Monday, February 20, 2006

அன்பும் சிவமும்

இந்தப் படம் பலரை பாதித்திருப்பது எதிர்பார்க்கக்கூடியதொன்றுதான் என்றாலும் சமீபத்திய பதிவுகளின் மூலம் பல இணைய நண்பர்கள் இப்போதுதான் இதை முதன்முதலாக பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கக்கூடியதாகவே இருந்தது. நான் சமீபத்திய ஒளிபரப்பில் இந்தப் படத்தை பா¡க்கவில்லையெனினும், திரைப்படம் வந்தவுடன் 'ஆஹா ஓஹோ' விமர்சனங்களை படித்துவிட்டு உடனே திரையரங்கில் பார்த்துவிட்டேன். இதன் நிழலான குறுந்தகட்டிலும் அவ்வப்போது பார்ப்பதுண்டு. அதுமட்டுமல்லாது கமல் என்கிற கலைஞனின் மேல் எனக்கிருக்கும் பொதுவாக நம்பிக்கையும், "ஏதாவது வித்தியாசமா பண்ணுவாம்ப்பா" என்கிற எண்ணமும் உண்டு என்கிற காரணத்தினால் நான் ரசிக்கிற நடிகர்களின் பட்டியலில் கமல்ஹாசனும் உண்டு. (இங்கே ரசிகன் என்கிற வார்த்தையை பொதுவாக புரிந்துகொள்ளப்படும் அர்த்தத்தில் இடவில்லை. எனக்கு ஒரு படத்தின் இயக்குநரும் கதையும்தான் முக்கியமே ஒழிய நடிகர்கள் இரண்டாம் பட்சம்தான். இதே கமல்ஹாசனின் 'காதலா காதலா' போன்ற குப்பைப் படங்களை தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது கூட என்னால் பொருந்திப் பார்க்கஇயலவில்லை.)

"தன்னுடைய தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க தயாராயிருப்பவனே சிறந்த நடிகனாக மிளிரக்கூடும்" என்று சிவாஜி கணேசன் ஏதோவொரு நேர்காணலில் கூறின ஞாபகம். ரிக்ஷா ஒட்டுகிறவன் வேடமாயிருந்தாலும், கல்லூரி மாணவன் வேடமாயிருந்தாலும் பெரிதாக ஒப்பனையில் வித்தியாசம் காண்பிக்காத நடிகர்களுக்கு மத்தியில் ஒரு பாத்திரத்தை யதார்த்தமாக திரையில் தோன்றவைக்க, அதிக பிரயத்தனமும், சிரமமும் ஏற்றுக் கொள்வதில் தற்கால தமிழ் நடிகர்களில் கமல் முதன்மையானவர். அவருடைய திரையுலக வாழ்க்கையை (மணிரத்னத்தின்) நாயகனுக்கு முன், நாயகனுக்குப் பின் என்று பிரிக்கலாம் என்று சொல்லும் வகையில் மிகவும் நுட்பமான நடிப்பையும், ஒப்பனையையும் ஆரம்பித்தது அந்தப்படத்திலிருந்துதான் என்று நினைக்கிறேன். (ஆரம்பத்தில் இன்ஸ்பெக்டரிடம் அடிவாங்கி புருவத்தில் ஏற்படும் தழும்பு படம் முடிகிற வரை தொடர்வதை நீங்கள் அவதானித்திருக்கலாம்) அவரின் பழைய நேர்காணல்களை படிக்கும் போது அப்போதே அவரின் முற்போக்கான சிந்தனைகளையும், உலக சினிமா குறித்த அறிவையும், இதுகுறித்த அவரின் ஆர்வங்களையும், எதிர்ப்பார்ப்புகளையும் உணர முடிகிறது. ஆனால் இதையெல்லாம் மனத்தில் ஒருபுறம் தேக்கி வைத்துக் கொண்டு survival-க்காக "அம்மா.... உன்னக் கொன்னவங்கள பழிவாங்காம விடமாட்டேன்" என்று அபத்தமாக கதறி நடிக்க நேரும் போது ஒரு கலைஞன் உள்ளுக்குள் எவ்வாறெல்லாம் புழுங்க வேண்டியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

()

சில மசாலாத்தனங்களையும் குறைகளையும் கழித்துக்கட்டி விட்டால் 'அன்பே சிவம்' திரைப்படத்தை சர்வதேசதர திரைப்படங்களின் வரிசையில் என்னால் வைக்க இயலும். (இங்கே சர்வதேச தரம் என்பதை நான் புரிந்து கொண்ட வகையிலும் பார்த்த படங்களின் வகையிலும் மட்டும் வைத்தே கூறுகிறேன். இவ்விஷயத்தில் நான் கிணற்றுத் தவளையாக கூட இருக்கக்கூடும்) அமெரிக்கக்கனவு, கம்ப்யூட்டர், சுயநலம், ஏழ்மையை அறியாமை என்று தற்கால நடுத்தர இளைஞனின் ஒரு குறியீட்டுப் பாத்திரமாக மாதவன். தொழிற்சங்க போராட்டக்காரனாக, காதலனாக, விபத்தில் சிக்கி வாழ்க்கையின் அத்தனை சிறப்பான அம்சங்களையும் இழந்து, இறுதியில் சக மனிதன் மீது செலுத்தக்கூடிய அன்பே புனிதமானது என்று உணர்ந்து முதிர்ச்சி பெற்ற ஒரு மனிதனாக கமல். இவ்விரு நேரெதிரான கதாபாத்திரங்கள் இணையும்போது வழக்கமாக ஏற்படும் சுவாரசியங்களுடன் இயல்புகளுடன் நகர்கிறது கதை. ஒரு சிறுவனின் மரணம் மூலம் அன்பு என்கிற விஷயத்தை மாதவன் உணரும் போது படம் முடிவடைகிறது. "என்னப்பா மாத்தி மாத்தி ரெண்டு பேரும் பேசிக்கினே இருக்கறத எவ்ள நேரம் பாக்கறது" என்கிற சராசரித்தான முணுமுணுப்புகளையும் இந்தப் படம் வெளிவ்நத போது கேட்டிருக்கிறேன்.

கமல்ஹாசனின் நனவோடையில் இருந்து சொல்லப்படுகிற காலத்தின் பின்னணியும், கதை நிகழ்கிற காலமும் (இரண்டிற்கும் தொலைவு அதிகமில்லை) அவ்வளவாக பொருந்திப் போகவில்லை. 910ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிற காலமும் செல்பேசி உபயோகப்படுகிற காலத்திற்கும் தூரமதிகம். இதில் வருகிற வட மாநில மழை வெள்ளக் காட்சிகளும், ரயில் விபத்துக் காட்சிகளும் கலை இயக்குநரின் திறமையை முழுக்க உணர வைப்பவை.

நேரமின்மை காரணமாக இந்தப் பதிவை இங்கேயே முடிக்கிறேன் என்றாலும், இந்தப் படத்தை நினைவுகூரும் போதே, இதை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

()

கமல்ஹாசனின் திரைப்பட பயணத்தில் சிறந்தவையாக நான் நினைப்பது:(உடனே நினைவுக்கு வருபவை)

அவர்கள்
16 வயதினிலே
அவள் அப்படித்தான்
நிழல் நிஜமாகிறது
மீண்டும் கோகிலா
சிவப்பு ரோஜாக்கள்
சலங்கை ஒலி
ராஜபார்வை
வறுமையின் நிறம் சிவப்பு
உன்னால் முடியும் தம்பி
மூன்றாம் பிறை
நாயகன்
குணா
குருதிப்புனல்
மஹாநதி
ஹே ராம்
அன்பேசிவம்
விருமாண்டி

Monday, February 13, 2006

நண்பர்களே! எனக்கு உதவுங்களேன்

தொழில்நுட்பம் சம்பந்தமான உதவி நண்பர்களிடமிருந்து தேவைப்படுகிறது. எனது வலைப்பதிவில் நான் பதியும் பதிவுகள் இரண்டொரு நாட்களில் காணாமற் போகின்றன. தமிழ்மண இணைப்புகள் மூலமாக சென்றடைய இயலும் புதிய பதிவுகள், எனது வலைப்பதிவை நேரடியாக அணுகும் போது இல்லாமற் போகின்றன. மேலும் புதிய பதிவுகளில் பின்னூட்டம் அளிப்பதிலும் சிக்கல் நேர்கிறது. இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

'புதிய பதிவுகள் எதுவும் அனுப்பாமல் சும்மா இருந்தால் போதும்' என்பது மாதிரியான ஆக்கப்பூர்வமான யோசனைகள் சொல்ல விழைபவர்கள் முன்ஜாக்கிரதையுடன் கண்டிக்கப்படுகிறார்கள். இதோ, இந்தப் பதிவு காணாமற் போவதற்கு முன்னால் உதவவும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

