Friday, November 01, 2019

The Tale | 2018 | United States | இயக்குநர் - Jennifer Fox





அயல் திரை  - 8


"அப்போதே ஏன் சொல்லவில்லை?"


தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களை, அச்சமும் தயக்கமும் இன்றி பெண்கள் வெளியுலகத்திற்கு தெரிவிக்கும் ‘மீ டூ’ என்னும் 

தன்னெழுச்சி இயக்கத்தின் துவக்கப்புள்ளி என்று Tarana Burke என்னும் ஆப்ரிக்க அமெரிக்க பெண்மணியை குறிப்பிடலாம். சமூகப் போராளியான இவர், கருப்பினப் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களை பிரத்யேகமாக அடையாளப்படுத்தும் வகையில் இந்த இயக்கத்தை 2006-ல் நிறுவினார். என்றாலும் 2017-ல்  Alyssa Milano என்கிற அமெரிக்க நடிகையின் மூலம் #Metoo என்கிற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் வேகமாக பிரபலமாகியது.

தமிழகத்திற்கும் இது பரவியதில் திரைப்படப் பாடலாசிரியர் முதல் பல பிரபலமான பெயர்கள் அடிபட்டன. ஆண்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களின் நன்மதிப்பை குறைக்க இதையொரு ஆயுதமாக சில பெண்கள் பயன்படுத்தக்கூடும் என்பதில் துவங்கி பரஸ்பர சம்மதத்தின் பேரில் நடைபெறும் உறவிற்கு கலாசாரமோ, சமூக நிறுவனங்களோ என்று எவையும் தடையாக இருக்கக்கூடாது என்பது வரை பல விவாதங்கள் நடைபெற்றன. திருமணமான ஆணோ பெண்ணோ, பரஸ்பர சம்மதத்துடன் திருமணத்தை மீறிய பாலுறவு வைத்துக்கொண்டால் அது சட்டப்படி குற்றமாகாது'' என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியிருக்கிற தீர்ப்பையும் கவனிக்கலாம்.

இதில் ‘பரஸ்பர சம்மதம்’ என்பதில் சில நுட்பமான சிக்கல்கள் உள்ளன. வயதுக்கு வந்த ஓர் ஆணுக்கும்  பெண்ணுக்கும் இடையில் தன்னிச்சையாக மலர்ந்திருக்கக்கூடிய பரஸ்பர விருப்பம், பின்விளைவுகளை அறிந்திருக்கக்கூடிய முதிர்ச்சி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித நிர்ப்பந்தமும் வற்புறுத்தலும் இன்மை போன்ற புரிதல்களோடு நிகழும் பாலுறவை ‘பரஸ்பர சம்மதத்தோடு’ நிகழும் உறவாக கொள்ளலாம்.

ஆனால், எதிர் தரப்பை நைச்சியமாகப் பேசி மயக்குதல், உணர்வுப்பூர்வமாக மிரட்டுதல், பல்வேறு ஆதாயங்களைக் காட்டி ஆசை காட்டுதல், முதிர்ச்சியின்மையை சாதகமாக ஆக்கிக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நிகழும் பாலுறவை ‘வன்புணர்வு’ என்றே கொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையில் ஒரு தரப்பின் சம்மதம் இருப்பது போல் தெரிந்தாலும் மறைமுகக் காரணங்களையொட்டி அது பாலியல் குற்றம் என்பதாகவே ஆகும். ‘அந்தச் சூழலில் உன்னுடைய சம்மதத்தோடுதானே இது நிகழ்ந்தது?” என்று பாதிக்கப்பட்ட தரப்பை குற்றம் சாட்டுவது முறையானதல்ல.

இந்த நோக்கில்,  இதிலுள்ள துல்லியமான வேறுபாட்டை தனது நுட்பமான திரைக்கதையின் மூலம் அற்புதமாக பதிவு செய்திருக்கிறது. ‘The Tale’ என்கிற அமெரிக்கத் திரைப்படம்.

**

ஜெனிஃபர் பாக்ஸ் நாற்பதுகளில் உள்ள அமெரிக்கப் பெண்மணி. ஓர் ஆவணப்பட இயக்குநர். ஜெனிபர் தனது 13-வது வயதில் எழுதிய ஒரு பழைய கட்டுரையை தற்செயலாக கண்டெடுக்கிறார் அவரது தாய். அதை ஜெனிஃபருக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக் கட்டுரையின் உள்ளே ஜெனிஃபரின் இளமைப்பருவத்தில் இருந்த ஒரு ரகசிய உறவு விரிவாக எழுதப்பட்டிருந்தது. பில் என்கிற நடுத்தரவயது ஆசாமிக்கும் வளரிளம் பருவத்தில் இருந்த ஜெனிஃபருக்குமான உறவு அது.

தன்னுடைய இளமைப்பருவத்தில் நடந்த சம்பவங்களை ஏறத்தாழ மறந்திருக்கும் ஜெனிஃபருக்கு அந்தக் கட்டுரை பல சங்கடமான விஷயங்களை நினைவுப்படுத்துகிறது. தனது இளம் வயதில் குதிரைப் பயிற்சிக்காக திருமதி.ஜி என்பவரிடம் செல்கிறாள் ஜெனிஃபர். திருமதி.ஜி-யின் நாகரிகமான தோற்றமும் அதிலுள்ள வசீகரமும் ஜெனிஃபரைக் கவர்கிறது. தன் ரோல்மாடலாக அவரைக் கருதுகிறாள். பில் என்பவரை ஜெனிஃபருக்கு திருமதி.ஜி அறிமுகப்படுத்துகிறார். அவரும் ஒரு பயிற்சியாளர். குதிரைப் பயிற்சியில் ஜெனிஃ.பருக்கு பிரத்யேகமான திறமையிருப்பதாக புகழும் பில், பயிற்சியைத் தாண்டியும் நிறையப் பேசுகிறார். திருமதி.ஜிக்கும் பில்லுக்கும் இடையே ஒரு ரகசிய உறவிருப்பதை ஜெனிஃபர் மங்கலாக உணர்கிறாள்.

ஜெனிஃபரின் பாதுகாப்பு குறித்து அவளின் தாய் அதீதமாக கவலைப்படுகிறார். எனவே அதிகம் வெளியே செல்லாதவாறு ஜெனிஃபரைக் கட்டுப்படுத்துகிறார். இது ஜெனிஃபருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. குடும்பத்தின் அன்பு காரணமாக எழும் கட்டுப்பாடு இது என்பதைப் புரிந்து கொள்ளாமல், இளம் பருவத்தினருக்கே உள்ள எதிர்ப்புணர்ச்சியோடு ‘பெற்றோருக்கு தன் மீது அன்பு இல்லை’ என்பதாக தவறாகப் புரிந்து கொள்கிறாள். இதனால் தன் நேரத்தை திருமதி.ஜியுடன் அதிகம் செலவிடுகிறாள். இதனால் பில் உடனும் அதிகம் பழக நேரிடுகிறது. ஜெனிஃபருடன் தனிமையாக இருக்கும் சந்தர்ப்பங்களை பில் ஏற்படுத்துகிறார். இதற்கு திருமதி.ஜியின் மறைமுக ஆதரவும் இருக்கிறது.

ஜெனிஃபரின் அறியாப்பருவத்தை பயன்படுத்திக் கொள்ளும் பில், ஆசை வார்த்தைகளைப் பேசி சில முறை பாலுறவு கொள்கிறார். அதை ‘அன்பு’ என்பதாகப் புரிந்து கொள்கிறாள் ஜெனிஃபர். அந்த வயதுக்குரிய தன்னிச்சையான ஈர்ப்பு காரணமாக பில்லின் ஏமாற்றுதலுக்கு உடன்படுகிறாள். ஜெனிஃபரை மட்டுமல்லாது குதிரைப்பயிற்சிக்காக வரும் வேறு சில சிறுமிகளையும் பில் பயன்படுத்திக் கொள்ளும் விஷயத்தை ஜெஃனிபர் பிறகு அறிகிறாள்.

ஒரு கட்டத்தில் பில் தனது உடலை பயன்படுத்திக் கொள்கிறார் என்கிற மெலிதான புரிதல் ஜெனிஃபருக்கு ஏற்படுகிறது. எனவே அவரிடமிருந்து விலகி விடுகிறாள். திருமதி.ஜி ஏன் இதற்கு உடந்தையாக இருந்தார் என்பதும் ஜெனிஃபருக்குப் புரிவதில்லை. இந்த அனுபவத்தையெல்லாம் ரகசியக் குறிப்புகளாக எழுதி வைக்கிறாள்.

**

இளம் வயதில் எழுதி வைத்து பிறகு மறந்தே போன குறிப்புகளை பல ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கும் ஜெனிஃபர் மனக்குழப்பத்தையும் சங்கடத்தையும் அடைகிறார். அந்த உறவு தன்னுடைய சம்மதத்தின் பேரில் நிகழ்ந்ததா அல்லது பில் தன்னை ஏமாற்றினாரா என்பதில் ஜெனிஃபருக்கு குழப்பம் நிலவுகிறது. அது சார்ந்த நினைவுகள், பனித்திரையின் பின்னுள்ள சித்திரங்கள் போல மங்கலாக இருக்கின்றன. ‘அந்தக் கயவன் உன்னுடைய இளம் வயதின் அறியாமையைப் பயன்படுத்தியிருக்கிறான். அவன் தண்டனைக்கு உள்ளாக வேண்டியவன்” என்று ஜெனிஃபரின் தாய் சீற்றமடைகிறார். ஜெனிஃபர் எழுதி வைத்திருந்த குறிப்புகளின் மூலம் இந்த விஷயத்தை இப்போதுதான் அவர் அறிகிறார். ஜெனிஃபரின் கணவரும் இந்த விஷயத்தை அறிந்து ஆத்திரமடைகிறார். ஆனால் குழப்பத்தில் இருக்கும் ஜெனிஃபர் அவர்களைச் சமாதானப்படுத்துகிறாள். இதனால் குடும்பத்தாருடன் உரசல்கள் நிகழ்கின்றன.

தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளின் மூலம் பழைய நினைவுகளை மெல்ல மெல்ல கண்டெடுக்கிறாள் ஜெனிஃபர். திருமதி.ஜியும் பில்லும் இணைந்து, தன்னுடைய இளமைப்பருவத்தின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியிருக்கின்றனர் என்கிற எண்ணம் அவளுக்குள் மெல்ல உறுதியாகிறது. எனவே அவர்களைத் தேடிப் பயணிக்கிறாள். அந்தப் பயணத்தின் முடிவு என்னவானது என்பதை படத்தின் இறுதிக்காட்சிகள் விவரிக்கின்றன.

**

நான்-லீனியர் பாணியில் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையே அலைபாயும் திரைக்கதை ஜெனிஃபரின் மனக்குழப்பத்தை மிகத் துல்லியமாக நமக்குள் கடத்துகிறது. இளம் வயதின் சம்பவங்களை அவள் மீட்டெடுக்க மீட்டெடுக்க மங்கலான சித்திரங்கள் மெல்ல துலங்கத் துவங்குகின்றன. பில் தன்னை ஏமாற்றினாரா அல்லது தாமாகவே அவருடன் உடன்பட்டோமா என்கிற குழப்பம் ஜெனிஃபரை பெரிதும் அலைக்கழிக்கிறது. எனவேதான் மற்றவர்கள் ஆவேசப்படும் போது அதை பிரதிபலிக்க முடியாமல் தடுமாறுகிறாள். கறுப்பு –வெள்ளையாக அல்லாமல் நுட்பமான இயல்புடன் இந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஜெனிஃபராக லாரா டெர்ன் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். தனக்குள் உறைந்திருக்கும் சிறுமியின் பிம்பத்தை மெல்ல மெல்ல மீட்டெடுக்கும் காட்சிகள் அபாரமானவை. இது சார்ந்த தத்தளிப்புகளையும் மனஉளைச்சலையும் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் லாரா சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இறுதிக்காட்சியில் சமகால ஜெனிஃபரும் சிறுமி ஜெஃனிபரும் ஒரே காட்சியில் உடைந்து போய் அழுவது மிகச் சிறப்பான காட்சி.

இந்த திரைப்படத்தின் உள்ளடக்கத்தையும் ஜெயகாந்தனின் ‘அக்னிப் பிரவேசம்’ சிறுகதையையும் ஒன்றாக வைத்துப் பார்க்கலாம். ஒரு மழைநாளில் பேருந்திற்காக காத்திருக்கும் மாணவியிடம் வசீகரமாகப் பேசி காரில் ஏற்றிக் கொண்டு ஆளில்லாத இடத்தில் அவளுடன் உறவு கொள்கிறான் பணக்கார இளைஞன் ஒருவன். அந்த வயதுக்கேயுரிய கிளர்ச்சியுடனும் ஈர்ப்புடனும் அவள் தன்னிச்சையாக உடன்பட்டாலும் தன்னுடலின் மீது நிகழ்ந்தது என்னவென்று அவளுக்கு சரியாகப் புரிவதில்லை. பதறி ஓடி வீட்டுக்குசக் சென்று தாயிடம் சொல்லி ‘ஓ’வென்று அழுகிறாள். இதைச் சமூகம் அறிந்து கொண்டால் பிரச்சினையாகி விடுமே என்று பதறும் தாய், மகள் மீது கோபப்பட்டாலும் ஒரு பக்கம் அவளுடைய இளமைப்பருவத்தின் களங்கமின்மை காரணமாக பரிதாபமும் ஏற்படுகிறது. தலையில் தண்ணீரை ஊற்றி ‘நீ சுத்தமாயிட்டேடி குழந்தே’ என்று கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒரு தாயின் சராசரி மனநிலையில் தீர்வைத் தேடுகிறாள். கற்பு என்பது உடலில் அல்ல மனதில் உள்ளது’ என்பதை நிறுவ முயன்ற இந்தச் சிறுகதைக்கு அந்தக் காலக்கட்டத்தில் பலத்த எதிர்ப்புகள் வந்தன.

ஒரு மேலோட்டமான பார்வையில், அந்த மாணவியின் சம்மதத்தோடுதான் இந்த உறவு நிகழ்ந்தது என்பதாக ஒரு சராசரி நபர் இந்தச் சிறுகதையைப் புரிந்து கொள்ள முடியும். அந்த நோக்கில் சில விமர்சகர்கள் இந்தச் சிறுகதையைப் பற்றி சாதித்தும் இருக்கிறார்கள். பணக்கார இளைஞனின் கயமைத்தனத்தை மழுப்பி அவனை வசீகரமானவனாகவும் நாகரிக இளைஞனாகவும் சித்தரித்திருக்கும் ஜெயகாந்தன், அதே சமயத்தில் மாணவியின் மனத்தத்தளிப்பையும் அறியாமையையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அந்த வயதுக்குரிய அறியாமை ஒருபக்கம் இருந்தாலும் எதிர் பாலினத்தின் மீதுள்ள இயல்பான கவர்ச்சியினால் இளைஞனின் அழைப்பிற்குள் அவள் விழுகிறாள். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அவளுக்கு பணக்கார இளைஞனின் தோற்றமும் அவன் கொண்டு வரும் ஆடம்பரமான வாகனமும் அதிலுள்ள பொருட்களும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தை இளைஞன் பயன்படுத்திக் கொள்கிறான். மாணவி முழு விருப்பத்துடன் சம்மதத்துடனும் தன்னைத் தந்தாள் என்பதற்கான தரவுகள் அந்தச் சிறுகதையில் இல்லை. இளைஞன் தரும் சூயிங்கத்தை துப்பாமல் வாயில் வைத்திருப்பது கூட அவளுடைய பதட்டத்தையும் அறியாமையையும் காட்டுகிறது.

இந்தச் சிறுகதையை விரித்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் நாவலாக பிறகு எழுதினார் ஜெயகாந்தன். சிறுகதையில் பெயர் வெளியிடப்படாதவர்களாகவே இடம் பெற்ற பாத்திரங்கள், நாவலில் பிரபு, கங்கா என்று அறியப்பட்டார்கள். தன்னைக் களங்கப்படுத்தியவனை தேடிச் சென்று அவனுடைய பிரியத்தை கங்கா அடைய முயல்கிறாள் என்பதாக நாவல் விரியும். இளைஞனின் பாத்திரம் கண்ணியமும் நாகரிகமும் உடையவனாக அமைக்கப்பட்டிருக்கும். சிறுகதையில் உள்ளதைப் போலவே நாவலிலும் அவனது கயமைத்தனம் மழுங்கடிக்கப்பட்டிருக்கும். தன்னைக் கற்பழித்தவனையே தேடிச் சென்று திருமணம் செய்யும் பழமைவாத தமிழ்த் திரைப்படங்களுக்கும் இது போன்ற படைப்புகளுக்கும் அதிகம் வித்தியாசம் கிடையாது.

‘The Tale’ திரைப்படத்தில் வரும் ஜெனிஃபரும், கங்காவைப் போன்றே மனக்குழப்பத்தில் ஆழ்கிறாள். தன்னுடைய விருப்பமின்மையின் பேரில் அந்த உறவு நிகழ்ந்ததா என்பதை அவளால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனவேதான் தாயும், கணவனும் பில்லின் மீது புகார் தர ஆவேசமாக வற்புறுத்தும் போது நிதானிக்கிறாள். ஆனால் கங்காவைப் போல் அவள் அசட்டுத்தனமான முடிவை எடுக்கவில்லை. கடந்த கால நினைவுகளை நிதானமாக பரிசிலீத்துப் பார்க்கும் போது இளம் பருவத்தின் அறியாமையை பில் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டான் என்கிற முடிவை அவளால் இறுதியில் வந்தடைய முடிகிறது.

தன்னுடைய 13வயதில் நிகழ்ந்த சம்பவங்களின் மீதான கொடுமையை நாற்பதாவது வயதில்தான் அவளால் மீள்நினைவு செய்ய முடிகிறது. அது சார்ந்த எதிர்ப்பை சம்பந்தப்பட்ட ஆசாமியிடம் வெளிப்படுத்த முடிகிறது. Me Too விவகாரங்களில் ஆணாதிக்க மனங்கள் எழுப்பும் வழக்கமான கேள்வி ஒன்றுண்டு. ‘சம்பவம் நடந்த போதே பெண்கள் ஏன் அதை வெளியே சொல்லவில்லை, எதற்கு பல ஆண்டுகள் கழித்து இப்போது சொல்கிறார்கள்?’

ஒரு பெண் தன் மீது நிகழ்ந்த பாலி்யல் துன்புறுத்தலை வெளியில் சொல்வதற்கு பல மனத்தடைகள், கலாசாரத் தடைகள் உள்ளன. பாதிப்பை அடைந்தவளையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி மேலதிக விசாரணைக்கு ஆளாக்கும் ஆணாதிக்க சமூகத்தில் அவள் மேலும் பல இன்னல்களை அடைய வேண்டியிருக்கும். அவள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றத்தை மனஉளைச்சலோடு அவளேதான் நிரூபிக்க வேண்டியிருக்கும்.  உற்றார், சமூகம் என்று பலரின் நிராகரிப்புகளையும் வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். பாமரத்தனமானவள் என்றாலும் கங்காவின் தாயைப் போல தண்ணீர் ஊற்றி ‘நீ சுத்தமாயிட்டேடி குழந்தே’ என்கிற முதிர்ச்சி பல பெற்றோருக்கு வாய்க்காது. தன்னையே பலியிட்டுக் கொண்டு அந்தத் தீயின் வெளிச்சத்தில்தான் உண்மையை அவளால் பொதுவில் கொண்டு வர முடியும்.

சமீபத்தில் தமிழகச் சூழலில் பற்றத் துவங்கியிருக்கும் ‘Me Too’ புகார்கள், இவற்றுக்கு ஆணாதிக்க சமூகத்திடமிருந்து கிளம்பும் அபத்தமான,அகங்காரமான எதிர்வினைகள், இவை சார்ந்த விவாதங்கள் ஆகியவைகளையொட்டி ‘The Tale’ திரைப்படத்தையும் இணைத்து காணலாம்.


(குமுதம் தீராநதி -  ஜனவரி  2019 இதழில் பிரசுரமானது)  





suresh kannan

No comments: