Tuesday, October 27, 2009

நாயின் நிழலும் சிக்கன் பிரியாணியும்


நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஞாயிறு அன்று (25.10.09) மிக சுவாரசியமானதொரு இந்தியத் திரைப்படத்தைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. இதற்கு முன் இவ்வாறாக ரசித்துப் பார்த்தது ஷ்யாம்பிரசாத்தின் மம்முட்டி, மீரா நடித்த மலையாளத் திரைப்படமான 'ஒரே கடல்'.

புரட்டாசி மாதம் முடிந்து மக்கள் அசைவம் மீது காய்ந்த மாடாக பாய்ந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதிய மெனு சிக்கன் பிரியாணி. இந்த உணவின் மீது எனக்குள்ள பிரேமையை வேலை வெட்டியில்லாத ஒரு அற்புத தருணத்தில் இங்கே வாசித்து தெரிந்து கொள்ளலாம். படத்தைக் காண ஆரம்பித்த சில நிமிஷங்களிலேயே உணவுத் தட்டு கைக்கு வந்தது. எனக்கு மிகப் பிரியமான அந்த உணவை தொலைக்காட்சியிலிருந்து கண்ணை விலக்காமலேயே வைக்கோல் போல் ஏனோதானோவென்று மென்று முடித்து கையை கழுவிக் கொண்டு மீண்டும் ஒரே ஓட்டமாய் ஓடி வந்து முட்டாள் பெட்டியோடு ஒட்டிக் கொண்டேன். படம் எனக்கு எவ்வளவு சுவாரசியமாய் இருந்தது என்பதைச் சொல்லவும் பதிவின் தேவையில்லாத தலைப்பை நியாயப்படுத்த வேண்டியும் இந்தச் சுயவிவரம்.

கிரிஷ் காசரவள்ளி இயக்கிய Naayi Neralu (நாயின் நிழல்) என்கிற கன்னடத் திரைப்படம்தான் அப்படியொரு சுவாரசிய, உணர்ச்சிகரமான அனுபவத்தைத் தந்தது. ஒரு திரைப்படத்தின் முழு அல்லது முக்கால் கதையை சுருக்கமாக எழுதும் கெட்ட வழக்கத்தை நான் கைவிட்டிருப்பதை கடந்த சில பதிவுகளின் மூலம் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். என்றாலும் நிறைய பேருக்கு இந்தப் படத்தை காணும் வாய்ப்பு அமையாமல் போகலாம் என்பதால் படத்தின் மையக்கதையை மிகச் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

சுதந்திரத்திற்கு சமீபத்திய கர்நாடகாவின் ஒரு குக்கிராமம். 20 வருடத்திற்கு முன்பு இறந்து போன மகன் இன்னொரு ஊரில் 'மறுபிறப்பு' அடைந்திருக்கும் செய்தியை முதியவரான அச்சைன்யாவிடம் அவருடைய நண்பர் சொல்கிறார். இதை நம்ப மறுக்கும் அச்சைன்யா நோய்வாய்ப்பட்டிருக்கும் தன்னுடைய மனைவியிடம் இதைக் கூற கிழவி அப்போதே துள்ளி எழுந்து 'அது உண்மையாக இருக்கக்கூடும்' என்கிறார். சென்று பார்க்க அந்த 20 வயது eccentric இளைஞன் இவரின் குடும்ப உறவுகளை அடையாளங் காணுவதில் சில விஷயங்கள் பொருத்தமாக அமைந்து விடுகிறது. அந்தக் குடும்பத்திடம் பேசி இளைஞனை அழைத்து வருகிறார்கள். கிழவி 'இது இறந்து போன தன் மகனேதான்' என்று பூரித்துப் போகிறார். ஊரிலுள்ள வேலை வெட்டியில்லாதவர்களும் உற்சாகமாய் திரண்டு வந்து இதை உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வீட்டின் மருமகளான சுமார் 35 வயது விதவையான வெங்கடலஷ்மிக்கு இது மிக தர்மசங்கடமாய் அமைகிறது. அந்த 20 வயது இளைஞன் உறவு முறையில் இவளுக்கு 'கணவன்' நிலையிலிருக்கிறான். அந்த இளைஞன் இவளை உடனே அடையாளங் கொண்டு தேன் குடித்த நரி போல் மந்தகாசமாக பார்க்கிறான்.

முதலில் அவனை தன்னுடைய கணவனாக அங்கீரிக்க மறுக்கும் அவள், ஒரு சந்தர்ப்பத்தில் அவனோடு நெருக்கமாகிறாள். அது உடல் ரீதியான நேசத்தில் தொடர்கிறது. இளைஞனை 'மகனாக' அங்கீகரிக்கும் அந்தக் குடும்பமும் ஊரும், அவனை ஒரு விதவையின் 'கணவனாக' அங்கீகரிக்க மறுப்பதில் காட்சிகள் சங்கடமான ஒரு நிலையை நோக்கி பயணிக்கின்றன. தன்னுடைய தாயின் விதவைக் கோலத்தை வெறுக்கும் சற்று முற்போக்கான சிந்தனை உடைய மகள் கூட இந்த உறவை வெறுக்கிறாள். தனக்கும் தன்னுடைய மறுபிறப்பு 'தந்தை'க்கும் ஒரே வயது என்கிற விநோதமான உறவு அவளை வெறுப்புறச் செய்கிறது. இந்த அபத்தமான சூழலில் இருந்து தன்னுடைய தாயை மீட்க முனைகிறாள். எல்லோருடைய வெறுப்பிலிருந்தும் சங்கடத்திலிருந்தும் தப்பிக்க விரும்பும் வெங்கடலஷ்மி தன்னுடைய 'கணவனோடு' ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசிக்கச் செல்கிறாள். முதியவர் அச்சைன்யாவும் தன்னுடைய மருமகளின் சிக்கலான சூழலைப் புரிந்து கொண்டு இதற்கு ஆதரவளிக்கிறார்.

எப்போதும் 'பறவையை' வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞனோடு லெளதீக வாழ்க்கையை நடத்துவது வெங்கடலஷ்மிக்கு சிரமமாக இருந்தாலும் அவனை பரிவோடு கவனித்துக் கொள்கிறாள். அவனோ அங்கு படகு ஓட்டும் யுவதியின் மீது மையல் கொள்கிறான். தன்னுடைய தாயை எப்படியாவது இளைஞனிடமிருந்து மீட்க நினைக்கும் மகள், இளைஞன் படகுப் பெண்ணை மானப்பங்கப்படுத்தியதாக பொய் வழக்கு ஒன்றினை ஜோடித்து சிறைக்கு அனுப்புகிறாள். இதனால் வெறுப்புறும் அந்த இளைஞன் புதிதாக பிறந்துள்ள தன் மகள் உட்பட யாரையில் சிறையில் சந்திக்க மறுத்துவிடுகிறான். சிறையிலிருந்து அவன் தன்னிடம் திரும்பி வருவான் என்கிற அவநம்பிக்கை வெங்கடலஷ்மிக்கு இருந்தாலும் அவனுக்காக தனிமையில் காத்திருப்பதோடு படம் நிறைவடைகிறது.



பிரபல கன்னட நாவலாசிரியரான S.L.பைரப்பா எழுதியிருக்கும் மிகச் சிக்கலான இந்தக் கதைக்கு காசரவள்ளி அமைத்திருக்கும் எளிமையான திரைக்கதை பிரமிக்க வைக்கிறது. மூல வடிவத்திலிருந்து திரைப்படம் விலகியிருப்பதான விமர்சனமிருந்தாலும் திரைப்படத்திற்கு நியாயம் செய்திருக்கும் இயக்குநருக்கு அளிக்கப்படும் சுதந்திரமாகக் கொண்டு இந்த விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே நான் கருதுகிறேன். மிகவும் சிக்கலான ஒன்றுக்கொன்று முரண்படுகிற விநோதமான மனித உணர்வுகளை மோதச் செய்வதே ஒரு நல்ல கதாசிரியனின் பணி. எழுத்தில் ஒருவேளை கொண்டுவர முடிகிற இந்த அகவயமான வடிவத்தை திரைமொழிக்கு மாற்றுவது ஒரு திரை இயக்குநருக்கு மிகுந்த சவாலான பணி. காசரவள்ளி இதை திறம்படச் செய்திருக்கிறார். இந்தச் சிக்கலான சூழ்நிலை பயணம் செய்யக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் இயக்குநர் முயன்று பார்த்திருக்கிறார். (ஆனால் மறுபிறப்பு இளைஞன் அதே பிராமண இனத்தில் பிறந்ததாக அல்லாமல் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வருவதாக அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் கூட சுவாரசியம் கூடியிருக்கும்).

வழக்கமான திரைக்கதையிலிருந்து விலகி படம் பல இடங்களில் தனித்தன்மையுடன் பிரகாசிக்கிறது. உதாரணமாக ஒரு காட்சியைச் சொல்ல முடியும். 'மறுபிறப்பு' கொண்டிருப்பதாக நம்பப்படும் அந்த 20 வயது இளைஞன் அந்தக் குடும்பத்திற்குள் நுழைகிறான். 20 வருடத்திற்கு முன்பு கணவனை இழந்த விதவையும் அந்த வீட்டில் இருக்கிறாள். இருவரும் சந்தித்துக் கொள்வது எப்படியிருக்கும்? பார்வையாளனுக்கே மிகுந்த சங்கடத்தையும் குறுகுறுப்பான ஆர்வத்தையும் ஏற்படுத்தக் கூடிய இந்தச் சூழ்நிலையை எந்தவொரு திரைக்கதையாசிரியனும் மெல்ல மெல்ல சாவகாசமாய் சென்று ஒரு உச்சத்தை அடையுமாறு ஏற்படுமாறு அமைப்பார். ஆனால் இயக்குநர் இளைஞன் வீட்டிற்குள் நுழைந்த சில கணங்களிலேயே இந்த சிக்கலான காட்சியை பார்வையாளன் முன்வைக்கிறார். சன்னல் கட்டைகளின் பின்னே மறைந்திருக்கும் பெண்ணும் ஒரு வேட்டை நாயின் பார்வையோடு அந்த இளைஞனும்.

இன்னொரு காட்சி. விதவைக் கோலத்தில் தம்முடைய முன்ஜென்ம 'மனைவி'யை காண விரும்பாத இளைஞன், கோபத்தோடு அமர்ந்திருக்கிறான். அவனை சாந்தப்படுத்த வேண்டி வழக்கமான உடையை அணியச் சொல்லி விதவையை வற்புறுத்துகிறாள் கிழவி. முதலில் மறுக்கும் வெங்கடலஷ்மி பின்பு தனியறையில் அந்த வண்ண ஆடையை மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொள்கிறார். வெறுப்புறச் செய்யும் விதவைச் சம்பிதாயங்களிலிருந்து தன்னை விடுவிக்க வந்தவன் என்பதும் அந்த இளைஞன் மீது அவள் இணங்கிப் போவதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்பதாக இந்தக் காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது என் புரிதல்.


ஒரு விதவைப் பெண்ணின் மன உணர்வுகளை ஆதாரமாகப் பற்றிக் கொண்டுச் செல்லும் இந்தத் திரைப்படம் பல ஆழமான காட்சிகளோடு பயணிக்கிறது. தன்னுடைய தாய் அவ்வப்போது மொட்டையடித்துக் கொள்வதை விரும்பாத மகள், அவள் வயது குறைந்த இளைஞனை கணவனாக ஏற்றுக் கொள்ளுவதோடு மாத்திரம் முரண்படுகிறாள். தன்னுடைய மகனை 'மறுபிறப்பின்' மூலம் காண்பதில் மகிழச்சி கொள்ளும் கிழவி, அவனை தன்னுடைய விதவை 'மருமகளின்' துணையாக காண்பதை விரும்பவில்லை. வெங்கடலஷ்மியின் வக்கீல் சகோதரனும் இதை 'சொத்து' பிரச்சினையாக மாத்திரமே காண்கிறான். ஊர்க்காரர்கள் தம்முடைய ஆச்சாரத்திற்கு பங்கம் நேர்ந்துவிடுமோ என்றுதான் கவலைப்படுகிறார்கள். ஆனால் யாருமே அந்த பேரிளம் விதவையின் மன உணர்வுகளை கருத்தில் கொள்வதில்லை. முதியவர் மாத்திரமே இதற்கு மெளன சாட்சியாய் இருக்கிறார்.


()

இளைஞனோடு தனியான வாழ்க்கைக்குச் சென்ற பிறகும் நீடிக்கிற தன்னுடைய நிராதரவான நிலையை ஒரு கட்டத்தில் தோழியுடன் பகிர்ந்து கொள்கிறாள் வெங்கடலஷ்மி. உடல்வேட்கையைத் தவிர எந்தவிதத்திலும் இளைஞன் தன்னுடைய 'கணவனாக இல்லை'. விதவையாக இருந்த போது ஒதுக்கி வைத்த ஊரார் தன்னுடைய புதிய உறவிற்குப் பிறகும் தன்னை ஒதுக்கி வைப்பதைக் கண்டு வேதனைப்படும் அவள் தான் 'விதவையா, சுமங்கலியா" என்கிற சிக்கலான நிலையில் இருப்பதைச் சொல்லி புலம்புகிறாள்.

இறுதிக்காட்சியில் வெங்கடலஷ்மி தன்னுடைய மகளுடனான உரையாடலின் போது இந்தப்படம் மிகுந்த அழுத்தமான திருப்பத்தைக் கொண்டிருக்கிறது. 'நீ உண்மையாகவே அவனை உன்னுடைய கணவனின் 'மறுபிறப்பு' என்று நம்பினாயா?' என்று மகள் கோபத்துடன் கேட்க 'தான் எப்போதுமே அவ்வாறு நினைக்கவில்லை' என்று வெங்கடலஷ்மி சொல்லும் போது படத்தின் அதுவரையான காட்சிகளை வேறொரு தளத்தில் வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆச்சாரமான பின்னணிச் சூழலில் ஒரு பெண்ணால் எவ்வாறு ஒரு அந்நியனை 'மறுபிறப்பு’ காரணமாக எப்படி கணவனாக ஏற்றுக் கொள்ள முடிந்தது என்று எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது.

சமூகம் எந்தவொரு பாவமும் அறியாத விதவைகளின் மீது அழுத்தி வைத்திருக்கும் அர்த்தமில்லாத பாரம்பரியச் சுமைகளை இந்தப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. 'மறுபிறப்பு' போன்ற பகுத்தறிவிற்கு ஒவ்வாத விஷயத்தை, 'விதவை மறுமணம்' என்கிற முற்போக்கான விஷயத்தைச் சொல்ல பயன்படுத்தியிருக்கும் லாவகம் கதாசிரியரை வியக்கச் செய்கிறது. இயக்குநர் கிரிஷ் காசரவள்ளி ஒவ்வொரு பாத்திரத்தையும் அதற்குண்டான தனித்தன்மையோடு பயன்படுத்தியிருக்கிறார். லெளதீக வாழ்க்கைப் பற்றி அறியாத அப்பாவியாக காமத்தை மாத்திரம் பிரக்ஞையோடு அணுகுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞன் நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்ல வந்த படகோட்டிப் பெண் கேள்விக்கணைகளால் குதறப்படுவதை காணச் சகிக்காமல் செய்யாத அந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். அதன் மூலமாவது அந்தக் குதறல் நிறுத்தப்படும் என்பது அவன் நோக்கம்.

()

மேலே சொல்லப்பட்டிருக்கும் எந்த வார்த்தைகளாலும் இந்தப் படத்தின் மையத்தை உங்களால் உணர்ந்து கொள்ளவே முடியாது. அது என்னுடைய எழுத்தின் போதாமையாகவோ அல்லது அழுத்தமாக காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குநரின் திறமையாகவோ இருக்கலாம். நேரடியான சாட்சியின் துணை கொண்டுதான் இதன் ஆன்மாவை நீங்கள் உணர முடியும்.

ஓயாது துரத்தப்படும் அங்காடி நாயின் நிலையும், சமூகத்தினால் அலைக்கழிக்கப்படும் பெண்களின் - குறிப்பாக விதவைகளின் நிலையும் - ஒரே புள்ளியில் நின்றிருப்பதை குறியீடாக உணர்த்த இந்தத் தலைப்பை கதாசிரியர் தேர்ந்தெடுந்த்திருக்கக்கூடும்.

பெரும்பான்மையான உலகத் தரமான சினிமாக்கள் அந்தந்த மொழியிலுள்ள உன்னதமான இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அமைகின்றன. தமிழிற்கும் அவ்வாறான வளமான இலக்கியப் பின்னணி உண்டு. ஆனால் தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் மாத்திரம் 'கதையை’ சவேரா ஓட்டலின் சிகரெட் புகை நடுவிலும் பர்மா பஜார் டிவிடிகளிலும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தைப் பற்றின பிரசன்னாவின் பதிவு.

suresh kannan

Tuesday, October 20, 2009

சேரனின் உலக சினிமா (?)


சேரனின் 'பொக்கிஷம்' திரைப்படத்தைப் பற்றி ரத்தக் கண்ணீரில் எழுதப்பட்ட பல இணைய விமர்சனங்களை படித்ததில் இருந்து அதை பார்ப்பதை பற்றி யோசிக்கவே திகிலாகவே இருந்தது. என்றாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பார்த்ததில் அப்படியொன்றும் மோசமில்லை.

பதின்ம வயதில் ஒரு பெண்ணின் பெயரைத் தெரிந்துக் கொள்ளவே ஆறுமாசம் கடந்துவிடுகிற காலகட்டம் ஒன்று முன்பிருந்தது. ஆனால் சந்தித்த மறு தருணத்திலேயே 'லவ்யூ' எஸ்எம்எஸ்ஸ¥ம் சில வாரங்களிலேயே அங்கிருந்து கழட்டிக் கொண்டு இன்னொரு மொபைலைத் தேடியலைகிற இன்றைய நவீன யுகத்தோடு அதனை ஒப்பிடும் போது காதலின் (அப்படியொரு கருமாந்திரம் இருப்பதாகத்தானே அந்த வயதுகளில் தோன்றுகிறது?!) கவித்துவமான கணங்களை இழந்து நிற்கிற இந்த தலைமுறையின் அபத்தங்களைப் பற்றி இந்தப் படம் உரையாடுவதாகத் தோன்றுகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான மேம்பாடுகள் மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக மேலோட்டமாக தோன்றினாலும் ஆழமாக யோசித்துப் பார்க்கும் போது அவனுக்கு மிகுந்த நெருக்கடிகளை அவை ஏற்படுத்தித் தருவதாகவே நான் கருதுகிறேன். வாரத்திற்கு ஒரு முறை ஒரே சினிமா எனும் நிலையிருக்கும் காலத்தில் சினிமா மீதிருந்த கவர்ச்சியையும் அதைப் பார்ப்பதில் ஏற்படும் பரபரப்பையும் தொலைக்காட்சிகள் திரைப்படங்களை உமிழ்ந்து கொண்டேயிருக்கும் இக்கால கட்டத்தில் இழந்துவிட்டோம். தின வாழ்வின் நிகழ்வுகள் அனைத்திலும் புதைந்திருக்கும் பரபரப்பு நம்முடைய மென்மையான உணர்ச்சிகளை மொண்ணையாக்கி விடுகின்றது.

சேரனின் நடிப்பை மிகக் குறையாக பலரும் சொன்னார்கள். வணிகநோக்குப்பட கதாநாயகர்களை விட சேரனின் நடிப்பு மேலாக இருந்ததாகவே எனக்குப்பட்டது. மருத்துவமனையில் ஆரம்பிக்கின்ற அந்த மெலிதான நட்பு இறுக்கமான காதலாக உருமாறுவதை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருந்தார். பிரிவு ஏற்படுத்துகிற மனக்கொந்தளிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார். பெரும்பாலான காட்சிகள் மிகுந்த அழகுணர்ச்சியுடன் பதிவு செய்யப்பட்டிருந்ததில் ஒளிப்பதிவாளரின் கடின உழைப்பு தெரிகிறது. கடிதங்கள் வாசிக்கப்படுவது தொடர்ச்சியாக அமைந்திருந்த திரைக்கதையின் பலவீனத்தை மாத்திரம் சற்று ஒழுங்குப்படுத்தியிருக்கலாம். இந்த ஒரு விஷயம்தான் படத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

தொழுகையின் போது நதீரா காதலின் பரவசத்தில் மனம் தடுமாறுவது போன்றதொரு காட்சி வருகிறது. சேரனுக்கு தைரியம் அதிகம்தான். அடிப்படைவாதிகளின் கண்ணில் ஏன் இந்தக்காட்சி படவில்லை என்பது ஆச்சரியகரமாக இருக்கிறது. அதே போல் 'சில காலத்திற்குப் பிறகு திருமணம் நடக்கும்' என்று வாக்குத்தருகிற அந்த இசுலாமியப் பெரியவர் சிட்பண்ட்காரர்கள் போல் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு மறைந்து போவது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதையும் வைத்து யாராவது திரியைக் கொளுத்தி விட்டிருந்தால் படமாவது இன்னும் சில நாட்கள் கூட ஓடியிருக்கும். சேரனுக்கு கொடுத்து வைக்கவில்லை.

தாயைப் பற்றி குறிப்பிடும் போது 'அதட்டுவது அவள் குரலல்ல' என்கிற நதீராவின் கடித வரியும் அவள் வீட்டின் அருகில் காண்பிக்கப்படும் உபயோகப்படுத்தப்படாத கட்டுமரமும் சிறந்த குறியீடுகளுக்கான உதாரணக்காட்சிகள். ஆனால் நதீராவிற்கு இன்னமும் திருமணமாகாமலிருப்பதாக காட்டப்படுவது யதார்த்தக் குறைவானதாக இருககிறது. அந்தப் பிடிவாதமான பெரியவர் எப்படியும் நதீராவிற்கு திருமணம் செய்து வைத்திருப்பார். கிளைமாக்ஸ் அதிர்ச்சிக்காகவே இதை சேரன் முயன்றிருப்பார் என்று தோன்றினாலும் ஆட்டோகிரா·பில் தெரிந்த அதே ஆணாதிக்கப் போக்கு இதிலும் தொடர்கிறது.

தன்னுடைய தந்தையின் மிகப் பழைய காதல் கடிதங்களை சேர்பிப்பதற்காக கடல் கடந்து மகன் செல்லும் சம்பவம் யதார்த்தத்தில் ஒருவேளை நிகழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசிக்கவே சுவாரசியமாயிருக்கிறது. "ஏணடாப்பா போயும் போயும் இதுக்காகவே இவ்ளோ தூரம் வந்தே?" என்று வெற்றிலைக் கறையுடன் கூடிய பொக்கை வாயுடன் சிரிப்பாய்ச் சிரித்திருக்கலாம் அல்லது "அடப்பாவி,நானே அந்த சந்தேகப்புத்தி உள்ள மனுஷனோட இத்தன வருஷமா கஷ்டப்பட்டு குடும்பம் நடத்திட்டு இருக்கேன். எரியற நெருப்புல எண்ணைய ஊத்தினாப்ல வந்து சேந்திருக்கியே, இந்த வயசுல தேவையா எனக்கு?" என்று எரிந்து விழுந்திருக்கலாம்.

லெனின் என்று தன் மகனுக்கு பெயர் வைத்திருக்கிற, இந்து மதத்தைச் சார்ந்த 'முற்போக்கான' அப்பா, காதல் மணம் காரணமாக ஒருவேளை இசுலாமிய மதத்தில் இணைந்து விடுவானோ என்று தயக்கத்துடன் யோசிப்பது முரணாக இருக்கிறது.

எந்தவித வணிக மாசுகளுக்கும் சமரசப்படுத்திக் கொள்ளாமல் நேர்மையான படமொன்றை தந்ததற்காகவே சேரனைப் பாராட்ட வேண்டும்தான் என்றாலும் அவர் தன்னுடைய பேட்டிகளில் ‘உலக சினிமா’ ஒன்றை முயற்சித்திருப்பதாகவும் பெரும்பாலான ரசிகர்களுக்கு அதை ஏற்கும் முதிர்ச்சியில்லை என்றும் ஆதங்கப்படுவது எரிச்சலாக உள்ளது. கலைப்படம் என்றாலே அது நத்தை வேகத்தில்தான் நகரும் என்றும் அதுதான் உலக சினிமாவின் அடையாளம் என்று சேரன் புரிந்து கொண்டிருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. என்னால் சவால் விட்டே சொல்ல முடியும். பெரும்பாலான உலக சினிமா இயக்குநர்களின் படைப்புகள் அடிப்படையில் ஒரு சுவாரசியத்தைக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு இதுவரை நான் பார்த்த எந்தவொரு சத்யஜித்ரேவின் திரைப்படங்களிலும் இடையில் அசுவாரசியமாக உணர்ந்ததில்லை. தேவை சற்று பொறுமைதான். வணிகநோக்கு சினிமாக்களில் பழகின மனநிலையிலிருந்து விலகி நின்று அணுகினாலே போதுமானது. (சாருவும் இதைப் பற்றி இங்கே இவ்வாறாக குறிப்பிட்டிருக்கிறார்)

சினிமா என்றால் அதில் நல்ல சினிமா , கெட்ட சினிமா , மசாலா சினிமா , சீரியஸ் சினிமா என்று பலவிதமாக உள்ளது. ஆனால் எந்த சினிமாவாக இருந்தாலும் அதன் அடிப்படையான தன்மை , அது சுவாரசியமாக சொல்லப் பட்டிருக்க வேண்டும் என்பதுதான். ஒரு கலைப் படைப்பு என்றால் அது சுவாரசியமாக இருக்காது ; ஒரே அறுவையாக இருக்கும் ; அதுதான் ஆர்ட் ஃபில்ம் என்பதாக சராசரி மனிதனிடம் பொதுவாகவே ஒரு தவறான அபிப்பிராயம் உள்ளது. அதில் எள்ளளவும் உண்மை இல்லை. பெர்க்மன் , டர்க்கோவ்ஸ்கி என்று எந்தத் திரைப்பட மேதையாக இருந்தாலும் சரி , அவருடைய படம் ஒரு குறைந்த பட்ச சுவாரசியத்தைக் கொண்டிருக்க வேண்டும். உலகில் எந்த இடத்திலும் சீரியஸ் சினிமா என்றால் பார்க்க முடியாதபடி அறுவையாக இருக்கும் என்ற கருத்து நிலவுவதில்லை.


சற்றே பலவீனமான திரைக்கதை என்பதைத் தவிர வேறொன்றும் பெரிதான குறையில்லாத இந்தப்படம் பெரும்பாலோனோர்க்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் பதிவின் இரண்டாவது பத்தியில் உள்ளதாக நான் கருதுகிறேன்.


suresh kannan

Wednesday, October 07, 2009

கமீனே - வன்முறையின் அழகியல்


நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக சமீபத்திய திரைப்படங்கள் ஆங்கில துணையெழுத்துக்களுடன் (English subtitles) வெளியாவது அந்தந்த மொழிகளை அறிந்திராத எனக்கு மிக வசதியாக இருக்கிறது. துணையெழுத்து அல்லாத அந்நிய மொழித் திரைப்படங்களை காண்பது எனக்கு உவப்பில்லாததாகவும் அசெளகரியமாகவுமே இருக்கிறது. நடிப்பவர்களின் உடல்மொழி மற்றும் தொனி கொண்டு வசனங்களை ஒரளவிற்கு ஊகிக்க முடியும்தான் என்றாலும் நடிகர்கள் உரையாடுவதின் முழு அர்த்தத்தையும் அறிந்து கொள்ள முடியாமல் அடுத்த காட்சிக்கு என்னால் நகர முடியாது. காட்சி ஊடகத்தை இவ்வாறு அணுகுவது அவற்றின் அடிப்படைக்கு செய்யும் துரோகம்தான் என்றாலும் பெரும்பாலான திரைப்படங்கள் இன்னமும் மொழியையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்த நிலை. ஆங்கில துணையெழுத்துக்களுடன் கூடிய திரைப்படங்கள் அரிதாகக் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் (பெரும்பாலும் விருதுப் படங்களே இவ்வாறு காணக் கிடைக்கும்) அது அல்லாத மற்ற திரைப்படங்களை காண முடியாமற் போனதின் இழப்பை இப்போதுதான் உணர்கிறேன். துணையெழுத்துக்களின் மூலம் வசனங்களின் சாரத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும் (இது பெரும்பாலும் மொழி பெயர்ப்பாளர்களின் திறமையை நம்பியே இருக்கிறது) அதன் நுட்பமான விவரணைகளை (nuances) புரிந்து கொள்ள இயலாதது ஒரு இழப்பே. உதாரணத்திற்கு இந்தத் திரைப்படத்தின் தலைப்பான கமீனே-வின் பொருள் 'பொறுக்கி' என்று மேம்பாக்காக அறியப்பட்டாலும் அதனின் சரியான அர்த்தத்தை அந்த மொழியில் அதிகம் புழங்குபவர்களே (குறிப்பாக பிராந்திய வசைச் சொற்களை அதன் அர்த்தத்துடன் முழுமையான அறிந்தவர்கள்) சொல்ல முடியும்.

கமீனே-வின் கதை பெரும்பாலான இந்திய வணிகத் திரைப்படங்களில் (குறிப்பாக 80-90களில்) பெரும்பாலும் உபயோகப்படுத்தப்பட்ட கதைதான். இரட்டைச் சகோதரர்கள். ஒருவன் நல்லவன்; சில குறிக்கோள்களுடன் வாழ்பவன்; இன்னொருவன் பொறுக்கி; பணத்தை அடிப்படையாகக் கொண்ட கனவுலகமே அவன் இலட்சியம். (இங்கே நல்லவன், கெட்டவன் என்கிற பதங்களை ஒரு அடையாளத்திற்காகவே உபயோகிக்கிறேன். அப்படி கருப்பு வெள்ளையாக ஒரு நிலை இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம்) இருவரும் எதிரெதிர் நிலைகளில் பிரிந்து வாழ்பவர்கள். சந்திக்க நேர்ந்தால் மோதிக் கொள்பவர்கள். கிளைமாக்சில் சட்டென திருந்தி 'சுபம்' போடுபவர்கள். கமீனேவும் இதே கதைச் சரடை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதன் பிரமிப்பூட்டும் திரைக்கதையாலும் திரை மொழியாலும் காட்சிக் கோர்வைகளினாலும் உருவாக்கத்தினாலும் சமகால படைப்புகளுக்கு மத்தியில் ஒரு முன்மாதிரியான திரைப்படமாக தனித்துத் தெரிகிறது.

கமீனேவில் இயங்கும் மனிதர்கள் யதார்த்த வாழ்க்கையுடன் மிக நெருக்கமானவர்கள். ஒரு துணை கதாபாத்திரத்தின் மூலம் இதை விளக்க முயல்கிறேன். போதைப் பொருள் தடுப்பு பிரிவிலிருக்கும் காவல்துறையினர் இருவர் பத்து ரூபாய் கோடி பெறுமான கோகெய்னை ஒரு மா·பியா தலைவனிடம் சேர்ப்பிக்க எடுத்துச் செல்லும் போது வழியில் தவற விட்டுவிடுகின்றனர். சரக்கை கொண்டு போய் சேர்க்கவில்லையெனில் தலை போய்விடும். புலி வாலை பிடித்த கதை. சரக்கை எடுத்துச் சென்ற இளைஞனை (இரட்டையர்களில் கெட்டவன்) கண்டுபிடித்து அழைத்து வரும் போது விபத்து ஏற்பட்டு மூத்த அதிகாரிக்கு ஏற்பட்ட காயத்தைக் கண்டு இளைய அதிகாரி பதறிப் போய்விடுகிறான். சாப்.. சாப்.. என்று கலங்குகிறான். ஆனால் சில காட்சிகளுக்குப் பிறகு இருவரும் மா·பியா தலைவனின் எதிரில் பீதியோடு அமர்ந்திருக்கின்றனர். கெட்டவனின் மொபைலுக்கு இளைய அதிகாரி தொடர்பு கொள்ள முயற்சிக்கிறான். தொடர்பு கிடைக்கவில்லை. "அடுத்த முறையும் லைன் கிடைக்கவில்லையென்றால் உன்னையே நீ சுட்டுக் கொள்" என்கிறான் மா·பியா. வியர்த்து விறுவிறுக்க டயல் செய்ய இந்த முறையும் தொடர்பு கிடைப்பதில்லை. அழுகையும் பதட்டமுமாக துப்பாக்கியை எடுப்பவன் திடீரென்று தீர்மானித்து விபத்தில் சிக்கிய வலியால் எதிரில் அனத்திக் கொண்டிருக்கும் மூத்த அதிகாரியை சுட்டுக் கொல்கிறான். "மன்னிச்சுடுங்க அண்ணா" என்று கதறுகிறான். பிறகு மா·பியாவிடம் "இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? என்கிறான். மரணத்தின் விளிம்பிற்கு செல்லும் ஒருவனை உயிர்பயம் நட்பும் பாசமும் கண்ணை மறைக்க எத்தகையை முடிவிற்கு நோக்கி தள்ளுகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தக்காட்சி. அடுத்த முறை லைன் கிடைக்கும் வரைக்குமாவது தன்னுடைய உயிர் நீடிக்கட்டும் என்னும் நப்பாசையே இந்த நிலைக்கு அவனை உந்தித் தள்ளுகிறது. இது மாதிரியான பல அற்புத தருணங்களை 'கமீனே'வில் சந்திக்க முடிகிறது.

கமீனேவின் பல காட்சிகளில் நான் Quentin Tarantino-வின் திரைப்படமொன்றை பார்ப்பது போலவே உணர்ந்தேன். அந்தளவிற்கு ப்ளாக் ஹியூமர் படமெங்கும் விரவிக் கிடக்கிறது. இரட்டையர்களில் கெட்டவனான சார்லி, அவனின் மா·பியா நண்பனான மிகைல், இனவாதக் குழுவின் தலைவனான போப்.. இவர்கள் மூவரும் உரையாடிக் கொள்ளும் காட்சி மிக அற்புதமானதொன்று. அந்த அறையில் எப்போது துப்பாக்கி வெடிக்கும் என்கிற பதைபதைப்போடு பார்வையாளன் கவனித்துக் கொண்டிருக்கும் போது போப்பும் மிகைலும் குழந்தைகள் போல் தங்களுக்குள் சுட்டு வேடிக்கையாக விளையாடுகின்றனர். விநோதமான நகைச்சுவையும் ஆனால் அதை முழுக்க ரசிக்க விடாமல் காட்சிக்குள் புதைந்திருக்கும் வன்முறையின் வசீகரமும் இனம்புரியாத பதட்டத்தை பார்வையாளனுக்கு தருகின்றன. இந்தக் காட்சியில் மூவரின் நடிப்பும் உன்னதமாக வெளிப்பட்டிருக்கிறது.

'ஜாப் வி மெட்'டில் பார்த்த அதே இளைஞன்தானா என்கிற மலைப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஷாஹித் கபூர். இரட்டைச் சகோதரர்களுக்கான இரு பாத்திரங்களுக்கும் பெரிதளவில் வித்தியாசமான ஒப்பனை எதுவுமில்லை. இருவருக்கும் பொதுவான உச்சரிப்புக் குறைபாடு வேறு. இருந்தாலும் இரண்டிற்கும் நுணுக்கமான வேறுபாட்டை வெளிப்படுத்தி இரண்டும் வேறு வேறு பாத்திரம்தான் என்கிற மயக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஷாஹித் கபூர். (நல்ல இயக்குநர் கையில் சிக்கினால் ஒரு சுமாரான நடிகனும் எப்படி வைரமாக மின்னுவான் என்பதற்கு இது ஒரு உதாரணம்). இன்னொரு ஆச்சரியம் பிரியங்கா. மதூர் பண்டார்க்கரின் 'Fashion'-ல் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. ஆனால் இதில் ஒருபடி முன்னேறி விருதுக்கான நடிப்பை தந்துள்ளார். ஆனால் மிஷின் கன்னை தூக்கி வெடிக்கும் காட்சி சற்று மிகை.

இந்தப்படத்தை சிவசேனைக்காரர்கள் எப்படி வெளியே வரவிட்டார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. (அல்லது இது குறித்து மறைமுகமான சமரசம் ஏதாவது நிகழ்ந்ததா என்பதை அறியேன். கரன் ஜோகரின் சமீபத்திய படத்தில் "பம்பாய்' என்ற வார்த்தை இடம் பெற்றதற்காக MNSகாரர்கள் கலாட்டா செய்ததும் பின்பு இயக்குநர் ராஜ்தாக்கரேவை சந்தித்து முழங்காலிட்ட செய்தியும் இங்கு நினைவு கூரத்தக்கது) அந்தளவிற்கு அந்தக் குழு இந்தப்படம் முழுக்க பகடி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 'மஹாராஷ்டிரா மஹாராஷ்டிரர்களுக்கே' என முழங்குவது, பம்பாய் என்னும் சொலை 'மும்பை' என்று திருத்துவது, வந்தேறிகள் என்று வன்மத்துடன் உரையாடுவது, ஐந்து கோடி காசுக்காக நிறம் மாறுவது, வடாபாவ்... என்று படம் நெடுக இந்த இனவாதக்குழுவின் அசிங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார் இயக்குநர். குழுவின் தலைவனாக நடித்திருக்கும் 'சுனில் சேகர் போப்பாக' அமோல் குப்தா (தாரே ஜமீன் பர்-ன் திரைக்கதையாசிரியர்) கலக்கியிருக்கிறார். இந்தப்படத்தின் பெரும்பான்மையானவர்கள் புதுமுகங்கள் என்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். மூன்று, ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒரே மாதிரியாக நடிப்பவர்களை - அவர்கள் சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் சரி - திரைத்துறையிலிருந்து கட்டாயமாக விலக்க அரசு ஏதேனும் சட்டம் கொண்டு வந்தால்தான் இந்த மாதிரியான புதுமுகங்களை நாம் அதிகம் பார்கக இயலும். :-)

விஷால் பரத்வாஜின் படம் என்பதால்தான் இந்தப்படத்தை பார்க்க தீர்மானித்தேன். ஒரு மென்மையான காதல்கதையாக இருக்கலாம் என்று யூகித்திருந்தேன். ஏனெனில் இவரது முந்தைய படங்களுள் ஒன்றான நீலக்குடை (இங்கே இதைப் பற்றி எழுதியிருக்கிறேன்) அந்தளவிற்கு மென்மையும் குழைவுமாக இருந்தது. ஆனால் படம் துவங்கின சிறிது நேரத்திற்கெல்லாம் படத்தின் இயக்குநர் இவர்தானா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அந்தளவிற்கு அந்தப் படத்திலிருந்து விலகி வேறொரு பரிமாணத்தில் திமிறியது கமீனே. பல வருடங்களாக ஒரே மாதிரியான பாணியில் (இதை முத்திரை வேறு குத்தி கொண்டாடுகிறார்கள்) உருவாக்கி எரிச்சலூட்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இயக்குநர்கள் மத்தியில் இதே மாதிரியானதொரு ஆச்சரியத்தை முன்பு தந்தவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே எடுத்தவர்தான் 'சிகப்பு ரோஜாக்களையும்' எடுத்தார் என்பதை நம்ப அப்போது சற்று சிரமமாயிருந்தது.

விஷால் பரத்வாஜ் அடிப்படையில் ஒரு இசையமைப்பாளர் என்பதால் கமீனேவின் பாடல்கள் பெரும்பாலும் சுவாரசியமான உருவாக்கங்களாக வெளிவந்துள்ளன. உதாரணமாக சுக்விந்தர் சிங்கும் விஷாலும் பாடியிருக்கும் 'Dhan te nan' பாடலும் அதன் திரைப்படக்காட்சிகளும் ரகளையாக உள்ளன. 80களில் வெளிவந்த Gangster திரைப்படங்களின் தீம் மியூசிக்கை இந்த இசை பகடி செய்கிறதோ என்று கூட தோன்றுகிறது. இந்தப்படத்தின் மிகப் பெரிய பலமாக இதன் திறமையான நான்-லீனியர் திரைக்கதையைச் சொல்வேன். Cajetan Boy என்கிற உகாண்டா நாட்டு படைப்பாளியிடமிருந்து இந்த திரைக்கதையை 4000 டாலர்கள் தந்து வாங்கி இயக்குநர் செப்பனிட்டதாக விக்கிபீடியா கூறுகிறது. ஆரம்பக்கட்டத்தின் ஒரு புள்ளியை வேறொரு காட்சியின் புள்ளியோடு இணைக்கும் மாயம் இந்தப்படத்தில் நிகழ்கிறது. உதாரணத்திற்கு சார்லி தன்னுடைய தந்தை தற்கொலை செய்து கொண்டதை நினைவு கூரும் போது பிணத்தின் மேலுள்ள துணி விலக்கப்படும் போது அங்கே அவனது தந்தையின் முகம் அல்லாது சார்லியின் ஆருயிர் நண்பனான மிகைலின் முகம் காட்டப்படுவது பல உள்ளர்த்தங்களை விவரிக்கிறது.

சமீப கால இந்தித் திரைப்படங்கள் சர்வதேசதரப் படங்களுடன் போட்டி போடும் திறமையோடு உருவாக்கப்படுவதை மகிழ்ச்சியோடு கவனிக்கிறேன். இந்தக் காற்று தமிழ்த் திரையுலகை நோக்கியும் பெருமளவிற்கு வீசினால் அது ஆரோக்கியமானதொன்றாக இருக்கும்.

suresh kannan