Monday, August 24, 2015

வடிவேலு: எலியாகிப் போன நகைச்சுவைப் புலி






'தமிழ்த் திரையில் உள்ளது போன்ற இந்தளவிற்கான நீண்ட நகைச்சுவை நடிகர் வாிசைப் பட்டியல் வேறெந்த மொழியிலும், பிரதேசத்திலும் இருப்பது போல் தெரியவில்லை' என்றார் இயக்குநர் மகேந்திரன், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில். 'தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்வு போதாது' என்றார் எழுத்தாளர் சுஜாதா. இரண்டிற்கும் இடையில்தான் உண்மை இருப்பது போல் தோன்றுகிறது.

ஒருவகையில் மகேந்திரனின் கூற்றை நிதானமாக யோசித்துப் பார்த்தால் அது உண்மையாக இருக்கும். என்.எஸ்.கிருஷ்ணன் துவங்கி சந்தானம், சூரி வரை எத்தனை விதம் விதமான நடிகர்கள், வகை வகையான நகைச்சுவைகள்.. "எழுத்தாளன்தான் இந்த நாட்டோட முதுகெலும்புன்னேன். தட்னான் பாரு" என்ற எழுத்தாளர் பைரவனை (தங்கவேலு) மறக்க முடியுமா? எம்.ஆர்.ராதா போல வில்லத்தனத்தையும் குணச்சித்திரத்தையும் கலந்து பிரத்யேக நகைச்சுவை செய்யக்கூடிய நடிகர் உலக அளவில் ஒப்பிட்டாலும் வேறு எவரேனும் இருக்கிறார்களா? சந்திரபாபு ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள்.. என்ன ஒரு ஆளுமை அவர்...

'சபாஷ் மீனா' என்ற படம் என்று நினைவு. ரிக்ஷாக்காரராக, சிவாஜியின் கல்லூரி நண்பராக என்று இரண்டு வேடங்கள் சந்திரபாபுவிற்கு. இதில் ரிக்ஷாக்காரர் தன் மனைவியை விட்டு விட்டு காணாமற் போய் விட அந்த இடத்தில் வந்து மாட்டிக் கொள்வார், இன்னொரு சந்திரபாபு. அவருடைய மனைவி அவரை ஒழுங்காக வந்து குடித்தனம் நடத்தச் சொல்லி ஊர்க்காரரர்களிடம் ஒப்பாரி வைக்க, அவர்கள் இவரை அடித்து மிரட்டி 'புள்ளைங்களை கூட்டிக் கொண்டு போய் ஒழுங்கா இரு" என்று உபதேசம் செய்வார்கள். இவரும் வாங்கும் அடி தாங்காமல் பதட்டத்தோடு அருகிலிருக்கும் யாரோ இரண்டு குழந்தைகளை வாரி அணைத்துக் கொள்ள, இன்னொருவர்  "யோவ்.. அது என் பிள்ளைங்கய்யா" என அலறுவார். நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் காட்சிக் கோா்வையது.

நாகேஷின் திருவிளையாடல் தருமியையும் தில்லானா மோகனாம்பாள் வைத்தியையும் பற்றி இன்று பூராவும் பேசிக் கொண்டேயிருக்கலாம். அப்படியொரு ஆளுமை நாகேஷ். இதில் சில நடிகர்களுக்கென்றே பிரத்யேகமாக நல்ல வழக்கங்கள் உண்டு. தங்கவேலு தாம் நடிக்கும் படங்களில் தப்பித்தவறி கூட யாரையும் அமங்கலமாய் திட்டி நடிக்க மாட்டாராம். "நாசமா போ" என்பது மாதிரி. அப்படி பேச வற்புறுத்தினால் நடிக்க மறுத்து விடுவாராம். ஒருவர் உதிர்க்கும் சொற்களுக்கு வலிமையுண்டு என்று நம்புகிறவர் அவர். எஸ்.எஸ். சந்திரன், மிகுந்த செயலாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தாம் நடிக்கும் காட்சிகளில் குறைந்தது பத்து பதினைந்து நகைச்சுவை நடிகர்களாவது இருப்பது போல்தான் அதன் பகுதியை எழுதச் சொல்வாராம். அனைத்து உதிரி நடிகர்களுக்குமே தொடர்ந்து சிறு சிறு வாய்ப்பாவது கிடைக்கட்டும் என்கிற நல்லெண்ணம்.

***

இந்த வரிசையில் மிக முக்கியமான நடிகர் என்று வடிவேலுவைச் சொல்ல வேண்டும். நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இவர் நடித்த திரைப்படங்களை வசனங்களை, காட்சிகளை நாம் வேடிக்கையாக உபயோகிக்கும், உதாரணம் காட்டும் அளவிற்கு வேறெந்த நகைச்சுவை நடிகரின் வசனங்களையாவது உபயோகித்திருக்கிறோமா என்றால் இல்லையென்றே கூற வேண்டியிருக்கும். அந்தளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரின் சில பிரத்யேக வசனங்களை அவருடைய பாணியிலேயே தினம் தினம் தன்னிச்சையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். இடையில் சில காலம் வடிவேலு நடிப்பதில் இடைவெளி இருந்த போதில் காமெடி சானல்களால் இவரைத் தவிர்த்து இயங்க முடியவில்லை. பழைய திரைப்படங்களின் காட்சிகளையே மறுபடி மறுபடி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவரின் பாதிப்பின் செல்வாக்கு வலுவாக உள்ளது.

எனக்கு கூட ஒன்று தோன்றும். சில நடிகர்கள் அல்லது நுட்பக் கலைஞர்கள் ஒரு சில படங்களில் நடித்து காணாமற் போய் விடுவார்கள், மக்களின் நினைவிலிருந்து உடனே மறக்கப்பட்டும் போவார்கள். சில வருடங்கள் கழித்து சாதாரண பேச்சில் கூட யாரும் அவர்களை நினைவு கூர மாட்டார்கள். இந்த துயரத்தை கடக்க ஒரு சுலபமான வழியுள்ளதாகத் தோன்றுகிறது. அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் குறைந்தபட்சம் பாடல்களும் நகைச்சுவைக் காட்சிகளும் மட்டுமாவது சிறப்பாக அமையும்படி பார்த்துக் கொண்டால் கூட போதும். எனில் இம்மாதிரியான காட்சிகள் தொலைக்காட்சிகளில் மறுமறுபடியும் நினைவுகூரப்பட்டு மக்களின் நினைவுகளில் இருந்து அவர்கள் அழியாமலிருப்பதற்கான வழிகளுள் ஒன்று என்று தோன்றுகிறது. தங்கவேலுவின் பழைய திரைப்படத்தின் காமெடி காட்சிகளை சமகால இளைஞர்கள் கூட ரசித்துப் பார்ப்பதை கவனியுங்கள். பாடல்கள் தவிர்த்து ராமராஜனை இன்று யாராவது நினைவு கூர்வார்களா என்ன?

***

இந்த வரிசையில் வடிவேலுவின் இடம் சாஸ்வதமாகி விட்டது என்றுதான் தோன்றுகிறது. அவர் நடித்த படங்களை நினைவு கூராமல் இன்று தமிழ் சினிமாவின் நகைச்சுவையைப் பற்றி பேசவே முடியாது என்கிற நிலைக்கு உயர்ந்து விட்டார்.  ஒரு காலக்கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடி நிலையான அதிக புகழ் பெற்றிருந்தது. அடிப்படையில் கவுண்டமணி மிக இயல்பான, திறமையான நடிகர். இரண்டு படப்பிடிப்புகளில் அவர் நடித்ததை பாாத்திருக்கிறேன். வசனங்களை உள்வாங்கி அதனை தம்முடைய பாணியில் திணறாமல் அநாயசமாக நடித்து விட்டுப் போவார். என்றாலும் இவரைக் கழித்து விட்டால் செந்தில் ஏறத்தாழ பூஜ்யம்தான்.  அதுதான் பிற்பாடு உண்மையானது.

இன்று கவுண்டமணி காணாமற் போய், மரபுகளையும் நடிக பிம்பங்களையும் பகடி செய்த சில செமி எம்.ஆர்.ராதா அம்சங்களுக்காக திருவுருவாகி விட்டார் என்றாலும் இவருடைய நகைச்சுவையில் அருவருப்பூட்டும் சில அம்சங்கள் உண்டு. எதிரில் இருப்பவரை எட்டி உதைப்பது, முகத்தில் துப்புவுது, வயது வித்தியாசமின்றி வசவு வார்த்தைகளை உதிர்ப்பது போன்றவை. இவருடன் நடித்தவர்களை இப்போது கேட்டால் கதை கதையாக சொல்லக்கூடும்.

அப்படியல்லாமல் வடிவேலுவின் நகைச்சுவையில் உள்ள பிரதான அம்சமே, தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வது. சுயபகடிதான் அவருடைய பெரும்பான்மையான நகைச்சுவையின் அடிப்படையே. இன்றுள்ள தோற்றத்திற்கு தொடர்பேயில்லாமல் 'என் ராசாவின் மனதிலே' திரைப்படத்தில் முதலில் தோன்றி பிறகு சில பல படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்தாலும் இவரது மேல்நோக்கிய பயணம் துல்லியமாக எங்கே துவங்கியது என்று பார்த்தால், அது 'வின்னர்' திரைப்படம். 'கைப்புள்ள'யாக தோன்றி எல்லோர் மனதிலும் நீங்காமல் நிறைந்து விட்டார். எல்லோர் மனதிலும் உள்ளே உறைந்திருக்கும் 'கைப்புள்ள தனத்தை' விதம் விதமாக சித்தரித்ததே இவர் நகைச்சுவையின் பெரும்பாலான பலம். இந்த பாணி நகைச்சுவையைத்தான் பெரும்பாலான திரைப்படங்களில் மாற்றி மாற்றி உருவாக்கினார் என்பதை காண முடியும். அன்றாட வாழ்வில் நாமே காணும், ஆனால் அதை நகைச்சுவை பிரக்ஞையோடு  உணர முடியாத பல சம்பவங்களை இவர் வாய் விட்டு சிரிக்கும் படியான நுட்பத்துடன் உருமாற்றியிருப்பதை காண முடியும்.

இப்படி துண்டு துண்டான நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த வடிவேலு, 2005-ல்  முழுநீளத் திரைப்படமாக நடித்த 'இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி' அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமானதொரு பரிணாம வளர்ச்சி. அவரின் ஏற்கெனவே நிறுவப்பட்ட ஆளுமைக்கு 'இம்சை அரசன்' என்கிற கோணங்கித்தனமான சித்திரம் மிக கச்சிதமாகப் பொருந்தியது. இதில் இயக்குநர் சிம்புதேவனின் பங்கும் கணிசமானது. ஏனெனில் 'இம்சை அரசன்' பாத்திரம் அவர் ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு தொடர்ச்சியாக கார்ட்டூன் போட்டுக் கொண்டிருந்த விஷயம். அந்தப் பாத்திரத்தின் அசைவுகள், நுணுக்கங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. எனவே அதை வடிவேலுவின் மீது பொருத்துவதற்கு சிரமமேதுமில்லை. மேலும் அது அவருக்கு உற்சாகமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். இத்தனை நாளாக கோடுகளில் மாத்திரம் உயிர் பெற்றுக் கொண்டிருந்த உருவம், ரத்தமும் சதையுமாக திரையில் சித்தரிப்பது என்பது ஒரு படைப்பாளிக்கு நல்ல அனுபவம். பார்வையாளர்களும் இதை வரவேற்று ஏற்று, கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

ஆனால் சிம்புதேவனால் இந்த முதல் வெற்றிக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த படங்கள் எதுவும் (இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் மட்டும் சற்று பரவாயில்லை) தரமுடியவில்லை என்பதை கவனிக்கலாம். ஏனெனில் ஆனால் அடுத்தடுத்த படங்களில் உருவாக்கிய முயற்சிகளின் கலவையும், உழைப்பும் சரியாகப் பொருந்தி வரவில்லை. முதல் படத்திற்கான அர்ப்பணிப்பையும் மெனக்கெடலையும் அடுத்தடுத்த திரைப்படங்களில் காணமுடியவில்லை. அவருடைய சமீபத்திய திரைப்படமான ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், 'ரன் லோலா ரன்'  என்கிற ஜெர்மனிய சினிமாவின் மோசமான மொழிபெயர்ப்பு.

