Monday, July 26, 2010

செழியனின் விகடன் சிறுகதை

முந்தைய பதிவின் தொடர்ச்சி

ஆனந்த விகடனில் நான் ரசித்த சிறுகதை 'மிஸ்டர் மார்க்'. செழியன் எழுதியது. 'உலக சினிமா'வைப் பற்றின ரசனை, வெகுஜன வாசகர்களை பரவலாக சென்றடையுமாறு எழுதினவர். 'கல்லூரி' 'ரெட்டச்சுழி" (அய்யோ) போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர். அதையெல்லாம் விட இவர் எழுத்தாளர் என்பதுதான் எனக்கு முக்கியமானது. கவிஞர் மீரா நினைவு மலரின் இவரின் அஞ்சலிக் கட்டுரையோடு இவரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. மீராவின் வீட்டைப் பற்றிய செழியனின் அற்புத வர்ணணை நம்மை 'வாசிக்க' விடாமல் 'காண' வைக்கும் மாயத்தைச் செய்தது. (தேடியாவது இந்தக் கட்டுரையை வாசிக்குமாறு பலத்த பரிந்துரை செய்கிறேன்). பிறகு அங்கொன்றுமாக சில சிறுகதைகளும் கட்டுரைகளும்.

சினிமாவில் பணிபுரிந்து கொண்டே அதன் இருண்மையான பகுதிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தி எழுதுபவர்கள் சொற்பமானவர்களே. அதில் செழியனும் ஒருவர். தீபாவளியின் நெருக்கத்தில் தம்முடைய குடும்பத்திற்கு துணி எடுக்க பணமும் நேரமும் இல்லாத ஒர் உதவி இயக்குநர், படப்பிடிப்பு ஒன்றின் கடைசி நேரத் தேவைக்காக நாயகனுக்கு விலையுயர்ந்த சட்டையைத் தேடியலையும் நகைமுரணை ஒரு சிறுகதையில் சொல்லியிருப்பார்.

சொற்ப அளவிலான விதிவிலக்குகள் தவிர, எழுபத்தைந்து ஆண்டு கால தமிழ் சினிமா எவ்வாறு அபத்தங்களால் நிரம்பியிருக்கின்றது என்பதை சூடும் சுவையுமான மொழியில் கூறுகிறது செழியனின் கட்டுரை. (... அப்படிக் காதலையே எழுபத்தைந்து வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நாம் அந்த ஒரு துறையிலாவது பிறர் அணுக முடியாத புலமையைப் பெற்றிருக்கிறோமா? உலகின் மிகச் சிறந்த காதல் படங்களென எத்தனை தமிழப் படங்களைச் சொல்ல முடியும்) என்றாலும் நம்பிக்கைத் தொனியோடு நிறைகிறது.

என்று டைம்ஸ் இலக்கிய மலரில் தமிழ் சினிமா பற்றின கட்டுரை மாதிரி சில.

மேற்குறிப்பிட்ட சிறுகதை தமிழ் சினிமாவின் பாவப்பட்ட ஜீவன்களான உதவி இயக்குநர்கள், ஒரு படத்தோடு கீரிடம் பறிபோன இயக்குநர்கள், அங்கீகாரத்திற்கான அலைச்சலும் பிழைப்பிற்காக சினிமாவின் எந்தவொரு பணியையும் செய்யத் தயாராக இருக்கும் மனிதர்கள் போன்றவர்களின் பிரதிநிதியை ஒரு பாத்திரத்தின் வாயிலாக சித்தரிக்கிறது.

 

வரவேற்பறையின் தொலைக்காட்சியில் நாம் வெற்றி பெற்ற இயக்குநர்களின் நடிகர்களின் நேர்காணலையே பளபளப்பான வெளிச்சத்தில் காண்கிறோம். ஆனால் இவர்களின் எண்ணிக்கை சிறு சதவீதமே. இந்த நாற்காலியில் அமர ஆசைப்பட்டு பல வருடங்களாகியும் நிறைவேறாத தோற்றுப் போனவர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தொடலாம். துரதிர்ஷ்டவசமாக அவற்றைப் பற்றின சித்திரம் நமக்குக் கிடைப்பதில்லை. தோல்வியடைந்தவர்களை இச்சமூகம் திரும்பியும் பார்ப்பதில்லை. இந்த கசப்பான உண்மையை இந்தச் சிறுகதை நமக்கு உணர்த்துகிறது.

மிஸ்டர் மார்க் பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்த 'மல்லிகை' திரைப்படத்தின் இயக்குநர். (கானல் வரி என்றுதான் தலைப்பு வைத்தார். தயாரிப்பாளர் கானல்வரியாது, வீட்டுவரியாவது என்று மாற்றி விட்டார்). எல்லாக் குறுக்கீடுகளுக்கும் இசைந்து தாம் நினைத்த படத்தை எடுக்க முடியாமல் எதையோ எடுத்து அது தோல்விப்படமாகி.... பின்னர்  நூறு, இருநூறு என்று கண்ணில் படுகிற சினிமா நண்பர்களிடம் காலம் ஓடுகிற நிலைமை. தான் உதவி இயக்குநரால் 'சார்' என்று அழைக்கப்படுவதை வெறுப்புடன் நிராகரிக்கிறவர் அந்த இளைஞன் பின்னாளில் ஒளிப்பதிவாளர் ஆனவுடன் "ஏதாவது வாய்ப்பிருந்தா கொடுங்க சார்" என்கிறார். நடுவில் பிழைப்பிற்காக வேண்டாவெறுப்பாக தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுதுகிறார். (கண்ணு வழியா ஒண்ணுக்கு போயிருங்க போல).

கதை சொல்லிக்கு மிஸ்டர் மார்க் இறந்து போவதான செய்தி வருவதுடன் கதை முடிவடைகிறது. இது போன்ற ஆயிரம் விட்டில் பூச்சிகள் கோடம்பாக்க ஸடூடியோக்களில் வலம் வருகிறார்கள். அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' புதினம் இவர்களின் உலகிலுள்ள சோகத்தையும் அபத்தத்தையும் வலுவாக சுட்டிக் காட்டுகிறது. சினிமாவிலேயே கூட பாலச்சந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்' படத்தின் இரண்டாவது பகுதி இந்த உலகைப் பற்றிப் பேசுகிறது.

இந்தச் சிறுகதையை வாசித்தவுடன் எனக்கு சட்டென்று நினைவில் வந்தவர் 'தினந்தோறும்' திரைப்பட இயக்குநர் நாகராஜன். சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரசியமான வசனங்களாலும் திரைக்கதையாலும் கவர்ந்த படமது. நன்றாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் பின்பு துணை நடிகராக சில வருடங்களில் காணாமற் போனார். சமீபத்தில் "குடியால அழிஞ்சேன் சார். இனி பாருங்க. ஒரு ரவுண்டு வருவேன்" என்றார் ஒரு நேர்காணலில். என்னவாயிற்று என்று தெரியவில்லை..

இன்று புகழ் பெற்றிருக்கும் பெரிய இயக்குநர்களின் பழைய திரைப்படங்களைக் காண நேரும் போது டைட்டிலில் இடம் பெற்றிருக்கும் உதவி இயக்குநர்களின் வரிசையை கூர்ந்து பார்ப்பேன். அதில் பின்னாளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஒருசிலதே காணக் கிடைக்கும். எனில் மற்றவர்கள் என்ன ஆனார்கள்? யாருக்காவது உதவியாகவே இன்னும் காலம் கழிக்கிறார்களா? வாய்ப்பு கிடைக்காத வெறுப்பில் எங்கிருந்து ஓடி வந்தார்களோ, அந்த ஊருக்கே  திரும்பிச் சென்றார்களா,  அல்லது அந்த தோல்வியை ஒப்புக் கொள்ள மனமி்ல்லாமல் நகரத்தின் விளிம்பு மனிதர்களில் ஒன்றாக கரைந்து போனார்களா,  இந்த சினிமா வியாபாரத்திலேயே உள்ள சந்து பொந்துகளை அறிந்து விநியோகஸ்தராக ஆகி தம்முள் இருந்த கலைஞனை தொலைத்து விட்டார்களா?

நேற்று மாத்திரமல்ல, இன்றும் கூட பல இளைஞர்களின் கனவும் லட்சியமும் சினிமாவில் ஜெயிப்பது என்றாகவே இருக்கிறது. மேற்கண்ட தோல்வியடைந்த மனிதர்களைப் ப்றறி அறிந்திராதிருப்பது ஒரு காரணம் என்றால், அறிந்திருந்தாலும் கூட அதை பொருட்படுத்தாது தமக்கு அவ்வாறு நிகழாது என்கிற பெருநம்பிக்கையோடு வருவது இன்னொரு காரணம். எது இவர்களை இத்தனை துடிப்புடன் செலுத்துகிறது.  சினிமாவின் மூலம் கிடைக்கும் உடனடி பணமும், புகழும் மாத்திரம்தானா? அல்லது உண்மையாகவே கலைஞன் என்கிற அங்கீகாரத்திற்காகத்தானா?

தானாக வாய்ப்பு தேடி அல்லது சுற்றத்தால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டு துணை நடிகைகளாக, மூன்றாவது வரிசையில் நான்காவதாக நிற்கும் ஆட்டக்காரியாக, இந்த வாய்ப்பும் கிடைக்காமல் பாலியல் தொழிலாளிகளாக ஆக நேரும் பெண்களின் நிலைமை இன்னும் பரிதாபம். 'ஊருல இருந்து மஞ்சப்பையோட படம் எடுக்க வர்ற தயாரிப்பாளர்கள், படமெடுக்கிறாங்களோ இல்லையோ, ரூம்ல பெரிய கட்டிலா மொதல்ல வாங்கிடறாங்க" என்கிறார் கமல்ஹாசன், ஒரு பழைய நேர்காணலில்.

எத்தனை பேர்களின் கனவுகளையும் உழைப்பையும் கண்ணீரையும்  தின்று செரித்துக் கொண்டு அதன் சுவடேயில்லாமல் பளபளப்பாக நிற்கிறது சினிமா என்னும் பிரம்ம ராட்சசம்.

suresh kannan

Thursday, July 22, 2010

ஆனந்த விகடனும் சிங்கத்தின் மாமிசமும்


 யாரை நாம் தவிர்க்க விரும்புகிறோமோ  அவரையே அடிக்கடி எதிரி்ல் சந்திக்க நேரும் சங்கடங்கள் யதார்த்தத்தில் ஏற்படும். அப்படியாக 'அந்த' எழுத்தாளரைப் பற்றி இனி எழுதுவதை தவிர்ப்பது என்கிற இரண்டு இடுகைகளுக்கு முன்னர்தான் எடுத்த முடிவை இத்தனை விரைவில் மீறுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை.

குறிப்பிட்ட எழுத்தாளரின் பத்தி எழுத்து சமீபத்திய ஆ.வி. இதழில் சிறப்பாக வந்திருப்பதாக இணைய நண்பரொருவர் buzz-ல் பகிர்ந்து கொண்டார். சில காரணங்களுக்காக 'அந்த' எழுத்தாளரை நான் விரும்பாவிட்டாலும் அடிப்படையாக அவரது சுவாரசியமான எழுத்தை விரும்புபவன் என்கிற வகையில் இதழை வாங்கினேன். நான் ஆனந்த விகடனை வாசிக்க நிறுத்தி சில வருடங்கள் ஆகி விட்டிருந்தன. எஸ்.ராவின் தொடர்,  இயக்குநர்கள் பாலா, சேரன், நடிகர் பிரகாஷ்ராஜ் போன்றோர்களின் தொடர்களுக்காகவும் குறிப்பாக வாத்தியாரின் 'கற்றது பெற்றதும்' பத்திகளுக்காகவும்  முன்னர் அதை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அட்டையில் நமீதாவை அடிக்கடி போட்ட ராசியோ என்னவோ, ஒரு நிலையில் இதழ் பாரம்பரிய வடிவிலிருந்து நீண்டு அகலமாகி உள்ளே உருப்படியான விஷயங்கள் குறைந்து போய் மாறாக டெஃபானிருக்கு போட்டியாக அரை நிர்வாணப்படங்கள் மிகுந்ததில் இதற்கு உருப்படியாக நேரடியாக டெஃபானிரையே படிப்பது நலம்  என்று ஆவியை நிறுத்தினேன்.(!)

சரி. சமீபத்திய இதழுக்கு வருவோம். அப்படியொன்றும் பெரிதான மாற்றமில்லை என்றாலும் உருப்படியான சில விஷயங்கள் இருந்தன. குறிப்பாக 'பொக்கிஷம்' பகுதியைச் சொல்லாம். சிலதை மீள்நினைவாகவும் தவற விட்டதை இப்போது வாசிக்க கிடைத்த வாய்ப்பாகவும் சொல்லலாம். 'நம்ம' எழுத்தாளரின் பத்தி எழுத்தை முதலில் வாசித்தேன். நான் முன்பே குறிப்பிட்டது போல் இணையத்தில் எழுதுபவர்களே, பரவலாக அறியப்படும் அச்சு எழுத்தாளர்களை விட தரமாகவும் ஆழமாகவும் எழுதுகிறார்கள் என்பது உறுதியானது. அதனால்தான் 'இந்த' எழுத்தாளரும் அவரால் 20 வருடங்களுக்கும் மேலாக  'விமர்சிக்கப்படும் (?) எழுத்தாளரும் பொத்தாம் பொதுவாக இணையத்தில் எழுதுபவர்களை பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 'காய்ச்சிக் கொண்டிருக்கிறார்களா என தெரியவி்ல்லை. (எஸ.ரா. மாத்திரமே இதில் விதிவிலக்கு. மாறாக அவர் நன்றாக எழுதுபவர்களை அடையாளப்படுத்தும் வேலையைத்தான் செய்கிறார்).

இணையத்தில்தான் சுயபுராணம் என்று பார்த்தால் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் இதழிலும் தனது சுயபுராணத்தை பாடியிருந்தார் 'அந்த' எழுத்தாளர். சுயபுராணம் எழுதுவதில் தவறில்லை. சுஜாதா கூட எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் குறைந்தபட்சம் அது வாசிக்க சுவாரசியமாகவாவது இருக்க வேண்டும். இல்லை. சரி, இது போகட்டும்.

வலைப்பூவில் எழுதப்பட்ட ஒரு கவிதையை  இணைய முகவரியுடன் எடுத்துப் போட்டு விட்டு 'இதை எழுதியவர் சுந்தர ராமசாமியின் பேரன்' என்று எழுதியிருக்கிறார். இதன் மூலம் காலச்சுவடிற்கு அவர் சொல்லும் மறைமுகச் செய்தி எதுவென தெரியவில்லை. எதுவாக வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும், இல்லாமலும் போகட்டும். 'அந்த' எழுத்தாளரின் தளத்தில் முன்பு 'மலாவி ஆனந்த்' என்பவர் தொடர்ந்து கடிதங்கள் மூலம் எழுத்தாளருடன் உரையாடிக் கொண்டிருந்தார். சமயங்களி்ல் எழுத்தாளருடையதை விட வாசகரின் கடிதங்கள் சுவாரசியமாகவும் தகவல்பூர்வமாகவும் இருக்கும். அந்த வாசகர் ஒருமுறை எதிரணியைச் சேர்ந்த (காங்கிரஸில் உள்ள கோஷ்டி எண்ணிக்கையை விட இலக்கிய கோஷ்டிகள் அதிகமாகயிருக்கலாம்) எழுத்தாளருக்கு ஒரு வாசக கடிதம் எழுதிவிட்டாராம். அவ்வளவுதான். பொங்கி விட்டார் 'நம்ம' ஆள். வாசகர் அதிக பிழைகளுடன் எழுதிய கடிதங்களையெல்லாம் எடிட்செய்யவே பல மணி நேரமாகிவிட்டதாம். இப்படியாக இவர் வாசகருக்காக மெனக்கெட்டுக் கொண்டிருக்கும் போது அவர் இவரது ஜென்ம விரோதியிடம் கொஞ்சிக் கொண்டிருந்தால் கோபம் வராதா? நியாய்ம்தான். இப்போது இதே அற்புத லாஜிக்கை 'நம்ம' எழுத்தாளருக்கும் பொருத்திப் பார்ப்போம்.

பல வருடங்களாக யாருமே பொருட்படுத்தாத இவரின் படைப்புகளை சமீபகாலமாக மனுஷ்யபுத்திரன் உயிர்மை பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார். இதை சம்பந்தப்பட்ட எழுததாளரே தம்முடைய தளத்தில் அவ்வப்போது ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். நிலைமை இப்படியிருக்க இந்த எழுத்தாளர், அரசியல் மேடை பேச்சாளர் போல எதிரணி கோஷ்டித் தலைவரின் பேரன் எழுதிய கவிதையை சிலாகித்தால் எழுத்தாளரின் அதே தருக்க நியாயப்படி ம.பு. என்ன செய்ய வேண்டும்? இதை வாசிப்பவரின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

ம.பு.வும் எழுத்தாளர் மாதிரியே எதிர்வினை புரியவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. மேற்சொன்ன எழுத்தாளர் எத்தனை சிறுபிள்ளைத்தனமாக முன்பு நடந்திருக்கிறார் என்பதை விளக்குவதற்காக இத்தனையையும் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

இதில் உச்சபட்சமான நகைச்சுவை என்றால், நம்ம எழுத்தாளர், யாரை சு.ராவின் பேரன் என்று சிலாகித்தாரோ, அந்த வலைப்பூவின் சொந்தக்காரர் உண்மையில் அப்படி கிடையாது. தனக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக அந்த நண்பர் இதை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 'பின்னாளில் 'எழுத்தாளர்' என்னையும் திட்டலாம்' என்று முன்எச்சரிக்கையாக அந்தப் பதிவர் எழுதியிருப்பதன் மூலம் எழுத்தாளரின் லட்சணத்தைப் பற்றி நன்றாக அறிந்துள்ளார் என்று தெரிகிறது.

இந்த இரண்டு விஷயங்களையும் விட்டுவிட்டால் கூட கோலா பூஃப் பற்றி எழுதப்பட்ட பிரதான பத்தியும் க்ரைம் நாவல் பாணியில் வாசகனுக்கு கிளர்ச்சி ஏற்படுத்தும் பாணியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. இறுதியில் நூலாசிரியர் ஏன் அரை நிர்வாணமாகவே காட்சி தருகிறார் என்கிற ஆன்மிக விசாரம் வேறு. 'உங்களில் யாரும் சிங்கக்கறி சாப்பிட்டிருக்கிறீர்களா?' என்கிற அபத்தக் கேள்வி வேறு. யாரிடம் இந்தக் கேள்வி? மதியத்திற்கு சாம்பார் சாதமும் தயிர் சாதமும் சாப்பிட்டு பெரும்பாலும் சிங்கத்தை நேரில் கூட பார்த்திருக்காத நடுத்தர வர்க்கத்து வாசகர்களிடம். அதிர்ச்சி மதிப்பீடாகயிருக்கும் போலிருக்கிறது. இனி ஆவியை வாங்காமலிருப்பதற்கு இந்த ஒரு எழுத்தே போதுமான காரணமாயிருக்கும்.

உண்மையில் இந்த இடுகையை நான் எழுத ஆரம்பித்ததே இதில் எனனைக் கவர்ந்த இன்னொரு எதிர்பாராத படைப்பை பற்றி எழுதுவதற்கு. அதற்குப் பதிலாக ஏன் இந்த இதழை வாங்கினேன் என்று எழுத ஆரம்பித்து இத்தனை நீளமாகி விட்டது. நாரதரை விட மஹாவிஷ்ணுவை அதிகம் நினைக்கும் கம்சனின் கதை போலாகி விட்டது என் நிலைமை. அந்தக் கதை உங்களுக்கும் தெரியும்தானே?

என்னைக் கவர்ந்த அந்தப் படைப்பைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

suresh kannan

Tuesday, July 20, 2010

நாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - பகுதி 2

இந்தப் பதிவின் தொடர்ச்சி....

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குறும்படங்களை  இந்த தளத்தில் பார்த்துவிட்டு பின்பு இந்தப் பதிவை வாசிப்பது நல்லது.

3) மூன்றாம் குறும்படம் : ஆடு புலி ஆட்டம் - இயக்குநர் ஷ்யாம்

பால் வேறுபாடுகளின் இடைவெளி மறைந்து கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் கூட  ஆண் குழந்தை மீதான பிரேமையின் அபத்தத்தை செவிட்டில் அறைந்தாற் போல் கண்டிக்கும் குறும்படமிது.

ஒரு நள்ளிரவு பிரசவ வலியுடன் துவங்குகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் அத்தகப்பன் ஆண் குழந்தைதான் பிறக்கும் / வேண்டும் என்று தீவிரமாக நம்புகிறான். ஆனால் அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது.

திகைத்துப் போகும் அவர், செவிலிக்கு பணம்தந்து அதே சமயத்தில் இன்னொரு பெண்ணுக்கு பிறக்கும் ஆண் குழந்தையை தன் மனைவியிடம் மாற்றி வைக்குமாறு ஏற்பர்டு செய்கிறார். அவரைத்தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. காலையில் பக்கத்து படுக்கையில் இருக்கும் பெண்ணிடம் 'உங்கள் மகள் (?) நன்றாக வருவாள்' என்று பேசி தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார். 'உங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததில் வருத்தம் ஏதுமில்லையே?' என்று அவர் கேட்கும் போது அதற்கு பெண்ணின் அம்மா பதில் சொலலும் போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் தெரியவருகிறது.

"எங்க தொழிலுக்கு பெண் குழந்தைதாங்க வேணும். வயசுக்கு வந்தவுடனே இவ சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவாளே"

நடிகர் தலைவாசல் விஜய் அந்தத் தகப்பன் பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தார். அவரின் ஆண் குழந்தை ஆசை (வெறி) அவரது குடும்ப உறுப்பினர்களின் மூலம் அழுத்தமாக வெளிப்படுகிறது. பிரசவத்துக்கு முன் அவரது மனைவி 'நமக்கு நல்லபடியா ஆண் குழந்தை பிறக்குமில்லையா' என்று கேட்கிறார். (ஆனால் நான்கு பேர் எதிரில் தன்னுடைய பிற்போக்குத்தனத்தை ஒப்புக் கொள்ள மனமில்லாத அந்த நடுத்தர வாக்க தகப்பன் "எந்தக் குழந்தையா இருந்தா என்னம்மா, நல்லபடியா பொறந்தா சரி" என மழுப்புகிறார்). அவரது சிறு மகளும் "தம்பிப் பாப்பாதான் பொறக்கணும்னு சாமிய வேண்டிக்கறேன்" என்கிறாள். ஆண் குழந்தை குறித்து வீட்டில் தந்தையின்  உரையாடலை விருப்பத்தை  கேட்டு வளரும் மகள், தந்தையிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தக்க சமயத்தில் இதை உபயோகப்படுத்திக் கொள்ளும் குழந்தைகளின் பிரத்யேக குணாதிசயமாக இதை புரிந்து கொள்ளலாம்.

தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று செவிலியிடம் அவர் வற்புறுத்துகிற காட்சியில் "கொள்ளி போட பிள்ளையில்லன்னா என் சாதியில எவனுமே என்னை மதிக்க மாட்டான்" என்கிறார். அப்படி அது என்ன சாதி என்பது தெரியாவிட்டாலும் நிறைய பேர் தங்களது சாதிய உணர்வுகளை தங்களது சமூகத்திற்கு பயந்துதான் பின்பற்றுகிறார்கள் என்கிற யதார்த்தமான உண்மை  தெரிகிறது.

இந்தக் குறும்படத்தை லீனியர் முறையிலேயே சொல்லிச் சொல்லும் இயக்குநர், குழந்தை மாற்றப்பட்ட நிகழ்வை மாத்திரம் கட் செய்து இறுதிப் பகுதியில் சொல்கிறார். இதன் மூலம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருக்கக்கூடும். ஆனால் இந்த உத்தியே அவரது நோக்கத்தை பாழாக்கி விட்டது என்பது என் அனுமானம். கதையை அதன் போக்கிலேயே சொல்லி அந்த 'பாலியல் தொழில்' அதிர்ச்சியை இறுதியில் வைத்திருந்தால் பார்வையாளர்களிடம் அதிக தாக்கததை ஏற்படுத்தியிருக்கலாம். இதன் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

4) நான்காவது குறும்படம் : நீர் - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்


தமிழக கடலோரங்களில் மீனவர்கள் ஆண்டாண்டுகளாக தொடர்ந்து அனுபவிக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை பிரச்சார தொனியின்றி கையாண்டுள்ளார் இயக்குநர் கார்த்திக்.

அண்ணன் - தம்பி ஈகோ மோதலோடு துவங்கும் குறும்படம் எதிர் பக்கத்திலிருந்து  குண்டு மழை பொழியும் போது காயப்பட்டு விடும் தம்பி மீது அண்ணன் வைத்திருக்கும் பாசம் இயல்பாக  வெளிப்படுவதோடு  தொடர்கிறது. அவனுக்காக மருந்து எடுத்துவர திரும்பவும் படகின் மேற்பகுதிக்கு வேறுவழியின்றி செல்லும் அண்ணன், குண்டு பட்டு இறப்பதும், தம்பி காயத்துடன் சக மீனவர்கள் உதவிக்காக நடுக்கடலில் காத்திருக்கும் நிராதரவான நிலையுடனும் படம் நிறைகிறது.

கணவன் மனைவி குடும்ப பிரச்சினை, ஆரம்பம் - பிரச்சினையின் முடிச்சு - அதிர்ச்சியான முடிவு .......என்று சிறுகதைகளை நகல் செய்யும் பாதுகாப்பான வழக்கமான உள்ளடக்கம் அல்லாமல் கதை என்று பெரிதாக ஒன்றுமில்லாமல் வசனங்களும் அதிகமில்லாமல் நிகழ்வுகளின் மூலமாகவே தன் படைப்பை நகர்த்திச் இயக்குநர் சென்ற விதம் திருப்தியை ஏற்படுத்துகிறது.அதுவும் தற்போது ஆட்சியிலிருக்கும் ஒர் அரசியல் கட்சியின் தொலைக் காட்சியிலேயே இப்படியொரு உள்ளடக்கத்தை தேர்வு செய்தது இயக்குநரின் துணிச்சலைக் காட்டுகிறது.

'பொட்டை' 'மயிரு' என்று தாராளமாக புழங்கும் வசனங்கள் யதார்த்த நோக்கில் உபயோகப்படுத்தப் பட்டிருந்தாலும் இது சென்சார் தடையில்லாமல் பெரும்பாலான வரவேற்பறைகளில் ஒலிக்கப் போவதை இயக்குநர் கவனத்தில் கொண்டிருக்கலாம். "அப்பன மாதிரியே நானும் செத்திருக்கணும்னு நெனக்கறியா" என்று குண்டடி பட்ட தம்பி மூலம் இந்த எல்லையோர அட்டூழியங்கள் காலங்காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது அழுத்தமாக பதிவாகிறது. படம் முழுவதும் தொடரும் அந்த பதட்டத்தை இறுதிவரை தக்கவைத்திருக்கிறார் இயக்குநர்.

இக்குறும்படத்தின் மிகப் பெரிய பலம் இதன் ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும். பதட்டமான ஒலிகளின் மூலமே அந்தச் சூழ்நிலையின் பயங்கரம் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகிறது. அரைகுறையான வெளிச்சத்தில் உயிருக்கு போராடும் அவர்களின் வேதனையும், அண்ணனின் மரணம், தம்பியின் மடியில் அவர் சடலத்தின் மூலம் வெளிப்படும் இறுதிக் காட்சியின் ஏரியல் ஷாட்டும் படகு  நடுக்கடலில் அனாதையாக நிற்கும் லாங் ஷாட்டும் ஒளிப்பதிவாளரின் உழைப்பைக் காட்டுகிறது.  படகில் மாட்டப்பட்டிருக்கும் கடவுளின் படத்தில் 'யாமிருக்க பயமேன்' என்று எழுதப்பட்டிருப்பதை சில முறை காட்டி அதிலுள்ள நகைமுரணை சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

விஷூவல் மீடியம் என்பதன் அடிப்படையை முறையாக உணர்ந்து உருவாக்கப்பட்டிருந்தது  இக்குறும்படம்.

6) ஆறாவது குறும்படம் : மிட்டாய் வீடு - இயக்குநர் பாலாஜி

வித்தியாசமாக தலைப்பிலுள்ள இக்குறும்படம், தன்னுடைய வருங்கால மனைவியை பெற்றோரிடம் அறிமுகப்படுத்தப் போகும் ஓர் இளைஞனின் பார்வையில் செல்கிறது. பெற்றோர் இருவருமே தன்னை எத்தனை அனுசரணையாக வளர்த்தனர் என்பதை தன் காதலிக்கு விளக்குகிறான் இளைஞன். பாத்திரங்களின் இடையில் இயக்குநர் குரல் துணையுடன் சுவாரசிய பின்னணிகளுடன் இது சொல்லப்படுகிறது. இறுதியில் அந்தப் பெண் தன்னுடைய மகனுக்கு ஏற்றவள்தான் என்று பெற்றோர் புரிந்து கொள்வதுடன்  படம் சுபம்.

தந்தையாக ராகவேந்தர். எனக்குத் தெரிந்து அறிமுகமானது முதல் இப்போது வரை மாற்றமேயில்லாமல் ஒரே மாதிரியாக நடிப்பவர்களில் இவரும் ஒருவர். (இவர் ரஜினிகாந்த்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது). தாயாக ரேணுகா. தரப்படும் சம்பளத்திற்கு  இரட்டிப்பாகவே  நடிப்பது இவர் வழக்கமென்றாலும் சில காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக அந்தப் பெண்ணை முதன் முறையாக கூர்ந்து பார்க்கும் காட்சி.

இயக்குநர் பாலாஜிக்கு பாலச்சந்தர், எஸ்.ஜே. சூர்யா படங்கள் மிக பிடிக்கும் போலிருக்கிறது. பாத்திரங்களின் அறிமுகங்களும், நிகழ்வுகளில் இயக்குநரின் சுவாரசிய படம் வரைந்து பாகங்கள் குறிக்கும் குறுக்கீடும் இதை யூகப்படுத்த வைக்கின்றன. பொதுவாக அந்நிய சூழலுக்குச் செல்லும் மருமகளுக்கு இருக்கும் பயம், குறிப்பாக மாமியாரிடம் மீதுள்ள படம் பல படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாமியாருக்கும் இதே போன்றுள்ள பயத்தை யாரும் சித்தரித்ததாக தெரியவில்லை. இந்த நுட்பமான விஷயத்தை இயக்குநர் தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

'ஒர் இளைஞன் தன்னுடைய அம்மாவின் குணாதியங்களையே உடைய பெண்ணைத்தான் காதலிப்பான்' என்கிற உளவியலை முன்வைக்கும் இயக்குநர், இதே காரணத்தினாலேயே, தன்னுடைய இடத்தை அபகரிக்க வந்திருக்கும் மருமகளை வெறுப்புடன் அணுகுவார் என்று அந்தப் பெண்ணின் மூலமாக வெளிப்படுத்துகிறார். ஆனால் படத்தின் இறுதியில் அம்மாவும் காதலியும் ஒரே விஷயத்தை தேர்வு செய்வதாக காட்டி, அவர்களுக்கு ஒரே மாதிரியான டேஸ்ட் இருப்பதுடன் நிறைவு செய்கிறார். எனில் இயக்குநர் முன்பு விளக்கிய லாஜிக்படி அம்மாவிற்கு அந்தப் பெண்ணின் மீது வெறுப்புதானே ஏற்பட வேண்டும்?

"வீட்டிற்கு 12.00 முன்னாலேயே வருவதாகச் சொல்லியிருக்கிறேன்" என்று காதலியை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் இளைஞன், வீட்டையடைந்தவுடன் அம்மாவிடம் தங்களின் அடுத்த நிகழ்ச்சியாக திரைப்படத்திற்குச் செல்வதாக சொல்கிறான். அம்மா இதை ஆட்சேபிக்கும் போது "லஞ்சுக்கு இங்கதாம்மா திரும்பி வரப் போகிறேன்" என்கிறான். அப்பவே லஞ்ச் நேரம் எனும் போது அவர்கள் திரைப்படத்திற்குச் சென்று திரும்பும் போது லஞ்ச் நேரம் கடந்திருக்கும் என்பதை இயக்குநர் கவனத்தில் கொண்டிருக்கலாம்.

சம்பவங்களின் தொடர்ச்சியையும் காலத்தையும் இயக்குநர் கவனமாக தொடர வேண்டும் என்பதற்கு உதாரணமாக சொல்லலாம் என்றாலும் 'எத்தனை கவனமாக பார்த்திருக்கிறேன் பார்த்தீர்களா?" என்று என்னைப் போன்றவர்கள் காட்டிக் கொள்வதற்காக சொல்லும் குறையாகவும் பார்க்கலாம். :-)

மொத்தத்தில் ஒரு ஃபீல் குட் திரைப்படத்தை பார்த்த உணர்வை இக்குறும்படம் ஏற்படுத்தியது.

இறுதிப் போட்டியின் அடுத்த இரண்டு  குறும்படங்கள், என்னைக் கவர்ந்த இயக்குநர்கள், குறும்படங்கள், இந்த நிகழ்சசியின் பின்னாலுள்ள அரசியல் போன்றவை... அடுத்த பதிவில்.

suresh kannan

Monday, July 19, 2010

களவாணியும் எம்.ஜி.ஆரின் தேவையும்

c

தமிழ்த் திரை  ஆரோக்கிய திசையில் பயணிக்க முயற்சிப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னுமொரு சிறுமுதலீட்டு யதார்த்தத் திரைப்படம் 'களவாணி' இந்தப் போக்கை  எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்.

வழக்கமான காதல் -  போராட்டம் - சுபம் - வகை கதைதான். திரைக்கதையிலும் சில சுவாரசியங்களைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை. நிச்சயம் இதை 'ஆண்பாவம்' போன்ற ஆச்சரிய அற்புதங்களுடனெல்லாம் ஒப்பிடவே முடியாது. ஆனால் முழுத்திரைப்படத்தையும் தொய்வின்றி சுவாரசியமாக பார்க்கும் வகையில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது.

எந்த சூப்பர் ஹீரோ மாய்மாலங்களுமில்லாத இயல்பான நாயகன். (மோகன், முரளி போன்ற எவ்வித பிம்பங்களுமில்லாத நாயகர்களின் வெற்றிடத்தை விமல் நிரப்புவாராக). பள்ளி மாணவி என்பதை நம்பலாம் போன்ற நாயகி. சரண்யா, இளவரசு போன்ற அனுபவஸ்தர்களின் துணை, அறிமுக வில்லரான திருமுருகனின் அசத்தலான நடிப்பு, கஞ்சா கருப்புவின் உண்மையிலேயே சிரிக்க வைக்கும் காமெடி...போன்றவை இப்படத்தினை சுவாரசியமாக்குகின்றன.

பாரதிராஜா காட்டிய கிராமத்திலிருந்தே தமிழ்த்திரை இன்னும் பெரிதாக விலகி வராத நிலையில் ... இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகு இப்போதுதான் தாரை சநதிக்கும் புத்தம் புது ரோடு, டிவிஎஸ் 50 அல்லது யமஹா பைக்கில் சர்புர்ரென விரையும் மக்கள், வயலை இழந்தாலும் தொலைக்காட்சியை மாத்திரம் இழக்க விரும்பாத சினிமா மோகம், முன்பு போல் உக்கிரமாக அல்லாத பொருளாதார காரணங்களோடு சிந்திக்கும் ஊர்ப்பகை,  ரகசியமாக நடந்து கொண்டிருந்த ரெக்கார்ட் டான்ஸ், பாரம்பரிய கலைகளை ஒதுக்கிவிட்டு திருவிழாவிற்குள் புகுந்து விட்ட அபத்தம்..... என்று இன்றைய உலகமயமான காலக்கட்டத்தின் எதிரொலிகளை மிகச் சரியாக சித்தரிக்கும் கிராம பின்னணியைக் காட்டியிருப்பதே மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இதில் உரையாடப்பட்டிருப்பது தஞ்சை வட்டார வழக்கு என்று சில விமர்சனங்களை வாசித்தபின்தான் தெரிகிறது. சரியா என்பதை அந்த பிரதேசத்துக்காரர்கள் சொல்ல வேண்டும். சாலையோர வயல்வெளி காட்சிகள் அதிக இடங்களில் வந்து சலிப்பைத்தருகிறது. கிராமத்தின் பல பாத்திரங்களை அதற்கேயுண்டான கிளைக்கதைகளுடன் அமைத்து திரைக்கதை சலிப்பைத் தவிர்த்திருக்கலாம் இயக்குநர் சற்குணம். (மதராச பட்டிணம் 'விஜய்யிடம் அசோசியேட்டாக இருந்தவராமே) தனக்கு மிக நெருக்கமான சூழ்நிலைகளையும் சம்பவங்களையும படமாக்கியிருப்பதாக ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். பெரும்பாலான அறிமுக இயக்குநர்கள் தங்களி்ன் முதல் படத்தை நெடுநாள் ஊற வைத்திருப்பதின் காரணமாக திறமையாக திரை மொழி பெயர்த்து விடுவார்கள். ஆனால் இதன் வெற்றியின் மயக்கத்திலும் முறையாக திட்டமிடாததினாலும் அடுத்த படத்தை பெரும்பாலும் சொதப்பி விடுவார்கள். இந்த இயக்குநர் அதை தவிர்ப்பார் என்று நம்புவோம்.

நாயகனுக்கு 'களவாணி' என்கிற தலைப்பு பொருத்தமா எனத் தெரியவில்லை. 'தறுதலை' என்று வைத்திருக்கலாம். அப்பாவி அம்மாவிடமும் தங்கையிடமும் மிரட்டி பணம் பறிப்பதும் போகிற வருகிற பெண்களை 'கட்டிக்கறியா' என்று கேட்பதையே பிரதான வேலையாக வைத்திருக்கிறார்.

இவர் வண்டியை ரிப்பேர் செய்யும் காட்சியில்  இவருக்கும் ஒரு சிறுமிக்கும் நடக்கும் உரையாடலின் போது சிறுமியின் முகபாவங்கள் அத்தனை யதார்த்தமாய் இருக்கிறது. இம்மாதிரி சிறுவர், சிறுமிகளை வம்பிழுத்துக் கொண்டிருக்கும் போக்கிரிகளை நிஜ வாழ்வில் நிச்சயம் நாம் சந்தித்திருப்போம். ஜாதகக் கோளாறினால் தன் மகன் இப்படித் திரிகிறான் என்று யதார்த்த அம்மாவை பிரதிபலிக்கும் பாத்திரமாக சரண்யா அற்புதமாக நடித்திருக்கிறார்தான் என்றாலும் அவ்வ்ப்போது 'டாப்பா வருவான்' என்பது சற்று எரிச்சலாகவே இருக்கிறது.

திரைக்கதை சற்று தொய்வடையும் போது அதிரடியான பாத்திரமொன்று நுழைந்தால் பார்வையாளர்கள் நிமிர்ந்து அமர்வார்கள். இதற்கு சரியான உதாரணமாய் இளவரசு. 'வேதம் புதிது'-வில் சொற்ப நேரமே வந்தாலும் பிராமணச் சிறுவனை கலாய்க்கும் இவரின் யதார்த்த நடிப்பை கண்டு அப்போதே வியந்திருக்கிறேன். இதிலும் துபாய் ரிட்டர்ன் அப்பாவாக தறுதலை மகனின் மீது மறைமுக பாசமும் நேரடி எரிச்சலும் கொண்டவராக சிறப்பாக நடித்திருக்கிறார். 'சரி கட்டிக்கறேன்' 'அப்ராடா' என்று சிணுங்கும் போது மாத்திரம் நாயகி அழகாகத் தெரிகிறார். 'பார்த்து சூதானமா செய்ங்கடா' எனும் யதார்த்தமான பெரியப்பாவாக தாடியில்லாத (பார்க்க விநோதமாக இருக்கிறது) மு.ராமசாமி.

பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு, பூ.. போன்ற வரிசையில் தற்போதைய தமிழ்சசூழலோடு ஒப்பிடும் போது நல்ல படமொன்றை திருப்தியைத் தருகிறது 'களவாணி'.

()

இருந்தாலும் இந்த மாதிரியான யதார்த்த படங்களின் இன்னொரு புறத்தையும் காண வேண்டும். வன்முறையை வாழ்க்கையாய் வைத்திருப்பவர்கள், சாலை மாணவிகளை வழிமறித்து காதலைப் பிடுங்குபவர்கள், கல்விக்கூடம் செல்வதை கிண்டலாய்  பார்ப்பவர்கள், எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொலை செய்யும் இளங்குற்றவாளிகள் (ரேணிகுண்டா) என்று எதிர்மறை குணங்களைக் கொண்டவர்களையே பிரதான பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியும் பாதிப்பும் இளம் பார்வையாளர்களின் மனதில் நிச்சயம் விஷம் போல் பரவும். ரோட்டில் செல்லும் சக மாணவியின் கையைப் பிடித்து இழுப்பதை ஹீரோயிசமாக கருதச் செய்யும். எப்படியாவது ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து  விட்ட பிறகு, ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இரு குடும்பங்களும் ராசியாகி விடும் என்று தப்புக் கணக்கு போடச் சொல்லும். சாதியின் வேர்கள் இன்னும் ஆழமாகப் பரவியிருக்கிற கிராமங்களில் இது அத்தனை எளிதா என்று தெரியவில்லை. ஆதிக்கச் சாதி பெண்ணை திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சாதி ஆணை உயிரோடு கொளுத்தும் அவலம்தான் யதார்த்தத்தில் நீடிக்கிறது.

முன்பெல்லாம் முழுக்க முழுக்க  நல்லவராக எம்.ஜி.ஆர் சித்தரிக்கப்படும் திரைப்படங்களைக் காணும்  போதெலலாம் கொஞ்ச நேரம் கூட காணச் சகியாமல் எரிச்சலாக இருக்கும். ஆனால் இப்போது முற்றிலும் எதிர்மறையான குணாதியங்களுடன் இயங்கும் திரைநாயகர்களை  காணும் போது அதை  இளம் பார்வையாளர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடிய அபாயத்தின் காரணமாகவே  சமகால நாயகர்களிலும் ஒரு எம்.ஜி.ஆர் இருக்கலாமோ என்று ஏனோ தோன்றுகிறது.

suresh kannan

Saturday, July 17, 2010

பிரிவின் துயரை ஆற்றுப்படுத்த..

புலம் பெயர்ந்தோ அல்லது தற்காலிக பிரிவிலோ, புது மனைவியை அல்லது காதலியை பிரிந்திருக்க வேண்டிய தனிமையில் கேட்கும் போது மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய திரையிசைப்பாடல் எதுவென்று யோசித்தேன்.

தேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை

எனைத்தான் அன்பே மறந்தாயோ

மறப்பேன் என்றே நினைத்தாயோ


ஆஹா!

தலைவனின் பிரிவை எண்ணி தலைவியும் அந்த முனையில் அவனும் உருகித் தவிக்கும் சங்ககாலத்தமிழ்ப் பாடலொன்றை காட்சி்ப்படுத்த வேண்டும் என்று மணிரத்னத்திற்கு தோன்றியிருக்க வேண்டும். தளபதி'யில் அதற்கு  மிகப் பொருத்தமான சூழல் இல்லையெனினும் எப்படியோ இதைப் பொருத்தி விட்டார். 'அலைபாயுதே'வில் மாதவன் ஷாலினியைத் தேடி கேரளாவிற்கு ஓடும் அளவிற்கு (எவனோ ஒருவன் வாசிக்கிறான்) மிக யதார்த்தமான கதைப் போக்கு இதில் இல்லையெனினும் தனது காவிய விருப்பத்தை இதில் சாமர்த்தியமாக நுழைத்திருக்கிறார்.

போருக்குச் சென்றிருக்கும் தலைவனின் பிரிவை தலைவியும் களத்தில் நின்றிருக்கும் சூழ்நிலையிலும் சகியின் முகம் நினைவில் துன்புறுத்தும் வேதனையை அவனும் பாடுகிறார்கள். ரஜினி இதில் (நல்ல(?) ) ரவுடியாக கத்தியுடன் அலைவதால் ஒரளவிற்கு சூழல் பொருந்திப் போகிறது.

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்


எனக்கு அவ்வளவாக பிடிக்காத நடிகைகளில் ஷோபானாவும் ஒருவெரன்றாலும் கூட நடனம் பயின்றவர் என்ற முறையில் அவரது முகபாவங்கள் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும். சாமுராய் வேடத்தில் ரஜினியை பார்க்க சற்று காமெடியாக இருக்குமென்றாலும் தனது ஆண்மைத்தனமான தோற்றத்தினாலும் உடல்மொழியாலும் போர்ச்சூழலில் பொருந்தி நிற்பார்.
 


இளையராஜாவின் அற்புதமான உருவாக்கத்தில் இந்தப் பாடலும் ஒன்று. இதில் அவரது இசைக்கோர்ப்பின் பெரும் பலமே நமது ஆன்மாவை ஊடுருவிச் சென்று மனக்கொந்தளிப்பை ஆற்றுப்படுத்தி அமைதியடையச் செய்யும் மாயம்தான். மெலடியான இசையின் ஊடாக அதற்கு முரணான போர்ச்சூழலின் பரபரப்பான இசையை மிகப் பொருத்தமாக இணைத்திருப்பது பிரமிக்க வைக்கிறது.

காதினருகே ரகசியம் பேசும் மென்மையுடன் துவங்குகிறது இசையும் பாலு & ஜானகியின் குரலும். குறிப்பாக பாடல் முழுவதிலுமே பாலுவின் குரலில் பிரிவின் ஏக்கத்தையும் ஏங்கும் மென்மையையும் பசலையின் வேதனையையும் உணர முடியும். ஜானகியால் ஏறக்குறைய அவரைத் துரத்தித்தான் பிடிக்க வேண்டியிருந்திருக்கிறது. இசையின் மையச்சரடாக ஒலித்துக் கொண்டேயிருக்கும் குழலின் இசை நம்மை இன்பமாக தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது. குறிப்பாக இரண்டாவது சரணத்திற்கு முன்பான போர்ச்சூழல் இசை முடிந்தபிறகு முணுமுணுப்பது போன்ற புல்லாங்குழலுக்காகவே இப்பாடலை நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன். இதற்கு மிகப்பொருத்தமாக மேகத்தின் பின்னே மறைந்து மறைந்து பயணிக்கும் நிலவின் ஷாட்டை மணி போட்டிருப்பார்.

எதிர்பாலினரின் புகைப்படத்தை இந்தப் பாடலின் பின்னணியில் வெறித்துக் கொண்டிருந்த தருணங்களை திருமணமாகி பல வருடங்கள் கழித்து நினைக்கும் போது காமெடியாக இருந்தாலும் அதிலுமோர் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. :)

 suresh kannan

Friday, July 16, 2010

சாருவின் நள்ளிரவு சைக்கோ லீலைகள்

எச்சரிக்கை: இந்தப்பதிவில், சிலர் ஒருவேளை  வாசிக்க சங்கடப்படுமளவிற்கான ஆபாச வார்த்தைகள் உள்ளன. தவிர்க்க விரும்புபவர்கள் மேற்கொண்டு தொடராமலிருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

நேற்று 15.07.10 நள்ளிரவு.  சாருவின் தளத்தில் இரண்டு அமர காவியங்கள் எழுதப்பட்டன.. மன்னிக்கவும் படைக்கப்பட்டன. அவற்றை வாசிக்கத் தவறியவர்கள் அபாக்கியவான்கள். அவ்வாறான, தங்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை தவறவிட்ட அஞ்ஞானிகள், ஞானத்தை அடைய நள்ளிரவில் எழுதப்பட்டு சில மணிநேரங்களில் நீக்கப்பட்ட அந்த இரு பதிவுகளை நகலிடுகிறேன்.

இடுகை 1

வா வா வா பார்த்துவிடலாம்...

திரு. சாரு,
உங்கள் வலைதளத்தைத் தொடர்ந்து படித்துவருகிறேன். நீங்க எப்பப் பார்த்தாலும் ஜெயமோகனை திட்டறீங்க. ஜெயமோகனும் தொடர்ந்து உங்களைத் திட்டறாரு. இது உங்களுக்கே கேவலமாக இல்லையா? எதற்காக இப்படி சின்னபுள்ள மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க. அவன் கிள்ளிட்டான். அவன் நொள்ளிட்டான் என்று சொல்லி சண்டைபோட்டுக்கிட்டு இருக்கீங்க. உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. பெரிய எழத்தாளர் நீங்க. உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. உடையறதவிட வளையறது மேலு.
இது உங்களுக்கு மட்டுமில்ல. ஜெயமோகனுக்கும் சேர்த்துதான்.

(பெயர் நீக்கப்பட்டுள்ளது)

திரு …க்கு

உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் இந்த சமூகத்துக்கும் கலாச்சார சூழலுக்கும் விரோதிகள் என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து. உண்மையில் நீங்கள் ஜெயமோகனையும் என்னையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறீர்கள். சரி, ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் அவர் தன்னுடைய உயிரையும் ரத்தத்தையும் கொடுத்து எழுதிய விஷ்ணுபுரம் நாவலைப் படித்திருக்கிறீர்களா? சத்தியமாகப் படித்திருக்க மாட்டீர்கள். அப்படிப் படிக்காமல் இப்படி ஒரு கடிதம் எழுதத் து்ணிந்திருந்தால் உங்களை செருப்பால்தான் அடிக்க வேண்டும். உங்களைப் போன்ற மத்தியஸ்தர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை அது தான். சரி, இது போன்ற மத்தியஸ்தர்களைப் பற்றித்தான் நான் 300 பக்க நூல் ஒன்றை எழுதியிருக்கிறேன். தாந்தேயின் சிறுத்தை என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். அதையும் நீர் படித்திருக்க மாட்டீர். இப்படி ஜெயமோகனையும் படிக்காமல், சாரு நிவேதிதாவையும் படிக்காமல் இருவருக்கும் அறிவுரை சொல்ல வந்த நீர் யார்? உமக்கு இந்த அறிவுரையைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? இரண்டு எழுத்தாளர்களையும் படிக்காமல் இரண்டு பேருக்கும் அறிவுரை சொல்ல வந்திருக்கும் அற்பப் பதரே, நீ எங்களைப் படிப்பதை விட சீக்குப் பிடித்த வேசியின் யோனியை நக்கலாம்…

15.7.2010.

11.27 p.m. 

இடுகை 2

தெருநாய்களுக்கு ஒரு எச்சரிக்கை..

ஏய் அறிவுக் கொழுந்தே

எனக்கும் ஜெயமோகனுக்கும் என்ன பிரச்சினை என்று உனக்குத் தெரியுமா? எங்கள் எழுத்தை ஒரு பக்கமாவது நீ படித்திருக்கிறாயா? சுமார் 20 ஆண்டுக் காலமாக ஜெயமோகனை நான் விமர்சித்து வருகிறேன். அந்த வரலாறு உனக்குத் தெரியுமா? நீ யார்? 20 ஆண்டுக் கால விமர்சன பாரம்பரியம் தொகுக்கப் பட்டிருக்கும் தாந்தேயின் சிறுத்தை என்ற 300 பக்க நூலின் ஒரு பக்கத்தையாவது நீ படித்திருக்கிறாயா? இலக்கிய விவாதத்தில் உன்னைப் போன்ற தெருநாய்களெல்லாம் நுழையக் கூடாதுடா…

15.7.2010.

11.46 p.m.

விளிம்புநிலை மனிதர்களுக்காக எழுதுவதாக தொடர்ந்து சாரு செய்யும் அதீத பாவனை,  தன்னுடைய வன்மத்தின் மூலமாகவே அம்பலப்பட்டுப் போனது துரதிர்ஷ்டம்தான். மற்ற நேரங்களில் நாகரிகக் கனவானாகவும், மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் தன்னை விந்து விற்றவன், ஜேப்படித்திருடன் என்று விளிம்புநிலை மனிதனாக சித்தரித்து தற்காத்துக் கொள்ளும் சாருவிற்கு சக விளிம்புநிலை மனித வேசியின் யோனி கேவலமான ஒன்றாக தெரிவதும் வசவாக அதை பயன்படுத்துவதும் நகைமுரண். தன்னுடைய வளர்ப்பு பிராணிகளைக் கூட பெயரிட்டு அழைக்கும் அவைகளை நாய் என்று சொல்லாத முதிர்ச்சியுடைய சாரு, ஒரு சகமனிதர்களை, வாசகர்களை, தன்னை விமர்சித்து கேள்வி கேட்கிறார்கள் என்கிற காரணத்திற்காக, 'தெருநாய்கள்' என்று விளிப்பதையும் என்ன சொல்வது?

இது நொட்டை, அது நொள்ளை என்று ஊரில் உள்ள அனைத்து விஷயங்களையும் நபர்களையும் சக எழுத்தாளர்களையும் இவர் திட்டிக் கொண்டேயிருப்பாராம். "ஏம்ப்பா இப்படி சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கறே" என்று யாராவது கேட்டால் அவர் மீது வன்மத்துடன் சைக்கோத்தனமாக பாய்வாராம்.இத்தனை வருட இலக்கியப் பயிற்சியும்  சுழற்சிமுறை சாமியார்களிடம் கற்ற தியானமும் இவருக்கு இதைத்தான சொல்லித் தந்திருக்கிறது போலும்.

உணர்சசி வேகத்தில் எதையோ எழுதிவிட்டு, பின்னர் மனம் மாறியோ, கோழைத்தனத்துடனோ, திருந்தியோ சாரு நீக்கியதை, இப்படி அம்பலப்படுத்த வேண்டுமா என சிலருக்குத் தோன்றலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இந்தப் பதிவுகளை வாசித்தவுடன்  எனக்கு முதலில் சாருவின் மீது தோன்றியது அனுதாபம்தான். சாலையில் செல்வோரையெல்லாம் ஆபாசமாக திட்டும் மனநோயாளியின் மீது ஏற்படும் அனுதாபத்தைப் போன்றதுதான் அது. ஆனால் சாரு இவ்வாறு சைக்கோத்தனமாக எழுதுவதும் பிறகு அதை சாமர்த்தியமாக அழித்துவிடுவதும் முதன்முறையல்ல. சமீபத்தில் கூட சக எழுத்தாளரின் அப்பாவி குடும்ப உறுப்பினரை 'மனநோயாளி' என்று எழுதப்பட்ட பதிவை (இதை இவரோ அல்லது இவரது அல்லக்கைகளில் ஒருவரோ எழுதியிருக்க்க்கூடும்) தன்னுடைய தளத்தில் இட்டு அதை சிலாகித்து மகிழ்ந்தவர். சில நாட்களிலேயே அந்த இடுகைகளை நீக்கி விட்டது மட்டுமன்றி,  அவ்வாறு எழுதப்பட்ட மூல வலைப்பதிவையே பிறகு காணோம்.

மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைப்பதும் மோசமான மொழியில் கடிந்து கொள்வதும் சகஜமான ஒன்றுதான். நான் கூட இதை விட ஆபாசமான வார்த்தைகளை நேர்ப்பேச்சுகளில் சண்டைகளில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் டாஸ்மாக்கில் கட்டிங் விட்டு சாலையில் புரளுபவனுக்கும்  தன்னை நோபல் பரிசு பெறும் தகுதியுள்ள ஒலக எழுத்தாளனாக பாவனை செய்பவருக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டல்லவா? பொதுவில் ஒன்றை எழுதும் போது அதற்கான பொறுப்புணர்ச்சியோ, முதிர்ச்சியோ ஒரு எழுத்தாளனுக்கு அடிப்படையான தேவையில்லையா? இந்த பிரகஸ்பதியெல்லாம் மனநோய், பாஸிஸம் என்று பதிவு எழுதுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். 

தன்னுடைய இணைய எழுத்தின் பெரும்பகுதியை சக எழுத்தாளர்களின் மீதும் இணையப்பதிவர்களின் மீதும் வன்மத்தோடு பாய்வதிலேயே செலவழித்து விட்டு திடீரென்று 'நாங்கல்லாம் எழுத்தாளங்கடா' என்று பாசம் காட்டுவதும் வாசகரின் மீது பாய்வதும் .... பள்ளிக்கூடச் சிறுவர்களின் சண்டை கூட இவர்களை விட முதிர்ச்சியாக இருக்கும் போலும்.

இந்தப் பதிவை வாசித்துவிட்டு சாரு என் மீதும் இதை விட அதிக வன்மத்துடன் பாயலாம். பார்ப்போம். இதையெல்லாம் மீறி (பழைய) சாருவை அவருடைய பாசாங்கில்லாத இலக்கிய எழுத்துக்காகவும் சில பிரத்யேக நகைச்சுவைகளுக்காகவும் நேசிக்கிறேன் / வாசிக்கிறேன்.

சம்பந்தப்பட்ட பகுதிகள் சாருவால்தான் எழுதப்பட்டதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காக இந்த SCREEN SHOTS.

இடுகை 1     /    இடுகை 2
suresh kannan

Tuesday, July 06, 2010

நாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - பகுதி 1



திருத்தப்பட்ட பதிப்பு

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நாளைய இயக்குநர்' என்கிற இந்த நிகழ்ச்சியைப் பற்றி  இந்தப் பதிவில் முன்னர் எழுதியிருக்கிறேன்.

இருந்தாலும் இதை தொடர்ந்து பார்க்க முடியாதபடிக்கு லெளதீக பிரச்சினைகள், விடுமுறையின் சோம்பேறிக் கணங்கள், ரிமோட்டை கைப்பற்றும் போட்டியில் தோல்வி என பல காரணங்கள். என்றாலும் இயலும் போதெல்லாம் பார்த்துவிடுவேன். 30.06.2010 முதல் இறுதிப் போட்டி என்பதால் உறுதியாக பார்த்துவிடுவது என்கிற தீர்மானத்திலிருந்தேன். தொ.நிகழ்ச்சிகளுக்கேயுரிய பந்தாக்களுடனும் அலட்டல்களுடனும் சிறப்பு விருந்தினர்களோடும் (எஸ்.பி.முத்துராமன், தாமதமாக வந்த ஷங்கர், பாலச்சந்தர்) நிகழ்ச்சி துவங்கியது. இறுதிப் போட்டியில் இதுவரை ஒளிபரப்பான  ஆறு  (ஐந்து நிமிட) குறும்படங்களைப் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள விருப்பம்.



1) முதல் குறும்படம் : சுயம்பு - இயக்குநர் சூர்ய பிரதாப்

சில நூற்றாண்டுகளுக்கு முன்னதான சித்தரிப்புகளோடு சிரத்தையாக உருவாக்க முயற்சிக்கப்பட்டிருந்தாலும் ஒளிப்பதிவின் தெளிவில்லாத கோளாறாலும் குழப்பமான காட்சிகளாலும் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை. இதன் மிகப் பெரிய பலவீனமே சமீபத்தில் வெளிவந்த செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவனின்' மினியேச்சர் போல் இருந்ததுதான். போதாக்குறைக்கு நடிகர் தேர்வும் அதைப் போலவே.  பார்த்திபன் போல் ஒருவர் குளோசப்பில் உறுமுகிறார். இது போதாதென்று கதையின் மையமும் அதைப் போலவே. மன்னருக்கும் புரட்சியாளனுக்கும் நடக்கும் போரில் (இந்த காட்சிகள் சிறப்பாக இருந்தன) புரட்சியாளன் இறப்பதும் தப்பித்துச் செல்ல வைக்கப்படுவதும்  அவனுடைய இளவயது மகன் மூலம் அது எதிர்காலத்தில் தொடரும் என்று சூசகமாக சொல்லப்பட்டிருப்பதும்.கிடைத்திருக்கும் வசதிகளை வைத்து சமாளிக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் பின்னணிகள் 'பீரியட் படம்' எடுப்பது அத்தனை சுலபமானதல்ல என்பதை உணர்த்துகிறது.

என்றாலும் பின்னணி இசையும் முந்தைய நூற்றாண்டு தமிழ் வசனங்களிலும் (வீழ்வது வெட்கமல்ல. வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்)  சம்பந்தப்பட்ட துறையினரின் உழைப்பு தெரிகிறது.

2) இரண்டாவது குறும்படம்- அனு அணுவாய் - இயக்குநர் அஜய் ஞானமுத்து

பார்வையற்ற இரு பதின்மரின் காதலைப் பற்றியது. காதலுக்கு கண்ணில்லை என்றாலும் கண்ணில்லாதவர்களுக்கு காதல் வரக்கூடாதா என்ன? (நோட் பண்ணுங்கப்பா,  நோட் பண்ணுங்கப்பா). இருவரையும் காலம் பிரிக்கிறது. இளைஞனுக்கு பார்வை திரும்ப கிடைத்து திருமணமாகி குழந்தையெல்லாம் இருக்கிறது. (படமே இப்படித்தான் துவங்குகிறது). ஏன் தன் இளவயது பார்வையற்ற காதலியை அவன் திருமணம் செய்யவிலலை என்ற கேள்விக்கு பின்வரும் காட்சிகளின் மூலம் விடை கிடைக்கிறது. பார்வைபெற்ற இளைஞன் தன்னுடைய பழைய பள்ளிக்கு செல்லும் போது இன்னும் அந்த நிலையிலேயே இருக்கும் அந்தப் பெண், அவன் அழகற்ற தன்னை நிராகரித்து விடக்கூடும் என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே இருந்துவிடுகிறாள்.

இந்தப்படத்தில்  ரசிக்க வைத்த ஒரு விஷயம். பார்வையற்றவர்கள் தங்களைச் சுறறியுள்ளவர்களின் முகங்களை  உள்ளுணர்வின் மூலம் ஒருமாதிரியாக யூகம் செய்து வைத்திருப்பார்கள். வழக்கமாக இம்மாதிரியான படங்களை கையாளும் இயக்குநர்கள்,  பார்வைக்கு முன்னரான அதே சக நடிகர்களையே பார்வை கிடைத்த பின்னும் உபயோகப்படுத்துவார்கள். இந்தக்  குறும்படத்தின் இயக்குநர் இந்த விஷயத்தில் வித்தியாசப்பட்டிருக்கிறார். இளைஞனுக்கு பார்வை கிடைப்பதற்கு முன்பிருந்த நடிகர்களும் பின்னரான நடிகர்களும் வேறு வேறு. அவனுடைய யூகத்திற்கு மாறாக இருப்பதுதானே யதார்த்தமாக இருக்க முடியும்?

என்றாலும் மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றி படமெடுத்தால் எளிதில் நடுவர்களை கவர்நது விட முடியும் என்கிற இயக்குநரின் நோக்கம்தான் பிரதானமாக தெரிகிறதே ஒழிய, சில காட்சிகளைத் தவிர்த்து  நான் பார்த்தவரை இது சுவாரசியமான உணர்ச்சிகரமான படமாக அமையவில்லை.


3) மூன்றாவது குறும்படம்- நெஞ்சுக்கு நீதி - இயக்குநர் நளன்

இக்குறும்படம் நல்ல சுவாரசியத்துடன் அமைந்திருந்தது. 'சீரியஸ் காமெடி' என்று இதை அறிமுகப்படுத்தினார் இயக்குநர்.

ஆளில்லா சாலையில் பொம்மை விற்றுக் கொண்டிருக்கிற ஒரு 'அலுப்பனிடம்' பணக்கார குழந்தைகள் பொம்மை வாங்க வருகிறார்கள். அவர்களின் தாய் வேண்டாவெறுப்பாக வாங்கித்தருகிறார்.  திடீரென அந்த பொம்மை வியாபார இளைஞனை சூழும் இரண்டு டிப்டாப் ரவுடிகள், அவனை வலுக்கட்டாயமாக கூட்டிக் கொண்டு போய் நல்ல உணவு, விலையுயர்ந்த ஆடைகள், சொகுசான இளைப்பாறல்கள் என்று மகிழ்விக்கிறார்கள். எதற்கு இதெல்லாம் என்கிற கலக்கமான கேள்வி உள்ளேயிருந்தாலும் அதையெல்லாம் அனுபவிக்கும் இளைஞன் 'என் வாழ்க்கையிலேயே இன்னிக்குதான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்' என்கிறான். 'அதான் எங்களுக்கும் வேணும்' என்று சிலாகிக்கிற டிப்டாப்கள் அன்றைய நாளின் இறுதியில் அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

விஷயம் இதுதான். மிகப் பெரிய பணக்கார கிழவர் ஒருவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இளம் இதயமொன்று தேவைப்படுகிறது. வலுக்கட்டாயமாக பிடுங்கப்படப் போகிறதென்றாலும் அதை இழக்கப் போகிறவன் அதற்கு முன்னதாக மிக சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பது அவரின் உத்தரவு. இதைத்தான் அந்த அடியாட்கள் நிறைவேற்றி யிருக்கிறார்கள். திருவிழா ஆடு போல பரிதாபமாக படுத்திருக்கும் இளைஞன் தன்னுடைய தித்திப்பான அனுபவங்களெல்லாம் கனவு போல் முடிந்து மறுநாள் தன்னுடைய உயிர் போகப் போகிறதை எண்ணி அரற்றுகிறான்.

குறும்படத்தின் கிளைமேக்ஸ் அந்த பணக்கார பெரியவரின் பேரன்,பேத்தி வடிவில் வருகிறது. தன்னைப் பார்க்கவரும் குழந்தைகளிடம் தாத்தா ஆசையாக கேட்கிறார். 'எனக்காக என்னப்பா வாங்கி வந்திருக்கீங்க?" சிறுவன்  டப்பா போன்றதொரு பொம்மையை நீட்டுகிறான். ஆவல் தாங்காமல் அதைத்திறக்கிறார் பெரியவர். உள்ளிருந்து 'டபக்'கென்று பாம்பு போன்றதொரு விளையாட்டு திகில் சமாச்சாரம் முகத்திற்கு நேராக பாய, அதிர்ச்சியில் இறக்கிறார் கிழவர்.

அந்த இளைஞன்  காலையில் விற்ற பொம்மையின் மூலமாகவே அவனுடைய உயிர் காப்பாற்றப்படுகிறது. 'நெஞ்சுக்கு நீதி' - இதைவிட பொருத்தமான தலைப்பு இருந்திருக்கவே முடியாது. (நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது என்பதை நினைவில் கொள்க) . ஒருவேளை பிரபலமான இந்த தலைப்பை வைத்துதான் இயக்குநர் நளன் இக்கதையையே உருவாக்கினாரோ, என்னமோ?

தமிழ்த்திரைப்படங்களைப் போல உரத்த நகைச்சுவையாக அல்லாமல் ஹாலிவுட் படங்களின் மென்மையான நகைச்சுவை பாணியில் காட்சிகள் நகர்கின்றன. பொம்மை வியாபாரி இளைஞனாக நடித்திருப்பவர் நன்றாக நடித்திருந்தாலும் சில சொற்ப நேரமே வரும் கடையின் உரிமையாளர் தன்னுடைய யதார்த்தமான வசன உச்சரி்ப்பால் உடனே கவர்ந்து விடுகிறார்.

இப்படியெல்லாம் எந்த மருத்துமனையில் இதயத்தை கொள்ளையடிப்பார்கள் என்றொரு கேள்வி பார்வையாளனுக்கு எழாத வகையில் கிழவரின் மகனே அந்த அறுவைச்சிகிச்சையை செய்யப் போகும் மருத்துவர் என்று தருக்க நியாயத்தை செய்திருக்கிறார் இயக்குநர். வணிக பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளின் பாணியை ஒத்திருக்கிறது இப்படத்தின் கதைப் போக்கு.

இளைஞனை காப்பாற்றிய பொம்மை, குழந்தைகளுக்கு விற்கப்படுவது என்று சாதாரணமாக காட்டியிருக்காமல் சூழ்நிலைகளின் சிக்கல்களையும் மீறி அப்பொம்மை இளைஞனிடமிருந்து குழந்தைகளிடம் சென்றது என்று துவக்க காட்சிகளில் இயக்குநர் சித்தரித்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும் என்பது என் அனுமானம். என்றாலும் தரப்பட்டிருந்த ஐந்து நிமிடங்களுக்குள் திருப்தியாகவே உருவாக்கியிருந்தார் இயக்குநர் நளன்.

(04.07.2010 அன்று ஒளிபரப்பான அடுத்த மூன்று குறும்படங்களைப் பற்றிய பார்வை வரும் பதிவுகளில் தொடரும்).


பிற்சேர்க்கை: இந்த நிகழ்ச்சியின் தொகுப்புகளை இந்த தளத்தில் காணலாம். சுட்டியை சுட்டிக்காட்டி உதவி செய்த ஆயில்யனுக்கு நன்றி.

suresh kannan