Tuesday, March 30, 2010

அங்காடித் தெரு - நவீன அடிமைகளின் உலகம்

முதலில் வசந்தபாலனுக்கு ஓர் அழுத்தமான கைகுலுக்கல்.

முதலாளித்துவமும் அதிகாரமும் அதன் பரிவாரங்களும் கைகோர்த்துக் கொண்டு எளிய மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் சுரண்டிக் கொழுப்பதை தைரியமாக அப்பட்டமாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். இவர் காட்டியிருப்பது பனிக்கட்டியின் முனையைத்தான் என்றாலும் பெருங்கடலின் ஆழத்தில் இன்னும் எத்தனை சுறா, திமிங்கலங்களின் கோரத்தாண்டவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ என்பதை நாம் யூகிக்கத்தான் வேண்டியிருக்கிறது.



படத்தின் தலைப்பை நியாயப்படுத்த வேண்டுமென்றால் சென்னை நகரின் மிக நெரிசலான அந்தத் தெருதான் படத்தின் மையமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநர் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தோடு நிறுத்திக் கொண்டார், சில சொற்ப உப கதைகளோடு. தீப்பெட்டி தொழிற்சாலை பணியாளர்களைப் போல தெற்கத்திக் கிராமங்களிலிருந்து நகருக்கு அழைத்து வரப்படும் இளம் நவீன கொத்தடிமைகளை நகரம் எப்படி சக்கையாகப் பிழிந்தெடுத்துக் கொண்டு பளபளப்பாக நிற்கிறது என்பதை இயக்குநர் படம் நெடுக்க சொல்லிக் கொண்டே போகிறார்.

இதை ஏதோ அந்த குறிப்பிட்ட தி.நகர் நிறுவனத்திற்கு மட்டுமானதாக பார்க்கத் தேவையில்லை. "சீக்கிரம் டேபிளை தொடைப்பா" என்று நம்மாலும் அதட்டப்படும்  ஹோட்டல் சிறுவர்கள் முதற்கொண்டு பல கோடி செலவில் தலைமைச் செயலகம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு அதனருகிலேயே எந்தவிதமான அடிப்படை வசதிகளுமில்லாமல் மலக்கூடங்களின் அருகிலேயே உறங்க நேரும் வடக்கு மாநிலத்தவர்கள் வரை அனைவருக்கும் பொருத்திப் பார்க்கலாம். இன்னும் நீட்டித்தால் காண்டம் வாங்க அனுப்பப்படும் சினிமா உதவி இயக்குநர் முதற்கொண்டு சாப்ட்வேர் கம்பெனியின் டை கட்டின அடிமைகள் வரை (இதை எழுதிக் கொண்டிருக்கும் நான் உட்பட) இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்படியொரு சமூகப் பிரச்சினையை இயக்குநர் மையமாக சொல்ல நினைத்தாலும் தமிழ் சினிமாவின் புளித்துப் போன கச்சாப் பொருளான ‘காதல்’ என்கிற சமாச்சாரத்தை போர்த்தித்தான் இதை சொல்ல வேண்டியிருக்கிறது என்பதை 'துரதிர்ஷ்டம்' என்றுதான் சொல்ல வேண்டும்.  படம் துவங்கின சில நிமிடங்களுக்கு ‘அய்யோ, இந்தப் படத்திற்கா வந்தோம்’ என்ற சலிப்பு தோன்றிய பின் கதைக்களம் கிராமத்திலிருந்தும் பிறகு நகரத்திற்கு வந்தவுடன் முகத்தில் அறையும் காட்சிகளுடன் சரசரவென்று நகர்கின்றன. பல நுட்பமான காட்சிகள்.

ஸ்ட்ராபெரி பழம் நுழைந்திராத கிராமத்திற்குள் கிரிக்கெட் எப்பபடியோ நுழைந்து விட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோயில் நுழைவு போல காட்டப்படும் அந்த துணிக்கடை நிறுவனம் திறக்கப்படும் காலைக்காட்சிகள் மதநிறுவனங்களுக்குப் பின்னும் அழுக்குகள் நிறைந்திருப்பதைப் போலவே இங்கும் அழுக்குகள் நிறைந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ‘அண்ணன் கிளம்புறம்மா’ என்று நகரத்திற்குப் புறப்படும் சகோதரனிடம் இறுகிற பாறை போன்ற முகத்துடன் ‘சரிண்ணே’ என்கிற அந்தச் சிறுமியின் முகம் என்னை மிகவும் வதைத்தது.

சில சொற்ப காட்சிகளே வந்து போகும் நாயகனின் தந்தையிலிருந்து துணிக்கடையில் பணிபுரியும் பலரின் முகங்கள் அசலான கிராமிய மணத்துடன் பொருந்திப் போவது நிறைவாக இருக்கிறது. பிரதான பாத்திரங்களில் நடிக்க ‘வைக்கப்பட்டிருக்கும்’ இளைஞனும் யுவதியும் மிக அற்புதமாக தங்கள் பகுதியைச் செய்திருக்கின்றனர்.

இறுதிப்பகுதியில் நாயகியின் தந்தையாக வரும் கவிஞர் விக்கிரமாதித்யன் சொற்ப நேரமே வந்தாலும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். அந்த மாதிரி காட்சியை நானே பார்த்திருக்கிறேன். அரசு மருத்துவமனையில் எனது தந்தையை சிகிச்சைக்காக சேர்த்திருந்த போது, எதிர் படுக்கையில் இருந்தவர் இறந்து போனதுமே அந்த எளிமையான ஏழ்மைக்குடும்பம் சிறிது நேரத்தில் காணாமற் போய்விட்டது. பிணத்தை எடுத்துப் போக ஆகும் செலவை நினைத்து அஞ்சியிருக்கலாம்.

பணியிலிருந்து விலக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் சபை நடுவில் தன்னுடைய காதலையே மறுக்குமோர் இளைஞனும்  அதன் காரணமாக வெகுண்டெழும் அவன் காதலியும் பிறகான அவளின் தற்கொலையும்.... படத்தின் ஆகச் சிறந்த காட்சிக்கோர்வையிது.

நடிகர்களில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியவர் மூவர்.

கருங்காலி சூப்பர்வைசராக நடித்திருக்கும் இயக்குநர் வெங்கடேசன். பார்வையாளனிடம் நிறைய வெறுப்பைச் சம்பாதிக்கும் பாத்திரம். இவர் அடிவாங்கும் போது அரங்கமே குதூகலிக்கிறது. இந்த மாதிரியான வில்லன் பாத்திரங்களைப் பார்க்கும் போது நாம் செளகரியமாக ‘நாயகனின்’ பகுதியில் நின்று கொள்கிறோம். ‘ச்சே.. எவ்வளவு மோசமானவன்ப்பா..” ஆனால் நூற்றுக் கணக்கான இளம் பெண்களை மேய்க்கும் அதிகாரம் வாய்த்தால் நம்மில் எத்தனை பேர் அவர்களின் மார்களை கசக்காமலிருப்போம் என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.

‘அண்ணாச்சியாக’ பழ.கருப்பையா. சர்ச்சையான அந்த பாத்திரத்திற்குள் தைரியமாகப் பொருந்தியிருக்கிறார். ஒரு அப்பட்டமான வியாபாரி என்கிற நிலையில் அவரின் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தி விடமுடியும். “எத்தன ரூவா கொட்டி வேபாரம் பாக்கோம்... சவத்து மூதிக...தனது வியாபாரத்திற்கு தடையாக இருக்கும் எந்தவொரு விஷயமும் அவருக்கு எரிச்சலூட்டுகிறது. தம்மிடம் வேலைபார்க்கும் சூப்பர்வைசர் எவளை கசக்கிலாலென்ன, எவனை நையப் புடைத்தாலென்ன?... பணியாளர்கள் அடங்கி ஒடுங்கி முகம் சுளிக்காமல் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் எதிர்பார்ப்பு.

அரசு இயந்திரங்களின் சக்கரங்களுக்கு இவர் தினம் எவ்வளவு படியளக்கிறார் என்றொரு லிஸ்ட் சில நொடிகள் காட்டப்படுகிறது. அந்த ஒரு ஷாட்டின் மூலம் அரசாங்கத்தின் மீது பலமாக காறி உமிழ்ந்திருக்கிறார் இயக்குநர். ‘அம்பதாயிரம் ரூவா பட்டுப்புடவைய திருடிட்டான்யா’ என்று சொன்னவுடனேயே காவல்துறை அந்த இளைஞனை காவல் நிலையத்தில் வைத்து நையப்புடைக்கிறது. அண்ணாச்சி அப்படி பொய்க்குற்றம் சாட்டக் கூட தேவையில்லை. வெறுமனை விரலைச் சுட்டியிருந்தால் கூட போதும். காவல் நாய் விசுவாசத்துடன் சுட்டப்பட்ட திசை நோக்கி பாயத் தயாராக இருக்கும். இளைஞன் நிறுவனத்திற்குள் நடக்கும் வன்கொடுமைகளைச் சொல்ல சொல்ல வாய் மேலேயே அடிவிழுகிறது.

மூன்றாமவர் நடிகை சிநேகா. நடிகையாகவே வருகிறார். சம்பந்தப்பட்ட நிறுவனம் எது என்பது பல காட்சிகளில் நிறுவப்பட்டாலும் இவர் 'எடுத்துக்கோ.. எடுத்துக்கோ' என்று விளம்பர மாடலாக நடிப்பதின்  மூலம் சந்தேகத்திற்கிடமின்றி அது நிரூபணமாகிறது. கதையின் போக்கு இவரிடம் விவரிக்கப்பட்டதா என தெரியவில்லை. தெரிந்தேதான் நடித்தார் என்றால் தைரியம்தான். இவரின் விளம்பர வாய்ப்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் தொடருமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

()

வசனம் ஜெயமோகன். வசனத்திற்கு திரையரங்கு ஆரவாரிப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். வசனங்களுக்காக திரைப்படங்கள் சிலாகிக்கப்பட்ட காலம் முடிந்து ஒரு மாமாங்கமாகி விட்டாலும் நவீன திரையில் நிகழும் இம்மாதிரியான விதிவிலக்குகள் ஆச்சரியப்படுத்துகின்றன. உண்மையில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் என்ற அங்கம் தனியாக உருவாக்கப்படக்கூடியதே அல்ல. திரைக்கதையின் ஊடாக அந்த சூழ்நிலையில் பாத்திரங்கள் இயல்பாக என்ன பேச வேண்டுமோ, அதை மாத்திரம் பேசினால் போதும். ஆனால் மிகு யதார்த்தமாக இருந்தால் வறட்சியாக இருக்கும்; அதில் கொஞ்சமாவது சுவாரசியம் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் வசனகர்த்தா தேவைப்படுகிறார். ஜெயமோகன் இதை சரியாக செயல்படுத்தியிருக்கிறார். பிரதான பாத்திரங்களான இளைஞனும் யுவதியும் கூட்டத்தின் நெரிசலின் இடையில் உரையாடுகிறார்கள்.

அவள் சொல்கிறாள்: “தங்கச்சி உன்ன யாரு யாருன்னு கேட்டுட்டே இருந்தா?”

“நீ என்ன சொன்ன?”

“சிரிச்சேன்”


அவ்வளவுதான். படம் பார்த்தவர்களுக்கு இந்த வசனத்தின் பின்னணியிலுள்ள அழுத்தமும் எளிமையும் புரியும். என்றாலும் சில இடங்களில் நேர்ந்திருக்கும் நாடகத்தனமான அபாயங்களை ஜெயமோகன் தவிர்த்திருக்கலாம் என்று படுகிறது.

உதாரணமாக மற்ற பதிவர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டிருக்கும் “யானை வாழுற காட்டுலதான் எறும்பும் வாழுது” என்கிற வசனத்தை எடுத்துக் கொள்ளலாம். என்ன மாதிரியான சூழலில் இது பேசப்படுகிறது என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.  பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையால் செமத்தியாக கவனிக்கப்பட்டு திரும்பும் இளைஞன் தன்னுடைய காதலியை நிறுவனத்திலிருந்து மீட்க வந்திருக்கிறான். கடையில் உள்ள சூப்பர்வைசர்கள் இணைந்து தாக்குகின்றனர். வியாபாரம் பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்த அண்ணாச்சி அந்த பெண்ணை விடுவிக்கச் சொல்கிறார். இருவரையும் வெளியில் துரத்தும் கருங்காலி சூப்பர்வைசர் சொல்கிறான். “இந்தத் தெருவுல எவனும் உங்களுக்கு வேலை தர மாட்டான். பிச்சைதான் எடுக்கணும்”.  இதுதான் அங்காடித்தெரு வியாபாரிகளின் தர்மம்.

தங்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் காகிதக் குப்பை போல் கசக்கி வெளியே எறியும் நிறுவன அடியாளிடம் அந்த இளைஞன் எப்படி பேசியிருப்பான். “போடா தேவடியாப் பயலே, நீயே உக்காந்து அண்ணாச்சி குண்டிய நக்கிட்டிரு. உன்னையும் அவன் வெளியே தூக்கிப் போடப் போறான். மவனே பாருடா. இதே தெருவுல உன் கண்ணு முன்னாடியே நானும் பொழச்சுக் காட்டறண்டா”... சென்சார் காரணமாக இத்தனை அப்பட்டமாக பேசமுடியாதென்றாலும் இதே போன்ற தொனியில்தானே வெடித்திருப்பான்? அந்தச் சமயத்திலும் எப்படி இலக்கிய நயத்துடன் யானை எறும்பு என்றெல்லாம் பேச முடியும்?. இதைத்தான் சினிமாத்தனம் அல்லது நாடகத்தனம் என்கிறேன்.

எல்லா வசனங்களுக்கும் வசனகர்த்தாவையே பொறுப்பாக்க முடியாது என்றாலும் எழுதியவர் ஜெயமோகன் என்பதால்தான் இந்த சொற்ப தடுமாற்றங்களை சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. டி.ராஜேந்தர் வசனம் என்றால் காதைப் பொத்திக் கொண்டிருக்கலாம்.

()

வசந்தபாலன் பல நுட்பமான காட்சிகளை படம் முழுக்க இறைத்திருக்கிறார். குறிப்பாக இரவு நேரங்களில் காட்டப்படும் ரங்கநாதன் தெரு. பணியாளர்களைப் போலவே அட்டைக்குப்பைகளும் அதன் உபயோகம் முடிந்தவுடன் வெளியே எறியப்படுகின்றன. அந்த ராத்திரியின் சொற்ப வெளிச்சத்தில் ஒரு தந்தை தன்னுடைய குழந்தைக்கு சூடான டீயை ஊதி ஊட்டுகிறார். எல்லா அலவங்களையும் மீறி மனித இருப்பில் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்கள்தான் அவனை தொடர்ச்சியாக இயக்குகின்றன என்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.

நகராட்சி கழிவறையின் மூலம் சம்பாதிக்கும் சுயமுன்னேற்ற நீதிக்கதைளெல்லாம் பாலச்சந்தர் படங்களிலேயே ரிடையர் ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வசந்தபாலன் இந்த மாதிரியான கிளிஷேக்களை கைவிடுவது நல்லது. அவை இல்லாமலேயே மையக்கதையின் போராட்டத்தை வலுவாகச் சித்தரிக்க முடியும். மற்றபடி பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவரும், பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானரும் அவர்களின் வாரிசு பிரச்சினையும் என சொற்ப நொடிகளில் உப கதைகள் விரிகின்றன.

ஏற்கெனவே சொன்னது போல் படத்தின் தலைப்பை நியாயப்படுத்துவது அந்தத் தெருவின் மனிதர்களையும் நிகழ்வுகளையும் பெரு, சிறு வணிகர்களின் தந்திரமான போக்குகளையும், நடுத்தர வர்க்கத்து வாடிக்கையாளர்களின் அல்பத்தனங்களையும் என... அந்தத் தெருவின் ஆளுமையை இன்னும் அதிகமாக உபயோகித்திருக்கலாம். இதன் மூலம் காதல் காட்சிகள் நீளும் அபத்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். பாடல் காட்சிகளிலிருந்து தமிழ் சினிமா என்றைக்கு வெளியேறி வரப் போகிறதோ? பிராமண மாமியின் பாத்திரம் செயற்கை குரூரத்துடன் சித்தரிக்கப்பட்டிருந்து போல் பட்டது.

என்றாலும் குறைந்த அளவு சமரசங்களுடன் ஒரு நல்ல படைப்பை தந்ததற்காகவே வசந்தபாலனை நாம் ஆதரிக்க வேண்டும். உடனே இதை உலக சினிமா என்று கொண்டாட வேண்டியதில்லை. அதற்கான பயணத்தின் முன்னே வைக்கப்பட்ட காலடித் தடங்களுள் ஒன்று. வசந்தபாலனின் முந்தைய படமான வெயில் கூட அத்தனை பாராட்டிற்கு உகந்ததல்ல. சில நுட்பமான காட்சிகளைத் தவிர்த்து அதுவுமொரு வணிகநோக்குத் திரைப்படமே. ‘இவ்வளவுதான் செய்ய முடியும்’ என்கிற சூழலில்தான் தமிழ் சினிமா நின்று கொண்டிருக்கிறது. இயக்குநர்களை மாத்திரம் குறை கூறிப் புண்ணியமில்லை.

சரி. வசந்தபாலன் இந்த சமூக அவலத்தை திரைப்படமாக எடுத்து நம்முன் வைத்துவி்ட்டார். நாம் என்ன செய்யப் போகிறோம்.  பளபளப்பான வியாபாரங்களுக்குப் பின்னால் மனித உரிமை மீறல்களை ஒளித்து வைக்கும் வணிகர்களை புறக்கணிக்கப் போகிறோமா? ஒரு கரண்டி அரிசி மாவை தோசை என்கிற பெயரில் அறுபது ரூபாய்க்கு விற்றுக் கொழுத்து பணியாளர்களின் மனைவிமார்களை களவாடும் அண்ணாச்சிகளின் உணவகங்களுக்கு போகாமலிருக்கப் போகிறோமா? அடுத்த முறை ரங்கநாதன் தெருவிற்குப் போகும் போது விளையாட்டாகத்திரியும் இளம் பணியாளர்களை எரி்ச்சலோடு அல்லாமல் 'த்சொ' என்று அனுதாபமாக பார்க்கப் போகிறோமா.. தெரியவில்லை.

எப்படியோ அதிகார மையங்கள் தொடர்ந்து கள்ள மெளனம் சாதிக்கப் போவது நிச்சயமென்றாலும் நடுத்தர வர்க்கத்தின் சொரணையை சற்று சோதித்துப் பார்த்திருப்பதில் வெற்றியடைந்திருக்கிறார் இயக்குநர்.

()

தமிழ் சினிமாவின் அபத்தங்கள் குறித்து ஓயாது நாம் புலம்புகிறோம். ஆனால் விதிவிலக்காக சற்றே விலகி ஒரு நல்ல படம் வந்தால் என்ன செய்கிறோம்? சென்னை ஆல்பட் அரங்கில் மொத்தம் இருநூறு பேர்தான் இருந்திருப்போம். ‘நான் முடிவு செஞ்சிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்கிற மென்ட்டல் கேஸ்களின் படங்களையெல்லாம் முதல் நாளே முண்டியத்து பார்க்கும் நாம் நல்ல படங்களுக்கு மாத்திரம் ‘ஆணா, பெண்ணா’ என்று உருவம்  கூட தெரியாத தேசலான பிரிண்ட்டுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை வாசிக்கும் நண்பர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். இந்த மாதிரியான விதிவிலக்குத் திரைப்படங்களையாவது தியேட்டருக்கு சென்று பாருங்கள்.

இந்த வேண்டுகோள் ஐங்கரன்களுக்காக அல்ல; வசந்தபாலன்களுக்காக.


image courtesy: original uploader

suresh kannan

Friday, March 26, 2010

நெல்சன் மண்டேலா நடித்த திரைப்படம்


மேலே படத்திலுள்ளவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அட! மார்கன் ப்ரீமேன்தானே என்று சொல்வீர்களேயானால் நீங்கள் இன்னும் INVICTUS திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம்.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து மண்டேலாவின் உருவத்தில் மார்கன் ப்ரீமேனே என் மண்டைக்குள் பதிந்திருக்கிறார். பரவசமாக கூக்குரலிடும் ஜனத்திரளை நோக்கி கையசைப்பதாகட்டும், கடுமையான சவாலையும் மிருதுவாகவும் அழுத்தமாகவும் எதிர்கொள்வதாகட்டும்...அத்தனை அற்புதமாக மண்டேலாவின் அந்த ஆளுமையை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார் ப்ரீமேன். அகாதமியின் சிறந்த நடிகருக்கான விருதை இவருக்கு வழங்கியிருக்கலாம். என்றாலும் Crazy heart-ஐ இன்னும் பார்க்காததால் தீர்மானமாகச் சொல்ல இயலவில்லை.

ஷாரூக்கான் நடித்த 'சக்தே' போல விளையாட்டையும் அரசியலையும் மிக நுட்பமாக இணைக்கும் திரைப்படங்களில் இதுவுமொன்று. தென் ஆப்ரிக்காவில் மண்டேலா அதிபராக இருந்த காலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.



ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலான சிறை வாழ்விலிருந்து 1990-ல் விடுவிக்கப்படும் மண்டேலா, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு 1994-ல் தென் ஆப்ரிக்காவின் அதிபராகிறார். அதுவரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களின் மனத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக ஏற்படும் பயத்தைப் போக்குவதும் வெள்ளை மற்றும் கறுப்பர் இனத்திவரிடையே நீண்ட காலமாக நிலவிக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பகையையும் நிறவெறியையும் போக்குவதே பிரதான பணி என்பதை உணர்கிறார்.

ரக்பி விளையாட்டு உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் போது அதற்காக நடத்தப் பெறும் தகுதி ஆட்டங்களில் வெள்ளையர்கள் அவர்களது பாரம்பரிய அணியான Springboks-க்கு ஆதரவாக குரலெழுப்பும் போது கறுப்பர்கள் எதிரணிக்கு ஆதரவாக - அதாவது தங்களின் சொந்த நாட்டு அணிக்கு எதிராக - குரலெழுப்புகின்றனர். Springboks அணியில் ஒரே ஒரு கறுப்பர் இருந்தாலும் இத்தனை ஆண்டு காலமாக தங்களை ஆதிக்கம் செய்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களை அவர்கள் அத்தனை சீக்கிரம் மன்னிக்கத் தயாராக இல்லை.

இந்தப் பகைமை உணர்ச்சியை விளையாட்டுப் போட்டியை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் போக்க முடியும் என்று தீவிரமாக நம்புகிறார் மண்டேலா. நிற வேறுபாட்டை மறந்து 'தன்னுடைய தேசம்' என்று இரு பிரிவினரையுமே உணரச் செய்ய விரும்புகிறார். இதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளே பின்னர் நிகழும் காட்சிகளாக விரிகிறது.

()

இரண்டு கூறாக பிரிந்து கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்தும் ஒரு பொறுப்புள்ள தலைவனாக மண்டேலா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நெகிழ்வையும் பரவசத்தையும் ஏற்படுத்துகின்றது. 'வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது' என்கிற நோக்கில் காந்தி கொண்டு வந்த அகிம்சை போராட்டத்தை இந்தியர்களே கைவிட்ட நிலையில் மண்டேலா அதைச் செயல்படுத்தி வெற்றி பெறும் போது நமக்கு பெருமையாக இருக்கிறது.

புதிதாக பொறுப்பேற்றுக் கொள்ளும் விளையாட்டு ஆணையக்குழுவிலுள்ள பெரும்பாலான கறுப்பர்கள், Springboks அணியின் நிறம் கொடி போன்றவற்றை மாற்ற தீர்மானம் கொண்டுவருகின்றனர். மண்டேலா இதை விரும்புவதில்லை. இது மேலும் பகைமை உணர்ச்சியையே வளர்க்கும் என்று கருதுகிறார். தடுக்க வேண்டும் என விரைகிற தருணத்தில் அவரைத் தடுக்கும் அரசாங்க காரியதரிசி, “இது பெரும்பான்மையான மக்கள் விரும்புவது, இதற்கு எதிராக நீங்கள செயல்படுவது உஙகள் பதவிக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் ஆபத்தானது” என எச்சரிக்கிறார். “மக்கள் தவறு செய்கிறார்கள். இந்தச் சமயத்தில் அதை எதிர்க்கும் துணிவில்லையென்றால் நான் தலைமைப் பொறுப்பில் இருக்கவே லாயக்கற்றவன்” என்கிறார் மண்டேலா.

இந்த மாதிரி நபர்களை இனி நாம் மியூசியத்தில் மாத்திரமே காண முடியும். பின்னர் அவர் விளையாட்டு ஆணையக்குழுவிடம் ஆற்றும் சிறிய அழுத்தமான உரை பரவசத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறான பல நுட்பமான காட்சிகள் படத்தை சுவாரசியமாக்குகின்றன.

()

Springboks அணியின் கேப்டனாக Matt Damon. அதிபர் தன்னை சந்திக்க விரும்புகிறார் என்பதை இவனால் நம்பவே முடியவில்லை. “இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக இந்த விளையாட்டில் ஜெயிக்க வேண்டியது அவசியம்” என்று மண்டேலா இவனை கேட்டுக் கொள்கிறார். சிறையிலிருந்த போது தம்மை ஊக்கப்படுத்தின ஆங்கிலக் கவி William Ernest Henley எழுதிய Invictus என்கிற கவிதையை அவனிடம் பகிர்ந்து கொள்கிறார்.

அணி கேப்டனின் தந்தை கறுப்பர்களை வெறுக்கும் வெள்ளையர்களின் ஒரு பிரதிநிதி. “இனி இந்த தேசத்தில் நமக்கு இடமிருக்காது” என்கிறார்.

உண்மையில் திரைப்படமே இம்மாதிரியானதொரு காட்சியுடன்தான் துவங்குகிறது. மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வாகனத்தில் வரும் போது கறுபபினச் சிறுவர்கள உற்சாகக் குரலெழுப்புகிறார்கள். எதிர் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் வெள்ளையச் சிறுவர்களில் ஒருவன் கேட்கிறான். “யார் சார் அது?. அந்தத் தீவிரவாதி மண்டேலாவை விட்டு விட்டார்களா?” அவர்களின் கோச் சொல்கிறார். “ஆமாம் பசங்களா! இனி இந்த தேசம் அந்த நாய்களின் கையில்தான் போகப் போகிறது”.

கறுப்பினத்தவர்களின் பிரதேசத்தை முதல் முறையாக பார்க்க நேரும் விளையாட்டுக் குழுவிலுள்ள ஒரு வெள்ளையர் சொல்கிறார். "நல்ல வேளை, நான் இங்கு வாழ நேரவில்லை"

இதற்கும் மேலான சுவாரசியமான காட்சிகள், மண்டேலாவின் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்டது. அதிபரின் பாதுகாப்பை பொறுப்பை கறுப்பின அதிகாரிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் ஆட்கள் தேவை என்று அவர்கள் அரசிடம் விண்ணப்பிக்கும் போது மண்டேலா வெள்ளையர்களை அனுப்புகிறார். இரு குழுக்களுக்குமான நுட்பமான விரோதமும் பின்பான சிநேகமும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

()

மண்டேலாவும் பார்வையாளர்களும் எதிர்பார்ப்பது போலவே அந்த விளையாட்டுப் போட்டியின் வெற்றியை கறுப்பர்களும் வெள்ளையர்களும் இணைந்து கொண்டாடுவதுடன் படம் நிறைகிறது. ஆனால் யதார்த்ததில் இந்த பகைமை உணர்ச்சி தேய இன்னும் பல ஆண்டுகளாகலாம்.

மண்டேலாவின் உறவினர்கள் உட்பட அனைவரும் வெள்ளையர்கள் தங்களுக்கிழைத்த கொடுமைகளை அவருக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர். "எல்லாவற்றையும் மன்னிக்க வேண்டிய தருணமிது. இனி நம் சிந்தனை இந்த தேசத்தைப் பற்றினதாக இருக்க வேண்டும்" என்கிறார் மண்டேலா. பழிவாங்குகிற நோக்கில் கறுப்பர்கள் வெள்ளையர்களிடம் வன்முறையைக் காட்டினால், இருவர்களும் நிற்கும் இடம்தான் மாறியிருக்குமே ஒழிய, வன்முறையும் பகைமையும் அப்படியேதானிருக்கும் என்பதாகத்தான் அவர் சிந்தனை இயங்குகிறது.
எங்காவது யாராவது தியாகம் செய்து இதை நிறுத்தித்தான் ஆக வேண்டும்.

படத்தின் சில காட்சிகள் நாடகத்தனமாக இருந்தாலும், இவ்வாறான நீதிபோதனைக் கதைகள், நமக்கு தொடர்ந்து தேவைப்படுமளவிற்கு நம்மிடம் வன்முறையுணர்வும் பகைமையுணர்ச்சியும் ஆழமாகப் பதிந்துள்ளது. கிளின்ட் ஈஸ்ட்வுட் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.  ஒரு காலத்தில் துப்பாக்கியால் சுட்டு புகையை ஸ்டைலாக ஊதிக் கொண்டிருந்த ஆக்ஷன் நடிகர், இப்படியொரு மென்மையான இயக்குநராக உருமாறியிருப்பது ஆச்சரியமாகத்தானிருக்கிறது. 

suresh kannan

Wednesday, March 24, 2010

பித்தத்தில் மூழ்கும் சலனம்

சற்று அபத்தமானதுதான். சிறிது நேரத்திலேயே புதிர் விடுபட்டு விடும் என்று தெரிந்திருந்தாலும் இந்த விளையாட்டை ஆடிப் பார்க்கலாம் என்று தோன்றியது. irreversible (2002) என்கிற திரைப்படத்தைப் பற்றின பார்வையை அதன் பாணியிலேயே முயன்று பார்த்தேன். இடது கையால் எழுத நேர்ந்த கட்டாயத்தைப் போல் தடுமாற்றமும் சுவாரசியமுமாக இருந்தது. ஒருநிலையில் தவறுகளைத் திருத்துவதையும் விட்டுவிட்டேன். அபத்தத்தில் பிழை கண்டுபிடிப்பது போன்ற அபத்தம் வேறுண்டா என்று தோன்றியது.

முந்தின பதிவை வாசிக்க (?!) நேர்ந்த போது உங்களுக்குள் எழுந்த எரிச்சலும் அசெளகரியமும் திகிலைத் துரத்துகிற சுவாரசியமும் உள்ளுக்குள் பொங்குகிற குரோதமும் (சில பின்னூட்டங்களை கவனியுங்கள்) திரைப்படத்தை பார்க்கின்ற போது எனக்கும் தோன்றியது. அதையே உங்களுக்கும் கடத்த வேண்டும் என்று தோன்றியதில் இந்தப் பதிவு. வெற்றி பெற்றிருக்கிறேன் என்று தோன்றுகிறது.

சரி. இப்போது முந்தைய பதிவின் சரியான வடிவத்தை வாசியுங்கள். கூடவே இன்னும் சிலதையும் சேர்த்திருக்கிறேன்.


காகம்-வடை-நரி கதையை, நரி வடையை கவ்விக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பித்துச் சொன்னால் எப்படியிருக்கும்? அப்படித்தானிருக்கிறது இந்த அப்பட்ட நான்-லீனியர் திரைப்படமும். "பழிவாங்குதல் உன்னுடைய உரிமை" என்பது இப்படத்தின் ஒரு வசனம். படம் முழுக்கவும் இதை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிறது, ஆனால் தலைகீழாக.



தன்னுடைய காதலியை வன்புணர்ச்சி செய்து ஏறக்குறைய பிணமாக்கினவனை பழிவாங்க நண்பனுடன் ஆவேசமாய் தேடிப் போகிறான் ஒருவன். படம் முடிகிற காட்சியில்தான் துவங்குகின்றது. துவங்குகின்ற காட்சியில்தான் முடிகின்றது. இதைப் புரிந்து கொள்ள தலைகீழாய் நிற்க வேண்டுமென்கிற அவசியமில்லை. காட்சிக் கோர்வைகளை chronological order-ல் புரிந்து கொண்டால் போதும்.

இயக்குநர் Gaspar Noé-ன்  முந்தையப் படமான I Stand Alone-ன்  தொடர்ச்சியோடு இந்தப் படம் துவங்குகிறது. அங்கிருந்து விலகுகிற காமிரா கே க்ளப்பிலிருந்து (gay club) காவல் துறையால் கைது செய்யப்பட்டு கொண்டுவரப்படும் இருவரை காண்பிக்கிறது. அவர்கள் கூடவே பின்னோக்கி ஓடினால்தான் முழுத்திரைப்படத்தையும் நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

ஏறத்தாழ ஒன்பது நிமிடங்கள் நீடிக்கின்ற ஒரு குத வன்புணர்ச்சிக்காட்சியை இதில் பார்த்து அதிர்ந்து போனேன். மிகக் குரூரமான திரைப்படம் எனக் கருதப்படும் பசோலினியின் Salò, or the 120 Days of Sodom (1975) திரைப்படத்தை விட இந்தக் காட்சி அதிக பாதிப்பை என்னுள் ஏற்படுத்தியது. பெண்ணாகப் பிறந்திருக்கிற காரணத்தினாலேயே அந்த உடல் படுகிற பாட்டை கண்டு பரிதாபமாகவும், நல்ல வேளையாக நான் பெண்ணாக பிறக்கவில்லை என்கிற சுயமகிழ்ச்சியுடன் கூடிய குரூரமும் ஒருசேர எழுந்தது. அப்படியும் மகிழ்ந்துவிட முடியாது. எம்மதமும் சம்மதம் என்பதைப் போல் எந்த துவாரமாக இருந்தாலும் திணிக்கத் துடிக்கும் மனநோயாளிகள் வாழும் இந்தச் சமூகத்திற்குள்தான் வாழ வேண்டியிருக்கிறது. திரை விழாவின் போது இந்த குறிப்பிட்ட காட்சியை காணச் சகிக்காமல் அரங்கிலிருந்து பல பார்வையாளர்கள் வெளியேறினார்கள். ஒரு மனிதன் குரூரமாக சாகடிக்கப்படும் இன்னொரு காட்சியையும் இத்தோடு இணைக்க வேண்டும்.

போதைப் பொருள் உட்கொண்டவனின் பித்தம் தலைக்கேறிய உன்மத்தோடு நிகழும் அரை மணி நேர ஆரம்பக் காட்சிகளை பொறுமையுடன் கடந்தால்தான் உங்களால் படத்திற்குள் நுழைய முடியும். இதற்கு துணைபுரியும் திட்டமிட்ட அபத்த குழப்ப இசையால் (low-frequency sound) உங்களுக்கு தற்காலிக பைத்தியம் கூட பிடிக்கலாம்.

மனதின் சமநிலையை கலைத்துப் போடும் குரூரமான காட்சிகள் இருப்பதால் மென்மையான மனதுடையவர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்காமலிருப்பது நல்லது.

()

வாழ்வின் சில கசப்பான நிமிடங்களைப் பற்றி பின்னால் யோசிக்கும் போது தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாததில்தான் வாழ்க்கையைக் குறித்த வசீகரமே அடங்கியுள்ளது. காட்சிக் கோர்வைகளை பின்னிலிருந்து நகர்த்திச் சென்றதுதான் இந்தப் படத்தின் மிக முக்கிய விஷயம். அதனாலேயே இந்தப் படத்தில் வெளிப்படும் வன்முறையும் குரூரமும் நமக்குள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி அதைப் பற்றி சிந்திக்க வைக்கின்றன.

ஒவ்வொரு காட்சிக் கோர்வைகளுக்கும் உண்டான இடைவெளியை காமிராக் கோணம் விட்டம் நோக்கி சுழல்வதிலிருந்து நாம் முந்தைய காட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுத்தது போல பிரமையை தந்தாலும் தனித்தனியான தொழில்நுட்பத்தின் மூலம் திறமையாக ஒருங்கிணைக்கப்பட்ட காட்சிகளே என்றொரு தகவல் சொல்கிறது. படத்தின் கலவரமான ஒளிப்பதிவும் (இயக்குநரே) இந்த நான்-லீனியர் படைப்பிற்கு பெரிதும் துணை செய்கின்றது.

யாரை பழிவாங்க வேண்டும் என்று மார்க்கஸீம் பியர்ரியும் ஆவேசமாக தேடிச் செல்கிறார்களோ, அவனை விட்டுவிட்டு இன்னொருவனை கொல்கின்றனர். நாம் வாழ்க்கையில் பெரும்பாலும் செய்யும் அபத்தங்களும் இதைப் போன்றதுதானே?

குரூரமாக கற்பழிக்கப்படும் அலெக்ஸ் என்கிற பெண்ணாக மோனிகா பெல்லூச்சி (Monica Bellucci) நடித்துள்ளார். பெரும்பாலோனோர் ஏற்கத் தயங்கும் பாத்திரமிது. படத்தின் பின்னோக்கிய காட்சிகளில் (அதாவது முந்தைய காட்சிகள்) அலெக்ஸ், அவளது முன்னாள் கணவன், இந்நாள் காதலன் .. என்று மூன்று நபர்களும் ஓடும் ரயிலில் பாலியல் உச்சத்தைப் பற்றியும் அது தொடர்பாக அவர்களுக்குள் நிகழ்நதவைகளைப் பற்றியும் உரையாடும் காட்சி சுவாரசியமானது.

ஒரு சிறந்த நான்-லீனியர் படைப்பை உருவாக்குவது அத்தனை எளிதானதல்ல என்பதை இந்தப் படம் உணர்த்தினாலும் இதில் நிறைந்திருக்கும் வன்முறை மற்றும் குரூரம் காரணமாகவே இதையொரு 'சிறந்த படமாக' என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால் பார்வையாளனிடம் ஏதோவொரு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இத்திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.

suresh kannan

ம்னலச ம்குழ்மூ ல்தித்தத்பி

கழாகீலைத ல்னாஆ, துறகிங்யஇ ன்தாடுண்கொ க்கயாடைபப்டிஅ தைஇ ம்வுகக்ழுமு ம்டப .ம்னசவ ருஒ ன்தித்டபப்இ துபன்எ "மைரிஉ யடைனுன்உ ல்தகுங்வாழிப" . ம்முடபப்ரைதி ர்யனிலீ-ன்நா டட்பப்அ தந்இ துறகிக்ருனிதாத்டிபப்அ ?ம்குக்ருயிடிபப்எ ல்னான்சொ ச்துத்பிம்ரஆ துந்ருலிதிவபோ டுண்கொ க்விவ்க யைடைவ ரிந, யைதைக ரிந-டைவ-ம்காக.

ம்து§¡ப ல்டாண்கொ துந்ரிபு ல்ரிடர்ஆ ஸ்ர்வரி ளைகவைர்கோ க்சிட்கா .லைல்மயைசிவஅ றகின்மெடுண்வே கற்நி ய்ழாகீலைத ளள்கொ துந்ரிபு ப்தைஇ .துறன்கிடிமு ன்தால்யிசிட்கா றன்கிகுங்வது. துறன்கிகுங்வது ன்தால்யிசிட்கா றகிடிமு ம்டப .ன்வருஒ ன்றாகிபோ ப்டிதே ய்மாசவேஆ ன்டனுபண்ந கங்வாழிப னைவனகிக்மாணபி யயைகுக்றஏ துய்செ சிச்ர்ணபுன்வ யைலிதகா யடைனுன்த

ம்யுடிமு ளள்கொ க்கிங்வாள்உ ல்ளாகங்உ ம்யுதைத்டபப்ரைதித்ழுமு ன்தால்னாடிஒ கிக்னோன்பி வேடகூ ள்கர்வஅ .துறகிக்பிண்கா ரைவருஇ ம்டுபப்ரவடுண்கொ டுட்பப்யய்செ துகை ல்யாறைது ல்வகா துற்ருலிபிப்ளக் கே ராமிகா றகிகுலவி துந்ருகிங்அ .துறகிகுங்வது ம்டப டுயோசிச்ர்டதொ ன்தித்டப ப்யதைந்மு ன்ரிறகுக்யஇ

துயதித்டுபற்ஏ துஇ பைப்திபா கதிஅ டவி தைத்டப்ரைதி ன்யினிலிசோப ம்டுபப்தருக க்னஎ ம்டபப்ரைதி னமாரரூகு .ன்னேபோ துந்ர்திஅ துத்ர்பா ல்திஇ யைசிட்காக்சிச்ர்ணபுன்வ தகு ருஒ றன்கிக்டிநீ ள்கங்டமிநி துபன்ஒ ழதாத்றஏ

ம்லாகக்டிபி டகூ ம்யதித்பை லிகாற்த குக்ளுகங்உ ல்யாசைஇ பப்ழகு தத்பஅ டட்மிடட்தி ம்யுரிபுணைது குற்தஇ .ம்யுடிமு யழைநு ள்குற்தித்டப ல்ளாகங்உ ன்தால்தாந்டக ன்டயுமைறுபொ ளைகசிட்கா க்பம்ரஆ ரநே ணிம ரைஅ ம்ழுகநி டுகோத்மன்உ யறிகேக்லைத ம்தத்பி ன்னிவடண்கொட்உ ள்ருபொ ப்தைபோ

துலல்ந துபப்ருலிமகாக்ர்பா ப்தைத்டபப்ரைதித்இ ள்கர்வயடைதுனம னயாமைன்மெ ல்தாபப்ருஇ ள்கசிட்கா னமாரரூகு ம்டுபோ ப்துத்லைக யைலைநிமச ன்தினம 

suresh kannan

Monday, March 22, 2010

ஸ்மித்தைப் பற்றி

ஜாக் நிக்கல்சன் ஏற்கெனவே ஒரு நடிப்பு ராட்சசன். இம்மாதிரியானதொரு offbeat பாத்திரமென்றால் விட்டு வைப்பாரா என்ன? அறுபது வயதைக் கடந்தவர்கள், குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் எம்மாதிரியான மனநிலைகளுக்கு, சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள் என்பதைப் About Schmidt திரைப்படம் காட்சிகளாக நம்முடன் உரையாடுகிறது.

"வீட்ல சும்மாதானே இருக்கீங்க?" -

தீவிரமாக உழைக்கும் மற்ற வயதுக்காலங்களில் மிகச் சாதாரணமாக ஒலிக்கும் இந்த வசனம், பணிஓய்வு பெற்றவுடன் ஈட்டி போல் நெஞ்சில் பாயும் வார்த்தைகளாக இருக்கும். அதுவரை 'குடும்பத்தலைவர்' என்கிற பெருமையுடனும் அதிகாரத்துடனும் உலாவந்த நபர், ஒரே நாளைக்குள் பால்கனியில் வைக்கப்பட்டிருக்கும் பழைய டயருக்கு ஈடாக மதிக்கப்படுவது சோகம்தான். ''ஒரு காப்பி போட்டு எடுத்து வர்றதுக்கு எவ்ளோ நேரம்" என்று அதட்டி பந்தா காட்டப்பட்ட மனைவி தன்னுடைய இத்தனை வருட வன்மங்களையெல்லாம் பழிதீர்த்துக் கொள்ளும் சமயமும் இதுவே.


இன்ஸீரன்ஸ் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்று மாலை மரியாதையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் வாரன் ஸ்மித், ஒரே நாளில் தானொரு செல்லாக்காசாக மாறிப்போவதை வேதனையுடன் உணர்கிறார். 42 வருடங்களாக 'பெயருக்கு' வாழ்ந்து வந்த தாம்பத்தியமும் சில நாட்களிலேயே மனைவி இறப்பதுடன் முடிவடைகிறது. இருக்கும் ஒரே மகளும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் காதலுனுடன் வேறொரு ஊரில் வசிக்கிறாள். 'சில நாட்களுக்காவது என்னுடன் தங்கேன்' என்பதற்கு தன்னுடைய இயலாமையைத் தெரிவிக்கிறாள். மனைவியின் பொருட்களை ஒழிக்கும் போது அவள் காதலருக்கு எழுதிய பழைய கடிதங்கள் கிடைக்கிறது. அந்தக் காதலர் ஸ்மித்தின் நண்பர்தான். வெறுத்துப் போகும் ஸ்மித் நண்பருடன் சண்டையிடுகிறார்.

மனைவியின் நினைவுகள் கூட எதிரியான சூழ்நிலையில்... தனிமையின் முழு உக்கிரத்தையும் அனுபவிக்கிறார். அதிலிருந்து விடுபட தான் வாழ்ந்த பழைய இடங்களுக்கு பயணப்படுவதும் தன்னுடைய மகள் திருமணத்தில் கலந்து கொள்ள செல்வதுமாக பின்னரான காட்சிகள் விரிகின்றன.

நின்று சிறுநீர் கழித்தால்  மனைவி ஆட்சேபிப்பதின் காரணமாக அமர்ந்து சிறுநீர் கழிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளும் ஸ்மித், மரணமடைந்த மனைவியின் பழைய காதல் தெரிந்தவுடன் ஏற்படும் முழுவெறுப்பு காரணமாக நின்று கொண்டே வன்மத்துடன் கழிவறை முழுவதும் சிறுநீர் கழிக்கும் காட்சி... ஒன்று போதும். ஜான் நிக்கல்சனின் அசாத்திய நடிப்பைப் புரிந்து கொள்ள.

இத்தனை வருடங்கள் ஆசையாய் வளர்த்த மகளை எவனோ ஒரு குறுந்தாடிக்காரன் கவர்ந்து செல்வதை அவரால் பொறுக்கவே முடிவதில்லை. தன்னுடைய விளையாட்டுப் பொருள் கைவிட்டுப் போவதை கண்டு பதைக்கும் ஒரு குழந்தை உணர்வையே அவரிடம் காண முடிகிறது. பெற்றோராக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பவர்கள்தான் இதை பரிபூரணமாக உணர முடியும்.

பொய் சொல்லியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று ஸ்மித் இறுதிவரை போராடுவதும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு மகள் முன் ஆத்திரத்துடன் விவாதிப்பதும்... என இது முழுக்க ஜாக் நிக்கல்சன் ஏரியா. மனிதர் அசத்தியிருக்கிறார்.

இதே பெயரில் அமைந்த நாவலிலிருந்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம் வயதானவர்களுக்கு மட்டுமான படமல்ல; வயதாகப் போகிறவர்களுக்குமானது. 

suresh kannan

Saturday, March 20, 2010

மறுபடியும் கோயன் சகோதரர்கள்

A serious man பார்த்த பாதிப்பில் 'கோயன்'களின் இன்னுமொரு படத்தை பார்த்தேயாக வேண்டுமென்கிற உத்வேகம் எழுந்தது. சேகரிப்பிலிருந்து கைக்குக் கிடைத்ததை உருவினதில்... BURN AFTER READING.



பிளாக் காமெடி என்கிற வகையான சமாச்சாரத்தில் நம்முடைய தமிழ்ப்படங்களில் ஏதாவதிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். ம்...ஹீம்... (கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸை வேண்டுமானாலும் ஓரத்தில் சேர்க்கலாம்) நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தன்,  அசோகமித்திரன், ஆதவன், கோபி கிருஷ்ணன் போன்றவர்களை ஒரு மார்க்கமாக சொல்ல முடியும்.

ஆனால் நூற்றுக்கும் அதிகமாகவுள்ள டார்க் ஹியூமர் ஹாலிவுட் படங்களில் இதுவுமொன்று. மிதமான வன்முறையும் குரூரமும் கலந்த இவ்வகை கறுப்பு நகைச்சுவையை ஒரு மாதிரி அவஸ்தையுடன்தான் ரசிக்க முடியும். அதுவும் ஒரு சுவைதான். பொதுவாக நம்மூர் காமெடிப் படங்களில் துப்பாக்கி வெடித்தால் அது போலித் துப்பாக்கியாகவோ குண்டாகவோ அல்லது குறிதவறி விட்டத்தில் பாய்வதாகவோதான் இருக்கும். ஆனால் இம்மாதிரி ஹாலிவுட் படங்களில் நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவர் திடீரென்று நிஜமாகவே ரத்தத்துடன் சிதறி செத்துப் போவார்.

சரி. இப்போது BAF-க்கு வருவோம். தன்னை அழகற்றவளாக உணரும் ஒரு நடுத்தர வயது பெண். அதிலிருந்து மீள காஸ்மெட்டிக் சர்ஜரி செய்ய பணத்திற்காக அல்லாடிக் கொண்டிருப்பவள், CIA-விலிருந்தும் வீட்டிலிருந்து மனைவியாலும் துரத்தப்பட்டு நிராகரிப்பின் வேதனையை முழுமையாக அனுபவிக்கும் ஒருவன், அவளுடைய டாக்டர் மனைவி, அவளைச் சுற்றும் ஒரு பெண் பித்தன், அவனுடைய எழுத்தாள மனைவி, மேற்சொன்ன காஸ்மெட்டிக் கிழவியின் துடிப்பான, பிறகு குருரமாக இறக்கப்போகும் உதவியாள், இவர்கள் பணிபுரியும் ஜிம்மின் மேனேஜர். இவரும் பின்னால் இறக்கப் போகிறவர். இவர்கள் அனைவரின் நடவடிக்கையும் மெளன அபத்தமாக வேடிக்கைப் பார்க்கும் CIA-வின் தலைமை...

இப்படி கலந்து கட்டின குழப்பமான பாத்திரங்களை வைத்துக் கொண்டு அதிதிறமையானதொரு திரைக்கதையை எழுதி நடுநடுவே பார்வையாளர்களை சிரிக்கவும் திகைக்கவும் வைத்துக் கொண்டு hats off ... coen's. நடுவே அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கு உள்ள பனிப்போரும் நகைச்சுவையாக சொல்லப்படுகிறது. 

குடிப்பழக்கம் காரணமாக CIA-வில் இருந்து துரத்தப்படும் காக்ஸ் (John Malkovich) வெறுப்பில் தன்னுடைய பணிஅனுபவங்களை நூலாக எழுதி சர்ச்சையை கிளப்ப முயற்சிக்கிறார். அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்பும் அவரது மனைவி கேட்டி காக்ஸ்  (Tilda Swinton) வக்கிலீன் ஆலோசனைப்படி கணவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொண்டு வந்து தர அந்த ஆவணங்களில் ஒரு குறுந்தகட்டை வக்கிலீன் உதவியாளர் ஜிம்மிற்கு போகும் போது தவற விட, ஜிம்மில் பணிபுரியும் லிண்டாவும் அவளது உதவியாளனான சாட்டும் அதிலுள்ள தகவல்கள் CIA சம்பந்தப்பட்ட ரகசிய ஆவணங்கள் என்று தவறாக யூகித்து காக்ஸை பணம் கேட்டு மிரட்டுகின்றார்கள்.

அவர்களுக்குத் தெரியாத விஷயம், அந்த குறுந்தகட்டில் உள்ளது காக்ஸின் பணியனுபவக் குறிப்புகள் மாத்திரமே என்கிற சமாச்சாரம். ஏற்கெனவே வெறுப்பிலிருக்கும் காக்ஸ் பணம் தர மறுக்க, லிண்டா அதை எடுத்துக் கொண்டு ரஷ்ய தூதரகத்திற்கு செல்ல... மீதமுள்ள காட்சிகளெல்லாம் சிரிப்பும் ரத்தமுமான அதகள காட்சிகள்தான்.

தன் அழகு மேம்பாடு குறித்த அதீத பிரக்ஞையுள்ள காஸ்மெட்டிக் கிழவியாக Frances McDormand (இயக்குநர்களில் ஒருவரான் ஜோயலின் மனைவி). கோமாளியான தோற்றத்திலிருக்கும் இவர், மிக சீரியஸான மிரட்டல்களில் ஈடுபடும் போதும் அது தோல்வியடையும் போதெல்லாம் எரிச்சலும் அழுகையுமாக வெடிக்கும் போதும் மிக நகைச்சுவையாக இருக்கிறது. முன்னாள் சிஐஏ அதிகாரியாக ஜான் மால்கோவிச். ஒவ்வொரு முறையும் ஹை-டெசிபல் குரலில் எரிச்சலைக் காட்டுகிறாற் போலவே சூழ்நிலைகள் அமைகின்றன.

பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் கணவர்கள் மனைவியால் ஒரு பூச்சியாகவே மதிக்கப்படுகின்றனர் என்பதற்கு ஒரு காட்சி. நடுஇரவில் வரும் மிரட்டல் தொலைபேசியால் எரிச்சலடையும் காக்ஸை, அவர் மனைவி என்னவென்று விசாரிக்க "நான் நூலாக எழுதிக் கொண்டிருக்கும் தகவல்களை எவனோ வைத்துக் கொண்டு மிரட்டுகிறான்' என்கிறார். 'அதில் என்ன எழவு இருக்கப் போகிறதென்று அதைப் போய் எவனோ மெனக்கெட்டு எடுத்துச் சென்றிருக்கிறான்?" என்கிறார் மனைவி கூலாக.

இறுதிக் காட்சியில் சிஐஏ தலைமை அதிகாரியும் துணை அதிகாரியும் உரையாடிக் கொள்ளும் காட்சி... இந்தப் படத்தின் உச்சபட்டசமான நகைச்சுவைக்காட்சி. நடந்திருக்கும் இடியாப்பச் சிக்கல் குழப்பங்களையும் மரணங்களையும் துணை விவரிக்க, தலைமை "ஒண்ணும் புரியல. எப்படியோ பிரச்சினை முடிஞ்சுதுல்லயா, ஆள விடு" என்கிறார்.

தமிழில் இம்மாதிரியான பிளாக் காமெடி படங்களை ஒருவேளை எடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ள இயக்குநர்கள் யாரென்று யூகித்துப் பார்த்தேன். பாலா, செல்வராகவன் மற்றும் வெங்கட்பிரபு.


suresh kannan

Wednesday, March 17, 2010

கோவா மற்றும தமிழ்ப்படம்

வெங்கட் பிரபுவின் கோவா திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் சினிமா வயதுக்கு வருவதின் அடையாளங்களையும் தடயங்களையும் இதில் காண முடிந்தது. ஓரினப் பாலுறவாளர்களைப் பற்றி இதற்கு முன் இலைமறை காயாக சில நகைச்சுவைக்காட்சிகளை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் ஆலிவுட்டின் 'AMERICAN PIE' போன்ற  அப்பட்டமான செக்ஸ் காமெடி தமிழுக்குப் புதிது. பண்ணைப்புரத்திலிருந்து உருவாகி வந்த ஒரு தலைமுறை இளைஞனிடமிருந்து இத்தனை நவீன திரைப்படத்தை எதிர்பார்க்கவில்லை. அவரின் முந்தைய படங்களில் சென்னை-28 ஒரளவிற்கு வசீகரி்த்தாலும் 'சரோஜா' வை சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை.

இந்தப் படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றுமேயில்லை. திரைக்கதையும் கூட சுமார்தான். ஆனால் திறமையாக உருவாக்கப்பட்ட காட்சிக் கோர்வைகள்தான் இப்படத்தின் பலம் என நினைக்கிறேன். உதாரணமாக அந்த நண்பர்கள் குழு கஞ்சா புகைத்து விட்டு சுவாதீனமேயில்லாமல் உரையாடு்ம் காட்சியைச் சொல்லலாம். அந்தக் காட்சியில் பிரேம்ஜியின் நடிப்பு  தரமானதாக இருந்தது. அப்படியொரு மினி-சைக்கோ பாத்திரத்தை ஏற்றதற்காக சிநேகாவை பாராட்ட வேண்டும். கிராமத்து பஞ்சாயத்து காட்சிகளிலும் தரமான ஒளிந்திருக்கும் கிண்டல். சீரியஸாக சென்று கொண்டிருக்கும் காட்சிகளிலுள்ள நகைச்சுவையை நாம் தான் கண்டுணர வேண்டியிருக்கும். அந்த மாதிரியான 'மேக்கிங்கில்'தான் இந்தப்படத்தின் தனித்தன்மையை உணர முடிகிறது.

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் மீதான ஆவலை 'கோவா' உருவாக்கியிருக்கிறது.

பரவலாக பாராட்டப் பட்ட  'தமிழ்ப்படம்' எனக்கு அவ்வளவு திருப்தியை அளிக்கவில்லை. மாறாக எரிச்சலையே ஏற்படுத்தியது. மற்ற படங்களின் கிளிஷேக்களை தொடர்ந்து கிண்டல் செய்த போது ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தாலும் அதுவே மொண்ணைத்தனமாக தொடரும் போது இந்தப்படமே ஒரு கிளிஷேவாக மாறிப் போன அபத்தம் நிகழ்ந்து விட்டது. இதையெல்லாம் பாலாஜி, சந்தானம், ஜீவா குழுவினர் இதை விட அற்புதமாக செய்துவிட்டதால் இந்தப்படமே 'லொள்ளு சபா' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்  ஹை-பட்ஜெட் வடிவம் போலாகி விட்டது. இன்னும் கொஞ்சம் சீரியஸாக உழைத்திருக்கலாம். 'இந்தப்பாடலை சிவா பாடிக் கொண்டிருக்கிறார் (என்று போட சொன்னார்), பாப் மயூசிக் குடும்பப் பாடல்,  தமிழ் சினிமாவின் அபத்தமான பாட்டு வரிகளை கிண்டலடிக்கும் .. ஓ.மகசீயா....போன்ற சிறந்த நக்கல்களால் இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்க்க முடிந்தது.

என்றாலும் தமிழ் சினிமாவின் உளுத்துப் போன கிளிஷேக்களையும்,  அதன் தரத்தை ஒரு அங்குலம் கூட உயர்த்தாதாமல் கல்லாப்பெட்டியிலேயே குறியாக இருந்த  இயக்குநர்களையும் சூப்பர் ஸ்டார்களையும், ஒழுங்காக மூத்திரம் போகத் தெரியாத பையன்கள் கூட  அரசியல் கனவுகளுடன் பஞ்ச் டயலாக் பேசும் அபத்தங்களையும் செருப்பால் அடித்த ஒரே காரணத்திற்காகவே இந்தப் படத்தை பாராட்ட வேண்டும். 

suresh kannan

ஆஸ்கர் நாமினேஷன் - 6 (எ சீரியஸ் மேன்)

முதலாவது  |  இரண்டாவது  | மூன்றாவது நான்காவது ஐந்தாவது

இந்த வரிசையில் ஆறாவது திரைப்படம் A SERIOUS MAN.

கோயன் பிரதர்ஸ்.

டாரண்டினோ போல பார்த்து மாத்திரமே அனுபவிக்க வேண்டிய திரைப்பட இயக்குநர்களில் இவர்களையும் சேர்க்க வேண்டும். அகாதமி விருதைப் பெற்ற 'No Country for Old men' படத்தை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். அந்தப் படத்தின் கதைப் போக்கு இப்படித்தான் என்று எவ்வளவு திறமையாக எழுதினாலும்  எப்படி அது படைப்பிற்கு நியாயம் சேர்க்காமல் போகுமோ, அதையே இத்திரைப்படத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

..அல்லது இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன். கோணங்கியின் சமீபத்திய படைப்பான 'இருள்வ மெளத்திக'த்தின் உள்ளடக்கத்தை 'பாட்டி-வடை-காக்கா, கதை போல, 'இரண்டு பத்திகளில் சொல்லு' என்று யாராவது கேட்டால் அது எவ்வளவு நுண்ணுவர்வற்றதாக இருக்குமோ, அப்படித்தான் இத்திரைப்படத்தைப் பற்றி எழுதுவதும். [அப்பாடி! சிவராமன் (பைத்தியக்காரன்) மகிழும்படி எப்படியோ ஒரு தமிழ் எழுத்தாளரை உள்ளே கொண்டு வந்தாயிற்று.] :-) சிக்கலான கணித சூத்திரங்களுக்கு ஈடாக புதிர்ப் பாதைகளின் வழியே பூடகமாக பயணிக்கும் கோணங்கியை வாசகனே நேரடியாக வாசித்துக் கொள்வதுதான் ஒரே வழி. அப்படித்தான் இத்திரைப்படமும்.

இருந்தாலும்  இத்திரைப்படத்தைப் பற்றினதோர் அறிமுக அடிப்படை கோட்டுருவத்தையாவது ஏற்படுத்த முயன்றுப் பார்க்கிறேன்.


பொதுவாக யூதர்கள் என்றாலே அவர்கள் நாஜிப் படையினரின் கீழே நசுங்கிப் போகும் பரிதாப கரப்பான் பூச்சி சினிமாதான் பார்த்திருக்கிறேன். மாறாக ஒர் அமெரிக்க யூதக் குடும்பத்தை இத்தனை நெருக்கமாக பார்த்தது இத்திரைப்படத்தில்தான். 'வாழும் மனிதனுக்கு சோதனை வரலாம். ஆனால் சோதனைகளுக்கு நடுவிலேதான் வாழ வேண்டும்' என்றால் எப்படி?' என்கிற அரதப்பழசான வாக்கியத்துடன் இந்த கறுப்பு நகைச்சுவைப் படத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

வருடம் 1967. அமெரிக்க மாவட்டமான மினியாபோலிசின் புறநகர். இயற்பியல் ஆசிரியரான Larry Gopnik நேர்மையானவர். ஓர் ஒழுங்கான நேர்க்கோட்டுடனான வாழ்க்கையை வாழ விரும்புபவர். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் முதற்கொண்டு அனைவரும் அவரைச்  சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றுகின்றனர். அப்பாவின் பையிலிருந்து காசு திருடும் மகள், அவளிடமிருந்து திருடி மரிஜூவானா புகைக்கும் பள்ளிச்சிறுவனான மகன், 'வரும்போது ரெண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு வாங்க' என்பதற்கு பதிலாக  'விவாகரத்துப் பத்திரத்தோடு வாங்க' என்று வீட்டை விட்டு துரத்தும் அதிரடி மனைவி, அவள் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒரு கிழவர், அமீபா போல வீட்டோடேயே ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஹோமோ மூத்த சகோதரர், வரப்புத்தகராறு செய்யும் பக்கத்து வீட்டுக்காரர், பணக்கவரை தந்துவிட்டு "பெயிலாக்கினே, மவனே" என்று அமைதியாக மிரட்டும் கொரிய மாணவன், அதன் மூலமாக ஏற்படும் புகழ்கறைகள், இதிலிருந்து விடுபட ஆலோசனை வேண்டிச் செல்லும் போது குழப்பியனுப்பும் யூத குருமார்கள்....

ஒரு மனிதன் என்னதான் செய்வான்?... 'சோதனை மேல் சோதனை' என்ற சிவாஜி பாடலை இப்ரூ மொழியில்  டிஎம்எஸ் பாடி அதை லேரிக்கு அனுப்பியிருந்தால் சந்தோஷமாக சோகமாக பின்னணியில் வாயசைத்திருப்பார்.

அரை மணி நேரமாவது ஆகும் என்று வெறுப்பு டிராபிக்கில் காத்திருக்கும் போது அது ஐந்தே நிமிடத்தில் சரியாகி ஆச்சரியமேற்படுத்துவது போல Larry-ன் சில பிரச்சினைகள் இயற்கையாகவே சரியாகிறது. என்றாலும் டிராபிக்கிலிருந்து  வேகமாக விடுபட்ட வண்டி மந்திரியின் கான்வாயிற்குள் எதிர்பாராமல் புகுந்து விபத்தை ஏற்படுத்தினால் என்ன ஆகுமோ, அப்படியே படம் முடிந்த பின்னரும்  பிரச்சினைகள் தொடர்கின்றன.

Larry Gopnik-ஆக Michael Stuhlbarg நடித்திருக்கிறார். நாடக, தொலைக்காட்சி நடிகரான இவர் ஏற்கெனவே சில சினிமாக்களில் சிறுவேடங்களில் நடித்திருந்தாலும் பிரதான வேடத்தில் நடிப்பது இதுவே முதன்முறை. லெளதீக வாழ்வில் அல்லலுறும் ஒர்  நடுத்தர வர்க்க அப்பாவியை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.

ஏற்கெனவே விவரித்தது போல் இயக்குநர்களான Joel மற்றும் Ethan Coen சகோதரர்களின் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை அவர்களே விவரித்தால்தான் உண்டு. அவர்கள் இறைத்துப் போடும் பல்வேறு புள்ளிகளை பொறுக்கிக் கொண்டு அவரவர்களின் ரசனை மற்றும் புரிதலின் அடிப்படையில்தான் பார்வையாளன்தான் அந்த வடிவத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

படம் ஒரு புராதனமானதொரு யூத நாட்டார் வழக்காற்றியல் கதையுடன் துவங்குகிறது. கணவன் அழைத்துவரும் விருந்தாளியை ஆவி என நம்பி கத்தியால் குத்துகிறாள் மனைவி. குருதி கத்தியுடன் வெளியேறும் அந்த கிழவனை இந்த பிரதானக் கதையுடன் எப்படி பொருத்திப் பார்ப்பது எனப் புரியவில்லை.

Larry காணும் கனவுகளில் ஒன்று வரலாற்றுத் தொடர்ச்சியுடன் இருந்ததை கவனித்தேன். சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சகோதரனை நிறையப் பணம் தந்து தப்பித்துச் செல்லுமாறு படகொன்றில் ஏற்றி அனுப்புகிறான்  சிறிது தூரம் கடப்பதற்குள் துப்பாக்கியொன்று வெடித்து சகோதரனைக் கொல்கிறது. Larry அதிர்ச்சியுடன் சுற்றிப் பார்க்கும் போது 'அதோ பார், இன்னொரு யூதன்' என்று துப்பாக்கியுடன் குறிபார்க்கிறான் ஒருவன். Larry அலறியடித்து எழும் போதுதான் கனவென்று புரிகிறது. கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட யூதர்களின் பெரும்பான்மையோர்களின் ஆழ்மனதில் அவர்கள் அனுபவித்த வன்முறை பரம்பரையாகத் தொடரும் என்பதாக இதைப் புரிந்து கொள்கிறேன்.

கோயன் சகோதரர்களின் உருவாக்கங்களை விரும்பி ரசிப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு இது ஒருவேளை ஏமாற்றத்தைத் தரலாம். அகாதமியின் 'சிறந்த படம்' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் விருதைப் பெறவில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. Roger Deakins அற்புத ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் காண்பனுபவத்தை மேலும் சுவாரசியமாக்குகிறது.

தேவையான / யற்ற பின்குறிப்பு: மேற்குலகில் 'நகைச்சுவை' என்பதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது நீண்ட வருட சந்தேகமாக உள்ளது. நம்மூரில் என்றால் கிரேசி மோகன் எழுதி நிமிடத்திற்கு இரண்டு முறையாவது அடுத்தவர் தொடையில் தட்டி கண்ணீர் வர சிரித்தால்தான் அதை 'நகைச்சுவைப்படம்' என ஒப்புக் கொள்கிறோம். அங்கெல்லாம் யாராவது கண்களை விழித்து விநோதமாக பார்த்தாலே காமெடிப்படம் என்கிறார்களா என தெரியவில்லை.

சீரியஸான படமொன்றை பார்த்தோம் என்ற உணர்வுடன் இருந்தால் அதை 'comedy' என்கிற வகையில் IMDB-ல அடைத்து வைத்திருப்பதை பின்னர் பார்க்கும் போது விநோதமாக இருக்கிறது. புளியோதரையின் மீது முட்டையை வைத்து பிரியாணி என்று ஏமாற்றுவது போல.

suresh kannan

Monday, March 15, 2010

ஆஸ்கர் நாமினேஷன் - 5 (அன் எஜூகேஷன்)

முதலாவது  |  இரண்டாவது  | மூன்றாவது நான்காவது

இந்த வரிசையில் ஐந்தாவது திரைப்படம் AN EDUCATION.

எழுத்தாளர் சுஜாதா தனது கட்டுரைகளில் ஒன்றில் ஏறக்குறைய இவ்வாறாக எழுதியிருப்பார். .. 'சிக்னலில் நிற்கும் போது பைக் இளைஞனைப் இறுகப் பற்றிய படி அமர்ந்திருந்த இளம் பெண்ணை கவலையோடு கவனித்தேன். முடிபறக்க முன்னால் அமர்ந்திருந்தவனின் கண்களிலிருந்த நோக்கம் யோக்கியமாக இல்லை. நிச்சயம் இருவரும் நூலகத்திற்குச் செல்லப் போவதில்லை. பெண்ணே.. உன்னுடைய கற்பை இழப்பதில் ஏன் இத்தனை அவசரம். ஒரு காலத்தில் இவ்வாறான இளம் பெண்களை வர்ணித்து வர்ணித்து எழுதியவன், இப்போது இவர்களுக்காக கவலைப்படுகிறேன்.'

இந்த பிரிட்டிஷ் திரைப்படத்தைப் பார்க்கின்ற போதும் எனக்கும் இவ்வாறாகத்தான் தோன்றிக் கொண்டேயிருந்தது. ஒரு காலத்தில் இப்படியான காட்சிகளைப் பார்க்கும் போது 'சீக்கிரம் கழட்டித் தொலையேண்டா முண்டம்' என்று சுஜாதா சிறுகதையின் '·பிலிமோத்ஸவ்' பாத்திரம் மாதிரி உள்ளுக்குள் பதறுவேன். வயதாவதின் விளைவு.


ஜெயகாந்தனின் 'அக்னிப் பிரவேசம்' சிறுகதை போலவே துவங்குகின்றது இத்திரைப்படம்.

இங்கிலாந்தின் புறநகர். வருடம் 1961. ஒரு மழைநாள். 16 வயதான ஜென்னி இசை வகுப்பு முடிந்து பேருந்திற்காக காத்திருக்கும் போது ஒரு கார் வந்து நிற்கிறது. அவளை விட இருமடங்கு வயதான உற்சாக மனிதன் மிகுந்த  நகைச்சுவையாகப் பேசி அவளை வீட்டில் இறக்கி விடுகிறான். அவளது குடும்பத்தையும் தனது சாதுர்யமான பேச்சினால் மயக்குகிறான். சைக்கிளில் சுற்றி வரும் தன் வயது பையன்களை விட காரில் அழைத்துச் சென்று பரிசுப் பொருட்கள் வாங்கித் தரும் டேவிட்டை ஜென்னிக்கு பிடித்துப் போகிறது. தோழிகளுடன் இதை கிளர்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறாள். நன்றாகப் படிக்கும் அவளால் இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு மதிப்பெண் குறைகிறது. மகள் பிரெஞ்ச் கலாசாரத்தின் மீது பிரேமை கொண்டிருக்க, அவள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கு சென்று படிக்க வேண்டும் என்பதே பிரிட்டிஷ் ஆச்சாரமான அவளது பெற்றோர்களின் கனவாக இருக்கிறது.

பெற்றோர்களிடம் சாதுர்யமான பொய்களைச் சொல்லி பாரிஸ் நகரத்திற்கு ஜென்னியை அழைத்துச் செல்கிறான் டேவிட். 'பதினேழு வயதிற்கு முன்பு தன்னுடைய கன்னிமையை இழக்க விரும்பவில்லை' என்று ஜென்னி கூறுவதால் உடல்தொடர்பு அவர்களுக்குள் நிகழ்வதில்லை. டேவிட் செய்யும் தொழில் சம்பந்தமான முதல் நெருடலை உணர்கிறாள் ஜென்னி. 'வேற்று இன மக்களுக்கு அருகில் வசிக்க பயப்படும்/அருவருக்கும் வெள்ளையக் குடும்பங்களை கண்டுபிடித்து அவர்களின் அருகில் வேண்டுமென்றே அவர்களை குடியமர்த்தி, அவர்கள் அவசரமாக வீட்டை வந்தவிலைக்கு விற்று நகர்வதைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும்   ரியல்எஸ்டேட் தகிடுதத்தங்களை செய்பவனாக இருக்கிறான் அவன். 'சற்று வசதியாக வாழ்வதற்கான வணிக உத்திகளில் இதுவொன்று' என்று அவன் அளிக்கும் விளக்கத்தினால் சமாதானமடைகிறாள் ஜென்னி.

வசதியான, இனிமையாக உரையாடும் டேவிட்டை, ஜென்னியின் பெற்றோர்களுக்கும் பிடித்துவிட நிச்சயதார்த்தம் நடக்கிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் ஜென்னியைக் கண்டிக்க, பாரிஸ் கனவுகளுடன் இருக்கும் ஜென்னி, "போங்கடி நீங்களும் உங்க ஸ்கூலும். ரொம்ப போர்" என்று வெடித்து திரும்புகிறாள். டேவிட் ஒரு விருந்திற்காக ஜென்னி குடும்பத்தை அழைத்துச் செல்லும் போது, காரின் டேஷ்போர்டில் இருந்த ஒரு கடிதத்தின் மூலம் அவன் ஏற்கெனவே திருமணமானவன் என்பதை அறிந்து அதிர்ந்து போகிறாள். அவனது முதல் மனைவியை விசாரிக்கச் சென்ற போது ரியல் எஸ்டேட்தை தவிர இளம் பெண்களை கவர்வதை பகுதி நேர வேலையாகவே செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிய வருகிறது.

பிறகென்ன? பள்ளிப் படிப்பையும் இழந்து எதிர்காலக் கனவும் சிதைந்து எக்கச்சக்க டிராபிக்கில் ரிப்பேராகி நிற்கும் கார்காரன் போல திகைப்பும் பெற்றோர்களையும் ஏமாற்றி விட்டோமே என்று குற்றவுணர்வும் அடைகிறாள். என்றாலும் நன்றாகப் படிக்கும் இவள் மீது அன்பு வைத்திருக்கும் ஆசிரியை ஒருவரின் மூலம் அவளது ஆக்ஸ்போர்டு கனவு நனவாகிறது. வாழ்க்கையைப் பற்றிய ஒரளவு தெளிவான பார்வையுடன் ஜென்னி தன் பயணத்தைத் தொடர்வதோடு படம் நிறைவடைகிறது.

'ஒரு சிறுவன் பதின்ம வயது அபத்தங்களிலிருந்து விலகி எந்தக் கணத்தில் முதிர்ச்சியடையும் இளைஞனாகிறான்?' என்பதை சுஜாதாவின் (மறுபடியுமா?) 'நிலா நிழல்' நாவல் அற்புதமாக விவரிக்கும். திரைப்படத்தின் இறுதியில் ஜென்னியும் ஏறக்குறைய அதே உருமாற்றத்தை அடைகிறாள்.

பள்ளி நிர்வாகம் அவளை மீண்டும் சேர்க்க மறுத்துவிட்ட பிறகு உதவி வேண்டி தன்னுடைய ஆசிரியையின் வீட்டிற்குச் செல்கிறாள் ஜென்னி. அங்குள்ளதோர் ஓவியத்தைப் பார்க்கிறாள்.


"Burne-Jones"

"உனக்குப் பிடிக்குமா?"

"ஆம். இன்னும்".

"என்ன இன்னும்?. வயதானவளைப் போல பேசுகிறாய்.."

"ஆமாம். எனக்கு வயதாகிவிட்டதைப் போல உணர்கிறேன். ஆனால் அந்தளவிற்கு அறிவுள்ளவாக உணரவில்லை"

()

கல்வி கற்க வேண்டிய வயதில் எதிர்பாலினக் கவர்ச்சிக்கு ஆளாவது இயல்பானதொன்றுதான். ஆனால் எந்த அளவோடு அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இத்திரைப்படம் பிரச்சார உறுத்தலில்லாமல் இயல்பாகச் சொல்கிறது. Lynn Barber என்கிற பிரிட்டிஷ் பத்திரிகையாளரின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இளம்பெண் ஜென்னியாக Carey Mulligan சிறப்பாக நடித்திருக்கிறார். "அம்மா, காலேஜூக்கு போயிட்டு வர்றேன்" என்று இரண்டடுக்கு மேக்கப் போட்ட சரோஜாதேவி நடித்த அபத்தங்களையெல்லாம் தாங்கிக் கொண்ட நமக்கு இவரின் இளமை, பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருப்பதை அதிசயத்துடன் பார்க்க முடிகிறது. பள்ளிச்சிறுமியாக நடிக்கும் காட்சிகளை விட தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நடித்த காட்சிகளில் இவரது நடிப்பு உண்மையாக இருந்தது. 'சிறந்த நடிகை'க்கான அகாதமி விருதிற்காக பரிந்துரைக்கப் படடிருந்தாலும் விருதை வெல்லவில்லை.

இவரையும் தவிர மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நடிப்பு ஜென்னியின் தந்தையாக நடித்த ஆல்பிரெட் மோலினாவுடையது. (Alfred Molina). ஓர் ஆச்சாரமான, நடுத்தர அப்பாவியான, பதின்மவயது பெண்ணின் தந்தையானவரின் உணர்வுகளை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். மகளின் விருப்பமும் இவரின் விருப்பமும் முரண்படும் போது எல்லாத் தந்தையும் போலவே தான் அந்தக் குடும்பத்திற்காக செலவு செய்வதை பட்டியிலிடும் காட்சியில் அதகளம். பெண்ணின் தோல்வியில் தன்னுடைய பங்குமிருப்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது நெகிழ்வான காட்சி. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் நீட்டிக்கப்பட்டிருந்தால் 'Best supporting actor' விருதைக் கூட பெற்றிருப்பார்.

டேவிட்டாக Peter Sarsgaard. படம் முடிந்த பின்புகூட "இவர் பக்கமும் ஏதாவது நியாயம் இருந்திருக்குமோ' என்று பார்வையாளனை எண்ணத் தூண்டுமளவிற்கு அப்படியொரு கனவான் நடிப்பு. கவிதையின் வார்த்தைகளைப் போல நிதானமாக ஆனால் அழுத்தமான காட்சிகளுடன் திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் Lone Scherfig.

()

படத்தின் நிறைவுக் காட்சியில் 'பாரிஸ் நகருக்கு செல்லலாமா?' என்று கேட்டான் தோழன். இதுவரை அங்கே சென்றிராததொரு பாவனையுடன் "அய்யோ! நிச்சயமாக" என்றேன்" என்று ஜென்னி ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறாள்.

தயிர்ப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த துளிகளை குறும்பாக நக்கிக் கொண்டிருந்த ஓர் அறியாச் சிறுமியை இத்தனை தந்திரமானவளாக மாற்றியது யார், எப்போது என்று பிறகு நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். 

suresh kannan

Friday, March 12, 2010

ஆஸ்கர் நாமினேஷன் -4 (அப் இன் தி ஏர்)

முதலாவது  |  இரண்டாவது  | மூன்றாவது 

இந்த வரிசையில் நான்காவது திரைப்படம் UP IN THE AIR.

பதின்ம வயதுகளில் ஏற்படும் பாலியல் விழைவு வேகம் காரணமாக திருமணத்தின் மூலமாவது எதிர்பாலின உடல் கிடைக்குமா என மனம் அலைபாயும். கலாசாரப் பாசாங்குகள் மிகுந்த இந்தியா போன்ற சமூகங்களில்,  பாலியல் தேவைகளுக்கான நுகர்வுச் சமாச்சாரங்கள் அசட்டப்பூர்வமானதாகவும் அந்தக் காரணத்தினாலேயே அசெளகரியமானதாகவும் இருப்பதால் 'பால்ய விவாகம் என்கிற முறை ஒழிக்கப்படாமலிருந்தால் கூட தேவலை' என்கிற அளவிற்கு அந்த வேகம் இருக்கும். ஒரு வழியாக திருணமாகி விட்ட புதிதில் சர்ரவுண்டு சவுண்டு ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட அதிநவீன கணினி உபயோகிப்பது போல் வாழ்க்கை சுகமாகவே கழிந்தாலும்  இந்த வசந்தமெல்லாம் சொற்ப காலத்திற்குத்தான். (எனவேதான் இதை சிற்றின்பம் என்றழைக்கிறார்களா என்று தெரியவில்லை).

மயக்கம் தெளிந்து அதுவரை மறைந்திருந்த குறைகளும் வித்தியாசங்களும் பூதாகரமாகத் தெரிந்து போர்க்களக்காட்சிகளும், வெள்ளை கொடிகளும், எதிர்காலம் குறித்த பயமும், பணியிடத்து அழுத்தமும், குழந்தைகள் சார்ந்த பொருளாதாரத் தேவைகளின் அதிகரிப்பும்... என மன உளைச்சலுக்கு ஆளாகிற போது.. ‘திருமணமே செய்யாமலிருந்தால் வாழ்க்கை நன்றாகவே இருந்திருக்குமோ’ என்று அலுத்து உட்கார்கிற போது முடிந்து போன இரவு சினிமா போல ரொம்பவே தாமதமாகியிருக்கும்.


இந்த திரைப்படத்தின் நாயகன் ரியான் பிங்ஹாமும் இதையெல்லாம் முன்கூட்டியே யூகித்துத்தான் மிக புத்திசாலியிருக்கிறான். ‘சுமைகளை உதறுங்கள்” என்பதுதான் இவனது தாரக மந்திரம்.  

“நீங்கள் இந்நிறுவனத்திற்கு இனி தேவைப்பட மாட்டீர்கள்” என்று செய்தியை முதலாளிகளின் சார்பில் இனிப்பு பூசப்பட்ட வார்த்தைகளில் சொல்லி அவர்களை வயிற்றெரிச்சலுடன் வீட்டுக்கு அனுப்பச் செய்யும் ஓரு நிறுவனத்தில் பணிபுரியும் இவன் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கும் பறந்து கொண்டேயிருக்கிறான். இவ்வாறு விமானங்களில் பறப்பதும்,  ஹோட்டல் வாசமும்... என தொடர்ந்து பயணம் செய்து கொண்டேயிருப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமானதாயிருக்கிறது. குடும்பம் என்கிற அமைப்பிற்குள்ளோ உறவுகள் என்ற பெயரில் அன்புச் சிறைகளிலோ வாழ்வதில் இவனுக்கு ஒப்புதல் கிடையாது. மாத்திரமல்லாமல் பத்து மில்லியன் மைல்களுக்கும் மேலாக விமானப்பயணம் செய்து அதற்கான கெளவர அந்தஸ்தை அடைவது என்பது இவனுக்கு கனவுடன் கூடியதொரு  லட்சியமாக இருக்கிறது.

இவனைப் போலவே அதிகம் விமானத்தில் பறக்கும் பெண்ணொருவரோடு பழக்கம் ஏற்படுகிறது. இவனது குணத்தைப் பற்றி அறிந்திருக்கும் அவள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லையென்பதால் இருவருக்குமான பழக்கம் எவ்வித குற்றவுணர்வுமின்றி காமமாகவும் நீள்கிறது.

ரியானின் நிறுவனத்தில் புதிதாக பணிக்குச் சேரும் இளம் பெண் ஒருவர், அதிகமான பிரயாணங்களால் நிறுவனத்திற்கு ஏற்படும் நிதிச்சுமையைக் குறைக்க 'நேரில் சென்று  செய்யும் வேலையை கணினி மூலமாக செய்யலாம்' என்கிற யோசனையை முன்வைக்கிறாள். நிறுவனத் தலைவரும் அதை ஒப்புக் கொள்கிறார். தீராத பயணத் தாகத்துடன் இருக்கும் ரியானுக்கு இது எரிச்சலைத் தருகிறது. மாத்திரமல்லாமல், இது மனித உணர்வுகளைக் கையாள வேண்டிய பணியாக இருப்பதால் இதை இயந்திரமயமாக்கினால் சரியாக இருக்காது என்று வாதிடுகிறான். எனவே இது குறித்து அதிகம் அறிந்து கொள்ள அந்த இளம் பெண்ணும் ரியானுடன் பயணங்களுக்கு அனுப்பப்படுகிறாள்.

உணர்வுப்பூர்வமான அந்த இளம் பெண்ணும், உறவுகளையும் உணர்வுகளையும் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத நடுத்தரவயது ரியானும்... என்று இந்த இரு துருவங்களும் அவ்வப்போது விவாதிக்கிறார்கள்; மோதிக் கொள்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ் செய்தியின் மூலம் தன்னை தன் காதலன் நிராகரித்துவிட்டான் என்று விமான நிலையத்தின் நடுவிலேயே ஓவென்று அழுகிறாள் அந்த இளம் பெண். ரியானும் அவனது பயணக் காதலியும் அவளைத் தேற்றுகிறார்கள்.

இடையில் ரியான் தன்னுடைய சகோதரியின் மகள் திருமணத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. மணமகன் முந்தைய நாள் திடீரென்று திருமணம் செய்ய தயங்குகிறான். ரியான் அவனை மெல்ல விசாரிக்கும் போது “இந்தத் திருமணம் எதற்கு? எனக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள்.. அவர்களுக்கும் திருமணம் நடக்கும். அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும்.. எதற்கு இது? ஏன்?... என்று வாழ்க்கை குறித்த தத்துவ விசாரணையில் இறங்கி விடுகிறான். அவனை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டிய நிலையிலிருக்கும் ரியானுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை. ஏனெனில் ஏறக்குறைய அவனும் மணமகன் சிந்திக்கும் அந்தப் புள்ளியிலேயேதான் நீண்ட காலமாக நின்று கொண்டிருக்கிறான். என்றாலும் எப்படியோ அவனை சமாளிக்கும் ரியான் மனதளவில் தானும் அந்த மாற்றத்தை உணர்கிறான். துணை என்று ஒன்றிருப்பதின் அருகாமை குறித்த தேவை குறித்து அவன் சிந்தித்து திடீரென்று தீர்மானத்து தன்னுடைய காதலியின் வீட்டுக்குச் சென்று இறங்குகிறான். அங்கு.....

"What's In Your Backpack?" என்கிற தலைப்பில் சுயமுன்னேற்ற பேச்சாளராகவும் பணியாளர்களை நீக்கும் பணியை விருப்போ வெறுப்போ இல்லாமல் செய்யும் ரியானாக George Clooney அற்புதமாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் ஸ்டைலிஷான நடிப்பு. (இவரின் ஹேர்ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்) பயணங்களை ஒரு காதலியைப் போல மிக ஆசையாக அணுகுவதும் வாழ்க்கை குறித்த தன்னுடைய கருத்தின் மீது எவ்வித தடுமாற்றமுமில்லாமல் இயங்குவதும் என சிறப்பான பாத்திரப்படைப்பு. (இவர் பயணத்திற்கான உடைகளை மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கும் போது ஜெயமோகனின் கட்டுரைகளின் மூலம் கிடைத்த நாஞ்சில் நாடனின் பிம்பமே நினைவுக்கு வந்தது. (தன்னுடைய முதலிரவின் போது கூட நாஞ்சில் நாடன் உடையை நேர்த்தியாக அடுக்கி வைக்கும் காட்சியொன்று அசட்டுத்தனமாக என் மனதில் விரிந்த போது சிரிப்பாக வந்தது. நாஞ்சில் என்னை மன்னிப்பாராக).

ரியானுடன் பணிபுரியும் துறுதுறு சிடுசிடு இளம் பெண்ணாக Anna Kendrick நன்றாக நடித்திருக்கிறார். பணியாளர்களிடம் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவதான தகவலைச் சொல்லும் போது அவர்கள் மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்புடன் விவாதிப்பதையும் சண்டையிடுவதையும் திட்டுவதையும் திகைப்பும் வியப்புமாக பார்க்கிறாள். அதில் ஒரு பெண்மணி மிக அமைதியாக தொனியுடன் “சர்க்கரை தடவப்பட்ட உங்கள் விளக்கமெல்லாம் வேண்டாம். என்னை பணிநீக்கம் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று அலட்டாமல் சொல்கிறாள். வழக்கமாக மிகுஉணர்ச்சி நபர்களையே பார்த்துவந்த இளம் பெண்ணால் இதைத் தாங்க முடிவதில்லை. ‘அவள் தற்கொலை செய்து கொண்டு விடுவாளா?’ என்று ரியானிடம் மிகுந்த குற்ற உணர்வோடு கேட்கிறாள். (படத்தின் இறுதியில் உண்மையாகவே அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளும் தகவல் கிடைக்கும் போது இவள் பணியிலிருந்தே விலகி விடுகிறாள்).

ரியானும் அவளது பயணக் காதலியும் மிகப் பொருத்தமான ஜோடியாக இருப்பதைக் கண்டு ரியானின் குணத்தைப் பற்றித் தெரிந்தும்  “ஏன் அவளை திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது” என்று கேட்க ரியான் தன்னுடைய பிரத்யேகமான தத்துவத்தைச் சொல்லும் போது “போய்யா.. புண்ணாக்கு’ என்று வெடிக்கும் காட்சிக் கோர்வை மிகு சுவாரசியம். 'Best Supporting Actress' பிரிவில் இவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் விருதை வெல்ல முடியவில்லை.

