Tuesday, February 24, 2015

அரசியல் பேசும் அயல் சினிமா - இ.பா. சிந்தன்




சமீபத்தில் வாசித்ததில், சினிமா பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்களில் சிறந்ததொன்றாக இதைச் சொல்வேன். சினிமாவின் அழகியல், நுட்பம், திரைக்கதை போன்றவை பற்றி பெரும்பாலான திரைப்பட நூல்கள் பேசும் போது அதற்கு மாறாக இந்நூல் சர்வதேசஅரசியல் சினிமாக்களைப் பற்றி உரையாடுகிறது.இதிலுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றையும் வாசிக்க வாசிக்க குருதி தலைக்கேறி உணர்ச்சிவசப்பட வேண்டியதாயிருக்கிறது. வல்லரசு நாடுகள் தங்களது ஆதிக்க அரசியல் அத்துமீறல்களின் மூலமாகவும் பின் காலனியாதிக்கத்தின் வழியாகவும் மூன்றாமுலக நாடுகளிலிருந்து  கொள்ளையடிக்கும், சுரண்டும் இயற்கை வளம், மனித வளம் ஆகியவை தொடர்பான உண்மைகளையும் தகவல்களையும் அறிய மனம் கனத்துப் போகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பல்விதமான தந்திரங்களுக்கு மயங்கி நுகர்வுக் கலாசார வெறியில் இயங்கும் பொதுச்சமூகம் தாங்கள் நுகரும் பொருட்களுக்கு பின்னேயுள்ள மனித உரிமை மீறல்களை, அவைகளுக்குப் பின்னே உறைந்துள்ள ரத்தத்தை,கண்ணீரை உணர்ந்திராத குற்றவுணர்ச்சியை இந்நூல் எழுப்புகிறது. நாம் விரும்பி தின்னும் சாக்லேட், அருந்தும் குளிர்பானம், ஜம்பத்துடன் உபயோகிக்கும் செல்போன் என்று பலவற்றிலும் ஏழை நாடுகளுடைய மனிதர்களின் துயரங்கள் படிந்திருக்கின்றன. இந்த உண்மைகளை வெளிப்படுத்தும் 16 வகையான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை விரித்துச் சொல்லும் இந்த நூல் ஒவ்வொரு நபராலும் தவறாமல் வாசிக்கப்பட வேண்டியது.

விழித்திருக்கும் கணம் முழுவதும் நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் செல்போன், கணினி ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் கனிமங்களின் பெரும்பகுதியானது காங்கோ நாட்டிலிருந்து பெறப்படுகின்றன. சுரங்கங்களில் கனிமங்களை வெட்டுவதற்கான ஆபத்தான, சிரமமான பணிகளுக்காக  சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.சொற்பமான கூலியே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மனித உரிமை மீறல்கள் எதையும் கண்டுகொள்ள விரும்பாத  பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டுப் போர்களுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் தங்களின் கச்சாப்பொருட்களின் வரத்து பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கின்றன. போரில் ஈடுபடும் ஆயுதக்குழுக்கள் கனிமங்களை ஐரோப்பிய தேசங்களுக்கு விற்று அவற்றின் மூலம் ஆயுதங்களை வாங்கி போர் செய்கிறார்கள். இந்த உண்மைகளை அறிய பயணிக்கும் ஒருவரைப் பற்றிய ஆவணப்படம் Blood In Mobile (2010). டென்மார்க்கைச் சேர்ந்த பிராங்க் என்கிற திரைப்பட இயக்குநர், கனிமச் சுரங்கங்களில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களா என்கிற உண்மையை அறிய காங்கோவிற்கு பயணிக்கிறார். போராளிக்குழுக்களின் வன்முறை மீதான அச்சத்தையும் தாண்டிச் சென்று தான் கேள்விப்பட்டது உண்மைதான் என அறிகிறார். தான் கண்ட உண்மைகளை பலத்த போராட்டத்திற்குப் பிறகு ஐ.நா. நிறுவனத்திடமும் செல்போன் நிறுவனத்திடமும் முன்வைக்கிறார். எதிர்பார்த்தது போலவே அவை கள்ள மெளனத்துடன் இந்த உண்மைகளைக் கடக்கின்றன.

இதைப் போலவே இன்னொரு ஆவணப்படமான The Dark side of Chocolate (2010) சாக்லெட் தயாரிப்பதற்கு அத்தியாவசியமான பொருளான கோகோ பவுடருக்காக, கோகோ தோட்டங்களில் பணியாற்ற சட்டவிரோதமாக கடத்தப்படும் ஆப்ரிக்க சிறுவர்களைப் பற்றி பேசுகிறது. இனிப்பான பொருளுக்கு பின்னிருக்கும் கசப்பான உண்மையிது. மாலி என்கிற மேற்கு ஆப்ரிக்க நாட்டிலிருந்து சிறுவர்கள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு கோகோ தோட்டங்களில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர். டென்மார்க்கைச் சேர்ந்த மிக்கி மிஸ்திராதி சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று ஒளித்து வைக்கப்பட்ட கேமிரா மூலம் இந்த உண்மைகளை பதிவாக்குகிறார். அவைகளை சம்பந்தப்பட்ட சாக்லேட் நிறுவனத்திடம் தெரிவிக்கிறார். என்ன நடந்திருக்கும் என்று நாம் யூகிப்பது பெரிய விஷயமில்லை. 'கோகோ தோட்டங்கள் எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. அங்கு நிகழும் எதற்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது' என்கிற அறிக்கையின் மூலம் தங்களின் பொறுப்பை அவை கைகழுவுகின்றன. இதைத்தான் இந்த ஆவணப்படம் விளக்குகிறது.

இப்படி ஒவ்வொரு கட்டுரையுமே முக்கியமான சமகால அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கியிருக்கும் திரைப்படங்களைப் பற்றி பேசுகிறது. இதில் என்னை மிகவும் கவர்ந்தது, How Cuba Survied Peak Oil (2006) என்கிற ஆவணப்படத்தைப் பற்றிய கட்டுரை. இப்படியெல்லாம் நிஜமாகவே நடந்திருக்குமா என்கிற வியப்பை ஏற்படுத்துகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கூபா மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது அமெரிக்கா. 90-களில் சோவியத் யூனியன் வீழந்ததும் அதுவரையான ஆதரவையும் இழந்து அடைக்கப்பட்ட கூண்டிற்குள் வாழும் நிலைக்கு செல்கிறது கூபா. 80 சதவீத இறக்குமதியையும் ஏற்றுமதியையும் இழக்கிறது. உலகம் வருங்காலத்தில் மிக கடுமையாக சந்திக்கப் போகும் எண்ணைய் பற்றாக்குறையின் உக்கிரத்தை 90-களிலேயே சந்திக்கிறது கூபா. எண்ணைய் இறக்குமதி குறைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பேருந்துகள் ஓடவில்லை. நாடே இருளில் தவிக்கிறது. இந்தக் கடுமையான நெருக்கடியிலிருந்து கூபா எப்படி மீள்கிறது என்கிற அந்த வரலாற்றை அறிய வியப்பும் பிரமிப்புமாய் இருக்கிறது. கச்சிதமாக திட்டமிடப்படுகிற பசுமைப்புரட்சியின் மூலம் வர்க்க பேதமின்றி நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒற்றுமையுணர்வுடன் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். குறுகிய காலத்திலேயே உணவு உற்பத்தியிலும் எரிபொருள் உற்பத்தியிலும் தன்னிறைவை அடையும் சாகசத்தை நிகழ்த்துகிறது. இந்தக் கடினமான பாதையை இலகுவாக்குவது அரசின் திட்டங்களும் அதற்கு மக்கள் தரும் அபாரமான ஒத்துழைப்பும்.


***

நூலாசிரியரான இ.பா. சிந்தன் ஒவ்வொரு திரைப்படத்திற்குப் பின்னரும் உள்ள வரலாற்றுக் காரணங்களையும் அரசியல் தன்மைகளையும் மிக விரிவான தகவல்களுடன் விளக்குகிறார். அதாவது திரைப்படத்தைப் பற்றி பிரதானமாக பேசாமல் அவற்றின் பின்னுள்ள தகவல்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தந்திருக்கிறார். எனவே சம்பந்தப்பட்ட திரைப்படங்களையும் ஆவணப்படங்களையும் பார்க்கும் ஆவல் இயல்பாகவே வாசகருக்கு எழுகிறது. சமூக அக்கறையுடனும் அரசியல் பிரக்ஞையுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் சினிமா என்கிற வலிமையான ஊடகத்தைக் கொண்டு உலக அரசியல்களின் பிரச்சினைகளை வலிமையாகவும் அழுத்தமாகவும் பதிவாக்க முடியும் என்பதை நிறுவும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த நூலை வாசித்து முடித்தவுடனே இவை போன்ற அசலானதொரு அரசியல் சினிமா தமிழில் ஏதாவது வந்திருக்கிறதா என்று மனம் தன்னிச்சையாக யோசித்துப் பார்த்தது. ஒரு நீண்ட பெருமூச்சை தவிர வேறு விடை ஒன்றும் கிடைக்கவில்லை.

***

அரசியல் பேசும் அயல் சினிமா
ஆசிரியர்: இ.பா. சிந்தன்
வெளியீடு: புதிய கோணம்,பாரதி புத்தகாலயம்,
பக்: 192, விலை ரூ.140 /-

காட்சிப்பிழை, பிப்ரவரி 2015 இதழில் பிரசுரமானது - நன்றி காட்சிப்பிழை

suresh kannan

Friday, February 20, 2015

கருப்பு வெள்ளை காவியங்கள் (தி இந்து பொங்கல் மலர் கட்டுரை)

    'மதிப்பிற்குரிய ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு, பிரணாம்.

    சமீபத்தில் நான் சென்னை வந்திருந்த சமயம் தங்கள் 'ஒளவையார்' படத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மையில் அது எனக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம். சங்கீதத்தின் பால் உங்களுக்குள்ள பிரேமைக்கும், கடவுளிடம் பக்திக்கும் 'ஒளவையார்' ஒரு பூர்ணமான அத்தாட்சி. முக்கியமாக ஸ்ரீமதி சுந்தராம்பாளின் அரிய செயல்களைக் கண்டு வரும் போதே என் கண்களில் பலமுறை நீர் நிரம்பி விட்டது.

    அவர் ஏற்று நடித்த பாகத்தையும் பார்த்து, அவருடைய சங்கீதத்தையும் கேட்டபிறகு வெட்ட வெளிச்சமாக எனக்கு ஒரு விஷயம் தெளிவாகி விட்டது. உண்மைக் கலைஞர்களின் கீதத்திலேயுள்ள இனிமையும் சுவையும் அவர்களுடைய இதயத்தின் மேன்மையிலும் நாதோபாஸனையிலும் கலையிலும் கொண்டுள்ள பக்தியிலும் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

    நானே விநாகராயிருந்தால் இம்மாதிரி உணர்ச்சியுடன் பாடும் ஒரு தொண்டரை - தொண்டராயிருக்கும் தொண்டன் என்ற முறையில் அவரைத் தொழுது கொண்டே இருப்பேன். இதற்கு மேல் அவர் மீது எனக்குள்ள மதிப்பை வெளியிட வார்த்தைகள் அகப்படவில்லை.

    பொது ஜனங்களுக்கு இணையற்ற படம் ஒன்றை அளித்ததற்கு உங்களை நான் பாராட்டுகிறேன். படங்களில் கர்நாடக சங்கீதம் சோபிக்காது என்று சொல்கிறவர்களுக்கு 'ஒளவையார்' படம் ஆணித்தரமாக பதில் கொடுக்கும்.'


ஒளவையார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளர் வாசனுக்கு மேற்கண்ட கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா? இந்தித் திரையுலகில் நீண்ட வருடங்களாக கானக் குயிலாய் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கர். ஒரு தமிழ் திரைப்படத்தின் தரத்தையும் சிறப்பையும் குறி்த்து வட இந்தியாவிலிருந்து ஒலித்த இந்தக் குரலின் மூலம் உண்மையாகவே நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். இளைய தலைமுறைவாசிகளில் எத்தனை சதவீதம் பேருக்கு துவக்க கால தமிழ் திரைப்படங்களைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் முன்னோடி இயக்குநர்களையும் பற்றியும் தெரியும்?

()


எட்டு வயது மகளிடமிருந்து சிறிய போராட்டத்திற்குப் பிறகு ரிமோட்டை கைப்பற்றி  தொலைக்காட்சியை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு சானலில் இருந்து ஜி.ராமநாதனின் அற்புதமான திரையிசைப்பாடல் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். மனம் அதிலே நிலைத்து சற்று மெய் மறந்து கொண்டிருந்தேன்.திடீரென்று சானல்கள் சட்சட்டென்று மாற்றப்பட்டு கொசகொசவென்று ஒலிகள் எழுப்பும் ஒரு கார்ட்டூன் சானலில் வந்து நின்றது. 'கிருஷ்ணா முகுந்தா' விற்கு என்னவாயிற்று என்று சற்று திடுக்கிடலுடன் கண் திறந்து பார்த்தேன். ரிமோட் மறுபடியும் களவாடப்பட்டிருந்தது. ஏதும் அறியாதவள் போல் தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தவளிடம் "ஏன் அந்தப் பாட்டு நல்லாத்தானே இருந்தது. ஏன் மாத்திட்டே?" என்றேன். "போப்பா.. போரு.." என்றாள் சிக்கனமாய். இன்னும் சில விநாடிகளிலேயே பொறுமையிழந்து சானல் மாறி 'செல்பி புள்ள'யில் வந்து நிற்கும் என தெரியும். கறுப்பு - வெள்ளை சித்திரங்களையோ, நின்று நிதானமாய் நகரும் சட்டகங்களையோ அவள் பார்க்கத் தயாராகவேயில்லை.

இதுதான் இன்றைய இளைய தலைமுறையின் உத்தேசமானதொரு சராசரி  பிம்பம். எதிலும் நிலைகொள்ளாத பொறுமையற்றதின் அடையாளம். துரித  உணவு வகைகளைப் போலவே அவர்களின் கலை சார்ந்த ஈடுபாடும் துரித வகை பாணிகளை மாத்திரமே விரும்புகிறது. அவசர அவசரமாக விழுங்குகிறது. என்னவென்றே புரியாத வேகமாக ஓடும் பாடல் வரிகள், கண்களுக்கும் மூளைக்கும் அயர்ச்சியை ஏற்படுத்துகிற சட்சட்டென்று உடனுக்குடன் மாறும் பிரேம்கள், 'நிறுத்தித் தொலையேன்' என்று எரிச்சல் படவைக்கும் அதிரடி இசை. ஒவ்வொரு தலைமுறை இடைவெளிகளுக்குள்ளும் ஏற்படும் வழக்கமான புகார்கள்தான் இது. ஆனால் முந்தைய காலத்தை முன்தீர்மானமான வெறுப்புடனும் விலகலுடனும் அணுகும் அந்த மனப்பான்மைதான் நெருடுகிறது.

இன்று நுட்பத்தில் உயர்ந்திருந்தாலும் திரைமொழியிலும் உள்ளடக்கத்திலும் ஏறத்தாழ அதே மாதிரியாக இருக்கும் தமிழ் சினிமாவின் தோற்றத்தின், வளர்ச்சிக்கும் பின்னால் எத்தனையோ முன்னோடிகளின் உழைப்பும் ஆர்வமும் தியாகமும் உள்ளது. சமகாலத்தை விடவும் மிக அற்புதமான சுவாரசியத்துடன் கூடிய தமிழ் சினிமாக்கள் கடந்த காலங்களில் உருவாகியுள்ளன். மிகச் சிறந்த நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகைய மைல்கல் சினிமாக்களைப் பற்றியும் அவற்றின் தொடர்பான தகவல்களையும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


சினிமா உருவாக்கத்தின் பல்வேறு காலகட்ட வளர்ச்சி நிலைகளுக்குப் பின் 1895 -ல் லூமியர் சகோதரர்கள் பிரான்சில் வெற்றிகரமான சலனப்படத்தை முயற்சித்த இரண்டாண்டுகளிலேயே அதனைக் காண்பதற்கான வாய்ப்பு அப்போதைய மதராச பட்டிணத்திற்கு கிடைத்து விட்டது. 1897-ல், ரிப்பன் கட்டிடத்திற்கு அருகேயுள்ள விக்டோரியா ஹாலில் 'Arrival of the Train' மற்றும் 'Leaving the Factory' ஆகிய துண்டுப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உருவான ஒலியல்லாத குறும் படங்களே பெரும்பாலும் இங்கு திரையிடப்பட்டன. ஏறத்தாழ இந்தியா முழுமையிலும் திரையிடப்பட்ட 'Life of Jesus Christ' என்கிற மெளனப்படத்தை டுபான்ட் என்கிற பிரெஞ்சுக்காரரிடமிருந்து ரூ.2000/- கொடுத்த வாங்கிய சாமிக்கண்ணு வின்சென்ட், இதன் மீதுள்ள ஆர்வத்தால் தன்னுடைய ரயில்வே பணியை விட்டு விட்டு தமிழகத்தின் மற்ற ஊர்களுக்குச் சென்று இத்திரைப்படத்தை காட்டி எளிய மனிதர்ளுக்கும் சினிமாவை கொண்டு சேர்த்தார்.. இதன் மூலம் ஈட்டிய தொகையில் கோவையில் 'வெரைட்டி ஹால்' என்கிற நிரந்தரமான இடத்தை அமைத்தார். தென்னிந்தியாவின் முதல் நிரந்தரமான சினிமா கொட்டகை இதுவே.

மெளன்ட் ரோட்டில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருந்த வெங்கையா என்பவர் சினிமாவின் துவக்க முயற்சிகளின் மீதுள்ள ஈடுபாட்டால் கிராமபோனுடன் இணைந்த திரைப்படக் கருவியை வாங்கி படங்களை திரையிட்டார். ஒளி ஒருபுறமும் ஒலி இன்னொரு புறமும் வெளிப்பட்டாலும் அவை கச்சிதமாக இணைந்து செயல்படும் போது முழுமையான திரைப்படம் பார்க்கின்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. சென்னையில் இவர் முதன் முதலாக கட்டிய திரையரங்கு 'கெயிட்டி'. இந்தச் சமயத்தில் இந்தியாவிலேயே தயாரான முதல் மெளனப்படம் பம்பாயில் வெளியாகியது. 1913-ம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி வெளியான 'ராஜா ஹரிச்சந்திரா' என்னும் அந்த மெளனப் படத்தை உருவாக்கியவர், 'இந்திய திரைத்துறையின் தந்தை' என்று போற்றப்படும் தாதாசாகிப் பால்கே.

வேலூரைச் சேர்ந்த ஆர்.நடராஜ முதலியார், பால்கேவின் இந்த முயற்சிகளைப் பார்த்து திரைப்படங்களை உருவாக்கும் நுட்பங்களின் மீது ஆர்வம் கொண்டார். மோட்டார் வாகன வியாபாரம் செய்து கொண்டிருந்த அவர், ஸ்டூவர்ட் ஸ்மித் என்கிற ஆங்கிலேயரிடம் திரைப்பட உருவாக்கத்தை கற்றுக் கொண்டார். 'இந்தியா பிலிம் கம்பெனி' எனும் திரைப்பட நிறுவனத்தை ஏற்படுத்தினார். சென்னையில் முதன் முதலில் திரைப்பட ஸ்டூடியோவை உருவாக்கியவர் இவரே. புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில் இந்த ஸ்டூடியோ உருவானது. நடராஜ முதலியார், மகாபாரதத்தில் உள்ள ஒரு கதையை தேர்வு செய்து தயாரித்த 'கீசக வதம்' என்னும் திரைப்படமே, தென்னிந்தியாவின் முதல் மெளனப்படம். 1917-ல் இது வெளியானது. எழுத்து, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என அனைத்துப் பணிகளியும் நடராஜ முதலியாரே மேற்கொண்டார்.

ஒலியல்லாத திரைப்படம் என்பதால் வசனங்கள் அட்டையில் எழுதப்பட்டு காட்சிகளின் இடையில் காட்டப்படும். தமிழ், ஆங்கிலம். இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட இந்த வசனங்களில் இந்தி வடிவத்தை எழுதியவர் மகாத்மா காந்தியின் மகனான தேவதாஸ் காந்தி. தமிழ் வசனத்தை எழுதியவர் நாடகத்தந்தை என போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார். இந்தப் படத்தின் வெற்றியினால் உற்சாகமடைந்த நடராஜ முதலியார் தொடர்ந்து 'திரெளபதி வஸ்திராயணம்' என்பது உள்ளிட்ட புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆறு திரைப்படங்களை உருவாக்கினார். பாகஸ்தர்களுடனான கருத்து வேறுபாடு, ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து, விபத்தில் நிகழ்ந்த மகனின் மரணம் ஆகிய காரணங்கள் அவரைத் திரைத்துறையிலிருந்து விலகச் செய்து விட்டன. என்றாலும் இன்னொரு முக்கிய காரணத்தை தன்னுடைய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் நடராஜ முதலியார். இயக்குநர் ஸ்ரீதர், தான் நடத்தி வந்த பிலிமாலாயா இதழிற்காக நடராஜ முதலியாரை தேடிக் கண்டுபிடித்து உரையாடினார்.

காந்தி அந்நியத் துணிகளை புறக்கணிப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அது பற்றிய சினிமா ஒன்றை உருவாக்க விரும்பியிருக்கிறார் நடராஜ முதலியார். இந்த முயற்சியைப் பலர் பாராட்டினாலும் நிதியுதவி செய்ய எவரும் முன்வரவில்லை. சினிமாவை மக்களுக்கான கலை சாதனமாக பயன்படுத்த முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் திரைத்துறையில் இருந்து விலகி விட்டதாக அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். தமி்ழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான நடராஜ முதலியார் 1972-ல் காலமானார்.

***


முதல் மெளனப்படம் வெளியாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு 1931-ல் உருவானது, தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் காளிதாஸ். ஆனால் இதுதான் முதல் பேசும் படமா என்பதில் ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஏனெனில் இதில் வரும் பாடல்கள் தமிழில் இருந்தாலும் வசனங்கள் தமிழைத் தவிர தெலுங்கு, இந்தியிலும் இருந்தன. இந்தப் படத்திற்காக விமர்சனம் எழுதிய கல்கி இந்தக் குறையை தனது பிரத்யேகமான பாணியில் கிண்டலடித்தார். ( 'டாக்கி' என்பது ஆங்கில வார்த்தை. 'டாக்' என்றால் பேச்சு. பேசும் சினிமா படக் காட்சிகளுக்கு 'டாக்கி' என்று சொல்கிறார்கள். 'தமிழ் டாக்கி' என்று கலப்பு மொழி பேசுவதற்கு என்னுடைய தமிழ் அபிமானம் இடங்கொடுக்கவில்லை. எனவே, 'தமிழ்ப் பேச்சி' என்று பெயர் கொடுக்கலாமென்று முதலில் தீர்மானித்தேன். ஆனால், நான் பார்த்த 'பேச்சி' உண்மையில் 'பாட்டி'யாயிருந்தது. அதாவது, தமிழ்ப் பேச்சு அதில் கிடையாது. விசாரித்ததில், அது தெலுங்கு பாஷை என்று அறிந்தேன். முதலிலும் நடுவிலும் கடைசியிலும் சில தமிழ்ப் பாட்டுக்கள் பாடப் பெற்றன. ஆகையால் நான் பார்த்து, கேட்டு, அனுபவித்த காலட்சேபத்திற்கு, 'தமிழ்ப் பாட்டி' என்று பெயர் கொடுப்பதே பொருத்தமென்று தீர்மானித்தேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிடில் 'தெலுங்குப் பேத்தி' என்று வைத்துக்கொள்ளுங்கள்.'). மகாகவி காளிதாசனைப் பற்றிய திரைப்படம் இது.

அப்போதைய பிரபல நாடக நடிகை டி.பி.ராஜலட்சுமி இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநரும் இவரே. கினிமா ஸெண்ட்ரல் என்று முன்னர் அழைக்கப்பட்ட முருகன் டாக்கீஸில் இத்திரைப்படம் வெளியானது. அப்போது இந்திய விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்ததால் நாடகம் மற்றும் சினிமாக்களின் இடையில் காட்சிகளுக்கு தொடர்பில்லாமல் தேசபக்திப் பாடல்கள் பாடுவது இயல்பானதொன்றாக இருந்தது. பிரிட்டிஷ் அரசின் சென்சாரிலிருந்து தப்பிக்கவும் இந்த உத்தி பயன்பட்டது. 'ரத்தினமாம் காந்தி கை பானமாம்', 'இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை' போன்ற தேசபக்திப் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன. மதுரகவி பாஸ்கர தாஸ் இப்பாடல்களை எழுதியிருந்தார். (அம்மாள் பாடிக்கொண்டே இராட்டை சுற்றுவது போல் வெறுங் கையைச் சுற்றிக்காட்டியபோது, சபையோரின் சந்தோஷ ஆரவாரத்தைச் சொல்லமுடியாது. 'இராட்டை சுற்றுவது இவ்வளவு சுலபமா?' என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். - கல்கி).

தமிழ் சினிமாவில் எப்போதுமே இரு பெரும் நடிகர்களின் பெரும்பான்மை இருப்பது தியாகராஜ பாகவதர் x பி.யூ. சின்னப்பா வரிசையில் இருந்துதான் துவங்கியது. சந்தேகமேயில்லாமல் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் பாகவதர்தான். இவரின் இசைத் திறமைக்காகவும் அற்புதமான குரலினிமைக்காகவும் பல ரசிகர்கள் இருந்தாலும் இவரது தோற்றப் பொலிவு காரணமாக அந்தக் காலத்திலேயே  பல வெளிப்படையான பெண் ரசிகைகளும் இருந்தார்கள். சிறுவயதிலியே கர்நாடக இசையில் திறமை பெற்றிருந்த எம்.கே.டி, பவளக்கொடி என்கிற நாடகத்தில் அர்ஜுனனாக நடித்து புகழ்பெற்றிருந்தார். தமிழ் திரையின் தந்தை என போற்றப்படும் கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் 1934-ல் இது திரைப்படமாக வெளிவந்த போது அபாரமான வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தில் இருந்த ஐம்பத்தைந்து பாடல்களில் (ஆம் 55) 22 பாடல்களை பாகவதரே பாடியிருந்தார். பாகவதரின் புகழ்  தமிழகமெங்கும் தீ வேகத்தில் பரவியது. அவரைத் தொட்டுப் பார்க்கவும் கையில் முத்தமிடவும் ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தார்கள். அவரை நேரில் பார்த்த சில பெண் ரசிகைகள் மூர்ச்சையடைந்து விழுந்ததாக கூட தகவல்கள் உண்டு. பாடல்களுக்காகவே அவரது திரைப்படங்கள் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டன. அதன் பிறகு வெளிவந்த நவீன சாரங்கதாரா, சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஆகிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றியை சந்தித்தன.

இந்த வெற்றி வரிசையின் மிக உச்சம் என ஹரிதாஸ் திரைப்படத்தைச் சொல்லலாம். 1944-ல் வெளியானது. அப்போது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்ததால் திரைப்பட கச்சாப் பொருட்களுக்கு பிரிட்டிஷ் அரசு கெடுபிடிகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. எனவே இத்திரைப்படம் அக்காலத்திய வழக்கப்படி நிறைய பாடல்களுடன் மிக நீளமான அளவிற்கு அல்லாமல் 11000 அடி கொண்டதாக  மாத்திரமே உருவானது. இத்திரைப்படத்தை பற்றி எந்தவொரு கட்டுரையிலும் சலிக்க சலிக்க தவறாது குறிப்பிடப்படும் ஒரு தகவல் உள்ளது. அதாவது இத்திரைப்படம் சென்னை, பிராட்வே டாக்கீஸில் (இத்திரையரங்கு இன்னமும் செயல்பாட்டில் உள்ளது) தீபாவளி தினத்தன்று வெளியாகி மூன்று தீபாவளிகளைக் கடந்து அதாவது சுமார் 110 வாரங்கள் இடைவிடாது தொடர்ந்து ஓடியது. தமிழ் சினிமாவில் இது இன்னமும் முறியடிக்கப்படாததொரு சாதனையாக விளங்குகிறது. 'வாழ்விலோர் திருநாள்' என்று பாகவதர் குதிரையில் வரும் அறிமுகக்காட்சி இன்றைய எந்தவொரு நாயகர்களின் 'ஹீரோ எண்ட்ரி' காட்சிகளுக்கு குறைவில்லாததாக இருக்கிறது. ஹரிதாஸ் எனும் கவித்துறவியைப் பற்றிய கதையிது. ஸ்தீரி லோலனாக விளங்கும் ஹரிதாஸ், தனது தாய் தந்தையரை மதிக்காமல் பெண் பித்து கொண்டு ஊதாரியாக சுற்றுகிறான். மனைவியை ஏமாற்றுகிறான். ரம்பா எனும் தாசியிடம் மயங்கி தன்னுடைய சொத்துக்களை இழக்கிறான். பின்பு கடவுள் நிந்தனையால் தன் கால்களை இழந்து மனம் திருந்தி இறை வழிபாட்டில் ஈடுபடுகிறான். தாய், தந்தையருக்கு பக்தியுடன் பணிவிடை செய்கிறான்.

இந்த நீதியை தமிழ் சமூகம் அறிந்து கொள்ளத்தான் இத்திரைப்படம் மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்ததா என்ற கேள்வி எழலாம். இருக்க முடியாது. தென்னிந்திய சினிமாவின் முதல் கனவுக்கன்னியான டி.ஆர்.ராஜகுமாரி இதில் ஹரிதாஸை மயக்கி ஏமாற்றும் தாசி வேடத்தில் நடித்திருந்தார். இவர் பாகவதருக்கு 'பிளையிங் கிஸ்' தரும் காட்சிகளுக்கு ரசிகர்கள் நிச்சயம் கிறுகிறுத்துப் போயிப்பார்கள். அந்தக்காலத்தில் இதுவே உச்சபட்சமான கவர்ச்சி. துவக்க காட்சியில் பாகவதரைப் பார்த்து ஒரு பெண் மயங்கி கண் சிமிட்டும் காட்சியும் உள்ளது. இன்றைக்கு பொது வழக்கில் ஆட்சேபகரமாக கருதப்படும் 'தேவடியாள்' போன்ற வார்த்தைகள் இதில் இயல்பாக, சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தப்பட்டன. இந்தப் படத்திற்கு தமிழ் சினிமாவின் முதல் ஸ்டார் அந்தஸ்து பெற்ற வசனகர்த்தா இளங்கோவன் வசனம் எழுதியிருந்தார். அதுவரை தமிழ் சினிமாவில் சமஸ்கிருத வாடையோடு புழக்கத்தில் இருந்த மணிப்பிரவாள நடையை மாற்றி பெரும்பாலும் தமிழ் வசனங்கள் இடம்பெறச் செய்த பெருமை இளங்கோவனையே சாரும். வசனங்களில் சுவாரசியத்தையும் நாத்திக வாசனையுடன் கூடிய இடக்குகளையும் திறமையாக உபயோகித்திருந்தவர் இவர். பூஜையறையில் ராமாயணம் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர், மாமியார் -மருமகள் சண்டையைக் கேட்டு விட்டு சொல்வார் "இங்கே ராமாயணம், அங்கே மகாபாரதம்". இன்னொரு காட்சியில் மனம் திருந்திய ஹரிதாஸ் தன் மனைவியிடம் தன் தாய் தந்தையரின் பாதங்களைக் கழுவினால் புண்ணியம் கிட்டும்' என்பார். உடனே அவரது மனைவி "உங்கள் தாய்-தந்தையரை ஏதாவது நதியில் தள்ளி விட்டு விடுங்களேன், இந்த ஊரே புண்ணியம் அடையட்டும்" என்பார் இடக்காக.
.
ஜி.ராமநாதன் இசை மற்றும் பாபநாசம் சிவன் பாடல்கள் இணைந்த கூட்டணி இத்திரைப்படத்திலும் அற்புதமாக அமைந்திருந்தது. 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' என்கிற திரையிசைப்பாடல் இன்றளவும் மிகுந்த புகழோடு விளங்கி சாகாவரம் பெற்று விட்டது. 'கிருஷ்ணா முகுந்தா முராரே' என்பது இன்னொரு மெகாஹிட் பாடல். பாகவதரிடம் எந்த தயாரிப்பாளராவது கால்ஷீட் கேட்டு சென்றால் "முதலில் இளங்கோவனையும் பாபநாசம் சிவனையும் ஒப்பந்தம் செய்து விட்டு இங்கு வந்து பேசுங்கள்' என்று உத்தரவு போடுமளவிற்கு இந்தக் கூட்டணியின் பங்களிப்பு பாகவதரின் திரைப்படங்களின் வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் கூட்டணியும் சிறப்பாய் அமைந்திருந்தது. பிரபல கர்நாடக இசைப்பாடகி என்.சி.வசந்த கோகிலம் பாகவதரின் மனைவியாக நடித்திருந்தார்.

இப்படியான தொடர் வெற்றியின் உச்சத்தில் பயணத்தில் மிகப்பெரிய தடைக்கல்லாய் வந்து விழுந்தது லட்சுமிகாந்தன் கொலைவழக்கு. நடிகர்கள் உள்ளிட்ட பிரபல நபர்களைப் பற்றி கொச்சையான மொழியில் ஆபாசமான கிசுகிசுக்களையும் அவதூறுகளையும் 'இந்து நேசன்' என்கிற மஞ்சள் பத்திரிகையில் எழுதி வந்த லட்சுமிகாந்தன் ரிக்ஷாவில் பயணிக்கும் போகும் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இவர் மறுநாள்தான் மர்மமான முறையில் இறந்தார் என்கிற கருத்தும் உண்டு. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணணும் உண்டு. இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது. அப்போது ஹரிதாஸ் திரைப்படம் மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சமயம். ரசிகர்கள் அழுகையுடன் இத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தனர். அப்போது சென்ட்ரல் சிறைச்சாலையில் அடைபட்டிருந்த பாகவதர் எதிரே வால்டாக்ஸ் சாலையில் இருந்த கொட்டகையில் இருந்து காற்றில் மிதந்து வரும் இத்திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டு மனம் வருந்தி அழுவாராம். எத்தகையதொரு துயரமான நிலை. பிறகு இந்த வழக்கு லண்டன் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடுக்காக அனுப்பப்பட்ட பிறகு இருவரும் விடுதலை பெற்றனர். என்றாலும் இழந்த புகழையும் வெற்றியையும் பாகவதரால் மீண்டும் பெறவே முடியவில்லை. பின்பு வெளிவந்த இராஜமுக்தி உள்ளிட்ட (இதில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் வசனம் எழுதியிருந்தார்) சில திரைப்படங்களில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும் வெற்றி பெறவில்லை. ஏழிசை மன்னர், இன்னிசை வேந்தர், தமிழிசை நாயகர் போன்ற அடைமொழிகளில் புகழ் அடைந்திருந்த தியாகராஜ பாகவதர் 1959-ல் காலமானார்.


தியாகராஜ பாகவதரின் சமகாலத்தில் ஏறத்தாழ அவருக்கு இணையாக புகழ் பெற்றிருந்த நடிகர், சின்னசாமி என்கிற இயற்பெயர் கொண்ட பி.யூ. சின்னப்பா. பாகவதரோடு ஒப்பிடும் போது தோற்றக்கவர்ச்சியற்றவர்தான். ஆனால் அதை தமது இசைத் திறமையால் கடந்து வந்தார். நடிகர் என்பதைத் தவிர சின்னப்பாவிற்கு இன்னொரு முகமும் இருந்தது. சிலம்பம், குஸ்தி, மல்யுத்தம் ஆகியவற்றில் சிறந்த பயிற்சி பெற்றவர். சுருள் பட்டா எனும் அக்காலத்து ஆபத்தான ஆயுதத்தை திறம்பட கையாளும் திறமை பெற்றவர். பாகவதரைப் போல திரைப்புகழ் இவருக்கு அத்தனை எளிதில் கிடைக்கவில்லை. இவரது தந்தையும் நாடக நடிகர் என்பதால் இயல்பாகவே இவரது ஆர்வமும் அது தொடர்பாகவே அமைந்தது. டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக்குழுவில் இருந்த அவர் பின்னர் மதுரை பாய்ஸ் கம்பெனியில் இணைந்தார். இந்தக் குழுவில்தான் கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா, எம்.ஜி.சக்ரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர். இதில் எம்.ஜி.ஆர், ஸ்திரிபார்ட்டாக (பெண்வேடம்) இருந்தவர் என்பது சுவாரசியமான தகவல்.

ஜே.ஆர்.ரங்கராஜூ என்பவர் எழுதிய 'சந்திர காந்தா' எனும் நாடகத்தில் சின்னப்பா முக்கிய வேடத்தில் நடித்தார். போலி மடாதிபதி ஒருவரை அம்பலப்படுத்தும் இளவரசன் பாத்திரம். ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்றார். ஜூபிடர் நிறுவனம் இந்த நாடகத்தை 1936-ல் திரைப்படமாக்கியது. நாடகத்தில் நடித்த அதே வேடத்தில் சின்னப்பா நடித்தார். படம் வெற்றி பெற்றது. என்றாலும் பிறகு நடித்த திரைப்படங்கள் சுமாராகவே வெற்றி பெற்றன. இதனால் வெறுப்புற்ற சின்னப்பா திரைத்துறையிலிருந்து விலகியிருந்தார். 1940-ல் அவருக்கு ஓர் அதிர்ஷ்டம் அடித்தது. பிரபல இயக்குநரான மாடர்ன் தியேட்டர்ஸ்  டி.ஆர்.சுந்தரம், Man in the Iron Mask என்கிற ஆங்கிலப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தார். ஒதுங்கியிருந்த சின்னப்பாவை அழைத்து நடிக்கச் செய்தார். உத்தமபுத்திரன் என்கிற பெயரில் அது தயாரானது. இதில் இரட்டை வேடத்தில் நடித்தார் சின்னப்பா. ஒரே தோற்றமுள்ள கதாபாத்திரம் இரட்டை வேடங்களில் நடித்து தமி்ழில் உருவாகிய முதல் திரைப்படம் இதுவே. இந்த நுட்பத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து உருவாகிய 'ஆர்ய மாலாவும்' வெற்றி. இளங்கோவனின் அனல் பறக்கும் வசனத்தில் கண்ணாம்பாளுடன் நடித்த 'கண்ணகி' சாதனை வெற்றியை அடைந்தது.

சின்னப்பாவிற்கு என்று பிரத்யேகமான ரசிகர்கள் உருவாகினர். பாகவதர் ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தன. இன்னும் சில நடித்த படங்கள் நடித்த சின்னப்பாவின் திரைப்பயணத்தில் 'ஜகதலப்பிரதாபன்' முக்கியமான படமாக அமைந்தது. இந்தப்படத்தில் ஐந்து வேடங்களில் நடித்து சாதனை புரிந்தார். திரைப்படங்களில் தான் நடித்து ஈட்டிய பணம் முழுவதையும் வீடுகள் வாங்குவதில் செலவழித்தார் சின்னப்பா. 'இனி சின்னப்பா இந்தப் பிரதேசத்தில் வீடு வாங்க தடை செய்யப்படுகிறது" என்று அப்போதைய புதுக்கோட்டை மன்னர் அறிவிக்குமளவிற்கு அவரது வீடுகள் வாங்கி  குவிக்கும் வேகம் அமைந்தது. என்றாலும் இவரது குடும்பம் கடைசிக்காலத்தில் வறுமையையே சந்தித்தாக கூறப்படுகிறது. பிறகு வெளிவந்த திரைப்படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றன. ரசிகர்களின் ரசனை மாற்றம் காரணமாக இவரது நடிப்பு பாணியிலான படங்கள் பிறகு சுமாரான வரவேற்பையே பெற்றன. திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ரத்தவாந்தி எடுத்த சின்னப்பா 1951-ல் காலமானார்.

தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தை ஆக்ரமித்திருந்த தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யூ. சின்னப்பா எனும் இரு பெரும் சகாப்தங்களின் திரைப்பயணம் இவ்வாறான முடிந்தது. 1930-ல் இருந்து 1950 வரை வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான, சாதனை பரிந்த சில திரைப்படங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு திரைப்படத்தையும் பற்றியுமே தனித்தனி கட்டுரைகள் எழுதுமளவிற்கு அதனதன் அளவில் ஒவ்வொன்றுமே பிரத்யேகமானதும் முக்கியமானதும் ஆகும்.

நந்தனார் (1933) சதி லீலாவதி, பட்டினத்தார், மிஸ். கமலா (1936) தியாகபூமி, திருநீலகண்டர் (1939), சாகுந்தலா, உத்தமபுத்திரன் (பி.யூ. சின்னப்பா நடித்தது) (1940), அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (இது பின்னர் எம்.ஜி.ஆர் நடித்து 1956-ல் வெளியானது), ஆர்யமாலா, சபாபதி, வனமோகினி (1941), கண்ணகி, (1942) சிவகவி,(1943), பர்மா ராணி, மீரா, (1945) ஸ்ரீ முருகன், வால்மீகி (1946), மிஸ் மாலினி, நாம் இருவர் (1947), அபிமன்யூ, சந்திரலேகா, ராஜமுக்தி (1948), அபூர்வ சகோதரர்கள், நல்லதம்பி, வாழ்க்கை, வேலைக்காரி (1949), ஏழைபடும் பாடு, மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, (1950)

இந்த வரிசையில் மிகுந்த பொருட்செலவில் உருவான சந்திரலேகாவின் வெற்றி வடஇந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அளவிற்கு  பிரம்மாண்டமானது. ஆண் நடிகர்களே பெறாத அளவிற்கு தாம் நடிப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற கே.பி.சுந்தராம்பாளின் படமான 'ஒளவையார்' 1953-ல் வெளியானது. ஒரு தனிப்பட்ட திரைப்படமாக எடுக்குமளவிற்கு சுந்தராம்பாளின் வாழ்க்கையே அத்தனை சுவாரசியமும் உருக்கமும் கொண்டது. பிரபல பாடகரான கிட்டப்பா மீது இவர் கொண்ட காதலும் எழுதிய கடிதங்களும் ஒரு காவிய சோகத்திற்கு ஈடானவை. இது தவிர வெங்கய்யா ரகுபதி, ராஜா சாண்டோ, முற்போக்கான தேசபக்திப் படங்களை எடுத்த கே.சுப்பிரமணியம், எல்லீஸ் ஆர் டங்கன் என்கிற ஆங்கிலேய இயக்குநர், கண்டிப்பான இயக்குநரான டி.ஆர்.சுந்தரம் போன்ற இயக்குர்களைப் பற்றிய தனித்தனியே பார்க்க வேண்டும்.

***

தமிழ் சினிமாவின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மிகச்சிறிய பகுதியையே இந்தக் கட்டுரையில் காண முடிந்தது. இதையும் தாண்டி இன்னும் பல திரைப்படங்களும் அதில் உறைந்திருக்கும் சுவாரசியமான தகவல்களும் உறைந்திருக்கும் கண்ணீரும் கைத்தட்டலும் வெற்றியும் தோல்வியும் ஆகியவை பற்றி இன்றைய தலைமுறை தேடியாவது அறிய வேண்டும். இன்று காணும் தமிழ் சினிமாவிற்குப் பின் எத்தனை மகத்தான பயணங்கள் இருந்திருக்கின்றன, மகத்தான நபர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தேடித் தேடித் அறிய வேண்டிய சுவாரசிய சுரங்கங்கள். தேடிக் கண்டடையுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

'தி இந்து' பொங்கல் மலரில் 'பாகவத நடிகர்கள்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை. அதன் சுருக்கப்படாத வடிவம் இது (நன்றி: தி இந்து)
 
suresh kannan

Thursday, February 19, 2015

நூல்வேலி - விபத்தில் பிறழும் உறவு



தமிழ் திரையில் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா மிக அரிதாகவே பாடியுள்ள பாடல்களில் ஓர் அற்புதம் -  'மெளனத்தில் விளையாடும் மனச்சாட்சியே'. பொதுவாக இந்தப் பாடலின் வழியாகவே அதிகம்  நினைவுகூரப்படும் திரைப்படம் ஒன்றுண்டு.  இயக்குநர் பாலசந்தரின் உருவாக்கங்களில் பரவலாக கவனம் பெறாத அந்த திரைப்படம் - நூல்வேலி.

உறவுகளில் உள்ள சிக்கல்களையும் சிக்கலான உறவுகளையும் தமது திரைப்படங்களில் தொடர்ந்து கையாள்வதில் விருப்பம் கொண்டவர் இயக்குநர் பாலசந்தர். தந்தை வயதுள்ளவரின் மீது ஓர் இளம்பெண் கொள்கிற காதலையும் தாய் வயதுள்ளவரிடம் ஓர் இளைஞன் கொள்கிற மையலையும் மையமாக வைத்து உருவாக்கிய 'அபூர்வ ராகங்கள்' அந்தக் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதொரு திரைப்படம். ஏன், இந்தக் காலத்தில் இதைப் பார்க்கிற எந்தவொரு இளையதலைமுறை பார்வையாளனும் ஆச்சரியப்படக்கூடிய திரைப்படம்தான். இப்போதைய இயக்குநர்கள் கூட கையாளத்தயங்கும் சர்ச்சைக்குரிய விஷயங்களை கத்தி முனை நடனம் போன்ற கவனத்துடன் கையாண்டவர் பாலசந்தர்.

என்னவொன்று, தனது கதாபாத்திரங்களின் சர்ச்சைகள் ஒரு மையத்தில் குவிந்து அதன் உச்சநிலையை அடையும் சமயத்தில், இயக்குநர் என்ன செய்யப் போகிறாரோ என்று பார்வையாளன் பரபரப்பும் திகைப்பும் அடையும் சமயத்தில், தமிழ் சமூகத்தின் ஆச்சாரமான மனோபாவத்தின் மீதான தயக்கத்தினாலோ என்னவோ, ஒரு யூ டர்ன் அடித்து பாத்திரங்களை மீண்டும் பழைய இடத்தில் பொருத்தி அந்த சராசரி பார்வையாளன் ஆசுவாச பெருமூச்சையடையும் சமநிலைக்கு கொண்டு வந்து விடுவார். இதே போன்ற உத்தியை பாக்கியராஜ் தனது 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்திலும் உபயோகித்திருப்பதைக் காணலாம்.

அது மட்டுமல்லாமல் தனது திரைப்படங்களின் பிரதான பாத்திரங்களை மஸோக்கிஸ்ட்டுகளாக உலவ விடுவதில் இயக்குநர் இன்பம் காண்பவரோ என்றும் கூட தோன்றுகிறது. 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தை சற்று யோசித்துப் பார்க்கலாம். ஓர் உருக்கமான மெலோடிராமா படைப்பிற்கு மிக அத்தியாவசியமான கச்சாப் பொருட்களின் படி பொறுப்பில்லாமல் ஓடிப்போன தந்தை, குடிகார அண்ணன், விதவை தங்கை, திருமணமாகாத இன்னொரு தங்கை, கண்பார்வையற்ற தம்பி உட்பட இன்னபிற பாத்திரங்கள் அதில் உண்டு. (இதிலும் ஒரு பொருந்தா உறவு நிகழும் துணைக்கதையுண்டு).  தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு இயந்திரமாக மாறிவிடும் சுஜாதா, அதிலிருந்து மீள கிடைக்கும் குறுகிய இடைவெளிகளையெல்லாம் படைப்பாளிகளுக்கேயுரிய ஒரு சாடிஸ தன்மையோடு  அடைத்துக் கொண்டே வருவார் இயக்குநர்.

தன்னுடைய நீண்ட நாள் காதலனை விதவைத் தங்கைக்கு விட்டுக் கொடுத்து விடுவார் சுஜாதா.  இன்னும் பல சம்பவங்களைக் கடந்த பிறகு, தான் பணியாற்றும் நிறுவனத்தின் முதலாளியே தன்னைத் திருமணம் செய்து கொள்ள முன்வரும் சமயத்தில், அதுவரை குடிகாரனாக பொறுப்பில்லாமல் இருந்து திருந்திய அண்ணனின் திடீர் மரணத்தின் காரணமாக தன்னுடைய இன்னொரு தங்கையை முதலாளிக்கு திருமணம் செய்து வைத்து விட்டு மறுபடியும் இயந்திரமாக மாறிவிடுவார். தன்னுடைய திருமணம் நிறைவுற்ற நிலையிலும் குடும்பத்தினருக்கு உதவக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஏன் அதை சுஜாதா நிராகரிக்கிறார் என்கிற கேள்விக்கு அத்திரைப்படம் அதன் காவிய சோகத்துடன் நிறைவுறுவதுதான் சரியாக இருக்க முடியும் என்பது இயக்குநரின் பதிலாக இருக்கலாம். நூல்வேலி திரைப்படமும் இதே போன்றதொரு தேவையற்ற தற்கொலையுடன் இன்னொரு மெலோடிராமாவாக முடிகிறது.


***

ஷெரீப் எழுதிய கதையிலும் பாலசந்தரின் திரைக்கதை வசனத்திலும்  உருவான நூல்வேலியும் சர்ச்சையான உள்ளடக்கத்தை கொண்டதுதான். நடுத்தரவயதுள்ள மனிதரொருவர் ஏறத்தாழ மகள் வயதுடைய ஒரு பெண்ணுடன் பாலுறுவு கொள்வதினால் அவரின் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களே இத்திரைப்படத்தின் மையம். 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் - முத்தம் என்பது காமத்தில் சேர்ந்ததில்லை' என்கிற வரி சமீபத்திய ஒரு தமிழ் திரைப்படத்தின் டேக்லைன். புதினப்படுத்தப்பட்ட உறவுகளின் மீது அமைந்த கவிதை நயத்துடன் கூடின வரியாக இது இருக்கலாம். ஆனால் உளவியலோ இதற்கு எதிர்ப்புறமாக இயங்குகிறது. ஒரு தந்தை மகளுக்குத் தரும் முத்தத்தில் தன்னையறியாமலே அதில் மைக்ரோ உணர்வுடனான செக்ஸ் கலந்திருக்கும் என்கிறது அது. நம்முடைய ஆசார மனம் இந்த உண்மையைக் கண்டு  திடுக்கிடத்தான் செய்யும். என்ன செய்வது?

மனித குலம் தோன்றி மெல்ல மெல்ல நாகரிகத்திற்கு நகர்ந்து ஆண் xபெண் உடலாகவே அதுவரை அறியப்பட்ட உறவுகள் ஒழுங்குப்படுத்தப்படும் நோக்கில் திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களின் தோற்றங்களை வந்தடைந்தன. இதன்  மூலம் ஏற்பட்ட உறவுகளாகிய கற்பிதங்கள்  இன்று புறக்கணிக்க முடியாத ஒழுக்க மதிப்பீடுகளாக சமூகத்தில்  உறைந்து நிற்கின்றன. ஆனால் ஆழ்மன இச்சைகளினால் இவைகளில் இருந்து நிகழும் விதிவிலக்கான மீறல்கள் சமூகத்தால் மிக கடுமையான ஆட்சேபத்துக்குரியதாகவும் தண்டனைக்குரியதாகவும் பார்க்கப்படுகின்றன.

இத்திரைப்படம் வெளிவந்த காலக்கட்டத்தில், ஏன் இன்னமும் கூட, இது இயக்குநரின் வக்கிரமான பார்வையுடன் கூடிய படைப்பு என்பது போன்ற விமர்சனம் எழுவதால் இத்தனை விஸ்தாரமாக சொல்ல வேண்டியிருக்கிறது. புதையல் கிடைக்கும் என்கிற நம்பிக்கைக்காக மகளையே நரபலி கொடுத்த தந்தை, பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய், தெரியாமல் குடிபோதையிலோ அல்லது தெரிந்தே கூட மகளை வன்கலவி செய்த தந்தை போன்ற சமகால சமூகப் பிறழ்வுகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்?. இம்மாதிரியான விதிவிலக்குகளை நியாயப்படுத்துவதற்காக அல்ல, சமூகத்தில் நிகழாத எதையும் வக்கிர கற்பனையுடன் இயக்குநர் படைத்துவிடவில்லை என்பதற்காக இதைச் சொல்கிறேன்.  நம்முள் மறைந்திருக்கும் விகாரங்களை திரையில் பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சியும் குற்றவுணர்வுமே இம்மாதிரியான எதிர்ப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும் காரணமாகின்றன.

ஒழுக்க மதிப்பீடுகளை கடைப்பிடிப்பதற்கும் மீறுவதற்கும் இடையில் தத்தளிக்கும் பார்வையாள மனோபாவத்தின் சமநிலையை சமாளிக்கும் ஒரு சாமர்த்தியத்தையும் பாலசந்தர் திரைக்கதையில் நிகழும் ஒரு சம்பவத்தில் உருவாக்கி வைத்திருப்பார். சென்சார் போர்டு அதிகாரியாகவும் நாவலாசிரியையாகவும் இருக்கும் சுஜாதா, ஒரு படத்தை சென்சார் செய்யும் போது அதில் சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு பொருந்தா உறவைக் கண்டித்து 'இது விகாரமானதொரு கற்பனை, யதார்த்தமானது அல்ல' என்று விவாதித்து அத்திரைப்படத்திற்கு அனுமதி தர மறுத்து விடுவார். பின்னர் வீட்டிற்குத் திரும்பும் போது தன் கணவனே, மகள் வயதுள்ள பக்கத்து வீட்டு மாணவியிடம் பாலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மனம் நொந்து படஅதிபரிடம் தொலைபேசியில் உரையாடி அந்தப் படத்திற்கு அனுமதி தந்து விடுவார்.


மீள்நினைவாக நூல்வேலி திரைப்படத்தின் கதைப் போக்கை சற்று கோர்வையாக பார்த்து விடுவோம்.  ஆர்கிடெக்ட்டாக பணிபுரியும் சரத்பாபுவும் பிரபல நாவல் ஆசிரியையுமான சுஜாதாவும் தம்பதியினர். அவர்களுக்கு சுமார் பத்து வயதில் ஒரு பெண் வாரிசு. அவர்கள் புதிதாக குடியேறும் வீட்டுக்குப் பக்கத்தில் துறுதுறுவென திரியும் ஒரு மேல்நிலைப் பள்ளி மாணவி சரிதா. சரிதாவின் தாய் ஒரு முன்னாள் நடிகை. சரிதாவின் குறும்புத்தனங்கள் சரத்பாபு தம்பதியினருக்குப் பிடித்துப் போக அவளை தங்களின் மகள் போல பாவிக்கின்றனர். சரிதாவின் தாய் இறந்து விட வேறு உறவில்லாத அவளை தங்களின் வீட்டிலேயே தங்கி படிக்க அனுமதிக்கின்றனர். ஓர் அசந்தர்ப்பமான தனிமையான சூழலில் சரத்பாபுவும் சரிதாவும் பரஸ்பர இணக்கத்தோடு பாலுறவு கொள்ள நேர்ந்து விடுகிறது. இதை சுஜாதாவும் அவரது மகளும் பார்த்து விடுகின்றனர். அந்தக் குடும்பத்தில் மனப்புழுக்கமும் மெளனப்புயலும் நிலவுகிறது. மூவருமே ஆளுக்கொரு திசையில் பிரிந்து செல்கின்றனர். தமிழ் சினிமாவின் விநோதமான விதிகளின் படி ஒருமுறையான பாலுறவிலேயே பிறந்து விடும் குழந்தையை வளர்த்து வருகிறார் சரிதா. தன்னுடைய மகளும் மருமகனும் பிரிந்து வாழ்வதை எண்ணி வருத்தம் கொள்கிறார் சுஜாதாவின் தந்தை. 'இந்தக் குழப்பத்தை நீதான் சரிசெய்ய வேண்டும்' என்று அவர் சரிதாவிடம் பேச தன்னுடைய குழந்தையை அவர்களுக்கு பரிசாக அளித்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறார் சரிதா. தமிழ் சினிமாவின் சம்பிதாயப்படி சுபம்.

ஒரு திரைப்படத்தில் பின்னால் வரப்போகும் சில திருப்பங்களை அல்லது நிகழ்வுகளை முந்தைய காட்சிகளிலேயே பூடகமாக வெளிப்படுத்துவது ஒருவகையான திரைக்கதை உத்தி.

இத்திரைப்படத்தின் டைட்டில் காட்சிகளில் கைகளை வைத்து நிழல்களின் மூலம் விதவிதமான உருவங்களைக் காட்டும் Shadow play காண்பிக்கப்படுகிறது. பள்ளி நிகழ்ச்சியொன்றில் சரிதா இந்த திறமையைக் காண்பித்து பாராட்டு பெறுவது போல் இது அமைந்திருந்தது. டைட்டிலில் இது காண்பிக்கப்படுவதால் பின்னர் தொடரும் திரைக்கதையில் இதை எங்காவது  இயக்குநர் பொருத்திக் காட்டுவார் என்று யூகித்திருந்தேன். ஆனால் எங்கும் அவ்வாறு நிகழவில்லை. இத்திரைப்படத்தில் வெள்ளந்தியாக வரும் வீட்டுப் பணியாள் பாத்திரம் ஒன்றிருக்கிறது. நடிகர் அனுமந்து நடித்திருப்பார். அந்த வீட்டில் அவரால் புரிந்து கொள்ள முடியாத காரியத்தை எவராவது செய்தால் 'படிச்சவங்க இல்லையா" என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுவார். அவ்வாறே இதையும் 'இயக்குநர் சிகரம் இல்லையா?' காரணம் இல்லாமலா வைத்திருப்பார்' என்று சொல்லி விட்டு நகர வேண்டியதுதான். இல்லையெனில் இன்னொன்றும் செய்யலாம். 'திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட பின் ஏற்பட்ட கற்பிதங்களான மனித உறவுகள், நிழல்கள் போன்று உருமாறிக் கொள்ளக்கூடிய மாயத்தன்மையைக் கொண்டது என இயக்குநர் குறிப்பால் உணர்த்த விரும்புகிறார்' என்று சற்று ஜல்லியடித்துப் பார்க்கலாம்.

ஆனால் இன்னொரு இடத்தில்  இந்த உத்தியை இயக்குநர் சற்று சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் எனலாம். படத்தின் துவக்க காட்சிகளில் பக்கத்து வீட்டுப் பணியாளனை மறைந்திருந்து பேய் போல் விளையாட்டாக பயமுறுத்தி 'அந்த வீட்டில் ஒரு மோகினி பிசாசு இருக்கிறது' என்று நம்ப வைக்க முயல்வார் சரிதா. பின்னர்  வரும் காட்சியில் அந்த வீட்டில் நிகழும் குழப்பங்களுக்கும் உளைச்சல்களுக்கும் தான்தான் காரணம் என்கிற குற்றவுணர்ச்சியுடன்  'இந்த வீட்டில் நுழைந்திருக்கும் மோகினி பிசாசு நான்தான்' என்று பரிதாபமாக ஒப்புதல் வாக்குமூலம் தருவார்.

முன்னரே குறிப்பிட்டது போல் கத்தி மேல் நடக்க வேண்டிய சாதுர்யத்துடன் கையாள வேண்டிய கதையை தனது அற்புதமான திரைக்கதையால் (உதவி : அனந்து) சாத்தியமாக்கியிருப்பார் பாலசந்தர். சரத்பாவும் சுஜாதாவும் அந்நியோன்யமான தம்பதிகளாக இருந்தாலும் சரத்பாபுவின் உடல் சார்ந்த தேவை முழுவதும் பூர்த்தியாகவில்லை என்பது முந்தைய காட்சிகளில் நிறுவப்பட்டு விடும் இதன் மூலம் பின்னர் நடக்கவிருக்கும் அந்த விபத்திற்கு ஒரு காரணத்தை தர முயன்றிருப்பார் இயக்குநர். மூன்று பிரதான கதாபாத்திரங்களுமே கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சரிதாவை பள்ளி மாணவியாக காண்பதெற்கெல்லாம் அபாரமான கற்பனைத் திறனும் சகிப்புத்தன்மையும் வேண்டும். பாலசந்தரின் கதாபாத்திரங்கள் சில பொதுவாக ஏதாவதொரு தனிப்பழக்கத்தை (mannerism) கொண்டிருக்கும். சமயங்களில் அவை சுவாரசியமானதாகவும் எரிச்சலூட்டும்படியும் இருக்கும். இதிலும் அப்படியான மேனரிஸம் சரிதாவிற்கு உண்டு. என்றாலும் அந்த விபத்திற்கு பின்னதான காட்சிகளில் சரிதாவின் முதிர்ச்சியான நடிப்பு அற்புதமாக இருக்கும். 'அங்கிள் தன்னை பலவந்தம் செய்து விட்டார் என்றோ அல்லது உபயோகப்படுத்திக் கொண்டார் என்றோ அந்தப் பாத்திரம் கருதுவதில்லை. மாறாக தன் ஆழ்மனதிலுமே அங்கிள் மீது ஈர்ப்பிருந்திருக்கலாம்' என்பதை நியாயமாக ஒப்புக் கொள்கிறது.

சரத்பாபுவின் கதாபாத்திரமும் அப்படியே. தமிழ் சினிமாவின் பூடகமான வில்லன்கள் போலவே சரிதாவை மகள் போல பாவிப்பது மாதிரி நடித்து சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பது போல எல்லாம் அபத்தமாக சித்தரிக்கப்படவில்லை. மாறாக அவர் சரிதாவை தன்னுடைய மகள் போலத்தான் நினைக்கிறார். ஆனால் அந்த அசந்தர்ப்பமான சூழலில் அந்த விபத்தில் இடறி விழுவதை அவரால் தவிர்க்க முடிவதில்லை. இதற்கான குற்றவுணர்வை அவர் கொண்டிருந்தாலும் சுஜாதா தன்னிடம் இது குறித்து காத்திரமான கேள்விகள் கேட்கும் போது அதை எதிர்கொள்ள இயலாமல் இயல்பான ஆணாதிக்க மனோபாவத்தோடு கோபமும் எரிச்சலும் கொள்வார். இந்த மூன்று கதாபாத்திரங்களில் சுஜாதாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம்தான் இன்னமும் சிறப்பானது. அவர் ஒரு எழுத்தாளராக இருப்பதினால் தன்னுடைய கணவனாகிய ஒரு ஆண் செய்த தவறை பெண்ணிய சிந்தனையுடன் கண்டிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு சாதாரண மனைவியாக தன்னுடைய நிலைக்கு போட்டி வந்து விட்டதே என்று மனம் புழுங்கவும் கணவனை இழந்து விடுவோமோ என்கிற பதட்டமும் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு மனநிலைகளுக்குமான தத்தளிப்பை சுஜாதா மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

பாலசந்தரின் பெரும்பாலான திரைப்படங்களில் உள்ள தேய்வழக்கு காட்சியமைப்புகளும் கேமிராக் கோணங்களும் இதில் உண்டு. சுஜாதாவின் தந்தை பாத்திரம் திடீரென்று கேமிராவை நோக்கி பார்வையாளர்களிடம் உரையாட ஆரம்பித்து விடும். (தெலுங்கு நடிகரான சோமயாஜூலுவின் சகோதரரான ரமணமூர்த்தி சிறப்பாக நடித்திருப்பார்). கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட பாடலைத் தவிர வாணி ஜெயராம் பாடிய இன்னொரு அற்புதமான பாடலான 'நானா... பாடுவது ...நானா' மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய 'தேரோட்டம்...' ஆகியவை கேட்க இனிமையானவை. (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்).

சிறிது பிசகினாலும் ஒழுக்க மதிப்பீடுகள் அறுந்து விடக்கூடிய நுண்மையான தன்மையைக் கொண்டவை, கவனமாக கையாள வேண்டிய அவசியமுள்ளவை என்பதை திரைப்படத்தின் தலைப்பே மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. காமம் என்பது மிக கவனமாக கையாளப்பட வேண்டியதொரு விலங்கு என்பதையும் சொற்ப நேர இன்பமானது எத்தனை தனிநபர்களின் வாழ்வை கடுமையாக பாதிக்கிறது என்பதை அழுத்தமாக பதிவாக்கியிருக்கிற திரைப்படமிது. பெண்ணியவாதிகள் கோபம் கொள்ளக்கூடிய நியாயமான காரணங்களையும் கொண்டிருக்கிறது. இயல்பான இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டதைத் தவிர வேறெந்த பாவமும் செய்யாத அப்பாவியான சரிதாவின் அந்த அபத்தமான தற்கொலையை மாத்திரம் இத்திரைப்படம் தவிர்த்திருக்குமானால் சிறப்பான படைப்பென்று இன்னமும் உரத்த குரலில் சொல்லியிருக்க முடியும்.

காட்சிப்பிழை, பிப்ரவரி 2015 இதழில் பிரசுரமானது - நன்றி காட்சிப்பிழை
 
suresh kannan

Monday, February 16, 2015

நிர்வாணத்தின் கண்களும் (PK) பழிவாங்குதலின் வக்கிரமும் (ஐ)


முதலில் ஒரு பழைய ஜென் கதையை நினைவுகூரலாம்.  பெளத்தப் பேராசிரியர் ஒருவர் ஜென் குருவிடம் ஜென் பற்றி அறிய வருகிறார். குரு விளக்கத் துவங்கும் எந்தவொரு விஷயத்தையும் பேராசிரியர் இடைமறித்து அது தொடர்பாக தான் அறிந்தவற்றிலிருந்து ஏதாவது சொல்லத் துவங்குகிறார்.

சில நிமிடங்களுக்குப் பின் ஜென் குரு பேராசிரியரை தேநீர் அருந்த அழைக்கிறார். பேராசிரியரின் கோப்பையில் தேநீரை ஊற்றத் துவங்குகிறார் குரு. கோப்பை நிறைந்தும் கூட தேநீரை ஊற்றிக் கொண்டேயிருக்கிறார். பதறிப் போகும் பேராசிரியர், கோப்பை நிறைந்து வழிகிறதே, உங்களுக்குத் தெரியவில்லையா?" என்கிறார். குரு புன்னகையுடன், வெற்றுக் கோப்பையில்தான் தேநீரை ஊற்ற முடியும். ஏற்கெனவே நிறைந்திருக்கும் கோப்பையில் அல்ல. போலவே ஏற்கெனவே அறியப்பட்ட விஷயங்களால் நிறைந்திருக்கும் உங்கள் மனதில் புதிதாக எதையும் நான் இட இயலாது. எனவே வெற்றுக் கோப்பையுடன் வாருங்கள்' என்று பேராசிரியரை திருப்பி அனுப்பி விடுகிறார்.

புறவயமாக எந்தவொரு கற்பித அடையாளங்களும் அற்று  நிர்வாணமாக நாம் பிறப்பதைப் போலவே அகவயமாகவும் ஒரு தூய வெற்றுக் கோப்பையை போலத்தான் நாம் பிறக்கிறோம். ஆனால் சுற்றியுள்ள சமூகம் அவர்களுக்குள் ஏற்கெனவே நிரப்பப்பட்ட கருத்துக்களையும் எண்ணங்களையும் வழக்கங்களையும் அப்படியே இந்தக் கோப்பைக்குள் போடுகிறது. நாமும் அந்த எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு எவ்வித புதிய கருத்துக்களையும் சேர்க்க முடியாத வகையில் நிரப்பப்பட்ட கோப்பைகளின் வரிசையில் இணைந்து விடுகிறோம். பொதுவாக இந்த சுழற்சிதான் தொடர்ந்து நிகழ்கிறது. இதற்கு மாறாக நாம்அறிந்த எல்லாவற்றையும் உதறி விட்டு மீண்டும் பிறந்த ஒரு குழந்தையின் பார்வையில் எல்லாவற்றையும் பரிசீலனை செய்து பார்த்தால் நம்முடைய அதுவரையான நம்பிக்கைகளில் உள்ள பொய்களும் அபத்தங்களும்  வேறு வேறு பரிமாணங்களில் தெரியும். நிரப்பப்பட்ட கோப்பை வரிசையிலிருந்து விலகுபவர்கள்தான் பகுத்தறிவுவாதிகளாகவும் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் ஞானிகளாகவும் ஆகிறார்கள்.

ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் வெளிவந்த PK திரைப்படம் இது போன்றதொரு அனுபவத்தைத்தான் பார்வையாளர்களுக்கு தருகிறது. அயல்கிரக மனிதன் ஒருவன் (அமீர்கான்) பூமியைப் பற்றி ஆராய்வதற்காக இங்கு வருகிறான். ராஜஸ்தானில் அவனுடைய விண்கலம் வந்திறங்குகிறது. வந்தவுடனேயே அவனுடைய ரிமோட் கண்ட்ரோல் வழிப்பறி செய்யப்படுகிறது. அது இல்லாமல் அவனால் திரும்பிச் செல்ல முடியாது. அதைத் தேடி அலையும் போது இந்தியாவின் பன்முக கலாச்சாரங்களும் வழக்கங்களும் மதங்களும் வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் அவனைக் குழப்புகின்றன. அவனுடைய உலகத்தில் அவையில்லை. எனவே தன்னுடைய  நிர்வாணமான பார்வையில் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்கிறான். அவனுடைய கேள்விகள் மேற்பார்வைக்கு அப்பாவித்தனமானவையாகயும் முட்டாள்தனமாகவும் தோன்றினாலும் நம்முடைய பல்லாண்டு கால நம்பிக்கைகளின் அடிப்படைகளைக் குலைப்பதாக இருக்கின்றன. அவனுடைய பாமரத்தனமான கேள்விகளின் மூலம் நமது ஆன்மீக முரண்களுக்கு பதில் கிடைக்கப் பெறுகிறோம் என்பதை உண்மை. பீகே என்றால் குடித்திருக்கிறாயா? என்று அர்த்தம். மதுவருந்திய சமயத்தில்தான் ஒருவன் மிக நேர்மையாகவும் உண்மை பேசுகிறவனாகவும் இருக்கிறான் என்பதால் இந்த தலைப்பு மிக பொருத்தமாய் அமைந்திருக்கிறது. மிக ரகளையான நையாண்டி காட்சிகளுடனும் வசனங்களுடன் நகர்கிற இத்திரைப்படம் பார்வையாளர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த சிரிப்புகளின் இடையில் அதுவரையிலான நம்முடைய மத அடிப்படையிலான ஆதார நம்பிக்கைகள் சரிந்து விழுகின்றன என்பதை மெல்ல  உணர்கிறோம்.

பொதுவாக ராஜ்குமார் ஹிரானியின் திரைப்படங்கள் ஒரு சராசரியான இந்திய திரைப்படத்தின் வெகுஜன கேளிக்கைக்கான கட்டமைப்பில் அமைந்திருந்தாலும் உறுத்தாத நகைச்சுவையுடன் சமூகத்திற்கான ஒரு செய்தியை உணர்த்துகிற பாவனையையும் கொண்டிருக்கும். முன்னாபாய் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட அவரது முதல் இரண்டு திரைப்படங்களும் வன்முறைக்கு எதிரான, அன்பு சார்ந்த  காந்திய சிந்தனைகளை சமகால நவீன சமூகம் எப்படி தமக்குள் உள்வாங்கிக் கொள்வது என்பதைப் பற்றி பேசியது. 3  IDIOTS  புத்தகக் கல்விக்கும் நடைமுறை அனுபவ அறிவிற்குமான இடைவெளியையொட்டி கல்வித்துறையின் அபத்தங்களைப் பற்றி பேசியது.  PK திரைப்படம் தனது அழுத்தமான நையாண்டி வசனங்கள் மற்றும் காட்சிகளின்  மூலம் இந்தியச் சமூகத்தின் மதம் சார்ந்த உணர்வுகளிலுள்ள முரண்களையும் மூடநம்பிக்கைகளையும் விமர்சிக்கிறது.

புண்படுத்தாத நகைச்சுவையின் மூலம் எத்தனை தீவிரமான விஷயங்களையும் விமர்சனங்களையும் சமூக எதிர்ப்பின்றி சிநேகமான தொனியில் வலிமையான ஊடகமான சினிமாவில் எளிதில் சொல்லி விட முடியும் என்பதற்கு சார்லி சாப்ளின் காலத்திலிருந்தே பல உதாரணங்கள் உள்ளன. PK அந்த பாணியையே பின்பற்றியிருக்கிறது. அயல்கிரக மனிதர்கள் பூமிக்கு வருவது குறித்து உலகமெங்கிலும் பல்விதமான அறிபுனைவு கதைகளும் திரைப்படங்களும் உள்ளன. எழுத்தாளர் சுஜாதா கூட 'கடவுள் வந்திருந்தார்' என்ற நாடகத்தை எழுதியிருக்கிறார். இந்த நாடகத்தின் சாயல் கூடஇத்திரைப்படத்தில் உண்டு. அயல்கிரக மனிதனின் வருகையெல்லாம் ஒரு பாவனைதான். அந்த அந்நிய மனிதனின் வெளிப்புற பார்வையிலிருந்து கிடைக்கும் செய்திகளும் விமர்சனங்களும்தான் வெளி்ச்சமும்தான் முக்கியம்.

படம் முழுவதும் நம்மை கிண்டலடித்துக் கொண்டேயிருக்கும் நையாண்டி வசனங்களும் காட்சிகளும்தான் இத்திரைப்படத்தின் முக்கிய பலம். உதாரணத்திற்கு ஒரு காட்சியை விளக்க முயல்கிறேன். நிறுத்தப்பட்டிருக்கும் வாகனமொன்றில் நிர்வாணமாக பாலுறவு கொண்டிருப்பவர்களிடமிருந்து  இயல்பாக எடுத்து அணிந்திருக்கும் (நம்மூர் மொழியில் - திருடியிருக்கும்)  உடையின் உள்ளே கிடைக்கும் பணத்தைப் பார்க்கிறார் அமீர்கான். அது என்னவென்று அவருக்குப் புரிவதில்லை. ஆனால் அதில் அச்சிடப்பட்டிருக்கும் மனிதரின்  புகைப்படம் உள்ள தாளைக் கொடுத்தால் தின்பதற்கு ஏதாவது கிடைக்கும் என்பது மாத்திரம் புரிகிறது. உடனே காந்தி புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும் சுவரொட்டி, துண்டுச்சீட்டு, கிழிக்கப்பட்ட பத்திரிகை.. போன்றவற்றை திரட்டி எடுத்துச் சென்று கடையில் தருகிறார். ஆனால் அது செல்லுபடியாவதில்லை. நிராகரிக்கப்படுகிறது. இந்தியச் சமூகத்தில் காந்தி எனும் ஆளுமை மதிக்கப்படுவது பணத்தில் மாத்திரமே, மாறாக அவரது கொள்கைகளும், சிந்தனைகளும் பின்பற்றப்படாமல் வெறும் பெயரளவில்தான் உள்ளன என்கிற பகடி இந்தக் காட்சியில் வெளிப்படுகிறது. அமீர்கான், காவல்துறையின் உடையை அணிந்து கொண்டு வரும் போது காந்தி நோட்டுக்கள் தானாக அவரிடம் லஞ்சமாக தரப்படுகிறது. எத்தனை கிண்டல்?

இந்தியாவில் கடவுள்  மற்றும் மதம் போன்ற அடையாளங்கள் எல்லாம் எதற்தெற்கெல்லாம் பயன்படும் என்பதற்கு விவஸ்தையே இல்லை. உதாரணத்திற்கு ஒன்றை பார்க்கலாம். கட்டிடங்களில் உள்ள படிக்கட்டின் மூலைகளில் பான்பராக் எச்சில் துப்புவதும் மறைவிடங்களில் சிறுநீர் கழிப்பதும் குப்பை கொட்டுவதும் இந்திய கலாசாரங்களில் ஒன்று. கட்டிட உரிமையாளர்கள் இதை தடுப்பதற்காக அந்த இடங்களில் கடவுள்களின் படங்களை வரைந்து வைத்து விடுவார்கள். சில இடங்களில் வெவ்வேறு மதக்கடவுள்களின் படத்தையும் இணைந்து வரைந்து வைப்பார்கள். எல்லோருக்குமே பொருந்தும் அல்லவா? மதச்சகிப்பின்மை என்பது இப்படி சுயநலமாக மட்டுமே வெளிப்படுகிறது. இதன் மூலம் தாங்கள் தீவிரமாகவும் புனிதமாகவும் நம்பும் கடவுள்களை தாங்களே அறியாது அவமானப்படுத்துகிறார்களா அல்லது அதையும் விட சுத்தம் என்கிற விஷயம் பெரிது என நினைக்கிறார்களா என்று புரியாது. இந்த திரைப்படத்திலும் ஏறக்குறைய இதே மாதிரியான உத்தியை அமீர்கானும் பயன்படுத்துவார். கோயில் உண்டியலில் பணத்தை எடுத்துக் கொண்டு அடி வாங்கிய முன்அனுபவத்தில் தம்முடைய கன்னங்களில் கடவுள் படம் அச்சிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்வார். இவரை அடிக்க வருபவர்கள் திகைத்து நின்று விடுவார்கள். சிறிய அளவில் உள்ள கடவுள் பொம்மை ரூ.20, பெரிய அளவில் உள்ள பொம்மை ரூ.50, என்று கோயில் வாசலில் விற்கப்படும் போது  அதிக விலையில் விற்கப்படும் கடவுள் பொம்மைக்கு சக்தி அதிகமா என்று அப்பாவித்தனமாக கேட்பார் அமீர்கான்.

இம்மாதிரியான கிண்டல்கள் திரைப்படத்தில் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. என்னவொன்று இந்து மத அடையாளங்கள் பிரதானமாக கிண்டலடிக்கப்பட்டதைப் போன்று இதர மதங்களின் மீதான கிண்டல்கள் போகிற போக்கில் இருப்பது ஒரு பலவீனம். அப்படியெல்லாம் செய்திருந்தால் படம் வெளியே வந்திருக்காது என்பதும் யதார்த்தம்தான். இந்த மாதிரியான நையாண்டியான விமர்சனங்கள் எல்லாம் பெரியார் போன்ற பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் ஏற்கெனவே நிகழ்த்தியவைதான். என்றாலும் இவை போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருப்பது அவசியம். அதுவும் மத அரசியலும் சாதிய சக்திகளும் மேலதிக சக்தியோடு உயிர்த்தெழுந்து வந்து கொண்டிருக்கும் சமகால அரசியல் சூழலில் இது போன்ற பகுத்தறிவுக் குரல்கள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டியது அவசியம். சுண்டல் போல பத்ம விருது தரப்படுவதற்காக இந்து சாமியார்களின் பட்டியல் தயார் செய்யப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சாமியார்களின் போர்வையில் உலவும் போலி ஆன்மீக தரகர்களின் மோசடிகளை வெளிப்படுத்தும் இம்மாதிரியான படைப்புகள் நிச்சயம் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

படைப்புச் சுதந்திரம் என்பது கலாசார காவலர்களாலும் மத அடிப்படைவாதிகளாலும் நசுக்கப்படுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் மீதான சர்ச்சையும் பிரான்ஸ் தேசத்து கார்ட்டூன் பத்திரிகையான சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும் சமீபத்திய உதாரணங்கள். இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்னாலேயே இது எதைப் பற்றிய திரைப்படமென்பதை அறியாமலேயே  இத்திரைப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர் ஒன்றில் அமீர்கான் நிர்வாணமாக காணப்படுவதை ஆட்சேபித்து பொதுநல வழக்கொன்று போடப்பட்டது. 'கலையை கலையாக இருக்க விடுங்கள். உங்கள் மனம் புண்படுமென்றால் அதைப் பார்க்காதீர்கள். அவ்வளவுதான் விஷயம்' என்று நீதிமன்றம் இந்த கலாசார காவலர்களின் தலையில் ஓங்கி ஒன்று போட்டு வெளியே அனுப்பி விட்டது. இத்திரைப்படம் பெருவாரியாக இந்து மதத்தின் மீதான கிண்டல்களைக் கொண்டிருப்பதால் இதை தடை செய்ய வேண்டும் என்று இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறை உண்மை என்னவென்றால் இந்தியாவிலேயே மிக அதிகமாக வசூலித்த திரைப்படமாக (ரூ.600 கோடிக்கும் மேல் என்கிறார்கள்) PK இருக்கிறது. போலவே வெளிநாடுகளில் அதிகம் வசூலித்த இந்தியத் திரைப்படங்களில் முதலிடமாகவும். இது இந்து மனங்களை புண்படுத்துமென்றால் இத்தனை ஆரவார வரவேற்பைப் பெற்றிருக்குமா? அவரவர்களின் மதவுணர்வுகளுடன் வாழ்பவர்களின் சதவீதம் பெரும்பான்மை என்பதையும் அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற படைப்புகளை தடை செய்யக் கோரும் அடிப்படைவாதிகளின் சதவீதம் குறைவு என்பதையே இந்த வசூல் விவகாரம் உணர்த்துகிறது. மிக அதிகமாக வசூலித்ததனாலேயே இது சிறந்த திரைப்படமாகவும் ஆகி விடாது. ராஜ்குமார் ஹிரானி போன்றவர்கள் படைப்பாளிகள் என்பதை விடவும் இந்திய வெகுஜன உளவியலை நன்கு புரிந்து கொண்டிருக்கிற சிறந்த வியாபாரிகள் என்பதும் இன்னொரு புறமான உண்மை.


இந்தியில் ராஜ்குமார் ஹிரானி என்பது ஒரு வெற்றிகரமான பிராண்டின் பெயர் என்றால் தமிழ் சூழலில் ஷங்கர் என்பது இன்னொரு வகையான பிராண்ட். சமூகத்தின் அனைத்து வகையான பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் எல்லாவித சமரசங்களுடனும், சமூகப் பிரச்சினையை உரையாடுகிறேன் பேர்வழி என்று பிரம்மாண்டமான பகற்கனவுகளை வண்ணமிகு பொட்டலத்தில் கட்டி நுட்பமாக சந்தைப்படுத்தி அதிக லாபத்தை பார்த்து விடும் வெற்றிகரமானதொரு மார்க்கெட்டிங் குரு. இவரது பெரும்பாலான திரைப்படங்கள், ரோட்டில் எச்சில் துப்புபவனைக் கொன்று விட்டால் நாடு சுபிட்சமாகி வல்லரசாகி விடும் என்பது போன்ற ஆபத்தான கருத்தியல்களையும் மேம்போக்கான எளிய தீர்வுகளையும்  கொண்டிருந்தாலும் கடைசி வரையிலாவது சகித்துக் கொண்டு பார்த்து விட முடிகிற சுவாரசியத்தையாவது குறைந்தபட்சம் கொண்டிருக்கும். ஆனால் அந்த தகுதியைக் கூட இழந்து மிகுந்த சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது அவரது சமீபத்திய திரைப்படமான ஐ அல்லது ஐய்யய்யோ. நாயகன் சமூகப் பிரச்சினைக்காக போராடுகிறான் என்கிற பாவனையெல்லாம் இல்லை என்பதுதான் இதில் மிஞ்சியிருக்கும் ஒரு சிறிய ஆறுதல். ஆனால் தன்னுடைய அழகையும் உடலையும் சிதைத்தவர்களை பழிவாங்குவதற்காக நாயகன் யோசித்து செயல்படுத்தும் திட்டங்கள் இருக்கிறதே, கருடபுராண தண்டனைகள் எல்லாம் தோற்றுவிடும் அளவிற்கான உச்சபட்சமான வக்கிரத்தின் தன்மையைக் கொண்டவை. அதிலும் இறுதிக்காட்சிகளில் சந்தானம் பேசும் கொடூரமான நையாண்டிகளையெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. விஜய்மல்லையாவை நினைவுப்படுத்தும் தோற்றம் கொண்ட ராம்குமார் கூட்டணி பழிவாங்குவதற்காக  திட்டமிடுவதும் பிறகு நாயகனை  அவமதிப்பதற்காக உரத்த குரலில் சிரிக்கும் காட்சிகள் எல்லாம் நம்பியார் படக்காலத்திலேயே வழக்கொழிந்து போய் விட்டது என்று நினைத்திருந்தேன். இல்லை போலிருக்கிறது.

தமக்கு இன்னல் இழைத்த தீயவர்களை பழிவாங்கும் கதைகளெல்லாம் மிகப் பழைய சமாச்சாரம்தான். வில்லன்களை திருத்துவதற்கெல்லாம் எம்.ஜி.ஆர் .ஃபார்முலா படங்களில் மிக எளிமையான தீர்வுகளை வைத்திருப்பார்கள். கோயில் பிரசாதம் போல வரிசையில் வந்து வந்து அடிவாங்கிக் கொண்டு போகும் அடியாட்களைத் தவிர பிரதான வில்லனாகப்பட்டவர், கிளைமாக்சில்  'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்' என்று சொல்லுவதற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டு உறுமிக் கொண்டே சென்று விடுவார். குணச்சித்திர நடிகர் வில்லனாக நடித்திருந்தால் நாயகனின் தூய்மை உள்ளத்தைக் கண்டு மனம் உருகி க்ளைமாக்சில் மன்னிப்பு கேட்டு விட்டு ஒரே குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான். ஆனால் தமிழ் திரையில் இந்த பழிவாங்குதலை எப்படியெல்லாம் வித்தியாசப்படுத்தலாம் என்று யோசித்து யோசித்து கை வெட்டப்படுவதையும் குருதி பொங்கி வழிவதையும் சதைகள் துண்டாவதையும் நிஜம் போல் காட்டுவதில் முன்னேறிக் கொண்டே செல்கிறார்கள். இப்போது இந்தக் கொடூரங்களின்  உச்சத்தில் ஷங்கர் நின்று கொண்டிருக்கிறார். வைரஸால் பாதிக்கப்படும் விக்ரமின் தோற்றம் கொண்டு அதற்கு காரணமானவர்களை அவர் பழிவாங்குவதற்காக யோசிப்பவைகள், செயல்படுத்தும் திட்டங்கள், அதற்கான ஒப்பனை, அதன் மீதான கொடூர நகைச்சுவைகளையெல்லாம் ஹிட்லரின் வதை முகாம்களில் செயல்பட்ட நாஜிகள் கூட யோசித்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

ஹாலிவுட் மற்றும் இன்னபிற பிரதேசங்களிலும் இம்மாதிரியான பழிவாங்குதலை மையமாகக் கொண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. க்வெண்டின் டோரண்டினோ போன்றவர்கள் எல்லாம் இதில் விற்பன்னர்கள். ஆனால் இத்திரைப்படங்களில் எல்லாம் பழிவாங்குதல் என்பது வன்முறையின் அழகியல் சார்ந்து இருக்கும். இத்தனை வெளிப்படையான அருவருப்புடனோ வக்கிரத்துடனோ இருக்காது. அதாவது பழிவாங்கப்படுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அழுத்தமாக அமைந்திருந்தாலும் அது புறவயமாக அப்பட்டமாக காண்பிக்கப்படாமல் பார்வையாளர்கள் யூகித்துக் கொள்ளும் படி அமைந்திருக்கும். அந்த வன்முறையானது பெரும்பாலும் பார்வையாளர்களின் மனதில்தான் நிகழும். காட்சிகளாகத் தோன்றாது. சமீபத்தில் நிகழ்ந்த சென்னை சர்வதேச விழாவில்  திரையிடப்பட்ட Wild Tales என்னும் இருண்மை நகைச்சுவை கொண்ட ஸ்பானிய திரைப்படத்தைப் பார்த்தேன். பிரபல ஸ்பானிய இயக்குர் பெட்ரோ அல்மோடோவரும் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர். ஆறு குறும்படங்கள் இணைந்ததுதான் இந்த திரைப்படம். வன்முறையும் பழிவாங்குதலும்தான் இந்த ஆறு குறுங்கதைகளின் மையம். ஆனால் படம் துவங்கி முடியும் வரைக்கும் அரங்கத்தில் பார்வையாளர்களின் ஆரவார சிரிப்பொலிகளின் சத்தம் குறையவேயில்லை. வன்முறையை எப்படி பகடியாக்குவது என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம்.  இந்த வருட அகாதமி விருதிற்காக 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்தின் பிரிவின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறது.

ஐ திரைப்படத்தில் காட்சிகளின் வக்கிரங்களைத் தவிர திரைக்கதை சார்ந்து இன்னொரு பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றுகிறது. படம் சலிப்பை ஏற்படுத்துவற்கு இதுவொரு காரணமாக இருக்கலாம். முதலில் பூடகமான சில சம்பவங்களைக் காண்பித்து விட்டு இடைவேளைக்கு பின் அதற்கான காரணங்களை ஒரு வலுவான ஃபிளாஷ்பேக்கின் மூலம் சொல்வது ஷங்கர் திரைப்படங்களின் பொதுவான வடிவமைப்பு. ஆனால் இத்திரைப்படத்தில் நாயகனுக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணம் ஏறக்குறைய க்ளைமாக்சுக்கு முன்புதான் வெளிப்படுகிறது. நாயகன் பழிவாங்குகிறான் என்றால் அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அதற்கான காரணம், பாதிப்பை ஏற்படுத்திய நபர்கள் யார் என்பது போன்ற விவரங்கள் பார்வையாளர்களின் மனதில் மிக அழுத்தமாக கடத்தப்பட்டிருந்தால்தான் அவனும் அந்த பழிவாங்குதலில் மிக ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொள்வான்.

மாறாக இதில் விக்ரமிற்கு ஏற்பட்ட பாதிப்பு கடைசிக் காட்சிகளுக்கு முன்புவரை மிக பூடகமாகவே  அவர் கொடூரமாக பழிவாங்கும் செயல்களெல்லாம் எரிச்சலைத்தான் வரவழைக்கின்றன. மேலும் இந்தப் படத்திற்காக விக்ரம் உடல் எடையை வெகுவாகக் குறைத்து மிக மெலிதாக இருக்கும் ஒரு புகைப்படத்தை, திரைப்படம் வெளிவருதற்கு முன்னால் பார்க்க நேர்ந்தது. மிகப் பரிதாபம். ஒரு திரைப்படத்திற்காக தன் உடலை இப்படியா ஒருவன் வதைப்படுத்திக் கொள்வான் என்று அவருடய அர்ப்பணிப்பின் மீது பிரமிப்பாக இருந்தது. இத்திரைப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.  ஆனால் அந்தக் கடினமான உழைப்பை இயக்குநர் மிக மேம்போக்காகவும், அந்த உழைப்பு  அநாவசியமானது என்கிற வகையிலும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது துரதிர்ஷ்டம். இதே மாதிரியாக சேது திரைப்படத்தில் தன்னுடைய உடலை உருக்கி நடித்த விக்ரமை இயக்குநர் பாலா எத்தனை அழுத்தமாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதை கவனிக்கலாம். டாம் ஹாங்ஸ் நடித்த Cast Away  போன்ற அற்புதமான திரைக்கதைகளுக்குதான் இப்படியெல்லாம் உடம்பை உருக்கி நடிக்க தயாராக இருக்கலாம்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்குபவர் ஷங்கர் என்று பெயரெடுத்து விட்ட படியால் ஒவ்வொரு பிரேமிலும் குறைந்தது நூறு பேராவது நிற்கிறார்கள். அந்நியன் திரைப்படத்தில் திருவையாறில் நிகழும் தியாகராஜர் ஆராதனை விழாவின் பஞ்சரத்தின கீர்த்தனைக்  காட்சியில் உன்னி கிருஷ்ணன், சுதாரகுநாதன் போன்ற கர்நாடக இசை பிரபலங்கள் எல்லாம் துணைநடிகர்கள் போலவே வந்து விட்டுப் போவார்கள். இதுதான் பிரம்மாண்டம் என்பதின் அடையாளம் போல. இத்திரைப்படத்தின்  பாடல் காட்சிகள் முதற்கொண்டு திகட்டுமளவிற்கான நுட்பமும் வண்ணமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாடிபில்டர்களுடனான ஒரு சண்டைக்காட்சியில் மாட்ரிக்ஸ் திரைப்படம் போன்று விக்ரம் குறைந்தது ஐம்பது மாமிச மலைகளுடன் மோதுகிற காட்சிகளெல்லாம் பிரம்மாண்டம் என்கிற பெயரில் சித்தரிக்கப்படும் அபத்தம். ஒரு போட்டிக்கு வருகிற அத்தனை பேருமா ஐயா வில்லன்களாக இருப்பார்கள்? இதன் மூலம் பாடிபில்டிங் என்கிற உடலைப் போற்றி வளர்க்கிற நல்ல விஷயத்தை ஏதோ வில்லன்களுக்கான அடையாளம் என்பதாக சித்தரித்து வைத்திருக்கிறார் இயக்குநர். மேலும் திருநங்கையாக வரும் பாத்திரமொன்றும் மிக மோசமாக கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாலியல் சிறுபான்மையினர் மீது பொதுப்புத்தியின் பார்வை மெல்ல மாறிக் கொண்டிருக்கும் சூழலில் அதில் பின்னடைவை ஏற்படுத்தும் காட்சிகளை குறைந்தபட்ச தாாமீக உணர்வுடன் தவிர்த்திருக்க வேண்டாமா?

தனது அடுத்த திரைப்படத்தின் வில்லன்களை ஷங்கர் எப்படியெல்லாம் பழிவாங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறாரோ என்று நினைத்தால் இப்போதே கலக்கமாக இருக்கிறது.

- உயிர்மை - பிப்ரவரி 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Tuesday, February 03, 2015

புதிய எக்ஸைல் : புனைவும் புனைவற்றதும்



1. எச்சரிக்கை

இந்தக் கட்டுரையில் பாலுறவு தொடர்பான கொச்சையான வார்த்தைகளும் சம்பவங்களும் என்னையும் மீறி வரக்கூடும். பாசாங்குகளின் மூலம் தங்களை ஒழுக்கவாதிகள் என்று நிரூபிக்க விரும்புவர்கள், ஆபாச வார்த்தைகளைக் கேட்டவுடன் பிடிக்காதது போல் நடித்து முகஞ்சுளிப்பவர்கள் அல்லது இவைகளிலிருந்து உண்மையாகவே விலகி நிற்க வேண்டும் என நினைக்கும்  ஆன்மீகவாதிகள், புண்ணியாத்மாக்கள்  எல்லாம் இந்தக் கட்டுரையை வாசிக்கலாமலிருக்க வேண்டுகிறேன். கோபமெல்லாம் இல்லை. அன்பாகத்தான் சொல்கிறேன். நானும் பொதுவாக வேறு வழியில்லாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு நிற்கும் வார்த்தைகளைக் கொண்டு எழுதுபவன்தான். ஆனால் பாருங்கள், இப்படி எழுத வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது சாருநிவேதிதா எழுதிய 'புதிய எக்ஸைல்' என்கிற இந்த தன்வரலாற்றுப் புதினம்தான். அது மாத்திரமல்ல.

இந்த 'தமிழ்' என்கிற மின்னிதழை துவங்கியிருக்கும் சரவணகார்த்திகேயன் (வாழ்த்துகள் CSK ) எழுதிய பரத்தைக்கூற்று என்கிற கவிதைத் தொகுதியில் சிலவற்றை வாசித்துப் பார்த்தேன். நான் பொதுவாக கவிதை என்கிற வடிவத்திலிருந்து ஒதுங்கியிருப்பவன். ஆனால் மனிதர் அதில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல் மதுமிதா என்கிற விர்ச்சுவல் வடிவ அனாமிகாவை வர்ணித்து வர்ணித்து தினம் தினம் டிவிட்டரில் முயங்கிக் கொண்டிக்கிறாரோ என்று தோன்ற வைக்குமளவிற்கு டிவிட்டிக் கொண்டிருப்பவர் சரவணகார்த்திகேயன். அவருடைய இதழில் சைவமாக எழுதினால் அது கடவுளுக்கே அடுக்காது. சரியா?.

2. தண்டபாணி அண்ணன்.

என்னுடைய சிறுவயதில் நாங்கள் வசித்து வந்திருந்த ஒண்டுக்குடித்தன வீட்டின் முன்பாக நீளமான திண்ணை ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் யாரு திண்ணை வைத்து வீடு கட்டுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்தால், 'அந்தக் காலத்தில எல்லாம்..' தொனி வந்துவிடுமென்பதால் அதை தவிர்க்கிறேன். அந்த திண்ணைதான் என்னுடைய போதிமரம் என்றால் அது மிகையாகாது (இதுவும் பழைய பாணிதான்). அந்த திண்ணையின் சாட்சியுடன்தான் முதல் சிகரெட், (பயங்கர இருமல்) நடிகைகளில் யாருடைய க்ளிவெஜ் பெஸ்ட், சிக்கலான அல்ஜீப்ரா சூத்திரங்கள், என்று.. என்னுடைய நல்லது, கெட்டது சகலத்தையும் கற்றிருக்கிறேன். அந்த திண்ணையில்தான் தண்டபாணி அண்ணனை அடிக்கடி பார்ப்பேன். வீட்டுக்குள் நுழையும் போதும் அல்லது வெளியே வரும் போதும் ஏறக்குறைய அவர் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருக்கு வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்திற்குள் இருக்கலாம். ஆனால் உழைத்து முறுக்கேறிய நரம்பான கட்டுமஸ்தான உடம்புடன் ஆள் இருபத்தைந்து போல் இருப்பார். கருப்பான முகத்தில் வெட்டுத் தழும்பு ஒன்றுடன் இருந்தாலும் அவரிடம் ஏதோவொரு விளக்கவொண்ணா கவர்ச்சியும் ஸ்டைலும் இருந்தது. அவர் சிரிக்கும் போது பார்க்க அத்தனை அழகாக இருக்கும். முகமே சிரிப்பது போல. சிலருக்குத்தான் அப்படி அமையும். சிகையலங்காரமும் ஏறக்குறைய ரஜினியுடையதைப் போலவே இருக்கும்.

எப்போதும் அவரைச் சுற்றி ஒரு ஜமா இருக்கும். ஏறக்குறைய அவருடைய வயதை ஒத்தவர்கள்தான். ஆனால் ஒரு பெரியவரும் உண்டு. பெரும்பாலான கிண்டல்களில் அவர்தான் மாட்டிக் கொள்வார். பட்டைச் சாராயத்தின் நாற்றமும் மட்டமான பீடியின் மணமும் எப்போதும் சூழ்ந்திருக்கும். நாங்கள் வசித்து வந்து வீட்டின் உரிமையாளர் அங்கு இருக்கவில்லை. மாதாமானால் வாடகையை மாத்திரம் வந்து வாங்கிப் போய் விடுவார். எல்லோருமே குடித்தனக்காரர்கள் என்பதால் திண்ணையில் நிகழும் இந்தக் களேபரத்தை யாரும் கேட்க துணியவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை. மேலும் தண்டபாணி அண்ணன் ரவுடி வேறு. எதற்கு வம்பு?

ஆனால் தண்டபாணி அண்ணன் திண்ணையில் அமர்ந்திருப்பதை தவிர பொதுவாக யாருக்கும் எவ்வித தொந்தரவும் தரமாட்டார். வீட்டிலிருந்து பெண்கள் வந்தால் மரியாதையாக ஒதுங்கி அமர்ந்து கொள்வார். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் பாடல்களை உரத்த குரலில் பாடிக் கொண்டிருப்பார். விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கு எம்.ஜி.ஆர் என்றாலே அப்போதெல்லாம் தெய்வம் மாதிரி. ஏன் அவர் மறைந்து இத்தனை வருடங்களாகியும் இன்றும் கூட அவருடைய பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் வீட்டின் வெளியே மேடையமைத்து புகைப்படத்தை சிங்காரித்து பெரிய சைஸ் ஸ்பீக்கர்களில் எம்.ஜி,ஆர் படப்பாடல்களை நாள் முழுக்க அலற விடுவார்கள். வடசென்னையில் இன்றும் கூட தெருவிற்கு தெரு இந்தக் காட்சியைப் பார்க்கலாம். இதில் அரசியல் சார்புடனும் ஆதாயத்துடனும் இயங்குபவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றாலும் எம்.ஜி.ஆரை இன்னமும் கடவுளாகவே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலர். தன்னுடைய ஆளுமையை இத்தனை திறமையாக வளர்த்துக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் மீது ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. மார்க்கெட்டிங் குரு என்று இப்போது டையுடன் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஒரு பிராண்டை வெற்றிகரமாக வளர்த்தெடுக்கும் விஷயத்தில் அவரிடம் பிச்சையெடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர் பாடல்களை தண்டபாணி அண்ணன் சுவாரசியமாக பாடி முடித்தவுடன் சுற்றியிருக்கும் ஜமா பாராட்டி மகிழ்வார்கள். சில பாடல்களை மீண்டும் பாடச் சொல்வார்கள். அவரும் சலிக்காமல் அல்லது மறுக்காமல் அதே உற்சாகத்துடன் மீண்டும் பாடுவார். எப்பவாவது சிவாஜி (தொப்பையோட பாட்டு ஒண்ணு எடுத்து விடு... தண்டம்...) பாடல்களும் இடையில் வரும். சமயங்களில் பீடிக்குப் பதிலாக கஞ்சா புகையும் காட்டமாக காற்றில் நிறைந்து விடும். இரண்டிற்கும் வித்தியாசத்தை கண்டுபிடிக்கும் திறமையெல்லாம் அப்போதே எனக்கு வந்திருந்தது. தண்டபாணி அண்ணன் சோற்றுக்கு என்ன செய்கிறார், என்ன வேலை செய்கிறார், அவருடைய வீடு எங்கிருக்கிறது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. பகல் முழுக்க ஏறக்குறைய அந்தத் திண்ணையில்தான் இருப்பார். அவர் இல்லாத சமயங்களில் திண்ணை வெறிச்சோடி ஒரு வித சோகத்தை ஏற்படுத்தும். அல்லது அப்படியாக நான் நினைத்துக் கொண்டேன். இப்படிப்பட்ட தண்டபாணி அண்ணன்தான் ஒரு நாள் அதே திண்ணையின் முன்பாக வெட்டிக் கொல்லப்பட்டார். நினைவு தெரிந்து அன்றுதான் மனதிற்குள் அழுதேன். அதைப் பிறகு சொல்கிறேன்.

பாடல்கள் பாடுவது தவிர தண்டபாணி அண்ணன் சுவாரசியமாக கதை சொல்வதிலும் விற்பன்னர். கதை என்றால் சினிமாக்கதைகளோ அல்லது 'ஒரு ஊர்ல..' என்பது மாதிரியான கதைகள் அல்ல. தன்னுடைய வாழ்விலேயே நிகழ்ந்ததாக விவரிக்கும்  காஸனோவா கதைகள். பொதுவாக அந்த ஊரில் உள்ள இளவயது (சமயங்களில் நடுவயதும்) பெண்களில் யார் யாரையெல்லாம் எப்படி மேட்டர் செய்தார், அதற்கு எப்படியெல்லாம் சம்மதிக்க வைத்தார், எப்படியெல்லாம் செய்தார் என்பதை கொச்சையான வார்த்தைகளுடன் விவரிப்பார். பிட்டு படம் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் அமைதியுடன் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜமா, அவர் சொல்லி முடித்தவுடன் கேலியாக அவரைக் கலாய்க்க ஆரம்பித்து விடும். அவரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் '...த்தா.. பாடுகளா....உங்களுக்கெல்லாம் பொறாமைடா" என்று சிரித்து விட்டு இன்னொரு கதையை சொல்ல ஆரம்பித்து விடுவார்.

தண்டபாணி அண்ணனுக்கும் எனக்குமான உரையாடல்கள் அமைந்தது மிக சொற்பமே. பெரிதும் தூரத்திலிருந்துதான் அவரைக் கவனிப்பேன். சிறுவர்களுக்கு எப்போதுமே எப்போது பெரியவர்கள் உலகத்திற்கு போய் அவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்ய வேண்டும் என மனம் அரித்துக் கொண்டேயிருக்கும் அல்லவா? அந்த வகையில் எனக்கு பிடித்த ஆளுமையாக தண்டபாணி அண்ணன் இருந்தார். அவர் விவகாரமான கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் போது திண்ணையின் விளிம்பில் அமர்ந்து ரகசியமாக ஆனால் கவனமாக கேட்டுக் கொண்டிருப்பேன். அவர் ஒருமுறை என்னைக் கவனித்து விட்டு "---------- (ஒரு மோசமான கெட்ட வார்த்தை) என்னடா இங்க பாாக்கறே?" என்றார். ஆனால் அந்த வசையால் எனக்கு கோபமே வரவில்லை. ஏனெனில் அவர் அப்படி கேட்டதே ஏதோ ஒரு குழந்தைகயைக் கொஞ்சுவது போல்தான் இருந்தது. ஏன் அவர் முகம்கூட வழக்கம் போல் சிரித்தவாறுதான் இருந்தது. "இல்லண்ணா.. சும்மாதான்.' என்று இழுத்தேன். என் முகத்தில் அப்போது 'படிக்கற பையன்' களை இருந்தது. எனவே என்னிடம் அவர் கொச்சையான வார்த்தைகளை இறைத்து ரொம்பவும் கலாட்டாவெல்லாம் செய்ய மாட்டார். கூட இருப்பவர்களும் அப்படியே. மற்ற பையன்கள் என்றால் கூப்பிட்டு வேண்டுமென்றே அடித்து அனுப்புவார்கள். அப்படியாக தண்டபாணி அண்ணன் கூறிய கதைகளில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு முன் இன்னொரு சம்பவத்தைக் கூறி விட வேண்டும்.

3, மூத்திர சப்த பெண்மணி

திண்ணைதான் என்னுடைய போதிமரம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? ஒரு நடுத்தர வயது பெண்ணை அவர் பிரக்ஞையில்லாமல் அந்த திண்ணையில் படுத்திருக்கும் போது ஆசை தீர தடவிய சம்பவம் அது. இப்போது நினைத்தாலும் குற்றவுணர்வும் வெட்கமுமாகத்தான் இருக்கிறது. என்றாலும் அந்த வயதுக்குரிய பாலியல் தினவுடன் செய்த காரியம் அது. தண்டபாணி அண்ணன் பகல் நேரங்களில் திண்ணையில் புழங்குவதைப் போல இரவு நேரங்களில் இந்த பெண்மணி படுத்திருப்பார். சரத்குமாரை விட அகலமாக இருக்கிற இப்போதைய நமீதா அளவில் ஆஜானுபாகுவாக இருப்பார். ஆனால் ஆள் பார்க்க அத்தனை அழகின்றி அவலட்சணமாகத்தான் இருப்பார். காலை நேரத்தில் சிறுவர்களாகிய நாங்கள் தூக்கக் கலக்கத்துடன் வெளியே வரும் போது ஒரு காட்சியைப் பார்க்க நேரிடும். திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி எழுந்து எதிரேயிருக்கும் காவாயில் சேலையை ஏறக்குறைய தொடை வரை தூக்கிக் கொண்டு நின்றவாக்கிலேயே சளசளவென்ற சப்தத்துடன் மூத்திரம் போவார். அப்போது தெருவில்  நடமாடும் எவரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். நாங்கள் ஒருவித கிளர்ச்சியுடன் இந்தக் காட்சியை மறைமுகமாக பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம். சமயங்களில் நான் கரமைதுனம் செய்தவற்கு இந்தக் காட்சியை நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு. ஆனால் முடித்தபிறகு ஐயோ...இந்த பெண்மணியையா நினைத்துக் கொண்டோம் என்று அருவருப்பாக கூட இருக்கும். மனது இயங்கும் விசித்திரமான நுட்பங்களில் ஒன்று இது. ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் கோயில் குருக்கள், போத்தியிடம் தன்னுடைய ஆசையை சொல்லும் சம்பவம் நினைவுக்கு வருகிறது. உருப்படிகளை பெற்றுப் போடுவதற்கென்றெ வளர்க்கப்படும் மிக அவலட்சமான, விநோதமானதொரு விலங்கு போல இருக்கும் முத்தம்மையுடன் ஒரு நாளாவது படுக்க வேண்டும் என்கிற குருக்களின் நீண்ட கால ஆசையைக் கேட்டு போத்தி திகைத்துப் போய் விடுவார்.

4. பரமசிவ முதலியார்

ஒரு நாள் நண்பர்களுடன் மலையாளப்படம் ஒன்று பார்க்க சென்றிருந்தேன். தம்புராட்டி என்கிற பிரமிளா நடித்த திரைப்படம். தமிழகத்தைப் பொறுத்தவரை மலையாளப்படம் என்றாலே அது மூன்றாந்தர பிட்டுப்படம்தான். சென்னையின் மிகப்பழமையான தியேட்டர் அது. தமிழ்நாட்டின் முதல் டாக்கிஸூம் கூட. கினிமா சென்ட்ரல் என்ற அந்த அரங்கில்தான் இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா திரையிடப்பட்டது. போலவே தமிழின் முதல் பேசும்படமான 'காளிதாஸூம்'. சினிமாவில் ஆர்வமுடைய முருகேச முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. அவரது மறைவிற்குப் பின் அவரது மகனான பரமசிவ முதலியார் நிர்வாகத்தை மேற்கொண்டார். தியேட்டரின் பெயரையும் 'முருகன் டாக்கீஸ்' என மாற்றினார். எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களாக திரையிட்டார். ஏறக்குறைய அனைத்துமே நூறு நாட்களுக்கும் மேல் ஓடியது. அரங்கம் முழுவதிலும்  பரமசிவ முதலியார் தமிழக நடிக, நடிகையர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும். படம் ஆரம்பிக்கும் வரை அவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பார்வையாளர்களின் வழக்கம். (மஞ்சுளாவோட முலையைப் பாருடா.) பெரும்பாலும் அவைகளில் எம்.ஜி.ஆர்தான் இருப்பார். ஆனால் எம்.ஜி.ஆர் முதல்வரான பின் அவரது படங்களின் மறுவெளியீடுகளும் ஓய்ந்து போய் தியேட்டர் நொடிந்து போன நிலையில் மலையாளப் படங்களாக போட ஆரம்பித்தார் முதலியார்.

பெரும்பாலும் பிரமீளா.. தீபா போன்றவர்கள் நடித்த மசாலாப் படங்கள். இடையில் மூன்று நிமிடம் ஏதாவது பிட்டு படம் ஓடும். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த கூட்டம்  இந்தக் காட்சிகளை வாய் பிளந்து பார்த்து முடிந்ததும் பரபரவென வெளியேறி விடும். இத்தனைக்கும் அதில் உடலுறுவுக் காட்சிகள் கூட காட்டப்படாது. மாமிச மலை மாதிரியிருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி தொங்கியிருக்கும் மார்பகங்கள் குலுங்க..உடம்பை செயற்கையாக தேய்த்து தேய்த்து குளிக்கும் காட்சிகள் மட்டும்தான். சமயங்களில் முகம் கூட தெரியாது. இடுப்பிற்கு கீழ் கேமிரா நகரும் போது சட்டென்று வெட்டப்பட்டு அதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரிஜினல் திரைப்படம் காட்டப்படும். சில மலையாளத்திரைப்படங்களில் இவ்வாறு தனியாக இணைக்கப்பட தேவையின்றி ஒரிஜினல்களிலேயே இது போன்ற  காட்சிகள் இருக்கும்.  கொலைவெறியுடன் இந்தக் காட்சிகளுக்காக பொறுமையாக காத்திருக்கும் கூட்டம் ஒருவேளை இந்த பிட்டு சீன்கள் ஒளிபரப்பாவிட்டால் வெறுப்படைந்து சேர்களை போட்டு டம்டம் என்று அடித்து உடைத்து விட்டு எரிச்சலுடன் வெளியேறுவார்கள். இந்த பிட்டு சீன்கள் விஷயத்தில் ஒரு சங்கேத முறையும் இருந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம். அதாவது பரமசிவ முதலியார் திரையரங்கத்தின் வாசலில் சேர் போட்டு அமர்ந்திருந்தால் நிச்சயம் அன்று பிட்டு சீன்கள் உண்டு. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. காவல்துறையினர் வந்தால் அவர் சமாளித்துக் கொள்வார் போல.  எனவே அவர் இருந்தால் எங்களுக்கு கொண்டாட்டமாகி மகிழ்வுடன் டிக்கெட் எடுப்போம்.

(இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் ஆபாச வார்த்தைகளை, சம்பவங்களை வாசிக்க விரும்பாத நண்பர்களை விலகச் சொல்லியிருந்தேன். அதுவொரு காரணத்திற்காகத்தான். அதனால்தான் இதில் 'என்னமோ மேட்டர் இருக்கிறது போல' என்று நீங்கள் இந்த இடம் வரை வந்திருக்கிறீர்கள். நல்லது. வாருங்கள் தொடர்வோம்.)

5. திண்ணையில் ஒரு சல்லாபம்

படம் பார்க்கப் போயிருந்தேன் அல்லவா? அன்றைய நாள் சோதனை நாளாக அமைந்து பிட்டு சீன்கள் எதுவும் காணாமல் அந்த திரைப்படத்தை பரிந்துரைத்த நண்பனை திட்டி விட்டு வெறுப்புடன் வீடு திரும்பினேன். இரவு மணி 12 -க்கு மேல் இருக்கலாம். பத்து மணியானவுடன் வீட்டின் பிரதான கதவு அடைக்கப்படும். ஒரு நல்ல ஆசாரியால் செதுக்கப்பட்டு நல்ல வளைவு வேலைகளுடன் உருவான மரக்கதவு அது. வெளியில் உள்ள கைப்பிடியை பலமாக தட்டினால் யாராவது எரிச்சலுடன் எழுந்து வந்து கதவைத் திறப்பார்கள். சிலர் திட்டுவதும் உண்டு. இரும்பு கைப்பிடியை பலமாகத் தட்டியும் எவரும் திறக்காததால் என்ன செய்வது என்கிற யோசனையுடன் திண்ணையில் அமர்ந்தேன். அப்போதுதான் திண்ணையின் மூலையிருட்டில் குறட்டைவிட்டு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த, தெருவில் மூத்திரம் போகும் அந்த பெண்மணியைப் பார்த்தேன். எந்தச் சொரணையுமின்றி குடித்து விட்டு தூங்குகிறார் என்று நன்றாகத் தெரிந்தது. குறுகுறுப்புடன் சுற்றியும் பார்த்தேன். ஒரு ஈ காக்கா இல்லை. நழுவிச் சென்று அந்த பெண்மணியின் அருகில்  பார்த்தேன். சேலை ஏறக்குறைய முழங்காலுக்கு மேல் ஏறி தென்னை மரம் போலிருந்த கால்கள் விரிந்து கிடந்தன. ஏதோ அழைப்பிற்கான சங்கேதம் போலவே இருந்தது. பயந்து கொண்டே கால்களின் மீது கை வைத்துப் பார்த்தேன். சொர சொரவென்று பாறாங்கல்லின் மீது கை வைத்தது போலவே இருந்தது. பயமாகவும் இருந்தது. ஆர்வமாகவும் இருந்தது. மறுபடியும் சுற்றி பார்த்து விட்டு தொடைகளில் முன்னேறினேன். கொச கொசவென்று கையில் பட்டது பணியாரம்தான் என்று நினைக்கிறேன். படுத்திருந்த உடலில் இருந்து அசைவு வரவே சட்டென்று ஒதுங்கினேன். சிறிது நேரம் கழித்து மறுபடியும் பணியாரத்தை தடவினேன். அசைவு ஏதும் இல்லாததால் இன்னும் தைரியம் பெற்று முலைகளை அமுக்கி பிடித்தேன். இருந்த வெறியில் அப்படியே மேலே ஏறி படுத்து மேட்டர் செய்ய வேண்டும் போல இருந்தது. ஆனால் அந்த பெண்மணி கண்விழித்து ஊரைக் கூட்டினால் என்ன செய்வது என்று பயமாகவும் இருந்தது. அவர் ஊரைக் கூட கூட்ட வேண்டியதில்லை, பூஞ்சை மாதிரியிருந்த என்னை ஒற்றைக் கையால்  பிடித்து அறைந்தால் கூட எனக்கு காது செவிடாகும் போல. அத்தனை ஆஜானுபாகுவான பெண்மணி. எனவே என் திருவிளையாடலை அத்துடன் நிறுத்தி விட்டு அருகிலிருந்த பூங்கா ஒன்றிற்கு சென்று படுத்துக் கொண்டேன். இன்னொன்று, ஒருவேளை போதையிலேயே அந்தப் பெண்மணி என்னை அனுமதித்திருந்தால் கூட எப்படி கச்சிதமான போஸில் மேட்டர் செய்வது என்று தெரிந்திருக்காது. திணறியிருப்பேன். இன்னொரு சமயத்தில்தான் இந்த உண்மையை நான் புரிந்து கொண்டேன்.

6. பீ சந்தில் ஓர் உடலுறவு

தண்டபாணி அண்ணன் சொன்ன விவகார கதைகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கதை என்னவென்று பார்ப்போம்.

