமிழ் திரையுலகில் பெண்களை பிரதான பாத்திரங்களாகவும் அவர்களது உலகை, சிக்கலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் பெரும்பான்மையாக வெளிவரவோ அல்லது ரசிகர்களால் வரவேற்கப்படவோ இல்லை என்பதே. கதாநாயகிகள் பிரதான பாத்திரங்களாக சித்தரிக்கப்படும் திரைப்படங்களுக்கென ஒரு சந்தை கிடையாது. எல்லாமே ஹீரோக்களைச் சுற்றித்தான் இயங்குகிறது. பெண்களை முக்கியத்துவப்படுத்தி படமெடுத்த இயக்குநர்கள் பாலச்சந்தர், மகேந்திரன் போன்றவர்கள் இன்று ஜீவிக்க முடியாது.

பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் திரைப்படங்கள் இப்போது அபூர்வமாகவே கவனதிற்குள்ளாகின்றன. பல வருடங்கள் கழித்து திரையுலகிற்கு திரும்பிய ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது . போலவே சமீபத்தில் மஞ்சு வாரியர் நடித்த 'How old are you?' என்கிற மலையாள திரைப்படமும் கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. இரண்டு திரைப்படங்களுமே திருமணத்திற்குப் பின் தங்களின் தனித்தன்மைகளை இழந்து சமையலறைக்குள் அடைந்து போய் அதனாலேயே தங்களின் குடும்பத்தினரால் பத்தாம்பசலிகளாக பார்க்கப்படும் நடுத்தரவயதுப் பெண்கள் தங்களின் கூடுகளிலிருந்து பொருளாதார தன்னிறைவோடும் தன்னம்பிக்கையோடும் சுதந்திரமாக பறக்கும் தகுதியைப் பெறுவதைப் பற்றி உரையாடுகின்றன. கங்கனா ராவத் நடித்த 'Queen' என்கிற இந்தி திரைப்படத்தையும் இதனுடன் இணைக்கலாம். இந்த மாற்றம் இன்னமும் தொடர்ச்சியாக நிகழ வேண்டும்.

நடிகை என்பதன் அடையாளம் ஒரு பெண்ணுடலாகவும் அழகுப் பதுமையாகவும் மாத்திரம் அல்லாமல் ரத்தமும் சதையும் கொண்டதொரு ஆன்மாவாக சித்தரிக்கப்படும் திரைப்படங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு அவை வணிகரீதியாகவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் ஆணாதிக்க திரைப்படங்கள் ஒடுங்கி பெண்களுக்காக பெண்களே உருவாக்கப்படும் படைப்புகள் அதிகமாகும். பெண் இயக்குநர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இத்தனை வயது வரை மட்டும்தான் ஒரு பெண் பிரதான பாத்திரத்தில் நடிக்க முடியும் என்கிற மாயையான வேலிகள் உடைபடும்.சினிமா ரசிகர்களிடம் ஏற்பட வேண்டிய ரசனை மாற்றமும் இதற்கு ஆதரவாக இருக்கும். இருக்க வேண்டும்.

'தி இந்து' தீபாவளி மலரில் வெளியான கட்டுரை. (நன்றி: தி இந்து)

suresh kannan

Monday, December 01, 2014

காவியத்தலைவன் - ஒற்றை வரி நிராகரிப்புகள்

காவியத்தலைவன் திரைப்படம் அல்லது அது போன்ற முயற்சிகள் வெளியாகும் போது அவை குறித்து இணையத்தில் வரும் ஒருவரி விமர்சனங்களையும் எள்ளல்களையும் இடக்கை புறந்தள்ளல்களையும் பார்க்கிறேன். இயல்புதான். முன்பு திரையரங்கு வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலித்த அசல் நிர்வாணமான உண்மையான விமர்சனங்கள் இவை. இப்போது இணையத்தில் ஒலிக்கின்றன. தமிழ் திரைப் படைப்பாளிகள் இவற்றைக் குறித்து எரிச்சல் கொள்வதோ புறக்கணிப்பதோ, குறை சொல்வதோ கூடாது. மாறாக இவ்வகையான உண்மை விமர்சனங்களை அவர்கள் கருத்தில் கொள்வதே அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. (மிஷ்கின் இந்த விஷயத்தில்தான் தவறு செய்கிறாார்). ஏனெனில் தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இவர்களே. இவர்களை பெரும்பாலும் மனதில் இருத்தித்தான் இயக்குநர்களும் படைப்புகளை அதற்கேற்ற சமரசங்களுடனும் உருவாக்குகிறார்கள் என்பது வெளிப்படை.

ஆனால் பாருங்கள், திரையரங்கின் வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலிக்கின்ற குரல்களை அவர்களின் பின்புலத்தில் வைத்து ஒருவாறு யோசிக்க முடிகிறது. ஆனால் ஏறத்தாழ அதே மாதிரியான குரல்கள் கல்வியறிவு பெற்ற ஓரவிற்கான சமூக உணர்வு கொண்ட இணைய கனவான்களிடையேயும் ஒலிக்கிற போதுதான் நெருடுகிறது. இன்று தமிழ் சினிமா பெரும்பாலும் பஞ்ச் வசன நாயகர்களிடம் சிக்கி மசாலா சகதியில் மூழ்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். இதிலிருந்து விலகி நல்ல சினிமாக்கள் வந்து விடக்கூடாதா என்று நாம்தான் ஏங்குகிறோம். ஆனால் காவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகள் வரும் போது அவற்றிலுள்ள குறைகளை ஊதிப்பெருக்கி  கருணையேயில்லாமல் ஏளனம் செய்கிறோம். இதன் மூலம் அவ்வாறான படங்கள் மேலும் வரவிடாமல் செய்யும் சூழலுக்கு நாமே ஒருவகையில் காரணமாய் இருக்கிறோம். (இவ்வகையான விமர்சனங்கள் ஒரு திரைப்படத்தின் வணிகவெற்றியை பாதிக்குமளவிற்கு இருக்குமா என்பது இன்னொரு கேள்வி. ஏனெனில் அஞ்சான் போன்ற திரைப்படங்களைப் பற்றி என்னதான எதிர்விமர்சனங்கள் எழுந்தாலும் அவைகளை உருவாக்கியவர்கள் பேராசையுடன் எதிர்பார்த்த லாபத்தை சற்று குறைக்கலாம் என்றாலும் நிச்சயம் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்காது).

இவ்வாறான முயற்சிகள் மிகுந்த சிரமங்களுக்குப் பின் உருவாகும் விதங்களைப் புரிந்து கொண்டு அவற்றைப் பற்றிய நிறைகளை பாராட்டியும் குறைகள் எனக் கருதுபவைகளை மென்கண்டிப்புடன் எழுதப்படும் விமர்சனங்களைக் குறித்து ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால் விடலைத்தனங்களுடன் போகிற போக்கில் குரலெழுப்பிச் செல்லும் ஒற்றை வரி அபத்தங்கள் நீங்கி அவைகளுக்கான பொறுப்புணர்வுடன் வெளிப்பட வேண்டும் என்பதுதான் நம் ஆதங்கம். 

குறைந்த பட்ஜெட்டில் என்றால் கூட ஒரு சினிமாவை உருவாக்குவதற்கு எத்தனை பொருளியல் தேவையும் மனித உழைப்புகளின் தேவையும் இருக்கின்றன என்பதை நாம் சரியாக அறியத் தேவையில்லையென்றாலும் ஓரளவிற்காவது அதை யூகிக்க முடியும். இன்று சினிமா எடுப்பதற்கு ஈடான உழைப்பை அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் செய்ய வேண்டியிருக்கிறது. நல்ல முயற்சியாக இருந்தாலும் அதைச் சரியாக சந்தைப்படுத்தா விட்டால் மக்களிடம் சென்று சேராததோடு பொருளிழப்பும் ஏற்படும் அபாயமுண்டு. இந்திய சர்வதேச திரைவிழாவில் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்ட படமான 'குற்றம் கடிதல்' என்கிற திரைப்படத்தைப் பற்றி இந்த விழாவிற்கு முன் எத்தனை பேருக்கு தெரியும்? இன்றும் கூட எத்தனை பேர் அதைப் பார்த்திருப்பார்கள்?

தெளிவான வணிக நோக்குடன் ' தோராயமாக இத்தனை கோடி லாபம் சம்பாதிக்கப் போகிறோம்' என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப திரைப்படம் உருவாக்குபவர்கள் ஒருவகை. ஆனால் இதிலிருந்து சலித்து விலகி தம்முடைய மனச்சாட்சியின் குரலுக்கேற்ப அதை ஒரளவிற்காவது திருப்திப்படுத்தும் வகையில் நல்லதொரு படைப்பை தந்து விட வேண்டும் என்கிற உந்துதலுடன் செயல்படுபவர்கள் ஒருவகை. காவியத்தலைவன் போன்ற முயற்சிகள் இவ்வகையான உந்துதல்களின் மூலம் சாத்தியப்படுபவையே. இவைகள் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம் சூழல் மாற்றடைந்து, சில உலக சினிமாக்களைப் பார்த்து 'ஏன் தமிழில் இவ்வாறெல்லாம் உருவாக்கப்படவில்லை?" என்று நாம் ஆதங்கம் கொள்கிறோமே,   அந்த மாதிரியான படங்கள் உருவாகும் சூழல் இங்கும் ஏற்படக்கூடும்.

ஆனால் இவை குறித்து ஒரளவிற்காவது புரிதல் உள்ள நாம் இம்மாதிரியான முயற்சிகள் வளர்வதற்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம். இம்மாதிரியான இணைய விமர்சனங்கள் பெருமுதலீட்டுப்படங்களை ஒன்றும் செய்யவியலாது என்பது  நிதர்சனம் எனினும் சிறு முதலீட்டுப்படங்களை படகில் விழுந்த ஓட்டை போன்று ஒருவேளை மூழ்கடித்து விடலாம். இவ்வகையான அசட்டு விமர்சனங்களை நம்பி வாசிக்கும் ஒருபகுதியினராவது இவ்வாறான திரைப்படங்களை புறக்கணிக்க முடிவு செய்தால் ஒருவகையில் அது இழப்பே. 

தமிழிலும் நல்ல சினிமாக்கள் வெளிவரவேண்டும் என்று உண்மையாகவே ஆர்வமும் ஆதங்கமும் கொள்ளும் நாம், அந்த நிலைக்கு நகர்ந்து செல்லும் அடையாளங்களைக் கொண்ட முயற்சிகளை, அவற்றில் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல், ஆதரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இத்தனை காலமாக பெரும்பாலும் மசாலா குட்டையில் ஊறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு ஒரே நாளில் விடிவு வந்து விடாது. மெல்ல மெல்லத்தான் மாற முடியும். வணிக சினிமாவின் பெரும்பான்மையான சம்பிதாயங்களை கைவிட முடியாமல்தான் இந்த மாற்றங்கள் நிகழ முடியும். வங்காளத்திலும் கேரளத்திலும் இதை விட தீவிரமான இடைநிலை சினிமாக்கள் உருவாகி அவை வெற்றியும் பெறுகிறதென்றால் அங்குள்ள பார்வையாளர்களும் இணைந்து இந்த இணக்கமான சூழலை சாத்தியப்படுத்துகிறார்கள் என்பதை நாம் நினைவில் வைப்பது நல்லது. 

காவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகளை ஒற்றைவரியில் 'மொக்கைடா மச்சான்' நிராகரிக்கும் கும்பல், ஒருவேளை இதை விடவும் சிறந்த சினிமாக்களை ஆதரிக்கிறார்களோ என்று பார்த்தால், லிங்கா போன்றவைகளுக்கு  'வீ ஆர் வெயிட்டிங் தலைவா' என்று உற்சாக கூக்குரலிடுகிறார்கள். உண்மையில் நாம் நிராகரிக்கவும் புறக்கணிக்கவும் செய்ய வேண்டியவை, தமிழ் சினிமாவை தின்று கொழுக்கும் அவ்வாறான வணிகத் திமிங்கலங்களையே. மிகத் தெளிவாக திட்டமிட்டு, புழுத்துப் போன ஒரே மசாலாவை வெவ்வேறு பாக்கிங்கிலும் பிராண்ட்டிலும் சந்தைப்படுத்தி மயக்கத்திலிருக்கும் பார்வையாளர்களின் பாக்கெட்டுகளில் கையை விட்டு பணத்தைக் கொள்ளையடிக்கும் வணிக நோக்குத் திரைப்படங்களே நம் கடுமையான விமர்சனத்திற்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாக வேண்டியவை. இடைநிலை சினிமாக்கள் அல்ல.

suresh kannan