Tuesday, January 23, 2018

2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)

22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக  சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால் பண்டிதனாகி விடலாம் என்கிற கனவெல்லாம் இல்லாமல், பறக்காவெட்டி போல் கண்டதிற்கும் அலைமோதாமல் வழக்கத்திற்கு மாறாக  என்ன வாங்க வேண்டும் என்பதை கறாராக தீர்மானித்துக் கொண்டு சென்றேன். அப்படியும் தற்செயல் தேர்வில் சிலதை வாங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. 

ஆனால் வாங்க விரும்பும் நூல்களின் பட்டியல் இன்னமும் முடியவில்லை. தமிழ்ப்பிரபாவின் பேட்டை, தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’, ஜீ.முருகன் சிறுகதைகள், ஞானக்கூத்தனின் ‘கவனம்’ இதழ் தொகுப்பு (விருட்சம்), ‘என் தந்தை பாலைய்யா’ உள்ளிட்ட பல நூல்களை பட்ஜெட் காரணமாக வாங்க முடியவில்லை. பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' அந்தரங்கமாக என்னை மிகவும் பாதித்த புதினம். நூலகத்தில் வாசித்தது. என் தனிப்பட்ட சேகரத்தில் இது நிச்சயம் இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் நினைவிற்கு வரவில்லை. ஜமாலனின் 'கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்' (கடந்த முறையே தவறவிட்டது), மற்றும் மௌனியின் இலக்கியாண்மை ஆகிய நூல்களையும் வாங்க இயலவில்லை.

ஆனால் இவற்றையெல்லாம் வருங்காலத்தில் எப்படியாவது பிடித்து விடுவேன்.

புத்தகங்களின் மீதான தீராத தாகம் ஒருபுறம் இருந்தாலும், ‘ஏற்கெனவே வாங்கி அடுக்கியிருப்பதையும், இப்போது வாங்கியிருப்பதையும் முதலில் வாசித்து முடி’ என்கிற குரல் இன்னொருபுறம் கேட்டுக் கொண்டிருக்கிறது.  அந்த குரலைக் கவனமாக கேட்டு வாசித்த புத்தகங்களைப் பற்றி இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுத உத்தேசித்திருக்கிறேன். அதுதான் இந்த நூல் வாங்க உதவியவர்களுக்கான பதில் நன்றியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

புத்தக காட்சியில் சந்தித்த நண்பர்கள், எழுத்தாளர்கள், அனுபவங்கள் போன்றவற்றை ஆகியவற்றைப் பற்றி குறிப்புகளாக எழுதும் உத்தேசம் உள்ளது. எழுதுவேன். தம்பட்டத்திற்காக அல்லாமல் எவருக்காவது உதவியாகவோ அல்லது தூண்டுதலாகவோ இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இது போன்ற புத்தக பட்டியலை பொதுவில் இடுவது.

இனி (இரண்டாம்) பட்டியல்.

1)    பிராமண போஜனமும் சட்டிச் சோறும் – ஆ.சிவசுப்பிரமணியன் - NCBH
2)    உப்பிட்டவரை - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
3)    தமிழ்க் கிறிஸ்துவம் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
4)    மந்திரமும் சடங்குகளும் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
5)   ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் - ஆ.சிவசுப்பிரமணியன் –      காலச்சுவடு
6)    ஆதிரை – சயந்தன் - தமிழினி
7)    சுந்தர ராமசாமி நேர்காணல்கள் – காலச்சுவடு
8)    நா.பார்த்தசாரதி – நினைவோடை – காலச்சுவடு
9)    காகங்களின் கதை – அ.கா.பெருமாள் – காலச்சுவடு
10)  பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை – பெருமாள்முருகன் –                 காலச்சுவடு
11)    புனைவு என்னும் புதிர் – விமலாதித்த மாமல்லன் – காலச்சுவடு
12)    சங்கர் முதல் ஷங்கர் வரை – தமிழ்மகன் – உயிர்மை
13)    இடைவெளி – சம்பத் – பரிசல்
14)    சுவடுகள் – வெங்கடேஷ் சக்ரவர்த்தி - பிரக்ஞை
suresh kannan

Sunday, January 21, 2018

2018 புத்தக கண்காட்சி - வாங்கிய நூல்களின் பட்டியல்




2018-ம் ஆண்டு புத்தக கண்காட்சியில் இரு முறைகளாக சென்று வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. இதை சாத்தியப்படுத்துவற்கு சில நல்ல உள்ளங்கள் நிதியுதவி செய்திருக்கின்றனர். இந்த நூற்களோடு அவர்களின் நினைவும் பிரியமும் உறைந்திருக்கும். ‘நீ உண்ணும் உணவில் உன் பெயர் எழுதப்பட்டிருக்கும்’ எனும் பொன்மொழி போல இந்த நூல்களின் மேல் அவர்களின் பெயர்களும் அரூபமாக எழுதப்பட்டிருக்கும்.

என்னதான் முன்கூட்டியே திட்டமிட்டு சென்றாலும் இது போன்ற கண்காட்சிகளில் புத்தகங்களை தேர்வு செய்வதென்பது பெரும்பாலும் தற்செயலே என்பது என் தனிப்பட்ட அனுபவம். அந்த நேரத்து மனநிலையும், நூலின் கவர்ச்சியான வடிவமைப்புகளும் தலைப்பும், சல்லிசான விலையும் எப்போதோ வாசித்திருந்த பரிந்துரைகளின் நினைவுகளும், சில தனிப்பட்ட ஆர்வங்களும், நிர்ப்பந்தங்களும் என்று பல விஷயங்கள் கூட்டாக இந்தத் தேர்வை செயல்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்.

“இன்னும் ஒண்ணும்மா. ப்ளீஸ்.’ என்று தீராத ஏக்கத்துடன் ஐஸ்கிரீம் கடையை திரும்பிப் பார்த்துக் கொண்டே இழுத்துச் செல்லப்படும் சிறுவனைப் போலவேதான் ஒவ்வொரு முறையும் புத்தக கண்காட்சி அரங்கிலிருந்து திரும்புவேன். எனவே இந்தப் பட்டியல் மிக சொற்பமானதே. வாங்க விரும்பும், உத்சேத்திருக்கும் பட்டியல் இன்னமும் நீண்டது. எனவே இது இறுதியானதல்ல.

இந்த நூல்களின் சில பக்கங்களையாவது தினமும் வாசித்து விடுவது என்கிற உறுதியில் இருக்கிறேன். வெறுமனே வாசிப்பது மட்டுமல்ல, அவற்றின் நேர்மறையான கருத்துகள், என் மனதின் உள்ளே வர அனுமதிப்பதும், வாழ்நாள் முழுவதும் அவற்றைப் பின்பற்ற முயற்சிப்பதும்தான் இந்த வாசிப்பின் நிகர பயனாக இருக்க முடியும் என நம்புகிறேன். 

கடந்த சில வருடங்களாக, என்னுடைய கவனம் புனைவுகளிலிருந்து சற்று விலகி அபுனைவுகளின் பக்கம் அதிகம் திரும்பத் துவங்கியிருக்கிறது என்பதை எனக்கே ரகசியமான பெருமையைத் தரும் வளர்ச்சியாக கருதுகிறேன். 

இனி பட்டியல். 

**


  1)   காவேரியின் பூர்வகாதை – கோணங்கி – டிஸ்கவரி
  2)   தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி – ஆ.சிவசுப்பிரமணியன் – NCBH
  3)   சந்நியாசமும் தீண்டாமையும் – ராமானுஜம் – மாற்று
  4)   நாவல் எனும் பெருங்களம் – அ.ராமசாமி – நற்றிணை
  5)   அடித்தள மக்கள் வரலாறு - ஆ.சிவசுப்பிரமணியன் – NCBH
  6)   வழித்தடங்கள் – தொ.பரமசிவன் – மணி பதிப்பகம்
  7)   தொல்லிசைச் சுவடுகள் – நா.மம்மது – வம்சி
  8) சில பொழுதுகள் சில நினைவுகள் – பாவண்ணன் – வெங்கட்சுவாமிநாதனைப் பற்றியது – சந்தியா பதிப்பகம்
  9)   தென்னிந்திய குலங்களும் குடிகளும் – ந.சி.கந்தையா பிள்ளை - சந்தியா பதிப்பகம்
  10) இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி - சந்தியா பதிப்பகம்
  11) இந்தியாவின் இருண்ட காலம் – சசிதரூர் – கிழக்கு
  12) ஊழல் – உளவு – அரசியல் – சவுக்கு சங்கர் – கிழக்கு
  13) இசைக்கச் செய்யும் இசை – கருந்தேள் ராஜேஷ் – வாசகசாலை
  14) கவிதை – ஓவியம் – சிற்பம் – சினிமா – இந்திரன் – டிஸ்கவரி
  15) தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டல் – டி.செளந்தர் – டிஸ்கவரி
  16) திரை இசைத் திலகங்கள் – வி.ராமமூர்த்தி - சந்தியா பதிப்பகம்
  17) பயாஸ்கோப் – கிருஷ்ண்ன் வெங்கடாசலம் - சந்தியா பதிப்பகம்
  18) தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் – ந.முருகேச பாண்டியன்   –டிஸ்கவரி
  19) தமிழ் சினிமா – சில குறிப்புகள் – பி.எல்.ராஜேந்திரன் – சிக்ஸ்சென்ஸ்
  20) திரைக்கதை உருவமும் உள்ளடக்கமும் – கே.ராஜேஷ்வர் – புளூ ஓசன்
  21) படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள் – ஷங்கர் ராமசுப்பிரமணியன் – டிஸ்கவரி
  22) மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு – யமுனா ராஜேந்திரன் – டிஸ்கவரி
  23) என் கதை – சார்லி சாப்ளின் – யூமா வாசுகி – NCBH
  24) காட்சிகளுக்கு அப்பால் – எஸ்.ரா – தேசாந்திரி
  25) இடக்கை – எஸ்.ரா. – தேசாந்திரி
  26) நாவலெனும் சிம்பொனி - எஸ்.ரா. – தேசாந்திரி
  27) உலகை வாசிப்போம் - எஸ்.ரா. – தேசாந்திரி
  28) எழுக நீ புலவன் – ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  29) நாவலும் வாசிப்பும் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  30) ஆஷ் அடிச்சுவட்டில் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  31) பாரதி கவிஞனும் காப்புரிமையும் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  32) முச்சந்தி இலக்கியம் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  33) அந்தக்காலத்தில் காப்பி இல்லை - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
  34) தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் – மாரி செல்வராஜ் – வம்சி
  35) தலித்தியமும் உலக முதலாளியமும் – எஸ்.வி.ராஜதுரை  - NCBH
  36) சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை – சுகுணா திவாகர் – எதிர் வெளியீடு
  37) செவ்வி – தொ.பரமசிவன் நேர்காணல்கள்- கலப்பை பதிப்பகம்
  38) உரைகல் - தொ.பரமசிவன் - கலப்பை பதிப்பகம்
  39) தமிழ் நவீனமயமாக்கம் – க.இராசாராம் – காலச்சுவடு
  40) ஜெயலலிதா – மனமும் மாயையும் – வாஸந்தி – காலச்சுவடு
  41) தமிழக அரசியல் – காலச்சுவடு கட்டுரைகள்
  42) மொழி பெயர்ப்புப் பார்வைகள் - க.இராசாராம் – காலச்சுவடு
  43) முகங்களின் தேசம் – ஜெயமோகன் – சூரியன் பதிப்பகம்
  44) வெண்கடல் – ஜெயமோகன் – வம்சி
  45) சொல்லி முடியாதவை – ஜெயமோகன் – நற்றிணை
  46) நாளும் பொழுதும் - ஜெயமோகன் – நற்றிணை
  47) கலாச்சார இந்து - ஜெயமோகன் – நற்றிணை
  48) உச்ச வழு (சிறுகதைகள்) - ஜெயமோகன் – நற்றிணை
  49) வலசைப் பறவை - ஜெயமோகன் – நற்றிணை
  50) இன்றைய காந்தி - ஜெயமோகன் – தமிழினி
  51) தனிக்குரல் - ஜெயமோகன் – கிழக்கு
  52) மிளர்கல் – இரா.முருகவேள் – பொன்னுலகம்
  53) நாடோடித் தடம்  - ராஜசுந்தர்ராஜன் – வாசகசாலை
  54) கொல்லனின் ஆறு பெண்மக்கள் – கோணங்கி – பாரதி பதிப்பகம்
  55) சில செய்திகள் சில படிமங்கள் – கலாப்ரியா – சந்தியா
  56) அழகிய லம்பன் – எழில்வரதன் – சந்தியா
  57) நான் வடசென்னைக்காரன் – பாக்கியம் சங்கர் – பாதரசம்
  58) காற்று வளையம் – பாஸ்கர் சக்தி – டிஸ்கவரி
  59) இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் – ஆர்.சிவகுமார் – பாதரசம்
  60) நடைவெளிப்பயணம் – அசோகமித்திரன் – சூரியன் பதிப்பகம்
  61) பதேர் பாஞ்சாலி – விபூதிபூஷண பந்தயோபாத்யாய் – மாற்று
  62) உயிர்காக்கும் உணவு நூல் – மயிலை சீனி. வேங்கடசாமி – சந்தியா
  63) மறைந்து திரியும் நீரோடை – கலாப்ரியா – சந்தியா
  64) கூண்டுப்பறவையின் தனித்த பாடல் – கவிதா முரளிதரன் – டிஸ்கவரி
  65) வல்விருந்து – நாஞ்சில்நாடன் – தமிழினி
  66) 1084-ன் அம்மா – மகாஸ்வேதா தேவி – பரிசல்
  67) பெருவலி – சுகுமாரன் – காலச்சுவடு
  68) தெற்கிலிருந்து ஒரு சூரியன் – தி இந்து
  69) அயல்சினிமா (ஜனவரி 2018 இதழ்)
  70) நம் நற்றிணை (ஜனவரி – மார்ச் 2018 இதழ்)
  71) இடைவெளி (இதழ் 3) ஜனவரி 2018
  72) பெரியார் இன்றும் என்றும் – விடியல் பதிப்பகம்
 
 




suresh kannan

Monday, January 15, 2018

விட்டல் ராவ் நேர்காணல் - பேசும் புதிய சக்தி - ஜனவரி 2018 இதழ்


இந்த புத்தக கண்காட்சியில் ‘பேசும் புதிய சக்தி’ ஜனவரி 2018 இதழை எங்கு கண்டாலும் உடனே வாங்கி விடுங்கள். இயன்றால் அதற்கு சந்தாவும் கட்டி விடுங்கள். காரணமாகத்தான் சொல்கிறேன்.

ஜனவரி 2018 இதழில் எழுத்தாளர், ஓவியர் என்று பன்முகம் கொண்ட விட்டல்ராவின் அற்புதமான நேர்காணல் வெளியாகியுள்ளது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

விட்டல்ராவின் இளமைக்கால நினைவுகள், அகிலனுக்கு ஞானபீட விருது கிடைத்த அரசியல் அவலம், விருது மேடையில் கநாசு அகிலனை எதிர்கொண்ட விதம், காலவெளி நாவல், எழுதிய படைப்புகள், அன்னாகரீனா திரைப்படம் குறித்து அசோகமித்திரன் கொண்ட முரண், சிவாஜியின் ஓவர் ஆக்டிங், பானுமதி, உன்னத சினிமாவின் அடையாளம், பிடித்த எழுத்தாளர்களின் வரிசை, கையெழுத்துப் பிரதியாக உள்ள ‘நிலநடுக்கோடு’ நாவல் பற்றிய தகவல்கள் என்று பல சுவாரசியமான, உபயோகமான செய்திகள் இந்த நேர்காணலில் உள்ளன.

**

விட்டல்ராவ் ஓர் அற்புதமான எழுத்தாளர். சினிமா பற்றிய நூல்களையும் எழுதியள்ளார். ‘நவீன கன்னட சினிமா’, ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’ போன்ற நூல்கள் மிக அரிதான பதிவுகளைத் தாங்கியவை. (இதையும் கண்காட்சியில் தேடி வாங்கி விடுங்கள்). தமிழக கோட்டைகளைப் பற்றி அவர் எழுதிய நூலொன்றின் பழைய பிரதி, திருவல்லிக்கேணி நடைபாதைக் கடையில் கிடைத்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

140 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், 10 நாவல்கள், 8 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை அவர் எழுதியிருப்பதாக நேர்காணல் தெரிகிறது. அவரது வாழ்கை அனுபவங்களையொட்டிய, தமிழக அரசியல்வரலாறு ஊடுருவுகிற புதிய நாவல், சினிமாக்கட்டுரைகள் என்று இன்னமும் கூட தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

பதிப்பாளர்களை நான் கும்பிட்டுக் கேட்கிறேன். இவரது படைப்புகள் அனைத்தும் மொத்தமாக தொகுத்து வெளியிடப்படுவது அவசியம்.

பெங்களூரில்தான் வசிக்கிறார். இயன்ற நண்பர்கள் தேடிச் சென்று உரையாடுங்கள். சினிமா, ஓவியம், இலக்கியம் பற்றிய தரவுகளின் அபூர்வமான சுரங்கம் இவர்.

**

இலக்கிய அரசியல்களின் அற்பத்தனங்கள் பற்றி இவர் எழுதிய நாவல் ஒன்றைப் பற்றி முன்னர் எழுதிய பதிவு இது. 

*



தேரோடும் வீதி' என்றொரு நாவலை சில வருடங்களுக்கு முன் நீல.பத்மநாபன் எழுதினார். எழுத்துலக/பதிப்புலக அரசியல் குறித்து ஓர் எழுத்தாளரின் பார்வையில் எழுதப்பட்ட நீண்ட நாவல் அது. அந்த நூலை வம்பிலக்கியம், எழுத்தாளரின் வெற்றுப் புலம்பல், மன மாச்சரியங்கள், புறம்பேசுதலை செய்யும் நூல் என்றெல்லாம் தூற்றியவர்களும் உண்டு.

தொடர்புள்ளவர்களின் பெயர்கள் நேரடியாக குறிப்பிடப்படாமல் கிசுகிசு பாணியில் அந்த நாவல் எழுதப்பட்டிருந்தாலும் அம்மாதிரியான எழுத்துக்களும் தேவை என்றுதான் சொல்வேன். அவற்றை வெகுசன பத்திரிகைகளில் வாசகர்களை கிளுகிளுப்படைவதற்காக எழுதப்படும் சினிமா வம்புகளோடு, கிசுகிசுக்களோடு  ஒப்பிட முடியாது.

எல்லாத்துறைகளிலும் உள்ள அரசியலைப் போலவே எழுத்துலகிலும் நிலவும் அரசியலைப் புரிந்து கொள்ள இது போன்ற எழுத்துகள் உதவும். மட்டுமன்றி ஒரு சமூகத்தில் எழுத்தாளனுக்கு எந்த மாதிரியான இடம் தரப்பட்டிருக்கிறது, அது குறித்த அவனது அங்கலாய்ப்புகள், அவநம்பிக்கைகள் என்ன  என்பதை அறியவும் முடியும்.

இந்த நாவலை வாசித்த அனுபவத்தைப் பற்றி சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பதிவில் எழுதியுள்ளேன்.

[http://pitchaipathiram.blogspot.in/2006/03/blog-post.html]

*

தற்போது விட்டல் ராவின் 'மூலவரும் உற்சவரும்' என்ற நூலை வாசித்து முடித்தேன். இப்போதைய இளம் வாசகருக்கு விட்டல் ராவ் என்ற எழுத்தாளரைப் பற்றி எத்தனை தூரம் தெரியும் என்று தெரியாது. பிறப்பால் கன்னடராக இருந்தாலும் தமிழ் வழிக் கற்றலின் காரணமாக தமிழ் எழுத்தாளராக உருவாகி வந்தவர். அடிப்படையில் இவர் ஓவியரும் ஆவார். அது தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார். நதிமுலம், போக்கிடம், காலவெளி, வண்ணமுகங்கள் போன்றவை இவர் எழுதிய நூல்கள்.

மட்டுமன்றி சினிமா தொடர்பாக இவர்  எழுதியுள்ள கட்டுரைகளும் அரிதானது மட்டுமன்றி சிறப்பானதும் கூட.. 'தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், நவீன கன்னட சினிமா ஆகிய இவரது சினிமா நூல்கள் முக்கியமானவை.

*

நீலபத்மநாபனின் தேரோடும் வீதியைப் போலவே விட்டல் ராவும் ஒரு நூலை எழுதியுள்ளார். மூலவரும் உற்சவரும் என்பது அந்நூலின் தலைப்பு.  எழுத்துலக அனுபவங்களையும் அதிலுள்ள அரசியல்களையும் புனைவு மொழியில் அந்த நூல் பேசுகிறது. கதை சொல்லி எவரோ மூன்று நபர்களிடம் தன்னுடைய கதையை எழுதச் சொல்லுவதைப் போல இந்த நூல் விரிகிறது. சில பெயர்கள் நேரடியாக குறிப்பிடப்பட்டாலும் புனைவு பாவனையில் குறிப்பிடப்படும் சில பெயர்களை உடனே எளிதாக யூகிக்க முடிகிறது. யோசனைக்குப் பின் சில பெயர்கள் பிடிபடுகின்றன. இன்னும் சிலவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை.

எழுதுவதோடு மட்டுமல்லாமல் அதைப் பிரசுரம் காணச் செய்வதற்காக எழுத்தாளன் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், அதிலுள்ள அவமதிப்புகள், அரசியல், புகழுரைகள், போலிப் பெருமிதங்கள் போன்றவற்றை இதன் நாயகன் 'சோமசன்மா' புனைவாக சொல்லிச் செல்கிறார்.

எழுத்துலக அனுபவம் மற்றும் அது தொடர்பான அரசியல் சார்ந்து சுவாரசியமான நூல் இது.

( மூலவரும், உற்சவரும் - அம்ருதா பதிப்பகம் - 376 பக்கங்கள் - ரூ.300·-)

**

pic courtesy: https://www.facebook.com/gkuppuswamy62/posts/1182795928490077

 

suresh kannan

Sunday, January 07, 2018

பா.ரஞ்சித் - THE CASTELESS COLLECTIVE - இசை

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ அமைப்பு, ‘THE CASTELESS COLLECTIVE’ என்றொரு இசை நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு செல்ல பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் அலுவலகப் பணியில் சிக்கிக் கொண்ட காரணத்தால் துரதி்ர்ஷ்டமாக செல்ல இயலவில்லை.

யூ-ட்யூபில் இந்நிகழ்ச்சியின் காணொளிகள் இப்போது காணக் கிடைக்கின்றன. ராக், ராப் மற்றும் சென்னையின் பிரத்யேக இசைவடிவமான கானா ஆகியவற்றின் கலவையில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த இளம்தலைமுறை இளைஞர்களின் சுயாதீன இசை முயற்சிகள் இந்த மேடையில் அருமையாக வெளிப்பட்டதை காண முடிந்தது. இந்த இசைப்பாடல்களின் அடிநாதம், சமத்துவ சமூகம், சமூகநீதி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். ஜாஸ் இசையின் மூலம் கருப்பின சமூகத்தின் இசைப்புலமையும் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஓலமும் வெளிப்பட்டது. அதைப் போலவே சென்னையின் பிரத்யேகமான அடையாளங்களுள் ஒன்றான, கானா ஒரு குறிப்பிட்ட வெளியைத் தாண்டி மைய சமுகத்தை நோக்கி நகர வைக்கும் இம்மாதிரியான முயற்சிகள் அவசியமானவை.

சினிமா என்பதைத் தாண்டி ஓவியம், ஆவணப்படம், இசை என்று பல்வேறு வழிகளில் தன்னுடைய அரசியல் குரலை ஒலிக்க வைக்கும் பா.ரஞ்சித்திற்கு மனம் உவந்த பாராட்டும் நன்றியும்.

இடஒதுக்கீடு குறித்தான பாடல் ஒன்றிற்கான சுட்டி தரப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சென்றால் இதர பாடல்களையும் கண்டு, கேட்டு மகிழலாம்.  


suresh kannan