Wednesday, November 28, 2007

கால் மீது கால் போட்டதற்காக குஷ்பு மீது வழக்கு

நடிகர் பார்த்திபன் நடிக்கும் 'வல்லமை தாராயோ' என்கிற படத்திற்கான பூஜை சென்னையில் நடந்தது. பூஜைக்காக அருகில் பெரிய அளவில் முப்பெரும் தேவியர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதில் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டார். அவர் அமர்ந்திருக்கும் போது கால் மீது கால் மீது போட்டு அமர்ந்திருக்கிறார். இந்த காரணம் போதாதா?.... இது கடவுளையும் அதன் மூலம் இந்துக்களையும் அவமதிக்கும் என செயல் எனக்கூறி இந்து முன்னணயினர் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

"ஜாக்பாட்டுக்காக" ஜாக்கெட் தேர்வு செய்யும் நேரம் போக...பாவம்... குஷ்புவுக்கு வழக்குகளை சந்திக்கவே நேரம் சரியாயிருக்கிறது.

Photo Sharing and Video Hosting at Photobucket

எப்படி அமர்வது என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. கமல்ஹாசன் விழாவொன்றில் கால் மீது கால் போட்டு மேடையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் ஜெயகாந்தனை, ரசிகர்கள் கத்தி ரகளை செய்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. உலகமெங்கிலும் பைத்தியங்கள் உண்டு என்பது தெரிந்ததுதான் என்றாலும், இந்தியாவில்தான் இப்படியான விநோதமான பைத்தியங்களை காண முடியும். பொது நல வழக்குகள் மூலம் எத்தனையோ மக்கள் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டிய வழக்கறிஞர்கள் மத உடையுடன் இப்படியான வழக்குகளை தொடுப்பது துரதிர்ஷ்டவசமானது.

அவமதிக்கும் செயல் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. பெண்கள் தங்கள் கால் தெரிகிறாற் உடையணிந்தால் அது அவமதிக்கும் செயலாக எந்த நாட்டிலோ கருதப்படுவதாக எங்கோ படித்த நினைவு. ஒரு தமிழ் திரைப்படத்தில் கடனை திருப்பித் தராத விவேக்கை நோக்கி இன்னொருவர் காறி உமிழ்வார். "ஏண்டா எங்கேடா கத்துக்கிட்டீங்க இதெல்லாம். எச்ச துப்பினா அவமதிக்கிறதா அர்த்தமா? இப்படி துப்பி துப்பிதாண்டா ஊரையெல்லாம் நாறடிச்சு வெச்சிருக்கீங்க? இதெல்லாம் அப்படியே ராம்நாட் பக்கம் திருப்பி விட்டா நாலு போகம் வெளையுமேடா?" என்பார் விவேக்.

எங்கள் வீட்டு பூஜையறையில் (என் மனைவியால்) வைக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ள சாமியார் ஒருவர் கால் மீது கால் போட்டுத்தான் அமாந்திருந்திருக்கிறார். அவர் என்னை அவமதித்து விட்டார் என்று நான் சொன்னால் எப்படியிருக்குமோ, அப்படி அபத்தமாக இருக்கிறது இந்த நிகழ்வு.

photo courtesy: மாலை மலர்

Monday, November 26, 2007

TSOTSI - ஓரு வன்முறையாளனின் குழந்தைமை

சவுத் ஆப்ரிக்கா திரைப்படம் (2005) ஒன்றை சமீபத்தில் காண நேரிட்டது.

எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளும் சாத்தானும் இருப்பார்கள். சதவிகிதம்தான் வெவ்வேறு அளவில் இருக்கும். நூறு சதவிகித கடவுளையோ சாத்தானையோ காணவே முடியாது என்பது என் நம்பிக்கை. கொடூர வன்முறையாளனுக்குள்ளும் எங்கோ ஒரு ஓரத்தில் ஒளிந்திருக்கும் ஈரம் கசியும் சூழ்நிலையும் ஏற்படலாம். சாந்த சொருபியும் வெறி கொள்ளும் தருணங்களும் உண்டுதான். சூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்றாலும் இயற்கையாகவே அதற்குள் பதியப்பட்டிருக்கும் குணாதிசயங்களும் விஞ்ஞானப்படி பரம்பரை பரம்பரையாக சில விஷயங்களும்தான் ஒரு குழந்தையின் நடத்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் சிலவாக இருக்கிறது.

Photo Sharing and Video Hosting at Photobucket

புதிய பாதை என்கிற சற்றே தமிழ்படத்தை நினைவுப்படுத்தும் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான tsotsi சிறிதளவு பணத்திற்காக ஒரு உயிரையே கொல்லத் துணிபவன். அவ்வளவாக முதிர்ச்சியுறாத இளைஞன்தான். கல்வியறிவு இல்லாதவன். ரயில் நிலையத்தில் அதிகப்பணம் வைத்திருப்பவர்களை நோட்டமிட்டு, இடையூறு ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்களை கொன்றும் பணத்தை பறிப்பதை தொழிலாக (mugging) வைத்திருக்கும் இவருக்கு மூன்று நண்பர்கள். Boston ஒரளவிற்கு படித்தவன். decency என்கிற வார்த்தையின் பொருளை அறிந்தவன். ஆசிரியர் பயிற்சிக்காக படிக்க முயல்பவன். Die-ape சுயபுத்தி இல்லாதவன்; tsotsiயின் நிழலை பின்தொடர்பவன். Butcher மகா முரடன். tsotsi-யிடம் உள்ள சிறிதளவு மனிதாபிமானம் கூட இல்லாதவன்.

ரயிலில் ஒரு கிழவரை கொன்று பணத்தை கைப்பற்றி மது அருந்திக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் boston அந்தக் கொலை தவிர்த்திருக்கப்படக்கூடியது என்று கூறுகிறான். decency என்றால் என்னவென்று தெரியுமா என்று மற்றவர்களை வினவுகிறான். tsotsi-யை "உன்னுடைய உண்மையான பெயர் என்ன? யார் உன் பெற்றோர்? என்று கேட்கிறான். ஆத்திரமடையும் tsotsi அவனை நையப்புடைத்து விட்டு எங்கோ ஓடுகிறான். ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரை திருடிக் கொண்டு போகும் tsotsi சற்று தூரம் போன பிறகுதான் பின்சீட்டில் ஒரு கைக்குழந்தை அழுதுக் கொண்டிருப்பதை கவனிக்கிறான். காரிலிருந்த பொருட்களையும் குழந்தையையும் திருடிக் கொண்டு தன்னுடைய சேரிக்கு செல்கிறான். யாரும் அறியாமல் தன்னுடைய குடிசையில் குழந்தையை வளர்க்க முடிவு செய்கிறான். இதன் காரணமாக தன்னுடைய நண்பர்களைக்கூட புறக்கணிக்க முடிவு செய்கிறான்.

குழந்தை பசியால் அழுவதைக் கண்டு பக்கத்தில் குழந்தை வைத்திருக்கும் ஒரு பெண்ணை (Miriam) மிரட்டி பால் கொடுக்கச் சொல்கிறான். Miriam குழந்தையை தன்னுடைய குழந்தையுடனே இணைத்து பராமரிப்பதாக சொல்கிறாள். "வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன்" என்று மிரட்டுகிறான் tsotsi. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் தாயும், தந்தையும் குழந்தையை எப்படியாவது மீட்கச் சொல்லி காவல் துறையை வேண்டுகின்றனர். அவனுடைய உருவப்படம் வரையப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரமாகிறது.

இதற்கிடையில் சிறுவயதிலேயே தாயின் அருகாமையை இழந்த, தந்தையால் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்ட, தெருவோரச் சிறுவர்களுடன் வளர்ந்த tsotsiயின் கடந்த கால வாழ்க்கை சொற்ப கணங்களில் ஆனால் உணர்ச்சிகரமாக சொல்லப்படுகிறது.

()

குழந்தையை வளர்ப்பதற்காகவும் Boston-ன் மேற்படிப்புச் செலவிற்காகவும் பணம் திருட tsotsiயும் அவனது நண்பர்களும் குழந்தையின் வீட்டிற்கே செல்கிறார்கள். குழந்தையின் தகப்பனை கட்டிப் போட்டு விட்டு Die-ape தின்பதற்கான பொருளையும் Butcher மதிப்புள்ள பொருளையும் தேடும் சூழலில் tsotsi குழந்தைக்கான பால் பவுடர் டப்பாக்களையும், பொம்மைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறான். குழந்தையின் தகப்பன் இடையில் அலாரத்தை அழுத்தி காவல் துறைக்கு சமிக்ஞையை ஏற்படுத்த ஆத்திரமடையும் Butcher அவனை சுடப் போகும் தருணத்தில் tsotsi நண்பனையே சுட்டு வீழ்த்துகிறான். பயந்து போகும் Die-ape இவனை விட்டு பிரிந்து போகிறான்.

திருடின காரை விற்ற பணத்தை குழந்தையை பராமரிக்கும் Miriamத்திடன் தரும் போது வாங்க மறுக்கும் அவள், "பத்திரிகையில் நானும் படித்தேன். நீ சுட்டதால் இந்தக் குழந்தையின் தாய் கால்களை இழந்துவிட்டாள். அதை உன் பணத்தால் திருப்பித்தர முடியுமா?" என்று கேட்கிறாள். tsotsi மனம் மாறி குழந்தையை திருப்பித் தரும் தருணத்தில் காவல்துறை அவனை சூழ்கிறது.

tsotsi என்ன ஆனான்? குழந்தை பத்திரமாக பெற்றோர்களிடம் சேர்ந்ததா? .... விடையை அறிய படத்தைப் பாருங்கள்.

()

Athol Fugard என்பவர் எழுதின நாவலின் அடிப்படையில் Gavid hood இயக்கியிருக்கும் இந்தப்படத்தை தெற்கு ஆப்ரிக்க அரசும் இணைந்து தயாரித்திருக்கிறது. 2005-க்கிற்கான ஆஸ்கார் விருதையும் (சிறந்த வெளிநாட்டுத்திரைப்படம்) இந்தப்படம் பெற்றிருக்கிறது.

குழந்தை பசியால் அழும் போது தன்னிடமுள்ள பால்டின்னை குழந்தைக்கு புகட்டிவிட்டு யாரோ வருவதால் அவசரம் அவசரமாக குழந்தையையும் பால்டின்னையும் ஒரு பைக்குள் வைத்து விட்டுச் சென்று விடியற்காலையில் திரும்பும் போது குழந்தையின் முகம் பூராவும் எறும்புகள் சூழ்ந்திருக்கும் காட்சி நம் மனத்தை பதைக்கவும் நெகிழவும் செய்கிறது. கணவனை இழந்து வறுமையில் வாடும் Miriam, அந்தச் சூழ்நிலையிலும் tsotsi தரும் பணத்தை ஏற்றுக் கொள்ளாதிருக்கும் மனத்திடமும் நம்மை கவர்கிறது. Miriam குழந்தையை குளிப்பாட்டும் போது தன்னுடைய தாயின் நினைவு வர அதை கனிவோடு கவனத்துக் கொண்டிருக்கும் tsotsi, Miriam தன்னைப் பார்ப்பதை கவனித்தவுடன் தன்னுடைய முகபாவத்தை கடுமையாக்கிக் கொள்ளும் காட்சி சிறப்பு. குழந்தையின் வீட்டில் திருடப் போகும் tsotsi, குழந்தையின் அறை விலையுயர்ந்த பொருட்களாலும் பொம்மைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதை ஏக்கத்துடனும் பிரமிப்புடனும் காண்பதும் நம்மைக் கவர்கிறது.

தான் சிறுவயதில் இழந்த பெற்றோர்களின் அருகாமையையும் அரவணைப்பையும், ஒரு குழந்தைக்கு தர முடிவு செய்யும் tsotsi நடைமுறைச் சிக்கல்களால் அதை தொடர முடியாத சோகம் நம்மையும் சூழ்கிறது.

()

மிகச் சிறந்த படமென்று சொல்ல முடியாவிட்டாலும், மயிலிறகால் நம் மனதை வருடி நெகிழச் செய்து மனிதம் இன்னும் எத்தனை வருடங்களானாலும் உயிர்ப்போடுதான் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது tsotsi.

Thursday, November 22, 2007

சற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்

நண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற்படுத்தின படம் போகப்போக தீவிர வேகமாகி பட இறுதியின் போது அதிர்ச்சியான விஷயத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன். மேற்சொன்ன படமும் "பழிவாங்குதல்" என்கிற அடிப்படையான தத்துவத்தில் இயங்குகிறது. உடனே இது எம்.ஜி.ஆர் vs நம்பியார் டைப் படம் என பாமரத்தனமாக விளங்கிக் கொள்ளக்கூடாது. திகைக்க வைக்கும் திரைக்கதையும் ட்ரீட்மெண்ட்டும், நடிகர்களின் பங்களிப்பும் இந்தப்படத்தை தரமான உயரத்தில் இயங்க வைக்கின்றன.

()

OLD BOY இயக்குநர் PARK CHAN-WOOK-ன் trilogy-ல் இரண்டாவது பகுதி படம். மற்ற படங்கள் SYMPATHY FOR MR.VENGEANCE & SYMPATHY FOR LADY VENGEANCE. சுமார் 10 படங்களை இயக்கியிருக்கும் தென் கொரிய இயக்குநரான Park-ன் ஏழாவது படமிது. Vertigo என்கிற படத்தின் பாதிப்பினால் திரைத்துறைக்கு வந்த இவர் பல படங்களில் screen writer ஆகவும் பணிபுரிந்தார். சிறந்த சினிமா விமர்சகருமாவார். முதல் இரண்டு படங்களை இயக்கி வெளியிட்ட பின்னரும் கூட இயக்குநர் என்கிற புகழை விடவும் screen writer - என்கிற அளவில்தான் இவர் புகழ் ஒங்கி இருந்தது. Joint Security Area (2000) என்கிற படத்தின் வணிக மற்றும் விமர்சக ரீதியாக வெற்றிக்குப் பின்னரே "இயக்குநர்" என்கிற புகழை அடைய முடிந்தது. கான் (cannes) திரைப்பட விருது (2004)உட்பட பல விருதுகளை OLD BOY பெற்றுள்ளது.

Photo Sharing and Video Hosting at Photobucket

Dae-su குடிபோதை கலாட்டா ரகளையில் காவல் நிலையத்திலிருந்து அவர் நண்பரால் மீட்கப்படுகிறார். பொது தொலைபேசி மூலம் வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடுவதாக மனைவியிடமும் மகளிடமும் கூறுகிறார். அவர் நண்பரும் வீட்டாரிடம் தாம் பத்திரமாக அவரை அழைத்து வந்துவிடுவதாக உறுதியளித்து விட்டு, திரும்பிப்பார்த்தால் Dae-su-வைக் காணோம்.

Dae-su தாம் வெளித்தொடர்பு ஏதுமில்லாத ஒரு அறையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறார். வேளா வேளைக்கு வறுக்கப்பட்ட பணியாரம் போன்ற உணவு மாத்திரம் சிறு துளை வழியாக வழங்கப்படுகிறது. யார், ஏன் தம்மை கடத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை தெரியாத குழப்பமான உணர்வு. தற்கொலை முயற்சியும் தோல்வியாக, shadow boxing பயிற்சி எடுப்பதின் மூலம் சுதாரித்துக் கொள்கிறார். அறையில் உள்ள தொலைக்காட்சியின் மூலமாக அவரின் மனைவி கொலை செய்யப்பட்டதையும் அதற்கு காரணமாக முதல் குற்றவாளியாக இவரை காவல் துறை சந்தேகப்படுவதையும் அறிந்து அதிர்ந்து போகிறார். இவரின் மகளைப் பற்றிய விவரமும் தெரியவில்லை. கடுமையான தனிமையின் காரணமாக ஹிஸ்டீரியாவும், சற்றே மனநிலை பிறழ்வு சூழலில் விநோதமாக காட்சிகளும் அவருக்கு தோன்றுகிறது. கூடவே ஹிப்னாடிசமும் செய்யப்பட்டு அவருள் சில விஷயங்கள் பதியப்படுகின்றன. இப்படியாக 15 வருடங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திடுதிடுப்பென்று விடுதலை செய்யப்படுகிறார்.

தம்மை கடத்தி சிறை வைத்திருந்தவர் யார் என்று கண்டுபிடித்து பழிவாங்க தீவிரப்படும் இவரை ஒரு பிச்சைக்காரர் அணுகி ஒரு கைபேசியையும் பணத்தையும் அளித்து மறைந்து போகிறார். ஒரு உணவகத்தினுள் நுழையும் இவர் அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணால் (mido) கவரப்பட்டு அன்பு கொள்கிறார். அப்போது கைபேசியில் வரும் அழைப்பின் குரல் "நான்தான் உன்னை 15 வருடங்களாக சிறை வைத்தவன். இயன்றால் என்னை கண்டுபிடி. என்னை கண்டுபிடித்தால் நானே தற்கொலை செய்து கொண்டு சாகிறேன். இல்லையென்றால் mido கொல்லப்படுவாள்" என்று சவால் விடுக்கிறது.
தனக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட உணவின் மூலம் அதன் பிரத்யேக சுவையை நன்கறிந்த Dae-su ஒவ்வொரு உணவகமாக சென்று எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கிறார். டெலிவரி செய்யும் பையனின் மூலம் தாம் சிறைப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கும் அவர், அங்கு வார்டராக இருந்தவனின் பல்லைப்பிடுங்கி மூலவரைப் (Woo-Jin) பற்றி அறிகிறார். அவர் சிறைப்படுத்தப்பட்ட காரணமாக கூறப்படுவது '"he talks too much". Woo-Jin பற்றி தம் நண்பர்களிடமும் அறிந்தவர்களிடமும் விசாரிக்கும் போது அவர் தம்முடன் பள்ளியில் இணைந்து படித்த பழைய மாணவர் என்று அறிய நேர்கிறது. அவருக்கும் தமக்கும் என்ன மாதிரியான பகை இருக்க முடியும் என்று Dae-su ஆராய்கிறார். இதற்கிடையில் அவருக்கும் midoவிற்குமான உறவு மிகவும் நெருக்கத்தை அடைந்து உடல்ரீதியான தொடர்பிற்கு செல்கிறது.

()

தம்முடைய மாணவப் பருவத்தை நினைவு கூறும் Dae-su, Woo-Jin-ம் அவரது சகோதர உறவு முறையிலான soo-ah என்கிற பெண்ணும் பாலியல் நோக்கத்தில் ஈடுபடும் காட்சியை ஒளிந்திருப்பதை காண நேரிடுகிறது. இவர் பார்ப்பதை அவர்களும் பார்த்து விடுகிறார்கள். பள்ளி முழுவதும் soo-ah பற்றிய செய்திகள் வதந்தி, வம்புகளுடன் இணைந்து ஒலித்து அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்தி பரவுகிறது. இதை தாங்க முடியாத அந்தப் பெண் Woo-Jin எதிரிலேயே தற்கொலை செய்து கொள்கிறாள். இந்தச் செய்திகளை ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்து கொள்ளும் Dae-su, Woo-Jin-ஐ கண்டுபிடித்து நேருக்கு நேராக சந்திக்கிறார். "உன் சகோதரியின் மரணத்திற்கு நீதான் காரணம்" என்று குற்றஞ்சாட்டுகிறார். தாம் அவனை கண்டுபிடித்து விட்டதால் ஒப்பந்தப்படி அவன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.

பதிலாக Woo-Jin அவருக்கு ஒரு பரிசை அளிக்கிறார். அதைப் பிரிக்கும் Dae-su-விற்கு பூமியே இரண்டாக பிளந்தாற் போன்ற அதிர்ச்சி ஏற்படுகிறது. திகைக்க வைக்கும் அந்த அதிர்ச்சி என்ன என்பதையும் பின்பு இருவருக்கும் என்ன ஆனது என்பதையும் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்வதுதான் இயக்குநரின் உழைப்பிற்கு நியாயமான செயலாக இருக்கும் என்று கருதுகிறேன்.

()

சற்றே நுட்பமான இந்தக்கதைக்கு PARK CHAN-WOOK-ன் திரைக்கதை என்னை அயர வைக்கிறது. Dae-su சிறையில் அடைத்து வைக்கபட்டிருக்கும் போது வருடங்கள் கடந்து செல்வதை தொலைக்காட்சியில் முக்கிய உலக செய்திகள் மூலம் fast cutting உத்தி மூலம் சொல்லும் காட்சியும் மனநிலை பிறழ்கிற Dae-su, தம் உடம்பில் எறும்பு ஒன்று துளையிட்டு வெளிவருவதாக உணரும் காட்சியும் கவர்கிறது. சிறையில் இருந்து வார்டர் மற்றும் அவர்கள் ஆட்களிடம் சண்டையிட்டு தப்பிக்கும் சண்டை காட்சி ஒன்று தொடர்ச்சியாக சுமார் ஐந்து நிமிடத்திற்கு ஒரே கோணத்தில் காட்டப்படுவதும் அருமை. படத்தின் ஒளிப்பதிவு சிறப்பானதாக இருக்கிறது.

Dae-su-வாக நடித்திருக்கும் Choi-Min-sik பல காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். Woo-Jinவின் காலைப்பிடித்து கதறும் போதும் தம்முடைய நாக்கை துண்டித்துக் கொள்ளும் காட்சிகளிலும் அவரின் முகபாவங்கள் மிகுந்த நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. Woo-Jin-ஆக நடித்திருக்கும் Yu-Ji-tae அலட்டிக் கொள்ளாமல் நம்முடைய வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நான் முன்னமே கூறினது மாதிரி 'பழிவாங்குதல்' என்கிற தத்துவத்தில்தான் இந்தப்படம் இயங்குகிறது. தம்மை சிறைப்படுத்திவனை Dae-su கண்டுபிடித்தவுடன், Mido கூறுகிறாள். "உனக்குத் தேவையானது கிடைத்து விட்டது. இத்தோடு விட்டுவிட்டு நாம் அமைதியாக வாழலாமே". அதற்கு Dae-su "இல்லை. பழிவாங்குதல் என்னுடைய ஒரு பகுதியாக இருக்கிறது".

()

இந்த trilogy-யின் மற்ற இருபடங்களையும் இயக்குநரின் மற்ற படங்களையும் கூட காண வேண்டும் என்கிற ஆவலை இந்தப்படம் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப்படத்தின் சட்டப்படி அல்லாத தழுவலாக zinda என்கிற இந்தித் திரைப்படம் வந்திருப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

நன்றி: விக்கிபீடியா