சேரி அமைந்திருந்த பெரும்பாலான வீடுகளில் (குடிசைகள்) கழிவறை வசதி இருக்காது. குளிப்பது முதற்கொண்டு எதுவாக இருந்தாலும் மறைவாக தெருக்களில்தான் முடித்துக் கொள்ள வேண்டும். எனவே வெளிச்சம் வருவதற்கு முன்பு பெண்கள் மல,ஜல விஷயங்களை முடித்துக் கொள்வார்கள். நீர் வரும் பம்பு வேறு எங்களுடைய வீட்டிற்கு எதிரேயே இருந்தது. தண்ணீர் பிடிப்பதற்காக ஏற்படும் சண்டைகளில் இறைபடும் வசவுகள் இருக்கிறதே..சமயங்களில் காது கொடுத்து கேட்க முடியாது. பெண்கள் கூட தங்களுக்கு ஆணுறுப்பு இருப்பதான பாவனையில் பரஸ்பரம் திட்டிக் கொள்வார்கள். நாங்கள் கிளுகிளுப்பாக அந்த வசைகளை கேட்டு அனுபவிப்போம். இப்படியாக அதிகாலையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை எங்கள் வீட்டிலிருந்த கிழவர் ஒருவர் மறைந்திருந்து சன்னல் வழியாக தினமும் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து விட்டு அந்தப் பெண்கள் சண்டைக்கு வந்தார்கள். வேடிக்கை பார்த்த பெரிசு சும்மா பார்க்காமல் சுருட்டு ஒன்றை புகைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தது போல. இருட்டில் ஒளிர்ந்த இந்த வெளிச்சப்புள்ளியை வைத்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இருட்டில் சரி, பகல் வேளையில் மல, ஜலத்திற்கு என்ன செய்வார்கள்? அதற்காகவே இயற்கையாய் அமைந்தது பீ சந்து. சிறியதாய் அமைந்திருந்த சந்தில் எந்தவொரு வீட்டின் நுழைவு வழியும் இருக்காது. எனவே மலம் கழிக்கிறவர்களுக்கு இந்த சந்து வசதியாய் போயிற்று. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு போல விதவிதமான நிறங்களில் கூடிய மலங்கள் இரண்டு பக்கங்களிலும் நிறைந்திருக்கும். எனவே இந்தச் சந்திற்கு பீ சந்து என்று பெயர் வந்திருக்க வேண்டும். பொதுவாக யாரும் இந்த வழியைப் பயன்படுத்த மாட்டார்கள். அப்படியே அவசரத்திற்கு (இது வேறு அவசரம்) யாராவது போனால் குத்த வைத்து அமர்ந்திருக்கும் பெண்கள் சலித்துக் கொண்டே சற்று நேரம் எழுந்து நின்று கொள்வார்கள். இது குறித்து வசவு கூட ஒன்று உண்டு. 'உன் மூஞ்சைப் பார்த்தா பேல்றவ கூட எழுந்திருக்க மாட்டா' என்பது அது. ஒரு ஆள் மொக்கையாக இருந்தால் 'இவனுக்குப் போய் எழுந்திருக்க வேண்டுமா?' என்று மலம் கழிக்கிற பெண்கள் கூட எழுந்து கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள் என்பது இதன் உட்பொருள். இப்படி மலம் கழிக்கிற பெண்களைக் கூட ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கிறவர்களும் உண்டு.

இப்படியான பீசந்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட கதையைத்தான் தண்டபாணி அண்ணன் சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் தண்டபாணியின் உறவு போல. எப்படியோ அவளைச் சம்மதிக்க வைத்து அழைத்து வந்து விட்டார். ஆனால் ஆள் மறைவான தோதுவான இடம் எதுவும் தென்படவில்லை. எனவே அருகிலிருந்த பீ சந்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மாலை முடிந்து இருட்டத்துவங்கியிருக்கும் அந்த நேரத்தில் எவரும் அங்கு மலம் கழிக்க வந்திருக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஒரே அருவருப்பு. பின்னே.. சுற்றியும் மலம் நிறைந்திருக்கும் ஒரு இடத்திலா உறவு கொள்ள முடியும்,? இருந்தாலும் தண்டபாணி அண்ணன் எப்படியோ நைச்சியமாக பேசி எங்கெங்கோ முத்தமிட்டு அந்தப் பெண்ணை சுவற்றில் சாய்த்து பாவாடையோடு சேலையைத் தூக்கி மேட்டர் செய்ய முயன்றிருக்கிறார். இந்த சிக்கலான போஸில் பெண்ணுடைய முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் உறவு கொள்ள முடியாது. நல்ல வசதியான கோணத்தில் நின்றால்தான் செய்ய முடியும். இதையும் நான் பின்னர் ஒரு சமயத்தில்தான் அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டேன். ஆங்கில நீலப்படங்களில் எல்லாம் எத்தனையோ வசதியான இடமிருந்தாலும் ஏன் இப்படி சிக்கலான இடங்களில் சிக்கலான கோணங்களில் சிரமப்பட்டு உறவு கொள்கிறார்கள் (காலில் செருப்பு மாத்திரம் இருக்கும் - ஏன்?) என்று ஆச்சரியமாக இருக்கும். அந்தப் பெண்ணும் உணாச்சி மிகுதியில் தண்டபாணி அண்ணனுக்கு ஒத்துழைப்பு கொண்டிருந்த போதுதான் அந்த இடையூறு நிகழ்ந்தது.

மலம் கழிப்பதற்காகவோ அல்லது வேறு அவசரத்திற்காகவோ ஒரு பெண்மணி அந்த வழியாக வந்திருக்கிறார். தண்டபாணி அண்ணன் கண்களை மூடி இயங்கிக் கொண்டிருந்தார். ஒத்துழைத்துக் கொண்டிருந்த பெண்ணும் அதே பரவச நிலையில் இருந்தாலும் யாராவது வருகிறார்களா என்றும் கவனித்துக் கொண்டிருந்தது போல. பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வு மிக அதிகம். வருகிற இந்தப் பெண்மணியை பார்த்து விட்டது. உடனே தண்டபாணி அண்ணனை தள்ள முயன்றிருக்கிறது. ஆனால் அவரோ அதை பொருட்படுத்தாமல் தன் காரியத்திலேயே கண்ணாக இருந்திருக்கிறார். ஆனால் அந்தப் பெண் இவரை வலுவாக தள்ளி விட்டு ஓடிவிட்டது. நீட்டிக் கொண்டிருக்கும் குறியுடன் இவர் கழுதை மாதிரி நின்று கொண்டிருந்தாராம். தண்டபாணி அண்ணன் இதைச்  சொல்லி முடித்ததும் சுற்றியிருந்த ஜமா வழக்கம் போல அவரை வெறுப்பேற்றுவது போல் சிரித்து தள்ளியது. ஆனால் கதை அத்தோடு முடியவில்லையாம். பீ சந்தில் ஒரு பெண்மணி கடந்து சென்றார் அல்லவா? நீட்டிக் கொண்டிருந்த இவரது குறியைப் பார்தத மயக்கத்திலோ என்னவோ, போனவர் திரும்பி வந்து தண்டபாணி அண்ணன் அருகில் நின்றாராம். அப்புறம் என்ன, பாதியில் நின்று போன வேலையை அந்தப் பெண்ணோடு உற்சாமாக செய்து முடித்தாராம். இப்போது உரக்க சிரித்தது தண்டபாணி அண்ணனின் முறையாக இருந்தது. சுற்றியிருந்தவர்களின் சிரிப்பில் சுருதி சற்று இறங்கி இருந்தது.

இந்தக் கதைகளையெல்லாம் உண்மையில் நீங்களெல்லாம் தண்டபாணி அண்ணன் வாயால் சொல்லித்தான் கேட்க வேண்டும். கொச்சையான, ஆபாசமான வார்த்தைகளுடன் அத்தனை சுவாரசியமாக இருக்கும். இப்போதெல்லாம் போன் செக்ஸ் என்றலெ்லாம் சொல்கிறார்கள் அல்லவா? அது கூட இந்த சுவாரசியத்திற்கு முன்பு தோற்றுப் போய் விடும். என் எழுத்தில் கூட அந்த சுவாரசியத்தின் ஒருபகுதி  குறைந்து விடுகிறது. இந்தக் கதைகளில் எத்தனை சதவீதம் உண்மை என்பதெல்லாம் தெரியாது. கேட்கும் அனைவருக்குமே இந்த சந்தேகம் வந்திருக்கலாம். என்றாலும் கதை கேட்கும் சமயத்தில் நமக்கு இந்த தர்க்கமெல்லாம் தோன்றவே தோன்றாது. அத்தனை சுவாரசியமாக இருக்கும். தண்டபாணி அண்ணன் ஊர்த்தலைவரின் பெண்ணொருவரை காதலித்திருக்கிறார். பீ சந்து சம்பவம் மாதிரியல்லாமல் உண்மையான காதல். இது அரசல் புரசலாக எல்லோருக்கும் தெரியும். ஒரு நாள் நாலைந்து ரவுடிகள் சேர்ந்து திண்ணையில் அமாந்திருந்தவரை இழுத்து பட்டாக்கத்தியால் கண்டம் கண்டமாக வெட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ளவர்கள் எவரும் பயத்தில் தடுக்கவில்லை. நான் பள்ளி முடிந்து மாலையில் வந்து போதுதான் இந்த கலாட்டாவே தெரிந்தது. ரொம்பவும் திகைப்பாக இருந்தது. ஆனால் பத்திரிகைகளில் இது பற்றிய செய்தி வரும் போது இந்த காதல் சமாச்சாரமெல்லாம் வரவேயில்லை. ஏதோ சில்லறைத் தகராறில் உணர்ச்சிவசப்பட்டு இந்தக் கொலை நடந்ததாக பதிவாகி இருந்தது. தங்களின்செல்வாக்கை உபயோகித்து மறைத்து விட்டார்கள்.

தண்டபாணி அண்ணன் திண்ணையில் ஒரு நாள் தனியாக அமர்ந்திருந்த போது என்னை அழைத்தார். கஞ்சா மயக்கத்தில் கண்கள் சொருகியிருந்தன. நான் என்ன படிக்கிறேன் என்பதையெல்லாம் விசாரித்து விட்டு 'நல்லாப் படிக்கணும்டா. அதுதான் உன்னை கடைசி வரைக்கும் காப்பாத்தும்" என்ற மாதிரி ஏதோ சொன்னார். அவர் மனதில் அப்போது என்ன இருந்தது என்பதை உணராமல் நான் திகைத்து நின்ற சமயம் அது. அப்போது வேறு மாதிரியான நபராக தெரிந்தார். நீண்ட காலத்திற்கு அந்த உரையாடலை நினைவில் வைத்திருந்தேன். என்னை நான் உருவாக்கியதில் தண்டபாணி அண்ணனின் ஆளுமையும் ஒருபகுதியாக கலந்திருந்தது என்பதை பிற்பாடு உணர்ந்து கொண்டேன். எத்தனை துயரங்கள் இடையூறு செய்தால் சிறு சிறு மகிழ்ச்சிகளின் மூலம் - அவை நிலையற்ற பொய்யானதாக இருந்தாலும் -  வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பதை தண்டபாணியின் செயல்கள் சொல்லாமல் சொல்லிச் சென்றன.


ஆட்டோ பிக்ஷன் என்கிற அற்புதமும் அபத்தமும்

மேற்கண்ட பகுதிகளை வாசித்து விட்டீர்கள் அல்லவா? இதில் எத்தனை சதவீதம் உண்மை அல்லது பொய் என்று உங்களால் சொல்ல முடியுமா? தண்டபாணி அண்ணன் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தார் என்று கருதுகிறீர்களா அல்லது எழுதியவரின் கற்பனையா? இதில் நான்.. நான்.. என்று எழுதியிருப்பதை இந்தக் கட்டுரையை எழுதியிருப்பவராக கருதிக் கொண்டீர்களா அல்லது அதையும் புனைவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டீர்களா?

இப்போது உருவாகி வரும் புனைவுகளில், புனைவுக்கும் அபுனைவுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. ஏறக்குறைய அருகி விட்டது என்று கூட சொல்லலாம். முன்பெல்லாம் ஒரு சிறுகதை என்றால் சுவாரசியமான துவக்கம், அதை வளர்த்தெடுக்கும் நடுப்பகுதி, சுவாரசியத்தை நோக்கி விரையும் இறுதிப்பகுதி, கடைசி வாக்கியத்தின் முற்றுப் புள்ளிக்கு முன்னால் ஓர் அதிர்ச்சிகரமான திருப்பம் என்றொரு வடிவம் இருந்ததல்லவா? அந்த வடிவமெல்லாம் இப்போது காலாவதியாகி விட்டது. உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கியமான, உணர்ச்சிகரமான சம்பவத்தை தன்வரலாற்று தொனியிலேயே எழுதி முடிக்கலாம். ஆனால் அது புனைவின் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அதிலுள்ள சவால்.

Auto Fiction என்கிற புனைவிலக்கிய வகைமை, கலைகளைக் கொண்டாடுகிற ஆராதிக்கிற பிரான்சு தேசத்தில் தோன்றியது. செர்ஜ் துப்ரோவ்ஸ்கி எழுதிய Flis என்கிற நாவலே இதன் துவக்கம்.  இதன் அடையாளங்களாக நான் அவதானித்தவைகள்: தன்வரலாற்றையும் புனைவையும் ஒரு சரியான கலவையில் உருவாக்க வேண்டும். தன்னையே மூன்றாம் நபராக சித்தரிக்க வேண்டும்  நிஜத்திற்கும் புனைவிற்குமான சம்பவங்களையும் தகவல்களையும் முரண்களையும் மாற்றி மாற்றி கலைத்துப் போட வேண்டும். இதுவொரு சுவாரசியமான புனைவு விளையாட்டு. எது புனைவு எது நிஜம் என்கிற மயக்கத்தை வாசகனுக்கு ஏற்படுத்துவது. ஆனால் இந்த தொகுப்பின் வடிவம் உதிரி உதிரியாக அமைந்திருந்தாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மையச்சரடோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


புதிய எக்ஸைல் - இப்போது புத்தம் புது பாக்கிங்கில் கிடைக்கிறது.

நாவல் மீதான விமர்சனம் -1 

சாரு நிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்' நாவலை அது வெளியான  புதிதிலேயே  வாசித்திருக்கிறேன். 'தமிழின் நவீன இலக்கியத்தின் புதிய போக்குகளில் புது வெள்ளம் போன்று பல படைப்புகள் வந்தாலும் பழுப்பான நிறங்களில் சில வஸ்துகள் அதில் மிதந்து செல்கின்றன' என்று இந்த நாவலை கணையாழியின் கடைசிப் பக்கங்களில் முகச்சுளிப்புடன் அறிமுகப்படுத்தியிருந்தார் சுஜாதா. உடனே இதன் மீது ஆர்வம் கொண்டு வாசித்துப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் எழுத்தில் புழங்கி வந்த அதுவரையான பாசாங்குகளை அதிரடியாக விலக்கி பயணித்திருந்தது இந்த நாவல். பாலுறவும் அது சார்ந்த எண்ணங்களும் விகாரங்களும் செயல்களும் அசூயையுடன் ஒதுக்கி வைக்கப்பட வேண்டியதில்லை. அவையும் நம்மின் ஒரு பகுதிதான். அவைகளை ஒதுக்கி வைப்பதென்பது நம்மையே நாம் நாடகத்தனத்துடன் ஒதுக்கி வைப்பதற்கு சமமானது. காமம் என்பது மறைத்து ஒளித்து வைக்கப்பட வேண்டியது ஒன்றல்ல, மாறாக அது கொண்டாடப்பட வேண்டியது என்பதையே சாருவின் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருந்தன. தன்வரலாற்று நினைவுகளுடன் எழுதப்பட்டிருந்த அந்த நாவல் மிக யோக்கியமான அப்பட்டமான தன்மையைக் கொண்டிருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு சாருவால் எழுதப்படும் நாவல்களில் (பழைய எக்ஸைல் உட்பட நான் சிலவற்றை வாசித்ததில்லை) மீண்டும் மீண்டும் இந்த நினைவுகளே வேறு வேறு வார்த்தைகளில் மீள்கூறல் தன்மையைக் கொண்டிருக்கிறதோ என்றெழும் எண்ணத்தை 'புதிய எக்ஸைல்' மிக வலுவாக உறுதிப்படுத்தியிருக்கிறது. சாருவின் முந்தைய நாவல்களையும் அவரது இணையத் தள பதிவுகளையும் தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இந்த நாவலில் சில இடங்களில் சலிப்பு வரலாம். முந்தைய நாவல்களிலும் இணையத்ளத்தில் விவரித்த சம்பவங்களையும் சர்ச்சைகளையும் அனுபவங்களையும் சில சித்தர் பாடல்களையும் புராணக்கதைகளையும் சில மளிகை சாமான் பட்டியல்களையும் தூவி இறக்க வைத்து விட்ட பண்டம் போலிருக்கிறது புதிய எக்ஸைல். பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விற்பனைப் பொருட்களை வேறு வேறு கவாச்சியான வண்ணங்களில் பாக்கிங்குகளில் பல்வேறு விளம்பரங்களின் மூலம் விற்கும் வணிகத் தந்திரத்தையே இந்த நாவலும் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. சாருவால் தன்னுடைய சுயஅனுபவங்களில் இருந்து முற்றிலுமாக விலகி கூடு பாய்ந்து இன்னொரு வேறுவிதமான உலகத்தை, எழுத்தை உருவாக்கும் நாவலாசிரியராக மேலெழ முடியாது என்பதாகவும் தோன்றுகிறது. கொக்கரக்கோவின் மூலமும் சமயங்களில் உதயாவின் மூலமும் இது குறித்த சுயபகடிகளையும் இந்த நாவல் கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் ஒரே யோக்கியமான விஷயம்.

இந்த நாவல் முழுக்க பெரிதும் மனிதர்களே கிடையாது. மரங்களையும் தாவரங்களையும் விலங்குகளையும் பற்றிய தகவல்களால் நிரம்பியது என்று இந்த நாவல் வெளிவருவதற்கு முன்பாக  சாரு ஒரு முறை எழுதியதாக ஞாபகம். ஆனால் அப்படியொரு சுக்கும் கிடையாது. அவர் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்களைப் பற்றிய தகவல்கள் தவிர தெருவில் வளரும் ஒரு நாயைப் பற்றிய தகவல்களால் துவக்க அத்தியாயங்கள் நகர்கின்றன. சம்பிரதாயத்திற்கு மரங்களைப் பற்றின தாவரவியல் பெயர்கள். அவ்வளவுதான்.

விளிம்புநிலை சமூகத்தில் பிறந்து வந்திருந்தாலும் தற்போது மதுவகை முதற்கொண்டு விலையுயர்வான பொருட்களை மாத்திரமே நாடும் சாருவின் இயல்பையே அவரது பிராணிகளும் கொண்டிருப்பது ஆச்சரியமான தற்செயல். ஏன் அவர் போஷிக்கும் தெருநாய் கூட விலையுயர்ந்த பிஸ்கெட்டை மாத்திரம்தான் சாப்பிடுகிறது.

