Thursday, April 08, 2010

க்ரியா இணையதளம்

தனிமடலில் வந்ததை மற்றவர்களும் பயன்பெற இங்கே பகிர்கிறேன். 

- சுரேஷ் கண்ணன்

 
 
அன்புடையீர்,

வணக்கம்! க்ரியாவின் இணையதளத்தில் ‘வெளியீடுகள்’ பகுதியில் க்ரியாவின் ஒவ்வொரு வெளியீட்டிலிருந்தும் ஒரு சிறு பகுதியை வாசகர்கள் படித்துப் பார்ப்பதற்கு வசதியாக நாங்கள் தற்போது வழங்கியிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு நூலுக்குக் கீழேயும் மாதிரிப் பக்கங்கள் என்ற தலைப்பைச் சொடுக்கினால் அந்தந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை வாசகர்கள் படித்துப் பார்க்கலாம். இதைத் தாங்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.


--
Kumaresh A.


--
நன்றி, வணக்கம்.
க்ரியா
ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
creapublishers@gmail.com
www.crea.in

suresh kannan

Wednesday, April 07, 2010

இடியட் நாவல் குறித்து தாஸ்தாயெவ்ஸ்கி


"இந்நாவலின் (அசடன் - idiot) கருத்து எனக்கு மிகவும் பிடித்தமான பழைய கருத்து. ஆனால் அது சிக்கலானதால் நீண்ட காலமாக நான் தொடவில்லை ; இப்போது அதனைத் தொட்டிருக்கிறேன் என்றால் மிகவும் மோசமான நிலைமையில் என்னைக் காண்பதாலேயே. நாவலின் பிரதான கருத்தாக்கம் நேரியலான நல்லவனை படைப்பதே. உலகத்தில் வேறெதுவும் அவ்வளவு சிரமமானதல்ல, குறிப்பாக தற்போதைய கால கட்டத்தில் நேரிய நல்லவனை படைக்க முயன்ற எல்லா எழுத்தாளர்களும் நமது எழுத்தாளர்கள் மட்டுமல்லாது அய்ரோப்பிய எழுத்தாளர்களும் எல்லாத் தடவைகளிலும் தோற்றுப் போயினர். அது ஒரு வரம்பற்ற காரியம். நல்லது என்பது ஒரு இலட்சியம் ; நம்முடையதும் பண்பாடடைந்த அய்ரோப்பாவினுடையதுமான அந்த இலட்சியம் இன்னும் ஈடேறவில்லை. உலகமெங்கிலும் ஒரே ஒரு நேரிய மனிதன் தான் இருக்கிறான். கிறிஸ்து... கிறித்துவ இலக்கியத்தில் உள்ள நல்லவகை மாதிரிகளில் மிகவும் பூரணமானது டான்க்விஜோட். ஆனால் அவன் அசட்டுத்தனமாக இருப்பதாலேயே நல்லவனாக இருக்க முடிகிறது. இதன் காரணமாகவே வெற்றி பெறுகிறது. தனது மதிப்பை உணராத நல்லவன் முட்டாளாக்கப் படுகையில் கருணையுணர்வு உண்டாகிறது. அதன் காரணமாக வாசகனிடம் இரக்கம் பிறக்கிறது. இந்தக் கருணை எழுவதே நகைச்சுவையின் இரகசியம். ஜீன்பால்ஜீனும் சக்திமிக்க முயற்சியே ; அவனது துரதிருஷ்டத்தின் அளவாலும் சமூகம் அவன் பால் காட்டும் அநீதியாலும் அவன் இரக்கத்தை உண்டு பண்ணுகிறான். எனது நாவலில் இந்த மாதிரி எதுவுமில்லை, ஒன்றுமில்லை, எனக்கே அது முழுத் தோல்வியாகிவிடுமோ என மிகவும் அஞ்சுகிறேன்.

- 'The Idiot' நாவலின் கருத்தாக்கம் குறித்து,  ஒரு கடிதத்தில் தாஸ்தாயெவஸ்கி.

[நன்றி: தாஸ்தாயெவ்ஸ்கி - ஒரு தொகுப்பு - கோணங்கி - கல்குதிரை வெளியீடு - 1991)

suresh kannan

Monday, April 05, 2010

தி இடியட் - தஸ்தாயெவ்ஸ்கி - அகிரா

உரையாடல் அமைப்பின் சார்பில் அகிரா  குரோசாவாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நண்பர் சிவராமன் திரையிட்ட படம் 'தி இடியட்', தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் பெரும்பாலும் அகவுணர்வுகளின் போராட்டம் சார்ந்து இயங்கக்கூடியது. இதை எழுத்தில் வாசகனிடம் கடத்திக் கொண்டு வருவதே சவாலானது எனும் போது பல விவரணைகளுடன் சாவகாசமாக உருவாக்கப்படும் இந்த  எழுத்தைச் சிதைக்காமல் திரையில் கொண்டு வருவது இன்னுமொரு மகத்தான சவாலை எதிர்கொள்வதற்கு ஒப்பானது. 

நான் தஸ்தாயெவ்ஸ்கியின் சில குறுங்கதைகளை மாத்திரம் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த நாவலை வாசித்ததில்லையென்பதால் திரைப்படத்தைப் பின்தொடர சிரமமாயிருந்தது. ஆனால் நாவல் திரைப்படமாகும் போது மூலப்படைப்பை படித்திருக்க வேண்டும் என்பது பொது விதியல்ல. அது அல்லாமலே திரைப்படமும் நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை சமயங்களில் கூடுதலாகவே ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு சத்யஜித்ரேவின் 'சாருலதா'வை ரசிக்க வேண்டுமெனில் தாகூரின் 'சிதைந்த கூடு' சிறுகதையை வாசித்திருக்க வேண்டுமென்பதில்லை என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

இப்போது 'தி இடியட்டை' நாவலுடன் தொடர்புபடுத்த இயலாத நிலையில் திரைப்படம் வழியாக என்னுடைய சொற்ப புரிதலிலிருந்து பார்க்கலாம்.



மரணத்தை மிக மிக அருகில் தவிர்த்த ஒரு போர்க்குற்றவாளி Kameda.  அது தரும் அனுபவத்தால் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் கருணையுள்ளம் கொண்டவனாகவும் வலிப்பு நோயுள்ளவனாயும் மாறுகிறான். இதன் காரணமாகவே மற்றவர்களால் 'முட்டாளாக' பார்க்கப்படுகிறான். ஊருக்குத் திரும்பும் அவனுடைய வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகிறார்கள். Ayako என்கிற உறவுக்காரப் பெண். செல்வந்தரின் வைப்பாட்டியான Taeko Nasu.

இடியட்டான Kameda, Taeko Nasu-வை புகைப்படத்தில் பார்த்த முதல் கணத்திலிருந்தே அவளால் ஈர்க்கப்படுகிறான். இவனுடன் வண்டியில் பயணிக்கும் முரடனான Akama அவள் அழகை ரசிக்கும் போது, Kameda அவளுடைய கண்கள் கருணையைக் கோருவதாக உணர்கிறான்.  தன் முன்னாலேயே கொல்லப்பட்ட ஒர் இளைஞனின் கண்களை அவளுடைய கண்கள் நினைவுப்படுத்தியதாக பின்னால் விவரிக்கிறான். Taeko Nasuவும் இவனுடைய அப்பாவித்தனத்தினால் ஈர்க்கப்படுகிறாள். இதற்காகவே தன்னை மணந்து கொள்ளவிருக்கும் பணத்தாசை பிடித்த Kayamaவை புறக்கணிக்கிறாள். என்றாலும் திடீரென்று தீர்மானித்தவளாய், தன்னால் இந்த அப்பாவி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முரடன் Akamaவை மணந்து கொள்ளத் தீர்மானிக்கிறாள்.

இப்படியாக இந்த முக்கோணக் காதல் பயணம் செய்யும் பாதைகளும் அதனுடனான உணர்ச்சிப் போராட்டங்களும் அகிராவின் பிரத்யேக திரை மொழியில் விவரிக்கப்படுகிறது.

இடியட்டின் பாத்திரத்தை விட வைப்பாட்டியான Taeko Nasuவின் பாத்திரம் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளதாக நான் உணர்கிறேன். இவள் முரடனுடன் மறைந்துவிடுவதால் அவளைத் தேடித்திரியும் Kameda மெல்ல Ayakoவால் ஈர்க்கப்படுகிறான். என்றாலும் இவர்களின் இடையில் மீண்டும் நுழையும் Taeko Nasu, "அவன் உன்னை விடவும் என்னைத்தான் விரும்புகிறான். வேண்டுமென்றால் சோதித்துப் பார்" என்று சவால் விடுகிறாள். இருவரின் இடையே  Kameda தடுமாறினாலும் Taeko Nasu மீதுள்ள ஈர்ப்பை அவனால் இழக்க முடியவில்லை.

முரடன்  Akama வாக நடித்த தோஷிரோ மிபுனேவின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. 'செவன் சாமுராய்' உட்பட அகிரா தன்னுடைய பல படங்களில் இவரை உபயோகப்படுத்தியுள்ளார்.


()

ருஷ்யாவின் பனிப்படர்ந்த பின்னணியில் நிகழும் இந்த நாவலின் களத்தை அதே பின்புலத்தோடு ஜப்பானில் நிகழ்வதாக உருவாக்கியுள்ளார் அகிரா. இந்த வேறுபாடும் இருநாட்டு கலாசார முரண்களும் படத்தோடு ஒன்றிப் போக முடியாமல் செய்துவிடுகின்றன. மேலும் தஸ்தாயெவ்ஸ்கி மீதுள்ள மதிப்பால்  நாவலை அப்படியே திரைமொழிக்கு அகிரா மாற்றம் செய்துள்ளதை விமர்சகர்கள் ஒரு குறையாக முன்வைக்கிறார்கள். நாவலின் அடிச்சரடை மாத்திரம் எடுத்துக் கொண்டு தன்னுடைய பாணியில் அதை உருவாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அகிரா இந்தப் படத்தை நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடுவதாக உருவாக்கினார். ஆனால் ஸ்டூடியோ முதலாளிகள் இத்தனை நீளத்தை விரும்பாததால் இருவருக்குள்ளாகவும் கருத்து மோதல் ஏற்பட்டு பின்னர் இரண்டரை மணிநேரமாக குறைக்கப்பட்டது. இதனால் படத்தின் சில ஆரம்ப பகுதிகள் எழுத்தின் மூலமாகவும் பின்னணி குரலின் மூலமாகவும் பொருந்தா அபத்தமாக நகர்த்தப்படுகிறது.

அகிராவின் காட்சிக்கோர்வைகளாலும் காமிராக் கோணங்களாலும் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ள அண்மைக் காட்சிகளாலும் குறிப்பாக முக்கோணக் காதல் கதையினாலும் தமிழ்த்திரை இயக்குநர் ஸ்ரீதர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நான் யூகிக்கிற அளவிற்கு இது ஸ்ரீதரின் சில திரைப்படங்களை நினைவூட்டியது. ஒளிப்பதிவாளர்  Toshio Ubukata-ன் இருளும் ஒளியுமான கவிதைக் கணங்கள் பிரமிப்பேற்படுத்தியது ஒருபுறம் என்றால் Fumio Hayasaka -ன் பின்னணி இசை காட்சிகளின் தொனியோடு மிகப் பொருத்தமாக இயைந்தொலித்தது.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை வாசித்த பிறகாகவும் மீள்பார்வைகளின் மூலமாகவும் இந்த திரைப்படத்தை காட்சிகள் ரீதியாக இன்னும் அழுத்தமாக புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

திரையிடலின் இறுதியில் நிகழ்ந்த கலந்துரையாடலில் கவிஞர் ராஜசுந்தர்ராஜன் முன்வைத்த சில விளக்கங்கள், திரைப்படத்தை சரியான கோணத்தில் உள்வாங்கிக் கொள்ள உதவியதோடு மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தை தனியாக காண்பதை விட ஒத்த ரசனையுள்ள நபர்கள் இணைந்து ஒரு குழுமமாக காண்பதிலுள்ள பயன்பாட்டையும் புரிந்து கொள்ள உதவியது.

திரையிடலை ஏற்பாடு செய்த 'உரையாடலுக்கும்' அதற்கு உதவிய  'கிழக்கு பதிப்பகத்திற்கும்' நன்றி. 

suresh kannan

Saturday, April 03, 2010

காதல் காமம் துரோகம்

மணிமாறன் கணினியைத் திறந்து மின்னஞ்சலை சோதிக்க முயன்ற போது 'TRUE HOT INDIANS' (EXCLUSIVE) என்கிற குறிப்புடன் ஒரு மின்னஞ்சல் சாகசமாக கண்ணைச் சிமிட்டியது. ஸ்பேம் மெயிலோ என்று அழிக்க முயன்றான். ஆனால் அது ஆஸ்திரேலிய நண்பனிடமிருந்து வந்திருந்தது. Networking Site மூலமாக நண்பனானவன். புகைப்படத்தைக் கூட பரிமாறிக் கொள்ளவில்லையெனினும் ஒத்த அலைவரிசை ரசனையில் ஒரளவிற்கு நெருக்கமான நண்பனாகிப் போனவன். அந்த ரசனை எது என்பதுதான் வில்லங்கமானது. Voyeurism. 

மணிமாறன் விரும்பி பார்க்கும் பாலியல் படங்கள் வழக்கமானவைகள் அல்ல. பிரபல நடிகைகள் உடை மாற்றும் ஒளித்துணுக்குகள், டவல் நழுவ குளியலறைக்குச் செல்லும் அந்நிய குடும்பத்துப் பெண்கள், அவர்கள் அறியாமல் படம் பிடிக்கப்படும் ஆதாம் ஆப்பிள் சமாச்சாரங்கள். 'இந்தா எடுத்துக்கோ' என்னும் அப்பட்டமான வீடியோக்களை விட சாவித்துவாரம் வழியாக குறுகுறுப்புடன் ஒளிந்து பார்க்கும் உணர்வைத் தரும் வீடியோக்கள் மணிமாறனுக்கு அதிக கிளர்ச்சியைத் தந்தது. இதில் வெள்ளைக்காரிகளை விட இந்திய குறிப்பாக தென்னிந்திய பெண்களின் வீடியோக்களே தேடலே அதிகம். தேசப்பற்றெல்லாம் ஒன்றுமில்லை. இதை ரசிப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருவதால் வழக்கமான முறையில் படம்பிடிக்கப்படும் நடிகர்கள் கூட செயற்கையாக இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் அசலானது எது என்பதை கண்டுபிடிப்பது கூட ஒரு சுவாரசியமான விளையாட்டாகி விட்டது.

ஆஸ்திரேலிய நண்பன், கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளும் தளத்திலிருந்த ஒரு லிங்க்கை வழக்கம் போல் மணிமாறனுக்கு அனுப்பியிருந்தான். குறுகுறுப்புடன் அதை தரவிறக்கம் செய்த இவன் அதை ரகசிய போல்டரில் போட்டு வைத்திருந்தான். அன்று முழுவதும் அதைப் பார்க்கப் போகிற தவிப்பு பல தருணங்களில் மூளையில் வியாபித்து வெளிப்பட்டது. அன்றிரவு செயற்கையான தனிமையை ஏற்படுத்திக் கொண்டு வீடியோவை பார்க்க ஆரம்பித்தான். முற்றிலும் அந்நிய சூழ்நிலையில் இருந்த அந்த இருவரும் யாரோ என்று பார்க்க ஆரம்பித்தவனுக்கு சில நொடிகளிலேயே தலையில் இடி இறங்கினாற் போல இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு மணிமாறனுக்கு திருமணமாகி தேனிலவிற்காக பெரும்பாலோர் செல்லும் அந்த மலை வாசஸ் தலத்திற்குச் சென்றிருந்தான். ஓட்டலின் பெயர் கூட மறந்துவிட்டது.

()

மணிமாறனுக்கு நேர்ந்த அந்த விபத்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நாம் இன்று கண்காணிப்பு சமுதாயத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். டிராபிக் சிக்னலில் இருந்து ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், ஹை-டெக் அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள்.. என்று பல இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் காமிராக்கள் நம்மை தொடர்ந்து பதிவு செய்து கொண்டேயிருக்கின்றன. இவற்றின் மூலம் ஒருவரின் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை கண்காணித்து அவரைப் பற்றின பல தகவல்களைத் தொகுக்க முடியும்.

குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க இவை செயல்படுவது ஒருபுறமென்றால் ஒருவரை வேவு பார்க்கவும், பாலியல் செய்கைகளை படம்பிடித்து பணம் பறிக்கவோ, பார்த்து ரசித்து மகிழவோ செயல்படுத்தப்படும் பல ரகசிய கேமிராக்கள் ஒரு தனிமனிதனின் அந்தரங்க வெளியை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. நம்முடைய அந்தரங்கம் பாதுகாப்பாக இருக்கும் உணர்வில் நாம் மற்றவர்களின் அந்தரங்களைப் பற்றி அறிந்து கொள்ள மிக ஆவலாகயிருக்கிறோம்.

இதில் அதிகம் அவதிப்படுவது பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள், துணை நடிகைகள். படப்பிடிப்புகளுக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போதும் குளியலறையிலோ, உடைமாற்றும் வசதியில்லாத சூழ்நிலையில் தற்காலிக ஏற்பாடுகளின் போதோ காமிரா ஏதாவது தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறதா. என்கிற பதட்டம் தருகிற மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. 'ஒரு கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது மறைவானதொரு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றதை மேலிருந்து ஒரு குழுவான நபர்கள் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்ததை எண்ணி பல இரவுகள் அழுதிருக்கிறேன்' என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா.

ஒருவரின் அந்தரங்க வெளிக்குள் நுழையும் உரிமையை 'இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம்' என்கிற போர்வையில் இன்று தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களும் கையில் எடுத்துள்ளன. லஞ்ச ஊழல்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள் ஒருபுறமிருக்க பாலியல் செய்கைகளை படம்பிடித்து அவற்றை வைத்து பணம் பறிக்கும், பேரம் படியாவிடில் அதை வெளிப்படுத்தி அதன் மூலமும் கூட சம்பாதிக்கத் துணியும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன. கற்பனையாக மேலே குறிப்பிட்ட மணிமாறன்களைப் போல பல தனிநபர்கள் மற்றவர்களின் அந்தரங்களைக் காண எதையும் செலவு செய்ய தயாராக இருப்பதால் இவர்களுக்காக இணையத்தில் பல தளங்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளன.

()

முன்பே குறிப்பிட்டது போல காமிராக்களால் தொடர்ந்து மறைமுகமாக கவனிக்கப்படும் காட்சிகளை வைத்து ஒருவரின் வாழ்க்கை பற்றிய திரைப்படத்தைக் கூட உருவாக்கிவிட முடியும். ஜிம்கேரி நடித்து 1998-ல் வெளிவந்த The Truman show இதையே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. சில பரிசோதனை திரைப்படங்களில் இவ்வாறான வீடியோ பதிவுகளை ஒரு உத்தியாகவே பயன்படுத்துகிறார்கள். Cloverfield (2008) ஒரு அமெச்சூர் வீடியோகிராபர் எடுக்கிற தொடர்ச்சியான குழப்பமான காட்சிகளைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.



இதே பரிசோதனை முறையில் ஒர் இந்தித்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. Love, Sex Aur Dhokha (2010). You are being watched என்பது இதன் டேக் லைன். தனது ப்ராக்ஜக்ட்டிற்காக படமெடுக்கும் ஒரு திரைப்படக்கல்லூரி மாணவனின் காதல், சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஒருவன் சக பெண் தொழிலாளியுடன் உறவு கொண்டு அதை வைத்து பணம் சம்பாதிக்க முயலும் காமம், பிரபலங்களின் அந்தரங்கங்களை சூடான வீடியோ செய்திகளாக்கும் ஒரு பத்திரிகையாளனின் துரோகம் ஆகிய மூன்று பகுதிகளாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்தனியான இந்த மூன்று பகுதிகளுக்கும் சுவாரசிய தொடர்பு ஏற்படுத்தும் நுணுக்கத்தில் இயக்குநர் Dibakar Banerjee வெற்றி பெற்றுள்ளார்.

திரைப்படக் கல்லூரி மாணவனின் காம்கார்டரில் பதிவாகும் காட்சிகள், ஷாப்பிங் மாலின் CCTV- காட்சிகள், பத்திரிகையாளனின் ரகசிய காமிரா காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இவ்வகையில் இத்திரைப்படத்தை முதல் நவீன பரிசோதனை சினிமா என்று வகைப்படுத்தலாம்.

பிரச்சினைகள் முடிந்து எல்லோரும் ஒன்றாக இணைந்து சிரிக்கும் காதல்-குடும்ப திரைப்படங்கள், முதல் பகுதியில் மிதமான கிண்டலுக்குள்ளாகின்றன. ஆனால் இதன் முடிவு அப்படியல்லாமல் மிகக் குரூரமாயுள்ளது.

இரண்டாவது பகுதி பொதுவெளியில் நம்மை கண்காணிக்கும் காமிராக்கள் அவற்றின் குறிப்பிட்ட உபயோகத்திற்கு மாறாக பயன்படுத்துப்படுவது குறித்து எச்சரிக்கிறது. அலட்சியமாக, கவர்ச்சியாக உடையணியும் பெண்கள் இவற்றின் பிரதான இலக்கு.

மூன்றாவது பகுதி பிரபலங்கள் ரகசிய காமிராக்களில் சிக்குறுவதையும் அதை வைத்து சம்பாதிக்க முயலும் ஊடகங்களைப் பற்றி பேசுகிறது.

இன்றைய நவீன சமூகத்தில் நிகழும் நவீனக் குற்றங்களை இத்திரைப்படம் சுட்டிக் காட்டினாலும் திரையில் பார்க்கும் போது சிலர் அதிர்ச்சியடையலாம். யாரோ நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற பிரக்ஞையுடன் வாழ்வது மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடியதுதான் என்றாலும் அதுதான் யதார்த்தமான நிஜம்.

 suresh kannan