Tuesday, September 30, 2008

...த்தா கீழ எறங்குடா.....

மோ.க.காந்தியை தென்னாப்பிரிக்காவில் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியிலிருந்து கீழே தள்ளிவிட்ட அந்த புகழ்பெற்ற சம்பவத்தை தமிழில் நவீன நாடகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அந்நாடகத்திற்கான தலைப்பு இதுவோ என்று யாரும் தவறாக எண்ணி விடக்கூடாது.

ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவர் என்னைப் பார்த்துச் சொன்ன சரித்திரப்புகழ் பெறாத வார்த்தைகள் அவை. கொசுவர்த்தி புகையுடன் இருபது வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறேன். என்னுடைய பதின்ம வயதுகளின் இறுதியில் +2வை முடித்துவிட்டு பொருளாதாரச்சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர இயலாமல் செளகார்பேட்டையிலுள்ள ஒரு மருந்துக் கடையில் உதவியாளனாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். வறுமையையும் மீறி என்னுடைய வாழ்க்கையின் மிக இன்பகரமான நாட்கள் அவை. வாளிப்பான சேட்டுப் பெண்களை நாள் பூராவும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஏன் இந்த சேட்டுக்களுக்கும் மலையாளிகளுக்கும் மாத்திரம் நிறத்தையும் அழகையும் ஆண்டவன் வாரிக் கொடுத்திருக்கிறான் என்று கடுப்பாக இருக்கும். பாச்சை போல் பரிதாபமாக தோற்றமளிக்கும் சிறுபையனான என்னை நம்பி வாடிக்கையாளர்கள் யாரும் மருந்துச் சீட்டை தரமாட்டார்கள். டாக்டரிடம் தப்பித்து மருந்துக்கடை பணியாளனின் தவறில் உயிர்விடக்கூடாதே என்கிற ஜாக்கிரதை உணர்ச்சியாக இருக்கலாம். நானாக வலியப் போய் கேட்டாலும் 'அவரக் கூப்பிடுப்பா" என்பார்கள் கறாராக. பொதுவாக எல்லா மருந்துக் கடைகளிலும் மருந்துகள் கம்பெனி வாரியாக அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நான் பணிபுரிந்த கடையில் albhapetical ஆர்டரில் இருப்பதால் உடனே எடுக்க வசதியாக இருக்கும்.

ஆனால் நாளடைவில் மருந்துகளை எடுத்துத் தருவதில் தேர்ச்சி பெற்று 'நாள் தள்ளிப் போகணுமா' primoulte-n' என்று சொல்லுமளவிற்கு முன்னேறி விட்டேன். மருத்துவர்கள் எழுதும் கோழிக்கிறுக்கல்களையும் ஷார்ட்ஹாண்ட் படிக்காமலேயே புரிந்து கொண்டு இந்த டாக்டர் இந்த மருந்துதான் எழுதிக் கொடுப்பார் என்று சீட்டைப்பார்க்காமலேயே கூட யூகிக்க முடிந்தது. மருந்துக்கடைகளில் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. 'ரெண்டு நாளா ஒரே இருமலா இருக்கு. ஏதாவது மருந்து கொடேம்ப்பா" என்று டாக்டர் செலவை தவிர்க்கும் உத்தேசத்துடன் வருபவரிடம் முகத்தை ஏதோ இருநூறு ஹார்ட் சர்ஜரி செய்தவன் போன்ற கெத்துடன் தீவிரமாக வைத்துக் கொண்டு மருந்துக் கம்பெனி விற்பனை பிரதிநிதிகள் இலவசமாக தரும் மாத்திரைகளை தோல் உரித்து "மூணு வேளை சாப்பிடுங்க. சரியாயிடும்" என்று ஜோசியக்காரன் போல் சொல்லி அனுப்ப வேண்டும். விளக்கெண்ணைய் குடித்தவர் போன்ற முகபாவத்துடன் வருபவர்களை ஓரம் கட்டி ஆணுறை பாக்கெட்டுக்களை கொடுத்தனுப்ப வேண்டும். பெண்களுக்கான மாதவிலக்கு நாப்கின்களை கண்டிப்பாக பேப்பர் உறையிலிட்டு வெளியே தெரியாதவாறு தர வேண்டும். வலி நிவாரண மருந்துகளின் பெயர்களை சரியாக தேர்ந்தெடுத்து கேட்கும் நபர்களை உற்றுப்பார்த்து சந்தேகமான ஆசாமி என்றால் அவர்களை மறுத்து அனுப்ப வேண்டும். மருந்துச்சீட்டில் உள்ள லிஸ்டில் ஏதாவதொன்று ஸ்டாக் இல்லையென்றால் 'இல்லை' என்று திருப்பியனுப்பாமல் 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்' என்று சற்று தூரத்தில் உள்ள கடையில் வாங்கி வந்து அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அக்கம்பக்கத்தில் கடை விரித்திருக்கும் மருத்துவர்களுக்கு மருந்துச்சீட்டு இலவசமாக (விளம்பரத்துடன்தான்) அச்சிட்டுத்தர வேண்டும். இப்படியாக நானே ஒரு டாக்டராக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில்....

ஆகா! தலைப்புச் சமாச்சாரத்திலிருந்து ரொம்ப விலகி வந்து விட்டேனோ? இப்போது வந்து விடுகிறேன்.

()

என்னுடைய சேட்டு முதலாளிகள் மூன்று சகோதரர்கள். மற்ற இருவரும் ஸ்குட்டர்களில் வர மூத்த சேட்டு மாத்திரம் ரிக்ஷாவில் வெள்ளைக்காரனிடம் மான்யம் வாங்கும் ஜமீன்தார் போல் அசட்டு கம்பீரத்துடன் வந்து இறங்குவார். இந்த சேட்டுக்களையும் சைக்கிள் ரிக்ஷாவையும் பிரிக்கவே முடியாது. சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் ரிக்ஷா ஒழிந்து விட்டாலும் இன்னும் வடசென்னையின் செளகார்பேட்டையில் wwf போட்டிகளில் கலந்து கொள்கிற தகுதியுடன் இருக்கையை நிறைத்துக் கொண்டு பயணிக்கிற சேட்டம்மாக்களை பார்க்கலாம். சினிமாவில் வருவது போல் "நம்பிள்கி நிம்பிள்கி" என்றெல்லாம் இல்லாமல் தெளிவாகவே சென்னைத் தமிழில் பேரம் பேசுவார்கள். சரியாக இரவு 9 மணிக்கெல்லாம் வீடு திரும்ப வண்டி வந்து நிற்கும். சேட் வண்டியில் ஏறுவதற்கு முன்னால் தன்னுடைய துண்டினால் இல்லாத தூசை தட்டுவார் முனியன். (மரியாதை கொடுக்கறாராம்). சேட் ஏறி அமர்ந்து சிறிதும் கூச்சமில்லாமல் பிருஷ்டத்தை தூக்கி அபான வாயுவை வெளியேற்றி விட்டு மந்தகாசத்துடன் கிளம்புவார். நோயாளிகளின் வாதைகளைத் தீர்க்கும் அரும்பணியில் ஈடுபட்டு விட்டு இளைய சேட்டுக்கள் கல்லாப்பெட்டி நிறைந்த களிப்புடனும் நாங்கள் நாளெல்லாம் நின்ற களைப்புடனும் கடையை மூடிவிட்டுக் கிளம்புவோம்.

பெரிய சேட்டு தினமும் ரிக்ஷாவில் வந்து இறங்குவதும் உற்சவர் மாதிரி முனியனின் ஏகப்பட்ட மரியாதைகளுடன் கிளம்புவதும் என்னுடைய அந்த இளமனதில் எதையோ நிகழ்த்தியிருக்க வேண்டும். ஒரு நாள் நானும் இதே போல் ரிக்ஷாவில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமாகிவிட்டது. நாளடைவில் இது தீவிரமாகி கனவுகளில் கூட ரிக்ஷாவில் பயணிக்கத் தொடங்கினேன். அரிப்பு தாங்காமல் ரிக்ஷாவில் பயணிக்க கட்டணம் எவ்வளவு என்று விசாரித்தேன். 2 ரூபாய். அப்போதைய நிலவரத்தின்படி கையேந்தி பவனில் வயிறார உண்ணக்கூடிய அளவிற்கான பணம். சம்பளம் வாங்கியவுடன் அதிலிருந்து இரண்டு ரூபாயை உருவிக் கொண்டேன்.

என் கனவை நிறைவேற்றும் அந்த சுபமுகூர்த்த நாளும் வந்தது. பணி முடித்து திரும்புகிற அந்த இரவு நேரத்தில் கடையிலிருந்து சற்று தள்ளி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ரிக்ஷா என்னை கடந்து போனது. சேட்டு கூப்பிடுகிற மாதிரியே அமர்த்தலாக "யே ரிக்ஷா" என்றேன். உலோகம் உராயும் சப்தத்துடன் வண்டி நின்றது. ரிக்ஷாக்காரர் யாருக்கோ வண்டி கூப்பிட வந்திருக்கிறான் போலும் என்கிற தொனியில் "எங்க போணும்" என்றார். வீட்டுக்கு சற்று முன்னாலிருக்கிற இடத்தை குறிப்பிட்டேன். (ரிக்ஷாவில் போய் இறங்குவதை என் வீட்டில் பார்த்தால் தோலை உரித்து விடுவார்கள்). "எத்தன பேரு?" "நான் ஒருத்தன்தான்". இப்போது ரிக்ஷாக்காரர் என்னை சந்தேகமாக பார்த்தார். ரிக்ஷாவில் பயணிக்கக்கூடிய அந்தஸ்தான தோற்றம் என்னிடம் இல்லை என்பதுதான் அதற்குக் காரணம். "மூன்று ரூபா ஆவும். காசு இருக்குதா". "ரெண்டு ரூபாதானே. நேத்திக்கூட போனேன்" என்றேன் புத்திசாலித்தனமாக. "சரி. ஒக்காரு" என்றார் மரியாதையில்லாத குரலில்.

சரித்திரத்தில் இடம்பிடிக்காத அந்தப் பயணம் வெகு ஜோராகத்தான் தொடங்கியது. கால் மேல் கால் போட்டுக் கொண்டு அல்லது அது போல் அமர முயற்சித்துக் கொண்டு என்னைக் கடந்து போகும் மனிதர்களை அலட்சியமாக நோக்கினேன். ரிக்ஷா வேகமாக ஓடத் துவங்கியது. என்னுடைய பயத்தை ஒளிக்க முயன்றேன். வாயில் பீடியுடன் எம்.ஜி.ஆர் பாடலொன்றை முணுமுணுத்துக் கொண்டே உற்சாகமான பெடலை மிதித்தார் ரிக்ஷாக்காரர். செளகார்பேட்டை வாசனையில் நானும் ஒரு ஹிந்தி பாடலை முணுமுணுத்தேன். ஜர்தா பீடா போட்டு மென்று துப்பிக் கொண்டே வந்தால் இன்னும் மஜாவாக இருந்திருக்குமே என்று தோன்றுகிறது. நானும் என்னை சேட்டு மாதிரி உணர்ந்து கொண்டிருந்தேன் என்று இப்போது தோன்றுகிறது.

என்னுடைய இந்த அலட்டல் இயற்கைக்கே பொறுக்கவில்லையோ என்னமோ, திடீரென்று வானம் sub-woofer எபக்டில் அலறத் துவங்கியது. நிமிர்ந்து பார்த்தேன். கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மஜா சற்று குறைந்து சீக்கிரம் வீட்டிற்கு போனால் போதும் என்று தோன்றியது. "கொஞ்சம் சீக்கிரமா போப்பா" என்று சொல்ல நினைத்து தயங்கி அடக்கிக் கொண்டேன். 'பொட் பொட்' என்ற சப்தத்துடன் மழைத்துளிகள் விழத் துவங்கின. பலத்து காற்று ரிக்ஷாவின் படுதாவை ரொம்பவும் அலைக்கழித்தது. இன்னும் சற்று நேரத்தில் பலத்தமழை செய்யும் என்று தோன்றியது.

தீடீரென வண்டி பெட்டிக்கடை அருகே நின்றது. ரிக்ஷாக்காரர் என்னிடம் "துட்ட கொடு" என்றார். கடையில் ஏதோ வாங்கப் போகிறார் என்று நினைத்து காசைக் கொடுத்தேன். மறுகணம் "எறங்கி நடந்து போ" என்றார் கடுமையான குரலில். "எங்க வீடு இங்க இல்ல. இன்னும் கொஞ்ச தூரம் போகணும்" என்றேன் பலவீனமாக. அதே கடுமையான குரலில் "நடந்து போ". சின்னப்பையன் என்பதால் ஏமாற்ற முயல்கிறார் என்பதை உணர்ந்து கோபம் வந்தது. கனவுப்பயணம் பாதியிலேயே அறுபடுவதை மனம் ஏற்க மறுத்தது. "இன்னும் கொஞ்ச தூரம்தான். அங்க விட்டுடு" என்றேன் கெஞ்சலாக. அப்போதுதான் இந்தப் பதிவின் தலைப்பிலுள்ள வார்த்தைகளைக் கூறினார் அவர். கையாலாகாத கோபத்துடனும் உள்ளூர அழுகையுமாக வண்டியிலிருந்து இறங்கி மழைத் தூறலில் நடந்து போனேன்.

()

ரிக்ஷாவில் என்னுடைய முதல் மற்றும் இறுதிப் பயணம் அதுதான். முற்போக்கோ, பகுத்தறிவோ அல்லது என்ன எழவோ தெரியாது.. "ஒரு மனுஷன் இன்னொரு மனுஷன சுமந்துட்டு போற அவலம் இந்த ரிக்ஷா பயணம்தான்" என்பதை எங்கோ கேட்டு அது சரி என்பதை உணர்ந்ததால் பின்னர் அது நிகழவேயில்லை. வியர்வை கொப்பளிக்க மிகுந்த சிரமத்துடன் சாலை மேட்டின் மீது ரிக்ஷாவை இழுத்துப் போகும் மனித ஜீவனைப் பற்றி துளியளவும் அனுதாபம் கொள்ளாமல் பிருஷ்டங்கள் அழுந்த அமர்ந்து செல்லும் மாமிச மலைகளை பார்க்கும் போது கோபம் வரும். வண்டி ஓட்டுபவர்கள், பாரம் இழுப்பவர்கள் என்று உடல் உழைப்பு மூலம் பிழைக்கிறவர்களை 'அவன்' என்றும் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் நோகாமல் வேலை செய்பவர்களை 'அவர்' என்றும் அழைக்க இந்தச் சமூகம் நமக்கு சிறுவயதிலேயே கற்றுத் தருகிறது. "ஏய் ஆட்டோ" என்று அழைக்கும் இளம் பிராயத்தினரை யாரும் கண்டிக்கவோ திருத்தவோ முயல்வதில்லை. அது தவறு என்பதே நம் ஆழ்மனதில் இல்லை.

என்னுள் துளிர் விடத் துவங்கிய மேட்டிமைத்தனத்தை தன்னுடைய அகராதியில் உள்ள எளிய வார்த்தைகளின் மூலம் கலைத்துப் போட்ட அந்த ரிக்ஷாக்காரரை நினைத்தால் இப்போது கோபம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது.

suresh kannan

Thursday, September 25, 2008

ரஜினி vs ஷகிலா - ஓர் ஆளுமை ஒப்பீடு

இரவு உணவு முடித்து நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது உரையாடல் இயல்பாக சினிமா பக்கம் திரும்பியது. இரண்டு தமிழர்கள் பேசினால் அதில் பிரதான விஷயம் சினிமாவைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்பதை யூகிக்க பில்கேட்ஸ் அளவிற்கு மூளை தேவையில்லை. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியைப் பற்றியும் அவருக்கு இருக்கும் வணிகமதிப்பைப் பற்றியும் நண்பர் விஸ்தாரமாக பேசினார். பேச்சின் நடுவில் அவர் சொன்ன விஷயம் என்னை திடுக்கிட வைத்தது. "வணிக நோக்கில் பார்த்தீர்கள் என்றால் ரஜினியையும் "மலையாளப் பட புகழ்" ஷகிலாவையும் ஒரே அளவுகோலினால் அளந்துவிட முடியும்" என்றார் நண்பர். "என்ன சொல்கிறீர்கள்.. இதை வெளியே சொன்னால் உங்கள் வீட்டுக்கு ஆட்டோ வரும் வாய்ப்பு இருக்கிறது, தெரியுமா" என்றேன். "அதனால்தான் யோசிக்கிறேன். இருவருக்குமான சில ஒற்றுமையைப் பட்டியலிடுகிறேன். அப்புறம் நீங்கள் சொல்லுங்கள், நான் சொன்னது சரியா, தவறா என்று".

எனக்கும் சுவாரசியம் தட்டியது. "சரி சொல்லுங்கள்" என்றேன்.அவர் சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கொஞ்சம் சென்சாருடன் இங்கே பட்டியிலிட்டிருக்கிறேன்.

Photobucket

(1) ரஜினி படங்களில் "கதை" என்கிற சமாச்சாரத்திற்கு அவ்வளவு முக்கியம் கிடையாது. ரஜினி இருக்கிறார் என்பதே முக்கியம். படம் வியாபாரமாகி விடும். ரசிகர்களும் தியேட்டருக்கு வருவார்கள். ஷகிலாவிற்கும் அப்படியே. அவர் பட வெளியீடுகளின் போது பரங்கிமலை பக்கம் டிராபிக் ஜாம் ஆகிவிடுவதை போக்குவரத்து காவலர்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

(2) ரஜினி படங்களில் மிக முக்கியமானது, சண்டைக்காட்சிகள், அவர் பஞ்ச் வசனம் சொல்லும் காட்சிகள், போன்றவை. இது இல்லாவிட்டால் ரசிகர்கள் திருப்தியடைய மாட்டார்கள். படமும் ஓடாது. ஷகிலாவின் படங்களுக்கும் அப்படியே. ரசிகர்கள்
முக்கியமாக எதிர்பார்த்து வருவது "அந்த மாதிரியான" சண்டைக் காட்சிகளை. அது இல்லாவிட்டால் பெஞ்சுகளை உடைத்து தங்கள் எதிர்ப்பை கண்ணியமாக வெளிப்படுத்துவார்கள்.

(3) ஒரு வெற்றிகரமான படத்திற்கு 'ரஜினி' என்கிற ஒற்றைச் சொல்லே போதும். சக நடிகர்கள் யார், இயக்குநர் யார், என்பது பற்றியெல்லாம் ரசிகர்களுக்கு கவலையில்லை. அவர்களை தியேட்டருக்க வரவழைக்க அவர் பெயரே போதும். அம்மணியின் படங்களுக்கும் அப்படியே. "கூட நடிக்கும்" ஆண்களைப் பற்றியெல்லாம் அம்மணியின் ரசிகர்களுக்கு கவலையில்லை. தங்கள் தலைவியின் "முக தரிசனம்" (?) கிடைத்தால் போதும் என்ற அளவில் திருப்தியடைவார்கள்.

(4) பொதுவாக ரஜினி படங்கள் நிச்சய வெற்றி என்பதால் பட பூஜை அன்றே எல்லா ஏரியாவும் விற்பனையாகிவிடும். விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுவார்கள். செல்வி ஷகிலாவின் படங்களும் அப்படியே. தென்னிந்தியாவைத் தவிர
வட இந்தியாவிலும் அம்மணியின் படங்களுக்கு மிகுந்த கிராக்கியுண்டு. விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்குவார்கள்.

(5) ரஜினி படங்கள் வெளியாகிறது என்றால் அதனுடன் போட்டி போட அஞ்சி தங்கள் பட வெளியீட்டை தள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் அதிகம். ஷகிலாவின் படங்களும் அப்படியே. ஒரு சமயத்தில் கேரளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களின் பட வசூலை விட ஷகிலாவின் பட வசூல் அதிகமாகிப் போக, பீதியடைந்து சேட்டன்கள் ஒன்று சேர்ந்து ஷகிலாவை தமிழ்நாட்டிற்கே துரத்தி விட்டனர்.

(6) ஆரம்பக் காலங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ரஜினி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தன் தனித்தன்மையை வெளிப்படுத்த சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் கவ்வுவது, தலைமுடியை ஒதுக்கிக் கொள்வது போன்ற சேஷ்டைகளை செய்திருக்கிறார். ஷகிலாவும் அப்படியே. தன்னுடைய "திறமையை" ரசிகர்களுக்கு வெளிப்படுத்த மேலாடை இல்லாமல் கூட நடித்திருக்கிறார். பிற்பாடு அம்மணி இதை நிறுத்திக் கொண்டாலும் ரஜினி இன்னும் நிறுத்தவில்லை என்பது ஒரு சிறு வேற்றுமை.

(7) விநியோகஸ்தர்களின் வட்டாரத்தில் ரஜினியை 'தங்க முட்டையிடும் வாத்து' என்றே கருதுகிறார்கள். பட வெளியீட்டின் போது மட்டுமல்லாமல் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன பின்னரும், தொலைக்காட்சிகளில் அடிக்கடி போட்டு தேய்த்த பின்னரும் கூட, மறுவெளியீடுகளின் போது ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவு தர மறப்பதில்லை. பொதுவாக மற்ற நடிகர்களுக்கு இந்த வணிக மதிப்பு இல்லை. புதுப்படங்களை வாங்கி வெளியிட வசதியில்லாத சில திரைப்பட உரிமையாளர்கள் இவ்வாறான மறுவெளியீடுகளிலேயே தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். ஷகிலாவின் படங்களும் இவ்வாறான அதே வணிக மதிப்பை கொண்டதுதான். ஷகிலா தன்னுடைய திறமையை "அதிகமாக" வெளிப்படுத்துவதை நிறுத்திய பின்னரும் அவரின் பழைய படங்களுக்கு கூட்டம் அலைமோதுகிறது.

(8) ரஜினி படங்கள் மொழி, இன, பிராந்திய, கலாச்சார எல்லைகளைக் கடந்தது. தமிழ்ப்படமென்றாலும் கூட அது ஆந்திரா, கர்நாடகா,கேரளா என்று தென்னிந்தியாவிலும் சில வட மாநிலங்களிலும், சர்வதேச நாடுகளில் குறிப்பாக ஜப்பானிலும் புகழ்பெற்றது. மொழி புரியாவிட்டாலும் கூட ரஜினியின் தோற்றத்திற்காகவும் ஸ்டைலுக்காகவும் சர்வதேச ரசிகர்கள் பார்த்து மகிழ்கின்றனர். ஷகிலாவின் படங்களும் அப்படியே. சர்வதேச அளவில் ரசிகர்கள் உண்டு. பின்னணயில் ஒலிக்கும் மொழி பற்றி அவரின் ரசிகர்களுக்கு கவலையில்லை. தங்களுடைய தலைவியின் "ஆக்ஷன் காட்சிகளை" ரசிக்க மொழி அவர்களுக்கு ஓர் தடையாய் இருப்பதில்லை.

(9) ரஜினி பட விளம்பரங்களில் (பத்திரிகைகளிலும், போஸ்டர்களிலும்) ரஜினிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அது 25 சதவீதம் நடிக்கும் குசேலனாயிருந்தாலும் சரி அவர்தான் பிரதானமாய் தெரிவார். ரசிகர்களின் "வாங்கும் சக்தியை" இந்த பிம்பமே தீர்மானிக்கிறது. எனவே வணிக நோக்கில் இது தவறில்லை. அன்னார் ஷகிலா படங்களுக்கும் அவ்வாறே. பிரதான காட்சிகளில் அவரின் சக நடிகர்களான மரியா, ரேஷ்மா போன்றவர்கள் இருந்தால் கூட விளம்பரங்களில் இவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர் "ஆக்ஷன் படங்களில்" நடிப்பதை நிறுத்திய இன்றும் கூட பத்திரிகை விளம்பரங்களில் அவர் புகைப்படங்களே பெரிதாக அமைக்கப்படுகிறது. (அவர் படத்தை சிறிதாக வடிமைக்க முடியாது என்பது வேறு விஷயம்).

(10) ரஜினி பட ரசிகர்களின் வயதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பதின்ம வயது இளைஞர்களிலிருந்து அறுபது வயதான கிழவர்கள் வரை காணலாம். ரஜினி படங்களைக் காண விரும்பாதவர்கள் போல் பாவனை செய்பவர்கள் கூட உள்ளூர பார்க்கவே விரும்புவர். செல்வியின் படங்களும் அவ்வாறே. பரங்கிமலை தியேட்டர்களில் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக முதியவர்களின் எண்ணிக்கையையும் பார்க்க முடியும்.

()

இன்னும் கூட நண்பர் சொல்லிக் கொண்டே போனார். சில பகுதிகள் மிகுந்த ஆட்சேபகரமானது என்பதால் அவற்றை வெளியிடாமல் தவிர்க்கிறேன்.

அவர் சொன்னவற்றை கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கணக்கு சரியாகவே வந்தது. (நன்றி: அண்ணாமலை) இவற்றை என்னுடைய வலைப்பதிவில் வெளியிடலாமா என்று அவரின் அனுமதியைக் கேட்டேன். முதலில் தயங்கியவர் " இந்தத் தலைப்பில்யாராவது பிஎச்டி ஆராய்ச்சி செய்ய முனைந்தால் அவர்களுக்கு இந்தக் குறிப்புகள் உதவிகரமாக இருக்கக்கூடுமே" என்று நான் கன்வினஸ் செய்தவுடன் 'என் பெயரை வெளியிடக்கூடாது' என்ற நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டார்.

"நான் சொன்னது சொற்பமே. இணையத்தில் வெளியிட்டவுடன் மற்றவர்கள் இதற்கும் மேலாக பல ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான குறிப்புகளை வழங்க முடியும் பார்" என்றும் பின்குறிப்பாக சொன்னார்.

suresh kannan

Monday, September 22, 2008

பாலுறவு பொம்மையும் ஒரு கூச்ச சுபாவியும்

டிவிட்டரில் சந்தோஷ்குரு இந்தப்படத்தைப் பற்றி குறிப்பிடும் போது அவரை அணுகி டோரண்ட் பைலைப் பெற்றேன். படத்தை தரவிறக்கி நீண்ட நாட்கள் வைத்திருந்து நேற்றிரவு சுமார் 11.30 மணிக்கு பார்க்க ஆரம்பித்தவன், மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டிய பதட்டத்துடன் தூக்கம் கண்ணைச் சுற்றியும் பாதியில் தொலைக்காட்சியை அணைக்க முடியாமல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டுத்தான் உறங்கப் போனேன்.

"வெள்ளைக்காரன் படம் எடுத்தாதாண்டா உங்களுக்கெல்லாம் ஒஸ்தி" என்று நண்பர்களிடம் வெளிநாட்டுப்படங்களை சிலாகித்து உரையாடும் போது கேட்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த மாதிரியான (இதே அல்ல) plot-ஐ வைத்து நம்மூரில் படம் எடுக்கத்துணியும் ஆண்பிள்ளை யாரென்று அறிய விரும்புகிறேன். "Lars and the Real Girl" ஒரு மனிதனின் தனிமையையும் அன்பிற்கு ஏங்குவதையும், சமூகம் தன்னை புறக்கணிக்கிறது என்று அவன் நம்பினால் அதனால் அவனுக்கு ஏற்படும் அகச்சிக்கலை மெலிதான நகைச்சுவையுடனும் நேர்மையான திரைக்கதையுடனும் அணுகுகிறது.

Photobucket

லார்ஸ் (Lars) மிகுந்த கூச்ச சுபாவமும், மற்ற மனிதர்களிடமிருந்து விலகி பெரும்பாலும் தனிமையில் இருக்கிறவனாகவும் ஒரு விசித்திர மனநிலையில் இருக்கிறான். சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனின் மூத்த சகோதரனும் சிறுவயதிலேயே அவனை விட்டு விலகி விடுவதால் தன்னைப் போலவே குணமுடைய தந்தையின் பராமரிப்பில் மிகுந்த தனிமையில் வளர்கிறான். (இவ்வளவும் சொற்ப வசனங்களினால் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகிறது). பிற்பாடு சகோதரன் வந்து இணைந்த பிறகு வீட்டின் கேரேஜில் தனிமையில் வசிக்கிறான். சகோதரனின் மனைவி அவனை வீட்டுக்குள் வரவழைக்க எடுக்கும் பிரயத்தனங்கள் மிக அபூர்வமாக சாத்தியமடைகிறது. ஒரு அனாதை போல அவன் இருப்பதைக் கண்டு அவளின் தாய்மை உணர்வு பரிதவிக்கிறது. அலுவகத்திலும், ஊராரிடமும், தன்னைக் காதலிக்க முயலும் பெண் உட்பட யாரிடமும் நெருங்காமல் விலகியே இருக்கிறான் லார்ஸ்.

திடீரென்று ஒரு நாள் லார்ஸ் சகோதரனின் வீட்டுக்குள் வந்து தன்னுடைய பெண் நண்பர் வந்திருப்பதாகவும் இங்கு அவளை தங்க வைக்க முடியுமா என்று கேட்டவுடன் சகோவுக்கும் அவனது மனைவிக்கும் ஆனந்த அதிர்ச்சி. சமூகத்துடன் சுமூகமாக அவன் பழக ஆரம்பித்திருப்பதின் ஆரம்பப்புள்ளி என்று மகிழந்து போய் அதற்கு ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மனித உருவத்தைப் போலவே தயாரிக்கப்பட்ட ஒரு பெண் பொம்மையை அறிமுகப்படுத்துகிறான் லார்ஸ். ஆண் தனியர்களுக்கான பாலுறவு இச்சையைத் தணிக்க adult store-லிருந்து இணையம் மூலம் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்ட பொம்மை அது. அந்த பொம்மையை (binaca) தன்னுடைய மனைவி என்று ஒரு தீவிரத்தனத்துடன் அறிமுகப்படுத்தும் லார்ஸ், அவளின் குடும்ப பின்னணிகளையெல்லாம் சகோ. குடும்பத்திடம் கூறுகிறான். முதலில் அதிர்ச்சியடையும் அவர்கள், அவனுடைய மனச்சிக்கலை போக்க அவன் வழியிலேயே சென்று பொம்மையை ஒரு நபர் போலவே நடத்துகின்றனர். அவர்களின் குடும்ப டாக்டர் (உளவியல் நிபுணரும் கூட) binaca-வின் ரத்த அழுத்தத்தை சோதிக்க வேண்டும் என்று சொல்லி ஒவ்வொரு வாரமும் அவளை (?) கூட்டி வர வேண்டும் என்று லார்ஸிடம் மிகுந்த நம்பகத்தன்மையுடன் சொல்கிறார். அதன் மூலம் அவனின் நடவடிக்கைகளை ஆராய்வது அவளின் திட்டம். லார்ஸின் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், சர்ச் பாதர் என்று எல்லோருமே லார்ஸின் மீதுள்ள அன்பினால் binaca-வை மனிதப்பிறவி போலவே நடத்துகின்றனர்.

இவ்வாறான சென்று கொண்டிருக்கும் லா¡ஸின் வாழ்க்கையில் binaca ஒரு நாள் பிரிந்து போகிறாள். binacaவிற்கு என்ன ஆனது, லார்ஸ் அதற்கு எவ்வாறு எதிர்வினை புரிகிறான் என்பதை அறிய படத்தைப் பாருங்கள்.

()

லார்ஸாக Ryan Gosling மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ‘மீண்டும் கோகிலாவில்’ கமல் செய்வது மாதிரி அடிக்கடி கண்களை சிமிட்டும் மேனரிஸத்துடன் வரும் இவர் தன்னுடைய தனிமை உணர்வையும் binaca-வை தன்னுடைய மனைவியாக தீவிரமாக நம்புவதின் மூலம் பார்வையாளனையும் அந்த மயக்கத்திற்கு சில கணங்களில் உட்படுத்துகிறார். பொம்மை என்றவுடன் அது கேலிச்சித்திரமாக ஆகி விடாமல் படத்தின் முக்கிய பாத்திரமாக ஆகியிருப்பதற்கு இயக்குநரின் திறமையும் ரியானின் நடிப்பும் காரணமாகியிருக்கிறது. மூத்த சகோதரராக வரும் Paul Schneider-ன் நடிப்பு மிக பிரமாதமாக இருக்கிறது. தன்னுடைய சகோதரன் ஒரு பொம்மையைக் கொண்டு வந்து மனைவி என்றவுடன் வரும் கோபத்தையும் அதனை ஒரு நபராக கருதி இயங்க வேண்டிய கட்டாயத்தையும் சகோதரனை சிறுவயதில் தனிமையில் விட்ட குற்ற உணர்ச்சியையும் சிறப்பான முகபாவங்களால் வெளிப்படுத்தியிருக்கிறார். binca-வையும் சகோதரனின் பைத்தியக்காரத்தனத்தையும் கண்டு இவர் நெளியும் போதெல்லாம் நமக்கு சிரிப்பு வருகிறது. இவரின் மனைவியாக வரும் Emily Mortimer-ம் சிறப்பாக நடித்திருக்கிறார்.

Nancy Oliver-ன் அற்புதமான திரைக்கதையை எந்தவித அதிகப்பிரசங்கத்தனமுமில்லாமல் தெளிந்த நீரோடை போல் இயக்கியிருக்கிறார் Craig Gillespie. 2007-ல் வெளியான இந்த அமெரிக்கத்திரைப்படம் ஆஸ்கர் உட்பட பல திரைப்பட விழாக்களில் போட்டிக்கு தேர்வாகியும் சில விழாக்களில் வெற்றியும் பெற்றிருக்கிறது. Ryan Gosling சிறந்த நடிகருக்கான பரிந்துரையை பல போட்டிகளில் பெற்றிருக்கிறார்.

இந்தப்படத்தின் மிக உருக்கமான முடிவை என்னால் யூகிக்கவே இயலவில்லை. படத்தின் மிக மென்மையான பின்னணி இசையும் ரம்மியமான லொக்கேஷன்களும் பல இடங்களில் பரவத்தை ஏற்படுத்துகிறது.

அவசியம் பாருங்கள்.


suresh kannan

Saturday, September 13, 2008

மிஸ்டர் பொதுஜனமும் புதன்கிழமையும்


இந்தியத் திரைப்படங்களுக்கே உரித்தான, கலவையான அம்சங்களுடன் கூடிய திரைக்கதையை தவிர்த்து நேர்கோடான திரைக்கதையைக் கொண்டு வரும் திரைப்படங்கள் மிக சொற்பமானது. அவ்வகையான படங்கள் தற்போது இந்திப்படவுலகில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இருமாதங்களுக்கு முன் Aamir என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிவரும் டாக்டர் ஒருவர் மதவன்முறையாளர்களிடம் சிக்கித் தவிக்கும் சில மணிநேரங்களை பரபரப்பையூட்டும் அற்புதமான திரைக்கதையைக் கொண்டு சிறப்பாக அமைந்திருந்தார்கள். அதே வகையில் நேற்று பார்த்த இன்னொரு இந்திப்படம் 'A Wednesday'. டைம்ஸ் ஆ·ப் இந்தியா இதற்கு நான்கு நட்சத்திரங்களை அளித்திருந்தது. நமீதா அம்மணி தனது clevage-ஐ காட்டாமல் நடிப்பது போன்று இது மிக அபூர்வமானது.

பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து உயிர்ச் சேதம் அதிகமாக இருக்கும் போது, பொது ஜனங்களாகிய நாம் பொதுவாக என்ன செய்கிறோம்? பீதியுடன் அரசின் கையாகாலாததனத்தை விமர்சிக்கிறோம்; உறவினர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்று விசாரித்துக் கொள்கிறோம்; தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வரும் இரத்தக்களறியான படங்களை செயற்கையான பரபரப்புடன், குரூரத்துடன் ரசிக்கிறோம்; வெட்டியாக விவாதிக்கிறோம். சுருக்கமாக, நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தவித பிரச்சினை இல்லையெனில் (இருந்தாலும் கூட) சிறிது காலத்திற்கு பேசிப் புலம்பி விட்டு மறந்து விடுகிறோம். அவ்வாறான தேசியக்குணத்தை நோக்கி அழுத்தமாக ஒரு கேள்வி கேட்பதுதான் "A Wednesday". ஆனால் கேள்வி கேட்கும் முறையில்தான் வித்தியாசப்பட்டு நிற்கிறது இந்தப்படம்.

()

தனது பர்ஸைக் காணோம் என்று காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருகிறார் ஒரு பெரியவர். (நஸ்ருதீன் ஷா) வந்தவர் ஒரு பொ¢ய பையை காவல்நிலைய கழிப்பறைக்குள்ளே ஒளித்து வைக்கிறார். பின்பு போலீஸ் கமிஷனரை (அனுபம் கெர்) அழைத்து நகரத்தின் முக்கிய ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தன்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அவைகளின் இடத்தை தெரிவிப்பதாகவும் போதெரிவிக்கிறார். அவரின் கோரிக்கை என்னவென்றால், மத வன்முறையை தூண்டும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஈடுபட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, நான்கு பயங்கர குற்றவாளிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

அவர் யார்? அவர் திட்டத்தின்படி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டார்களா அல்லது காவல்துறை ஜெயித்ததா என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

()

வங்கி அதிகாரி மாதிரி கண்ணியமான தோற்றத்துடன் அறிமுகமாகும் நஸ்ருதீன் ஷா எதையோ ஒளித்து வைப்பதில் ஆரம்பிக்கும் பரபரப்பான திரைக்கதை ஏறக்குறைய பட இறுதியின் வரையில் நீடித்து இருக்கையின் நுனியில் நம்மை அமர வைத்து ஒரு சிறந்த காண்பனுபவத்தை வழங்கியிருக்கிறது. மாத்திரமல்லாமல் வன்முறைச் சக்திகள் குறித்து நமக்குள் ஒரு கேள்வி எழுப்புவதின் மூலம் சலனத்தையும் உருவாக்குகிறது. நஸ்ருதீன் மற்றும் அனுபம் கெர் என்கிற இரு பெரும் தலைகளும் போட்டி போட்டு நடித்து படத்தை முழுக்கவும் தாங்கி நிற்கின்றனர். சிறிது கூட பதட்டமே இல்லாமல் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றும் ஷா ஒரு புறம் கலக்குகிறார் என்றால் வழக்கமான அரசியல் தாமதங்களுக்கு ஈடுகொடுத்து மிகப் பெரிய சதியை முறியடிக்க டென்ஷனுடன் அனுபம் திட்டமிடும் வேகமும் மிக அழகாக பொருந்திப் போயிருக்கின்றன. போலீஸ் கமிஷனர் பாத்திரம்தான் என்றாலும் வழக்கம் போல் அல்லாமல் காய்கறி வாங்க வந்த மாமா மாதிரி பைஜாமாவிலேயே அனுபமை காண்பித்திருப்பது மாறுதலான ஆறுதலாக இருக்கிறது.

நிகழ்வுகள் உருவாகும் வரை பொறுமையில்லாமல் 'செய்திகளை உருவாக்கும்' நிறுவனங்களையும் அவர்களின் பொறுப்பின்மையையும் கூட இந்தப்படம் கிண்டலடிக்கிறது.

()

படத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே நஸ்ருதின் ஷாவின் திட்டத்தை என்னால் யூகிக்க முடிந்துவிட்டாலும் அதையும் மீறி படத்தை பரபரப்புடன் பார்க்க வைத்தது, படுவேகமான திரைக்கதைதான். ஒரு அழகான சிறுகதையைப் போல சில மணிநேரங்களே படத்தின் நிகழும் காலம். கிளைமாக்சில் விஜய்காந்த் போல நஸ்ருதின் ஷா ஒரு லெக்சர் அடித்தாலும் அவர் சொல்வதில் உள்ள நியாயம் நமக்குள் உறைக்கிறது. வித்தியாசமான காட்சிக் கோணங்களும் திறமையான எடிட்டிங்கும் இந்தப்படத்தை உயரத்தில் அமர்த்தி வைக்கின்றன. (திரைப்படங்களின் மகாஅபத்தமான விஷயமான பாடல்கள் இதில் கிடையாது). லாஜிக் ஓட்டை உட்பட சில குறைகளும் உண்டுதான். படம் அரைமணி நேரத்திற்கு முன்னதாக முடிந்துவிடுகிறது. நஸ்ரூதினின் தரப்பை விளக்க அதை இழுத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநரான நீரஜ் பாண்டே முதல்படத்திலேயே தனது வருகையை மிக அழுத்தமாக பதித்திருக்கிறார். பாராட்டுகள்.

நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். I recommend.

suresh kannan