இந்த நாவலில் உதயா என்ற எழுத்தாளன் அஞ்சலி என்கிற பெண்ணோடு கொள்கிற கலவியைப் பற்றிய விதவிதமான குறிப்புகள் வருகின்றன. கொக்கரக்கோ இந்த நாவலின் இடையில் விமர்சிப்பதைப் போன்று அஞ்சலியின் மீதான செயற்கையான  சோகக்கதைகள் பல இதில் நீளும் போது, கலவிக் குறிப்புகளை சுவாரசியமாக அனுபவிப்பதற்கு  இந்த சோகக்கதைகளே தடையாய் இருக்கின்றன. ஒரு திரைப்படத்தில் ரகளையானதொரு உடலுறவுக் காட்சி முடிந்தவுடன் அதே நடிகையே அடுத்த காட்சியில் தொலைக்காட்சி சீரியலில் வருவது போல் மூசுமூசுவென்று மூக்கைச் சிந்தி அழுது கொண்டிருந்தால் பார்வையாளர்களுக்கு எப்படியிருக்கும்?

அஞ்சலியாவது தன்னுடைய வாழ்நாள் துயரங்களையெல்லாம் உதயாவின் மூலம் கிடைக்கும் விதவிதமான கலவியின்பத்தின் மூலம் கடக்கிறாள். ஆனால் பாலியல் தொழிலாளிகளைப் பற்றி எழுதும் போது கூட அந்தக் கவர்ச்சிகளின் பின்னுள்ள கண்ணீரின் மீதான கரிசனம் எழுத்தாளருக்கு ஏற்படவே இல்லை. அதிலும் உதயாவின் நண்பனான கொக்கரக்கோ இன்னமும் மோசம்.  உடனே லீக் ஆகி விடாமல்  எப்படியெல்லாம் பாலியல் தொழிலாளிகளுடான நேரத்தை முழுமையாக உபயோகப்படுத்துவது என்று வகுப்பே எடுக்கிறான். இது மாத்திரமல்ல, பொதுவாகவே ஆசிரியரின் கண்ணோட்டம் தன்னுடைய செளகரியங்களை மாத்திரமே கவனிக்கிற தன்னுடைய கொண்டாட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்துகிற அப்பட்டமான சுயநலத்தன்மையைக் கொண்டிருக்கிறது. வீட்டு வாசலில் குப்பை பெருக்கும் தொழிலாளர்களுக்கு மனைவி தரும் பணத்தைக் கூட கண்டிக்கிறான். (

(ஏனய்யா, நீர் ரெமி மார்ட்டின் அடிக்க இணையத்தில் காசு கேட்பது தவறில்லை எனும் போது அவர்கள் ஓல்ட் மாங்க் அடிக்க காசு அடிக்கக்கூடாதா? என்ன நியாயம் இது? அவர்களாவது சமூகத்தில் குப்பைகளை நீக்குபவர்கள். நீர் எழுத்தின் மூலம் குப்பையை சேர்க்கும் ஆசாமிதானே? - கும்மாங்கோ)

எக்ஸைல் என்றொரு தலைப்பை இந்த நாவலுக்கு  எப்படி ஆசிரியர் பொருத்துகிறார் என்பதே புரியவில்லை. அடக்குமுறை கொண்டதொரு பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் சூழலை எதிர்கொள்ளும் ஆபத்தானதொரு சூழலையா எழுத்தாளர் எதிர்கொள்கிறார்? எனில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போன்ற தலைமறைவு எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை என்னவென்று கூறிக்கொள்வார்கள்? சில ஆயிரம் ரூபாய் சம்பாத்தியங்களுக்காக அந்நிய தேசங்களில் குப்பையள்ளுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்து ஒப்பந்தங்களின் மூலம் மாட்டிக் கொண்டு மாட்டுக்கொட்டகை போன்ற இடங்களில்  துன்புறும் தொழிலாளத் தோழர்களை என்னவென்று அழைப்பது?

இந்த நாவலை முடித்து வைக்க அதன் இறுதியில் நாவலாசிரியர் அல்லாடுவதைப் போலவே 'இந்த ராமாயணம் எப்போதடா முடியும்?' என்று வாசகனையும் அல்லாட வைத்திருப்பதை ஆசிரியரின் நுட்பமான திறமைகளுள் ஒன்றாக சொல்ல வேண்டும்.

இலக்கியம் என்பது காலத்தையும் கடந்து நிற்கும் சாஸ்வதத்தை கொண்டது என்கிறார்கள் அல்லவா? அந்த வகையில் இந்த நாவலை காலங்கடந்து நினைவு கூர்வார்களா என்பது சந்தேகமே. இப்படியாக இந்த நாவலின் மீது புகார்களை வைக்க முடியும் என்றாலும் சில குறிப்பிட்ட தன்மைகளின்படியும் கூறுகளின் படியும் இது சமகாலத்தில் நிராகரிக்க முடியாத தன்மையையும் கொண்டிருக்கிறது.

நாவல் மீதான விமர்சனம் -2 (வேறு கிளைமாக்ஸ்)

ஆனால் ஒன்றை முக்கியமாக சொல்லியேயாக வேண்டும். அது சாருவின் சுவாரசியமான எழுத்து. பெரும்பாலும் ஏற்கெனவே அறிந்த தகவல்களால் நிரம்பியிருந்தாலும் இந்த 867 பக்கமுள்ள நூலை மீண்டும் தொடர்ந்து வாசிக்க முடிகிற கொண்டாட்ட அனுபவத்தை தருகிறது இந்த நூல். கடகடவென்றும் வாசித்து தீர்க்கலாம். மதுக்கோப்பையை உறிஞ்சுவது போலநிதானமாகவும் வாசிக்கலாம். கடந்த ஆறு நாட்களிலேயே இந்த தலையணையை நான் வாசித்து தீர்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவரே அடிக்கடி குறிப்பிடுவது போல சாருவை மிக காட்டமாக விமர்சிக்கும் சக எழுத்தாளர்கள் கூட சாருவின் எழுத்திலுள்ள போதையை ஒப்புக் கொள்வார்கள். தமிழின் மிக முக்கியமான அறிவுஜீவி  எழுத்தாளர்கள் கூட அவரைத் தொடர்ந்து  ரகசியமாக வாசிக்கிறார்கள் என்பது சமயங்களில் அவர்கள் உடனுக்குடன் கோபமாக எழுதுகிற எதிர்வினைகளின் மூலம் தெரிகிறது. இதைவிட சாருவுடைய எழுத்தின் சுவாரசியத்திற்கு வேறு ஆதாரம் இருக்க முடியாது.

சாருவின் எழுத்தில் பொதுவாக என்னைக் மிகவும் கவர்ந்ததொரு விஷயமும் அதிகம் உடன்படும் விஷயமும் நுண்ணுணர்வுத் தன்மை பற்றியது. உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்று புதுமைப்பித்தன் கிண்டலடித்தைப்  போன்று தன்னுடைய தொன்மையின் நாகரிகத்தை வெற்றுப் பெருமையுடன் சொல்லித் திரிகிற தமிழ் சமூகம் இத்தனை வருடங்களாகியும் கூட சில அடிப்படை விஷயங்களிலாவது நாகரிகத்தைப் பின்பற்றுகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. கல்வியறிவு சதவீதம் உயர்ந்திருந்தாலும் கூட சில அடிப்படை அராஜகங்களை செய்வதில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. சாலையின் கண்ட இடங்களில் குப்பையைப் போடுவது, பின்னால் வருபவர் பற்றி கவலையில்லாமல் கண்ட இடத்தில் துப்புவது (அதிலும் இந்த பான்பராக் என்கிற விஷயம் உள்ளே நுழைந்த விட்ட பிறகு முந்தைய காலங்களில் வெற்றிலை போட்டு துப்புபவர்களை விட இவர்களின் அராஜகம் அதிகமாகி விட்டது) சினிமா போன்ற பொது நிகழ்ச்சிகளில் அடித்துப்பிடித்து நுழைவது, பிறகு எதற்காகவோ அது முடிந்த பிறகு அதே வேகத்தில் வெளியேறுவது என்று மிகப் பெரிய பட்டியலையே போடலாம். அந்நியராக இருந்தாலும் எதிரே கடந்து செல்கிற ஒரு சக மனிதனின் முகத்தைப் பார்த்து புன்னகையைக் கூட சிந்தாத சிடுமூஞ்சி சமூகம்.

எதிரேயிருக்கிறவன் அருவருக்காத வகையில் தயிர் சாதம் என்கிற வஸ்துவை சாப்பிடுகிற ஒரு தமிழனை இதுவரையில் நான் கண்டதில்லை. நான் தினமும் சாப்பிடும் ஹோட்டலில் தினமும் இந்த அவஸ்தையை அனுபவிக்கிறேன். சோற்றின் மீது தயிரை அப்படியே ஊற்றி பிசைந்து பிசைந்து விநோத கலவையாக்கி கையில் வழிய  சர் சர் என்ற சப்தத்துடன் எதிரேயுள்ள நபர் உறிஞ்சுவதைப் பார்க்கும் போது எனக்கு ஏறக்குறைய வாந்தியே வந்து விடும். இதற்காகவே நான் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விடுவேன் இது ஒரு உதாரணம்தான்.  இன்னும் பல ரகளையான விஷயங்கள் இருக்கின்றன. இதற்காகவே எதிரேயிருப்பவரின் முகத்தை பார்க்காமலேயே தலையைக் குனிந்து சாப்பிட்டு விரைவில் வெளியே வந்து விடுவேன்.

இத்தனை வருடங்களைக் கடந்தும் சிலஅடிப்படையான  விஷயங்களில் நாம் இன்னமும் கற்கால பழங்குடி மனநிலையைக் கொண்டிருக்கிறோமே என்று ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது. இயற்கையோடு இயைந்து வாழ்கிற பழங்குடிகளின் கலாசாரத்தில் மாத்திரம் நாம் எதிர்திசையில் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஐரோப்பியர்களின் நாகரிகங்களில் இருந்து, அதன் கலாசாரங்களில் இருந்து ஏறத்தாழ நூறு வருடங்கள் பின்தங்கியிருக்கிறோம். இது போன்ற விமர்சனங்களை 'மேட்டிமைத்தனம்' என்று புறக்கணித்து நம் தவறுகளை நியாயப்படுத்துவது முறையானது அல்ல. இப்படியாக ஒரு சமூகத்தின் நுண்ணுணர்வற்ற தன்மையைப் பற்றி சாருவின் எழுத்து சுட்டிக்காட்டியபடியே இருக்கிறது. நாம் எத்தனை மோசமான கலாசார பலவீனங்களைக் கொண்டிருக்கிறோம் என்பது அவர் சுட்டிக்காட்டும் போதுதான் இன்னமும் அழுத்தமாக உறைக்கிறது.

இந்த நாவலில் தான் கண்டதொரு சம்பவத்தை பற்றி குறிப்பிடுகிறார் நுலாசிரியர். அவர் ஒரு ஹோட்டலில் அமர்ந்திருக்கும போது எதிரே உள்ள நாற்காலியில் ஒரு பெரியவர் வந்து அமர்கிறார்.. வெயிலில் வந்த களைப்புடனும் சோர்வுடன் கடந்து செல்லும் ஒரு ஹோட்டல் பையனை நோக்கி 'கொஞ்சம் தண்ணி கொடப்பா' என்கிறார். அவனோ 'இந்த டேபிள் நான் பாக்கறது இல்ல' என்று அலட்சியமாக சொல்லிக் கொண்டே போய் விடுகிறான். இதுவோர் உதாரணம்தான். நகரப் பேருந்துகளில் ஓட்டுநர்களாலும் நடத்துநர்களாலும் வயது முதிய பயணிகள் நடத்தப்படும் அலட்சியத்தை பார்த்தால் ரத்தக் கொதிப்பே வந்து விடும். சாலையில் நடப்பவர்களின் மீது வாகன ஓட்டுநர்கள் கொள்ளும் அலட்சியமும் மூர்க்கமும் இன்னமும் கொடுமை.

இந்த நாவலில் உதயா என்ற எழுத்தாளன் அஞ்சலி என்கிற பெண்ணோடு கொள்கிற கலவியைப் பற்றிய விதவிதமான குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவள் திருமணமானவள். பத்திரிகைகளில் இந்த மாதிரி விஷயங்கள் பற்றிய செய்திகளைப்  போது 'கள்ளக்காதல்' என்கிற வார்த்தையோடு போடுவார்கள். எத்தனை முயன்றும் இந்த வார்த்தையின் பொருளை அறியவே முடியவில்லை.  அஞ்சலி தன் வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்தவள். (அப்படியா?, - கும்மாங்கோ) . ஒரு சராசரியான இந்தியப் பெண்ணின் பிரதிநிதி என்று அஞ்சலியை தாரளமாக சொல்லலாம். இந்த மாதிரியான முறையற்ற உறவுகளை, அவை ஏன் ஏற்படுகின்றன என்கிற சமூகக் காரணிகளின்,  பின்னணிகளின் புரிதல் இல்லாமல், அதற்குக் காரணம் தாங்கள்தான் என்று கூட தெரியாமல் கோபமும் எரிச்சலும் கொள்ளும் ஆண் சமூகத்தைப் பற்றி நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

சினிமாப் பாடல்களின் வரிகள் முதற்கொண்டு, அதில் வரும் ஆபாச அசைவுகளுடன் கூடிய நடனங்கள், அன்றாட வாழ்க்கையின் உரையாடல்கள், சாலையில் செல்லும் பெண்களைப் பற்றிய கமெண்ட்டுகள்..பார்வைகள், பெருமூச்சுகள்.. என்று பெரிதும் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றிய நினைத்துக் கொண்டும் சுவாசித்துக் கொண்டும் இயங்கும் ஆண் சமூகம் பாலுறவு என்கிற விஷயத்தை நேரடியான யதார்த்தத்தில் கையாளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எத்தனை பலவீனமாக இருக்கிறது?

(சுஜாதாவின் பிலிமோத்ஸவ் என்கிற அற்புதமான சிறுகதையை இங்கு நினைவு கூரலாம். பெண்ணுடல்களின் பிம்பங்களைப் பார்த்து பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் ஒருவன், அது நிஜத்தில் கிடைக்கும் சந்தர்ப்பம் வரும் போது பயந்து போய் விலகி விடுவான்)

அத்தனை வருடங்கள் காத்திருந்து  நினைத்து நினைத்து சப்புக் கொட்டிய விஷயத்தை திருமணம் முடிந்த  நேரனுபவத்தில் சந்திக்கும் போது மூன்றே நிமிடங்களில் கொட்டி விட்டு ஆயாசமாக திரும்பி படுத்துக் கொள்வது எத்தனையொரு முரண்நகை? காமசூத்ரா எழுதிய  வாத்சாயனர் உருவான ஒரு கலாசார சூழலில்தான் இப்படியொரு முரண்பாடு. இதில் விவரிக்கப்பட்டிருக்கும்  உடலுறவு போஸ்களையெல்லாம் ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டு ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சாரு சொல்வதைப் போலவே ஒரு கிழட்டு மனநிலை வந்து மனைவியிடமிருந்து விலகி விடியற்காலையில் பெருமாள் கோயிலுக்கு ஓடி விடுகிறார்கள்.

இந்த விஷயத்தைக் கூட மன்னித்து விடலாம். எத்தனை ஆண்கள் தங்களின் மனைவியுடன் உட்கார்ந்து ஆதரவாக, அன்பாக சாவகாசமான நிமிடங்களை செலவழிக்கிறார்கள்? 'ஏவ்..' என்கிற ஏப்பத்துடன் எழுந்து போகிறவர்கள் ஒருநாளாவது  மனைவியின் சமையலை வாய் விட்டு புகழ்ந்திருப்பார்களா? சமையலில் உதவி செய்திருப்பார்களா? இது போன்ற சிறு சிறு அன்புகளைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். மூன்று மணி நேர கலவியைக் கூட அல்ல. இது கிடைக்காத பெண்கள்தான் வேறு வழியில்லாமல் சிறிது அன்பைக் கொட்டினாலும் பிற ஆண்களோடு ஒட்டிக் கொள்கிறார்கள். அன்பை எதிர்பார்த்து ஏங்கும் இந்த மனநிலையை  (அப்படியா?, - கும்மாங்கோ) .வெறும் உடல்தினவாக சித்தரித்து  'கள்ளக்காதல்' என்ற லேபிளில் கொச்சைப்படுத்துவது அறிவீனம். அஞ்சலியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய குறிப்புகளின் மூலம் இது போன்ற விஷயங்கள் வாசகர்களுக்கு தெளிவாகின்றன.

சிறுவயதில் வளர்ந்து திரிந்த நாகூர் என்கிற நிலப்பிரதேசத்தைப் பற்றின எழுத்தாளரின் சமகால விவரணைகள் கவர்கின்றன. போலவே 70களில் தமிழ் சமூகத்தை ஆக்ரமித்த இந்தி சினிமாவின் இசையைப் பற்றிய விவரங்கள். இந்தப் பகுதியை வாசித்தவுடன் 'ஆராதனா'' பாடல்களை உடனே கேட்க வேண்டுமென்று தோன்றியது. இது போன்று மனவெழுச்சிகளை தரும்  (வெறும் மன எழுச்சிகள் மட்டும்தானா? - கும்மாங்கோ) பலநுட்பமான பகுதிகள் உள்ளன.

எக்ஸைல் என்கிற தலைப்பு இந்த நாவலின் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமாய் இருக்கிறது. இங்கிருக்கிற அபத்தச் சூழல்களை, மனிதர்களை சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு நுண்ணுணர்வுள்ள மனிதன், எப்படியாவது இங்கிருந்து தப்பிச் சென்று விட முடியாதா என்றுதான் ஏங்குவான். அவ்வகையான மனப் போராட்டங்களையே இந்த நாவல் பல இடங்களில் நுட்பமாக முன் வைக்கிறது.


முடிவுரை

நாவல் சிறப்பாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. சில சிறிய குறைகள்தான். அட்டைப்படம் இன்னமும் ரகளையாக அமைந்திருக்கலாம். சில இடங்களில் வரும் ஆங்கில எழுத்துக்கள், எழுத்துரு பிரச்சினையால் ஞணீஞனசனஞி என்பது போல் பிரசுரமாகியிருப்பதை கவனித்திருக்கலாம். சாரு எழுதியிருப்பதற்கு விளக்கம் தரும் அடிக்குறிப்புகளில் ஓரிடத்தில் 'பூம் பூம் = உடலுறவு என்றெல்லாம் விளக்கம் அளித்திருப்பதைப்  பார்த்தவுடன் சிரிப்பு வந்து விட்டது. வாக்கியத்தின் தொடர்ச்சியிலேயே அது புரிந்து விட்டது. மேலும் சாருவின் எழுத்தில் இதையெல்லாம் விளக்க வேண்டிய அவசியமேயில்லை. அவரின் வாசகர்கள் என்ன இது கூட தெரியாத மு.கூ -க்களா?

தன்னுடைய அடுத்த நாவலையாவது சாரு  இது போன்ற ஆட்டோ பிக்ஷன் என்கிற பாணியில் ஜல்லியடிக்காமல் முற்றிலும் வேறு பின்னணியில் எழுத வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

(என்ன எழவுய்யா இது. பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல் ஒரு குழப்பமான கட்டுரை. புத்தகத்திற்கு தொடர்பில்லாமல் முதலில் வரும் தண்டபாணி அண்ணன் சமாச்சாரமெல்லாம் எதற்காக? அதுவும் ஆட்டோ பிக்ஷனா? புதிய எக்ஸைல் நன்றாக இருக்கிறதா, இல்லையா?, வாங்கிப் படிக்கலாமா? கூடாதா? இது வெறும் செக்ஸ் புத்தகமா? இல்லை இலக்கியப் பிரதியா? இந்தக் கட்டுரையில் இருந்து என்னதான் புரிந்து கொள்வது? கடவுளே..இவன் சாருவை விட குழப்பவாதியாக இருப்பான் போலிருக்கிறதே - கும்மாங்கோ)

தமிழ் மின்னிதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்படாத வடிவம் (நன்றி: தமிழ் மின்னிதழ்)

suresh kannan