Friday, May 29, 2009

உலகத் திரைப்படங்களை காண.....

தமிழ்ப் பதிவுலகம் பொதுவாக அவதூறுகளாலும் குடுமிப்பிடி சண்டைகளாலும் கற்பிதங்கள் குறித்த சச்சரவாலும் தமக்கு முன் இருக்கும் நுட்ப வளர்ச்சியை, சக்தியை வீணடித்துக் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. இதிலிருந்து மாறுதலாக வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் முன்னுதாரணமாக திகழும் சில பதிவர்கள் குறித்து பெருமையடையவே தோன்றுகிறது. சக பதிவரான பைத்தியக்காரன் சமீபத்திய உதாரணம். பரவலாக அறியப்படாத எழுத்தாளரான கோபி கிருஷ்ணனின் நூற்களை கவனப்படுத்தியும் சிறுகதை போட்டியை அறிவித்தும் ... என அதன் தொடர்ச்சியாக உலக திரைப்படங்கள் குறித்து தன்னுடைய செயலை தொடர்கிறார்.

Photobucket

வணிகச் சினிமாவின் நச்சுச் சூழலில் திணறி அதிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கும் உலக சினிமா குறித்து கேள்விப்பட்டும் வாசித்தும் அதனைக் காண ஆவலிருந்தும் சூழல் அமையாத வலைப்பதிவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை இலவசமாக நண்பர் பைத்தியக்காரன் ஏற்படுத்தி தந்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டும் நன்றியும். இதன் மூலம் சிறந்த திரைப்படங்களை காணவும் அது குறித்து உரையாடவும் நம்மால் இயலக்கூடிய வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலதிக விவரங்களுக்கு பைத்தியக்காரனின் பதிவு:
வாங்க இலவசமாக உலகத் திரைப்படங்களைப் பார்க்கலாம்






suresh kannan

Wednesday, May 27, 2009

The Visitor (2008)

'இந்தத் திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள்' என்கிற பரிந்துரையுடன் இந்தப் பதிவை துவக்க விரும்புகிறேன்.

'இயற்கை ஒரு அழகான ஓவியத்தைப் போல பூமியை படைத்தது. சுயநலத்தின் உச்சமான மனித இனம் தனது அநாகரிக கூரிய நகங்களால் அதில் அசிங்கமான எல்லைக்கோடுகளை வரைந்தது".

மேற்கத்திய அறிஞர் யாரும் சொன்னதல்ல. நான்தான். மனிதனின் கற்பிதங்களில் மிகக் கொடூரமானவைகளில் ஒன்று நாட்டின் எல்லைக்கோடுகள். எத்தனையோ நபர்களின் கண்ணீரினாலும் ரத்தத்தினாலும் போடப்பட்ட கோடுகள் அவை. இன்று பாகிஸ்தான் என அழைக்கப்படும் நிலப்பரப்பு சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவாக இருந்தது. அதற்கும் முன்னால் இந்தியா என்கிற தேசமே கிடையாது. பல சமஸ்தானங்களாக பேரரசுகளாக சிதறிக் கிடந்தன. இன்று எல்லைக்கோட்டைக் கடந்து இன்னொரு நிலப்பரப்பிற்குச் செல்வது அத்தனை எளிதல்ல. அதிகாரத்தின் பல்வேறு சம்பிரதாயங்களைக் கடக்க வேண்டும். இந்த விஷயத்தில் பறவைகள் மனிதனைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றன. விளையாட்டுப் போட்டியில் கூட பாகிஸ்தான் என்றவுடன் எப்படியாவது நாம் வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் கூச்சலிடுகிறோம். அந்த அளவிற்கு இந்தக் கற்பிதங்கள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

எத்தனையோ காரணங்களுக்காக புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் தங்களின் உறவுகளை இணையத்திலும் கடிதங்களின் மூலமாகவும்தான் துயரத்தோடு ஸ்பரிசித்து ஆறுதலையடைய முடிகிறது. இவ்வாறான அப்பாவிகள் தாங்கள் வாழும் நாடுகளில் அதிகாரத்தின் தொடர்ந்த கண்காணிப்புக்கு உள்ளாகி தனது அன்றாட வாழ்வை மன உளைச்சலுடன் கழிக்க நேரிடுகிறது. அந்த மாதிரியான மனிதர்களின் துயரத்தைப் பற்றி பேசுகிறது இந்த அமெரிக்கத் திரைப்படம். The Vistior.

Photobucket

பொருளாதார பேராசிரியராகவும் சிடுமுஞ்சியாகவும் உள்ள வால்டர் வேல் (வால்டர் வெற்றிவேல் என்று வாசிக்காதீர்கள்) பியானோ கற்றுக் கொள்ளும் முயற்சியோடு படம் துவங்குகிறது. அந்த வாத்தியத்தை அவரால் கற்றுக் கொள்ள முடியாததால் சலிப்புடன் அதை கைவிடுகிறார். ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக நீயூயார்க் செல்லும் அவர் சில மாதங்களாக பயன்படுத்தப்படாமலிருக்கும் தன்னுடைய அபார்ட்மெண்டில் நுழையும் போது அங்கொரு இளம் தம்பதியினர் தங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். யாரோ அவர்களை ஏமாற்றி வாடகைக்கு குடியேற்றியிருக்கின்றனர். நியூயார்க்கில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அவர்கள் எந்தவித பிரச்சினையையும் எதிர்கொள்ள விரும்பாமல் உடனேயே வெளியேற சம்மதிக்கின்றனர். அந்த இரவு நேரத்தில் அவர்கள் தவிப்பதை கண்ட வால்டர் சில நாட்களுக்கு அவர்கள் அங்கேயே தங்க வேண்டிக் கொள்கிறார். மெல்ல அவர்களுக்குள்ளான நட்பு மலர்கிறது.

உணவு விடுதி ஒன்றில் டிரம்மராக பணிபுரியும் அந்த இளம் கணவன் (தாரெக்) வால்டருக்கு டிரம்மை இசைக்க கற்றுத் தருகிறான். முதலில் தயங்கும் அவர் பின்பு அதில் மிகுந்த ஈடுபாடு காட்டத் துவங்குகிறார். இருவரின் சிநேகமும் இறுக்கமாகத் துவங்கும் போது தாரெக் போலீசாரால் கைது செய்யப்படுகிறான். சட்டவிரோதமாக அந்த நகரில் தங்கியிருக்கும் காணத்திற்காக அவனை சிறையில் அடைக்கின்றனர். மகனை தேடி வரும் தாரெக்கின் தாய் அவனில்லாமல் அந்த நகரை விட்டு நீங்க மறுக்கிறார். வால்டர் அவளை தன்னுடைய தங்கச் சொல்லி வேண்டுகிறார். தாரெக்கை வால்டர் வெளியே கொண்டுவர எடுக்கும் பிரயத்தனங்களும் அதற்கு அதிகாரம் அசைந்து கொடுக்காத கொடுமையுமான காட்சிகளுமாக மீதப்படம் விரிகிறது. 'எங்கே என்று அறியப்படாமலேயே தாரெக் அந்த நகரை விட்டு வெளியேற்றப்பட்டான்' என்ற தகவலுடனான சோகத்துடன் படம் நிறைவடைகிறது.

()

தெளிந்த நீரோடை போல எந்த அதிரடியும் இல்லாத தெளிவான திரைக்கதையுடன் நகரும் இத்திரைப்படத்தில் வால்டராக Richard Jenkins தனது அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இவர் அமெரிக்க நாடகங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலுமே அதிகம் நடித்திருக்கிறார். அவர் திரைப்படத்தில் பிரதானமாக நடிக்க ஆரம்பித்தது இந்தப்படமே. எந்தவொரு காட்சியிலும் இவரின் முக உணர்வுகள் மிகையாக வெளிப்படுவதேயில்லை. ஏதோ படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் போலவே கூலாக இருக்கிறார். ஆனால் காட்சிக்கு மிகப் பொருத்தமாக அவர் உடல்மொழி இயங்குகிறது. அகாதமி விருதின் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது.

தாரெக்காக நடித்திருக்கும் hazz sleiman-ம் அவர் மனைவி ஜனாப்பாக நடித்திருக்கும் Danai Jekesai Gurira -ம் மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றனர். சிறந்த நடிகரான Thomas McCarthy இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பல திரைப்பட விழாக்களில் இந்தப்படம் பங்கேற்றதோடு விருதுகளையும் வென்றிருக்கிறது.

படத்தின் பல காட்சிகளில் வரும் sub-text என்னை பிரமிக்கச் செய்தது. உதாரணமாக வால்டேர் பியானோ கற்றுக் கொள்ள முயல்கிற காட்சியோடுதான் படம் துவங்குகிறது. இறந்து போன அவர் மனைவி பியானோ டீச்சராக இருந்தது பிற்பாடான ஒரு உரையாடலின் மூலம் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுகிறது. இயந்திரத்தனமான தன் பேராசிரியர் வாழ்க்கையில் வெறுமையையே உணர்வதாகவும் சாதித்தது என்று ஏதுமில்லை என்று தாரெக்கின் தாயிடம் பிற்பாடு கூறுகிறார். ஆக..அவர் தன் மனைவி உயிருடன் இருக்கையில் அவருடன் நேரத்தை செலவழிக்கவோ பியானோ கற்றுக் கொள்ளவோ முயலவில்லை. அவருடைய மறைவுக்குப் பின்புதான் தனிமையை உணர்ந்து மனைவியின் நினைவை மீட்டெடுக்க பியானோ கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் அந்த வாத்தியத்தை விட தாரெக் மிகுந்த நட்புடன் கற்றுத்தரும் டிரம் வாத்தியத்தை வால்டரால் விரைவாக கற்றுக் கொள்ள முடிகிறது.

இந்த சமாச்சாரங்கள் எதுவும் உரத்த குரலில் பார்வையாளனுக்கு சொல்லப்படுவதில்லை. நிகழ்வுகளின் ஊடாக ஒரு நுட்பமான பார்வையாளன் தானாகவே உணரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதே போல் காட்சிகளின் தொனிக்கேற்ப நடிகர்கள் எதிர்வினை புரிவது மிக அற்புதமாக அமைந்திருக்கிறது. தாரெக்கின் மனைவி ஜனாப் தன்னுடைய மாமியாரை முதன் முறையாக சந்திக்கும் காட்சியை சொல்லலாம். தூரத்திலிருந்து அவளை கவனிக்கும் தாரெக்கின் தாய், "இவ்வளவு கருப்பாக இருக்கிறாளே"? என்று வால்டேரை கேட்கிறார். பின்பு அவர்கள் நெருங்கினதும் வால்டேர் இருவரையும் அறிமுகப்படுத்துகிறார். தங்களுக்கு தங்க இடம் தந்த வால்டேர் குறித்து அவளுக்கு மரியாதை இருந்தாலும் அந்நியன் என்ற காரணத்தினாலேயே தங்கள் உலகத்திற்குள் அவர் நெருங்கி வருவதை அவள் விரும்புவதில்லை. எனவே படம் முழுவதும் ஜனாப்பின் முகம் இறுக்கமாகவே இருக்கும். ஆனால் அவள் தன்னுடைய மாமியாரைச் சந்தித்தும் அவளின் முகபாவங்கள் மிகுந்த மாற்றத்தோடு ஆச்சரியத்துடனும் மரியாதையுடனும் அழுகிற காட்சி மிகுந்த நெகிழ்வை எனக்குள் ஏற்படுத்தியது.

அதே போல் வால்டேருக்கும் தாரெக்கிற்கும் விரியும் நட்பு மிகுந்த அழகியல் உணர்ச்சியுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சிறையில் இருக்கும் தாரெக் தன்னைச் சந்திக்க வரும் வால்டேரிடம் 'இசைப் பயிற்சி எப்படியிருக்கிறது" என்று கேட்டுவிட்டு சிறையிலேயே வாசித்துக் காட்டும்படி வால்டேரை அன்புடன் வற்புறுத்துகிறான்.

()

நான் ஆரம்பத்தில் சொன்னது போல எல்லைக்கோடுகள் போன்ற கற்பிதங்கள் எவ்வாறு மனிதத்தை நசுக்குகின்றன என்பதை மிகவும் அற்புதமாக சித்தரித்திருக்கின்றது இத்திரைப்படம். கட்டாயம் பாருங்கள்.

suresh kannan

Thursday, May 14, 2009

"ஏண்டா என் கதைய போடல?"

வடகரை வேலனின் சிறுகதை ஆ.வியின் சென்னைப் பதிப்பில் வராமல் அதற்குப் பதிலாக ஓர் விளம்பரம் வந்திருந்ததை இந்தப் பதிவின் மூலம் அறிந்த போது எனக்குள் பொறி தட்டியது. இதே போன்றதொரு சம்பவத்தை வைத்து நான் முன்னர் மரத்தடி குழுமத்தின் போட்டிக்காக ஓர் சிறுகதையை எழுதியிருந்தேன். தேடிப்பார்த்ததில் மரத்தடி குழுமத்திலேயே கிடைத்தது. இங்கே அதை மீள்பதிவு செய்திருக்கிறேன். படிப்பவர்கள் என் ஆரம்ப கால எழுத்தின் (இப்ப மட்டும் என்ன வாழுது!) அசட்டுத்தனங்களை ஆங்காங்கே உணரலாம்.

ஏற்கெனவே படித்திருந்தவர்கள் இப்படியே கிளம்பவும். புதிதாகப் படிப்பவர்கள் உங்களின் பொன்னான வாக்குகளை... சட். தேர்தல் நேரம்.. கருத்துக்களை பின்னூட்டத்தில் ஆபாசக் கலப்பில்லாமல் சொல்லவும்.

bagvan

வரம்

- சுரேஷ் கண்ணன்

ஆயிற்று. இத்தோடு திரும்பி வந்தது எனது இருபத்தைந்தாவது கதை. அதற்காக நான் எழுதியது வெறும் இருபத்தைந்து கதை மட்டுமே என்று நினைத்து விடாதீர்கள். அது கிட்டத்தட்ட நூறைத் தொடும். என்ன ஆச்சு இந்த பத்திரிகைகாரன்களுக்கு? கண்ட கண்ட குப்பைக் கதைகளை எல்லாம் போடுகின்றவன்கள், நாளைக்கு சர்வதேச புகழை அடையப் போகிற என் கதைகளை மட்டும் தேடியெடுத்து திருப்பியனுப்புகின்றான்களே? என்னுடைய இமாலய பிரச்சினையே இப்போது இதுதான்.

நீங்கள் வேண்டுமானாலும் என் கதைகளை படித்துப் பாருங்கள். நீங்களே ஒத்துக் கொள்வீர்கள், நான் சாகாவரம் பெற்ற கதைகளை எழுதியிருக்கிறேனென்று. உதாரணத்திற்கு என்னுடைய ஒரு கதை இப்படி ஆரம்பிக்கிறது.

'அந்த விபச்சாரி இருளை தன் முன்னோர்களை போல பயபக்தியுடன் நேசித்தாள். ஒரு துவாரம்தான் அவள் பசியாற்றுகிறது என்பதை எண்ணும் போது .....'


என்ன முகத்தை சுளிக்கிறீர்கள்? சர்வதேச தரத்துடைய சிறுகதை என்றால் இப்படித்தானிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியாதவர்களா என்ன? என் கதைகளை பிரசுரிக்காத இவர்களை நினைத்தால் ஒருபக்கம் எரிச்சலாகவும் ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் சேகர் மாலாவை காதலிப்பது பற்றிய கதைகளை போடுவார்களோ?

இப்படி நான் புலம்பிக் கொண்டிருக்கையில்தான் நண்பன் என்று அவனாக சொல்லிக் கொண்டிருக்கும் சேகர் வந்தான். இவனை மாதிரி ஒரு அல்பையை நான் உலகத்திலேயே பார்த்ததில்லை. ஒரு சம்பவம் மூலம் உங்களுக்கு அதை உணர வைக்கிறேன்.

ஒரு முறை நானும் அவனும் ஒரு உணவகத்திற்கு சென்று உண்டு முடிக்கும் வேளையில் சர்வர் பில் கொண்டு வருவதைப் பார்த்தவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பூரியை அப்படியே வாயில் அடைத்துக் கொண்டு கை கழுவுமிடத்தை நோக்கி ஓடினான். அப்போதுதான் பில் என் கைக்கு வருமாம். சரி, தொலைந்து போகிறது என்று தொகையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நாங்கள் சாப்பிட்டதற்கும் அதிகமான தொகையாக இருந்தது. பிறகு சர்வர் சிலபல பார்சல் பொட்டலங்களை கொண்டு வந்ததும்தான் எனக்கு காரணம் புரிந்தது. இந்த அல்பை தான் மட்டும் ஓசியில் சாப்பிட்டு தொலைக்காமல் தனது குடும்பத்துக்கும் பார்சல் ஆர்டர் செய்திருக்கிறான்.

இப்படியாப்பட்டவன் என்னை இப்போது எரிச்சலூட்டப் போகிற அந்த கேள்வியை கேட்கிறான்.

"என்ன இந்த கதையும் திரும்பி வந்துடுச்சா? நான் ஒரு யோசனை சொல்றேன். கேக்கறியா?"

"உனக்கு ஒண்ணுக்கே ஒழுங்கா போவத் தெரியாது. நீ எனக்கு யோசனை சொல்றியா? சரி. என் நேரம். சொல்லு."

அப்புறம் அவன் சொன்ன யோசனை என் கவனத்தை ஒரளவு கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு சாமியார் இருக்கிறார். அவரிடம் போய் ஆசி வாங்கினால் நடக்காத காரியமும் ஒட ஆரம்பித்து விடுமாம். சாமியாருக்கு கட்டுகிற கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் காரியம் கட்டாயம் நடந்து விடுமாம். குழந்தை ஆசை உள்ள ஒரு பெண் அங்கு சென்றவுடன் குழந்தை பாக்கியம் கிட்டியிருக்கிறது, அவளுக்கு திருமணமாகாமலே. அவ்வளவு சக்தி அந்த சாமியாருக்கு. பல வி.ஐ.பி.கள் தங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகின்ற நேரங்களில் எல்லாம் அவரிடம் சென்று ஆசி பெற்று அந்த ஆபத்துக்களை பினாயில் போட்டு கழுவி விடுவார்களாம்.

என்னென்னமோ சொல்லி என்னை சம்மதிக்க வைத்து விட்டான். அந்த சாமியாரைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு பளப்பள பிளாம்பெட் ஒன்றை காட்டினான். ஜிக்குஜிக்கா ஜிக்கா என்று பளபளாவென்றிருந்தது. அதை அச்சிடவே ஒன்றிற்கு 50 ரூபாயாக ஆகியிருக்கும் போலிருந்தது.

"அது சரிடா. நான் என்ன குழந்தையா பெத்துக்க ஆசைப்படறேன். என் கதை பிரசுரம் ஆகமாட்டேங்குது. அதுதான் என் பிரச்சினை. இதுக்கு போயா அந்த சாமியார் கிட்ட போகச் சொல்றே?"

"இதப்பார். என்ன பிரச்சினைன்றது முக்கியமில்ல. உன் பிரச்சினை தீருதான்றதுதான் முக்கியம். அது கட்டாயம் தீரும். அதுக்கு நான் கியாரண்டி"

என்று சொல்லிவிட்டு, அவனுக்கு நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்து சாமியாரின் ஆசிக்கு பிறகு, ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் வேலை கிடைத்தது எப்படி என்பதை விலாவரியாக சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் கழிவறையை சுத்தம் செய்யும் வேலை என்பதை மட்டும் சொல்லவில்லை. கள்ளப்பயல்.

இந்த யோசனையை பரிசீலிக்க வேண்டுமா என்று என் பகுத்தறிவு ஒருபக்கம் சொன்னாலும், ஒரு கதை வெளியாகிவிட்டாலும் எனக்கு கிடைக்கப் போகிற விருதுகளின் பட்டியல்களை யோசித்துப் பார்க்கும் போது இதை முயற்சி செய்யலாம் என்றுதான் தோன்றிற்று. நானும் எத்தனையோ வழிகளில் முயன்று பார்த்தும் என்னுடைய கதைகள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைக்காமல் போவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

() () ()

ஒரு சுபமுகூர்த்த தினத்தில் நானும் அவனும் அந்த சாமியார் இருக்கிற 'போட்கிளப்' பங்களாக்கு சென்றோம். சென்னையில் இந்த மாதிரி இடங்களும் இருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுத்தமாக இருந்த சாலையின் இருபுறமும் மரங்கள் காவலாக இருக்க, சூழலே குளுமையாக, பசுமையாக இருக்க, சட்டென்று ஊட்டியில் இருக்கிறோம் என்று கூட நம்பலாம் போல இருந்தது.

அந்த பங்களாவே மிக்க பணக்காரத்தனத்துடன் இருந்தது. கிரில் கேட்டுக்கே எத்ததை டன் இரும்பு செலவாகியிருக்குமோ என்று பிரமிப்பாக இருந்தது. காவற்காரன் எங்களை, அவன் மனைவியுடன் சந்தோஷமாயிருக்கையில் எழுப்பப்பட்டவன் போல் எரிச்சலுடன் பார்த்து உள்ளே அனுமதித்தான்.

வரவேற்பறையில் இருந்த வரவேற்பாளினியை உடனே காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் போல் இருந்தது. இவளெல்லாம் சினிமாவில் நடிக்க போகாமல் ஏன் சாமியாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடன்வந்த அல்பன் சேகரோ, ஓட்டை ஆங்கிலத்தில் பேசி அவளை கவர முயற்சிக்க அவளோ எங்களை துளிகூட சட்டை செய்யாமல் எங்கள் அனுமதிச்சீட்டை வாங்கி பரிசோதித்துவிட்டு ஒட்டவைத்த புன்னகையுடன் உள்ளே அமரச் சொன்னாள். பாதகி.

அந்த சூழ்நிலையில் இருந்த செல்வந்தத்தனம் என்னை அசெளகரியமாக உணரச் செய்தது. விலை உயர்ந்த சாண்டலியர் விலை உயர்ந்த இதமான மஞ்சள் வெளிச்சத்தை பாய்ச்ச, நாங்கள் சோபாவில் பாதி உருவம் உள்ளே அமிழ்ந்திருக்க யாசகத்துக்கு வந்திருப்பவர்கள் போல் பரிதாபமாக அமர்ந்திருந்தோம். எங்களைப் போல சில கவலை முகன்கள் அந்தக் காலை நேரத்திலேயே வந்து காத்திருந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. உடம்புக்குள்ளே பயப்புறா படபடக்க உள்ளே சென்றேன். உடன்வந்தவன் சமயா சந்தர்ப்பமில்லாமல் அபான வாயுவை வெளியேற்ற சத்தம் அந்த புனித சூழ்நிலையை கெடுக்கிறாற் போல் இருந்தது. நான் சாமியாராக இருந்திருந்தால் அவனை அந்த இடத்திலேயே பஸ்பமாக்கி இருப்பேன்.

அந்த மஹா பெரிய ஹாலில் நுழைந்த போது தோட்டா தரணி போட்ட செட் போல் திகைப்பாயிருந்தது. வெல்வேட் போட்ட ஒரு நாற்காலியில் நட்ட நடுவாக சாமியார் அமர்ந்திருக்க சிஷ்யர்கள் போல் சிலர் பக்தி பரவசத்துடன் நின்றிருந்தனர். அதில் ஒருத்தி ரம்பா ஜாடையில் மேல் உதட்டில் லேசான அரும்பு மீசையுடன் என்னை காதலிக்கிறாற் போல் கிறக்கத்துடன் பார்த்தாள்.

சுவாமிகளுக்கு வயது 50லிருந்து 120க்குள் ஏதோ ஒன்று இருக்கும் போல் இருந்தது. தினமும் தியானம் செய்வார் என்பது அவர் கண்களில் இருந்து தெரிந்தது. எங்கிருந்தோ ஒரு நறுமணம் அறையெங்கும் பரவி இருந்தது. சுவாமிகளின் பெரிய்யயய.. புகைப்படம் தங்க பிரேமிடப்பட்ட பரணீதர சுவாமிகள் என்று கொட்டை எழுத்துக்களுடன். எனக்கு முன்னிருந்த கவலை முகன் கண்ணீருடன் விலக, சுவாமிகள் என்னை வாத்சல்யத்துடன் பார்த்தார்.

"சொல்லுங்க." என்றார் பக்கத்தில் இருந்த ஒரு அஸிஸ்டெண்ட். ஸ்டைபண்ட் பீரியடில் இருக்கிறார் போலும். அதிகம் நேரம் அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது.

என்னுடன் வந்தவன் அபத்தமாக ஏதோ ஆரம்பிக்க, அவனை அமர்த்தி விட்டு என்னுடைய பிரச்சினையை தெளிவாக ஆனால் சுருக்கமாக சொன்னேன்.

"நல்லாத்தான் எழுதறேன்னு எனக்கே தெரியுது. படிச்சுப் பாக்கறவங்களும் அடுத்த ஜெயகாந்தன் நீதான்னு பாராட்டறாங்க. ஆனா எந்த பத்திரிகையிலும் போட மாட்டேன்றாங்க. ஏதோ ஒரு சக்தி அவங்கள தடுக்குதுன்னு தெரியுது. நீங்கதான் அத...."

நான் சொல்லி முடிப்பதற்குள் கையமர்த்தி என்னை நிறுத்திய சுவாமிகள் ஒரு சுவாரஸ்யமான புன்னகையுடன் கண்களை மூடினார். இந்த மாதிரி கேஸை இதுவரை பார்த்திருக்க மாட்டார் போலும். சரியாக ஒரு நிமிடம் கழித்து கண்களை திறந்தவர் அவர் உதவியாளருக்கு ஏதோ சைகை காட்டியவர் என்னை அன்னை தெரசா போல் கருணையுடன் பார்த்தார்.

"உங்க பிரச்சினை இன்னும் நாலு வாரத்துக்குள்ள சரியாகிடும்னு சொல்றாரு. சுவாமிகளோட புகைப்படத்த பக்கத்துல வெச்சுக்கிட்டு எழுத ஆரம்பிங்க. நாலு வாரத்துக்குள்ள ஏதாவது ஒரு பத்திரிகைல உங்க கதை வெளியாயிடும்-னு சொல்றாரு. "

'நான் இதை சுவாமியாரே சொல்லட்டுமே' என்று அவரை பலியாடு போல் பார்க்க அவரோ அதே என்னை புன்னகையுடன் போகும்படி சைகை காட்டினார்.

"நம்பிக்கையோடு செய்யுங்க. கண்டிப்பா பலிக்கும்" என்றது உதவி.

ஏதோ ஒரு குழப்பத்துடன் திரும்பிய என்னை உதவி கூப்பிட சுவாமிகள் ஒரு எலுமிச்சம் பழத்தை தூக்கிப் போட்டாற் போல் தர,

"உங்களுக்கு ரொம்ப அதிர்ஷ்டம். சில பேருக்குத்தான் இந்த மாதிரி" என்றது உதவி.

எனக்கு இப்போது குழப்பமெல்லாம் விலகி, பனி மறைந்து சூரியன் தெரிகிறாற் போல் என்னென்னமோ தோன்றியது. உள்ளே ஏதோ ஒன்று உடைந்து சிதறினாற் போலவும், மூக்கு அடைத்துக் கொண்டிருந்தது சட்டென்று சரியானது போலவும் ஏதேதோ தோன்றியது. என்னுடைய கதையில் வருகிற கதாபாத்திரங்கள் எல்லாம் ஒரே சமயத்தில் வந்து வாழ்த்து சொன்னார்கள். வெளியே வந்தோம்.

உடன் வந்தவன் சமயா சந்தர்ப்பமில்லாமல் "போறச்சே உடுப்பி பவன்ல மசால் தோசை சாப்டுட்டு போலாமா?" என்று கேட்க அவனை செருப்பால் அடிக்கிற ஒரு பார்வை பார்த்து விட்டு பிறகு சட்டென்று வந்த சந்தோஷத்துடன், "வாடா பிரியாணியே சாப்பிடலாம்" என்றேன்.

() () ()

பிறகு நடந்ததெல்லாம் ஒரு மாயாஜாலம் போலத்தான் நிகழ்ந்தது. இதுவரை கதை எழுதும் போது வரத்தயங்கிய வர்ணனைகள் எல்லாம் வரிசையில் வந்து என்னை எழுது என்று கெஞ்சின. நான் எழுத நினைத்திருந்ததிலேயே சிறந்த கருவை மிகச்சிறந்த முறையில் எழுதி, என்னை ஒரு முறை அவமானப்படுத்தி வெளியே அனுப்பிய அந்த லட்சக்கணக்கான சர்க்குலேஷன் கொண்ட பத்திரிகைக்கு அனுப்பி வைத்துவிட்டு நகத்தை கடித்துக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தேன்.

() () ()

சரியாக இரண்டு வாரம் கழித்து சேகரின் நச்சரிப்பு தாங்காமல் பரங்கிமலை ஜோதி கிளம்ப இருக்கும் போதுதான் அந்த தபால்காரன் வந்தான். ஒரு கணம், கதைதான் திரும்பி வந்து விட்டதோ என்று திக்கென்று ஆகி விட்டது. ஆனால் அவன் கொடுத்தது ஒரு கடிதம். பரபரப்பாகி பிரித்து படிக்க .....

வளர்த்துவானேன்.

என்னுடைய கதை பிரசுரமானதிற்கு தேர்வு செய்யப்பட்ட தகவல் வாழ்த்துக்களுடன் வந்திருந்தது. சுவாமிகள் சொன்னது மாதிரி நாலாவது வாரத்தில் அந்த கதை பிரசுரமாகப் போகிறது. தபால்காரன், நான் தந்த நூறு ரூபாய் நோட்டை பிரமிப்புடன் எடுத்துச் செல்ல சேகரின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன். 'என்னடா இது நடு ரோட்ல' என்று கூச்சப்பட்டவனுக்கு இலவச இணைப்பாக பின்பக்கத்தில் ஒரு உதையும் கொடுத்தேன். வீட்டில் சொன்னதற்கு 'எவ்வளவுடா பணம் கொடுப்பாங்க?' என்று கேட்டு என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள். அலுவலக நண்பனொருவன் 'நீ எழுதுன கதைதானா?' என்று கேட்க அன்றைக்கு அவனுக்கு வந்த உறவினர் தொலைபேசி அழைப்புக்கு, அவன் இறந்து விட்டான் என்று அழுது கொண்டே சொல்லி, அவனை அலற வைத்தேன். பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைபேசி கதை பிரசுரமாவதை உறுதி செய்து கொண்டேன்.

() () ()

சுபமுகூர்த்தமான அந்த நாலாவது வாரம்.

விடியற்காலை நாலு மணிக்கே அலாரம் வைத்து எழுந்து வீட்டில் உள்ளவர்களையெல்லாம் எழுப்பி கதை படிக்க ரெடியாகச் சொல்லி, கடைக்காரனை தூக்கத்திலிருந்து எழுப்பி...

போதும் பில்ட்அப். நீங்கள் ஆவலுடன் இவ்வளவு நேரம் எதிர்பார்த்திருந்தாற் போலவே,

*அந்த இதழில் எனது கதை பிரசுரமாகவில்லை.*

யார் வீட்டுக்கோ ஆட்டோவில் போய் மெனக்கெட்டு செருப்படி வாங்கினாற் போல் உணர்ந்தேன். அல்பை சேகரும் சிரித்துக் கொண்டே "என்னடா இன்னிக்கு பார்ட்டி எங்கே?" இளித்துக் கொண்டே வர அவனை ஒரே அப்பு அப்பினேன். ஒரு நிமிடம் என்ன செய்வது செய்வதென்றே புரியவில்லை.

பிரசுரவமாவதாக கண்டிப்பாக சொன்னார்களே. அந்தக் தகவல் கடிதம் வேறு என் மேஜை மீது காற்றில் படபடத்து என் டென்ஷனை எகிற வைத்தது.

() () ()

பத்து மணியானதும் முதல் காரியமாக அந்த பத்திரிகை அலுவலகம் திறக்கும் வரை காத்திருந்து அந்த உதவி ஆசிரியரின் காலரை பிடித்தேன்.

"என்னய்யா கலாட்டா பண்றே?" என்றவரின் முகத்திற்கு நேரே அந்த கடிதத்தை நீட்டினேன்.

"கதைய பப்ளிஷ் பண்றேன்னு சொல்லிட்டு போடாம போனா என்ன அர்த்தம்?"

என் கொலைகார பாவத்துடன் உள்ள முகத்தையும் அந்தக் கடிதத்தையும் மாறிமாறிப் பார்த்தவர் சூழ்நிலையை உணர்ந்து கொண்டவர் போல்

"இப்படி கொஞ்சம் தனியா வாங்க."

"என்னய்யா தனியா வர்றது. இங்கயே சொல்லு."

"இதப்பாரு தம்பி. கடைசி நிமிசத்துல ஒரு மாத்தம் ஆகிப் போச்சு. இது வழக்கமா நடக்கறதில்ல. நீ அனுப்பிச்ச கதை நல்லாத்தான் இருந்தது. நான்தான் செலக்ட் செஞ்சு எடிட்டர் கிட்டயும் அப்ரூவல் வாங்கினேன்."

"அப்புறம் என்னய்யா போடறதுக்கு கேடு?"

"கொஞ்சம் பொறு சொல்றேன். உன் கதைய ரெண்டு பக்கத்துல போடறா மாதிரி கம்போஸ் எல்லாம் பண்ணியாச்சு. ப்ரூப்புக்கும் போயிடுச்சு. அப்பதான் ரெண்டு பக்க விளம்பரம் ஒண்ணு வந்திருக்கிறதா விளம்பர டிபார்ட்மெண்ட்ல இருந்து சொன்னாங்க. கேஷா வேற கட்டிட்டாங்க. எடிட்டரும் இந்தக் கதைய அப்புறம் போடலாம்னு சொல்லி இந்த விளம்பரத்த போடச் சொல்லிட்டாங்க. கடைசி நிமிஷத்துல ஆயிட்டதால உனக்கு தகவலும் அனுப்ப முடியல. நீ நம்பலன்னா இந்த விளம்பரத்தையும் உன் கதை ப்ரூப்பையும் பாரு. அதே பேஜ் நம்பரு."

என் கதையை பிரசுரம் ஆகாமல் தடுத்த அந்த விளம்பரத்தை கோபமும் விரக்தியுமாய் புரட்டிப் பார்த்தேன்.

இரண்டு பக்க வண்ண ஆசிரம விளம்பரத்தில் ஆசிரம படம் சின்னதாக இருக்க, பெரிதான புன்னகையுடன் மந்தகாசமாக பெரிய அளவில் சிரித்துக் கொண்டிருந்தார் பரணீதர சுவாமிகள்.

suresh kannan

Wednesday, May 13, 2009

போட்டாச்சு வோட்டு!


காலை 08.00 மணி. வடசென்னைப் பகுதி. ஆண்களை விட பெண்களே நீளமாக இருந்த அந்த வரிசையில் இருந்த ஒவ்வொருவரையும் வணங்கத்தோன்றியது. நான் பொதுவாக சற்று சாவகாசமாகத்தான் ஒட்டளிக்கச் செல்வது வழக்கம். இதுவரை எந்த குழப்பமும் நேர்ந்ததில்லை. ஆனால் இந்த முறை ரிஸ்க் எடுக்க வேண்டாமென்று சீக்கிரமாகவே சென்றுவிட்டேன். வடசென்னைப் பகுதிதான் என்றாலும் அங்குள்ளவர்களில் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களே மிக ஆர்வமுடன் வாக்களிக்க காலையிலேயே வந்திருந்தார்கள். நடப்பதற்கே தள்ளாடும் முதியவர்களும் அவ்வளவு காலையில் வாக்களிக்க வந்திருப்பதைக் காண நெகிழ்வாக இருந்தது.

வாக்குச் சாவடியில், தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர், முகவரி, சின்னம் உட்பட அனைத்தும் பெரிதான எழுத்துக்களில் ஒட்டப்பட்டிருந்தது. எவ்வாறு வாக்களிக்கும் கருவியைப் பயன்படுத்துவது என்பது குறித்த போஸ்டர்களும் ஆங்காங்கே ஒட்டப்படிருந்தன. காவல்துறையினர் மிக கனிவாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டனர். 'அடையாள அட்டையில் இருக்கிற முகத்திற்கும் தனக்கும் வித்தியாசம் இருக்கிற காரணத்தினால் வாக்களிக்க தன்னை அனுமதிக்கவில்லை' யென்று ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார். நான் எனக்கான வாக்கை எந்தவித குழப்பமுமில்லாமல் அளித்து விட்டு வந்தேன்.

அரசியல் கட்சிகள், கூட்டணி என்றல்லாமல் என்னுடைய தொகுதியில் உள்ள வேட்பாளர்களில் சிறந்தவர் என்று நான் கருதக்கூடியவருக்கே ஓட்டளித்தேன். யாருக்கு வாக்களிப்பது என்பதை முன்பே முடிவு செய்துவிட்டதால் எவ்வித குழப்பமுமில்லை.

ஒட்டளித்துவிட்டு வெளியே வரும் பிரபலங்கள் தங்கள் ஆட்காட்டிவிரலை உயர்த்தி காண்பிக்கிற புகைப்படங்களை பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். தேர்தல் முடிந்து பதவியில் அமர்ந்த பிறகு தங்களிடம் கோரிக்கைக்காக வரும் மக்களிடம், அரசியல்வாதிகள் நடுவிரலை உயர்த்தி காண்பிக்காமல் இருந்தால் சரி.

image courtesy: original uploader


suresh kannan