()

கடந்த வருடங்களில்  JUNO திரைப்படத்திற்காக ‘சிறந்த இயக்குநர்’ பிரிவில் அகாதமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட Jason Reitman இத்திரைப்படத்தை மென்மையாக ஓடிக் கொண்டிருக்கும் நதியின் போக்கைப் போல சுவாரசியமாக உருவாக்கியுள்ளார். நல்லதொரு நாவலைப் படித்த அனுபவத்தைத் தந்தது இத்திரைப்படம். பிறகுதான் தெரிந்தது, இதே பெயரில் வால்டர் கிம் எழுதின நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, என்பது. அமெரிக்காவின் சமீபத்திய recession எதிரொலியையும் இந்தத் திரைப்படத்தில் காணமுடிகிறது. பணியிழந்தவர்கள் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய குழந்தைகளைக் குறித்தும் கலங்கும் போதும் அழும் போதும் அந்தப்பதட்டம் நம்மையும் தொற்றிக் கொள்வது. (இதற்காக உணமையாகவே பணியிழந்த நபர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்).

மனிதன் கூடிவாழும் ஒரு விலங்கு. பொறுப்புகளின் காரணமாக  இயற்கையின் ஆதார நோக்கத்திற்கு மாறாக மனித உறவுகளைச் சுமையாகக் கருதி வாழ்வது ஆரம்பத்தில் சுகமாக இருந்தாலும் நிலையான நிம்மதியைத் தராது என்பதை அடிநாதமாக இத்திரைப்படம் சொல்கிறது.

நாஞ்சில் நாடனின் ‘சதுரங்கக் குதிரை’ என்கிற நாவலையும் இத் திரைப்படம் நினைவுப்படுத்தியது. தமிழின் சிறந்த நாவல்களுள் அதுவுமொன்று. ஏதோவொரு காரணங்களால் திருமணச் சூழ்நிலை அமையாதிருக்கும் ஒருவன் ஒருநிலையில் தனிமையின் கொடுமையை உக்கிரமாக அனுபவிப்பதை அழுத்தமாக அந்நாவலில் சொல்லியிருப்பார் நாஞ்சில் நாடன்.

அமைதியான திரைக்கதையுடன் மென்மையான காட்சிகளோடு நகரும் திரைப்படங்களை ரசிப்பவர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கக்கூடும்.  'சிறந்த திரைப்படம்' உட்பட அகாதமி விருதின் ஆறு பிரிவுகளில் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் எப்பிரிவிலும் விருது வாங்கவில்லை.

suresh kannan

Sunday, March 07, 2010

ஆஸ்கர் நாமினேஷன் - 3 (இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்)

இந்த வரிசையில் மூன்றாவது திரைப்படம் Inglourious Basterds.

1978-ல் இதே பெயரில் வெளிவந்ததொரு இத்தாலியத் திரைப்படத்தின் தலைப்பால் கவரப்பட்டு அந்த பெயரையே சற்று மாற்றி உபயோகித்துக் கொண்டார் க்வெண்டின் டாரண்டினோ. இதற்கான விளக்கத்தை பத்திரிகையாளர்கள் கேட்ட போது முதலில் விளக்கமளிக்க மறுத்த அவர், பின்னர் நியோ-எக்ஸ்பிரசனிஸ ஒவியரான Jean-Michel Basquiat-ன் பாதிப்பில் இந்தத் தலைப்பில் மாற்றம் செய்ததாக தெரிவித்தார்.

க்வெண்டின் டாரண்டினோ - ஓர் அசலான திரைக்கலைஞனின் இந்தப் பெயர் மாத்திரமே அவர் திரைப்படங்களின் முகவரியாக அமைந்து எந்தவொரு விளக்கத்திற்கும் தேவையில்லாமல் செய்துவிடும். அநேர்க்கோட்டு முறையில் திரைக்கதை அமைந்த அவரின் பல்ப் பிக்ஷன் திரைப்படம் இன்றளவும் அதனுடைய திரைக்கதை உத்திக்காக பெருமளவில் சிலாகிக்கப்படுகிறது.

ஹிட்லர் x யூதர்கள் என்கிற வரலாற்றுப் பகையுடனான படுகொலைகளைப் பற்றி எத்தனை படைப்புகள் வந்தாலும் அதன் முழுமையான வன்முறையை வெளிப்படுத்தி விடமுடியாது என்பது தவிர அவற்றுக்கான தேவைகளும் தொடர்ந்து கொண்டேயிருப்பதும் அதன் உக்கிரத்தை யூகிக்க வைக்கிறது. வரலாற்றை புனைவிற்காக மாற்றியமைக்கும் சுவாரசியமான உத்தியை டாரண்டினோ இந்தப் படத்தில் திறமையாக பயன்படுத்தியுள்ளார்.


பிரான்சின் ஒரு கிராமத்தில்  தம்முடைய குடும்ப உறுப்பினர்களை நாஜிப்படையினர் படுகொலை செய்து விடுவதால் ஷோசன்னா அங்கிருந்து பாரிஸ் நகரத்திற்கு தப்பி பெயரை மாற்றிக் கொண்டு உறவினரின் திரையரங்கை நிர்வகிக்கின்றார்.

இத்தாலியில் உள்ள பிராட்பிட் தலைமையிலான அமெரிக்க-யூத கொரில்லா படைக்குழு ஒன்று 'இயன்ற அளவிற்கு நாஜிப்படையினரை கொல்வது' என்ற நோக்கத்துடன் இயங்கிவருகிறது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள்தான் 'Basterds' என்று அறியப்படுகின்றார்கள்.

போரில் பலரைக் கொன்ற காரணத்திற்காக 'கதாநாயகனாக' புகழ்பெற்றுள்ள Frederick Zoller என்கிற நாஜிப்படை வீரன் கிராமத்திலிருந்து தப்பிவந்த யூத நங்கையான ஷோசன்னாவால் கவரப்படுகிறான். அவன் செய்த வீர சாகசங்களை அடிப்படையாக வைத்து 'தேசத்தின் பெருமை' என்ற திரைப்படத்தை கோயபல்ஸ் உருவாக்குகிறார். வேறொரு அரங்கில் திரையிடப்படுவதாக இருந்த அந்தத் திரைப்படத்தை ஷோசன்னா மீதுள்ள காதலால் தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அவளுடைய அரங்கில் திரையிடப்படுவதற்கு ஏற்பாடு செய்கிறான். நாஜிப் படையினரின் உயர்மட்ட தலைவர்கள் பலர் அந்தத் திரைப்பட வெளியீட்டிற்கு வருவதான தகவல் தெரிந்ததும் ஷோசன்னா நாஜிகளை பழிவாங்க இதுவே சிறந்த தருணம் என்பதை உணர்கிறார். படம் ஓடிக் கொண்டிருக்கும் போது திரையரங்கை மொத்தமாக எரித்துவிடுவது என்பது அவளது திட்டம்.

இன்னொரு பக்கம் இன்னுமொரு குழு இதே திட்டத்துடன் இறங்குகிறது. திரைப்பட வெளியீட்டை அறிந்து கொள்ளும் இங்கிலாந்தின் உளவுத்துறை, திரையரங்கில்  நாஜி அதிகாரிகளை கொல்ல தம்முடைய ஆட்களை அனுப்புகின்றனர். இரட்டை ஏஜெண்ட்டான ஜெர்மனிய நடிகையும் 'Basterds' குழுவினரும் அவர்களுக்கு உதவுவார்கள். கடைசி தருணத்தில் ஹிட்லரும் அந்தத் திரைப்பட வெளியீட்டிற்கு வருவதாக முடிவு செய்யும் போது  பரபரப்பு அதி உச்சத்தை எட்டுகிறது.

தனித்தனியாக திட்டமிடப்படும் இந்த சதித்திட்டங்கள்,  அவற்றிற்கான சம்பவ நிகழ்வுகள், அவற்றின் பின்னடைவுகள், எக்கச்சக்கமாக நிகழும் கிளைமாக்ஸ் ... என்று ஒவ்வொன்றிலும் டாரண்டினோவின் பிரத்யேக முத்திரை பதிந்துள்ளது. கூர்மையான வசனங்கள்  டாரண்டினோவின் பிரத்யேக பலம். எந்த நேரத்திலும் துப்பாக்கி வெடிக்கலாம் என்கிற இறுக்கத்தை வன்முறையின் அழகியலோடு இணைத்து உருவாக்குவதில் திறமையானவர் என்பதை அந்தக் மதுக்கூட காட்சிக் கோர்வைகள் தெரிவிக்கின்றன. அதுவரை திகிலும் பரபரப்புமாக அமர்ந்திருக்கும் பார்வையாளன் காட்சியின் இறுதியில் பீர் குடித்த மூத்திரக்காரன் கழிவறையில் அடையும் ஆசுவாசத்தை அடைகிறான்.

 படத்தின் துவக்கத்திலிருந்தே டாரண்டினோவின் வசீகரம் துவங்கி விடுகின்றது. தன்னுடைய வீட்டை நோக்கி வரும் நாஜிப் படையினரைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அவர்களை எதிர்கொள்வதற்கான மனநிலையை வரவழைத்துக் கொள்கிறான் அந்தப் பண்ணையாளன். நாஜிப் படையின் அதிகாரி எதிரே அமர்ந்து தமது சாதுர்யமான உரையாடலினால் அவனாகவே 'யூதக்குடும்பத்தை ஒளித்து வைத்திருப்பதை' கண்ணீரோடு ஒப்புக் கொள்ள வைக்கும் காட்சிகள் அபாரம். Hans Landa என்கிற அந்த அதிகாரியாக நடித்திருக்கும் Christoph Waltz படம் முழுவதும் தம்முடைய திறமையான அலட்டிக் கொள்ளாத நடிப்பினால் பார்வையாளர்களை பிரமிக்கச் செய்கிறார். அதனால்தான் அகாதமி விருதின் Best Supporting Actor பிரிவில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருதை நிச்சயம் வெல்வார் என நம்புகிறேன்.

Frederick Zoller  தாம் எதிரிகளைக் கொன்ற சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் வன்முறைக்காட்சிகளை அவனே ரசிக்க முடியாத போது ஹிட்லரும் கோயபல்ஸீம் விழுந்து விழுந்து குரூர சிரிப்புடன் ரசிக்கின்றனர். கோயபல்ஸ் கூட ஒரு தருணத்தில் கண்ணீர் விடுகிறார்.

அப்போது அவர்களை கொல்வதான திட்டங்கள் நிறைவேறாத சூழ்நிலையை நோக்கி காட்சிகள் பயணித்த போது நான் மிகுந்த பதட்டமடைந்தேன். ஹிட்லர் குழுவை டாரண்டினோ சாகடிக்காமல் விட்டிருந்தால் நான் அவரை மன்னித்திருக்கவே மாட்டேன். அந்தச் சமயத்தில் நானும் ஒரு யூதனாகவே மாறியிருந்தேன். ஷோசன்னாவின் ஏற்பாட்டின் படி ஒருபக்கம் திரையரங்கம் பற்றியெரிய ஆரம்பிக்க மறுபுறம் பிராட்பிட்டின் ஆட்கள் மீதமுள்ளவர்களை துப்பாக்கியால் துளைக்கும் போதுதான் என்னுள் அதுவரை உச்சத்திலிருந்த பதட்டம் தணிய ஆரம்பித்தது. ஆனால் அப்போதைய என் மனநிலை ஹிட்லரின் குருரத்திற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல  என்கிற அபத்த உணர்வு பிறகுதான் உறைத்தது.

டாரண்டினோ-வின் திரைப்படங்களில் எப்போது துப்பாக்கி வெடிக்கும் என எதிர்பார்க்கவே முடியாது என்று மேலே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதற்கு மிகச்சரியான உதாரண காட்சி இறுதியில் நிகழ்கிறது.

திரையரங்கை எரிப்பதற்கான இறுதி பரபரப்பில் ஷோசன்னா இயங்கிக் கொண்டிருக்கும் போது,  தாம் சண்டையிட்டுக் கொன்ற காட்சிகளை தன்னாலேயே ரசிக்க முடியாத Frederick Zoller ஆறுதலுக்காக ஷோசன்னாவை தேடி ஆபரேட்டர் அறைக்கு வருகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத ஷோசன்னா அதிர்ச்சியடைந்தாலும் தம்முடைய பதட்டத்தை நிதானமாக மறைத்துக் கொண்டு அன்பாக பேசி அவனை அப்புறப்படுத்த முயல்கிறாள். நடக்கவிருக்கும் கொலைச்சதியை அறிந்திராத அவன், ஏன் இவள் தன் காதலை வெளிப்படுத்தாமலே வெறுப்பேற்றுகிறாள்? என்று புரியாமல் சற்று முரட்டுத்தனமாக அறைக்குள் பாய்கிறான்.

தன்னுடைய இறுதிச் செயலை நிறைவேற்ற முடியாமல் குறுக்கே நிற்கும் அந்தக் காதலனை என்ன செய்வது என்று அவள் சற்றும் யோசிப்பதில்லை.

()

அநேர்க்கோட்டு திரைக்கதையமைப்பிற்காக சிலாகிக்கப்படும் டாரண்டினோ, இந்தத் திரைப்படத்தை நேர்க்கோட்டு முறையிலேயே தன்னுடைய வழக்கமான பாணியில் அத்தியாயம் அத்தியாயமாக பிரித்துச் சொல்கிறார். என்றாலும் அவர் அமைத்திருக்கும் அபாரமான திரைக்கதை காரணமாக பார்வையாளனுக்கு  அது எவ்வித ஏமாற்றத்தையும் தரவில்லை. எனவேதான் இது சிறந்த படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் அகாதமி விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் உள்ளது. இதற்கான திரைக்கதையை 1998-லேயே அவர் எழுதியிருந்தாலும் இப்போதுதான் உருவாக்க முடிந்திருக்கிறது.

பிராட்பிட் எவ்வித கதாநாயக அதீதங்களும் அல்லாமல் ஒரு பாத்திரமாகவே வந்து போகிறார். அவரது  ஒப்பனையும் உடல் மொழியும் மார்லன் பிராண்டோவை நினைவுப்படுத்துகிறது.

சிறந்த இயக்குநராக டாரண்டினோவும் சிறந்த துணைநடிகராக Christoph Waltz-ம் சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருதையும் இத்திரைப்படம்  பெறும் என எதிர்பார்க்கிறேன். 

சன்னாசியின் பதிவு

suresh kannan

Saturday, March 06, 2010

ஆஸ்கர் நாமினேஷன் -2 (தி பிளைன்ட் சைட்)


 இந்த வரிசையில் இரண்டாவது படம்  THE BLIND SIDE.

செல்வராகவனின் ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் வகுப்பறையில் தூங்கி ஆசிரியரிடம் துடைப்பானால் அடிவாங்கி பின்பு கரும்பலகையில் தன்னுடைய ராமானுஜத் திறமையை நிரூபித்து விட்டு மறுபடியும் சென்று தனுஷ் தூங்குவார் அல்லவா? அந்தக் காட்சி உங்களிடம் அப்போது ஏற்படுத்திய உணர்வை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். இந்தப் படத்திலும் அதே மாதிரியான உணர்வுகளை நீங்கள் மீட்டெடுக்க நேரிடும். ‘உருப்படாத கேஸ்’ என்று சமூகம் புறக்கணிக்கும் மந்தமானவர்களையும் முறையான படி பட்டை தீட்டினால் வைரமாக்கி விட முடியும் என்கிற வழக்கமான கதை சென்டிமென்ட் காட்சிகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

Michael Oher, உயரத்திலும் அகலத்திலும் பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கும் ஓர் இளைஞன். மனதளவில் சிறுவன். பெரும்பாலான நீக்ரோ  கருப்பினச் சிறுவர்களுக்கான வறுமைப் பின்னணி. தந்தை சிறையில். தாய் போதைப் பொருள் விற்பனை. விளைவாக இவன் அநாதையாகிறான். இவனுடைய உறவினரொருவர் கால்பந்தில் இவனிருக்கிருக்கும் திறமையைக் காண்பித்து நல்லதொரு பள்ளியில் சேர்த்துவிட்டு கழன்று கொள்கிறார். மிக மந்தமாக இருக்கும் அவனுக்கு எப்படி கற்றுக் கொடுப்பது என்று ஆசிரியர்கள் சலித்துக் கொள்கின்றனர். பள்ளி முடிந்த நேரங்களில் பொது இடங்களில் தன்னுடைய நாட்களைக் கழிக்கிறான் Michael Oher.

அதே பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனின் தாய் அநாதையாக சுற்றித்திரியும் இவனைக் கண்டு பரிதாபப்பட்டு தற்காலிகமாக இருக்கட்டும் என்று தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். காலப்போக்கில் அந்தக் குடும்பத்தின் அன்புமிக்க ஒரு உறுப்பினனாக ஆகிப் போகிறான். இவனுக்குள் இருக்கும் விளையாட்டுத் திறமையைக் கண்டுபிடித்து அதில் அவனை அதில் உலகப் புகழ்பெற்றவனாக மாற்றுகிறாள் அவனுடைய வளர்ப்புத் தாய். 

Michael Oher என்பவரின்  உண்மையான கால்பந்து விளையாட்டு வீரரின்  வாழ்க்கையை குறிப்பிட்டு மைக்கேல் லூயிஸ் எழுதின The Blind Side: Evolution of a Game என்கிற நூலின் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. John Lee Hancock இத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

புதைந்திருக்கும் வைரமான Michael Oher-ஐ தத்தெடுத்து அவனை மீட்டெடுக்கும் தாயாக நடித்திருக்கும் Sandra Bullock-ன் அற்புதமான நடிப்பு இந்தத் திரைப்படத்தின் குறிப்பிட வேண்டிய அம்சமாகும். எனவேதான் அகாதமி 2010 விருதின் 'சிறந்தநடிகை' பிரிவில் இவரது பெயர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறது. 'ஒரு நீக்ரோ கருப்பினச் சிறுவனை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டோமே' என்று சந்தேகப்படும் போதும்,  ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையிலும் கணவரை convince செய்யும் போதும், ஒவ்வொரு தடையையும் தாண்டி அந்தச் சிறுவன் உயரும் போது மகிழும் போதும் .. என்று பல காட்சிகளில் இவரது நடிப்பு மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.

Michael Oher-ஆக  Quinton Aaron நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பு என்று சொல்ல இயலாவிட்டாலும் தம்முடைய பாத்திரத்திற்கு தேவையானதை போதுமான அளவிற்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க கால்பந்து விளையாட்டின் விதிமுறைகளை புரிந்து கொண்டு செயல்படுவதில் Michael Oher தடுமாறும் போது "நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தத் திசையிலிருந்து எப்படி ஆபத்து வந்தால் எப்படி எதிர்கொள்வாய் என்பதை நினைவில் கொண்டு ஆடு" என்று அவனுடைய அம்மா சொல்வதை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப விளையாட்டில் வெற்றி கொள்ளும் காட்சிகள் சுவாரசியமானவை. இந்தக் காட்சிக் கோர்வையின் ஆரம்பத்தில் அவன் எதிரே மோத வருபவனை விட்டுவிட்டு திடீரென்று வானத்தில் பறக்கும் காற்றாடியில் மனம் லயிப்பது அவனுள்ளிருக்கும் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தும் காட்சி.

வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்குமான தீராத பகைமையும் வெறுப்பும் மிக நுட்பமாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 'ஒரு கருப்பனையா தத்தெடுத்துக் கொள்ளப் போகிறாய்" என்று அந்த அம்மாவின் தோழிகள் கேட்கிறார்கள். அவர்களின் உரையாடலின் போது கறுப்பர்கள் வசிக்கும் பகுதிக்கே அவர்கள் சென்றதில்லை என்பதை உணர முடிகிறது. வறுமை காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு பாழாகும் சிறுவர்களை மீட்டெடுத்து முறையாக பராமரித்தால் Michael Oher போல அவர்களும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்பதையும் இந்தப்படம் அடிநாதமாக சுட்டிக் காட்டுகிறது.

நிஜமான Michael Oher-ன் புகைப்படங்கள் பட இறுதியில் காண்பிக்கப்படுகிறது.

இந்த மாதிரியான சென்டிமென்ட் படங்களை நாம் தமிழிலேயே அதிகம் பார்த்துவிட்டதால் எந்தவொரு பெரிதான ஆச்சரியத்தையோ பரவசத்தையோ இந்தப்படம் நமக்குத் தராது என்றுதான் நான் கருதுகிறேன். என்றாலும் காட்சிகளின் இடையில் வெளிப்படும் சில கவிதைக் கணங்களுக்காக இது 'சிறந்த திரைப்படத்திற்கான' பிரிவில் நாமினேஷன் ஆகியிருக்கலாம். முன்னரே சொன்னது போல் Sandra Bullock 'சிறந்த நடிகை' விருதைப் பெறக்கூடும். Golden Globe விருதை இதே தகுதிக்காக ஏற்கெனவே அவர் பெற்றிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. 

suresh kannan

Friday, March 05, 2010

ஆஸ்கர் நாமினேஷன் -1 (தி ஹர்ட் லாக்கர்)

மார்ச் 7ந்தேதி ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படவுள்ள சூழ்நிலையிலும் ஆஸ்கர் சுரத்தின் உச்சத்தில் பத்திரிகைகளும் இதழ்களும் ரசிகர்களும் பல்வேறு கணிப்புகளையும் புள்ளிவிவரங்களையும் அள்ளித் தெளிக்கும் பரபரப்பான தற்போதைய நிலையிலும்,  2010 அகாதமி விருதுகளின் நாமினேஷன் பட்டியலில் உள்ள “சிறந்த திரைப்படங்களின்” பிரிவில் உள்ளனவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக எழுத உத்தேசம்.

இந்த வரிசையில் முதல் திரைப்படம் THE HURT LOCKER.

'இந்த நாடு அந்த நாட்டை வென்றது: இது அதை வென்றது' என்று உலகப் போர்களைப் பற்றி பாடப் புத்தகங்களில் படித்துவிட்டு மதிப்பெண்களுக்குப் பிறகு மறந்துப் போகிறோம். 'எல்லையோரப் படைக்காவலர்களுக்கும் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்கிற ஒரு காலம் பத்திரிகைச் செய்தியை கா·பி அருந்தியபடி ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சினிமா பக்கத்திற்கு தாவி விடுகிறோம். இரு நாடுகளுக்கிடையில் சிறிதான ஒரு பிரச்சினை ஏற்பட்டால் கூட "அவங்களக் விட்டுருக்கக்கூடாது சார். மிலிட்டிரிய அனுப்பியிருக்கணும்" என்று ஓடும் பேருந்தின் நெரிசலில் நின்று கொண்டே சர்வதேச அரசியல் பேசுகிறோம்.

ஆனால் ஒரு போரை அதன் உக்கிரத்தை, கொடுமையை யதார்த்தமாக உணராமல் அதன் வலியை அதை எதிர்கொள்ளாத நாட்டு மக்களால் புரிந்து கொள்ளவே முடியாது. இன்னொரு பக்கம் போர் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், உயிர் மீதான பயம், குடும்பத்தினரைப் பிரிந்திருக்கும் ஏக்கம், கண்ணெதிரே சக நண்பன் தசைக்கூழாக கிடப்பதை பார்க்க வேண்டிய வேதனை, இது தொடர்பான உளவியல் பிரச்சினைகள் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். போர்ப் படங்கள் என்றாலே அது வீடியோ கேம்ஸின் அடிப்படை உத்தியோடும் சஸ்பென்ஸ்களான காட்சிகளோடும் எதிரிகளை அழித்த வெற்றிக் களிப்போடும் நிறையும். பார்வையாளர்களும் தானே அந்த வெற்றியை அடைந்த திருப்தியோடு இருக்கையிலிருந்து நகர்வார்கள்.


ஆனால் சில வருடங்களுக்கு முன் பார்த்த Das boot என்றொரு ஜெர்மானியப்படம் இதிலிருந்து வேறுபட்டிருந்தது. மிகுந்த ஆரவாரத்தோடும் தனிமனித சோகங்களுடன் பயணிக்கும் அந்த நீர்மூழ்கி கப்பலின் வீரர்கள் சுற்றிலும் கடல் சூழந்திருக்கும் தனிமையோடும், இயற்கையின் சீற்றங்களுடனும் எதிரியை எதிர்நோக்கி பயணிக்கிறார்கள், பயணிக்கிறார்கள், பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதிலும் நான் பார்த்தது uncut version வேறு. எப்போது நம்மை மரணம் எதிர்கொள்ளும் என்று தெரியாமலும் அப்படியே ஜலசமாதி ஆகிவிடுவோமோ என்ற பயத்துடனும் ஒவ்வொரு வீரர்களின் வெளிப்பாடும் ஒவ்வொரு விதமாக இருக்கும். பெரும்பாலான பகுதிகள் கப்பலின் உள்ளேயே நிகழ்வதால் அவர்களுக்கிடையே ஏற்படும் சோர்வு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

எப்படியோ எதிரிக் கப்பலொன்றை வீழ்த்தி விட்டு அவர்கள் திரும்பும் போது ... சரி படத்தைப் பாருங்கள்.


இதே போல The Hurt Locker-ம், போர்வீரர்களின் பிரச்சினைகளை உளவியல் ரீதியாக அணுகுகிறது. அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கில் நுழைந்த 2004-ல் படத்தின் நிகழ்வு துவங்குகிறது. சுற்றிலும் வெறுப்புடன் பார்க்கும் மக்களிடமும் ஆங்காங்கே குண்டுகளை ஒளித்து வைக்கும் தீவிரவாதிகளின் இடையில் எப்போதும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய சூழல்.

குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் (Explosive Ordnance Disposal) ஒரு குழுவில் குண்டு வெடிக்கப்பட்டு தாம்சன் இறந்து விட அவரின் இடத்தில் பணிபுரிய வருகிறான் வில்லியம் ஜேம்ஸ் (Jeremy Renner). உயிர் குறித்த பயமோ நடுக்கமோ இல்லாமல் அவன் குண்டுகளை விளையாட்டுப் பொம்மை போல் கையாள்வது சக வீரர்களை வியப்புடனும் திகைப்புடனும் பார்க்க வைக்கிறது. மாத்திரமல்லாமல் அனைவரும் பதைபதைப்புடன் சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது இவன் குழுவிடனுனான உரையாடல் தொடர்பை துண்டித்துக் கொண்டு தனியாக செயல்படுவதும் அவர்களை எரிச்சல் கொள்ள வைக்கிறது. மற்றவர்களுக்கு வெடிகுண்டென்பது மரணத்திற்கான அழைப்பாக தெரியும் போது ஜேம்ஸ் அதை ஒரு விளையாட்டில் வெற்றி கொள்ளும் விருப்பத்தோடு அணுகுகிறான். தான் செயலிழக்கும் குண்டுகளின் பாகங்களையெல்லாம் அடையாளச் சின்னமாக வைத்துக் கொள்கிறான்.

Bravo என்கிற இந்தக்குழு பாக்தாத் நகரத்தில் ஒளிக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் பரபரப்பாகவும் டாக்குமெண்டரி பாணியில் அதிகபட்ச நம்பகத்தன்மையுடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையேயுள்ள பதட்டமான பகடைக்காய் விளையாட்டு போலவே இந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தீவிரவாதிகள் கட்டிடததிலிருந்து திடீரென்று தாக்கும் தருணத்தில் வெட்ட வெளியில் நிற்கும் இவர்கள் ஒளிந்து கொள்ளக் கூடிய போதிய வசதியில்லாமல் இருக்கும் பாறைகளின் பின்னால் அமர்ந்து கொண்டு தீவிரவாதிகளை மிகுந்த சிரமத்திக்கிடையில் சுட்டு வீழ்த்துவதும் எல்லோரும் இறந்து விட்டார்களா எனத் தெரியாமல் மணிக்கணக்கில் அவர்களின் அசைவிற்காக தாகத்துடன் காத்திருக்கும் காட்சிகளும் போர்க்களத்தின் தீவிரத்தை உக்கிரமாக வெளிப்படுத்தக் கூடியவை. இந்தக் காட்சியையே தீவிரவாதிகளாக கருதப்படுகிறவர்களின் பார்வையில் இருந்து நோக்கினால் வேறொரு சித்திரம் வெளிப்படக்கூடும்.

படத்தின் இறுதிக்காட்சியொன்றில் தீவிரவாதிகளால் உடலெங்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு எளிதில் அதை எடுக்க முடியாதபடி பூட்டுக்களால் இணைக்கப்பட்டிருக்கும் அப்பாவியான ஒரு பொதுஜனம் உயிருக்காக அமெரிக்க ராணுவத்தினரிடம் கதறுவதும் குண்டு வெடிக்கவிருக்கும் கடைசி விநாடிகள் வரை அவரை மீட்க வில்லியம் ஜேம்ஸ் போராடுவதும் இயலாத நிலையில் அவரிடம் மன்னிப்பு கேட்வதும் அற்புதமான காட்சிகள். தாம் நிச்சயமாக இறக்கப் போகிறோம் என்று தெரிந்த அந்த பொதுஜனம் அது வரை கூப்பாடு போட்டிருந்ததை நிறுத்தி கடைசி தருணத்தில் அமைதியான முகபாவத்துடன் இறைவனை வழிபடும் காட்சியை என்னால் மறக்கவேயியலாது.

முன்னர் குறிப்பிட்டது போல வீரர்களுக்கிடையே நிகழும் உளவியல் ரீதியான பிரச்சினையும் இதில் சிறப்பாக அணுகப்பட்டிருக்கிறது. குழுவிலுள்ள மற்றவர்கள் பதட்டத்தடன் செயல்படும் போது ஜேம்ஸ் அது குறித்தான சுவடே இல்லாமல் விளையாட்டுணர்வோடு இருப்பது இவர்களை வெறுப்பேற்றுகிறது. கைப்பற்றப்பட்ட குண்டுகளை யாருமில்லாத மணற்பகுதியில் வைத்து வெடிக்கும் ஒரு சூழ்நிலையில்,  ஜேம்ஸ் தன்னுடைய கையுறைகளை குண்டுகளிருக்கும் பகுதியில் மறந்து வைத்து விட்டதாக கூறி எடுத்து வர புறப்படுகிறான். அவன் அபாயப் பகுதியில் இருக்கும் போது சக வீரனான Sanborn, ‘இப்போது குண்டை வெடிக்க வைத்து விட்டு விபத்து நேர்ந்ததாக ரிப்போர்ட் எழுதி விடலாம்’. என்கிறான்.

அந்தக் கணத்தின் வெறுப்பில் அவன் அதை விளையாட்டாகக் கூறுகிறான் என்பதை யூகிக்க முடிந்தாலும் ஜேம்ஸ் மீது அவனுள் பதிந்திருக்கும் எரிச்சலுணர்வை வெளிப்படுத்தும் காட்சியாக எடுத்துக் கொள்ளலாம். முரட்டுத்தனமாக சித்தரிக்கப்படும் இவன் இறுதிக் காட்சியில் தொடர்ந்து மரணத்தை நெருக்கமாக பார்க்க நேரும் தொழிலை நினைத்து கதறி அழுகிறான். "இந்த ஒப்பந்தத்தோடு இதை தொடரப் போவதில்லை ஜேம்ஸ். எனக்கென்று ஒரு மகன் வேண்டும். அதற்காகவாவது நான் உயிரோடு இருக்க வேண்டும்".

இன்னொரு வீரனான Eldridge-ன் பகுதிகளும் சுவாரசியமானது. தாம்சனின் மரணத்தைக் கண்ட பதட்டவுணர்வோடு அலையும் இவனை கவுன்சலிங் செய்ய வரும் ஒருவரை "களத்தில் சண்டையிட்டால்தான் அது உனக்குப் புரியும்" என அலட்சியப்படுத்துகிறான். இவனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு களத்திற்கு வரும் அவர் வெடிகுண்டுப் பையின் மீது காலை வைத்து வெடித்துச் சிதற, Eldridge-ன் பதட்டமும் குற்றவுணர்வும் அதிகமாகிறது. இறுதிக்காட்சியில் காயமடையும் இவன் "நீ ஒரு வெறி பிடித்தவன்" என்று ஜேம்ஸை திட்டிவிட்டுச் செல்கிறான்.

ஒப்பந்த நாட்கள் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் ஜேம்ஸ், திரும்பவும் களத்திற்குச் செல்ல முடிவு செய்து அதற்கு முன் தன்னுடைய சிறிய மகனிடம் உரையாடும் காட்சி அற்புதமானது. "இந்த வயதில் அற்புதமாகத் தோன்றும் விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் நீ வளர்ந்தவுடன் அற்பமானதாகிவிடும். இன்னும் பெரியவனாகும் போது அப்படி அற்பமாகும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகி அற்புதமாகத் தங்கும் விஷயங்கள் ஒன்றோ அல்லது இரண்டோதான் மீதமாகும். அப்படி எனக்கு அற்புதமாகத் தேங்கியிருக்கும் விஷயம் ஒன்றேயொன்றுதான்".

அவன் பாம் ஸ்குவாட் உடையுடன் நடக்கும் அடுத்த காட்சியில் அந்த அற்புதம் என்னவென்று நம்மால் உணர முடிகிறது. குண்டுகளை வெற்றிகரமான எடுப்பதில் உள்ள ஆர்வம் மாத்திரமல்ல அது. அதன் மூலம் பல அப்பாவி மக்களை காப்பாற்றும் வாய்ப்பும் அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியும்தான் அந்த அற்புதம் என்பதாக படம் நிறைகிறது.

()

அவ்தார் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவியான Kathryn Bigelow இத்திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். 'அவ்தார் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைக்கலாம்' என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவரது முன்னாள் மனைவியின் இந்தத் திறமையான உருவாக்கம் கடுமையான போட்டியாக நிற்கும் நிலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகாதமி விருதில் ஒன்பது பிரிவுகளில் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் இந்தத் திரைப்படம்தான் 'சிறந்த திரைப்பட' பிரிவில் வெல்லும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் உள்ளது. அதற்கு முன்னோட்டமாக சிறந்த படம் உள்ளிட்ட ஆறு விருதுகளை BAFTA-வில் பெற்றுள்ளதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வில்லியம் ஜேம்ஸாக நடித்த Jeremy Renner சிறந்த நடிகருக்கான பட்டியலில் உள்ளார். ஒலிப்பதிவு பிரிவிலும் இத்திரைப்படத்திற்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.  

suresh kannan

Thursday, March 04, 2010

ஊடகங்களின் விபச்சாரம்


அன்று வீட்டுக்குத் தாமதமாகத்தான் திரும்பியதால் சமீபத்திய பரபரப்பான அந்த 'வீடியோக் காட்சிகள்' செய்தியில் ஒளிபரப்பாவது குறித்து எதுவும் தெரியாமல் உறங்கி விட்டேன். மறுநாள் காலை என்னுடைய ஒன்பது வயது மகள் தூங்கி எழுந்தவுடனே என்னிடம் கேட்ட கேள்வி "யாருப்பா அந்த ஆர் நடிகை?". எனக்குப் புரியவில்லை. முந்தைய நாள் மாலை பார்த்த அந்தச் சாமியார் செய்தியைக் குறிப்பிட்டு கேட்டாள். "நீங்க கூட முன்ன அவங்கள்லாம் கெட்டவங்கன்னு சொல்லியிருந்தீங்கல்ல. நெஜம்தான். அவங்க கெட்டவங்கங்கதான்னு ப்ரூவ் ஆயிடுச்சு" என்றாள்.

சில மாதங்களுக்கு முன்பு ஏதோவொரு சானலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நித்யானந்தா பிரசங்கித்துக் கொண்டிருந்த காட்சிகளை தற்செயலாக நாங்கள் பார்க்க நேர்ந்தது. "யாருப்பா இவரு" என்று கேட்ட மகளிடம் "பொதுவா இந்த மாதிரி ஆளுங்கல்லாம் பிராடாத்தான் இருப்பாங்க. நம்பி ஏமாறக்கூடாது" என்றேன். உடனிருந்த மனைவி "அப்படியெல்லாம் ஒருவரைப் பற்றி தெரியாமல் பேசி விடக்கூடாது" என்றார். பிறகு சாமியார்கள் பொதுவாக நல்லவர்களா, கெட்டவர்களா என்ற விவாதத்தில் நான் கெட்டவர்கள் பக்கத்தில் நின்றேன்.

அதைத்தான் அவள் "கெட்டவங்கதாம்ப்பா" என்று குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஒளிபரப்பான செய்தியைப் பற்றி கூறி விட்டு உடனடியாக மறுபடியும் கேட்டாள். "யாருப்பா அந்த ஆர் நடிகை?". எஸ்எம்எஸ் புதிர் போட்டிகள் மாதிரி வார இதழ்களில் எழுதப்படும் இந்த மாதிரி கிசுகிசுக்களில் நடுத்தர வயது நபர்களே அதிகம் ஆர்வம் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். இது இப்போது இளைய தலைமுறைக்கும் பரவி விட்டதை நினைத்து ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது. எனக்கும் அது குறித்த குறுகுறுப்பு இருந்தாலும் அலுவலகம் போகும் வழியில் ஊரெல்லாம் இதே பேச்சாக இருந்ததை கவனித்தேன். பின்பு அலுவலக இணையத்தில் அந்தக் காட்சிகளை பார்த்த போது "அடப்பாவிகளா! இதையா ஒளிபரப்பினார்கள்?" என்று அதிர்ச்சியாக இருந்தது.

நம் சினிமாக்களில் இல்லாத ஆபாசமா? என்று இது குறித்து எழும் கேள்வி சரிதான் என்றாலும் இம் மாதிரியான உண்மைச் சம்பவங்களில் உள்ள ஆபாசம் அதிக அழுத்தத்துடனும் பரபரப்புடனும் நம் மனங்களில் பதிவாகும். அதுதான் ஒரு கேள்வியாக உருவெடுத்து மகளுடைய வடிவில் என் முன் நிற்கிறது. தார்மீகப் பொறுப்புடன் இயங்க வேண்டிய ஊடகங்கள் வியாபாரப் போட்டி காரணமாகவும் அதன் அரசியல் காரணமாகவும் எல்லாவற்றையும் மிதித்துக் கொண்டு நடக்கும் போது வெறுப்பு மண்டுகிறது.

சாமியாரை வெளிப்படுத்தியதையாவது போலி பிம்பங்களின் மீதான மெலிதான அறச்சீற்றமாக எடுத்துக் கொண்டு சமாதானமடையலாம். ஆனால் முதல் நாள் மறைத்து வெளிப்படுத்தப்பட்ட அந்த பெண்ணின் முகம், அடுத்த நாளில் வெளிப்படையாகவே பெயர் குறிப்பிடப்பட்டு ஒளிபரப்பியதில் என்ன அறம் இருக்கிறது?

பொதுவெளியில் கலாச்சார பாசாங்குகளுடன் இயங்கும் நம் மனம், திரை இருட்டில் நடிகைகளின் அங்கங்களை எச்சிலொழுக வெறித்துப் பார்க்கும் அதே உணர்வுடன்தான் இந்த செய்திக் காட்சிகளையும் பார்க்கும். பளபளப்பான தோல்களின் பின்னால் உள்ள அவர்களின் வலியையும் வேதனையையும் பற்றி நாம் கற்பனை செய்து கூடப் பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயது வரை எல்லாப் பெண்களைப் போலவே வளரும் அவர்கள், நடிகையான பின்னர் பணம் செய்யும் இயந்திரமாகவே அவரது சுற்றத்தால் பெரும்பாலும் பார்க்கப்பட்டு அதிகபட்ச உழைப்பால் சுரண்டப்படுகிறார்கள். ஒருநிலையில் இதைக் கண்டு கொள்ளும் நடிகைகள் மன அழுத்ததிற்கும் உளப்பிரச்சினைகளுக்கும் ஆளாகி அவை அவர்களை பல்வேறு குழப்பமான நிலைகளுக்கு உந்தித் தள்ளுகிறது. உலகத்தை ரட்சிக்க வந்திருப்பதாக தம்மை முன்நிறுத்திக் கொள்ளும் கார்ப்பரேட் சாமியார்கள், இந்தக் குழப்பத்துடன் வருபவர்களை ஆன்மீக போர்வைக்குள் நிர்வாணமாக தள்ளுகின்றனர். தமக்கு ஆதாயமுள்ள சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் தருவதாக பாவனை செய்யும் நடிகர் சங்கம், இவர்களைப் போன்றவர்களை அவர்களின் உளவியல் ரீதியான அழுத்தங்களிலிருந்து வெளிவரும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

()

ஓர் ஆணும் பெண்ணும் தாமாகவே விரும்பி உடல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுக்கிடையில் சட்டமே நுழைய எந்தவித முகாந்திரமும் இல்லாத போது, அதை ஊரெங்கும் பரப்பும் அதிகாரத்தை ஊடகங்கள் தாமாகவே எடுத்துக் கொள்வது கடுமையான நடவடிக்கைகளின் மூலம் ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டிய தருணமிது. குறிப்பிட்ட சானல் இந்தச் செய்தியை பெண்ணின் மறைக்கப்பட்ட முகத்துடன் வெளிப்படுத்தியது, இன்னொரு பத்திரிகையின் இணைய தளம் அந்தப் பெண்ணை வெளிப்படையாக வெளிப்படுத்தியது. "முழு வீடியோவையும் பார்க்க வேண்டுமானால் காசு தா" என்று கையேந்தியது இன்னும் கேவலம். நீலப்படங்களை ஒளிபரப்பும் பே சைட்டுக்களாவது, நிர்வாணக் காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ளும் நபர்களின் காட்சிகளைத்தான் காட்டுகிறது. யாரோ ஒருவரின் நிர்வாணத்தை உபயோகப்பபடுத்திக் கொண்டு காசு பறிக்கும் இந்த மாதிரியான ஊடகங்களின் விபச்சாரத்தனம் அருவருப்பூட்டுகிறது. இந்த சாமியாரை பல வருடங்களாக முன்நிறுத்திக் கொண்டிருந்த ஒரு வார இதழ், இப்போது அது குறித்த வெட்கமோ குற்றஉணர்வோ இல்லாமல் அவர்களின் தளத்தில் சாமியாரின் லீலைகள்" என்று அதையும் பரபரப்பாக விற்பனை செய்யும் போது இவர்கள் எந்த நிலைக்கும் இறங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

ஒரு வீடியோ காட்சி,  அதுவரை வழிபட்டுக் கொண்டிருந்த பிம்பத்தின் மீதான எதிர்மறை வன்முறையை ஒரே கணத்தில் நம்மிடம் தூண்டும் நிலையைப் பார்க்கும் போது  ஆன்மீக தளத்தில்  நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்று தோன்றுகிறது. எந்தவொரு மனிதனாலும் இறக்கும் வரை கூட காமத்தை கடந்து வர முடியாத நிலை இருக்கும் போது சாமியார்களிடம் இதை எப்படி நம்மால் நம்பி ஏமாற முடிகிறது? இம்மாதிரியான சாமியார்களை ஆரம்ப நிலையில் பணச்செல்வாக்கும் ஊடகங்களும் பொதுவெளியில் முன்நிறுத்தினாலும் அவர்கள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்க காரணமாயிருப்பவர்கள் யார்? இந்தச் சமூகம்தான். அதாவது நாம்.

சாமியார்களைத் தேடிப் போவதில் அடித்தட்டு, மேல்தட்டு, படித்தவன், அல்லாதவன் என்று எந்தவித வித்தியாசங்களும் இருப்பதில்லை. மேல்தட்டு மக்களுக்கு 'ஏஸி அறை கார்ப்பரேட் சாமியார்கள்' என்றால், அடித்தட்டு மக்களுக்கு இருக்கவே இருக்கிறார்கள் பீர் சாமியார்களும் தேங்காயை நச்சென மண்டையில் உடைக்கும் பூசாரிகளும். இம்மாதிரியான போலிகளை அடையாளங் கொண்டு விலகியிருக்கும் பகுத்தறிவு நபர்களும் எல்லாத் தட்டுக்களிலும் இருக்கிறார்கள். "சாமி கும்பிடணும்னா நேரா போயி கும்பிடு. இதுக்கு எதுக்கு சார் நடுவுல புரோக்கர்?. நாமளாத்தான் போயிதானே அவன்க கால்ல வுழறோம்" என்று ஆவேசமாக பேசிக் கொண்டு வந்தார் ஒர் ஆட்டோ ஓட்டுநர்.

தவிர்க்கவேயியலாத பட்சத்தில் இந்தச் சாமியார்களை எப்படி அணுக வேண்டுமென்றால், அவர்களிடமிருந்து யோகாவோ, தியானமோ அல்லது எந்தவித பயிற்சியோ கற்றுக் கொண்டு எந்தவொரு தொழில்முறைக்காரர்களையும் போல அவர்களை அந்த நிலையிலேயே நிறுத்தி விட வேண்டும். மாறாக அவர்களை கடவுளாகவோ அவதாரமாகவோ பரவச நிலையில் நாமாக உருவகப்படுத்திக் கொண்டு பிறகு அவர்கள் நிர்வாணமாக படுக்கையில் புரள்வதை காணும் போது அதிர்ச்சியும் சினமும் கொள்வதில் எவ்வித உபயோகமுமில்லை.

இச் சமூகதின் பெரும்பான்மையே அனைத்து வித விகாரங்களுடன் இயங்கும் போது அச்சமூகத்தின் ஒரு அங்கமாகிய சாமியார்களிடம் மாத்திரம் புனிதத் தன்மையை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. ஆன்மீக இடைத்தரகர்களை முற்றிலுமாக நாம் புறக்கணிக்கும் வரை இம்மாதிரியான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

suresh kannan

Monday, March 01, 2010

நாளைய இயக்குநர்


 இப்படியொரு நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் அறிவிப்பைக் கேட்ட போது அதைக் காண்பதற்கு சற்று எதிர்பார்ப்பு இருந்தது. ஓரு திரைப்பட இயக்குநராக ஆக வேண்டும் என்கிற என் நிறைவேறாத இளவயது ஆசை காரணமாக இம்மாதிரியான போட்டிகளைக் காண அதிக ஈடுபாடு உண்டு. அசோக் அமிர்தராஜின் இதே போன்றதொரு "GATEWAY" நிகழ்ச்சி சோனிபிக்ஸ்-ல் ஒளிபரப்பான நேரம் இரவு 10.00 மணி என்றாலும் காத்திருந்து பார்த்து வந்தேன். ஆனால் 'நாளைய இயக்குநர்' முதல் எபிசோடை பார்க்கும் போது பெரிதான ஈர்ப்பு எதையும் அது ஏற்படுத்தவில்லை. பிரதாப்போத்தனும் மதனும் பிரதான நடுவர்களாக இருக்க, ஒவ்வொரு எபிசோடின் போதும் ஒரு சினிமா இயக்குநர் விருந்தினராக வந்திருந்து பங்கு பெறும் போட்டியாளர்கள் உருவாக்கியிருக்கும் குறும்படங்களின் மீதான தன்னுடைய கருத்துக்களைச் சொல்வார். நிகழ்ச்சி பிடிக்காமலிருக்க அதன் தொகுப்பாள பெண்ணும் ஒரு காரணமாயிருக்கலாம். எனவே தொடர்ந்து அதை பார்ப்பதில்லை.

ஆனால் ஞாயிறான நேற்று சாவகாசமாக சானல்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது மேற்குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த ஒரு குறும்படம் அடுத்த சானலுக்கு மாற்ற விடாமல் உடனடியாக என்னை ஈர்த்தது. அந்த வாரம் காமெடி சப்ஜெக்ட்டை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும்.

மனைவியை கன்னாபின்னாவென்று சந்தேகப்படும் ஒரு கணவன். அவள் என்ன நிறத்தை அவனிடம் சொல்கிறாளோ, அதை சரியாக யூகித்து அதே நிறத்தில் உடை, வீடு, என்று மாற்றி வந்து நிற்கும் ஓர் இளைஞன். எப்படி அவனுக்கு இவள் சொல்லும் நிறமெல்லாம் சரியாக தெரிகிறது என்று மேலும் மேலும் சந்தேகப்பட்டுக் கொண்டேயிருக்கிறான் அந்தக் கணவன். இப்படியாகச் செல்கிறது அந்த குறுங்கதையின் மையம். ஆனால் இதை எடுத்திருப்பதற்காக இயக்குநர் அதிகம் மெனக்கெட்டு உழைத்திருப்பது பிரமிப்பை ஏற்படுத்தியது. கணினி நுட்பத்தை மிகப் பொருத்தமாக படத்தில் பயன்படுத்தியிருந்தார் அவர்.

கணவராக நடித்தவர் 'காதல்' திரைப்படத்தில் பரத்திற்கு நண்பராக நடித்த சுகுமார். அவரது மனைவியாக நடித்தவரும் நகைச்சுவை நடிப்பை மிகத் திறமையாக கையாண்டிருந்தார். மனைவியைக் கவர்பவராக வரும் அந்த இளைஞரின் நடிப்புதான் அனைவரையும் விடவும் அதிக பட்ச திறமையுடன் வெளிப்பட்டிருந்தது. இத்தனைக்கும் அவருக்கு எந்தவொரு வசனமும் கிடையாது. வெறும் உடல் மொழியிலேயும் நுட்பமான சைகைகளாலுமேயே பார்வையாளர்களைச் சிரிக்க வைத்திருந்தார் அவர். நடுவர்கள் முதற்கொண்டு பார்வையாளர்கள் அனைவரையுமே கவர்ந்த அந்த நடிகரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றிற்று.

விருந்தினராக வந்திருந்த இயக்குநர் பாண்டியராஜன்தான் அதை தெளிவுப்படுத்தினார். வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' திரைப்படத்தில் தனுஷின் பைக்கை திருடிச் செல்பவராக நடித்திருக்கும் அவரின் பெயர் 'சென்ராயன்' (என ஞாபகம்). அந்தத் திரைப்படத்தில் மிகக் குறுகிய நேரமே வந்திருந்தாலும் வடசென்னைவாசியின் மொழியையும் உடல் மொழியையும் மிகத் திறமையாக வெளிப்படுத்தியிருப்பார். எனவேதான் அத்திரைப்படம் குறித்து எழுதிய இடுகையில் இவரின் பாத்திரத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டிருந்தேன்.
"கூட்னு போ. அட்ச்சி கிட்சி போட்றப் போறன்" என்று தவ்லத்தாக ஒரு ஆசாமி வருவாரே......அவர்தான் வடசென்னையின் அசலான முகம்.
 மற்ற போட்டியாளர்களின் குறும்படங்களை என்னால் காண இயலவில்லையென்றாலும், என்னை ரொம்பவும் கவர்ந்த இந்தக் குறும்படமே அந்த எபிசோடில் முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இயக்குநரின் பெயர் கூட என் நினைவிலில்லை. அடுத்த வாரம் முதல் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து காண வேண்டும் என்கிற ஆவலை இந்தக் குறும்படம் ஏற்படுத்தியிருக்கிறது.

எத்தனை திறமைகள்!. 

suresh kannan

பாகவதர்


 தேங்காய் மூடி பாகவதர் முதற்கொண்டு ஏஸி கச்சேரி பாகவதர்கள் வரை எத்தனையோ பேர் இருந்தாலும் 'பாகவதர்' என்றாலே தமிழக மனங்களில் சட்டென உடனே நினைவுக்கு வருவது ஓர் உருவம்தான். தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரையின் மிக உச்சமாக இயங்கி பின்னர் வீழ்ந்த நட்சத்திரமாக மறைந்துப் போனவர். வாழ்வின் நிலையாமைக்கு மிகச் சிறந்ததொரு தத்துவ உதாரணம். பண்டிதர்கள் தங்கள் குழுவில் பொத்தி வைத்திருந்த கர்நாடக இசையை பாமரருக்குச் சென்று சேர்த்த நபர்களில் பிரதானமானவர். ஒரு முறையாவது இவரை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று பெண்களை ஏங்க வைத்த அப்போதைய காதல் மன்னன்.

சிறுவயது  தூர்தர்ஷன் நாட்களில் இவரது பாடல்கள் வரும் போதெல்லாம் கிண்டலடித்துக் கொண்டே தலை தெறிக்க ஓடுவோம்.  சற்று ருசி தெரிந்த பின் கேட்ட பிறகு அதன் நுணுக்கங்கள் தெரியாவிடினும் உள்ளுணர்வின் ரசனை காரணமாக பாகதவர் பாடல்களில் பித்துக் கொண்டேன். 'தீன கருணாகரனே நடராஜா' வை மாத்திரம் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்ற கணக்கில்லை.

இன்று அவரது நூற்றாண்டு பிறந்த தினம். இது தொடர்பாக இந்து நாளிதழில் இன்று வெளிவந்த எஸ்.முத்தைய்யாவின் கட்டுரையை  இங்கு வாசிக்கலாம்.

 suresh kannan