 ***

வடிவேலுவின் புகழையும் மக்கள் அபிமானத்தையும் 'இம்சை அரசன்' திரைப்படம் இன்னமும் உச்சத்திற்கு எடுத்துச் சென்றது உண்மை. ஆனால் இந்த வெற்றியே அவரின் மனதில் உயர்வு மனப்பான்மையை உருவாக்கி தாம் செய்யும் எதையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ண வைத்திருக்கலாம்.  எனவே புலிகேசியின் வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு அதன் நகலைப் போன்று 2007-ல் உருவாக்கப்பட்ட (இயக்கம்: தம்பி ராமையா) 'இந்திரலோகத்தில் அழகப்பன்' தோல்வியைச் சந்தித்தது. என்றாலும் வடிவேலு அதிலிருந்து பாடம் கற்கவில்லை. மீண்டும் 2014-ல் இதே வகைமையில் உருவாக்கப்பட்ட 'தெனாலிராமன்' திரைப்படமும் தோல்வியே. இடையில் வழக்கம் போல் நகைச்சுவை நடிகராக அவர் நடித்த பகுதிகளை ஏற்றுக் கொண்ட மக்கள், சரியாக உருவாக்கப்படாத திரைக்கதையினால் அவரை ஒரு திரைப்படத்தின் நாயகராக ஏற்க மறுத்து விட்டனர் என்பதில் 'நகைச்சுவை நடிகர்களுக்கே'யுண்டான ஒரு செய்தி உள்ளது.

துண்டு துண்டாக நடித்து வெற்றியைப் பெற்றுக் கொண்டு வரும் ஒரு நடிகர் அதன் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக தம் முழுத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு திரைப்படத்தின் நாயகராக நடிக்க விரும்புவதில் தவறொன்றுமில்லை. ஆனால் அது அவரது பிரத்யேக நகைச்சுவை திறமையை வெளிப்படுத்துவதாகவும் மிகையாக அமையாமலும் இருக்க வேண்டும். சிறந்த உதாரணமாக நாகேஷ் நடித்த 'சர்வர் சுந்தரத்தை' குறிப்பிடலாம். மாறாக நட்சத்திர நடிகர்களின் பிம்பங்களை நகலெடுக்கத் துவங்கினால் அது பொருந்தாமல்தான் போகும். கவுண்டமணி கூட முன்பு இது போன்ற மனோபாவத்தினால்  நான்கைந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதும் அந்த திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்பதும் இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? கவுண்டமணியை பொதுவாக இன்று எவ்வாறாக மக்கள் நினைவு கூர்கின்றனர்? நகைச்சுவை நடிகராகத்தானே? நடிகர் விவேக்கும் பரிசோதனை முயற்சியாக அவரது பிம்பத்திற்கு முற்றிலும் எதிராக நடித்த 'நான் பாலா' வெற்றியடையாததையும் கவனிக்கலாம்.

ஒரு சக நடிகர் மீது ஏற்பட்ட தனிப்பட்ட பகைமை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாகவே வடிவேலு 2011-ல் நிகழ்ந்த தமிழக பொதுத் தேர்தலில்   எதிர்அணியில் தேவையில்லாமல் வம்படியாக குதித்து அரசியல் பிரச்சாரம் செய்தார்.. பிரச்சாரக் கூட்டங்களில் தன்னைக் காண்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்து குவிந்த மக்களைக் காண காண அவருக்கு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் மிகுந்தது. இன்றும் அதன் காணொளிகளைக் கண்டால் இதை உணர முடியும். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்ததால் பழிவாங்கல் நடவடிக்கை மற்றும் அதிகார பயம் காரணமாக அவர் திரையுலகில் தனிமைப்படுத்தப்பட்டார். என்றாலும் நாயகனாக நடித்து தன்னுடைய பிம்பத்தை மீட்டெடுத்து விட முடியும் என்பதற்காக அவரும் கூட மற்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வந்த சில வாய்ப்புகளைத் தவிர்த்து விட்டு ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வடிவேலுவின் விலகலால் ஏற்பட்ட இந்த வெற்றிடத்தை சந்தானம், சூரி, கஞ்சா கருப்பு போன்றவர்கள் சரியாக உபயோகித்துக் கொண்டனர் எனலாம்.

***

இந்த நிலையில் வெளியாகியிருக்கிறது, வடிவேலு நாயகராக நடித்த 'எலி' திரைப்படம். வடிவேலுவின் அதே தன்னம்பிக்கையை இத்திரைப்படம் குறித்த அவரது காணொளி பேட்டிகளிலும் பத்திரிகை நேர்காணல்களிலும் காண முடிகிறது. தெனாலிராமன் திரைப்படத்தை இயக்கிய அதே இயக்குநர். அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக இந்த வாயப்பை வழங்குகிறார் வடிவேலு. மீண்டும் எடுக்கப்பட்ட ஒரு அபத்தமான முடிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். 'எலி' திரைப்படத்தின் மோசமான உருவாக்கம் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. வடிவேலு என்கிற ஒற்றைப் பிம்பத்தை மட்டும் நம்பி அதன் மீது பலவீனமான, பழமை நெடியடிக்கும் சீட்டுக்கட்டு மாளிகையை கட்டியிருக்கிறார் இயக்குநர். சில காட்சிகளை கூட தாண்ட முடியாத பலவீனத்துடன் திரைப்படம் பொலபொலவென்று சரிந்து விழுகிறது.

உண்மையில் இத்திரைப்படத்திற்கு எதற்காக 1960-காலக் கட்டத்திய பின்னணி தேவையென்கிற காரணமே புரியவில்லை. பலவீனமான திரைக்கதையென்றாலும் கூட அது அப்போதைய காலக்கட்டத்தைக் கோரும் வலுவான அம்சம் எதையுமே படத்தில் கொண்டிருக்கவில்லை. "ஏதோ வித்தியாசமாக செய்ய முயலும்" இயக்குநரின் ஆர்வக் கோளாறு மட்டுமே தெரிகிறது. 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தின் வெற்றியைப் பார்த்து அதே மாதிரியான உருவாக்கத்துடன் வெளிவந்த போலி 'பிரீயட்' படங்கள் சூடு போட்டுக் கொண்டது நினைவுக்கு வருகிறது. அத்திரைப்படத்தின் காலக்கட்டத்தின் பின்னணி திரைக்கதையுடன் தர்க்கரீதியாக பொருந்தி வருவதை இந்த இயக்குநர்கள் மறந்து விடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் பெரும்பான்மையாக இருந்த 80-களில் வறுமையில் வாடிய இளைஞர்கள் சாதிய மற்றும் வன்முறை அரசியலின் பக்கம் எவ்வாறு எளிதாக ஈர்க்கப்பட்டார்கள் என்பதை பின்னணியாகக் கொண்டதினாலேயே சுப்பிரமணியபுரத்தின் திரைக்கதை அதற்கு இசைவாகப் பொருந்தி வெற்றி பெற்றது.  குறிப்பிட்ட பாணி திரைப்படம் அபாரமாக வெற்றி பெற்றால் உடனே அதைப் போன்ற சாயலுடைய திரைப்படங்கள் வெகுவாக வரும் வழக்கத்தைப் போலவே எவ்வித உள்ளடக்க பொருத்தமும் இல்லாமல் சுப்பிரமணியபுரத்தின் சாயல்கள் வந்து தோற்று ஓடின.

வடிவேலுவின் 'எலி' திரைப்படமும் இதைப் போன்று திரைக்கதை வலுவாகக் கோராத 60-களின் காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு செயற்கையாக இயங்குகிறது. கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் இது புரிந்திருக்கும் போல. இருக்கும் பட்ஜெட்டில் இயன்றதை உருவாக்கி அமைத்திருப்பதின் காரணமாக டிராமா செட் போல காட்சிகளின் பின்னணிகள் செயற்கைத் தோற்றத்தில் அமைந்திருக்கின்றன. அறுபதுகளில் நிகழ்ந்திருப்பதுதான் என்றாலும் சிகரெட் கடத்தல், அதற்குப் பின் இயங்கும் கும்பல் என்கிற இப்போதைக்கு சாதாரணமாக தோன்றும்  விஷயங்களையெல்லாம்  சமகால பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதையாவது இயக்குநர் யோசித்திருக்கலாம். வடிவேலுவும் தன்னுடைய அத்தனை வருட திறமையையும் பிரத்யேக கோணங்கித்தனங்களையும் கொட்ட முயன்றுதான் இருக்கிறார். ஆனால் திரைக்கதை வலுவாக அமையாததால் உளவு பார்ப்பதற்காக கொள்ளையர் கும்பலில் நுழையும் ஒரு சில்லறைத் திருடனின் கதையையொட்டிய பழைய 'பில்லா' திரைப்படத்தின் மோசமான நகலாக அமைந்து விட்டது.  புலிகேசி என்கிற கார்ட்டூன் கேரக்டரை முழு திரைப்படமாக கச்சிதமாக உருவாக்கியிருந்ததைப் போல மதன் கார்ட்டூனில் உருவான 'சிரிப்புத் திருடன் சிங்காரவேலு'  பாத்திர வடிவமைப்பில் இதன் திரைக்கதையை அமைத்திருந்தால் ஒருவேளை படம் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.

வடிவேலுவின் முன்னால் இன்று இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று, பழையபடி நகைச்சுவைப் பகுதிகளில் மட்டும் நடித்து மக்களின் அபிமானத்தில் தொடர்வது அல்லது வீம்பாக நாயகராக மட்டும்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பாராயின் தன்னுடைய ஆளுமைக்கேற்ற திரைக்கதையை கச்சிதமாக தயார் செய்த பிறகு அதை திரைப்படமாக மாற்றுவது பற்றி யோசிப்பது. காமெடி சானல்களில் ஒளிபரப்பாகும் அவரது பழைய நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் எத்தனை தூரம் அவரை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அந்த இழப்பை சோகத்துடன் நினைவுகூர முடிகிறது. ஒரு கலைஞன் கால மாற்றத்தின் காரணமாக மெல்ல மெல்ல மறைந்து போவதென்பது மாற்ற முடியாத விஷயம். ஆனால் அந்தப் பகுதியை நிறைவு செய்வதற்குள் அபத்தமான முடிவுகளினால் தானே அந்த மறைதலுக்கு காரணமாக இருப்பது புத்திசாலித்தனமற்ற விஷயம். ஓர் உன்னதக் கலைஞனாக வடிவேலு அவ்வாறு காணாமல் போய்விடக்கூடாது என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளும் எதிர்பார்ப்பும். 

அம்ருதா - ஆகஸ்டு 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: அம்ருதா)

suresh kannan

Thursday, August 13, 2015

எம்.எஸ்.வி: மெல்லிசை நாயகன்




ஒரு சராசரியான தனிநபரின் கலை சார்ந்த ரசனை என்பது அப்போதைய சமகால கலை ஆளுமைகளின் மூலமே உருவாகிறது. தன்னிச்சையான கண்டுபிடிப்புகள் அல்லது முறையான அறிமுகங்களின் மூலம் அந்த ரசனை தேங்கிப் போவதோ அல்லது மேலதிகமாக பல்கிப் பெருகுவதோ என்பது நிகழ்கிறது. இசை ரசனை என்பதும் அவ்வாறே. இசை என்றாலே பொதுவாக திரையிசையையே குறிக்கும் தமிழக சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல. பாபநாசம் சிவனின் தூய செவ்வியல் இசையை ரசித்த காலத்தைச் சேர்ந்தவர்கள் கே.வி.மகாதேவனின் கர்நாடக சங்கீகத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை விலகலான மனநிலையோடு கவனித்திருக்கலாம். மகாதேவனைக் கொண்டாடியவர்கள் பாரம்பரிய இசையை எளிமைப்படுத்தி மேற்கத்திய பின்னணியை அவற்றில் கலந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடியை முகச்சுளிப்புடன் அணுகியிருக்கலாம். இளையராஜாவின் வருகையின் போது அவர் அழுத்தமாக பயன்படுத்திய நாட்டார் இசை துவக்கத்தில் கிண்டலடிக்கப்பட்டது. பிறகு ஒரு காலக்கட்டம் வரை அதுவே தமிழ் சினிமாவின் இசை முகமாக ஆனது வரலாறு. நவீன இசையொலியை, பாணியை தமிழிற்கு கொண்டு வந்து அதற்காக பிறகு சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரஹ்மானின் மீதும் துவக்கத்தில் 'அவர் இசையமைப்பாளர் அல்ல, நுட்பத்தை திறம்பட கையாள்பவர், அவ்வளவே' என்பது போன்ற புகார்கள் அள்ளி வீசப்பட்டன.

விசுவாசமான ரசிக மனோபாவத்தினால் ஏற்படும் இந்த பரஸ்பர வெறுப்பும் விலகலும் தற்போது இணையத்தில் நிகழும் ராஜா x ரஹ்மான் விவாதம் வரை காலந்தோறும் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இப்போதைய முதிரா இளைஞர்களிடம் அவர்கள் விரும்பி ரசிக்கும் அனிருத்தின் இசையை குறைகூறி விடவே முடியாது. பொதுவாக கலை சார்ந்த ரசனையில் தமிழர்கள் கிணற்றுத் தவளைகளாக இருப்பதற்கு இந்த ஒரு அசட்டு மனோபாவமும் காரணம். தன்னுடைய சமகால இசைதான் சிறந்தது அதை உருவாக்குபவர்கள்தான் சிற்நத கலைஞர்கள் என்று அவரவர்களின் சிறிய கிணறுகளில் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டிருந்தால் இழப்பு அவர்களுக்கே. காலம் முன்னகர்ந்து கொண்டேயிருக்கும் போது ஏற்படும் ரசனை மாற்றத்தினால் அதற்கேற்ப புதிய பாணி இசைக்கலைக் கலைஞர்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். கிணற்றிலிருந்து வெளியே வந்து உலகமெங்கும் உருவாகும் பல்வேறு இசையை பாணியை மனச்சாய்வின்றி அடிப்படையான பயிற்சியோடு கவனிக்கும் போதுதான் இசை என்பது எத்தனை பெருங்கடலான விஷயம் என்பதை சிறிதாவது உணரக்கூடும். சிறந்த இசையானது மொழி, தேசம் போன்ற கற்பித எல்லைகளைத் தாண்டி ஒவ்வொரு நபரின் ஆன்மாவுடன் அந்தரங்கமாக உரையாடும் ஒரு மொழி. தமது நுண்ணுணர்வினால் அதை அணுக முயன்றால் அதிலுள்ள பல்வேறு உன்னதங்களை நாம் கண்டுகொள்ள முடியும். இசை கேட்கும் அனுபவம் என்பது மிக அந்தரங்கமானது. அந்த உணர்வை உரையாடியோ, விவாதித்தோ வெளிப்படுத்தி விடவே முடியாது. எனில் இசை என்ற பெயரில் உருவாக்கப்படும் ஒழுங்குப்படுத்தப்பட்ட சப்தங்கள் எல்லாமே சிறந்தவைதானா என்ன? காலம் கருணையற்று நிராகரிக்கும் போது உன்னதமான, அர்ப்பணிப்புடன் இயங்கிய கலைஞர்கள் மட்டும் வடிகட்டப்பட்டு எஞ்சி மேலதிகமாக பிரகாசிப்பார்கள். அப்படியொரு உன்னத கலைஞர்தான், மெல்லிசை மன்னர் என்று  கொண்டாடப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன்.

