Wednesday, April 25, 2007

Traffic Signal - திரைப்பார்வை

மதூர் பண்டார்க்கரின் படமான "சாந்தினிபார்" வெளிவந்த போது அது ஏதோ மூன்றாந்தர "பிட்டு" இந்திப்படம் என்று தவறான புரிதலோடு இருந்தேன். அந்தப் படத்தை தமிழில் "காபரே டான்சர்" என்று வணிக நோக்கத்துடன் "கச்சாமுச்சா"வான தலைப்போடு வந்ததும் காரணமாக இருந்திருக்கலாம். இதனால் நான் ஏதோ "பிட்டு" படங்களை பார்க்காத நல்ல பிள்ளை என்று நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. இதற்காகவே வடசென்னையில் உள்ள அத்தனை தியேட்டர்களுக்கும் ஒரு காலத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். (இப்போதுதான் குறுவட்டுகள் வந்துவிட்டனவே!) மேற்சொன்ன படத்தை ஒரு பண்டிகை மதியத்தில் ராஜ்டிவியில் பார்க்க நேர்ந்த போது இது வேறு ஜாதிப்படம் என்று தெரிந்தது. ஒளிப்பதிவுக் கோணம், காட்சியமைப்பு, வசனம், ஆகியவற்றைக் கொண்டு நாலைந்து பிரேம்களை வைத்தே வித்தியாசமான படங்களைக் கண்டு கொள்ளலாம். அடுல் குல்கர்னி, தபு போன்றவர்களின் திறமையான நடிப்புடன், நிழல் உலகைச் சேர்ந்த அடிமட்டத்தவர்களின் பரிதாபமான நிலையை அறிந்து கொள்ள முடிந்தது. (சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஓரின வன்புணர்ச்சியை காட்சிகளைக் கொண்டு வந்த முதல் இந்தியப்படம் இதுவாகத்தானிருக்கும் என நினைக்கிறேன்)

இன்னொரு படமான page3 பற்றி நரேன் பதிவில் எழுதியதிலிருந்து ஆவல் அதிகமாகி அதையும் ஸ்டார் சேனலில் ஒரு தடவை பார்க்க நேர்ந்தது. அடுத்த படமான கார்ப்பரேட்டை (பிபாசுவை கோட் போட்டு போர்த்தி எடுத்த படம் இதுவாகத்தானிருக்கும்) இதுவரை பார்க்க நேரவில்லை. இந்த நிலையில் அவரின் Traffic Signal வெளிவருவதற்கு முன்னே எனக்குள் ஆவலை எழுப்பி, DVD-ஐ தேட வைத்தது.

()

Photo Sharing and Video Hosting at Photobucket

விளிம்புநிலை மக்களை பிரதானமாக அமைத்து தமிழ் படைப்புகள் வந்திருக்கிறதா என்று மேம்போக்காக பார்த்தால், நவீன இலக்கியப் பரப்பில், நடுத்தர பிராமணத் தமிழ் பேசிக் கொண்டிருந்த கதாபாத்திரங்களிலிருந்து விலகி செக்ஸ் தொழிலாளிகள், குஷ்டரோகிகள், பிச்சைக்காரர்கள் என்று மற்றவர்கள் ஜாக்கிரதையாக புறக்கணிக்கிற அருவருத்து ஒதுக்குகிற பாத்திரங்களை ஜெயகாந்தன் தம் படைப்புகளில் கொண்டுவந்தார். பின்னர் வந்த ஜி.நாகராஜன், சுயஅனுபவங்கள் வெளிப்படும் வகையில் இன்னும் அருகாமையில் சென்று வந்தார். பின்னர் "தலித் இலக்கியம்" என்று ஒரு வகையறா மலர்வதற்கு பல வருடங்கள் பிடித்தது. திரைப்படங்களிலாவது இம்மக்கள் பிரதானப்படுத்தப் பட்டிருக்கிறார்களா என்று பார்த்தால், பசி, எச்சில் இரவுகள், என்னுயிர்த் தோழன் என்று சில அரைகுறை பிரசவங்களே சட்டென்று நினைவுக்கு வருகின்றன.

Traffic Signal திரைப்படம் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களை மையமான காட்சிகளாக வகைப்படுத்தலுடன் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு பிரதான சாலையின் டிராபிக் சிக்னல், அதைச் சுற்றி விரியும் நாம் ஆழமாக அறிந்திராத ஒரு வியாபார உலகம், அதன் மூலம் பிழைக்கும் சிறுவர்கள் முதல் தாதாக்கள் என்று பல கதாபாத்திரங்கள். ..........

ரொட்டிக்கு தொட்டுக் கொள்ளும் ஜாமை பாண்டேஜ் துணியின் மீது தடவிக் கொண்டு ரத்தகாய போலித் தோற்றத்துடன் பிச்சை எடுப்பவர்கள், சிக்னலில் நிற்கும் கார்களில் mid-day தினசரியை கூவி விற்கும், சிவப்பழகு க்ரீமினால் அழகுவரும் என்று நம்பி பிறகு தோற்றுப் போய் விளம்பர பானர் கல்லெறியும் சிறுவன், "குழந்தைக்கு ரொம்ப சாப்பிடக் குடுத்து குண்டாக்கிடாதே. அப்புறம் காசு போடமாட்டாங்க" என்று எச்சரிக்கும் சில்சிலா (இவன்தான் படத்தின் நாயகன். சில்சிலா என்ற இந்திப்பட வெளியீட்டின் போது பிறந்ததால் அதுவே பெயராகிவிட்டது) அவனை காதலிக்கும், பிளாட்பாரத்தில் துணிவிற்கும் குஜராத்காரி, பூ விற்கும் சிறுமியின் கைகளை ரகசியமாய் தடவும் காரில் போகும் கனவான், "சார் நான் ஒரு சாபட்வேர் இன்ஜினியர். இண்டர்வியூவிற்கு வந்தேன். பர்ஸ் தொலைஞ்சிடுச்சி. ஒரு ஹண்டர்ட் ருபிஸ் ப்ளீஸ். உங்க மொபைல் நம்பர் கொடுங்க. திருப்பி கொடுத்துடுவேன்" என்று கெளரவப் பிச்சை எடுக்கும் ஒரு இளைஞன் (ஏற்கெனவே பணம் கொடுத்தவனை மறுபடியும் எதிர்கொள்ள நேர்கிற கணத்தில் இருவரின் முகபாவங்களும்...) ரோட்டில் நிற்கவைக்கப்ட்ட வாகனத்திலியே "தொழில்' செய்ய நேர்கிற விபச்சாரி (கொன்கனா சென்), அவர்களுக்கு தொழில் போட்டியாக வரும் ஒரு gay, ("கொடுமையைப் பாருடி, இவன்க கூடல்லாம் போட்டி போட வேண்டியிருக்கு"), "கார்" லோனுக்காக போனில் தொல்லை கொடுக்கும் இரண்டு விற்பனை ஏஜெண்ட்டுகள், தொல்லை பொறுக்க முடியாமல் நேரில் வரச்சொல்லி அரை நிர்வாணப்படுத்தி அடிக்கும் தாதா (போலீஸ்காரனுங்க கிட்ட கூட நம்ப நம்பர் இல்ல. இவனுங்களுக்கு எப்படிர்ரா கிடைக்குது?"), சுனாமியில் தம் பெற்றோர் இறந்திருப்பார்களா என்று அறிய STD தொலைபேசியில் காசை செலவழிக்கும் பேப்பர் பொறுக்கும் தமிழ்நாட்டு அப்பாவி சிறுவன் (இவனின் பெற்றோர் இறந்து அவர்களின் உறவினர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகையை அரசியல் கைகள் பிடுங்கித் தின்றிருப்பது பிறகு தெரிகிறது) ஆகஸ்டு 15 இரவில் தெருவில் கசக்கி எறியப்பட்டிருக்கும் தேசியக் கொடிகளை கனமான இதயத்துடன் பொறுக்கும் நல்வாழ்வு மைய பொறுப்பாளர், சிக்னலில் மெதுவாக வண்டியை செலுத்தி அதன் மூலம் சைடில் சம்பாதிக்கும் டிரைவர்கள், (சிவப்பு விழப் போவது தெரிந்தும் மெதுவாக வந்து சிக்னலில் நிற்கும் இவர்கள், பிச்சை கேட்டு வருபவர்களுக்கு தன்னிச்சையாக இரண்டு ரூபாயை அளிப்பார்கள். தாம் உட்கார்ந்திருக்க டிரைவர் பிச்சை போடுவதா என்று ஈகோ கொப்பளிக்கும் முதலாளிகள், டிரைவரை தடுத்து தாம் பத்து ரூபாயை பிச்சையளிப்பார்கள். Psychology!) .......... என்று இத்தனை பேர் பிழைப்பு சிக்னல் இருப்பதினால் ஓடுகிறது.

()

நேரடி காட்சிகள் மூலமே பெரும்பான்மையான காட்சிகள் விரிவதால் படத்தின் நம்பகத்தன்மை பார்வையாளன் மீது தீர்க்கமாக பரவுகிறது. படத்தின் ஆதார மையமாக சிக்னல் அருகே ஒரு மேம்பாலம் கட்டப்படுவதில் அமைகிறது. குறிப்பிட்ட சிக்னல் அருகே, நிறைய ·பிளாட்களை கட்டி வைத்திருக்கும் ஒரு பில்டிங் புரோமோட்டர், பிச்சைக்கார ஏரியாவாக இருப்பதால் அதிக விலைக்கு விற்க முடியாமல் இருக்கிறார். அங்கே ஒரு மேம்பாலத்தை நிறுவி சிக்னலை ஒழித்தால் தீர்வு கிடைக்கும் என்பது அவர் கணக்கு. இதற்காக அவர் ஒரு வலிமையான சுயேட்சை எம்.எல்ஏ.வை நாட, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியை நெருக்குகிறார். நேர்மையான அந்த அதிகாரி, திட்டத்தில் இல்லாத அந்த இடத்தில், மேம்பாலம் அமைக்க மறுத்து தாதாவால் கொல்லப்படுகிறார். இதன் பின்னணி தெரியாமல் இதில் சம்பந்தப்பட்டிருக்கிற சில்சிலா அப்ருவராகி சம்பந்தப்பட்டிருக்கிற அனைவரும் கைது செய்யப்படுவதற்கு காரணமாக இருக்கிறான். படத்தின் இறுதியில் சிக்னல் தகர்க்கப்பட, பிழைப்பு பறிபோகிற வேதனையில் அனைவரும் கலங்குகிறார்கள். போலீஸ் வேனில் செல்லும் சில்சிலா இன்னொரு சிக்னலை பார்ப்பதும் நம்பிக்கை கீற்றுடனான அவன் புன்னகையுடனும் படம் நிறைகிறது.

()

மதுபண்டார்க்கரின் (நான் பார்த்த) முந்தைய படங்களோடு ஒப்பிடும் போது இந்தப்படம் எனக்கு பொதுவாக நிறைவைத் தரவில்லை. சம்பவங்கள் தனித்தனியாக அழுத்தமாக இருந்தாலும், ஒட்டுமொத்த கதையமைப்பு வலுவாக இல்லாததால் படம் வெறும் வலுவான காட்சிகளின் கோர்வையாக இருக்கிறது. நாடகத்தனமான சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். (சிக்னலில் தேசியக் கொடி விற்கும் சிறுவனிடம், "மூணு பத்து ரூபாய்க்கு தருவியா?" என்று அநியாயமாக பேரம் பேசும் காங்கிரஸ் குல்லா அரசியல்வாதிகளை, "இவன்க நம்பள காப்பாத்தப் போறானுங்களாம். தூ...." என்று இலவசமாகவே கொடிகளை பிடுங்கி தூக்கி எறியும் ஒரு அரவாணி.

குறிப்பிடத்தக்க ஒரு காட்சி: கெளவரப்பிச்சை எடுக்கும் இளைஞன், விபச்சாரி மீது ஒருதலையாக காதல் கொண்டு வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறான். அவளிடம் தன் இழிவான நிலையை அவ்வப்போது சொல்லி புலம்புவான். சாப்பிடுவதற்கு எதாவது வாங்கும் போது காசு கொடுக்க முயலும் அவளை தடுத்து தானே காசு கொடுப்பான். "தேவடியா காசுல சாப்பிடறதுக்கு உனக்கு கூசுது போல இருக்குது?" என்று கேட்கப்படும் போது, தன் தாயும் ஒரு விபச்சாரியாக இருந்தததைக் கூறி "தேவடியா காச நான் நிறைய சாப்பிட்டிருக்கேன்" என்று கூறி அழும் போது நம் மனமும் கலங்கிப் போகிறது. தொடர்ச்சியான போதைப் பழக்கத்தின் காரணமாக அநாதையாக இறந்து போகிறான் அவன்.

()

இந்தப்படம் எனக்கு ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" என்கிற நாவலை நினைவுப்படுத்தியது. அதில் வரும் பிச்சைக்காரர்களும், அவர்களைச் சுற்றி இயங்கும் குருரமாக வியாபார உலகும் "உருப்படியாக" பார்க்கப்படும் மனித ஜீவன்களும்.... பெரும்பாலானவர்கள் அறியாத இன்னொரு குருரமான உலகின் தீர்க்கமான அறிமுகத்தை படித்து விட்டு அன்று இரவு தூங்கமுடியாமல் அவஸ்தைப்பட்டேன்.

Thursday, April 19, 2007

தி.நகர் போறீங்களா?.........

அட்சய திருதியை காரணமாக தங்க நகை வியாபாரம் களைகட்டி விட்டது. பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்தால், வடிவேலு பாணியில் "ஸ்......அப்பா! இப்பவே கண்ண கட்டுதே" என்று சொல்லத் தோன்றுகிறது. நகைக்கடைகளோடு வங்கிகளும் தங்க வியாபாரத்தில் ஜரூராக இறங்கி விட்டார்கள். "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பதை யார் புரிந்து வைத்திருக்கிறார்களோ, இல்லையோ வணிகர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மூக்குப்பொடி விற்பவர்கள் கூட, அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயம் இலவசம் என்று வியாபாரப்படுத்துகிறார்கள். மக்களின் சென்டிமென்ட் மீதுள்ள பிரேமையையும் படித்தவர்களிடம் கூட உள்ள அறியாமையையும் மிகச்சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் மார்க்கெட்டிங் திறமை பிரமிக்க வைக்கிறது.

இந் நன்னாளில் இது தொடர்பான என்னுடைய பழைய பதிவொன்றை தூசுதட்டி இங்கே மீள்பதிவு செய்கிறேன். தி.நகர் பக்கம் போவதற்கு முன், சற்றே இதைப் படித்துப் பார்த்துவிட்டு செல்லுமாறு வேண்டுகிறேன். :-)

()


மீள்பதிவு


கடந்த ஒரு வாரமாக சென்னை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களுமாக 'இயேசு வருகிறார்' செய்திக்கு அப்புறமாக பரபரப்பான செய்தியாக இதுதானிருக்கும் என்கிற வகையில் ஒரே கலாட்டாவாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடிபோகப் போவதான பரபரப்பில் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டு வம்புகளும், தொலைக்காட்சி தொடர்களைப் பற்றியும் பேசுவதற்கு முன்னால் அவர்கள் விவாதிக்கக் கூடிய விஷயம் இதுவாகத்தானிருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஏதாவது பேசியிருக்கப் போகிறார்கள் என்று கனவு காணாதீர்கள். இல்லை.

அக்ஷய திருதியையான இன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனக தாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே அவர்கள் வீட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுமாம். பீரோவைத் திறந்து பார்த்தால் அவர்களுக்குத் தெரியாமலேயே கிலோ கணக்கில் தங்கம் இருக்குமாம்.

சீட்டு நிறுவனங்கள் 38 சதவீத வட்டி கொடுப்பதாக கூறி நிதி வசூலித்த போது இருந்த அதே பரபரப்பு இப்போதும் நிலவுகிறது. பெண்கள் பூரிப்புடன் தங்கநகைக் கடைகளில் வரிசையில் நிற்க, ஆண்கள் அம்போவென்று விளக்கெண்ணைய் குடித்த முகபாவத்துடன் வாசலில் காத்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரு கோடி சம்பாதிக்க நினைக்கும் பேராசைக்கு கொஞ்சமும் குறைவில்லாத தன்மை அவர்கள் கண்களில் பார்க்க முடிகிறது.

இந்த நாளின் ஐதீகம் என்னவென்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் இந்த மாதிரியான பேராசைத்தனமான அசிங்கத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ஐதீகம் என்று பம்மாத்து செய்யும் அசட்டுத்தனம் என்னை அருவருப்புடன் குமட்ட வைக்கிறது. இந்த மாதிரி பேராசையுடன் நகை வாங்கப் போகிறவர்கள், கல்வியறிவில்லாத, அடுத்து வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத அடித்தட்டு மக்கள் இல்லை. நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே. மாருதியில் பயணிக்கிறவன் டொயாட்டாவிலும், தாம்பரத்தில் வீடு வைத்திருக்கிறவன், அண்ணாநகரில் பங்களா வாங்கும் பேராசையிலும் இருக்கிறான் என்பதே இந்தச் செய்தியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மறைமுக உண்மைகள். மனிதன் தன் வசதிகளை பெருக்கிக் கொண்டு போகட்டும் தப்பில்லை. ஆனால் அது உழைப்பின் மீது சாத்தியமாகப்பட வேண்டுமே தவிர குருட்டு அதிர்ஷ்டங்களால் வரும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அசட்டுத்தனமானது.

இவர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர, தான் கற்ற கல்வியை சுயசிந்தனைகளுக்காக பயன்படுத்துகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. தன் முன்னோர்கள் சொன்ன காரியங்கள் என்றாலும் அதை நாமாகவும் ஆராய்வோம் என்கிற அடிப்படை யோசனை கூட இவர்களுக்கு தோன்றாமல் ஆட்டு மந்தைக் கூட்டங்களாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 'தேடிச் சோறு நிதந் தின்று' என்கிற பாரதியின் பாட்டுக்கு நாமே உதாரணங்களாய்த் திகழும் வேடிக்கை மனிதர்களாயிருக்கிறோமா?

உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் அறியாமைதான். போதுமான கல்வியறிவு பெற்றிருந்தும் அதே அறியாமையில் நாம் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம். என்ன செய்தாவது நாம் பணக்காரர்களாகி விட வேண்டும் என்கிற ஆசைதான் இவர்கள் கண்களை மறைக்கிறதா? அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் 'தானாக வந்து' சேர்ந்திருக்கிறதா? அதற்கும் முன்வருடம் தங்கம் வாங்கியவன் இந்நேரம் தங்கச் சுரங்கத்திற்கல்லவா உரிமையாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையே? இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் நிற்பவர்களை என்னவென்பது? பரபரப்பான சினிமாவின் அனுமதிச்சீட்டு ஒன்றிற்கு முன்பதிவு செய்வது போல், இந்த வருடமும் குறிப்பிட்ட இந்நாளில் தங்கம் வாங்க முன்பதிவு செய்யப்படுகிறதாம்.

இந்த விஷயத்தில் வணிகர்களைச் சொல்லி பயனில்லை. வணிக தர்மப்படி அவர்களின் முக்கிய நோக்கம் பொருட்களை எப்படியாவது விற்பதும் அதன் மூலம் லாபம் பெறுவதும். இதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யவோ வாக்குறுதி கொடுக்கவோ தயாராக இருப்பார்கள்.
வாடிக்கையாளர்களாகிய நாம் அலலவா சிந்திக்க வேண்டும்? தந்தையர் தினம், அன்னையனர் தினம் என்று இறக்குமதி செய்யப்பட்ட சென்டிமென்ட்டுகளை அவர்கள் தங்கள் விளம்பரங்களின் மூலம் ஊதிப் பெருக்கி வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்கச் செய்கிறார்கள். இந்த அட்சய திருதியையும் அதே போன்றதுதான்.

()

பெண்ணுரிமை, பெண்ணியம் பேசும் சில பெண்களும் உடம்பு நிறைய நகைகளை பூட்டிக் கொண்டு முழங்கும் போது சிரிக்கவே தோன்றுகிறது. தன்னை, தன் சிந்தனைகளை வைத்து பிறர் மதிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை இல்லாமல் தான் போட்டிருக்கிற நகைகளை வைத்து தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்று அடிமைச் சிந்தனைகளுடன் இருக்கிற இவர்கள் பெண்ணுரிமை என்பது எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்களா? சில ஆண்களும் இவர்களுக்கு போட்டியாக நகைகள் அணிந்திருப்பதை காண எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. இடது கை விரல்களிலும் மோதிரங்கள் அணிந்திருப்பவர்களை காணும் போது, இடது கையால் மட்டும் செய்ய வேண்டிய ஒரு வேளையில் என்ன செய்வார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

கேவலம் ஒரு உலோகம் நம்மை இவ்வாறு ஆட்டி வைப்பது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா? இரும்பைப் போல, அலுமினியத்தைப் போல இவை நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கக்கூடியதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாம் முதலீடு செய்திருக்கிற அத்தனை தங்கத்தையும் பொதுவில் முதலீடு செய்தால் உலக வங்கிக்கே கடன் கொடுக்கும் நிலையில் இந்தியா மாறிவிடும் என்று தோன்றுகிறது. அத்தனை முதலீடு ஒரு உலோகத்தின் மீது உள்ள பிரேமை காரணமாக முடங்கிக் கிடக்கிறது. (வருங்கால பாதுகாப்பிற்காக சொற்ப அளவில் தங்கம் சேர்த்து வைத்திருக்கும் எளியவர்களை நான் இதில் சேர்க்கவில்லை)

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்கிற பாரதியின் வாக்கை, 'எத்தனை கோடி ஆசைகள் வைத்தாய் இறைவா' என்று மாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம் போலிருக்கிறது.

Saturday, April 07, 2007

சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பரபரப்பை ஏற்படுத்தவோ அல்லது ரஜினி ரசிகர்களை சங்கடத்திலோ, கோபத்திலோ ஆழ்த்துவதற்காகவோ இந்த பதிவு எழுதப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது. ஆபாச வசைச் சொற்களைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தும் இந்தப்பதிவு எழுதப்படுவதின் நியாயத்தை, திறந்த மனதுடன் வாசிக்கும் எவரும் பதிவின் இறுதியில் உணர்வார்கள் என்று நிச்சயமாகவே நம்புகிறேன்.

()

தமிழில் திரைப்படங்கள் தோன்றும் போது அது அப்படியே நாடகத்தின் கூறுகளை, தாக்கங்களை முழுவதுமாக உள்வாங்கி பிரதிபலித்தது. காட்சியமைப்புகள், ஆடை அணிகலன்கள், அரங்க அமைப்புகள், இசைப் பாடல்கள் என்று நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏதுமில்லை. சுருங்கக்கூறின் நாடகங்களின் சுருள்வடிவமே திரைப்படம் என்பதாக இருந்தது. காளிதாஸ் (1931) ஹரிச்சந்திரா (1932) சீதா கல்யாணம் (1933) தொடங்கி புராணங்களின் உபகதைகளை கொண்டு தமிழ்ச் சினிமா பயணித்தது. பின்பு எம்.கே.தியாகராஜ பாகவதர், (ஹரிதாஸ் - 1944) பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா போன்ற இசையும் நடிப்புத்திறமையும் இணைந்த நாயக நடிகர்களின் துணை கொண்டு வளர்ந்தது. இடையே விடுதலைப் போராட்டத்தின் எதிரொலியாக காலனியாதிக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் (நாம் இருவர் - 1947) எதிர்த்து திரைப்படங்கள் தோன்றின.

ஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் புராண மறுஉருவாக்க படங்களும் (திருவிளையாடல் - 1965) கண்களைப் பிழிய வைக்கும் பீம்சிங்கின் மிகை உணர்ச்சிப் படங்களும் (பாசமலர் 1964) வெளிவந்தன. புராணப்படங்கள் தேய்ந்து போய் சமூகக் கதைகள் (நல்லவன் வாழ்வான்; கெட்டவன் வீழ்வான் என்பதை அடிச்சரடாகக் கொண்டு) பெரும்பாலான படங்கள் வெளிவந்தன. இதிலிருந்து மாறுபட்டு ஸ்ரீதர் (தேன்நிலவு 1961) கே.பாலச்சந்தர் (சர்வர் சுந்தரம் 1964; நாணல் - 1965) போன்றவை வெளியாகின. தமிழ்த்திரையுலகின் முதல் கலகக்குரலாக (அன்றைய சூழ்நிலையில்) கே.பாலச்சந்தரை குறிப்பிடுவேன். அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்கள், மக்களை கனவுலகிலிருந்து மீட்டு யதார்தத்தின் வெளிச்சத்திற்கு அழைத்து வந்த ஆரம்பப் புள்ளிகளாக அமைந்து சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.

()

1975-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை "தமிழ்த்திரையுலகின் பொற்காலம்" எனக்கூறலாம். பதினாறு வயதினிலே, சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), அவள் அப்படித்தான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) அழியாத கோலங்கள், உதிரிப்பூக்கள், நூல்வேலி, பசி, (1979), இவர்கள் வித்தியாசமானவர்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்க்ள், மழலை பட்டாளம், மூடுபனி, (1980) என்று களம், பின்னணி, திரைக்கதையமைப்பு, இசை போன்ற பிரதான துறைகளில் வித்தியாசமான அமைப்பை கொண்டு வந்திருந்தன. எல்லா காலகட்டத்திலும் வணிக சினிமா, ரசனை சார்ந்த சினிமா என்பது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தக் காலகட்டத்திலும் பெரும்பான்மையான ரசனை சார்ந்த சினிமா உருவாகின. இதன் மூலம் சர்வதேச திரைப்படங்களைப் பற்றின தேடலும், விவாதங்களும், விழிப்புணர்வும் சாத்தியமாக்கியது. நல்ல திரைப்படங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதால் வித்தியாசமான முயற்சிகளை கொடுக்கும் துணிவு இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.

திரைவிமர்சகர்கள் தமிழ்த்திரையுலகின் வரலாற்றை எழுதும் போது இந்த காலத்தை ஏக்கப்பெருமூச்சுடன் நினைவு கூர்கிறார்கள். இந்தப் படங்கள் பொதுமக்களின் பரவலான கவனத்தைப் பெற்றதோடு வணிக ரீதியான வெற்றியையும் பெற்றன. இதே நிலை தொடர்ந்திருந்தால், தமிழ்த்திரையுலகத்தின் முகமே மாறிப் போய் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள் பெற்றிருந்த ரசனை வளர்ச்சியை நாமும் பெற்றிருக்கக்கூடும்.

ஆனால் 1982-ல் ஏவி.எம்.எம். நிறுவனத்திலிருந்து வெளிவந்த "சகலகலா வல்லவன்" என்கிற திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த வளர்ச்சியை அடியோடு மாற்றியது. உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்போடு இதை ஒப்பிடலாம். குறிப்பிட்ட படத்தின் வணிகரீதியான மிகப் பெரிய வெற்றி மேற்சொன்ன சூழ்நிலையை குரூரமாக குலைத்துப் போட்டது. ஆபாசம், வன்முறை, நாயக புகழ்ச்சி, மிகை உணாச்சி, பாசாங்கு என்று எல்லாவிதமான செயற்கைத்தனங்களுடன்தான் பிற்காலத்திய படங்கள் வெளிவந்தன. இடையிடையில் மாற்று முயற்சிகள் வந்தாலும் அவை பெரும்பான்மையான கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழ் சினிமாவின் முக்கியமான மறுமலர்ச்சிப் படமான "நாயகனை" (1987) உருவாக்கிய மணிரத்னம், பிற்பாடு "தளபதி" (1991) போன்ற வணிகரீதியான சினிமாவை கொடுக்க நேர்ந்தது. தரமான திரைப்படங்களை பார்த்து உள்வாங்கி வெளிவந்த திரைப்படக் கல்லூரி மாணவர்களும் (ஊழை விழிகள் - இதே போன்ற படங்களையே அளிக்க முடிந்தது. விக்ரமன் போன்றோரது படங்கள் மோசமான முன்மாதிரிகளாகவே இருந்தன.

()

இப்போதைய காலகட்டத்திற்கு திரும்புவோம். தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" படங்களை பார்த்து சலித்துப் போனதும், சர்வதேச சினிமா குறித்து அறிவுஜீவிகள் தவிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு எழுந்ததாலும், ஊடக வளர்ச்சி காரணமாக சினிமாவின் தொழில்நுட்பம் குறித்து பாமரனும் அறிய முடிந்ததாலும் மக்கள் மாற்று முயற்சிகளை மெலிதாக வரவேற்றனர். காதல் என்று ஆரம்பிக்கிற பெயரில் நிறைய கண்ராவிப் படங்கள் வந்திருந்தாலும், பாலாஜி சக்திவேலின் "காதல்" திரைப்படம் (2004) ஒரு பெரிய ஆசுவாசமாக அமைந்தது. நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை இளம் இயக்குநர்களுக்கு பிறந்தது. இதனின் சமீபத்திய தொடர்ச்சியாக அழகிய தீயே, வெயில், மொழி, பருத்தி வீரன் என்று குறைவான வணிக சமரசங்களோடு படங்கள் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றியையும் பெற முடிந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முன் குறிப்பிட்ட பொற்கால சூழ்நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் படங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. (வணிகரீதியான அம்சங்கள் குறைவாக இருந்தாலே, அது நல்ல படம் என்று நாம் பேச ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றாலும், நிஜமாகவே நல்ல படங்களை எடுப்பதற்கு இவைகளை ஆரம்ப முயற்சிகளாக கொண்டு வரவேற்கலாம்)

ஆனால் இந்த ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை சிவாஜி திரைப்பட வரவு குறித்த அதீத பரபரப்பு, முன்னர் குறிப்பிட்ட அதே மாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சகலகலா வல்லவன் போன்றே சிவாஜியும் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது என்பதுதான் நகைமுரண். சினிமாப் பத்திரிகைகள் தொடங்கி ஜோதிடப் பத்திரிகைகள் வரை எதுவுமே "சிவாஜி"யைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது என்கிற அளவிற்கு இத்திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (இதே போன்று முன்னர் பரபரப்பை ஏற்படுத்தின "பாபா"வின் கதியும் நினைவிற்கு வருகிறது). வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் வணிக ரீதியான விற்பனையின் தொகை பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. ஆடியோ விற்பனையே 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எத்தனையோ வணிகரீதிப்படங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கவில்லையா, சிவாஜி வருவதால்தான் ஆக்கப்பூர்வமான சூழ்நிலை மாறிவிடுமா? என்னய்யா அபத்தமாக இருக்கிறது? என்று உங்களில் சிலருக்கு தோன்றக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நான் அஞ்சுவது இந்தப்படத்தின் பரபரப்பு குறித்தும், ஆர்ப்பாட்டம் குறித்தும்தான். ஒருவேளை இந்தப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றால், மீண்டும் வணிகரீதியான படங்களுக்கு மவுசு கூடி, வணிகரீதி இயக்குநர்கள் பிசியாகி விடுவார்கள். மாற்று முயற்சிகளின் பிரகாசம் மங்கிப் போய், நாளடைவில் தேய்ந்து போய்விடவும் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். மீண்டும் இந்த சூழ்நிலை மலர எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?


()

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வருடத்திற்கு சுமார் 1000 படங்கள் தயாரிக்கும் ஒரு தேசத்திலிருந்து சர்வதேச தரத்திற்கு இணையான படங்களின் சதவீதம் மிக மிகக்குறைச்சலே. ஆஸ்கருக்காக ஏங்கிப் போய், அது கிடைக்காத விரக்தியில், அது உலகத்தரம் அல்ல, அமெரிக்கத்தரம் என்று பேசுவது "சீசீ இந்தப் பழம் புளிக்கும்" என்கிற கதையைத்தான் நினைக்க வைக்கிறது. ஆஸ்கர் விருது கிடைப்பது ஒரு புறம், அதன் நாமினேஷன் பட்டியிலில் இடம் பெறுவதற்கே நாம் மல்லாட வேண்டியிருக்கிறதே? cannes film festival-ல் திரையிடுவதற்கு கூட பெரும்பான்மையான திரைப்படங்கள் லாயக்கில்லாதவை. இந்த நிலை குறித்து நாம் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா? ஈரான் போன்ற கைக்குட்டை தேசங்கள் கூட சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனிப்பை பெறும் போது நம் நிலை என்ன?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி" என்று பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதில் மாத்திரம் புண்ணியமில்லை. காலத்திற்கேற்ப நம் தரத்தையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் ரசனை மேம்பாடும், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பும் மேம்பாடும் முக்கியமானவை. எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங்கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.