Saturday, November 30, 2019

சய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு






உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை நான் இதுவரை பார்த்திருக்கும் சினிமாக்களில் உதிரிப்பூக்கள் போன்று அமைந்த மிகச்சிறந்த உச்சக்காட்சியைக் கொண்ட  (Climax)  திரைப்படம் என தோராயமாக இருபது, இருபத்தைந்து திரைப்படங்களைச் சொல்ல முடியும். அதில் சமீபமாக ஆனால் மிக அழுத்தமாக வந்து இணைந்து கொண்டது மராத்திய திரைப்படமான 'சய்ராட்'. இதன் உச்சக்காட்சியைக் கண்டு நான் தன்னிச்சையாக வாய்விட்டு அழுதேன். அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக பார்வையாளர்களை கலங்கடித்த கிளைமாக்ஸ் காட்சியைக் கொண்டது.

பிறநாடுகளில் உருவாகும் சிறந்த சினிமாக்களைக் கூட சற்று முயன்றால் காணக்கூடிய சூழலில் இந்தியாவின் இதர  சில மாநிலங்களில் உருவாகும் திரைப்படங்களைப் பற்றிய விழிப்புணர்வோ அதைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளோ தமிழகத்தில் குறைவு என்பது ஒரு சமகால முரண்நகை. இந்த சூழலை ஓரளவிற்கு கலைத்துப் போடுவதில் திரைப்பட விழாக்கள், தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் குறிப்பாக  இணையத்தின் பங்கு முக்கியமானது. அதன் எதிரொலிகளில் ஒன்றாக  மராத்தி மொழியில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பற்றிய உரையாடல்கள் இங்கு பெருகத் துவங்கியிருக்கின்றன.

2015-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட 'கோர்ட்' என்கிற மராத்தி திரைப்படம் இங்கு  பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இதைப் போலவே நாகராஜ் மஞ்சுளே என்கிற இயக்குநரின் முதல் திரைப்படமான ஃபன்றி என்கிற மராத்திய திரைப்படம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு விருதுகளைப் பெற்றது அல்லாமல் இந்தியாவின் தேசிய விருதையும் பெற்றது.

இதே இயக்குநரின் உருவாக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள 'சய்ராட்' என்கிற மராத்திய திரைப்படம் அவரது முந்தைய திரைப்படத்தை விடவும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ரூ.100 கோடி வர்த்தகத்தை கடந்த முதல் மராத்திய திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ள இந்த திரைப்படம் விரைவில் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது. சிறப்புக் காட்சியாக இது சென்னையில் திரையிடப்பட்டது. ஒரு மராத்திய திரைப்படத்திற்காக மல்டிபெக்ஸ் பார்வையாளர்கள் பெருமளவில் கூடியது அபூர்வமான, ஆரோக்கியமான காட்சியாக இருந்தது.

'சய்ராட்' திரைப்படத்தின் பாடல் காட்சிகள் முதலில் வெளியான போது அது வெகுசன சினிமாவின் குறிப்பாக காதல் திரைப்படங்களின் அடையாளத்தைக் கொண்டிருந்த போது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. ஃபன்றி போன்று ஒரு முக்கியமான தலித் சினிமாவை உருவாக்கிய இயக்குநர்  அடுத்த திரைப்படத்திலேயே மைய நீரோட்ட சினிமாவிற்கு நகர்ந்து விட்டாரே என்று கவலையாக இருந்தது. ஆனால் அப்படியாவது அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளட்டும் என்கிற ஆறுதலும் கூடவே எழுந்தது.

ஆனால் சய்ராட்  திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் அந்தக் கவலையெல்லாம் மறைந்து விட்டது.  மைய நீரோட்ட சினிமாவின் வடிவத்திலேயே சாதிய வன்முறையின் கொடூரத்தை பார்வையாளர்களுக்கு மிக அழுத்தமாக சொல்ல முடியும் என்கிற வகையில் இத்திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. சாதி ஆவணக்கொலைகள் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில் இது போன்ற திரைப்படங்களின் தேவை அவசியமானது.

***


மராத்திய மாநிலத்தில் உள்ள சாதியப்பாகுபாடுகள் நிறைந்திருக்கும் ஒரு கிராமம். பர்ஷ்யா என்கிற இளம் மாணவன் கல்வியில் சிறந்தவனாக இருக்கிறான். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன். அவனுடைய மீனவக் குடும்பம். ஆதிக்க சாதியைச் சார்ந்த அர்ச்சி என்கிற சகமாணவியின் மீது காதல்வயப்படுகிறான். அவளுடைய முகத்தை ஒரு நொடி பார்ப்பது கூட அவனுக்கு பரவசமாக இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த போதை அவனுக்குள் ஏறிக் கொண்டேயிருக்கிறது.

இவனையும் மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த இளைஞர்களைப் போலவே உயர்வு மனப்பான்மையுடன் கையாளும் நாயகி ஒரு கணத்தில் தாமும் காதலில் விழுகிறாள். பர்ஷ்யாவின் நண்பர்கள் உதவியுடன் இந்தக் காதல் வளர்கிறது. ஒரு நிலையில் இவர்களின் நெருக்கம் அர்ச்சியின் குடும்பத்திற்கு தெரிந்து விட பர்ஷ்யாவின் குடும்பத்தை மிரட்டி அவனை ஊரை விட்டே வெளியேறச் செய்கின்றனர். அர்ச்சியை பார்க்க முடியாமல் தவித்துப் போகிறான் பர்ஷ்யா. இவனைப் போலவே எதிர்முனையில் தத்தளிக்கும் அர்ச்சி சில பல சாகசங்களுக்குப் பிறகு எப்படியோ தப்பித்து வந்து விட இருவரும் இன்னொரு மாநிலத்திற்கு செல்கிறார்கள்.

ஒரு பெருநகரத்திற்குள் கிராமப்புறத்தைச் சார்ந்த இளம் ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களையெல்லாம் எதிர்கொள்கிறார்கள். விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண் இவர்களுக்கு உதவுகிறாள். அழுக்கும் நாற்றமும் சூழ்ந்திருக்கும் அந்த இடத்தில் தங்க பணக்கார சூழலில் வளர்ந்த அர்ச்சிக்கு சிரமமாக இருக்கிறது. என்றாலும் இருவரும் அந்தச் சூழலுக்கேற்ப தங்களைப் பொருத்திக் கொள்ளத் துவங்குகிறார்கள். பொருளாதார ரீதியாக அவர்களின் வளர்ச்சி சற்று வளரத் துவங்கினாலும் இளம் தம்பதியினருக்கேயுள்ள ஊடலும் சச்சரவும் வருகிறது. என்றாலும் அன்பு என்கிற வலுவான கண்ணி அவர்களை பிரிய விடாமல் வைத்திருக்கிறது. அவர்களின் இடையேயான அன்பிற்கு ஓர் இனிய எதிர்வினையாக குழந்தையும் பிறந்து சொந்த வீடு வாங்குமளவிற்கு முன்னேறுகிறார்கள்.இந்த மகிழ்ச்சியான செய்தியை அர்ச்சி தொலைபேசியில் தன் தாய்க்கு தெரிவிக்கிறாள்.

பிறகு வருகிறது அந்த துரதிர்ஷ்டமான நாள்.

பக்கத்து வீட்டுக்காரப் பெண்  இவர்களின் குழந்தையை கடைக்கு அழைத்துச் செல்கிறார். குழந்தையை அனுப்பி விட்டு  வீட்டு வாசலில் மகிழ்வுடன் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் அர்ச்சி வந்திருக்கும் விருந்தினர்களைப் பார்த்து திகைப்பும் மகிழ்ச்சியும் அடைகிறாள். வந்திருப்பது அவளுடைய அண்ணனும் பிறந்த ஊரிலுள்ள சில ஆட்களும். அவர்களை வீட்டிற்குள் வரவழைத்து உட்கார வைக்கிறாள். சில  நிமிடங்கள் கழித்து காய்கறிக்கூடையுடன் உள்ளே நுழையும் பர்ஷ்யா அவர்களைப் பார்த்து சற்று திகைப்படைந்து சமையல் அறைக்குள் செல்கிறான். மறுக்கும் அவனிடம் வலுக்கட்டாயமாக தேநீர் தந்த விருந்தினர்களுக்கு தரச் சொல்கிறாள் அர்ச்சி.

அடுத்த காட்சி. இதுதான் அந்த உச்சக்காட்சி.

திரும்பி வந்த பக்கத்து வீட்டுக்காரப் பெண்மணி இவர்களின் குழந்தையை வீட்டு வாசலிலேயே விட்டுச் செல்கிறார். குழந்தை வீட்டுக்குள் நுழைகிறது. எதையோ பார்த்து திகை்கிறது. பிறகு  திகிலடைந்து அழுகிறது.  திரும்பி வாசலை நோக்கி தெருவில் அழுது கொண்டே நடக்கிறது.

அதன் பிஞ்சுக்கால்களில் படிந்துள்ள ரத்தக்கறையின் மூலமாக தரையில் உருவாகும் தடயங்கள் நிகழ்ந்த  பயங்கரத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது. ஒரு வார்த்தை கூட பேச துணிவில்லாத துக்கத்துடன் பார்வையாளர்கள் அரங்கிலிருந்து கனத்த மெளனத்துடன் வெளியேறுகிறார்கள். அந்த அப்பாவியான இளம் தம்பதியினருக்கான அஞ்சலி போல அமைகிறது அவர்களின் அமைதி.

***

நாகராஜ் மஞ்சுளே இதன் பெரும்பான்மையான காட்சிகளை வெகுசன திரைப்படங்களீன் சாயிலில் உருவாக்கியிருந்தாலும் தனது நுட்பமான சித்தரிப்புகளின் மூலம் இதையொரு நல்ல மாற்று சினிமாவாக ஆக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக இதன் உச்சக்காட்சி ஒரு சிறுகதையின் அபாரமான திருப்பம் மிக வலுவாக பார்வையாளர்களின் முகத்தில் அறைகிறது. இவரது முந்தைய திரைப்படமான ஃபன்றியில் சாதிய நோக்கில் தம்மை துன்புறுத்தும் கூட்டத்தின் மீது சிறுவன் எறியும் கல் காமிராவை நோக்கி விரைந்து வந்த உறையும். அதை விடவும் ஒரு வலுவான அடியை இதில் தந்திருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே.

தமது சாதியின் மீதுள்ள வெறியால், கவுரவத்தினால் சாதியை  மீறி திருமணம் செய்யும் தங்கள் வாரிசுகளின் வாழ்வையே குரூரமாக கலைத்துப் போடும் ஆணவக்காரர்களின் மீதான அடியாக இது விழுகிறது.

பர்ஷயா மற்றும் அர்ச்சிக்குள் மலரும் காதல் தொடர்பான சித்தரிப்புகள் மிகுந்த அழகியலுடன் நம்பகத்தன்மையுடனும் இருக்கின்றன. அந்த உச்சக்காட்சியில் நிகழவிருக்கும் கொடுமை பற்றிய தடயமே பார்வையாளர்களுக்கு வராமல் படத்தின் பிற்பாதி காட்சிகளை இயக்குநர் சாமர்த்தியமாக நகர்த்திச் சென்றாலும் இவர்களின் எளிய, அழகான வாழ்விற்கு ஏதேனும் ஆகி விடுமோ என்று மெலிதாக பார்வையாளர்கள் கவலை கொள்ளும் நுட்பமும் சாத்தியமாகியிருக்கிறது.

 'திடீரென்று  வெடிகுண்டு வெடிப்பதை காட்டுவது சஸ்பென்ஸ் அல்ல, மாறாக ஒரு வெடிகுண்டு இருப்பதை முதலில் காட்டி விட்டு அது எப்போது வெடிக்கும் என்று பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு அழைத்து வருவதுதான் சஸ்பென்ஸ்' என்று ஹிட்ச்காக் சொல்வது போல அர்ச்சி குடும்பத்தின் சாதிய பிடிப்புள்ள பயங்கரவாதத்தை முதலிலேயே நிறுவி விடுவதால் இந்தப் பதட்டம் தன்னிச்சையாகவே பார்வையாளர்களுக்கு பிற்பகுதியில் வந்து கொண்டேயிருக்கிறது.

பர்ஷயா மற்றும் அர்ச்சி என்கிற பிரதான பாத்திரங்களாக நடித்திருக்கும் இருவருமே புதுமுகங்களாக இருந்தாலும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அர்ச்சியாக நடித்திருக்கும் ரிங்க்கு ராஜ்குருவின் நடிப்பு அபாரம். ஆதிக்கசாதியைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த உயர்வு மனப்பான்மையுடன் எளிய மனிதர்களை திமிருடன் அணுகுவதும் பிறகு இயல்பாக பர்ஷயாவின் மீது காதல் வயப்படுவதும், காதலனை காப்பாற்றுவதற்காக ரெளத்ரம் கொள்வதும் பின்பு இடம் பெயர்ந்த பிறகு அங்குள்ள வறுமையான சூழ்நிலை, குடும்பத்தைப் பிரிந்த ஏக்கம், கணவனுடன் சச்சரவு, அதைக் கடந்த நிறைவு என ஒவ்வொரு பகுதியிலும் அற்புதமாக  நடித்திருந்தார். இதை சாத்தியப்படுத்திய இயக்குநரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

மிக குறிப்பாக ஒரு காட்சியை சொல்ல வேண்டும். காதலனுடன் இணைந்த சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் அங்குள்ள அழுக்கான சூழலை அவள் வெறுக்கிறாள். அது மட்டுமல்ல தன் குடும்பத்தை பிரிந்த ஏக்கத்துடன் நாள் பூராவும் தனிமையிலேயே இருக்க வேண்டிய சலிப்பை எரிச்சலாக அவனிடம் வெளிப்படுத்துகிறாள். பிறகு அவள் ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் காட்சி காண்பிக்கப்படுகிறது. மிக அடிப்படையான பணி. பிறகு வரும் காட்சிகளில் அவள் மெல்ல அந்த நிலையில் இருந்து நிர்வாகத்தின் பகுதியாக மாறுகிறாள். அவள் மேஜையில் அமர்ந்து சொல்லும் குறிப்புகளை இரு ஆண்கள் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்கள். பொருளாதார ரீதியான சுதந்திரம் பெண்களுக்கு எத்தனை தன்னம்பிக்கையை வளர்க்கிறது என்பதை இந்தக் காட்சி மிக அற்புதமாக சொல்கிறது.

இதைப் போலவே அர்ச்சியின் சகோதரனாக வருபவன் சாதியத் திமிர் உள்ளவனாக இருக்கிறான். காரணம் அவனது தந்தை சாதிய அரசியல் செய்யும் ஆசாமி. எனவே அது தரும் திமிரில் ஆசிரியரையே கன்னத்தில் அறைந்து விடுகிறான். அடிபட்ட ஆசிரியரும் இன்னும் சில மூத்த ஆசிரியர்களும் அரசியல்வாதியின் வீட்டிற்குச் சென்று 'யாரென்று தெரியாமல் கேள்வி கேட்டதாக' ஏறத்தாழ மன்னிப்பு கேட்டு விட்டு பரிதாபமாக திரும்புகிறார்கள். கிராமங்களில் சாதியம் எத்தனை வலிமையான சக்தியாக விளங்குகிறது என்பது இது போன்ற காட்சிகளில் அழுத்தமாக வெளிப்படுகிறது. வழக்கமாக தமிழ் சினிமாக்களில் இது போன்ற திமிர் பிடித்த வில்லன்கள் ஆஜானுபாகுவான இளைஞர்களாக இருப்பார்கள். ஆனால் இதில் வரும் இளைஞன் குட்டையாக சாதாரண நபராக இருக்கிறான். பர்ஷயாவின் நண்பர்களாக வரும் இளைஞர்களும் இயல்பாக நடித்துள்ளார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதன் நம்பகத்தன்மையோடு வடிவமைக்க, சித்தரிக்க இயக்குநர் மிகவும் மெனக்கெட்டுள்ளார் என்பதை உணர முடிகிறது.

***

இதன் திரைக்கதை ஏறத்தாழ தமிழில் வெளிவந்த பாலாஜி சக்திவேலின் 'காதல்' திரைப்படத்தை நினைவுப்படுத்துகிறது. ஏறத்தாழ இரண்டுமே ஒரே பாதையில் பயணிக்கிறது. இரண்டுமே வெசன திரைப்படக்கூறுகளின் தன்மையையும் கலைப்படத்தின் சாயல்களையும் இணைக் கோடாக கொண்ட மாற்று சினிமாவாக உருவாகியிருக்கிறது. ஆனால் சய்ராட்டின் உச்சக்காட்சி ஏற்படுத்தும் அழுத்தமான தாக்கத்தின் மூலம் அது ஒரு படி முன்னே நின்று மறக்க முடியாத படைப்பாக மாறி விடுகிறது.

காதல் திரைப்படத்தில் வெளிப்படும் பல நுண்தகவல்களின் மூலம் அதன் நம்பகத்தன்மையை வலுவாக பார்வையாளர்களுக்கு கடத்த முயல்கிறார் பாலாஜி சக்திவேல். குறிப்பாக அந்தக் காதலர்கள்  நகரத்தில் இடம் தேடி அலையும் காட்சிகள். என்றாலும்  சய்ராட்டின் நபர்களோடு நாம் அதிகம் உணர்வு சார்ந்த பிணைப்பை உருவாக்கி கொள்ள முடிகிறது. அந்தக் காதலர்களின் இணைப்பு, சச்சரவு, பிரிவு என்று அவர்களுக்கு எந்த தீங்கும் நிகழ்ந்து விடக்கூடாதே என்று பார்வையாளர்கள் பதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். காதல் திரைப்படத்தில் அதன் நாயகன் முழுதும் நல்லவனாக வழக்கமான நாயகத் தன்மையுடன் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் சய்ராட் திரைப்படத்தின் நாயகன், தன் மனைவியை ஆணாதிக்க தன்மையுடன் சந்தேகப்படும் கீழ்மையையும் பின்பு அதற்காக மனம் வருந்தும் சமநிலைத்தன்மையோடு நாகராஜ் மஞ்சுளே சித்தரிக்கிறார்.

ஒரு காட்சியில் கணவனுடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாக தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல ரயிலில் பயணிப்பது போல் ஒரு காட்சி வருகிறது. 'அய்யோ.. அவள் செல்ல வேண்டாமே' என்று நான் மனதிற்குள் பதறிக் கொண்டேயிருந்தேன். பிறகு அவள் பார்வையற்ற, பிச்சையெடுக்கும் தம்பதியினரைப் பார்த்து மனம் மாறுகிறாள். புனைவுதான் என்றாலும் ஒரு கதாபாத்திரத்தோடு பார்வையாளன் எத்தனை உணர்வுப் பிணைப்புள்ளவனாக மாற்ற வேண்டும் என்கிற இயக்குநரின் திறமையில் நாகராஜ் மஞ்சுளே அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறார்.

***

இத்திரைப்படத்தின்  இசையை மிக பிரத்யேகமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இதன் பாடல்களைக் கேட்ட போது அது இளையராஜா பாடல்களின் பாணியில் இருந்ததை கவனித்தேன். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர்கள் அஜய் மற்றும் அட்டுல் என்கிற சகோதரர்கள். இளமையிலேயே இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டு பல சிரமங்களுக்குப் பிறகு ஒவ்வொரு படியாக ஏறி திரைத்துறைக்குள் வருகிறார்கள்.

ஓர் இந்திப்படத்தின் பின்னணி இசையை ஒரு முறை  கவனிக்கிறார்கள். இசையால் இத்தனை உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என வியக்கிறார்கள். அந்த இசையமைப்பாளரை தேடி தேடி கேட்கிறார்கள். அது அவர்களுக்கு இசை தொடர்பான பல புதிய கதவுகளை திறக்கிறது. அந்த இசை இளையராஜாவுடையது.

இதன் பாடல்கள் மராத்தியில் அமோகமான வெற்றி பெற்றுள்ளன. ஓருவகையில் இதன் பாடல்களே இத்திரைப்படத்தை பலரும் கவனிக்கக்கூடிய முன்னோட்டமாக அமைந்தது எனலாம். இதன் பாடல்கள் மற்றும் சிம்ஃபொனி வகையிலான பின்னணி இசை, ஹாலிவுட்டில் உள்ள ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இது முதல் மராத்தி திரைப்படம் என்கிறார்கள்.

இதன் உச்சக்காட்சிக்கு பின்னணி இசை ஏதும் அல்லாமல் மெளனத்தையே இசையாக அமைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர்களின் அற்புதமான நுண்ணுணர்வை இது வெளிப்படுத்துகிறது. இந்த மெளனமே அந்தக் கொடூரத்தின் துயரத்தை பல மடங்காக உயர்த்தி பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.


***

கெளரவக் கொலைகள் என்படும் சாதி ஆவணக் கொலைகள் அதிகம் நிகழும் நாடுகளுள் ஒன்று இந்தியா. சர்வதேச அளவில் வருடத்திற்கு சுமார் 5000 ஆணவக் கொலைகள் நிகழ்வதாகவும் அதில் ஆயிரம் கொலைகள் இந்தியாவில் நடைபெறுவதாகவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இது போன்ற சாதி ஆவணக் கொலைகளுக்கான காரணங்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் சில மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரே சாதிக்குள் நிகழும் அகமணமுறைதான் சாதியின் இருப்பு நீடிப்பதற்கான முதன்மையான காரணம் என்றார் அம்பேத்கர். காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறுவதுதான் சாதி எனும் இறுக்கமான அமைப்பு சிதைந்து சரிய ஒரு முக்கியமான காரணியாக இருக்கும். ஆனால் சாதிய ரீதியாகவும் வர்க்கரீதியாகவும் முரணான நிலையில் நிகழும் காதல் திருமணங்கள் அவர்களின் பெற்றோர்களினாலேயே மனச்சாட்சியின்றி அழிக்கப்படுவது கொடுமையானது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நபர்களே. காதலித்த நபர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் ஆதிக்க சாதியினரால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இத்திரைப்படத்தில் வரும் அந்த இளம் காதலர்கள் பல போராட்டங்களுக்குப் பிறகு தங்களின் வாழ்க்கையை மெல்ல அமைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கான சொந்த வீடு, குழந்தை என குடும்பம் எனும் நிறுவனத்திற்குள் மெல்ல காலூன்ற துவங்குகிறார்கள். ஆனால் அவர்களின் திருமணம் முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவர்களின் தந்தைக்கோ, சகோதரனுக்கோ 'சரி. இவர்கள் வாழ்ந்து விட்டு போகட்டுமே' என்கிற எண்ணம் தோன்றவேயில்லை. அவர்களை தேடிக் கொன்றாவது தங்களின் சாதிய கவுரத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற வெறி நீடிக்கிறது.

இறுதிக்காட்சியில் அர்ச்சியின் சகோதரனும் அவனது அடியாட்களும் அந்த வரவேற்பரையில் உட்கார்ந்து பர்ஷியா தரும்  தேநீரை அருந்துகிறார்கள். அதற்கு முன் அந்த வீட்டுக்கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியான புகைப்படங்களை காண்கிறார்கள். குழந்தையோடு தாய் -தந்தையர் சிரிப்போடு நிற்கும் புகைப்படங்கள். அவர்களின் திருமண ஆல்பம் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். அப்போது கூட இந்தக் கூட்டை கலைக்க வேண்டாமே என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. சாதிய வெறி மனிதனின் மனிதநேயகண்களை எத்தனை அபத்தமாக மூடியிருக்கிறது என்கிற பயங்கரத்தை இந்தக் காட்சிகள் உணர்த்துகின்றன.

நல்ல வேளையாக  அந்தக் குழந்தை அந்த வீட்டினுள் அப்போது இல்லை என்பது மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தது. அந்த பிஞ்சுக் குழந்தையின் ரத்தக் கறையுள்ள காலடித் தடயங்கள் சாதி ஆவணக்கொலைகளை நிகழ்த்துபவர்களின் முன்னால் கேள்விக்குறிகளாக நிற்கின்றன. எப்போது பதில் கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை.



 (அம்ருதா இதழில் பிரசுரமானது)

suresh kannan

Friday, November 29, 2019

ஓவியர் கோபுலு: உறைந்து போன தூரிகை




இன்றைய அளவிற்கு கேளிக்கை அம்சங்கள் இல்லாத முந்தைய காலக்கட்டத்தில் அதாவது 1940-களில் புத்தக வாசிப்பு என்பது பொழுது போக்கின் ஒரு பிரதான அம்சமாக இருந்தது. குறிப்பாக வெகுஜன இதழ்களில் வெளியாகும் தொடர்கதைகள். கல்கியின் பொன்னியின் செல்வன் வெளிவந்து கொண்டிருந்த போது அடுத்த அத்தியாயத்தை வாசிக்கும் ஆவல் தாங்காமல் சில வாசகர்கள் புத்தக ஏஜெண்ட்டின் வருகைக்காக ரயில் நிலையத்திலேயே வந்து காத்திருந்து சுடச்சுட வாங்கி அங்கேயே வாசிப்பார்களாம். இவ்வாறான தொடர்களை தொகுத்து பைண்ட் செய்து புத்தகங்களாக சேகரிப்பது என்பதும் அப்போதைய பிரதான பொழுதுபோக்காக இருந்தது. இந்தக் காலக்கட்டத்தை 'தொடர்கதைகளின் பொற்காலம்' என்று கூறலாம். இன்றைய தொலைக்காட்சி சீரியில்களின் எழுத்து வடிவ முன்னோடி அது. காலப்போக்கில்  மெல்ல விலகுகிற விஷயத்தில் தொடர்கதைகளும் ஒன்றாகிப் போனது தவிர்க்க முடியாத சோக பரிணாமம். தொடர்கதைகளை ஆர்வமாக வாசிக்கும் போக்கு சுமாராக எண்பதுகள் வரை நீடித்து பின்பு மெல்ல மெல்ல அருகிப் போனது.

தொடர்கதைகளைப் போலவே அதற்காக வரையப்படும் ஓவியங்களுக்கும் கூட அப்போது வெறித்தனமான வாசகர்கள் இருந்தார்கள். தொடர்கதையை வாசிப்பதை விடவும் அதிகமான நேரத்தை செலவழித்து ஓவியங்களை நிதானமாக ரசிக்கவும் பாதுகாக்கவும்  செய்கிற நபர்கள். அதற்கான சாவகாசமான நேரமும் இருந்த காலக்கட்டம் அது. மாலி, சில்பி, மணியம், எஸ்.ராஜம், மாதவன், தாணு, ராஜூ என்று பல பத்திரிகையுலக ஓவிய ஜாம்பவான்கள் கலை மற்றும் அழகியல் உணர்வுடன் அற்புதமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். பல குடும்பங்களின் பூஜையறைகள் இவர்கள் நுட்பமாக வரைந்த கடவுள் சித்திரங்களால் நிறைந்திருப்பது என்பது ஒரு வழக்கமாகவே இருந்தது. தீபாவளி மலர்களில் வெளியாகும் அட்டைப்படங்கள், இதழின் உள்ளே வழுவழுப்பான தாளில் அச்சிடப்பட்டிருக்கும் வண்ணமிகு ஆன்மீக ஓவியங்களை வாசகர்கள் கண்ணில் ஒற்றிக் கொண்டு பாதுகாப்பார்கள். இந்த ஜாம்பவான்களின் வரிசையில் முக்கியமானதொரு கலையாளுமைதான், மாலியால் கோபுலு என்றழைக்கப்பட்ட எஸ்.கோபாலன்.

தேவன் எழுதிய துப்பறியும் சாம்பு,  கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள், சாவியின் வாஷிங்டனில் திருணம், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ராஜம்கிருஷ்ணனின் மண்ணகத்துப் பூந்துளிகள் போன்று பல எழுத்தாளர்களின் எண்ணற்ற தொடர்களுக்கு ஓவியம் தீட்டி அவற்றை மேலதிகமாக அழகுறச் செய்தவர் கோபுலு. மாத்திரமல்லாமல் அரசியல் கேலிச் சித்திரங்கள், அங்கத நகைச்சுவைகள், ஹாஸ்ய கோட்டோவியங்கள் வரைவதிலும் புகழ்பெற்றவர். நகைச்சுவை ஓவியம்தானே என்பதற்காக மேலோட்டமான தீற்றல்களாக அல்லாமல் ஒவ்வொரு சித்திரத்திலும் நுணுக்கமாக பல நுட்பமான விவரங்கள் பதிவாகுமாறு உருவாக்குவது கோபுலுவின் சிறப்பு. குறிப்பாக நடுத்தரவர்க்க பிராமண குடும்பத்து கலாசாரங்களின் மிகத் துல்லியமான பல்வேறு விதமான பரிமாணங்களை அவரது ஓவியங்களில் காணலாம்.  காலத்தையும் கடந்து நிற்கும் பண்பாட்டுப் புதிவுகள் அவை. ஆர்.கே.லஷ்மணின் 'மிஸ்டர் பொதுஜனம்' போல துப்பறியும் சாம்புவிற்காக கோபுலு பிரத்யேகமாக உருவாக்கிய நீளமான மூக்கும், சோகமும் அசட்டுக்களையுடனான முகமுமான துப்பறியும் சாம்பு பாத்திரம் பார்ப்பதற்கு சுவாரசியமானது. தன்னை 'Artoonist' என்று வர்ணித்துக் கொண்டவர் கோபுலு

***

தஞ்சாவூரில் பிறந்த கோபாலனுக்கு சிறுவயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது.  தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்களும் அரண்மனையில் உள்ள தஞ்சாவூர் ஓவியங்களும் இவரை மிகவும் கவர்ந்தன. அக்கம் பக்கத்து வீடுகளின் பூஜையறைகளில் கடவுள் படம் வரைந்து பெண்களிடம் நிறையப் பாராட்டும் சன்மானமும் பெற்றார்.  ஆனந்த விகடன் இதழில் அப்போது வெளியாகும் பிரபல ஓவியர் மாலியின் ஓவியங்களைப் பார்த்து வியந்து பிரமித்து அதே மாதிரியாக தானும் வரைந்து பார்ப்பார். பிற்காலத்தில் மாலியுடனேயே பணிபுரியப் போகும் பொன்னான வாய்ப்பு சாத்தியமாகப் போகிறது என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆனால் அவரது தந்தைக்கோ இவர் நன்றாகப் படித்து முடித்தவுடன் தான் பணியாற்றிய ரயில்வே துறையில் சேர்த்து விட்டால் நிம்மதி என்று தோன்றியது. கோபாலனின் ஓவிய ஆசிரியா் இவரது அபாரமான திறமையையும் ஆர்வத்தையும் பார்த்த பின்னர் அவரது தந்தையிடம் செய்த பரிந்துரையினால்தான் இவரால் கும்பகோணத்தின் ஒவியக் கல்லூரியில் இணைந்து கற்க முடிந்தது.

ஓவியப் படிப்பை முடித்து சென்னைக்கு வந்தவுடன் மிகுந்த சிரமத்திற்குப் பின் ஆனந்த விகடனில் பணிபுரியும் மாலியை சந்திக்கிறார். அப்போதைய ஆனந்தவிகடன், அட்டைப் படத்திலேயே ஹாஸ்ய சித்திரங்களைக் கொண்டு வெளிவரும். கோபாலனின் ஓவியத் திறமையைப் பாராட்டிய மாலி அவரது நகைச்சுவைச் சித்திரங்கள் இரண்டை ஆனந்தவிகடனில் அட்டையில் வெளியிடுகிறார். விகடனிலேயே தன் ஓவியங்கள் வெளியானதில் கோபாலனுக்கு பரவசமும் கூடுதலாக சன்மானமும் கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி. தீபாவளி மலர் ஒன்றிற்காக மாலியின் வழிகாட்டுதலின் பேரில் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் இல்லத்திலிருக்கும் ராமர் பட்டாபிகேஷப்படம் உள்ளிட்ட பல திருவுருவங்களை ஓவியங்களாக வரைந்து மாலியின் நன்மதிப்பைப் பெறுகிறார். பிறகு ஆனந்தவிகடனிலேயே மாலியின் கீழ் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கிறது.

அங்கு பொறுப்பாசிரியாக இருந்த எழுத்தாளர் தேவன் படைப்புகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் பரவலாக பாராட்டைப் பெற்று அது வெற்றிக் கூட்டணியாக அமைகிறது. தேவன் எழுதிய துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ்  ஜகந்நாதன்,  ஸ்ரீமான் சுதர்சனம்,  மிஸ்டர் வேதாந்தம், சி.ஐ.டி. சந்துரு போன்ற படைப்புகளும் அதற்குப் பொருத்தமான கோபுலுவின் ஓவியங்களும் வாசகர்களால் பெருவாரியாக ரசிக்கப்படுகின்றன. வாசனின் மறைவிற்குப் பிறகு விகடனின் தொடர் வெற்றியில் சற்று தொய்வு ஏற்பட்ட போது அதை மீண்டும் நிமிர்த்தியது கொத்தமங்கலம் சுப்பு எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்' தொடர். ஒவ்வொரு வாரமும் இந்தத் தொடரை வாசகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வாசித்தார்கள். பிறகு இது திரைப்படமாகவும் வந்து வெற்றி பெற்றது எல்லோருக்கும் தெரியும். இந்தத் தொடருக்கும் கோபுலுவின் ஓவியங்கள் கூடுதல் மதிப்பை உருவாக்கியது என்றால் அதில் மிகையில்லை. பிறகு எழுத்தாளர் சாவியுடன் அமைந்த கூட்டணியும் மகா வெற்றி. 'வாஷிங்டனில் திருமணம்' நகைச்சுவைத் தொடரையும் அந்தக் கற்பனையையும் மிஞ்சும் கோபுலுவின் கோட்டோவியங்களையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

***

பொதுவாக கோபுலுவை ஓவியராகவும் கேலிச் சித்திரக்காராகவும் அறிபவர்கள் பெரும்பாலும் அவருடைய இன்னொரு பரிமாணத்தை அறிந்திருக்க மாட்டார்கள். விளம்பரத் துறையிலும் நுழைந்து அதிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் கோபுலு. ஒரு விளம்பரத்தை மக்களிடம் வெற்றிகரமாக சென்று பரப்புவதற்கும் அடிப்படையானது கலைத் திறமைதானே? எனவே தனது ஓவியத் திறமையை தான் உருவாக்கும் விளம்பரங்களில் இணைத்து அதை வெற்றிகரமான கலவையாக்கினார். ராசி சில்க்ஸ், காளிமார்க் குளிர்பானம், ப்ரில் இங்க், எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களை பல புதுமையான வழிகளில் முன்நிறுத்தி தொடர் வெற்றிகளைத் தேடித் தந்தார். ஸ்ரீராம் சிட்ஸ், உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ், குங்குமம், சன்டிவி போன்றவைகளின் இலச்சினையை (Logo) உருவாக்கி அவற்றின் வணிக அடையாள வெற்றிக்கு அடித்தளம் அமைத்துத் தந்தார். ஜெயலலிதா, ஹேமமாலினி போன்ற நடிகைகள் இவர் உருவாக்கிய விளம்பரங்களில் மாடலாக பணிபுரிந்திருக்கின்றனர் என்பது சுவாரசியமான வரலாறு.

இயற்கை ஒருவருக்கு வழங்கும் பிரத்யேகமான கலைத் திறமையை, அதுவே பறித்துக் கொள்ள முயல்வது ஒரு சோகமான முரண். 2002-ம் ஆண்டில் கோபுலுவிற்கு ஒரு சோதனைக் கட்டம். மூளையில் ஏற்பட்ட ஒரு பாதிப்பினால் வலது கையும் காலும் செயல் இழந்தன. 'என் ஓவியங்களின் பாணியை 'கோபுலு ஸ்ட்ரோக்ஸ்' என்று புகழ்வார்கள். ஆனால் பாருங்கள் .. எனக்கே ஸ்ட்ரோக் வந்துவிட்டது' என்று அந்த இக்கட்டான நேரத்திலும் தன் நகைச்சுவையை இழக்காதவர் கோபுலு. மருத்துவருடைய ஆலோசனையின் பேரில் இடது கையால் வரைந்து பழகினார். பிறகு வலது கையும் இயல்பான பழக்கத்திற்கு வந்து விட்டதால் இருகைகளிலுமே வரையும் திறனைப் பெற்றார். கலைஞர்களுக்கு விபத்துகளும் ஒருவகையில் வரம் போலும். ஒருபுறம் தன் கவனத்தை விளம்பரத் துறையில் செலுத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைவதையும் விடவில்லை.

1991-ல்  கருணாநிதி கையினால் கலைமாமணி விருது, 1999-ல் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது, 2000-ல் முரசொலி அறக்கட்டளை விருது உள்பட பல விருதுகளை வாங்கியுள்ளார். 'ஒரு கார்ட்டூனிஸ்டின் அடிப்படை பண்பானது மனித நேயமும் நகைச்சுவையும் விமர்சனமும் கொண்டதாக இருக்க வேண்டும். சமூகத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை உருவாக்க வேண்டும்' என்பது இவரது கருத்து. தன்னுடைய சித்திரங்களில் உருவாகும் மனிதர்களைப் போலவே கோபுலுவும் எப்போதும் நகைச்சுவையும் உற்சாகமும் கொண்டிருந்த மனிதராக இருந்தார் என்று அவருடன் பழகிய நண்பர்கள் கூறுகிறார்கள். தனது குருவான மாலியைத் தவிர அமெரிக்க சித்திரக்காரரான நார்மன் ராக்வெல் மற்றும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டான டேவிட் லோ ஆகியோருடைய கோட்டோவியங்களின் பாதிப்புகளையும் தன் படைப்புகளில் கொண்டிருந்தார்.

தனது 91வது வயது வரையிலும் கூட உற்சாகமாக இயங்கி வந்த கோபுலு, உடல்நலக்குறைவினால் சமீபத்தில்  மறைந்து போனாலும் அவர் உருவாக்கிய கோடுகளும் வண்ணங்களும் அபாரமான நகைச்சுவையும் காலத்திலும் வாசகர்களின் மனதிலும் அப்படியே அழியாமல் உறைந்திருக்கும்.
 
suresh kannan

Thursday, November 28, 2019

தூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்




கமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற்சி என்கிற அழுத்தமான குறிப்புடன் இந்தக் கட்டுரையை துவங்க விரும்புகிறேன். ஆனால் அந்த முயற்சியை அவர் எத்தனை தூரம் வெற்றிகரமாக சாத்தியமாக்கினார் என்கிற கேள்விகளும் உள்ளன.

தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களுள் முக்கியமானவராக குறிப்பிடப்படுபவர் கமல்ஹாசன் என்பது மிகையானதாக இருந்தாலும் அதில் உண்மையில்லாமலும் இல்லை. சமீபத்திய நுட்ப விஷயங்களின் அறிமுகம், ஒப்பனை சமாச்சாரங்கள், புதிய பாணி திரைக்கதை முயற்சிகள், வசனமே இல்லாத திரைப்படம், இளைஞர்களுக்கான பயிலரங்கம், சினிமா தயாரிப்பு, இயக்கம் என்று பலவிதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதோடு தமிழ் சினிமாவிற்கு புதிய  விஷயங்களை பரிசோதனையாக அறிமுகப்படுத்துபவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் கமலிடம் இருக்கும் கலைஞரைக் காட்டிலும் அவருக்குள் இருக்கும் திறமையான வணிகரும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தன்மையும் அவரது முயற்சிகளை அரைகுறையானதாகவே ஆக்கி வைத்திருக்கின்றன.

