Thursday, February 28, 2008

சுஜாதாவைப் பற்றி ஒரு எளிய வாசகனின் சில குறிப்புகள்

இதை கட்டுரை என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ரங்கராஜன் என்கிற எளிய எழுத்தாளரை நான் கடந்து சென்ற தருணங்களைப் பற்றி என்னுடனேயே நான் நிகழ்த்திக் கொண்ட ஒரு அந்தரங்கமான உரையாடலின் பூர்த்தியடையாத பிரதியிது. நிச்சயம் கோர்வையாக இருக்காது. என்றாலும் எந்தவித ஒப்பனையும் பாசாங்குமின்றி பதிய முயன்றிருக்கிறேன். நான் வலைப்பக்கத்தில் எழுதி எனக்கே மறந்து போன சில வரிகளை இணைய நண்பர்கள் ஞாபகப்படுத்தி பேசும் போதெல்லாம் எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்த சுஜாதாவை சில முறை நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதும் அப்படியே.

ரங்கராஜன் என்கிற சுஜாதா 1935-ல் பிறந்தார். என்று அரசின் இயந்திரக்குரலில் அல்லாமல் "மச்சான்.. கேள்விப்பட்டவுடனே மனசே ரொம்ப கஷ்டமாயிடுச்சுடா".. என்கிற இயல்பான மொழியுடன்தான் இதை எழுத விருப்பம். பார்க்கலாம்.

()

'சுஜாதா' என்கிற அந்தப் பெயரை எப்போது முழுப் பிரக்ஞையுடன் தெரிந்து கொண்டேன் என்பதை ஞாபகச் சிடுக்குகளில் தேடினேன். கூலித் தொழிலாளி ஒருவரிடமிருந்து. மத்திய அரசின் நீர்வளத்துறை அலுவலகம் ஒன்றில் 'இடம் பிடித்து விடும்' நோக்கத்தில் நானும் ஒரு கூலியாக தற்காலிகப்பணி புரிந்து கொண்டிருந்தேன். சினிமா, நடிகைகள், பெண்களின் உடல் என்று உணவு இடைவேளைகளில் பேசிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் இடையில் மைக்டைசனின் தோற்றத்தை நினைவுப்படுத்தும் ஒரு இளைஞர்தான் என்னிடம் "சுஜாதா படிச்சிருக்கியா?" என்றார். நான் அப்போது ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் என்று பொழுதுபோக்குப் புத்தகங்களை மாத்திரமே தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன். பெண் எழுத்தாளர்கள் என்றாலே ஒவ்வாமையான ஒரு எண்ணம், அம்பை, சூடாமணி போன்றவர்களைப் படிப்பதற்கு முன்னால் இருந்தது. அதனால் "பொம்பளைங்க எழுதறதுன்னா எனக்கு அலர்ஜி. எப்பவும் மாமியார் கொடுமைகளைப் பத்தி எழுதுவாங்க" என்றேன் தட்டையாக. "இல்ல. இவரு ஆம்பளை. நாளக்கு ஒரு புக்கு தர்றேன். படிச்சுப்பாரு" என்றார்.

இன்றளவும் பேசப்பட்டிருக்கும் 'நகரம்' என்ற அந்த மகத்தான சிறுகதையை படித்தது அந்தத் தொகுதியில்தான். இதுவரை படித்துக் கொண்டிருந்ததெல்லாம் கேலிச் சித்திரங்களாக மாறி விட வாழ்க்கையின் ஆதாரமான ஒரு அனுபவத்தின் சாயலின் துளியை சுவைக்க நேர்ந்தது அந்தத் தருணத்தில்தான். என்னை முதலில் கவர்ந்தது, மொழியை மிக லாவகமாகவும் எளிமையான ஆடம்பரத்துடனும் கையாளும் அவரின் திறமைதான். பத்துவரிகளில் ஒரு தேர்ச்சியில்லாத எழுத்தாளன் விவரிப்பதை, கிட்டத்தட்ட ஒன்றரை வரியில் உள்ளடக்கத்தின் சேதாரமில்லாமல் எழுதுவது. படித்துக் கொண்டிருக்கும் போதே சம்பவங்கள் visual-ஆக நம்முன் விரிவதைக் காணும் பரவசத்தை அடைவது. உரைநடையில் விளக்காமல் உரையாடல்களின் மூலமாகவே கதையையும் காட்சியையும் நகர்த்துவது. கதை மாந்தர்களின் உணர்வுகளை அப்படியே நம் மூளைக்குள் செங்குத்தாக இறக்குவது.

பின்பு அவரின் எழுத்துக்களை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். எத்தனை விதமான எழுத்து. கணையாழியில் எழுதும் போது வேறு விதமாயும் குமுதத்தில் எழுதும் போது இன்னொரு விதமாயும் ராணியில் தொடர்கதை எழுதும் போது down-to-earth ஆகவும், கடினமான விஞ்ஞான சமாச்சாரங்களை எளிமையான மொழியில் விளக்குவது, தமிழில் அதிகம் பேரால் இன்னும் கூட தொடப்படாத விஞ்ஞானக்கதைகளை பல்வேறு சாத்தியங்களில் எழுதிப் பார்த்தது, .. எத்தனை பரிமாணங்கள்.

தனிமை கொண்டு, சில வித்தியாசங்கள், முரண், ரேணுகா, கால்கள், அரிசி, ·பில்மோத்ஸவ்... என்று எத்தனை சிறப்பான சிறுகதைகள்..

பல சிறுகதைகளில் அதன் உச்சத்தைத் தொட்ட சுஜாதாவால் நாவல் என்கிற வடிவத்தில் சாதனை படைக்க இயலவில்லை. சிறுகதைகளைப் போல் அல்லாமல் அவரின் நாவல்கள் படித்து முடித்தவுடனேயே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மூளையிலிருந்து உதிர்ந்து போகிறது. ஏன் அவரால் நாவல் வடிவத்தை சிறப்பாக கையாக முடியவில்லை என்கிற கேள்வி எழுந்தது. சுபமங்களா பேட்டியில் இதைப் பற்றி சுஜாதாவே பேசுகிறார்.

.. முக்கியமான காரணம் தொடர்கதையினுடைய வடிவம். அதனுடைய வடிவத்தில் மாட்டிக்கிட்டா அப்படித்தான் ஆகும். 'புளிய மரத்தின் கதை' போலவோ 'ரப்பர்' போலவோ ஒரு நாவலை மனசுல உருவாக்கி ஒரு இடத்துல போய் ஒரு மாசம் உட்கார்ந்து முழு நாவலையும் எழுதும்படியான சந்தர்ப்பமே எனக்கு வரல்லே. தொடர்கதை என்பது வேறு ஜாதி. அது நாவல் அல்ல. செயற்கையான உச்சக்கட்டங்கள், 'தீபாவளிக்கு ஆரம்பிச்சு பொங்கலுக்கு முடிச்சுடுங்க' என்கிற நிர்ப்பந்தம் - இது மாதிரி இலக்கிய சம்பந்தமில்லாத பல பந்தங்கள் எல்லாம் இருக்குது. அதை எழுதக்கூடாது, இதை எழுதக்கூடாது, இன்னார் படம் போடணும், அதுக்குத் தகுந்த மாதிரி விதிகள்.....

"அப்ப ஏன் தொடர்கதை எழுதுறீங்க?"

"தொடர்கதை எழுதும் போது ஒரு கதையை பல விதமான உரைநடையில் சொல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறதாக நான் நெனக்கிறேன். முழு நாவலாக நான் எழுதினது என்று சொல்லப் போனால் 'குருப்ரசாத்தின் கடைசி நாட்கள்' 'காகிதச் சங்கிலிகள்' இவைகளைச் சொல்லாம்."

" சுஜாதா என்கிற பெயர் காலம் காலமாக நிலைச்சு நிற்கும்படி சமுதாயப் பிரச்சினையை வச்சு ஒரு பிரம்மாண்டமான நாவல் - Magnum Opus எழுதணும்கிற ஆர்வம் உங்களுக்கு இருக்கா...?

"எழுத மாட்டேன். ஏன்னா பிரும்மாண்டமா எழுதறது என்பது முன்னால தீர்மானிக்கப்படறதில்லே. அதோட எனக்கு அந்த மாதிரியான ஒரு நாவலில் வாழந்து பார்த்த அனுபவம் கிடையாது. என் வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியா இருந்திருக்கு. என் வாழ்க்கையில் போராட்டங்களே இல்லே. ஏழ்மையை நான் அதிகம் பார்த்ததில்லே. வேலை தேடி அலைஞ்சதில்லே. மத்தவங்க உணர்ச்சிகளில்தான் நான் வாழ முடியுமே தவிர, அதை ஒட்டித்தான் கதை எழுத முடியுமே தவிர என் அனுபவத்தைப் பிரதிபலிக்க முடிவதில்லை. அதோட நான் ஒரு விஞ்ஞானியாக இருப்பதனால எழுதுவதே முன்ன சொன்னாப்பல எனக்கு க்ரா·ப்ட் ஆகத்தான் படுது.... (சுபமங்களா பேட்டி)

என்றாலும்.... கனவுத் தொழிற்சாலை, நிலா நிழல், எதையும் ஒரு முறை, பதவிக்காக, நில்லுங்கள் ராஜாவே போன்ற நாவல்கள் என் பார்வையில் உன்னதமானவை.

()

ஆரம்ப காலத்தில் (1963) எஸ்.ஆர்.ராஜன், எஸ்.ரங்கராஜன் என்கிற பெயர்களில் எழுதினார். குமுதத்தில் சில சிறுகதைகள் வெளிவந்த போது அப்போது அங்கிருந்த ரா.கி.ரங்கராஜன் என்ற பெயருக்கும் இவர் பெயருக்கும் குழப்பம் நேர்ந்தது. எனவே ஒரு செளகரியத்துக்காக தன் மனைவியின் பெயரான 'சுஜாதா' வில் எழுத ஆரம்பித்து அதுவே நிலைத்துப் போனது. கணையாழியில் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது இன்னொரு பெயரும் உண்டு. இவர்தான் எனக்கு மிகவும் பிடித்தமானவர். இவரின் மூலமாகத்தான் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களை மாத்திரமல்லாமல், மற்ற மாநில, நாட்டு எழுத்தாளர்களின் / பீட்டில்ஸ் போன்ற இசைக்கலைஞர்கள், இதழ்கள் போன்றவைகளின் அறிமுகம் கிடைத்தது.

........ துவக்கத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் நீர்க்குமிழ்கள் என்று (கஸ்தூரி ரங்கன் கொடுத்த) தலைப்பில் இந்தப் பகுதியை எழுத ஆரம்பித்தேன். இடைக்காலத்தில் 'பெட்டி' என்றும், இறுதியில் கடைசிப்பக்கம். முன்னூறு இதழ்களில் சுமார் நூற்றம்பதாவது எழுதியிருப்பேன். 'சுஜாதா' என்கிற popular அடையாளத்திலிருந்து விலகி தன்னிச்சையாக சுதந்திரமாக பலப்பல விஷயங்களைப் பற்றி carbon dating-லிருந்து நம்பிள்ளை வரை என்னால் கஸ்தூரி ரங்கன் தந்த சலுகையால் எழுத முடிந்தது. என் அனுபவத்தின்படி சற்றே நகைச்சுவை கலந்து ஒரு விஷயத்தை சொல்லும் போதெல்லாம் எதிர்ப்புக் கடிதங்கள் வந்தன. 'தாமரை' இதழ், கிறித்துவ இயக்கம், ராயப்பேட்டை பாலு (பாலகுமாரன்) என்று பல பேர் கோபத்துக்கு ஆளானேன். எதிர்பாராத மூலைகளிலிருந்து பாராட்டுக்களும் வந்தன. கணையாழி இரண்டாயிரம் காப்பிதான் விற்றாலும் பல பெரிய மனிதர்கள் படிக்கிறார்கள் என்பது தெரிந்தது. .....

இந்தப் பக்கங்கள் நிறைய எழுத்தாளர்களின் ஆதரவையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும் சந்தித்தன. கறாரான விமர்சனங்களை பதிவதை பொதுவாக தவிர்க்கும் சுஜாதா, இந்தப் பக்கங்களில் இயல்பான எழுதின வரிகளுக்காகவும் தீவிர இலக்கிய உலகிலிருந்து நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டார்.

......... சாகித்ய அகாடமி அவார்டு திரு.சு.சமுத்திரத்துக்கு கிடைத்ததில் சந்தோஷம். எழுத்துடன் சம்பந்தப்படாத துணைவேந்தர்களுக்கும், துணி வியாபாரிகளுக்கும் போகாமல் பரிசு ஒரு எழுத்தாளருக்கு கிடைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் இந்தப் பரிசுகள் கிடைத்ததுமே எழுத்தாளர்களுக்கு ஒரு மெஸ்ஸையா பாசாங்கு வந்துவிடுகிறது. அது கருத்தட்டாக்குடி ஜமீன் அறக்கட்டளை பரிசாக இருந்தாலும் சரி, பரிசு பெற்ற உடனே தமிழ் இலக்கியத்தை உஜ்ஜீவிக்கிற வேகம் வந்து கொஞ்சம்போலும் உளற ஆரம்பிக்கிறார்கள். அண்மையில் அகிலன் நினைவு நாவல் பரிசு பெற்ற ஒரு இளம் எழுத்தாளர் ஏற்புரையில், தமிழில் ஒரே ஒரு நாவல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அது 'ஜேஜே சில குறிப்புகள்'. அதற்கு மேல் படிக்க தமிழில் வேறு ஏதும் கிடையாது, மலையாளத்தில்தான் உள்ளது என்றாராம். இந்தமாதிரி ஆசாமிகளையெல்லாம் கூட்டிவந்து டிபன் காபி பரிசு எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சமுத்திரம் கூட பத்திரிகைப் பேட்டியில் கணையாழி போன்ற பத்திரிகைகளில் வருவது இலக்கியமல்ல என்கிற ரீதியில் சொல்லியிருக்கிறார். பரிசு கிடைத்தவுடன் அதிர்ச்சியாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை......

()

"தமிழின் சிறந்த எழுத்தாக இருக்க வேண்டுமென்றால் அது நாகர்கோவிலில் இருந்து வட்டார மொழியில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் போலிருக்கிறது' என்று சொல்லப் போய் சர்ச்சையானது. காலச்சுவடு சிறப்பிதழில் (1993) உள்ள கட்டுரை ஒன்றின் கடினத்தன்மையை விமர்சிக்கப் போய் (தன்னிலையை கரைத்தழிப்பதில் முடிவான நிலையைக் கொண்டு வந்தது தெரியா தூய அனுபவக்களம் என்பது உறவுகளின் மெல்லிய ஜவ்வாகி விடுகிறது. - இந்தக் கட்டுரை யாருக்காக) "சுஜாதாவின் நாகரிகக்குடை" (என்று ஞாபகம்) காலச்சுவடில் இருந்து பதிலடி வந்தது.

இலக்கியத்தில் சுஜாதாவின் பெயர் தவிர்க்க முடியாததுதான் என்றாலும் தீவிர இலக்கிய உலகில் தம்மைப் புறக்கணிப்பது குறித்து அவருக்கு வருத்தம் இருந்திருப்பதாகத்தான் படுகிறது. இது பற்றி சுஜாதா சுபமங்களா பேட்டியில் கூறுவது:

....சுஜாதா என்கிற படிமம் நிறுவனத்தின் அம்சமாகி விட்டது. (Sujatha's image has become a form of establishment) சுஜாதாவைக் கண்டு கொள்ளாமல் விடுவது கூட இப்போது விமர்சனத்தில் ஒரு உத்தியாகி விட்டது. தனிமையில் பேசும் போது அந்த விமர்சகர்கள் என் கதையெல்லாம் படிக்கறாங்கன்னு தெரியுது. பல கதைகளை புகழறாங்க. அதை வெளியிடுவதில் அவுங்க தயங்கறாங்க. எது ஜனரஞ்சகமாக இருக்குதோ அது இலக்கியமாக இருக்க முடியாது என்ற அசைக்க முடியாத கோட்பாடு அவுங்க கிட்ட இருக்கு.... (சுபமங்களா பேட்டி).

இதனாலேயே பிற்காலத்தில் அவர் விமர்சனங்களை பெரும்பாலும் குறைத்துக் கொண்டாரோ என்று தோன்றுகிறது. சங்ககால கவிதைகளை ஆங்கிலத்தில் பரவச்செய்த ராமானுஜன் முதற்கொண்டு புறநானூற்றுக்கவிதைகளின் எளிய அனுபவம், திவ்வியப்பிரபந்தம், திரைப்படம், வைணவம், மருத்துவம் என்று அனைத்து சாத்திய தலைப்புகளிலும் எழுதிய அவரைக் கண்டு பிரமிக்கவே தோன்றுகிறது.

()

இடையில் புதிதாக எழுத வருகின்றவர்களின் தயக்கங்களை விலக்கி சில ஆதாரமான வழிமுறைகளைச் சொல்லி உற்சாகப்படுத்துவதிலும் சளைக்காதவர்.


* தினம் பத்து நிமிஷமாவது படியுங்கள். தினம் படிக்க வேண்டியது முக்கியம்
* மனசுக்குள் படியுங்கள்
* ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம்
* எல்லோருடைய முதல் புத்தகங்களை படியுங்கள். இருபது விழுக்காடு ·பிக்ஷன், எண்பது நான்-·பிக்ஷன்
* படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்
* வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் க்யூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்
* நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.

(கணையாழி 1994)

()

அவரைக் கண்டு பிரமிக்கும் அதே வேளையில் சில விமர்சனங்களும் உண்டுதான்.

(1) பொதுவாக பல விஷயங்களில் முற்போக்காக சிந்திக்கும் அவர், ஜாதி விஷயத்தை மாத்திரம் ஏன் கடக்க முடியவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தான் ஒரு வைணவன் என்பதை அடிக்கடி அடிக்கோடிட்டு எழுதும் கட்டுரைகள் எனக்கு எரிச்சலையே ஏற்படுத்தின. ஒருவன் தன் அடையாளங்களைத் துறப்பது சுலபமல்ல என்றாலும், குழுக்கள் என்கிற விஷயத்தை தாண்ட முடியாமல் மனிதக்கூட்டம் ஜீவிக்க இயலாது என்பது சமூகவியல் உண்மை என்றாலும், பல்வேறு உணர்ச்சிகளில் கூடுபாயும் ஒரு எழுத்தாளன், சமூகத்தில் வெறுக்கப்பட்ட ஒரு விஷயத்தை புற்க்கணிக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைவு கூர்வதையும் அதன் மூலம் பெருமை கொள்வதையும் காண ஒவ்வாமையாகவே இருந்தது. (இது தலித் எழுத்தாளர்கள் முதற்கொண்டு எல்லோருக்குமே பொருந்தும்.)

(2) உலக இலக்கியங்களின் பரிச்சயமிருந்தும், எழுதக்கூடிய சாத்தியமும் திறமையும் இருந்தும் ஏன் இந்த மனிதரால் வெகுஜன பத்திரிகைகளிடம் பிரதானமாக தன்னை ஒப்படைத்துக் கொண்டதை தவிர்த்து சிறந்த படைப்புகளைத் தர இயலவில்லை. பொருளாதார நிர்ப்பந்தமா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. பின்பு ஏன்?

(3) நல்ல சினிமாக்களை சிலாகித்தும், மோசமான சினிமாக்களை கோபமாக கிண்டலடித்தும் கட்டுரை எழுதினவர் பிற்பாடு வணிக இயக்குநர்களோடு மாத்திரமே பணிபுரிந்தது ஏன்? மீடியா டீரீம்ஸ் மூலம் பாரதி, குட்டி போன்ற சில முயற்சிகளைத் தவிர நல்ல சினிமாக்களை உருவாக்குவதில் ஏன் தீவிரமாக பங்கு கொள்ளவில்லை.

()

வெகுஜன பத்திரிகைகளுக்கும் சிறுபத்திரிகைகளும் இடையில் ஒரு பாலமாக ஒரே உதாரணமாக இருந்த (அவரின் மொழியில் "இலக்கியக் கடத்தல்") சுஜாதா ஏற்படுத்தின வெற்றிடத்தை இனிமேல்தான் யாராவது நிரப்ப வேண்டும்.

suresh kannan

Wednesday, February 27, 2008

ஆசான் சுஜாதாவிற்கு அஞ்சலி

பொதுவாக மரணச் செய்திகளை இயல்பு குலையாத நிலையுடனேயே எதிர்கொள்ளும் மனத்திறம் என்னுடைய பதின்ம வயதிலிருந்தே ஏனோ எனக்கு வாய்த்திருந்தது. யாருடைய மரணமும் என்னை முற்றிலுமாக தடுமாறவைக்கவில்லை, என் தந்தையின் மரணம் உட்பட. ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுதான் என்றாலும் எழுத்தாளர் சுஜாதாவின் மரணம் குறித்த பிரசன்னாவின் குறுஞ்செய்தி வந்த போது பாசாங்கின்றி உண்மையிலேயே வருத்தமாக இருந்தது.

Photobucket

வெகுஜன பத்திரிகைகளிலேயே வெகுகாலம் முதிர்ச்சியின்றி உழன்று கொண்டு நேரத்தில் உன்னத இலக்கியத்தின் பால் என்னைத் திருப்பி விட்ட அவரது இலக்கிய அறிமுகக் கட்டுரைகளை நன்றியோடு இந்தச் சமயத்தில் நினைவு கூர்கிறேன். எழுதுவதற்கான ஆர்வமிருந்தும் தயக்கம் காரணமாக தள்ளி நின்ற நேரத்தில் அவரின் பல கட்டுரைகள் எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தன. என்னைப் போலவே பல நண்பர்களும் இதே திசையில் பயணித்தார்கள் என்று அறிந்த போது நெகிழ்ச்சி ஏற்பட்டது. பிற்பாடு எனக்கு அவரின் மீதான பல்வேறு விமர்சனங்களைத் தாண்டியும் மரியாதையும் அன்பும் நீடித்தது. தேசிகனின் முயற்சியில் அவரை நேரில் சந்தித்த தருணம் இந்தச் சமயத்தில் நிறைவை தருகிறது. அது நிகழாமல் போயிருந்தால் ஒரு குறையாக இருந்திருக்கும்.

"மரணம் உனது இடது கைக்கு அருகிலேயே இருக்கிறது" என்று யாருடைய மேற்கோளையோ குறிப்பிட்டு கணையாழியில் அவர் எழுதிய கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது.

'கண்கள் பனித்தன' 'நா தழுதழுத்தது' என்றெல்லாம் cliche-வான வாக்கியங்களை எழுதினால் அவரின் ஆன்மா கூட மன்னிக்காது என்பதால்.....

Good-bye ஆசானே.

suresh kannan

Friday, February 15, 2008

எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய இணையத்தளம்

தமிழ் இலக்கியத்தின் நவீன எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களுள் ஒருவரான எஸ்.ரா என்று அறியப்படும் எஸ்.ராமகிருஷ்ணன், தனது படைப்புகளுக்கென்று பிரத்யேக ஒரு இணையத்தளத்தை துவக்கியுள்ளார். அவரின் சிறுகதைகள், நேர்காணல்கள், உலக சினிமா கட்டுரைகள், அனுபவங்களைத் தவிர சமகால நிகழ்வுகளைப் பற்றிய அவரது கருத்துக்களும் உடனுக்குடன் வெளியாகும் என்று தெரிகிறது.

இணைய முகவரி: http://www.sramakrishnan.com


suresh kannan

Wednesday, February 13, 2008

பத்து குறும்படங்கள் இணைக்கப்பட்ட ஒரு திரைப்படம்

தமிழ்த் திரைப்படங்களில் பரிசோதனை முயற்சி என்ற அளவில் உருவாக்கப்பட்ட படைப்புகள் சொற்பமே. அகிரா குரோசாவின் 'ரஷோமான்' பாதிப்பில் வந்த 'அந்த நாள்', (பாடல்களே இல்லாமல் வந்த படம் என்கிற வகையிலும் இதை சேர்க்கலாம்), ஒரு பொம்மையைச் சுற்றி நிகழ்வுகள் பின்னப்பட்ட எஸ்.பாலச்சந்தரின் 'பொம்மை, மருத்துவமனைக் களத்திலேயே முழுத் திரைப்படமும் சுற்றுகிற ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்', பாத்திரங்களின் அகவுணர்ச்சி வலுவாக சித்தரிக்கப்பட்ட ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்', முன்பாதி ஒரு கதையும், பின்பாதி இன்னொரு கதையுமாக பாலசந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்', நடுத்தர வர்க்கம் x அதிகாரம், முதுமை x சமூகம் என்கிற குறியீட்டுத் தன்மைகளோடு அமைந்த பாலுமகேந்திராவின் முறையே வீடு, சந்தியா ராகம், ஒரு நாளின் நிகழ்வுகளை மாத்திரமே பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'கல்யாண காலம் (?), வசனங்களே இல்லாமல் வந்த கமலின் 'பேசும் படம்', Sliding Doors பாதிப்பில் வந்த ஜீவாவின் 12B போன்ற படங்கள் என்னுடைய பார்வையில் பரிசோதனை முயற்சிகளாக சட்டென்று நினைவுக்கு வருபவை. இவைகளை ஏதோ ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்காக மாத்திரமே குறிப்பிடலாமே ஒழிய முழுக்க முழுக்க பரிசோதனை முயற்சி என்று கூற இயலாது.

பொதுவாக அனைத்து தமிழ்த் திரைப்படங்களையும் ஐந்து, ஆறு வகைகளில் அடக்கி விடலாம். 'காதல்' என்ற வகையில் மாத்திரமே எழுபத்தைந்து சதவீத படங்கள் அடங்கிவிடும் என்று தோன்றுகிறது. வெற்றி பெறும் பார்முலாக்களையே விடாப்பிடியாக சுற்றி வருகிறது தமிழ்த்திரையுலகம். சர்வதேச கவனத்தை பெற்ற இந்தியத் திரைப்படங்கள் வங்காளம், கேரளம், கன்னடம் போன்ற நிலப்பிரதேசங்களிலிருந்து மாத்திரமே வெளிவந்தன. " ஆதியில் முதலில் தோன்றிய குரங்கு தமிழக் குரங்காகத்தான் இருக்க முடியும்" என்று தமிழ் ஆய்வாளர்களை பகடி செய்த புதுமைப்பித்தனின் கூற்றுப்படி 'கல் தோன்றி... என்று பீற்றிக் கொள்கிற தமிழினம் பெரும்பாலான துறைகளைப் போலவே திரைப்பட உருவாக்கத்திலும் பின்தங்கி நிற்கிறது என்பதுதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

()

தமிழ்த்திரையுலகத்தின் முன்னோடியான இந்தி திரையுலகமும் இதே பாணியில்தான் இயங்கிக் கொண்டிருந்தது என்றாலும் சமீப கால விழிப்பில் மாற்று திரைப்படங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ராம்கோபால் வர்மா, மதூர் பண்டார்க்கர், சஞ்சய் லீலா பன்சாலி, அனுராக் காஷயப், ராஜ்குமார் சந்தோஷி, விஷால் பரத்வாஜ் போன்ற திறமையான இயக்குநர்கள் இந்தி சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழிலும் சேரன், பாலா, அமீர், செல்வராகவன், கெளதம் மேனன் போன்ற நவீன அடையாளங்கள் இருந்தாலும் இவர்களால் வணிக சினிமாவிலிருந்து முற்றிலுமாக விலகி தங்களின் படைப்பை தர முயற்சி செய்யவில்லை.

இந்தி மொழியில் (with English sub-titles) நான் சமீபத்தில் பார்த்த படம்.. மன்னிக்கவும் படங்கள் Dus Kahaniyaan. ஆறு இயக்குநர்கள் இயக்கிய பத்து குறும்படங்கள் நறுக்கி அடுக்கி வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் போல் ஒன்றன் பின் ஒன்றாய் உள்ளன. 'Paris I Love you' என்கிற 21 படங்களின் தொகுப்பு இதற்கு முன்னுதாரணமாய் இருக்கக்கூடும் என்றாலும் இந்தியத் திரைப்படங்ளைப் பொறுத்தவரை இதுவே முதன்முயற்சி என்று நினைக்கிறேன். (சமீபத்தில் வெளிவந்த அடூர் கோபாலகிருஷ்ணன் என்கிற ஒரே இயக்குநரின் உருவாக்கத்தில் வெளிவந்த 'நாலு பெண்கள்' திரைப்படத்தையும் இதனோடு சம்பந்தப்படுத்தி யோசிக்கலாம்).

dus

Dus Kahaniyaan-வில் ஏழு அல்லது எட்டு படங்கள் சிறப்பாய் உருவாக்கப்பட்டுள்ளன. அதை ஒவ்வொன்றையும் நான் சாவகாசமாக எழுதிக் கொண்டிருந்தால் நீங்கள் விசைப்பலகையின் delete key-ஐ மிகுந்த பிரியத்துடன் தொடக்கூடிய அபாயமிருப்பதால் அவைகளில் சிறந்த இரண்டு படங்களைப் பற்றி மாத்திரம் எழுத விருப்பம்.

()

(1) Zahir - (இயக்குநர் சஞ்சய் குப்தா)

காதலில் ஏற்படுகிற தோல்வியால் விரக்தியடைந்து ஊர்மாறி புதிய இடத்தை அடைகிற ஒருவன் (மனோஜ் பாஜ்பாய்) சக இருப்பிடவாசியான ஒரு பெண்ணிடம் (தியா மிஸ்ரா) இயல்பானதொரு சிநேகத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அவளின் ஆளுமையில் கவரப்படும் அவன் ஒரு தடுமாற்ற தருணத்தில் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன் காதலை வெளிப்படுத்த அவள் அதை ஏற்க மறுத்து அவனைப் புறக்கணிக்கிறாள். அவமானப்படுத்தப்பட்டதாக உணரும் அவன் மனவேதனையில் குடிப்பழக்கத்தை அதிகரித்து நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பாருக்கு செல்லும் போது, அங்கே நடனமாடுபவள் (bar dancer) தன்னை புறக்கணித்த பக்கத்துவீட்டுக்காரியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்று காத்திருந்து அவள் வீடு திரும்பியதும் அவள் மீது பாய்ந்து, அவள் தடுத்து ஏதோ கூற முயல்வதை கவனிக்காமல் வன்புணர்ச்சி கொள்கிறான். வெற்றிகரமான அந்தக் காலையில் அவன் கண்விழிக்கும் போது அவள் விட்டுச் சென்ற குறிப்பொன்று சொல்கிறது, அவள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவள் என்று..........

இந்தப் படத்தின் sub-text எனக்கு உணர்த்துவது.... சக மனுஷியாக அவளின் புறக்கணிப்பை கூட வேதனையுடன் ஏற்றுக் கொள்ளும் அவன், அவள் ஒரு பாலியல் தொழிலாளி என்பதை அறிந்தவுடன் அவளின் சம்மதமில்லாமல் மிருகம் போல் பாய்வதிலிருந்து விளிம்பு நிலை மனிதர்களை மனிதப்பிறவிகளாகக்கூட மதிக்க வேண்டியதில்லை என்பதை இந்தச் சமூகத்தின் பொதுப்புத்தி நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதே.

(2) Rice Plate - (இயக்குநர் ரோஹித் ராய்)

பம்பாயிலிருந்து புனேவிற்கு பயணம் மேற்கொள்ளும் மிகுந்த ஆச்சாரமான மனோபாவத்தை உடைய அந்த இந்துப் பெண்மணி (ஷபனா ஆஸ்மி) இசுலாமியரின் டாக்சியில் பயணம் செய்வதை கூட விரும்பாத அளவிற்கு மதப்பற்று கொண்டவர். அவசர பதட்டத்தில் பணப்பையை வீட்டிலேயே விட்டுவிடும் அவர் இந்து டாக்சி டிரைவருக்காக காத்திருக்கும் பிடிவாதத்தில் தாமதமாகி ரயில் வண்டியை தவறவிடுகிறார். (டாக்சியில் இருந்து இறங்கின பிறகுதான் தெரிகிறது, இந்து மத சாமிப்படங்கள் மாட்டியிருந்தாலும் ஓட்டுநர் ஒரு இசுலாமியர் என்பது). தனக்கு உதவ வரும் ஒரு இசுலாமிய முதியவரையும் (நஸ்ருதீன் ஷா) வெறுப்போடு புறக்கணிக்கிறார்.

அடுத்த வண்டிக்காக இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் சர்க்கரை நோயாளியான அவருக்கு பசியில் உயிர் போகிற வேதனை ஏற்படுகிறது. கையில் இருக்கிற சொற்ப காசில் உணவுத்தட்டை வாங்கி மேஜையில் வைத்து விட்டு கையை கழுவ சென்று திரும்பும் போது தன்னுடைய சாப்பாட்டை அந்த இசுலாமிய முதியவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அதிர்ச்சியோடு பார்க்கிறார். உயிர் போகிற பசியில் தன்னுடைய ஆச்சாரங்களையெல்லாம் மறந்து போகிற அவர், முதியவரிடமிருந்து தட்டைப் பிடுங்கி ஆவேசத்தோடு உண்கிறார். எதிரிலிருக்கும் முதியவர் புன்னகையோடு இதை ஏற்றுக் கொள்கிறார்.

சாப்பிட்டுவிட்டு ரயில் வரும் பிளாட்பாரத்திற்கு திரும்பியவர் தன்னுடைய உடமைகளை உணவகத்திலேயே விட்டுவிட்டு வந்திருப்பதை உணருகிறார். அவசரமாக ஓடிப்போய் மேஜையின் கீழ் பத்திரமாக இருக்கிற பைகளை எடுத்து நிமிர்பவருக்கு தன்னுடைய உணவுத்தட்டு அப்படியே சாப்பிடப்படாமல் இருப்பதை காண முடிகிறது. அவருடைய ஆச்சாரமான மனம் சற்றே நெகிழ்கிற ஒரு குறியீட்டுக் காட்சியுடன் இந்தப் படம் நிறைகிறது.

இந்தப்படம் சற்யே நாடகத் தொனியுடன் அமைந்திருக்கிறது என்றாலும் ஷபனா, நஸ்ருதீன் போன்ற திறகைமிக்க கலைஞர்களின் பிரமிப்பை ஏற்படுத்தும் பங்களிப்பின் மூலம் சிறந்ததொரு கலைப்படைப்பாகிறது. கலையில் வெளிப்படையான பிரச்சாரம் ஏற்புடையதில்லை என்பதில் எனக்கும் உடன்பாடு என்றாலும் சமூக மனங்களில் உறைந்திருக்கும் பல அழுக்குகளை இம்மாதிரியான படங்கள் ஒரு துளியையாவது சுரண்டும் என்றால் அது வரவேற்கத்தகுந்ததே.

()

ஒரு வேளை தமிழ் இயக்குநர்களுக்கும் நல்ல புத்தி வந்து தமிழின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கி தொகுத்து தரும் ஒரு திட்டத்திற்காக (பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' மாதிரி) ஒருவேளை என்னை அணுகி (கற்பனைக்கு எல்லைதான் ஏது) சிறுகதைகளை தேர்வு செய்து தரச் சொன்னால் என்னுடைய தேர்வு பின்னால் வரும் பட்டியலாக இருக்கக்கூடும். இந்தக் கதைகளை காட்சி ஊடகத்திற்கு மிகப் பொருத்தமானதா, அல்லவா என்கிற கோணத்தில் அதிகம் யோசிக்காமல் (ஆனால் அப்படி யோசிக்க வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறை) எனக்குப்பிடித்த, படமாக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிற சட்டென்று நினைவுக்கு வந்த பத்து சிறுகதைகளை தந்துள்ளேன். பிறிதொரு சமயத்தில் இதை நீட்டிக்கவும் விருப்பம்.

ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்
உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் - ஆதவன்
·பிலிமோத்ஸவ் - சுஜாதா
உள்ளும் புறமும் - வண்ண நிலவன்
அந்தரங்கம் புனிதமானது - ஜெயகாந்தன்
கிறுக்கல் - லா.ச.ராமாமிருதம்
புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
தீட்டு - அழகிய பெரியவன்
ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்

()

காட்சி ஊடகத்திற்கு தோதான, உங்களுக்கு சிறந்ததாக தோன்றும் சிறுகதைகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.

suresh kannan

Tuesday, February 05, 2008

'நான் வித்யா' - புத்தகப்பார்வை - இறுதிப் பகுதி

பகுதி 1 | பகுதி 2

திரும்பவும் பிச்சை எடுக்கச் சென்றது குறித்து வித்யாவிற்கு வேதனையாக இருந்தது. 'எங்காவது வேலை செய்யலாம்' என்று முடிவு செய்து தனது ஊருக்கு திரும்ப முடிவு செய்கின்றார். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. 'நிர்வாணம்' நடந்த மற்றும் உடம்பு தேறுவதற்கான காலம் முழுதும் மூத்த திருநங்கைகளே பணம் செலவு செய்கின்றனர், எப்படியும் பின்னால் வரப்போகிறதென்று. எனவே அவர்களுக்குத் தெரியமாமல் ஊருக்கு ரகசியமாக வருகிறார். மாமாவின் வீட்டில் வித்யாவை ஏற்றுக் கொண்டாலும் பெண்ணுடையில் இருப்பதால் எரிச்சலடைகிறார். அங்கும் தங்க இயலாமல் வெளியேறுகிறார் வித்யா.

மதுரை. எழுத்தாளர் கோணங்கி, நாடக ஆசிரியர் முருகபூபதி ஆகியோர்களுடன் வெகுநாட்களுக்குப் பின்னான சந்திப்பு. ஆறுதலாக பேசுகின்றனர். சிறிது நாட்கள் பிரச்சினையில்லாமல் போகிறது. என்றாலும் அடுத்தவர் தயவில் தொடர்ந்து இருக்க இயலவில்லை. நண்பர்களின் மூலம் திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை மறுக்கிறார்.

... எனக்குத் தெரிந்து இந்தியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமும் திருநங்கைகள் பிச்சை எடுப்பதிலிருந்தோ பாலியல் தொழில் புரிவதில் இருந்தோ மீள்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. 'நீ பாலியல் தொழிலே செய்; ஆனால் பாதுகாப்பாகச் செய்' என்கிற போதனை ஒருவர் வாழ்வில் என்ன மறுமலர்ச்சியை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? வெறும் அபத்தம். (பக்கம் 182)

விஜயா என்கிற அன்பான பெண்மணி அடைக்கலம் தருகிறார். அங்கிருந்த படியே வேலை தேடும் படலம். எல்லா இடங்களிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆனந்த அதிர்ச்சியாக வேலை கிடைக்கிறது. அடைக்கலம் கொடுத்தவர் அமெரிக்கா சென்றுவிட மறுபடியும் தங்குமிடத்திற்கான போராட்டம்.

சென்னையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வலைப்பதிவாளர் பாலபாரதியின் அறிமுகம். வலைப்பதிவில் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துகிறார். livingsmile.blogspot.com பிறக்கிறது. சக வலைப்பதிவாளர்கள் தொடர்ந்து எழுதச் சொல்லி உற்சாகப்படுத்துகின்றனர். அச்சு ஊடகங்களில் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. அரசு இயந்திரத்துடன் நீண்டதொரு உரிமை போராட்டத்திற்குப் பிறகு 'சரவணன்' என்கிற தன் பெயரை 'லிவிங் ஸ்மைல் வித்யா' என மாற்றம்.

()

நான் முன்னர் பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்தில் (வழக்கறிஞர்கள் சூழ்ந்த வாசனையுடன் உடைய எலிப் பொந்துகள் அவை) திடீரென்று விநோதமான கைத்தட்டல் ஓசைகளும், குரல்களும் கேட்கும். எரிச்சலுடன் நாங்கள் புரிந்து கொள்வோம். கொடுக்கும் பணத்தை வாங்கிச் செல்லாமல் அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். தராவிட்டால் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்கள். அதற்குப் பயந்தே பல அலுவலகங்களில் முடிந்த அளவு பணத்தை தந்து அனுப்பி விட முயற்சி செய்வார்கள். பணம் தராமல் மல்லுக்கு நிற்பவர்களும் உண்டு. கஷ்டமில்லாமல் வரும் பணத்தின் காரணமாக சில ஆண்களும் பெண் உடையில் இப்படி திருநங்கைகளாக வேடமணிந்து வருவார்கள் என நண்பரொருவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது.

'இவர்கள் உழைத்துப் பிழைக்காமல் ஏன் இப்படி பிச்சையெடுக்கிறார்கள்?' என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுண்டு. ஆனால் வித்யா தான் வியாபாரம் செய்யப் போன கொடுமையை விவரித்ததைப் படித்தவுடன் முழுக்கவும் புரிந்து போயிற்று. சிலரால்தான் வியாபார உலகில் அதன் வேதனைகளையும் தாண்டிப் பிழைக்க முடியும்.

......திருநங்கைகளில் பலர் விநோதமாக நடந்துகொள்வதும், உரக்கப் பேசி நடுவீதியில் தர்ம சங்கடம் உண்டாக்குவதும், பாலியல் தொழிலுக்கு வலிய அழைப்பதும், ஆபாசமாக பேசி அருவருப்பூட்டுவதும், முற்றிலும் அவர்களின் தற்காப்புக்காக மட்டுமே என்று நான் சொன்னால், தயவு செய்து நம்புங்கள். அதுதான் உண்மை.

பாதுகாப்பற்ற சமூகத்தில், எங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை நாங்கள் இவ்வாறெல்லாம் செய்துதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உடல் வலிமை மிக்க முரட்டு ஆண்கள் வம்புக்கு வந்தால், எங்களால் எதிர்த்து நிற்க முடியாது. பணிந்துபோகவும் விருப்பமில்லாவிட்டால், அருவருப்புணர்வை உருவாக்கி அவர்களை விலகிச் செல்ல வைப்பதே எங்களுக்குத் தெரிந்த வழி...

()


திருநங்கைகளின் கோரிக்கைகள் மிக எளிமையானவை. சக குடிமகன்கள் அடிப்படையாக, இயல்பாக பெறுவது. அடையாள அட்டை. பால் என்கிற பிரிவில் Third sex என்று குறிக்கப்பட வேண்டும் என்பது; ரேஷன் கார்டு, வாக்குரிமை போன்றவை. (இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சமீபத்தில் Male/Female/Eunuch) என குறிக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய அங்கீகாரம்) ஆனால் அவற்றை அதிகார மையங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும், ஏற்க வைப்பதற்கும் நீண்ட போராட்டங்களை அவர்கள் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

சட்டப்பிரிவு 377 - பாலுறவு தொடர்பான ஷரத்து. ஆண்/பெண் பாலுறவு/குறிப்பாக யோனி வழிப் பாலுறுவு மட்டுமே இயற்கையானது (Natural), இயல்பானது (Normal) எனக் குறிப்பிடுவதின் மூலம் ஓரினப்புணர்ச்சி, அரவாணியருடனான உறவு ஆகியவை சட்டத்திற்குப் புறம்பானவையாகின்றன. சட்டர £தியாக அரவாணிகள் கொள்ளும் பாலுறவு அங்கீகரிக்கப்பட்டால்தான் அவர்கள் தமக்கான திருமண உரிமை கோர முடியும். குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை பெற முடியும்.

()

அரசுகளின் அலட்சியம் ஒருபுறம் இருக்கட்டும்; பொதுப்புத்தி சார்ந்த வெளிப்பாடுகள் இன்னொரு புறமான கொடுமை. உடல் ஊனமுற்றவர்கள் மீது காட்டும் அனுதாபத்தைக்கூட நாம் திருநங்கைகளிடம் காட்டுவதில்லை, மாறாக அருவருப்பையும் கேலியையும்தான். அவர்களிடம் காட்ட வேண்டியது அனுதாபம் கூட இல்லை. அவர்களையும் நம் சக மனிதர்களாக இயல்பாக உணரச் செய்வதுதான் நியாயமான செயலாக இருக்க முடியும். அதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக இந்தப் புத்தகம் அமையக் கூடும்.

இந்தப் பதிவில் பல இடங்களில் புத்தகத்திலுள்ள வரிகளையே மீள்பிரசுரம் செய்யக் காரணம், என்னதான் அவர்களின் வலியை எழுத்தில் நான் பெயர்க்க முயன்றாலும் அது செயற்கைத் தன்மையோடு மொண்ணையாக இருக்கும். அதனாலேயே நூலாசிரியரின் மொழியையே பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் மொழி என்று சொல்லும் இன்னொன்றை குறிப்பிட வேண்டியிருக்கிறது. வித்யாவின் சில பதிவுகளை நான் சமீபத்தில் படிக்கும் போது அதில் காணப்படும் 'சுளீர்' என்கிற கோபமும் கடுமையும் இந்தப் புத்தகத்தில் மட்டுப்பட்டிருக்கிறது. அச்சு ஊடகம் என்பதால் politcally correct-ஆக எழுத வேண்டும் என்பதாலோ அல்லது பதிப்பகத்தின் வழிநடத்துதலின் படி இது நிகழ்ந்தா என்று தெரியவில்லை. என்றாலும் விளிம்புநிலை பிரதிநிதி ஒருவரின் நூலை பதிப்பிக்க முன்வந்ததற்காக கிழக்கை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்தப்பதிவை எழுத அ.மங்கை எழுதின 'எதிரொலிக்கும் கரவொலிகள், அரவாணிகளும் மனிதர்களே' என்கிற சிறுநூலும் (பாரதி புத்தகாலயம்) உதவியாய் இருந்தது. அதற்கும் நன்றி.