Thursday, October 31, 2019

The Guernsey Literary and Potato Peel Pie Society | 2018 | U.K./France | இயக்குநர் - Mike Newell






அயல் திரை  - 7


போரும் காதலும்



போரை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, போரின் சாகசத்தை பரபரப்பாக சித்தரிக்கும் திரைப்படங்கள். பெரும்பாலான ஹாலிவுட்டின் வணிக திரைப்படங்கள் இந்த வகையே. சுவாரஸ்யம் மட்டுமே இதன் அடிப்படை. மாறாக போரின் மூலம் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் துயரத்தை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் திரைப்படங்கள் இன்னொரு வகை. போர்க்காட்சிகளின் பெருமித சாகசங்களோ, வன்முறையோ இதில் இருக்காது. பெரும்பாலான ஐரோப்பிய திரைப்படங்கள் இந்த வகையில் அமைந்திருக்கும்.

இந்த பிரிட்டிஷ்/பிரான்ஸ் திரைப்படம் இரண்டாவது வகை. போரின் உப விளைவுகள் பல தனிநபர்களையும் அவர்களின் உறவுகளையும் தலைமுறை கடந்தும் பாதிக்கிற விதத்தை வன்முறையின் உறுத்தல் இல்லாமல் அழுத்தமாக நமக்கு உணர்த்துகிறது.
Mary Ann Shaffer மற்றும் Annie Barrows எழுதிய நாவலின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

**

1941-ம் ஆண்டிற்கும் 1946-ம் ஆண்டிற்கும் இடையில் மாறி மாறி பயணிக்கிறது இதன் திரைக்கதை. ஜூலியட் ஆஷ்டன், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர். தனது புதிய நூல் குறித்தான சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். இங்கிலீஷ் கால்வாயில் உள்ள Guernsey என்கிற தீவில் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வருகிறது.. கடிதத்தை எழுதிய டவ்சி ஆடம்ஸ், ஜூலியட்டின் வாசகர். இங்கிலாந்தில் ஒரு நூலை வாங்கி அனுப்பச் சொல்லி அந்தக் கடிதம் வேண்டுகிறது.

‘The Guernsey Literary and Potato Peel Pie Society’ என்கிற அந்த வாசிப்புக் குழுவின் விநோதமான பெயர் ஜூலியட்டைக் கவர்கிறது. நூலை வாங்கி அனுப்பும் ஜுலியட், பதில் உபகாரமாக அந்தக் குழுவின் பெயர் உருவான காரணத்தை அனுப்பச் சொல்லி கேட்கிறார். இப்படியாக சில பல கடிதங்களின் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அதன் மூலம் ஐந்தாண்டுகளுக்கு முன்னதான காட்சிகள் விரிகின்றன.

Guernsey தீவு, ஜெர்மனியின் நாஜி வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நேரம் அது. பன்றிப் பண்ணை வைத்திருக்கும் ஆடம்ஸின் வீட்டில் இருக்கும் பன்றிகளையெல்லாம் நாஜி படை கைப்பற்றிக் கொள்கிறது. எங்கும் பஞ்சம். ஒரேயொரு உருளைக்கிழங்கை வைத்து ஒரு முழு நாளை ஓட்ட வேண்டிய நிலைமை. எலிஸபெத் என்கிற பெண் ஆடம்ஸை அவரது வீட்டிற்கு அழைக்கிறார். அவர்கள் வீட்டில் ஒரு பன்றியை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டு ஆடம்ஸின் கண்கள் விரிகின்றன. இஸோலா என்கிற பெண்மணி, தான் தயாரிக்கும் மதுவைக் கொண்டு வருகிறாள். எமென் என்கிற கிழவர் உருளைக்கிழங்கு தோலினால் செய்யப்பட்ட ஒரு பதார்த்தத்தை கொண்டு வருகிறார்.

