Monday, November 11, 2019

Parasite | 2019 | South Korea | இயக்குநர் - Bong Joon-ho




அயல் திரை  - 15
 
 
‘ஒட்டுண்ணிகளின் ஒடுங்கிய உலகம்’



கான் திரைப்பட விழா 2019-ல், அதன் உயரிய விருதான Palme d'Or-ஐ வென்றுள்ள திரைப்படம் இது. இந்தப் பிரிவில் தென் கொரியா வென்றுள்ள முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது. Memories of Murder (2003) உள்ளிட்டு பல சிறப்பான திரைப்படங்களை இயக்கியுள்ள Bong Joon-ho இந்த திரைப்படத்தையும் அற்புதமாக உருவாக்கியுள்ளார்.

அவல நகைச்சுவையில் அமைந்த க்ரைம் திரில்லர் திரைப்படமான இது, சமூக அடுக்கில் உள்ள வித்தியாசங்களையும் வர்க்க வேறுபாட்டினையும் பொருளாதார சமநிலையின்மையையும் உறுத்தாமல் மிக நுட்பமாகவும் அழுத்தமாகவும் சொல்லிச் செல்கிறது.

**

அப்பா, அம்மா, மகன், மகள் என்று நான்கு உறுப்பினர்களைக் கொண்ட கீழ்நடுத்தர வர்க்க குடும்பம் அது. முட்டுச் சந்தில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். நால்வருக்குமே சரியான வேலை கிடைக்காததால் சிரமப்படும் வாழ்க்கையாக இருக்கிறது. இலவச இண்டர்நெட்டை வீட்டின் மூலைமுடுக்குகளில் தேடுகிறார்கள். பிட்சா பெட்டி மூடித்தரும் பணியை அரைகுறையுமாக செய்து விழிக்கிறார்கள்.

இந்நிலையில் மகனுடைய நண்பன் ஒருவன் அவர்களிடம் வருகிறான். வெளிநாட்டிற்குச் சென்று படிக்கவிருப்பதால் அவன் செய்து கொண்டிருக்கும் பணியை நண்பனுக்கு சிபாரிசு செய்ய முன்வருகிறான். ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும் பணி. ஆனால் இவனோ கல்லூரி வாசலை மிதிக்காதவன். ஆனால் ராணுவத்தில் பணிபுரிந்தவன் என்பதால் நடைமுறை அனுபவத்தின் மூலம் பல விஷயங்களைக் கற்றவன்.

எனவே போலியான பட்டப்படிப்பு சான்றிதழை தயார் செய்து அந்தப் பணியில் சேர்கிறான். அந்த வீட்டின் பிரம்மாண்டமும் பணக்காரச் சூழலும் அவனைக் கவர்கின்றன. அந்த வீட்டுப் பெண் இவன் மீது ஈர்ப்பு கொள்கிறாள். வீட்டின் இளைய மகன் துறுதுறுப்பானவனாக இருக்கிறான். கன்னாபின்னாவென்று ஓவியம் வரைந்து வைத்திருக்கிறான். அவனுடைய அதீதமான நடவடிக்கை குறித்து கவலைப்படுகிறாள் அவனுடைய தாய்.

“எனக்குத் தெரிந்த ஓர் ஆசிரியை இருக்கிறார். உறவுக்காரப் பெண்தான். அவளைப் பணிக்கு அழைத்து வரட்டுமா? இவனைச் சரியாக வழிநடத்துவாள்” என்று கேட்கிறான். இவனுடைய நல்லியல்பாலும் கண்ணியமான தோற்றத்தாலும் ஈர்க்கப்பட்ட தாய், ‘சரி’ என்று சொல்ல அவன் ஓர் இளம்பெண்ணை அழைத்து வருகிறான். அவள் வேறு யாருமல்ல, இவனுடைய சகோதரிதான்.

இப்படியே அவனுடைய தந்தை டிரைவராகவும், தாய் சமையல் பணியிலும் அந்த வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைகிறார்கள். ஒருவரையொருவர் தெரியாதது போல அந்நியராக நடந்து கொள்கிறார்கள். முந்தைய பணியாளர்களை சூழ்ச்சி செய்து வெளியே அனுப்பி விடுகிறார்கள். (விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ என்கிற தமிழ் திரைப்படத்தின் கதை இங்கு நினைவிற்கு வரக்கூடும். ஆனால் கொரியத் திரைப்படம் பயணிக்கும் திசையும் ஆழமும் வேறு).

**

முதலாளியின் குடும்பம் சுற்றுலாவிற்கு சென்று விடும் ஒரு சமயத்தில் இவர்களின் குடும்பம் அந்தப் பணக்கார வீட்டில் கும்மாளமடிக்கிறது. இந்த வீட்டுப் பெண்ணை தங்களின் மகன் மணந்து கொண்டால் அனைத்தும் தங்களுக்கு சொந்தமாகி விடும் என்கிற கற்பனையில் மிதக்கின்றனர்.

இந்த  நிலையில்,  முன்பு சமையல் பணியில் இருந்த பெண்மணி வந்து கதவைத் தட்டுகிறார். ‘ஒரு முக்கியமான பொருளை விட்டு விட்டேன். எடுத்துச் சென்று விடுகிறேன்’ என்று கெஞ்சவும் தற்போதைய பணியாளர் அனுமதிக்கிறார். அப்போதுதான் தெரிய வருகிறது, முன்னாள் பணிப்பெண்ணின் கணவர் கடன் தொல்லைக்கு பயந்து அந்த வீட்டின் அடியிலுள்ள ரகசிய அறையில் இருக்கிறார் என்பது. சுமார் நான்கு வருடங்களாக தன் கணவனை ஒளித்து வைத்து யாருக்கும் தெரியாமல் பராமரித்து வருகிறார் என்பதும்.

வானிலை மாற்றத்தின் தடங்கலால் முதலாளியின் குடும்பம் வீட்டுக்குத் திரும்பும் தகவல் கிடைக்கிறது. இரண்டு பணியாளர் குடும்பத்திற்கும் இடையே மோதல் நடக்கிறது. இதில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. தீவிரமான தளத்திற்கு கதை நகர்கிறது. பரபரப்பும் விறுவிறுப்பான நிகழ்வுகளுக்குப் பிறகு உச்சத்தை எட்டுகிறது இந்த திரைப்படம்.

**

“ஒட்டுண்ணி’ என்கிற தலைப்பே திரைப்படத்தின் உள்ளடக்கத்தை கச்சிதமாக விளக்கி விடுகிறது. வர்கக ரீதியாக சமூகத்தின் உயர் மட்டத்தில் வாழ்பவர்களை அண்டி வாழ்கிற நிலைமையே இதர பிரிவினருக்கு இருக்கிறது. இந்த நிலைமை ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கோபத்தையும் வன்மத்தையும் உற்பத்தி செய்கிறது. இதனால் வன்முறையையும் கையில் எடுக்க சிலர் தயங்குவதில்லை. போலவே நலிந்த பிரிவினரும் தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள்.

பணக்கார வீட்டில் சொகுசாக நேரத்தைக் கடத்தும் அந்தக் குடும்பம், ‘கரப்பான் பூச்சியைப் போல வாழவேண்டியிருக்கும் தங்களின் பழைய வீட்டை நினைத்து வெட்கப்படுகிறார்கள். இப்படியொரு பிரம்மாண்டமான வீடு தங்களுக்கு இருந்தால் எப்படியிருக்கும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் சிறிது நேரத்தில் முதலாளிகள் திரும்பவிருக்கும் செய்தி கிடைத்ததும், அவர்களின் கண்ணுக்குத் தெரியாமல் வீட்டின் பல்வேறு பகுதிகளில் ஒளிந்து கொள்கிறார்கள். சமையல் அறையில் விளக்கைப் போட்டதும் கரப்பான்பூச்சிகள் பாய்ந்தோடி மறைவதைப் போலவே அவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஏழைக் குடும்பம் பழைய கட்டிடத்தின் அடித்தளத்தில் வாழ்வதைப் போல, பணக்கார வீட்டின் அடியில் உள்ள ரகசிய அறையிலும் ஒரு நபர் மறைந்து வாழ்கிறார். இவர்களைப் போலவே அந்தக் குடும்பமும் அண்டி வாழ வேண்டியிருக்கிறது. இப்படியாக ஒரு சமூகத்தின் வர்க்க வேறுபாட்டுச் சித்திரத்தை மெல்ல வரைந்து காட்டுகிறார் இயக்குநர்.

இளைஞனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே சராசரிக்கும் மேலான அறிவைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இளைஞனின் தங்கை மிகுந்த புத்திக்கூர்மை கொண்டவராக இருக்கிறார். ஆனால் இவர்கள் தங்களின் திறமையைச் சரியான திசையில் பயன்படுத்துவதில்லை. சமூகச் சூழலும் அவர்களை அழுத்தி வைத்திருக்கிறது. எனவே குறுக்கு வழியிலாவது தங்களின் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார்கள். அதுவே அவர்களை பல சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது.

இளைஞனுக்கு பரிசாக கிடைக்கும் அதிர்ஷ்டக் கல் ஒன்று, பிறிதொரு காட்சியில் அவனுக்கே ஆபத்தை விளைவிக்கிறது. பணக்கார வீட்டில் இவர்கள் கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், இவர்களின் பழைய வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்து பொருட்களை நாசப்படுத்துகிறது. அதிர்ஷ்டத்தின் வழியான கற்பனைகளும்  குறுக்குவழி உயர்வுகளும் நிலையானதல்ல என்கிற ஆதாரமான செய்தியை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது இந்தத் திரைப்படம்.

**

தென்கொரியாவின் புகழ்பெற்ற நடிகரான Song Kang-ho, ஏழைக் குடும்பத்தின் தந்தையாக மிக நேர்த்தியாக நடித்திருந்தார். இவர்களின் குடும்பம் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது ‘இதிலிருந்து மீள நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்?’ என்று மகன் கேட்கிறான். “ஆம். இருக்கிறது’ என்று முதலில் சொல்லும் இவர் பிறிதொரு தருணத்தில் சொல்கிறார். “அவ்வாறு எந்தத் திட்டத்தையும் நாம் உருவாக்க முடியாது. வாழ்க்கை என்னும் அலை அடித்துச் செல்லும் திசையில்தான் சென்றாக வேண்டும்’ என்று விரக்தியுடனும் நிதர்சனத்துடனும் சொல்வது நல்ல காட்சி.

இவரது மகனாக நடித்திருக்கும் Choi Woo-shik-ம் நன்கு நடித்துள்ளார். இருவருமே கான் திரைப்பட விழாவில் ‘சிறந்த நடிகருக்கான’ பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள்.

தொழில்நுட்ப அளவிலும் இந்த திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் அபாரமான ஒளிப்பதிவை பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும். பணக்கார வீட்டின் பிரம்மாண்டம், பாதாள அறைகளின் குறுகலான சந்துகள், மழை நீரில் பொருட்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி போன்றவை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பணியாளரிடமிருந்து வெளிப்படும் மட்டரகமான வாசனையைக் கண்டு முகம் சுழிக்கிறார் செல்வந்தர். இங்கு தோன்றும் பகைமையின் புள்ளி, இன்னொரு இடத்தில் எரிமலையாக வெடிப்பதில் வர்க்க வேறுபாட்டின் புள்ளியை அநாயசமாக தொட்டிருக்கிறார் இயக்குநர்.

மனிதன் என்பவன் சமூக விலங்குதான். இந்த விலங்குகளுக்கு இடையேயான போட்டி இயற்கையை ஒட்டியதாகவும், மனித குலத்தின் பிரயேக முதிர்ச்சியுடனும் இருக்க வேண்டும். மாறாக நாகரிக வளர்ச்சி என்கிற பெயரில் சமூக அடுக்கில் உருவாகியிருக்கும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் பாரபட்சங்களையும் எதிர்வினைகளையும் ஒரு க்ரைம் த்ரில்லரின் வழியாக விவரிக்கிறது இந்த சுவாரசியமான திரைப்படம்.


(குமுதம் தீராநதி -  SEPTEMBER  2019 இதழில் பிரசுரமானது)

suresh kannan

No comments: