Monday, February 15, 2021

Sun Children (2020) - சூரியனின் புதல்வர்கள் - மஜித் மஜிதி





இரானிய திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத பெயர்களில் ஒன்று மஜித் மஜிதி. ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’, ‘தி கலர் ஆஃப் பாரடைஸ்’ போன்ற அற்புதமான சினிமாக்களை உருவாக்கியவர். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், Sun Children (Khoršid).

அகாதமி விருதின், சர்வதேச திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் இரானிய நாட்டின் சார்பில் தேர்வாகியிருக்கும் இந்தத் திரைப்படம், வெனிஸ் திரைப்பட விழாவிலும் நாமினேட் ஆகியுள்ளது.

*

சிறார்களின் மீதான உழைப்புச் சுரண்டல், அவர்களை குற்றவாளிகளாக மாற்றும் சமூகம் போன்ற அடிப்படையான பிரச்சினைதான் இந்தத் திரைப்படத்தின் மையம். குற்றம் நிகழ்ந்த பிறகு அதை ஆராயவும் தண்டனை கொடுக்கவும் காவல், நீதி, சிறை என்று நிறைய நிறுவனங்கள் உள்ளன. ஒருவகையில் குற்றங்கள் உற்பத்தியாவதற்கும் பெருகி வளர்வதற்கும் கூட இவைகளே மறைமுகக் காரணிகளாக உள்ளன.

ஆனால் குற்றங்கள் நிகழாதவாறு முதலிலேயே தடுப்பது, அவற்றின் ஊற்றுக் கண்களை கண்டுபிடிப்பது, அதற்கான சமூகவியல் நோக்கு ஆய்வுகளை நிகழ்த்துவது, அவற்றை நேர்மையாக நடைமுறைப்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் மிகக் குறைவாகவே உள்ளன.

குடும்ப வன்முறை, வறுமை, போர், அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் குடும்பங்களில் இருந்து துண்டிக்கப்படும் சிறார்கள், மிக எளிதில் உதிரிக்குற்றவாளிகளாக மாறுகிறார்கள். குற்றவாளிகளின் சமூகம் மிகச் சுலபமாக அவர்களை கையகப்படுத்திக் கொள்கிறது. இந்தப் போக்கிலிருந்து விலக, கல்வி என்னும் வெளிச்சத்தை அவர்கள் ஏந்தினால்தான் விடிவுகாலம் என்கிற செய்தியை உறுத்தாமல் சொல்கிறது மஜித் மஜிதியின் இந்தத் திரைப்படம்.


*

வெளிநாட்டு கார்களில் உள்ள டயரை சில சிறுவர்கள் திருட முயலும் காட்சியோடு படம் துவங்குகிறது. பாதுகாவலரிடம் பிடிபடாமல் அவர்களை இடித்துத் தள்ளி விட்டு சிறுவர்கள் பறந்தோடுகிறார்கள். இந்தக் கூட்டத்தின் தலைவனைப் போல செயல்படுகிறவன் அலி. அவனுடைய அம்மா மருத்துவமனையில் இருக்கிறாள்.

இந்தச் சிறார்களுக்கென்று சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. தந்தை இறந்து போயிருப்பார் அல்லது விட்டுச் சென்றிருப்பார் அல்லது கோபக்காரராக இருந்து அடித்து துவைத்து பணிக்குச் செல்ல கட்டாயப்படுத்துவார். ஆக பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் பணியிடங்களில் உழைப்புச் சுரண்டலை எதிர்கொள்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

அலியின் கூட்டத்தில் உள்ள ஒரு சிறுவனின் அக்காவான ஜஹ்ரா, ரயிலில் சில்லரைப் பொருட்களை விற்கிறாள். காவலர்களின் கண்களில் படாமல் தப்பிப்பதும் அவர்கள் வரும் போது சிதறியோடுவதுமான அவலமான வாழ்க்கை அவளுடையது. அலிக்கு ஜஹ்ரா மீது பிரியம் உள்ளது.

அலி தன்னை பைக்கில் துரத்தி வரும் ஒருவனிடமிருந்து தப்பித்து ஓடுகிறான். அவனோ இவனைப் பிடித்து குற்றங்களைச் செய்யும் ஒரு முதியவரிடம் ஒப்படைத்து விடுகிறான். அவருக்குச் சொந்தமான புறாவை அலி திருடி விடுவதுதான் காரணம். அந்த பேட்டை தாதா, பார்ப்பதற்கு ரிடையர்ட் ஆன ஸ்கூல் வாத்தியார் மாதிரி இருக்கிறார்.