***

'ஹாலிவுட் சினிமாவிற்கு நிகரானது' என்று விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் சுயபெருமையோடு சில வெகுசன தமிழ்திரைப்படங்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் அவை துண்டு துண்டான சுவாரசியங்களைக் கொண்டிருக்குமே ஒழிய வழக்கமான தமிழ் சினிமா உருவாக்க முறையிலிருந்து பெரிதும் விலகாதவை. இந்த நோக்கில் முழுக்க ஹாலிவுட் பாணி சினிமாவானது தமிழில் இதுவரை ஒன்று கூட உருவாகவில்லை என்பதே உண்மை. ஹாலிவுட் சினிமாதான் சிறந்த சினிமாவிற்கான அளவுகோல் என்பது இதன் பொருள் அல்ல. அவைகளிலும் பல தேய்வழக்கு அபத்தங்கள் உள்ளதுதான் என்றாலும் ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதன் மையத்திலிருந்து பெரிதும் விலகாமல் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும்  நம்பகத்தன்மையுடனும் காட்சிக்கோர்வைகளை உருவாக்குவது ஹாலிவுட் சினிமாவின் பாணி. பொருந்தாத, தேவையற்ற இடைச்செருகல்கள் பொதுவாக அவைகளில் திணிக்கப்படும் அபத்தம் நிகழாது.

ஆனால் தமிழ் சினிமாவின் வரலாறு என்ன? சினிமா என்கிற நுட்பம் தமிழ் சூழலில் அறிமுகமாகிய போது இங்கு அப்போது பொழுதுபோக்கு வடிவங்களாக இருந்த கூத்து, புராண நாடகங்கள் போன்றவை அப்படியே எதுவும் மாறாமல் சினிமாவில் பதிவு செய்யப்பட்டன. எந்தவொரு புது நுட்பம், கண்டுபிடிப்பு அறிமுகமானாலும் அவற்றை தம் பழமைவாத அபத்தங்களுக்கேற்ப உருமாற்றம் செய்து கொள்வதில் தமிழர்கள் பிரத்யேகமான திறமை கொண்டவர்கள். கணினியின் பயன்பாடு இந்தியாவில் அறிமுகம் ஆனவுடனேயே 'கம்ப்யூட்டர் ஜாதகம்' எனும் விஷயமும் தமிழகத்தில் உடனே வந்து விட்டது.

எனவே தமிழ் சமூகத்தில் புதிதாக நுழைந்த சினிமா எனும் நுட்பத்தில் புராண நாடகங்கள் எவ்வித மாறுதலும் அல்லாமல் அப்படியே நுழைந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. இயல்பான விஷயம்தான். ஆனால் தமிழ் சினிமா உருவாகத் துவங்கி தனது நூற்றாண்டை நெருங்கப் போகும் சமயத்திலும் ஏறத்தாழ அதே நாடகத்தன்மையை இன்னமும் கைவிடாமலிருப்பதுதான் சங்கடமாக இருக்கிறது. இதை தமிழ் சினிமாவிற்கு என்று மட்டுமல்லலாமல் சில அரிதான விதிவிலக்குகளையும் கலைப்படங்களையும் தவிர்த்து ஏறத்தாழ அனைத்து இந்தியச் சினிமாக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். கட்டாயமாக திணிக்கப்படும் நான்கைந்து பாடல்கள், இரண்டு சென்ட்டிமென்ட் காட்சிகள், மூன்று சண்டைக் காட்சிகள், அபத்தமான நகைச்சுவை இணைப்புக் காட்சிகள், நாயக பிம்பங்களை ஊதிப்பெருக்கிக் காட்டுவதற்காக உருவாக்கப்படும் செயற்கையான கதை என்று குடுகுடுப்பைக் காரன் சட்டை போல பொருந்தாத பல விஷயங்களை ஒன்றிணைத்து தருவதுதான் இந்திய சினிமாவின் வடிவம் என்றாகியிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக நமக்கு பழகிப் போன காரணத்தினாலேயே இந்த அபத்தக் களஞ்சியத்தைதான் சினிமா என்று சக்கையைப் போல மென்று கொண்டிருக்கிறோம்.

***

நுட்ப ரீதியான விஷயத்தில் சில பாய்ச்சல்களை தமிழ் சினிமா நிகழ்த்தியிருந்தாலும் நுட்பம் என்பது சினிமாவை உருவாக்க உதவும் ஒரு கருவிதான். ஆனால் கதைகூறல் முறையில் இன்னமும் தமிழ்சினிமா  பின்தங்கிதான் இருக்கிறது. நம்முடைய சமூகத்து தொன்மையான கதையாடல்களின் படி இந்த வடிவம்தான் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது, எனவே இதை  விட்டு ஏன் மேற்கத்திய வடிவத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி எழலாம். எழுத்து இலக்கியத்தில் சிறுகதை, நாவல் போன்றவைகளும் மேற்கிலிருந்து இங்கு இறக்குமதியானவைதான். அவைகளுக்கென்று உள்ள பிரத்யேகமான வடிவத்தை நாம் பின்பற்றும் போது காட்சி ஊடகமான சினிமாவிற்கென்று உள்ள அடிப்படையான விஷயங்களை கைவிட்டு கூட்டுஅவியல் முறையையே ஏன் இன்னமும் பின்பற்ற வேண்டும்? ஓர் அந்நிய நுட்பத்தை நம்முடைய கலாசாரம் அதன் இயல்புக்கேற்ப உருமாற்றிக் கொண்டிருக்கிறது என்று வாதிடுபவர்களும் உண்டு. 

ஆனால் தமிழ் சினிமா அந்தச் சமூகத்தின் கலாசாரத்தையா பிரதிபலிக்கின்றது?  வெகுசன தமிழ் சினிமாக்களில் உள்ள சிறப்புக்களை எப்படியோ தோண்டியெடுத்து கண்டுபிடித்து சிலாகிக்கும் அறிவுஜீீவி விமர்சகர்கள் உண்டு. உலகின் முதல் குரங்கு தமிழக்குரங்குதான் என்று நிரூபிப்பதில் அலாதியான இன்பவெறி காண்பவர்கள். நுட்ப நோக்கில், நடிகர்களின் பங்களிப்பு நோக்கில், இயக்குநர்களின் உருவாக்க நோக்கில் தமிழின் வெகுசன திரைப்படங்களில் துண்டு துண்டாக சில சிறப்பம்சங்கள் உண்டுதான் என்றாலும் அவைகள் தமிழ் சினிமா எனும் தேய்வழக்கு வடிவமைப்புக்குள் செயற்கையாக இணைக்கப்பட்டிருப்பதின் காரணமாக ஒட்டுமொத்த அனுபவத்தில் சலிப்பையே தருகின்றன.

அயல் சினிமாக்களை காணும் வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த சலிப்பு பன்மடங்காக பெருகுகிறது. நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று உலகின் பல சிறந்த திரைப்படங்களை காணும் வாய்ப்பிருக்கிற தமிழ் ரசிகர்கள் அவற்றை இங்கு உருவாகும் சினிமாவுடன் ஒப்பிட்டு தங்களின் அதிருப்தியை வெளியிட்டபடி இருக்கிறார்கள். ஏறத்தாழ தமிழ் திரைப்படங்களுக்கு இணையான வெற்றியை ஆங்கில மொழிமாற்ற திரைப்படங்கள் பெற்று தமிழ் சினிமாக்களுக்கு நெருக்கடியை தருகின்றன. இதை உணர்ந்து கொண்டு புதிய தலைமுறை இயக்குநர்களும் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகூறல் முறையிலிருந்து விலகி மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். என்றாலும் கூட சமரசங்கள் மற்றும் வணிக நெருக்கடிகள் காரணமாக அவர்களால் முற்றிலுமாக இதிலிருந்து விலக முடியவில்லை.

சமீபத்திய உதாரணத்திலிருந்து சொல்கிறேன். தனி ஒருவன் என்றொரு திரைப்படம். சுவாரசியமான திரைக்கதை காரணமாக  வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. சாலையில் தூங்கிக் கொண்டிருப்பவனையும் எச்சில் துப்புவனையும் கொன்று விட்டால் இந்தியா வல்லரசாகி விடும் என்கிற ஷங்கர் திரைப்படத்தின் அபத்தமான கருத்தியலை முன்வைக்காமல் ஓர் அரசையே பின்நின்று இயக்கும் வணிக மாஃபியா  வலையின் ஆணிவேரான நபரை அழிக்க முயலும் ஒரு காவல்துறை இளைஞனின் கதை. என்றாலும் இதில் பல தர்க்கப்பிழைகள், வழக்கமான இடைச் செருகல்கள். நாயகனின் உடலில் வேவு பார்க்கும் கருவியைப் பொருத்தி ஒலியின் மூலம் அவனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறான் வில்லன். தம்முடைய நடவடிக்கைகள் எல்லாம் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்படும் காரணம் தெரியாமல் அவதிப்படும் நாயகன் ஒரு கட்டத்தில் அதனைக் கண்டு பிடித்து விடுகிறான். அந்தச் சமயத்தில்தான் அவனுடைய காதலி வருகின்றாள். அவளிடம் தன்னுடைய காதலை  சொல்லத்தான் அவன் வரச் சொல்லியிருக்கிறான். என்றாலும் நெருக்கடியான சூழல் காரணமாக அவளிடம் கோபப்படுவது போல கத்தி விட்டு பின்பு சைகையின் மூலம் தன்னுடைய பிரச்சினையைச் சொல்கிறான். இருவரும் மெளனமாக தங்களின் காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். 'வேவு பார்க்கும் கருவியை நீக்க மருத்துவர் வர இன்னமும் அரை மணி நேரம் இருக்கிறது, என்ன செய்யலாம்? என நாயகி எழுதிக் கேட்கிறாள்.

அடுத்து வருகிறது ஒரு டூயட் பாட்டு. ஒருவன் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்திலா காதல் செய்வார்கள்? இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தருணங்களை குரூரமாக நிறுத்தி தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா விஷயங்களை அபத்தமாக அதில் திணித்து ஒரு நுண்ணுணர்வுள்ள பார்வையாளனை செருப்பால் அடிப்பது போன்ற காரியங்களை ஏன் தமிழ் இயக்குநர்களால் கைவிட முடியவில்லை? குறுந்தகடுகளில் பார்க்கும் சமயத்திலாவது இதை தாண்டிச் சென்று விடலாம். திரையரங்கில் பார்க்கும் போது என்ன செய்வது? இப்படி பல இடைச்செருகல் உதாரணங்களை தமிழ் சினிமாவிலிருந்து தோண்டியெடுத்துக் கொண்டேயிருக்கலாம். இதனாலேயே தமிழ் சினிமாக்களின் அபத்தங்களை சகித்துக் கொள்ள இயலாமல் அயல் சினிமாக்களிடம் தஞ்சமடையும் பார்வையாளர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்.

இந்தச் சூழலில் வெளியாகியிருக்கும் கமல்ஹாசனின்  'தூங்காவனம்'  திரைப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகூறல் முறையிலிருந்து முற்றிலும் விலகி ஏறத்தாழ ஹாலிவுட் சினிமா பாணியைக் கொண்டிருப்பது ஓர் ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

***

கமல்ஹாசனிடம் சமீப காலமாக சில ஆச்சரியமான மாற்றங்களை கவனிக்க முடிகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தை முடிக்க ஓர் ஆண்டிற்கும் மேலான காலத்தை அவர் எடுத்துக் கொள்வார். ஆனால் சமீபகாலமாக அவரது அடுத்தடுத்த திரைப்படத்தின் அறிவிப்புகள் குறுகிய நேரத்தில் தொடர்ந்து வெளியாகின்றன. விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏறத்தாழ முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் மெருகேற்றலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'உத்தம வில்லன்' வெளிவந்து துவக்க நாளின் சிக்கலோடு ஓடியோ ஓடாமலோ கடந்து சென்று விட்டது. அதற்குள்ளாக  மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற திரிஷ்யம், தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் வந்து அதுவும் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது.

இந்தச் சூடு அடங்குவதற்குள்ளாக அவரது அடுத்த திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளிவந்தது. அந்த திரைப்படத்தின் பெயர் 'தூங்காவனம்'. இது Sleepless Night எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக். விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலமாக ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தாண்டி வரவே இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களை குறுகிய நேரத்தில் கமல் உருவாக்குகிறார் என்று சொல்லப்படுவதில் எத்தனை தூரம் உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. எனவே இதில் குறைந்தபட்ச வெற்றியை முதலிலேயே உறுதி செய்து கொள்ள, வெற்றி பெற்ற மற்ற மொழித் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் என்னதான் ரீமேக்கிற்காக மாங்கு மாங்கென்று உழைத்தாலும் எழுத்திலக்கியத்தில் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்கும் சம்பிரதாயமான பாராட்டுதான் பொதுவாக இதற்கும் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் இது மறுஉருவாக்கம்தானே என்கிற எண்ணம் பார்வையாளர்களின் மனதில் உறைந்தபடி இருக்கும். கமல் போல அற்புதமான கலைஞனுக்கு ரீமேக்குகளில் நடிப்பது நிச்சயமான சவாலான விஷயமல்ல என்று தோன்றுகிறது. அவர் இதுவரை நடித்திருக்கும் ரீமேக் படங்களின் எண்ணிக்கையையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் வைத்து இதைச் சொல்லிவிடலாம்.

கமல்ஹாசன் இப்படி மறுஉருவாக்கப்படங்களாக அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பது ஒருவகையில் ஆச்சரியம் என்றால் 'தூங்காவனத்திற்காக' பிரெஞ்சு திரைப்படத்தை அதிகாரபூர்வமான முறையில் ரீமேக்காக உருவாக்குவது இன்னொரு ஆச்சரியம். Plagiarism  தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத படைப்பாளிகளே இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து கதையை, காட்சியை உருவுவது ஏதோ சமீப காலத்திய விஷயம் என்பது போல் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இது பழக்கமான விஷயம்தான். சமயங்களில் முறையாக அனுமதி பெறப்பட்டும் (இந்தியாவிற்குள்ளாக) சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அது சொற்பமானது. அதிலும் அயல் தேசத்து திரைப்படங்கள் என்றால் கேள்வி கேட்பாரே கிடையாது. ஆளாளுக்கு உருவி சிதைத்து ஜாலியாக குழம்பு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் உருவாகும் தமிழ் சினிமாக்களின் கச்சாப் பொருளே கொரிய சினிமாக்கள்தான். இப்படியாக அயல் தேசத்து சினிமாக்களில் உருவும் தமிழ் படைப்பாளியாக கமலையே பொதுவாக பிரதானமாக சுட்டிக் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் அதிகமாக உருளுவது கமலின் தலையாகத்தான் இருக்கும். இவைகளில் பெரும்பாலும் உண்மையுண்டு. அவர் தமிழ் மசாலாவில் பொறித்தெடுத்துக் கெடுத்த அல்லது சுமாராக ஒப்பேற்றிய பல அயல் சினிமாக்களை ஒரு பட்டியலே இடலாம்.

இந்த நிலையில் அதிகாரபூர்வமான முறையில் ஓர் அயல்தேசத்து சினிமாவை மறுஉருவாக்கம் செய்வது கமலின் திரைப்பயணத்தில் இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன்.  உலகமயமாக்கத்தின் விளைவாக அதன் சந்தை இன்னமும் விரிவடைந்து வரும் சூழலில் உலகிலேயே அதிகமான திரைப் பார்வையாளர்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதினால் இதுநாள் வரை அறியப்படாமல் அல்லது கண்டுகொள்ளப்படாமல் இருந்த வணிக மதிப்பை இப்போது தீவிரமாக சர்வதேச சினிமா நிறுவனங்கள் உணரத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் பிரபல திரைப்படங்களில் நேரடியான Plagiarism குற்றச்சாட்டு இருந்தால் உடனே அது சம்பந்தப்பட்ட படநிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையை எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். எனவே கமலின் இந்த மாற்றத்திற்கு இந்தச் சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம். சட்ட விதிகளுக்கு உட்படாத வகையில் அதன் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கும் விதமாக  நாலைந்து அயல் சினிமாக்களிலிருந்து விஷயங்களை உருவி அவியல் செய்யும் சாமர்த்தியமான சமையல் இயக்குநர்களும் உண்டு.

***

ஹாலிவுட் சினிமாவும் 2015-ல் மறுஉருவாக்கம் செய்யப் போகும் பிரெஞ்சு திரைப்படமான 'Sleepless Night' (Nuit Blanche) திரைப்படத்தை  சில மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். இதன் சுவாரசியத்திற்கு அடிப்படையே இதன் அபாரமான திரைக்கதைதான். மற்றபடி ஒரே இரவில் நிகழும் இதன் மையக்களன் வழக்கமானதொன்றுதான். போதைப் பொருள் கும்பலால் கடத்தப்பட்டிருக்கும் தன் மகனை மீட்பதற்காக ஒரு காவல்துறை அதிகாரி ஆவேசமாக செய்யும் சாகசங்கள் கொண்ட வழக்கமான கதைதான். ஆனால் படுவேகமான, அசத்தலான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.

வேகமான திரைக்கதை என்றாலே பொதுவாக பலரும்  சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஸிட்பீல்ட் உபதேசித்திருக்கும் Three-act structure-ஐ  ஏதோ கணிதசூத்திரம் போல அப்படியே பொருத்தினால் அது உணர்வுபூர்வமான படைப்பாக அல்லாமல் இயந்திரத்தனமான சக்கையாகத்தான் வெளிவரும். வேகமான திரைக்கதை என்பது  அது மட்டுமேயல்ல. பார்வையாளனை கதாபாத்திரங்களோடும் சம்பவங்களோடும் அகரீதியாக ஒன்றச் செய்து அவனுடைய ஆவலையும் பதற்றத்தையும் தூண்டியபடியே இருப்பது. காதல் சார்ந்த கதையில் கூட இதை சாதிக்க முடியும். த்ரிஷ்யம் திரைப்படத்தில் கூட என்ன ஆக்ஷன் காட்சிகள் இருந்தது? ஆனால் பார்வையாளன் நகத்தைக் கடித்தபடி அதைப் பார்க்கவில்லையா?

எல்லாக் கதைகளும் ஏற்கெனவே சலிக்க சலிக்கச் சொல்லப்பட்டு விட்ட இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்திற்கு மிக மிக அடிப்படையானது திரைக்கதைதான். மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் அபாரமான உருவாக்கத்திற்கு காரணம் மூன்று விஷயங்கள்தான். ஒன்று, திரைக்கதை. இரண்டு, திரைக்கதை. மூன்றும் திரைக்கதையேதான். அப்படியெனில் கதை என்று இருக்க வேண்டாமா? நிச்சயமாக. இல்லையெனில் அது சவத்திற்கு செய்யப்பட்ட ஒப்பனைகள் போல எத்தனை சாமர்த்தியமான திரைக்கதையும் நுட்பங்களையும் கொண்டிருந்தாலும்  ஜீவனேயில்லாமல் போய் விடும்.

கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கின் மறுஉருவாக்கத்திற்காக தேர்வு செய்தது சற்று ஆச்சரியத்தை தருகிறது. ஏனெனில் இது 'இந்தியத்தன்மை' அல்லாத ஹாலிவுட் ஆக்ஷன் வகையிலான திரைப்படம். புதியஅலை திரைப்படங்கள் தமிழில் தற்போது வெற்றி பெற்றுவரும் சூழலில் இந்த ஆக்ஷன் தன்மையை பெரிதும் மாற்றாமல் ரீமேக் செய்வாரா என்கிற ஐயம் 'தூங்காவனத்தை' பார்ப்பதற்கு முன்னால்  இருந்தது. ஏனெனில் கமல் இதற்கு முன்பாக நகலெடுத்த  அல்லது மறுஉருவாக்கம் செய்த திரைப்படங்களை தமிழ்ப் பார்வையாளர்களுக்கு நெருக்கம் ஏற்படுத்த அதன் மூலம் இங்கு திறமையாக சந்தைப்படுத்த செய்த மாற்றங்கள், இணைத்த விஷயங்கள் பெரும்பாலும் மூலப்படைப்பை சிதைப்பவையாக, கொச்சைப்படுத்துபவையாக அமைந்திருந்தன.

உலக சினிமாக்களை காணும், அவற்றை உள்ளூர் படைப்புகளோடு ஒப்பிட்டு சலிப்புறும் சமகால பார்வையாளனின் நவீன மனதை கமல்ஹாசன் ஒருவேளை சரியாக புரிந்து கொண்ட காரணத்தினால் பிரெஞ்சு திரைப்படத்தை ஏறத்தாழ காட்சிக்கு காட்சி அப்படியே பின்பற்றியிருந்தார். தமிழ் சினிமாவின் வழக்கமான இடைச்செருகல்களான பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், மிகையுணர்ச்சி அழுகைக் காட்சிகள் போன்றவை இதில் இல்லவே இல்லை. சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை.

இதில் சித்தரிக்கப்படும்படி காவல்துறையிடம் சாட்சி சொல்வதற்காக இத்தனை ஆர்வம் காட்டும் நடுத்தரவர்க்க மனிதர், அதிலும் படத்தில் காட்டப்பபடும் சமூகத்தைச் சார்ந்தவர் எவராவது யதார்த்தத்தில் இருக்கிறார்களா என தெரியவில்லை. இன்னொரு காட்சியில் உத்தம வில்லன் வெளியாவதில் துவக்க நாளில் ஏற்பட்ட சிக்கல் வேறு பெயரில் தொலைக்காட்சி செய்தியாக காட்டப்படுகிறது. திரையின் வெளியில் நிகழ்ந்த நடிகரின் தனிப்பட்ட விஷயம் அந்நியமாக இந்த திரைக்கதைக்குள் தேவையின்றி திணிக்கப்படுவது நெருடலை ஏற்படுத்துகிறது. நடிகர்களின் உடைகளும் உடல்மொழியும் ஏறத்தாழ பிரெஞ்சு திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல அப்படியே நகலெடுக்கப்பட்டதால் ஒரு டப்பிங் படத்தை பார்க்கும் உணர்வு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். முறையான அனுமதியில்லாமல் தலைமறைவு அடையாளத்தில் வாழும் புலம்பெயர் நபர்களின் வாழ்வியல் சிக்கலை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரம் மூலப்படத்திலிருந்து இங்கு வேறுவிதமாக சிதைக்கப்பட்டிருந்தது. மிக முக்கியமாக, பிரெஞ்சு திரைப்படத்தின் காவல்துறை அதிகாரி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக போதைப் பொருளை  கடத்தி விற்கிறவனா அல்லது உண்மையிலேயே under cover ஆசாமியா என்பது சற்று பூடகமாக குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழில் இது சுத்திகரிக்கப்பட்டு 'நாயகன் என்றால் நல்லவன்தான்' என்கிற வழக்கமான பாணியாக மாற்றப்பட்டிருக்கிறது.

இப்படி சில பிசிறுகள் இருந்தாலும் படம் துவங்கிய நேரத்திலிருந்து எந்தவித இடைச்செருகலும் அல்லாமல் படத்தின் மையத்திற்கு தொடர்பான விஷயங்களுடன் மட்டுமே 'தூங்காவனம்' பயணித்தது ஆறுதலாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிகழும் இடம் இரவுநேர கேளிக்கை மையம் என்பதால் மல்லிகா ஷெராவத்தை அழைத்து வந்து ஒரு ஐட்டம் பாடலை நைசாக செருகி விடுவது போன்ற விஷயங்களை  கமல் செய்துவிடுவாரோ என்று நினைத்து பயந்து  கொண்டிருந்தேன். நல்லவேளையாக அப்படி எந்தத விபத்தும் நிகழவில்லை

இவ்வகையான ஹாலிவுட் பாணி திரைக்கதைகள் தமிழிற்கு பழகும் போது அவற்றின் தேவையற்ற இடைச்செருகல்கள் மெல்ல மெல்ல உதிர்வதின் மூலம் ஆரோக்கியமான, சுவாரசியமான வெகுசன திரைப்படங்கள் தமிழில் உருவாகக்கூடிய சாத்தியத்தை ஒரு முன்னோடி முயற்சியாக நின்று உறுதிப்படுத்தியிருக்கிறது 'தூங்காவனம்'



 (உயிர்மை இதழில் பிரசுரமானது)

suresh kannan

Wednesday, November 27, 2019

பீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்




மனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். அந்தந்த கணத்தின் பரபரப்பான நிகழ்வுகளை, சர்ச்சைகளை ஒரு சுவிங்கம் போல் மென்று அதன் சுவை கரைவதற்குள்  துப்பி விட்டு அடுத்த சுவிங்கத்தை நோக்கி ஓடும் செய்தி ஊடகங்களின் பரபரப்பான பாணியை இணைய வம்பாளர்களும் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். ஆனால்  விசையை முடுக்கினாற் போல் அதிலொரு மாற்றம் சமீபத்தில்  நிகழ்ந்தது.   தமிழகத்தின் நான்கைந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொழுதுபோக்கு உரையாடல்களும் வம்புகளும் சட்னெ்று நின்று போய் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணிகளும் உதவி கோருதலும் பெறுதலுமாக சூழல் பரபரப்பாக மாறிற்று. இது ஆக்கப்பூர்வமான பரபரப்பு. இணைய மொண்ணைகள் என்று பொதுவான எள்ளலில் குறிப்பிடப்படும் இவர்களால்தான் பெரும்பாலான பாதிக்கப்பட்ட நபர்கள் தக்க நேரத்தில் உதவி பெற்றார்கள், காப்பாற்றப்பட்டார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒரு சமூக  நிகழ்வு.

நான்கைந்து நாட்கள் நீடித்த இந்த நல்ல மாற்றத்தை மீண்டும் தலைகீழாக்கியது ஒரு பாடல் மீீதான சர்ச்சை. தமிழகம் இயல்பு நிலைக்கு மாறியதோ இல்லையோ, இணைய உலகம் அதன் 'இயல்பு நிலைக்கு' சட்டென்று திரும்பி விட்டது. வெள்ள சேதம் ஏற்பட்டதற்கான அரசியல் காரணங்களும் அது சார்ந்த கோபங்கள், உரையாடல்கள் அனைத்தும் சர்ச்சைப் பாடலின் மீதான வம்பு வெள்ளத்தில் மூழ்கியது. இந்தப் போக்கு நம் கலாசார பலவீனங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது.

இந்த சர்ச்சை தொடர்பான விவரங்கள் என்னவென்று தெரியாதவர்களுக்காக (அப்படி எவரேனும் உள்ளாார்களா என்ன?) அதைப் பற்றிப் பார்ப்போம். தமிழகத்தின் மாவட்டங்கள் வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்டு அதனிடமிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் போது இணையத்தில் ஒரு பாடல் வெளியாகிறது. பாடியவர் நடிகர் சிம்பு எனவும் இசையமைப்பாளர் அனிருத் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பாடலின் முதல் வரியிலேயே பெண்களின் அந்தரங்க உறுப்பைச் சுட்டும் கொச்சையான வார்த்தை ஒன்று உபயோகப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள ஓர் எழுத்து மாத்திரம் பீஃப் ஒலியால் மூடப்பட்டிருந்தது. என்றாலும் அது என்ன வார்த்தை என்று கேட்கும் பெரும்பாலோனோர்க்கு எளிதாகவே புரியும். அதுதான் அதன் நோக்கமும் கூட என்று தெரிகிறது.

பொதுவாக இணையத்தில் உரையாடப்படும் சர்ச்சைகள் இணைய அளவிலேயே உயர்ந்தெழுந்து அடங்கி ஓய்ந்து விடும். ஆனால் இந்த சர்ச்சையின் மீதான எதிர்ப்பு இணையத்தையும் தாண்டி சமூக வெளியிலும் கடுமையாக பிரதிபலித்தது.  மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய இயக்கம் போன்றவர்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்த்துமளவிற்கு சென்றது. காணொளி ஊடகங்களில் செய்தியாளர்களும் கனவான்களும் கொதிப்புடன் இதைப் பேசி பேசி மாய்ந்தார்கள். சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் தூக்கில் போட வேண்டும், தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற ஆவேசமான குரல்கள எழுந்தன. இது தொடர்பான பல வழக்குகள் ஒருபுறம் தொடுக்கப்பட மற்றொரு புறம் காவல்துறை விசாரணயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சர்ச்சையையொட்டி பொதுச் சமூகத்தின் இந்த அதீதமான எதிர்ப்பு பாசாங்கிற்குப் பின்னால் உள்ள உளவியலையும் இது போன்ற ஆணாதிக்கச் செயற்பாடுகளின் பின்னே உறைந்திருக்கும் சமூகவியல் காரணங்களையும், அறிவுசார் சமூகம் இது போன்ற சர்ச்சைகளை கையாள வேண்டிய நிதானத்தைப் பற்றியும் என்னளவில் சொல்ல முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். தவறிழைப்பவர்களை காப்பாற்றுவதோ அல்லது இது போன்ற கீழ்மைகளை ஊக்குவிப்பதோ அல்ல. இது போன்ற ஆணாதிக்கத் திமிரினால் எழும் செயற்பாடுகள் பெண்களின் மீது செலுத்தப்படும் மனம்/உடல் சார்ந்த வன்முறைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் மேலதிக காரணமாகி நிற்கின்றன என்கிற பிரக்ஞை இல்லாமல் இல்லை. என்றாலும் ஒரு Devil's advocate-ன் குரலை மனச்சாய்வற்ற நீதியொன்று கவனிப்பதைப் போல இந்தச் சர்ச்சையின் மீதான மறுபக்க நியாங்களையும் பற்றி நாம் நிதானமாக கவனிக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒருவகையில் இந்தச் சர்ச்சை மீது எழுந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அதீதமான எதிர்ப்பும் அதிலுள்ள போலித்தனங்களும் பாசாங்களுமே இதை எழுதத் தூண்டியது. இந்த அதிகமான எதிர்ப்பே இந்தப் பாடலின் மீதான அதிக கவனத்தைக் குவித்து விட்டதோ என்பதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

***

திரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாச வரிகளால், வார்த்தைகளால் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்குவது நமக்குப் புதிதான விஷயமல்ல. ஆனால் இந்த குறிப்பிட்ட சர்ச்சையில் ஏறக்குறைய சமூகத்தின் அனைத்து தரப்பும் இந்த எதிர்ப்பில் ஒன்றிணைந்து  மிக கடுமையான அளவிற்கு பரபரப்பு எழுவது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இது போன்ற சர்ச்சைகளில் பொதுப்புத்தி சார்ந்தவர்களின் நிதானமற்ற உடனடி ஆவேசம் எவ்வாறிருக்கும் என்பது புதிதானதல்ல. 'திருடன் பராபஸை விடுதலை செய், இயேசுவை சிலுவையில் ஏற்று' என்கிற கூக்குரலிட்ட வேதாகம காலத்திலிருந்து பொதுமக்களின் நிதானமற்ற எதிர்வினைகளுக்கான வரலாற்று உதாரணங்கள் நிறைய உள்ளன. பொதுப்புத்தியின் நிதானமற்ற, உடனடியான கண்மூடித்தனமான எதிர்ப்பு காலங்காலமாக எவ்வாறு இருக்கிறது என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஆனால் இது போன்ற நெருக்கடியான சூழல்களை நிதானத்துடன் அணுக வேண்டிய அறிவுசார் சமூகமும் இந்தச் சர்ச்சையையொட்டி பொதுப்புத்தியுடன் இணைந்து கொண்டது ஆபத்தான போக்கு. இவர்களின் நோகக்கில் சமநிலை தவறிய சிலபல எதிர்வினைகளை கவனிக்க நேர்ந்தது. மற்ற சமயங்களில் நிதானத்துடன் அவற்றின் பல்வேறு பரிமாணங்கள் சார்ந்து சிந்திக்கும் இந்த அறிவுஜீவிகள் இந்தச் சர்ச்சையை ஏன் மிகையுணர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள் என்று எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரின் வீட்டுப் பெண் கலைஞர்கள் நடனமாடினால் இந்தப் பாடலுக்கு குறிப்பாக அந்த சர்ச்சையான வார்த்தைக்கு எவ்வாறு அபிநயம் பிடிப்பார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் ஓர் ஆவேசமான கட்டுரையை எழுதினார் ஒரு பெண்ணிய எழுத்தாளர். இணையத்தில் ஒருபக்கம் அதற்குப் பலத்த வரவேற்பும் மறுபுறம் கண்டனங்களும் இருந்தது. அந்தப் பெண்களும் ஆணாதிக்கப் போக்கினால் பாதிக்கப்படுவர்களாக (Victim) இருக்கலாம், அதனாலேயே அவர்களின் எதிர்வினைகள் மெளனமாகி அல்லது அடங்கிப்  போயிருக்கலாம் என்கிற யூகத்தின் மீதான சந்தேகத்தின் பலனைக் கூட தராமல் குற்றஞ்சாட்டிருக்கப்பட்டவர்களின் உறவினர்களை முன்முடிவுடன் கடுமையாக விமர்சித்த போக்கை என்னவென்பது? இன்னொரு பெண்ணிய எழுத்தாளர் - அவர் உளவியலாளரும் கூட - பாடலின் முதல் வார்த்தை தொடர்பான விமர்சனத்தை வைத்து விட்டு, இது  போன்ற கயவர்களை புறக்கணித்து விட்டு  நம் வேலையைப் பார்ப்போம் என்று முகநூலில் எழுதுகிறார். கயவர்களும் சமூகத்திலிருந்து உருவாகிறவர்கள்தான். அதன் ஒரு பகுதியாக இருப்பவர்கள்தான். ஒரு மனிதன் கயவனாவதற்கு பின்னணியிலுள்ள உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களைப் பற்றி அந்த உளவியலாளருக்கு தெரியாதா? அவரும் இந்த தருணத்தில் பொதுப் புத்தியைச் சார்ந்த எதிர்வினையையே ஏன் செய்கிறார்? இந்த மனோபாவத்தில் அமையும் இவருடைய முன்முடிவுகள் சிகிச்சையாளர்களைப் பாதிக்காதா?

இது போன்று மேலும் சில உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும். எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாக பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு 'பின்நவீனத்துவ' எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்று ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை. இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் 'நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றை குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை' என்கிறார். புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை. முன்பு சில பெண்ணிய எழுத்தாளர்கள் தங்களின் அந்தரங்க உடல் உறுப்புகளையே பிரதானமாகக் கொண்டு கவிதைகள் எழுதினார்கள். உடலரசியல் சார்ந்த  கோபம் அதில் இருந்தது. 'ஆணாதிக்க மனோபாவத்தை நோக்கி.. இந்த உறுப்புகளை வைத்துத்தானே எங்களைச் சீண்டுகிறீர்கள். கிண்டலடிக்கிறீர்கள்... இதோ நாங்களே எங்கள் படைப்புகளில் முன்வைக்கிறோம்.." என்பது போன்ற கலகமும் அறச்சீற்றமும் அவற்றில் இருந்தன. ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் கவன ஈர்ப்பிற்காகவும் காமம் சார்ந்த கிளர்ச்சியை மட்டும் தூண்டும் பின்நவீனத்துவப் போலிகளும்  இந்தச் சர்ச்சை எதிர்ப்பில் கலந்து கொண்டதுதான் நகைச்சுவை.

***

இணையத்தில் வெளிவந்த அல்லது கசியவிடப்பட்ட அந்தப் பாடல், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட் ஒரு சினிமாப்பட பாடலோ அல்லது தனியார் ஆல்பத்தின் பாடலோ அல்ல. அது டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்கிறார்கள். அதனுடன் தொடர்புள்ளதாக சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர்களின் பெயர்கள் இருந்தாலும்  அனிருத் இதற்கு தான் இசையமைக்கவில்லை என்று மறுத்து அல்லது ஒதுங்கி விட்ட நிலையில் சிம்பு இதை தான் பாடியதாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் தன்னுடைய அந்தரங்கமான சேமிப்பிலிருந்த பல பாடல்களில் ஒன்றான இதை எவரோ திருடி இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார். அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் இருவர் மீதும் இது போன்ற சர்ச்சைகளின் மீதான குற்றச்சாட்டுகள்ஏற்கெனவே இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட சர்ச்சையில் அது சிம்பு தரப்பால்தான் இணையத்தில் வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்படாத சூழலில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்துதான் ஆக வேண்டும். அது நிரூபிக்கப்படுவதற்குள் சமூகமே இணைந்து தர்மஅடி போடுவது தர்மமே ஆகாது. அத்தனை பெரிய அரசு இயந்திரத்தை கையில் வைத்திருக்கும் சமகால ஆளுங்கட்சியே தம்மை  விமர்சித்த 'நட்ராஜ்' என்பவர் எவர் என்பதை சரியாக ஆராயமலேயே நடவடிக்கை எடுத்த கேலிக்கூத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நிதானமான விசாரணைகளின் மீது உருவாகும் நீதிதான் ஏறத்தாழ சரியானதாக இருக்கும்.

இந்தப் பாடலை நடிகர் தரப்பே வெளியிட்டு விட்டு பின்பு இத்தனை கடுமையான எதிர்ப்பை எதிர்பார்க்காததால் மறுக்க விரும்புகிறார்களோ என்கிற ஐயம் எழுந்தாலும் கூட 'தாங்கள் நிரபராதிகள்' என்கிற அவர்களின் முறையீட்டை நிதானமாக பரிசீலிப்பதே முறையானது. தமிழகமே வெள்ள சேதத்தினால் தத்தளிக்கும் சமயத்தில் இந்தப் பாடலை வெளியிட எத்தனை திமிர் இருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ஒருவேளை இது நடிகர் தரப்பினால் விளம்பர நோக்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் தமது வணிக நடவடிக்கைகளை பாதிக்கும் என்பது கூடவா அவர்களுக்குத் தெரிந்திருக்காது?. 'எனக்கு இழுக்கு தேடித்தரவே எவரோ இதை திருடி வெளியிட்டுள்ளனர்' எனறு நடிகர் கூறும் விளக்கமும், இந்தப் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிடப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது சரிதானோ என்று தோன்றுகிறதா இல்லையா? மழை வெள்ள அபாயத்தை சரியாக நிர்வகிக்காத ஆளுங்கட்சிக்கு எதிராக  மக்களுக்கு இயல்பாக எழுந்த கோபத்தை திசை திருப்புவதற்காகவே இந்தப் பாடல் வெளியிடப்பட்டது என்றெழுகிற இன்னொரு யூகத்திற்கான சாத்தியக்கூறு இருந்தாலும் அது தொடர்பான குற்றவாளியைத்தானே தேட வேண்டும்?  எந்தவொரு குற்றச்சாட்டையும் 'இது எதிர்க்கட்சிகளின் சதி' என்று மறுக்கிற அரசியல்வாதிகளின் நகைச்சுவைப் போக்கையும் இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.

தன்னுடைய அந்தரங்கச் சேமிப்பிற்காக என்றாலும் சிம்பு ஏன்  இது போன்ற பாடலைத் தயாரிக்க வேண்டும்? தனி மனித சுதந்திரப்படி இதைக் கேட்க யாருக்குமே உரிமை கிடையாது. பொதுச் சமூகத்திற்கு முகமூடியணிந்த நல்ல முகத்தைக் காட்டும் நம்முடைய அந்தரங்கத்தில் சமூகத்தால் கீழ்மைகளாக கருதப்படுபவைகள் சிலவற்றின் மீது இச்சையுள்ளது. ஏற்கெனவே பாலியல் வறட்சியால் குமையும் இது போன்ற சமூகத்தில் வேறு எவருக்கும் துன்பம் தராமல் அந்தரங்கத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் செயல்களின் மூலமாக அது சார்ந்த மன அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பதே உளவியல் ரீதியிலான கருத்து. சமூகத்தின் பாலியல் குற்றங்கள் குறையும் நோக்கில் இதற்கான அவசியமும் உள்ளது. மேலும் இந்தப் பாடலின் துவக்கத்திலுள்ள சர்ச்சையான வார்த்தையைத் தாண்டிச் சென்றால், இதரப் பகுதிகள் கொச்சையான வார்த்தைகளில் அமைந்திருந்தாலும் காதல் தோல்வி அடைந்த இளைஞனை நோக்கி 'பெண்களை திட்டாதே.. உன்னையே திட்டிக் கொள்.. உனக்கேற்ற துணை வரும் வரை காத்திரு' என்பது போன்ற உபத்திரவமல்லாத உபதேசங்களே உள்ளன. '.இதற்குத்தானா பாபு?' என்கிறாள் மோகமுள் புதினத்தில் வரும் யமுனா. அதையேதான் வேறு வடிவில் கொச்சையான வார்த்தையில் கேட்கிறது இந்தப் பாடல்.

ஆனால் இந்த துவக்க வார்த்தையை மாத்திரம் வைத்து, அதிலும் இத்தனை பிரம்மாண்டமான சர்ச்சை எழுவதில் எத்தனை அபத்தமுள்ளது என்பதை சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் புரியும். நாம் எதனை பிரதானமாக அழுத்தம் தந்து கவனிக்கிறோம் என்பதும். 'காதலின் புதினத்தை வைத்து love anthem என்கிற தனிப்பாடலைக் கூடமுன்பு நான் உருவாக்கினேன், அதைப் பற்றி யாருமே பேசவில்லையே என்று சிம்பு தரப்பில் கேட்கப்படும் கேள்வியில் குறைந்த பட்ச நியாயம் உள்ளதுதானே? அனிருத் போல இதிலிருந்து விலகி ஓடி விடாமல், பொது மனோநிலையின் எதிர்ப்பை திருப்திப் படுத்தும் விதத்தில் ஒரு போலிக் கும்பிடு போட்டு விட்டு இந்தச்  சர்ச்சையை தாண்டி விட முயற்சிக்காமல் தன்னுடைய தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்ளும் அவரின் அந்த துணிச்சலைப் பாராட்டியேயாக வேண்டும். 'இதை நான்  இணையத்தில் வெளியிடாத போது, யாரோ செய்த தவறினால், என்னுடைய அந்தரங்கச் செயல் ஒன்றை எட்டிப் பார்த்து விட்டு ஏன் இப்படி குற்றஞ்சாட்டுகிறீர்கள், உங்களின் அந்தரங்கத்தை எவராவது வெளிப்படுத்தி விட்டு உங்களையே கண்டித்தால் ஒப்புக் கொள்வீர்களா?' என்று தனிமனித உரிமை நோக்கில் அவர் முன்வைக்கும் கேள்விகளில் நியாயம் உள்ளதா  இல்லையா என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.

சிம்புவின் பிம்பம் என்பது இன்றைய நவீன சராசரி இளைஞனின் குறியீடு. சிம்பு  உண்மையான வாழ்விலும் சரி, திரையிலும் சரி, ஒரு காதலில் விழுவார். புலம்புவார். அது சார்ந்த வன்மத்தை எதிரொலிக்கும் பாடல்களை உருவாக்குவார். பிறகு இன்னொரு காதலில் விழுவார். அதிலும் மறுபடியும் தோல்வி..புலம்பல்.. எரிச்சல். இந்தக் குணாதிசயம் பெரும்பாலும் சமகால சராசரி இளைஞனுக்குப் பொருந்துபவை.  அவர்களில் பலர்  என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள். தாங்கள் காதலித்த பெண்ணை பிரச்சினை ஏற்படும் போது  ஆதாரங்களைக் காட்டி மிரட்டுகிறார்கள், பெண் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக திட்டிப் புலம்புகிறார்கள், இன்னும் சில குதர்க்க குணமுள்ள இளைஞர்கள் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுகிறார்கள், சிலர் செய்தே விடுகிறார்கள். இன்று பொருளாதார ரீதியாக பெண்கள் சுதந்திரம் பெற்று மெல்ல வெளியே வருவதை நவீன ஆண் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. தன்னைச் சார்ந்து நின்ற உடமை தன்னுடைய பாதுகாப்பில் இருந்து வெளியேறி சுயசிந்தனைகளுடன் விலகுவதைக் கண்டு பதட்டமடைகிறது. சாலையில் ஸ்கூட்டியில் தன்னைக் கடந்து செல்லும் இளம் பெண்ணைக் கண்டு தன்னியல்பாக எரிச்சலைடந்து அந்தப் பெண்ணின் மீது மோதுவது போல் செய்வதோ அல்லது அவளைத் தாண்டிச் செல்ல முயல்வதோதான் இன்றைய நவீன இளைஞனின் அடையாளம். இவற்றையேதான் சமகால இளைய நடிகர்களின் திரைப்படங்களிலும் 'வெட்டுடா அவளை, குத்துடா அவளை' என்பது போன்று எதிரொலிப்பதைக் காண முடிகிறது.

இப்படியாக சமூகத்திலும் உள்ள ஆயிரம் சிம்புகளை நாம் எப்போது கண்டிக்கப் போகிறோம்? சினிமா என்பது இருமுனை கத்தி. அது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது; சமூகமும் சினிமாவின் கூறுகளை தன்னிச்சையாக பின்பற்றுகிறது. இதில் சமூகம் மாத்திரம் தன்னை மறைத்துக் கொண்டு  இன்னொரு முனையை மட்டும் எத்தனை காலத்திற்கு குற்றம் சொல்லப்  போகிறோம்? ஒரு நடிகரின் இன்னமும் நிரூபிக்கப்படாத தவறை வைத்து அவரை பொது எதிரியாக நிறுத்தி ஒன்று சேர்ந்து கடுமையாக கண்டிப்பதின் மூலம் ஆணாதிக்க உலகின் வக்கிரங்களையும் தவறுகளையும் மழுப்பிக் கொள்ளப் போகிறோமா?

திரிஷா அல்லது நயனதாரா என்றொரு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க ஆணாதிக்க வசனங்களாலும் வக்கிரமான காட்சிகளாலும் அது நிறைந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது. இன்றைய தமிழ் சினிமாவின் உடனடி பார்வையாளர்கள் இளைஞர்களே. அவற்றின் துவக்க வெற்றியை அவர்களே தீர்மானிக்கிறார்கள். எனில் ஆணாதிக்க மனோபாவமுடைய இளைஞர்கள் நிறைந்துள்ள சமூகத்தில் பிரபலமாக இருப்பதின் காரணத்தினாலேயே ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து கூடிக் கண்டித்தால் தீர்வு கண்டுவிட முடியுமா? இதில் என்ன வேடிக்கையென்றால் பாடலில் உள்ள சர்ச்சையான வார்த்தையை வழக்கமாக பொதுவெளியிலும் இணைய எழுத்திலும் கூசாமல் சொல்லும், எழுதும் இளைஞர்கள் கூட இந்த எதிர்ப்புக்  கூட்டத்தில் சேர்ந்து கொண்டு பாடலில் உள்ள ஆபாச வார்த்தையை விட மேலதிக வார்த்தைகளை அறச்சீற்றத்துடன் எதிர்ப்பு என்ற பெயரில் இறைத்ததுதான். நேற்றைய இளைஞர்கள்தான் இன்றைய பெற்றோர்கள். அவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலும் அந்த வயதுக்குரிய இது போன்ற  ஆணாதிக்க நோக்கிலான ஆபாசங்களை, தடுமாற்றங்களை செய்தவர்களாக இருப்பார்கள். பெரியவர்களாகிய பிறகும் தங்களின்  குடும்பங்களில் ஆணாதிக்க செயற்பாடுகளை இன்னமும் செய்பவர்களாக இருப்பார்கள். இப்படியாக சமூகச் சுழற்சியிலேயே ஆணாதிக்கம் சார்ந்த வன்முறையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற ஒற்றை அடையாள எதிர்ப்பை பாசாங்குடன் செயற்படுத்துவதின் மூலம் அதைப் போக்க முடியுமா? இந்த நோய்க்கூறு மனநிலையின் ஆணிவேருக்கல்லவா சிகிச்சையைத் தேட வேண்டும்?

***

பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த ஒரு சில்லறைத் திருடன் பிடிபட்டு விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது? அந்தப் பேருந்தில் உள்ள பெரும்பாலோனோர் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவரை தர்மஅடி போடுகிறோம். காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். தர்மத்தை நிலைநாட்டிய திருப்தியுடன் கலைந்து செல்கிறோம். ஆனால் அந்தப்  பேருந்தின் உள்ளேயே சில்லறை பாக்கியை ஒழுங்காக திருப்பித் தராத நடத்துநர் இருக்கலாம். இயன்ற அளவில் வருமானவரி ஏய்ப்பு செய்யும் ஆசாமி இருக்கலாம். லஞ்சம் வாங்கும் ஓர் அரசு ஊழியர் இருக்கலாம். தன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சிறுவியாபாரி இருக்கலாம். ஆக.. ஓர் அமைப்பிற்குள்ளே இத்தனை தவறான ஆசாமிகள் இருக்கும் போது ஒரு சில்லறைத் திருடனை ஒன்று சேர்ந்து தண்டிப்பதின் மூலம் தவறுகளை ஒழித்து விட்டதாக கருதிக் கொள்ளுதல் எத்தனை அறியாமை? சில்லறைத் திருடன் உருவாவதற்கான சமூகவியல் காரணத்தையும் உளவியல் காரணத்தையும் பற்றி ஆய்வதுதானே அறிவு சார்ந்த செயற்பாடாக இருக்க முடியும்?

சினிமாப் பாடல்களில், வசனங்களில், உடல்அசைவுகளில், நகைச்சுவைகளில் ஆபாசம் இருப்பதென்பது ஏதோ சமீபத்திய போக்கு அல்ல. அதிலுள்ள வணிக வாய்ப்பையும் அதிகமான லாபத்தையும் கண்டுகொண்டவுடனேயே அது பெருமளவு அதிகரித்து விட்டது.. 'நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.. என்று காமத்தை மிக கண்ணியமாகச் சொன்ன கண்ணதாசன்தான் 'கைக்கு அடக்கமா எடுத்துத் தின்ன வாட்டமா'" என்று 'எலந்தபயம்' பாடலையும்  எழுத நேர்ந்தது. "என்னம்மா..  நான் இத்தனை வருடங்களாக பாடலெழுதி வருகிறேன்.. அதில் எனக்கு கிடைக்காத புகழையெல்லாம்  நீ ஒரே பாடலில் பெற்று விட்டாயே.." என்று எல்.ஆர்.ஈஸ்வரியிடம் அவர் கேட்குமளவிற்கு அந்தப் பாடல் பொதுச்சமூகத்திடம் அபாரமான வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை நிகழ்ந்த ஆபாச பாடல்வரிகள், காட்சிகளையெல்லாம் பட்டியலிட்டால் இன்னொரு பெரிய தனிக்கட்டுரையாக எழுத வேண்டி வரும். சமூகத்தின் நேரடியான, மறைமுகமான ஆதரவு இல்லாமல் அவை  எல்லாம் எவ்வாறு இத்தனை காலமாக வெற்றி பெற முடியும்? இது போன்ற பாடல்களை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த வாலியை வலிக்காமல் அவ்வப்போது கண்டித்தாலும் 'வாலிபக் கவிஞர்' என்றுதானே இச்சமூகம் கொண்டாடியது? இந்தச் சர்ச்சையை திரைப்படப் பாடலாசிரியர்களின் கூட்டறிக்கை ஒன்று கண்டித்ததை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

மேற்கத்திய சமூகங்களைப் போல அந்தந்த வயதுக்குரியவர்களுக்கான தனித்தனி திரைப்படங்கள் எடுக்கும் வழக்கம் இங்கில்லை. எல்லாமே கூட்டுஅவியல்தான். சம்பிரதாயத்திற்காக A சான்றிதழ் வழங்கப்பட்டாலும் அவற்றை எல்லோரும் பார்க்கக்கூடிய நடைமுறைதான் இங்குள்ளது.  குழந்தைகள் படமென்றாலும் சாமிப்படங்கள் என்றாலும் கூட அதில் சாமர்த்தியமாக ஒரு ஆபாசப்பாடலை, காட்சிகளை வணிக நோக்கத்திற்காக செருகி விடும் திரைக்கதை வல்லுநர்கள் பலர் இங்குண்டு. மற்ற படங்களிலாவது அதை ஒழுங்காக காட்டித் தொலைக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சலித்துக் கொண்டபடி ஓர் ஆணின் முகமும் பெண்ணின் முகமும் அண்மைக்காட்சியில் நெருங்கி வருகிறது என்றால் உடனே இடையில் எங்கிருந்தோ ஒரு பூ வந்து ஆடி மறைத்துக் கொள்கிறது. நேரடியாக காட்டப்படும் கவர்ச்சியை விட தணிக்கைத் துறையை ஏமாற்றுவதற்காக இப்படி சாமர்த்தியமாக மழுப்பப்படும் காட்சிகள் அதிக ஆபத்தானது. அவரவர்களின் வக்கிரம் சார்ந்த கற்பனைகளைத் தூண்டும் மோசமான செயலையே இவை செய்கின்றன. பாலியல் சார்ந்த மனப்புழுக்கங்களை அதிகரிக்கின்றன.  நாகரிக உலகின் கட்டுப்பாடுகளின் படி அடக்கி வைக்கிற இந்த அழுத்தங்கள் பாலியல் வன்முறைகளாகவும் குற்றங்களாகவும் வெடிக்கின்றன.

ஒருவகையில் இந்தப்  பாடலில் ஒலிக்கும் பீஃப் ஒலியை ஊடகத் தணிக்கையின் மீதான எள்ளலான விமர்சனமாகவும் கொள்ளலாம். சினிமா வசனங்களில் ஒலிக்கும் ஆபாசமான, வார்த்தைகளை தணிக்கை செய்கிறேன் பேர்வழி என்று ஒலியை மாத்திரம் மழுப்பி அனுமதிக்கிறார்கள். ஆனால் திரையரங்குளில் இந்த மெளன இடைவெளிகளை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் இளம் பார்வையாளர்கள் கூக்குரலிட்டு தங்களின் அங்கீகாரத்தை அதற்கு  வழங்குகிறார்கள். இந்த நோக்கில் பார்த்தால் தணிக்கைத் துறையின் அந்தச் செயலைப் போலவே சுயதணிக்கையுடன் வெளியான இந்தப்பாடலை இத்தனை கடுமையாக எதிர்ப்பதற்கான காரணம் என்ன? நாம் எதிர்க்க வேண்டியது தணிக்கைத் துறையின் அரைகுறையான இந்தப் போக்கையா அல்லது அதன் சிறு பங்கான இந்தப் பாடலையா? இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒருவேளை இவையெல்லாம் குதர்க்கமான வாதங்களாகத் தோன்றினாலும் நம் சமூகத்தின் பெரும்பான்மையான பகுதியே புரையோடிப் போயிருக்கும் போது ஒற்றை எதிர்ப்பின் மூலம் நாம் திருப்தி கொள்ளும் போக்கில் உள்ள அவல நகைச்சுவையைப் பற்றி  நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

***

இந்த ஆணாதிக்க எதிர்ப்புகளில் சார்புநிலை நோக்கில் அவரவர்களுக்குச் சாதகமான விதிகளும் உள்ளன. தன்னார்வலர்களால் நிகழ்த்தப்பட்ட வெள்ள  நிவாரண உதவிகளின் மீது சமகால ஆளுங்கட்சி தன்னுடைய தலைவரின் புகைப்படத்தை ஒட்டிக் கொள்வது தொடர்பாக கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த அசந்தர்ப்பமான சூழலில் செய்யப்பட்ட அராஜகமான சமூக அநீதி  அது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் இது சார்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பெண் முதல்வரின் புகைப்படம் உள்ளாடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கேலிச்சித்திரம் இணையத்தில் உலா வந்தது. இதை அரசியல் சார்ந்த கோபம் என்று நியாயப்படுத்தி விடவே முடியாது. அரசியல் சார்ந்த எதிர்ப்புகளை, கோபங்களை ஜனநாயகம் அனுமதித்திருக்கும் விதங்களில் வெளிப்படுத்துவதுதான் முறையானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் பிரதிநிதியை கொச்சையாக சித்தரிப்பதென்பதும் ஆணாதிக்க செயற்பாட்டின் எதிரொலிதான். உலகெங்கிலுமுள்ள பெண் அரசியல் தலைவர்கள், அவர்கள் பெண் என்னும் காரணத்தினாலேயே அவர்கள் மீது அந்தக் கோணத்தில் எழும் ஆபாசமான கேலிச்சித்திரங்களையும் வம்புகளையும் நாம் காண்கிறோம். ஒரு பெண் அரசியல்வாதியின் மீது சித்தரிக்கப்பட்ட இந்த ஆபாசச் செயலை எந்தப் பெண்ணியவாதியோ, சமூக ஆர்வலர்களோ, பொதுச்சமூக நபர்களோ கண்டித்ததாக தெரியவில்லை. ஆணாதிக்கப் போக்கின் எதிர்ப்பின் நியாயம் அந்தந்த கோணங்களில் மாறுமா என்ன?

சரி. இவற்றிற்கெல்லாம் என்னதான் தீர்வு? இங்கு ஆண் சமூகத்திற்கும் பெண்  சமூகத்திற்கும் இடையில் ஒரு பிரம்மாண்டமான தடுப்புச் சுவர் உள்ளது. தாய்வழிச் சமூகம் தந்தை வழிச்சமூகமாக உருமாறிய ஆதிக்காலத்திலிருந்து இன்னமும் கரையாமல் அழுத்தமாக நிற்கும் சுவர் இது. எனவேதான் சுவற்றிற்கு மறுபக்கம் பார்க்கும் ஆவலும் அது சார்ந்த குற்றங்களும் வன்முறைகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெண்ணின் உடல் சார்ந்த வேதனைகளும் அவற்றின் பிரத்யேகமான பிரச்சினைகளும் வலிகளும்  ஆணுக்கு முறையாக அறிமுகப்படுத்தப்படவேயில்லை. எனவேதான் பெண் என்னும் சகஜீவியை அப்படியல்லாமல் உடல் சார்ந்த கிளர்ச்சிப் பண்டமாக மட்டுமே அவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். ஊடகங்களும் திரைப்படங்களும் இது சார்ந்த கிளர்ச்சியை வளர்த்து தங்களின் வணிகத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஆண், பெண் சார்ந்த பாகுபாடுகள், உயர்வு தாழ்வு அணுகுமுறைகள், தடைகள் சிறுவயதிலிருந்தே அவர்களுக்குள் திணிக்கப்படுகின்றன.

ஆண்கள் உயர்வு மனப்பான்மையுடனும் பெண்கள் அப்படிப் பிறந்த காரணத்தினலாயே தாழ்வுணர்வுடனும் தன் மீது நிகழ்த்தப்படும்  கொடுமைகளை சகித்துக் கொள்ளவும் மறுக்கப்படும் விஷயங்களை மெளனமாக கடந்து போகவும் கற்றுத்தரப்படுகிறார்கள். இந்தச் செயல்களை அறியாமை மற்றும் ஆழ்மன திணிப்பு காரணமாக பெண்களே செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.ஆணுக்கும் பெண்ணுக்குமான தோழமை என்பது முழுக்க தவிர்க்கப்பட்டு அவர்களின் அருகாமை பாலியல் நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டு அது சார்ந்த தடைகளும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பரஸ்பர புரிதல் ஏதுமில்லாமல் தனித்தனி கூண்டுகளில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போன்று இரு தரப்பினரும் வளரும் அவலமான சூழல் நிகழ்கிறது. பெண் என்பவள் எவ்வித பிரத்யேக உணர்வும் அற்ற ஆணின் உடமையல்ல, தன்னைப் போலவே எல்லா உணர்வுகளும் கொண்ட சகஜீவி என்பது ஆண்களுக்கு மிக அழுத்தமாக கற்றுத்தரப்பட வேண்டும். பெற்றோர், சமூகம், ஊடகங்கள், கலை, இலக்கியம் என்று சமூகத்தின் எல்லாத் துறையும் பொறுப்புடன் இணைந்து ஒன்றுகூடி இழுக்க  வேண்டிய தேர் இது.

இதன் மீது அமைந்த உரையாடல்களும் விவாதங்களும் படைப்புகளும் போன்றவை தொடர்ந்து உருவாகிக் கொண்டிருப்பதினால்தான் இந்த மாற்றத்தை நோக்கி மெல்ல மெல்ல சென்று நிலையான தீர்விற்கு நகர முடியுமே ஒழிய இன்னமும் நிருபணமாகாத ஒரு  வழக்கில் தொடர்புள்ள சில்லறைத் திருடனைப் பிடித்து ஊர்கூடி தர்மஅடி போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணுவது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நோய் ஒன்றிற்கு குண்டூசியால் சொறிந்து கொண்டு சரியாகி விட்டது என்று கற்பனை செய்வது போலத்தான்.இருக்கும். தனிநபர் மீதான எதிர்ப்புகளால்அல்ல, ஒட்டுமொத்த சமூகமே தன்னை நோக்கி திரும்பி இந்தச் சர்ச்சையின் மீதாக தன்னை முழுவதும் பரிசீலனை செய்து கொள்ள வேண்டியதுதான் இந்தச் சூழலில் மிக மிக அவசியம்.


 (உயிர்மை இதழில் பிரசுரமானது) 

suresh kannan

Tuesday, November 26, 2019

விசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்




மனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. இஸ்லாமிய நாடுகளைப் போன்று இதையும் விட கடுமையான அடக்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ள பிரதேசங்களும் உண்டுதான். அங்கெல்லாம் டன் விலையைக் கேட்பார்கள் என்பதுதான் வித்தியாசம். இந்தியாவை விடவும் கருத்துச்சுதந்திரமும் தனிநபர் உரிமையும் அதிகமாக உள்ள மேற்கத்திய பிரதேசங்களையே நாம் உதாரணமாக கொள்ள வேண்டும்.

மானுட குலம் கூடிவாழத் துவங்கி நாகரிக சமுதாயமாக மலர்ந்ததின் அடிப்படைகளில் ஒன்று, ஒவ்வொரு தனிநபரின் சுதந்திரமும் உரிமையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே. ஆனால் உலகின் பெரும்பாலான அரசதிகாரங்கள் இதன் எதிர்துருவங்களில்தான் இயங்குகின்றன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையுடன் அறியப்படும் இந்தியாவும் அதில் ஒன்று.

1950-ல் குடியரசு மலர்ந்த போதே ஒவ்வொரு குடிமகனுக்கும் எழுத்துரிமையும் பேச்சுரிமையும் வழங்கப்பட்டு விட்டதே, இங்கு என்ன குறை? என்று ஐந்தாம் வகுப்பு பாடத்தில் வாசித்ததை இன்னமும் நினைவில் வைத்துக் கொண்டு அந்த அறியாமையுடன் எவராவது கேள்வி கேட்பார்கள் எனில் அவர்களுக்கு நடைமுறை பயங்கரங்களைப் பற்றிய எவ்வித புரிதலோ அல்லது அனுபவமோ இல்லை என்பதே பொருள். அரசதிகாரம் நினைத்தால் ஒரு தனிநபரின் பாதுகாப்பை அழித்து எந்நேரமும் அவரின் வாழ்வை தலைகீழாக திருப்பிப் போட்டுவிட முடியும் என்பதே கசப்பான உண்மை. சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கருத்திற்காக விருப்பக்குறி இட்டவர்கள் கூட காவல்துறையின் கைதை எதிர்கொண்ட அவலம் இந்தியாவில்தான் நிகழ்ந்தது என்பது பனிப்பாறையின் நுனி போல ஒரு சிறிய உதாரணம்.

எந்தவொரு அரசும் தன் குடிகளின் கருத்துரிமையை, சமூகக் கோபங்களை ஓரெல்லை வரைதான் அனுமதிக்கும். குக்கரின் மூடியை அவ்வப்போது திறந்து அதன் அழுத்தத்தை சற்று விடுவிப்பது போல தனிநபர்களின், அமைப்புகளின் கோரிக்கைகளும் போராட்டங்களும் எதிர்ப்புகளும் அவரவர்களின் செல்வாக்கின் பலத்தைப் பொறுத்து அனுமதிக்கப்பட்ட எல்லை வரைதான் நகர முடியும். முழுக்கவும் மூடிவிட்டால் அதன் அழுத்தம் தாங்காமல் வெடித்து விடும் என்பது அதிகாரத்திற்கு தெரியும். இது போன்ற அனுமதிக்கப்பட்ட எல்லைகூட பெரும்பாலும் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற உயர் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கே பொருந்தும். சமூகத்தின் அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை சமூகத்தினரின் உதிரி மனிதர்களுக்கு இந்த அடிப்படையான வாய்ப்பு கூட கிடைக்காது. அவர்களின் அறியாமை மற்றும் எவ்வித பின்புலமும் இல்லாத காரணத்திற்காக அற்பமான விஷயங்களுக்கு அல்லது சமயத்தில் அது  கூட தேவைப்படாமல் அதிகாரத்தினால் நசுக்கப்படும் அப்பாவி பலியாடுகளாக அவர்கள் அல்லல்பட நேரிடும்.

சமூகம் மற்றும் அரசியல் காரணங்களால் பொருளாதார நிலையிலும் சாதியபடி நிலையிலும் விளிம்புகளில் நின்று ஏற்கெனவே துன்புறும் அச்சமூகத்து மக்களை காவல்துறை உள்ளிட்ட அதிகார வட்டமும் சேர்ந்து நசுக்கும் நிதர்சனமான உண்மையின் அவலத்தை தன் ‘விசாரணை’ திரைப்படத்தின் மூலம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.


***

ஒரு சாமானியன் தம்முடைய அடிப்படையான உரிமையைப் பெறுவதற்காக கூட எந்தவொரு அரசு அலுவலகத்திலும் கூனிக்குறுகி நிற்க வேண்டியிருப்பதை அன்றாட நடைமுறையில் காண்கிறோம். அரசு அதிகாரிகள் தம்முடைய அடிப்படையான கடமையை செய்வதற்கு கூட குடிமக்களை அலட்சியமான மெத்தனத்துடன் பலமுறை அலைய வைப்பதையும் ஏழை எளியவர்களிடம் கூட வாய் கூசாமல் லஞ்சம் கேட்பதையும் அன்றாடம் காண முடிகிறது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அமைப்புகள், அதில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அந்த அடிப்படைகளையெல்லாம்  மறந்து விட்டு மக்களை அலட்சியமாக நடத்துவதை தினசரி பயணிக்கும் பேருந்தின் நடத்துநர்கள் முதல் அரசு இயந்திரத்தின் எந்தவொரு உதிரிப்பாகத்தின் முன்னாலும் அனுபவிக்கிறோம்.

இது போன்ற அரசு அமைப்புகளில் நாம் வழக்கமாக எதிர்கொள்ளும் அலட்சியத்தையும் லஞ்சத்தையும் தவிர கூடுதலாக அச்சத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது காவல்துறை என்னும் அமைப்பிடமிருந்து. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களுக்கு நம்பிக்கையையும் ஆசுவாசத்தையும் அளிக்க வேண்டிய காவல்துறை அதற்கு எதிர்மாறான எண்ணங்களை உற்பத்தி செய்வது துரதிர்ஷ்டமானது. ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்கிற சம்பிரதாயமான அறிவிப்பைத் தாண்டி காவல்துறையை அணுக வேண்டிய சந்தர்ப்பங்களை நடைமுறையில் எவ்வாறெல்லாம் நாம் தவிர்க்கிறோம், அச்சப்படுகிறோம் என்பதிலிருந்தே அதன் இயங்குமுறையின் அவலம் உறுதியாகிறது. ‘இந்த அறுபது வருஷத்துல ஒருமுறை நான் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிச்சதில்ல’ என்று பெருமையுடன் சொல்வதிலிருந்து அங்கு அவசியமான காரணத்திற்கு செல்வதென்பது கூட ஒழுக்கத்திலிருந்து பிறழும் செயலாகவே சமூகத்தில் எண்ணப்படுகிறது.

என்னுடைய தனிப்பட்ட அனுபவம் இது. நண்பருக்காக ஒரு முறை அவருடன் காவல்நிலையம் செல்ல வேண்டியிருந்தது. குடும்ப சச்சரவு காரணமாக அவருடைய மனைவி எவருக்கும் தகவல் தராமல் எங்கோ சென்று விட்டார். எங்கு தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. நண்பர்களின் யோசனைப்படி காவல்துறையில் புகார் தந்து விடலாமென்று முடிவெடுக்கப்பட்டது. தயங்கிக் கொண்டிருந்த நண்பருக்கு தைரியம் தந்து அழைத்துச் சென்றேன். காவல் நிலையத்தில் நுழைந்து தயக்கத்துடன் வந்திருக்கும் விஷயத்தைச் சொன்னவுடன் காவல்துறையின் இளநிலை அதிகாரி அலட்சியத்துடன் கொச்சையான வார்த்தைகளால் கேட்ட முதல் கேள்வி. “அவ எவன் கூடயாவது ஓடிப் போயிருப்பா. நல்லா விசாரிச்சுப் பார்த்தியா?…

எதிர்பாராத இந்த அதிரடியால் நண்பர் அவமானத்தினால் கூசிக் குறுகிப் போனார். நான் அவரை சைகை காட்டி வெளியே அழைத்து வந்தேன். பிறகு வழக்கறிஞருடன் சென்றுதான் அந்தப் புகாரை பதிவு செய்ய முடிந்தது.  இத்தனைக்கும் நண்பர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவியை வகிப்பவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் ஓர் அடித்தட்டு ஆசாமி இன்னமும் எத்தனை அவலமான நிலைமையை சந்திக்க வேண்டும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கத் தேவையில்லை. வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி விடக்கூடாது என்பதற்காக எந்தவொரு புகாரையும் எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்காமல் தவிர்ப்பதே காவல்துறையின் பாலபாடம்.

இன்னொரு புறம் ஒரு காவல் நிலையத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாவதும் அது தீர்க்கப்படுவதுமான ‘கணக்குகள்’ உருவாக்கப்பட வேண்டிய அவசியமிருக்கிறது. இந்த வழக்குகளை தீர்ப்பதற்காக அவர்களுக்கு சாதகமான பல உண்மைகளை ‘உருவாக்கி” எதற்கு எது சரியாகப் பொருந்துமோ அந்த உண்மையைப் பொருத்திக் கொள்கிறார்கள். காவல்துறை தங்களின் ‘இருப்பை’ நியாயப்படுத்துவற்கான உபாயங்கள் இவை.

‘நாலு போலிஸூம் நல்லா இருந்த ஊரும்’ என்றொரு தமிழ் திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. எந்தக் குற்றமுமே நிகழாத ஒரு கிராமத்தில் (?!) அங்குள்ள காவலர்கள் நிம்மதியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அங்கு எந்தக் குற்றமுமே பதிவாகாத நிலையில் காவல்நிலையம் எதற்கு என்கிற கேள்வி உயர்மட்டத்தில் எழுவதால் அந்தக் காவல் நிலையத்தை மூடி விட்டு அந்தக் காவலர்களை குற்றம் அதிகம் நிகழும் ஆபத்தான இன்னொரு பகுதிக்கு மாற்றம் செய்யவிருப்பதாக தகவல் வரும். பதறிப் போகும் அவர்கள் அந்தக் கிராமத்திலேயே தங்குவதற்கான உபாயமாக அவர்களே அங்கு ‘குற்றச் சம்பவங்களை’ உருவாக்கிவிட்டு பின்பு அவர்களே தீர்க்க முயல்வார்கள். இது ஒரு நகைச்சுவை திரைப்படம் என்றாலும் கூட நடைமுறையில் நடப்பதுவும் இதுவே.

‘திருடன் மணியன் பிள்ளை’ என்கிற மலையாள மொழிபெயர்ப்பு நூலை வாசித்தால் உதிரிக்குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்குமான விநோதமான, பிரிக்கமுடியாத அழுத்தமான நடைமுறை உறவை உணர முடியும். தாழ்விலிருந்து உயர்ந்தெழுந்து மறுபடியும் அடங்கும் ஒரு கிராஃபை போல சந்தர்ப்பத்தால் சில்லறைத் திருடனாகி பிறகு அதையே தொழிலாக்கி அரசியல்வாதியாகி வெற்றி பெற்று ஓர் அபத்தமான சறுக்கலால் மீண்டும் துவக்க நிலையை நோக்கி வீழ்ச்சியடைந்த தன் சுய அனுபவங்களை அந்த நூலில் எள்ளலான கசப்புடனும் நகைச்சுவையுடனும் விவரித்திருப்பார் மணியன் பிள்ளை.

ஒரு சில்லறை வழக்கில் பிடிபட்டு விட்டால் அவர் மீது நிலுவையில் இருக்கும் நாலைந்து வழக்குகளையும் சேர்த்துப் போடுவது காவல்துறையின் வழக்கமான நடைமுறை. அடிவாங்க விரும்பாமல் அவற்றை ஒரு ராஜமரியாதையுடன் ஏற்றுக் கொண்டு சிறை சென்ற அவருடைய அனுபவங்கள் அந்த நூலில் நிரம்பி வழியும். அடித்தட்டு சமூகத்தைச் சார்ந்த ஒருவர், அது பொய் வழக்காக இருந்தாலும் கூட, ஒரு முறை திருட்டு வழக்கில் பதிவாகி விட்டால் போதும், அவர் ஒருபோதும் மீள முடியாத படியான ஒரு பாதைக்குள் செல்ல நேரிடும். காவல்துறை அவரை செய்த அல்லது செய்யாத ஏதாவதொரு வழக்கில் தொடர்புபடுத்திக் கொண்டேயிருக்கும். ஒரேயொரு முறையான இந்தக் குற்றத்தின் நிழல் அவர் வாழ்நாள் முழுக்க அவர்மீது கவிழ்ந்து அவரைத் துரத்திக் கொண்டேயிருக்கும்.

காவல்துறையும் சிறைச்சாலைகளும் குற்றங்கள் உருவாகாமல் தடுக்கவும் குற்றவாளிகள் மனந்திருந்தி மையநீரோட்டத்தில் மறுபடி இணைந்து வாழ்வதற்காக உருவான அமைப்புகள் என்கிற அடிப்படையிலிருந்து முற்றிலும் எதிர்விதமாக அவையே குற்றங்களின் ஊற்றுக்கண்களாகவும் அதிகார வட்டத்தின் குற்றங்களுக்கு உடந்தைகளாகவும் இருக்கும்  அவலத்தை வெற்றிமாறனின் ‘விசாரணை’ இயன்ற அளவிற்கான யதார்த்தத்துடன் பதிவு செய்திருக்கிறது.

***


சிறைச்சாலை என்றாலே வெள்ளை சீருடை அணிந்த குற்றவாளியுடன் கம்பி போட்ட சிறைக்குப் பின்னால் அவருடைய தாயாரோ அல்லது காதலியோ சாவகாசமான நேரத்து உருக்கமான வசனங்களுடன் கண்ணீர் சிந்தி விட்டு வரும் இடம் என்கிற அபத்தமான கற்பனையை ‘மகாநதி’ திரைப்படம் அதிஉக்கிரமாக உடைத்துப் போட்டது. காவலர்களுக்கும் வலிமையான கைதிகளுக்கும் இருக்கும் வணிக ஒப்பந்தங்களையும் அங்குள்ள விநோதமான முரட்டு நடைமுறைகளையும் முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் விவரணைகளுடன் பதிவு செய்திருந்தது. அதைப் போலவே லாக்கப்பில் அடைத்து வைத்திருக்கும் விசாரணைக் கைதிகளை ஏதோ செட் பிராப்பர்ட்டி மாதிரியே இதுவரை பெரும்பாலும் சித்தரித்துக் கொண்டிருந்த சினிமாக்களிலிருந்து விலகி காவல்துறையின் லட்டிகளின் மூலம் எவ்வாறு அந்த அப்பாவி மனிதர்கள் குற்றவாளிகளாக ‘உருமாற்றம்’ செய்யப்படுகிறார்கள் என்கிற அவலத்தின் இருண்மையை சிறப்பாக பதிவாக்கியிருக்கிறது ‘விசாரணை’ திரைப்படம்.

பெரும்பாலான தமிழ் சினிமாவின் நாயகர்கள் காவல்துறை அதிகாரிகளாக நடித்த திரைப்படங்களில் ஆக்ரோஷமான உரத்த குரலில் நிறைய வசனம் பேசி நீதியை நிலைநாட்ட வந்த அவதார புருஷர்களாகவும் எவ்வித விதிமுறைகளுக்கும் இணங்காமல் குற்றவாளிகளை விரட்டி விரட்டிக் கொல்லும் மிகைத்தன்மையிலான நாடகங்களையே இதுவரை கைத்தட்டி பார்த்து வந்திருக்கிறோம். அந்தக் காட்சிகளில் ‘குற்றவாளிகள்’ அல்லது குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுபவர்கள், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல என்பதும் அவர்கள் உருவாவதற்கான சமூகவியல் காரணங்களையும் இந்தச் சமூகமும் குற்றவாளிகள் உருவாவதற்கான ஒரு காரணி என்கிற பிரக்ஞையை பற்றி கவலைப்படாமல் குற்றவாளியைக் கொன்று விட்டால் குற்றங்களும் இறந்து விடும் என்று அப்பாவித்தனமான நம்பிக்கையை அந்தத் திரைப்படங்கள் வளர்த்தன. சாகடிக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா, அவர்களுக்கு பின்னால் இருந்து இயக்கும் அதை விடவும் பெரிய குற்றவாளிகளும் பங்கு என்ன என்பதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

காவல்துறையிலேயே உள்ள பல குற்றவாளிகள் தங்களின் சுயநலத்திற்காகவும் ஆதாயங்களுக்காகவும் தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அப்பாவிகளை பிடித்து வந்து வன்முறை பிரயோகங்களின் மூலம் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்பவர்களாக இருப்பதையும் அத்துறையில் அவர்களுக்கென்று உள்ள விநோதமான சடங்குகளையும் ஒப்பந்தங்களையும் ‘உள்வட்ட’ ரகசியங்களையும் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது இத்திரைப்படம்.

***

ஆந்திர மாநிலம், குண்டூரில் பிழைப்பு தேடி சென்ற நான்கு அப்பாவி தமிழக இளைஞர்கள்  காவலர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்பேயில்லாத ஒரு வழக்கின் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி நையப்புடைக்கப்படுகிறார்கள். மறுக்க மறுக்க அடியும் உதையும் அதிகமாகிறது. “உங்களை திருடனையா பிடிக்கச் சொன்னேன், வழக்கைத் தானே முடிக்கச் சொன்னேன். அதுக்கு கூட துப்பில்லையா?” என்று உயரதிகாரி, கீழ்நிலை அதிகாரிகளை மிரட்டுகிறார். மேலதிகாரிகளிடமிருந்து அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க அப்பாவிகளுக்கு அடி உதையும் அதற்கேற்ப அதிகமாகிறது.

இன்னொரு வழக்கிற்காக அங்கு செல்லும் தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் உதவி செய்வதால் அந்த இளைஞர்கள் விடுவிக்கப்படுகின்றனர். அதிகாரியின் மீது உண்டாகும் நன்றியுணர்ச்சிக்காக ஓர் அரசியல் கட்சி தொடர்பான முக்கிய புள்ளியை கடத்துவதற்காக அவருக்கு உதவுகின்றனர். கதை பின்பு தமிழகத்திற்கு இடம் மாறுகிறது. அரசியல் ஆசாமி லாக்அப்பில் உயிர்விட்டு விட மேலிடத்திலிருந்து காவல்துறையினருக்கு ரகசிய உத்தரவுகளும் அதற்கேற்ப பேரங்களும் நிகழ்கின்றன. இந்த உரையாடலின் ரகசியத்தை இளைஞர்கள் கேட்டுவிட்டார்களோ என்கிற சந்தேகத்தின் பேரில் அவர்களை இன்னொரு வழக்கில் தொடர்புப்படுத்தி என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ள உத்திரவிடுகிறார் உயர்காவல்அதிகாரி. அந்த இளைஞர்களை காப்பாற்றி அழைத்து வந்த இளநிலைஅதிகாரி நடைமுறை உண்மைக்கும் மனச்சாட்சியின் குரலுக்கும் இடையே தத்தளிக்க இந்தக் காரணத்திற்காகவே அவரும் இளைஞர்களோடு பலியாக்கப்படுவதோடு நிறைகிறது திரைப்படம்.

மு.சந்திரகுமார் என்பவர் இது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தாம் எதிர்கொண்ட காவல்துறை விசாரணை அனுபவங்களின் கதறல்களை ‘லாக்கப்’ என்கிற நூலாக பதிவு செய்திருக்கிறார். அந்த நூலில் இருந்து முன்பாதி திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்பாதி திரைக்கதை அதனுடைய நுட்பமான, பொருத்தமான நீட்சி என்றாலும் பின்னிணைப்பு என்பது தெளிவாகத் தெரியும்படி ஆகியிருப்பது திரைக்கதையின் ஒரு சறுக்கல்.

இந்தியாவெங்கிலும் காவல்துறையானது ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறது என்பதை ஆந்திராவிலும் தமிழகத்திலும் நிகழும் காட்சிகள் தெரிவிக்கின்றன. உதிரிக்குற்றவாளிகள் எவ்வித விளக்கத்திற்கும் வாய்ப்புத் தரப்படாமல் எடுத்த எடுப்பிலேயே இருட்டறையில் அடி, உதையை சந்திக்கும் போது அரசியல் புள்ளிகளுடன் தொடர்புள்ள வொயிட் காலர் கிரிமினல்கள் ஏஸி அறையில் மரியாதையுடன் விசாரிக்கப்படுகின்றனர். இரண்டு விசாரணைகளுக்கும் உள்ள வித்தியாசம், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிற சம்பிரதாய வாக்கியங்களை கேலிக்கூத்தாக்குகின்றன.

ஆனால் ஏஸி அறையில் மரியாதையாக விசாரிக்கப்பட்டவரும் மேலிடத்திலிருந்து அதற்கான சமிக்ஞை வந்தவுடன் அவருமே உதிரிக்குற்றவாளிக்கான வன்முறையை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில நிமிடங்களில் ஒருவரின் மரியாதையும் நிலைமையும் தலைகீழாகி விடுகிறது. இந்த அபத்தங்களையும் இதன் பின்னால் உள்ள அரசியல் காரணங்களையும் பேரங்களையும் வெற்றிமாறன் மிக நுட்பமாக பார்வையாளர்களுக்கு உணர்த்திச் செல்கிறார்.

**

தண்டனை பெற்ற கைதிகளைத் தவிர சிறைச்சாலைகளிலும் காவல்நிலைய லாக்கப்களிலும் இருக்கும் விசாரணைக் கைதிகளே அதிகம் என்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஜாமீன்தொகையை கட்டுவதற்கு வசதியில்லாத நபர்கள், அதற்கான வழிகாட்டுதல்களைப் பெற முடியாத நபர்கள் பெரும்பாலான காலத்தை விசாரணக் காலத்திலேயே கழிக்க வேண்டிய அவலத்தை மனிதஉரிமை ஆணையம் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் எந்தவித பின்புலமும் அல்லாத அப்பாவி அடித்தட்டு மக்கள் என்பதை தனியாக குறிப்பிடத் தேவையில்லை.

உண்மையான குற்றவாளிகளை தேடிப்பிடிப்பதை விட வழக்குகளை முடிக்க வேண்டும் என்கிற அழுத்தத்தின் காரணமாகவே அப்பாவி நபர்கள் ‘குற்றவாளி’யாக்கப்படுகின்றனர். சிறைக்குச் சென்று வருவதின் மூலம் இவர்களும் தேர்ந்த குற்றவாளியாகவே மறுபடி சமூகத்தினுள் நுழைகின்றனர். இவ்வாறானவர்களை அவர்களின் குற்ற அடையாளத்திற்காக சமூகம் ஒருபுறம் புறக்கணிக்க, காவல்துறையினரும் இவர்களை திருந்தி வாழ அனுமதிப்பதில்லை. காவல்துறையும் சிறைச்சாலையும் குற்றங்களை தடுப்பதற்கு பதிலாக புதிய புதிய குற்றவாளிகளை மேலதிகமாக உற்பத்தி செலவும் அவலமே நடைபெறுகிறது. ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது’ என்கிற நீதி சார்ந்த கேட்பாடு வெற்று முழக்கமாக அல்லாமல் உண்மையிலேயே நடைமுறைபடுத்தப்படுகிறதா என்பதை நீதித்துறையும் அரசாங்கமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கணக்கு காட்டுவதற்காக வழக்குகள் பதியப்பட்டும், முடிக்கப்படுவதுமான கொடூரமான சம்பிராதயங்கள் களையப்பட்டு ஒட்டுமொத்த அமைப்புமே சீர்திருத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு மனித உறுப்புக்கான சிறப்பு மருத்துவர்கள் இருப்பதைப் போலவே லாக்கப் மரணங்களை திறமையாக மூடி மறைக்கவும் சாட்சியங்களை அதற்கேற்ப திறமையாக கலைக்கவும் கையாளவும் என்கவுண்ட்டர் மரணங்களை நிகழ்த்துவதற்கும் அந்தச் சம்பவங்களை தங்களுக்குச் சாதகமான வகையில் ஊடகங்களில் செய்தி வரவழைப்பதற்கும் அதற்கான சிறப்பு அனுபவம் உள்ள காவல்துறை நபர்கள் பயன்படுத்தப்படும் கறுப்பு நகைச்சுவையையும் இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. கசாப்புக் கடைக்காரர்கள் விலங்குகளை கையாளும் அதே லாவகத்தோடு  மனச்சாட்சியின் எவ்வித உறுத்தலும் அன்றி இவர்கள் மனித உடலைக் கையாளுகின்றனர். அரசியல் புள்ளியின் லாக்கப் மரணத்தை தற்கொலையாக மாற்றும் நோக்கத்துடன் உடலைத் தொங்க விடும் காட்சியில் சிறப்பு அனுபவம் உள்ள அதிகாரி, இன்னொருவரிடம் ‘தொழிலைக் கத்துக்கடா’ (?!) என்கிறார்.

இறுதிக்காட்சியில் இளைஞர்களை என்கவுண்ட்டரில் சாகடிப்பதில் ஏற்பட்ட சறுக்கலை “அரை மணி நேரத்துல ஈசியா முடிச்சிருக்க வேண்டிய விஷயம். வேலை தெரியாம இப்படி இழுத்தடிக்கறீங்க” என்கிறார் ஏதோ டிவியை ரிப்பேர் செய்வது போல. குற்றங்களுடன் பழகிப் பழகி உணர்ச்சிகள் முற்றிலும் மரத்துப்போன இயந்திரங்களாக அவர்களை மாற்றியிருக்கிறது அரசு இயந்திரம்.
இதில் பலியாகும் அரசியல் புள்ளியின் மரணமும் காவல் அதிகாரியின் மரணமும் அப்பாவி இளைஞர்களின் மரணமும் தமிழகத்தில் இதற்கு முன் நிகழ்ந்த பல உண்மை சம்பவங்களின் கசப்பை மீண்டும் நினைவுப்படுத்துகின்றன, சமீபத்தில் நிகழந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் மரணம் உட்பட.

உதிரிக்குற்றவாளிகளை, நிரபராதிகளை பலியாக்கும் காவல் அதிகாரிகள், அவர்களுக்கு மேலே அழுத்தம் தரும் மேல்நிலை அதிகாரிகள், அவர்களை பின்னிருந்து இயக்கும் அரசியல்வாதிகள், அதிகார வட்டங்கள், அரசாங்கத்தை மறைமுகமாக இயக்கும் தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவன முதலாளிகள் என்று இந்தப் படிநிலைகளில் நிகழும் பேரங்கள், ஆதாயங்கள், துரோகங்கள், அந்தந்த சூழலில் அரசியல் மேகங்களின் நகர்வுகளுக்கேற்ப மாறும் நடவடிக்கைகள் என்று இந்த ஒட்டுமொத்த விஷப்பின்னல் எங்கே துவங்கி எங்கே முடிகிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியாதபடியான இடியாப்ப சிக்கலாக இருக்கிறது.

ஒவ்வொருவருமே அவரவர்களின் நிலைகளில் பலியை நிகழ்த்துபவர்களாகவும் பலியாபவர்களாகவும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். அரசியல் புள்ளி சாகும் தறுவாயில் தன்னைக் கைது செய்த காவல் அதிகாரியிடம் ‘உன்னை வெச்சு என்னைத் தூக்கின மாதிரி வேறு எவனையாவது வெச்சு உன்னைத் தூக்கிடுவாங்க” என்று அருள்வாக்கு சொல்கிறார். இறுதியில் அப்படியேதான் ஆகிறது.  இந்த ஆடுபுலி ஆட்டத்தின் இடையில் நீதி, அறம், விசாரணை போன்ற விழுமியம் சார்ந்த சொற்களெல்லாம் எவ்வித பொருளும் அன்றி கேலிக்கூத்தான விஷயங்களாக நிற்கின்றன.

***

பொருட்பொதிந்த காட்சிகளின் அழகியலோடும் நுண்ணுணர்வோடும் தமது படைப்புகளை இயக்குபவர்களில் வெற்றிமாறன் தனித்துத் தெரிகிறார். இதுவரையில் மிக குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களை அவர் உருவாக்கியிருந்தாலும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இடையே அதை விட அதிகமான உயரத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை மெய்ப்பிக்கிறது ‘விசாரணை’யின் உருவாக்கமும் செய்நேர்த்தியும். ஆந்திர மாநிலத்தின் லாக்கப் காட்சிகள் பெரும்பான்மையான இருளோடும் கசியும் வெளிச்சத்தோடும் நிகழ்வுகளின் பயங்கரத்தை எதிரொலிப்பதாக இருக்கின்றன.

தினேஷ், கிஷோர், முருகதாஸ் போன்றவர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் அதிக அளவிலான கவனிப்பைப் பெறுவராக சமுத்திரக்கனியைச் சொல்ல வேண்டும். காவல்துறையின் உணர்ச்சியற்ற, கொடூரமான நடைமறை கசப்புகளுக்கும் தம்முடைய மனச்சாட்சியின் குரலுக்கும் இடையே தத்தளிப்பவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனித உடல் வதைபடும் காட்சிகளில் பார்வையாளர்களிடம் அதன் இரக்கத்தைக் கோரும் பொருட்டு கதறியழும் இசை அதன் நோக்கத்திற்கு மாறாக எரிச்சலையே கூட்டுகிறது. சர்வதேச திரையிடல்களில் பின்னணி இசை உள்ளிட்ட இதர மசாலாக்கள் இல்லைனயென்று கூறப்படுகிறது. தரம் வாய்ந்த தேயிலையை மேலை நாடுகளின் ஏற்றுமதிக்கும் அதன் சக்கையை உள்ளுரில் சந்தைப்படுத்தும் வணிக ஏற்பாட்டின் அப்பட்டமான மோசடியைப் போன்று இத்திரைப்படமும் ஆக நேர்ந்தது தயாரிப்பாளர்களின் கட்டாயத்தினாலா அல்லது இயக்குநரின் தேர்வா என்பது தெரியவில்லை.

அதிகாரம் எனும் பிரம்மாண்ட இயந்திரத்தின் முன் சாமானிய நபர்கள் எவ்வித விசாரணையும் அன்றி தண்டிக்கப்படும் நடைமுறை அவலத்தை மிக நுட்பமாகவே காட்சிப்படுத்தியிருக்கிறது இத்திரைப்படம். இதைப் பார்த்து விட்டு ஒரு சாமானியன் காவல்துறை மீது மேலதிகமாக பயங்கொள்ளும் விதத்தை விட மீறப்படும் தம்முடைய அடிப்படையான மனித உரிமையை போராடியாவது கோரிப்பெறும் நம்பிக்கை விதைகளுக்கான சங்கேதங்களையும் கற்றல்களையும் இத்திரைப்படத்தில் இணைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்றாலும் சமகால உண்மையின் கசப்பை நேர்மையாக பதிவு செய்திருப்பதின் மூலம் ‘விசாரணை’ இதுவரையான தமிழ் திரையின் ஒரு முக்கியமான, கவனிக்கத்தக்க பதிவு என்கிற பெருமையைப் பெறுகிறது.


 (உயிர்மை இதழில் பிரசுரமானது) 


 
suresh kannan

Monday, November 25, 2019

இறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்






இத்திரைப்படத்தை விடவும் இதை தமிழ் இணையச் சமூகம் பதட்டத்துடன் எதிர்கொண்ட விதம்தான் அதிக சுவாரசியமாக இருந்தது. படத்தின் முதல் காட்சி முடிந்த அடுத்த நொடியிலிருந்தே பல்வேறு விதமான எதிர்வினைகள் இணையத்தில் கொட்டத் துவங்கின. 'இது ஒரு சமூக விரோத திரைப்படம்' என்பதில் துவங்கி இது பெண்ணியப்படமா அல்லவா என்கிற ஆராய்ச்சி முடிவுகள் வரை பல்வேறு பார்வைகள். நிறைய எதிர்மறை விமர்சனங்கள். ஒரு திரைப்படம் இத்தனை விவாதங்களை கிளப்புகிறதென்றால் அது ஏதோவொரு வகையில் குறிப்பிடத்தக்க வகையான படைப்பு என்றுதானே பொருள்? அந்த சாதகத்தின் பலனைக் கூட தர பலர் தயாராக இல்லை. யார் அதிக சத்தத்துடன் அடிக்கிறார்களோ அந்தப் பக்கம் அதிக கவனம் திரும்பும் என்பதால் குண்டாந்தடியால் அடித்து வீழ்த்துவதற்கு பலத்த போட்டி நிலவியது.

நான் இறைவி திரைப்படத்தை சமகாலத்தில் உருவான மிகச்சிறந்த தமிழ் சினிமா என்று கொண்டாட முயலவில்லை. அப்படி மற்றவர்களையும் வற்புறுத்தவில்லை. மையத்தை விட்டு விலகிச் செல்லும்  கிளைக்கதை கோளாறுகளுடனும் தவறுகளுடனும் உருவான திரைப்படம்தான் இது. ஆனால் ஒரு கோணத்தில் இதன் சில பகுதிகள் அதுவரையான தமிழ் சினிமா தவற விட்ட கோணத்தில் உரையாடுபவை. பெண்களின் பிரத்யேக சில அகச்சிக்கல்கள், ஏக்கங்கள் போன்ற இருண்மைப் பிரதேசங்களின் மீது சிறிது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிற திரைப்படம் இது.  குறிப்பாக  அஞ்சலியின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் மிக நுட்பமாக உருவாகி வந்துள்ளது.

இது போன்ற காரணங்களை குண்டாந்தடி விமர்சகர்கள் சற்று கருணையோடு பரிசீலித்துப் பார்க்கலாம். ஏனெனில் சராசரி பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது விமர்சகர்களின் அடிப்படையான கடமை. விமர்சனங்களால் ஒரு திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தொல்வியை நிர்ணயிக்க முடியாதென்றாலும் பகுதியளவிலாவது நிறைவடைந்திருக்கும் ஒரு நல்ல முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டியது விமர்சகர்களின் கடமை. ஏற்கெனவே தமிழ் சினிமா மசாலாத்தனமான கழிவுகளால் நிரம்பியிருப்பது நமக்குத் தெரியும். அது குறித்த புகார்களும் நமக்கிருக்கின்றன. இது போன்ற சூழலில் அவைகளிலிருந்து சற்று விலகி ஆர்வத்துடன் மேலெழுந்து வரும் படைப்பை கருணையோடு அணுகாமல் அதன் தலை மேலேயே ஆவேசத்தோடு அடிப்பதால் எவருக்கு உபயோகம்?

***

என்னளவில் இறைவி திரைப்படத்தை மூன்று காரணங்களுக்காக குறிப்பிடத்தக்க படைப்பாக நினைக்கிறேன்.

ஒன்று, பெண்ணுரிமையைப் பேசும் இதுவரையிலான திரைப்படங்களை  சற்று பொதுவாக நினைவுகூருங்கள். குடும்பத்தாலும் கணவனாலும் சமூகத்தாலும் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட்ட ஒரு பெண் பாத்திரம் அந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை உடைத்து மீறிக்  கொண்டு ஆவேசமாக வெளியே வரும். 'ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே' என்பது போல. அல்லது முதலில் இருந்தே தன் உரிமைகளைப் பற்றிய பிரக்ஞையுடன் உரையாடிக்  கொண்டே இருக்கும். 'அவள் ஒரு தொடர்கதை' சுஜாதா போல. பெண்களின்  கோணத்தில் பெண்களின் பிரச்சினைகள் -சற்று மிகையான, நாடகத் தொனியில் இருந்தாலும் - உரையாடப்பட்டு வந்தன.

ஆனால் இறைவி திரைப்படம் இதிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது. ஆண்களின் உலகம் வழியாக பெண் இனம் எதிர்கொள்ளும் அவதிகள் நமக்கு உணர்த்தப்படுகின்றன. முந்தைய பாணியின் எதிர்பிம்பம் இது. ஆண்மைய சிந்தனையுலகின் கண்ணாடியின் வழியாக பெண் உலகத்தை இதில் காண்கிறோம். பெண்களின் வழியாக காட்டப்பட்ட முந்தைய பாணி ஆணாதிக்க சிந்தனையுள்ள பார்வையாளர்களுக்கு எரிச்சலைக் கூட தந்திருக்கலாம். ஆனால் அவர்களின் முகத்தை அவர்களே கண்ணாடியில் பார்க்கும் விதமாக அவர்களின் நோக்கில் பெண்களின் பிரச்சினைகளை ஆராயும் போது அது ஆணின் சிந்தனையைக் கிளறி தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பு நிகழக்கூடிய சாத்தியம் 'இறைவி'யில் உள்ளது. இத்திரைப்படத்திற்கு வந்த சில நேர்மையான, உணர்வுபூர்வமான எதிர்வினைகள் அவ்வாறுதான் அமைந்திருந்தன என்பதைக் கவனிக்க வேண்டும்.

இரண்டாவது. முந்தைய பாணி திரைப்படங்களில் பொதுவாக ஆண்கள் அயோக்கியர்களாக, பெண்கள் குறித்து சிறிது கூட அனுதாபமோ, அன்போ, இரக்கமோ கொள்ளாத அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். அல்லது நல்லவர் போல் நடித்து ஏமாற்றும் கயவர்களாக. கதை சொல்லும் பாணியில் அது இயல்பானதும் கூட. அப்போதுதான் பார்வையாளர்களின் முழு அனுதாபத்தையும் பெண்களின் மீது பாய்ச்ச முடியும். அவர்களின் ஆவேசமான மீறலில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால் இறைவியில் வரும் ஆணகள் எவரும் பெண்கள் மீது அன்பில்லாதவர்களாக, கொடூரர்களாக சித்தரிக்கப்படவில்லை. பெண்களின் அன்பிற்கு ஏங்குபவர்களாக, அதற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்களாக இருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழல்களால், கட்டுப்படுத்த முடியாத கோபத்தால் அவர்கள் விழும் படுகுழிகள், அனிச்சை செயலாக அவர்கள் குடும்பத்து பெண்களையும் பாதிக்கும் விஷயத்தைதான் இயக்குநர் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

மூன்றாவது, பெண்ணியம் என்றால் அது பற்றி பேசும் பெண்கள் சிலரிடையே கூட தவறான புரிதல்கள் உள்ளதாக தோன்றுகிறது. ஆண்களின் புற அடையாளங்களை,  கீழ்மைகளை தாங்களும் போட்டிக்கு, வீம்பிற்கு நகலெடுப்பது, அவர்களை வெறுத்து ஒதுக்குவது,  எளிதில் சரிசெய்யக்கூடிய எந்தவொரு பிசிறையும் உயர்வு மனப்பான்மையுடன் பூதாகரமாக்குவது, கட்டற்ற பாலியல் சுதந்திரம் அல்லது அதிலிருந்து முழுவதுமாக விலகுவது போன்றவைகள்தான் பெண்ணியத்தின் அடையாளங்கள் என்பதாக சிலரால் நம்பப்படுகிறது.  ஆணைச் சார்ந்து, சகித்துக் கொண்டு அவனுக்கு அடிமையாக இருக்கத் தேவையில்லைதான், ஆனால் அவனை உதறுவதுதான் பெண் உரிமையை நிறுவுவதற்கான எளிய குறுக்கு வழியா?

தங்களின் இருப்பின் முக்கியத்துவத்தை ஆண்களுக்கு உணர்த்துவது, சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் தங்களின் அடையாளங்களை, உரிமைகளை நிறுவுவது, அதற்கான போராட்டங்களை நிகழ்த்தியபடியே இருப்பது, ஆணைச் சாராமலிருக்கும் தன்னிறைவுகளை அடைவது, அறியாமையில் வீழ்ந்திருக்கும் பாமரப் பெண்களிடம் பெண்ணுரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவது போன்றவைதானே பெண்ணுரிமைப் போராட்டங்களின் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளாக இருக்க முடியும்? ஆணாதிக்க உலகின் அடிமையாகவே வளர்ந்த பழக்கத்தில் 'அதுதானே யதார்த்தம்' என்று தன்னிச்சையாக நம்பி அந்த பாரபட்சத்தோடு ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெண்களும் இந்த சூழலுக்கு ஒருவகையில் காரணம். வளரும் போதே ஆண்மைய சிந்தனைகளுக்கான விதைகளுடன் வளரும் ஆண் பிள்ளைகளின் உயர்வு மனப்பான்மையை முளையில் கிள்ளி எடுப்பது ஒரு முக்கியமான வழியல்லவா? ஆணும் பெண்ணும் தங்களின் சமத்துவ உலகத்தில் இணைந்து இயங்குவதும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும்தானே யதார்த்தமான, ஆக்கப்பூர்வமான வழிமுறையாக அமைய முடியும்?

இத்திரைப்படத்தில் வரும் பெண்கள் அப்படித்தான் முட்டி மோதுகிறார்கள். தங்களின் சகிப்புத்தன்மையின் சாத்தியமான எல்லைவரை போராடுகிறார்கள். ஆண்களின் அன்பை வெல்வது, தங்களின் அன்பை புரிய வைப்பது அவர்களுக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. அது ஓரெல்லையில் முறிந்து போகும் போதுதான் விலகலைப் பற்றி யோசிக்கிறார்கள். மழை என்பது இதில் சுதந்திரத்தின் குறியீடாக சித்தரிக்கப்படுகிறது. 'மழையில் நனைவதுதான்' அவர்களின் நெடுங்கால விருப்பமாக இருக்கிறது. ஆனால் அதில் கை நனைக்கத்தான் முடிகிறது. முட்டி மோதிய அத்தனை முயற்சிகளிலும் தோற்றுப் போன ஒருத்தி மட்டுமே  மழையில் நனைகிறாள். மழைக்குப் பின் வெயில் வரும் என்பதுதானே இயற்கையின் நியதி?


***

வெவ்வேறு வயதில், சூழலில் உள்ள மூன்று பெண்களின் உலகங்கள் இதில் சித்தரிக்கப்படுகின்றன. மூவருமே குடும்ப வன்முறையில் சிக்கி தவிப்பவர்கள். கடந்த தலைமுறை பெண்  தன் வாழ்நாள் முழுதும் அதை  சகித்து புழுங்கிக்  கொண்டு வாழ அடுத்தடுத்த தலைமுறைப் பெண்கள் தங்கள் சகிப்புத்தன்மையை நீட்டிக்கவும் அதிலிருந்து விலகவும் முடியாமல் தத்தளிப்பவர்களாக இருக்கிறார்கள்.

காலம் பூராவும் ஆணாதிக்க கொடுமையை அனுபவித்து மெளன சாட்சியாய் விளங்கும் வடிவுக்கரசி, பெரும்பாலான ஆண்களைப் போல தங்களின் வயோதிக காலத்தில் மனைவியின் அன்பை, சகிப்புத்தன்மையை புரிந்து கொண்டு மனம் திரும்பும் ராதாரவி, தனது வருங்காலத்தைக் குறித்து நிறைய கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் நுழையும் கமலினி, குடிகார கணவனான சூர்யாவிடம் தன் சகிப்புத்தன்மையின் எல்லை வரை நீடிக்க முயல்கிறாள். என்றாலும் அவனுடைய திரைப்படம் வெளிவராததால் உண்டான அதீத குடிப்பழக்கத்தின் பின்னணியை அனுதாபத்துடன் நோக்கி அவனைப் பிரிய முடியாமலும் தத்தளிக்கிறாள். நடிகர்களுக்கான சாயலுடன் உள்ள கணவனை எதிர்பார்க்கும் அஞ்சலி, ஒரு சராசரியான ஆணை திருமணம் செய்து கொண்டு முதலிரவிலேயே தன் கணவனின் மனவிலகலைக் கண்டு அதிர்ச்சியடைந்து  'ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தாண்டி இருப்பாங்க' என்கிற மூத்த பெண்களின் உபதேசத்தின் மூலம் அவனுடன் வாழ முயற்சிக்கிறாள். முட்டி முட்டி மோதி ஒரு கணத்தில் 'நான் என்ன உன்ன திருத்தி வாழ வெச்சு குழந்தை பெத்து அதை வளர்க்கற மெஷினா?' என்று வெகுண்டெழுகிறாள்.

இதில் மிக நுட்பமாக பதிவாகியிருப்பது அஞ்சலியின் அகம் சார்ந்த பகுதி. படம் துவங்குவதற்கு முன் திரையில் காட்டப்படும் திரைப்பட முன்னோடிகளான பாலச்சந்தர் மற்றும் பாலுமகேந்திராவின் பயணத்தில் தாவி ஒருபடி முன்னேறும் சாதனையை கார்த்திக் சுப்புராஜ் சாதித்திருக்கிறார்.

அஞ்சலிக்கு தன் வருங்கால வாழ்வு குறித்து பெரிதான கனவுகள் ஒன்றுமில்லை. ஒரு சராசரியான பெண்ணின் கனவுகள் மாத்திரமே. திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், தன் கணவன் தன் மீது தொடர்ச்சியான அன்பு செலுத்த வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் முதலிரவில் மீது அவள் மீது பாய்ந்து முடிக்கும் விஜய்சேதுபதி, பிறகு 'என் விருப்பத்துடன் இந்த திருமணம் நடைபெறவில்லை' என்கிறான். கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் அவனுக்கு தொடர்பிருக்கிறது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி அது மறுக்கப்பட்டு பிறகுதான் அஞ்சலியை மணக்கிறான். மூத்த பெண்களின் வழக்கமான ஆலோசனைப்படி இதை சகித்துக் கொள்ளும் அஞ்சலி அவன் மனம் மாற காத்திருக்கிறாள்.

தன்னுடைய காதலியால் துரத்தப்பட்டு வெறுப்புடன் வரும் விஜய்சேதுபதி தன் மனைவிக்கு குழந்தை பிறக்கவிருப்பதை அறிந்தவுடன்தான் அந்த மனம்மாற்றம் நிகழ்கிறது. ஆனால் அதற்குள் நிகழும் சம்பவங்களின் எதிர்வினையாக சிறைக்குப் போகிறான். மனைவியின் அன்பு அப்போதுதான் அவனுக்கு புரியத் துவங்குகிறது. இந்த திரைப்படத்தில் வரும் எல்லா ஆண்களுமே மிக மிக தாமதமாகவே தங்கள் துணையின் அன்பை உணர்கிறார்கள். அஞ்சலியிடம் அதுவரை யாருமே  தன் அன்பை சொன்னதில்லை. அவளை ஆராதித்ததில்லை. விஜய்சேதுபதி சிறை சென்றிருக்கும் சமயத்தில் பாபி சிம்ஹா அவளிடம் தன் காதலை சொல்கிறான். முதன்முறையாக ஓர் ஆணிடமிருந்து வெளிப்படும் காதல் சொல். அஞ்சலி சற்று தடுமாறினாலும் அவனிடமிருந்து விலகி ஊருக்குச் சென்று விடுகிறாள். மனதிற்குள் மட்டுமே இந்தக் காதல் புகுகிறது. 'நீ ஒருத்தியை இச்சையுடன் பார்த்தாலே அவளுடன் விபச்சாரம் செய்ததற்கு சமமானது' என்கிற வேதாகமம். அவள் ஒரு கிறிஸ்துவப் பெண்.

பிறகு இந்த விஷயங்களை அறிந்து கொள்ளும் விஜய்சேதுபதி ஆத்திரம் கொள்கிறான். 'அவன் கூட படுத்தியா?' என்கிறான். இந்தக் கேள்விக்கு விடையறிவதுதான் அவனுக்கு பெரிய விஷயமாக இருக்கிறது. பெண்ணின் உடலுக்குள் புகுவதை விட மனதிற்குள் புகுவது மிக முக்கியமானது என்பது அவனுக்குப் புரியவில்லை.

தன் கணவன் புரியும் அதுவரையான குற்றங்களுக்காக, விலகலுக்காக, திருமணத்திற்கு முன்பான தொடர்பிற்காக இந்தக் கேள்வியை ஒரு நிராகரிப்பின் மூலம் அஞ்சலி அவனை சரியான படி தண்டிக்கிறாள். 'ஆமாம். அவனை நானும் லவ் பண்ணேன். ஆனா விவரமால்லாம் சொல்ல முடியாது. விருப்பம் இருந்தா என் கூட வா". இந்த ஆண்-பெண் சதுரங்க விளையாட்டில் மிக நுட்பமான அசைவின் மூலம் அஞ்சலி வெற்றி பெறும் இடம் இது. ஓர் அபாரமான செக் மேட்.

தமிழ் பார்வையாளர்களின் ஆசார மனங்களை குறித்து கவலை கொள்ளும் இயக்குநர் இந்தப் பகுதிகளை எல்லை தாண்டாமல் மிக நுட்பமாக கையாண்டிருக்கிறார். சுஜாதா எழுதிய 'ஜன்னல் மலர்' என்கிற குறுநாவலுக்கு இயக்குநர் தார்மீக அறத்துடன் கிரெடிட் தந்திருப்பதை பாராட்ட வேண்டும். விதம் விதமாக கதைகளை உருவும் உலகில், அவர் சொல்லியிருக்கா விட்டால் இது பெரும்பாலோனோர்க்கு தெரிந்திருக்கப் போவதில்லை. குறுநாவலை மிக நுட்பமாக கலைத்துப் போட்டிருக்கிறார். குறுநாவலில் வரும் பெண் பாத்திரம் கணவன் சிறைக்குப் போயிருக்கும் சமயத்தில் வேறு வழியில்லாமல் இன்னொரு ஆணுடன்  சோரம் போகும். கணவனின் நண்பனே அவனை சட்டத்திடம் மாட்டி விட்டு அந்த இடைவெளியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வான். இது திரைக்கதையில் கலாசாரக் காவலர்களுக்காக மாற்றப்பட்டு  சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறது.

***

இதைப் போலவே விஜய்சேதுபதியின் தோழியாக வரும் பூஜா தேவரியாவின் பாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தன் கணவனுடன் இன்பமான வாழ்க்கை நிகழ்த்திய இவர், அவருடைய மறைவிற்கு பிறகு விஜய்சேதுபதியுடன் நெருங்கிப் பழகுகிறார். தங்களுடைய தொடர்பு உடல் சார்ந்தது மட்டுமே, காதல் என்பதெல்லாம் கிடையாது என்பதை விஜய்சேதுபதிக்கு தொடர்ந்து தெளிவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அவரோ 'உடலின்பத்தைத் தாண்டி தான் உண்மையாகவே காதலிப்பதாகவும் திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார். பூஜாவிற்கு திருமணம் என்கிற நிறுவனத்தில் நம்பிக்கையில்லை. எனவே அந்த உடன்பாட்டை வலுவாக மறுக்கிறார். 'வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்' என்கிறார்.

விஜய்சேதுபதி - அஞ்சலி திருமணம் முடிந்தவுடன் விஜய்யின் 'வருகையை' பூஜா விரும்புவதில்லை. அப்போது தற்செயலாக வரும் ஓர் ஆணை (கணினி பழுது பார்ப்பவர்) தன்னுடைய புது நண்பராக சித்தரிப்பதின் மூலம் விஜய்யின் வெறுப்பை வேண்டுமென்றே சம்பாதிக்கிறார். அப்போதுதான் அவர் தன் மனைவியுடன் இணைந்து வாழ வேண்டுமென. இந்த திட்டம் சரியாக வேலை செய்கிறது. ஆனால் விஜய் கோபத்துடன் கிளம்புவதைப் பார்த்து பூஜா ஏன் அழ வேண்டும்? அது செயற்கையான மெலோடிராமாவாக இருக்கிறதே என்பது பலரின் எண்ணமாக இருந்ததை இணையப்பதிவுகளின் மூலம் உணர முடிந்தது.

இதனால்தான் இந்தப் பாத்திரமும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறேன். ஜெயகாந்தனின் 'புது செருப்பு கடிக்கும்' என்கிற சிறுகதையை மிகப் பொருத்தமாக இங்கு நினைவுகூரலாம். மிக அபாரமாக எழுதப்பட்ட சிறுகதையது. புதிதாக திருமணமான ஒருவன் புது மனைவி செய்யும் சண்டித்தனத்தை வெறுப்புடன் உணர்ந்த ஓர் இரவில் தாம் பழகிய 'முன்னாள் காதலியின்' இல்லத்திற்கு ஆறுதல் தேடி செல்வான். இவன் அவளுடன் பழகிய முந்தைய காலம் பற்றிய விவரணைகள் சிறுகதையில் நன்கு  விவரிக்கப்பட்டிருக்கும். முன்னாள் காதலி புதிதாக திருமணமான பெண்ணின் உணர்வுகளை, மிரட்சிகளை எடுத்துச் சொல்லி உபதேசம் செய்து இவனை திருப்பி அனுப்புவாள்.

ஏறத்தாழ பூஜாவின் பாத்திரமும் இத்தகையதே. அவள் ஆணின் உடலை மட்டுமே விரும்பும் பாலியல் துய்ப்பு இயந்திரம் அல்ல. ஒரு பெண் பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும் கூட தன் மனதிற்கு பிடித்த ஆடவனுடன் பாலுறவு கொள்ளும் போது மட்டுமே உயிர்ப்புடன் இருப்பாள். பூஜாவிற்கு விஜய்சேதுபதி மீது அன்பிருந்தாலும் அவன்  இன்னொரு பெண்ணுடன் ஒரு புது வாழ்க்கை வாழ துவங்க வேண்டும் என்று விரும்புகிறாள்.  முந்தைய திருமணத்தின் மூலம் நிகழ்ந்த கசப்புகள் அவள் இன்னொரு திருமணத்தை நாடாமலிருக்கும் மனநிலையை உண்டாக்கியிருக்கலாம். எனவேதான் விஜய்சேதுபதியை செயற்கையான தருணத்தில் விலக்கி விட்டாலும் அவனின் மீதுள்ள அன்பை நினைத்து ரகசியமாக அழுகிறாள். மனித மனதின் சிக்கல் வெளிப்படும் நுட்பமான ஒரு தருணம் இது.

***

எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, அஞ்சலி, கமலினி என்று ஏறத்தாழ எல்லோருமே அவரவர்களின் நட்சத்திர அடையாளங்களைக் கழற்றி விட்டு பாத்திரத்தின் வார்ப்பிற்குள் கச்சிதமாக இயங்கியிருக்கிறார்கள். வடிவுக்கரசியால் ஒரு முழு வாழ்க்கையின் துயரத்தை ஒரே ஷாட்டில் சொல்லி விட முடிகிறது. ராதாரவி, சீனு மோகன் போன்றவர்களின் இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது. குறிப்பாக ராதாரவி பெரிய ஆச்சரியம்.

பாபிசிம்ஹாவின் பாத்திர வடிவமைப்பும் நுட்பமானதே. ஆண் உலகத்தில் சீீரழியும் பெண்கள் மீது அவனுக்கு அனுதாபம் இருக்கிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்கிற ஆதாரமான உணர்விருக்கிறது. அதற்காக நடைமுறை விழுமியங்களைக் கூட இயல்பாக தாண்டத் தயாராக இருக்கிறான். திருமணப் போகும் நண்பனின் மனைவி மீது அவனுக்கு ஈர்ப்பு வருகிறது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். ஆனால் விஜய்சேதுபதி முன்கோபத்தில் ஒரு கொலையைச் செய்து விட்டு சிறைக்குப் போய் மனைவியை தவிக்க விடும் போது அந்த அனுதாபம் மீண்டும் காதலாக பெருக அந்தச் சமயத்தில் தன்னை வெளிப்படுத்துகிறான். அவன் சொல்லும் முறையின் நாகரிகத்தால் அஞ்சலி ஈர்க்கப்படுகிறாள். ஆனால் மனதளவில் மட்டுமே. இறுதிக் காட்சியில் கூட வேறு ஊருக்குச் செல்லும் விஜய்சேதுபதியிடம் 'உன் மனைவியை பார்த்துக் கொள்' என்று பாபி சிம்ஹா எச்சரிக்கை செய்கிறான். அது வரை ஆத்திரத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த விஜய்சேதுபதிக்கு இந்த ஒரு புள்ளி கரையைக் கடக்கும் பொருளைத் தருகிறது.

சந்தோஷ் நாராயணின் சில பாடல்கள் இடையூறாய் அமைகின்றன. கதை சொல்லும் பாணியும் எடிட்டிங்கும் இத்திரைப்படத்தில் அற்புதமாக உள்ளன. என்றாலும் சில காட்சிகளைக் கத்தரித்திருந்தால் இதுவொரு செம்மையான திரைப்படமாக உருவாகியிருக்கக்கூடும். எஸ்.ஜே. சூர்யாவின் குடிதொடர்பான காட்சிகள், சிலைக்கடத்தல் போன்ற நம்பகத்தன்மையற்ற காட்சிகள் போன்றவை மையத்திலிருந்து விலகியிருக்கின்றன. என்றாலும் 'எவராலும் ஆராதிக்கப்படாமலிருக்கும் இறைவி சிலைகளை அவை போற்றப்படும்  இடத்திற்கு நகர்த்திச் செல்வது ஒருவித அறம்' என்கிற பொருளை பெண்களுக்கும் பொருத்திப் பார்க்க இயக்குநர் நினைப்பது நுட்பமானதொன்று.

***

படத்தயாரிப்பாளர் என்கிற நபர் இதன் இயக்குநருக்குள் ஒரு கசப்பான, வன்மமாக படிமமாக உறைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. முந்தைய திரைப்படமான 'ஜிகர்தண்டாவிலும்' படத்தயாரிப்பாளர் குறித்தான பகடி இருந்தது. இதிலும் ஒரு குரூரமான,அகங்காரமுள்ள தயாரிப்பாளர் வருகிறார். 'உன்னுடைய கோபத்தை உன் படைப்பில் காட்டு்' என்றொரு வசனமும் இத்திரைப்படத்தில் வருகிறது. தயாரிப்பாளரின் கோபத்தினாலும் அவருடைய குடும்பம் பாதிக்கப்படுகிறது. இயல்பான நற்குணங்களைக் கொண்டாலும் ஓர் ஆணின் அதீதமான கோபம் அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை பல்வேறு பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் இயக்குநர் வலியுறுத்துகிறார்.

இத்திரைப்படத்தில் படத்தயாரிப்பாளர் பாத்திரம் குரூரமாக காட்சிப்படுத்தப்பட்டதற்காக தயாரிப்பாளர் சங்கம் இயக்குநரை கண்டித்தது மோசமான போக்கு. அதுவரையான தமிழ் திரைப்படங்களில் அரசியல், காவல்துறை,  என்று சமூகத்தின் பெரும்பாலான தரப்பினர் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள், கிண்டலடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன், சினிமா நாயகர்கள் கூட பகடி செய்யப்பட்டிருக்கிறார்கள். சுய துறை விமர்சனம் செய்யப்பட்டதற்கு ஏன் தயாரிப்பாளர் சங்கம் கோபப்பட வேண்டும்? அவ்வாறான தயாரிப்பாளர்களே இல்லையா என்ன, அவர்களும் நிறை, குறையுமுள்ள மனிதர்கள்தானே?.

முதல் திரைப்படத்தில் திரில்லர், இரண்டாம் திரைப்படத்தில் இருண்மை நகைச்சுவை, மூன்றாம் திரைப்படத்தில் டிராமா என்று வேறு வேறு வகைமைகளைக் கையாளும் இயக்குநரின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது. கிளைக்கதைகளைக் குறைத்து மையத்தில் இன்னமும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் 'இறைவி' தமிழில் ஒரு முக்கியமான படமாகியிருக்கக்கூடும். இதன் சில பகுதிகளில் அதற்கான அழுத்தமான தடயங்களைக் காண முடிகிறது. கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படைப்பில் அந்த எல்லையைத் தொடுவார்  என நம்புவோம். 


(உயிர்மை இதழில் பிரசுரமானது) 

suresh kannan