Monday, July 25, 2005

கிழித்துப் போடப்பட்ட கட்டுரைகள்

பக்கத்திற்கு பக்கம் ரத்தம் சொட்டும் பொழுதுபோக்கு படைப்புகளிலிருந்து என் வாசிப்பனுபவம் இயல்பாக இலக்கியங்களின் பால் திரும்புகையில் என்னை அதிகம் கவர்ந்தது புனைவு இலக்கியங்கள்தான். அதிலும் வரலாற்றையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து படைக்கப்படும் புதினங்களை நான் அதிகம் விரும்புவேன். சிறந்த உதாரணம்: காந்தியின் கொலை சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட 'ஜனகனமண', 'கல்லுக்குள் ஈரம்' போன்ற நாவல்கள். (பல பேரால் அதிகம் சிலாகிக்கப்படும் 'பொன்னியின் செல்வனை' ஏனோ என்னால் ரசிக்க முடியவில்லை)

இந்த சுவாரசியத்தில், கட்டுரைகளை படிக்காமலிருந்து விட்டேன். நூலைப் பற்றின விமர்சனங்களையோ ஆக்கப்பூர்வமாக நிகழ்த்தப்படும் விவாதங்கள், சர்ச்சைகள் போன்றவைகளையோ கவனமாக தாண்டிவிடுவதில் எனக்கு அதிக அனுபவமுண்டு. ரஷ்ய மொழியில் இருந்து மொழிபெயர்த்தது போல் சிலர் எழுதிய கடினமான நடையைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் என்னை மிரளச் செய்துவிட்டன. மிகவும் தீவிரமாக அலைந்து திரிந்து தேடிப்பொறுக்கிய சிற்றிதழ்களில் கூட என்னைக் கவர்ந்த சிறுகதை, குறுநாவல்களை மட்டும் கிழித்தெடுத்து மற்றவற்றை தூக்கிப்போட்டு விடுவேன். ஒரு காலகட்டத்தில் மெல்ல மெல்ல என் கவனம் non-fiction பக்கம் திரும்பலாயிற்று. அப்போதுதான் நிறைய விஷயங்களை தவறவிட்டுவிட்டதன் அபாயத்தை உணர்ந்தேன். சமீப காலங்களில் ஐந்தாண்டுகளாக கட்டுரைத் தொகுப்புகளை பெருமளவில் தேடிப்பிடித்து படித்துவருகிறேன். தம்முடைய கருத்துக்களை ஒரு புனைவுக் கதாபாத்திரத்தின் மேல் ஏற்றி வாசகனை மயங்க வைக்காமல், அவனிடம் நேரடியாக பேச கட்டுரைகளையே சிறந்த வடிவமாக நினைக்கிறேன். பாரதியார் முதல் சுகுமாரன் வரை பல பேர் எழுதும் கட்டுரைகளையும், அவை தரும் அபூர்வமான விவரங்களையும், நுண்மையான நோக்கையும், அவற்றின் நேரடி, மறைமுக அர்த்தங்களையும் படிக்கப்படிக்க பிரமிப்பாக இருக்கிறது.

சமீபத்தில் அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான 'உடைபடும் மெளனங்கள்' என்கிற கட்டுரைத் தொகுப்பை படித்து முடித்தேன். இதில் மெளினியின் சிறுகதைளைப் பற்றின அவர் பார்வையை உள்ளடக்கிய கட்டுரை மிக முக்கியமானது. (அ.மார்க்ஸின் உரைநடை சில இடங்களில் தலையை 80 டிகிரிக்கு சுற்ற வைத்தாலும் சற்று சிரமப்பட்டு உள்ளே புகுந்து விட்டோமானால், பிரமிப்பான, விவரணையான ஓர் உலகிற்குள் நம்மால் பயணிக்க முடியும்)

சமீபத்தில் நண்பர் பத்ரி அவரது வலைப்பதிவில் சில கட்டுரைத் தொகுதிகளை சிபாரிசு செய்திருந்தார். அது போல் வேறு பல நல்ல கட்டுரையாளர்களையும் கட்டுரைத் தொகுதிகளையும் பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன்.

()

இந்தியா டுடே, ஜீலை 27 2005 இதழில் விமர்சனப் பக்கத்தில் எம்.ஜி.சுரேஷ், அ.மார்க்ஸின் கட்டுரைத் தொகுப்புகளைப் பற்றின மதிப்புரையை எழுதியிருக்கிறார். 'அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்', 'கடமை அறியோம் தொழில் அறியோம்', 'சொல்வதால் வாழ்கிறேன்', 'இந்துத்துவத்தின் இருள்வெளிகள்' என்கிற நான்கு கட்டுரைத் தொகுப்புகளைப் பற்றின பார்வை அது. அதிலிருந்து 'கடமை அறியோம் தொழில் அறியோம்' என்கிற கட்டுரைத் தொகுப்பின் விமர்சனத்தை மாத்திரம் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். (நன்றி: இந்தியா டுடே)

()

கடமை அறியோம், தொழில் அறியோம் என்ற தலைப்பே வாசகனை திடுக்கிட வைப்பது. 'கடமை கண் போன்றது', 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' 'கடமை, அது கடமை' என்பது போன்ற கருத்தாக்கங்களினால் கெட்டித்தட்டிப் போன சராசரி வாசகனின் பொதுப்புத்தியை இந்தத் தலைப்பு கொட்டிக் கவிழ்க்கவே செய்யும். இந்தத் தலைப்பு ஒருவித அதிர்ச்சி மதிப்பீட்டை (shock value) கோரி நிற்பது. எண்பதுகளில் நாகார்ஜீனனின் அதிரடி நடவடிக்கைகளும் மார்க்ஸ் போன்றவர்களின் அதிர்ச்சி மதிப்பீட்டுச் செயல்பாடுகளும்தான் தமிழ்ச்சூழலில் பின்-நவீனத்துவத்தை பின்னுக்குத் தள்ளப்பட்ட நவீனத்துவமாக ஆக்கின, கட்டவிழ்ப்பு என்ற பெயரில்.

'பாண்ட் சட்டை அணிபவரா நீங்கள்?' நாங்கள் லுங்கிதான் அணிவோம்'
'கண்ணகியைக் கொண்டாடியது போதும்'; நாங்கள் வேசியைக் கொண்டாடுவோம்' - என்ற ரீதியில் இவர்கள் வைத்த பிரகடனங்கள் பின்-நவீனத்துவம் என்பது 'கெட்ட வார்த்தை'; பின்-நவீனத்துவாதிகள் 'கெட்ட ஆசாமிகள்' என்பது போன்ற எதிர்மறையான படிமத்தை வாசகர்களின் மனதில் உருவாக்கின. இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் அணுகுமுறைகளைத் தவிர அ.மார்க்ஸின் பிற அணுகுமுறைகள் நன்றாகவே வந்துள்ளன.

சமூகத்தின் படிநிலைப்பிரிவுகள் உருவாகும் போது உழைப்பு, கடமை, ஒழுங்கு, இச்சை, மறுப்பு, திருப்தி, பொறுமை, சிக்கனம், அடக்கம் போன்றவை அறங்களாகக் (Ethics) கட்டமைக்கப்பட்டு அடிமைகளின் மேல் சுமத்தப்படுகின்றன. கேளிக்கை, ஓய்வு, சோம்பேறித்தனம் போன்றவை ஆண்டைகளின் அறங்களாக கைக்கொள்ளப்படுகின்றன. நீட்ஷே 'அடிமைகளே, உங்கள் அறங்களைத் தூக்கி எறிந்துவிட்டு ஆண்டைகளின் அறங்களைக் கைப்பற்றுங்கள்' என்றார். இதுபோன்ற விவாதங்களை மார்க்ஸ் தனது கட்டுரைகளில் தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.

மொபைல் போன்கள், தோற்ற நிலை மெய்மை, தகவல் தொழில் நுட்பம் போன்றவற்றின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கிறார். ஜீன் பொத்ரியார், பியரி பூர்தா போன்றவர்களை அடியற்றி, இவர் முன்வைக்கும் கருத்துக்கள் இன்றைய தமிழ்ச் சூழலில் கவனம் பெற வேண்டியவை.

குடிப்பழக்கம் தொடர்பாக தமிழ்ச்சூழலில் நடந்த விவாதம் பற்றி 'குடியும் குடித்தனமும்' என்ற தலைப்பில் விவரிக்கும் மார்க்ஸ், குடி தொடர்பான சனாதனக் கருத்துக்களை பகடி செய்கிறார். இது பத்தி, கட்டுரை போன்ற எல்லைகளைத் தாண்டி ஒரு ஆய்வுக் கட்டுரையாக விரிந்து, விகசிக்கிறது.

இயல்பாக பகடித் தன்மையுடன் எழுதும் மார்க்ஸ் 'குடியும் குடித்தனமும்' கட்டுரையில் சுந்தரராமசாமியைக் கோபமாகச் சாடுவது சற்று இயல்பற்று இருப்பதாகப்படுகிறது. பகடி செய்வது பின்-நவீனத்துவக்கூறு. கோபப்படுவது பாசிசத்தின் நுண் அலகு. புத்தர் தர்க்கம் புரியும் போது எதிராளியின் போற்றுதலுக்குரிய நம்பிக்கைகள் எதையும் தாங்குவதில்லை. எதிராளியின் நம்பிக்கைகளை உள்வாங்கிக் கொண்டு அவரது சொற்களைக் கொண்டே தனது தர்க்கத்தை கட்டமைப்பவர் புத்தர். எனவே அ.மார்க்ஸ் போன்ற ஒரு தேர்ந்த பின்-நவீனத்துவவாதி, புத்தரின் பற்றாளர் எவரையும் கோபத்துடன் சாடுவது சரியானதாகப் படவில்லை.

()

நூலைப் பற்றின விவரங்கள்:

வெளியீடு: கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை-5. விலை முறையே ரூ.60, ரூ.45, ரூ.50, ரூ.55.

Monday, July 18, 2005

'அன்னியன்' சொல்லும் ஆதாரச் செய்தி

இதுவரை '·பேண்டஸி' படங்களாக எடுத்து வந்துக் கொண்டிருந்த சங்கர்.. மன்னிக்கவும், ஷங்கர், கொஞ்சம் கீழே இறங்கி கொஞ்சம் மிகையதார்த்தமாக தற்கால இளைஞர்களைப்பற்றி 'பாய்ஸ்' எடுத்ததில் பத்திரிகைகள் ஒரே வார்த்தையில் 'ச்சீ' என்றும், மக்கள் தங்களைத் தாங்களே நிர்வாணமாக பார்க்க நேர்ந்த குற்ற உணர்வில் தமக்கேயுரிய பிரத்யேக பாசாங்குகளோடு 'தூ" என்றும் காறித்துப்பியதில் மிரண்டு போன ஷங்கர், தம்மிடமுள்ள ஒரே பாதுகாப்பான பார்முலாவான 'ராபின்ஹீட்' டைப் கதையை முந்திரி, ஏலக்காய், பட்டை, லவங்கம், மசாலா எல்லாம் போட்டு உப்பும் உறைப்புமாய் சொல்லியிருக்கும் படம்தான் 'அன்னியன்'.

Image hosted by Photobucket.com

'அன்னியன்' என்கிற பாத்திரத்தின் வடிவம் ஏறக்குறைய நம் எல்லோர் மனதிலும் உள்ள ஆனால் சமூக கட்டுப்பாடுகளினாலும் தண்டனைகளினாலும் பயந்து கொண்டு வெளிவரத் தயங்குகிற, பயப்படுகிற ஒரு வடிவம்தான்.

()

ராமசாமி பேருந்தில் ஏறி நடத்துனரிடம் பயணிச்சீட்டை வாங்கிவிட்டு மிச்சம் ஐம்பது காசை ஞாபகமாக கேட்கிறான். நடத்துனரோ அவனை நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து மாதிரி பார்த்துவிட்டு "அப்ப கரெக்டா சில்லறை கொடு" என்று சொல்லி விட்டு இவன் பதிலுக்காக எதிர்பாராமல் கூட்டத்தில் கரைந்து போகிறார். அவர் பையில் உத்தரவாதமாக சில்லறை இருப்பதை இவனால் யூகிக்க முடிகிறது. இவன் அவரையே தொடர்ந்து பார்க்க, அவர் பக்கத்திலிருந்த யாரிடமோ சிரித்து இவனை நோக்கி அசிங்கமாக கையில் சைகை காட்டுகிறார்.
உடனே ராமசாமி என்ன செய்கிறான்?

