Sunday, September 15, 2013

மூடர் கூடம்


தமிழ் சினிமா எண்பது ஆண்டுகளைக் கடந்திருந்தாலும்  black comedy எனும் அபத்த நகைச்சுவை வகைமைக்கு அதில் இடமேயில்லாமலிருந்தது. தற்செயலாக சில உதிரிகள் அமைந்திருக்கலாம். தில்லானா மோகனாம்பாள் வைத்தியை இந்த வகையில் சேர்ககலாமா?.. மேற்கில்...Quentin Tarantino, Coen brothers, Guy Ritchie போன்ற இயக்குநர்கள் இதில் விற்பன்னர்கள்.

இந்த வகைமையிலான பிரக்ஞையுடன்  தமிழில் வந்த முதல் திரைப்படம் என தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டத்தை சொல்லலாம். அதைத் தொடர்ந்து  'சூது கவுவும்' போன்ற முயற்சிகள். இப்போது 'மூடர் கூடம்'.

என்றாலும் ஆரண்ய காண்டம், மற்றவை தொட்டு விட முடியாத, ஒப்பிட முடியாத அதே உயரத்திலேயே இருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

***

முதலில் இயக்குநர் நவீனைப் பாராட்டி விடலாம். முதல் படமாக இருப்பதால் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள பாதுகாப்பாக வழக்கமான தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட்டின் பின் ஓடாமல் வித்தியாசப்பட்டு நிற்க வேண்டும் என்கிற முடிவிற்காகவும் பிடிவாதத்திற்காகவும். நவீனுக்கு நவீன சினிமாவின் இலக்கணங்கள் குறித்த அறிவும் இலக்கணமு்ம் தெரிந்திருக்கிறது என்பதை அறியவே மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டில் வளரும் நாய் முதற்கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான பிரத்யேக வார்ப்பையும், பின்புலத்தையும் கதைச் சூழலுக்கு பொருத்தமாக உருவாக்கியுள்ளார். அப்படியே ஒவ்வொரு பாத்திரத்திற்கும், துவக்க கால மெளன சினிமா, அனிமேஷன் என்று வகைவகையான பிளாஷ்பேக்குகள். (அதற்காக கிளைமாக்ஸ் முன்பு வரை கூட பிளாஷ்பேக் நீட்டித்திருப்பது சற்று ஓவர்தான்).
 
அதே போல் திரைக்கதையையும் பாத்திரங்களையும் பாடல்களையும் கூட தன்னுடைய பிடிவாதத்தின்படியே உபயோகித்திருக்கிறார் என யூகிக்கிறேன். படத்தில் பல இழைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. சுமார் பன்னிரெண்டு வயதுச் சிறுமிக்கு, 25 வயது இளைஞன் மேல் வரும் அந்த இனக்கவர்ச்சி, இதுவரை தமிழ் சினிமா பார்த்திராதது. வயதுக்கு வந்த பெண்ணை, தந்தை உட்பட எவரும் அடிக்கக்கூடாது என்பதற்கு சொல்வதற்கான பழமையான காரணமும் அதில் அடங்கியிருக்கிறது. அதற்காக தமிழ் சினிமாவிலிருந்து உதாரணம் ஒன்றை முன்னோட்டமாக அவர் தந்திருப்பதும் சிறப்பு. அதே போல் செண்ட்ராயன் எனும் திறமையான இளைஞனை சிறப்பாக பயன்படுத்தியிருப்பதும்.
 
சாதாரணமாகச் சென்று கொண்டிருக்கும் வசனங்களில் சில 'அட' என்று நிமிர்ந்து பார்க்குமளவிற்கு புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கின்றன. (காதல் தோல்வி -ன்றதுலாம் ஆடம்பரமான விஷயம். சோத்துக்கே லாட்டரி அடிக்கற நமக்கு அதெல்லாம் தேவையா). அது போல் கஞ்சா வாங்க வருகிறவர் பனியனில் உள்ள காந்தி படம், சுடப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறவர் பந்து விளையாடும் படம்... என்று பல காட்சிகள், எதிர்பாராத இடங்களில் வித்தியாசமான பாடல் காட்சிகள் என ரகளையாகவே உள்ளன.


***
ஆனால் படம் எங்கே தவறி விட்டது என்றால் படத்திற்குள் இயங்கியிருக்க வேண்டிய நம்பகத்தன்மையிலும் தீவிரத்தன்மையிலும். ஒரு சிறந்த நகைச்சுவைப் படத்தை எடுப்பதே கடினமான காரியம் எனும் போது, எதிர் அறத்தினைப் பாட வேண்டிய பிளாக் காமெடி திரைப்படத்தை உருவாக்குவது இன்னமும் சிரமமான காரியம். நகைச்சுவையான சம்பவங்கள், காட்சிகள், வசனங்கள் என்றாலும் மைய இழையாக ஒரு தீவிரத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
 
க்ளிஷே எனும் விஷயத்தை பகடி செய்ய வேண்டிய இந்த வகைத்திரைப்படமே பல க்ளிஷேக்களில் மாட்டிக் கொண்டியிருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு வீட்டை நான்கைந்து முட்டாள்கள் இணைந்து கொள்ளையடிக்க முடிவு செய்வதிலிருந்து பொம்மைக்குள் வைரத்தை ஒளித்து வைப்பது வரை பல க்ளிஷேக்கள். மேலும் பல நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும் சுவாரசியமற்ற திரைக்கதையினாலும் சமயங்களில் முதிர்ச்சியற்ற ஒரு டெலி பிலிமைப் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது.
 
ஒரு காட்சியில் துப்பாக்கியைக் காட்டினால் பின்பு எங்காவது அது வெடித்தேயாக வேண்டும் என்கிற அடிப்படையெல்லாம் சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிற இயக்குநர் நவீன் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். ஆனால் இன்னமும் கடுமையாக உழைத்திருந்தால் 'மூடர் கூடத்தை' சிறப்பாக உருவாக்கியிருந்திருக்கலாம். என்றாலும் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிற அவருக்குப் பாராட்டுக்கள்.
 
வழக்கமான மசாலா சினிமாக்களை எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாய் பிடிக்காது. மாறாக அதிலிருந்து சலித்துப் போய் மாற்று முயற்சிகளை விரும்பகிறவர்களுக்கும் ஆதரிக்க விரும்புகிறவர்களுக்கும் இது நிச்சயம் ஒரு ஆறுதலான முயற்சியாகத் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.

suresh kannan

Wednesday, September 11, 2013

தலைவா முதல் தலைவலி வரை


 
அரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்கான சமீபத்திய உதாரணம், விஜய் நடி்தது விஜய் இயக்கி (ஐயோ, ஒரு விஜய் யையே நம்மால் தாங்கமுடியவில்லை) வெளிவந்த அதாவது வெளிவர முயன்ற.. 'தலைவா'. இதற்கு முந்தைய உதாரணம் விஸ்வரூபம்.
 
இந்தப் படம் வெளிவருவதற்கு தடையாய் இருப்பதாய் கருதப்பட்ட அரசியல் காரணங்கள் படத்தை விடவும் அதிக சுவாரசியமாயிருக்கின்றன. கடந்த கால ஆட்சியில் தன்னுடைய திரைப்படமான 'காவலன்' வெளிவருவதற்கு திரையரங்குகள் கிடைப்பதில் அப்போதைய தமிழ் சினிமாவின் சர்வாதிகாரிகள் தடையாய் இருந்ததால், அதிமுக பக்கம் சாயத் துவங்கினார் விஜய். தேர்தல் சமயத்திலும் மறைமுகமாக ஜெயலலிதாவை ஆதரித்தார். ஆனால் இந்த அரசியல் பூமராங் தன் பக்கமே திரும்பலாம் என்பதை அப்போது யூகிக்கத்தவறி வி்ட்டார் என்று தோன்றுகிறது. இவ்வாறு அரசியல் ரீதியாக தமிழ் சினிமா பழிவாங்கப்பட்டதற்கு 'முகம்மது பின் துக்ளக்' முதல் 'முதல்வன்' வரை என்று பல முன்னுதாரணங்கள் உள்ளன. 
 
கடந்த ஆகஸ்டு 9 ந்தேதி வெளிவந்திருக்க வேண்டிய திரைப்படத்திற்கு அதற்கு வெகு சில நாட்கள் முன்பு படம் வெளிவராமலிருப்பதற்கான திரைமறைவு பணிகள் துவங்கி விட்டதாக தெரிகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மெத்தனமாய் அல்லது இயங்காமலேயே போகும் அரசு இயந்திரம், இம்மாதிரியான பணிகளுக்கு நெருக்கடி காரணமாக சுறுசுறுப்பாக இயங்கும். படத்திலுள்ள சில ஆட்சேபகரமான விஷயங்களினால் படம் வெளிவந்தால் திரையரங்குளில் குண்டு வைப்போம் என்று  'யாரோ' கடிதம் அனுப்பியதாலும்,  திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட முடியாத சூழலில் இருப்பதாலும், சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக படம் வெளியாகாது என்பது போன்ற செய்திகள் வெளியாகின. 'அவ்வாறெல்லாம் இல்லை. இந்த விவகாரத்திற்கும் காவல்துறைக்கும் தொடர்பில்லை. இது திரைப்படத்துறை தொடர்பான பிரச்சினை' என்று தமிழக காவல்துறை இந்த விவகாரத்தை அவசரம் அவசரமாக கை கழுவியது. இதைத்தவிர இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, முன்னர் சர்வாதிகாரிகளாக இருந்தவர்களின் சானலுக்கு விற்கப்பட்டதால் (அரசியலில் மட்டுமல்ல வணிகத்திலும் நிரந்தர நண்பனும் கிடையாது, பகைவனும் கிடையாது) இப்போதைய அரசு கோபம் கொண்டதாகவும் ஒரு செய்தி. வருங்கால முதல்வர் கனவில் விஜய் தரப்பு செய்யும் ஆர்ப்பாட்டங்களால் ஜெயலலி்தா கோபம் கொண்டதாகவும், எனவே விஜய் தரப்பை தட்டி வைக்க படத்தை தடை செய்ததாகவும் இன்னொரு வதந்தி.
 
இப்படி பல வதந்திகள் உலவிக் கொண்டிருக்க படம் வெளிவர முடியாததற்கான காரணம் பொதுமக்களுக்கு தெரியாவிட்டாலும், அது குறைந்தபட்சம் விஜய்க்காவது தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க கொடநாடு சென்ற விஜய், சந்திக்க முடியாத காரணத்தால் தவிக்க, மனுவை பங்களாவின் வாட்ச்மேன் பெருந்தன்மையுடன் 'அரசு மரியாதையுடன்' வாங்கிக் கொண்டதாகவும் கூட ஒரு வதந்தி உலவியது. அதன் பின்பு 'ஹோம்ஒர்க்' செய்யாத பள்ளிக்கூட மாணவன் போன்ற தோரணையில் உள்ளே கசியும் கண்ணீருடன் விஜய் ஒரு வீடியோ பேட்டி அளித்தார். 'தமிழக மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்யும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்' தலைவா படத்தையும் வெளிகொண்டு வருவதற்கான உதவிகளை செய்வார் என நம்பிக்கை தெரிவிப்பதாகவும் அதற்கான வேண்டுகோளையும் வைத்தார். தமிழக மக்களுக்கு உண்மையிலேயே ஜெயலலிதா நன்மை செய்ய விரும்பினால்,  தலைவாவை வெளிவரச் செய்யாமலிருப்பதும் ஒரு நல்ல விஷயம்தான் என்று மக்கள் ஒருவேளை நினைக்கக்கூடும் என்கிற எளிய உண்மை கூட விஜய்க்கு புரியாமல் போனது ஆச்சரியம். 
 
கமல்ஹாசனின் விஸ்வரூபத்திற்கு இதே போன்றதொரு தடை ஏற்பட்ட போது தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. 'மதச்சார்பற்ற இடத்தை நோக்கிச் செல்வேன், அதற்கான இடம் இங்கே இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன்' என்று முழங்கினார் கமல். 'கருத்துச் சுதந்திரத்தின் மீதான தடை' பற்றி அறிவுஜீவிகள் புதிய உற்சாகத்துடன் உரையாடினார்கள். விஸ்வரூபம் விவகாரத்திலாவது திரைமறைவு காரணங்கள் நமக்கு தெரியாவிட்டாலும் வெளிப்படையான காரணம் ஒன்று  சொல்லப்பட்டு தமிழக அரசின் தடை நேரடியாக வெளிப்பட்டது. கமல் நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால் தலைவா விவகாரத்தில் என்ன நடக்கிறதென்றே யாருக்கும் தெரியவிலலை. 'எல்லோரும் சும்மா இருநதா எப்படி, யாராவது பேசுங்கப்பா' என்று தமிழ் சினிமாவின் பஞ்சாயத்துக் காட்சிகளில் நிற்பதைப் போன்று எல்லோருமே கையைப் பிசைந்து கொண்டு மெளனமாக நின்றார்கள்.

***
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திரைஊடகத்தை பயன்படுத்திக் கொள்வது ஒரு குறுக்கு வழி என்பதான அபத்தம் தமிழகத்தில் நடைமுறையில் சாத்தியமானவுடன், நண்டு சிண்டான நடிகர்கள் கூட 'நான் தனிநபர் அல்ல. என் பின்னால் பெருந்திரளான மக்கள் இருக்கிறார்கள்' என்று பன்ச் டயலாக் பேச ஆரம்பித்து விட்டார்கள். நிஜத்தில் பம்மி பம்மி விஜய் தந்த வீடியோ வேண்டுகோளையும் தலைவாவில் அவர் ஆக்ரோஷத்துடன் பேசும் பன்ச் டயலாக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மக்கள், இந்த பொம்மை நாயகர்களின் உண்மையான தோற்றத்தை அறிய மாட்டார்களா? திரையில் இவர்கள் எந்த கோமாளி்த்தனத்தை வேண்டுமானாலும் செய்துப் போகட்டும். ஆனால் இவர்களை நிழல் வீராவேசங்களை உண்மை என்று நம்பி தம்மை ஆள்வதற்கு தகுதியுள்ளவர்களாக இவர்களை அறியாமை காரணமாக மக்கள் நினைக்கும் போதுதான் பிரச்சினையாகிறது. நிழலையும் நிஜத்தையும் ஒப்பிடக்கூடிய இவ்வாறான சந்தர்ப்பங்களின் மூலம்தான் மக்கள் தங்களின் அறியாமைகளிலிருந்து வெளிவர வேண்டும். 'தங்களின் படம் வெளிவர வேண்டுமென்று சுயநலத்தோடு கண்ணீர் விடும்' இதே நடிகர்கள் நாளை அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தங்களுக்கு போட்டியாக கருதக்கூடியவர்களின் படங்களை வருங்காலத்தில் தடை செய்வார்கள். 'வாழ்க்கை ஒரு வட்டம்டா' என்பது சினிமா வசனமாக மாத்திரமல்லாமல் அல்லாமல் அரசியல் சிந்தாந்தமாக கூட பின்னாளில் உருமாறக்கூடும். 
 
இந்த விவகாரத்திற்கு திரைத்துறையினர் காட்டிய கடும் மெளனம் கோழைத்தனமானது. தடைக்கான காரணம் என்னவென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இதன் உள்விவகாரங்கள் குறித்து திரைத்துறையில் உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழ பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை போன்ற, அரசுக்கு சாதகமான விவகாரங்களில் கூட்டம் போட்டு ஆவேசமாக குரல் தரும் சூப்பர் ஸ்டார்களும் பவர் ஸ்டார்களும், அதிகார பீடத்தில் உள்ளவர்களை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் புகழ்ச்சி மழையில் நனைக்கும் நடிகர்களும் இது விஷயமாக சில முணுமுணுப்புகளைத் தவிர எவரும் பொதுவில் குரல் தரவில்லை. முட்டை விற்பவர்கள் கூட அவர்களின் தொழிலுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்களின் சங்கத்தின் மூலம் ஒன்றுகூடி அதிகாரிகளைச் சந்தித்து முறையிடுகிறார்கள். பத்திரிகைகளில் 'அம்மா தாயே எங்களை கவனியுங்கள்' என்று விளம்பரம் தருகிறார்கள். ஆனால் பலகோடி ரூபாய் முதலீட்டிலும் லாபத்திலும் இயங்கும், மக்களின் சிந்தனைகளை மாசுபடுத்துவதோடு அவர்களிடமிருந்து காசும் பிடுங்கிக் கொள்ளும் திரைத்துறை இது குறித்து காட்டும் கள்ள மெளனம் வியப்பாய் இருக்கிறது. அதிகாரத்தை எதிர்த்து போராடக்கூட வேண்டாம், அது குறித்து உரையாடுவதில் கூட இத்தனை பயம் என்றால் தங்களை சூப்பர் ஹீரோக்களாக திரையில் காட்டிக் கொள்வதில் சற்று கூட மனச்சாட்சி உறுத்தாதா என்று தோன்றுகிறது. அரசைப் பகைத்துக் கொண்டால் அதன் மூலம் தாங்கள் இழக்கப் போகும் செளகரியங்கள் மீதே இவர்களுக்கு அக்கறை இருக்கிறது என்று தோன்றுகிறது. நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாயும் அதிர்ஷ்டத்தைப் போல 'கருத்துச் சுதந்திரம்' குறித்த உரையாடல்களின் வெளிச்சம் விஸ்வரூபத்திற்கு கிடைத்ததைப் போல அந்த அதிர்ஷ்டத்தின் சிறு சதவீதம் கூட 'தலைவா'விற்கு கிடைக்காதது ஒருவகையில் அநீதிதான்.

***
இப்படியெல்லாம் அவதிக்குள்ளாகி, Time to lead அலட்டல்களையெல்லாம் துறந்து வெளியான 'தலைவா' திரைப்படம் எப்படியிருக்கிறது என்று பார்த்தால் இதை தடை செய்ய முயன்ற காரணிகளின் மீது மதிப்பும் மரியாதையுமே வருகிறது. 'காட்பாதர்' புதினத்தை எழுதின மரியா பூஸோ, அவரின் படைப்பு இந்தியத் திரைப்படங்களில் எப்படியெல்லாம் வன்புணர்ச்சி செய்யப்படுகிறது என்பதைக் காண நேர்ந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார். அதிலும் 'தலைவா'வைக் காண நேர்ந்தால் அவர் இரண்டாம் முறையாக இறக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்னர், தெய்வத் திருமகளை 'I am Sam'  படத்திலிருந்து உருவி உருவாக்கின இயக்குநர் விஜய், காட்பாதரை ஏற்கெனவே உருவல் செய்த இயக்குநர்களுக்கு குரு வணக்கம் செய்து இத்திரைப்படத்தை எத்தனை மோசமாக முடியுமோ அத்தனை மோசமாக நகலெடுத்திருக்கிறார். நகலெடுப்பதைக் கூட சிறப்பாக செய்ய முடியாத அளவிற்கு தமிழ் சினிமா சூழல் வணிக மோகத்தில் ஆழ்ந்திருப்பதுதான் இதிலுள்ள முரண்நகை. இத்திரைப்படத்தைப் பற்றிச் சொல்ல வேறெதுவுமே இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம். 'இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்' என்கிற சலிப்புடன்தான் தலைவா -ல் இருந்து தலைவலியுடன் வீடு திரும்ப வேண்டியிருந்தது. 
 
- உயிர்மை - செப்டெம்பர் 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)    

suresh kannan

Wednesday, September 04, 2013

ஆதலால் கலவி செய்வீர்..



சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார்.  

'ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண் மகனும், தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்பது போன்றது அது.

தமிழகத்தின் கலாச்சார, பண்பாட்டு காவலர்கள் இந்த விபரீதமான கருத்தைக் கேட்டு கொதித்தெழுந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பா.ம.க ஆகிய அரசியல் கட்சிகள் இதை மூர்க்கமான எதிர்த்தன. இதனால் குஷ்பு பல வழக்குகளை சந்தித்து நீதிமன்றம் நீதிமன்றமாக ஓட வேண்டியிருந்தது. கோவில் கட்டி கும்பிட்ட தமிழக மக்களுக்கு தான் அந்நியரல்ல என்று மன்றாட வேண்டியிருந்தது. 'குஷ்பு தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து. இது எவ்வித்தில் சமூகத்தை பாதித்தது. ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் இணைந்து வாழ்வதும் பாலுறவு கொள்வதும் குற்றமல்ல' என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அவர் மீதிருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்த பிறகுதான் இந்த விவகாரத்திலிருந்து குஷ்புவால் விடுபட முடிந்தது.  

'ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும்' என்று சமீபத்திய வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் குறிப்பிட்ட சதவிகித்தனர், திருமணத்திற்கு முன்பே பாலுறுவு கொண்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்கிறது பாலுறவு தொடர்பான ஓர் ஆய்வு. இதில் நகரங்களில் வாழ்பவர்களும், பாலினப் பிரிவில் ஆண்களும் அதிக சதவிகித்தனர் உள்ளனர்.  

***

Premarital Sex தொடர்பாக குஷ்பு சொன்ன அதே கருத்தை, தன்னுடைய சமீபத்திய திரைப்படமான 'ஆதலால் காதல் செய்வீர்' -ல் இயக்குநர் சுசீந்திரன் உறுதிப்படுத்தியிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 'நிரோத் உபயோகியுங்கள்'ன்னு டிவிலயும் ரேடியோவுலயும் கத்திக்கிட்டே இருக்கானே.. எதுக்கு பலூன் ஊதி பறக்க விடறதுக்கா..." என்றும் இதன் மூலம் அனாதைக் குழந்தைகள் உருவாவதை தவிர்க்க முடியும் என்றும்  'புதிய பார்வை'த் தனமாகவும் இத்திரைப்படம் யோசித்திருக்கிறது. என்றாலும் தன்னைக் கற்பழித்தவனை அல்லது காதலிக்கும் போது உறவு கொண்டவனையே  - அவனைத் திருத்தியாவது - திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ் சினிமா இதுவரை கூறிவந்த மரபை உடைத்திருக்கிறது ஆ.கா.செ. என்கிற வகையில் கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.  

இத்திரைப்படம்  'ஆணுறைக்கான' பிரச்சாரப் படமாக மாறியிருக்கக்கூடிய அபாயத்தை தனது சுவாரசியமான, கச்சிதமான திரைக்கதையால் தவிர்த்திருக்கிறார் இயக்குநர். 'நகைச்சுவை டிரெண்ட்' என்ற பெயரில் சமீபத்தில் புற்றீசல் போல் வெளிவந்த அபத்தமான திரைப்படங்களின் மத்தியில், வணிகநோக்குத் திரைப்படங்களின் வார்ப்பிலிருந்து விலகாவிட்டாலும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவசியமானதொரு கருத்தை கவனப்படுத்தியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். 

கல்லூரியில் படிக்கும் கார்த்திக்கும் ஸ்வேதாவும் சிலபல காட்சிகளுக்குப் பிறகு காதலிக்கத் துவங்குகிறார்கள். திட்டமிட்டே மாமல்லபுரம் செல்கிறார்கள். ஆணுறை வாங்க காசில்லையோ அல்லது முறையாக பயன்படுத்தத் தெரியவில்லையோ என்னவோ, அந்தப் பெண் கர்ப்பமாகிறாள். இரு வீட்டாரின் பெற்றோர்களுக்கும் நிகழும் கசப்பான விவாதங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக திருமண முடிவு நின்று போகிறது. இதனாலேயே பையனும் பெண்ணும் பரஸ்பரம் வெறுத்துக் கொள்கிறார்கள். பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையை அவரது தந்தை அனாதை இல்லத்திற்கு அளித்து விடுகிறார். சுமார் 2 வருடத்திற்கு்ப் பிறகு பெண்ணுக்கு வேறு ஒருவனுடன் திருமணமாகப் போகும் காட்சிகளுடனும் பையன் வேறொரு பெண்ணைக் காதலிக்கும் தொனியில் உரையாடிக் கொண்டிருப்பதான காட்சிகளுமாக விரிந்து, இறுதிக் காட்சியில் அந்தக் குழந்தை அனாதை இல்லக் காட்சிளோடு படம் நிறைகிறது. (வீல் சத்தத்தை தவிர்த்திருக்கலாம்) 

ஸ்வேதாவாக நடித்திருக்கும் மனிஷாவின் முகபாவங்கள் அற்புதமாக படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. வழக்கு எண்.18/9-ல் இவர் சிறப்பாக நடித்திருந்தார். அப்பாவாக ஜெயப்பிரகாஷ், அம்மாவாக துளசி ஆகிய இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினரின் மனவோட்டங்கள், தந்திரங்கள், பொய்கள், போன்றவை சிறப்பாக பதிவாகியிருக்கின்றன. பாடல்கள் வேக்ததடைகளாக இருந்தாலும் படத்தின் 106 நிமிடங்களை திறமையான திரைக்கதையால் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் சுசீந்திரன். எல்லாமே அவசரமாகவும் வேகமாகவும் நிகழும் இந்தக் காலக் கட்டத்தில் அதற்கேற்ப காதலும் அற்பு ஆயுளிலேயே முடிந்து விடுகிறது என்பதை வசனங்கள் பல இடங்களில் நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.  

ஆணுக்கும் பெண்ணுக்குமான இனக்கவர்ச்சியின் உணர்வுகள் பொதுவாக இருந்தாலும் உடற்கூற்று ரீதியாக பெண்ணே அதிக பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. கர்ப்பப்பை, தாய்மை, பாசம் போன்ற அகவயமான உணர்வுகள் அவளை குடும்பம் என்கிற நிறுவனத்தோடு காலங்காலமாக  இணைத்துப் போடுகிறது. குழந்தையைப் பெற்றுக் கொள்ளவும் அதைப் பார்த்துக் கொள்ளவுமான கடமை ஆணை விட பெண்ணுக்கே அதிகமாக போதிக்கப்பட்டிருக்கிறது. மாறாக ஆணுக்கு இதில் அதிக பொறுப்பில்லை. இதனாலேயே பெண் தன் கர்ப்பப்பை குறித்த பிரக்ஞையையும் பயத்தையும் பொறுப்பையும் தொடர்ந்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நிலவுடைமைச் சமுதாய சிந்தனையைத் தொடர்ந்து தன்னுடைய வாரிசு குறித்த அடையாளத்தை நிச்சயித்துக் கொள்ளவும் சொத்தை பாதுகாத்துக் கொள்ளவும்,  திருமணம், குடும்பம் என்று உருவாக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்க கற்பிதங்களுக்கு பெண் பிணைக்கப்பட்டிருக்கும் சூழல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  

"உண்மையான பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும். பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கிற முடிவு நமக்குக் கல்லுப்போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது" என்கிற பெரியாரின் சிந்தனையையும் இங்கு நினைவு கூரலாம்.

மேலும் பாலுறவு என்பதை பாவமாகவும் அது குறித்த குற்றவுணர்வையும் மதம், கடவுள் போன்ற நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்தி ஆனால்  உள்ளுக்குள் பாலுறவு குறித்த விழைவுகளை, தேடல்களை ரகசியமாகச் சுமந்து அது தீராததொரு பாலியல் வறட்சி கொண்டதாக நம் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.  

அமெரிக்கத் திரைப்படமான Juno (2007) -ம்  திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தைப் பற்றி உரையாடினாலும் அதன் பிரதான பாத்திரமான ஜுனோவிற்கு தன்னுடைய கர்ப்பம் குறித்தோ குழந்தை குறித்தோ எவ்வித குற்றவுணர்வும் பிரக்ஞையும் முதலில் இருப்பதில்லை. குழந்தையைப் பெற்று அதனை வளர்க்க விரும்பும் தம்பதியினருக்கு கொடுத்து விடுவதுதான் அவளது விளையாட்டான தீர்மானமாக இருக்கிறது.  பிறகு தன்னிச்சையாக அவளுக்குள் கிளைக்கும் உணர்வின் காரணமாகத்தான் குடும்பம் என்கிற அமைப்பை நோக்கி நகர்கிறாள். நம் சமூகத்தில் இது தலைகீழாக நடக்கிறது.இதைப் பற்றியெல்லாம் இந்த தமிழ் சினிமா உரையாடியிருக்கலாம்.  ஆனால் ‘அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.’ என்பது போன்ற ஆணாதிக்க சிந்தனைகள் மலிந்திருக்கும் வரை தமிழ் சினிமா கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


suresh kannan