Tuesday, July 16, 2019

பிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்








நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

**

இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகும். வழக்கம் போல், உங்களின் தொடர்ந்த ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


**

பிக்பாஸ் 3 – நாள் 22 – “பிக்பாஸ் வீட்டின் ‘புதிய’ இம்சை அரசி”

பிக்பாஸ் (தமிழ்) வரலாற்றிலேயே இது நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை. முன்மொழிபவர் இரு நபர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதைத்தான் வழக்கமாக காட்டுவார்கள். ஆனால் பெரும்பாலோனோர் சொல்லி வைத்தது போல் இன்று மீராவின் பெயரையே வரிசையாகக் குறிப்பிட்டார்கள். பிக்பாஸின் எடிட்டிங் டீமே இதனால் மிரண்டு போய் தன் வழக்கமான பாணியைக் கைவிட்டு மீராவின் திருநாமம் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதைக் காட்டி நம்மையும் மிரட்டினார்கள்.

அபிநயத்தால் மோகனிடம் கேட்டார் சரவணன். அதில் காணப்பட்ட சில சைகைகளும் உடல்மொழியும் மோகனை காயப்படுத்திற்று.

பரதநாட்டியம் கற்ற ஆண்களுக்கு ஒரு பிரச்சினையுண்டு. பெண்களின் உடல்மொழி தன்னிச்சையாக அவர்களிடம் படிந்துவிடும். இது இயல்பானதுதான். ஆனால் பொதுப்புத்திக்கு இது புரியாது. ஆபாசமாக கிண்டலடிக்கும். கமல்ஹாசனுக்கும் இது போன்ற சங்கடம் நேர்ந்ததாக ஒரு தகவல் உண்டு. பரதநாட்டியம் பயின்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் இது சார்ந்த விமர்சனங்கள் வரத்துவங்க, அவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு கடுமையான உடற்பயிற்சி செய்து தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக் கொண்டதாக சொல்வார்கள்.






suresh kannan

Monday, July 15, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடுத்த 'வனிதா' யார்?”



அட்டகாசமான உடையுடன் கமல் வந்த இன்றைய நாளில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

முதலில் மீரா – தர்ஷன் விவகாரம். அதெப்படி பிக்பாஸ் வீட்டில் உத்தரவாதமாக சில காதல் ஜோடிகள் உருவாகி விடுகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதென்ன பள்ளிக்கூடமா? பார்த்தவுடனேயே இனக்கவர்ச்சியில் பப்பி லவ் உண்டாகி விட? பிக்பாஸ் scripted என்று பலர் சொன்னாலும் இல்லை என்று அழுத்தமாக யூகிப்பவன் நான்.

கச்சிதமாகத் திட்டமிட்ட, சில சிக்கலான சூழல்களை அமைத்து அதில் மனிதர்களை செலுத்தி அவர்களின் இயல்பான, தன்னிச்சையான எதிர்வினைகளை பதிவு செய்வதில்தான் பிக்பாஸின் வெற்றி அடங்கியிருக்கிறது. ‘ரெடி.. ஸ்டார்ட்.. காமிரா” என்று படப்பிடிப்பு போல நடத்தினால் இத்தனை யதார்த்தமான தருணங்களை உருவாக்கவே முடியாது. எனில் இதில் கலந்து கொள்ளும் அனைவருமே சிறந்த நடிகர்களாகியிருப்பார்கள்.

ஆனால் இப்படி எளிதில் காதல் வயப்பட்டு விடும் விஷயங்களைப் பார்க்கும் போது off screen-ல் ஏதாவது குறிப்புகள் வழங்கப்படுகிறதா என்கிற சந்தேகம் வருகிறது.

சரி. போகட்டும். மீராவிற்கு தர்ஷனின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதிலோ, அதை அவரிடம் நேரடியாக சொன்னதிலோ ஒரு பிரச்சினையுமில்லை. அதைக் கூட “எங்க அம்மா கிட்ட வந்து பேசு” என்கிற மிக கண்ணியமான proposal-ஆகவே மீரா தெரிவித்திருக்கிறார் போலிருக்கிறது. இதுவரையில் சரி. ஆனால் இது ஒரு வம்பாகப் பரவி, ஒரு பொதுச்சபையில் விசாரணைக்கு உட்பட்டு, மிக அந்தரங்கமான தருணத்தை அங்கு பரஸ்பரம் விளக்க வேண்டியிருப்பது மிகக் கொடுமையான விஷயம்.

இதன் பின்னுள்ள நுண்ணுணர்வற்ற தன்மை பற்றி கமலுக்குத் தெரியும். ஆனால் நிகழ்ச்சியின் அடிப்படையே இது போன்ற வம்புகளை ஊதி வளர்ப்பது என்பதால் அவரும் அதற்கு உடன்பட வேண்டியதாகிறது. தன்னுடைய காதல் முன்மொழிதல் நிராகரிக்கப்பட்டு, அது மீண்டும் பொதுச்சபையில் அலசப்பட்டு உறுதிப்படுத்தப்படும் போது அது சார்ந்த அவமானவுணர்ச்சியால், ஒரு பெண்ணாக மீரா மனம் புழுங்கியிருப்பார் என யூகிக்கிறேன். இதனாலேயே அவர் மீது பரிதாபம் உண்டாகிறது.

இந்த விஷயத்தில் தர்ஷன் மிக கண்ணியமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. மீரா முன்மொழிந்தாலும், அதை மறுத்து ‘எனக்கு இன்னொரு பெண் இருக்கிறார்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், இதைப் பற்றி எவரிடமும் வம்பு பேசாமல் இருந்திருக்கிறார். என்றாலும் இவர்களின் உரையாடல்களை சிலர் கவனித்த வகையில் எப்படியோ இந்த விஷயம் வெளியே வம்பாக பரவி விட்டிருக்கிறது. (முதல் சீஸனில் ஆரவ் மீது உண்டான ஈர்ப்பை, ஜூலி காயத்ரியிடம் தனிமையில் சொல்ல, அவர் அடுத்த கணமே மற்றவர்களிடம் சொல்லிச் சிரித்த ஈனத்தனத்தை நினைவு கூரலாம்).

ஆனால் தர்ஷனுக்கு தன் மீது ஈர்ப்பில்லை என்று தெரிந்த மறுகணமே தன் விருப்பத்தை அழுத்தமாகத் துடைத்து விட்டு தர்ஷனுடன் இயல்பான நட்பைத் தொடர்வதுதான் சரியான செயலாக இருக்கும். ஆனால் பிடிவாத மனோபாவமுள்ள மீரா, தானே இந்த விஷயத்தை மீண்டும் விவாதப் பொருளாக்குகிறார். தர்ஷனிடம் அசிங்கமான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். தர்ஷன் தலையைப் பிய்த்துக் கொண்டு உரையாடலில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு விலகுமளவிற்கான உளைச்சலை மீரா தருகிறார். இந்த ‘நீலாம்பரித்தனம்’ முறையானதல்ல.

“இனிமே என் பேச்சுக்கு யாராவது வந்தா.. பச்சை.. பச்சையா.. கேட்பேன்” என்று மீரா சபதம் ஏற்பதிலிருந்து வனிதாவின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால், “நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே” என்று கவின் கலாய்த்ததுதான் சரி. வனிதாவைப் போன்று உறுதியாக ஒரு விஷயத்தை எதிர்க்கும் துணிச்சல் மீராவிடம் இல்லை. சும்மா இருந்தவரை சொறிந்து விட்டு விட்டு அங்கிருந்து அழுது கொண்டே சட்டென்று விலகி விடுவதுதான் மீராவின் ஸ்டைல்.

மீராவும் தர்ஷனும் தங்களுக்கு இடையேயுள்ள சிக்கலை மிக சீரியஸாக விளக்கிக் கொண்டிருக்கும் போது “என்னய்யா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு” என்கிற மாதிரி பல முகபாவங்களைத் தந்த கமலின் உடல்மொழி சுவாரசியம். நமக்குமே அப்படித்தான் இருந்தது. இந்தப் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க அவர் கவினை அழைத்தது காமெடி கலாட்டா. (தர்ஷன் ஒரு கேஸ்ல வாய்தா வாங்கறதுக்கே தலை சுத்தி விழும் போது.. இந்த ஆசாமி.. பத்து பதினைந்து கேஸை ஒரே சமயத்துல ஈசியா ஹாண்டில் செய்யற ஆசாமி).

இந்த உரையாடலின் இடையில் “நீங்க உள்ள வாங்க சார்” என்று கமலை வனிதா வெட்கத்துடன் அழைத்ததில் ஒரு ‘மும்தாஜ்’ தனம் தெரிந்தது.

**

வெளியேற்றப்படவிருக்கிறவர்களின் வரிசையில் சரவணன் காப்பாற்றப்பட்ட விஷயம் அறிந்ததும் அவர் மகிழ்ச்சியை காட்டவேயில்லை. இந்த வீட்டிலிருந்து உண்மையாகவே வெளியேற விரும்புகிறவர் அவர் மட்டும்தான். பிறர் வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என்று பாவனையாக சொல்கிறார்களே தவிர, அப்படியொரு லேசான சூழல் வந்தால் கூட அழுது புலம்புகிறார்கள். இதில் அசிங்கமாக அம்பலப்பட்டவர் வனிதாதான்.

“நீங்கள்தான் வெளியே செல்கிறீர்கள் என்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்?” என்று யூகமாக கமல் கேட்ட போது தான் வெளியே செல்ல மாட்டோம் என்கிற மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் “வெளிய வந்து சொல்றேன் சார்” என்று வாயை விட்டார் வனிதா. ‘அப்படின்னா வந்துடுங்க” என்று கமல் சட்டென்று அடுத்த கணமே சொல்லி கார்டைக் காட்டிய போது திகைத்துப் போனார். அவரால் நம்பவே முடியவில்லை.

வனிதாவின் வெளியேற்றத்தில் ரேஷ்மா அழுததில் நியாயமான காரணங்கள் இருந்தன. இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சம்பவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. எனவே அந்த தொடர்பில் ரேஷ்மா அழுதார். சரி. சாக்ஷி உள்ளிட்டவர்கள் கண்கலங்கியதில் கூட சிறிது லாஜிக் இருந்தது. சரி. ஆனால் இந்த மோகன் வைத்யா.. நீண்ட நேரத்திற்கு குலுங்கி குலுங்கி அழுமளவிற்கு என்னதான் நடந்தது? அதென்னமோ இந்த மனிதர் அழத் துவங்கும் போதெல்லாம் அடிவயிற்றில் இருந்து ஒரு உலகமகா எரிச்சல் புறப்படுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. பிரிவுத் துயரத்தில்தான் இவரிடமுள்ள ‘சிநேகன்’ வீர்யமாக வெளிப்படுகிறார்.

ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலு கரி டிரம்மில் விழுவதைக் கண்டு அனைவரும் விடாமல் சிரித்து ஓய்ந்த பிறகும் விஜய் மட்டும் தனியாக இன்னமும் சிரித்துக் கொண்டிருப்பார். அது போல வனிதா வெளியேறி மேடையில் தோன்றிய போதும் கூட மனிதர் விடாமல் அழுதது எரிச்சல். “கண்ல தண்ணியே வரலை” என்று சாண்டி கிண்டலடித்த போதுதான் சற்று ஆறுதலாக இருந்தது. காப்பாற்றப்பட்ட மதுமிதா எப்படி நடந்து கொண்டிருப்பார் என்று சாண்டி கிண்டல் அடித்ததும் சுவாரசியம்.

**

என்னதான் புன்னகையால் மறைத்துக் கொண்டாலும் இந்த வெளியேற்றத்தை வனிதா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது.  ‘நல்லாத்தானே கொலை பண்ணேன்” என்று ஆதங்கப்பட்டார்.. “நான் கர்மாவை நம்பறவ” என்று அவர் சொன்னது சரி. உள்ளே அவர் செய்த அழிச்சாட்டியங்கள்தான் பூமராங் போல் தாக்கி அவரை வெளியே அனுப்பியிருக்கிறது.

வனிதா ஏதோ படுபயங்கரமான, கொடூரமான மனுஷி இல்லைதான். அவர் வெளியேறுவதால் அவர் மீது இப்போது அனுதாபம் உருவாவது இயல்பே. அவர் மற்றவர்களால் இத்தனை வெறுக்கப்பட்டாலும்  துணிச்சல் உள்ளிட்டு அவரிடமும் சில நேர்மறையான அம்சங்கள் இருக்கலாம். ரேஷ்மா குறிப்பிட்டது போல், ஆண் துணையில்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்ப்பது அத்தனை எளிதான விஷயமில்லை. இது போல் வனிதாவிடம் நல்ல முன்னுதாரணமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவருடைய திமிரான மனோபாவம் இத்தனை நல்லியல்புகளையும் துடைத்துப் போட்டு விடுகிறது என்பதில் நமக்கும் சில பாடங்கள் இருக்கின்றன.

‘மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையாக இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக சுற்றியிருப்பவர்களை அலட்சியமாக தூக்கியெறிவது நல்ல குணமல்ல. இரண்டும் வெவ்வேறு.

பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த விஷயங்களை வீட்டிற்குச் சென்று பார்க்கும் வனிதா இதிலிருந்து தனக்கான பாடத்தைக் கற்பாரா அல்லது ‘தான் செய்வதுதான்  சரி’ என்று தன் போக்கைத் தொடர்வாரா என்று தெரியாது.

பிக்பாஸ் மனிதர்களைத் திருத்தியனுப்பும் கூடமல்லதான். அது அவர்களின் நோக்கமல்ல. வணிகம்தான் பிரதானம். என்றாலும் போட்டியாளர்கள் தங்களைச் சுயபரிசீலனை செய்யும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டியாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும்தான். நம்மிடையேயும் எத்தனையோ ‘வனிதாக்கள்’ இருக்கலாம்.

“நீங்க வெளியேறதுக்கு முன்னால” என்று கமல் ஒரு pause தந்த போது சற்று ‘பக்’கென்றிருந்தது. ஒருவேளை முன்னர் யூகித்தபடி சீக்ரெட் ரூமில் அம்மணியை அடைத்து மீண்டும் உள்ளே அனுப்புவார்களோ என்று. நல்ல வேளை, அப்படியெதும் நடக்கவில்லை.

மாறாக, மேடையில் நிற்காமல் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து இதர போட்டியாளர்களின் எதிர்வினைகளை வனிதா கவனிக்க ஒரு நல்ல வாய்ப்பு தரப்பட்டது. “அவர் பிரச்சினைகளை பெரிது செய்து விடுவார். தர்ஷன் விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அத்தனை வார்த்தைகளை விட்டவர் அவர். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை” என்று லொஸ்லியா குறிப்பிட்டது மிகச்சரியானது.

“அவங்க இன்வால்வ் ஆகாம இருந்தாலே பல பிரச்சினைகள் தன்னால் சரியாகி விடும். அவரால் என் நண்பர்களை இழந்தேன்” என்று அபிராமி கலங்கினார். அதற்கு வனிதா காரணமில்லை என்று அவர்களின் நண்பர்கள் மறுத்தாலும் வனிதாவின் தூண்டுதல் ஒரு காரணமாக இருந்தது என்பது சம்பவங்களின் மூலம் நாம் அறிந்தது. வனிதாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு அபிராமி தன் நண்பர்களிடம் மீண்டும் இணைவதற்கான சூழல் மலர்ந்திருப்பது நல்ல அடையாளம்.

வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது இயற்கை. அதிலும் வனிதாவின் வெற்றிடம் என்பது மிகப் பெரியது. பெளதீக ரீதியாக இதைச் சொல்லவில்லை. அவருடைய ஆளுமையின் நோக்கில் சொல்கிறேன். வனிதா இடத்தை, காற்று அல்ல.. இன்னொரு புயல்தான் நிரப்ப முடியும். புதிதாக வரவிருக்கிற அந்த ரவுடிப்புயல் வலுவாக மையம் கொள்கிறதா என்பதைப் பொறுத்துதான் இனி பிக்பாஸ் வீட்டின் சம்பவங்கள் களைகட்டும். பார்ப்போம்.




suresh kannan

Sunday, July 14, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”



ஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரைப் பற்றிய தகவல் வழக்கம் போல் கசிந்து விட்டது. பிக்பாஸ் வீட்டிலேயே அதிக டெஸிபலில் பேசுபவர் என்பது ஒரு எளிதான க்ளூ.

ஆனால் அவரை வெளியேற்ற மாட்டார்கள் என்றே யூகித்தேன். ஏனெனில் அவரால்தான் நிகழ்ச்சியின் பரபரப்பை இத்தனை நாட்களுக்கு தக்க வைத்திருக்க முடிந்தது. இதில் அடிநாதமாக இருக்கும் வெகுசன உளவியலையும் கவனிக்கலாம்.

ஒரு நல்ல விஷயம், சரியாகவும் மென்மையாகவும் சத்தமின்றியும் சொல்லப்பட்டால் நாம் அதிகம் கவனிப்பதில்லை. ‘அட போருப்பா..” என்று சலித்துக் கொள்கிறோம்; கவனிக்காமல் புறக்கணிக்கிறோம்.  ஆனால் தெருவில் எவராவது உரத்த குரலில் சண்டை போட்டால் பதறியடித்துக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆவலாக ஓடுகிறோம். இதுதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றியடைவதின் அடிப்படை. நேர்மறையான விஷயங்களை விடவும் எதிர்மறை விஷயங்களின் மீதே நம் மனம் எளிதில் கவனம் கொள்கிறது.  பாவனையாக திட்டிக் கொண்டே மிக ஆவலாக அவற்றைப் பார்க்கிறோம், இல்லையா?

ஆனால் டெஸிபல்காரர் உண்மையிலேயே வெளியேற்றப்பட்டாரா அல்லது சீக்ரெட் ரூமில் அடைத்து புலியை இன்னமும் வெறியேற்றி மறுபடியும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளமாக்கப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

**

‘பெண்கள் சமையல் அறைகளுக்குள் பல்லாண்டுகளாக அவதிப்படுகிறார்கள்’ என்று பெண்ணிய நோக்கில் சொல்லப்படுவது ஒருவகையில் உண்மைதான்.

ஆனால் – சமையல் அறையும் ஓர் அதிகாரம்தான். பெண்கள் எளிதில் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மாமியார் – மருமகள் உறவின் முக்கியமான சிக்கல் இந்த அதிகாரத்தை கைப்பற்றுவதில் இருக்கிறது. இதை எளிதில் மாமியார் விட்டுத்தர மாட்டார். மட்டுமல்ல, கணவனின் உறவினர்கள் வந்து சமையல் அறையை எட்டிப் பார்ப்பதையோ, அதைப் பற்றி விமர்சனங்கள் வைப்பதையோ எந்தப் பெண்ணும் விரும்பமாட்டார்.

ஒருவரின் மனம் குளிர உணவு தயாரித்து அளிப்பது புனிதமான பணி. ஆனால் அதனுள்ளும் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. வனிதாவின் சிக்கலும் இதுவே. அணிகள் பிரிக்கப்பட்டதால் சமையல் அறையின் அதிகாரம் தன்னிடமிருந்து பறிபோன நெருடலில் இருக்கிறார். எனவேதான் “நான் வேணா ஹெல்ப் பண்றேன்” என்று அலட்சியமாக சொல்வது போல சொல்லி அந்த அதிகாரத்தின் ஒரு பகுதியையாவது ருசிக்க முடியுமா என்று பார்க்கிறார்.

இன்னொருபுறம், ஒரு புது மருமகளின் அச்சத்தில் மதுமிதா இருக்கிறார். தன்னால் சுவையாகவும் விரைவாகவும் இத்தனை பேருக்கும் சமைக்க முடியுமா என்று அஞ்சுகிறார்; தயங்குகிறார். மிக நியாயமான அச்சம் இது. பழகும் வரைக்கும் இந்த அச்சம் நீடிக்கும்.

இன்னொரு புறம் மதுமிதாவின் அச்சத்தை சரவணன் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் அணுகுகிறார். “நீ ஆணியே புடுங்க வேணாம். நான் பார்த்துக்கறேன். சும்மா நின்னா போதும். இல்லைன்னா.. அது கூட தேவையில்லை” என்கிறார். இது வனிதாவைத் தவிர்ப்பதற்காகவும் அவரது அலட்டலை அடக்குவதற்காகவும் இருக்கலாம். அதே சமயத்தில் மதுமிதாவை மிகையாக ஒதுக்குவதில் அவரது அதிகார விருப்பம் அசிங்கமாக அம்பலப்படுகிறது.

உணவைப் பற்றி சாக்ஷி குறைகூறுவதும் அதை பற்றிக் கொண்டு ‘பார்க்கலாம் என்னதான் செய்யறாங்க’ன்னு என்று வனிதா கூடவே கும்மியடிப்பதும் இந்த அதிகாரப் போட்டியின் உப விளைவுகள். “சூடா இருக்கும் போது நக்கிச் சாப்பிட்டா எதுவும் நல்லா இருக்கற மாதிரிதான் தெரியும்” என்றார் வனிதா. இதைச் சொல்வதற்கு அனைத்துத் தகுதிகளும் உடையவர் அவர். இரண்டொரு முறை அவர் நக்கிச் சுவைத்துப் பார்க்கும் காட்சிகளை முகச்சுளிப்புடன் பார்க்க முடிந்தது. (ஆனால் சமையல் அறை சாம்ராஜ்ஜியத்திற்குள் இதெல்லாம் சகஜமான காட்சிதான். பல ஹோட்டல்களில் உள்ளே புகுந்து பார்த்தால் நாம் கடந்த வாரம் சாப்பிட்ட மிளகாய் பஜ்ஜி இப்போது வெளியே வரும்).

இதற்கிடையில் தர்ஷனுக்கும் மீராவிற்கும் இடையில் ஒரு கசமுசா. அது தொடர்பாக லொஸ்லியா கோபம் என்று யாருக்கும் புரியாத மினி எபிஸோட் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது.

**

அகம் டிவியே வந்தார் கமல். அதற்கு முன்பாக, ‘பாதிக்கப்பட்டவர்களும் சரி, பாதிப்பை உருவாக்குபவர்களும் சரி, ஓர் உரையாடலைத் துவங்கி விட்டு சட்டென்று வெளிநடப்பு செய்து விடுவதை’ மென்நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். (தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி வழக்கமாக செய்வதைத்தான் சொல்கிறாரோ?)

‘நகைச்சுவை என்பது திறமை மட்டுமல்ல, அது ஒரு நல்ல பண்பும் கூட’ என்று சாண்டியைப் பாராட்டினார். அதிலும் மற்றவரை புண்படுத்தாத நகைச்சுவை என்று அவர் குறிப்பிட்டதும் ‘இதை மோகன் வைத்யா கிட்ட சொல்லிப் பாருங்களேன்” என்று என் மைண்ட் வாய்ஸ் ஓடிய போது அதையும் கமலே குறிப்பிட்டு மோகனையும் சிரிக்க வைத்தார்.

பிக்பாஸில் வழிதவறும் ஆடுகளுக்கு ஆண்டவர் சொல்லும் உபதேசங்களும் கிடுக்கிப்பிடிகளும் முன்பெல்லாம் நன்றாக இருக்கும். முதல் சீஸனில் இது அருமையாக இருந்தது. ‘என்ன இருந்தாலும் லாயர் ஃபேமில இருந்து வந்தவர் இல்லையா?” என்று நினைத்து வியக்கத் தோன்றியது.

வாழைப்பழத்தில் தையல் ஊசியை இறக்குவது மாதிரி கேட்பவர்களுக்கே தாமதமாகப் புரியும்படி சுற்றி வளைத்து அத்தனை நுட்பமாக இறக்குவார். ஆனால் இப்போது சுருதி ரொம்பவும் இறங்கி விட்டது. பலாக்காயின் மீது குண்டூசியை இறக்குவது மாதிரி.

“கொலைகாரன் டாஸ்க்ல கொன்னுட்டீங்க” என்று முதல் குண்டூசியை வனிதாவின் மீது இறக்கி தன் இன்னிங்க்ஸை துவக்கினார். கமல் மீது பாடல் புனைந்து கவினும் சாண்டியும் பாடிய பாடலும் நடனமும் ஜாலியாக இருந்தது. புகழுரை என்றால் ஆண்டவருக்கு அல்வா மாதிரி. ரசித்துச் சாப்பிட்டார். பார்வையாளர்களும் சாண்டியின் குறும்பை ரசித்தார்கள்.

‘தாமரை இலை தண்ணீராக’ மிதக்கும் லொஸ்லியாவை ஜாடையாக விசாரித்தார் கமல். “நான் சொல்ல நினைச்சதை இன்னொருத்தர் சரியா சொல்லும் போது நான் பேச அவசியமில்லை –ன்னு தோணுது. தர்ஷன் அதை சரியாக செய்தார். எனவேதான் நான் பேசவில்லை. அவர் ஸாரி கேட்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று லொஸ்லியா விளக்கம் அளித்த போது வனிதாவின் முகம், சரவணன் செய்த சாம்பாரை மறுபடியும் சாப்பிட்டது மாதிரி ஆகியது.

வனிதாவின் மீது வைக்கப்பட்ட இந்த விமர்சனத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல் வர, ‘பார்த்தீங்களா.. ஒரு தவறின் மீதான எதிர்ப்புக் குரலை உடனே செஞ்சுடணும். அதுக்கான பலன் கேக்குதா?” என்றார் கமல். இது ஒருபக்கம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய நீதியாக இருந்தாலும் இன்னொருபுறம் “சண்டையோட ஃபோர்ஸ் இன்னமும் போதாது. அந்தப் பக்கம் லெஃப்ட்லயும் ‘நச்’ன்னு குத்தியிருக்கணும்” என்று தூண்டியது மாதிரியும் இருந்தது.

**

“ஒரு ஊர்ல ஒரு வெள்ளை ரோஜா இருந்துச்சாம்.. அது மேல ஒரு குருவிக்கு ஆசையாம்” என்கிற டி.ராஜேந்தர் படத்துக் கதையாக லொஸ்லியா சொன்ன ‘மைனம்மா’ கதை இருந்தது. சற்று இழுவையாக இருந்தாலும் லொஸ்லியா சொன்னதாலேயே அதை சகித்துக் கொள்ள முடிந்தது. இதையே வனிதா சொல்லியிருந்தால் தொலைக்காட்சியை உடைத்துப் போட்டிருப்பேன்.

லொஸ்லியா சொன்னதை என்னால் நெருக்கமாக உணர முடிந்தது. என்னுடைய இளம் வயதில் எங்கள் வீட்டில் ஒரு கோழி வளர்த்தார்கள். அது செய்த குறும்புகளும், புத்திசாலித்தனமான செய்கைகளும் இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள். வீட்டிற்குள் எவராவது புதிய நபர் வந்தால் ஆவேசமடைந்து கூவ ஆரம்பிக்கும். அது ஒரு நாள் குழம்பான போது துக்கத்தில் நான் சாப்பிட மறுத்து விட்டேன்.

புத்தி சுவாதீனமில்லாத பையன், மைனாவின் மீது இரும்புக்கம்பியைப் போட்டது போல ‘சிலர் மற்றவர்களை தெரிந்தோ.. தெரியாமலோ புண்படுத்தி விடுகிறார்கள்’ என்று வனிதாவை ஜாடையாக இணைத்தது கமலின் சமயோசிதம். ஆனால் கமல் எத்தனை சாமர்த்தியமாக வலை வீசினாலும் அதை அறுத்துக் கொண்டு தப்பிக்கும் சூட்சுமத்தை வனிதா அறிந்திருக்கிறார். மற்றவர்கள் போல் தயங்கி பேசாமல் இருப்பதில்லை. (இன்று வனிதாவின் ஒப்பனை கவனிக்கும்படி இருந்தது என்றதையும் சொல்ல வேண்டும்... ஹிஹி)

**

கொலையாளி யாரென்று தெரியாத போது அபிராமி மீது கோபமாக இருந்த சாக்ஷி, அது வனிதாவென்று அறிந்தவுடன் பெட்டிப் பாம்பாக அமர்ந்து விட்டதைப் பற்றி நானும் எழுதியிருந்தேன். கமலும் அது பற்றி விசாரித்தார். “இது மச்சான் பற்றியது அல்ல. மச்சினி பற்றி’ என்று அபிராமியை நோக்கி இந்த உரையாடலை அவர் திருப்பியது சிறப்பு. ஆனால் இதற்கு தகரத்தின் மீது ஆணி கிழித்தது போன்ற ஜலதோஷக் குரலில் சாக்ஷி அளித்த விளக்கம் தலையைச் சுற்றியது. ஒன்றும் புரியவில்லை.

“ஏன் கேப்டன் பதவியை அபிராமிக்கு விட்டுக் கொடுத்தீர்கள்” என்று தர்ஷனிடம் கேட்டார் கமல். “அவரைப் பற்றி சிலர் இங்கு தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வனிதா அப்படிப் பேசினார். Attention seeking-க்கிறாக அபிராமி நிறைய விஷயங்களைச் செய்கிறார்” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அபிராமி அப்படி அல்ல என்று எனக்குத் தெரியும். எனவே தன்னை நிரூபிக்க அபிராமிக்கு ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும்” என்று நினைத்தேன்” என்றார் தர்ஷன். “ஆமாம்.. அவ அப்படித்தான்” என்று வனிதாவும் ஒருமாதிரியாக இதை வழிமொழிய “அப்ப ஃபோகஸ் உங்க மேல இருந்து போயிடும்-னு பயப்படறீங்களா?” என்பது போல் கமல் கொக்கி போட்டது நன்று.

ஸ்கூல் ஆயா வேடத்தில் வந்திருந்த அபிராமி இதற்கு விதம்விதமாக தந்த முகபாவங்கள் சுவாரசியமாக இருந்தன.

கற்பழிப்பு விஷயங்களில் பெண்களின் ஆடைகளை குறை கூறாதீர்கள் என்கிற க்ளிஷேத்தனமான விவாதம் இங்கும் நடைபெற்றது. “நான் அப்படிச் சொல்லவில்லை” என்று மதுமிதா தற்காப்புடன் பேசினாலும் அவர் பழமைவாதத்தில் ஊறிய சூழலில் வளர்ந்தவர் என்பதும் அவரால் அப்படித்தான் பேச முடியும் என்பதும் வெளிப்படை. “ஆனால் இந்த மனோபாவம் பரவிவிடக்கூடாது” என்பதற்காகத்தான் இதை அழுத்தமாகப் பேசுகிறேன் என்று கமல் மதுமிதாவை எதிர்கொண்டது அல்ட்டிமேட்.

வனிதாவை துணிச்சலாக எதிர்கொண்ட தர்ஷனை பாரதியார் பாட்டையெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டு பாராட்டினார் கமல். “ஏன் மற்றவர்களுக்கு இந்தத் துணிச்சல் இல்லை?” என்ற போது ‘அவங்க லேட்டா சொன்னா புரிஞ்சுப்பாங்க” என்று சேரன் அளித்த விளக்கம் நடைமுறைக்குச் சரி என்றாலும் சற்று மொண்ணையாக இருந்தது. “அவன் காட்டுமிராண்டிப் பயதான்.. ஆனா..மெதுவாத்தான் வருவான்” என்கிற தேவர்மகன் வசனத்தை சேரன் பேச, “மெதுவான்னா.. எவ்ள மெதுவாய்யா.. அதுக்குள்ள நான் செத்துப் போயிடுவேன்யா” என்கிற மாதிரி கமல் பதில் சொன்னார்.

“நீ வாயைத் திறந்தாலே ஏழரையாடுது. சும்மா இரு” என்று பேச விடாமல் தன்னை மற்றவர்கள் தடுக்கிறார்கள். டிஸ்கரேஜ் செய்கிறார்கள்” என்றார் மதுமிதா. இங்கு அவர் தனிமைப்படுத்தப்படுகிறார் என்பது உண்மை. பெரும்பாலும் லொஸ்லியா மட்டுமே தோழியாக இருக்கிறார். என்றாலும் மதுமிதாவும் சளைத்தவர் அல்ல. தன்க்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவர் ஆவேசமாக எதிர்கொண்டதை முந்தைய நாட்களில் பார்த்தோம். ஆனால் இன்னொருவர் பேசுவது சரி என்றால் அதை வெளிப்படையாக ஆதரிப்பதும் ஒருவகை துணிச்சல்தான். பிக்பாஸ் வீட்டில் அதை பலர் செய்வதில்லை. எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகிறார்கள்.. நம் சமூகத்தைப் போலவே.

மோகன் வைத்யா எவிக்ட் ஆனதைப் போல ஒரு நாடகம் ஆடினார் கமல். அதற்கு ‘கோ’வென்று அழுது தீர்த்தார் மோகன். எதற்கு இப்படி ஒப்பாரி வைக்கிறார்கள் என்று சத்தியமாகப் புரியவில்லை. ‘வருமானம் போச்சே’ என்று வெளிப்படையாக அழுதாலும் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

பிரிவுத் துயரத்தில் இருந்த மோகன் ஏறத்தாழ எல்லாப் பெண்களுக்கும் முத்தம் தரத் துவங்க, கமலே காண்டாகி, “போதும் நிறுத்துங்க.. நீங்க எவிக்ட் ஆகலை” என்று மோகனின் ஆவேசத்தை தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது. முத்தத்திற்கு காப்பிரைட் வாங்கிய மனுஷனையே டென்ஷன் ஆக்கினா எப்படிய்யா?

suresh kannan

Saturday, July 13, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனைக்கு மணி கட்டிய தர்ஷன்”




கொலையாளி டாஸ்க் முடியும் வரை சற்று அடக்கி வாசித்த வனிதா, மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தத் துவங்கி விட்டார். எனக்கு ஒரு சந்தேகம். ஒவ்வொரு சீஸனுக்கும் ஒரு ‘ரவுடி ராக்கமாவை’ பிக்பாஸ் அப்பாயிண்ட் செய்து விடுகிறாரோ என்று தோன்றுகிறது. காயத்ரி, மும்தாஜ் என்றொரு வரிசையை நான் காண்கிறேன். “இந்த சீஸன் முழுக்க உனக்கு என்னவெல்லாம் தோணுதோ.. அதையெல்லாம் பண்ணும்மா.. அடிச்சு ஆடு.. நாங்க பார்த்துக்கறோம்” என்று டிஆர்பிக்காக இந்தத் தீவிரவாதிகளிடம் சொல்லி விடுகிறார்களோ.. என்னமோ..

யோசித்துப் பாருங்கள்.. வனிதா இல்லையென்றால் சீசன் 3-ன் பார்வையாளர் சதவீதம் பாதியாகக் குறைந்திருக்கும்.. இல்லையா? “நான் கத்துவேன்.. ஊர் கேட்கக்கூடாது… ஊர் கத்தக்கூடாது.. நான் கேட்பேன்” என்கிற ‘ரத்தம் vs தக்காளி சட்னி’ மோடில் ரணகளமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் வனிதா.

பிக்பாஸ் வீட்டின் பெரும்பாலோனோர் வனிதாவின் ராவடிகளைக் கண்டு அஞ்சியும் அடங்கியும் சென்று கொண்டிருக்க, அந்தப் பூனைக்கு துணிச்சலாக இன்று மணியைக் கட்டினார் தர்ஷன். அவர் பேசிய ஒவ்வொரு ஆவேச வசனமும் பார்வையாளர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. “சூப்பர்… மச்சி.. சபாஷூ...அப்படிக் கேளு..”

வனிதாவின் பல முகபாவங்கள் மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு தீனி போடுவது போல் அமையும் என்பது மட்டும் நிச்சயம்.

**

18-ம் நாள் நிகழ்வுகள் தொடர்ந்தன. “ஏண்டா.. ஆம்பளைத் தடியன்களா.. ஒருத்தராவது எனக்கு சாட்சி சொன்னீங்களாடா?” என்று சரவணன் விளாசிக் கொண்டிருந்த காட்சி தொடர்ந்தது. அந்தக் காட்சிக்கு தொடர்பேயில்லாமல் மதுமிதா ஏதோவொரு தகவலைச் சொன்னார். (அல்லது உரையாடலின் தொடர்ச்சியில் ஏதாவது இருந்திருக்கலாம். எடிட்டிங்கில் போயிருக்கும்). ‘கவினும் லொஸ்லியாவும் இணைந்து சாப்பிட்டதைக் கண்டு சாக்ஷி கோபித்துக் கொண்டார் என்று மீரா  சொன்னார்’ என்பது மதுமிதாவின் சாட்சியம். இதற்கு தன் பலத்த ஆட்சேபத்தை தெரிவித்தார் மீரா.

“கட்டிங் இருக்கும்ல பார்த்துப்போம்” என்று திரும்பத் திரும்ப கூறினார் சரவணன். ‘அப்ப சைட் டிஷ் ஷூக்கு என்னா பண்றது தல..?” என்று கேட்கத் தோன்றியது. ‘என்ன இங்க சண்ட?” என்று கோவை சரளா பாணியில் வம்பு கேட்கும் ஆவலுடன் ரேஷ்மா வர.. “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா… நீ போ” என்று அவரை சரவணன் துரத்தியது அத்தனை அழகு. ஆண்கள் பொதுவாக வம்புகளை ஊதிப் பெருக்காதவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம்.

சிறையில் புகும் போது ‘வலது காலை எடுத்து வெச்சு வாங்க” என்று சேரனிடம் சொன்னார் கவின்.  சங்கடமான சூழலையும் இலகுவாக்குவதில் ஆண்கள் வல்லவர்கள். 'ஜெயில்வாழ்க்கையை ஜாலியா கழிப்போம்' என்கிற மூடிற்கு வந்து விட்டார் கவின். “ஐய்யா..  ஜாலி...வெஸ்டர்ன் டாய்லெட் இருக்குது”

“இந்த ஸ்டேஷன்லதான் கொசுத் தொல்லையே இல்ல” என்று சத்யராஜ் பெருமிதமாகச் சொல்லும் காமெடிதான் நினைவிற்கு வந்தது.

சிறைக்கம்பிகளின் பின்னால் சோகத்துடன் வந்து நின்ற லொஸ்லியாவிற்கு இவர் ஆறுதல் சொன்ன விதம், ‘தோழியா. இல்லை காதலியா.. யாரடி நீ பெண்ணே’ பாணியில் இருந்தது. நட்பிற்கும் காதலிற்கும் இடையில் இந்த உறவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது போல. லொஸ்லியாவின் முகபாவங்கள் காவியச் சோகத்துடன் இருந்தன. (அவன் கிட்ட விழுந்திராத புள்ள!).

**

“என்னைப் பத்தி ஏதாவது சொல்லேன்” என்று சாண்டியிடம் கேட்டு வம்படியாக மாட்டிக் கொண்டார் மீரா. “நீ bold –ஆன பொண்ணு.. ஆனா கொஞ்சம் old ஆன பொண்ணு” என்று அவர் கலாய்க்க, சுற்றியிருந்த ஆண்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இந்த விளையாட்டின் நடுவில் மீராவை ‘பச்சோந்தி.. அழகான பச்சோந்தி’ என்று தர்ஷன் கமெண்ட் அடித்து விட அதற்கு தனியானதொரு பஞ்சாயத்து வைத்தார் மீரா.

அப்போது, நட்பு பற்றி தர்ஷன் சொன்ன விளக்கம் அத்தனையும் அருமை. “பத்து வருஷ ப்ரெண்ட் தவறு செஞ்சா அவங்களை கட் பண்ணிடுவேன்… நாலு நாள் பிரெண்டு நல்லதா தெரிஞ்சா அவங்களை ஏத்துக்கிடுவேன்” என்று நீ சொல்வதில் லாஜிக்கே இல்லை. நாலு நாளில் எப்படி ஒரு பிரண்ட் உருவாக முடியும். பிரெண்டுன்னா தவறும் செய்வான்” என்றார் தர்ஷன்.

“அப்படியில்லை. அது எத்தனை நாள் நட்பாக இருந்தாலும் உண்மையாக இருக்க வேண்டும்” என்று மீரா சொல்வது ஒருவகையில் சரி என்றாலும் குற்றமே இழைக்காத நண்பர் என்று எவருமில்லை. அதைக் கண்டித்தும் திருத்தியும் தாண்டி வருவதுதான் நட்பு. சுருக்கமாகச் சொன்னால் “குற்றம் பார்க்கின் சுற்றமில்லை” என்பதுதான் மீரா உணர வேண்டிய நீதி.

**

19-ம் நாள் விடிந்தது. ஜனகராஜ் போல் கண்ணை ஒருமாதிரியாக மூடிக் கொண்டு லொஸ்லியா நடனமாடும் விதம் சலிப்பை மட்டுமல்ல, சமயங்களில் எரிச்சலையும் வரவழைக்கிறது. (மாத்தி ஆடும்மா..!). ‘பட்டாம்பூச்சி பிடிப்பது எப்படி?” என்று லொஸ்லியா சொல்லித்தர வேண்டுமாம். இதெல்லாம் ஒரு டாஸ்க்காடா? அதை ஒரு அழகான பட்டாம்பூச்சியிடமே கேட்டால் எப்படி?

சேரனும் கவினும் காலையிலேயே சிறையிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டார்கள். (யப்பா.. இதுக்காடா இத்தனை அமர்க்களம் பண்ணீங்க?) குழந்தையிடம் பிஸ்கெட்டை பிடுங்கிச் சாப்பிடுவது போல, தன் வயதைக் காட்டி ‘சிறந்த டாஸ்க்காளர்’ என்ற விருதைப் பிடுங்கிக் கொண்ட மோகன் வைத்யாவை கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த தலைவருக்கான போட்டி நடந்தது. ஒருவரையொருவர் துரத்தி என்ன கருமத்தையோ ஒட்ட வேண்டுமாம். இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு வீடு முழுவதும் ஓடி ஜெயிக்க முடியாது என்பது வனிதாவிற்கு அப்போதே தெரிந்து விட்டது. எனவே ‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டுமே ஓடும்படி விதியை மாற்றலாம். நீச்சல் குளத்திற்கு ஒருவர் சென்றால் பிடிக்கவே முடியாது’ என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். “நான் ஒலிம்பிக்ஸ்லயே ஓடியவன்.. இதெல்லாம்  எனக்கு ஜூஜூபி” என்பது போல் மோகன் மறுத்துக் கொண்டிருக்கும் போதே டாஸ்க் பஸ்ஸர் ஒலித்து விட்டது.

எனவே அவரைத் துரத்திய வனிதா, ஸ்டிக்கரை ஒட்டி விட்டுச் சென்றார். இதைக் கூட மோகனால் அறிய முடியவில்லை. மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்தது. அவர் ஸ்டிக்கரைத்  தூக்கிக் கொண்டு வனிதாவைத் துரத்த.. ‘மவனே.. ஓட முடியும்னு சொன்னவன் நீதானே..இருக்குடி மாப்ளே கச்சேரி’’ என்றபடி நீச்சல் குளத்தின் அருகே சென்று நின்று கொண்டார் வனிதா. கூடவே சாக்ஷி.

மோகனால் அவர்களைத் துரத்திப் பிடிக்க முடியவில்லை. பயங்கரமாக மூச்சு வாங்கவே அப்படியே அமர்ந்து விட்டார். “எப்படியும் ஓடலாம்” என்று அவர் சொன்னதை வைத்து மற்றவர்கள் கிண்டல் அடித்தது வேறு அவரைக் கடுப்பேற்றியிருந்தது. “என்கரேஜ் பண்ண மாட்டேன்றாங்க” என்று புலம்பினார். இத்தனைக்கும் சாண்டியும் கவினும் அவருக்கு உதவி செய்தார்கள்.

அடுத்து வனிதாவிற்கும் சாக்ஷிற்கும் இடையேதான் போட்டி. இப்போது மோகனின் நிலைமை வனிதாவிற்கு வந்தது. சாக்ஷியை துரத்திப் பிடிக்க முடியாது என்று  அவருக்குத் தெரிந்து விட்டது. தாங்கள் ஆட்டத்தில் தோற்கப் போகிறோம் என்று தெரிந்து விட்டால் சிலர் ஆட்டத்தைக் கலைத்து விட்டுச்  சென்று விடுவார்கள். அழுகிணி ஆட்டம் இது. வனிதா செய்ததும் அதுவே.

“இந்த கேம்மோட ரூல்ஸே சரியில்லை. நான் ஏசியன் கப் கோப்பை விளையாட்டிற்காக கலந்து கொண்ட போது இப்படியெல்லாம் ரூல்ஸ் இல்லை” என்கிற பந்தாவுடன் விளையாட்டைத் தொடர மறுத்தார். இதை துவக்கத்திலேயே கறாராக செய்திருந்தால் குறைந்தபட்சம் சரியாக இருந்திருக்கும்.

வனிதா கோபமாக புலம்பிக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கமாக கடந்து சென்ற தர்ஷனுக்கு ஏழரை ஆரம்பித்திருக்க வேண்டும். தெரியாத்தனமாக ஒரு கமெண்ட்டை சொல்லி விட்டார். தர்ஷன் என்றல்ல வீட்டில் உள்ள பலருக்குமே வனிதாவின் அலப்பறைகள் குறித்த மெளன கோபங்கள் இருக்கின்றன. இன்றைக்கு அது தர்ஷன் மூலமாக வெடித்தது. அவ்வளவே.

“உங்களுக்கு ஏத்தா மாதிரி ரூல்ஸை மாத்திப்பீங்களா?” என்று தர்ஷன் சொல்லியதுதான் தாமதம், வனிதா சாமியாடத் துவங்கி விட்டார்.. “ஏ அறிவாளி.. இங்க வா” என்று அதட்டலாக கூப்பிடத் துவங்கியது முதல்.. “தமிழ்நாட்ல ஒரு பொம்பளை கிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சுக்கோ’ ‘அதெல்லாம் உங்க அப்பா அம்மா விளையாடுவாங்க” “நேத்து முளைச்சவன் நீ’ என்றெல்லாம் ஏக வசனத்தில் வசைபாடத் துவங்கி விட்டார்.

“பிக்பாஸ் வீட்டில் எனக்கு எதிராக ஒரு எதிர்ப்புக்குரலா?” என்கிற அதிர்ச்சியே அவரிடம் கோபமாக வெளிப்பட்டது போல. அவரது வசைகளில் பல சாமர்த்திய அரசியல்கள் இருந்தன. ‘பொம்பளை.. ‘தமிழ்நாடு..” போன்ற விஷயங்களைக் கவனிக்கவும்.

தர்ஷனும் பதிலுக்கு பதில் சரியாக கொடுத்தார். ஆனால் மரியாதையின் எல்லையைத் தாண்டவில்லை. இளம் தலைமுறையினர் பெரும்பாலும் தர்ஷனுக்கு ஆதரவு தந்தனர். “நீ சரியாத்தான் பேசினே மச்சி” என்று. ‘நன்றாக கதைத்தாய்” என்று லொஸ்லியா கூட பிறகு வந்து கைகொடுத்தது. (இது போதும்டா.. உனக்கு!).

 “இந்தம்மா மட்டும் மத்தவங்க விஷயத்துல கருத்து சொல்வாங்களாம். ஆனா இவங்க விஷயத்துல யாரும் எதுவும் சொல்லக்கூடாதாம். இவங்க கத்தினா மத்தவங்க அடங்கிப் போயிடணுமா?” என்றெல்லாம் தர்ஷன் ஆத்திரத்துடன் புலம்பியது மிகச்சரியானது.

வனிதாவின் கோபம் பிறகு அபிராமியின் மீதும் பாய்ந்தது. “என்னாத்த தலைவரு நீ.. வேஸ்ட்டு.. நீதானே இதில் தலையிட்டிருக்கணும்” என்று கத்த பலியாடு போல நின்றார் அபிராமி. “நீ ஓடிப்பாரு அப்பத் தெரியும்” என்றெல்லாம் சிலரிடம் வனிதா கத்திக் கொண்டிருந்தது காமெடி. அவரால் இயலவில்லை என்பதுதான் விஷயம். அதை மறைக்க எத்தனை ஆங்காரம்?

“என்னால மட்டும் எப்படி அவங்க முதுகுல ஒட்ட முடிஞ்சது. அதைப் போலத்தானே அவங்களும் செய்யணும்? மத்தவங்களை மட்டும் காண்ட்டிராக்ட்ல சைன் போட்டுதானே வந்திருக்கீங்க?”-ன்னு நேத்து சொன்னாங்களே’ என்று சாக்ஷி வெளியில் ஷெரீனுடன் பேசிக் கொண்டிருந்தது மிகச் சரியானது.

வனிதாவிற்கு எதிரான எந்தவொரு குரலும் தேனாக இனிக்கிறது. அம்மணி அப்படியொரு ஆட்டத்தை இன்று ஆடினார்.

“பாரேன்.. இந்த சப்ஜெக்ட் கிட்ட ஏதோ அசைவு தெரியுது” என்பது மாதிரி “தர்ஷனுக்கும் கோபம் வருமா.. ரணகளத்துல உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா?. ஐ லைக் இட்’ என்று தர்ஷனுக்கு ‘ரொமாண்ட்டிக்” ஆதரவு தந்து கொண்டிருந்தார் ஷெரீன். இவரும் தன் பங்கிற்கு வனிதாவிடம் நியாயம் கேட்கப் போக ‘பிரெண்டுக்கு சப்போர்ட் பண்ணி யாராவது வந்தா அவங்களை சப்போட்டா பழம் மாதிரி பிழிஞ்சுடுவேன்” என்று வனிதா எகிற தயங்கி பின்வாங்கினார் ஷெரீன்.

“டேய் பிக்பாஸூ.. இங்க வாடா சனியனே.. நீ முடிவு சொல்லாம நான் இங்க இருந்து நகர மாட்டேன் மைக்கைப் போட மாட்டேன்” என்று கல்லுப் பிள்ளையாராக அமர்ந்தார் வனிதா.

“எனக்கு ஒரு நியாயம்.. இந்தம்மாவிற்கு ஒரு நியாயமா?” என்று மோகன் துவங்கி வைக்க எல்லோரும் இணைந்து வனிதாவை வெளியே காய்ந்து கொண்டிருந்தார்கள். தன்னை விட்டு விட்டு பெரும்பாலோனோர் வெளியே சென்று விட்டதால் ஜெர்க் ஆன வனிதா “பால் கெட்டுப் போயிடுச்சான்னு பாரு” என்றபடியே நைசாக நகர்ந்து சென்று மைக்கை மாட்டிக் கொண்டது படுகேவலம். தன்னிடம் மீண்டும் அடிமையாக இணைந்த மதுமிதாவிடம் ‘மம்மின்னு டம்மின்னு.. இங்கு கூப்பிடறதெல்லாம் சும்மா” என்று வம்பு பேச ஆரம்பித்து விட்டார்.

தன்னிடம் இருந்து மற்றவர்கள் விலகுவது குறித்து உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்தாரோ என்னவோ.. தர்ஷனை தேடிச் சென்று பஞ்சாயத்து பேச ஆரம்பித்தார் வனிதா. அது சமாதான உடன்படிக்கையாக அல்லாமல் கட்டப்பஞ்சாயத்தாகவே அமைந்தது. வனிதாவின் வழக்கமான அலட்டல் அங்கும் வெளிப்பட்டது. தர்ஷனுக்கு இன்னமும் கோபம் தணியவில்லை. எனவே சூடு குறையாமல் தன் தரப்பு நியாயங்களை சொல்ல முயன்றார். ஆனால் வனிதா பேசவே விடவில்லை.

தமிழ் சினிமாவின் போலீஸ்காரர்கள் கடைசி சீனில் நுழைவது போல, சண்டையின் உச்சக்கட்டத்தில் பஞ்சாயத்து பேச வரும் சேரன் இப்போதும் அப்படியே வந்தார். ஆனால் அவர் சொல்லியது ஒவ்வொன்றும் வனிதாவின் மீதான மறைமுக சாடல். இந்தக் குத்தல் வனிதாவிற்கு புரிந்திருக்க வேண்டும். ஆனால் புரிந்தது போல் தெரியவில்லை. சேரன் தனக்கு ஆதரவாக பேசுவதாக கருதிக் கொண்டாரோ என்னமோ.

“இங்க பாரு.. தர்ஷன். நீ பேசினது எதுவுமே தவறு இல்ல. ஆனா கொஞ்சம் சத்தமா பேசிட்டே. நம்ம பேருதான் இதனால கெடும். நாம இறங்கிப் போறதால தாழ்ந்து போயிட மாட்டோம்” என்றெல்லாம் சேரன் சொன்ன சமாதானங்கள் பெரும்பாலானவற்றில் வனிதாவிற்கான மறைமுக குண்டூசிகள் இருந்தன. “சரி.. அப்ப பிரெண்ட்ஸ்.. சரியா?” என்று அதையும் அதட்டலாகவே கேட்டு தர்ஷனிடம் கை கொடுத்தார் வனிதா.

இன்று பஞ்சாய்த்து நாள். வனிதாவை வெளியே அனுப்ப மாட்டார்கள் என்று நமக்குத் தெளிவாக தெரிந்து விட்ட நிலையில், “ஆண்டவர்’ சற்று தன் பாணியில் வனிதாவிடம் விசாரணையை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம். ‘குறும்படமும்’ வெளியிடப்பட்டால் கூடுதல் சுவாரசியமாக இருக்கும். பார்க்கலாம்.



suresh kannan

Friday, July 12, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன் செங்குட்டுவன்”




“இருக்கு.. இன்னிக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு” என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின இன்றைய பிரமோக்கள். பரவாயில்லை. கலகலப்பும் கலாட்டாவும் என்று சரிசமமான சம்பவங்கள் இன்று நிகழ்ந்தன.

“பேட்ட.. பராக்’ என்கிற அட்டகாசமான பாடலோடு விடிந்தது. சாண்டி எல்லோரையும் மாடு ஓட்டிக் கொண்டிருந்தார். லொஸ்லியா கண்ணை ஒருமாதிரியாக மூடி, உடம்பை 45 டிகிரியில் வளைத்து ஒரே மாதிரியாக ஆடிக் கொண்டிருந்தார். அது எந்தப் பாடலாக இருந்தாலும் இதே சலிப்பான எபெக்ட்டைத்தான் தருகிறார்.

வீட்டில் பெண் உறுப்பினர்கள் செய்யும் அலப்பறைகளை வைத்து ‘திடீர்’ கானா பாடல்களை சாண்டி தலைமையில் பாடிக் கொண்டிருந்தார்கள். ‘அடியே லாஸ்லியா’ பாடலை இங்கும் எடுத்து விட்டார் கவின். இயல்பாகவும் பிறகு வேகமாகவும் பாடிய இந்த செஷன் கோஷ்டி பஜனைப்பாடல் போலவே கேட்டது.

சாண்டி, கவின், மீரா ஆகிய மூவரையும் வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். கொலையாளியின் கொடூரங்கள் தொடர்வதால் இதை விசாரிக்க வேண்டுமாம். கவின் இன்ஸ்பெக்ட்டராம் (வெளங்கிடும்). மீரா கான்ஸ்டபிள். சாண்டி ஆவியுடன் பேசுபவர். மீராவிற்கு கான்ஸ்டபிள் உடை கனகச்சித பொருத்தமாக இருந்தது. நித்யானந்தா கெட்டப்பில் வந்து ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ என்று பெண் ஆவிகளின் இடையில் ஜாலியாக பாடினார் சாண்டி.


‘மதுமிதா.. லொஸ்லியா.. இவங்க ரெண்டு பேர் மேலதான் சந்தேகமா இருக்கு” என்று புதிதாக அமைக்கப்பட்ட இந்த ‘கண்காணிப்பு குழு’ பேசிக் கொண்டிருந்தது. (அப்ப.. இதுங்களும் லூஸூங்கதானா?!).

மீரா மட்டுமே “வனிதா மற்றும் முகின் மீது சந்தேகமாக இருக்கிறது” என்றார். (பேசாம.. இவங்களை இன்ஸ்பெக்ட்டரா போட்டிருக்கலாம்).

**

ஒரு இருட்டான சூழலில், கால் டாக்ஸி வாகனத்தில் விசாரணை நடைபெற்றது. (இங்க.. என்ன..ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது.. லைட்டைப் போடுங்கய்யா). “கேக்கற கேள்விக்கு கரெக்ட்டா பதில் சொல்லணும்” என்று மொக்கை இன்ஸ்பெக்டர் கவின் விசாரிக்க “நான் பதில் சொல்றேன். அது கரெக்ட்டா –ன்னு நீங்கதான் கண்டுபிடிக்கணும்” என்று சரியாக கவுண்ட்டர் கொடுத்தார் மதுமிதா.

கவின், லொஸ்லியாவுடன் ஒரே தட்டில் சாப்பிட்டு வழிந்து கொண்டிருந்ததை பொறுக்க முடியாத சேரன், சாக்ஷியை அனுப்பி போட்டுக் கொடுத்தார்.

பிறகு கையில் பூங்கொத்துடன், அசடு வழிய லொஸ்லியாவை விசாரித்துக் கொண்டிருந்தார் கவின். ‘எனக்கு யாரையும் கொன்று பழக்கமில்லை. எல்லோரையும் அன்பு செய்துதான் பழக்கம்” என்று லொஸ்லியா அளித்த பதில் அப்போதைக்கு பார்க்க காமெடியாக இருந்தாலும் அது லொஸ்லியா சொல்லியதாலேயே சிறப்பான பதிலாக அமைந்தது.

அடுத்த கொலைக்கான அழைப்பு வந்தது. ‘யெஸ்.. பாஸ்” என்று ரெடியானார் தடியாள் அனிதா… மன்னிக்க அடியாள் வனிதா. கவினின் துப்பாக்கியை திருடி ஒளித்து வைக்க வேண்டுமாம். இதுதான் அடுத்த டாஸ்க்.

இதற்கிடையில் ஒரு கலாட்டா உருவாக ஆரம்பித்தது. ‘எங்களால வெயில்ல உக்கார முடியலை” என்று சாக்ஷி க்ரூப் சிணுங்க ஆரம்பித்தது. தாங்கள் சிரமப்படுவது கூட அதிக பிரச்சினையில்லை, மற்றவர்கள் ஜாலியாக உள்ளே ஏஸியில் இருக்கிறார்களே.. என்பதுதான் அவர்களுக்கு காண்டாக இருந்திருக்கும். குறிப்பாக லொஸ்லியாவும் மதுமிதாவும் ஜோடி போட்டுக் கொண்டு ‘கெக்கே.. பிக்கே’’ என்று சிரித்துக் கொண்டே உலவி வருவது அவர்களை பயங்கர கடுப்பாக்கியிருக்கும்.

இனிமேல்தான் பிக்பாஸ் டாஸ்க்குகள் கடுமையாகப் போகின்றன. இதற்கே இப்படி இவர்கள் சிணுங்கினால் எப்படி? ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் மாதிரி ‘பொண்ணுங்க  வாடுவதைக் கண்டு தானும் மனம் வதங்கும் கவினும் அவர்களின் சலிப்பில் கலந்து கொண்டு அதன் சதவீதத்தை உயர்த்தினார்.

பின்பு சேரனும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டார். அவருடைய பிரச்சினை இது மட்டுமல்ல. “கேமே என்னன்னு புரியல. எங்களோட பங்களிப்பே இல்ல. திடீர்னு ஒருத்தர் கொலை–ன்றாங்க.. கடுப்பாகுது’ என்பதே அவரின் பிரதான புகார். இது புரிந்து கொள்ளக்கூடியதுதான். சின்னப்பசங்களே விளையாடாத மொக்கையான விளையாட்டுக்களை மூன்று நாள்களுக்கு விளையாடச் சொன்னால் எப்படி?

"பிக்பாஸ்.. என்ன பிக்பாஸ் இப்படி பண்றீங்க?" என்று காக்காய்க்கு சோறு வைப்பது போல் கத்திக் கொண்டிருந்தார் வனிதா. பின்னே.. தன்னை மறைத்துக் கொள்ள வேண்டுமே!

ஆனால், "இதற்குத்தான் காண்ட்டிராக்டில் சைன் போட்டு வர்றோம்.. சம்பளம் தர்றாங்க.. செஞ்சுதானே ஆகணும்" என்று அவர் சிணுங்கல்வாதிகளிடம் சொன்னது பக்கா ஸ்டேட்மெண்ட். இத்தனை நாள்களில் வனிதா சொன்னதை முதன் முறையாக ஒப்புக் கொள்ளும் திருவாசகம் இது. 

இதற்கிடையில் சரவணனும் மீராவும் சேரனைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருந்தார்கள்."பொணந்தின்னி என்ன சொல்லுது?" என்கிற மாடுலேஷனில் 'என்ன சொல்றாரு.. சேரன் செங்குட்டுவன்?" என்று தன் கோபத்தைக் காட்டினார் சரவணன். "என் மேல இருக்கிற தனிப்பட்ட கோபத்தைக் காட்டுகிறார்" என்று லாஜிக்கே இல்லாமல் புறம் பேசினார் மீரா.

பிக்பாஸிடம் நேரடியாகவே தன் ஆட்சேபத்தைக் கூறி இந்த டாஸ்க்கில் இருந்து ஒதுங்கி விட்டார் சேரன். பிக்பாஸ் வீட்டில் இனிமேல்தான் பல கேனத்தனமான விளையாட்டுக்களை பார்க்கப் போகிறார். இதற்கே சலித்துக் கொண்டால் எப்படி சேரன்? நாய் வேஷம் போட்டாகி விட்டது.. என்ன செய்வது?

கவினிடம் இயல்பாக வந்து பேசுவது போல் துப்பாக்கியை எடுத்தார் வனிதா. அதை முகினிடம் கொடுக்க அவர் என்னமோ அதை ஜேம்ஸ்பாண்ட் பாணியில் சுழற்றிக் கொண்டு போய் பாத்ரூம் அருகில் ஒளித்து வைத்தார். தன்னுடைய துப்பாக்கி இல்லாததைக் கூட உணராமல் வனிதாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார் கவின். (ஏண்டா..  வனிதாவும் லிஸ்ட்ல உண்டா?!).

ஆயுதம் என்பது ஒரு வீரனுக்கு உயிருக்கு சமமானது. ஒரு ராணுவ வீரரின் அனுமதியில்லாமல் அவருடைய துப்பாக்கியை ஒருவர் தொட்டுக்கூட பார்த்து விட முடியாது.

**

சேரனின் பலத்த ஆட்சேபம் காரணமாகவோ அல்லது இந்த மொக்கை டாஸ்க்கை பிக்பாஸ் டீமினாலேயே தாங்க முடியவில்லையோ என்னமோ.. நிறுத்தி விட்டார்கள். பாவம் மீராவிற்கு அளிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பிரமோஷன் வீண்.

அனைவரும் வரவேற்பறையில் உட்கார்ந்திருக்க, அந்தச் சமயம் பார்த்து பிக்பாஸிடமிருந்து வனிதாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. திருட்டு முழியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் வனிதா.

நேரடியாக லைனில் வந்த பிக்பாஸ் உண்மையை சபைக்கு தெரிவிக்கச் சொல்ல.. வனிதாவின் முகத்தில் தெரிந்த பீற்றலை அப்போது பார்க்க வேண்டுமே.. நோபல் பரிசு வாங்கியவனின் முகத்தில் கூட அப்படியொரு பெருமை வழியாது. ‘தான்தான் கொலையாளி’ என்று அவர் அறிவித்தவுடன் மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்களே.. தவிர “யாரு கொலையாளி –ன்னு தெரிஞ்சா பின்னிடுவேன்” என்று முன்னர் போட்ட சபதத்தை உடனே கைவிட்டார்கள். பின்னே.. அது வனிதாவாயிற்றே..

குறிப்பாக.. 'என்னை அபிராமிதான் கொன்னிருக்கணும்" என்று லூஸூத்தனமாக புலம்பிய சாக்ஷியே.. இப்போது மூச்சே விடவில்லை.

‘இந்த டாஸ்க்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள்?” என்பதை அனைவரும் கூடி தேர்ந்தெடுக்க வேண்டும். வனிதா என்பது நிராகரிக்க முடியாத தேர்வு. சிறப்பாகச் செய்தார். ஆனால் மோகனும் சாக்ஷியும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை. வயது காரணமாக மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ‘வெயிலில் சிரமப்பட்டு அமர்ந்த’ காரணத்திற்காக சாக்ஷியாம். போங்காட்டம். பதிலாக முகினை தேர்ந்தெடுத்திருக்கலாம். சிறந்த திருட்டுக் கொட்டாக வனிதாவிற்கு உதவி செய்தார்.

அடுத்ததாக “யார் இந்த டாஸ்க்கில் சரியாக பங்கேற்கவில்லை?” என்கிற கேள்விக்கு தாமாக முன்வந்து ஆஜர் கொடுத்தார் சேரன். கூடவே சரவணைனையும் தேர்ந்தெடுத்தார்கள். அப்போதே அவர் முகத்தில் டென்ஷன் ஆரம்பித்தது. ஆனால் ஒருவகையில் இது சரியான தேர்வே. இந்த டாஸ்க்கில் அவரது பங்கு பெரிதாகவே இல்லை. ஆங்காங்கே நின்று கொண்டு திகைப்பான முகபாவங்களைத் தந்து கொண்டிருந்தாரே தவிர, அதிகம் காணப்படவில்லை. ஒருவேளை அவை எடிட்டிங்கில் போய் விட்டதோ என்னமோ.

“தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லையென்றால் தூக்கிச் சென்று புதைத்து விடுவார்கள்” என்றொரு சொலவடை சினிமாவுலகில் பிரபலம். பிக்பாஸ் வீட்டிலும் அதேதான் கதை. தனது இருப்பை அழுத்தமாக தெரிவித்துக் கொண்டே இருப்பவர்கள்தான் முன்னேற முடியும்.

சிறப்பாகச் செயல்பட்ட மூவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்கு தகுதியானவர்களாம். எனில் வனிதாவை தக்க வைத்துக் கொள்வதற்கான பிக்பாஸின் முயற்சிகள் வெற்றியடையப் போகின்றன என்றே பொருள்.

‘சரியாக பங்கேற்காத இருவருக்கும் ஜெயில்” என்று அறிவிக்கப்பட்டவுடன் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். வனிதாவின் தலைமையில் சபை மறுபடியும் கூடியது. பாவம் அபிராமி!.. பெயருக்குத்தான் தலைவர். யார் தலைவராக இருந்தாலும் வனிதாவின் கொடிதான் எப்போதும் பறக்குது.

இதில் சரவணணை ரிலீஸ் பண்ணி விட்டு கவினை மாட்டி விடும் நோக்கில் உரையாடலை முன்வைத்தார் வனிதா. பங்கேற்பாளர்களின் சலிப்பை அதிகமாக தூண்டி விடும் வகையில் கவின் செயல்பட்டாராம். “என்னடா.. குற்றத்தை ஒப்புக்கிறயா?” என்பது மாதிரியே அதட்டலாக வனிதா விசாரிக்க ‘சரிங்க மேடம்” என்று உடனடியாக சரணடைந்தார் இன்ஸ்பெக்டர். கவின் சிறைக்குச் செல்லும் சேதியை அறிந்த சாக்ஷி ‘அப்ப நான் போறேன்” என்று ஆரம்பிக்க.. “நான் ஒரு மொள்ளமாறி.. நான் ஒரு முடிச்சவிக்கி’ என்று ஆளாளுக்கு சுயவாக்குமூலம் தர ஆரம்பித்தார்கள்.

இந்தக் குழப்பம் பிக்பாஸிடம் எடுத்துச் செல்லப்பட “நீங்களே அடிச்சு சாவுங்க” என்று தண்ணி தெளித்து அபிராமியை திருப்பி அனுப்பி விட்டார். எனவே இவர்கள் ஒருமனதாக முடிவு செய்தால் அது செல்லுபடியாகும். கவின் முதல் பலியாடாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

“சேரனுக்குப் பதிலாக யாராவது போறீங்களா?” என்று ஷெரீன் திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்க ‘லொஸ்லியா’ கையைத் தூக்கினார். ‘நான் தீர்ப்பு சொன்ன பிறகு அதற்கு அப்பீலா?’ என்று வெகுண்ட வனிதா, ஒரே கத்தலில் லொஸ்லியாவை பின்னடையச் செய்தார். “திடீர் –னு நீ நல்லவளாகி விட முடியாது. இங்க ஒண்ணும் தியாகிக்கான போட்டி நடக்கலை” என்று கோபமடைந்தார். அவர் சொன்னது ஒருவகையில் சரிதான். ஆனால் இத்தனை அலப்பறை தேவையில்லை. சேரனின் பக்கம் பரிவாக பேசுவது போல் நடிக்கும் வனிதாவிற்கு சேரன் தண்டனை பெறாமல் போய் விடுவாரோ என்கிற கலக்கமும் வந்து விட்டது போல.

“நான் ஒண்டு கதைக்கணும்” என்று ஆரம்பித்த லொஸ்லியா உதை வாங்கியவரைப் போல பின்வாங்கி கண்ணீருடன் பாத்ரூம் பக்கம் செல்ல….. வேறென்ன நடக்கும்… பின்னாடியே கவினும் சென்றார். “என் கிட்ட இனி கதைக்காதே…” என்று மருகிய லொஸ்லியாவிடம் “அப்படிச் சொல்லி என் மனதின் மீது உதைக்காதே” என்று உருகினார் கவின்.

“ஏண்டா.. ஆம்பளைத் தடியன்களா.. என் பேரைச் சொல்லி ஜெயிலுக்கு அனுப்பச் சொல்ல.. எவனாவது ஜாமீன் எடுக்க வந்தீங்களாடா.. ‘கடல்லேயே.. இல்லையாம்’ –ன்ற மாதிரி கமுக்கமா இருந்திட்டீங்களே… உங்களுக்கு ஆயுதப் பயிற்சில்லாம் கொடுத்தேனடா” என்று ஆண் உறுப்பினர்களிடம் கோபித்துக் கொண்டார் சரவணன். வனிதா மட்டும் வழக்கறிஞராக ஆஜர் ஆகவில்லையென்றால் களி தின்றிருப்போமே என்கிற அச்சம் அவரை ஆட்டிப் படைத்தது. ‘டாஸ்க்கில் பங்கெடுக்க மாட்டேன்’ என்று சொன்ன சேரன் இந்தத் தண்டனைக்கு சரியானவர், தான் இல்லை என்பதும் அவருடைய அழுத்தமான எண்ணம்.

என்னமோ.. உண்மையாகவே புழல் சிறைக்கு அனுப்புவதைப் போல இவர்கள் செய்யும் அலப்பறைகள் காமெடியாக இருக்கின்றன.

suresh kannan

Thursday, July 11, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 17 – “பார்வையாளர்களைக் கொலை செய்யும் டாஸ்க்”




பிக்பாஸ் வீட்டில் ‘கொலையாளி’ டாஸ்க்கினால் சற்று கலகலப்பு உருவாகியது என்பது நிஜம்தான். ஆனால் இதிலுள்ள சவால்கள் மிக மிக மொக்கையாக இருக்கின்றன. ஷெரீனை முத்தம் கொடுக்க வைக்க வேண்டுமாம். ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. அதாவது…. சரி வேண்டாம்.. கலாசார காவலர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

திருடனின் கையிலேயே சாவியைத் தந்து விட்டது போல, ரவுடி ராக்கம்மாவாக அந்தர் செய்து கொண்டிருந்த வனிதாவிடம், கொலையாளி பொறுப்பை ஒப்படைத்து விட்டதால் அவர் இப்போதைக்கு எல்லோரையும் அனுசரித்துப் போகும் நெருக்கடியில் இருக்கிறார். எனவேதான் “கோல்ட் காஃபி சாப்பிடறீங்களா?” என்றெல்லாம் இந்தச் சனியன்களிடம் விசாரித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

இது மட்டுமல்ல, அவர் தன் இதுவரையான அலப்பறைகளால் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் காரணமாக, அவர் சொன்னவுடன் இதர போட்டியாளர்கள் சட்டென்று உடன்பட்டு விடுகிறார்கள். இதனால் இந்த ‘டாஸ்க்கில்’ சுவாரசியமான சவால்களா, சம்பவங்களோ ஏதுமில்லை. சம்பிரதாயங்கள் மட்டும் நிகழ்கின்றன.

இப்போதே, சமூகவலைத்தளங்களில் வனிதாவின் திறமைகளைப் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள். எனில் அவர் மீதான கோபம் தணிந்து அவர் நாமினேஷனில் இருந்து தப்பிக்கவும் வாய்ப்புண்டு.

சரி, 17-ம் நாளில் என்னென்ன நடந்தது என்று பார்ப்போம்.    

**

காலையிலேயே பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது. இதுவரை தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த சேரன்.. இன்று வெடிக்கத் துவங்கி விட்டார். இந்த விஷயத்தில் மீரா பக்கம்தான் தவறு இருப்பது போல் தெரிகிறது. ஒரு குழுவில் தன்னுடைய பொறுப்பு என்னவென்று சொல்லப்பட்ட பின்பு தாமே அதை முன் வந்து சரியாகச் செய்து விடுவதுதான் நல்லது. குழுவின் தலைவர் ஒவ்வொரு முறையும் நினைவுப்படுத்துவது என்பது எரிச்சலான செயல். சண்டி மாட்டை வைத்துக் கொண்டு வண்டியோட்டுவது போல.

மற்றவர்களின் வேலையையும் சேர்த்து தான் செய்து விட்டதின் எரிச்சலில் மீராவின் தவறை சேரன் முதலில் மென்மையாகச் சுட்டிக் காட்டினார். ஆனால் அதை மீரா இயல்பாகக் கடக்காமல் அழுது சண்டையிட்டு பெரிதாக்கினார். மட்டுமல்ல, ஏற்கெனவே சொன்னது போல, ஒரு உரையாடலை ஆரம்பித்து விட்டு பிறகு சட்டென்று கத்தரித்து எழுந்து செல்வது எதிர்தரப்பை பயங்கரமாக வெறுப்பேற்றும். சேரனுக்கும் அப்படியே ஆயிற்று.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் லொஸ்லியா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பதை காட்டினார்கள். “ஆ… இங்க பூசு..  இந்தப் பக்கம் பூசு’’ என்று சந்தனம் தடவுவது போலவே எதையோ செய்து கொண்டிருந்தார். “பார்த்து.. மெல்ல.. மெல்ல.. செவத்துக்கு வலிக்கப் போவுது”.

ஆவிகளை மயானத்திற்கு துரத்தினார் பிக்பாஸ். ‘ஐய்யோ.. வெயில்ல நிக்கணுமா?” என்று சிணுங்கியது சாக்ஷி ஆவி. சாண்டி செய்யும் நக்கல்களால் மோகன் புண்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மனிதரால் மெல்லவும் விழுங்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறார். சேரன், சரவணன் போல தன் இடைவெளியை வைத்திருந்தால் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

சாண்டியின் அலப்பறைகளால் முதலில் கண்கலங்கியவர், பின்பு முகின் வந்து பக்கத்தில் அமர்ந்து கலாய்க்கும் போது சிரித்து விட்டார். சிவாஜி கணேசன் இன்னமும் இறக்கவில்லை. மோகனின் வடிவில் உயிர்வாழ்கிறார் என்று தோன்றுகிறது.

**

அடுத்த கொலையை நிகழ்த்த வேண்டிய நேரம். ஷெரீனை தர்ஷனுக்கு முத்தம் தர வைக்க வேண்டுமாம். கண் சிமிட்டும் நேரத்தில் இந்த விஷயத்தை நடத்தி முடித்து விட்டார் வனிதா.

“எங்களை மதுவும் லொஸ்லியாவும் ஓவராக வெறுப்பேற்றுகிறார்கள். கண்டித்து வையுங்கள்” என்று “ஆவிகளான’ சாக்ஷியும் ஷெரீனும் தலைவியான அபிராமியிடம் புகார் அளித்தார்கள். “அய்யோ.. நான் அந்தப் பக்கமே போகலையே?!” என்று சரோஜாதேவியின் அபிநயத்துடன் மதுமிதா சொன்னார். சாக்ஷி ஏதோ மனப்பிரமையிலேயே வாழ்கிறார் போலிருக்கிறது.

அடுத்த கொலை. ரேஷ்மாவின் மீது முகின் குளிர்ந்த காஃபியை ஊற்ற வேண்டுமாம். கடவுளே.. பிக்பாஸ்.. என்ன ஆயிற்று உங்களுக்கு? இத்தனை மொக்கையாக யோசிக்கிறீர்கள்?

பேய் ஒப்பனையின் போதே ரேஷ்மாவின் முகத்தில் எதையோ கொட்டியது போல்தான் இருந்தார். இப்போது இன்னொன்றா? வனிதாவும் முகினும் இணைந்து தற்செயலாக காஃபி கொட்டுவது போல் செய்தார்கள். அந்தச் சமயத்தில் வனிதாவின் எக்ஸ்பிரஷன்கள்.? ‘உலக நடிப்புடா.. சாமி…”

செத்துப் போன ரேஷ்மா “இதற்கு காரணமானவர்களை வந்து சாவடிக்கிறேன்” என்று சபதம் ஏற்றது நல்ல காமெடி. “ஆரண்ய காண்டம்’ என்கிற திரைப்படத்தில், ஒரு முக்கியமான பொருளைத் தேடி ரவுடி கூட்டம் செல்லும். ஆனால் தேடப்பட்டவன் இறந்து போயிருப்பான். பொருள் கிடைக்காத எரிச்சலில் ரவுடியின் தலைவன் பிணத்தைப் பார்த்து சொல்வான். “நீ மட்டும் உயிரோட இருந்தா உன்னைக் கொலை பண்ணியிருப்பேண்டா”

ஒருவரின் மேல் காஃபி கொட்டுவது தற்செயலானதுதான். ஆனால் தான் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போது ரேஷ்மாவிற்கு அந்தச் செய்கையின் மீது பிறகாவது சந்தேகம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வரவில்லை. ரேஷ்மா மட்டுமல்ல, பிறரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

ஆனால் – நமக்கு காட்டப்படாத காட்சிகளில் வேறு சில செய்கைகளும் செய்யப்பட்டு அதனால் குழம்பி விடுகிறார்களா என்று தெரியவில்லை. ‘தொட்டா அவுட்.. பார்த்தா அவுட்’ன்னா என்னய்யா விளையாட்டு இது?! மாறாக மதுவிதாவிற்கு கவின் முத்தம் அளிக்க வேண்டும் என்பதான டாஸ்க்காக இருந்தால் அது எத்தனை கலாட்டாவாக அமையும்?!

“யாரும் யாரையும் கொலை பண்ணலே. பிக்பாஸ் கன்ப்யூஸ் பண்றாரு”  “இல்லை சாண்டிதான் கொலைகாரன். அவனேதான் சொன்னான்” என்று மதுமிதாவும் லொஸ்லியாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுங்க இம்சை வேற. இதுங்களே இப்படி வெள்ளந்தியா இருக்குதுன்னா. இதுங்களைப் போய் சந்தேகப்படும் சாக்ஷி, மோகன் க்ரூப் எத்தனை மொக்கையானதுக?!

**

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘மன்னவனே அழலாமா?” என்றொரு டாஸ்க்கை தந்தார் பிக்பாஸ்.  அதன்படி வீட்டின் உறுப்பினர்கள், இறந்து போனவர்களைப் பற்றி உருக்கமாகவும் நகைச்சுவையாகவும் சொல்ல வேண்டுமாம். (சிரித்துக் கொண்டே எப்படிய்யா அழுவுறது?!)

சாண்டி சும்மாவே ஆடுவார். சலங்கையை வேறு கட்டி விட்டார்கள். எனவே பிரித்து மேய்ந்து விட்டார். சேரனின் கோபமான முகம் காலையில் வெளிப்பட்டது போல, இப்போது ஜாலியான முகமும் இப்போது வெளிப்பட்டது. மனிதர் இப்போதுதான் ஜோதியில் ஐக்கியமாகத் துவங்கியிருக்கிறார்.

நகைச்சுவை என்கிற மேற்பூச்சில் பல குண்டூசிகளை இறக்கி விட்டுச் சென்றார் மதுமிதா. ஷெரீனின் முகம் அஷ்டகோணலாக மாறியது. “ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா” பாணியிலேயே இவரின் பேச்சு இருந்தது.

சரவணன் மெளன அஞ்சலி செலுத்தி பலரின் பாராட்டுக்களைப் பெற்றார். பர்பாமன்ஸ் செய்ய வரலைன்னா இப்படியும் சமாளிக்கலாம் போல.

இந்த டாஸ்க்கின் போது தர்ஷன் ஷெரீனை மிகையாகப் புகழ்ந்தார். பிறகு பார்த்தால் ஷெரீனுடன் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருந்தார். எனில் பயபுள்ள உண்மையாகவே அந்தப் பக்கம் சாய்ந்து விடுவாரோ என்னவோ! இந்தக் கவின் பயல் பெரும்பாலான உருப்படிகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரும் என்னதான் செய்வார்? மிஞ்சுவதைத்தான் கைப்பற்ற முடியும்!

இந்தக் கொலைகார டாஸ்க்கில் இவர்கள் சாகிறார்களோ.. இல்லையோ… நம் உயிரை வாங்குகிறார்கள்.





suresh kannan

Wednesday, July 10, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 16 – “பிக்பாஸ் வீட்டு கொலைகளும் பேய்களும்”




இத்தனை நாள் ரணகளமாக இருந்த வீட்டில் இன்று சிரிப்பும் புன்னகையும் வருவதற்கு காரணமாக இருந்தது ‘கொலையாளி’ டாஸ்க்.

இது போன்ற விளையாட்டுக்களின் மூலம் பழைய கசப்புக்களை மறந்து ஒருவரோடு ஒருவர் இணங்கி நெருங்க முடியும். நமது வீடுகளிலும் இதைப் பார்க்கலாம். ஏதோவொரு அற்ப சண்டை காரணமாக முகத்தை திருப்பிக் கொண்டிருப்பவர்கள், எங்காவது சிறு பயணம் செல்லும் போது வேறு வழியில்லாமல் பேச நேர்ந்து விளையாடத் துவங்கி பழைய படி சரியாகி விடுவார்கள். ஆளாளுக்கு செல்போனையும் டிவியையும் கட்டிக் கொண்டு அழாமல் கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடினால் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும் என்பது எளிய உண்மை. 

ஆனால் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ மோடிலேயே பிக்பாஸ் நிச்சயம் விட்டு விட மாட்டார். எதையாவது கோர்த்து விட்டு சண்டை போட வைப்பார். இப்படி தெளிய தெளிய வைத்து அடிப்பதுதான் பிக்பாஸ் ஸ்டைல்.

சரி, 16-ம் நாளில் என்னென்ன அற்புதங்கள் நடந்ததென்று பார்ப்போம்.

**

“வெச்சுக்கவா.. உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’ என்கிற ரகளையான ரீமிக்ஸ் பாடலுடன் நாள் துவங்கியது. இந்த டான்ஸ் செஷன் செம போர். நடன மாஸ்டரான சாண்டி இருந்தும் களை கட்டவில்லை.

வெளியே வந்தவர்களுக்கு சிறு ஆச்சரியம். மயானம், எலும்புக்கூடு என்று சுடுகாட்டு எபெக்ட்டை கொண்டு வந்திருந்தார்கள். “நாம நைட்டு பன்னிரெண்டு மணிக்குத்தான் படுக்கப் போனோம். அதுக்குள்ள இவ்ள விஷயம் பண்ணியிருக்காங்களே.. குட்” என்று ஆர்ட் டிபார்ட்மெண்டை பாராட்டிக் கொண்டிருந்தார் சேரன். அவருக்குள் இருக்கும் டைரக்டர் எப்போதும் ‘அட்டென்ஷன்’ மோடில் இருப்பார் போலிருக்கிறது.

முணுக்கென்றால் கண்கலங்கி அழுது தீர்க்கும் மீரா இன்று யோகா சொல்லித் தருகிறாராம். காலக்கொடுமை. “மூச்ச இழுங்க.. வெளில விடுங்க’ என்று கேப் விடாமல் அவர் சொல்லிய போது ‘நடுவுல கொஞ்சம் டைம் கொடும்மா.. ஒரேடியா இழுத்துக்கப் போவுது” என்று மோகன் கமெண்ட் அடிக்க மற்றவர்கள் கவனம் கலைந்து சிரித்தார்கள். வந்த நாளில் இருந்து மோகன் அடித்த முதல் நகைச்சுவை கமெண்ட் இதுதான் போலிருக்கிறது. சாண்டி வழக்கம் போல் குறும்பு செய்து கொண்டிருந்தார்.

‘நல்லா சொல்லிக் கொடுத்த மீரா’ என்று வனிதா பாராட்டினார். அவரும் வந்த நாளில் இருந்து ஒருவரைப் பாராட்டியது இதுவே முதன்முறை. ஆனால் இதற்குப் பின்னால் நிச்சயம் ஏதாவது பாலிட்டிக்ஸ் இருக்கும். அபிராமிக்குப் பதிலாக மீராவை தங்களின் குழுவில் இணைத்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம்.

வழக்கம் போல் சிக்கன உடை ஒன்றை அணிந்து கொண்டு டான்ஸ் ஆடிக்காட்டினார் ஷெரீன். பார்க்கத்தான் பயமாக இருந்தது. பெண்கள் உடை அணிவது அவர்களின் சுதந்திரம்தான். இதில் மறுப்பேயில்லை. ஆனால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தன் உடல் வாகிற்கேற்ப உடையணிவது முக்கியம். ஏதோ மல்யுத்தப் போட்டிக்கு கிளம்புவது போல ரேஷ்மா அணியும் உடைகளைப் பார்க்க கலவரமாக இருக்கிறது. சிக்கென்ற உடல் உள்ளவர்கள்தான் ஸ்லீவ்லெஸ் உடை அணிய வேண்டும். சாதாரண அளவு டிவியில் பார்க்கும் எனக்கே அத்தனை பயமாக இருக்கிறதென்றால் பெரிய சைஸ் டிவியில் பார்ப்பவர்களின் கதியை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

“மீரா நம்ம டீம்ல வரப் பார்க்கிறா.. ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சாக்ஷியும் ஷெரீனும் பேசிக் கொண்டிருந்தார்கள். பெரிய ஐ.எஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற டீம். சோதனை செஞ்சுதான் சேர்த்துக்குவாங்க.. போங்கம்மா..

கக்கூஸ் ஏரியாவிலேயே எப்போதும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் கவின் இப்போதும் லொஸ்லியாவிடம் (இதுதான் சரியான உச்சரிப்பாம்) அதையே செய்து கொண்டிருந்தார். (உனக்கு வேற இடமே கிடைக்கலையாடா தம்பி?!) லொஸ்லியா எதற்கோ கோபித்துக் கொண்டிருக்க இவர் சமாதானம் செய்து கொண்டிருந்தார். “இன்னிக்கு முழுக்க என்னைப் பார்க்காம இருந்தா மன்னிச்சிடறேன்” என்றொரு டாஸ்க்கை லொஸ்லியா தர.. ‘பார்த்துட்டே இருக்கற டாஸ்க் வேணா செய்யறேன்” என்று சிணுங்கினார் கவின். (“உன் மூஞ்சைப் பார்க்கப் பிடிக்கலை –ன்றதை அந்தப் பொண்ணு எத்தனை நாசூக்கா சொல்லுது.. உனக்குப் புரியலையா?!)

தன் மகளை நீண்ட நேரமாக காணோமே என்கிற பதட்டத்தில் அங்கு சரியாக வந்து விட்டார் சேரன். “சும்மாத்தான் மாமா.. பேசிட்டிருந்தோம்” என்கிற மாதிரி சமாளித்தார் கவின். ஆனால் லொஸ்லியாவின் உடல்மொழியைக் கவனித்தால் கவனின் நோக்கம் என்றைக்காவது நிறைவேறி விடுமோ என்று கலக்கமாக இருக்கிறது.

**

‘காவல்துறையிடமிருந்து ஓர் அறிவிப்பு. ஒரு பயங்கர கொலையாளி தப்பி பிக்பாஸ் வீட்டில் புகுந்திருக்கிறார்’ என்று அமெச்சூரான அறிவிப்பு ஒன்று வந்தது. பழைய தூர்தர்ஷன் நாடகங்களில்தான் இப்படிப்பட்ட அறிவிப்புகளைக் கேட்டிருக்கிறேன்.

ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ் அவர்களின் பாதுகாப்பிற்காக பயங்கரமான ஆயுதங்களை வழங்கினார். ‘டெமோ செய்து காண்பியுங்கள்’ என்கிற உத்தரவு வேறு. ப்ரூஸ்லியே வெட்கப்படும்படி ஆண்கள் உருட்டுக்கட்டைகளைச் சுழற்றிக் காட்டினார்கள். “பார்த்து சார்.. எங்காவது எசகு பிசகா சுளுக்கிக்கப் போவுது” என்று நாம் அஞ்சும் படி பர்பாமன்ஸ் செய்தார் மோகன். தங்களை ‘பாகுபலி அனுஷ்கா’வாக நினைத்துக் கொண்டு பெண்கள் சுற்றிய கட்டைகள் காமெடியாக அமைந்தன.

பயங்கர டெரரான பெண்கள், கேவலம் கரப்பான்பூச்சிக்கு பயந்து சாவது போல, ஆங்காரமாக சண்டை போடும் பெண்கள், கொலையாளி டாஸ்க்கிற்கு பயந்தது சுவாரசியம். எதற்கோ பேய் மேக்கப் போடத் துவங்கினார்கள். ரேஷ்மாவிற்கெல்லாம் இது போன்ற மேக்கப் தேவையேயில்லை. தூங்கி எழுந்து முகத்தைக் கழுவாமல் வந்தாலே போதும். இந்த டாஸ்க்கின் ‘கொலையாளி’ வனிதாவாம். இதை விடவும் சிறந்த தேர்வு இருக்கவே முடியாது. பிக்பாஸின் குறும்பு இம்மாதிரியான சமயங்களில் நன்றாக வெளிப்படுகிறது.

‘பாஸ்.. நம்ம அடுத்த ஆப்ரேஷன் என்னா?” என்கிற ரேஞ்சிற்கு தனக்கு வழங்கப்பட்ட போனை வைத்துக் கொண்டு புகையறைக்குள் நுழைந்தார் வனிதா. அவர் அணிந்திருந்த வெள்ளை உடைக்கும், மங்கலான காட்சிக்கும் லாங்ஷாட்டில் பார்த்த போது ஜகன்மோகினி படத்தில் அடுப்பில் காலை நுழைத்து சமையல் செய்யும் பேய் போலவே இருந்தது.

‘சாக்ஷியின் மேக்கப்பை கலைக்கணுமாம். அதுதான் கொலையாம்”. என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இருக்கு! “வாங்க மேக்கப் போடலாம்” என்று சாக்ஷியை அழைத்த வனிதா, அவரின் ஒப்பனையைக் கலைத்து வெற்றிகரமாக டாஸ்க்கை நிறைவேற்றி விட்டார். ‘ஒரு கொலை நிகழ்ந்து விட்டது.. இனி சாக்ஷி பேய்’ என்று அறிவித்தார் பிக்பாஸ். சாக்ஷியை ஊர்வலமாக கொண்டு சென்றார்கள். சாண்டியும் தர்ஷனும் சாவு டான்ஸை சிறப்பாக ‘குத்தி’ ஆடினார்கள். எங்கோ மூலையில் பரிதாபமாக அமர்ந்திருந்த சரவணன், சாவு வீட்டில் அமர்ந்திருப்பது போலவே இருந்தார். சாக்ஷி இறந்து போனதால் காவியச் சோகத்துடன் அமர்ந்திருந்தார் கவின். (இவன்தான்யா… தன்னோட கேரக்ட்டர் ஸ்கெட்ச்சை ஃபர்பெக்ட்டா .ஃபாலோ பண்றான்!).

**

தான்தான் கொலையாளி என்பது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அபிராமி உள்ளிட்டவர்களின் மீது சாமர்த்தியமாக கை காண்பித்துக் கொண்டிருந்தார் வனிதா. மற்றவர்கள் எல்லோரும் ஆயுதங்களோடு இருந்த போது அவரிடம் எதுவுமே இல்லை. இதை வைத்தாவது கண்டு பிடித்திருக்கலாம்.

“யாரு கொலையாளின்னு நெனக்கறே?” என்று அபிராமி கேட்ட போது.. “யாருமே இல்ல. அப்படிச் சொல்லி நம்மள கன்ப்யூஸ் பண்றாங்க” என்று லொஸ்லியா வெள்ளந்தியாகக் கூறினார். என்னவொரு புத்திசாலித்தனம்?!

இதற்கு இடையில் அபிராமியிடம் பேசிக் கொண்டிருந்தார் சேரன். கவின் பற்றியதாக இருக்கலாம். “நான்தான் முகின் கூட இருக்கேனே” என்று ‘நமக்கு நாமே’ திட்டத்தின் வழியாக தனக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் அபிராமி. ‘யாரு யாரை லவ் பண்றா?’ விஷயத்தில் நூறு நாள் முடிவதற்குள் நம்மை பைத்தியமாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்கு காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. (அடேய்.. கவினு!).

அடுத்த கொலையை நிகழ்த்துவதற்கான நேரம் வந்தது. மோகனை ‘மைக்கேல் ஜாக்சன் டான்ஸ்’ மாதிரி ஆட வைக்க வேண்டுமாம். பாவம், மைக்கேல் ஜாக்சன். கல்லறையிலிருந்து அலறி புரண்டு படுத்திருப்பார். “வாங்க.. டான்ஸ் ஆடலாம்” என்று குட்டி சுட்டீஸ் அண்ணாச்சி மாதிரி மற்றவர்களை அழைத்த வனிதா, மோகனை வம்பாக அழைத்து டான்ஸ் மாதிரி எதையோ ஆட வைத்தார். முகின் அழைத்தும் டான்ஸ் ஆட வராத மோகன், வனிதா அழைத்ததும் பதறியடித்துக் கொண்டு வந்து விட்டார். (பின்னே.. மேலே விழுந்து வெச்சா என்னாவறது?!) MJ மாதிரி இடுப்பை உயர்த்தி உயர்த்தி மோகன் ஆடியது கொஞ்சம் ரசாபாசமாக இருந்தது.

இன்று மாலை வரை லொஸ்லியாவைப் பார்க்கக்கூடாது என்கிற டாஸ்க்கில் இருந்த கவின், பிறகு அவருடன் பேசிக் கொண்டிருந்தார். மோகனின் சாவு ஊர்வலம் துவங்கியது. ‘நல்லா வாழ்ந்த மனுஷன்யா. சிறப்பா இருக்கணும்” என்று சரவணன் சொல்ல ‘மக்க கலங்குதப்பா..’ என்ற பொருத்தமான பாடலைப் போட்டார் தர்ஷன். சாக்ஷி பேயாக இருந்த போது மொக்கை காமெடி செய்து கொண்டிருந்த மோகன், இப்போது தானும் பேயாக மாறி சாகஷியுடன் இணைந்து மொக்கையைத் தொடர்ந்தார்.

நாள் முடிவடையும் நேரம் வந்ததால் டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ‘நான் கொலை செய்யப்பட்டதற்கு அபிராமிதான் காரணமா இருக்கணும்” என்று சீரியஸாகவே கோபப்பட்டுக் கொண்டிருந்தார் சாக்ஷி. (ஏ.. நீங்கள்லாம் நிஜமாவே லூசுகளா.. அந்த மாதிரி நடிக்கறீங்களா?!) . அபிராமி, லொஸ்லியா, மதுமிதா ஆகியோர்களின் மீதுதான் இவருக்குச் சந்தேகம். அந்தளவிற்கான பர்பாமன்ஸை வனிதா செய்திருக்கிறார்.

இந்த டாஸ்க்கையும் தாண்டி சாக்ஷி குரூப்பின் முட்டாள்தனத்தை புரிந்து கொள்ளலாம். அருகிலேயே இருந்து கொண்டு வனிதா செய்யும் அலப்பறைகளைப் புரிந்து கொள்ளாமல் அவரைத்தவிர மற்றவர்கள் எல்லோரையும் இந்த குரூப் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறது; சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. அருகிலேயே இருக்கும் எதிரியை அடையாளம் காணத் தெரியாத முட்டாள்தனம். 

“வானத்தை வில்லா வளைக்கணுமா… மேகத்தை ரெண்டா ஒடிக்கணுமா?” என்றெல்லாம் கவின் விட்டுக் கொண்டிருந்த பில்டப்புகளை ‘போடா டுபுக்கு’ என்பது போலவே மறுத்துக் கொண்டிருந்தார் லொஸ்லியா.




suresh kannan

Tuesday, July 09, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மாறிய பிக்பாஸ் வீடு”


“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற கருத்துள்ள பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி துவங்கியது. (எனில் ஆணையா லவ் பண்ண முடியும்?! என்னய்யா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு!). இந்தப் பாடலின் கருத்து கவினுக்குப் புரிந்தால் சரி. அபிராமியில் துவங்கிய அவரது விளையாட்டு ‘அபிராமி.. அபிராமி’ என்று புலம்பும் நிலைக்குச் சென்று  ‘குணா’வாக மாறாமல் இருந்தால் சரி.

“மீராவிற்கு வாக்களித்த விஷயத்தில்” இன்னமும் அபிராமியை போட்டு வாட்டிக் கொண்டிருந்தார் வனிதா. தீய்ந்து போன கடலையை இன்னமும் மோசமாக வறுத்துக் கொண்டிருந்தது வனிதா டீம். இவர்கள் ஒருபக்கம் மதுமிதாவைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருக்க, அவரோ அந்தப் பக்கம் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். இரண்டையும் மாற்றி மாற்றி காண்பித்தது காமிரா. சாமிப்படங்களில்தான் இப்படியான காட்சியமைப்பை பார்த்திருக்கிறேன். வில்லிகள் ஒருபக்கம் சதி செய்து கொண்டிருக்க நாயகி சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பார்.

“ஏ.. நான் உங்க 'கேங்க்'தாம்ப்பா.. மதுமிதா கிட்ட நான் ஒண்ணும் பழம் விடலை. சும்மா லுலுவாய்க்குத்தான் பேசிட்டு இருந்தேன்” என்று வனிதா குழுவிற்கு தன் நட்பின் புனிதத்தை நிரூபிப்பதற்குள் அபிராமிக்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது.

**

‘மாட்டிக்கிட்டியே மன்னாரு’ என்பது அடுத்த டாஸ்க். தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன்று நபர்களையும் ஒரு பெல்ட்டினால் இணைத்து விடுவார்களாம். மூவரும் ஒன்றாகவே சுற்ற வேண்டும். இறுதி வரை எவர் தாக்குப் பிடிக்கறாரோ.. அவரே தலைவர்.

“ஒருவரையொருவர் கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் பிக்பாஸின் அடிப்படை” என்று முந்தைய கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன். அது பிக்பாஸின் காதில் விழுந்து விட்டது போல. அதை காட்சியாகவே வைத்து விட்டார். சாண்டி, தர்ஷன், அபிராமி ஆகிய மூவரும் ஒட்டவைக்கப்பட்ட ‘உடன்பிறப்புகளாக’ சுற்றிக் கொண்டிருந்தார்கள். ‘மாட்டி விட்டுட்டீங்களே.. மம்மி” என்று ஜாலியாக பாத்திமாவை கூப்பிட்டுக் கொண்டிருந்தார் சாண்டி. அந்த நேரத்திலும் ‘நன்றிம்மா” என்று கூறும் சமர்த்துப் பிள்ளையாக இருந்தார் தர்ஷன்.


**

மீரா லாஸ்லியாவை இழுத்து வைத்து வம்பு செய்து கொண்டிருந்தார். தனக்கு எதிராக ஒருவர் வாக்களிக்கிறார் என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஒன்று அதை அமைதியாக கடந்து விடலாம். அல்லது சம்பந்தப்பட்டவரின்  நன்மதிப்பைப் பிறகு பெற முயலாம். அல்லது எதனால் அப்படி ஆயிற்று என்று நட்பாக விசாரித்து அறியலாம். ஆனால் மீரா செய்வது அப்படி அல்ல. வாக்களித்தவரை கோபித்துக் கொள்கிறார். இதையேதான் இப்போது லாஸ்லியாவிடம் செய்து கொண்டிருந்தார். ‘பிரண்டு மாதிரி இருந்தே.. எனக்கு எதிரா வாக்களிச்சிட்டியே?”

“எனக்கு எல்லோரும் ப்ரண்ட்ஸ்தான்” என்று விலாங்குமீனாக நழுவினார் லாஸ்லியா. இந்த விஷயத்தில் அம்மணி பயங்கர சமர்த்து. என்றாலும் மீரா இம்சித்துக் கொண்டே இருந்ததால், வேறு வழியின்றி காரணத்தை மெல்ல கசிய விட்டார் லாஸ்லியா. “நீங்க தனியா இருந்தப்ப.. மதுமிதாதான் வந்து பேசினாங்க.. இப்ப நீங்க வனிதா டீமிற்கு போயிட்டதால அவங்களைப் பத்தி ஏன் நீங்க தப்பா பேசணும்?” என்று சரியான காரணத்தைச் சொல்ல மீராவால் அதற்கு பதிலளிக்க முடியாமல் .. சரி.. விடு.. விடு..’ என்பது போல் நழுவினார். இவர்களின் உரையாடலை சங்கிலி குழு ஜாலியாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.

மீராவிடம் உள்ள இன்னொரு கெட்ட பழக்கம். ஒரு உரையாடலை தீவிரமாக ஆரம்பித்து விட்டு பிறகு பாதியிலேயே கோபத்துடன் விலகிச் செல்வது. இது எதிரே பேசிக் கொண்டிருப்பவருக்கு கொலைவெறியை ஏற்படுத்தும் விஷயம். சும்மா இருந்தவனை சொறிந்து விட்ட மாதிரி…

“இரவு விளக்குகள் அணைந்ததும் ஷெரீன் உள்ளிட்டவர்கள் படுக்கையறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தூங்க இடைஞ்சலாக இருக்கிறது” என்கிற நியாயமான காரணத்தை ‘வருங்கால தலைவர்களிடம்’ புகாராக சொல்லிக் கொண்டிருந்தார் மதுமிதா. இவரின் உடல்மொழியை தூரத்தில் இருந்தே மோப்பம் பிடித்து விட்ட வனிதா, சாப்பிடுவதைக் கூட விட்டு விட்டு உளவு பார்க்க வந்து விட்டார். ‘அப்பேட்டாக’ இருக்கணுமாம். பெரிய ஜெனரல் நாலெட்ஜ் விஷயம்.

‘யாருக்கும் தொந்தரவா இருக்க வேணாம் நாம வெளில போய்  பேசலாம்’ என்று பிறிதொரு சந்தர்ப்பத்தில் அபிராமி சொன்ன போதும் “பெட்ரூம்ல பேசக்கூடாது’ன்னு ரூல்ஸ்லாம் இல்லை” என்று வழக்கம் போல் ஆடினார் வனிதா. ஒருவரின் உறக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பது அடிப்படையான நாகரிகம். இதற்கெல்லாம்மா ரூல் போடுவார்கள்? கடவுளே! (முதல் சீஸனில் காயத்ரி குழு, ஓவியாவை தூங்க விடாமல் செய்த சம்பவம்தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் மதுமிதா அந்தளவிற்கெல்லாம் ஒர்த் இல்லை. ஒரேயொரு சூரியன்தான் இருக்க முடியும்).

**

பிணைத்து வைக்கப்பட்டிருந்த உடன்பிறப்புகள் தாமாக முன்வந்து விலகினால்தான் தலைவரை முடிவு செய்ய முடியும் என்கிற சூழல். பிக்பாஸூம் இதை வலியுறுத்தினார். எனவே முதலில் சாண்டியும் பிறகு தர்ஷனும் விட்டுக் கொடுத்தார்கள். எனவே அபிராமி இந்த வார தலைவரானார். “சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ” என்கிற அம்மாவாசை கெத்து அவர் முகத்தில் தெரிவதை ஏற்கெனவே எழுதியிருந்தேன். அது உண்மையாகி விட்டது.

“இங்க சில பேர் அபிராமிக்கு எதிராக இருக்காங்க. அபிராமிக்கு தன்னை ப்ரூவ் செய்ய ஒரு வாய்ப்பு தரணும்னு தோணுச்சு” என்று தான் விட்டுக் கொடுத்த காரணத்தைச் சொன்னார் தர்ஷன். “யாரு.. எதிரா இருக்காங்க?” என்று சாக்ஷி உள்ளிட்டவர்கள் ஜெர்க் ஆனார்கள்.

ஆக..புதிய தலைவர் அபிராமி…. “இப்பவே எனக்கு கண்ணைக் கட்டுது” என்று எதற்கோ சலித்துக் கொண்டிருந்தார் சாக்ஷி.

தலைவர் என்கிற கெத்துடன் டீம் பிரிக்க அமர்ந்தார் அபிராமி. ஆனால் வழக்கம் போல் அந்த இடத்தை தானே ஆக்ரமித்துக் கொண்டார் வனிதா. எனவே கடந்த வார மோகனைப் போலவே அபிராமியும் டொங்கலான தலைவராகத்தான் இருக்கப் போகிறார் என்பது முதலிலேயே தெரிந்து விட்டது.

சாக்ஷியும் கவினும் அமர்ந்து வழக்கம் போல் கடலை போட்டுக் கொண்டிருந்தார்கள். “நீ ஏன் இப்பல்லாம் என் கிட்ட சரியா பேசமாட்டேன்ற.. லாஸ்லியா கிட்ட போய்ப் பேசறே?” என்று தன் பொஸஸிவ்னஸ்ஸை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் சாக்ஷி. “ஏய்.. ஏய்.. நான் உன் கிட்ட சொல்லிட்டுத்தானே பாத்ரூமிற்கே போறேன்” என்று நடிகர் கார்த்திக் மாதிரி குழறிக் கொண்டிருந்தார் கவின். ‘லவ்வும் கிடையாது.. ஒரு மண்ணும் கிடையாது. மாமா பொண்ணுங்க கூட விளையாடற மாதிரிதான் இருக்கேன்” என்று கவின் பொதுவில் சொல்லி விட்ட போதும் ஏன் இந்தப் பொண்ணுங்க லூசுகளாக இருக்குதுங்க?!

அபிராமியும் மதுமிதாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். தனது கலாசார காவலர் பதவியை மறுபடியும் அணிந்து கொண்டார் மதுமிதா. “மத்த பொண்ணுங்க எப்படி வேணா இருக்கட்டும். ஆனா தமிழ்ப் பொண்ணுங்க அப்படி இருக்கக்கூடாது. அந்த ஆடியன்ஸ்தான் பார்க்கிறாங்க.. மீரா கிட்ட கூட சொல்லிட்டு இருக்கேன். இப்படி உக்காராதே..ன்னு.. அவ கேட்க மாட்டேன்றா”

கட்டுப்பெட்டியான, பழமைவாத, நடுத்தரவர்க்க சூழலில் வளர்ந்திருப்பதால் மதுமிதாவிற்கு இப்படித் தோன்றுவது இயல்பே. ஆனால் தன் எதிர்பார்ப்புகளை பிறரிடம் திணிக்க முயல்வது அநாகரிகம். இத்தனைக்கும் அவர் சினிமாத்துறையில் இது போல் பலவற்றைப் பார்த்திருப்பார். இதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று விட்டு விட வேண்டியதுதான். ‘தமிழ்ப்பொண்ணு’ என்று ஏற்கெனவே ஆரம்பித்ததால்தான் இத்தனை பிரச்சினை உண்டாயிற்று. எனில் ஏன் அதை மறுபடி ஏழரையைக் கூட்ட வேண்டும்?

**

நாமினேஷன் படலம் ஆரம்பமாயிற்று. கடந்த வாரங்களில் ‘தலைவர்’ என்கிற ஹோதாவில் தப்பித்த வனிதா இம்முறை செமயாக மாட்டிக் கொண்டார். ‘வனிதா.. வனிதா..’ என்று அவருக்கு எதிரான வாக்குகள் வந்துக் கொண்டேயிருக்க மனம் ஆனந்தமாக இருந்தது. ஆனால் அவர் இல்லையென்றால் இந்த வீட்டில் எந்தக் கலகமும் நடக்காது. நிகழ்ச்சி சலித்து விடும் ஆபத்து இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். எனவே பார்த்து வாக்களியுங்கள் மக்கழே.

ஆக.. மதுமிதா, மோகன் (மாட்டினியா தலைவா!), சரவணன், வனிதா, மீரா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் வந்தார்கள். மீராவும் அதிக எண்ணிக்கையிலான எதிர் வாக்குகளைப் பெற்றிருந்தார். மதுமிதாவைத் தேர்ந்தெடுத்த வனிதா, அதற்கான காரணமாக “ரொம்பத் திமிரா இருக்கா” என்று சொன்ன போது எனக்கு கண் கலங்கியது. தன்னுடைய புகழை இன்னொருவருக்கு விட்டுத் தருவதென்பது பெரிய தியாகம்.

தலைவராகி விட்டதால் அனைவரையும் அனுசரித்துப் போக வேண்டிய சூழலில் இருக்கிறார் அபிராமி. ஆனால் அதற்கான புத்திசாலித்தனமோ, சமயோசிதமோ அவரிடம் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்படுவது வேறு அவரின் பலவீனம்.

“மதுமிதா கிட்ட என்ன பேசிட்டு இருந்தே?” என்று வனிதா டீம் விசாரணை செய்ய ஆரம்பிக்க, அந்தக் கலாசார மேட்டரை மெல்ல ஆரம்பித்தார் அபிராமி. அவர் துவங்கியதுதான் தாமதம்.. “என்னாது.. கதை கேளேன்” என்று சாமியாட ஆரம்பித்து விட்டார் வனிதா. தன்னை பேசவே விடாமல் வனிதாவே ஆடியதால் ஏற்பட்ட எரிச்சலில் ‘ஏன் கத்தறீங்க.. ஃபிஷ் மார்க்கெட் மாதிரி இருக்கு” என்று அபிராமி ஒரு வார்த்தையை விட்டு விட வனிதா அதை பலமாகப் பற்றிக் கொண்டார்.

“ஏய்.. யாரைப் பார்த்து ஃபிஷ் மார்க்கெட்-ன்ற..” என்று அவர் கத்திக் கொண்டிருந்தது மீன் சந்தையை விடவும் மோசமானதாக இருந்தது. உடனே பம்மிய அபிராமி “அப்படிச் சொன்னதுக்கு சாரி’ என்று சொல்லி விட்டு விலகி விட்டார். சாண்டியிடம் இது குறித்தான நியாயத்தை வனிதா ஒப்புக்கு கேட்க ‘அவங்களை நீங்க முழுசா பேச விட்ருக்கணம்” என்று பதில் வர, தனக்கு ஆதரவான குரல் வராததால் ‘போடா’ என்பது விலக்கி விட்டார் வனிதா. தர்ஷனும் அபிராமியின் சார்பாக பேச வர “போடா… போடா.. வீட்ல பெரியவங்க இருந்தா வரச் சொல்லு” என்று அவரையும் தலையில் தட்டி அனுப்பி வைத்து விட்டார்.

“சாட்சிக்காரன் காலில் விழுவதை விடவும் சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ என்றொரு பழமொழி இருக்கிறது. அதன் படி ‘அபிராமி சொல்லாட்டா.. என்ன.. மதுமிதாவிடமே கேட்டுக் கொள்கிறேன்” என்று எதிர்டீம் ஆசாமியிடமே தன் விசாரணையை மேற்கொண்டார் வனிதா. ‘தான் அபிராமி குறித்து மட்டுமே அப்படிச் சொன்னதாகவும் மற்றவர்களை குறித்து அல்ல என்றும் மதுமிதா விளக்கம் அளித்தார். ‘என்னை லோ –கிளாஸ் –ன்னு சொன்னாங்க.. இல்ல’ என்று அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வனிதாவை குண்டூசியால் மதுமிதா குத்தியது சிறப்பான சம்பவம்.

“பார்த்தியா.. மதுமிதா அப்படிச் சொல்லலையாம்..” என்று அபிராமியிடம் வந்து மறுபடியும் குதித்துக் கொண்டிருந்தார் வனிதா. அபிராமியால் தலையைப் பிய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. ஒருபக்கம் தன் தலைவர் பதவியின் கெத்தையும் விட்டுவிடக்கூடாது. இன்னொரு பக்கம் வனிதா டீமின் பாதுகாப்பையும் இழந்து விடக்கூடாது. (முதல்வர் பதவின்னா என்னன்னு தெரியுமா.. எத்தனை பிரச்சினை.. எத்தனை எதிர்ப்பு.. என்ன தம்பி… ஒரு நாள் இருந்து பார்க்கறியா?!)

“எனக்குப் புரியது.. எனக்காக வனிதா நின்னுருக்காங்க.. ஆனா அதுக்காக அவங்க காலைக் கழுவிக் கொண்டிருக்க முடியாது” என்று ஷெரீனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அபிராமி. சுயமரியாதை சற்றாவது இருப்பதின் அடையாளம் இது. “இந்த விஷயத்தை மறுபடியும் ஆரம்பிச்சதே அபிராமிதான்” என்று வனிதாவிடம் போட்டுக் கொடுத்தார் மதுமிதா.

பொதுவாக சேரன் இந்த சந்தைக்கடை விவகாரங்களில் தலையிட மாட்டார். ஆனால் அவருக்கு ரொம்பவும் போர் அடித்ததோ, என்னமோ… இன்று பஞ்சாயத்திற்குள் நுழைந்தார். அபிராமியிடமும் மதுமிதாவிடமும் அவர்களின் குறைகளை நயம்பட எடுத்துச் சொன்னார். இருவரும் ‘சரிதான்’ என்று ஒப்புக் கொண்டார்கள். அது தனக்கும் சாதகமாக இருந்ததால் மகிழ்வுடன் கேட்டுக் கொண்டிருந்தார் வனிதா.(ஃபிஷ் மார்க்கெட்'ன்றது கேவலம் கிடையாது என்று சேரன் சொன்னது வனிதாவிற்கான அம்பு).

“நீங்க என் கிட்ட சொன்னதை அவங்க கிட்ட சொல்லியிருக்கக்கூடாது” என்று மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் அபிராமி. .யெஸ்.. இதுதான் விஷயம். எந்தெந்த சூழலில் எவர் எவரிடம் எதை எதை பேச வேண்டுமோ, சொல்ல வேண்டுமோ, அதை மட்டுமே பேச வேண்டும். ஒருவரின் நட்பை வளர்த்துக் கொள்கிறேன் பேர்வழி என்று வம்புகளை இன்னமும் பெரிதாக ஊதி வளர்க்கக்கூடாது. அது சமயத்தில் நம் மீதே பூமராங் போல் திரும்பி வந்து பாயும்.

வனிதாவின் குழுவில் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, மதுமிதாவிடம் பேசிய விஷயத்தை மெல்ல ஆரம்பித்தார் அபிராமி. அவர்களும் இதை அறிய ஆர்வமாக இருந்தார்கள். அதுதான் அபிராமிக்கு பிரச்சினையாக வந்து முடிந்தது. சமயோசிதமாக இதைத் தவிர்த்திருந்தால் ‘ஃபிஷ் மார்க்கெட்’ சண்டையையும் தவிர்த்திருக்கலாம்.

மதுமிதா உள்ளிட்டவர்களுடன் அபிராமி அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த .. ஷெரீன், சாக்ஷி, வனிதா ஆகியோர் பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருந்தார்கள். "துரோகி' என்பது போல விதம் விதமாக அபிராமியைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

“நீ எதுக்கு இந்த வீட்டுக்கு வந்திருக்கே.. அதைப் பத்தி மட்டும் யோசி” என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த அபிராமியிடம் பிறகு தனிமையில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் லாஸ்லியா. இந்த விலாங்கு மீன் இறுதி வரைக்கும் நிச்சயம் வந்து விடும்.

“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற பாடல் இப்போது அபிராமிக்குத்தான் பொருந்தும் போல் இருக்கிறது.அவர் வனிதா குழுவிடம் ஜாக்கிரதையாக பழக வேண்டும் அல்லது விலகி நிற்க வேண்டும்.

ஆனால் ஒன்று, ஆண்களை மட்டும் வைத்து ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், ஒரே சீஸனில் Endemol நிறுவனம் திவாலாகி விடும் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு பெண்கள் மட்டுமே அனைத்து கலகங்களையும் ரணகளமாக நடத்துகிறார்கள். பாவம்,  ஆண்கள் டம்மிகளாக உலவுகிறார்கள்.





suresh kannan

Monday, July 08, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முதல் வெளியேற்றம்”


கமல் உள்ளே வந்ததும் நேரத்தை வீணாக்காமல் 13-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சியை காண்பித்தார்கள்.

‘வீட்டை விட்டு யார் வெளியேற வேண்டும்’ என்கிற விளையாட்டில் மதுமிதாவை விட்டு விட்டு மீராவைத் தேர்ந்தெடுத்தற்காக அபிராமியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது வனிதா அண்ட் கோ. “உனக்கு நட்புன்னா என்னன்னு தெரியுமா?” என்று அவரை சரமாரியாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் வனிதா. இதற்கு ஜால்ரா போட அவரைச் சுற்றி ஷெரீன் உள்ளிட்ட வானரங்கள்.

உண்மையில் அபிராமி மதுமிதாவைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார். ஆனால் “நான் உனக்கு மென்ட்டரா இருந்து நெறய பண்ணியிருக்கேன். ஞாபகம் இருக்கா?” என்றெல்லாம் மீரா இம்சை செய்ததற்குப் பிறகு அவரின் டார்கெட் மாறியிருக்கும் என்று தோன்றுகிறது.

“உனக்காகத்தானே.. இந்தப் பிரச்சினையில் உன்னோடு நின்றோம். நீயே மாறி செயல்படலாமா?” என்று வனிதா அண்ட் கோ கோபத்தோடு கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் நட்பு என்பது ஜனநாயகத்தன்மையோடும் இருக்க வேண்டும். தாம் விரும்பியதைத்தான் தன் நண்பர்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அப்படி ஒருவேளை செய்து விட்டால் அதற்காக விரோதம் பாராட்டக்கூடாது. “இப்படி பண்ணிட்டியே?’ என் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு நட்பைத் தொடரலாம். அல்லது அதற்கான காரணங்களை விசாரித்து நண்பரின் நோக்கில் நியாயமான காரணங்கள் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.

வீட்டை விட்டு வெளியேறும் விளையாட்டு என்பது திடீர் என அறிவிக்கப்பட்டதொன்று. எனவே அந்தச் சமயத்தில் ‘சரி’ என்று தோன்றியதை அபிராமி செயல்படுத்தியிருப்பார். இந்த உணர்வை இதர நண்பர்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் நல்ல நட்பிற்கான அடையாளம்.

அபிராமியுடன் நிகழ்ந்த காரசாரமான உரையாடலின் இடையில் வனிதா அடிதத ஒரு கமெண்ட் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. “நான் யார் கூடயாவது சண்டை போட்டிருக்கனா?” (ரத்த பூமியில் போர்க்கள மனநிலையிலேயே  எப்போதும் வாழும் ஒருவர் பேசுகிற பேச்சா இது?!)

**

வனிதாவால் நிராகரிக்கப்பட்டதால் “நான் வீட்டுக்குப் போகணும்” என்று அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார் அபிராமி. சாக்ஷி வெளியேற தான் காரணமாகி விடுவோமோ என்கிற குற்றவுணர்வும் இதனுடன் இணைந்து கொண்டது. குழுவாக இருக்கும் போது அந்தத் துணிச்சலில் ராவடி செய்கிறவர்கள், தனிமைப்படுத்தப்பட்டால் பயந்து நடுங்குகிறார்கள். அபிராமி, மீரா, மதுமிதா என்றொரு வரிசை இப்படித்தான் இருக்கிறது.

பஸ் டே உள்ளிட்டு பல கலாட்டாக்களைச் செய்யும் கல்லூரி மாணவர்கள், கேங்காக இருக்கும் போது பல குறும்புகளைச் செய்வார்கள். ஆனால் அவை அத்துமீறும் போது, அவர்களில் நாலைந்து பேர்களை பிடித்து காவல்நிலையத்தில் வைத்து ‘விசாரித்தால்” .. ண்ணா.. விட்டுருங்கன்னா… இனிமே இப்படிச் செய்ய மாட்டேண்ணா…” என்று அழுது துடிப்பார்கள்.

கழிப்பறை மூலையில் கதறித் துடித்துக் கொண்டிருந்த அபிராமியை அந்தப் பக்கம் வந்த மதுமிதா சமாதானம் செய்ய முயன்றார். மக்கள் ஆதரவைப் பெற்று விட்ட நிம்மதியும் கெத்தும் அவர் முகத்தில் தெரிந்தது. என்றாலும் அவர் அபிராமிக்கு வழங்க முயன்றது நல்ல உபதேசம். “நீ எதுக்காக இங்க வந்தே? அதைச் செஞ்சு முடிக்காம ஏன் போறேன்னு அடம் பிடிக்கறே?”

ஆனால் எதிர் டீம் இவர்களைப் பார்த்து விட்டதால் பதறிய அபிராமி “சரி.. நான் இப்ப என் பிரண்ட்ஸ் கிட்ட போகணும்” என்று பதறி ஓடி அங்கும் சென்று “சும்மா பார்த்தோம்.. பேசிட்டு இருந்தோம்” என்று தானே முன் வந்து விளக்கம் அளித்தார். இப்படியெல்லாம் பயந்து கொண்டுதான் நட்பை பேண வேண்டுமென்றால் அதற்குப் பதில் தனிமையில் கம்பீரமாக இருப்பதுவே சிறப்பு. நம் சுதந்திரத்தை ஒரு நல்ல நட்பு கட்டுப்படுத்தக்கூடாது.

**

அகம் டிவி வழியாக கமல் வந்ததும் எவிக்ஷன் கார்டை வைத்துக் கொண்டு சஸ்பென்ஸை கூட்ட ஆரம்பித்தார். (ஆனால் இந்த முடிவு சமூகவலைத்தளங்களில் பரவலாக வெளியாகி விட்ட பிறகு அத்தனை சஸ்பென்ஸாக இல்லை. நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைவதால் பிக்பாஸ் டீம் இதற்கு ஏதாவது செய்யலாம்).

‘மக்களில் ஒருவர்  ஒரு போட்டியாளருடன் பேசலாம்’ என்பதின் மூலம் ஒரு பெண்மணி கவினுடன் பேசினார். “நீங்கள் யாரைத்தான் உண்மையா லவ் பண்றீங்க?” என்று அவர் கேட்டவுடன் பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல் வந்தது. “ஏங்க.. இங்க எவ்ள முக்கியமான விஷயங்கள் போயிட்டு இருக்கு.. இப்ப இதுதான் பிரச்சினையா?” என்று கேட்டவரையே கலாய்க்க முயன்றார் கவின். “நான் யாரையும் லவ் பண்ணலை. மாமா பொண்ணுங்க கூட விளையாடற மாதிரிதான் சும்மா ஜாலிக்காக விளையாடறேன்” என்றதும் சாக்ஷியின் சற்று திகைப்பான முகம் க்ளோசப்பில் காட்டப்பட்டது. லாஸ்லியாவின் முகத்தில் ‘அப்பாடா!’ என்கிற நிம்மதி தென்பட்டது.

ஏதோவொரு திரைப்படத்தில், சந்தானத்தின் நான்கு தங்கைகளிடம் ஊரிலிருந்து வந்திருக்கும் தூரத்து உறவினரான கார்த்தி எப்போதும் கடலை போட்டுக் கொண்டிருப்பார். அதைக் கண்டு பல்வேறு விதங்களில் டென்ஷன் ஆவார் சந்தானம். நம்மையும் சந்தானத்தின் நிலைமைக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார் கவின். “ஒரு கேள்விதானா?” என்று கவின் கேட்டதும், “பார்த்தீங்களா.. போன் பேச வந்த பொண்ணு கிட்ட கூட கொக்கி போடறீங்களே?” என்று கமல் ஜாலியாக கலாய்த்தது சிறப்பு.

கவின் காப்பாற்றப்பட்ட செய்தியைத் தொடர்ந்து பிக்பாஸ் லோகோவை இரண்டாகப் பிரித்து அதைப் பொருத்திப் பார்க்கும் விநோதமான விளையாட்டின் மூலம் சஸ்பென்ஸை நீட்டிக்க முயன்றார் கமல். இது அத்தனை எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நேர விரயமும் கூட. மீரா மற்றும் சரவணனின் போர்டுகள் பொருந்திப் போனதும் மகிழ்ச்சியடைந்த மீரா, சரவணணை கட்டிப்பிடிக்க முயல.. “ஹே.. இரும்மா..” என்று பதறிப் போனார் சித்தப்பூ.

“வீட்ல மூலைக்கு மூலை பேசலை. மூளையில்லாம பேசறாங்க” என்று மதுமிதா அடித்த துடுக்குத்தனமான கமெண்ட் அபஸ்வரம். நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறும் மேடம்!

இறுதியில், ‘வெளியேறப் போகிறவர் பாத்திமா’ என்கிற விஷயம் உறுதியானது. அதை மிக இயல்பாக எடுத்துக் கொண்டார் அவர். வீட்டில் முதலில் நுழைந்தவர் முதலில் வெளியேறுவது ஒரு தற்செயல் ஒற்றுமை. முந்தைய சீஸன்களில் ஒருவர் வெளியேறுகிறார் என்றால் வீடே கூடி ஒப்பாரி வைக்கும். ஆனால் இந்த முறை அது நிகழவில்லை. மகனாக கருதப்பட்ட தர்ஷன் கூட அடக்கி வாசித்தார். (நிற்க, இது வலுக்கட்டாயமான டிராமாவாக நிகழ வேண்டும் என்று நான் கூறவில்லை.) பிறகு மோகன் வைத்யா மட்டுமே குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

அபிராமி டீமிற்கு பாத்திமா வெளியேறுவது கூட அத்தனை கவலையில்லை. மாறாக சாக்ஷி காப்பாற்றப்பட்டது அத்தனை நிம்மதியை அளித்தது. தன் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட்டார் அபிராமி. “இனிமே நாம் புது பிரண்ட்ஸ்” என்று நட்பைப் புதுப்பித்துக் கொண்டார் சாக்ஷி. பஸ் பாஸ் ரெனியூவல் மாதிரி நட்பும் ஆகி விட்டது.

**

சிரித்துக் கொண்டே வெளியே வந்த பாத்திமா கமலுடன் உரையாடினார். அவரின் குடும்பம் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘வீட்டில் எப்படி இருப்பாரோ.. அப்படியேதான் இங்கும் இருந்தார்” என்றார்கள் அவர்கள்.

வீட்டின் நிலைமையைப் பற்றி கமல் விசாரிக்கும் போது “சில பேர் டாமினேட் செய்யறாங்க” என்று தயங்கியபடி பாத்திமா விவரிக்க “அதான் வெளியே வந்துட்டீங்களே.. தைரியமா பெயரைச் சொல்லுங்க” என்று கமல் உற்சாகம் அளிக்க ‘வனிதா’வின் பெயரைச் சொன்னார் பாத்திமா. பார்வையாளர்களும் தங்களின் கைத்தட்டலின் மூலம் இதை வழிமொழிந்தார்கள்.

இந்தத் தயக்கம் கூட பாத்திமாவின் வெளியேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். நிகழ்ச்சிக்குத் தேவையான ‘content’ஐ அவர் தர முடியாததும் இன்னொரு காரணமாக இருக்கும். ‘Controversial’-ஆ நடந்துக்கறவங்கதான் இங்க நீடிக்க முடியும்” என்று வனிதா கூறியதை நினைவுகூரலாம்.

“சேரன், சரவணன், சாண்டி போன்றோர் நடுநிலைமையாக இருக்க முயல்கிறார்கள். ஆனால் அபிராமி, ஷெரீன், ரேஷ்மா, சாக்ஷி உள்ளிட்டவர்கள் அதிகாரத்திற்குப் பணிந்து விடக்கூடியவர்களாக இருக்கிறார்கள்” என்று பாத்திமா அளித்த விளக்கம் சரியானது.

வீட்டின் ஆண்களைப் பற்றிய கருத்துக்களையும் சுருக்கமாகச் சொன்னார் பாத்திமா.  தரமான படங்களைத் தந்த இயக்குநர் என்பதால் தன் மரியாதையை இழந்து விடக்கூடாது என்கிற காரணத்திற்காக ஒதுங்கி விடுகிறார் சேரன் என்று அவர் குறிப்பிட்டது துல்லியமான அவதானிப்பாக இருக்கலாம். “நல்லா அனலைஸ் பண்றீங்க” என்று கமலே பாத்திமாவைப் பாராட்டினார். மனிதர்களை இத்தனை சரியாக வரையறுக்கும் பாத்திமா, சற்று துணிச்சலாக வீட்டில் இயங்கியிருந்தால் வெளியேற்றத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் தங்களின் ஆதாரமான இயல்பிலிருந்து நிறையவும் சிலரால் மாற முடியாது; கீழே இறங்கி வர முடியாது. ஒருவேளை பாத்திமா சம்பந்தப்பட்ட பகுதிகள் எடிட்டிங்கில் போய் விட்டதா என்றும் தெரியவில்லை.

வீட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக மூவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற ஒரு ‘பவர்’ பாத்திமாவிற்குத் தரப்பட்டது. இதற்காக அவர் தர்ஷனைத் தேர்ந்தெடுத்தது எதிர்பார்த்ததே. இன்ன பிறராக சாண்டி மற்றும் அபிராமியைத் தேர்ந்தெடுத்தார்.

இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும் அவர் சேரனையும் ஒரு தேர்வாக செய்திருக்கலாம் என்று தோன்றிற்று. வீட்டைச் சுத்தம் செய்வது முதல் பிறரது பிரச்சினைகளுக்கு ஆலோசனையும் சமாதானமும் செய்வது வரை பல விஷயங்களை சேரன் சரியாக செய்து வருகிறார். தலைவர் பதவி கிடைத்தால் அந்த அதிகாரம் தந்த உற்சாகத்தோடு இன்னமும் சிறப்பாகச் செயல்படுவார் என்று தோன்றுகிறது.

“இந்த பதினைந்து பேரைத் தாண்டி பெரிய உலகம் வெளியே இருக்கு. தைரியமா விளையாடுங்க. யாராலயும் influence ஆயிடாதீங்க” என்றெல்லாம் பாத்திமா தந்த உபதேசம் அவசியமானது. 

**


கமல் விடைபெற்றவுடன் ‘அப்பாடா!’ நிகழ்ச்சி முடிவடைந்தது போல என்று பார்த்தால் வீட்டின் பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தன. ‘பாட்டில்’விவகாரத்தைப் பற்றி கவின் சாக்ஷியுடன் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்.

புகையறைக்குள் புகுந்து கொண்டு மீரா அழுது கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நபராக சில நண்பர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்தது குறித்த வருத்தம் அவருக்கு.  “நீங்க ரெண்டு பேரும் அவ மூஞ்சுல பூரான் விட்டுட்டீங்கள்லே..அதான அழுவறா” என்று தர்ஷனையும் முகினையும் கலாய்த்துக் கொண்டிருந்தார் சாண்டி.

“வனிதாக்கா கோபப்பட்டாலும் நட்பிற்காக ஸ்ட்ராங்கா நிக்கறவங்க” என்று வனிதாவிற்கு சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் ஷெரீன். “சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ” என்று அடுத்த தலைவருக்கான ‘அம்மாவாசை’ கெத்து அபிராமியின் முகத்தில் வந்து விட்டது. வீட்டின் தலைமை மாற்றம் பற்றி ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.

“மீரா நடுவுல புகுந்து என்னை வெறுப்பேத்தியதால்தான் அவங்களைத் தேர்ந்தெடுத்தேன். இது அவங்களுக்குப் புரியமாட்டேங்குது” என்று சேரனிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் அபிராமி. “வனிதாவோட இப்பத்தி டார்கெட் மதுமிதாதான். இது முடிஞ்சதும் அடுத்தது மீராவை எய்ம் பண்ணுவாங்க. நீ சாக்ஷி கிட்ட பேசு” என்று சரியான திசையில் ஆலோசனை தந்து கொண்டிருந்தார் சேரன்.

இந்த விளையாட்டின் ஃபார்மட்டை சரியாகப் புரிந்து கொண்டவர்களால் இத்தனை எளிதில் சட்சட்டென்று உணர்ச்சிவசப்பட முடியாது. வந்த இரண்டு நாட்களிலேயே ‘தேவா – சூர்யா’ நட்பெல்லாம் ஏற்பட முடியாது என்கிற நிதர்சனம் புரியும். அடுத்த வாரத்தில் கூட்டணியில் இன்னமும் சில மாற்றங்கள் வரும் என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

suresh kannan

Sunday, July 07, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”



கடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒருவர் எல்.கே.ஜி. பையன் ஆடை அணிந்த மாதிரி கந்தர்கோலமான ஒரு டிரஸ். (ஆடை வடிவமைப்பாளரை மாத்துங்க ஏட்டய்யா..)

நாமினேஷன்களுக்காக பத்து கோடி வாக்குகள் வந்திருக்கிறதாம். (ஏம்ப்பே.. நீ பார்த்தே?!). உண்மையா அல்லது இவர்களாக அடித்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாகவும் இருக்க வாயப்பிருக்கிறது. தமிழக ஜனங்களின் கல்யாண குணங்கள் அப்படி.

நம் தலையெழுத்தை தீர்மானிக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளித்தாலும், தேர்தல் கமிஷன் பாத்ரூமிற்குள்ளேயே எட்டிப் பார்த்து அடிக்கடி நினைவுப்படுத்தினாலும்  கூட வாக்களிக்க வராமல் ரிமோட்டை மாற்றி மாற்றி ‘ஆதித்யா’ சானல் காமெடியை ஆயிரத்திற்கும் மேலான முறை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பிக்பாஸ் போன்ற உருப்படியில்லாத நாமினேஷன்களுக்கு பத்து கோடி வாக்குகள். . வெளங்கிடும் மக்கழே.

**

“வாங்க.. வெள்ளிக்கிழமை அன்னிக்கு என்ன கண்றாவில்லாம் நடந்ததுன்னு பார்ப்போம்” என்று கமல் பிரியமாக நம்மை அழைத்தார்.

‘நவரசங்களை’ பாத்திமா சொல்லித் தர வேண்டுமாம். ஏற்கெனவே அவர் சும்மாவே ஆடுவார்.. இதில் காலில் சலங்கையை வேறு கட்டி விட்டார்கள். எக்ஸ்பிரஷனே வராத விஜய் ஆண்ட்டனியை சிவாஜி கணேசனிடம் நடிப்பு டியூஷனுக்கு தரதரவென்று இழுத்துச் சென்ற கதையாக இருந்தது.

சாண்டியும் பாத்திமாவும் ‘காதல்’ தூது விட்டுக் கொண்டிருந்த போது ‘வட போச்சே’ என்கிற ஏக்க எக்ஸ்பிரஷனைத் தந்தார் மோகன் வைத்யா. இவரும் மதுமிதாவும் பரிமாறிக் கொண்ட நவரசங்கள் “நாங்க எப்பவும் இப்படித்தான். ஒருத்தரையொருவர் கேவலமா திட்டிப்போம். ஆனா க்ளோஸ் பிரெண்ட்ஸ்” என்பது போல் மொக்கையாக இருந்தது.

இதுவரை வனிதா டீமால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மீரா, அவர்களின் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் போலிருக்கிறது. நல்லதுதான். அதற்காக இருக்கிற மேடையிலேயே எதிர்க்கட்சிக்குத் தாவுகிற வடிவேலு போல, குழுவில் இணைந்தவுடனேயே மதுமிதாவைப் பற்றி கோள் சொல்வது அயோக்கியத்தனம். ‘பூனை செய்யறது எல்லாம் தப்பாம். ஆனா அடிச்சா பாவமாம்’ என்கிற கேட்டகிரியில் இருக்கிறார் மீரா. இவர் புடவை கட்டி விடக்கேட்டு மதுமிதா அதைச் செய்யாமல் டபாய்த்து விட்டாராம். இதை நாடகத்தனமாக வனிதாவிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘அவ நேரோ மைண்ட்’ என்று பாத்திமா, மீராவைப் பற்றி ஏதோ புறம்பேசி விட்டாராம். கோள்மூட்டி குளிர்காய்வதில் தங்கமெடல் வாங்கிய வனிதா, இதை மீராவிடம் கனகச்சிதமாக பற்ற வைத்து விட, “இது நியாயமா.. தர்மமமா.. முறையா?” என்று பாத்திமாவிடம் சென்று நீதி கேட்டுக் கொண்டிருந்தார் மீரா. “என் வாய்ல இருந்து பொய்யே வராது” என்று கையை அடித்து அடித்து இவர் சொல்லிய நாடகத்தனம் பயங்கர காமெடியாக இருந்தது. “கடலைக்காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள.. காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல’ என்று வைரமுத்து ஏற்கெனவே எழுதி வைத்து விட்டார். ‘நேரோ … கூட அல்ல மீராவிற்கு  மைண்ட்டே முதலில் இருக்கிறதா என்று சமயங்களில் சந்தேகம் வருகிறது.

**

பள்ளிக்கூடச் சிறுவன் டிரஸ்ஸில் அகம் டிவிக்குள் வந்தார் கமல். கவினின் multitasking-ஐ வஞ்சப்புகழ்ச்சியில் புகழ்ந்தவர், பிறகு அடித்த சிக்ஸர்கள் அருமையான ‘கிரேசி’த்தனம். ‘தூர தர்ஷன்’ “ஈர sandy’ ‘மீனாட்சி ஆட்சியில் ‘நட’ராஜர்களாக மாறி விடும் ஆண்கள் என்று அவர் அடித்த கமெண்ட்டுகள் ஒவ்வொன்றும் அருமையானவை. இவையெல்லாம் script-ல் எழுதித் தருகிறார்களா என்ன என்று தெரியவில்லை. என்றாலும் இவற்றை சமயோசிதமாக உருவாக்கக்கூடிய திறமை கமலுக்கு உண்டு என்பதை பல சமயங்களில் நிரூபித்திருக்கிறார்.

வீட்டின் ‘பெண்கள் ஆட்சி’யின் நிலைமையைப் பற்றி ‘அவங்க அவங்க நியாயத்தை அவங்க அவங்க பேசிக்கறாங்க’ என்று சேரன் சொன்னது ‘நச்’.

முடியாமல் போன மதுமிதாவின் ‘சுயமுன்னேற்ற’ பேச்சை இப்போது முடிக்கச் சொன்னார் கமல். நான் அப்போதைய கட்டுரையிலேயே குறிப்பிட்டதுதான். சினிமாவில் இருப்பதாகச் சொல்லப்படும் தவறான விஷயங்களுக்கு மத்தியில், நான் திறமையின் மூலமாக முன்னேறிய பெண்’ என்பதை நீட்டி முழக்காமல், தன்னை முன்நிறுத்திக் கொள்ளாமல் மதுமிதா அப்போதே  சொல்லியிருக்கலாம். மதுமிதா பேசிக் கொண்டிருக்கும்  போது வனிதா தந்த எக்ஸ்பிரஷன்கள் வழக்கம் போல ‘உவ்வேக்’ ரகம். (மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல விருந்து).

முகினின் மீது ‘விசாரணைக் கமிஷனை’ துவங்கினார் கமல். வாழைப்பழத்தில் ஊசியேற்றும் கமலின் திறமை சற்று வெளிப்பட்டாலும் முந்தைய சுவாரசியம் இல்லை. இந்த நோக்கில் முதல் சீஸன் காயத்ரியை :ஹேர்’ விஷயத்தில் மடக்கிய அந்த எபிஸோட்டை ஒரு ‘கிளாசிக்’ என்லாம். மனிதர் அப்படி வீடு கட்டி சுற்றி வந்து விளையாடினார். அதெல்லாம் ஒரு காலம்.

முகின் ராவின் இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளே சாக்ஷி மற்றும் ஷெரீன்தான். அவர்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை.

அடுத்ததாக குடும்ப சர்ச்சைகளைத் தடுக்கத் தவறிய தலைவரின் மீது விசாரணை பாய்ந்தது. வழக்கம் போல் பூர்ணம் விஸ்வநாதன் மாடுலேஷனில் மோகன் வைத்யா தடுமாறினார். ‘பேஷ்.. பேஷ்.. தலைவர்னா… இவர்தான் தலைவர்.. ரொம்ப நன்னாயிருக்கு” என்று இவருக்கு சான்றிதழ் தந்தார் வனிதா. வனிதா செய்யும் அலப்பறைகளை மோகனால் தடுக்க முடியவில்லை என்னும் போது நல்ல தலைவராகத்தானே தெரிவார்? மற்றவர்களும் மோகனைப் புகழ்ந்த போது மதுமிதாவும் சேரனும் மட்டும் மாற்றுக்கருத்துக்களைச் சொன்னார்கள். ‘இயலாமை’ என்கிற வார்த்தையை சேரன் பயன்படுத்தியது சிறப்பு.

வீட்டின் ‘ஸ்வச் பாரத்’ டீமை மனம் திறந்து பாராட்டினார் கமல்.

**

சாண்டி பொழுதுபோக்காக முன்பு விளையாடிய ஒன்றையே இப்போது விளையாடச் செய்தார் கமல். பிக்பாஸில் இது போல் தரப்படும் டாஸ்க்குகளை வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதில் பல நுட்பங்கள் இருக்கின்றன. ‘மல்ட்டி பர்சனாலிட்டி’ அந்நியன் விக்ரம் மாதிரி, ஒருவரைப் பற்றி  சில நிமிடங்களுக்குள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மாற்றி மாற்றி பேசுவது என்பது ஒரு சவால். குறுகிய நேரத்திற்குள் சமயோசிதமாக செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் எதிர்மறைத்தனங்கள் நம் வாயினாலேயே தன்னிச்சையாக கசிந்து விடும் ஆபத்து இதில் உண்டு. ஜாக்கிரதையாக இல்லையென்றால் எளிதில் மாட்டிக் கொள்வோம்.

சம்பந்தப்பட்டவர் தன் மீது வெளிப்படும் எதிர்மறை கமெண்ட்டுக்களைக் கேட்டு அப்போதைக்கு பாவனையாக சிரித்தாலும் உள்ளுக்குள் நிச்சயம் காண்டாவார். பிறகு இது தொடர்பான சர்ச்சைகள் வெடிப்பதற்கு இது காரணமாக இருக்கும். பிக்பாஸ் டாஸ்க்குகளின் அடிப்படை பெரும்பாலும் இதுதான். ஒருவரையொருவர் கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது.

கவினைப் பற்றி லாஸ்லியா புகழ்ந்து பேச நேர்ந்த போது சாண்டியாலேயே அதைப் பொறுக்க முடியவில்லை. சில விநாடிகளிலேயே கைத்தட்டி எதிர்மறையாக பேச வைத்தார். இருப்பதிலேயே சேரன் இந்த விளையாட்டை திறமையாகச் செய்தார். என்ன இருந்தாலும் இயக்குநர் இல்லையா?

நேர்மறையாக பேச வேண்டிய சமயத்திலும் எதிர்மறையாகப் பேசி தன் பிரத்யேக குணாதிசயத்தைக் காட்டினார் ‘சொர்ணாக்கா’ வனிதா. ‘சீறி வந்த பாம்பு.. புஸ்ஸூன்னு போயிடுச்சு’ என்று மோகன் வைத்யாவை சாண்டி கிண்டலடித்தது சிறப்பு.

**

‘இந்த வீட்டிலிருந்து ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்று அடுத்த யார்க்கரை வீசினார் கமல். இதுவும் ஒரு நுட்பமான விளையாட்டு. யார் மீது நமக்கு வெறுப்பிருக்கிறது என்பதை பொதுவில் சொல்ல வைத்து விடும் உத்தி.

வேகாத முந்திரிக்கொட்டை போல் துள்ளிக் குதித்து எழுந்த வனிதா, மதுமிதாவை தான் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் பிறரின் சார்பாகவும் தேர்ந்தெடுத்ததை ஏதாவது கெட்ட வார்த்தையால்தான் குறிப்பிட வேண்டும். அத்தனை எரிச்சலூட்டிய விஷயம்.

“ஐயா.. என்னை விட்ருங்கய்யா..” என்று ஏற்கெனவே பீதியில் அலறிய சரவணன், இப்போது home sick-ல் இருக்கிறார் போலிருக்கிறது. எனவே அவர் வெளியேறினால் அது அவருக்கு நல்லது என்று சிலர் அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ஒருவகையில் இது safe play. உண்மையிலேயே தாம் நினைப்பவரைப் பொதுவில் தெரிவித்து பகையை உருவாக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் உத்தி.

ஆனால் இதற்கு வனிதா வேறு நோக்கில் காண்டானார். மதுமிதாவைத்தான் பெரும்பாலோனேர் தேர்ந்தெடுத்து வெளியேற்ற வேண்டும் என்பது அவருடைய வன்மம் கலந்த எதிர்பார்ப்பு. எனவே சரவணணுக்கு எதிராக போடப்படும் தேர்வுகளை ஆட்சேபித்தபடி இருந்தார்.

‘சரவணன் நல்லவரு. அதனால வெளிய போகட்டும் –ன்னு சொல்லி டபாய்க்காதீங்க. உண்மையிலேயே யாரு வெளியே போனா ‘உங்களுக்கு’ நல்லது –ன்ற மோடில் விளையாடுங்கள்’ என்று ஆட்டத்தைக் கலைத்தார் கமல். ‘இத..இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்’ என்று வனிதா குஷியானார். எனவே அவர் எதிர்பார்ப்பின்படி மதுமிதாவிற்கு எதிராக நிறைய வாக்குகள் விழுந்தன. மீராவிற்கும் சிலர் வாக்களித்தார்கள். வனிதா டீம் இதனால் பயங்கர குஷியடைந்தது. ஆனால் அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்ததை நிச்சயம் அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

‘யார் வெளியேறக்கூடாது’ என்று மக்கள் தீர்மானத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைச் சொல்கிறேன்” என்று சிறிய சஸ்பென்ஸூடன் மதுமிதாவின் பெயரைச் சொன்னார் கமல். வீட்டில் உள்ள பலரால் தான் வெறுக்கப்படுகிறோம் என்கிற குற்றவுணர்ச்சியில் இருந்த மதுமிதா, மக்களின் ஆதரவைக் கேட்டதும் கதறிக் குமுறி பயங்கரமாக அழுதது இயல்பே.

மதுமிதாவின் அப்போதைய உடல்மொழி சற்று மிகையாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் அவருடைய நோக்கில் இருந்து சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். வீட்டில் தனக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களை “ஆண்டவனிடம் ஒப்படைத்தும்” “மற்றவர்களிடம் புலம்பியும்” ஒதுங்கிப் போனார். எனவே அதுவரை அவர் மனதில் அடக்கி வைக்கப்பட்டிருந்த மனஉளைச்சல் ‘அழுகையாக’ பீறிட்டது இயல்பு. ஆனால் இதே மதுமிதா, வனிதாவுடன் இணைந்து கொண்டு துவக்க நாட்களில் செய்த ராவடிகளையும் சற்று நினைவு கூர வேண்டும்.

நாம் எப்போதும் உறுதியான நிலைப்பாட்டுடன் நேர்மையின் பக்கம் நின்றால், எப்படியாவது நம் தலை காப்பாற்றப்படும். நாம் பின்பற்றும் தர்மம் அதற்கு எப்போதும் துணை நிற்கும். (மெசெஜ் சொல்றாராமாமாம்!)

**

மதுமிதாவிற்குப் பதிலாக மீராவைத் தேர்வு செய்ததால் அபிராமியின் மீது காண்டானார் வனிதா. ஏனெனில் அவரின் அப்போதைய டார்க்கெட் மதுமிதாதான். “நாம முன்பே பேசிக் கொண்ட படி ஏன் வாக்களிக்கவில்லை?” என்று அபிராமியை கோபித்துக் கொண்டார். தான் பேசும் போதும், கோபமடையும் போதும் யாரும் எதிர்த்துப் பேசாதீங்க” என்று பிறருக்கு உத்தரவுகளைப் போடும் வனிதா, மற்றவர்களுக்கு என்றால் ‘சுயமாகச் சிந்திக்கவே கூடாது. தான் சொல்வதையே செய்ய வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது அதிகாரத் திமிரின் அடையாளம். கருத்துரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் இவர்கள். தனக்கு வந்தால் மட்டும் ரத்தம். பிறர் என்றால் தக்காளி சட்னி.

மதுமிதா மக்களால் காப்பாற்றப்பட்டதை வனிதா குழுவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ‘ச்சீ. இந்தப் பழம் புளிக்கும்’ என்கிற கதையாக தாங்களே.. ஏதோ சமாதானம் சொல்லி தங்களைத் தேற்றிக் கொண்டார்கள். ‘அவ இருந்தாத்தான் இங்க பிரச்சினை. அதனால வெச்சிருக்காங்க’ என்பது போல் சொன்னார் ஷெரீன்.

‘யாரை வெளியேற்ற வேண்டும்’ என்கிற டாஸ்க்கில் கவினின் பெயரை மதுமிதா குறிப்பிட்ட போது பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் எழுந்தது. அப்போதே கவினுக்குள் ஏதோ அலாரம் அடித்தது. எனவே சற்று டொங்கலாக அமர்ந்திருந்தார். ஆனால் வனிதா என்கிற புத்திசாலி இந்த விஷயத்தை அப்படியே மாற்றிச் சொன்னார். “கவின் உனக்கு வெளியில பயங்கர ரெஸ்பான்ஸ்”. ஒரு அடிமுட்டாள் புத்திசாலியைப் போல பேச முயன்றால் எப்படியிருக்கும் என்று வனிதாவின் இந்த உடல்மொழியினால் அறியலாம்.

“ஏதோ தப்பு” என்று கவினும் உணர்ந்திருக்கிறார். பக்கத்தில் இருந்த சரவணனும் அதை லாஜிக்கலாக விளக்க முயன்றார். ஆனால் “உங்களுக்கெல்லாம் புரியல.. ஆக்சுவலி…இது என்னன்னா..” என்று வனிதா ஆரம்பித்தவுடன் சரவணன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார். “கேனத்தனமா இருக்கு” என்று நிகழ்ச்சியின் துவக்கத்தில் அவர் சொல்லியதும் இதைத்தான். இயல்பான மொழியில் உண்மைகளை அப்படியே உடைத்துப் பேசி விடுகிறார் சரவணன்.

ஆக.. மதுமிதா காப்பாற்றப்பட்டார். எனில் வெளியேறப் போகிறவர் யார்? அது ஒரு பெண்மணி என்றும் வீட்டின் மூத்தவர் என்றும் ஒரு ‘செய்தி’ கசிந்திருக்கிறது. (இதுக்கு மேலயுமா க்ளூ கொடுக்க முடியும்). பார்ப்போம்.








suresh kannan

Saturday, July 06, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட்டணி மாற்றங்கள்”



இன்று பிக்பாஸ் செய்த ஒரு குறும்பால் வீட்டின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டன. சில புதிய நட்புகளும் விரோதங்களும் உருவாகின.

என்னவென்று பார்ப்போம்.

காலை டாஸ்க்கில் ‘கோழி பிடிப்பது எப்படி?” என்று செய்து காட்ட வேண்டுமென்று சரவணனுக்கு சொல்லப்பட்டது. ஆனால் இந்த டாஸ்க் கவினுக்குத்தான் தரப்பட்டிருக்க வேண்டும். அவருக்கத்தான் இது பொருத்தமான டாஸ்க். வந்த நாள் முதலே ‘கோழி’ பிடிக்கும் உன்னதமான சேவையில்தான், மனிதர் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.

காலையுணவாக ‘ஓட்ஸ்’ செய்தார்கள். ஆனால் மதுமிதாவிற்கு அது பிடிக்கவில்லை. இது இயல்பாகவே புரிந்து கொள்ளக்கூடியது. எனவே “‘பழைய சோறு’ இருந்தால் கூட போதும். எனவே இரவு சோறு செய்யும் போதே சற்று கூடுதலாக செய்து விடுங்கள்” என்று கிச்சன் டீமில் இருந்த ரேஷ்மாவிடம் வேண்டினார். வீட்டின் கேப்டனிமும் இந்தக் கோரிக்கையை வைத்தார்.

அந்த வீட்டில் தலைமறைவாகவும் டம்மி பீஸாகவும் வாழ்ந்து கொண்டிருந்த ரேஷ்மா, இன்றுதான் தன் அசல் முகத்தைக் காட்டினார். இந்த எளிய கோரிக்கையைக் கூட ஏற்க விரும்பாமல் “ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சமையல் செய்ய முடியாது” என்று மதுமிதா காதில் விழும்படி புறம் பேசினார்; எரிந்து விழுந்தார். இந்த விஷயங்களை பிறகு சேரனிடம் மதுமிதா புலம்பிக் கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

மதுமிதா பழைய சோறு கேட்ட போது ‘காலைல ஓட்ஸ் சாப்பிடறதுதான் எனக்குப் பிடிக்கும். Yummy… mummy… சோறுல்லாம் சாப்பிட்டா கேர் ஆயிடும்’ என்றெல்லாம் மதுமிதாவிற்கு கவுண்ட்டர் அடிப்பது போல் அபிராமி நக்கல் செய்து கொண்டிருந்தது மகா எரிச்சல். உணவு விஷயத்தில் கூடவா ஒருவரை வெறுப்பேற்ற வேண்டும்? ஓட்ஸ் சாப்பிடுவது பற்றிய விவேக் நகைச்சுவை ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது.

**

வாக்குமூல அறைக்கு சாண்டியை அழைத்தார் பிக்பாஸ். வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒருமனதாக தேர்ந்தெடுத்து ஒருவரை வெளியேற்ற வேண்டும். அதற்கான பலியாடு மீரா. ஆனால் இதுவொரு prank என்பதை முன்பே தெரிவித்து விட்டார்கள்.

இது prank என்பதை பார்வையாளர்களுக்குச் சொல்லாமல் இந்த விளையாட்டை ஆடியிருந்தால் ஒருவேளை சுவாரசியமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் துவக்க வாரத்திலேயே, சரியான விதிமுறைகள் இல்லாமல் ஒருவரை வெளியேற்ற மாட்டார்கள் என்பது பிக்பாஸ் பார்க்கிற குழந்தைக்கு கூட தெரியும், பெரும்பாலான பார்வையாளர்கள் இது prank என்று சொல்லாவிட்டாலும் கூட எளிதில் யூகித்திருப்பார்கள்.  ஆனால் மீரா உள்ளிட்டவர்கள் எப்படி இதை நம்பினார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.  அப்போதே மதுமிதா மற்றும் மீராவின் முகத்தில் மாற்றம் வந்தது. ஏனெனில் அவர்கள்தான் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவர்கள்.

“ஆக்சுவலி… மதுமிதாவைத்தான் செலக்ட் பண்ணேன்.. ஆனா ஒருமனதான தேர்வு என்பதால் மீராவைத் தேர்ந்தெடுத்தோம்” என்று ஒரே மாதிரியான காரணத்தை பெரும்பான்மையானவர்கள் சொல்லியது சலிப்பு. அதான் ‘ஒருமனதாக’ தேர்ந்தெடுத்தாகி விட்டதே.. அப்புறம் எதற்கு இந்த பில்டப்? யார் வெளியேறப் போகிறார் என்கிற சஸ்பென்ஸ் இருந்திருந்தால்தான் இந்த நாடகம் சுவாரசியம்.

'ஒரு ரூபாய்க்கு நூறு ரூபாய் நடிப்பு' என்கிற பாலிஸியை பின்பற்றினார் பாத்திமா. ‘பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப ‘தேவதை… அவள் ஒரு தேவதை…’ என்றெல்லாம் கண்ணீர் விட்டு மீராவையும் அழவைத்தார். ஆனால் பாத்திமா இப்படி பொய்யாக புகழ்ந்தது கூட வனிதா டீமிற்கு பொறுக்கவில்லை. ‘அவளைப் போய் தெய்வம்.. அது இதுன்னு சொல்றீங்களே…” என்று பாத்திமாவிடம் தன் கடுப்பைக் காட்டினார் வனிதா.

இன்றுதான் முதன்முறையாக பாத்திமா பாபு துணிச்சலாகவும் சரியாகவும் பேசினார். ‘ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க கருத்தைச் சொல்லும் உரிமை இருக்கு. என் கருத்தைப் பற்றி கமெண்ட் சொல்லும் உரிமை யாருக்கும் தெரியாது. மேலும்.. எனக்குத் தந்த டாஸ்க்கை சிறப்பா செய்ய முயற்சித்தேன்” என்று சரியான பதிலைச் சொன்னதும் வனிதா என்கிற வேதாளம் வாயை மூடிக் கொண்டது.

இந்த Prank டாஸ்க், இன்னொரு வகையில் சூட்சுமமான விஷயம். பிக்பாஸ்ஸின் சில டாஸ்க்குகள் மிக நுட்பமானவை. இதற்காக நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள். எப்படி ஒருவரையொருவர் கோர்த்து விடலாம் என்று ‘ரூம் போட்டு யோசிக்கிறார்கள்’.

அனைவரும் சொன்ன காரணங்களை ‘கட்டி வைக்கப்பட்டு உதை வாங்கும் பாட்ஷா’ போல புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் மீரா. ஆனால் மதுமிதா அப்படி ஏற்கவில்லை. "இந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியவர் ‘கவின்தான். அவர் என்னையும் மீராவையும் பெண்களாக மதித்து என்ன பிரச்சினையென்றாலும் அதற்கான காரணங்களை எங்களிடம் விசாரித்து அறிய வேண்டும்” என்று சொன்னார். மேலும் தன் மீது கூறப்பட்ட புகார்களுக்கான பதில்களையும் துணிச்சலாக சொன்னார். இதனால் ரேஷ்மா உள்ளிட்ட குழுவின் முகங்களில் அதிருப்தியான பாவங்கள் ஏற்பட்டன.

இந்த prank டாஸ்க்கால் ஒட்டுமொத்தமாக நிகழ்ந்த மாற்றம் என்னவென்றால் மீராவின் மீதிருந்த வழக்குகள் அனைத்தும் ‘பாவ மன்னிப்பு’ அளிக்கப்பட்டு மூடப்பட்டன. மதுமிதாவின் மீது புதிய வழக்குகள் இணைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் உத்தரவு. ஆனால் சில உறுப்பினர்கள் மீராவை தேர்வு செய்யவில்லை. எனில், ‘மீரா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று எப்படி பிக்பாஸ் அறிவித்தார்? பொய் டாஸ்க்காக இருந்தாலும் அதுல ஒரு நியாயம் வேணாமாடா?

இந்தப் பஞ்சாயத்து சற்று ஓய்ந்ததும் “அவங்க வெளில என்ன பேசிக்கறாங்கன்னு பார்த்துட்டு வா” என்று ரேஷ்மாவை ஏவிக் கொண்டிருந்தார் வனிதா. “சீரியல்ல வர்ற கேரக்ட்டர் மாதிரி” என்று மதுமிதாவைப் பற்றி இவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் ரேஷ்மாவும் வனிதாவும்தான் அப்படிப்பட்ட டெரர் மூஞ்சிகளாக இருக்கிறார்கள்.

**

கவின் என்கிற குரங்கு அபிராமியிடமிருந்து தாவி சாக்ஷி என்கிற மரத்தில் இப்பொது அமர்ந்து கொண்டிருக்கிறது. அது என்றைக்கு வனிதா என்கிற ஆலமரத்தின் மீது தாவுமோ தெரியவில்லை. சாக்ஷியிடம் அமர்ந்து வழிந்து கொண்டிருந்தார் கவின். சாக்ஷியோ முகினிடம் நெருக்கமாக இருப்பது போல் நடித்து இவரை வெறுப்பேற்ற முயன்று கொண்டிருந்தார். Flirt என்பது தவறான விஷயம் என்றாலும் அதை ரசிக்கும் படி செய்வது ஒரு கலை. ஆனால் கவின் இதை ஆபாசமாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மீராவைப் பற்றி கமெண்ட் செய்யும் போது “அவ பிரண்ட்ஷிப்பை வம்படியா உருவாக்க முயற்சி செய்யறா. அது இயல்பா வரணும் இல்லையா?” என்று சாண்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கவின்.  காதல் என்பதும் அப்படியேதான் இல்லையா? ஆண் தன் கம்பீரத்தாலும் கண்ணியத்தாலும் எதிர் பாலினத்தவரை கவர வேண்டும். அந்தக் காதல் மிக இயல்பாக மலர வேண்டும். இப்படி கார்த்திகை மாதத்து …

**

வனிதா டீமில் இணைந்த மீரா ஒரு புதிய பஞ்சாயத்திற்கான விதையைப் போட்டார். “அபிராமி .. உனக்கு ஞாபகம் இருக்கா.. மாடலிங் –க்கிற்கு நீ வந்த புதுசுல நான்தான் உனக்கு ஹெல்ப் பண்ணேன். உன்னை உருவாக்கினேன்” என்பது போல் ஆரம்பித்தார். இந்த விஷயம் மறுபடி மறுபடி சொல்லப்பட்ட போது அபிராமி கடுப்பானது இயல்பே. ‘உதவி –ன்றது இப்படி சொல்லிக்காட்டப் படுவதல்ல’ என்று அவர் எகிறியது ஒருவகையில் சரியானது.

இவர்களின் பஞ்சாயத்தில் மீராவிற்கு ஆதரவாக வனிதா களம் இறங்கினார். ஏனெனில் தன்னிடம் இணைந்த புதிய அடிமையை அத்தனை எளிதாக விட்டுவிட வனிதாவிற்கு மனமில்லை. “ஆக்சுவலி.. அவ என்ன சொல்ல வர்றான்னா…” என்று மீராவிற்கு சப்போர்ட் செய்யப் போக அபிராமி எரிச்சலுடன் வெளியேறினார்.

இதற்கிடையில் சாக்ஷிக்கும் அபிராமிக்கும் இடையில் ஒரு புதிய புகைச்சல் உருவானது. “அவ.. அடுத்த வாரம் நாமினேட் ஆகிடுவோமோ –ன்னு பயப்படறா. நான் இந்த வாரம் நாமினேட் ஆனதைப் பற்றி அவ கவலைப்படவேயில்ல. எத்தனை சுயநலம்?! அவ கிட்ட நான் எப்படி எல்லாம் பழகினேன்’ என்று சாக்ஷி கண்கலங்க.. “இதுக்கும் நான்தான் காரணமா” என்று மேலும் எரிந்து விழுந்தார் அபிராமி.

“ஹேய்.. நான் யாரு தேவா.. நீ யாரு சூர்யா… நம்ம நட்பு எப்படிப்பட்டது தெரியுமா?” என்று வனிதா ஒரு சென்ட்டிமென்ட் பிட்டைப் போட்டவுடன் அடங்கினார் அபிராமி. வனிதா டீமில் இருப்பதுதான் அவருக்குப் பாதுகாப்பு. இந்த நிதர்சனம் அவருக்குப் புரிந்தவுடன் சற்று இறங்கி வந்தார். பலமுள்ள மிருகத்திடம் பலவீனமான மிருகங்கள் சரண் அடைவதுதான் காட்டின் வாழ்வியல் முறை. மனிதர்களுக்கும் இது பொருந்தும்.

சாண்டிக்கு இன்று பிறந்தநாள். அவரது குழந்தையின் குரலை இசையுடன் இணைத்து திடீரென்று பிக்பாஸ் ஒலிபரப்ப சென்ட்டிமென்ட்டில் விழுந்தார் சாண்டி. அதுவரை குறும்புகள் செய்து மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சாண்டி குலுங்கி குலுங்கி அழுதார். இந்த வாய்ப்பை பிக்பாஸ் டீம் எளிதில் விட்டு விடுவார்களா என்ன? சாண்டியின் மகள் வீடியோவை ஒளிபரப்பி பின்னணியில் ‘கண்ணான கண்ணே…’ பாடலயும் போட நமக்கும் சற்று கண்கலங்கியது உண்மைதான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ்?





suresh kannan