முன்னமே அல்லாமல் விழா நாளன்று அரங்க வாசலிலேயே நுழைவுச் சீட்டுகளுக்காக பதிவு செய்து கொள்ளமுடியும் என்று உட்லண்ஸ் தியேட்டருக்கு மாலை 6.30 மணிக்கு சென்றவனுக்கு, மறுநாள் காலையில்தான் பதிவு செய்ய முடியும் என்ற தகவல் அதிர்ச்சி அளித்தது. எனினும் அமைச்சர் தயாநிதிமாறன் விழாவை துவக்கி வைத்து சென்றதும், பதிவு செய்யாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படக்கூடும் என்று விழா அமைப்பாளர் ஒருவர் சொன்னதில், அகதிகள் போல் சிலர் காத்திருந்தோம். தமிழக்த்தில் விழாவை தொடக்கி வைப்பதில் நல்லி குப்புசாமியோடு, தயாநிதிமாறன் போட்டி போடுகிறார் போலும். எனவே இவர் உளறிக் கொட்டுவதை கவனிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தில் இருந்து தப்பியதை நினைத்து ஆசுவாசமாக இருந்தது. காத்திருந்த நேரத்தில், பளபளப்பான சுகாசினி உள்ளே போக, எஸ்.வி.சேகர் கொடுத்த ஒரு சாமியார் படத்தை அர்ச்சனா பயபக்தியோடு கண்ணில் ஒற்றிக் கொண்டு காரில் ஏறி கிளம்பினதை கவனிக்க முடிந்தது.
()

சமகால ஸ்பானிய இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவரான பெட்ரோ அல்மோதோவர் இயக்கிய "VOLVER" (2006) (ஆங்கிலத்தில் Coming Back என்கிற அர்த்தம் வரும்படியான) ஸ்பெயின் நாட்டு படம் திரையிடப்பட்டது. மூன்று தலைமுறை பெண்களின் வாழ்க்கையை தொட்டுச் சென்றிருக்கும் இந்தப்படம் ஆணாதிக்க சமூகத்தின் நெருக்கடிகளை மிகுந்த மனஉறுதியுடன் தாங்குவதையும், நெருக்கடி எல்லை மீறிப் போகும் போது ஆவேசப்படுவதையும் மிகுந்த அழகியலுடனும், திறமையான திரைக்கதை உத்தியுடனும் சொல்கிறது.

சகோதரிகளான ராய்முண்டாவும் (Penelope Cruz) சோல்டாடும் (Lola Duenas), Raimunda-வின் மகளான பவுலாவும் (Yohana Cobo), தீ விபத்தில் கிராமத்தில் இறந்து போன பெற்றோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்வதில் படம் ஆரம்பிக்கிறது. பின்னர் அவர்களின் அத்தையை பார்க்கச் செல்கிறார்கள். மிகவும் வயதான நோய்வாய்ப்பட்ட அவர் யார் துணையுமின்றி தனியாக இருப்பதையும் சுவையான தின்பண்டங்கள் செய்து வைத்திருப்பதையும் வியக்கிறார்கள். ஆனால் அவரோ இறந்த போன இவர்களின் தாய்தான் அவரை கவனித்துக் கொள்வதாக சொல்கிறார். நோய் காரணமாக அவர் உளறுகிறார் என யூகித்துக் கொள்கின்றனர். ராய்முண்டா வீடு திரும்பும் போது வேலையை விட்டு வந்திருக்கிற கணவன் பீர் குடித்த படி சாக்கர் விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறான். இருவருக்கும் வாதம் ஏற்படுகிறது. மகள் பவுலாவை தொடைகளுக்கிடையில் உற்றுப்பார்ப்பது, குளிக்கும் போது எட்டிப் பார்த்து செல்வது என்று விநோதமாக நடந்து கொள்கிறான்.
ராய்முண்டா ஒரு நாள் பணிமுடிந்து திரும்பும் போது பேருந்து நிலையத்திலேயே தன் மகள் குற்ற உணர்ச்சியோடும் கலக்கத்தோடும் காத்திருப்பதை கவனிக்கிறாள். அவளை விசாரித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழையும் போது தன் கணவன் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைக்கிறாள். பவுலாவின் மீது பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியின் போது அவன் பவுலாவினால் குத்தப்பட்டு இறந்தான் என்பது தெரிகிறது. இந்தக் குற்றத்தை தான் சமாளித்துக் கொள்வதாக கூறும் ராய்முண்டா, பக்கத்தில் உள்ள விற்கப்படும் சூழலில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்பதனப் பெட்டியில் பிணத்தை மறைத்து வைக்கிறாள். இறந்தவன் பவுலாவின் உண்மையான தந்தை அல்ல எனவும் இதைப் பற்றி பின்னர் சொல்வதாகவும் கூறுகிறாள்.
இதற்கிடையில் அவளது கிராமத்து அத்தை இறந்து போன செய்தி சகோதரி சோல்டாட் மூலமாக தெரிய வருகிறது. ராய்முண்டா தன்னால் வரமுடியாது என்று உறுதியாக தெரிவித்துவிடுவதால், பிணங்களை கண்டாலே பயப்படக்கூடிய சோல்டாட் தான் மாத்திரம் அத்தையின் சாவிற்கு செல்கிறாள். அங்கே பக்கத்து வீட்டுக்காரியான அஜிஸ்டினா, (Blanca Portillo) அவளுக்கு அனுசரணையாக இருப்பதோடு, சோல்டாடின் இறந்து போன தாய் அவ்வப்போது கிராமத்துக் காரர்களின் கண்களில் தென்படுவதாக தெரிவிக்கிறாள். வீடு திரும்பும் சோல்டாட், தன் காரின் பின்பக்கத்திலிருந்து சத்தம் வருவதை கண்டு பயந்து போகிறாள். நோய்வாய்ப்பட்டிருந்த அத்தையை, இத்தனை நாள் கவனித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லும் அவளது தாய்தான் (Carmen Maura) காரில் ஒளிந்து வந்தததாகச் சொல்கிறாள். தான் நடத்தும் பியூட்டி பார்லருக்குள் தன் தாயை உதவியாளராக ரகசியமாக வைத்துக் கொள்கிறாள் சோல்டாட்.
கிராமத்தில் பக்கத்து வீட்டுக்காரியாக இருந்த அஜிஸ்டினா, கான்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் செல்லும் போது, அவள் தன் தாயைப் பற்றி "உயிருடன் இருக்கிறாளா, ஆவியாக அலைகிறாளா" என்கிற கேள்வியின் மூலம் குழப்பமடைகிறாள். அஜிஸ்டினாவின் தாய்க்கும் ராய்முண்டாவின் தகப்பனுக்கும் பாலுறவு தொடர்பு இருந்ததையும், ராய்முண்டாவின் பெற்றோர் தீ விபத்தில் இறந்து போன அதே நாளன்று அஜிஸ்டினாவின் தாயும் காணாமற் போன விநோததத்தைப் பற்றியும் விசாரிக்கிறாள். கணவனின் பிணத்தை ஒரு நதிக்கரையினில் புதைத்து விட்டு சகோதரியின் வீட்டிற்கு வரும் ராய்முண்டா, யாரோ அங்கே ரகசியமாக நடமாடுவதை கவனிக்கும் போது தன் தாய் அங்கே ஒளிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள்.
()
பின்னர் தாயும் மகளும் பேசிக் கொள்கிற உரையாடல்கள் மூலமே பார்வையாளர்களான நமக்கு பல விளக்கங்கள் கிடைக்கின்றன. ராய்முண்டாவின் தகப்பனே அவளை கற்பழித்து அதன் மூலம் பிறக்கிற குழந்தைதான் பவுலா. ஒரு வகையில் அவளுக்கு மகளும் சகோதரியுமாக என்று விநோதமான உறவுமுறையுடன் இருக்கிறாள் பவுலா. ராய்முண்டாவின் தகப்பன், பக்கத்து வீட்டுக்காரியான அஜிஸ்டினாவின் தாயுடனும் முறையான பாலுறவு தொடர்பை வைத்திருக்கிறான். இந்த விஷயங்களை ஒருசேர அறிந்து கொள்கிற ராய்முண்டாவின் தாய், இருவரும் தனியாக இருந்த நிலையில் தீ வைத்து கொளுத்தி விடுகிறாள். ஆனால் ஊரார் அவள்தான் இறந்து விட்டதாக நம்புகின்றனர். இதை சாதமாக்கிக் கொண்டு நோயாளி சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ நேரிடுகிறது. தகப்பனால் கற்பழிக்கப்பட்ட ராய்முண்டா அந்த சூழ்நிலையை வெறுத்து விலகி வாழ்ந்து வந்ததால் இதைப் பற்றி அறிந்து கொள்ள முடியாமற் போகிறது. கேன்சர் நோயாளியான அஜிஸ்டினாவிற்கு உதவி செய்ய முடிவெடுத்திருப்பதாக ராய்முண்டாவின் தாய் சொல்வதோடு படம் நிறைகிறது.
()
ராய்முண்டாவின் தாய், உயிரோடுதான் இருக்கிறாளா, ஆவியாக அலைகிறாளா என்பதை பூடகமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் அல்மோதோவர். மையக் கதாப்பாத்திரமான ராய்முண்டாவாக Penelope Cruz அருமையாக நடித்திருக்கிறார். ஒரு கொலை நிகழ்வான நெருக்கடியான நேரத்தில் அதை அற்புதமான எதிர்கொள்ளும் இவரது முகபாவங்கள் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. பிரேதத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அழைப்பு மணியடிக்கும் பக்கத்து ரெஸ்டாரண்ட் உரிமையாளர், ராய்முண்டாவின் கழுத்துப் பகுதியில் இருக்கும் ரத்தக்கறையைப் பற்றி விசாரிக்கும் போது "Woman's Trouble" என்று சமாளிக்கிறாள். உடலுறவுக்கு அழைக்கிற கணவனை புறக்கணிக்கும் போது, அவன் கரமைதுனத்தின் மூலம் தன்னை திருப்திபடுத்திக் கொள்கிறான். பிரேததத்தை மறைக்க உதவி செய்வதற்காக தன் செக்ஸ் தொழிலாளியான தோழியை அணுகி அவளுடைய இரவு சம்பாத்தியத்தை தான் தருவதாக சொல்லும் போது "என்னுடைய யோனியின் மீது உனக்கு விருப்பமிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்கிறாள் நகைச்சுவையாக.
இந்தப்படம் கானஸ் திரைப்பட விருது, ஐரோப்பிய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிருக்கும் இந்தப்படம் எனக்கு சுஜாதாவின் சிறுகதை ஒன்றை நினைவுப்படுத்துகிறது. தாயும் மகளும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் மூலம் அமைந்திருக்கும் அந்தச் சிறுகதை, கணவனால் கொடுமைப்படுத்தப்படுகிற மகளுக்கு மெல்லக் கொள்கிற வேதியியில் பொருள் ஒன்றை பரிந்துரைப்பதாக அமையும். ஏற்கெனவே தன் கணவனின் மீது அதை பிரயோகப்படுத்தியிருப்பதாக வெளிப்படும் அதிர்ச்சியான முடிவுடன் அந்தப் படைப்பு வெளியான போது பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.

பெட்ரோ அல்மோதோவர் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு கட்டுரை.