Saturday, February 15, 2020

‘நினைவை உதிர்க்கும் சருகு' - A Long Goodbye| 2019 |




ஒரு குடும்பத்தின்கண் முன்னாலேயே அவர்களின் குடும்பத் தலைவர் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சோகமானதொரு விஷயத்தை வைத்துக் கொண்டு மென்மையான நகைச்சுவையால் நிரம்பிய ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா? A Long Goodbye என்கிற இந்த ஜப்பானியத் திரைப்படம் அதை இயல்பாகவும் சுவாரசியமாகவும் சாதித்திருக்கிறது. சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் சிறந்ததொன்றாக இதை மதிப்பிடுவேன்.

ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த அடையாளம் என்பது அவரது நினைவுகள்தான். அவை ஒவ்வொன்றாக கழன்று வெற்றிடமானால் அவர் ஏறக்குறைய ஓர் இயந்திரத்திற்கு சமமாகி விடுவார். அப்படிப்பட்ட மனிதரைப் பற்றிய திரைப்படம்தான் இது. இந்த மையத்தையொட்டி அந்தக் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட சோகங்களும் மகிழ்ச்சிகளும் மிகத் திறமையான கோர்வையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன.

**
பொழுதுபோக்கு பூங்காவில் ஒரு சிறுமி தன் தங்கையுடன் ராட்டினம் விளையாட வருகிறாள். 'பெரியவர்கள் உடனிருந்தால்தான் அனுமதிக்க முடியும்' என்கிறார்கள். அப்போது மலங்க மலங்க விழித்த படி அங்கு வரும் வயோதிகர் ஒருவரை உதவி செய்யச் சொல்லி கேட்கிறார்கள், இந்தச் சிறுமிகள்.

அவருடைய கையில் ஏன் மூன்று குடைகளை வைத்திருக்கிறார். அவர் யார்?. இதற்கான பதில்கள், ஃபிளாஷ்பேக் காட்சிகள் வழியாக விரிகின்றன. 2007-ல் துவங்கி இரண்டிரண்டு ஆண்டுகளாகத் தாண்டி வெவ்வேறு பருவ காலங்களில் இவை சொல்லப்படுகின்றன.

Shohei பள்ளிக்கூட முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். வயது எழுபது. Dementia எனப்படும் மறதிநோய் அவரை ஆட்கொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல தன் நினைவுகளை இழக்கத் தொடங்குகிறார். திருமணமாகி, கலிபோர்னியாவில் வசிக்கும் தன் மூத்த மகளை சந்திக்கும் போது "மணி எட்டு ஆயிடுச்சே.. நீ இன்னமும் ஸ்கூல் கிளம்பலையா?" என்று  எட்டாம் வகுப்பு காலத்தின் கேள்வியை கேட்குமளவிற்கு அவரது நோய் முற்றத் துவங்கியிருக்கிறது.

ஆனால் ஆச்சரியகரமாக பல வருடத்திற்கு முன் நடந்த சம்பவங்கள் அவருக்கு பசுமையாக நினைவில் இருக்கின்றன. மூளையின் விந்தைகளுள் இதுவொன்று.

ஒரு வயோதிகரின் நினைவிழத்தல் பற்றிய திரைப்படமென்றாலும் ஒரு துளி  சோகம் கூட இந்தத் திரைப்படத்தில் இல்லாதது பயங்கரமான ஆச்சரியம். இதுவே இந்திய சினிமாவென்றால் ஷெனாய் வாத்தியத்தை எல்லாம் அலற விட்டு  பட்டையைக் கிளப்பியிருப்பார்கள். மாறாக இந்தப் படமெங்கிலும் இயல்பான நகைச்சுவை கொப்பளிக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு காட்சி: முதியவரும் அவரது மனைவியும் உறவினரின் வீட்டுக்குச் சென்று விட்டு ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென தன் மனைவியை காதலுடன் பார்க்கும் முதியவர்.."உன்னை என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்த வேண்டும்" என்று ஏதோ நாளைதான் அவர்களின் திருமணத்திற்கான அனுமதியைப் பெறப் போவது போல் ஒரு வசனத்தைப் பேச,  இதை எதிர்பார்க்காத அவரின் மனைவிதிகைப்பும் வெட்கமுமாய் தரும் முகபாவம் அத்தனை அழகு. முதியவர் தன் கடந்த காலத்தில் உறைந்து போயிருக்கிறார் என்பதற்கான காட்சி இது. அவர்களுக்கு திருமணம் ஆகி ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகியிருக்கினறன.

