Sunday, May 21, 2017

மரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்




உலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால்  முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீதியே. அநீதி என்று குறிப்பிடுவது  கூட குறைந்த பட்ச சொல் மட்டுமே. மானுட அறத்தையும் நாகரிகத்தையும் குழி தோண்டிப் போட்ட படுபயங்கர காட்டுமிராண்டித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். நாகரிகம் மெல்ல வளர்ந்து வந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த இனப் பேரழிவின் அட்டுழியங்கள் மெல்ல மெல்ல அம்பலமான போது உலகமே அதிர்ச்சியடைந்தது. சுமார் ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் விதம்விதமாக கொல்லப்பட்டார்கள்; கடும் சித்திரவதைக்கு உள்ளானார்கள். யூதர்கள் தவிர இடதுசாரிகள், ஜிப்ஸிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இந்த வரிசையில் கொல்லப்பட்டவர்களின் கணக்கு தனி. சொத்துக்களை இழந்து உயிர்தப்பி  அகதிகளாகவும் காணாமற் போனவர்கள் பட்டியல் வேறு.


இந்தப் பேரழிவு குறித்து காற்றில் உலவுவது போல பொதுவெளியில் நெடுங்காலமாகவே  பல கேள்விகள் இருக்கின்றன.

ஏன் ஹிட்லர் இந்த இன அழித்தொழிப்பை மனச்சாட்சியின் துளியும் இன்றி செய்தார்? அதற்கான பின்னணியும் காரணமும் என்ன? என்னதான் ஒரு சர்வாதிகாரி குரூர மனோபாவத்துடனும்  முட்டாள்தனமாகவும் ஆணையிட்டு விட்டாலும் நாஜிகள் லட்சக்கணக்கான யூதர்களை  ஈவுஇரக்கமேயின்றி கண்மூடித்தனமாக கொன்று குவிப்பார்களா என்ன? அவர்களுக்கு மனச்சாட்சி வேலையே செய்திருக்காதா? நாஜிப் படையில் இருந்த அத்தனை பேரையும் வசியப்படுத்தியா இந்தப் படுகொலைகளை ஹிட்லர் செய்திருக்க முடியும்?

தமக்கு முன் பின் தெரியாத ஓர் அப்பாவியை, பெண்ணை, குழந்தையை, முதியவரை அவர்கள்  யூதராகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே சுட்டுக் கொல்வதும் பல்வேறு குரூரமான வழிகளில் சித்திரவதைக்குள்ளாக்கி சாகடிப்பதும் என்பது எத்தனை பெரிய கண்மூடித்தனம்?  அப்பட்டமான இனவெறுப்பு உள்ளே ஊறிப் போயிருந்தால்தான் இந்த அரக்கத்தனத்தை செய்ய முடியும்.

இதையொட்டி எழும் பல கேள்விகளைப் போலவே நிறைய பதில்களும் உலவுகின்றன.

இயேசுவின் மரணத்திற்கு யூதர்கள் காரணமாக இருந்தார்கள், எனவே யூதர்களின் மீதான பகை தோன்றியது என்பது ஒரு பதில்.  ஹிட்லருடைய தாயின் மரணத்திற்கு ஒரு யூத மருத்துவர் காரணமாக இருந்தார் என்கிறது இன்னொரு தகவல். ஆரிய இனமே உயர்ந்தது என்கிற உயர்வு மனப்பான்மையுடன் இன சுத்திகரிப்பிற்காக ஹிட்லர் செய்தது என்பது சொல்லப்பட்ட காரணங்களில் மற்றொன்று. எது உண்மை, எது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாத பதில்கள் அவை.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்து ஹிட்லரின் தற்கொலை நிகழ்வதற்கு முன்னால் பல்வேறு அரசு ஆவணங்கள் அவசரம் அவசரமாக அழிக்கப்பட்டன என்பதால் எஞ்சியிருக்கும் பதிவுகளையும் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களையும் வைத்து மட்டுமே இந்தப் பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால்  யூத வெறுப்பிற்கு இதுதான் காரணம் என்று எதையும் திட்டவட்டமாக சொல்லி விட முடியாது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வரலாற்றில் ஏராளமாக இறைந்திருக்கும் தரவுகளை ஆய்ந்து அவற்றின் தொடர்ச்சியோடும் சிக்கலான கண்ணிகளை இணைத்தும் தோராயமாகத்தான் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஹிட்லருக்கு முன்னாலும் யூத வெறுப்பு இருந்தது;  பின்னாலும்  இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் ஹிட்லரின் காலக்கட்டத்தில் இந்த இனவெறுப்பு ஒரு கச்சிதமான திட்டமிட்ட பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டு கொலைகளும் சித்திரவதைகளும் வெளிப்படையாகவே நடந்தேறின.

**

இந்த இனஅழிப்பைப் பற்றியும் ஹிட்லரைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல்கள், ஆய்வுகள், திரைப்படங்கள் போன்றவை ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் ஏராளமாக உள்ளன. ஹிட்லரின் உளவியல், அவரது தனிப்பட்ட ஆளுமையை ஆராய்வது முதற்கொண்டு யூதர்கள் செய்யப்பட்ட வதைகளைப் பற்றி துல்லியமாக ஆராய்வது வரை பல்வேறு பதிவுகள் உள்ளன. ஆனால் தமிழில்  இரண்டாம் உலகப் போரின் பின்னணியோடு ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை மேலோட்டமாக விவரிக்கும் நூல்கள் உள்ளனவே தவிர யூதர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமைகளை பிரத்யேகமாக பதிவு செய்யும் நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் மருதன் எழுதி  கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள  'ஹிட்லரின் வதைமுகாம்கள்' எனும் நூல், தமிழ் சூழலில் அந்த இருண்ட பக்கத்தின் மீதான வெளிச்சத்தைப் பாய்ச்ச முயல்கிறது. அந்த வகையில் இதுவே தமிழில் வெளிவந்துள்ள முதன்மையான நூல் எனலாம். யுத்தம் முடிந்த பிறகு ரஷ்ய படையால் வதை முகாம்களில் இருந்து தப்பிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், இதைப் பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு நூல்களின் தரவுகளைக் கொண்டு கச்சிதமான கோர்வையாக இந்த நூலை உருவாக்கியுள்ளார் மருதன்.

மருதனின் அசாதாரணமான உழைப்பில் உருவாகியுள்ள இந்த நூல் நம்மைக் கவரும் அதே வேளையில் கலங்கடிக்கவும் வைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் மரணத்தின் ஓலங்கள், வலிகளின் கதறல்கள், விடுதலையின் ஏக்கங்கள் போன்றவற்றினால் குருதியும் கண்ணீரும் வழியும் ஈரங்களோடு பதிவாகியுள்ளது. ஆனால் இதில் பதிவாகியிருக்கும் துயரம் என்பது பனிப்பாறையின் மீதான நுனி மட்டுமே  நம்மால் கற்பனையில் கூட யூகிக்க முடியாத படியான கொடுமைகள் அரங்கேறியுள்ளன. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு யூதர் சொல்கிறார் 'அங்கு நடந்ததை நான் சொன்னால் அது கடற்கரை மணலில் ஒரு துளியாக மட்டுமே எஞ்சும். அனைத்தையும் விவரிப்பது சாத்தியமல்ல. நாங்கள் அங்கு சந்தித்தவற்றை சொல்வது கடினம். அதையெல்லாம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எங்களுக்குள் அந்த அனுபவங்கள் புதைந்து போயிருக்கின்றன.'

நூலின் பெரும்பாலான பக்கங்களில் யூதர்கள் உள்ளிட்டவர்களின் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள், அதற்கான திட்டங்கள், முகாம்களை நோக்கிச் செல்லும் ரயில் பயணங்களின் அவஸ்தைகள், அவர்களின் மரணத்திற்காக யூதர்களாலேயே செய்ய வைக்கப்பட்ட முகாம் பணிகள், மரணக்குழிகள், கொத்துக் கொத்தாக மனிதர்களை எவ்வாறு எளிதில் அழிப்பது என்று செய்யப்பட்ட ஆலோசனைகள், மனித உடல்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

யூதர்களை கொத்துக் கொத்தாக ரயில்களில்  மூச்சு முட்ட அடைத்து செல்வதற்காக எஸ்.எஸ். ரயில்வே துறைக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்காக சரக்கு ரயில்களை நாஜிகள் பயன்படுத்தினார்கள்.  உயிருள்ள மனிதர்களை சரக்குகள் என்றே தங்களின் ஆவணங்களில் குறிப்பிட்டார்கள். தேவையற்ற சரக்குகளை அழிப்பதற்காக வேறிடத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று குறிப்பு எழுதினார்கள். முகாம்களில் அடைக்கப்பட்ட நபர்களின் தனி அடையாளங்கள் உடனே அழிக்கப்பட்டன. அவர்கள் எண்களால் குறிக்கப்பட்டார்கள். உடல் வலு இல்லாதவர்கள், குழந்தைகளை விஷவாயு அறையில் இட்டுக் கொன்றார்கள். இதர நபர்கள் முகாம்களில் கடுமையான பணிகளுக்காக கட்டாயப்படுத்தப்பட்டார்கள். முகாமில் இருந்த ஒவ்வொருக்குமே தங்களின் விடுதலையோ மரணமோ எப்போது நிகழும் என்கிற விஷயம் அறியப்படாமல் பதட்டத்திலேயே தொடர்ந்து வைக்கப்பட்டார்கள்.

ஒரு துளி உணவிற்காகவும் இன்னபிற விஷயங்களுக்காகவும் யூதர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். மற்றவர்களின் பொருட்களை திருடத் தயாராக இருந்தார்கள். மிக அடிப்படையான விஷயங்களை பறித்துக் கொண்டால் மனிதர்கள் எவ்வாறு விலங்குகளுக்கு நிகரானவர்களாக மாறும் கொடுமையை நாஜிப்படை திட்டமிட்டு செய்தது. இறந்து போனவர்களே அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று தோன்றுமளவிற்கு முகாமில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்களின் உளவியல் நிலைமை பரிதாபகரமாக அமைந்தது. இயல்பான வாழ்க்கைக்குள் நுழைய முடியாமல் நிறைய பேர் முகாமின் கசப்பான நினைவுகளில் இருந்து வெளியேற முடியாமல் தடுமாறினார்கள்.

ஆனால் இந்த நூல் வதைகளைப் பற்றிய விவரணைகளோடும் அவற்றைப் பற்றிய பரிதாபங்களோடும்  தொடரும் விசாரணைகளோடும் முடிந்து விடவில்லை. இனவெறுப்பின் பின்னால் உள்ள சித்தாந்தக் காரணங்கள், உளவியல் பின்னணிகள் ஆகியவற்றின் தொடர்பான தரவுகளையும் பதிவு செய்கிறது.

தமிழில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் மிக முக்கியான நூல்களில் ஒன்றாக இதை  தயக்கமின்றி சொல்ல முடியும்.

**

ஹிட்லரின் வதைமுகாம்கள்
மருதன்
கிழக்கு பதிப்பகம், சென்னை
விலை ரூ.200
பக்கங்கள் - 232

(அலமாரி இதழில் பிரசுரமானது)




suresh kannan

No comments: