Saturday, December 24, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 21 டிசம்பர்


இன்று இரண்டு அழகான திரைப்படங்களைக் காண முடிந்தது. 

முதலில் LAS ACACIAS என்கிற அர்ஜென்டினா திரைப்படம். 85 நிமிடங்கள் ஓடினாலும் இதை குறும்படம் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றே மூன்று கதாபாத்திரங்கள். அதில் ஒன்று கைக்குழந்தை வேறு. படம் முழுக்க சலிப்பான வாகனப்பயணம். A Road Movie.

இருபது வருடங்களுக்கும் மேலாக டிரக் டிரைவராக இருக்கும் ரூபன் அதிகம் பேசாத ஒரு தனிமைவாதி. பராகுவேயிலி்ருந்து Buenos Aires-க்கு சரக்கு ஏற்றிச் செல்லும் போது ஒரு பெண்ணையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவனுடைய முதலாளியால் பணிக்கப்படுகிறான். அவள் ஒரு கைக்குழந்தையுடன் வருகிறாள். இந்தப் பயணக் காட்சிகளால் முழுத்திரைப்படமு்ம இயங்குகிறது.

படத்தின் நீளம் இன்னும் சற்று எடிட் செய்யப்பட்டிருக்கலாமோ என்று நினைக்கும் படி வாகனத்தில் பயணிக்கும் காட்சிகள் நீண்டிருந்தாலும் பார்வையாளனும் அந்த பயணச் சலிப்பை அடைய வேண்டும் என்று இயக்குநர் செயல்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறேன். முசுடான டிரைவருக்கும் அந்தப் பெண் மற்றும் குழந்தைக்கும் சிறிது சிறிதாக வளரும் நேசமும் அன்பும் மிக நுட்பமாகவும் அமைதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. டிரைவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து அந்த அழகான குழந்தையும் கொட்டாவி விடும் போன்றதான காட்சிகள் அற்புதமானவை. இருவரும் ஒருவரையொருவரைப் பற்றி மெலிதாக விசாரித்துக் கொண்டாலும் அவர்களுடைய இருவரின் பின்னணியும் மிகப் பூடகமாகவே பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது.

சற்று நிதானமாக நகர்ந்தாலும் மிக அழகானதொரு முடிவை நோக்கி நிறைந்திருக்கிறது இத்திரைப்படம். 




அடுத்தது HASTA LA VISTA என்கிற பெல்ஜியம் திரைப்படம். இப்படியொரு ஸ்கிரிப்ட்டை யோசித்தற்காகவே இயக்குநரின் கையில் முத்தமிட விரும்புகிறேன்.

மூன்று மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தாங்கள் இதுவரை அனுபவித்தறியாத பாலியல் இன்பத்தை துய்ப்பதற்காக அவர்களைப் போன்றவர்களுக்கென்று பிரத்யேகமாகவுள்ள 'பாலியல் விடுதி்க்கு'  பெற்றோர் அறியாமல் பயணம் மேற்கொள்ள நினைக்கிறார்கள். எதிர்பாராத விதமாக இவர்களுடன் ஒரு குண்டுப் பெண்ணும் டிரைவராக இணைகிறாள். மிக ஜாலியான பயணம்.

மாற்றுத்திறனாளிகளின் பிடிவாதமும் நிராசையும் இயலாமையும் நகைச்சுவையுடன் திறமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. நிமிடத்திற்கொரு முறை சிரிக்க வைக்கும் தரமான நகைச்சுவையும் காட்சியும். சமயங்களில் சினிக்கலாகவும். மூவரின் பாத்திரமு்ம் பிரத்யேக தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

மெல்லிய நகைச்சுவைத் திரைப்படங்களை ரசிப்பவர்கள் தவறவிடக்கூடாத படைப்பு. 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது. 


suresh kannan

Thursday, December 22, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 20 டிசம்பர்

இன்று எல்லாமே தூக்க தினமாகிப் போனதால் துக்க தினமாகவும் போனது. 



முதலில் பார்க்க கறாராக திட்டமிட்டது, Confessions என்கிற ஜப்பானிய திரைப்படத்திற்கு. தன் மகளைக் கொன்ற சிறுவர்களை பழிவாங்கும் ஒரு டீச்சரைப் பற்றியது. மூளையை உரசிப் பார்க்கும் சற்று சிக்கலான திரைக்கதை. வெவ்வேறு பிரேம்களில் சட்சட்டென்று மாறி சில பல வாக்குமூலங்களின் மூலம் நகர்கிறது. ஆனால் அதற்கேற்ற மனநிலை இல்லாததால் கனவிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இயலாமல் வெளியேறி விட்டேன். 'பிட் படத்திற்கு ஆவலுடன் சென்ற பதின்ம சிறுவர்கள் அது கிடைக்காத ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு ' 'வக்காலி, காட்டுக்குள்ள என்னமா சூப்பரா படமெடுத்திருக்கான்' என்று இரா.முருகனின் ஒரு சிறுகதையில் வருபவன் தன்னை மறைத்துக் கொள்ள முயல்வது போல 'ஒளிப்பதிவு மிக அற்புதமாக இருந்தது' என்று வேண்டுமானாலும் இந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ளலாம். மற்றபடி நிதானமானதெர்ரு மனநிலையில் இதைப் பார்த்திரு்நதால் சுவாரசியமாகத்தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.


அங்கிருந்து விறுவிறுவென்று சத்யம் (Studio 5) தியேட்டருக்கு சென்றது, Nothing's All Bad என்கிற டென்மார்க் திரைப்படத்திற்காக. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கைகள் உள்ளன என்கிற காரணத்திற்காக கால்மணி நேரம் வரிசையில் நின்றும் அனுமதி மறுத்து விட்டார்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. 


ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அங்கிருந்து பிலிம்சேம்பருக்கு ஓடியது 'The Prize' என்னும் பிரெஞ்சு திரைப்படத்திற்காக. ஆனால் அரங்கில் நுழைந்த போது தமிழ் வசனம் கேட்டுக் கொண்டிருந்தது. அடடா! பிரெஞ்சு திரைப்படத்தில் தமிழ் கதாபாத்திரங்களா? என்று ஆனந்த அதிர்ச்சி அடைந்த போதுதான் தெரிந்தது, அது ஜெயபாரதியின் 'புத்ரன்' என்கிற திரைப்படம். ஏதோ டெலிவிஷன் சீரியல் போன்றே இருந்தது. கடந்த சில நாட்களாக நல்ல உருவாக்கங்களைப் பார்த்து விட்டு இப்படி பார்க்கும் போது படு ஏமாற்றமாக இருக்கிறது. எரிச்சலுடன் வெளியே வந்த போது உள்ளே திரையில் அழுது வடிந்து கொண்டிருந்த ஒய்.ஜி. மகேந்திரன் மலர்ச்சியாக நின்று கொண்டிருந்தார். பல ரிடையர்டு நடிகைகளையும் படம் முடிந்து வந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

ஒருவழியாக அரைமணி நேர தாமதத்தி்ல் துவங்கியது பிரெஞ்சு.

கடற்கரைக்கு மிக அருகிலிருக்கும் வீட்டில் தனிமையில் வாழ்கிறார்கள் ஒரு தாயும் மகளும். தந்தை எங்கோ மறைந்து வாழ்கிறார். இருவரும் உயிருக்கு தப்பி இங்கு வந்திருக்கிறார்கள் என்பது மாத்திரம் புரிகிறது. மற்றபடி படு நிதானமான எரிச்சலடைய வைக்கும் திரைக்கதை. இரண்டு சிறுமிகளின் விளையாட்டு உலகம் மிகத் திறமையாக வெளிக் கொண்ரப்பட்டிருக்கிறது. ரொம்பவும் போரடித்ததால் வெளியே வந்து விட்டேன்.

நாளையாவது சிறப்பான நாளாக அமைய வேண்டும். வெறும் புகைப்படங்களை வைத்துக் கொண்டு சினிமா பதிவு எழுதுவது எப்படி என்று இதைப் பார்த்தாவது யாராவது கற்றுக் கொள்ளுங்கள். 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது.

suresh kannan

Wednesday, December 21, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 18 டிசம்பர்



முன்தினம் தவற விட்ட இரானிய திரைப்படத்தை இன்று பிடித்து விட்டதில் ரொம்பவும்  திருப்தி. A Seperation. ஒரு ஹைவோல்டேஜ் குடும்ப டிராமா.

உலகத் திரைப்படங்களில் இரானியத் திரைப்படங்களுக்கென்று ஒரு தனி மரியாதையும் தகுதியும் உண்டு. 'உணர்வு வெளிப்படுத்தும் சுதந்திரம்' பெரிதுமுள்ள மேற்கத்திய நாடுகளில் அதிகார, மத நிறுவனங்களை விமர்சிக்கும் கிண்டலடிக்கும் படைப்புகளை உருவாக்குதில் கூட பெரிய ஆச்சரியமொன்றுமில்லை.  ஆனால் கடுமையான அடக்குமுறை, தண்டனைகள் கொண்ட இரான் போன்ற நாடுகளின் அடிப்படைவாத சூழலின் உள்ளே இருந்து கொண்டே சர்ச்சைக்குரிய படைப்புகளை உருவாக்குவதில் உள்ள அபாயமும் பிடிவாதமும் பிரத்யேகமானவை. 

சமகால இரானிய சினிமாவான இந்தத் திரைப்படத்திலிருந்தே ஓர் உதாரணம் கூறுகிறேன். தான் பணிபுரியும் வீட்டின் கிழவர் (அல்ஜைமர் வியாதியுள்ளவர்) உடையிலேயே சிறுநீர் கழித்து விடுவதைக் காணும் அந்த நடுத்தர வயது பணிப்பெண்ணுக்கு கிழவருக்கு உதவ உள்ளூர விருப்பமும் கருணையும் இருந்தாலும் அவளுக்கு புகட்டப்பட்ட மதநெறிமுறைகள் காரணமாக தயங்குகிறாள். பிறகு தாங்க முடியாமல் தொலைபேசியில் யாரிடமோ "கிழவருக்கு உதவுவதன் மூலம் நான் ஏதும் பாவம் செய்துவிடவில்லையே?" என்று விசாரிக்கிறாள்.  கணவனுக்கு இது தெரியக்கூடாதே என்பதும் அவளுடைய கவலைகளுள் ஒன்றாக இருக்கிறது. 'கவலைப்படாதே, அப்பாவிடம் சொல்ல மாட்டேன்" என்கிறாள் அவளுடைய சிறுவயது மகள்.

ஒரு வயதான நபருக்கு அடிப்படை மனித நேயத்துடன் உதவுவதில் கூட அவர் ஆண் என்பதால் இத்தனை தயக்கங்களையும் சந்தேகங்களையும் புகட்டி வைத்திருக்கின்றன மத நிறுவனங்கள். நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக கருதப்படும் இந்தச் சமகாலத்திலும் இப்படியாகவும் சில இனக்குழுக்கள் இயங்குவது துரதிர்ஷ்டவசமானது.  

ஒரு நடுத்தர வயது தம்பதியினர் நீதியமைப்பிடம் விவாகரத்து கோருவதில் துவங்குகிறது திரைப்படம். மனைவிக்கு வெளிநாட்டில் சென்று வாழ விருப்பம். அல்ஜைமர் நோய் கொண்ட தந்தையை விட்டு வர விருப்பமில்லை கணவனுக்கு. "நீங்கள் அவருடைய மகன் என்று உணரக்கூடிய நிலையில் கூட அவர் இல்லை" என்கிறாள் மனைவி. "அவர் என் தந்தை என்று உணரக்கூடிய நிலையில் நான் இருக்கிறேன் அல்லவா? அது போதும்" என்கிறான் கணவன். 


தீபாவளி சரவெடி போன்று இம்மாதிரியான கூர்மையான வசனங்களாலும் உணர்ச்சிகரமான விவாதங்களினாலும் வன்மங்களாலும் கருணைகளாலும் இத்திரைப்படம் நிரம்பி வழிகிறது. இதன் அபாரமான திரைக்கதை பார்வையாளனை இறுதி வரை ஒரு பதட்டத்திலேயே அமர வைக்கிறது.  ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வேயே ஏற்படுத்தாமல் அச்சு அசலாக சிலர் வாழ்க்கைப் பகுதியின் துண்டுகளை கண்டு கொண்டிருக்கிறோம் என்கிற candid camera நம்பகத்தன்மையை ஏற்படுத்தி படைப்பை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். 

குழந்தைகள் முதற்கொண்டு ஒவ்வொருவரின் நடிப்பும் அத்தனை அற்புதமாக இருக்கிறது. பணிப்பெண்ணாக நடித்திருக்கும் Sareh Bayat, மகேந்திரன் திரைப்படங்களில் வரும் அஸ்வினியை நினைவுப்படுத்தும் சோகச் சித்திரமாக இருக்கிறார். பிரதான பாத்திரங்களில் ஒன்றை ஏற்றிருக்கும் peyman moaadi-ன் பங்களிப்பும் அபாரமானது. அல்ஜைமர் கிழவராக வருபவரின் பங்களிப்பு அத்தனை அபாரமானதாக இருக்கிறது.

இந்தத் திரைவிழாவின் முக்கியமான திரைப்படங்களுள் இது ஒன்று என்பதில் எந்த ஐயமுமில்லை. பெர்லின் திரைவிழாவில் 'தங்க கரடி'விருது முதற்கொண்டு பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. 


உட்லண்ட்ஸிலிருந்து பரபரவென்று பிலிம் சேம்பருக்கு நடந்து சென்றது - இன்னொரு இரானிய திரைப்படமான Ashk-E Sarma -க்காக. ஆனால் விதி தேய்ந்து போன டிவிடி வடிவத்தில் காத்திருக்கும் என்பதை யூகிக்க முடியாமலே போனது. படத்தை அறிமுகப்படுத்தியவர் முன்பே இது குறித்த எச்சரிக்கையை வழங்கினாலும் திரைப்படம் அவ்வப்போது நின்று நின்று எரி்ச்சலை ஏற்படுத்தியது. "போய்த் தொலைங்கடா" என்று ஒரு கட்டத்தில் நின்றே போனது. அதன் பேச்சை மறுக்க முடியாமல் கிளம்பி விட்டேன். சர்வதேச திரைவிழா என்கிற அலட்டலான பிராண்டின் கீழ் இம்மாதிரியான அலட்சியங்கள் நிகழ்வது மிக துரதிர்ஷ்டவசமானது.

மோசமான பிரிண்ட் என்றாலும் கூட சுவாரசியமான உருவாக்கத்தின் காரணமாக அதுவொரு குறையாகத் தோன்றவில்லை. கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் ஒரு ராணுவ வீரருக்கும் அங்கு ஆடு மேய்க்கும், கொரிலாக்களுக்கு உதவும் ஒரு பெண்ணுக்கும் இடையிலுள்ள நேசத்தைப் பற்றி சொல்லிச் சென்ற (முடிவு என்னவென்று அறிய முடியாமற் போன) அற்புதமான திரைப்படம். ஆகவே இதை ஒரு அரைகுறை விமர்சனம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

டெஸ்க்டாப் வால்பேப்பரை உடனே மாற்றுமளவிற்கு, ஆடு மேய்க்கும் பெண்ணாக வரும் Golshifteh Farahani-ன் அழகிற்கு உடனே ரசிகனாகி விட்டேன் என்பது இந்தத் திரைப்படத்திற்கு சென்றதில் உள்ள எளிய ஆறுதல்.


suresh kannan

Sunday, December 18, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 17 டிசம்பர்

இன்று நான் அலுவலகத்திலிருந்து சிரமப்பட்டு பிய்த்துக் கொண்டு ஓடியது,  இந்த விழாவில் அதிகம் எதிர்பார்த்திருந்த 'A Seperation' என்கிற இரானிய திரைப்படத்திற்காக . 'இரானிய படங்களின் மீது எனக்கு பெரிய மரியாதை ஒன்றுமில்லை, அவை பார்வையாளனை நெகிழச் செய்வதையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன' என்கிறார் விமலாதித்த மாமல்லன்.

ஆனால் என்ன காரணத்தினாலேயோ ஷெட்யூலை மாற்றி HABEMUS PAPAM (WE HAVE A POPE) என்கிற இத்தாலிய திரைப்படத்தை திரையிட்டனர். படு ரகளையான திரைப்படம். உரத்த குரலில் அல்லாமல் subtle ஆக மிக நுட்பமான பகடிகளால் நிறைந்து வழிகிறது. மத நிறுவனங்களையும் குருமார்களையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கிறது. இப்படியொரு படத்தை இந்தியச் சூழலில் யோசிக்கவே முடியாது. நம்முடைய முதிர்ச்சியின்மையின் பல அடையாளங்களில் இதுவுமொன்று.

நம்முடைய பொதுச் சமூகத்திற்கு பல 'புதினப்பசுக்களின்' தேவையும் இருப்பும் அவசியமானதொன்றாயிருக்கிறது. அன்றாடம் வெளிப்பட்டிருக்கும் நம்முடைய தீய எண்ணங்களுக்கு மாற்றாக எங்கோ சில தூய மனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நம்ப வேண்டியிருக்கிறது. குற்றங்களின் வடிகாலாக அந்த socalled தூய மனங்கள் இருக்க வேண்டுமென்றும் அவை அதிதூய்மையாகவே இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது்; நம்புகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த தூயமனங்களும் நம்மைப் போலவே சதையும் ரத்தமும் கொண்டவை என்பதும் எல்லா அடிப்படை இச்சைகளுக்கும் உட்பட்டவையே என்பதை நம்பவோ விரும்பவோ மறுக்கிறது. இதில் சற்று சறுக்கல் ஏற்பட்டாலும் கூட கோபம் கொள்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஓர் இளம் சாமியார் நடிகையுடன் இருந்த அந்தரங்க தருணங்களை 'நீதிமான்களாக' வேஷம் போடும் ஊடகங்களில் ஒன்று வெளிப்படுத்திய போது 'ஒரு சாமியார் இப்படிச் செய்யலாமா?' என்று பொதுச்சமூகம் கோபமும் அருவருப்பும் கொண்டது. இதன் மூலம் தன்னையும் ஒரு புனிதனாக காட்டிக் கொள்ள விரும்புகிறது.  இருவரும் மனமொப்பி தன்னிச்சையாக அதை மேற்கொண்டிருந்தால் அதைப் பற்றி கேள்வி கேட்க எவருக்குமே உரிமை கிடையாது. மற்ற service provider -களைப் போல ஆன்மீகத்தையும் அதன் உள்ளடக்கத்தை மாத்திரம் பெற்றுக் கொண்டு அதைத் தருபவர்களைப் பற்றிய ஆராய்ச்சியை விடும்வரை இந்த 'வெற்றுப் பொங்கல்'கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். வாஷிங் மெஷின் ரிப்பேர் செய்ய வருபவரின் உடையும் அதிதூய்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நம்முடைய அறியாமைதானே?
 
 
spoilers warning

ரோம் நகரத்தில் புதிய போப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம். பல நாட்டு கிறித்துவ குருமார்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். தேர்வு துவங்குகிறது. கடுமையான விதிமுறைகள் காரணமாக பலருக்கும் தான் போப்பாக தேர்வு செய்யப்படுவதில் விருப்பமில்லை. உள்ளூற பதட்டமும் பயமுமாக அமர்ந்திருக்கின்றனர். உள்ளூற இறைவனிடம் மன்றாடுகின்றனர். இறுதிச் சுற்றில் ஒருவர்  பலியாடாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் அவர் மக்களின் முன் தோன்றி ஆசி வழங்குவதற்கு முந்தைய தருணத்தில் பயந்து போய் விலகிப் போய் விடுகிறார்.

விதிமுறைகளின் படி புதிய போப் பால்கனியில் தோன்றாத வரை அவர் யார் என்பதை பொதுவெளியில் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாத சூழல். மேலும் அப்படி வெளிப்படும் வரை இது ரகசியமாகவும் வைக்கப்பட வேண்டும்.
 
உளவியல் மருத்துவர் ஒருவரை (இயக்குநர் Nannai Moretti) போப்பிடம் உரையாட வைக்கின்றனர். உளவியல் மருத்துவரே ஒருவகையான depression-ல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் போப் அங்கிருந்து தப்பிச் சென்று விடுகிறார். அமைப்பின் தொடர்பு அதிகாரி போலியாக ஒருவரை ஏற்பாடு செய்து 'போப்' அங்கேதான் இருக்கிறார் என்று நம்பச் செய்கிறார். 
 
 

இப்படியாக படம் முழுவதும் பகடியான காட்சிகளாலும் வசனங்களாலும் நிரம்பி வழிகிறது. குறிப்பாக இயக்குநர் Nannai Moretti படுஜாலியாக நடித்திருக்கிறார். இவரின் இன்னொரு அற்புதமான திரைப்படமான 'The Son's Room'-ல் இவரை சீரியசாக பார்த்து விட்டு இதில் படு ஜாலியாக பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. புதிய போப்பாக நடித்திருக்கும் Michel Piccoli-ன் நடிப்பும் அற்புதம். 'நான் ஒரு நடிகன்' என்று பெண் உளவியல் மருத்துவரிடம் அறிமுகம் செய்து கொள்ளும் காட்சியிலும் 'புதிய வழிகர்ட்டியை' அறிந்து கொள்ளும் ஆவலில் மாளிகையின் முன் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் இடையில் நெகிழ்ச்சியாக நடந்து செல்வதும் இறுதியில் 'நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியாது' என்று அறிவிக்கும் காட்சியிலும் நெகிழ வைத்து விடுகிறார்.

போப் தேர்வு செய்யப்படும் காட்சிகளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரவசத்துடன் காத்திருக்கும் காட்சிகளும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 
எல்லா மனிதர்களும் இயற்கையின் ஆதார விதிகளுக்கு உட்பட்டு இயங்குபவர்கள்தான், யாரும் அதிபுனிதர்கள் அல்ல, ஆன்மீகம் என்கிற வஸ்துவை வெளியே தேடாமல் உள்நோக்கிய பயணமாக கொண்டிருக்கிற வேண்டும் என்கிற பல ஊடிழைச் செய்திகளை இந்தத் திரைப்படம் தரமான பகடிகளுடன் சொல்லிச் செல்கிறது.

தவற விடக்கூடாத திரைப்படம். ஒருவேளை தமிழில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டால் எந்த மதகுரு இதற்கு அதிபொருத்தமானவர் என்று யோசித்துப் பாருங்கள். சுவாரசியமான கற்பனையாக இருக்கும்.  
 
தமிழ் பேப்பரில் பிரசுரமானது. 
suresh kannan

Saturday, December 17, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 16 டிசம்பர்

முதலில் நேர்மையாக ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். அலுவலக பணியழுத்தம் காரணமாக நேற்று என்னால் திரைவிழாவிற்குச் செல்ல இயலவிலலை. என்றாலும் நினைவு முழுக்க அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.

பெரும்பாலான உலகத் திரைப்படங்கள் குறுந்தகட்டிலும் இணையத்தில் கிடைக்கும் போது நிம்மதியாக வீட்டுத்தனிமையில் நள்ளிரவில் பார்ப்பதை விட்டு விட்டு எதற்கு நேரம் செலவு செய்து சில பல இடையூறுகளுடன் திரைவிழாவிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கடந்து வருடங்களில் நினைத்திருந்தேன். ஆனால் இதற்காக மெனக்கெட்டு அங்கே சென்று ஒத்தஅலைவரிசையுள்ள பல பார்வையாளர்களுடன் இணைந்து பார்ப்பதும் பிறகு அதைப் பற்றி பரவசமாக பேசிக் கொண்டிருப்பதும் நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆகவே என்னைப் போன்றே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அதை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

நேற்று இரண்டு திரைப்படங்களைக் காண வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருந்தேன். 1) பிரெஞ்சு திரைப்படம் - The Snows of Kilimanjaro 2) ருஷ்ய திரைப்படம் - Elena.

முன்னரே குறிப்பிட்டது போல் திரைவிழாவிற்குச் செல்ல முடியவில்லையென்றாலும் இந்த தளத்தை வாசிக்கும் பல்லாயிரக்கணக்கான (?!) வாசகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே இணையத்தில் தரவிறக்கி வைத்திருந்த ருஷயத் திரைப்படத்தை நள்ளிரவைக் கடந்தும் பார்த்து விட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 'திருட்டு டிவிடியில் பார்த்து விட்டு விமர்சனமா?' என்று பொறுப்பு விளக்கெண்ணையாக பொங்கிக் குதிக்கும் பாசாங்குவாதிகள் என்னைத் திட்டி விட்டு இங்கேயே ஒதுங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

Spoilers Warning..



பிரதானமாக இரண்டு வயதான பாத்திரங்களைச் சுற்றி நிகழ்வதாலோ என்னவோ மிக மிக நிதானமாக நகர்கிறது  ELENA.  ஆனால் நிகழ்ந்து கெர்ணடிருக்கும் மிக அற்புதமான டிராமா காரணமாக அதுவொரு பெரிய குறையாகத் தோன்றவில்லை.

சுஜாதாவின் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழும் கடிதப் பரிமாற்றங்களின் வடிவத்தில் அந்தச் சிறுகதையை வடிவமைத்திருப்பார் சுஜாதா. கணவனின் கொடுமையையும் அது தரும் மன உளைச்சல்களையும் பற்றி தாய்க்கு எழுதிக் கொண்டிருப்பாள் மகள். தாயும் ஆறுதலாக பதிலளித்துக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் மகளின் துன்பம் பெருகிக் கொண்டிருக்க அதிலிருந்து விடுபடுவதற்கானதொரு யோசனையை தாய் மிக சூசகமாக பரிந்துரைப்பார். அவர் வேதியியல் படித்தவராக இருப்பார் என்பது உப தகவல்.

இந்தத் திரைப்படமும் அந்தச் சிறுகதையை நினைவுப்படுத்தியது.

பணக்கார கிழவர் ஒருவர். மருத்துவமனையில் அவருக்கு பணிவிடை செய்யும் சமவயது நர்ஸ் ஒருவரின் கனிவான சேவையில் உருகி திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் இணைந்து தனிமையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இருவரின் முன்னாள் திருமணங்களின் மூலம் முறையே கிழவருக்கு லோகாயாத பொறுப்பில்லாத விட்டேத்தியாய் சுற்றிக் கொண்டிருக்கும் மகளும்,  நர்ஸிற்கு வேலைக்குச் செல்லாத அம்மாவின் பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சோம்பேறி மகனும் இருக்கிறார்கள். நர்ஸின் சமீபத்திய மிகப் பெரிய கவலை, அவருடைய பேரனின் கல்விச் செலவிற்காக மிகப் பெரிய தொகை தேவைப்படுகிறது. "உன்னுடைய குடும்பத்திற்காக என் பணத்தை ஏன் வாரியிறைக்க வேண்டும்?' உன் மகனை உருப்படியாக வேலை பார்க்க்ச் சொல்" என்று எரிந்து விழுகிறார் கிழவர்.

கிழவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. உயில் எழுதுவதைப் பற்றி சிந்திக்கிறார். விட்டேத்தியாய் சுற்றிக் கொண்டிருக்கும் 'தன்' மகளைப் பற்றிய கவலை அவருக்கு. எங்கே சொத்து முழுவதையும் 'அவருடைய' மகளுக்கு எழுதி வைத்து விடுவாரோ, எங்கே தன் மகனுக்கு உதவ முடியாமற் போய் விடுமோ என்று தவிக்கும் நர்ஸ் ஒரு 'காரியம்' செய்கிறார்.

()

குறுந்தகடு சிக்கி நின்று விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துமளவிற்கு சில நிமிடங்கள் ப்ரீஸ் ஆகி நிற்கிற பிரேமுடன் துவங்குகிறது திரைப்படம். அங்கேயே படத்தின் நிதானத்திற்கு நம்மை தயார்ப்படுத்தி விடுகிறார் இயக்குநர்.

கறாராக தீர்மானிக்ப்பட்ட உடல்மொழிகள் மூலமும் முன்னுழைப்பு திட்டமிடல்களின் மூலமும் ஒரு காட்சியை எத்தனை அழுததமாக பார்வையாளனின் நெஞ்சில் பதிய வைக்க முடியும் என்பதற்கு உதாரணம் காட்டும் விதமாக இதில் பல காட்சிகள் உள்ளன்.

பென்ஷன் பணத்தை எடுத்துக் கொண்டு கிழவரின் க்ரெடிட் கார்டை உபயோகித்து மளிகைப் பொருட்களை மகனின் வீட்டுக்கு பயணிக்கிறார் நர்ஸ். அங்கே அவள் தேவைப்படவில்லை, அவள் கொண்டு வரும் பணம்தான் எதிர்பார்க்கப்பபடுகிறது' என்பதை மிக நுட்பமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறார் இயக்குநர். சோம்பேறித் தந்தையைப் போலவே மகனும் உருப்படியில்லாமல் போகிறான் என்பதற்கான குறியீட்டுக் காட்சியொன்று. நர்ஸூம் கிழவரின் மகளும் உரையாடல் காட்சி மிக அற்புதம். "கவலையடைந்த ஒரு மனைவியின் பாத்திரத்தை நீ மிக திறமையாகச் செய்கிறாய்?, வாழ்த்துகள்" என்று கிழவரின் மகள் கூறும் சினிக்கலான வசனங்களெல்லாம் எனக்கு எழுத்தாளர் ஆதவனை நினைவுப்படுத்தின.

நீதிக்கதை போல் எவ்வித தண்டனைகளுமில்லாமல் மிக இயல்பாக நிறைவு பெறுகிறது திரைப்படம். கேனஸ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் விருது பெற்றிருக்கிறது. 

தமிழ் பேப்பரில் வெளியானது. 

suresh kannan

Friday, December 16, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 15 டிசம்பர்

இன்று பார்க்க வாய்த்த இரண்டு திரைப்படங்களுமே அருமை. இரண்டாவது திரைப்படம் அருமையோ அருமை. இப்படி ஒரே ஒரு படம், தமிழில் வந்தால்... சரி வேண்டாம். விட்டு விடுவோம்.

உட்லண்ஸில் ஐந்தரை மணிக்கு அல்பேனிய திரைப்படமான Amnesty. சிம்பொனியில் ஐந்தே முக்காலுக்கு பிரெஞ்சு திரைப்படமான Heat Wave (Apres Le Sud). இதுவா, அதுவா என்று மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அல்பேனியாவே சிறப்பான திரைப்படம் என்று அரங்கத்தில் பொதுவான பேச்சு அடிபட்டது. ஆனால் நான் முன்பே சற்று ஹோம்ஒர்க் செய்திருந்ததால் பிரெஞ்சே சிறந்தது என்பதை ஒருமாதிரியாக யூகித்திருந்தேன். இம்மாதிரியான யூகங்கள் சமயத்தில் காலை வாரி விட்டு விடும். எனவேதான் அந்த குழப்பம். 'பத்து நிமிடங்கள் அல்பேனியாவை பார்ப்பேன், சரியில்லை என்று தோன்றினால் பிரெஞ்சுக்கு மாறி விடுவேன்' என்று நண்பர் பாஸ்கர் சக்தியிடம் கூறிக் கொண்டிருந்தேன். அப்படியாகவே அல்பேனியாவை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு எச்சரிக்க, பிரெஞ்சுக்கு பாய்ந்து சென்றேன். நான் உள்நுழையும் போது படத்தின் இயக்குநரான Jean-Jacques Jauffret படத்தை அறிமுகப்படுத்தி விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். 



மிக அற்புதமான நான்-லீனியர் திரைக்கதை கொண்ட படம். கதை என்று பெரியதாக ஒன்றுமில்லை.

கர்ப்பம் அடைந்த குற்றவுணர்வில் ஓர் இளம்பெண், தந்தையிடம் அடிபட்ட எரிச்சலில் ஊருக்குச் செல்ல துடிக்கும் அவளின் காதலன், தனது குண்டான உடம்பை குறைப்பதற்கான மனஉளைச்சலில் இருக்கும் இளம் பெண்ணின் அம்மா, எதற்காகவோ சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் குவிக்கும் பீத்தோவனின் இசைக்குறுந்தகட்டை திருடி அவமானப்படும் ரிடையர்டு கிழவர்...

இவர்கள் தொடர்பான சம்பவங்களை கலைடாஸ்கோப் பார்வை போல முன்னும் பின்னுமாக கலைத்து கலைத்துப் போட்டு சிலம்பாட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர். ஏற்கெனவே பார்த்த சம்பவத்தை, மறுபடியும் வேறு காமிரா கோணத்தில் பார்க்கும் போது நாமும் அந்த பாத்திரமாகவே மாறிவிடும் மாயாஜாலம் நடக்கிறது. பெண்ணிற்குத் தெரியாமல் மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் குண்டு அம்மா, உபாதை தாங்காத அவஸ்தையில் மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி உணவை விழுங்கும் காட்சியில் அவரது நடிப்பு அற்புதம். குண்டாக இருப்பவர்களின் பிரச்சினையையும் மனஉளைச்சலையும் உள்வாங்கிக் கொள்ள முடியாத சில் பார்வையாளர்கள் விவஸ்தையின்றி சிரித்துக் கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது.

படத்தின் சிறப்பான திரைக்கதை உத்திக்காகவே பார்க்கலாம்.


இரண்டாவது அர்ஜென்டினா /ஸ்பெயின் திரைப்படம். NO RETURN / SIN RETORNO. இது பற்றி முன்பே தீர்மானித்திருந்ததால் எவ்வித குழப்பமுமின்றி இதை தேர்வு செய்தேன்.

அற்புதமான சைக்காலஜிக்கல் திரில்லர். ஒரு சாலை விபத்து. அதைத் தொடர்ந்து ஒரு மரணம். இதை வைத்துக் கொண்டு இத்தனை அற்புதமான ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியுமா என்று பிரமிப்பே வந்து விட்டது. படம் எதிர்பார்க்கவே முடியாத யூகங்களில் முட்டுச் சந்து திருப்பங்கள் போல் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. 'குற்றமும் தண்டனையும்' என்று சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் நீதியமைப்பு எத்தனை தூரம் சரியானது என்கிற கேள்வியையும் சந்தேகத்தையும் படம் எழுப்புகிறது. என்றாலும் மனிதனுக்குள் பொதிந்திருக்கும் மனச்சாட்சி அவனுக்கான தண்டனையைத் தந்து விடுகிறது. ஊடகங்கள் வெறும் பரப்பிற்காக செயல்பட்டு எத்தனை தனிமனித வாழ்க்கைகளை பாழாக்குகிறது என்பதும் ஊடிழையாக வெளிப்படுகிறது.

அடுத்த முறை ஊடகங்களில் திரும்பத் திரும்ப  'குற்றவாளி' என்று அழுத்தமாக முத்திரை குத்தப்பட்டு வெளிப்படும் ஒருவரை, அவர் குற்றவாளிதானா என்று பொதுமனங்களில் கேள்வி எழுப்புவதில் இத்திரைப்படம் வெற்றி கண்டிருக்கிறது எனலாம். மிக அபாரமான திரைக்கதை. சமீபத்தில் நான் கண்ட திரைப்படங்களில் மிக அற்புதமான, உணாச்சிவசப்பட வைக்கக்கூடிய கிளைமாக்ஸ் கொண்டது இத்திரைப்படமே. சிக்கலான நேரங்களில் அகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது படம் முழுக்க வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. Leonardo Sbaraglia -வின் நடிப்பு இரண்டாவது பகுதியில் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தவற விடக்கூடாத திரைப்படம். 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது.

suresh kannan

Thursday, December 15, 2011

சென்னை – சர்வதேச திரைவிழா – 14 டிசம்பர் 2011

இந்த துவக்க நாளில் இரண்டு திரைப்படங்களை மாத்திரமே என்னால் காண முடிந்தது. சினிமாவில் மாத்திரம் ஆர்வமுள்ளவர்கள் துவக்க விழா அபத்தங்களை தவிர்த்து விட வேண்டும் என்பதுதான் அன்று எனக்கு கிடைத்த நீதி. அதைப் பற்றி பின்னால்.


பிலிம் சேம்பரில் மழைக்கு ஒதுங்கிய சோகையான கூட்டத்துடன் முதலில் பார்த்தது Varjoja paratiisissa என்கிற 1986 பின்லாந்து திரைப்படம். குப்பை அள்ளும் தொழிலாளியின் அகச்சிக்கலயும் காதலையும் பற்றியது. பின்லாந்தில் மருந்திற்குக் கூட யாரும் சிரிக்க மாட்டார்கள் என்பதை அன்றுதான்  அறிந்து கொண்டேன். 'போய் வருகிறேன்' என்பதைக் கூட 'தொலைஞ்சு போ நாயே' என்கிற தீவிர முக பாவத்துடன் படம் முழுவதும் இறுக்கமாகத்தான் சொல்கிறார்கள். இதை  பிளாக் காமெடி என்று எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்கிற வழக்கமாக எனக்கு ஏற்படுகிற சந்தேகம் அன்றும் ஏற்பட்டது. 'இந்த ஆபிஸ்ல எத்தனை வருஷமா குப்பை கொட்டறீங்க?' என்று கேட்கப்படக்கூடிய அந்தத் தொழிலாளியின் தனிமையில் வாழ்வில் இனிமையாக குறுக்கிடுகிறாள் சூப்பர் மார்க்கெட் பணிப்பெண் ஒருத்தி. இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பு இருந்தாலும் ஈகோவினால் தவிர்த்துக் கொள்ள முனைகிறார்கள். தமிழ்ச்சினிமா போலவே இறுதியில் காதல் வெல்கிறது. போகிறார்கள், வருகிறார்கள், வருகிறார்கள், போகிறார்கள். படம் முழுக்க இதுவே. இயக்குநர் Aki Kaurismäki-ன் வழக்கமான பாணி இது என்கிறார் கூட வந்திருந்த நண்பர் அக்னிபார்வை. படம் குப்பை என்று சொல்ல விடாமல் ஏதோ தடுக்கிறது. மீண்டும் நிதானமாக பார்க்க வேண்டும். 

இரண்டாவது பார்த்த பிரெஞ்சு படம் - The Kid with a Bike  இதற்கு நேர்மாறாக திருப்தியான அனுபவத்தைத் தந்தது. அற்புதமான, நிச்சயம் தவறவிடக்கூடாத படம். அன்பு என்பது சாஸ்வதமானது என்பதை மீண்டும் நிரூபிக்கும் படைப்பு. முட்களினால் உருவான ஒரு பூவைப் போன்ற ஓர் இளம் சிறுவனைச் சுற்றி இயங்குகிறது திரைப்படம். தன்னை நிராகரித்துச் சென்ற தந்தையை அது அறியாமல் தீவிரமாகத் தேடுகிறான் அந்தச் சிறுவன். இந்த முரட்டுத்தனமான தேடலில் தன்னை நேசிக்கும் சிகைத் தொழிலாளி பெண்ணொருத்தியின்  அன்பை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. இறுதியில் சுபம்.  

ஆரம்பித்த கணத்திலேயே கதைக்குள் நுழைந்து விடுகிறது படம். தந்தை ஏன் அந்தச் சிறுவனை நிராகரித்துச் சென்றான்? தாய் என்ன ஆனாள்? சிகைத் தொழிலாளி பெண் ஏன் அந்தச் சிறுவனை அப்படி நேசிக்கிறாள்... என்று அதற்கு முந்தைய தருணங்கள், நினைவோட்டங்கள் என்று எதுவுமே படத்தில் சொல்லப்படவேயில்லை. ஆனால் அழுத்தமான காட்சிகளின் மூலம் எதுவும் சொல்லாமலேயே நமக்கு எல்லாமே புரிகிறது. அபாரமான திரைக்கதை. அந்தச் சிறுவனுக்கு என்னாகுமோ என்று நமக்குள் பதைபதைப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் செய்வது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரமே பின்னணி இசை ஒலிக்கிறது. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே திரைப்படம் முடிந்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

ஒரு சிறந்த டிராமா திரைப்படத்தை எப்படி உருவாக்கலாம் என்பதற்கான அடிப்படை பால பாடங்கள் இதிலுள்ளது. இதையும் மீண்டுமொரு முறை நிதானமாக பார்க்க வேண்டும்.

()

இனி துவக்க விழா நிகழ்ச்சிகள் பற்றி..

வந்திருந்த அமைச்சர் முதல் அரங்கத்தின் வாட்ச்மேன் வரை முதலமைச்சர் தந்த 25 லட்சம் ரூக்கு பவ்யமாக நன்றி கூறிக் கொண்டேயிருந்தனர். அது என்னவாகப் போகிறது என்பதைப் பற்றி ஞாபகமாக யாரும் கூறவேயில்லை. லோக்கல் தமிழில் பார்த்திபன் பேசியதுதான் கூட்டத்திற்குப் பிடித்திருந்தது. 80 வருட தமிழ் சினி்மாவைப் பற்றி ஏதோ சொல்லப் போகிறோம் என்று பிலிம் காட்டி விட்டு... பெரும்பாலான கு்த்துப் பாடல்களின் பின்னணியில் ரெக்கார்டு டான்ஸ் போட்டதெலெலாம் ஓவர். (நான் பால்கனியில் அமர்ந்திருந்ததால் 'உன்னிப்பாக' ரசிக்க முடியாமற் போனது வேறு விஷயம்). தமிழ் சினிமாவில் மிருதுவான இசை வாத்தியங்களையே உபயோகிக்க மாட்டார்கள் என்பதுதான் அதன் வெளிப்பட்ட நீதி என்று வெளிநாட்டு பார்வையாளர்கள் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும்.

"ஊடகச்சுதந்திரத்தின் கழுத்தை அதிகார அமைப்பு நெறிக்கக்கூடாது' என்று இந்து ராம் பேசியமர்ந்த கணமே அதற்கு பொருத்தமாக 'செங்கடல்' திரைப்படம் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து லீனா மணிமேகலை குழுவினர் எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்ய அரங்கத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நாட்டாமை சரத்குமார் மிகத் திறமையாக இங்கும் "பசுபதி எட்றா வண்டியை" ரேஞ்சிற்கு சமாதானப்படுத்தினார். மேடையில் அமர்ந்திருந்த விஐபி பிரகஸ்பதிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டே போக நேரம் ஆகிக் கொண்டிருந்த டென்ஷன் எகிறியது. கலையாளுமை பவர் ஸ்டார் சீனிவாசன்தரிசனம் தந்ததுதான் இடையில் ஆறுதலளித்த ஒரே காமெடி.

தமிழ்த்திரைப்படங்கள் வரிசையில் "ஆரண்ய காண்டம்' போன்ற சிறந்த திரைப்படங்கள் இல்லாமல் 'கோ' "தூங்காநகரம்" போன்ற குப்பைகள் இடம் பெற்றிருந்தனின் மர்மம் என்னவென்று தெரியவில்லை. வீட்டுத்தனிமையில் திரைப்படம் பார்ப்பது ஒரு ருசி என்றால், இப்படியாக அபத்தங்களுக்கிடையில் திரைப்படம் பார்ப்பது இன்னொரு வகையான ருசியாகத்தான் இருக்கிறது.




suresh kannan

Tuesday, December 13, 2011

சர்வதேச திரைவிழா - ஒரு வார்ம் அப்




இந்த முறை சென்னையில் நிகழும் சர்வதேச திரைவிழாவிற்கு செல்லலாம் என்றிருக்கிறேன். 

கடந்த வருடங்களில் செல்லாமலிருந்தற்கு காரணம், வாங்கி வைத்திருக்கும் திரைப்பட டிவிடிகளையே இன்னும் பார்க்காமலிருக்கும் குற்றவுணர்வும் சோம்பேறித்தனமும். சில உபகாரணங்களும். ரூ.500/- தந்து அனுமதியட்டையை வாங்கி விட்டாலும் அது தொடர்பாக வரப்போகும் addon செலவுகளை நினைத்து. எனக்கு பொதுவாக ஆறு, ஏழு மணியாகி விட்டாலே கடுமையாக பசிக்க ஆரம்பித்து விடும்.  அந்த நேரத்தில் ஜெயமாலினி நடனமே என்றாலும் கூட மனதில் ஏறாது. இதனாலேயே எந்த நூல் விழாவிற்குச் செல்வதென்றாலும்  முன்னமே ஏதாவது சாப்பிட்டு விட்டுச் சென்று விடுவேன். அப்படி இல்லாமல் போனதால்தான் சமீபத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றிலிருந்து சீக்கிரமே கிளம்ப வேண்டியிருந்தது.

இந்த திரைவிழாவிலும் அதே பிரச்சினைதான். எனவே இந்த 9 நாட்களுக்கும் அப்படியாக உணவிற்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அது கூட ரோட்டோர டீக்கடை சமோசாவின் மூலம் முடித்துக் கொள்ளலாம். அதை விட பெரிய பிரச்சினை, அரங்கம் அரங்கமாக மாற வேண்டியதற்கான போக்குவரத்து. அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிர்ஷ்டவசமாக எனக்கு வண்டி ஓட்டத்தெரியாது. பேருந்திற்காக காத்திருந்தால் படம் முடிந்து எல்லோரும் கைதட்டும் நேரம் வந்து விடும். ஆட்டோவிற்கு செலவு செய்து மாளாது. 

இதை வாசிக்கும்  இருசக்கர வாகனம் வைத்திருக்கும் திரைவிழாவிற்கு கலந்து எந்தவொரு நண்பராவது இந்த உதவியை செய்தால் நன்றியுடையவனாயிருப்பேன். 


()

விழாவில் திரையிடவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலின் முதல் பகுதியை  இங்கு காணலாம். இந்தப் படங்களின் IMDB தர வரிசைப்பட்டியலின் தொகுப்பை இங்கு காணலாம். கோ, தூங்காநகரம் போன்ற மொக்கையான தமிழ்ப்படங்களையும்  சுமாரான இந்தியத் திரைப்படங்களையும் தவிர்த்து விட்டு குறிப்பாக இரான், எகிப்து திரைப்படங்களை முக்கியமாக காண உத்தேசம். இதில் A Separation (2011)  என்கிற இரானிய திரைப்படத்தை குறிப்பாக காண விருப்பம். அலுவலகத்திலிருந்து தப்பிக்கும் சாத்தியமுள்ள அன்று காணும் திரைப்படங்களைப் பற்றி அன்றிரவே எழுதவும் உத்தேசம். பார்க்கலாம்.

suresh kannan

Monday, December 12, 2011

சாருலதா ஊஞ்சல் ஷாட்



சத்யஜித்ரே இயக்கிய 'சாருலதா' திரைப்படத்தில் அற்புதமான ஒரு பாடல் காட்சி வருகிறது. மாதவி முகர்ஜி ஊஞ்சலில் ஆடிக் கொண்டே பாடும் அந்தப் பாடல் காட்சியி்ல் காமிரா ஊஞ்சலின் கூடவே எந்த வித ஜெர்க்கும் இல்லாமல் பயணிக்கும். திரை உருவாக்க நுட்பங்களில் அனுபவமில்லாவிட்டாலும் ஆர்வம் காரணமாக  அந்தக் காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள் என்று நிறைய முறை யோசி்த்திருக்கிறேன். (பாடலை மேற்கண்ட இணைப்பில் காணலாம்)

 இயக்குநர் சார்லஸின் வலைப்பதிவு இணையத்தில் அறிமுகமான பிறகு அங்கும் இந்தக் கேள்வியை முன்வைத்தேன். அது தொடர்பான விவாதம் இங்கே.

நேற்றைய இந்து நாளிதழில்தான் இதற்கான விடை கிடைத்தது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் திரைப் பதிப்பில் குறிப்பிட்ட காமிரா கோணங்களை உதாரணங்களுடன் விளக்கும் தொடர் ஒன்று வெளிவருகிறது. அந்த வரிசையில் இந்தப் பாடலை உதாரணம் காட்டி இது SNORRICAM வகை நுட்ப உத்தி என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். 

suresh kannan

Tuesday, December 06, 2011

சாரு - எக்ஸைல் - நூல் வெளியீட்டு விழா



காமராஜர் அரங்கம். மாலை சுமார் 6 மணி. அவ்வளவு பெரிய அரங்கத்தில் ஆங்காங்கே மக்கள் பரவலாக அமர்ந்திருக்க 'இச்சு இச்சு இச்சு கொடு' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, பரங்கிமலை ஜோதி வகையறா பிட்டு திரையரங்கங்களை நினைவுப்படுத்தினாலும் தமிழ் மேடைகளின் வழக்கமான அபத்த மரபுகளைக் கலைத்துக் கொண்டு ஒரு நூல் வெளியீட்டு விழா துவக்கத்திற்கு முன்பு 'வொய் திஸ் கொலைவெறி' போன்ற ஜாலியான பாடல்கள் ஒலித்தது எனக்கு பெரிய ஆறுதலைத் தந்தது உண்மை.

மேடையின் பின்னணி பேனரில் பெரிய அளவு சாரு, மெரூன் நிற சட்டையில் குறுந்தாடியில் புன்னகைத்துக் கொண்டிருக்க அதன் மினியேச்சர் போல் அதே போல மெரூன் நிற சட்டையணிந்த நிஜ சாரு கீழே உலவிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது இதே போல் எங்கோ ஏற்கெனவே பார்த்திருக்கிறோமே என்று நெருடியது. 'நாடோடிகள்' என்கிற திரைப்படத்தில் ஓர் அரசியல்வாதி வருவார். அவர் யாருக்காவது உதவி செய்கிற மறு கணமே அவரது ஆதரவாளர்கள் அந்தக் காட்சியைப் புகைப்படமாக எடுத்து கட்அவுட் வைத்து அசத்தி விடுவார்கள் . சாரு வாசகர் வட்டத்தினரும் தீயாய் வேலை செய்கிறார்கள் என்பதறிய மகிழ்ச்சி. சிறிது நேரத்திலேயே  கோட், சூட் அணிந்து CEO போல சாரு வந்தது, ஒரு MNC பிராடக்டின் அறிமுகப்படுத்தும் வணிக விழா போல் இருந்தது. தவறில்லை. ஜோல்னாப் பையும் கதர் சட்டையுமாகத்தான் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று யார் சொன்னது.

'உலகமயமாக்கத்தின் காலகட்டத்தில் இம்மாதிரியான மாற்றங்களைத்  தவிர்க்க முடியாது' என்று நண்பர் சிவராமன் கூறினாலும் இம்மாதிரியான கிம்மிக்கிஸ்களுக்கு இடையில்தான் தமிழ் இலக்கியம் ஜீவித்தாக வேண்டும் என்பது சற்றே பீதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

வாலி மொக்கைதான் போடுவார் என்று ஏற்கெனவே சர்வநிச்சயமாக எதிர்பார்த்திருந்ததால் ஏமாற்றமெதுவும் ஏற்படவில்லை. ஸ்ரீரங்கத்தில் நடத்திய கையெழுத்துப் பத்திரிகை முதல் சுயபுராணத்தை ஆரம்பித்தாலும் நாவலை 150 பக்கங்கள் வரை வாசித்திரு்ந்தாலும் நாவலின் மையத்தைப் பற்றி அவர் பேசவில்லை. ஆனால் இபாவும் சற்று மொக்கை போட்டதுதான் ஆச்சரியம். 'செக்ஸ் குற்றம் என்று நினைப்பவர்களுக்களுக்கானதல்ல இந்த நாவல். இது 'சாப்ட் போர்னோகிராபி அல்ல, ஹார்டு போர்னோகிராபி' என்றார் இ.பா.  'உச்சா' கூட போகத் தோன்றாமல் நாவலை ஏறக்குறைய முழுவதும் வாசித்திருந்த திடீர் பேச்சாளரான மதன்தான் நாவலைப் பற்றின அவுட்லைனை அடிக்கோடிட்டுப் பேசினார். இவர்கள் உரையாடின வரை வைத்துப் பார்த்தவரை சாருவின் தனிமனித அனுபவங்கள், வாசித்ததில் உருவியவை, வம்பு, கிசுகிசுக்கள் போன்றவைகளின் காக்டெயிலாகத்தான் 'எக்ஸைல்' இருக்கும் என்று தோன்றுகிறது. அது தவறா என்பதை நூலை வாசித்த பின்புதான் அறிய முடியும். ஆனால் எத்தனை பெரிய அறிவுஜீவிகளாயிருந்தாலும் மேடையேறின உடனே மிகுந்த பரவசத்துடன் 'விழா நாயகரை' பாராட்டி 'சர்வதேச படைப்பு' என்று உணர்ச்சிவசப்படும் தமிழ் மேடைகளின் மர்மம்தான் இன்னும் விளங்கவில்லை.

'தேகம்' ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த சூட்டின் விளைவாக இந்த நாவலை உடனே வாசிக்கவோ வாங்கவோ தோன்றவி்ல்லை. இத்தனைக்கும் அந்த நாவலை 'நான் இதுவரை எழுதினதிலேயே மிகச் சிறந்த எழுத்து' என்று தேகத்தைப் பற்றி சாருவே முன்னர் பிரகடனப்படுத்தியிருந்தாலும் நாவல் என்கிற பெயரில் அவர் செய்த பம்மாத்து அது என்பதுதான் என் அபிப்ராயம். எனவே பரவலான விமர்சனங்களுக்குப் பின்புதான் 'எக்ஸைலை' வாசிப்பது பற்றி முடிவு செய்ய முடியும்.

சாருவின் வாசகர் வட்டம் இந்த விழாவை மிகுந்த ஆர்வத்துடன் சிறப்பாக நடத்தியது பாராட்டத்தக்க விஷயம். அப்படியே சாருவையும் நன்றாக எழுதச் செய்யும் நெருக்கடியையும் அவர்கள் தரலாம். சாரு தன் உரையாடலில் தன்னுடைய பிரத்யேக பாணியில் பாசாங்குகளைக் களைந்த சில தருணங்களை வெளிப்படுத்தினார். முகமூடிகளையே அடையாளமாக்கிக் கொண்டிருக்கும் வழக்கமான சூழலில் இம்மாதிரியான சுவாரசியங்களே சாருவின் மீது இன்னும் நம்பிக்கையை இழக்கச் செய்யாமலிருக்கிறது. 

image courtesy: http://twitpic.com/photos/haranprasanna

தொடர்புடைய பதிவுகள்




suresh kannan

Saturday, December 03, 2011

பெண்குறிமையவாத திரைப்படம்


  கொலம்பியானா' என்கிற பிரெஞ்ச் - அமெரிக்க திரைப்படம் பார்த்தேன். வழக்கமான பழிவாங்கும் கதை. தன் கண்ணெதிரே பெற்றோரை கொலைசெய்யும் மாஃபியா கும்பலை தேடி பழி தீர்க்கும் ஒரு பெண்ணின் கதை. ஆணே பெரும்பாலும் பறந்து சாகசம் செய்யும் பெண் சரசம் மாத்திரமே செய்யும் ஆண்குறிமையவாத (எப்பூடி, இலக்கிய வாசனை வருதா) ஆக்சன் திரைப்படங்களில் இருந்து விலகி ஒரு பெண் (அதுவும் கருப்பினப் பெண்) சாகசம் செய்வதை பிரதானப்படுத்தியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். மற்றபடி அதே லாஜிக் இல்லாத கிளிஷேவான ஆக்சன் காட்சிகள்.  "அவ எலி மாதிரி எங்கிருந்தாவது புகுந்து வருவா" என்று வில்லனே சொல்வது போல் பாதாளக்குழிகளில் பதுங்கி பழி தீர்க்கிறாள் ஹீரோயின். FBI அதிகாரியாக வருபவரின் காட்சிகள் சிறிது நேரமே என்றாலும் (Lennie James) அந்த நபர் சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கமான திரைப்படமென்றாலும் சற்றே விறுவிறுப்பான திரைக்கதைக்காக பார்த்து வைக்கலாம்.


suresh kannan