தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜனி பட வெளியீடு என்பதே ஒரு திருவிழாவாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது. குசேலன் திரைப்படம் வரப்போகும் இந்த தருணமும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகமும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தக்கூடியது. கட்அவுட்களின் மீது பாலாபிஷேகம், படச்சுருளை வைத்து பூஜை, ஊர்வலம்... என்று எல்லா அபத்தமான சடங்குகளுக்கும் குறைவிருக்கப் போவதில்லை. ஆனால் தரம் என்கிற அளவுகோலின் மூலம் நோக்கும் போது 75 ஆண்டு கால தமிழ் சினிமா மீண்டுமொரு முறை தலையைக் குனியக்கூடிய தருணமும் கூட இது என்பதையும் மறக்கக்கூடாது.
'கத பறயும் போள்' என்கிற மலையாள திரைப்படம்தான் 'குசேலனாக' உருமாறப் போகிறது என்பது தெரிந்த செய்தி. ஆனால் இந்த உருமாற்றம் தமிழில் எப்படி நிகழப்போகிறது என்பதை உற்று நோக்கும் போது, கலை என்கிற நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல ஒதுக்கப்படப் போவதையும் வணிகம் என்கிற சமாச்சாரமே பிரதானமாக இருக்கப் போதையும் காண முடிகிறது. தேன்மாவு கொம்பத்து, மணிசித்ரத்தாழ் போன்ற மலையாளத் திரைப்படங்கள் தமிழில் முறையே முத்து, சந்திரமுகி என்று உருமாறின பிறகு அவற்றின் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை இரண்டு திரைப்படங்களையும் அவதானித்த பார்வையாளர்களால் எளிதில் உணர்ந்திருக்க முடியும். இதே போன்றதொரு கொடுமையான விபத்துதான் 'கத பறயும் போளுக்கு'ம் நிகழப் போகிறது என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.
()
ஒரு காலத்தில் மலையாள சினிமா யதார்த்தத்திற்கு புகழ் வாய்ந்தாக இருந்தது. 1970-80களில் புதிய அலை தோன்றி அடுர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர், ஜான் ஆப்ரஹாம், K.R.மோகனன், G.S.பணிக்கர் போன்றவர்களின் பங்களிப்பின் மூலம் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் உருவாகின. அதே சமயத்தில் பல தமிழ்நாட்டு பார்வையாளர்களுக்கு மலையாளத் திரைப்படங்கள் என்பவை, ஒரு கட்டழகி தன்னுடைய மேலாடையை கழட்டுகிற தோரணையில் நிர்வாண முதுகைக் காட்டிக் கொண்டு நிற்பதும் அதன் மீது பெரிய எழுத்தில் A என்கிற ஆங்கில வார்த்தை பொறிக்கப்பட்டிருக்கும் என்பதாகவே இருந்தது. திரைப்படங்களின் தேசிய விருதுகளுக்காக மலையாளமும் வங்காளமும் மாத்திரமே பிரதான போட்டிகளாக இருந்த அளவிற்கு மிகச்சிறப்பான யதார்த்தமான, அந்த மாநிலத்தின் கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலிக்கும் படங்கள், மலையாளத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று மலையாள சினிமாவின் முகம் மாறி விட்டது. கோடிகளில் புழங்கும் தமிழ்த் திரையுலகின் வணிகத் தாக்கத்தில் மயங்கி மலையாளத் திரையுலகமும் தமிழ்த் திரையுலகத்தின் மோசமான ஒரு பிரதியாக மாறிவிட்டிருக்கிற துரதிர்ஷ்டவசமான நிலையை காண முடிகிறது.
இவற்றின் இடையே ‘கத பறயும் போள்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதையாசிரியரான ஸ்ரீனிவாசன், யதார்த்தமான சிறந்த நகைச்சுவைப் படங்களின் உருவாக்கங்களின் பங்கெடுப்புக்களுக்காக மிகவும் சிலாகிக்கப்படுகிறார். அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘வடக்கு நோக்கி இயந்திரம்’ மற்றும் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா’ என்பவை மலையாளத்தின் முக்கிய திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. ‘கத பறயும் போள்’ திரைப்படம், வாழ்வில் புகழ், செல்வத்தை விட நட்பே முக்கியமானது என்கிற விஷயத்தைப் பேசுகிறது.
கேரளத்தின் ஒரு சிற்றூரில் சிகையலங்காரத் தொழிலாளியான ஸ்ரீனிவாசன், நவீனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வறுமையில் சிரமப்படுகிறார். அந்த ஊருக்கு படப்பிடிப்பிற்காக வரப்போகும் நடிகர் (மம்முட்டி) ஸ்ரீனிவாசனின் பால்ய கால நண்பன் என்ற செய்தி ஊருக்குள் பரவியதில் ஒரே நாளில் அவரின் மதிப்பு உயர்கிறது. அதுவரை அவரை மனிதராக கூட மதிக்காதவர்கள் நடிகரிடம் பெறப்போகும் லாபத்துக்காக ஸ்ரீனிவாசனை கொண்டாடுகிறார்கள். ஆனால் தாழ்வுமனப்பான்மையும் கூச்சமும் கொண்ட ஸ்ரீனிவாசன் நடிகரை அணுகாமலிருக்கிறார். இதனால் ஊராரின் ஏச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
ஊருக்குள் நிகழும் ஒரு சிறுவிழரவில் பேசும் நடிகர் ஸ்ரீனிவாசனிடம் தாம் கொண்டிருந்த நட்பை மாத்திரமே பிரதானமாக குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பேசுகிறார். பிறகு நண்பர்கள் சந்திப்பும் ஊராரின் மனமாற்றமும் நிகழ்கிறது. இவ்வாறாக போகிறது ‘கத பறயும் போள்’ கதை. இதில் நடிகராக வரும் மம்முட்டி வரும் காட்சிகள் மிகச் சொற்பமே. கதை பெரும்பாலும் ஸ்ரீனிவாசனின் வறுமையையும் ஊராரின் போக்கையும் (கறுப்பு) நகைச்சுவையின் மூலம் சித்தரிக்கிறது.
()
இந்தப்படம் தமிழில் ‘குசேலனாக” உருமாற்றம் செய்யப்படும்போது என்ன நிகழப் போகிறது என்பதை இதுவரை வந்திருக்கிற செய்திகளின் மூலம் எளிதாக ஊகிக்க முடிகிறது. மலையாளத் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போன ரஜினிகாந்த் உடனே தமிழில் இதை எடுக்க வேண்டும் என்று விரும்பினாராம். அதற்கு அவர் இயக்குநராக உடனே தேர்ந்தெடுத்தது, திரைப்படக்கல்லூரியில் தன்னுடன் படித்த, ‘கத பறயும் போள்’ கதையை உருவாக்கின ஸ்ரீனிவாசனை அல்ல. ‘சின்னதம்பி’ போன்ற கலைநயம் மிக்க காவியங்களைப் படைத்த பி.வாசுவை. ஏன்? இதை மலையாளத் திரைப்படத்தின் பாணியிலேயே எடுத்தால், தான் நடித்தாலும் கூட அது ஊத்திக் கொள்ளும் என்று ரஜினிக்கு தெளிவாகவே தெரியும். எனவேதான் இந்த எளிமையான கதையில் தேவையான மசாலா சமாச்சாரங்களை சேர்த்து கொத்து பரோட்டாவாக்கி தமிழ் ரசிகர்களுக்கு படைக்க, மசாலா சமாச்சாரத்தில் விற்பன்னரான வாசுவை அழைத்திருக்கிறார். ஏகப்பட்ட பில்டப்புடன் வெளிவந்த ‘பாபா’ படுதோல்வி அடைந்த போது அதிலிருந்து ‘சந்திரமுகி’யின் மூலம் தன்னை மீட்டெடுத்துக் கொடுத்த வாசுவின் திறமை பற்றி ரஜினி நன்றாக அறிவார்.
இந்த இடத்தில் P.வாசுவைப் பற்றி சற்று பேச வேண்டும். இவரின் பெரும்பாலான.. மன்னிக்கவும் அனைத்துப் படங்களும் அவரின் இனிஷயல் போலவே இருக்கும் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. (ஆரம்பத்தில் சந்தானபாரதியுடன் இணைந்து எடுத்த ‘பன்னீர் புஷ்பங்கள்’ மாத்திரம் ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு). தமிழ்த்திரைப்படங்களின் வரிசையில் மற்ற பெரும்பாலான இயக்குநர்களைப் போலவே குப்பைகளை தோரணங்களாக அடுக்குபவர். ‘சின்னதம்பி’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நினைத்தால் இப்போது கூட எனக்கு புல்லரிக்கிறது. விதவைத் தாய் ஒருத்தியை அவமானப்படுத்தும் நோக்கத்தில் வில்லன் வண்ணப்புடவை கட்டி, குங்குமம் வைக்கும் போது பாய்ந்து வரும் மகன் குதிக்கும் போது தெறிக்கும் நீரில் தாயின் குங்குமம் அழிந்து புடவையும் வெள்ளையாகி விடும். ஒரு அடிமட்ட pervert-களினால்தான் இவ்வாறெல்லாம் காட்சிகளை யோசிக்க முடியும். இதைப் போல நிறைய பெர்வர்ட்டுகள் தமிழ் இயக்குநர்களாக உள்ளனர்.
இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநரான இருந்து குருவின் பெயரை களங்கப்படுத்தும் இப்பேர்ப்பட்ட பிரகஸ்பதிதான் இந்தப்படத்தை இயக்குவது. படம் தயாரிக்கப்படும் முன்னரே இந்தப்படத்தில் தன்னுடைய பங்கு 25 சதவீதம்தான் இருக்கும் என்று ரஜினிகாந்த், ரசிகர்களிடம் அதிகபட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் தெளிவுபடுத்தி விட்டாராம். ஆனால் மசாலா விற்பன்னரான வாசு இதை ஏற்றுக் கொள்வாரா? படம் கல்லாப்பெட்டியை நிரப்ப வேண்டுமே. அதனால் ரஜனிக்கு தேவையான மசாலாவையெல்லாம் பதமாக அரைத்து எளிமையான மலையாளத்திரைக்கதையின் வண்ணமே தெரியாமல் முழுக்க கோமாளித்தனமான அலங்காரங்களை செய்திருப்பார் என்பதை படம் வெளிவந்த பிறகுதான் உணர வேண்டும் என்பதில்லை.
இதுவரை வெளிவந்திருக்கும் ‘குசேலன்’ படத்தின் புகைப்படங்களே இதற்கு முன்னோட்டமாக உள்ளன. இதற்கு முன்னர் வெளிவந்த ‘சிவாஜி’ யை ஒத்த அதே மாதிரியான ஒப்பனையுடன் (இதில் கூடவா காப்பி?) பிரதானமான போஸ்களுடன் ரஜினிகாந்தின் உருவத்தையும், ஒரு தமிழ் சினிமா நாயகி காட்ட வேண்டிய அத்தனை அம்சங்ளையும் காட்டிக் கொண்டு நயனதாராவின் கவர்ச்சியையும் காணும் போதே படத்தின் வாசனையை நுகர முடிகிறது.
ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவருக்கே கதாநாயகியாகவும் நடித்து இப்போது நாயகி பதவியிலிருந்து ரிட்டயர்டும் ஆகி பசுபதியின் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில், தாத்தா வயதுள்ள ‘ஆன்மீகவாதி’ ரஜினி அதிஇளமை நடிகைகளோடு ஜோடி சேர்ந்து அசட்டுத்தனமான ஒப்பனையோடு செயற்கை இளமை துள்ள நடிப்பதும் அதை எந்தவித சொரணையுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் பார்த்து ரசிப்பதும் கொடுமையின் உச்சக்கட்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
குசேலன் படத்தின் புகைப்படங்களில், மலையாள திரைக்கதையின் படி சொற்ப நேரம் வருகிற பாத்திரமான ரஜினியே பிரதானமாக இருப்பதையும், கதையின் முக்கிய பாத்திரமான பசுபதியும் அவரின் குடும்பமும் இந்தப்படத்தில் இருக்கிறார்களா என்கிற கேள்வியை எழுப்பும் அளவிற்கு மூடி மறைக்கப்பட்டதையும் பலரும் சுட்டிக் காட்டி கண்டித்ததில் தற்சமயம் வெளியாகும் விளம்பரங்களில் ஒரு ஓரத்தில் பசுபதியையும் இன்ன பிறரையும் கறுப்பு வெள்ளையில் (வண்ணத்தில் ரஜினியும் நயனதாராவும்) வெளியிடுகிறார்கள்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு கூத்து நடந்தது. விழாவில் ரஜினி பேசும் போது சொன்னது, படப்பிடிப்பின் போது யாரோ ஒரு பையன் அவரையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானாம். ஏன் இந்தப் பையனை துரத்தாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று இவர் யோசித்தாராம் . பிறகுதான் தெரியவந்ததாம், அது தான் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் என்று. தன்னுடைய படத்தின் இசையமைப்பாளரே யார் என்று தெரியாமலிருக்கும் இந்த பிரகஸ்பதியைத்தான் தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒரு சமயத்தில் மலை போல் நம்பிக் கொண்டிருந்தார்கள், ஏதோ இவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டில் தேனும் பாலும் ஓடப் போகிறது என்கிற கற்பனையுடன்.
பாவம் பசுபதி. கூத்துப் பட்டறையில் திறமை காட்டிக் கொண்டிருந்தவரை கமல் அழைத்து ‘விருமாண்டியில் ஒரு சாகஸ வில்லனாக சித்தரித்தவுடன் நம் தமிழ் இயக்குநர்கள் சுள்ளானுக்கும் வவ்வாலுக்கும் வில்லனாக நிறுத்தி ‘ஏய்’ என்று உறும விட்டு விட்டார்கள். அதே கமல் ‘மும்பை எக்ஸ்பிரஸில்’ பசுபதியை இன்னொரு பரிமாணத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் பொருத்தி வித்தியாசம் காட்டினாலும் மற்ற இயக்குநர்கள் அவ்வாறு யோசிக்கவே மாட்டார்கள்.
()
திரைப்படம் என்கிற ஊடகம் சமுகத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி மக்களிடையே புரட்சியையும் விழிப்புணர்வையும் உருவாக்கக்கூடிய பலமான ஆயுதம் என்கிற சமாச்சாரமே வணிகம் என்கிற பலம் வாய்ந்த சக்தியின் முன் மங்கிப் போயிருக்கின்றது. இதைப் பற்றிய எந்த உணர்ச்சியுமில்லாத ரசிகசிகாமணிகள் ஆட்டு மந்தைகள் போல் நடிகர்களின் பின்னால் சென்று கொண்டு ‘சிவாஜியும் குசேலனும்” எவ்வளவு கோடிகளில் விற்பனையாகியது என்று ‘எக்னாமிக்ஸ்’ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் திரையில் உற்பத்தியாகிற நடிகர்களின் கதாநாயக பிம்பங்களை உண்மையென்று மயங்கி தம்மை ஆளும் பொறுப்பினையே அவர்கள் வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பது மூடத்தனத்தின் உச்சம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
பிரம்மாண்டமான விளம்பரங்களின் மூலமும் நடிகைகளின் கவர்ச்சிகளின் மூலமும் ஊசிப்போன குப்பைகளை அழகான உறையிலிட்டு ருசிக்கக் கொடுக்கும் இவ்வாறான வணிகப் பொருட்களை விழிப்புணர்ச்சி உடைய நுகர்வோர்கள் என்ற பொறுப்புணர்ச்சியோடு நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதே என்னுடைய வழமையான வேண்டுகோள்.
இது ஏதோ ரஜனி என்கிற தனிமனிதரின் மீதும் குசேலன் என்கிற படத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல. அனைத்து வணிகப்படங்களின் / நடிகர்களின் / இயக்குநர்களின் மீதான விமர்சனமாகவே இதைப் பார்க்க வேண்டும். தமிழ்ச்சினிமாவின் ஆரோக்கியமான போக்கை நீண்ட வருடங்களாக தடுத்துக் கொண்டிருக்கும் வணிகப்படங்களின் வரிசையில் பிரதானமாக ரஜினியும் அவரது படங்களும் இருக்கிற காரணங்களினாலேயே அதைப் பற்றி எழுதுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இவ்வாறான வணிகப்படங்களை தொடர்ந்து தோற்கடிப்பதின் மூலம்தான் பாலா, அமீர், செல்வராகவன், பாலாஜி, வெற்றிமாறன், சசிகுமார் என்று நம்பிக்கை தரும் இயக்குநர்கள் தங்கள் படைப்புகளை இன்னும் அதிகபட்ச கலைஅம்சத்துடன் தருவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த இயலும்.
குசேலன் வெளிவரப்போகும் உற்சாகத்திலும் கொண்டாட்டத்திலும் சத்தத்தின் இடையில் இந்தப் பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் என்னுடைய ஆதங்கம் பெரும்பான்மையானவர்களின் கவனத்தில் பதியாது என்பதை உணர்ந்தே இருந்தாலும், ஊதுகிற சங்கை ஊதி வைப்போமே என்றுதான் இதை எழுதத் துணிந்தேன்.
தொடர்புடைய இன்னொரு பதிவு: சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்
suresh kannan