அவர் இவனைக் கனிவுடன் பார்த்து ‘அந்தப் புறாவை நீயே வைத்துக் கொள். உன் அம்மா மருத்துவமனையில் இருந்து வந்தால் தங்க இடம் இருக்கிறதா.?. நான் ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்றெல்லாம் அன்பொழுக பேசுகிறார். அடி, உதையை எதிர்பார்த்து வந்த அலிக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இதற்கு கைம்மாறாக ஒரு பணியை அலிக்கு தருகிறார் அந்த முதியவர். அதுதான் இந்தத் திரைப்படம் பயணிக்கும் மையத்தின் பாதை.

“இடுகாட்டிற்கு கீழே ஒரு புதையல் இருக்கிறது. நாங்கள் அங்கு செல்ல முடியாது. ஆனால் நீ செல்லலாம். அதன் பக்கத்துக் கட்டிடடத்தில் உள்ள பள்ளியில் நீ மாணவனாகச் சேர்ந்து கொள். அதன் பாதாள அறையில் துவாரமிட்டு சென்றால் இடுகாடு வந்து விடும். புதையலை எளிதாக எடுத்து விடலாம். செய்வாயா?” என்று கேட்கும் முதியவர் செல்போன் ஒன்றையும் அவனுக்கு பரிசாக அளிக்கிறார்.

ஆதரவற்ற சிறார்கள் படிக்கும் அந்தப் பள்ளி நிதிப்பற்றாக்குறையால் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இடையில் வருவதால் அலியை அங்கு சேர்க்க மறுத்து விடுகிறார்கள். சண்டையிட்டு முட்டி மோதி பள்ளியில் சேரும் அலி, தன்னுடைய ரகசிய பணியை தினமும் மேற்கொள்கிறான்.

இதில் அவன் வெற்றி பெற்றானா, என்னவெல்லாம் நடந்தது என்பதை இயல்பான காட்சிகளுடன் விவரித்திருக்கிறார்கள்.

*

ஒரு ஆதாரமான நீதிக்கதை போல இதன் திரைக்கதை பயணித்தாலும் உபதேசத்தின் வாசனை எங்கும் வந்துவிடாமல் இயல்பான காட்சிகளால் உருவாக்கியுள்ளார் மஜித் மஜிதி. சிறார்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை, நிதிச்சுமையால் தள்ளாடும் பள்ளியை தாங்கி நிறுத்தப் போராடும் நேர்மையான ஆசிரியர்கள், இன்னொரு புறம் தன்னுடைய ரகசிய ‘ஆப்பரேஷனில்’ கொலைவெறியுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அலி என்று இதன் திரைக்கதை துளி கூட சுவாரசியம் குறையாமல் நகர்கிறது.

அலியாக Rouhollah Zamani அருமையாக நடித்திருக்கிறான். கண்களில் எப்போதும் பயம், எரிச்சல், தயக்கம் போன்ற உணர்வுகள் நிறைந்திருக்கும் முகபாவத்துடன் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை அற்புதமாக நிறைத்திருக்கிறான். வெனிஸ் திரைப்பட விழாவில் இவனது சிறப்பான நடிப்பிற்காக விருதும் கிடைத்திருக்கிறது.

பிரதான பாத்திரம் என்றல்ல, இவனுடைய கூட்டுக்களவாணிகளாக சுற்றும் சிறுவர்கள், களங்கமில்லாத முகத்துடன் இருக்கும் குண்டுப்பையன், அவனுடைய அக்கா ஜஹ்ரா, பள்ளியின் முதல்வர், குற்றப் பின்னணி இருந்தாலும் அவர்களை கரிசனத்தோடு அணுகும் ஆசிரியர் என்று ஒவ்வொரு சிறிய பாத்திரமும் அதற்கான  மெனக்கெடல்களோடு உபயோகிக்கப்பட்டுள்ளது.

“என் தம்பியிடம் தவறான வாக்குறுதிகளை சொல்லி திசை திருப்பி விடாதே. நாங்கள் போலீஸிடம் மாட்டிக் கொண்டால் திரும்பவும் அகதி முகாமிற்கே செல்ல வேண்டியதுதான்” என்று ஒரு காட்சியில் ஜஹ்ரா அழுகையும் ஆத்திரமுமாக அலியுடன் பேசும் வசனமானது மிகச் சிறப்பான காட்சிகளுள் ஒன்று. இரானிய திரைப்படங்களைப் போல குழந்தைகளை மிக இயல்பாக உபயோகப்படுத்துவது வேறெந்த பிரதேச சினிமாக்களிலும் அத்தனை இயல்பாக நிகழ்வதில்லை. ஜஹ்ரா பேசும் வசனத்தின் மூலம் ஆப்கன் அகதிகளின் பிரச்சினைகளும் ஊடாடிச் செல்கிறது.

ஜஹ்ராவிற்கு ஹேர்கிளிப் ஒன்றை பரிசளிக்கிறான் அலி. அவளும் அதை பிரியத்தோடு சூடிக் கொள்கிறாள். ஆரம்பக்காட்சியில் நிகழும் கவிதைத்தனமான இந்தக் காட்சியிக்கு முரணாக குரூரம் ஒன்று திரைக்கதையின் பின்னே நிகழ்கிறது.

சக மாணவர்களை நெற்றியால் முட்டி தாக்கி விடுகிறான் அலி. ‘இதை நீ எப்படிச் செய்தாய்?” என்று அவனிடம் கேட்டு கற்றுக் கொள்ளும் ஆசிரியர், அதை பிறகு பயன்படுத்தும் காட்சி அற்புதமானது. இவை தொடர்பான காட்சிகளில் நேரடி வன்முறையின் உக்கிரம் பதிவாகாதவாறு மிக கவனமாக இருந்துள்ளார் மஜித் மஜிதி. இப்படி திரைக்கதையானது சில நுணுக்கமான தொடர்புக்காட்சிகளால் வசீகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

*

மஜித் மஜிதி இந்தத் திரைப்படத்தை சிறப்பாக இயக்கியிருந்தாலும் இரானிய திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமான அற்புதமான எளிமையும், இயல்பும், அழகியலும், நம்பகத்தன்மையும் பொதுவாக இருக்குமல்லவா? அது இந்தத் திரைப்படத்தில் கணிசமாக இல்லாதது போன்ற உணர்வை அடைந்தேன். மஜித்தின் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தையே எடுத்துக் கொள்வோம். வாழ்க்கைக்கு நெருக்கமான எத்தனை இயல்பான காட்சிகளால் அது நிறைந்திருந்தது?

மஜித் மஜிதி பிரபலமாகிய விஷயம் என்பது ஒருவகையில் ஒரு விபத்தாகவே அவரது படங்களில் நிகழ்கிறதோ என்று தோன்றுகிறது. அவரது முந்தைய திரைப்படமான Beyond the Clouds (2017), இந்தியப் பின்னணியில் நிகழும் திரைப்படம் என்றாலும் Slumdog Millionaire போன்று இந்திய ஏழ்மையைச் சுரண்டும் திரைப்படங்களைப் போல சாதாரணமாக இருந்தது.

Sun Children படத்திலும் ஏரியல் வ்யூ உள்ளிட்டு ஒளிப்பதிவு பல இடங்களில் அற்புதமாக அமைந்திருந்தாலும் அது இரானிய திரைப்படங்களின் docudrama எளிமைக்கும் பாணிக்கும் விரோதமாக அமைந்து நெருடலை ஏற்படுத்தியது. போலவே சிறுவன் சுரங்கப்பாதை அமைக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் நம்பகத்தன்மையில்லை.

பள்ளியின் பக்கத்தில் புதையலைத் தேடும் அலி, இறுதியில் கல்விதான் உணமையான புதையல் என்று வந்து அடையும் கடைசிக் காட்சி அற்புதமான குறியீட்டால் நிறைகிறது. இதைப் போலவே சக மாணவர்களும் அலியிடமிருந்து விலகி உண்மையான முன்னேற்றத்தை அடையாளம் கண்டுகொள்வதும் நல்ல மாற்றமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சமூகத்தில் குற்றவாளிகள் உருவாவதற்கு அந்தச் சமூகம்தான் பிரதான காரணம். முற்றிலுமாக கைவிடப்படுகிற ஒருவன் இருண்மையை நோக்கித்தான் நகர்வான். அவனை கைப்பிடித்து வெளிச்சத்திற்கு அழைத்து வருவது சமூகத்தின் கடமை. குறிப்பாக பெற்றோர்களைத் தாண்டி ஆசிரியர் சமூகத்திற்கு இது சார்ந்த பெரும் பொறுப்பும் கடமையும் உள்ளது. இதில் அப்படியொரு அற்புதமான ‘மாஸ்டர்’ வருகிறார்.

தமிழில் வந்த ‘மாஸ்டரை’ விடுங்கள். இந்தத் திரைப்படத்தில் ஓரமாக வந்து போகும் அவரைத்தான் உண்மையான ‘மாஸ்டர்’ என்று சொல்ல வேண்டும்.


suresh kannan