இந்தத் தம்பதி, சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கச் செல்லும் போது கிழவர் சில பொருட்களை நினைவு மறதியாக தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். வெளியே பிடித்து விடுகிறார்கள். அதன் நிர்வாகி இவர்களை அமர வைத்து சற்று கடுமையாக விசாரிக்கிறார். மனைவி கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்கிறாள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியாத கிழவர், மனைவி கண்கலங்குவதைப் பார்க்கிறார். ஆசிரியர் பணியில் இருந்த பழைய ஞாபகத்தில், தாமதமாக வந்த மாணவனை வெளியே நிற்கச் சொல்வது போன்ற தொனியில் நிர்வாகியை அதட்டி மிரட்டுவது ரகளையான நகைச்சுவை.

இறந்து போன சக ஆசிரியரின் இறுதிச் சடங்கிற்கு மகளின் உதவியுடன் செல்கிறார் கிழவர். அங்கு இவரை அடையாளம் கண்டு கொள்ளும் இன்னொரு நண்பர் உற்சாகமாக நலம் விசாரிக்கிறார். கூட வந்திருக்கும் மகள் இவரது மறதி நோயைப் பற்றி மெலிதாக சுட்டிக் காட்டினாலும் நண்பருக்குப் புரிவதில்லை. தொடர்ந்து உற்சாகமாக பேசுகிறார். கிழவரும் மையமாக பதிலளிக்கிறார். ஒரு கட்டத்தில் கிழவர் கேட்கிறார். "அவன் இப்ப எப்படியிருக்கான்.. நல்லா இருக்கானா?" என்று. அவர் கேட்டது இறந்த நண்பரைப் பற்றி. இப்போதுதான் உற்சாக ஆசாமிக்கு கிழவரின் நிலைமை அப்பட்டமாக உறைக்க சங்கடத்துடன் மெளனமாகிறார். இப்படியாக மென்மையான நகைச்சுவைகள் படம் பூராவும் வந்து கொண்டேயிருக்கின்றன.

**

மேற்கத்திய நாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். வயது வந்த பிள்ளைகள் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி தன் வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்கிறார்கள். இதற்குப் பிறகு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு அருகி விடுகிறது. ஆனால் ஆசியக்கலாசாரம் முற்றிலும் இதற்கு எதிரானது. குடும்பம் என்கிற நிறுவனம் பலமாக இயங்குவதின் அடிப்படைகளில் ஒன்று தியாகம். இந்தக் கருத்தாக்கம் இந்தத் திரைப்படத்தில் பல காட்சிகளில் அழுத்தமாக வெளிப்படுகிறது.மறதி நோயில் அமிழ்ந்து கொண்டிருக்கும் வயோதிகரை அவரது மனைவியும் இரண்டு மகள்களும் தாங்கிப் பிடிப்பது பல காட்சிகளில் நெகிழ்ச்சியாக சொல்லப்பட்டிருக்கிறது.

"நான் வீட்டிற்குப் போகணும்" - இது முதியவர் அடிக்கடி சொல்லும் வசனம். "நாம 25 வருஷமா இங்கதான் இருக்கோம். இதுதான் நம்ம வீடு" என்று மனைவி பதில் சொல்கிறார்.

இது ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்க, வெளிநாட்டில் வசிக்கும் மகள், தன் தந்தைக்கு எந்தவொரு பிரச்சினை என்று கேள்விப்பட்டாலும் உடனே டோக்கியோவிற்கு செல்ல தன் கணவரிடம் அனுமதி கேட்கிறார்.  "வீட்ல ஒரு பிரச்சினை. நான் வீட்டுக்குப் போகணும்" மனைவி அடிக்கடி பிறந்தகத்திற்கு செல்வதை விரும்பாத கணவர் கேட்கிறார் " அப்ப இது உன் வீடு இல்லையா?". 'வீடென்பது எது?' என்கிற தத்துவச் சிக்கல் தொடர்பான கேள்வியை இது போன்ற காட்சிகள் எழுப்புகின்றன.

**
குடும்பம் என்கிற அமைப்பிற்குள் இணைந்து வாழ்ந்தாலும் தம்பதியினருக்குள் இருக்கும் மனவிலகல் பற்றிய தெறிப்புகள் பல காட்சிகளில் வெளிப்படுகின்றன.

கலிபோர்னியாவில் வசிக்கும் மகளின் கணவர், ஆராய்ச்சியாளராக இருக்கிறார். மனைவியிடம் பாரா முகமாகவே இருக்கிறார். இன்னொரு பக்கம், இளம் வயது  முதிரா காதலில் தோற்றுப் போன மகன், வளரிளம் பருவத்திற்கேயுரிய மனச்சிக்கலோடு குடும்பத்திடம் இருந்து விலகியே இருக்கிறான். பள்ளிக்கும் சரியாக செல்வதில்லை.  இந்த இரு விஷயங்களும் மூத்த மகளை மன உளைச்சல் கொள்ள வைக்கின்றன. இவர்களுடைய மகன் பள்ளிக்கு சரியாக வராத காரணத்தால் நிர்வாகம் இவர்களை அழைத்து 'தனிப்பட்ட பிரச்சினைகள் உங்களிடம் இருக்கிறதா?" என்று விசாரிக்கும் போது கணவன் ஆங்கிலத்தில் மழுப்ப, அந்த மொழி புரியாத மனைவி தன் அதிரடி செயலால் தன் மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தும் காட்சி ஒரு பக்கம் சிரிக்கவும் இன்னொரு பக்கம் சிந்திக்கவும் வைக்கிறது.

இரண்டாவது மகளின் பிரச்சினை வேறு. சமையல் கலையில் திறமையுள்ள அவள் சொந்தமாக உணவகம் அமைக்க தொடர் முயற்சி எடுக்கிறாள். ஆனால் சாத்தியமாவதில்லை. முன்னாள் வகுப்புத் தோழன் ஒருவனை தற்செயலாக சந்திக்கிறாள். விவாகரத்து ஆனவன் என்றாலும் அவன் பால் ஈர்க்கப்பட்டு திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுடைய ரெஸ்ட்டாரண்ட்டை நடத்தும் வாய்ப்பும் கிடைக்கிறதே என்பது அடுத்த காரணம்.

ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகும் முன்னாள் மனைவியின் மீது கணவன் காதலை இழக்காததைக் கண்டு மனம் நோகிறாள். இந்த மனவேதனையை ஒரு தனிமையான தருணத்தில் தன் தந்தையிடம் சொல்கிறாள். சொந்த மகளையே சமயங்களில் அடையாளம் தெரியாமல் நினைவுகளை இழந்து கொண்டிருக்கும் அவரால் இதைப் புரிந்து கொள்ள முடியுமா, என்ன? ஆனாலும் தன் உள்ளுணர்வால் அவர் பதில் அளிக்கிறார். 'எந்தவொரு பிரச்சினை வந்தாலும் 'ப்பூ' என்று ஊதிப்பார்.. போய் விடும்" என்பது போல. சிறிய உபதேசம் என்றாலும் அவளுக்கு இது மிகப் பெரிய ஆறுதலை அளிக்கிறது. படத்தின் சிறந்த காட்சிகளுள் ஒன்று இது.

**
Kanji என்பது சீன சித்திர பாணியைச் சார்ந்தது. ஜப்பானியர்கள் தங்களின் எழுத்துகளில் கலந்து பயன்படுத்துவது மரபாக இருக்கிறது. ஆனால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஜப்பானியர்களுக்கு இதைக் கண்டுபிடிப்பது ஒரு சவால்தான். கிழவர் இந்த எழுத்து முறையை அடையாளம் காண்பதில் விற்பன்னராக இருக்கிறார். சமகால நினைவுகளை இழந்து கொண்டிருந்தாலும் அவருடைய ஆதாரமான திறமைகள் இன்னமும் ஞாபகம் இருக்கின்றன. தாத்தாவையும் பேரனையும் இணைக்கும் ஒரு புள்ளியாக இது இருக்கிறது. இந்த விஷயத்தில் தாத்தா கொண்டிருக்கும் அபாரமான ஞானத்தை பிரமிக்கும் பேரன் அவரை 'Kanji Master' என்றே அன்புடன் அழைக்கிறான். தன் இளம் பருவத்து காதலியின் பெயரை அந்த சித்திர வடிவில் எழுதித்தரச்சொல்லி அதைப் பத்திரமாக பாதுகாக்கிறான்.

அந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பிரச்சினைகள் என்றாலும் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் புள்ளியாக கிழவர் இருக்கிறார். ஒரு சராசரியான ஆணைப் போலவேதான் தன் மனைவியை கிழவர் கையாண்டிருக்கிறார். அன்பை எப்போதும் வெளிப்படையாக செலுத்தியதில்லை. என்றாலும் அவரது அந்திமக் காலத்தில் துளி கூட அன்பு குறையாமல் பார்த்துக் கொள்வதில் அவர் மனைவி நெகிழ வைக்கிறார். ஒரு குறிப்பிட்ட சூழலில் இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, தன்னுடைய உடல் உபாதையையும் மீறி கிழவரைத் தேடிச் சென்று பார்ப்பது நெகிழ்ச்சியான காட்சி.

ஆண் பிள்ளைகளை விடவும் பெண் பிள்ளைகளே தங்களின் பெற்றோர்களை அவர்களின் கடைசிக்காலத்தில் சிரத்தையுடன் பார்த்துக் கொள்வார்கள் என்கிற நடைமுறை சார்ந்த நம்பிக்கையை இத்திரைப்படம் மெய்ப்பிக்கிறது. தங்களின் சொந்தப் பிரச்சினைகளை மறந்து கிழவருக்கு உதவி செய்ய அவர்கள் ஒன்றுகூடுவது இந்தத் திரைப்படத்தில் அடிக்கடி நிகழ்கிறது. சுயநினைவை இழந்து கிழவர் படுத்திருக்கும் காட்சியில் அவரது பிறந்த நாளை வழக்கமான உற்சாகத்தோடு அவர்கள் கொண்டாடுவது அற்புதமான காட்சி.

பொழுதுபோக்கு பூங்காவிற்கு கிழவர் ஏன் மூன்று குடைகளுடன் வந்தார் என்கிற கேள்விக்கான பதிலை இப்போது பார்த்து விடுவோம்.

அந்தக் குடும்பத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த சிறு சம்பவம் அது. தாயும், இரண்டு மகள்களும் அந்தப் பூங்காவிற்கு வந்திருக்கிறார்கள். வானம் இருட்டி மழை வருவது போல் இருக்கிறது. தன் இளைய மகள், காலையிலேயே ஜலதோஷத்தால் மூக்கை உறிஞ்சுவதை Shohei கவனித்திருக்கிறார். எனவே குடைகளை எடுத்துக் கொண்டு அவர்களை அழைத்துப் போக வந்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு அதே பழைய நினைவில் இப்போதும் கிழவர் மூன்று குடைகளுடன் பொழுது போக்கு பூங்காவிற்கு வந்திருப்பதை, அவரைக் காணாமல் பதற்றத்துடன் தேடி வரும் குடும்பத்தினர் அறிந்து நெகிழ்ந்து போகிறார்கள். படத்தின் உன்னதமான காட்சியிது. எப்போதும் இறுக்கமான முகத்துடன் இருக்கும் கிழவர் புன்னகைப்பதை இந்தக் காட்சியில்தான் பார்க்கிறோம்.

**
மறதி நோயால் அவதிப்படும் கிழவராக Tsutomu Yamazaki மிக அருமையாக நடித்திருக்கிறார். முதியவர்களுக்கே உரிய சிடுசிடுப்பும் கனிவுமான உடல்மொழி படம் முழுவதும் இவரிடம் தங்கியிருக்கிறது. இவரின் குடும்ப உறுப்பினர்களாக நடித்திருந்தவர்களும் தங்களின் உன்னதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இது ஒரு திரைப்படம் என்பதே மறந்து போய், இவர்கள் உண்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்' என்றால் கூட நாம் நம்பக்கூடிய அளவிற்கு அத்தனை கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இயக்குநர் Ryôta Nakano-ன் அசாதாரண திறமை இதற்குக் காரணமாக இருந்திருக்கும்.

படத்தின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. வயதானவர் தொடர்பான திரைப்படம் என்பதால் காட்சிகள் மிக மெதுவாக நகர்கின்றன. சில வெளிப்புறக் காட்சிகளின் அழகியல் உறைந்த சித்திரங்களைப் போல அருமையாக இருக்கின்றன. மிக அவசியமான காட்சிகளில் அற்புதமாக ஒலிக்கும் மெலிதான பியானோ பின்னணி ஒலி படத்தின் காண்பனுபவத்தை இன்னமும் சிறப்பாக்குகிறது.

Dementia எனப்படும் மறதிநோயை இன்னொரு வகையில் 'A long Goodbye' என்கிறார்கள். இந்த நோயுள்ளவர்கள் மிக நிதானமாகவும் நீளமாகவும் கையசைத்து நம்மிடமிருந்துது விடைபெற்றுக் கொள்கிறார்களாம். இந்தத் திரைப்படத்திற்கு இதை விடவும் பொருத்தமான தலைப்பு அமைந்து விட முடியாது. கிழவர் Shohei நம் மனங்களிலிருந்து அத்தனை சீக்கிரம் விடைபெற மாட்டார் என்பதே இந்தப் படைப்பின் அற்புதமான உருவாக்கத்திற்கு சான்றாக அமையும்.


(குமுதம் தீராநதி -  FEBRUARY 2020 இதழில் பிரசுரமானது)
 

suresh kannan

Saturday, February 01, 2020

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி




எழுத்தாளர் இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலை சமீபத்திய தற்செயல் தேர்வில் வாசித்து முடித்தேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வாசித்த நூல் இது. அப்போது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சமீபத்திய வாசிப்பில் அத்தனை உன்னதமாகத் தெரியாவிட்டாலும் தமிழில் எழுதப்பட்ட ஒரு குறிப்பிடத்தகுந்த வெகுசன நாவல் என்றே சொல்வேன்.

ஒரு காலக்கட்டத்தின்  பின்னணி இதில் உள்ளது. அதே சமயத்தில் எப்போதும் பொருந்திப் பார்க்க முடிகிற நிரந்தரத்தன்மையையும் கொண்டுள்ளது. பாலகுமாரன், ஆதவன் போன்றோரின் வாசனை ஆங்காங்கே வருகிறது.

இந்துமதியின் படைப்புகளில் சிலதை பதின்மங்களில் நான் வாசித்திருக்கக்கூடும். ஆனால் அவை எதுவுமே இப்போது நினைவில் இல்லை. மாறாக இந்த நாவல் மட்டும் நினைவில் மங்கலாகவும் அதே சமயத்தில் இதன் சில விவரணைகள் அழுத்தமாகவும் மனதில் பதிந்துள்ளது. குறிப்பாக நாவலில் விவரிக்கப்படும் ஓரிடம் எப்போதுமே நினைவில் வந்து கொண்டிருக்கும். இந்த நாவலின் ஒரு புள்ளி என்னுள் உறைந்து போன இடம் அது எனலாம்.

மேகங்கள் நகரும் போது நமக்குத் தெரியும் விநோதமான உருவங்களைப் போல,  சுண்ணாம்புச் சுவரில் காரை உதிரும் அது போன்ற உருவங்களை ஏற்படுத்தியிருப்பதை நடைமுறையில் நாம் பார்த்திருப்போம்.  இந்த நாவலிலும் அப்படியொரு சித்தரிப்பு.

சமையல் அறைச் சுவற்றில் இருக்கும் அப்படியொரு உருவம், நடனமாடும் ஒரு பெண்மணியைப் போலவே விஸ்வம் என்கிற கதாபாத்திரத்திற்குத் தோன்றும். ‘போடா கிறுக்குப்பயலே’ என்பது போல அவனுடைய தாயார், இவனின் கற்பனையை சிரிப்புடன் புறந்தள்ளி விடுவார்.

ஆனால் பிறகு இவர்களின் குடும்பத்தில் வந்து இணைகிற விஸ்வத்தின் அண்ணி (பிராமண வழக்கில் மன்னி), இதே கற்பனையை விஸ்வத்திடம் பகிரும் போது அதிலுள்ள ஒற்றுமையைக் கண்டு அவன் திகைத்துப் போய் விடுவான். இருவரின் ரசனையும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளதை மிக சுவாரசியமாக சுட்டிக்காட்டும் இடம் அது.

இப்போதைய மீள் வாசிப்பில் இந்த இடம் எப்போது வரும் என்று காத்திருந்து அது வந்தவுடன் புன்னகைத்துக் கொண்டேன்.

**

இந்த நாவல் எதைப் பற்றியது?

ஒருவனின் இளம் வயது என்பது லட்சியங்களும் கனவுகளும் நிரம்பி பெருகி வளரும் காலக்கட்டம். அந்தக் கனவுகளை நோக்கி பயணப்பட்டு விட முடியும் என்கிற நம்பிக்கை நிறைந்திருக்கிற வயது. ஆனால் கூடவே சந்தேகமும் நிராசையும் இணைந்திருக்கும் பருவம்.

அந்தக் கனவுகளை நோக்கி பயணப்பட விடாமல் யதார்த்தம் என்பது அவனை வேறெங்கோ திசை திருப்பி அலைக்கழிக்கும். வேறு வழியின்றி ஒரு கட்டத்தில் அந்த நிதர்சனத்தை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இதுதான் இந்த நாவலின் மையம். இதை எந்தவொரு வளரிளம் இளைஞனின் அனுபவத்துடனும் பொருத்திப் பார்க்கலாம். அதனால்தான் காலத்தின் நிரந்தரத்தன்மை இதில் இருக்கிறது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

பரசு என்கிற இளைஞன் மேலே படிக்க விரும்பி, ஆனால் குடும்பத்தின் சூழல் காரணமாகவும் தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவும் அந்தக் கனவை கைவிட்டு பணியில் சேர்கிறான்.

அவனுடைய தம்பி விஸ்வம். இவன்தான் இந்தப் புனைவின் நாயகன் எனலாம். அண்ணனைப் போலவே தானும் ஓர் இயந்திரம் ஆகி விடுவோமோ என்கிற பயமும், அப்படி ஆகி விடக்கூடாது என்கிற பிடிவாதமும் கொண்டிருக்கிறவன். ஆனால் சூழல் அவனைச் சுழற்றியடிக்கும் போது பரசுவின் தொடர்ச்சியாக அவனும் ஓர் இயந்திரமாகத்தான் ஆக வேண்டியிருக்கிறது.

விஸ்வத்தின் பாத்திரம் மிகக் கச்சிதமாகவும் சுவாரசியமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எண்பது, தொன்னூறுகளில் சிறுபத்திரிகை உலகில் இயங்கும் ஒரு நவீன இளைஞனின் சித்திரம் விஸ்வத்தினுடையது.

அன்றாட லெளகீக விஷயங்களின் மீது வெறுப்பும் எரிச்சலும் கொண்டிருக்கிறவன். இந்த மரபை மீறத் துடிக்கிறவன். இதிலிருந்து தப்பித்து விட முடியாதா என்கிற ஏக்கமும் நிராசையும் கொண்டிருக்கிறவன். பிலிம் சொசைட்டி, சார்த்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி என்கிற அறிவார்த்தமான தேடலைக் கொண்டிருப்பவன். சிறுபத்திரிகை நடத்த முயல்கிறவன். இயந்திரமாக மாறி விட்டிருக்கிற அண்ணன் பரசுவின் மீது வெறுப்பும் பரிதாபமும் ஒருசேர கொண்டிருக்கிறவன்.

வேண்டா வெறுப்பாக அவன் செல்லும் ஒரு நேர்காணலுக்காக ஓர் அலுவகத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிற போது அங்குள்ள இயற்கைச் சூழலை வியக்கிற விஸ்வத்தின் மனநிலையின் மூலம் அவனுடைய பாத்திரம், நாவலின் துவக்கத்திலேயே மிகச் சரியாக வாசகனுக்குள் கடத்தப்பட்டு விடுகிறது.

**

அண்ணி ருக்மணிக்கும் விஸ்வத்திற்கும் இடையில் ஏற்படும் நேசமும் ரசனை ஒற்றுமையும் மெல்ல திரண்டு எழுவதை இந்த நாவலின் சுவாரசியமான அம்சங்களுள் ஒன்றாகச் சொல்லலாம்.

வழமைகளினால் இருண்டு கிடக்கும் அந்த வீட்டினுள் ஓர் அகல் வெளிச்சம் போல நுழைகிறாள் ருக்மணி. அவளின் செய்கை ஒவ்வொன்றிலும் அவளுடைய ரசனையும் நேர்த்தியும் வெளிப்படுகிறது. ‘இத்தனை அழகு கொண்டவள். தனக்கு மனைவியா?” என்று துவக்கத்திலிருந்தே பிரமிக்கிற பரசு, அந்தப் பேரழகை நெருங்க முடியாமல் தாழ்வுணர்ச்சியுடன் விலகியே நிற்கிறான். எந்நேரமும் சிரித்துக் கொண்டே வளைய வருகிற ருக்மணியைப் பார்த்து விஸ்வத்திற்கு ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணன் பரசுவின் மீது கோபமாகவும் வருகிறது.

தன் துணிகளை அண்ணி துவைக்கும் போது சங்கடத்துடன் ஆட்சேபிக்கும் விஸ்வம், அவளுள் ஒளிந்திருக்கிற இலக்கிய வாசனையை அறியும் சமயத்தில் அவளுடன் ஒன்றிப் போகிறான். அவர்களுக்குள் ஒரு நாகரிகமான நட்பு உருவாவதற்கு இலக்கிய ரசனையும், அது தொடர்பான உரையாடலும் காரணமாக இருக்கின்றன.

விஸ்வத்தின் தந்தை பாத்திரமும் சரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக தன் மகன்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறான சூழலில் தள்ளிக் கொண்டிருக்கிறோமே என்கிற உள்ளார்ந்த வேதனையும் ஆனால் அதனை தவிர்க்க முடியாத கட்டாயத்திலும் அவர் தத்தளிக்கிறார். தந்தையின் கையாலாகாததன்மை குறித்து விஸ்வத்திற்கு அவ்வப்போது எரிச்சல் வந்தாலும் அவருடைய நோக்கில் நின்று பார்க்கும் போது அவனுக்கு நிதர்சனம் புரிகிறது. எரிச்சல் பரிதாபமாகவும் அன்பாகவும் மாறுகிறது.

**

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

இதில் இன்னொரு தற்செயல் ஒற்றுமையும் உள்ளது. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார்.

நாவலை வாசித்து முடித்தவுடன் எப்போதோ பார்த்த தொடரின் சில காட்சிகளை பார்க்க முடியுமா என்று ஆசைப்பட்டேன். ஆனால் இணையத்தில் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. (யாராவது கண்டெடுத்தால் சொல்லுங்கள்). 

இந்துமதி

இந்த நாவலில் மிக முக்கியமானதொரு அம்சத்தைக் கண்டேன்.

அதாவது பொதுவாக பெண் எழுத்தாளர்கள் என்றால் மாமியார் – மருமகள் பிரச்சினை, ஆணாதிக்க கணவனின் பிடியில் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கும் ‘அபலை’ மனைவியின் பாத்திரம் என்று சமையல் அறையில் மூக்கைச் சிந்திக் கொண்டே எழுதியிருப்பார்கள் அல்லது இவற்றிலிருந்து மீறியெழுந்து ‘ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே’ என்று ஆவேசமான பெண்ணியக் குரலில், ஆண் குலத்தையே எரித்துச் சாம்பலாக்குகிற மிகையுடன் பொங்கியெழுந்து புரட்சி செய்வார்கள்.

ஆனால், இந்த நாவல் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தாலும் “ஆண் வாசனை’ மிகுந்த படைப்பாக இருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். எந்த இடத்திலுமே விஸ்வத்தின் பாத்திரம் தடம் மாறவில்லை. ஓர் ஆணின் மனதில் கூடு பாய்ந்த அதிசயத்தை இந்துமதி நிகழ்த்தியிருக்கிறார் எனலாம்.

விஸ்வத்தின் காதலி ஜமுனா ஒரு சராசரிப் பெண். ஆனால் தன்னை ‘இன்டலெக்சுவலாக’ உணரும் விஸ்வத்தால் அவளுடைய சராசரித்தனத்தை ஏற்க முடிவதில்லை. எரிச்சலுடன் அவ்வப்போது விலகி விடுகிறான். ஆனால் இவனுடைய அண்ணி ருக்மணியால் அறிவார்ந்த சூழலிலும் சரி, சராசரிகளின் உலகிலும் சரி, இரண்டிலுமே சகஜமாகப் புழங்க முடிகிறது. அவளுடைய இந்தக் குணாதிசயம் விஸ்வத்தின் அக உலகில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவதோடு இந்த நாவல் நிறைவுறுகிறது.

இந்துமதியை கணிசமாக படித்தவர்கள், அவர் எழுதியதில் இந்த நாவல் மட்டுமே குறிப்பிடத்தக்க படைப்பு என்கிறார்கள். கனவுலகில் மிதந்து திரியும் விஸ்வம், அங்கிருந்து சரிந்து யதார்த்தத்தின் படிகளில் நடந்து செல்லும் வீழ்ச்சியைத்தான் தலைப்பு குறிக்கிறது.

நிச்சயம் ஒருமுறை வாசிக்கத்தகுந்த நாவல்.




suresh kannan