Tuesday, February 19, 2019

சீனுராமசாமியின் படைப்புலகம் - அறத்தின் ஆதார சுருதி






இயக்குநர் சீனுராமசாமி பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தவர். அவரை தன் ஆசானாக கருதக்கூடியவர்.  இது வரை வெளிவந்திருக்கும் இவருடைய நான்கு திரைப்படங்களின் உருவாக்க பாணியைக் கவனித்த போது பாலுமகேந்திராவின் பெரிதான சாயல் எதையும் அதில் என்னால் காண முடியவில்லை. ஆச்சரியகரமாக  பாரதிராஜாவின் பாதிப்பு இருந்ததை உணர முடிந்தது. ஒருவகையில் இது வரவேற்கத்தக்கது. ஏனெனில் ஒரு காலக்கட்டத்தில் பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாக இருந்து வெளியேறுகிறவர்கள், தம்முடைய குருமார்களின் பாணியின் சாயலை பொதுவாக அப்படியே கடைப்பிடிப்பார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களிடம் சீடர்களாக இருந்த இயக்குநர்களின் படங்களைக் கவனித்தால் இதை உணர முடியும். இப்படி சுருக்கமான வாக்கியத்தில் இதை பொதுமைப்படுத்துவது முறையல்லதான் என்றாலும் சீடர்களின் தனித்தன்மைகளையும் மீறி ஆசானின் உருவாக்க முறை அவர்களின் படைப்புகளில் அடிநாதமாக ஓடிக் கொண்ருப்பதை உணர முடியும்.

ஒருவகையில் அது இயல்பானதுதான். குருமார்களின் பாதிப்பும் ஆளுமையும் தன்னிச்சையாக சீடர்களிடம் படிவதை அவர்களால் தவிர்க்க முடியாது. இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. குருவிடமிருந்து தொழில் கற்றுக் கொண்ட காரணத்தினாலேயே அவரின் பாணியை அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை. அந்தக் கற்றலையும் கருவிகளையும் வைத்துக் கொண்டு தம்முடைய தனித்தன்மையோடு அல்லது ரசனையோடு முற்றிலும்  வேறு உலகத்தை, இன்னொரு  பாணியை உருவாக்கலாம். இந்த முறையிலான பரிணாம  வளர்ச்சிதான் எந்தவொரு கலைக்கும் நல்லது. குறிப்பிட்ட பாணி தேய்வழக்காகி தேங்கிப் போகாமல் பல புதிய திசைகளில் பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

இந்த நோக்கில் பாலுமகேந்திராவிடமிருந்து உருவாகி வந்த பெரும்பாலான சீடர்களிடம் குருவின் பாதிப்பு பெருமளவு இல்லாததை ஆச்சரியத்துடன் கவனிக்கிறேன். இதில் முதன்மையானவராக பாலாவைச் சொல்லலாம். மென்மையின் அழகியலை பாலுமகேந்திராவின் பெரும்பாலான படங்கள்  கொண்டிருந்தது என்றால் அதன் எதிர்முரணாக வன்முறையின் அழகியலை பாலாவின் படங்கள் கொண்டிருக்கின்றன. பாலா என்றல்ல, அமீர் (பருத்தி வீரன்), வெற்றிமாறன் (விசாரணை), ராம் (கற்றது தமிழ்), விக்ரம் சுகுமாரன் (மதயானைக்கூட்டம்) போன்று, பாலுமநே்திராவின் பிள்ளைகளின் திசை  அவரிடமிருந்து விலகி பெரும்பாலும் வேறு திசையில் இருக்கின்றன. இவர்களைப் போல் அல்லாமல்  சீனுராமசாமி தம் திரைப்படங்களை உருவாக்கும் பாணி எனக்கு பாரதிராஜாவை நினைவுப்படுத்துகிறது.

பொதுவாக வணிகநோக்கு தமிழ் சினிமாக்களில் உள்ள ஆபாசங்களும் அசட்டுத்தனங்களும் அல்லாமல் இயல்பான திரைக்கதையோடும் கண்ணியமான போக்கோடும்  தமிழ் சினிமாவில் இயங்கும் அரிதான இயக்குநர்களில் ஒருவரான சீனுராமசாமி இந்த நோக்கில் தன் குருவான பாலுமகேந்திராவிற்கு மரியாதை செலுத்தும் திசையிலான பயணத்தில் செல்கிறார் என்பது பாராட்டுக்குரியது.

***

சீனுராமசாமி இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். கூடல்நகர் (2007), தென்மேற்கு பருவக்காற்று (2010), நீர்ப்பறவை (2012), தர்மதுரை (2016). இடம்பொருள்ஏவல் என்கிற திரைப்படம் வெளிவரத் தாமதமாகி தயாரிப்பில் உள்ளது.

பொதுவாக எந்தவொரு இயக்குநரின்  முதல் திரைப்படமும் எல்லா வகையிலும் சிறப்பானதாகவே அமையும். உதவி இயக்குநராக இருக்கும் காலக்கட்டம் முழுவதும் தன் முதல் திரைப்படத்தைப் பற்றிய கனவுகளிலும் அதை  மெருகேற்றிக் கொண்டேயிருப்பதிலும் ஈடுபடுவார். அவருடைய அத்தனை  திறமையையும் அதில் கொட்ட முயல்வார். தம் கனவுத் திரைப்படத்தை உருவாக்கும் சாத்தியமும் சூழலும் அமையும் அறிமுக இயக்குநர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். சீனுராமசாமியின்  இந்த துவக்க கனவு முழுக்க நடைமுறையில் சாத்தியப்பட்டதா என தெரியவில்லை.

ஏனெனில் அவருடைய முதல் திரைப்படமான ‘கூடல்நகர்’ வழக்கமான வெகுசன திரைப்படங்களின் சாயல்களை அதிகம் கொண்டது. இப்போது இந்தப்படம் சீனுராமசாமியுடையது என்பதே பலருக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. வணிகரீதியாகவும் தோல்வியடைந்த திரைப்படம் இது.


இரட்டை வேடங்களில் பரத். ஒருவர் லெண்டிங் லைப்ரரியில் பணிபுரிவார். இன்னொருவர் பிணவறைத் தொழிலாளி. தேய்வழக்கான பாத்திர வடிமைப்பு. ஒருவர் அமைதியானவர் என்றால் இன்னொரு ஆர்ப்பாட்டமானவர். இரட்டை வேடத்திற்காக பரத் பெரிதும் மெனக்கெட்டிருக்க மாட்டார். திருத்தமாக தலைவாரி, நல்ல சட்டை போட்டிருந்தால் நூலக பரத். அது அல்லாமல் காக்கி சட்டை போட்டு அலப்பறையாக இருந்தால் இன்னொரு  பரத்.

நூலக பரத் அந்த ஊர் அரசியல் பிரமுகரின் மகளைக் காதலிப்பார். தமிழ் சினிமாக்களில் சாதியின் அடையாளங்களை வெளிப்படையாக சித்தரிப்பதில் ஆபத்து அதிகம். எனவே பரத்தின் சமூகத்தை இயக்குநர் குறிப்பால் உணர்த்திருப்பார். அலப்பறை பரத்தை அழைத்து, இறந்து போன கன்றுக்குட்டியின் பிணத்தை பிரமுகர் அப்புறப்படுத்தச் சொல்வார். இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். வர்க்கத்திலும், சாதியிலும் உயர்படியில் உள்ள பெண்ணை, கீழ்படியில் உள்ளவன் காதலித்தால் நடைமுறையில் என்ன ஆகுமோ, அதுவே இதிலும் நடக்கும்.

அண்ணனின் கொலைக்கு தம்பி பழிவாங்கும் நாடகத்தனத்துடன் படம் முடியும்.  ‘காதல்’ சந்தியாவின் நடிப்பு இதில் சிறப்பானது. இன்னொரு நாயகி 'பாவனா'. சுந்தரராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை'யை வாசிக்குமளவிற்கு முதிர்ச்சி கொண்ட நாயகி, நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகிறார் என்று யோசித்துப் பார்த்தேன். சு.ராவின் புத்தகத்தை ஒரு ஷாட்டில் காட்ட வேண்டும் என்கிற இயக்குநரின் இலக்கிய ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதனை வெறுமனே செட் பிராப்பர்டி மாதிரி மட்டும் காட்டியிருக்கும் விதம்தான் சிறிய நெருடல். ஒரு முதிர்ச்சியுள்ள இலக்கிய வாசகர், பின்விளைவுகளை யோசிக்காமல் நடைமுறைப் பிரச்சினையை இத்தனை மேலோட்டமாகவா அணுகுவார் என தோன்றியது.


***

இரண்டாவது படம் 'தென்மேற்கு பருவக்காற்று'. இதையே சீனுராமசாமியின் முதல் திரைப்படமாக கருதலாம் என்கிற அளவிற்கு அவருடைய முத்திரை அழுத்தமாக விழுந்த படைப்பு. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதுவரை சிறிய பாத்திரங்களில் நடித்து வந்து விஜய்சேதுபதிக்கு நாயகனாக பதவி உயர்வு கிடைத்த முதல் திரைப்படம். இன்று முன்னணி நாயகனின் இடத்தை அவர் அடைந்திருப்பதற்கான முதல் படிக்கட்டு.


ஆடு மேய்க்கும் கீதாரி கூட்டத்தைச் சேர்ந்தவன், ஆடுகளை திருடிப் பிழைக்கும் கூட்டத்தைச் சார்ந்த பெண்ணின் மீது பிரியப்படுகிறான். இந்தச் சமூக அடையாளங்கள் வெளிப்படையாக சித்தரிக்கப்படாவிட்டாலும்  நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடிகிறது. தாம் பார்த்து வைத்திருக்கும் தம்முடைய சமூகப் பெண்ணைத்தான் மகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறாள் நாயகனின் தாய். எதிர் தரப்பு வன்முறைக் கும்பல் என்பதால் அதன் மூலம் தம் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என நினைக்கிறாள். ஏனெனில் அந்த வகையில்தான் இதற்கு முன்பு தன் கணவனை இழந்திருக்கிறாள்.

இறுதிக்காட்சியில் எதிர் தரப்பு ஆட்களால் கொலை செய்யப்படுகிறாள். மகன் ஆவேசத்துடன் பழிவாங்க கிளம்பும் போது தேவர்மகன் கமல் போல ‘போதும்டா பழிவாங்கினதெல்லாம். நீ உன் வாழ்க்கையை வாழ்ந்து காட்டு. அது போதும்’ என்கிறாள். மன்னிப்பு என்பதையே ஒரு தண்டனையாக பகைவர்களுக்கு தர முடியும் என்கிற செய்தியை இயக்குநர் முன்வைக்க விரும்புகிறார். அதன் மூலம் வன்முறைக்கலாசாரத்தை பெருமிதமாக கருதும் சமூகங்களுக்கான செய்தியும் உள்ளது.

‘ஆனி போய் ஆடி வந்தா டாப்பா வருவான்’ என்கிற அசட்டுத்தனமான தாய் வேடங்களுக்கு  பிற்காலங்களில் பழகுவதற்கு முன் சரண்யா தீவிரமான தொனியில் நடித்த திரைப்படம். புலியை முறத்தால் விரட்டியதாக சொல்லப்படும் சங்க கால தமிழ்பெண் வீரத்தை நினைவுப்படுத்தும். வகையில் அபாரமான பங்களிப்பு இவருடையது.

**

மூன்றாவது திரைப்படம் ‘நீர்ப்பறவை’ சீனுராமசாமியின் கதைகூறல் முறையும் செய்நேர்த்தியும் வளர்ச்சிநிலையில் பயணிப்பதை உறுதிப்படுத்தும் திரைப்படம். ஜெயமோகன் இதில் இயக்குநருடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார்.

இறந்து போன கணவனுக்காக கடற்கரையில் காத்திருக்கிறாள் அவள். ஆனால் அவளுடைய கணவனை அவள் கொலை செய்திருக்கக்கூடும் என்கிற அதிர்ச்சியோடு படம் துவங்குகிறது. பிளாஷ்பேக்கில் சொல்லப்படும் அவளுடைய இளமைக்கால வாழ்க்கை காட்சிகளால் நிரம்பியிருக்கிற திரைப்படம். வயதான வேடத்திலுள்ள நந்திதா தாஸை விட இளமைக்கால சுனைனா அபாரமாக நடித்திருந்தார். துண்டு துண்டாக பல காட்சிகள் நன்றாக அமைந்திருந்தாலும் திரைக்கதை கோளாறினால் ஒட்டுமொத்த பார்வையில் இத்திரைப்படம் அத்தனை வசீகரிக்கவில்லை. 

**

சீனுராமசாமியின் நான்காவது திரைப்படமான ‘தர்மதுரை’ சமீபத்தில் வெளிவந்து வணிகரீதியாகவும் பெரிய வெற்றி பெற்று அவருக்கு மகிழ்ச்சியை அளித்த படம். விஜய்சேதுபதியின் தற்போதைய புகழும் திறமையும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

மருத்துவப் படிப்பு முடித்திருக்கும் இளைஞன் குடிகாரனாக அலைகிறான். அதற்கான காரணங்கள் முன்னும் பின்னுமாக சொல்லப்படுகின்றன. மூன்று பெண்கள் விஜய்சேதுபதியின் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். அதுவரை கவர்ச்சிப்பதுமையாகவே காலந்தள்ளிய தமன்னா, முதல் முறையாக நடிப்பை வெளிப்படுத்துவற்கான சந்தர்ப்பத்தை இயக்குநர் அளித்திருந்தார். ‘கம்மாக்காபட்டி செல்வி’ எனும் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தப் பிரதேசத்தின் சித்திரமாகவே மாறியிருந்தார்.

நல்லியல்பு கொண்ட பாத்திரங்களும் மெல்லுணர்வை அழுத்தமாக நிலைநாட்டும் சம்பவங்களும் அதிகம் இடம்பெற்றிருந்தன. ஆண் – பெண் நட்பு அதன் கண்ணியத்தோடு இடம்பெற்றிருந்தது சிறப்பு.

**

பொதுவாக தமிழ் சினிமாவில் களப்பின்னணியை துல்லியமாக சித்தரிக்கும் படைப்புகள் குறைவு. அது குறித்தான பிரக்ஞை பல இயக்குநர்களுக்கு இல்லை. ஒவ்வொரு பிரதேசத்தின் மனிதர்களுக்கும் தனித்தன்மையும் குணாதிசயங்களும் இருப்பதைப் போல அந்தந்த பிரதேசங்களுக்கும் தனித்தன்மை உண்டு. அதன் ஆன்மாவைத்தான் அங்கு வாழும் மனிதர்கள் பிரதிபலிக்கிறார்கள். எனவே கதாபாத்திரங்களின் வடிவமைப்பை உருவாக்குவதற்கு மெனக்கெடுவது போலவே கதை நிகழும் பிரதேசத்தின் நிலவெளிக்காட்சிகளை துல்லியமாகவும் அழுத்தமாகவும் சித்தரிப்பது முக்கியமானதாகிறது.

சீனுராமசாமிக்கு இதன் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. அந்தந்த சூழலின் நிலவெளிகளின் அழகியலையும் பின்னணியையும் பார்வையாளர்கள் அழுத்தமாக உணரும் அளவிலான காட்சிக் கோணங்களை உருவாக்குகிறார். தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் தேனி போன்ற தென்மாவட்டங்களின் நிலவெளிக்காட்சிகளும் அந்த மண்ணின் குணத்தை வெளிப்படுத்தும் பாத்திரங்களுமாக நிறைகின்றன. ‘நீர்ப்பறவை’யில் நெய்தல் வகையின் பின்னணி.

**

சீனுராமசாமியின் திரைப்படங்களில் பெண் பாத்திரங்களுக்கு பிரத்யேகமான இடமிருக்கிறது. அவர்களின் சித்திரங்கள் வலிமையாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைக்கப்படுகின்றன. நாயகிகள் வெறுமனே கவர்ச்சி ஊறுகாயாக அல்லாமல் தனித்தன்மையுடன் கூடிய பாத்திரங்களாக இருக்கிறார்கள்.

சீனுராமசாமியின் நான்கு திரைப்படங்களிலும் உள்ள முக்கியமான பொதுத்தன்மை தாய் –மகன் என்கிற உறவு. அவரது திரைப்படங்களில் வரும் மகன்கள் அடிப்படையில் நல்லியல்பு கொண்டவர்களாக இருந்தாலும் பெரும்பாலும் குடிகாரர்களாகவும் பொறுப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள். தாய் மற்றும் துணைவியின் பாத்திரம் அவர்களை பாதுகாப்பதாகவும் நல்வழிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.

மனிதச்சமூகம் நாகரிகத்தின் ருசியை பார்க்கத் துவங்கிய காலக்கட்டத்தில் தாய்வழிச்சமூகமாகவே இருந்தது. பெண்ணே ஒரு குழுவை வழிநடத்தினாள். தலைமைப் பொறுப்பில் இருந்தாள். ஆணாதிக்கம் பல்வேறு தந்திரங்களினாலும் வலிமையினாலும் இந்த அதிகாரத்தை பிறகு கைப்பற்றிக் கொண்டது. ஆண்மைய சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு தளைகளும் உடல் வலிமையால் உருவான அதிகாரமும் பெண்களை அடிமைப்படுத்தின. அந்த இன்னல்களில் இருந்து பெண் சமூகத்தால் இன்னமும் கூட வெளியேற முடியவில்லை.

சினிமா என்கிற ஊடகமும் சமூகத்தின் இந்த நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது. ஆண் நாயகர்களுகே இங்கு முன்னுரிமை. அவர்களையொட்டி இயங்கும் வணிகச்சந்தை. ஆண்மைய சிந்தனைகளால் நிரம்பிய கதைகள், காட்சிகள், வசனங்கள். இந்த ச் சூழலில் பெண் பாத்திரங்களுக்கு குறிப்பாக தாய்மை எனப்படும் நிலையை அதன் புனிதத்தன்மையுடன் தனது எல்லா திரைப்படங்களிலும் சித்தரிக்கும் சீனுராமசாமி பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

**

இந்தியாவின் பிரத்யேகமான, அடிப்படையான கட்டுமானமே அதன் பன்முக கலாசாரம்தான். பல்வேறு மதங்களை, சாதிகளை, பிரிவுகளைச் சார்ந்த மக்கள் பெருமளவில் இணக்கமானவும் சகிப்புத்தன்மையுடனும் இயங்குகிறார்கள்.  சீனுராமசாமியின் படைப்புலகில் உள்ள இன்னொரு சிறப்பு இந்த பன்முகத்தன்மையை தொடர்ந்து தம் படங்களில் நல்ல விதமாக சித்தரிப்பது. இஸ்லாமிய சமூக மக்களை தீவிரவாதிகளாகவும் மதஅடிப்படைவாதிகளாகவும் மட்டுமே சித்தரிக்கும் மத அரசியலின் தந்திரத்திற்கு சினிமா ஊடகமும் பலியாகியுள்ள சூழலில் பல்வேறு சமூகங்களைச் சார்ந்த நல்லியல்பு கொண்ட மனிதர்களை சீனுராமசாமி தொடர்ந்து சித்தரிப்பது ஆரோக்கியமான போக்கு.

தம்மை தமிழ் மண்ணோடு நெருக்கமாக உணர்கிற இஸ்லாமியர் தமிழக மீனவர்களின் பிரச்சினையை உணர்ச்சிகரமாக பேசுகிறார் (நீர்ப்பறவை –சமுத்திரக்கனி) மனித நேயத்தோடு உதவுகிறார். துவக்க காட்சியில் நாயகனோடு மோதுபவனாக தீயக்குணங்களுடன் சித்தரிக்கப்படும் இசுலாமிய இளைஞன், இறுதிக்காட்சியில் நாயகனின் உயிரைக் காப்பவனாக மாறுகிறான் (தர்மதுரை).

அவரது அனைத்து திரைப்படங்களிலும் கிறிஸ்துவ மதம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் இடம்பெறுகின்றன. அது சார்ந்த உயர்ந்த குணமுடைய மனிதர்கள் வருகிறார்கள்.


**

இலக்கியத்தின் மிக ஆதாரமான நோக்கமே மனிதனின் அகத்தை நோக்கி தொடர்ந்து உரையாடுவதே. நல்லியல்புகளையும் உயர்ந்த விழுமியங்களையும் அவனுக்குள் உறையச் செய்வதே. அதை தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டிருப்பதே. கீழ்மைகளில் தேங்கிக் கிடக்காமல் அவனை விலக்கி வைப்பதே.

உலகமயமாதல் காலக்கட்டத்திற்குப் பிறகு பொருளாதார அளவுகோலிலேயே மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள். அறமும் மேன்மையும் வீழ்ச்சியடையும் நிலை. முதலாளித்துவத்தின் வெற்றி உயர்ந்து கொண்டே போகும் போது சாமானியனின் அடிப்படையான உரிமைகள் கூட களவாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது போன்றதொரு சூழலில் சினிமா எனும் வலிமையான ஊடகத்தின் மூலம் மனித சமூகம் விடாது பின்பற்ற வேண்டிய அறத்தையும் சகிப்புத்தன்மையையும் நல்லியல்புகளையும் சீனுராமசாமியின் திரைப்படங்கள் தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. வணிக சமரசங்களுக்குள் வீழ்ந்து விடாமல் தன்னுடைய பாதையில் தீர்மானமான பிடிவாதத்துடன் தொடரும் இவரின் பயணம் மென்மேலும் சிறப்பானதாக அமையட்டும்.

(உயிர்மை டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Wednesday, February 06, 2019

‘மனுசங்கடா’ – சாவிலும் துரத்தும் சாதியம்








‘மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் என்பது போன்ற மாற்று முயற்சிகளின் வருகையால் சமீபத்திய தமிழ் சினிமாவின் போக்கு மெல்ல மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் விவேக் நகைச்சுவைக்காட்சி ஒன்றில் சொல்வது போல ‘இவற்றையெல்லாம் அனுபவிப்பதா, வேண்டாமா?’ என்று சங்கடமாக இருக்கிறது. ஏனெனில் ஒரேயொரு பெருமுதலீட்டுத் திரைப்படத்தின் பிரம்மாண்ட வருகையும் அதன் மீது குவியும் கவனமும், இந்தப் போக்கை கலைத்துப் போட்டு விடும் ஆபத்து இருக்கிறது. இது போன்ற ஆபத்து கடந்த காலக்கட்டங்களில் நிகழ்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இந்த மாற்று முயற்சி திரைப்படங்களின் வரிசையில் சமீபமாக இணைந்திருப்பது ‘மனுசங்கடா’. எழுத்தாளரும் இயக்குநருமான அம்ஷன்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பெருமையோடு, ‘இந்தியன் பனோரமா’வில் விருதையும் இந்தத் திரைப்படம் பெற்றிருக்கிறது. ஆனால், சுயாதீன சினிமாவும் சிறுமுதலீட்டுத் திரைப்படமும் எதிர்கொள்ளும் அதே விதமான பிரச்சினைகளை மைய வெளியில் வெளியாகும் போது இதுவும் சந்தித்திருக்கிறது. பெரிய திரைப்படங்களோடு மோதும் பின்புலம் இல்லை. போதுமான அரங்கங்கள் இல்லை. விளம்பரம் இல்லை. தற்போது சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சில அரங்குகளில், சில காட்சிகளில் மட்டும் வெளியாகியிருந்தது. என்றாலும் நல்ல முயற்சிகளை வரவேற்கும் சினிமா ஆர்வலர்களின் ஆதரவினால் குறிப்பிட்ட சதவீதத்தினரின் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. பார்வையாளர்களின் ஆதரவு பெருகினால்தான் இது போன்ற மாற்று முயற்சிகளின் வருகை அதிகரிக்கும்.

**

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்கிற காரணத்தினாலேயே பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவர் பல்வேறு துன்பங்களை, அவமதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறந்த பின்பும் கூட சாதியம் அவரைத் துரத்திக் கொண்டே வருகிறது என்பது கசப்பான உண்மை. இறந்தவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது என்பது தொடர்பாக பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆதிக்கச் சாதியினரின் ஆக்கிரமிப்புகள் போக எளிய சமூகத்தினருக்கென மயானங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை எளிதில் கடந்து செல்ல இயலாதவாறான மோசமான வழித்தடங்களையும், ஊருக்கு வெளியே வெகு தொலைவிற்கு செல்லுமாறான அவலத்தையும் கொண்டிருக்கின்றன.  இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கிராமப்புறங்களில் இந்த அவலம் தொடர்கிறது. ‘சமரசம் உலாவும் இடமாக’ மயானங்கள் இல்லை. அப்படியொரு பிரச்சினையைத்தான் ‘மனுசங்கடா’ பேசுகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. அப்படியொரு உண்மைச் சம்பவம்தான் கீழே விவரித்திருப்பது.

நாகை மாவட்டம், வழுவூர் ஊராட்சியைச் சேர்ந்த திருநாள் கொண்டசேரியில் வாழ்ந்த செல்லமுத்து என்கிற தலித் பெரியவர் 2016-ம் ஆண்டில் இறந்து போகிறார். அவரது உடலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இறந்த உடல்களை எடுத்துச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பாதை எளிதில் செல்ல முடியாததாக இருக்கிறது. இவற்றை சரி செய்து தருவோம் என்று உறுதியளித்திருந்த அரசாங்க இயந்திரம் வழக்கம் போல் மெத்தனமாக இருக்கிறது. எனவே பொதுப்பாதையில்தான் எடுத்துச் செல்வோம் என்று தலித் சமூகத்தினர் தங்கள் உரிமையைக் கோருகிறார்கள். இது தொடர்பாக முன்பே கலாட்டாக்கள் நிகழ்ந்திருக்கின்றன.

செல்லமுத்துவின் பேரன் கார்த்திக் அன்றிரவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும். காவல்துறை இதற்கான பாதுகாப்பை அளிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

நீதிமன்றத்தின் உத்தரவிற்குப் பிறகும் ஆதிக்கச் சாதியினர் இதற்கு ஒப்புக்கொள்வதில்லை. பொதுப்பாதையை கடக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்துகின்றனர். உள்ளூர் காவல்துறையும் அரசாங்க அதிகாரிகளும் அவர்களின் பக்கமே நிற்கிறார்கள். ‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள். பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதியுங்கள்’ என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தங்கள் உரிமையை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்துகிறார்கள். இறந்த உடல் கிடத்தப்பட்டிருக்கும் வீட்டின் மின்சாரம் பிடுங்கப்படுகிறது. இதனால் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் உடல் அழுகத் தொடங்குகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மூன்று நாட்கள் கடந்தும் நிலைமை சீராகவில்லை.

நீதிமன்ற உத்தரவைப் பெற்றும் தங்களின் கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லையே என்னும் உளைச்சலில் மண்எண்ணைய் ஊற்றி தங்களைக் கொளுத்திக் கொள்ள முயன்று தடுக்கப்படுகிறார்கள். நிலைமை மோசமாகவே, ‘பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லலாம்’ என்கிற வாக்குறுதியை அரசாங்க அதிகாரிகள் பாவனையாக தருக்கிறார்கள். அந்த வாக்குறுதியை நம்பி சடலத்தை எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் ‘நீங்கள் பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. காட்டுப்பாதையில்தான் செல்ல வேண்டும்’ என்கிற ஆதிக்கச்சாதியின் குரலை அதிகார தரப்பும் எதிரொலிக்கிறது. இந்த நம்பிக்கைத் துரோகத்தால் போராடத் துவங்கும் தாழ்த்தப்பட்ட மக்களை அடித்துத் துரத்தியும் கைது செய்தும் அப்புறப்படுத்தும் காவல்துறை சடலத்தைக் கைப்பற்றி தாங்களே அதை காட்டுப்பாதை வழியாக தூக்கிச் சென்று அரையும் குறையுமாக அடக்கத்தைச் செய்து முடிக்கிறார்கள்.

இது ஒரு உதாரணச் சம்பவம்தான். இது போல் பல துயரச் சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வாழ்வில் நிறைந்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ஏறத்தாழ அப்படியே திரைக்கதையாக்கி ‘மனுசங்கடா’வை உருவாக்கியிருக்கிறார் அம்சன் குமார்.

வெகுசன சினிமாவின் அலங்கார ஆடம்பரம் எதுவுமில்லாமல், ஓர் ஆவணப்படத்துக்குரிய எளிமையான அழகியலோடு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் நிகழும் சம்பவங்கள் நேர்க்கோட்டுத்தன்மையோடு யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளன. எவ்வித செயற்கையான திணிப்பும் இல்லாமல் நூல் பிடித்தது போல் தொடர்ச்சியாகப் பயணிக்கும் கதையாடலாக உள்ளது. பெரும்பான்மையான காட்சிகளில் இயற்கையான சப்தங்களே பயன்படுத்துள்ளன. மொத்தப் படத்திற்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பின்னணி இசை அவசியமான இடங்களில் ஒலிக்கிறது. (இசை: அரவிந்த் சங்கர்)

**

நகரத்தில், ஒரு ஸ்டீல் கம்பெனியில் பணிபுரியும் கோலப்பனுக்கு அன்றைய நாள் துயரத்துடன் விடிகிறது. ஊரில் அவனுடைய தந்தை இறந்து போன தகவல் கிடைப்பதால் நண்பர்களின் உதவியுடன் ஊருக்கு கிளம்புகிறான். இந்தத் துயரத்தின் ஊடாக இன்னொரு தகவலும் அவனை எரிச்சலுக்கு ஆளாக்குகிறது. கோலப்பன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனுடைய தந்தையின் உடலை பொதுப்பாதையின் வழியாக எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் மறுக்கின்றனர். இந்த விஷயம் ஏற்கெனவே அந்த ஊரில் தொடர்கதையாக இருக்கவே கோபமுறும் கோலப்பன், தன் சமூகத்தினருக்காக பாடுபடும் தலைவரை அணுகி, தன் தந்தையின் சடலத்தை மரியாதையுடன் அடக்கம் செய்ய நீதிமன்றத்தை அணுகுகிறான். அதற்கு முன் அவன் சந்திக்கும் இன்ஸ்பெக்டரும், ஆர்டிஓ-வும் மழுப்பலான பதில்களையே தருகிறார்கள். நல்லுள்ளம் படைத்த ஒரு வழக்கறிஞர் இவருக்கு உதவ முன்வருகிறார். அரசு தரப்பு வழக்கறிஞர், ஆதிக்க சாதியின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘இன்னமும் மூன்று மாதத்தில் அவர்களுடைய சுடுகாட்டுப்பாதையை செப்பனிட்டு தருவோம்’ என்று தற்காலிக சமாதானத்தைச் சொல்லி தங்களின் தரப்பிற்கு சாதகமாக பேசுகிறார். பொதுப்பாதையில் சடலத்தை அனுமதித்தால் ‘சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்’ என்கிற காரணத்தையும் சொல்கிறார்.

ஆனால் நீதிபதி இந்த வாதத்தை ஏற்பதில்லை. ‘ஒருவர் இறந்த பிறகும் கூட அவருக்கு கிடைக்க வேண்டிய இறுதி மரியாதையைக் கூடவா தர முடியாது?” என்கிற நியாயமான கேள்வியுடன் கோலப்பனின் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு தருகிறார். இனி சிக்கல் இருக்காது என்கிற நம்பிக்கையுடன் கோலப்பன் ஊர் திரும்பினாலும் அவனுக்குள் சந்தேகம் கனன்று கொண்டேயிருக்கிறது. அவன் நினைத்தபடியே ஆகிறது. நீதிமன்ற தீர்ப்பை ஆதிக்கச் சாதியினர் ஏற்பதில்லை. காவல்துறை அதிகாரியும் ஆர்டிஓவும் அவர்களுக்கு சாதகமாக சமாதானம் பேசத்தான் மறுபடியும் வருகிறார்கள். பிறகு மேலே குறிப்பிட்ட உண்மைச் சம்பவத்தில் நிகழும் அத்தனை விஷயங்களும் இதில் நடக்கின்றன.

இறுதிக்காட்சியில் தன் தந்தையின் பிணம் எங்கே அடக்கம் செய்யப்பட்டது என்பது கூட தெரியாமல் தரையில் வீழ்ந்து ‘கோ’வென்று கதறி அழுகிறான் கோலப்பன். பின்னணியில் கவிஞர் இன்குலாப் எழுதிய ‘மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா..உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள…மனுசங்கடா நாங்க மனுசங்கடா.. என்கிற புகழ்பெற்ற பாடல் ஓங்கி ஒலிக்கிறது. இந்த திரைப்படத்திற்கென பிரத்யேகமான வரிகளை எழுதித் தந்திருக்கிறார் இன்குலாப். திரைப்படத்திற்காக அவர் எழுதிய ஒரே பாடல் இதுதான்.

**

எடுத்துக் கொண்ட விஷயத்தை கோர்வையாகவும், பிரச்சாரத் தொனியில்லாமலும் எவ்வித கவனச்சிதறல்கள் உருவாகாமலும் நேர்மையாக அணுகியிருக்கிறது ‘மனுசங்கடா’. சுயாதீன சினிமா என்பதால் அதற்குரிய பலமும் பலவீனங்களும் இருக்கின்றன. சமயங்களில் ஒரு ‘டெலிபிலிம்’ போல சாதாரணத் தொனியில் காட்சிகள் நகர்கின்றன. சில நடிகர்களின் பங்களிப்பு நாடகப் பாணியில் பழமை வாய்ந்ததாக இருக்கிறது. இது போன்ற சமூகநீதியை உரையாடும் படங்கள் ‘பிலிம் பெஸ்டிவல்’ வட்டத்தைத் தாண்டி வெகுசன மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய கடமை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இருக்க வேண்டும். அதற்காக அதிக சமரசங்கள் இல்லாமல் சில அவசியமான சுவாரசியங்களை இணைக்கலாம். வடசென்னையில் உள்ள ஓர் அரங்கில் நான் இந்த சினிமாவைப் பார்க்கும் போது இருபத்தைந்திற்கும் குறைவான பார்வையாளர்களே இருந்தனர். அவர்களில் சில இளைஞர்கள் படத்தைக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தனர். படத்தின் மையம் உணர்ச்சிகரமாக அவர்களை அணுகவில்லை. இது இயக்குநரின் தவறு அல்ல, என்றாலும் இந்தப் பார்வையாளர்களையும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. இந்த இடத்தில்தான் ‘மெட்ராஸ்’ ‘பரியேறும் பெருமாள்’ போன்ற திரைப்படங்கள் வெல்கின்றன.

கோலப்பனாக ராஜீவ் ஆனந்த் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் எந்நேரமும் முஷ்டியை உயர்த்திக் கொண்டு யாரையாவது முட்டப்போவது போன்றே பெரும்பான்மையான காட்சிகளில் தெரிந்த மிகையுணர்ச்சியை தவிர்த்திருக்கலாம். ‘உங்க அழுக்கை எல்லாம் நாங்கதானே சுத்தம் பண்றோம். இந்தப் பாதைல போனா உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று உணர்ச்சிகரமாக இவர் கேட்கும் காட்சி சிறப்பானது. வழக்கறிஞராக நடித்திருக்கும் நாடகவியலாளர் கருணா பிரசாத்தின் நடிப்பு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. இறந்தவரின் மனைவியாக நடித்த, கூத்துப்பட்டறை ‘மணிமேகலை’க்கு ஒப்பாரிப்பாடல் பாடுவதைத் தவிர வேறு காட்சியில்லை. கோலப்பனின் வருங்கால மனைவியாக நடித்த ஷீலா ராஜ்குமாரின் இயல்பான நடிப்பு கவர்ந்தது. சில பாத்திரங்களுக்கு தோற்றப் பொருத்தமும் உடல்மொழியும் பொருந்தி வராததைக் கவனத்திருக்கலாம். கோலப்பனின் உறவினர்களாக நடித்திருப்பவர்களின் தோற்றமும் நடிப்பும் பொருத்தமாக அமைந்திருந்தது.

பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவு ஆவணத்தன்மைக்குரியதைக் கொண்டிருந்தது. தொடர்புள்ள காட்சிகளின் அருகே நின்று பார்வையாளர் கவனிக்கக்கூடிய தன்மையுடன் அமைந்திருந்தது.

உ.வே.சாமிநாதய்யர், சர்.சி.வி.ராமன், சுப்ரமணிய பாரதி போன்ற ஆளுமைகள் தொடர்பாக இருபத்தைந்திற்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் அம்ஷன் குமார். தவில் வித்வான் யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்தி தொடர்பான ஆவணப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. கி.ரா.வின் ‘கிடை’ என்கிற குறுநாவலையொட்டி இவர் இயக்கிய ‘ஒருத்தி’ என்கிற திரைப்படம், ‘இந்தியன் பனோரமா’வில் திரையிடப்பட்டது. ‘மனுசங்கடா’ இவரது இரண்டாவது திரைப்படமாகும்.

எளிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பிரச்சினைகளை அவர்களின் நோக்கில், கோணத்தில் உரையாடும் கலை, இலக்கியம் என்பது தமிழில் மிக குறைவு. இது போன்ற சூழலில் ‘மனுசங்கடா’ போன்ற திரைப்படங்கள், மாற்று முயற்சிகள் அதிகம் உருவாக வேண்டும். இவை பார்வையாளர்களின் ஆதரவையும் பெற வேண்டும். 


(குமுதம் தீராநதி - நவம்பர் 2018 இதழில் பிரசுரமானது)


suresh kannan

Friday, February 01, 2019

விற்பனையாளனின் மரணம் (The Salesman - Iranian movie)




நாம் அன்றாடம் காணும் சராசரியான காட்சிகளில் இருந்தும்,  உணரும்  எளிய அனுபவங்களில் இருந்தும் மிகச் சிறந்த சினிமாக்களை உருவாக்கும் வல்லமையையும் நுண்ணுணர்வையும்  கொண்டதாக இரானியச் சினிமா விளங்குகிறது. கடந்த சில வருடங்களாக சர்வதேச விருது விழாக்களில் இரானியச் சினிமாக்கள் பிரத்யேக மதிப்பு கொண்டதாகவும் பார்வையாளர்களிடம் ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்து வருகின்றன. இத்தனைக்கும் கடுமையான கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் கொண்ட தேசத்திலிருந்து எளிய அழகியலின் வாயிலாக சிறந்த படைப்புகள் வெளிவருவது பிரமிக்கத்தக்கது. போர், அடிப்படைவாதம் போன்ற சிக்கலான பின்புலம் உள்ள சூழல்களிலிருந்துதான் சிறந்த கலைப் படைப்புகள் திமிறிக் கொண்டு மேலெழும் என்கிற தர்க்கமும் காரணமாக இருக்கலாம். மேற்பார்வையில் எளிமையாகவும் ஆனால் அடிநாதமாக தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை வலுவாக உரையாடும் தன்மையை பெரும்பாலான இரானியச் சினிமாக்கள் கொண்டிருக்கின்றன.

இரானிய சினிமா இயக்குநர்களின் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்  ' அஸ்கர் ஃபர்ஹாடி'. தொலைக்காட்சிக்கான படங்கள், முழு நீள திரைப்படங்கள் என்று 1998-ம் ஆண்டு முதலே இவர் திரைத்துறையில் இயங்கி வந்தாலும் 2011-ல் வெளிவந்த 'எ செப்பரேஷன் ' என்கிற திரைப்படம் இவருக்கு பரவலான கவனத்தையும் விமர்சகர்களின் அமோகமான பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. இரானிய திரைப்பட வரலாற்றில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றது. 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட' பிரிவில் இந்த விருது கிடைத்தது.


2016-ல் வெளிவந்த 'தி சேல்ஸ்மேன்', அஸ்கர் ஃபர்ஹாடியின் சமீபத்திய திரைப்படம்.  இந்த திரைப்படமும் ஆஸ்கர் விருதை வென்றது. மட்டுமல்லாமல் 'கான்' திரைப்பட விருது விழாவில் 'சிறந்த திரைக்கதை' மற்றும் 'சிறந்த நடிகர்' ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றது. இன்னமும் பல விருதுகளும் பாராட்டுக்களும் இந்த திரைப்படத்திற்கு கிடைத்தன.

***


அஸ்கர் ஃபர்ஹாடி இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் இந்தப் பாணியில்தான் அமைந்திருக்கும். அதாவது, இயல்பாக சென்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் நிகழும் ஒரு சிறு அசம்பாவிதம் அல்லது விபத்து அந்தக் குடும்பத்தின் ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைத்து விடும். அந்தக் குடும்பத்தில் உள்ள நபர்களின் இடையேயான உறவுச் சிக்கல்கள், அந்தச் சம்பவம் ஏற்படுத்தும்  உளைச்சலின் பின்விளைவுகள், அவற்றிற்கான விசாரணைகள், தடுமாற்றங்கள் என்று இவை சார்ந்த காட்சிகள் பரபரப்பாக நகர்ந்து கொண்டேயிருக்கும். வணிக நோக்கத்துடன் உருவாக்கப்படும் செயற்கையான திரில்லர் படங்களின் மலினத்தன்மைகள் ஏதும் இவைகளில் இருக்காது என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தக் காட்சிகளின் மூலம்  நவீன இரானிய சமூக மனங்கள் இயங்கும் விதம், அங்குள்ள கலாசாரம், அது சார்ந்த கண்காணிப்புகள், ஒடுக்குமுறைகள் என்று பல விஷயங்கள் உள்ளுறையாக இந்தப் பாணி திரைக்கதையில் அடங்கியிருக்கும். 'தி சேல்ஸ்மேன்' திரைப்படமும் இந்தப் பாணியில்தான் இயங்குகிறது.

எமத் மற்றும் ரானா மனமொத்த தம்பதியினர். எமத் ஒரு பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறான். மாணவர்களிடம் இனிமையாகப் பழகி இணக்கமான முறையில் போதிப்பவன். கணவன், மனைவி இருவருமே பகுதி நேரமாக  நாடகத்திலும் நடிப்பவர்கள்.

அவர்கள் வசித்து வரும் வீடு இடிந்து விழும் சூழல் ஏற்படுவதால் வேறு வீடு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நாடகக்குழுவின் தலைவர் உதவ முன்வருகிறார். வாடகைக்கு வீடு பார்த்து தருகிறார். அந்த வீட்டில் முன்பு தங்கியிருந்த பெண்மணி சில நிழலான விஷயங்களில் ஈடுபட்டவள். அவளுடைய சில பொருட்கள் கூட இன்னமும் அங்கிருந்து எடுக்கப்படாமல் இருக்கின்றன.

இந்தப் பின்னணி விவரங்களை அறியாத எமத்-ரானா தம்பதி மகிழ்ச்சியுடன் அந்த வீட்டினுள் குடிபுகுகிறார்கள். எமத் வீட்டில் இல்லாத ஒரு நாளில் ரானா குளியலறைக்குள் இருக்கும் போது மர்ம மனிதன் ஒருவனால் தாக்கப்படுகிறாள். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் ரானாவின் அலறல் கேட்டு அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். எமத் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியும் திகைப்பும் அடைகிறான்.

***


அந்தக் குடும்பத்தின் இனிமையையும் வழக்கமான ஒழுங்கையும் இந்தச் சம்பவம் கலைத்துப் போட்டு விடுகிறது. வீட்டில் தனிமையாக இருக்க ரானா அஞ்சுகிறாள். மட்டுமல்லாமல் காவல் நிலையத்தில் இது பற்றி புகார் செய்ய முனையும் அமத்தையும் அவள் தடுத்துவிடுகிறாள். விசாரணை என்கிற பெயரில்  மறுபடி மறுபடி அந்தச் சம்பவத்தின் துர்கணங்களுக்குள் சென்று விழ அவளுக்கு துணிவும் விருப்பமும் இல்லை. இந்த உளைச்சல் காரணமாக நாடகத்தில் தம்முடைய பங்கை சரியாகச் செய்யவும் அவளால் இயலவில்லை. பார்வையாளர்களின் கூட்டத்தில் இருந்து மர்ம நபர் கண்காணித்துக் கொண்டிருப்பது போல அவளுக்குத் தோன்றுகிறது.

ரானாவின் மனஉளைச்சலை அமத் புரிந்து கொள்ள இயன்றாலும் அவளின் குழப்பமான எதிர்வினைகள் அவனுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே சமயங்களில் ரானா மீது எரிச்சலுறுகிறான். இதற்கு முன் குடியிருந்த நபரைப் பற்றிய விவரங்களை மறைத்தற்காக நாடக குழு தலைவர் மீதும் கோபமுறுகிறான். தன்னுடைய வழக்கத்திற்கு மாறாக மாணவர்கள் மீதும் எரிச்சலை வெளிப்படுத்துகிறான்.

தன் மனைவியைத் தாக்கிச் சென்ற நபரைக் கண்டுபிடிப்பது அவனுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அந்தக் கண்டுபிடிப்புதான் இப்போதைய உளைச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வாக இருக்கும் என கருதுகிறான். மெல்ல மெல்ல தன் விசாரணையைத் துவங்குகிறான்.

ரானாவைத் தாக்கிய மர்ம நபர் யார், எதற்காக அவர் அதைச் செய்தார், எமத் எப்படி அந்த நபரைக் கண்டுபிடித்தான், அதற்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்பதையெல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக இதன் உச்சக்காட்சியில் இருக்கை நுனியில்தான்  அமர வேண்டியிருக்கிறது.  மறுபடியும் இதை நினைவுப்படுத்துகிறேன். ஒரு திரில்லருக்கான பரபரப்பைக் கொண்டிருந்தாலும் அதைச் சார்ந்த மலினமான உத்திகள் எதையும் இந்த திரைப்படம் கடைப்பிடிக்கவில்லை என்பதே அஸ்கர் ஃபர்ஹாடியின் அபாரமான இயக்கத்திற்கும் கலையுணர்விற்கும் சான்று.


***


இந்த திரைப்படத்திற்காக அஸ்கர் ஃபர்ஹாடி உருவாக்கியிருக்கும் திரைக்கதை உத்தியும் அதன் சிக்கலான லாவகமும் என்னை வியக்க வைக்கிறது. தற்செயலாக நிகழும் ஒரு சிறிய அசம்பாவிதத்தைக் கொண்டு சாகச காட்சிகள் ஏதும் அல்லாமல், அதில் செயற்கையான பரபரப்புகள் ஏதும் கலக்காமல், அதே சமயத்தில் பார்வையாளனின் ஆர்வத்தையும் தணிய வைக்காமல் கதை சொல்லும் சுவாரஸ்யமான கலவை பாராட்டுக்குரியதாக இருக்கிறது. சிக்கல்கள் விரிவதற்கு மூலக் காரணமாக இருக்கும் அந்தச் சம்பவம் நமக்கு நேரடியாக காட்டப்படுவதில்லை. போலவே அந்த வீட்டில் முன்பு குடியிருந்த பெண்மணியைப் பற்றிய உரையாடல் படம் முழுக்க நிகழ்ந்தாலும் அவர் யாரென்பதும் நமக்கு காட்டப்படுவதில்லை. இப்படியாக பார்வையாளர்களின் மீது நம்பிக்கை கொண்டு இடைவெளி சாத்தியங்களையும் படம் முழுக்க நிரப்பிச்  செல்கிறார் ஃபர்ஹாடி.

மெல்ல மெல்ல விரியும் பூடகமும் மர்மமும் நிறைவு கொள்ளும் உச்சக்காட்சி உருவாக்கப்பட்டிருக்கும் விதமும் அங்கு நிகழும் நாடகங்களும் அபாரமானது. சந்தேகத்திற்கு உரிய நபர் என்று எமத் தீர்மானம் செய்து விரிக்கும் வலையும் அதில் வந்து மாட்டிக் கொள்ளும் வேறொரு மீனும் அங்கு நிகழும்  திருப்பமும் சுவாரஸ்யம். குற்றம் செய்த நபரின் பின்னணியை வைத்து அவரை பாதிக்கப்பட்ட ரானாவே மன்னிக்கத் தயாராக இருக்கும் போது எமத் அதை ஒப்புக் கொள்வதில்லை. குற்றவாளிக்குத் தண்டனை தராமல் அவனது அகங்காரம் திருப்தியடைவதில்லை. எந்தச் சம்பவம் அந்தக் குடும்பத்தின் இனிமையை சீர்குலைத்ததோ, அதற்கான மர்மம் விலகிய போது மகிழ்ச்சி உள்ளே திரும்ப உள்ளே வருவதற்குப் பதிலாக, தம்பதிகளுக்குள் உருவாகும் மனவிலகல் மேலதிகமாக உருவாவது முரண்நகையாக அமைகிறது.


எமத் ஆக நடித்திருக்கும் Shahab Hosseini-ன் அபாரமான நடிப்பு வியக்க வைக்கிறது. சிறந்த நடிகருக்கான 'கான்' விருதை இவர் பெற்றார். தம்முடைய இணக்கமான பிம்பத்தை மாணவர்களிடம் காட்டும் அதே ஆசிரியர், குடும்பச் சிக்கல் சார்ந்த உளைச்சலில் ஆழ்ந்திருக்கும் போது காண்பிக்கும் கடுமையான முகத்தின் வித்தியாசம் பற்றிய உதாரணம் மட்டுமே போதும், இவரது நடிப்புத் திறனிற்குச் சான்றாக சொல்ல. போலவே ரானாவாக நடித்திருக்கும் Taraneh Alidoosti -ன் பங்களிப்பும் சிறப்பு. குறிப்பிட்ட சம்பவம் தமக்குள் ஏற்படுத்தும் பதட்டத்தையும் மனஉளச்சலையும் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். நாடகக்குழு தலைவராக வரும் Babak Karimi-ன் நடிப்பும் சிறப்பு.

என்றாலும் படத்தின் இறுதிக் காட்சிக் கோர்வையில் வரும் Farid Sajadhosseini -ன் நடிப்பை அதி உன்னதம் என்று சொல்வேன். ஒரு சினிமாவில் வரும் காட்சிகளாக அல்லாமல் நாம் நேரடியாக கண்டு கொண்டிருக்கும் பிரமிப்பை இறுதிக் காட்சி தருகிறது என்றால் அதற்கு உறுதுணையாக அமைந்திருப்பது இவருடைய அபாரமான நடிப்பே.


***

ஆர்தர் மில்லரின் புகழ்பெற்ற நாடகமான ' Death of a Salesman', இந்த திரைப்படத்துடன் அபாரமான ஒத்திசைவாக இணைக்கப்பட்டுள்ளது. கணவனும் மனைவியும் இந்த நாடகத்தில் பங்கு கொள்கிற நடிகர்கள். அவர்களின் சொந்த வாழ்வில் நிகழும் சம்பவத்தின் எதிரொலிகள் நாடகத்தில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்கிற இணைப்பை அருமையாகச் சித்தரிக்கிறார்  இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாடி.

புலிட்சர் விருது பெற்ற அந்த நாடகத்தைப் பற்றி அறிந்து கொள்வது இந்த திரைப்படத்தை மேலதிகமாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும். ஆர்தர் மில்லரின் இந்த நாடகம் பல்வேறு சமயங்களில் தொலைக்காட்சி நாடகமாகவும் மற்றும் திரைப்பட வடிவங்களிலும் வந்திருக்கிறது. László Benedek  இயக்கத்தில் 1951-ல் வெளிவந்த திரைப்படம் ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளுக்கு தகுதி பெற்றது.

இந்த நாடகத்தின் நாயகனான Willy Loman நடுத்தர வர்க்க சமூகத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி. தன்னுடைய வாழ்க்கை பொருளியல் சார்ந்து வெற்றிகரமாக அமையவில்லை என்கிற தாழ்வுணர்ச்சியையும் அது சார்ந்த தடுமாற்றங்களையும் கொண்டிருப்பவன். கனவிற்கும் யதார்தத்திற்கும் இடையில் தத்தளிப்பவன். தன்னால் எட்ட முடியாத கனவுகளை தன்னுடைய மகன்களின் மூலம் அடைய முடியுமா என்கிற ஆவலையும் அது நிறைவேறாத சமயங்களிலான எரிச்சல்களிலும் அல்லறுபவன். பல்வேறு பாத்திரங்களும் சம்பவங்களும் கால வரிசையில் முன்னும் பின்னுமாகவும் சிக்கலாகவும் இயங்கும் அலைச்சல்கள் நாயகனின் மரணத்தின் வாயிலாக தற்காலிகமாக முடிவிற்கு வருகின்றன என்றாலும் அது அத்தனை எளிதா என்கிற தத்துவார்த்தமான கேள்வியையும் இந்த நாடகம் முன்வைக்கிறது.

'தி சேல்ஸ்மேன்' திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் கணவனும் மனைவியும் மேற்குறிப்பிட்ட நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள். அவர்களுக்கிடையேயான உறவு இணக்கமானதாக தெரிந்தாலும் அது உள்ளபடியே அவ்வாறுதான் இருக்கிறதா என்று நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் அதுவரை வசித்துக் கொண்டிருக்கும் வீடு இடிந்து விழுவதற்கான அடையாளங்களை அடைவது அவர்களுடைய உறவின் விரிசலுக்கான குறியீடாக இருக்கலாம் என்கிற சாத்தியத்தை திரைக்கதை உருவாக்கித் தருகிறது.

எமத் தன் மனைவியின் மீது அன்பு கொண்டிருப்பவன்தான். ஆனால் அந்தச் சம்பவம் அவர்களுக்கு இடையேயான விரிசலை அவர்களுக்கே அடையாளம் காட்டித் தருகிறது. ரானா எதிர்கொள்ளும் உளைச்சலை எமத்தால் புரிந்து கொள்ள முயன்றாலும் அது சார்ந்த எரிச்சலையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. ஒருபுறம் ரானாவின் இது போன்ற எதிர்வினைகளும் அது சார்ந்த குழப்பங்களும், மறுபுறம் தனக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால் தொடர்பான தேடல்கள் என்று இரண்டு போராட்டங்களுக்கும் இடையில் நின்று எமத் தத்தளிக்கிறான்.

குற்றவாளியை மன்னிக்கும் நிலைக்கு ரானா நகரும் போது எமத்தால் அதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. ஒப்புக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.  மனைவியின் ஆட்சேபத்தையும் மீறி குற்றவாளிக்கு சிறு தண்டனையையாவது தராமல் அவனது அகங்காரம் நிறைவு கொள்வதில்லை. ஆனால் எந்த அன்பு மனைவிக்காக அவன் இத்தனை சாகசங்களையும் செய்தானோ, அந்த அன்பிலிருந்தும் மதிப்பிலிருந்தும் அவன் சரிந்து வீழ்வதும் அந்த உறவில் ஏற்படும் விரிசல் அதிகமாகவதும் ஒருவகையான முரண்நகையே.


***


இந்த திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெறத் தகுதி பெற்றிருந்த சமயத்திலேயே இந்த விழாவில் தம்மால் பங்கு பெற இயலாது என்கிற தீர்மானத்தை முதலிலேயே தெரிவித்து விட்டார் அஸ்கர் ஃபர்ஹாடி. இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர சமீபத்திய அதிபர் டிரம்ப் ஏற்படுத்தியிருக்கும் தடைகளையும் அதிலுள்ள இனவாத அரசியலையும் கண்டிக்கும் வகையில் இந்தப்  புறக்கணிப்பை ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்ட போது இயக்குநரின் சார்பில் அவரது பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

தாம் உருவாக்கும் திரைப்படங்களில் மட்டுமல்லாது அவற்றைத் தாண்டிய புறவுலகிலும் கலைஞனின் அறமும் தார்மீக உணர்வும் வெளிப்பட வேண்டும் என்கிற அழுத்தமான சமிக்ஞையை அஸ்கர் ஃபர்ஹாடியின் இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.

(அம்ருதா ஏப்ரல் 2017 இதழில் பிரசுரமானது)

suresh kannan