கடுமையான பசியில் இருக்கும் அவர்கள் ஆசை தீர மதுவுடன் அந்த விருந்தைக் கொண்டாடுகிறார்கள். இந்த உற்சாகத்துடன் அவர்கள் சாலையில் உரையாடிக் கொண்டே போகும் போது நாஜி வீரர்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலம் என்பதால் நாஜிகளின் விசாரணையை மேற்கொள்கிறார்கள். தாங்கள் நடத்தும் வாசிப்பு குழுவில் நூல் வாசித்து விட்டு வருகிறோம் என்று அப்போது வாய்க்கு வந்த பொய்யைச் சொல்கிறார்கள். ‘உங்கள் குழுவின் பெயர் என்ன?” என்று கடுமையாக கேட்கிறான் நாஜி அதிகாரி. அந்த ஊரின் பெயரையும் தாங்கள் சாப்பிட்ட விருந்தையும் கலவையாக இணைத்து விநோதமான பெயரை உருவாக்கிச் சொல்வதால் அப்போதைக்கு தப்பிக்கிறார்கள்.

பொய்யை உண்மையாக்கினால்தான் நாஜிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற காரணத்தினால் நூலகத்திலிருந்து புத்தகங்களை திருடி, வாசிப்பு குழுவை உருவாக்கி ஒவ்வொரு வெள்ளியன்றும் கூடி புத்தகங்களைப் பற்றி பேச, நூல்கள் மீது தன்னிச்சையாக ஆர்வம் உருவாகி அந்த வாசிப்புக் குழு உண்மையாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இந்தக் குழு உருவான பின்னணியை அறியும் ஜூலியட், டைம்ஸ் இலக்கிய இணைப்பிதழிற்காக இதைப் பற்றிய கட்டுரையை எழுதும் உத்சேத்துடன் Guernsey தீவிற்கு செல்கிறாள். லண்டனிலிருந்து வந்திருக்கும் இவளைப் பார்த்து அந்தக் குழுவின் உறுப்பினர்கள் முதலில் திகைத்தாலும் பிறகு பிரியத்துடன் ஒட்டிக் கொள்கிறார்கள். தான் வந்த நோக்கத்தை ஜூலியட் கூற, குழுவின் மூத்த உறுப்பினரான அமேலியா அதற்கு உறுதியாக மறுத்து விடுகிறார். “எங்களுக்கு இதில் சம்மதமில்லை. நீ லண்டனுக்கு திரும்பிச் செல்” என்று கடுமையாக சொல்கிறாள்.

அவர் அத்தனை கடுமையாக மறுப்பதற்கான காரணம் ஜுலியட்டுக்கு புரிவதில்லை. அதில் ஏதோவொரு மர்மமும் விநோதமும் இருப்பதாக நினைக்கும் அவள், அங்கேயே தொடர்ந்து தங்கி அவர்களுடன் பழகத் துவங்குகிறாள். மெல்ல மெல்ல விவரங்கள் துலங்குகின்றன. குழுவின் தலைவரான எலிஸபெத், ஓர் அடிமைச்சிறுவனுக்கு உதவப் போய் நாஜி படையினரால் கைது செய்யப்பட்டு தூர தேசத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். சிறைக்குச் செல்வதற்கு தன் மகள் கிட்டை டவ்ஸி ஆடம்ஸிடம் ஒப்படைத்துச் செல்கிறாள். கிட்டை தன் மகள் போலவே வளர்க்கிறார் ஆடம்ஸ். இந்த விவரங்களை மெல்ல அறிந்து கொள்கிறார் ஜூலியட்.

இதற்கிடையில் ஜூலியட்டிற்கும் ஆடம்ஸிற்கும் இனம் புரியாத நேசம் உருவாகிறது. இங்கிலாந்தில் இருந்து கப்பல் ஏறுவதற்கு முன்பாக, ஜூலியட்டின் நண்பனும் பதிப்பாளனுமான மார்க், இவளைத் திருமணம் செய்ய விரும்புவதாக சொல்லி இவளுடைய சம்மதத்தை கேட்கிறான். இவளும் சம்மதிக்கவே நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவிக்கிறான். எனவே அது சார்ந்த உறுத்தல் ஜூலியட்டிற்கு இருப்பதால் ஆடம்ஸை அதிகம் நெருங்காமல் தவிர்க்கிறாள்.

எலிஸபெத்தின் இருப்பு இல்லாமல் அந்தக் குழு தவிப்பதை அறியும் ஜூலியட் அவர்களுக்கு உதவுவதற்காக, தன் வருங்கால கணவனான மார்க்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். ராணுவத்தில் பணிபுரியும் அவன் அது பற்றி விசாரிக்கிறான். ஜூலியட்டிற்கும் ஆடம்ஸிற்கும் உள்ள விநோதமான உறவு பூடகமாக வளர்கிறது. ஆடம்ஸின் மகள் ‘கிட்’ உடன் பாசமாகப் பழகுகிறாள் ஜூலியட். எலிஸபெத்தின் காதலன் ஒரு ஜெர்மானியன் என்பதும் இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் ‘கிட்’ என்பதையும் ஜூலியட் அறிந்து கொள்கிறாள். இவர்களின் உறவை அறியும் ஜெர்மானிய ராணுவம், மார்க்கை கப்பலில் ஏற்றி அனுப்பி விட, கப்பல் விபத்துக்குள்ளாகி எலிஸபெத்தின் காதலன் இறந்து விடும் செய்தியும் தெரிகிறது.

இந்த விவரங்கள் பத்திரிகையில் வந்தால், ஜெர்மனியிலிருந்து எவராவது வந்து குழந்தையை எடுத்துச் சென்று விடுவார்களோ என்கிற பயத்தில்தான் இதைப் பற்றி எழுத அமேலியா முன்பு கடுமையாக மறுத்திருக்கிறார் என்கிற விஷயத்தையும் ஜூலியட் புரிந்து கொள்கிறாள்.

எலிஸபத்தைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் மார்க், ஜூலியட்டைத் தேடி அந்தத் தீவிற்கே வந்துவிடுகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத ஜூலியட், மகிழ்ச்சியும் திகைப்புமாக அவனை வரவேற்கிறாள். தன்னுடைய பழைய ஜூலியட் அங்கில்லை என்பதை உணரும் மார்க் ‘நான் அணிவித்த திருமண மோதிரம் எங்கே’ என்று கேட்கிறான். சங்கடத்துடன் மழுப்பலான பதிலைக் கூறுகிறாள் ஜூலியட்.

நாஜிகளின் பிடியில் சிறையில் இருந்த எலிஸபெத், ஒரு பெண்ணுக்கு உதவப் போய், சுடப்பட்டு இறந்து விட்ட செய்தியை மார்க்கின் மூலம் அறியும் ஜூலியட் மனம் துயருகிறாள். இந்த வேதனையான செய்தியை அந்தக் குழுவிற்கு தெரிவிக்கிறாள். ‘நீ வந்த வேலை முடிந்து விட்டதல்லவா, வா” என்று அவளை அழைத்துக் கொண்டு லண்டன் செல்கிறான் மார்க். அவள் செல்வதால் ஆடம்ஸ் வருத்தப்படுகிறான். ஜூலியட்டிற்கும் வருத்தம்தான்.

ஆடம்ஸின் மீது உருவாகி விட்ட நேசத்தை உதற முடியாது என்பதை மனமார அறிந்து கொள்ளும் ஜூலியட், மார்க்கிடம் இந்த விஷயத்தைச் சொல்லி மன்னிப்பைக் கோருகிறாள். முதலில் அதிர்ச்சியடையும் மார்க் பிறகு வாழ்த்துகிறான். அந்த வாசிப்பு குழுவைப் பற்றி எழுதமாட்டேன் என்று வாக்களித்த ஜூலியட், அதை வெளியில் கொட்ட வேண்டிய உளைச்சலில், இரவு பகலாக அமர்ந்து பெரிய நாவலாக எழுதி முடித்தவுடன்தான் மனநிம்மதி கொள்கிறாள்.

எழுதப்பட்ட நாவலின் பிரதியை Guernsey தீவிற்கு அனுப்புகிறாள் ஜூலியட். அதனுடன் இருக்கும் கடிதத்தில் ‘ஆடம்ஸ் மீதான ஈர்ப்பு’ இருப்பது பற்றிய குறிப்பும் இருக்கிறது. உடனே லண்டன் செல்ல வேண்டுமென்று பதைக்கும் ஆடம்ஸ் துறைமுகத்திற்கு செல்ல, இவர்களைக் காண வேண்டுமென்று துடிப்புடன் அங்கு வந்திருக்கும் ஜூலியட் ஆடம்ஸைக் காண, காதலர்களின் உணர்வுபூர்வமான சந்திப்பு நிகழ்கிறது. ஜூலியட்டின் நாவலைப் பற்றி, வாசிப்பு குழு உரையாடுவதோடு இத்திரைப்படம் நிறைவுறுகிறது.

**

ஜூலியட் ஆஸ்டன் பாத்திரத்திற்காக ‘டைட்டானிக்’ புகழ் கேட் வின்ஸ்லெட் முதல் பல நடிகைகளுடன் பேச்சு வார்த்தையை நடத்திய பிறகு இறுதியாக லில்லி ஜேம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த தேர்விற்கான முழு நியாயத்தையும் தந்திருக்கிறார் லில்லி ஜேம்ஸ். அத்தனை அபாரமான நடிப்பு. இரண்டு காதல்களுக்கும் நடுவில் நின்று தவிப்பதையும், வாசிப்பு குழு நபர்களின் தோழமையைப் பெறும் முயற்சிகளையும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேலோட்டமாக பார்க்கும் போது இதுவொரு காதல் கதையாக தோற்றமளித்தாலும், போரினால் தனிநபர்களுக்கு ஏற்படும் இழப்புகளும் துயரங்களும் இதன் அடிநாதமாக உறைந்துள்ளன. வாசிப்புக்குழுவின் மூத்த உறுப்பினரான அமேலியா, தன் மகளை போரில் இழந்துள்ளார். மகளாக கருதிய எலிஸபத்தையும் அதே காரணத்தால் தொலைத்து விட்டதால், இந்தக் குழுவைப் பற்றி எழுதக்கூடாது என்று ஜூலியட்டிடம் உறுதியாக மறுத்திருக்கிறார் என்பதை அறிய நேரும் போது நெகிழ்வு ஏற்படுகிறது. ஜூலியட்டும் தனது பெற்றோர்களை போர் வன்முறையில் இழந்திருப்பதால் அந்த துயரத்தை அவளால் ஆழமாக உணர முடிகிறது.

அமேலியாக நடித்திருக்கும் Penelope Wilton, டவ்ஸி ஆடம்ஸ் –ஆக நடித்திருக்கும் Michiel Huisman உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் கலை இயக்கத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. நாற்பதுகளில் நிகழும் பின்னணி என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் கட்டிடங்கள், கப்பல், உடை என்று பல விஷயங்களை நுட்பமாக உருவாக்கியுள்ளார்கள். Alexandra Harwood-ன் பின்னணி இசை அபாரமாக பதிவாகியுள்ளது.

சமகாலம், ஐந்தாண்டுகளுக்கு முந்தைய கடந்த காலம் என இரண்டிற்கும் இடையில் திரைக்கதை பயணிக்கிறது. எலிஸபெத்தின் பின்னணியும் அதிலுள்ள மர்மமும் மெல்ல மெல்ல விரியும் வகையில் காட்சிகள் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

Four Weddings and a Funeral (1994), Donnie Brasco (1997) போன்ற அற்புதமான திரைப்படங்களை இயக்கிய Mike Newell இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். எங்கோ தீர்மானிக்கப்படும் அரசியலால் நிகழும் போர்கள் அதற்குத் தொடர்பேயில்லாத வேறெந்த பிரதேசத்தையோ சேர்ந்த தனிநபர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் துயரத்தை மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் உணர்த்துகிறது இத்திரைப்படம்.


(குமுதம் தீராநதி -  செப்டெம்பர்  2018 இதழில் பிரசுரமானது)  

 
suresh kannan

1 comment:

Mohanprabu (மோகன் பிரபு ) said...

செம்ம்ம்ம 😍😍