கூட்டத்தை பிளந்து கொண்டு, நடத்துனரின் சட்டையைப் பிடித்து உலுக்கி, கன்னத்தில் அறைந்து "ஏண்டா, பரதேசி நாயே, இப்படி ஒத்தொருத்தர் மிச்ச காசையும் கொடுக்காம ஏமாத்துற. இதுக்கு ரோட்ல உக்காந்து பிச்ச எடுக்கலாமேடா. நான் கஷ்டப்பட்டு சேத்த காச கொடுக்காம ஏண்டா ஏமாத்துற' என்று மற்றவர்கள் தடுக்க, தடுக்க அவனை பந்தாடி, .....

இப்படியெல்லாமா நடக்கிறது. இல்லை.

இவற்றையெல்லாம் ராமசாமி தம் மனத்தில் ஒரு முறை நிகழ்த்திப்பார்க்கிறான். இப்படியெல்லாம் செய்ய அவனுக்கு தைரியம் போதாது. அப்படியே அவன் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்துவிட்டாலும் அதன் பின்விளைவுகளைப் பற்றி அவனுக்கு தெரியும். காவல் நிலையத்தில் அன்றைய இரவை கழிக்க அவன் விரும்பவில்லை. சாயந்தரம் ரேஷன் க்யூவில் நின்று கெரோஸின் வேறு வாங்க வேண்டும். இப்போதே மணியாகிக் கொண்டிருக்கிறது.
எனவே "பாருங்க சார். நம்ம காசா கேட்டா முறைக்கிறான்." என்றே அவனுக்கே கேட்காத குரலில் சொல்லிவிட்டு, கேட்க யாரும் தயாராக இல்லாத சூழ்நிலையில் ஜன்னல் சீட்டை தேடி பரிதாபமாக அமர்ந்து கொள்கிறான்.

()

ஆக.. தினப்படி நாம் நம்மேல் பாயும் பலவித சமூக வன்முறைகளை எந்தவித கேள்வியும் ஏற்றுக் கொள்ள பழகியிருக்கிறோம். நம்மை விட ஒல்லியாக ஒருவன் கிடைத்தால் தலையில் தட்டி "கால் வெச்சுருக்கிறது தெரியல. மிதிக்கறயே" என்று இன்னொருவனிடம் அதே வன்முறையை உபயோகிக்க நாம் தயங்குவதில்லை.

துரதிர்ஷ்டவசமாக அம்பி என்கிற ரூல்ஸ் ராமானுஜம் இவ்வாறெல்லாம் பழகாமல், சமூக ஒழுக்கத்தை தாம் ஒழுங்காக பின்பற்றுவது போதாதென்று மற்றவர்களும் அவ்வாறே இருக்க வேண்டுமென்று அநியாயத்திற்கு எதிர்பார்க்கிறான். இவன் எதிர்பார்ப்பதை உலகம் பரிகசிக்க, மனஅழுத்தம் தாங்காது இவனுடைய இன்னொரு ஆளுமை உயிர்பெறுவதும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தாமே தண்டனை வழங்குவதும், இந்த நீதியை புரிந்து கொள்ளாமல் சட்டம் இதில் குறுக்கிட, சாமர்த்தியமாக சட்டத்தை ஏமாற்ற தெரிந்து கொண்டு தன் பணியை தொடர்வதும்தான் இதன் முக்கிய பாத்திரமான ......அன்னியன்.

அம்பி என்கிற கதாபாத்திரம் மிகத்திறமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் கடிதத்ததை கூட பெண்ணின் பெற்றோர்களிடம் முறைப்படி கொடுப்பதில் இருந்து, அவளிடம் பேச பெற்றோர்களிடம் அனுமதி கேட்பது, தன் காதல் ஏற்கப்படாததைக் கண்டு தற்கொலைக்கு முயற்சிப்பது, பிறகு தற்கொலை சட்டப்படி தப்பு என்பதால் அதை நிறைவேற்றாமல் திரும்புவது என்று இந்தப்பாத்திரம் அக்மார்க் நேர்மையால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தமான இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு இந்த பாத்திரம் முற்றிலும் அன்னியமாகயிருப்பதால் திரையரங்கில் பார்வையாளர்கள் கூட சிரிக்கிறார்கள்.

()

பொதுவாக ஷங்கரின் படங்கள் அநாவசியத்திற்கு பிரம்மாண்டனவை என்று சொல்லப்படுவதில் சில சதவீத உண்மையிருந்தாலும், அவருக்கு அந்த பிரம்மாண்டத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. திருவல்லிக்கேணி அக்ரஹாரத்து இளைஞனையும் Multiple Personality disorder என்கிற உளகுறைபாடையும், International School of Marshal Arts School-ஐயும் எந்தப்புள்ளியில் இணைக்க வேண்டும் என்கிற திரைக்கதை வித்தை தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தப்புள்ளிகள் சரியாக சங்கமிக்காத இடங்களில் படம் திருவிழாவில் காணமாற் போன குழந்தை மாதிரி அம்போவென்று விழிக்கிறது. (சில விநாடி இடைவெளிக்குள் மாறுபட்ட ஆளுமைகள் சட்சட்டென்று தோன்றி மறைவதாக கிளைமாக்சில் காட்டப்படும் அந்தக்காட்சி, சினிமாவில் மட்டுமே சாத்தியமுள்ள ஒரு gimmics.)

எந்தவித அறிவிப்புமில்லாமல் வருகிற பாடல்கள் ஒருபுறம் எரிச்சலூட்டுகின்றன என்றால், ஆளுமை மாற்றத்தில் அம்பி என்கிற கதாபாத்திரத்தின் உடை மற்றும் தலைமுடியுமா மாறும் என்கிற கேள்வியை எழுப்புகிற அபத்தமான லாஜிக் அத்துமீறல்கள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. என்றாலும் 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' என்கிற நாட்டுப்புற இசையை அடிப்படையாகக் கொண்ட பாடலும், அந்த பாடலின் பின்னணியில் தார்ரோடு, பாலச்சுவர், வீட்டுச் சுவர் என்று எல்லாமும் வண்ணமயமாக காட்சியளிப்பது நல்ல முயற்சி. (ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு தம்மால் இயன்ற maximum output-ஐ அளித்திருந்தாலும் ரஹ்மான் இல்லாத குறை நன்றாகவே தெரிகிறது). சுஜாதா வழக்கம் போல் ஜொலித்திருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணணை ஒரு வரியில் இணைத்தது ரசிக்கும்படி இருக்கிறது என்றால் ஆசிய நாடுகள் சிலவற்றோடு இந்தியாவை ஒப்பிட்டு அவர் எழுதியிருக்கும் வசனங்களில் இடியும், மின்னலும் வெடிக்கிறது.

()

இந்தப்படத்திற்கு வரும் விமர்சனங்களைப் பற்றியே ஒரு கட்டுரை எழுதலாம். ஆஹா ஓஹோ என்றோ அல்லது அடச்சீ என்றோ ரெடிமேட் விமர்சனம் எழுதும் வெகுஜனப்பத்திரிகைகளின் விமர்சனங்களை ஒதுக்கிவிடுவோம். படத்தின் காட்சிகளின் அமைப்பை அந்த இயக்குநரே எதிர்பார்த்திருக்காத ஒரு கோணத்தில் கட்டுடைக்கும் சிற்றிதழ்களில் எழுதப்படும் விமர்சனங்கள் எனக்கு பெருத்த நகைப்பை உண்டாக்குகிறது. 'காதல்' என்கிற படத்தில் வரும் பெரியார் சிலை காட்டப்படும் காட்சியை அ.ராமசாமி 'தனக்கேயுரித்தான பார்வையில்' விமர்சிக்கும் போது இவர்களது மனநிலையின் ஆரோக்கியத்தை கண்டு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருக்கிறது. (அ.ராமசாமி, ஷகீலா படம் ஒன்றிற்கு விமர்சனம் எழுதினால் எவ்வாறிருக்கும் என்று கற்பனை செய்ய மிக சுவாரசியமானதாக இருக்கிறது). சமீபத்தில் பழைய காலச்சுவடு இதழ்களை புரட்டிக் கொண்டிருக்கும் போது 'இருவர்' திரைப்படத்திற்கு ஒரு பேராசிரியர் எழுதியிருக்கும் விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. ஒரு கேமரா கோணத்திற்கு அவர் கொடுத்திருக்கும் 2 பக்க விளக்கத்தை மணிரத்னம் படிக்க நேர்ந்தால் எவ்வாறு திகைத்துப் போவாரோ என்று யூகிக்க முடியவில்லை. "ஏம்ப்பா அந்தப் பக்கம் clouds pass ஆவுது. கேமராவை இந்தப்பக்கம் வையி" என்று சாதாரணமாக சொன்னதற்கு பின்னால் எடுக்கப்பட்ட காட்சியை இவ்வாறு கூட வகைப்படுத்த முடியுமா என்பதுதான் அவரின் திகைப்பிற்கு காரணமாயிருந்திருக்கும்.

()

இந்தப்படம் சொல்லும் ஆதாரக்கருத்து நம் மனச்சாட்சியை தூண்டி சற்றே குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எந்தவித இயற்கை வளங்களுமில்லாமல் உள்ள பக்கத்து குட்டிகுட்டி நாடுகள் எல்லாம் தம் கடும் உழைப்பில் குறுகிய காலத்தில் முன்னேறியிருக்கும் போது, 110 கோடி மனிதவளத்தையும், எல்லா இயற்கை வளங்களையும் வைத்துக் கொண்டு இன்னும் அடுத்த வேளை உணவிற்கு உத்திரவாதமில்லாதவர்கள் சில கோடிப் பேர் இருக்கிறாற் போல் இருக்கிற நம் பொறுப்பில்லாத்தன்மையை இந்த படம் கடுமையாக சுட்டிக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் சுட்டிக் காட்டுக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு தனிமனிதனும் அதிகபட்ச பொறுப்புடனும் சமூக கடமையுடனும் நடந்து கொண்டால் இந்தியா தானாகவே முன்னேறும் என்பதும் அவ்வாறு நடக்கும் வரை சட்டங்கள் இன்னும் கடுமைப்படுத்த வேண்டும் என்பதும் அன்னியன் சொல்லும் ஆதார கருத்து. ஏறக்குறைய பரணில் தூக்கிப் போட்டுவிட்ட, மீயூசியத்தில் மட்டுமே பார்க்கிற, நாம் பரிகசிக்கிற அந்த குணங்களை நாட்டின் நலம் கருதி நாம் ஏற்க வேண்டும் என்பதுதான் இந்தப்படத்தின் நீதி.

ஆனால் மிட்டாயைச் சப்பி விட்டு மருந்தை ஞாபகமாக தூக்கிப் போட்டுவிடுவதில் சமர்த்தர்களான நாம், சதாவின் தொப்புளையும், விக்ரம் பறந்து பறந்து போடுகிற சண்டைகளையும் 'ஆ'வென்று பார்த்துவிட்டு, வழக்கம் போல் தம் இயந்திர வாழ்க்கைக்கு திரும்பி எப்பவும் போல்தான் இருக்க்ப் போகிறோம் என்பதுதான் யதார்த்தமான சோகம்.

Friday, July 15, 2005

சுருதி பேதம்

நண்பர் ஆனந்த் ராகவ் எழுதிய 'சுருதி பேதம்' என்கிற நாடகத்தை 'நாரத கான சபாவில்' பாரா அழைப்பின் பேரில் காண முடிந்தது. ஆனந்த ராகவின் வெகுஜன இதழ்களில் வெளிவந்திருக்கிற சிறுகதைகளை மட்டுமே படித்து (நீச்சல் குளம் என்கிற நகைச்சுவைப் படைப்பை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்) அவர் படைப்புகளைப் பற்றின ஒரு பிம்பத்துடன் ஒரு நகைச்சுவை நாடகத்தை எதிர்பார்த்து போயிருந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. விருதுக்குரிய குறும்படத்துடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு கனமான விஷயத்தை நாடகத்தின் களமாக எடுத்துக் கொண்டிருந்தார் ஆனந்த்.

ஆனால் இந்த நாடகத்தை பார்த்து முடித்தவுடன், இது அமெரிக்காவில் மேடையேறின போது அங்கிருக்கிற பெண்ணுரிமை இயக்கங்கள் யாரும் இந்த நாடகத்தின் உட்கருத்தை ஆட்சேபிக்கவில்லையா என்று ஆச்சரியமாக இருந்தது.

ஏன்? சொல்கிறேன்....

அதற்கு முன் கதாசிரியர் ஆனந்த ராகவைப் பற்றி.

ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அவர் எழுதின கதை ஒன்றை நான் சற்று லேசாக விமர்சிக்கப் போக, என்னை தனிமடலில் தொடர்பு கொண்டு நான் குறிப்பிட்ட குறையைத் தெளிவுபடுத்தினார். பிறகு எடிட் செய்யப்படாத முழுக்கதையையும் எனக்கு அனுப்பி வைத்தார். 'யாரோ தன் கதையை விமர்சித்து விட்டுப் போகிறார்' என்றெல்லாம் அலட்சியப்படுத்தாமல் அதற்கான விளக்கத்தை சொல்லி தன் படைப்பின் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ளும் அவரின் உன்னதமான போக்கு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

()

சுருதி பேதம் நாடகத்தைப் பற்றி:

ஆனந்த் ராகவ் எழுதி தீபா ராமானுஜம் இயக்கியிருக்கும் இந்த நாடகம், சங்கீத வித்வான் ஒருவருடைய திரைமறைவு வாழ்க்கையைப் பற்றியது. இளையாங்குடி பஞ்சாபகேசன் என்கிற புகழ்பெற்ற, திறமையான கர்நாடக சங்கீத வித்வானின் இரண்டாவது மனைவி (கொச்சையாக சொன்னால் வைப்பாட்டி) கல்யாணி. அவர்களின் ஒரே பெண்ணான நித்யா எப்போதாவது ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்லும் அந்த நபரை தன் அப்பா என்று ஏற்க மறுக்கிறார். தன் அம்மாவும் அவர் மீது மரியாதையுடன் இருப்பதை கண்டு எரிச்சலடைகிறார். வித்வான் அந்த பெண்ணின் மீது பாசமாக இருந்தாலும், அவரை ஏற்க மறுத்து அப்பா என்கிற அங்கீகாரத்தை தர மறுக்கிறாள்.

நாளடைவில் அவள் வெளியுலகத்தில் புழங்கும் போது கூட சுயமாக வெளிப்பட இயலாமல் அவள் அப்பாவின் அறிமுகத்துடனே சமூகத்தால் அறியப்படுகிறாள். இந்த நிலை அவளை எரிச்சலூட்டுகிறது. எந்தவித பின்னணி அடையாளமுமில்லாமல் சுயமாக ஏதாவது சாதனை புரிந்து வித்வானை விட அதிக புகழுடன் விளங்கி இந்த சமுகத்திற்கு தன்னை நிரூபிக்க சபதமேற்கிறாள். இயல்பான தனக்கு உள்ள பாட்டுத்திறமையை உபயோகித்து புகழ்பெற்ற பாடகியாகி சினிமாக்களிலும் பாடுகிறாள். என்றாலும் இந்த சமூகம் இது அவளது அப்பாவிடமிருந்து வந்த திறமை என்றே சொல்கிறது. நாளாக நாளாக இவளும் அதை நம்பி மனமார ஏற்று, அப்பாவுக்கான அங்கீகாரத்தை தந்து அவருடன் ஒரே மேடையில் பாட விரும்பும் போது, திருப்பமாக வித்வான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு விடுகிறார். எல்லோரும் பாச மழையில் நனைந்து கொண்டே அழ, திரை விழுகிறது.

()

ஆனந்த ராகவ், இந்த நாடகத்தை 'சிந்து பைரவி' திரைப்படத்தின் நீட்சியாக யூகித்து எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது. இதில் என்னால் ஏற்க முடியாத கருத்து, ஒரு பெண் சுயத்துடன் வெளிப்பட விரும்பி அதை சாதிக்க, அந்த சமூகம் அதை அங்கீகாரம் தராமல் போவதும், அவளும் அதை ஏற்றுக் கொண்டு தன் அப்பாவுடைய திறமைதான் என்று நம்பத் தொடங்குவதும், பெண் என்பவள் சுயமாக எதையும் செய்யத் தெரியாமல் எதற்கும் ஒரு ஆணை சார்ந்து இருப்பதே உலக நியதி என்கிற பிற்போக்குத்தனமான கருத்தை இந்த நாடகம் அடிநாதமாக வெளிப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. இந்த ஒரு கருத்தை மாற்றி அமைத்தால் இந்த நாடகம் இன்னும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

()

இந்த நாடகத்தில் என்னை உடனே உடனே கவர்ந்த அம்சம், அரங்கத்தின் ஒளியமைப்பும், அரங்க அமைப்பும். ஒரு நாடகத்திற்கு இலக்கணமாக இருக்க வேண்டிய அளவிற்கு இந்நாடகத்தில் ஒளி மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஒளியமைப்பு 'கலை' ரவி) இரண்டு, மூன்று சுவாமி படங்களையும், கருப்பு, வெள்ளை புகைப்படங்களை வைத்துக் கொண்டு ஒரு பிராமண வீட்டின் வரவேற்பறையாகவும், அந்தக் காலக்கட்டம் வெளிப்படும்படியாகவும் அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது (அரங்க அமைப்பு - 'உஷா ஸ்டேஜ்' விஜயகுமார்) நிறைவாக இருக்கிறது. காலம் மாறியிருப்பதை தொலைக்காட்சி பெட்டி மற்றும் கலர் புகைப்படம் கொண்டு தெரிவித்திருப்பது நன்றாக இருக்கிறது.

சங்கீத வித்வானாக நடித்த ராஜீவ் ஜெயராமன், பின்னணியில் ஒலிக்கும் ஆலாபனைகளுக்கு (பரமேஷ் கோபி) ஏற்ப மிகத்திறமையாக வாயசைத்திருப்பதோடு, தன் மகளின் அன்பிற்காக ஏங்கி கலங்கும் காட்சியிலும் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். (தற்கால சூழ்நிலையிலும், சங்கீத வித்வான் என்றால் அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று கதாசிரியர்கள் யோசிப்பது விநோதமாக இருக்கிறது. ஆனால் இந்த நாடகம் 50 வருடத்திற்கு முன்பு இருக்கிற கால கட்டமாக இருப்பதினால் மன்னித்துவிடலாம்) நித்யாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம் அந்த பாத்திரத்திற்கு சற்று முதிர்ந்த தோற்றத்தில் தோன்றினாலும் (பெண்ணை விட அம்மா இளமையாக இருக்கிறார்) தனது உன்னதமான நடிப்பால் அதை ஈடுகட்டியிருக்கிறார். அவர் பாடுவதற்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிற ஆஷா ரமேஷின் குரல் மிக இனிமையாக இருக்கிறது.

வித்வானுக்கு உதவியாளரான அம்பியாக வரும் நவீன்குமார் நாதன் இயல்பான நகைச்சுவையின் மூலம் சற்று தொய்வாக செல்லும் நாடகத்தின் போக்கை சமாளித்திருக்கிறார். (நாடகம் முடிந்து கலைஞர்கள் மேடையேறின போது இவருக்குத்தான் பலத்த கைத்தட்டு கிடைத்தது). சிறுசிறு பாத்திரங்களில் வருகின்றவர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருந்தனர்.

()

ஆனந்த ராகவ்வின் வசனங்கள் பல இடங்களில் மின்னலடிக்கிறது. சில உதா:

வீட்டிற்கு வந்திருக்கும் அப்பாவை மகள் நிற்க வைத்தே எரிச்சலுடன் பேசிக் கொண்டிருக்க, உள்ளேயிருந்து வரும் அம்மா கேட்கிறார். "ஏண்டி அவரை உட்காரச் சொல்லாம நிக்க வெச்சா பேசிண்டு இருக்கறது"
மகள் சட்டென்று தன் பேச்சின் இடையே இயல்பாக ஆனால் கோபத்துடன் சொல்கிறாள்.

"அவர் இங்க உக்கார்றதுக்கா வர்றார்"

*******

வித்வானின் உதவியாளர் அம்பி நித்யாவை கரிசனமாக விசாரிக்கிறார்
"இவ்வளவு புத்திசாலித்தனமான பொண்ணா இருக்கறயே. ஒரு கல்யாணத்தை பண்ணிக்கப்படாதா?"

"புத்திசாலியா இருக்கறதனாலதான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறேன்."

********

என்றாலும் சில இடங்களில் வசனம் சொதப்புகிறது. இரண்டாவது மனைவியாக இருந்தாலும் தன் கணவனின் மீது அதீத மரியாதை வைத்திருக்கும் கல்யாணி அம்மாள் ஒரு இடத்தில் தன் கணவன் பெயரை 'இளையாங்குடி பஞ்சாபகேசன்' என்று கணவர் பெயரை ஸ்பஷ்டமாக சொல்வது அந்த பாத்திரத்தின் இயல்புத் தன்மையை சற்று பாதிக்கிறது.

இந்தக் காலத்துல சொல்வா.. அந்தக் காலத்துல சொல்வாளோ....

()

நித்யா சிறு பெண்ணாக இருக்கும் போது இருக்கிற அதே கெட்டப்போடு வருகிற வித்வான், அவர் வளர்ந்து பெரியவளாகிவிட்டபிறகும் அதே தோற்றத்தில் வருவது சற்று சங்கடமாக இருக்கிறது. சட்டென்று பார்க்கும் போது நகைச்சுவை நடிகர் விவேக் மாதிரி இருக்கும் அவரின் இளமையை ஒப்பனையால் (கலைமாமணி சுந்தரமூர்த்தி) மறைக்க முடியவில்லை. ஏறக்குறைய எல்லா காட்சிகளிலும் பாத்திரங்கள், புத்தம் புது ஆடைகளுடனும் அதீத ஒப்பனையுடனும் தோன்றும் போது, இவர்கள் கழிவறைக்கு செல்லும் போது கூட இப்படித்தான் இருப்பார்களா என்று எரிச்சலடைய வைக்கிறது.

காட்சிகள் மாறும் இடைவெளியை திரையை மூடாமல் பாடகர் பாடுவதை காட்டுவது புதுமையாக இருந்தாலும், பாகவதர் படம் மாதிரி அடிக்கடி ஆலாபனை ஆரம்பித்துவிடுவதால், கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு பரிச்சயமில்லாத என்னைப் போன்றோர்கள் இருக்கையில் நெளிய வேண்டியதாயிருந்தது.

()

நாடகம் முடிந்த பின் 'நாரத கான சபாவின்' செகரட்டரி (கிருஷ்ணசாமி (?) ) சில உபயோகமான தகவல்களைச் சொன்னார். இவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாலும் தமிழை கொலை செய்யாமல் சிறப்பாக உச்சரித்ததை பாராட்டினார். (அமெரிக்காவில இருக்கறவங்கள விடுங்க! இங்க சென்னையில மட்டும் என்ன வாழுது என்று பிறகு பேசிய பாம்பே ஞானம் சென்னைக்காரர்களை வாரினார். அதற்கும் பெருந்தன்மையாக கைத்தட்டினார்கள் நம் மக்கள். தீபா ராமானுஜம் இவருடைய சிஷ்யையாம்).

செகரட்டரி சில பழைய தகவல்களை சொன்னார். நாரத கான சபா ஏற்படுத்தப்பட்ட போது இங்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதாம். அவர்களைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மனோகர் என்று சில குறிப்பிட்ட பேரே அரங்கத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்களாம். அந்த வரிசையில் 'கிரியா கிரியேஷன்ஸ்' இருப்பதாக பாராட்டினார். சில தொழில்நுட்ப குறைகளை சுட்டிக் காட்டிய இவர், காலர் மைக்கை விட அரங்கத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிற மைக்கின் முன் பேசினால் எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கும் என்றார். (இந்தக் கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வளர்ந்திருக்கும் தொழில்நுடபத்தை பயன்படுத்தி காலர் மைக்கை பயன்படுத்தி பேசுவதால் பாத்திரங்கள் நிற்க வைக்கப்பட்டிருக்கும் மைக்கின் முன் செயற்கையாக வந்து பேசுவதை தவிர்த்து இயல்பாக பேசலாம்.)

என்றாலும் ஆரம்ப கட்டங்களில் உரையாடல் சரியாக கேட்காததால் 'வால்யூம் இல்ல' என்று பார்வையாளர்களிடமிருந்து பலத்த குரல்கள் எழுந்தன. நாடகத்தின் மூலம் பார்வையாளாகளின் ரியாக்ஷன் உடனே கிடைக்கும் என்பதற்கு இதுதான் உதாரணம் போலிருக்கிறது.

()

நாடகத்தின் இடைவேளையில் பாரா அறிமுகப்படுத்தி வைக்க எழுத்தாளர் பாஸ்கர் சக்தியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பழைய ஆனந்த விகடனில் அவர் எழுதிய 'ரூட் பஸ்' என்னும் இயல்பான தொடரை நினைவுப்படுத்தி உரையாட மனிதர் உற்சாகமாகிப் போனார். அவரின் சிறுகதைத் தொகுதியான 'பழுப்பு நிற புகைப்படம்' பற்றியும், தமிழ்நாட்டையே ஒன்பது மணிக்கு கட்டிப் போட்ட 'மெட்டி ஒலியின்' வசனங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தது நிறைவான அனுபவமாக இருந்தது.

Thursday, July 14, 2005

சில கேள்விகளும் சில பதில்களும்

நான் இந்தப் பிரச்சினையை தலைமுழுக நினைத்தாலும், நண்பர் அனுராக் அவர் பதிவில் என்னைக் குறித்து கேட்டிருக்கிற சில கேள்விகளுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.


அதற்கு முன்னர் ஒரு விஷயம். இந்த பதிவு முழுக்க நான் ஒருவிதமான சங்கேத மொழியில்தான் எழுத வேண்டியிருக்கிறது. இதில் குறிப்பிட்டிருக்கிறவர் யார் என்பதை உங்களால் எளிதில் யூகிக்க முடிந்தாலும் அவர் பெயரை எழுத என் மனம் ஒப்பவில்லை. எனவே சம்பந்தப்பட்டவரை 'நபர்' என்கிற அடைமொழியிலேயே நான் அழைக்க விரும்புகிறேன். 'நேர்மையற்றவர்' என்று என்னை எந்தவித முகாந்திரமுமில்லாமல் அந்த நபர் விமர்சித்த பின்னால் அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்வதுதானே நல்லது. சம்பந்தமில்லாத செய்திகள் போல் தெரிகிற இரண்டை போட்டு ஒருவரை மறைமுகமாக விமர்சிப்பதுதான் சாமர்த்தியம், இலக்கியத்தரம் என்றால் நானும் அந்த தரத்துடனே எழுத விரும்புகிறேன். இதற்கு வருத்தப்படுகிற, சங்கடபடப் போகிற நண்பர்கள் முன்கூட்டியே என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

()

நண்பர் அனுராக் என்னை நோக்கி ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறார். "சமீபத்தில் சென்னையில் காசியுடன் நிகழ்ந்த சந்திப்பை நான் பதிவாக்கிய போது கலந்து கொண்டவர்களின் பட்டியலில் ஏன் 'சம்பந்தப்பட்ட நபரின்' பெயர் விடுபட்டிருக்கிறது? இது தானாக நிகழ்ந்த தவறாக இருக்க முடியாது."
நண்பரே, காசியுடன் ஏற்பட்ட சந்திப்பை பற்றி முதலில் பதிந்தது அந்த நபர்தான். அதில் என் பெயர் விடுபட்டிருப்பதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை? இதைப் பற்றி அவர் பதிவில் நீங்கள் கேட்டதுண்டா? என்னிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வி?

அவர் என் பெயரை குறிப்பிடாதது குறித்து எனக்கு வருத்தமேதும் கிடையாது. என்றாலும் என் பெயர் திட்டமிட்டே குறிப்பிடாமல் விடுபட்டிருந்தது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நான் உருப்படியான யோசனை ஏதும் தெரிவித்திருக்காமல் இருந்திருக்கலாம்.. அட! சாம்பார் வடை சாப்பிடத்தான் அந்தக்கூட்டத்திற்கு போனதாக வைத்துக் கொள்ளுங்களேன். அடிப்படையான நாகரிகம் உள்ள நபர் என்ன செய்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்தைப் பற்றின செய்தியை பதியும் போது - அந்த நபர் தமக்கு பிடிக்காதவராக இருக்கலாம் - கலந்தவர்கள் எல்லோரையுடைய பெயரை குறிப்பிடுவதுதான் முறை. ஆனால் என் பெயரைத்தவிர மற்ற அனைவரின் பெயரும் அந்த நபர் எழுதிய பதிவில் ஞாபகமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை நான் ஏதோ தாழ்வு மனப்பான்மையால் சொல்லவில்லை. இது ஒன்றும் புதிதல்ல. அந்த நபர் பணிபுரிந்த ஊடக நிறுவனத்தில் வாடிக்கையாக நடக்கும் விஷயம்தான். தமக்கு போட்டியாக அவர்கள் நினைக்கிறவர்களை, அவர்களுக்கு தப்பித்தவறியும் விளம்பரம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக - அவர்கள் தங்கள் கூட்டணி கட்சித்தலைவர் என்றாலும் - அவர்களைப் பற்றிய செய்திகள் வராதவாறு திட்டமிட்டு சாமர்த்தியமாக மறைப்பதுதான் அந்த நிறுவனத்தின் கீழ்த்தரமான போக்காகும். எனவே அங்கு முக்கிய பொறுப்பில் பணிபுரிந்த இந்த நபரும் அதே பாணியை பின்பற்றியிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

இது சொல்லும் செய்தி என்ன? 'நீ பொருட்படுத்த தேவையில்லாதவன்'

'பெரியோர் எனில் வியத்தலும் இலமே, அதனினும் சிறியோர் எனில் இகழ்தலும் இலமே' என்று தன் பதிவில் அந்த 'நபர்' கொட்டை எழுத்தில் எழுதி வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை தன் சுய வாழ்க்கையில் சிறிதளவேனும் கடைப்பிடிக்க முயலவேண்டும்.

ஆக.. இந்த நபர்தான் என்னை 'நேர்மையில்லாதவர்' என்று விமர்சிக்கிறார்.

என்னைப் பற்றின அறிமுகம் இல்லாதிருந்திருக்கலாம் அல்லது என் பெயரை மறந்திருக்கலாம் என்று அந்த நபர் சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் காசியுடனான சந்திப்பின் முன்பே எங்களுக்குள் அருண் வைத்தியநாதன் நடத்திய குறும்படக்காட்சியிலும், பிரகாஷ் நடத்திய வலைப்பதிவர் சந்திப்பிலும் அறிமுகம் ஆகியிருக்கிறது. எனக்கு பின்னால் வந்தவர்களின் பெயரைக் கூட ஞாபகமாக குறிப்பிட்டிருக்கிறவரால் என் பெயரை குறிப்பிடாததின் உள்நோக்கம் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது.

()

அந்த நபர் என் பெயரை கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக நான் இதையெல்லாம் எழுதவில்லை. அந்த நபரின் பெயரை ஏன் நீங்கள் எழுதவில்லை என்ற கேள்வி எழுந்ததாலேயே இதையெல்லாம் நான் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.

()

அடுத்ததாக நண்பர் அனுராக் குறிப்பிடுவது 'அந்த நபர் என்பவரால்.....' என்று ஏன் எழுத வேண்டும். அவர் படைப்புகளின் மீது மரியாதை உள்ளவர் ஏன் இவ்வாறு எழுத வேண்டும்?...

அந்த நபருக்காக இவ்வளவு பரிந்து பேசும் நண்பர் அனுராக், அந்த நபரின் பதிவுகளை படிப்பதில்லை என்று இதன் மூலம் தெரிகிறது.

அந்த நபரின் அடுத்தபதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது 'சுரேஷ் கண்ணன் என்பவர் .... என்றுதான் ஆரம்பிக்கிறார். அடிப்படை நாகரிகம் கருதி ஒரு பேச்சுக்காக என்னை நண்பர் என்றோ சக வலைப்பதிவாளர் என்றோ விளித்திருக்கலாம். எனவேதான் 'நேர்மையில்லாதவனாகிய' நானும் அதே வழியை பின்பற்ற வேண்டியிருந்தது. அவர் செய்ததையெல்லாம் நீங்களும் செய்திருக்க வேண்டுமா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

என்ன செய்வது? 'எங்கள் ஆயுதங்களை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்' என்கிற மாவோவின் மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது. இந்த அற்ப பிரச்சினைக்காக அந்த உன்னதமான மேற்கோளை பயன்படுத்தியதற்கு புரட்சியாளர்கள் என்னை மன்னிக்கட்டும். ஒருவர் திட்டமிட்டே உங்களை அவமானப்படுத்தும் போது பதிலுக்கு சாந்தமாக போக நான் மகான் இல்லை. 'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்' என்றெல்லாம் யோசிக்க எனக்குள் இருக்கும் சுயமரியாதை இடம் தர மறுக்கிறது.

'ஏம்ப்பா உன் பேர எழுதாததுக்கா இவ்வளவு கோபம்' என்று சிலருக்கு கேள்விகள் எழலாம். நிச்சயமாக அல்ல. அனுராக் எழுப்பிய கேள்விக்கு என் பக்கத்து நியாயத்தை விளக்கவே இந்தப்பதிவு. இதன் மூலம் உங்கள் நேரத்தை வீணடித்திருந்தால் அதற்காக என் முன்கூட்டிய மன்னிப்பு.

()

நான் ஒரு எழுத்தாளரை சந்திக்கப் போய் (மனித நேயத்தை மாய்ந்து மாய்ந்து எழுதும் சில எழுத்தாளர்களை நெருங்கிப் பார்த்தால்தான் தெரியும், அவர்களின் தோல்கள் உரிந்து துர்நாற்றமுடன் கூடிய அழுகிய நெடி வீசுவதை) ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை மடற்குழு ஒன்றில் பதிந்ததையும், அதை சம்பந்தப்பட்ட நபர் என் அனுமதியில்லாமல் தன் இணையத்தளத்தில் எடுத்து போட்டுக் கொண்டதையும், விளக்கம் கேட்டு எழுதின கடிதத்தை சட்டை செய்யாமல் இருந்தததையும் பற்றி.... சமயம் வரும் போது எழுதுகிறேன்.

தன் முதுகில் 10GB-க்கும் அதிகமான அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவர் முதுகில் 150 KB அழுக்காவது கிடைக்குமா என்று தேடுகிறவர்கள், மற்றவர்களை 'நேர்மையற்றவர்' என்று விமர்சிக்கும் நேர்மையின்மையை விவரிப்பதே இந்தப்பதிவின் நோக்கமே ஒழிய பொத்தாம் பொதுவாக எழுத்தாளர்களை திட்டுவது அல்ல. நான் சந்தித்த உன்னதமான எழுத்தாளர்களைப் பற்றியும் அவ்வப்போது பதிந்து கொண்டுதானிருக்கிறேன்.

()

இன்னும் சில விளக்கங்கள்...

சிலர் என் பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் 'பி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக செயலாற்றப் போய்... என்பதாக இந்த சர்ச்சையை வகைப்படுத்த முயன்றிருந்தார்கள். அவ்வாறெல்லாம் யாருக்கும் ஆதரவாக செயலாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரும் அப்படி என் ஆதரவைப் பெற வேண்டிய நிலையிலும் இல்லை.அப்படியென்றால் சம்பந்தப்பட்ட நபருக்கே ஆதரவாக 'அந்தாதி' பாடியிருப்பேனே.

()

உங்கள் சமீபத்திய பதிவுகள், ஆபாச பின்னூட்டங்கள் குறித்தான பிரச்சினையை திசை திருப்புகிறது என்று சிலர் என் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். இது ஒரளவு உண்மைதான் என்றாலும் என் பக்க விளக்கத்தையும் நான் சொல்லியாக வேண்டும் இல்லையா? பொதுவாக ஆபாச பின்னூட்டங்களால் பாதிக்கப்படாத என் வலைப்பதிவு, சமீபத்திய இரண்டு பதிவுகளில் மனித கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளின் பெயர்களோடு களை கட்டியிருந்தது. (சமீபத்தில் படித்த எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்' நாவல்தான் நினைவுக்கு வருகிறது. அந்த நாவலில் வருகிற முக்கிய பாத்திரத்தின் காதுகளில் எப்போதும் ஆபாசக்கூச்சல்கள் கேட்டுக் கொண்டிருக்கும்)

()

இன்னுமொரு வேதனையான விஷயம் தமிழ் வலைப்பதிவுகளின் வாசகர்கள் குறித்தானது. எத்தனையோ நல்ல விஷயங்களை என் பதிவில் எழுதியதில் முக்கி முக்கி என்னுடைய webcount 10000-த்தை நெருங்க முயன்று கொண்டிருக்க, சமீபத்திய இரண்டு பதிவுகளின் மூலம் இது 'சர்'ரென்று ஏறத்தாழ 2000 கவுண்ட்டுகளை அதிகமாக பெற்றிருக்கிறது. இது நிச்சயமாக எனக்கு சந்தோஷமான விஷயமாக இல்லை. மாறாக வேதனையாக இருக்கிறது. வலைப்பதிவு வாசகர்கள் எந்த மாதிரியான உள்ளடக்க பதிவுகளை தேடிப்பிடித்து படிக்கிறார்கள் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது.

நண்பர்களே, உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். கனமான விஷயங்களை உள்ளடக்கிய பல நல்ல பதிவுகள் வெளியாகின்றன. அவற்றை தவறவிடாது படித்து சம்பந்தப்பட்ட பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

Tuesday, July 12, 2005

ஒரு பின்னூட்டமும் அதற்கான பதிலும்

எனது முந்தைய பதிவின் ஒரு பகுதிக்கு மாலன் எழுதியிருக்கிற பின்னூட்டத்தின் சம்பந்தப்பட்ட பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்.

"பாரதியின் வரிகளை தமக்கு சாதகமாக ஒட்டி, வெட்டி ஜெயகாந்தனை திட்டின அதே பாணியை என் போன்ற சாதாரணர்களுக்கும் அவர் பயன்படுத்தியதைக் கண்டு எனக்கு புல்லரிக்கிறது"

இது அபாண்டம்!. நான் ஜெயகாந்தனை விமர்சித்து எழுதிய கட்டுரைகளில் பாரதியை வெட்டி ஒட்டி எழுதவில்லை. திசைகள் ஏப்ரல் 2005ல், நான் ஜெயகாந்தனைப் பற்றி எழுதிய கட்டுரை இடம் பெற்றது. அந்த திசைகள் இதழ் இப்போதும் திசைகள் இணையதளத்தில் இருக்கிறது (http://www.thisaigal.com/april05/essay_jk_maalan.html) யார் வேண்டுமானாலும் சென்று பார்த்துக் கொள்ளலாம். ஜெயகாந்தனைப் பற்றி ஆங்கிலத்தில் நான் எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையின் சுட்டி தமிழ்மணத்தில் உள்ள என் ஜன்னலுக்கு வெளியே பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 48 மணி நேரம் அவகாசம் தருகிறேன். நான் ஜெயகாந்தனை தாக்க பாரதியின் வரிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும். உங்கள் மன்னிப்பைத் தனி ஒரு பதிவாக வெளியிட வேண்டும். இது நடவாத பட்சத்தில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பற்றி அபாண்டங்கள் பரப்பப்படுவதை நான் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.

என்னுடைய பதில்:

மே 2005 திசைகள் இதழில் 'முகங்கள்' என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கிற இந்த பக்கத்தைப் பாருங்கள்.

Image hosted by Photobucket.com

Link: http://www.thisaigal.com/may05/muhangkal.html

இவை தனித்தனித் துண்டு செய்திகள்தான் என்று மாலன் வாதிடக்கூடும். ஆனால் ஒன்றன்பின் ஒன்றான உள்நோக்கத்துடன் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிற இந்த செய்திகளை மேம்பாக்காக பார்க்கிறவர்களுக்காக கூட இந்த செய்தியின் அர்த்தமும் உள்நோக்கமும் எளிதில் விளங்கிவிடும். பத்திரிகையில் வெளியாகிற அனைத்திற்கும் ஆசிரியரே பொறுப்பு என்கிற வகையில் மாலனே இதற்குப் பொறுப்பாகிறார். அந்த வகையில்தான் நான் எனது பதிவில் இதைப்பற்றி குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.

()

என்னை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டிருக்கிற மாலனின் நேர்மையை சில பழைய ஆதாரங்கள் கொண்டு என்னால் விளக்க முடியும். ஆனால் வேண்டாமென்று தவிர்க்கிறேன்.

இனிமேலும் இதைப் பற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. 'வேண்டுமென்றே சர்ச்சையான விஷயங்களை எழுதுகிறவர்களுடைய பதிவுகளை படிக்காமல் தவிர்ப்பது நல்லது' என்று எழுதி விட்டு நீங்களே அந்த மாதிரியானதொரு பதிவை எழுதியிருக்கிறீர்களே என்று சில நண்பர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கூற்றிலும் சில சதவீத உண்மை உள்ளது. எனவே இந்த தலைப்பை நான் தொடரப் போவதில்லை. நண்பர்களும் இந்தப் பதிவிற்கு எந்தப் பின்னூட்டமும் அளிக்காமல் இருந்தால் நல்லதாக இருக்கும்.

ஆனால்... இதிலிருந்து நான் சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக் கொடுத்தவர்களுக்கு நன்றி.

Monday, July 11, 2005

காசியிடம் சில கேள்விகள் கேட்டவருக்கு ..........

மாலன் என்பவர் தமிழ்மணம் திரட்டித் தருகிற (வெளியிடுகிற அல்ல) அவரது சமீபத்திய பதிவில் தமிழ்மண நிர்வாகிகளை நோக்கி சில கேள்விகளை கேட்டுவிட்டு கூடவே நான் முன்னர் எனது பதிவில் எழுதியிருப்பவற்றை (கூடவே என்னையும்) விமர்சித்திருக்கிறார்.

போலிப் பெயரில் வரும் பின்னூட்டங்கள் மற்றும் ஆபாச பின்னூட்டங்களைப் பற்றின தீர்வைப் பற்றி விவாதிக்கவே தேவையில்லை என்று நான் என் பதிவில் எங்குமே கூறவில்லை. இதைப் பற்றி விவாதிப்பதே - என்னைப் பொறுத்தவரை - தேவையற்ற வீணான செயல் என்றுதான் கூறியிருக்கிறேன். இணையம் என்பதே நல்லதும் தீயதும் கலந்ததுமான பெருவெளி என்பதை தெரிந்து வைத்துக் கொண்டுதான் நாம் இதில் நுழைகிறோம். இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோர் நல்லதை எடுத்துக் கொள்வதும், தீயதை ஒதுக்கியும் (அதுவாக நம் வழிக்கு வந்தாலும்) செயல்படுவது இயல்பு. Penis Enlargement மின்மடல்களை எதையும் யோசிக்காமல் நாம் அழிப்பதில்லையா?

ஆக.. வலைப்பதிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விழைபவர்கள்,

(1) தங்கள் பதிவில் இடப்படும் ஆபாச பின்னூட்டங்களை அழித்து விட்டோ அல்லது ஒதுக்கி விட்டோ தங்கள் வேலைகளைத் தொடரலாம். (இவ்வாறு செய்வதாலேயே ஆபாச பின்னூட்டங்களை இடுபவர்கள் சோர்ந்து போய் தங்கள் தீய பழக்கத்தை கைவிடலாம். மாறாக இது குறித்து அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் உற்சாகமாகி இன்னும் ஜரூராக தங்கள் வேலையைத் தொடர்வார்கள்)

(2) போலி பின்னூட்டங்களைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்டவரை நாம் ஒரளவு அறிந்திருக்கிறவரை, அது அவரிடமிருந்து வந்தது அல்ல என்பதை உணர்ந்து - தேவையென்றால் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு தெளிவுபெற்று - அதையும் ஒதுக்கி விடலாம்.

(3) அதிக பின்னூட்டங்கள் பெற சர்ச்சைக்குரிய விஷயங்களை வேண்டுமென்றே எழுதுபவர்களின் பதிவுகளை படிப்பதை தவிர்த்து விடலாம்.

இந்த முறையில்தான் தமிழ்மணத்தை நான் பயன்படுத்துகிறேன். எனவே ஆபாச பின்னூட்டங்கள் குறித்தான பிரச்சினை என்னைப் பொறுத்தவரை மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. (நன்கு கவனிக்கவும். 'என்னைப் பொறுத்தவரை') நான் இதை பொதுமைப்படுத்தவில்லை. நான் நண்பர்களிடம் பேசியவரை பெரும்பாலோனார் என்னைப் போன்ற நிலையிலேயேதான் இருப்பதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களும் மேற்கூறின செயல்பாடுகளை பின்பற்றினால் ஆபாச பின்னூட்டங்களின் உக்கிரத்திலிருந்து பெரும்பாலும் தப்பிக்கலாம்.

()

தமிழ்மணம் என்பது பதியப்படும் வலைப்பதிவுகளை ஒரே கூரையின் கீழ் திரட்ட காசி என்கிற தனிமனிதரின் கடின உழைப்பினால் பொதுநல நோக்கில் உருவாக்கப்பட்டது. பின்னர் சில நண்பர்களின் உதவியோடு இந்த சேவை தொடரப் படுகிறது. நாளாக நாளாக வலைப்பதிவோரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பயனீட்டாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சிறந்த பதிவுகளை வாசிப்போரே தேர்ந்தெடுத்து அந்தப்பதிவிற்கு முன்னுரிமை தருமாறு ஒட்டுரிமை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை சிலபலர் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தியதால் வீணான குழப்பங்கள் ஏற்பட்டு, சர்ச்சையான பதிவுகளே முன்னுரிமை பெற்று, உருப்படியான பதிவுகள் நீண்டகால கவனம் பெறாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய நிலை.

ஆக.. இந்த நிலையை முறைப்படுத்த அல்லது மாற்றியமைக்க தமிழ்மண நிர்வாகிகளிடம் வேண்டுகோள் ¨வ்க்கலாமே ஒழிய ஆபாச பின்னூட்டங்கள் வருவதை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றே கருதுகிறேன். ஆனால் அதையும் முறைப்படுத்த முடியும் என்றால் கணினி நுட்பவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் கூடி இதற்கொரு தீர்வு காணச் செய்வதுதான் முறையான செயலாக இருக்குமே ஒழிய, பழகிய அமைப்பை விட்டு விட்டு தடாலென்று இன்னொரு அமைப்பிற்கு - அதுவும் இந்த உப்புப் பெறாத காரணத்திற்காக - மாறுவது சற்று தடுமாறச் செய்வதுடன் தேவையற்ற செயலாகும். எத்தனை தடுப்புக் கோட்டைகளையும் தாண்டிவரும் Hacker-கள் அந்த அமைப்பையும் ஊடுருவ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?.

()

இனி மாலன் என் கருத்துக்களுக்கு கூறிய எதிர்க்கருத்துகளுக்கு வருகிறேன்.

///இருப்பதிலிருந்து மேம்பட்ட ஒரு இடத்திற்கு மாறிக் கொள்வதில் என்ன அபத்தம் என்று எனக்குப் புரியவில்லை. ///

மாலன் கூறுகிற மேம்பட்ட இடம் என்பதிற்கு காரணங்கள் புரியவில்லை. ஒப்புநோக்கினால் ப்ளாக்கம்.காம்மில் உள்ள பரவலான வசதிகளே இதிலுள்ளன. பின்னூட்டங்கள் என்ற வகையை மட்டும் கருத்தில் கொண்டு பார்த்தால், நீங்கள் விரும்பும் நபர் மட்டுமே உங்கள் பதிவில் பின்னூட்டங்கள் அளிக்குமாறு நீங்கள் ஏற்படுத்த முடியும் என்று தெரிகிறது. (இதையும் ஆபாச பின்னூட்டக்காரர்கள் உடைக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த நிச்சயமுமில்லை) அதாவது ஆபாச பின்னூட்டங்கள் தவிர மாற்றுக்கருத்து கொண்டவர்களின் பின்னூட்டங்களை பார்த்து நீங்கள் சங்கடப்பட வேண்டும். உங்கள் நண்பர்களின் 'ஆஹா ஓஹோ' பாராட்டுக்களை மட்டும் நீங்கள் காது குளிர கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்கலாம். ஆஹா! ஜனநாயகம் தழைக்க இதுவல்லவா மேம்பட்ட வசதி?

மேலும் ஆபாச பின்னூட்டமிட்டு பிரச்சினையை ஏற்படுத்துபவர் என்று பெரும்பாலோனோர் ஒருவரை வெறுப்புடன் சுட்டிக்காட்ட (அவர்தானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது) அந்த நபரோ மேம்பட்ட வசதி உள்ள நண்பரின் அமைப்பில் நண்பர்கள் பட்டியலில் பெருமையுடன் வீற்றிருக்கிறார். ஆக.. பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கிற விந்தையான செயலில் ஈடுபட்டிருப்பவரை என்ன சொல்வது? இவர் மற்றவருக்கு நாள், நட்சத்திரம் குறித்து தரும் ஜோசியர் வேலையில் இறங்கும் போது ந¨க்காமல் இருக்க முடியவில்லை.

///பிறந்து வளர்ந்த இந்தியாவை விட்டு வெளிநாட்டில் போய் வேலை பார்க்கிறோமே அது அபத்தமா?இப்போது இருக்கிற வீட்டில் பழுது ஏற்பட்டால், அந்தப் பழுதை நீக்க முடியவில்லை என்றால். விடு மாறமாட்டோமா? பயன்படுத்திக் கொண்டிருக்கிற வாகனம் பழுதாகிவிட்டால் வேறு வாகனம் வாங்க மாட்டோமா? இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை விட நல்லதொரு வேலை கிடைத்தால் மாறமாட்டோமா? விண்டோஸ் 98லிருந்து நாம் xpக்கு மாறவில்லையா? விண்டோசிலிருந்து லினக்சிற்கு மாறவில்லையா? ////

கப்பலில் ஓட்டை விழுந்தால் சக தொழிலாளர்கள் உதவியோடு அதை அடைக்கத்தான் முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய அதற்குள் கப்பல் முழுகிப் போய்விடுகிறாற் போல் அலறிக் கொண்டு 'நான் தப்பிக்க வழி கிடைத்துவிட்டது. நீங்களும் ஓடிவாருங்கள்' என்று அமைதியாக அமர்ந்திருப்போரையும் பதட்டமடையச் செய்வதுதான் மேம்பட்ட வசதிக்கு அழைத்துச் செல்லும் லட்சணமா என்று புரியவில்லை. (உவமைகளை வைத்துக் கொண்டு தனக்கு சாதகமாக ஒரு விவாதத்தை எவ்வாறு திசைதிருப்ப முடிகிறது, கவனீத்தீர்களா?)

////சுரேஷ் கண்ணன் போன்ற அறிவுஜீவிகளுக்காகத்தான் பாரதியார் எழுதி வைத்திருக்கிறார்: " அப்பன் தோண்டிய கிண்று என்று உப்புத் தண்ணியைக் குடிக்கிறார்கள்" என்று/////

இதைக் கண்டு நகைப்பாக இருக்கிறது. மாலன் போன்ற ஒரிஜினல் அக்மார்க் அறிவுஜீவிகள், பாரதியின் வரிகளை தமக்கு சாதகமாக ஒட்டி, வெட்டி ஜெயகாந்தனை திட்டின அதே பாணியை என் போன்ற சாதாரணர்களுக்கும் அவர் பயன்படுத்தியதைக் கண்டு எனக்கு புல்லரிக்கிறது. (இங்கு அறிவுஜீவி என்பதை அவர் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறாரோ, அதே அர்த்தத்தில்தான் நானும் பயன்படுத்தியிருக்கிறேன்) பாரதியின் வார்த்தைகளை வைத்துக் கொண்டு எதிரியிடம் சிலம்பம் விளையாடும் விளையாட்டும் புதுமையாகத்தானிருக்கிறது. பாரதிக்கு ஒருபுறம் மணிமண்டபம் கட்டிக் கொண்டு அவரை தனது அடியாளாக பயன்படுத்தும் ஒரே நபர் இவராகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது.

////கட்சிமாறுகிற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். த்லைவன் என்ன செய்தாலும் அதை சிந்தனையற்று, கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்ட தொண்டர்களும் இருக்கிறார்கள்.///

இதை இவர் கூறியதுதான் இன்னும் வேடிக்கை. இன்னும் விவரித்தால் வம்பாகி போகுமென்பதால் தவிர்க்கிறேன்.

/////சுரேஷ் கண்ணன் நம்மையெல்லாம் சிந்தனையற்ற தொண்டர்களாக இருக்கச் சொல்கிறார் போலும்!////

அடடா! ஒரே வார்த்தையில் என்னை தனியாளாய் நிறுத்திவிட்டு மற்றவர்களையெல்லாம் அவர் பக்கமாய் நிற்கிறாற் போலொரு பிரமையை ஏற்படுத்தின சாமர்த்தியத்தை வியக்கிறேன்.

()

மாலன் அவர்களே... இந்த விஷயத்தில்தான் உங்களோடு மாறுபடுகிறேனே ஒழிய, மாலன் என்கிற படைப்பாளியிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன் என்பதையும் உங்கள் மனதின் ஒரத்தில் குறித்துக் கொள்ளவும்.

()

தமிழ்மண வசதியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு,

ஆபாச பின்னூட்டங்களை ஏற்படுத்துகிறவர்கள், அதை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறவர்கள் என்று பட்டியலிட்டால் அவர்கள் இரு கை எண்ணிக்கையில் அடங்கிவிடுவர். எனவே அவ்வாறானவர்களுக்காக நாம் இடம்பெறுவது, அவர்களுக்கு பயந்து சென்றாற் போல் ஒரு பிரமையை ஏற்படுத்தி அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தினாற் போலாகிவிடும். எனவே கண்டும்காணாமல் அவர்களை புறக்கணித்தால் தானாகவே அவர்கள் விலகிவிட வாய்ப்புகள் அதிகம். தொழில்நுட்ப ஓட்டைகள் எல்லா இடத்திலும் உண்டு. வேறுவழியில்லை என்னும் பட்சத்தில் மட்டுமே இடம்பெயர்தல் அவசியம்.
இதை அவரவர் சுய யோசனைக்கும், பரீசீலனைக்கும், முடிவிற்கும் விடுகிறேன்.

Friday, July 08, 2005

'தமிழ்மணம்' காசியுடன் ஒரு சந்திப்பு

மழை காரணமாக முன்னர் ஏற்பாடு செய்திருந்த மெரீனா, (இல்லாத) கண்ணகி சிலைக்குப் பதிலாக உட்லண்ஸ் டிரைவ்-இன்-னில் சந்திக்க காசியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் போவதற்குள் கலந்துரையாடல் சாம்பார் வடையுடன் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முன்னமே சந்தித்திருந்தவர்கள் தவிர, காசி ஆறுமுகம் மற்றும் செல்வராஜ் ஆகியோர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேன். (ஆர்.வெங்கடேஷ், பத்ரி, பிரகாஷ், ராம்கி, சாகரன், நாராயண், இராம.கி, அருள் செல்வன், சந்திரன், ராமச்சந்திரன் உஷா, மதுமிதா மற்றும் சிலர் வந்திருந்தனர்)

எதிர்பார்த்திருந்த மாதிரியே தமிழ்மணத்தின் burning issue-வான (நான் அப்படி நினைக்கவில்லை) ஆபாச மற்றும் போலி பின்னூட்டங்களைப் பற்றி உரையாடல் போய்க் கொண்டிருந்தது. நான் சற்று தொலைவில் அமர்ந்திருந்ததால் (வாசகர்களுடன் குறைந்த பட்ச தூரம் வேண்டும் என்று சுஜாதா சொன்னதிலிருந்து நான் எல்லோரிடமும் - முக்கியமாக தலைக்கு பின்னால் ஒளிவட்டத்தை சுமந்திருக்கும் எழுத்தாளர்களிடமிருந்து - சற்று தூரத்தை மெயின்டெயின் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்) உரையாடலை முழுமையாக என்னால் கேட்க இயலவில்லை.

காசியையும், செல்வராஜையும் சந்தித்தது முக்கியமான விஷயமென்றாலும் ஆபாச பின்னூட்டங்களை ஒரு பிரச்சினையாக கருதி கூடி விவாதிப்பது என்னைப் பொருத்தவரை ஒரு அவமானமாகரமான காரியமாகவே கருதுகிறேன். ஒரு சில உளவியல் ரீதியான சிகிச்சை தேவைப்படுபவர்கள் செய்யும் காரியங்களை ஒரு பொருட்டாக கருதி, நம்முடைய நேரத்தை செலவு செய்வதே சம்பந்தப்பட்டவர்களால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஆபாச பின்னூட்டக்காரர்கள் உணர்ந்து மகிழ்ந்து போக ஏதுவாக இருக்கும் என்பது என் கருத்து. ஒரு நிலைக்கு மேல் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்; சற்றும் பொருட்படுத்தப்படக்கூடாதவர்கள்.

மேலும் ஏற்கெனவே நிறுவப்பட்ட ஒரு அமைப்பில் உள்ளவர்கள் மற்றும் அந்த வசதியில் புழங்கிக் கொண்டிருப்பவர்கள், இந்த ஒரு காரணத்திற்காகவே - சில பிரத்யேக வசதிகள் இருந்தாலும் - இன்னொரு அமைப்பிற்கு மாறுவது அல்லது மாறுவதற்கு யோசனை கூறுவது மிக மிக அபத்தமான கருத்து. இருக்கிற இடத்தில் உள்ள பிரச்சினைகளை களைய அல்லது ஒதுக்க வேண்டிய வழிவகைளை ஆராய வேண்டுமே ஒழிய அரசியல்வாதிகள் போல் அவ்வப் போது கட்சி மாறுவது ஒரு நிலையான தீர்வு அல்ல.

()

இந்த Official மீட்டிங் முடிந்தவுடன் நண்பர் அருள் செல்வன் பற்றவைத்த நெருப்புப் பொறிதான் நேற்றைய மாலைப் பொழுதை அர்த்தமுள்ளதாக்கியது. அவர் சொன்னதில் நான் உள்வாங்கிக் கொண்டது இதுதான்.

1980-களில், 'இதுதான் இலக்கியம்' என்று சிலபலர் எழுதி எழுதி பம்மாத்து செய்துக் கொண்டிருக்கையில் அந்த மாயையை உடைக்க ஒரு கலகக்கூட்டம் புறப்பட்டது. ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கிற மாய பிம்பங்களை கலைத்துப் போடுவதுதான் அந்த கூட்டத்தின் நோக்கம். இதன் மூலம் ஒரு மாற்று இலக்கியம் புதுவெள்ளமென தமிழ் இலக்கியத்திற்குள் பாய இது ஏதுவாக இருக்கும் என்று நினைக்கப்பட்டது. நாகார்ஜீனன், தமிழவன், கார்லோஸ், சாருநிவேதிதா போன்றோர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் இலக்கிய வடிவங்களை தங்களின் மாற்று இலக்கியத்தால் கலைத்துப் போட்டனர். ஆங்கிலத்தில் இம்மாதிரியான உடைப்புகள் காலந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தமிழில்தான் அவ்வப்போது ஒரு தேக்கநிலை ஏற்பட்டு குட்டையில் சுகமாக ஊறிக் கொண்டிருக்கிற எருமைமாடுகள் போல் நாம் ஒரேமாதிரியான இலக்கியத்தை வேறுவழியில்லாமல் சுகித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது 2005-ல் ஏறக்குயை இதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் என்றவுடன் நமக்கு சில பெயர்கள்தான் நினைவுக்கு வருகிறது. அவர்கள் எழுதுவதையும், அவர்களின் தகுதிகளையும் கட்டுடைத்துப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. புதுவகையான இலக்கியம் என்பது ஒரு கனவாகவே இருக்கிறது. இந்நிலை மாற இளம் எழுத்தாளர்கள் இருக்கிற பிம்பங்களை உடைத்து ஒரு புதிய வழியை ஏற்படுத்த வேண்டும் என்பது அருளின் ஆதங்கம்.

என்ன செய்யப் போகிறோம்?

()

மேற்கூறிய இரண்டு விஷயங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

நெய்வேலி புத்தக கண்காட்சியும் ரவா உப்புமாவும்

கடந்த 3-ந் தேதியன்று நடுராத்திரி (?!) 4 மணிக்கு - அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் - என்னை எழவைத்த பா.ராகவனுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை போட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும். :-) இந்த வருடம் நெய்வேலி புத்தக கண்காட்சிக்கு நீங்கள் வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 4 மணிக்கு எழுந்ததும் புதிய அனுபவமாகத்தான் இருந்தது. சினிமாவில் விடியற்காலை காட்சி என்பதற்காக சூரிய உதயத்தை காண்பித்து விட்டு, சிறுபறவைகளின் கூச்சல்களை ஒலிப்பார்களே, அந்த மாதிரி பறவைகளின் ஒலிகளை பால்கனியில் நின்று கொண்டு அரையிருட்டில் கேட்டது நன்றாகத்தான் இருந்தது. அந்த புத்தம் புதுக் காலையின் அடர்த்தியான குளிர்காற்றை ஆழமாக சுவாசிப்பதே ஒரு சுகானுபவமாக இருந்தது. நன்றி ராகவன்.

முக்கியமான செய்தி ஏதாவது இருக்குமா என தொலைக்காட்சியை இயக்கி பார்த்ததில் எதுவுமில்லாததற்கு பதிலாக பேஷன் டி.வி.யை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததில் கொஞ்ச நஞ்ச தூக்கமும் பறந்து போனது.

()

காலை 7.30 மணி கோயம்பேடு பேருந்து நிலையம். முதன்முறையாக வருகிறேன்.
மிகவும் விஸ்தாரமாக இருந்த நிலையத்தில், கண்ணாடிக் கதவுகளை தள்ளிக் கொண்டு பிரமிப்புடன் உள்ளே நுழைய, எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பிளாட்பாரங்களில், எந்தெந்த எண்கள் கொண்ட பேருந்து என்று குழந்தைக்கும் புரியுமாறு அங்கங்கே போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

பத்ரி வந்தவுடன் ஆரம்பித்தது பூகோளத்தில் இடம்பெற வேண்டிய அந்த உரையாடல். (வழக்கமாக 'சரித்திரத்தில் இடம்பெற வேண்டியது' என்று எழுதுவதை சற்று மாற்றியிருக்கிறேன்)

இரா.முருகனின் தினமணிகதிர் தொடரான 'சற்றே நகுக' (அட! என்ன ஒரு தலைப்பு!), மார்க்வெஸ்ஸின் One Hundred Years of Solitude நாவலில் முதல் வரியிலேயே முழு நாவலும் சொல்லி முடிக்கப்பட்டு விட்ட யுக்தி, நகரத்தார்களின் புத்தக பிரசுர பாரம்பர்யம், (பின்னர் பிரகாஷ் வந்து இணைந்து கொண்டார்) குருசரண்தாஸின் புத்தகம், உலகமயமாக்கலின் விளைவுகள், திரைக்கதையின் இலக்கணம், பத்ரியின் சுவாரசியான personality கொண்ட உறவினர் ஒருவர், பதிப்பகத்தில் எடிட்டரின் பங்கு, வலைப்பதிவுகளில் நடக்கும் அபத்தங்கள், பத்திரிகை சர்க்குலேஷன், சில வம்பு தும்புகள், டிவிடியில் எப்படி எழுதுவது? ........... என்று ஒரு முழு ரவுண்டு வந்த அந்த உரையாடலை பேருந்தின் ஜன்னல் வெளியில் கிடைத்த கொய்யா, பலாப் பழங்களோடு சேர்த்து மென்று தின்றோம். வெயில் புழுக்கத்தாலும், ரொம்ப நாட்கள் கழித்து பேருந்தில் நீண்ட பயணம் செய்வதாலும் சற்று அலுப்பாக இருந்தது. பேருந்து ஓட்டுநரோ டீஸல் காலியாகும் வரை நிறுத்துவதில்லை என்று ஆவேசமாக ஓட்டிக் கொண்டிருக்க, எரிச்சலில் இந்த பாழாய்ப் போன நெய்வேலி எப்போது வரும் என்று எரிச்சலாக இருந்தது.

ஒருவழியாக பேருந்தில் இருந்து இறங்கி, நிலையத்தின் அருகாமையில் இருந்த ஏ.சி உணவகத்திற்கு சென்றோம். அங்கே ஏ.சி. நேற்று இயக்கப்பட்டு இன்று மிச்சமிருந்த 10 சதவீத ஜில்லில் அருமையான மதிய உணவை முடித்தோம். வெளியூரில் உணவு எப்படியிருக்குமோ என்று பயந்து கொண்டிருந்த எனக்கு அந்த அருமையான உணவு திருப்தியளித்தது. (அந்த வத்தக்குழம்பிற்காகவே மறுபடி போக வேண்டும் போலிருக்கிறது)

()

அந்த வெயிலிலும், சற்று உள்ளே அமைந்திருந்த புத்தக கண்காட்சிக்காக சில கிலோ மீட்டர்கள் நடந்து வந்த நெய்வேலிக்காரர்களை - முக்கியமாக சிறுவர்களை - பாராட்ட வேண்டும் போலிருந்தது. அழகான நுழைவாயிலுடன் அமைந்திருந்த கண்காட்சி, மேலே வெயில் மறைக்க கூரை, கீழே செம்மண்ணால் பாதிக்கப்படாமல் பிளாஸ்டிக் விரிப்புகள் என்று நன்றாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூடவே மெகா ராட்டினங்களும், மிளகாய் பஜ்ஜி கடைகளுமாய் திருவிழா எபெக்டில் இருந்தது. நிறைய முக்கியமான பதிப்பாளர்கள் (ஏனோ) கடை போடாததால் புத்தக கண்காட்சி சற்று டல்லடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். நண்பர் பா.ராகவன், தொள தொள சட்டையும், ஷார்ட்ஸீமாக மெர £னாவில் நடைப்பயிற்சி செல்கிறவர் தோற்றத்தில் இருந்தார்.

பாரா அறிமுகப்படுத்த எஸ்ஸார்சி (இவரின் குறுநாவல்களை கணையாழியில் படித்திருக்கிறேன்) வேர்கள் ராமலிங்கம், தினமணி சிவகுமார் (இரா.முருகன், இவர் எழுதிய இசைமலரைப் பற்றி காப்பிகிளப்பில் எழுதியிருக்கிறார்)
ஏற்கெனவே மடற்குழுவின் மூலமாக அறிமுகமாகியிருந்த வே.சபாநாயகத்தை சந்தித்தேன். அவருடைய 'மீட்பு' போன்ற சில பழைய சிறுகதைகளை நான் நினைவு கூர மனிதர் மிக உற்சாகமாக அந்தக் கதைகளின் பின்னணிகளைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். இவருடன் பேசிக் கொண்டிருந்தது ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

()


கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்:

(1) தி.ஜானகிராமனின் 'அடி' குறுநாவல் - மணிவாசகர் பதிப்பகம் - விலை ரூ.16

ரொம்ப நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த புத்தகம் இது. ஆர்.வெங்கடேஷீம் அவருடைய 'நேசமுடன்' மின்னிதழில் இதை குறிப்பிட்டிருந்த ஞாபகம். வீட்டுக்கு வந்தவுடன் படித்து முடித்துவிட்டேன். தி.ஜாவின் பேவரிட் ஏரியாவான 'Adultery' - ஐ சற்று தொடும் குறுநாவல். (இதைப் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்)

(2) சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிற 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசை

இந்த வரிசையில் ந.பிச்சமூர்த்தி பற்றி அசோகமித்திரனும், மெளனி பற்றி கி.அ. சச்சிதானந்தமும், க.நா.சு பற்றி தஞ்சை பிரகாஷீம், அம்பேத்கர் பற்றி ராகவேந்திர ராவும் எழுதியுள்ள புத்தகங்களை வாங்கினேன். ஒவ்வொன்றும் ரூ.25. எந்தவித Gimmics-ம் இல்லாத நேர்மையான வடிவமைப்பு மற்றும் தரமான தாளில் அச்சாகியிருக்கிற இந்த புத்தகங்கள் விலையோடு ஒப்பிடும் போது மிக மலிவாக தோன்றுகிறது. ஒரு எழுத்தாளரைப் பற்றின முறையான அறிமுகத்திற்கு இந்த புத்தகங்கள் மிக உபயோகமாயிருக்கும் என நம்புகிறேன். சம்பந்தப்பட்ட படைப்பாளியைப் பற்றின அறிமுகம், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சில சுவாரசியமான சம்பவங்களை நினைவுகூர்தல், விமரினச நோக்கில் அவருடைய படைப்புகள், அவரைப் பற்றிய மற்ற எழுத்தாளர்களின் கருத்துக்கள், அவரின் படைப்புப்பட்டியல் என்று மிக அழகாக இந்தப் புத்தகங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த வரிசை நூல்கள் மிக பயனுள்ளதாயிருக்கும்.

(அம்பேத்கர் எப்படி இலக்கியவாதிகள் வரிசையில்?.. என்று பத்ரி ஒரு சிறிய சந்தேகத்தை எழுப்பினார். அடித்தட்டு மக்களின் மேலுள்ள பரிவுடனான அவரது அரசியல் சிந்தனைகளை இலக்கியம் என்கிற வரிசையில் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது)

(3) பாரதி புத்தகலாயம் வெளியிட்டிருக்கிற பல்வேறு உபயோகமான தலைப்புகளில் சிறுசிறு நூல்கள்.

சிறிய அளவில் 100 புத்தகங்கள் விதவிதமான தலைப்புகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. விலை ரூ.5 மற்றும் ரூ.10 மட்டுமே. நான் வாங்கிய சில உதாரண தலைப்புகள்

நான் நாத்திகன் ஏன் - பகத்சிங்
தமிழர் திருமணம் நேற்று முதல் இன்று வரை - பேரா.ச.மாடசாமி
மனிதனும் உரிமையும் - ச.பாலமுருகன்
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் - விஜயன்
தற்கால தமிழகத்தில் சமூக வன்முறைகள் - டாக்டர்.கா.அமணிக்குமார்.
செப்டம்பர் நினைவுகள் - அருந்ததிராய்
ஏகாதிபத்ய ஜனநாயகம் - அருந்ததிராய்
அரசியல் எனக்குப் பிடிக்கும் - ச. தமிழ்ச் செல்வன்
ஆயிஷா - இரா.நடராஜன்
ரோஸ் - இரா.நடராஜன்
உலகமயமாக்கலின் எதிர்விளைவுகள் - பிரபாத் பட்நாயக்
20ஆம் நூற்றாண்டு அரசியலில் இந்தியா - அய்ஜாஸ் அகமது
பழங்குடியினர் பண்பாடு சிதைவுகள் - ஆதவன் தீட்சண்யா

மேலும் விவரங்களுக்கு: www.tamizhbooks.com

இந்த புத்தகங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் ஒரு நூதனமான உலகைப் பற்றின சுருக்கமான அறிமுகத்தை நமக்கு தருகின்றன. இதை ஆரம்பமாகக் கொண்டு நாம் நம் பயணத்தை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் செயல்படுத்தலாம். இதில் 'ஆயிஷா' என்கிற சிறுகதை 'கணையாழி'யில் வெளியாகி பரவலாக பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. சுயமாக சிந்திக்கிற புத்திசாலியான ஒரு சிறு மாணவி, ஆட்டு மந்தைகளையே மேய்த்து பழகிப் போன முதிர்ச்சியற்ற ஆசிரியர்களால் எவ்வாறு பாதிக்கப்படுகிறாள் என்பதைப் பற்றியது. பின்னர் இது குறும்படமாகவும் வந்தது.

()

கிழக்குப் பதிப்பகம் சார்பில் பத்ரி 'சிறந்த பதிப்பாளர்' விருது வாங்கும் காட்சியைப் பார்க்கும் வரை பொறுத்திருக்க நேரம் அனுமதி தராததால் பா.ராகவன், பிரகாஷ், நான் ஆகியோர் நகைச்சுவை எழுத்தாளரான ஜே.எஸ்.ராகவனின் காரில் சென்னை திரும்பினோம். (அண்ணாநகர் டைம்ஸில் ஜே.எஸ்.ராகவனுடைய பத்தியை விடாமல் படிக்கிறேன்).

வழியில் எங்கும் இரவு உணவை சாப்பிட இயலாமல், பதினொன்றைக்கு மனைவியை தொந்தரவு செய்து எழுப்பி, அவசரத்திற்கு என் ஜென்ம விரோதியான 'ரவா உப்புமாவை' விழுங்கி விட்டு தூங்கப் போனேன்.

Thursday, July 07, 2005

பா.ராகவன் நடிகனாகி விட்டார்........

Image hosted by Photobucket.com

எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர், தொலைக்காட்சி தொடர் கதை-வசனகர்த்தா என்று பல பரிமாணங்களைக் கொண்ட நண்பர் பா.ராகவன், இப்போது அவர் கதை-வசனம் எழுதிக் கொண்டிருக்கும் 'கெட்டி மேளம்' தொலைக்காட்சி தொடரில் 'கோயிஞ்சாமி' என்றொரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நேற்றிலிருந்து நடிக்கத் துவங்கியிருக்கிறார். 'மிகச் சராசரியான ரசனை கொண்ட, அறிவில் சற்று மட்டான' ஆளுமை உடையவர்களை இனி 'கோயிஞ்சாமி' என அழைக்குமளவிற்கு அந்த வார்த்தையை ஒரு icon -ஆகவே மாற்றிவிடுவார் என்று நம்புகிறேன்.

அவ்வப்போது நான் பார்த்து வந்துக் கொண்டிருந்த ஒரே தொலைக்காட்சி தொடரான 'மெட்டி ஒலி' முடிவடைந்தவுடன் செய்திளைத் தவிர வேநெந்த நிகழ்ச்சியையும் அவ்வளவாக கவனித்துப் பார்ப்பதில்லை. இருந்தாலும் நண்பர் பாரா கதை-வசனம் எழுதும் தொடர் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தத் தொடரை எப்போதாவது பார்ப்பதுண்டு. நான் பார்த்தவரை வசனங்கள் மிக இயல்பாகவே அமைந்திருந்திருந்தன, தொலைக்காட்சி தொடரில் அப்படியன்றும் புரட்சி செய்துவிட முடியாது என்ற அளவில்.

'புதன்கிழமை (6.7.05) முதல் நான் நடித்து வரும் காட்சிகள் ஒளிபரப்பாக போகின்றன' என்று அவர் தெரிவித்ததிலிருந்து, மிக ஆவலாக நேற்றைய தொடரில் அவர் வரும் காட்சிக்காக காத்துக் கொண்டிருந்தேன். தொடரின் ஒரு கதாபாத்திரக்குடும்பம் குடிபோகும் ஒரு வீட்டின் சொந்தக்காரராக, நெற்றியில் விபூதிப் பட்டைகள் துலங்க, அடுத்தவர் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் வந்திருந்தார். 'வந்திருந்தார்' என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதன்முறையாக கேமராவை எதிர்நோக்குவதால் ஏற்படுகின்ற இயல்பான தயக்கமும், இயல்பின்மையும் அவர் நடிப்பில் வெளிப்பட்டன.பரவாயில்லை. இப்போது சூப்பர் ஸ்டாராக இருக்கின்றவர்கள் கூட இப்படித்தான் துண்டு துக்கடா வேஷங்களில் கவனிப்பில்லாமல் ஆரம்பத்தில் வந்து போயிருக்கின்றனர். பாராவும் இனிவரும் காட்சிகளில் சிறப்பாக நடித்து கலக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.

பா.ராகவன் இன்னும் பல வெற்றி படிகளில் ஏறி உயர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Saturday, July 02, 2005

அகிரா குரோசாவா - சுயசரிதம் - பகுதி 2

சென்ற பதிவின் தொடர்ச்சி:

ஒரு வரலாற்றுத் தேர்வில் அவர் ஒரு கேள்விக்கு விடை அளித்த விதம், அவர் ஆட்டு மந்தையாக இல்லாமல் எவ்வளவு சுயத்துடன் யோசிக்கிறார் என்பதை புரிய வைக்கிறது.

... ஒரு முறை வரலாற்றுத் தேர்வைச் சந்தித்தேன். பத்து கேள்விகளைக் கொணட தேர்வு அது. அதில் ஒன்றுக்குக்கூட எனக்கு விடை தெரியவில்லை. இவாமட்சு வரலாற்று ஆசிரியர் என்பதால் அவர் பார்வையாளராக வரவில்லை. அவரால் நடத்தப்பட்ட பாடத்தில், பதிலளிக்க முடியாமல் இருக்கிறோமே எனப் பதட்டமடைந்தேன். ஒரு கேள்வியையாவது பதம் பார்த்துவிட முடிவு செய்தேன். "இம்பீரியல் நீதிமன்றத்தின் மூன்று புனித பொக்கிஷங்களைப் பற்றி உன் கருத்துக்களைத் தெரிவி" என்பதுதான் கேள்வி. சுமாராக மூன்று பக்கங்களுக்கு முட்டாள்தனமாக இப்படிக் கிறுக்கி வைத்தேன்: "மூன்று பொக்கிஷங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை ஒரு போதும் கண்களால் கண்டது இல்லை. பா¡க்காத ஒன்றைப் பற்றி எனது கருத்துக்களை எழுதுவது உண்மையில் இயலாத ஒன்று. எடுத்துக்காட்டாக, 'யாடா-நோ-ககாமி' புனித கண்ணாடி, மிகவும் புனிதமான ஒன்று என்பதால் யாரும் இதுவரை அதனைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆகவே, உண்மையில் அது வட்டமானதாக இல்லாமல் இருக்கலாம். நான் என் கண்களால் நுட்பமாகப் பார்த்து உறுதி செய்தவற்றைப் பற்றி மட்டுமே எழுத இயலும். நிரூபணம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே எனக்கு நம்பிக்கையிருக்கிறது."

இவாமட்சு விடைத்தாள்களைத் திருத்தி, மதிப்பெண்கள் அளித்து, மாணவர்களிடம் தரும்நாள் வந்தது. அவர் தடித்த குரலில் சொன்னார்.

"ஒரு விடைத்தாள் மட்டும் எனக்கு ஆர்வமளிக்கிறது. அந்த விடைத்தாளில் பத்து கேள்விகளில் ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. அந்த பதில் மிகவும் அழகான பதில். இப்படியரு மிக இயல்பான பதிலை இப்போதுதான் நான் பார்க்க நேரிட்டுள்ளது. எழுதியவன் உண்மையிலேயே நம்பிக்கையூட்டுபவனாக உள்ளான் நூறு மதிப்பெண்கள் பெறுபவன் குரோசாவா" அவர் என்னிடம் விடைத்தாளைத் தந்தார். எல்லா கண்களும் என்னையே மொய்த்தன. நான் சிவந்து போனேன். அசையக்கூட முடியாமல் நெடுநேரம் என் நாற்காலியில் முடங்கிப் போனேன். ...........

இதுமாதிரியான ஒரு பதிலை ஒரு முதிர்ச்சியற்ற ஆசிரியர் எதிர்கொண்டால் குரோசாவின் நிலை பரிதாபமானதாயிருக்கும் என்று தோன்றுகிறது. ஆட்டு மந்தைகளை உருவாக்கும் கல்விமுறை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதானிருக்கும் போலிருக்கிறது. மனப்பாடம் செய்து உருவேற்றி அதை அப்படியே தேர்வில் சிறந்த முறையில் வாந்தியெடுப்பவன்தான் சிறந்த மாணவன் என்கிற இந்த கல்வி முறை என்று தொலையுமோ தெரியவில்லை. ஏற்கெனவே சொல்லப்பட்டவைகளை மறுபேச்சில்லாமல் மூளைக்குள் திணித்துக் கொள்வதற்கு மாறாக சுயமாக யோசித்து கேள்வி கேட்பவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதில் "உட்கார். அதிகப்பிரசங்கி".

()

ராணுவப் பயிற்சிகளின் போது தம்மிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் குறும்புகள் செய்து பழிதீ¡த்துக் கொள்வார் குரோசாவா. இடையில் தைல ஒவியங்கள் வரைவதில் தேர்ச்சி பெற்று கண்காட்சியில் பரிசு பெற்றிருக்கிறார். கம்யூனிஸ்டு அனுதாபியாக இருந்து அவர்களுக்காக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து உதவிகள் புரிந்திருக்கிறார். பெரும்பாலான புத்தகங்களைப் படிக்கும் ஆர்வமும் சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது. (அந்தச் சமயத்தில் அவர் பார்த்து ரசித்த சிறந்த நூறு படங்களை பட்டியலிட்டிருக்கிறார்) ஒரு முறை அரசின் அடக்குமுறை தாங்காமல் கடுமையான சுரத்துடன் தாக்குப்பிடிக்க முடியாமல் தன் சகோதரனை சென்றடைகிறார். இதிலிருந்து அகிராவின் சினிமாப் பயணம் அவரறியாமலே ஆரம்பிக்கிறது.

அகிராவின் மூத்த சகோதரர் தொழில்நுட்பம் வளர்ந்திராத அந்தக்கால மெளனப்படங்களுக்கு பின்னணயில் கதை சொல்லியாக பணியாற்றிருக்கிறார். அவர் வசிப்பது ஏழைத் தொழிலாளர்கள் வசிக்கும் ஒரு பகுதி. ஆனால் வறுமை நிலையிலும் அவர்கள் வாழ்வை நகைச்சுவையுடன் கழித்தார்கள் என்பதற்கு இரு முதியவர்களிடையே நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறார்.

"இன்று காலை நான் வீட்டிற்கு வெளியே சூரிய ஒளியில் படுத்திருந்தேன். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் சுருட்டிய மெத்தையோடு பறந்து வந்ததை என் கண்களால் பார்த்தேன். அவரின் மனைவி இப்படி மூர்க்கமாகவா வீட்டைச் சுத்தம் செய்வது?"

இப்படிக் கூறியவருக்கு மற்றவரின் பதில்:

"இல்லை. இல்லை. அவள் சற்று கருணையுள்ளம் கொண்டவள்தான். அவரை மெத்தையில் சுருட்டியல்லவா வீசியிருக்கிறாள்"

உலகெங்கிலும் மனைவிமார்கள் ஒரேமாதிரிதான் இருப்பார்கள் போலிருக்கிறது.

(தொடரும்)

Friday, July 01, 2005

SOMETHING LIKE AN AUTOBIOGRAPHY .....

ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசாவை (Akira Kurosawa) உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறேன். அகிராகுரோசாவை அறியாதவர்கள் அறிவுஜீவிகள் பட்டியலில் இடம் பெற முடியாது. :-) திரைப்படம் என்கிற ஊடகத்தினை அதற்கேயுரித்தான பொருத்தமான மொழியோடும், கலை நுணுக்கங்களோடும் கையாண்ட சர்வதேச தர இயக்குநர்களில் குரோசாவா முக்கியமானவர். அவர் இயக்கிய படங்களில் Rashomon (1950) The Seven Samurai (1954) போன்றவை முக்கியமானவை.

அவருடைய SOMETHING LIKE AN AUTOBIOGRAPHY என்கிற நூலை இளையபாரதியும், மு.நடராஜனும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர். (புதுமைப்பித்தன் பதிப்பகம், 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக்நகர், சென்னை-600 083. முதல்பதிப்பு 2002, 320 பக்கங்கள், விலை ரூ.150)

Image hosted by Photobucket.com



இந்திய திரைப்பட மேதையான சத்யஜித்ரே, தான் எழுதியிருக்கும் முன்னுரையில் தான் ரஷோமான் படத்தைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

....... தனிப்பட்ட முறையில் எனக்கு அந்தப் படம் மின்சாரத் தாக்குதல் கொடுத்தது. அதை மூன்று முறை அடுத்தடுத்த மூன்று நாட்களுக்கு பார்த்தேன். ஒவ்வொரு முறையும் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். வேறு எந்தப் படமாவது இப்படி இயக்குநரின் ஆளுமையைத் தீவிரமாக ஒவ்வொரு பிரேமிலும் தொடர்ந்து வெளிப்படுத்துமா என்பது சந்தேகமே. பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் அந்தப் படத்தினுடைய ஒவ்வொரு பகுதியும் தெளிவாக அதன் ஒளியும், ஒலியும் மனதுக்குள் விரிகின்றது. ..............

சுயசரிதம் எழுதுவதில் ஆர்வமே இல்லாத குரோசாவா, இந்த நூலை பெரும்பாலும் தன் சினிமா வாழ்க்கையை பேசிக் கொண்டு போகிற போக்கில் தன் சொந்த வாழ்க்கையையும் சொல்லிக் கொண்டு போகிறார். இதை சுயசரிதையாக ஏற்க மறுக்கும் அவரது நோக்கை இந்த நூலின் தலைப்பிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

.... வாழ்க்கையின் ஓட்டத்தில் என்னை அறியாமலே நான் இன்று எழுபத்தியோரு ஆண்டுகளைக் கடந்து நிற்கிறேன். நான் கடந்து வந்த காலத்தையும், பாதைகளையும் சற்றே திரும்பிப் பார்க்கும் போது, சொல்வதற்கு என்ன இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. நிறைய நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் சுயசரிதம் எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலரும் என்னை நிர்ப்பந்தித்தார்கள். எனக்கு அதில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. காரணம், எனக்கு மட்டுமே பிரத்யேகமான விஷயங்களைச் சம்பவச் சரமாக தொடுத்து எழுதி வைத்துவிட்டுச் செல்வது சுவாரஸ்யமான ஒன்றாகத் தோன்றவில்லை. அதைவிட முக்கியமான காரணம், நான் எதை எழுதினாலும் அது சினிமாவைப் பற்றித்தான் இருக்கும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் என்னிலிருந்து சினிமாவை நீக்கிவிட்டால் பூஜ்யம்தான் மிஞ்சும். ............

()

பெரும்பான்மையான கலைஞர்களைப் போலவே, குரோசாவும் சிறுவயதில் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும், அவமானப்படுத்தப்படும் கசப்பை சுவைத்திருக்கிறார். ஆசிரியர்களால் 'மக்குக் குழந்தை' என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார். (.....ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், இடை இடையே, "ஒரு வேளை இது அகிராவுக்குப் புரியாமல் போகலாம். .. அல்லது அகிராவால் இதைச் செய்ய முடியாது." என்று சொல்லுவார். ஆசிரியர் இப்படிச் சொல்லும் போதெல்லாம் மற்ற குழந்தைகள் என்னைப் பார்த்து சிரிப்பார்கள்.....). என்றாலும் இந்த புறக்கணிப்பை அவர் விளையாட்டில் முழு ஆர்வம் காட்டுவதன் மூலமாகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதன் மூலமாகவும் நிராகரித்திருக்கிறார். ஜப்பானிய நாட்டுக்கேயுரிய நிலப்பகுதியின் அமைப்புப்படி அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்களும், அதன் மூலம் அவர் பார்த்த பிணக்குவியல்களும் அவரை மிகவும் பாதித்திருக்கிறது.

ஒரு வரலாற்றுத் தேர்வில் அவர் ஒரு கேள்விக்கு விடை அளித்த விதம், அவர் ஆட்டு மந்தையாக இல்லாமல் எவ்வளவு சுயத்துடன் யோசிக்கிறார் என்பதை புரிய வைக்கிறது.

(அது பற்றியும் அவர் திரைப்படங்களைப் பற்றியுமான அனுபவங்கள் அடுத்த பகுதியில் ......)