:-)

பின்குறிப்பு:

என் எழுத்துலக சாதனையை தடுக்கும் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு சதியாக இதை நான் கருதுவதால், interpol-ல் புகார் கொடுக்கவிருக்கிறேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்புக்கு பின்னால் ஒரு குறிப்பு:

தமிழ்நாட்டில் இங்கே தேர்தல் சுரத்தில் அரசியல் தலைவர்கள் கொடுக்கும் அறிக்கையின் தலைப்புகளை மட்டும் படித்த எபக்ட்டுக்கே இவ்வாறெல்லாம் உளற நேர்கிறது. மன்னிக்கவும்.

Wednesday, February 01, 2006

தொலைந்து போன பதிவு

கீழக்கண்ட தலைப்பில் ஏற்கெனவே அனுப்பப்பட்ட இந்த பதிவை எந்த தொழில்நுட்ப 'காக்காவோ' தூக்கிக் கொண்டு போனதாலும் கடந்த பதிவில் பின்னூட்டமிடுவதில் சிக்கல் இருந்ததாலும் இது மறுபடியும் பதியப்படுகிறது. ஏற்கெனவே படித்தவர்கள் (குறிப்பாக voice on wings) :-) இதை பொறுத்தருள வேண்டுகிறேன்.

புத்தகங்கள், சென்னை Conservative நகரமா?, NDTV விவாதம், தமிழ் சினிமாவாவின் நாயகர்களுக்கு எனிமா

வாழ்வின் ஊடான பயணங்களின் பதிவுகள் - 4

நான் தற்போது படித்துக் கொண்டிருக்கிற / படித்து முடித்த புத்தகங்களைப் பற்றி இங்கே எழுதலாம் என்றொரு உத்தேசம். இது நிச்சயம் சுயதம்பட்டமல்ல. மற்றவர்களிடம் இதை பகிர்ந்து கொள்வதின் மூலம் அவர்கள் இதுவரை முயன்றிராத படைப்புகள் என்னுடைய பட்டியலில் இருந்தால் நூல்நிலையங்களிலோ, புத்தகக்கடைகளிலோ அவர்கள் செல்லும் போது ஏற்கெனவே கேள்விப்பட்ட இந்த நூல்களின் பெயரைக் கொண்டு பரிச்சயமேற்பட்டு அதை முயன்று பார்ப்பார்கள் என்கிற ஆவல்தான். நானும் அப்படித்தான் ஏற்கெனவே கேள்விப்பட்டு மூளையின் ஏதோவொரு ஒரத்தில் பதிவாகியிருந்த செய்தியின் மூலம் பல நூல்களை பிற்பாடு அடையாளங்கண்டு படித்திருக்கிறேன். க.நா.சுவும் சுஜாதாவும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளை பட்டியலிட்டு அதன் மூலம் எழுந்த சர்ச்சைகளை அறிவீர்கள்.

வழக்கமான வணிக பத்திரிகைகளையும், படைப்புகளையும் படித்த வெறுப்பிலிருந்து விலகி என்னை மீட்டுக் கொண்டு நவீன இலக்கியத்தை சுவைக்க ஆரம்பித்த நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைப் பற்றியும், படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்களைப் பற்றியும் யாராவது எழுதவோ, கூறவோ மாட்டார்களா என மிக்க ஆவலோடு அலைந்துள்ளேன். நான் நூல்நிலையத்திற்கு செல்லும் போது கூட வாசகர்கள் திருப்பியிருக்கிற நூல்கள் நூலகரின் அருகில் இருந்தால் அதைத்தான் முதலில் பார்ப்பது வழக்கம். அடுக்குகளிலிருந்து தேடும் சிரமமில்லை என்பது ஒருபுறமிருக்க, எம்மாதிரியான நூல்கள் அதிகம் விரும்பிப் படிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக இருந்தது. அந்த நிலையில் நான் அதிகம் கண்டது ராஜேஷ்குமார்களையும், ரமணிசந்திரன்களையும்தான். எப்பவாவது அத்திபூத்தாற் போல் லா.சா.ராவையும், எம்.வி.வெங்கட்ராமையும், புதுமைப்பித்தனையும் காண்பது.

தற்போது படித்துக் கொண்டிருக்கிற நூல்களின் பட்டியல். புனைவல்லாத இலக்கியங்களை அதிகம் படிக்க வேண்டும் என்ற நோக்கமும் ஆவலும் இருந்தாலும் படிக்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தியிருக்கிற புனைவுகள் கண்ணில்படும் போது அதை தவிர்க்க முடிவதில்லை.

கூகை - சோ.தர்மன் (நாவல்)
காலம் காலமாக - சா.கந்தசாமி (கட்டுரைகள்)
க.நா.சு. நினைவோடை - சு.ரா (அனுபவம்)
தேரோடும் வீதி - நீல பத்மநாபன் (நாவல்)
வெளிவாங்கும் காலம் - வெ.ஸ்ரீராம் (சிறுகதைகள்)
தெளிவு - கரிச்சான் குஞ்சு (சிறுகதைகள்)
பண்டைக்கால இந்தியா - எஸ்.ஏ.டாங்கே (கட்டுரை)
சாய்வு நாற்காலி - தோப்பில் முகம்மது மீரான் (நாவல்)
சுவடுகள் - திருப்பூர் கிருஷ்ணன் (அனுபவம்)
திரும்பிப் பார்க்கிறேன் - நாகேஷ் (வாழ்க்கை)
துயரமும் துயர நிமித்தமும் - பெருமாள் முருகன் (கட்டுரைகள்)

()

Is Chennai India's most conservative city? என்கிற தலைப்பில் நடந்த விவாதமொன்றை NDTV-ல் நேற்றிரவு இடையிலிருந்து யதேச்சையாக பார்க்க நேரிட்டது. நடிகை குஷ்பு, ரேடியோ மிர்ச்சி சுசித்ரா, அனிதா ரத்னம், யூகிசேது, CBI-ன் முன்னாள் இயக்குநர் ராகவன், உட்பட சென்னையின் பல பிரபலங்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்ட விவாதத்தில் ஆடைக்கட்டுப்பாடு பற்றி சமீபத்தில் எழுந்திருக்கும் சர்ச்சையே பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது. இந்த விஷயத்தில் யாருடைய தலையீடும் தேவையில்லை என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. எங்கள் கல்லூரியில் சில ஆபாசமான உடைகளை அனுமதிப்பதில்லை என்று கருத்து தெரிவித்த வைஷ்ணவா கல்லூரியின் முதல்வருக்கு மாணவர்கள் பகுதியிலிருந்து பலத்த கேலியான கூக்குரல்கள் எதிர்வினையாக கிடைத்தது. இதே மாதிரியான கருத்தை தெரிவித்த பா.ஜ.க பெண் பிரமுகருக்கும் (பெயர் நினைவில்லை) இதே மரியாதையே கிடைத்தது.

இந்த விஷயத்தை சற்றும் உணர்ச்சிவசப்படாமலும், சுதந்திரத்தில் தலையிடுவது என்கிற அசட்டுத்தனமான எதிர்ப்பும் இல்லாமல் யதார்த்தமாக சிந்தித்துப் பார்த்த போது எனக்குத் தோன்றியது, கல்விக்கூடங்களில் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பதே. ஸ்பென்ஸர் பிளாசா போன்ற இடங்களிலும் சில கல்லூரி வாசல்களிலும் சில பெண்களால் உடுத்தப்படும் உடை மாதிரியான வஸ்துகள் நம் ரத்தக்கொதிப்பை ஏற்றுகின்றன. (கோபத்தால் அல்ல) "எலுமிச்சம் பழத்திலிருந்து பூசணக்காய் வரை எல்லாத்தையும் பாக்கலாம்"...... என்கிற பாய்ஸ் வசனத்தை நியாயப்படுத்துவது போல் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தன் அங்கங்களின் அளவுகளை தாராளமாய் காட்டும் ஆடைகளை அணிவது அவர்களின் பார்வையில் சுதந்திரமாய் இருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும் யோசித்துப் பார்க்குமாய் கேட்கிறேன். அடிப்படையில் நம்முடைய கலாச்சாரம் பாலியல் வறட்சி கொண்டது. ஒரு ஆணும் பெண்ணும் நின்று பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் அண்ணன், தங்கையாக இருக்கலாம் அல்லது நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்கிற நாகரிக ஊகங்களை செளகரியமாக மறந்துவிட்டு அவர்களை படுக்கையறையுடன் சம்பந்தப்படுத்தி மட்டுமே யோசிக்கும் அளவிற்கு பிற்போக்குத்தனமாக சிந்திப்பவர்களே இங்கு அதிகம். (இதில் பெண்களும் அடக்கம்)

மேலும் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது என்கிற சாதாரண, இயற்கையின் ஆதார செய்கையை நியாயமான முறையில் நிகழ்த்த ஒரு ஆண் பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது. (ஒரு பெண்ணை உதட்டில் முத்தமிட்டால் எப்படியிருக்கும் என்பதை நான் பல வருடங்களாக ஈரமான கனவுகளில் மட்டுமே சாத்தியப்படுத்திக் கொள்ள வேண்டிதாயிருந்தது) அப்படியான பாலியல் வறட்சியும், பாலியலைப் பற்றின புரிதலும் இல்லாத தேசத்தில் சினிமாவில் கூட உடுத்தத் தயங்குகிற உடையை ஒரு பெண் அணிந்து வருவாளாயின், அவள் மற்றவர்களின் மன எண்ணங்களில் எப்படி துகிலுரிக்கப்படுவாள் என்பதையும், சில மூர்க்கர்கள் போதுமான சமயம் வாய்க்கும் பட்சத்தில் இதை வன்முறையின் மூலம் கூட நிகழ்த்த தயங்க மாட்டார்கள் என்பதையும் நாம் பத்திரிகைகளின் மூலம் தினம் தினம் அறிந்து கொள்கிறோம்.

இது இப்படியே இருக்கட்டும். மேற்சொன்ன விவாதத்தின் இறுதிப்பகுதியில் 'சென்னையின் ஏதாவது ஒரு அம்சத்தில் உடனடியாக மாறுதல் ஏற்பட வேண்டுமென்றால் எதை சொல்வீர்கள்?' என்கிற கேள்விக்கு காங்கிரஸ் பிரமுகர் ஜெயந்தி நடராஜன் சொன்ன பதில் உரத்த புன்னகையை வரவழைத்தது. "Ruling Party"

()

அபூர்வமாக கிடைக்கும் பொழுதை போக்குவதற்கு புத்தகங்களையும், இசையையும் தாண்டி, தொலைக்காட்சியின் தயவை நாடும் போது கிடைக்கக்கூடிய அனுபவங்கள் அத்தனை சிலாக்கியமாக இல்லை. (சினிமாவில் advance booking என்கிற விஷயமே எப்போதும் என்னை நகைக்க வைக்கிற விஷயம். பொழுது போவதற்குத்தான் சினிமா. யாராவது பொழுதை போவதற்கு advance-ஆக திட்டமிடுவார்களா?) அழுவாச்சி தொடர்கள், சுவிசேஷ கூட்டங்கள், அதிர்ஷ்ட கல் மோதிரங்கள், உடற்பயிற்சி கருவிகள், அசட்டு காமெடி காட்சிகள், எரிச்சலூட்டும் நிகழ்ச்சி காம்பியர்கள், கொடுமையான டாப் டென்கள்.... என்று உருப்பபடியான நிகழ்ச்சியை பார்ப்பதென்பது அபூர்வமானதொன்றாக மாறிவிட்டது. செட்டாப் பாக்ஸ் இல்லாமல் discoveryயோ geographic-யோ பார்க்க முடியவில்லை. இதில் முக்கியமாக எரிச்சலூட்டுவது தமிழ்ச்சினிமாக்களின் துணுக்குகள்தான். யதார்த்தம் என்கிற விஷயத்தை அறவே மறந்து போய் ஒவ்வொரு பல்லி ஹீரோவும் நூறு பேரை பறந்து உதைப்பதும்.... பஞ்ச் டயலாக்குகளும்..... காதைப் பிளக்கும் பாடல்களும் என..... தமிழ்ச்சினிமா எங்கே பயணித்துக் கொண்டிருக்கிறது? என்பதை ஒரு பார்வையாளனாக மிகவும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன். மக்கள் எவ்வாறு இந்த அபத்தங்களின் அசெளகரியங்கள் தங்கள் மீது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம். இவ்வளவு அட்டகாசம் செய்யும் ஆக்ஷன் ஹீரோக்களை நிஜ வாழ்வில் பொது மேடையில் ஏதாவது குத்துச் சண்டை வீரரை ஜெயித்து விட்டுத்தான் இனி இப்படியான ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்தினால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை யோசிக்க நகைச்சுவையாக இருக்கிறது.