***

தமிழ் சினிமாவில் செயற்கையாகத் திணிக்கப்படும் பாடல்கள் தேவையா அல்லவா என்பது நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தனியான விஷயம் என்றாலும் சாஸ்திரிய இசைக் கலைஞர்களும் ரசிகர்களும் சினிமா இசையை  நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல அசூயையாக அணுகின காலம் ஒன்றுண்டு என்றாலும் தமிழ் திரையிசைக்கு என்று ஒரு செழுமையான மரபும் தொடர்ச்சியும் உண்டு.  தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்ற அந்நாளைய நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்த பாபநாசம் சிவன் முதற்கொண்டு ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன், சி.எஸ்.ஜெயராமன், எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு, டி.ஆர்.பாப்பா, டி.ஜி.லிங்கப்பா, கே.வி.மகாதேவன் என்று நீண்ட பட்டியலே உள்ளது. ஒரு திரைப்படத்தில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பாடல்களை சர்வசாதாரணமாகக் கொண்ட அந்தக் காலக்கட்டத்தில்  பொதுவாக பெரும்பாலும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களே உருவாக்கப்பட்டன. திரையிசைப்பாடல்களின் வருகைக்கு முன்பு செவ்வியல் இசையை பண்டிதர்கள் மட்டுமன்றி  பாமரர்களும் ரசிக்கும் காலக்கட்டம் ஒன்றிருந்தது. நிலச்சுவான்தாரர்களின் ஏற்பாட்டில் கர்நாடக இசைக்கலைஞர்கள் ஊர் ஊராக சென்று கச்சேரி செய்யும் போது குடியானவர்களும் மிக விருப்பத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்தாவது அந்த இசையை ரசித்துக் கேட்டனர். ராகங்களை துல்லியமாக அடையாளம் கண்டுபிடிக்குமளவிற்கு ரசனையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் இந்தக் கண்ணி எப்போது, எதனால் அறுபட்டது என்று தெரியவில்லை.

செவ்வியல் இசையை பெரும்பாலும் அடிப்படையாக் கொண்டு ஒலித்த அதுவரையான திரையிசையில் ஐம்பதுகளின் காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழ்ந்தது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்கிற இரட்டை இசையமைப்பாளர்கள் கூட்டணி. கர்நாடக இசையை எளிமைப்படுத்தி மேற்கத்திய பாணியையும் இசைக் கருவிகளையும் இணைத்து சிறப்பான கலவையுடன் உருவாக்கிய பாடல்களை மக்கள் கொண்டாட்டத்துடன் ஏற்றுக் கொண்டனர். இசைக்கும் பாமரர்களுக்குமான அந்தக் கண்ணியை மீண்டும் இணைத்த பெருமை இந்த ஜோடியையே சாரும். இந்தப் பாடல்கள் எந்த அளவிற்கு எளிமையான தோற்றத்துடன் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது என்றால் இன்றும் கூட தினமும் புறநகர் ரயிலில் வந்து செல்லும் தொழிலாள தோழர்கள் இணைந்து குழுவாகவும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூட்டத்திடம் இரந்து பிழைப்பதற்காகவும் பாடுவது பெரும்பாலும் இந்தப் பாடல்களாகத்தான் இருக்கும். மேஜையில் போடும் ஒற்றைத் தாளத்தைக் கொண்டே இந்தப் பாடல்களின் சுவாரசியத்தைக் கொண்டு வந்து முடியும் என்பதுதான் இவைகளின் சிறப்பே. ஆனால் மேற்பார்வைக்கு எளிமையாகத் தோன்றும் இவைகளை அதே நுணுக்கங்களுடனும் சங்கதிகளுடன் பயிற்சியின்றி பாடுவது அத்தனை எளிமையானதல்ல என்பதுதான் இந்த இசையமைப்பின் விசேஷமே.

இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமனின் மறைவிற்குப் பின்னர் அவரிடம் ஹார்மோனியம் வாசிப்பவராக பணியாற்றிக் கொண்டிருந்த விஸ்வநாதனும் வயலின் வாசித்துக் கொண்டிருந்த ராமமூர்த்தியும் இணைந்து என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய பணம் (1952) என்கிற திரைப்படம் முதல் ஆயிரத்தில் ஒருவன் (1965) வரை நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்தனர். இது போன்று இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து இயங்கும் மரபானது இந்தி சினிமாவில் அதிகமாக உள்ளது. சங்கர்-ஜெய்கிஷண், லக்ஷ்மிகாந்த்-பியாரிலால், கல்யாண்ஜி-ஆனந்ஜி, நதீம்-ஸ்ரவண், ஆனந்த்-மிலிந்த், ஜதின்-லலித், நிகில்-வினய் போன்ற பல ஜோடிகளை சொல்ல முடியும். இங்கு சங்கர்-கணேஷ், மனோஜ்-கியான் என்று குறைவான இரட்டையர்களே உள்ளனர். இந்த வரிசையில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயங்கிய காலக்கட்டத்தை தமிழ் சினிமா இசையின் மறுமலர்ச்சி காலம் என்றே சொல்ல முடியும். தமிழ் சினிமாவிற்கான மெல்லிசை என்கிற பாதையை உருவாக்கிக் கொடுத்த முன்னோடிகள் இவர்கள்தான். எனவேதான் பிற்கால இசையமைப்பாளர்களான இளையராஜாவும் ரஹ்மானும் 'தாங்கள் உருவாக்கும் இசைக்கு ஆதாரம் எம்.எஸ்.வி-ராமமூர்த்தி செப்பனிட்டு தந்த உன்னதமான வழிதான்' என்று உருகுவதில் தன்னடக்கம் மாத்திரமல்ல, பெரும் உண்மையும் இருக்கிறது. 1965-ல் இந்த ஜோடி பிரிந்தது. இதற்குப் பின்னால் ராமமூர்த்தியால் 20-க்கும் குறைவான திரைப்படங்களுக்கு மட்டுமே தனியாக இசையமைக்க முடிந்தது. ஆனால் அதே சமயத்தில் இந்தப் பிரிவு விஸ்வநாதனின் தொடர்ச்சியான வெற்றியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதற்குப் பிறகும் மேலதிகமாக பலநூறு திரைப்படங்களுக்கு அவர் தொடர்ந்து வெற்றிகரமாக  இசையமத்தார் என்பதில் விஸ்வநாதனின் தனித்துவமான மேதைமையை அறிய முடிகிறது.

***

கண்ணதாசனை தவிர்த்து விட்டு விஸ்வநாதனின் இசைப் பயணத்தைப் பற்றி தனியாக உரையாடவே முடியாது. அந்த அளவிற்கு கண்ணதாசனின் எழுத்தும் விஸ்வநாதனின் இசையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன. வயதில் மூத்தவரான கண்ணதாசனின் மீது சகோரத்துவ பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தார் விஸ்வநாதன். 'இசையைத் தவிர்த்தால் விசுவிற்கு உலக நடப்பு எதுவுமே தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், இசை, இசை, இசை மட்டுமே' என்பதுதான் கண்ணதாசனின் கிண்டல் கலந்த  கருத்தாக இருந்தது. இருவரும் இணைந்து பாடல்களை உருவாக்கிய சம்பவங்களை வாசித்தால் அது ஏதோ நண்பர்களுக்கிடையான விளையாட்டு என்பது போலவே தோன்றும். இது தொடர்பாக பல சுவையான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

உதாரணத்திற்கு, திருலோகசந்தர் இயக்கி சிவாஜி நடித்திருந்த 'அவன்தான் மனிதன்' திரைப்படத்திற்காக ஒரு டூயட் பாட்டை உருவாக்க வேண்டியிருந்தது. மே மாதத்திற்குள் படப்பிடிப்பு துவங்கப்பட வேண்டும் என்று இயக்குநர் குறிப்பிட்டு விட்டதால் நழுவிக் கொண்டேயிருந்த கண்ணதாசனிடம் தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார் விஸ்வநாதன். நச்சரிப்பு தாங்காத கண்ணதாசன் "என்னய்யா .. மே.. மே.. ன்னு தொல்லை பண்றே..இந்தா பிடி.. என்று எழுதித்தந்த பாடல்.. 'அன்பு நடமாடும் கலைக்கூடமே.. ஆசை மழை மேகமே.. கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே ...கன்னித் தமிழ் வண்ணமே... என்று பாடல் வரிகள் பெரும்பாலும்  மே என்று முடியும்படி எழுதியிருக்கிறார். பாடல் சூழ்நிலையை இயக்குநர் விளக்கிய அடுத்த கணமே அதற்கான மெட்டையும் பாடலையும் உடனே உருவாக்கி விடுவதில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத பிறவி மேதைகளாக இருந்ததிதனால்தான் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை உருவாக்க முடிந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதிலும் ஒரு பாடலை தனித் தனிக் கூறுகளாக உருவாக்கி இணைத்துக் கொள்ளும்  இன்றைய தொழில் நுட்ப வசதிகள் அல்லாத,  பாடகர்களும் இசைக்கலைஞர்களும்  எவ்வித தவறுமின்றி ஒரே தருணத்தில் இணைந்து இயங்குவதை பதிவு செய்ய வேண்டிய சிக்கலான காலக்கட்டத்தில், இத்தனை பாடல்களை, அதிலும் பெரும்பான்மையாக வெற்றிகரமான பாடல்களை உருவாக்கியிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. காதல், சோகம், வீரம், தத்துவம், நகைச்சுவை, துள்ளல், அழுகை, கிண்டல் என்று நவரசங்களிலும் உருவாக்கப்பட்ட பாடல்கள் தமிழ் சமூகத்தின் ஒரு காலக்கட்டத்திய உணர்ச்சி வடிகால்களாகவும் பண்பாட்டுப் பதிவுகளாகவும் அமைந்தன. அவற்றில் புதுமையான, பரிசோதனைப் பாடல்களும் இருந்தன.  எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிக்கும் சிவாஜியின் நடிப்பார்வத்திற்கும் ஏற்ற வகையில் பல பாடல்களை உருவாக்கியதை விஸ்வநாதனின் சாதனை என்றே சொல்ல வேண்டும். கண்ணதாசன் மட்டுமின்றி வாலியுடன் இணைந்து விஸ்வநாதன் பல அருமையான பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

கண்ணதாசன்,விஸ்வநாதன், டி.எம்.செளந்தரராஜன்,பி.சுசிலா என்றமைந்த கூட்டணியை இயற்கையால் நிகழ்ந்த அற்புதம் என்று சொல்லலாம். அதிலும் இந்திக்கு ஒரு லதா மங்கேஷ்கர் போல தமிழிற்கு ஒரு சுசிலா கிடைத்தது தமிழர்களுக்கு அடித்த லாட்டரிப் பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். சுசிலாவின் அசாத்தியமான திறமை பல பாடல்களில் வெளிப்படுமாறு உபயோகித்துக் கொண்டார் விஸ்வநாதன்.. இந்தக் கூட்டணியில் கண்ணதாசன் தவிர்த்து மற்றவர்கள் தமிழை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் என்பதைக்  கவனியுங்கள். இது மட்டுமல்ல, தமிழ் திரையிசைக்கு பங்களித்த பல பாடகர்கள், கலைஞர்கள் தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத வேற்று மாநிலத்தைச் சார்ந்தவர்களே. திறமை எங்கிருந்தாலும் அதை அரவணைக்கத் தவறாதது தமிழ் சமூகம் என்பதே இதன் மூலம் தெளிவாகிறது. இசை என்பது தன்னளவிலேயே ஒரு முழுமையான கலை என்றாலும் பாடலுக்கு ஏற்ப இசை அமைப்பதே மரபு. ஆனால் நாளடைவில் பாடல் வரிகளுக்கேற்ப மெட்டமைக்க சிரமப்பட்ட இசையமைப்பாளர்கள், மெட்டுகளுக்கேற்ப பாடல் வரிகளை ஒடித்து மடித்து போட்டு மொழியைச் சித்திரவதை செய்வது பெருகிக் கொண்டே போகிறது. ஆனால் 'பாட்டுக்குத்தான் மெட்டு' என்கிற கருத்தில் தீ்ர்மானமாக இருந்தவர் விஸ்வநாதன்.

1952-ம் ஆண்டு முதல் ராமமூர்த்தியுடனும் 1965 முதல் தனி இசையமைப்பாளராகவும் தொடர்ந்து வெற்றிகரமாக தமிழ் திரையிசையை ஆட்சி செய்த விஸ்வநாதனின் இசை, 1976-ல் அன்னக்கிளியின் மூலம் புயலென புகுந்த இளையராஜாவின் வருகைக்குப் பிறகு மெல்ல மெல்ல குறையத் துவங்கியது காலத்தினால் தவிர்க்க முடியாத மாற்றம். நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்த இளையராஜாவின் ஆகிருதியின் பிரகாசத்திற்கு முன்னால் விஸ்வநாதனின் புகழ் மங்கிப் போனது வரலாற்று உண்மை. தவிர்க்க முடியாத இதே ரசனை மாற்றத்தை காலம் பின்னர் ரஹ்மானின் மூலம் உருவாக்கியது.விஸ்வநாதனின் நீட்சியாக அவர் செப்பனிட்ட வைத்திருந்த பாதையில் நாட்டார் இசையை இணைத்து வெற்றி கண்டது இளையராஜாவின் தனித்துவமான சாதனை.என்றாலும் இளையராஜா மெல்ல மெல்ல பிரம்மாண்டமாகிக் கொண்டிருந்த துவக்க காலத்தின் இடையேயும் விஸ்வநாதன் சில சிறந்த பாடல்களின் மூலம் தன் இருப்பை ரசிகர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலக்கட்டத்தை தாண்டிய நவீன சூழலின் முன்னாலும் தன்னால் தாக்குப்பிடிக்க முடியும் என்ற கலைஞனின் அடிப்படையான பிடிவாதம் அது. உதாரணமாக பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் ஓர் இசைக் கொண்டாட்டமாக திருவிழா அனுபவத்தை ஏற்படுத்தியது. முந்தைய காலக் கட்டத்தில் இயக்குநர் ஸ்ரீதர் போன்றவர்களும் பிந்தைய காலக்கட்டத்தில் பாலச்ந்தர் போன்றவர்களும் விஸ்வநாதனுக்கு சவாலான பாடல் சூழ்நிலைகளை உருவாக்கி சிறப்பான படைப்புகள் வெளிவர பிரதான காரணமாயிருந்தார்கள்.

***

பொதுவாகவே இசைக்கும் ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. உள்ளுணர்விற்கேற்ப ஆன்மாவைத் தேடும் அந்தரங்கமான தேடல் என்கிற வகையில் இரண்டுமே ஒரு திசையில் பயணிக்கின்றன. உன்னதமான இசைக்கலைஞர்கள் பெரும்பாலும் ஆன்மீக நாட்டம் உடையவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம். விஸ்வநாதனும் இதில் விதிவிலக்கல்ல. தன்னுடைய இசையின் வெற்றி குறித்த தலைக்கனம் ஏதுமில்லாதவராக அவர் இருந்தார். மற்ற  இசைக்கருவிகளைப் போலவே இசையை வெளிப்படுத்துவதற்கு தானும் ஒரு கருவியே என்பதை தீர்மானமாக நம்பினார். இந்த அடக்கத்தை இறுதி வரையிலும் பின்பற்றிய மேதையாக இருந்தார் விஸ்வநாதன். பிற கலைஞர்களை மனந்திறந்து பாராட்டுவதும் அவரது பண்புகளில் ஒன்றாக இருந்தன. உதாரணமாக டி.ராஜேந்தர் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். ஆனால் நாளடைவில் அவர் 'டண்டணக்கா' பாட்டை உருவாக்கியவராகவே மட்டுமே அறியப்படுவது துரதிர்ஷ்டம். 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்திற்காக டி.ஆர். இசையமைத்த 'வைகைக் கரை காற்றே நில்லு' என்கிற மெல்லிசைப் பாடலின் எளிமையும் சிறப்பையும் கவனித்த விஸ்வநாதன், டி.ராஜேந்தரிடம் தம்முடைய பாராட்டையும் அன்பையும் தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு. அது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக் கலைஞர்களான இளையராஜா, ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா போன்றவர்களிடம் இணைந்து பணியாற்றவும் அவர் எவ்வித தயக்கமும் கொண்டிருந்ததில்லை.

சிறுவயதிலிருந்தே தன்னிச்சையாக இசை மீது ஆர்வம் கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் நடிப்பின் மீதுதான் விஸ்வநாதனுக்கு அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. இதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது ஜூபிடர் பிக்சர்ஸ் உருவாக்கிய 'கண்ணகி' திரைப்படத்தில் இளம் வயது கோவலனாக  நடிக்கும் ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் கண்ணகியாக நடித்த பெண்ணை விட தோற்றத்தில் இவர் இளையவராக இருந்ததால் அந்த வாய்ப்பு தொடரவில்லை. என்றாலும் பிற்காலத்தில் சிலரின் வற்புறுத்தலின் பேரில் காதல் மன்னன், காதலா காதலா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இசைத் துறையோடு மட்டும் அவர் தீர்மானமாக நின்றிருக்கலாம் என்பதற்கான உதாரணங்களாக அவை இருந்தன.

இளம் வயதிலேயே தந்தையை இழந்து, மிகுந்த வறுமையான சூழலில் இருந்தாலும் ஆர்வத்துடன் இசை கற்று, வேற்று மொழி மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழகத்தின் ஒரு காலக்கட்டத்திய திரையிசையையே ஆட்சி புரிந்த விஸ்வநாதனின் அற்புதமான இசைக் கோலங்கள்  ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாது காற்றிலும் அப்படியே உறைந்திருக்கும். இது போன்ற ஆளுமைகள் அவர்களின் அஞ்சலிக் கட்டுரைகளில் மட்டும் நினைவுகூரப்படும் அவலம் தொடராமல், வாழும் போதும் மறைந்த பின்பும் அவர்களது படைப்புகள் பற்றிய உரையாடல்களும், மறுகண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

- உயிர்மை - ஆகஸ்ட் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan