Monday, July 20, 2015

PIKU (2015) மல விசாரமும் மனித விசாரணையும்


 'ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது)'
எழுத்தாளர் சுஜாதா, தன்னுடைய எழுபதாவது பிறந்த நாளை நெருங்கும் போது  அந்த வயதுக்கேயுரிய உணர்வுகளுடன் எழுதிய அற்புதமான கட்டுரையின் ஒரு பகுதி இது. இதில் ஒரு திரைப்படத்திற்கான கதை இருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? இல்லை அல்லவா? ஆனால் இந்தி திரைப்பட இயக்குநர் Shoojit Sircar அதைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆம், விக்கி டோனர் என்றொரு திரைப்படத்தை எடுத்தாரல்லவா? அவரேதான். அவருடைய சமீபத்திய திரைப்படமான PIKU -வில் மலச்சிக்கலால் அவதிப்படும் எழுபது வயது முதியவர்தான் நாயகன். ஆச்சரியமாக இருக்கிறதா? 

மனித வாழ்வின் சில பிரத்யேகமான அன்றாட பிரச்சினைகளை ஒரு பகுதியாக அல்லது முழுத் திரைக்கதையாக வைத்து உருவாக்கப்படும் சில அயல் சினிமாக்களை பார்க்கும் போது, அட, இதுவெல்லாம் கூட ஒரு திரைப்படத்தின் கருக்களா, இப்படிக் கூட செய்யலாமா? ஏன் இந்தியத் திரைப்படங்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரே மாதிரியான ஸ்டீரியோடைப்பில் உழல்கின்றன? மக்களும் கூட ரசனை மாற்றம் ஏதுமில்லாமல் ஒரே மாதிரியான வணிக மசாலாவை வேறு வேறு வடிவில் வேறு வேறு நடிகர்களின் மூலம் சலிக்காமல் பார்த்துக் கொண்டாடுகிறார்களே என்று ஆதங்கமாகவே இருக்கும்.

சமீப காலங்களில் மலையாளத் திரைப்படங்களிலும் மிகச் சமீபமாக தமிழ்த் திரைப்படங்களிலும் புதிய அலை இயக்குநர்கள் புதுப்புதுப் பாணியில் படங்களை எடுத்து கலக்கத் துவங்கியிருக்கிறார்கள் அல்லவா? ஆச்சரியகரமாக இந்தியில் இந்த வகை மாற்றுத் திரைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பேயே உருவாகத் துவங்கி விட்டன. இன்னமும் சரியாகச் சொல்லப் போனால் பழைய ஒற்றைத் திரையரங்கங்கள் இடிக்கப்பட்டு  மல்டிபெக்ஸ் திரையரங்கங்கள் உருவாகத் துவங்கும் போது அதன் குறுகிய வட்ட பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு அதிக லாபமல்லாத சிறிய எதிர்பார்ப்புடன் அதற்கேற்ற பட்ஜெட்டுடன் சோதனை முயற்சிகள் வெளிவந்து அவற்றில் சில எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை ஈட்டித் தந்திருக்கின்றன. பிக்கு வும் அந்த வகையே.

***

அமிதாப் பச்சனை நினைத்தால்ஆச்சரியமாக இருக்கிறது. எளிமையாக தன் திரைவாழ்வை துவங்கி பிறகு பல ஆண்டுகளுக்கு சூப்பர் ஸ்டார் எனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து பின்பு கடனாளியாகி சில பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்த பிறகு தன் வயதையும் நிலையையும் உணர்ந்து அதற்கு ஏற்றாற் போன்ற பாத்திரங்களையும் திரைக்கதைகளையும் ஏற்கத் தயங்காத அந்த முதிர்ச்சியை எத்தனை பாராட்டினாலும் தகும். இத்திரைப்படத்தில் தன்னுடைய மலச்சிக்கல் உபாதையைப் பற்றியே எப்போதும் உரையாடிக் கொண்டு அது சார்ந்த சிடுசிடுப்புடனேயே எல்லோரிடமும் எரிச்சல்படும் எழுபது வயது முதியவராக நடித்திருக்கிறார். (ஏறத்தாழ அபிதாப்பின் உண்மையான வயதும் இதுவே). ஒரு காலத்திய சூப்பர் ஸ்டாரால் இப்படியொரு பாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும், அவ்வாறான திரைப்படங்கள் உருவாகக்கூடும், அதுவும் இவையெல்லாம் இந்தியாவில் நிகழும் என்பதே படு ஆச்சரியமாக இருக்கிறது. 

Cynical என்பதற்கு 'believing that people are motivated purely by self-interest; distrustful of human sincerity or integrity' என்றொரு வரையறையைச் சொல்கிறார்கள். இந்தக் குணாதிசயத்தை படத்தின் துவக்கப் புள்ளியிலிருந்து இறுதி வரைக்கும் மிக கச்சிதமாக பின்பற்றுகிறார் அமிதாப். ஒரு பிரத்யேக சிக்கலான கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அது எப்படியெல்லாம் தன் ஒழுங்கில் அல்லது அஒழுங்கிலிருந்து மீறாமல் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கெல்லாம் உதாரணமாக அமிதாப்பின் இந்த காரெக்ட்டரை எளிதாக உதாரணம் காட்டி விடலாம். போலவே தீபிகா படுகோன் இன்னொரு ஆச்சரியம். இந்தி வணிக சினிமாவில் பளபளப்பான அரங்குகளில் அதை விட அதிக பளபளப்பான உடைகளில் ஜிலுஜிலுப்பாக ஆடும் நாயகி, இத்தனை எளிமையான, ஆனால் கையாளத் தயங்குவதற்கு சிக்கலான பாத்திரத்தையெல்லாம் தேர்ந்தெடுப்பார் என்பதை யூகித்துக் கூட பார்க்க முடியவில்லை.  தாயை இழந்த காரணத்தினால் தந்தையின் நிழலிலேயே வளர்ந்த அவரின் மனப்பதிவுகளை தன்னிச்சையாக உள்ளுக்குள் படிய வைத்துக் கொண்டு ஏறத்தாழ அவரையே பிரதிபலிக்கும் ஒரு பெண். தீபிகா அசத்தியிருக்கிறார்.

இர்ஃபான் கான்.... ஓ... என்ன மாதிரியானதொரு நடிகன்? இந்தியாவில்தான் எத்தனை மாதிரியான விதவிதமான திறமைகள்?

டெல்லியில் வசித்தாலும் தங்களின் பூர்விக வங்காளித்தனத்தை விடாப்பிடியாமல் பிடித்துக் கொண்டிருக்கும் பாஸ்கோர் பானர்ஜியின் (பாஸ்கர் என்று எழுதி விடாதீர்கள்) குடும்பம். தந்தை மற்றும் மகளின் பிரத்யேகமான சிடுசிடுப்புத்தன்மைகளைக் கண்டு வேலையாட்களும் கால்டாக்சி டிரைவர்களும் பின்னங்கால் தெறிக்க பயந்து ஓடுகிறார்கள். 'My daughter is moody, like me. Also, she’s not virgin.” என்று தன் மகளிடம் உரையாட வருகிற இளைஞர்களிடம் அறிமுகப்படுத்தும் பாஸ்கோர் பானர்ஜி என்ன மாதிரியான தந்தை? தன்னைப் பராமரிப்பதற்காக அதீத சுயநலத்துடன் மகளின் திருமணத்தை தள்ளிப் போடும் பானர்ஜி வில்லனா? அல்லது சராசரி பெண்களைப் போலவே உடம்பு சார்ந்த தேவைகளுக்காக திருமணம் எனும் நிறுவனத்தில் விழும் Low IQ நபர்களைப் போல தன் மகளும் ஆகி விடக்கூடாது எனும் முற்போக்கு சிந்தனை சார்ந்த அக்கறையுள்ளவரா?

இப்படியொரு விநோதமான தந்தை மகள் கூட்டணியுடன் டெல்லியிலிருந்து கொல்கத்தா வரை சாலைவழிப் பயணத்தை மேற்கொண்டால் அவர்களுடன் செல்லும் நபருக்கு பைத்தியம் பிடிக்குமா, பிடிக்காதா? அப்படிப் போக நேரும் இர்ஃபான் அவர்களை, அவர்கள் தரும் விநோதமான பிரச்சினைகளையெல்லாம்  எவ்வாறு எதிர்கொள்கிறார்?

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, படம் உருவாகும் மூன்று பகுதிகளில் மூன்று விதமாக செயலாற்றுவதைக் கவனித்தேன். டெல்லி பெருநகரத்தின் பரபரப்பான வாழ்வியலை சட்சட்டென்று நகரும், மாறும், பதறும் (எடிட்டிங்க்குக்கும் ஒரு சபாஷ்) தருணங்களை சிறைப்பிடிக்கும் காமிரா, சாலைப் பயணத்தின் போதும் மேற்கு வங்கத்தின் நிதானமான பாரம்பரியான சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே பயணிப்பது ஆச்சரியம். அவ்வப்போது உறுத்தாத வகையில் மெலிதாக சிணுங்கிக் கொண்டே ஒலிக்கும் சித்தார் இசைதான் எத்தனை அழகு..

மனித உறவுகளில் நிகழும் போலித்தனங்கள், அதை சகித்துக் கொள்ள முடியாத சிடுக்குத்தனங்கள், இவற்றையெல்லாம் மீறி உறவின் அடிப்படையை முறித்துக் கொள்ள முடியாத நெகிழ்வூட்டும் அபூர்வமான தருணங்கள் என்று இத்திரைப்படம் மிகப்பூடமாக கையாண்டிருக்கும் உள்ளார்ந்த இழைகள்தான் எத்தனை உன்னதம்?

அடப் போங்கப்பா.. பொறாமையாக இருக்கிறது.


suresh kannan

Monday, July 13, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது




பெருநகரத்தின் இன்னொரு முகம்


இன்றைய தேதியில், ஒரு திரைப்படத்தை உருவாக்கும் சிரமங்களுக்கு ஈடான நெருக்கடியை அதனை சந்தைப்படுத்துவதற்கும், வெளியிடுவதற்கும் அடைய வேண்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். திரையரங்கம் கிடைக்காதது உள்ளிட்ட எத்தனையோ காரணங்களுக்காக பல சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் டிஜிட்டல் உருவில்  அப்படியே  பரிதாபமாக உறைந்து கிடக்கின்றன. அப்படியே அரங்குகள் கிடைத்தாலும் அந்தத் திரைப்படங்களுக்கு ஏற்படக்கூடும் அற்பாயுளின் ஆபத்தை முதலில் கடந்தாக வேண்டும். முதல் நாளிலேயே, ஏன் ஒரேயொரு திரையிடலேயே தன் தகுதியை நிரூபித்துக் கொண்டால்தான் வாய்மொழி வார்த்தையாக அது பரவி சில நாட்களாவது தொடர்ந்து இயங்கும். சமீபத்திய உதாரணம் 'காக்கா முட்டை'. ஸ்டார் நடிகர்களின்திரைப்படங்களைத் தவிர இதர திரைப்படங்களை தொடர்ச்சியான மூளைச்சலவை விளம்பரங்களின் மூலம் ஓட வைக்க முடியாது.

திரைப்படத் தொழில் நசிந்து கொண்டு வருவதாக தயாரிப்பாளர்கள் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் புற்றீசல்கள் போல நிறைய திரைப்படங்கள் வெளிவருவதற்கான அறிவிப்புகளும் தயாரிப்புகளும் வந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு முன்னணி நாளிதழின் சினிமாப்பக்கங்களைப் பார்த்தால் நட்சத்திர நடிகர்களின் திரைப்பட விளம்பரங்களுக்கு இடையில்  "யார்யா இவிய்ங்க" என்று யோசிக்க வைக்கும்அளவில் பக்கத்து வீட்டு இயல்பான முகங்களுடன் கூடிய சினிமா விளம்பரங்களை நிறைய காண முடிகிறது. அவற்றின் நடிகர்கள், இயக்குநர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது ; அத்திரைப்படங்கள் எப்போது வெளிவரும் என்பதும் நமக்குத் தெரியாது ; அவை வெளிவந்ததா, இல்லையா, ஓடினதா, இல்லையா என்று கூட தெரியாது. திடீரென்று அந்த திரைப்படத்தின் விளம்பரங்கள் மறைந்து அது போன்ற வேறு திரைப்படங்களின் விளம்பரங்கள் அந்த இடங்களில் நிறைந்திருக்கும்.

இம்மாதிரியான திரைப்படங்களுள் ஒன்று, 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'. வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் இத்திரைப்படம் கூட்டத்தில் மறைந்த போது, இம்மாதிரியான அபலைத் திரைப்படங்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் இவைகளை  தொடர்ந்து  விடாப்பிடியாக பார்த்து விடும் நண்பரொருவர், இத்திரைப்படத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டு 'கவனப்படுத்தப்பட வேண்டிய திரைப்படம்' என்றார். 'நாயகன் திரைப்படத்திற்கு பிறகு நான் பார்த்த சிறந்த திரைப்படம் இதுவே' என்று பாரதிராஜா ஒரு மேடையில் மிகையுற்சாகமாக முழங்கியதை இதன் பத்திரிகை விளம்பரங்களில் கண்டதும் ஞாபகமிருந்தது. மேலும் இதன் போஸ்டர்கள் இயல்பான அழகியல் உணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததும் நினைவில் வந்தது. எனவே இதை காலங் கடந்தும் தேடிப்பிடித்துப்  பார்த்தேன்.

***
பொருளீட்டுவதற்காகவும் இன்னபிற காரணங்களுக்காகவும் பெருநகரத்திற்குள் இடம் பெயர்பவர்கள் முதலில் சந்திக்கும் நெருக்கடியே வசிப்பிடம்தான். உறவினர் வீடுகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் துவக்கத்தில் தற்காலிகமாக தங்க முடியுமே தவிர அந்த ஏற்பாடு நீண்ட காலத்திற்கு சாத்தியப்படாது. உறவினர்களையும் குறைசொல்ல முடியாது. நகரம் அவர்களுக்குள் படிய வைத்து விடும் மனோபாவம் அப்படி. அது மனிதர்கள் தங்குவதற்கான சிறிய இடத்தை  மட்டும் அனுமதிப்பதைப் போலவே அவர்களின் மனத்தையும் அவ்வாறாகவே சுருக்கி விடுகிறது. எனவே நகரத்தினுள் வருபவர்கள் துவக்க தடுமாற்றங்களுக்குப் பிறகு நெரிசலான மேன்ஷன்களிலும் விடுதிகளிலும் ஒண்டிக் கொள்கிறார்கள்.

கிராமத்திலிருந்தும் சிறுநகரங்களிலிருந்தும் புலம் பெயரும் நபர்கள் வசிப்பிடத்திற்காக எதிர்கொள்ளும் அவலங்களை, நெருக்கடிகளை இத்திரைப்படத்தின் ஒரு பகுதி மிக நுட்பமாகவும் அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியுள்ளது. கிராமத்தின் வெளிகளில் தாரளமாக புழங்கிய அவர்கள் நகரத்தின் இண்டு இடுக்குகளில் சிக்கி அது பழகும் வரை மூச்சு திணறுவார்கள்.  ஒரு மனிதனின் வாழ்விற்கு மிக அவசியமான உணவு, உடை உறையுளில் முதலிரண்டை  நகரத்தில் எப்படியோ எளிமையாக சமாளித்துக் கொள்ள இயன்றாலும் கடைசி விஷயத்தை சம்பாதிப்பது அதிகச் சிரமமானதொன்று. நகரங்களில் தெருக்களிலும் பேருந்து நிலையங்களிலும் நினைத்தபடி படுத்துறங்க முடியாது. காவல்துறையினராலும் சமூக விரோதிகளாலும் தொல்லைகள் ஏற்படும்.

இவர்களின் உடனடி புகலிடமாக அமையக்கூடியது  எளிய செலவின் மூலம் சமாளிக்கக்கூடிய மேன்ஷன்கள்தான். ஆனால் இரண்டு நபர்கள் தங்கக்கூடிய இடத்தில் பத்து  நபர்களாவது அடைந்து கிடக்க வேண்டி வரும். மலம் நுரைத்துக் கிடக்கும் கழிவறையில் அமர ஜென் மனநிலை வேண்டும். உள்ளாடை காணாமற் போயிருந்தால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அதை அணிந்து போன சக அறைவாசியின் பழைய உள்ளாடையை முகம் சுளிக்காமல் அணிந்து கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும். இம்மாதிரியான மேன்ஷன்வாசிகளின் வாழ்வியல் அவலங்கள் பல தமிழ் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ அனைத்து உதவி இயக்குநர்களும் இந்த சூழலைக் கடந்து வருபவர்கள்தான் என்பதால்  அது திரையில் எதிரொலிப்பது இயல்புதான். பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' திரைப்படத்தின் இதை சற்று நுட்பமாகவே பதிவு செய்துள்ளது. இந்த சூழலை சகித்துக் கொள்ள இயலாதவர்கள், சற்று அதிகமாக சம்பாதிப்பவர்கள், ஒரு  ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்து அதைப் பகிர்ந்து தங்கிக் கொள்கிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக இவ்வாறான தனிநபர்களுக்கு வீடுகள் கிடைப்பது முன்பெல்லாம் மிக கடினம். உலகமயமாக்கத்தின் எதிரொலியாக மென்பொருள் நிறுவனங்களில் அதிகம் சம்பாதிக்கக்கூடிய இளைஞர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய கணிசமான வாடகைக்காகவே, வீட்டு உரிமையாளர்கள் அதற்கேற்ப தங்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் பொருளாதார சமநிலையின்மையை ஏற்படுத்தியதற்கு இந்த சூழலும் ஒரு காரணம். அதிக சதவீதத்துடன் ஏற்றப்பட்ட இந்தளவிற்கான வாடகையை தர முடியாத சாமான்யர்களுக்கு மேன்ஷன்கள்தான் கதி.

சினிமாவில் சாதிப்பது உள்ளிட்ட பல்வேறு கனவுகளுடன் நகரத்திற்குள் இடம் பெயர்ந்திருக்கும் சில இளைஞர்களின் வாழ்க்கை அனுபவங்களை, நெருக்கடிகளை, காமம் சார்ந்த தேடல்களை, நிறைவேறா ஏக்கங்களை இரண்டு மூன்று கிளைக்கதைகளாக இணைத்து சொல்ல முற்பட்டிருக்கிறது இத்திரைப்படம். ஆனால் இதுவேதான் படத்தின் மிகப் பெரிய பலவீனமே. இந்த இணைப்பு கச்சிதமாகவும் கோர்வையானதாகவும் அமையாமல் படத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தில் துண்டு துண்டாக சில அற்புதமான கணங்கள் உள்ளன. 'கதைக்குள் இருந்து கதையை வெளியேற்றுவதுதான் எனது எழுத்து பாணி' என்று குறிப்பிடுவார் எழுத்தாளர் சா.கந்தசாமி. அதாவது கதைகளை சுவாரசியமாக உருவாக்குவதற்காக அதில் வலிந்து திணிக்கப்படும் செயற்கைத்தனங்களை பெரும்பாலும் விலக்கி கூடுமானவரை அந்த இயல்புத்தனத்துடன் எழுத்தில் பதிவு செய்வது. இந்த திரைப்படத்திலும் அதைப் போன்றே 'சினிமாத்தனம்' அல்லாத தருணங்கள் உள்ளன. அந்தவொரு காரணத்திற்காகவே இத்திரைப்படம் கவனப்படுத்தப்படுவது அவசியமாகிறது.

தான் எழுதும் திரைக்கதையின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று விவேகானந்தரின் பொன்மொழியை அவ்வப்போது உத்வேகமாக நினைவுப்படுத்திக் கொண்டு அமரும் செல்ல பாண்டி, அதற்கான தனிமையமையாமல் அவதியுறுகிறான். (இந்த அவதிகளே படத்தின் முழு திரைக்கதையாக உருவாகியிருப்பதாக படத்தின் இறுதியில் வெளியாவது ஒரு எதிர்பார்த்த சுவாரசியம்). செல்போன் உரையாடல்களின் மூலம் பெண்களைக் கவர்ந்து அறைக்குள் வரவழைத்து பாலுறவு கொள்கிறான் கார்த்திக். அவனுக்கும் அதற்கான தனிமை தேவைப்படுகிறது.  ஊரில் அவனுடைய அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிந்து கிளம்புகிறவனுக்கு காமத்தை ருசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஊருக்குப் போவதை தவிர்த்து விட்டு அதற்கே முன்னுரிமை தருகிறான். பிறகு அவனுடைய அம்மா இறந்து போன தகவல் கிடைக்கும் போது அது தரும் குற்றவுணர்வில் கரைந்து அழுகிறான். அதற்கும் கூட ஒரு சினிமாப்பாடல்தான் உதவுகிறது.

பிறகு நின்று போகும் ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரியும் நாகராஜ், ஏதோ ஒரு உற்சாகமான மனநிலையில் ஊரிலிருக்கும் அண்ணன் மகனுக்கு சைக்கிள் வாங்கி வருவதாக தொலைபேசியில் வாக்களித்து விடுகிறான். தானே நண்பர்களிடம் ஒண்டிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் அது சாத்தியமாகாமல் போகும் போது அண்ணன் மகனை  எதிர்கொள்ள முடியாமல் ஒவ்வொரு சமயத்திலும் அவமானத்தால் கூனிக்குறுகுகிறான்; ஊருக்குப் போகாமல் தவிர்க்கிறான்.  'சித்தப்பாவிடம் சைக்கிள் கேட்காதே' என்று சிறுவனது அப்பா அவனை அடிக்கிறார். 'கேட்பேன்' என்று அடம்பிடிப்பான் சிறுவன். பின்பு 'இனிமே சைக்கிள் கேட்க மாட்டேன்' என்று பரிதாபமாக கூறி விட்டு ஓடிப் போவான். இந்தக் காட்சிக் கோர்வைகள் நன்றாக எழுதப்பட்ட ஒரு சுவாரசியமான  சிறுகதை போலவே பதிவாகியிருக்கிறது.  குடிப்பழக்கத்தால் மனைவியிடம் தொடர்ந்து அவமானப்பட்டு பிழைப்பதற்காக நகரத்திற்கு வரும் செல்லப்பாண்டியின் உறவினர் ஒருவர் மறுபடியும் தோற்ற மனிதராக ஊர் திரும்பி மீண்டும் அவமானப்படுகிறார். இப்படியாக சில இயல்பான மனிதர்களுடன் கூடிய கிளைக்கதைகள்.


இந்த கிளைக்கதைகளுள் மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் பதிவாகியிருப்பது செல்லப்பாண்டி வீடு கிடைக்காமல் அவதியுறும் பகுதிதான். நண்பர்கள் செய்யும் சச்சரவுகளால் பிழைகளால் அவன் ஒவ்வொரு முறையும் வீடு மாற நேரும் அவல நகைச்சுவை அதற்குரிய சுவாரசியத்துடன் இடம்பெறுகிறது. "மச்சான்.. ரூம்ல ஒரு பிரச்சினையாயிடுச்சு.. இன்னிக்கு ஒரு நாள் உன் ரூம்ல தங்கிக்கட்டுமா?" என்பதே இவர்களின் உரையாடலின் ஒரு பகுதியாக, ஏன் அந்த சமகால வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைகிறது. இந்த விஷயத்திலும் பணம் கடன் கேட்கும் விஷயத்திலும் ஒருவரையொருவர் இரக்கமேயின்றி தவிர்த்துக் கொள்கிறார்கள். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அவ்வாறு தவிர்க்க வைக்கின்றன. ஒருநாள் தங்கிக் கொள்ள வருகிறவன் இரண்டு ஆண்டுகளாக நகராமலிருப்பதும் போகிற போக்கில் ஒரு காட்சியில் நகைச்சுவையாக சொல்லப்படுகிறது.

ஓர் இரவு முழுவதும் உறங்குவதற்கு இடம் கிடைக்காமல் நள்ளிரவில் செல்ல பாண்டி அலையும் காட்சிகள் துன்பியல் கவிதை போலவே பதிவாகியுள்ளன. இயக்குநர் மருதுபாண்டி (இவர்தான் உண்மையான செல்லப்பாண்டி என்பதை எளிதாகவே யூகிக்க முடிகிறது) இலக்கிய ருசியறிந்தவராக இருக்கிறார். படம் துவங்கும் போது பல்வேறு கனவுகளுடன் நகரங்களை நோக்கி வருபவர்கள் தொடர்பாக அப்துல் ரகுமானின் கவிதையின் வரிகள் டைட்டில் கார்டின் பின்னணியில் ஒலிக்கின்றன. அதைப் போலவே, ஒரு சிக்கலான சூழலினால் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் தினமும் நள்ளிரவில் தனது அறைக்குச் சென்று உறங்குகிறான் செல்ல பாண்டி. அதற்காக அவர்கள் உறங்கும் வரை படிக்கட்டில் தவிப்போடு காத்திருக்கிறான். அப்போது பின்வரும் விக்ரமாதித்யனின் 'வீடு திரும்புதல்' கவிதையி் வரி, அவனது மன எதிரொலியாக மிகப் பொருத்தமாக பின்னணயில் ஒலிக்கிறது.
வீடென்பது இடமா / விரும்பும் மனமா / வீடென்றால், எல்லோருக்குமே அம்மா / ஊருக்குள் இருக்கிறது வீடு / வீட்டிற்குள் இருக்கிறார்கள் ப்ரியமானவர்கள் /  ப்ரியமானவர்களைத்தான்
தேடுகிறது உள்மனது / வீடு கிட்டத்தில் இருக்க வேண்டும் / வேண்டியவர்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் / வீடென்பது கனவு / வெளியென்பது எதார்த்தம் / வீடும் வெளியுமாய்த்தான்
விளங்குகிறது உலகம் / இங்கு எதற்காக வீடு திரும்ப வேண்டும் நாம்? / யார் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நம்மை?

இந்தக் கவிதையின் கடைசி வரி இவ்வாறாக புலம் பெயர்ந்து பிரம்மச்சாரிகளாகவே தனிமையில் உழல்பவர்களுக்கானது. நாஞ்சில் நாடனின் அற்புதமான நாவலான 'சதுரங்க குதிரையின்' பிரதான பாத்திரமான நாராயணன்,  மனது முழுக்க ஊர் நினைவுகளோடு புலம் பெயர்ந்து மும்பையில் பணிபுரிவான். திருமணம் ஆகாமலே அவனுடைய ஆண்டுகள் கடந்து கொண்டிருக்கும். அலுவலத்திலிருந்து வீட்டிற்கு திரும்பும் தொலைவைக் கடக்கும் பல சமயங்களில் 'ஏன் வீட்டுக்குப் போக வேண்டும்' என்று அவனுக்கு துயரம் சார்ந்த சலிப்பாகவே இருக்கும். இந்தக் கவிதை அவ்வாறானவர்களை மிக நுட்பமாக பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

செல்ல பாண்டிக்கும் வீட்டு உரிமையாளர் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் அல்லாத ஆனால் காதல் மாதிரியும் தோன்றும் அந்த விநோதமான, மெல்லிய  உறவு 'சினிமாத்தனமே' இல்லாமல் அத்தனை அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணும் அத்தனை இயல்பான தோற்றத்துடன் அற்புதமாக நடித்திருக்கிறார். 'பாலைவனச் சோலை' என்கிற திரைப்படத்தில் சந்திரசேகருக்கும் சுஹாசினிக்கும் ஏற்படும் பரஸ்பரம் சொல்லப்படாமலேயே உணர்த்தப்படுவது போன்ற 'மிக நுண்ணிய காதல்' நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரையில் சாத்தியப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா திரைக்கதையை முயன்று கொண்டேயிருக்கும் செல்லப்பாண்டியாக பாபி சிம்ஹா மிக அற்புதமாக நடித்திருக்கிறார். உறங்க இடமின்றி அலையும் காட்சிகளிலும் வீட்டு உரிமையாளர் பெண்ணிடம் மனதிலேயே வளரும் அந்த மெல்லிய காதலையும் நண்பர்களின் சச்சரவுகளை எதிர்கொள்ளும் காட்சிகளிலும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜிகர்தண்டாவின் மூலம் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ், இந்தப் படத்தை கவனிப்பதற்கு உதவியிருக்கிறது.

பெண்களுடன் நைச்சியமாக  பழகி உறவு கொள்பவனான கார்த்திக் அவ்வாறாக ஒரு பெண்ணை ஏமாற்ற முயலும் போது அவனுடைய நண்பர்கள் அவனுடைய சார்பில் உரையாடுவார்கள். பொதுவாக இம்மாதிரியான சித்தரிப்புகளின் போது அறம் சார்ந்து அவனுக்கு உபதேசிக்கிற நண்பர்கள் எவராவது அந்தக் காட்சியில் இயங்குவார்கள். ஆனால் நடைமுறை சார்ந்த இயல்பில் நண்பனின் பக்கம் தவறுதான் என்று நன்றாகத் தெரிந்திருந்தாலும் அவனைக் காப்பாற்றவே நண்பர்கள் முயல்வார்கள். அந்த மனோபாவத்தை அதன் இய்ல்பின் படியே  இயக்குநர் மிகச் சிறப்பாக பதிவாக்கியிருக்கிறார். சற்று தாமதமாகத்தான் தங்களின் தவறை உணர்ந்து அந்தப் பெண்ணிடம் அவர்கள் மன்னிப்பு கேட்கின்றனர்.

ஊரில் குடித்து சீரழிந்து மனைவியால் அவமானப்படும் செல்ல பாண்டியின் உறவினர் ஒருவர் (இயக்குநர் மருதுபாண்டி இந்தப் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்) நகரத்திற்கு வருவார். சகஅறைவாசிகளில் ஒருவர் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு வாடகை ஏதும் தர வேண்டாம் என்று முதலில் சொல்வார். ஆனால் பிறகு ஓர் அற்பக்காரணத்திற்காக அவரை நுட்பமாக பழிவாங்க முயல்வார். மனித மனதின் அந்தரங்கமான இருண்மைகள் எந்த நேரத்தில் எதற்காக வெளிப்படும் என்பதில்தான் நம் கீழ்மைகளைக் கடக்கும் சவாலே உள்ளது. இது போன்ற நுட்பமான வெளிப்பாடுகள் இத்திரைப்படத்தின் காண்பனுபவத்தை சுவாரசியமாக்குகிறது. இரண்டு ஆண்களுடன் காதல் அடிப்படையில் பழகும் ஆனால் அதில் ஒருவனுக்கு முன்னுரிமை தரும் ஒரு பெண்ணின் உரையாடல் மூலம் 'சமகால காதலின்' விநோதமான முரண்களையும் இயக்குநர் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். அதைப் போலவே சினிமாத்தனம் அல்லாத பல இயல்பான முகங்களுடன் கூடிய உதிரியான பாத்திரங்கள் தத்தம் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றன. செல்ல பாண்டியின் உறவினர் மனைவியாக நடித்திருக்கும் பெண் கையாலாகாத கணவனைத் தண்டிக்கும் அந்த சிறு காட்சியிலேயே அத்தனை அற்புதமாக நடித்திருக்கிறார்.

'எல்லோரிடமும் நிச்சயம் ஒரு நல்ல கதை இருக்கும்' என்பார் எழுத்தாளர் சுஜாதா. அதைப் போலவே கிராமம் சார்ந்தும் இடம் பெயர்ந்த நகரம் சார்ந்தும் தமக்குள்ள அனுபவங்களை இயக்குநர் நுட்பமான காட்சிகளுடனும் அழகியலுடன் பதிவாக்கியுள்ளார் என்று தோன்றுகிறது. துண்டு துண்டாக நிற்கும் இந்த தருணங்கள் முழுமையாகவும் கோர்வையான திரைக்கதையாகவும் அமைந்திருந்தால் தமிழில் இதுவொரு குறிப்பிடத்தகுந்த திரைப்படமாகியிருந்திருக்கும். 

அம்ருதா - ஜூன் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: அம்ருதா)

suresh kannan

Friday, July 10, 2015

காக்கா முட்டை - விதைக்கப்படும் 'பீட்சா' கனவுகள்


அயல் சினிமா டிவிடிக்களின் தாராளமான புழக்கத்தினால் சமகால தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு அனுகூலமும் நெருக்கடியும் ஒருசேர இருப்பதை உணர முடிகிறது. அவைகளிலிருந்து தூண்டுதல்களைப் பெறலாம் அல்லது தொடர்பேதும் இல்லாமல் அப்படியே துண்டு துண்டாக நகலெடுக்கலாம் அல்லது தமிழ் சினிமாவின் மசாலாவில் போட்டு வறுத்தெடுப்பதற்கு தோதான துண்டுகளை அவைகளில் இருந்து அறுத்து பொறுக்கியெடுத்துக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட வசதிகள் அனுகூலமாக இருக்கின்றன.

ஹாலிவுட் சினிமாக்களின்  உயர்நுட்ப மெனக்கெடல்களையும் உலக சினிமாக்களின் உன்னத தரத்தையும் பார்த்து பரவசப்படுகிற தமிழ் சினிமா பார்வையாளர்கள், இங்கும் அவைகளை எதிர்பார்க்கத் துவங்கி விட்ட பிறகு அந்த  நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்  ஈடு கொடுக்க முயல்வது இயக்குநர்களுக்கு நெருக்கடியாக உள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஸ்டார் நடிகர்களின் பிம்பங்களையும் பாமர ரசிகர்களின் அறியாமையையும் ரசனையற்ற சூழலையும் நம்பி அரைத்த மாவையே அரைக்கும் வணிகமும் ஒருபுறம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு இடையில் இரானிய சினிமாக்களின் எளிமையான அழகியலோடும் உள்ளார்ந்த அரசியல் விமர்சனத்தோடும் தமிழில் ஒரே ஒரு திரைப்படம் கூட வராதா என்கிற ஏக்கத்தை Children of Heaven, The Colour of Paradise, The White Balloon போன்றவை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றன. இயற்கையின் காலக்கடிகாரத்தின் படி குறிஞ்சி மலராவது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை பூக்கும் என்று உறுதியாக கூறி விட முடியும். ஆனால் தமிழில் உயர்தரமுள்ள திரைப்படம் வெளிவரும் அதிசயம் எப்போது நிகழும் என்பதை யூகித்து விடவே முடியாது.

அந்த நீண்ட கால பெருமூச்சைப் போக்கும் வகையிலும் ஆறுதல் அளிக்கும் வகையிலும் தமிழில் ஒரு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அது 'காக்கா முட்டை' உலக சினிமா என்பது கலாசார வெளிகளை கடந்து நிற்கிற, நுண்ணுணர்வு சார்ந்த பொது ரசனையின் மீதான தர அடையாளத்திற்காக சுட்டப்படுகிற கற்பிதச் சொல் என்றாலும் அந்த தரத்தின் அடையாளத்துடனும் அல்லது அவற்றை நெருங்கி வரும் சாயலுடனும் தமிழிலும் சினிமா உருவாகிற அற்புதம் எப்போதாவதுதான் நிகழும். பாலுமகேந்திராவின் 'வீடு', 'சந்தியா ராகம்', ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் - அதன் போதாமைகளையும் தாண்டி - 'காக்கா முட்டை'யை நிச்சயம் குறிப்பிடலாம்.அந்த அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை தருகிறது அத்திரைப்படம்.  தமிழ் சினிமாவின் மேற்குறிப்பிட்ட மாற்று முயற்சிகளோடு ஒப்பிடும் போது 'காக்கா முட்டை'யில் உள்ள  முக்கியமான வேறுபாடு என்னவெனில் இந்தப் படம் பொதுச்சமூகத்தில் அடைந்திருக்கும் வணிகரீதியான வெற்றியும் வரவேற்பும். மேலே குறிப்பிட்ட திரைப்படங்கள் கலைத்தன்மையோடு கூடிய படைப்புகளை அணுகும் குறுகிய பார்வையாளர் வட்டத்தை கடந்திருக்காத  சூழலில் 'காக்கா முட்டை' வெகுசன சமூகத்தின் மூலம் வணிக வெற்றியையும் அடைந்திருப்பது முக்கியமான விஷயம். உலக சினிமா நுகர்ச்சியின் பரவலாக்கமும் அறிமுகமுமான சமகால சூழல் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

***

சேரியில் வாழும் இரு சகோதர சிறுவர்கள், தான் விரும்பும் நடிகர் பரிந்துரைப்பதாலும், தொலைக்காட்சியின் பீட்சா விளம்பரத்தினாலும் உந்தப்பட்டு அதை ஒருமுறையாவது உண்ண வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். உயர் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மிக எளிதாக சாத்தியப்படும் இந்த விஷயம் அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுவர்களுக்கு மலையைத் தாண்ட வேண்டிய கனவாக, ஏக்கமாக மாறுகிறது. அந்தக் கனவை நோக்கிய சிறுவர்களின் பயணம்தான் இந்த திரைப்படத்தின் மையம். ஒரு பீட்சா சாப்பிடுவது அத்தனை கடினமா, அது குறித்து ஒரு திரைப்படமா என்று சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நாவலில் குய்யன் என்கிற பிச்சைக்காரனுக்கு பருப்பு, பாயசத்துடன் ஒரு முழு சாப்பாடு சாப்பிடுவதென்பதுதான் வாழ்நாள் கனவாக இருக்கும். அவனது தீராத ஆவலைப் பார்த்து விட்டு ஒருமுறை சக பிச்சைக்காரர்கள் இணைந்து காசு போட்டு அவனுடைய நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். அவன் கனவிலும் கூட அந்த ருசியை சப்புக் கொட்டி நினைவுகூரும் வரியுடன்தான் அந்த நாவல் முடியும். வாழ்வின் அத்தனை அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகிருக்கிற அதையும் தாண்டி மேல்நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்களால் இது போன்ற பிரச்சினையின் உக்கிரத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இந்த திரைப்படம் பொதுவாக குழந்தைகளுக்கான திரைப்படமாக அறியப்பட்டாலும் அந்தப் பிரிவிலான தேசிய விருதைப் பெற்றிருந்தாலும்  கடுமையான அரசியல் சார்ந்த உள்ளார்ந்த விமர்சனங்களும், பகடிகளும், சில கிளைக்கதைகளும்  இதன் மையத்துடன் உறுத்தாமல் கலந்துள்ளன. தொலைக்காட்சியின் கவர்ச்சிகரமான மூளைச்சலவை விளம்பரங்களின் மூலம் குழந்தைகளின் மனதில் விதைக்கப்படும் நுகர்வுக்கலாசார வெறி, இதற்கு துணை புரியும் நட்சத்திர பிம்பங்கள், இயற்கை வளத்தை அழிப்பதின் மூலம் நுழையும் பன்னாட்டு வர்த்தகம், நிலக்கரி ஊழல், மக்களிடமுள்ள சினிமா மோகத்தை கச்சிதமாக  பயன்படுத்திக் கொள்ளும் அரசியல், அடிப்படைத் தேவைகளை விட ஆடம்பர பொருட்களை இலவசமாக தந்து அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் தந்திரம், சிறியு குற்ற சம்பவத்தை சுட்டிக் காட்டும் அறச்சீற்ற பாவனையில் அதை  ஊதிப் பெருக்கி தங்களின் செய்திப் பசிக்கு பயன்படுத்திக் கொள்ளும் ஊடகங்கள், அந்தப் பிரச்சினையை மையப்படுத்தி தங்களின் பண வேட்டையை நிகழ்த்தும் அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள், அதிகார அமைப்புகள், உதிரிக் குற்றவாளிகள் என பல்வேறு உள்ளிழைகள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. திரைமொழியின் இலக்கணங்களோடு பொருட்பொதிந்த காமிரா கோணங்களோடு காட்சியமைக்கும் இயக்குநராக மணிகண்டன் தோன்றியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

சிறுவர்கள் பீட்சாவை அடைய நினைப்பது குறியீட்டு அர்த்தத்திலான, ஒட்டு மொத்த மானுட குல தொடர் இயக்கத்தின் சுழற்சி அடையாளம்தான். இயற்கை வளத்திற்கு உரிமை கொண்டாட நினைக்கும் நிலவுடமைச் சமுதாயமாக மானுட குலம் பரிணமித்த பிறகு அதுசார்ந்த பிரிவுகளும் பிரச்சினைகளும் மோதல்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. சமூகத்தின் படிநிலைகளில் உள்ள குழுக்கள் தங்களின் மேலேயுள்ள குழுவை அடைவதையே தங்களின் வாழ்நாள் நோக்கமாக, கனவாக ஆக்கிக் கொள்கிறார்கள். எனவே சாத்தியமான எல்லைக்குள் அது சார்ந்த மேட்டிமை அடையாளங்களோடு தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். சாலையோரத்தில் வசிப்பனுக்கு வாடகை வீட்டில் வசிப்பது கனவாக இருக்கிறது, வாடகை வீட்டில் வசிக்கும் கீழ்நடுத்தர வர்க்க மனிதனுக்கு சொந்த வீட்டைக் கட்டிக் கொள்வது கனவாக இருக்கிறது. சொந்த வீட்டில் இருக்கும் உயர்நடுத்தர வர்க்க நபருக்கு செல்வந்தர்களின் வாழ்வுமுறையும் அதுசார்ந்த ஆடம்பரங்களும் கனவாக இருக்கிறது. எனவே தங்களின் கனவு சார்ந்த வேட்டையை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். உலகமயமாக்கலுக்குப் பிறகு இது போன்ற ஆசைகளும் அது சார்ந்த அழுத்தங்களும் கூடிக் கொண்டே செல்கின்றன.

இதில் சிறுவன் பீட்சா சாப்பிட நினைப்பது அவனுடைய உடல் சார்ந்த பசிக்காக அல்ல. அந்த பிம்பத்தின் கவர்ச்சி  சார்ந்த ஏக்கம் அவனுடைய கனவுகளுள் பிரதானமான ஒன்றாக உருவெடுக்கிறது. அவனுக்குப் பிடித்த நடிகர் மூலமாகவும் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாகவும் அந்த கனவிற்கான விதை அவனுக்குள் ஆழமாக விதைக்கப்படுகிறது. அந்த கனவிற்கு முந்தைய காட்சிகளில் அவன் ஒரு செல்போனிற்காக ஏங்கியபடியே இருக்கிறான். தந்தை சிறையில் இருக்கும் துயரத்தின் பிரக்ஞை ஏதும் இல்லாமல் 'வரும் போது செல்போன் வாங்கிட்டு வரியா?" என்று கேட்கிறான். "எனக்கு அப்பா வேணாம். பீட்சாதான் வேணும்" என்று சோற்றுத் தட்டை தள்ளிவிட்டு அவன் முரண்டு பிடிக்குமளவிற்கு அவனுடைய ஆடம்பரக் கனவு அவனை முழுவதுமாக ஆக்ரமிக்கிறது. பல சிரமங்களுக்குப் பிறகு அந்தக் கனவை அவன் யதார்த்தத்தில் அடையும் போது 'இவ்வளவுதானா?' என்று தோன்றிவிடுகிறது. சில காலத்திற்குப் பிறகு அவன் இன்னொரு கனவைத் துரத்த ஆரம்பித்துக் கொண்டிருப்பான். உலகத்தின் பேரியக்கம் அவசியமாகவோ அல்லது அவசியமற்ற வகையிலோ தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதின் ஒரு துளிதான் இந்த 'பீட்சா கனவு'.

உலகமயமாக்கல் நிலைக்குப் பிறகு இந்தக் கனவுகள் பல்வேறு விதமாக பெருகி விட்டிருக்கின்றன. பெற்றோர் ஐபோன் வாங்கித்தராததற்காக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடவும் துணிகின்றனர். போதைப் பொருட்களை உபயோகித்து பழகி விட்ட ஒருவன் அது கிடைக்காத வெறியில் அதற்காக எதையும் செய்யும் நிலையிலேயே இன்றைய நுகர்வோர்கள் இருக்கின்றனர். வாழ்வின் அடிப்படைக்குத் தேவையற்ற அநாவசியமான ஆடம்பரங்களை அடைவதற்கான கனவுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள், அதை நோக்கி பயணித்தபடியே இருக்கிறார்கள். அது அவசியமானதா, உடலுக்கோ மனதிற்கோ ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதா என்கிற எந்தச் சிந்தனையையும் ஏற்படுத்த விடாதவாறு பன்னாட்டு வர்த்தகர்கள் உருவாக்கும் நுகர்வுக் கலாசார வெறி அவர்களை ஆக்ரமித்திருக்கிறது.

***

குழந்தைகள் மனதில் விதைக்கப்படும் இந்த  நுகர்வுக்கலாசார வெறியின் அபாயத்தை அழுத்தமாக தமிழ் சினிமாவில் பதிவு செய்த வகையில் 'தங்க மீன்கள்' திரைப்படத்தின் ஒரு பகுதியை 'காக்கா முட்டை'யின் ஒரு முன்னோடி முயற்சியாக கருத முடியும். தமிழ் சமூகத்தில், உலகமயமாக்கம் ஏற்படுத்தும் விளைவுகளை, பொருளாதார சமநிலையின்மையை தமது முதல் திரைப்படத்தில் (கற்றது தமிழ்) கையாண்ட இயக்குநர் ராம், தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளின் மனதில் விளைவிக்கும் தாக்கத்தை தமது இரண்டாவது திரைப்படத்தின் ஒரு பகுதியாக (தங்க மீன்கள்) கையாண்டிருந்தார். உண்மையில் சொல்லப் போனால், இந்த விஷயத்தின் ஆபத்தை  'காக்கா முட்டை'யை விட 'தங்க மீன்கள்" மிகுந்த கலைத்தன்மையுடனும் அழுத்தமாகவும் பதிவு செய்திருந்தது. ஆனால் அத்திரைப்படத்தில் உள்ள பிரச்சினை என்னவெனில் பல சமகாலத்திய சமூகப் பிரச்சினைகளை ஒரே திரைப்படத்தில் சொல்ல முயன்று பார்வையாளர்களை குழப்பியதுதான்.

ஆனால் காக்கா முட்டை' திரைப்படமும் மையத்துடன் தொடர்புடைய சில கிளைக்கதைகளைக் கொண்டதுதான் என்றாலும் நேர்க்கோட்டு கதைச் சொல்லாடல் முறையில் பிரதானமாக சிறுவர்களுடனேயே பயணித்து அவர்களின் மொழியிலேயே உரையாடிய எளிமையின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்ததே இதன் வெற்றியின் காரணம். சிறுவர்கள் சார்ந்த சினிமா எனும் போது அது அனைத்து பிரிவனரின் அபிமானத்தைப் பெறுவது இயல்புதான். பொதுவாக தமிழில் குழந்தைகள் சினிமா என்றாலே அவர்கள் துடுக்குத்தனமாக பெரியவர்களின் உலகை பாவனை செய்வது என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு மாறாக யதார்த்தமான சிறுவர்களின் அகவுலகுப் பயணத்தை அதன் நோக்கிலேயெ உண்மையோடு பதிவு செய்ததால் 'காக்கா முட்டை' கவனத்துக்குரிய, பாராட்டப்பட வேண்டிய திரைப்படமாகிறது.

சேரி சிறுவர்களின் ஏழ்மையான சூழல், தந்தையை சிறையிலிருந்து மீட்க வேண்டிய துயரம், சிறுவர்களின் பீட்சா ஏக்கம், அது சார்ந்த பயணம், அதற்கான தவறுகள், பாட்டியின் மரணம், தாயின் தனிமை மற்றும் தத்தளிப்பு .. என்று பல விஷயங்கள் மெலொடிராமாவாக அல்லாமல் மிக இயல்பாக போகிற போக்கில் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்டாலும் கூட அதன் இடைவெளியை நிரப்பி பார்வையாளர்களால் அதன் ஆழத்தை உணர முடிவதே இயக்குநரின் திறமைக்குச் சான்று. ரேஷனில் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றிற்கு இரண்டாக எளிதில் கிடைத்தாலும் அடிப்படைத் தேவையான அரிசி அடுத்த வாரம்தான் கிடைக்கும் என்கிற வசனம், கவனக்குறைவாக இருந்தால் ஒரு நொடியில் தவறவிடக்கூடிய தன்மையின் அலட்சியத்தைக் கொண்டிருந்தாலும் அதில் உள்ள அரசியல் விமர்சனத்தை,  ஆழமான அபத்தத்தை பார்வையாளர்களால் எளிதில் உணர முடிகிறது. பீட்சா கடையில் சிறுவன் அடிவாங்கிய சம்பவத்தை வைத்து சில்லறை ரவுடியொருவன் சம்பாதிக்க முயல்வான். Night Crawler என்றொரு அமெரிக்கத் திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம் பெற்றது. இது போன்ற சிறிய அளவிலான குற்ற சம்பவங்களை வீடியோவாக எடுத்து தொலைக்காட்சிக்கு விற்றுப் பணம் செய்ய முடியும் என்பதை கண்டுகொள்வான் அதன் நாயகன். அதன் பின்னால் பெரும் வணிகச் சந்தை இருக்கும். இவற்றின் மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்களிமிருந்து உணர்வு ரீதியிலான சுரண்டலையும் பரபரப்பையும் ஊடகங்கள் நிகழ்த்தும். சமயங்களில் சம்பவங்கள் நிகழாமல் ஊடகங்களால் 'உருவாக்கப்படும்'. ஒரு நிலையில் தன்னுடைய உதவியாளன் விபத்தில் சிக்கி மரணமடைவதைக் கூட வீடியோ எடுத்து விற்குமளவிற்கு வணிக வெறி நாயகனின் கண்களை மறைக்கும்.

நம்முடைய ஊடகங்களும் இது போன்ற செய்திப்பசியிலும் வணிக நோக்த்திலும் இயங்குகின்றன என்பதையும் மிக நுட்பமாக நிறுவியுள்ளார் இயக்குநர். தொலைக்காட்சி செய்தியின் மூலம் பரபரப்பான தலைப்பிற்குச் சொந்தமாகி விட்ட அந்தச் சிறுவர்களை ஊரே தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு சமயத்தில் அவர்கள் செய்தியை பதிவு கொண்டிருக்கும் காமிராவை குறுக்கிட்டு நடந்து செல்வார்கள். அவர்களை அடையாளம் தெரியாத செய்தியாளர்கள் பதறி அவர்களை விலகி காமிராவின் பின்னால் நடக்கச் சொல்வார்கள். செய்தியின் உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையையும் கவனிக்காமல் அல்லது கவனிக்க விரும்பாமல் ஓரமாகத் தள்ளி விட்டு அவற்றை பரபரப்பாக்குவதில்தான் செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன என்பதை சில விநாடிகளில் கடந்து விடும் ஒரு காட்சியின் மூலம் அழுத்தமாக பதிவு செய்கிறார் இயக்குநர். இது போன்று இத்திரைப்படத்தில் பல உதாரணங்களை கூறமுடியும். ஏற்கெனவே குறிப்பிட்ட படி காட்சிகளின் பின்னணிகளையும் கோணங்களையும் பொருட்பொதிந்த விதத்தில் இயக்குநர் உபயோகித்திருப்பது அவருடைய கச்சிதமான திட்டமிடலைக் காட்டுகிறது.

ஏறத்தாழ நியோ ரியலிச பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் அசலான பின்னணியும் அங்கிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களும் காட்சிகளை உயிர்ப்புடன் மீட்டெடுக்கிறார்கள். இரண்டு சிறுவர்களின் இயல்பான உடல்மொழியும், சென்னையின் வட்டார வழக்கும். குறிப்பாக இளைய சிறுவனின் முகபாவங்கள் அதன் வெள்ளந்திதனத்துடன் அத்தனை அற்புதமாக பதிவாகியுள்ளது. பாட்டியாக நடித்தவரின் பங்களிப்பும் சிறப்பு.  இளம் நடிகையாக இருந்தாலும் இரண்டு பிள்ளைக்கு தாயாக நடிக்க முன்வந்த ஐஸ்வர்யா, அந்தப் பகுதியின் அசலான இல்லத்தரசியின் உடல்மொழியை அற்புதமாக எதிரொலிக்கிறார்.

சமீபத்தில் மறைந்த எடிட்டர் கிஷோர் இதன் படத்தொகுப்பை சர்வதேச தர திரைப்படங்களின் அடையாளங்களோடு தொகுத்துள்ளார். ஒரு நல்ல சிறுகதையின் முடிவைப் போல ஒரு காட்சிக் கோர்வையின் முடிவு சிறிய அளவிற்கான கச்சிதமான தருணத்தில் துண்டிக்கப்பட்டு அடுத்த காட்சிக்கோர்வையோடு மிக இலகுவாக பொருந்தி தொடர்கிறது. எந்த அளவிற்கு மெளனத்தை கடைப்பிடிக்கிறதோ, அதுவே சிறந்த பின்னணி இசை என்பார்கள். ஒரு காட்சியின் போதாமையை இட்டு நிரப்ப அல்லது சிறந்த காட்சியை அடிக்கோடிட்டு  உயர்த்தி கவனப்படுத்துவதற்கான தருணங்களில் மட்டுமே பின்னணி இசை தேவைப்படும் என்பார்கள். மாண்டேஜ் காட்சிகளுக்கானது என்றாலும் பாடல்கள் திணிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் வழக்கமான தமிழ் சினிமாக்கள் போல் அல்லாமல் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு பல காட்சிகள் அதன் இயற்கையான சப்தங்களோடு பதிவாகியிருந்தாலும் சில சமயங்களில் தேவையற்ற பின்னணியிசை கூடுதலாக ஒலித்து எரிச்சல் ஏற்படுத்துவதை 
தவிர்த்திருக்கலாம். இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் இருந்திருப்பதால், எண்ணப் பரிமாற்றங்களின் சிக்கலும் சேதமும் இன்றி  காட்சிகளை அதன் உண்மையான உணர்வுகளோடு பதிவாக்கியிருக்கிறார்.


இத்திரைப்படத்தைப் பற்றி மேலே அதன் போதாமைகளுடன் கூடிய சிறந்த திரைப்படம் என்றெழுதியிருப்பதை கவனித்திருக்கலாம். அப்படியென்ன போதாமைகள்? இதுவரையான தமிழ் சினிமாக்களோடு ஒப்பிடும் போது 'காக்கா முட்டை' முற்றிலும் மாறுபட்ட திரைப்படம், கவனப்படுத்தப்பட வேண்டிய திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லையென்றாலும் சர்வதேச தரம், கிளாசிக் சினிமாக்கள் என்று என்று மதிப்பிடப்படுகிற, கருதப்படுகிற அளவுகோலின் படி இதில் பாத்திரங்களின், சம்பவங்களின் வடிவமைப்பில் உள்ள தொடர்ச்சி்யின்மைகள், பிசிறுகள், தர்க்கப்பிழைகள் போன்றவை உள்ளதாகப் படுகிறது.

"மசாலா சினிமாக்களே ஆதிக்கம் செய்யும் தமிழ் சூழலில் அபூர்வமாக இப்போதுதான் ஒரு நல்ல சினிமா 'குழந்தையின் மழலை நடையோடு' வந்து கொண்டிருக்கிறது. உங்கள் மேதாவித்தனங்களைக் காட்ட இதில் குறைகளைக் காண வேண்டுமா, இதுவே ஓர் அயல்மொழித் திரைப்படம் என்றால் கொண்டாடித் தீர்த்திருப்பீர்கள் அல்லவா?" என்று ஒரு நண்பர் கேட்டார். "அப்படியல்ல நண்பரே. ஒரு திரைப்படத்தின் சிறப்புகளைக் கொண்டாடும் அதே நேரத்தில், அது நம்முடைய பிரதேசத்தைச் சார்ந்தது என்பதற்காக அதன் போதாமைகளை மழுப்புவது அறிவார்ந்த செயல் ஆகாது. சர்வதேச தரத்திற்கு போட்டி போட வேண்டுமென்றால் அது சார்ந்த தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் தேசம் சார்ந்த கற்பித நேசங்கள் என்னிடம் கிடையாது. எல்லா மொழிகளிலும் தேசங்களிலும் ஒருபுறம் வணிகத் திரைப்படங்களும் அதன் இணைக் கோடாக மாற்று முயற்சிகள் இன்னொரு புறமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதில் நாம் கொண்டாடுவது அதன் சிறந்த திரைப்படங்களை மட்டுமே. இரானிலிருந்து வெளிவந்த காரணத்திற்காகவே ஒரு மோசமான திரைப்படத்தை யாரும் கொண்டாடுவதில்லை.  1916-ல் வெளிவந்த மெளன திரைப்படமான 'கீசக வதத்தை' முதல் தமிழ் திரைப்படமாகக் கொண்டாலும் கூட தமிழ் சினிமாவின் வயது ஏறக்குறைய நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தனை வருடம் கடந்தும் அது தவழும் நடையில் தத்திக் கொண்டிருந்தால் அதன் அடையாளம் மழலை அல்ல, பக்கவாதம்" என்று அவரிடம் விளக்கம் கூற வேண்டியிருந்தது.

கலைத்தன்மையுடன் கூடிய மாற்று சினிமா முயற்சிகள் என்றாலே அது சலிப்பேற்றுவது போல மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் என்கிற கற்பனையான வெறுப்பு, வணிக நோக்குத் திரைப்படங்களை மட்டும் பார்க்கிறவர்களுக்கு இருக்கும். இதையே குறிப்பிட்டு கிண்டலடிப்பார்கள்; புரியாமை ஏற்படுத்தும் தாழ்வுணர்வு காரணமாக அலட்சியப்படுத்த முயல்வர்கள் இதைப் போலவே நானும் சொல்லிக் கொண்டு அதை நம்பிய காலமும் உண்டு. அதை மெய்ப்பிப்பது போல வலிந்து திணிக்கப்பட்ட நிதானத்துடன் போலி முயற்சிகளும் உண்டுதான், மறுக்கவில்லை. ஆனால் 'பதேர் பாஞ்சாலி' என்னும் ஒரேயொரு திரைப்படம் என் அத்தனை வருட ரசனை முழுவதையுமே தலைகீழாக மாற்றிப் போட்டது. அது வரை எத்தனை குப்பைகளை சினிமா என்ற பெயரில் ரசித்துக் கொண்டிருந்தேன் என்று அதிர்ச்சியாக இருந்தது. எவ்வித மனச்சாய்வும் முன்தீர்மானமும் இல்லாமல் பார்த்தால் இன்று கூட 'பதேர் பாஞ்சாலி' சலிப்பை உண்டாக்கும் படமல்ல என்பதை உணர முடியும். ஏனெனில் அதில் உண்மையான வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருந்தது. மனித உணர்வுகளின் நெகிழ்ச்சி, துயரம், அன்பு, பிரிவு போன்றவை அதன் யோக்கியத்தன்மையுடன் பதிவு செய்யப்பட்டிருந்தன. கலைசார்ந்த திரைப்படங்களும் காணும் பயிற்சியோ, அனுபவமோ இல்லாமலிருந்தால் கூட அதன் ஆன்மாவை உடனே நாம் தீண்டி விட முடியும் அல்லது அத்திரைப்படம் தாமாக நம்மைத் தீண்டும் என்பதற்கு என்னுடைய அனுபவம் ஒரு சிறிய உதாரணம்.

காக்கா முட்டை திரைப்படமும் ஏறத்தாழ இதே விதத்தில் நம்மிடம் உரையாடுகிறது என்றாலும் - நான் உணர்கிற - அதன் போதாமைகளைக் கடந்திருந்தால் இன்னமும் முழுமையை நோக்கி நகர்ந்திருக்கிற சிறப்பான படமாகியிருக்கும் என்கிற ஆதங்கத்தில்தான் இவற்றை குறிப்பிடுகிறேன். குறைகளை வலிந்து 'கண்டுபிடிக்கும்' மேதாவித்தனத்திற்காக அல்ல.


***

காக்கா முட்டையின் திரைக்கதையிலும் உருவாக்கத்திலும் ஒரு நல்ல படத்தை தர வேண்டும் என்கிற இயக்குநரின் யோக்கியமான நோக்கத்தையும் ஆர்வத்தையும் கண்டுகொள்ள முடிந்தாலும் வணிகரீதியான சில அம்சங்களைத் தாண்டி வர முடியாத தயக்கங்களையும் சமரசங்களையும் அதில் கண்டுகொள்ள முடிகிறது. இங்குள்ள மோசமான ரசனை சார்ந்த சூழலும் அது சார்ந்த வணிகமும் தோல்விபயமும்தான் அவரைக் கட்டுப்படுத்துகிறது என்பதாகப் புரிந்து கொள்கிறேன். இந்தத் தளைகள் நீக்கப்பட்டால் மறுமலர்ச்சியானதொரு சூழல் அமைந்தால் தமிழிலும் சர்வதேச அளவிற்கான மிகச்சிறந்த திரைப்படங்கள் உருவாகக்கூடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த வலுவான அடையாளத்தை மணிகண்டன் உருவாக்கியிருக்கிறார் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது.

திரைப்படங்களில் பாடல்கள் திணிக்கப்படும் அபத்தங்களைப் பற்றி நிறையப் பேசி விட்டோம். 'யதார்த்தமாக' படம் எடுப்பதாக சொல்லிக் கொள்ளும் இயக்குநர்களால் கூட பாடல்களை கைவிட முடிவதில்லை. 'பாடல்கள் இல்லாத படம்' என்பது விதிவிலக்கான, அபூர்வமான திரைப்படங்களின்  பட்டியலில் சேர்க்கும் நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது. திரைக்கதையே அதன் இயல்பில் பாடல்களைக் கோரும் போது அதற்கேற்ப பாடல்களை இணைப்பது என்பது ஒருவகை. ஆனால் பல வருடப் பழக்கம் என்கிற காரணத்தினாலேயே அதை மீற முடியாத தயக்கத்துடன் வலுக்கட்டாயமாக பாடல்களை இணைப்பதை வணிகநோக்குத் திரைப்படங்களில் சகித்துக் கொள்ளலாம் என்றாலும் மாற்று முயற்சிகளிலும் ஏன் கைவிட முடியவில்லை என தெரியவில்லை. அப்படி இணைப்பது எத்தனை அபத்தமாக இருக்கும் என்பதற்கு 'காக்கா முட்டை' ஓர் உதாரணம். சர்வதேச திரைவிழாக்களில் இத்திரைப்படம் திரையிடப்பட்ட போது பாடல்காட்சிகளோடு திரையிடப்பட்டதா, அல்லது அல்லாமல் திரையிடப்பட்டதா என்பதில் இதற்கான பதில் உள்ளது. உயர்தர தேயிலைத் தூள்கள் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் போது அதிலிருந்து மிஞ்சும் சக்கைளே இங்கே வணிகம் செய்யப்படுவதற்கு என்ன காரணமோ ஏறத்தாழ அதே காரணம்தான் இதற்கும். நமக்குச் சக்கைகள் போதும் என்று வணிகர்கள் நினைக்கிறார்கள். சக்கைகள் நன்கு விற்கும் இடத்தில் அதுதான் பரவலாக கிடைக்கும்.

மாற்று முயற்சி திரைப்படங்கள் என்றாலே அது விளிம்புநிலை வாழ்வினை மையப்படுத்துவது, அடித்தட்டு மக்களின் துயரத்தை கொண்டாடுவதுதான் என்கிற தவறான மனப்பதிவும் வழக்கமும் உள்ளது. குடிசையின் முன்பு காமிராவை வைத்து விட்டால் அது விருதுப்படமாகி விடும் என்று நினைக்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. சமூகத்தின் எல்லா பிரிவு மனிதர்களிடமும் அவரவர்கள் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. அவற்றை கையாளும் திரைக்கதைகளையும் இயக்குநர்கள் யோசிக்கலாம்.  பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படம், நடுத்தரவர்க்கத்தினரின் சொந்த வீட்டுக் கனவையும் அது சிதைந்து போவதையும் பற்றிப் பேசுகிறது. 'சந்தியா ராகம்' முதியோர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்களாக, தேவையற்றவர்களாக நிராகரிக்கப்படும் அவலத்தை முன்வைக்கிறது. இது போன்று வேறு வேறு வகைமைகளில் முயன்று பார்க்கலாம். ஒருவகையில் மூன்றாம் உலக நாடுகளின் 'ஏழ்மையை' சித்தரிக்கப்படும் திரைப்படங்கள் என்பது வளர்ந்த நாடுகளின் ரசனைக்கான வணிகமாக பார்க்கப்படுகிறதோ என்கிற ஐயமும் உண்டு. இதன் மூலம் மூன்றாமுலகைப் பற்றிய  சில நிலையான கற்பனை சித்திரங்களை மேற்குலக நாடுகளில் நிறுவுவதற்கும் அது சார்ந்த வணிகத்திற்கும்  பயன்படுத்தப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது.

'காக்கா முட்டை' ஏழ்மை சார்ந்த மெலோடிராமா காட்சிகளையோ அது சார்ந்த செயற்கையான கதறல்களையோ பிரதானப்படுத்தவில்லை என்பதும் அடங்கிய குரலில் பார்வையாளர்கள் யூகித்துக் கொள்வதற்கான இடைவெளியுடன் பதிவாகியுள்ளது என்பது ஆறுதலாக உள்ளது.  சத்யஜித்ரேவின் 'பதேர் பாஞ்சாலி'யின் மீதும் இவ்வாறான குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. பதேர் பாஞ்சாலியும் வறுமையைப் பிரதானப்படுத்தவிலலை. அந்தக் குடும்பத்தின் ஏழ்மையுடன் கூடவே துர்கா மற்றும் அப்பு தொடர்பான நேசமும் மகிழ்ச்சியும் பிரிவும் அதற்கேயுரிய நெகிழ்ச்சியான, உண்மையான தருணங்களுடன் சொல்லப்பட்டிருக்கின்றன.

'காக்கா முட்டை'யை 'பதேர் பாஞ்சாலி'யோடு ஒப்பிட்டு மிகையுற்சாகமாக தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்தைப் பார்த்தேன். தந்தை இல்லாத வீடு, தாயின் கையறு நிலை, இரண்டு அறியாப் பிள்ளைகள், போக்கிடம் இல்லாத பாட்டி, அவரின் மரணம், வீட்டில் வளரும் நாய் என்று இரண்டிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதுதான். ஆனால் கதாபாத்திரங்களை அதன் யதார்த்தத்தோடு வடிவமைப்பதற்கும் சம்பவங்களை சித்தரிப்பதற்கும் 'சினிமாத்தனத்திற்கும்' அது அல்லாதவற்றிற்கும் வேறுபாடு உள்ளது. இந்த நோக்கில் ரேவின் படைப்பு மிக அற்புதமாக அமைந்திருப்பதை உணர முடியும். சில காட்சிகளை மட்டும் உதாரணங்களுடன் ஒப்பிட முயல்கிறேன்.

'காக்கா முட்டை'யில் பணக்கார சிறுவன் மிகுந்த அன்புடன் தரும் பீட்சா துண்டை, இளைய சிறுவன் ஏற்க விரும்பினாலும் பெரியவன் 'வரவழைக்கப்பட்ட' தன்மானத்துடன்' மறுக்கிறான். இது சிறுவர்களின் இயல்பான மனோபாவத்திற்கு எதிரானது என்று கருதுகிறேன். இவர்களின் பீட்சா மோகத்தைக் கண்டு தன்னிடமிருப்பதை பணக்காரத் திமிரோடு அல்லாமல் நண்பனின் மீதான மிகுந்த அன்போடு பகிரப்படும் பொருளை ஒரு சிறுவன் மறுப்பதை எப்படி புரிந்து கொள்வது? ஏனெனில் இறுதிக்காட்சியில்தான் அந்தச் சிறுவர்கள் பீட்சா சாப்பிட வேண்டும் என்பதை திரைக்கதையில் இயக்குநர் முன்னமே 'திட்டமிட்டு விட்டதால்'   நேரும் பிசகு இது.

பதேர் பாஞ்சாலியிலும் ஏறத்தாழ இதற்கு இணையான ஒரு காட்சி வருகிறது. இனிப்பு விற்கிறவன் வரும் போது துர்காவும் அப்புவும் ஆவலாக பாாக்கிறார்கள். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் வாங்க முடியாது. எனவே மிட்டாய்க்காரன் பக்கத்திலுள்ள அவர்களது பணக்கார உறவினர்கள் வீட்டிற்கு செல்கிறான். வாங்க முடியாவிட்டாலும் வேடிக்கை பார்க்கும் உத்தேசத்துடன்  இருவரும் ஆவலுடன் பின்னே செல்கிறார்கள். அந்த வீட்டிலிருக்கும் சிறுமி துர்காவின் தோழி. "அவளுக்கு இனிப்பு ஏதும் தந்து காசை வீணடிக்காதே" என்று அவளுடைய தாய் சீறுகிறாள். என்றாலும் இனிப்பை மறைத்து எடுத்து வந்து துர்காவின் வாயில் தோழி திணித்து விட்டுச் செல்லும் காட்சி கவித்துவத்துடன் கூடிய யதார்த்தமானதாக இருக்கும்.

வறுமையான சூழலிலும் அடித்தட்டு மக்கள் நேர்மையைக் காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது அல்லது அப்படியாக சித்தரிப்பது ஒருவகையான போலித்தனம். இதர சமூகங்களில் உள்ளவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள், சாமியார்கள்.. போன்றோர் அடிப்படைத் தேவைகளுக்கான  தன்னிறைவைக் கொண்டிருந்தாலும் அந்தந்த அளவுகளில், இயன்ற சாத்தியங்களில் நேர்மையின்மையும் ஊழலையும் கடைப்பிடிக்கும் போது ஏழை மக்கள் நேர்மையாக செயல்படுகிறார்கள் அல்லது அவ்வாறு செயல்பட வேண்டும் என்கிற பழைய சினிமா பாணி சித்தரிப்பு தமிழ் சினிமாவின் க்ளிஷேக்களில் ஒன்று.  சூழலின் நெருக்கடியும் அழுத்தமும்தான்  எந்தவொரு நபரையும் அதற்கேற்ப எதிர்வினை புரியச் செய்யும். சமூகவியல் கண்ணோட்டத்தில்தான் இந்தப் பிரச்சினையின் ஆணிவேரை அணுக முடியும். அடித்தட்டு மக்கள் உயிர்வாழும் ஆசைக்காக செய்யும் தவறுகளை தண்டிப்பதிலிருந்தோ அல்லது படைப்புகளில் அவர்களை 'நல்லவர்களாக' சித்தரிப்பதின் மூலம் திருத்துவதிலிருந்தோ அல்ல. பூகம்பத்தில் கட்டிட இடுக்குகளில் மாட்டிக் கொள்பவன், சிறுநீரை அருந்தியும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள முயல்வது எதற்காக? எது அவனை அந்த நிலைக்கு உந்தித் தள்ளுகிறது? கணவன் சிறையிலுக்கும் சமயத்தில், அவரை மீட்பதற்காக பணம் தேவைப்படும் நெருக்கடியில் இருக்கும் பெண், அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு காசு வாங்காத 'கொள்கையையும்', தேர்ந்தெடுத்த தவறுகளை செய்யும் பெரிய சிறுவனை, சமயங்களில் நேர்மையை கடைப்பிடிக்க வைப்பதின் மூலம் எதை இயக்குநர் பதிவு செய்ய விரும்புகிறார்? பீட்சா நிறுவனத்தை வைத்திருப்பவர்களைப் போன்ற பணக்கார்கள் லட்சக் கணக்கில் கொள்ளையடிக்கும் போது  ஒரு தட்டு பீட்சாவிற்காக கனவு காண்பவன் நேர்மையாக இருப்பதின் மூலம் சரிசெய்து விட முடியுமா? ஏன் இந்தக் கதாபாத்திரங்கள் இப்படிச் சமயங்களில் தொடர்பில்லாமல் செயற்கையாக இயங்க வேண்டும், அதற்கான தர்க்கம் என்ன?

மறுபடி பதேர் பாஞ்சாலிக்கு வருவோம். பக்கத்து வீட்டிலிருந்து கொய்யா பழத்தை துர்கா திருடிக் கொண்டு வந்து விட்டாள் என அந்த வீட்டுப் பெண்மணி, துர்காவின் தாயார் காதுபடவே தூற்றுவார். 'அதை கொண்டு போய் கொடுத்து விட்டு வா" என்பதுதான் துர்காவின் தாய் சொல்லும் முதல் வார்த்தையாக இருக்கும். இதைப் போலவே பக்கத்து வீட்டு சிறுமியின் மணிமாலை காணாமற் போனதென்று இன்னொரு புகார். துர்கா அதை எடுக்கவில்லையென்று சாதிக்க, கோபம் வரும் அவளது தாய் அடி வெளுத்து வாங்குவார். ஆனால் பொருளீட்டுவதற்காக கணவர் சென்று தகவல் வராமல் வறுமையின் அழுத்தம் தாங்காத சூழலில் ஒரு மழை நாளில் கீழே கிடைக்கும் தேங்காயை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு துர்காவின் தாய் எடுத்துச் செல்வார். படம் பார்க்கும் எந்தவொரு பார்வையாளருக்கும் அது திருட்டு என்றே தோன்றாது. துர்காவின் மரணத்திற்குப் பின்னான இறுதிக்காட்சியில் அவள் ஒளித்து வைத்திருக்கும் மணிமாலையை அப்பு கண்டுபிடிப்பதும் உடனே பிறர் அறிவதற்கு முன் குளத்தில் தூக்கியெறிவதும் அந்த உண்மையை குளம் தனக்குள் மூடி வைத்துக் கொள்வது போன்றதான காட்சிகளை ரே உருவாக்கியிருக்கும் விதத்தையும் இயல்பையும் பிரமித்துக் கொண்டேயிருக்கலாம்.


***

என்னளவில் கதாபாத்திரங்களின், சம்பவங்களின் வடிவமைப்பு சார்ந்து இத்திரைப்படத்தில் இன்னும் பல தர்க்கப் பிழைகள் இருப்பதாக தோன்றுகிறது. சொல்லிக் கொண்டே போனால் கட்டுரையில் இடம் போதாது. மற்ற சமூகத்து சிறுவர்களை விட அடித்தட்டு சமூகத்து சிறுவர்களும் மனிதர்களும் அடிப்படை வாழ்வியலுக்கு தேவையான பல விஷயங்களைப் பற்றி விவரமாக அறிந்திருப்பார்கள். அவர்களின் நெருக்கடி சார்ந்த சூழல் அனைத்தையும் கற்றுத் தேறும் நிலைக்கு இட்டுச் செல்லும். ஆனால் இதில் வரும் சிறுவர்கள், "பீட்சா கடைக்காரன் எப்படி எங்களை குப்பத்து பசங்க -ன்னு கண்டுபிடிச்சான்?" என்றும் நல்ல உடை வாங்குவதற்காக ஆடம்பரக் கடையை தேடிச் செல்லுமளவிற்கு அப்பாவிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏழைகள் என்றால் அப்பாவிகள் என்பது இன்னொரு தேய்வழக்கு. தங்களின் நிலை பற்றிய பிரக்ஞையும் குறைந்த செலவில் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சாமர்த்தியங்களை அறிந்தவர்களாக இருப்பதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன், சேரியின் அருகில் வாழ்ந்தவன் என்கிற முறையில் நானே அவற்றை பின்பற்றியிருக்கிறேன்.

பணத்திற்காக இத்தனை சிரமப்படும் வீட்டில் இரண்டு தொலைக்காட்சி வைத்திருப்பார்களா? பாட்டி சுட்டுத் தரும் தோசையை தின்னாதவர்கள் எப்படி அதுவே நன்றாக இருக்கிறதென்று இறுதியில் எப்படி சொல்லுவார்கள்? தொடர் பீட்சா கடைகளை வைத்திருக்கும் ஒரு முதலாளி இப்படியா அப்பாவி கோயிந்து மாதிரி இருப்பார்? என்று விளங்கிக் கொள்ள முடியாத பல பிசிறுகளுக்கான விடைகள் வேறெந்தக் காட்சிகளிலாவது இருக்கிறதா என தெரியாது. பாட்டியின் மரணத்திற்குப் பிறகு, சிறுவன் கசக்கி எறியும் பீட்சா விளம்பரத்தாள் சாக்கடையில் மிதந்து மறைவதும், அதனுடன் சிறுவனின் பீட்சா மோகமும் அதனோடு கரைவதான காட்சியோடு அதன் அளவில் படம் நிறைந்து விடுகிறது. அதற்குப் பிறகு நீளும் காட்சிகள், சில்லறை குற்றவாளிகளின் அபத்தமான நகைச்சுவைகள் எல்லாம் ஒரு சம்பிதாயமான தமிழ்ப்படத்திற்கான நீளத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் இழுக்கப்பட்டிருந்தாலும் முழுப்பிரதியை சீர்குலைத்து விடும் அபாயத்தையும் செய்திருக்கிறது. 'யாருக்காக அழுதான்' திரைப்படத்தையும் இவ்வாறே சில நெருக்கடிகளுக்காக இழுத்ததை ஜெயகாந்தன் தன் நூலில் ஒப்புக் கொண்டிருக்கிறார். முன்பே கூறியபடி இதை 'கலைப்படம்' என்று வெகுசன மக்கள் ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்கிற முன்கூட்டிய தயக்கத்தினால் 'வணிகப்படத்திற்கான' சூத்திரங்களை, சமரசங்களை இயக்குநர் கடைப்பிடித்ததினால் இந்த விபத்துக்கள் நேர்நதிருக்கலாம்.

மேலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் என்னளவில் பிழைகள் என்று நான் புரிந்து கொள்ளும் பகுதிகளுக்காக இயக்குநர் தர்கக ரீதியான விளக்கம் ஏதும் வைத்திருக்கலாம், அல்லது அதனோடு தொடர்பான காட்சிகள் நீளம் காரணமாக வெட்டப்பட்டிருக்கலாம். இந்தப் பிசிறுகளையும் கடந்து வந்திருந்தால் இத்திரைப்படம் இன்னும் கச்சிதமானதொரு பிரதியாக உருவாகியிருக்குமே என்கிற ஆதங்கத்தில்தான் இத்தனை விஸ்தாரமாக எழுதியிருக்கிறேன். மற்றபடி தமிழ் சினிமாவை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் தகுதியும் நுண்ணுணர்வும் கொண்ட இயக்குநராகத்தான் மணிகண்டன் தெரிகிறார். எவ்விதமான நடைமுறை இடையூறுகளும் அல்லாமல் அத்திசையில் அவர் சுதந்திரமாக பயணிக்கவும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ரசனை மாற்றத்தை ஏற்படுத்தவும் என்னுடைய வாழ்த்துகள். 

- உயிர்மை - ஜூன் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Saturday, July 04, 2015

கமல்ஹாசனின் 'தூங்காவனம்'




கமல்ஹாசனிடம் சமீப காலமாக சில ஆச்சரியமான மாற்றங்களை கவனிக்க முடிகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தை முடிக்க ஓர் ஆண்டிற்கும் மேலான காலத்தை அவர் எடுத்துக் கொள்வார். இந்த இடைவெளி குறித்து அவரது ரசிகர்களே கவலைப்பட்டு அடுத்த திரைப்படத்தை மிக ஆவலாக எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அவரது அடுத்தடுத்த திரைப்படத்தின் அறிவிப்புகள் குறுகிய நேரத்தில் வருகின்றன. விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏறத்தாழ முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் மெருகேற்றலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'உத்தம வில்லன்' வெளிவந்து துவக்க நாளின் சிக்கலோடு ஓடியோ ஓடாமலோ கடந்து சென்று விட்டது. அதற்குள்ளாக 'பாபநாசம்' திரைப்படத்தின் அறிவிப்பு வந்து படமும் இதோ வெளிவந்து விட்டது. படம் வெளிவரப் போவதற்கு முன்பே இது குறித்த முன்தீர்மான விமர்சனங்கள் வெளிவரத் துவங்கி விட்டன. த்ரிஷ்யத்திற்கும் இதற்குமான வித்தியாசத்தை பட்டியலிட ரசிக விமர்சகர்கள் கொலை வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூடு அடங்குவதற்குள்ளாக அவரது அடுத்த திரைப்படம் குறித்தான அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த திரைப்படத்தின் பெயர் 'தூங்காவனம்' என்கிறார்கள். இது Sleepless Night எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக் என்று சொல்லப்படுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தாண்டிவரவே இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களை குறுகிய நேரத்தில் அவர் உருவாக்குகிறார் என்று சொல்லப்படுவதில் எத்தனை தூரம் உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. எனவே இதில் குறைந்தபட்ச வெற்றியை முதலிலேயே உறுதி செய்து கொள்ள, வெற்றி பெற்ற மற்ற மொழித் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதாகவும் சொல்கிறார்கள். மோகன்லால் நடிப்பில் வெளிவந்த த்ரிஷ்யம் - மலையாள திரையுலகிலேயே அதிக வசூலை செய்த சாதனை திரைப்படம். மேலும் அதன் கதைக்களமும் சுவாரசியமானது மட்டுமல்லாமல், நடிப்பதற்கு வாய்ப்புள்ள சவாலான பாத்திரமும் கூட. மோகன்லால் இதை தனது அற்புதமான பங்களிப்பால் நிறைவு செய்திருந்தார். 

ஆனால் என்னதான் ரீமேக்கிற்காக மாங்கு மாங்கென்று உழைத்தாலும் எழுத்திலக்கியத்தில் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்கும் சம்பிரதாயமான பாராட்டுதான் பொதுவாக இதற்கும் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் இது மறுஉருவாக்கம்தானே என்கிற எண்ணம் பார்வையாளர்களின் மனதில் உறைந்தபடி இருக்கும். கமல் போல அற்புதமான கலைஞனுக்கு ரீமேக்குகளில் நடிப்பது நிச்சயமான சவாலான விஷயமல்ல என்று தோன்றுகிறது. அவர் இதுவரை நடித்திருக்கும் ரீமேக் படங்களின் எண்ணிக்கையையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் வைத்து இதைச் சொல்லிவிடலாம். 


கமல்ஹாசன் இப்படி மறுஉருவாக்கப்படங்களாக அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பது ஒருவகையில் ஆச்சரியம் என்றால் 'தூங்காவனத்திற்காக' பிரெஞ்சு திரைப்படத்தை அதிகாரபூர்வமான முறையில் ரீமேக்காக உருவாக்குவது இன்னொரு ஆச்சரியம். Plagiarism  தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத படைப்பாளிகளே இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து கதையை, காட்சியை உருவுவது ஏதோ சமீப காலத்திய விஷயம் என்பது போல் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இது பழக்கமான விஷயம்தான். சமயங்களில் முறையாக அனுமதி பெறப்பட்டும் (இந்தியாவிற்குள்ளாக) சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அது சொற்பமானது. அதிலும் அயல் தேசத்து திரைப்படங்கள் என்றால் கேள்வி கேட்பாரே கிடையாது. ஆளாளுக்கு உருவி சிதைத்து ஜாலியாக குழம்பு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். இப்படியாக அயல் தேசத்து சினிமாக்களில் உருவும் தமிழ் படைப்பாளியாக கமலையே பொதுவாக பிரதானமாக சுட்டிக் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் அதிகமாக உருளுவது கமலின் தலையாகத்தான் இருக்கும். இவைகளில் சில புகார்கள் உண்மைதான். இன்னும் சிலவை உண்மையல்ல. இந்தப் பதிவை வாசிக்கவும்.

இந்த நிலையில் அதிகாரபூர்வமான முறையில் ஓர் அயல்தேசத்து சினிமாவை மறுஉருவாக்கம் செய்வது கமலின் திரைப்பயணத்தில் இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன்.  உலகமயமாக்கத்தின் விளைவாக அதன் சந்தை இன்னமும் விரிவடைந்து வரும் சூழலில் உலகிலேயே அதிகமான திரைப் பார்வையாளர்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதினால் இதுநாள் வரை அறியப்படாமல் அல்லது கண்டுகொள்ளப்படாமல் இருந்த வணிக மதிப்பை இப்போது சீரியஸாக சர்வதேச சினிமா நிறுவனங்கள் உணரத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் பிரபல திரைப்படங்களில் நேரடியான Plagiarism குற்றச்சாட்டு இருந்தால் உடனே அது சம்பந்தப்பட்ட படநிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையை எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். எனவே கமலின் இந்த மாற்றத்திற்கு இந்த சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஹாலிவுட்டும் 2015-ல் மறுஉருவாக்கம் செய்யப் போகும் பிரெஞ்சு திரைப்படமான 'Sleepless Night' (Nuit Blanche) திரைப்படத்தை  சில மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். இதன் சுவாரசியத்திற்கு அடிப்படையே இதன் அபாரமான திரைக்கதைதான். மற்றபடி ஒரே இரவில் நிகழும் இதன் மையக்களன் வழக்கமானதொன்றுதான். போதைப் பொருள் கும்பலால் கடத்தப்பட்டிருக்கும் தன் மகனை மீட்பதற்காக ஒரு காவல்துறை அதிகாரி ஆவேசமாக செய்யும் சாகசங்கள் கொண்ட வழக்கமான கதைதான். ஆனால் படுவேகமான, அசத்தலான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.

வேகமான திரைக்கதை என்றாலே பொதுவாக பலரும்  சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஸிட்பீல்ட் உபதேசித்திருக்கும் Three-act structure-ஐ  ஏதோ கணிதசூத்திரம் போல அப்படியே பொருத்தினால் அது உணர்வுபூர்வமான படைப்பாக அல்லாமல் இயந்திரத்தனமான சக்கையாகத்தான் வெளிவரும். வேகமான திரைக்கதை என்பது  அது மட்டுமேயல்ல. பார்வையாளனை கதாபாத்திரங்களோடும் சம்பவங்களோடும் அகரீதியாக ஒன்றச் செய்து அவனுடைய ஆவலையும் பதற்றத்தையும் தூண்டியபடியே இருப்பது. காதல் சார்ந்த கதையில் கூட இதை சாதிக்க முடியும். த்ரிஷ்யம் திரைப்படத்தில் கூட என்ன ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது? ஆனால் பார்வையாளன் நகத்தைக் கடித்தபடி அதைப் பார்க்கவில்லையா?

எல்லாக்கதைகளும் ஏற்கெனவே சலிக்க சலிக்கச் சொல்லப்பட்டு விட்ட இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்திற்கு மிக மிக அடிப்படையானது திரைக்கதைதான். மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் அபாரமான உருவாக்கத்திற்கு காரணம் மூன்று விஷயங்கள்தான். ஒன்று, திரைக்கதை. இரண்டு, திரைக்கதை. மூன்றும் திரைக்கதையேதான். அப்படியெனில் கதை என்று இருக்க வேண்டாமா? நிச்சயமாக. இல்லையெனில் அது சவத்திற்கு செய்யப்பட்ட ஒப்பனைகள் போல எத்தனை சாமர்த்தியமான திரைக்கதையும் நுட்பங்களையும் கொண்டிருந்தாலும்  ஜீவனேயில்லாமல் போய் விடும்.

கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கின் மறுஉருவாக்கத்திற்காக தேர்வு செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை தருகிறது. ஏனெனில் இது 'இந்தியத்தன்மை' அல்லாத ஹாலிவுட் ஆக்ஷன் வகையிலான திரைப்படம். புதியஅலை திரைப்படங்கள் தமிழில் தற்போது வெற்றி பெற்றுவரும் சூழலில் இந்த ஆக்ஷன் தன்மையை பெரிதும் மாற்றாமல் ரீமேக் செய்தால் இது நிச்சயம் தமிழ் பார்வையாளர்களுக்கு மிக ஆச்சரியமானதொன்றாக வித்தியாசமான அனுபவமாக அமையும். கமல் அதை சாதிப்பார் என்று தோன்றினாலும் பெரும்பாலும் நைட்கிளப்பினுள் நிகழும் இத்திரைப்படத்தில் வணிக சமரசத்திற்காக நைசாக ஏதேனும் பாடல் காட்சியை செருகி விடுவார்களோ என்கிற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இதில் கமல் முத்தமிடும் திரிஷாவின் பாத்திரம் அசலில் சில நிமிடங்கள் மட்டுமே வருவது. தமிழில் என்ன செய்யவிருக்கிறார்களோ தெரியவில்லை. போலவே பெண் காவல் அதிகாரியாக வருபவரின் பாத்திர வடிவமைப்பும் சிறிது நேரமே என்றாலும் குறிப்பிடத்தகுந்தது. மதுஷாலினி இந்தப் பாத்திரத்தை கையாள்வார் என யூகிக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் ஒளிப்பதிவு. பெரும்பாலும் நைட்கிளப் கூட்டத்திற்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் காட்சிகளில் அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தி அதன் தொடர்ச்சிகளில் விலகல்தன்மை இல்லாமல் பதிவு செய்வது சிரமமான விஷயமாகத் தோன்றுகிறது. ஆனால் அதை மேற்சொன்ன திரைப்படத்தில் அபாரமாக சாத்தியப்படுத்தியிருப்பார்கள். காவல்துறை அதிகாரியாக பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் Tomer Sisley அடிப்படையில் ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால் இத்திரைப்படத்தில் அத்தனை தீவிரத்தன்மையுடன் தன் மகனை மீட்பதற்காக எதையும் செய்யத் துணியும் தந்தையின் பாத்திரத்தை அற்புதமாக கையாண்டிருப்பார். இவர் நேர்மையான காவல் அதிகாரியா அல்லவா என்பதே சற்று புரியாதபடி பூடகமான முறையில் இவரது பாத்திர வடிவமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்.

தமிழ் திரையில் பல விஷயங்களில் முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் இருக்கும் கமல்ஹாசன் ஓர் அந்நிய திரைப்படத்தை முதன்முறையாக அதிகாரபூர்வ முறையில் மறுஉருவாக்கம் செய்யும் விஷயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதே சமயத்தில் இதில் இந்தியத்தன்மைக்கான சமரசங்களை ஏதும் செய்யாமல் படத்தின் ஜீவனை அப்படியே இதிலும் கடத்தி வந்தால் சிறப்பாக இருக்கும்.

"தூங்காவனத்திற்காக' நிசச்யம் காத்திருக்கலாம். 


suresh kannan

உத்தம வில்லன் - மரணத்தின் கலை



திரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண்ட தனிமையான அறிவுஜீவிகளில் அவர் ஒருவர் எனச் சொல்லலாம். ஆனால் வணிக யதார்த்தத்தை நன்றாக புரிந்து வைத்திருக்கிற, அதற்குள் தாக்குப் பிடிக்கிற காரியக்கார அறிவுஜீவி.
 
1976-ல் அவரைச் சந்தித்த ஒரு கணத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா இப்படியாக விவரிக்கிறார்:
'கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸ்யமாக வெளிப்பட்டது. இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி. அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப் பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாழி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள  சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார். போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றி அவருக்கு தெரிந்திருக்கிறது. ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது.

"மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன். அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன". தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார். "எனக்கு அழ வரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று. பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால், சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."

கலை சார்ந்த ஐரோப்பியச் சினிமாக்களின் உன்னதங்களுக்கும் வணிக நோக்கு  இந்தியச் சினிமாக்களின் அபத்தங்களுக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை  தம் இளம் வயதிலேயே மிகத் தெளிவாக உணர்ந்திருந்த கமல்ஹாசன் தமது அறுபதாவது வயது வரை கூட பெரும்பாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவின் சகதியிலேயே உழல வேண்டியிருக்கும் மனஉளைச்சலைச் சற்று கற்பனை செய்து பார்க்கலாம். இது ஏறத்தாழ பெரும்பாலான இந்தியர்களுக்கு நிகழ்வதுதான். இளம் வயதில் அடைய வேண்டிய  கனவு ஒன்றாக இருககும். வேறு வழியில்லாமல் விழ வேண்டிய யதார்த்தம் வேறாக இருக்கும். கானல் நதி போலத் தெரியும் அந்தக் கனவுகளை இறுதிவரைக்கும் கூட அடைய முடியாத சோகம்தான் வாழ்நாளின் மிச்சமாக கூட இருக்கும். சாதாரணர்களுக்கே இந்த உளைச்சலின் துயரம் அதிகம் என்றால் நுண்ணுணர்வு சார்ந்த எளிதில் உணர்வுவயப்படக்கூடிய கொந்தளிப்பான மனநிலையை உடைய கலைஞர்களுக்கு இந்த உளைச்சல் சற்று அதிகமாகவே இருக்கும். ஆகவே ஐரோப்பிய சினிமாக்களை ஆராதிக்கிற அதன் நுணுக்கங்களை வியக்கிற கமல்ஹாசனால் மரத்தைச் சுற்றி டூயட் பாடும், தாயை, தங்கையை கட்டிப்பிடித்து மிகையாக கண்ணீர் சிந்த வேண்டியிருக்கும் மெலோடிராமா காட்சிகளில் உள்ளூற எப்படி உணர்ந்திருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது.

இவ்வகையான சமரசங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தமிழ் சினிமா எனும் பிரம்மாண்ட வணிக அடையாளத்தின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்று விலகத்தான் வேண்டியிருக்கும். அவ்வகையான கலைஞர்கள் வரலாற்றின் இருளில் மறைந்துதான் போயிருக்கிறார்கள். 'அவள் அப்படித்தான்' எனும் அற்புதமான திரைப்படத்தைக் கொடுத்த ருத்ரைய்யா அதன் பிறகு, (கிராமத்து அத்தியாயம் எனும் சுமாரான முயற்சியைத் தவிர) ஏன் எந்தவொரு திரைப்படத்தையுமே உருவாக்காமல் காணாமற் போய் விட்டார் என்று வியந்து கொண்டிருந்தேன். அவரைப் பற்றி எந்த தகவலுமே  அறியப்படாமலிருந்தது. ஆனால் அவரது மறைவின் போதுதான் அவரைப் பற்றிய நினைவுகள் சில திரையுலக நண்பர்களின் -கமல்ஹாசன் உட்பட -  மூலம் மீண்டெழுந்தன. அதன் மூலம் வரும் தகவல்கள் ஆச்சரியமூட்டுவதாய் இருக்கின்றன.  ருத்ரைய்யா தனது இறுதிக் காலம் வரையிலும் கூட தன்னுடைய  கனவு சினிமாக்களை உருவாக்குவது பற்றியும் அதை செயல்படுத்துவது பற்றியுமான உரையாடல்களை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டுதான் இருந்திருக்கிறார். ஆனால் அதற்கான சமசரங்களை, அவமதிப்புகளை அவரால் கடந்து வர முடியவில்லை என்பதால் எல்லாத் திட்டங்களுமே சாத்தியமாகாமல் போய் விட்டன. தமிழ் சினிமா எனும் பிரம்மாண்ட இயந்திரம் இவ்வாறு பலரை கடித்து துப்பி வெளியே அனுப்பியிருக்கிறது.

தாம் வியந்து பார்க்கும் அயல் சினிமா பற்றிய கனவுகள், அவற்றை இங்கு சாத்தியப்படுத்த  முடியாத யதார்த்தமான சூழல், அபத்தமான வணிகத் திரைப்படங்களில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஆகிய தத்தளிப்பு சார்ந்த மனநிலையை, அதற்கான சமரசங்களை கமல்ஹாசன் வெற்றிகரமாக சமாளித்துக்  கொண்டு வருகிறார் என்றுதான் யூகிக்க முடிகிறது. அதனால்தான் அவரால் இத்தனை வருடங்கள் கழித்தும் தமிழ் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடிந்திருக்கிறது. சமீப திரைப்படத்திலும் கூட நாயகியை மரத்திற்கு பின்னால் அழைத்து சென்று பிறகு உதட்டைத் துடைத்துக் கொண்டு வரும் தேய்வழக்கு காட்சிகளில் தொடர்ந்து இயங்க முடிகிறது. தமிழ்நாட்டிலேயே, பெண்ணுக்கு சரியாக முத்தம் தரக்கூடிய ஒரே ஆண் அடையாளமாக அவரை நிலைநிறுத்தி விட்டார்கள். முத்தம் என்பதற்கே விளம்பரத் தூதர் போல. கூடவே காதல் இளவரசன் என்கிற பிம்பமும்.  சமீபத்தில் நிகழ்ந்த உத்தம வில்லன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு பார்த்திபன் அந்த மேடையையே ஆபாசமாக்கினார்.


தன்னுடைய வணிக பிம்பத்தை நிலைநிறுத்திக்  கொள்வதின் மூலம் தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டு அதன் மூலம் மெல்ல மெல்லதான் இங்கு ஏதாவது மாற்றம் செய்ய முடியும் என்கிற பிரக்ஞையும் அவருக்கு இருந்திருக்கிறது. தமிழில் சில மாற்று முயற்சிகள் உருவாவதற்கு கமல்ஹாசனின் நேரடி மற்றும் மறைமுகமான பங்களிப்பு இருந்திருப்பதற்கான உதாரணங்கள் இருக்கின்றன. மேலே குறிப்பிட்ட 'அவள் அப்படித்தான்' திரைப்படம் உருவாகி வெளிவருவதற்கு கமல்ஹாசனின் பங்கு மிக முக்கியமானதாய் இருந்திருக்கிறது. பாலுமகேந்திராவின் முள்ளும் மலரும் திரைப்பட உருவாக்கத்தில் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் முரண்  ஏற்பட்டு படமே நின்று போகும் சூழல் ஏற்பட்டிருக்கும் போது கமல்ஹாசன் அதில் தலையிட்டு சுமூகமான நிலையை உருவாக்கியிருக்கிறார். குடிசை, உச்சிவெயில் போன்ற மாற்று சினிமா முயற்சிகளை உருவாக்கிய ஜெயபாரதி அவரின் சமீபத்திய நூலில் எழுதியிருக்கும் சம்பவம் இது. ஜெயபாரதி துவக்க காலத்தில் தாம் உருவாக்க விரும்பும்  'இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்' திரைப்படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனை அணுகி மிக குறைந்த தொகையை முன்பணமாக அளித்திருக்கிறார். அருகிலிருந்த கமலின் சகோதரர், 'இச்செய்தி வெளியே தெரிய வந்தால் கமலின் சந்தை நிலவரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்' என்பது போல ஆட்சேபித்திருக்கிறார். அதற்கு கமல் சொன்ன பதில் "இந்தப் படத்திற்கு சம்பளமே வாங்காமல் நான் நடிப்பேன்". பிறகு அத்திரைப்படத்தில் பாடல்கள் எல்லாம் சேர்க்கிறார்கள் என்பதை அறிந்த கமல், 'அதான், ஏற்கெனவே நிறைய டான்ஸ் ஆடிட்டு இருக்கேனே. இதுலயுமா?" என்று நடிக்க மறுக்க அத்திரைப்படம் நின்று போனது. தமிழ் சினிமாவில் நிகழ்ந்த அல்லது துரதிர்ஷ்டமாக நிகழாமல் போன பல மாற்று முயற்சிகளுக்கு கமல்ஹாசன் ஆர்வமாக உதவ முன் நின்றிருக்கிறார் என்பதற்கான சில உதாரணங்கள் இவை.

இவைகளைத் தாண்டி தமிழில் சில மாறுதலான முயற்சிகளைத் தாமே உருவாக்க முனைந்தார். அதில் முதலாவதாக 1981-ல் வெளியான 'ராஜபார்வை'யைக் குறிப்பிடலாம். 80களில் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோர் தங்களின் சிறந்த படங்களைத் தந்து கொண்டிருந்த காலக்கட்டம். மலையாளத் திரையுலகின் சிறந்த காலக்கட்டத்தைப் போல தமிழ் சினிமாவின் முகமும் மாறி விடும் என்று திரை ஆர்வலர்கள்  நம்பிக்கை கொண்டிருந்த காலம். ஆனால் 'ராஜபார்வையின்' மாறுதலான திரைக்கதையையும் 'கண்பார்வையற்ற' குறைபாடுள்ள கதாநாயகனையும் தமிழக சினிமா பார்வையாளர்கள் கடுமையாக நிராகரித்தார்கள். படம் படு தோல்வியடைந்தது. கமல்ஹாசனுக்கு வணிக ரீதியான  பலத்த நஷ்டம். 'உங்களுக்கு இதுதானே வேண்டும்' என்கிற கடுப்பில் அடுத்த வருடமே வெளியான கமலின் படம்' சகல கலா வல்லவன்'. பட்டி தொட்டியெங்கும் தீப்பிடித்தாற் போல் ஓடி வசூலை வாரிக் குவித்தது. தமிழ் சினிமாவின் அந்தப் பொற்கால கனவை மூர்க்கமாக கலைத்துப் போட்டதில் 'சகல கலா வல்லவனுக்கு' முக்கியமான பங்குண்டு என்பது திரை வரலாற்றாய்வாளர்களின் தீர்மானமான கருத்து.  இப்படியாக நல்ல படைப்புகளுக்கு பார்வையாளர்கள் அதிர்ச்சி தந்தால்  படைப்பாளிக்ள அந்த தோல்வியின் கசப்பில் எதிர்திசையில் செல்லத் துவங்குவார்கள்.  பாரதிராஜாவின் 'வாலிபமே வா, வா', பாலு மகேந்திராவின்  'நீங்கள் கேட்டவை'  போன்றவை அந்தவகையில் சில உதாரணங்கள்.
 
ஒரு நிலையில் வழக்கமான வணிக சினிமா ஒருபுறம்,  ஹேராம் போன்று வணிக வெற்றி நிச்சயமல்லாத  மாற்று சினிமா முயற்சி ஒருபுறம் என்று  இரட்டைக் குதிரை சவாரி போல தம்முடைய திரைப்படங்களை கமல்ஹாசன் ஒழுங்குப் படுத்திக் கொண்டதை அவருடைய திரைப்படங்களின் வரிசைத்தன்மையை கவனித்தால் தெரியும். ஆனால் அவர் செய்யும் மாற்று முயற்சிகளில் உள்ள பிரச்சினைகளை ஒரு பட்டியலே போடலாம்.  அயல் சினிமாக்களால் தூண்டப்பட்டு அல்லது நகலெடுத்து அதில் தமிழ் சினிமாவின் வழக்கமான கூறுகளை கலந்து நீர்க்கச் செய்து இரண்டுங்கெட்டான் தன்மையாக்குவது, தன்முனைப்பு உணர்வுடன் தன் பிம்பத்தை பூதாகரமாக அவற்றில் திணித்துக் கொள்வது, அசல் படைப்பின் மையத்தை சிதைத்து கேலிக்கூத்தாக்குவது, தாம் நம்பும் கொள்கைகளை தம்முடைய பாத்திரங்களிலும் தொடர்பில்லாமல் எதிரொலித்துக் கொண்டேயிருப்பது, சிறந்த இயக்குநர்களிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளாமல் பொம்மலாட்ட இயக்குநர்களின் பெயர்களை உபயோகித்துக் கொள்வது என்று பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


ஆனால் கமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'உத்தம வில்லனில்'' இந்த வழக்கமான அம்சங்கள் உண்டுதானெினும் அவைகளிலிருந்து சற்று விலகி அவரது அசலான பிம்பத்தை ஏறத்தாழ அப்படியே நெருக்கமாக  பிரதிபலிப்பதாகவும் விசாரணை செய்வதாகவும் சுயபகடி செய்து கொள்வதாகவும்  திரைக்கதையை அமைத்திருப்பதை குறிப்பிடத்தக்க, கவனிக்கத்தக்க மாற்றமாக சொல்லலாம். ஒரு கதாநாயகனின் அசலான பிம்பங்களை புனைவில்  உபயோகித்து எது அசல், எது புனைவு என்கிற மயக்கத்தை ஏற்படுத்துவது, சுயவரலாற்றுத்தன்மையை அந்தப் படைப்பிற்கு அளிப்பது, ஒரு திரைப்படத்தில் உள்மடிப்பாக விரியும் இன்னொரு திரைப்படம்,  வெகுசன வழிபாட்டுக்குரிய ஒரு புராணத்தின் முடிவை கேலியாக மாற்றியமைப்பது என்று பின்நவீனத்தின் கூறுகளை இத்திரைப்படம் தன்னகத்தே கொண்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஓர் உச்ச வணிக பிம்பமாகவும் ஸ்டார் நடிகனாகவும் இருக்கும் மனோரஞ்சன் எதிர்பாராத விதமாக மரணத்தின் அருகாமையை உணர்ந்தபின் தன் வாழ்வின் பெரும் பிசிறுகளை சரிசெய்ய முயல்கிறான். இது  ஒரு இழை. தாம் இறந்து போவதற்குள், தன் ரசிகர்கள் பல காலத்திற்கு நினைவில் வைத்திருப்பது போன்று சிரிக்க சிரிக்க ஒரு நல்ல நகைச்சுவைப்படம் எடுப்பதற்காக,  தன் வணிக பிம்பத்தை உதறி விட்டு,  திரைவாழ்வில் தன்னை துவக்கத்தில் உயர்த்திய குருநாத இயக்குநரின் மூலம் உருவாக்கும் நகைச்சுவைப்படம் இன்னொரு இழை.

ஒன்றோடு ஒன்று நெருங்கி தொடர்புடைய இந்த இரண்டு இழைகளும் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டிருப்பதன் வழியாக திரைக்கதை விரிகிறது. ஒருபுறம் சாவின் கருமையான நிழலின் நெருடிக்கடிகளை உணரும் மனோரஞ்சன், அவன் நடிக்கும் கடைசி திரைப்படத்தில் சாகாவரம் பெற்ற கோமாளியாக, தம் தடைகளை எளிதில் தாண்டி வருபவனாக சித்தரி்க்கப்படுகிறான். நடிகன் மனோரஞ்சனின் பகுதி மிக உணர்வுபூர்வமாகவும் நெகிழ்ச்சியானதாகவும் இருக்கிற காரணத்தினாலேயே அதன் சமன் செய்ய, பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமலிருக்க  இன்னொரு பகுதியை நகைச்சுவையும் நையாண்டியும் கொண்டதாக உருவாக்கியிருக்கலாம். இந்த நகைச்சுவைப் பகுதி மையக் கதைக்கு  நெருங்கிய தொடர்புள்ள அடையாளங்களுடன் இருந்தாலும் பலவீனமாக இருப்பதால் இதன் மூலம் முழுப்படத்திற்கும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. உண்மையிலேயே எட்டாம் நூற்றாண்டு நகைச்சுவைதான் உபயோகப்பட்டிருக்கிறதோ என நினைக்க வைக்கும் படி அதில்  பழமையின் நெடி வீசுகிறது.

ஆனால் நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல,  திரைப்படத்திற்குள் இயங்கும் இந்த இன்னொரு திரைப்படத்தை சிலர் முழுக்க வெறுப்பதாக சொல்லும் படி அத்தனை மோசமானதாக இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.  கேரளத்தின் மிகப் பழமையான வழிபாட்டு ஆட்டமான தெய்யத்தை  தமிழக பொதுப் பார்வையாளர்களுக்கு அடையாளம் காட்டியிருப்பது நல்ல விஷயம். அதனுடன் ஒலிக்கும் தமிழகத்தின் வில்லுப்பாட்டு இசையுடன் சேர்ந்து உருவாகியிருக்கும்  நடனக் காட்சிகள் அடர்த்தியான வண்ணங்களின் பின்னணியுடன் அபாரமாக பதிவாகியுள்ளன. ஜிப்ரானின் அற்புதமான இசையில் உருவான பாடல்கள் முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள அரசியல் நையாண்டிகளும் ரசிக்கும்படியே உள்ளன. அசந்தர்ப்பமாக ஒலிக்கும் வாழ்த்தொலிகள்,  சாகாவரம் பெற்றவனை சோதிக்க சிறுவர்கள் கல்லெறிய அந்தச்சூழலை உடனே பயன்படுத்திக் கொாண்டு கற்களை வணிகம் செய்பவர்கள், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிகாரத்தின் அபத்தங்களுக்கு இழைந்த படி அமைச்சர்கள் செய்யும் கோணங்கித்தனங்கள், குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றிய மன்னர், பெண்ணின் மீதுள்ள மோகத்தினால் செய்யும் அசட்டுத்தனங்கள் என சமகால அரசியல், வணிக சூழலை நையாண்டி செய்யும் காட்சிகள் சிறப்பாகவே பதிவாகியுள்ளன. ஒவ்வொரு முறையும் மரணத்திலிருந்து தப்பிப் பிழைக்கும் காட்சிகளில் திரையரங்கில் உள்ள குழந்தைகள் கும்மாளமிட்டு சிரிக்கின்றனர். மையக் கதைக்கு தொடர்புள்ள பகுதிகள் மிக நுட்பமாக இதில் செருகப்பட்டிருப்பதை கவனிக்க முடியும்.

ஆனால் நடிகர் மனோரஞ்சனின் பகுதியை மட்டுமே முழுநீளத் திரைப்படமாக்கியிருந்தால் 'உத்தம வில்லன்" உண்மையிலேயே  ஒரு உத்தமமான படமாகியிருந்திருக்கும். சத்ஜித்ரே இயக்கத்தில் உத்தம்குமார் நடித்த 'நாயக்' எனும் அற்புதமான திரைப்படம் நினைவிற்கு வருகிறது.  புகழையும் பணத்தையும் துரத்திச் செல்லும் ஒரு நடிகனின் அகரீதியான தனிமையையும் துயரத்தையும் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அதை இழந்து விடுவோமோ என்று அவன் படுகிற உளைச்சலையும் ரே அபாரமாகப் பதிவு செய்திருப்பார். மனோரஞ்சன் இயங்கும் பகுதியில் நிறைய  அற்புதமான கணங்கள்  உள்ளன. இந்தப் பகுதிகள் பார்வையாளர்களிடம் ஏற்படும் மனவெழுச்சிகளை இன்னொரு பகுதி தனது சாதாரணமான நகைச்சுவையால் சிதைத்து விடுகிறது என்பது உண்மையே. திரைக்கதையின் இந்தக் கலவை சரியாக உருவாகி வராமல் துண்டு துண்டாக நிற்கிறது.

வெகுசன இதழ் தொடர்கதைகளின் சாத்திய எல்லைகளுக்கு  உட்பட்டு சுஜாதா எழுதிய சிறந்த நாவல்களில் ஒன்றான  கனவுத் தொழிற்சாலையையும் இங்கு நினைவுகூரலாம். உத்தம வில்லனிலும் அதற்கான லேசான சாயல் உள்ளது. கனவுத் தொழிற்சாலை நாவலின் கதாநாயகனான நடிகன் அருண் தன்னுடைய திரைப்படங்களின் வணிக ரீதியான வெற்றியின் மிதப்பில் இருப்பான். அதே சமயத்தில் அடுத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கான பாதுகாப்பற்ற உணர்வும் இருக்கும். நிறைய புகழ், பணமிருந்தும் அவனுடைய வாழ்வு முழுமை பெறாத உணர்விருக்கும்.தன்னைச் சுற்றி எத்தனையோ அழகான நாயகிகள் இருந்தாலும்  தன்னுடைய இளம் வயது தோழியே தன்னுடைய ஆழ்மனதில் முழுக்க நிரம்பியிருப்பதை உணர்வான். அவளைத் திருமணம் செய்ய உத்தேசிப்பான். ஆனால் அவனுடைய நடிக அடையாளமே அவனுடைய திருமணத்திற்கு தடையாக இருக்கும். அந்த ஏமாற்றத்தின் கசப்பில் ஒரு நடிகையை மணந்து கொள்வான். சில பல ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்தி்ப்பான். பிறகு அவனுடைய நம்பகமான உதவியாளன் மூலம் தன் சறுக்கல்களிலிருந்து மீண்டு வருவான். சினிமா உலகின் உட்கூறுகளை துல்லியமாக விவரிக்கும் சில கிளைக்கதைகளும் உண்டு. என்றாவது ஒரு நாள் சிறந்த நடிகையாகி விட முடியும் என்கிற கனவிலும் நம்பிக்கையிலும் இருக்கும் துணை நடிகை, சினிமா தன்னை சக்கையாக மென்று துப்பி விடும் துரோகத்தில் தற்கொலை செய்து கொள்வாள். கடுமையான வறுமையில் சினிமா வாய்ப்பிற்காக ஓர் எளிய கவிஞன் சில பல இழப்பிற்கும் அலைக்கழிப்பிற்கும் பிறகு வெற்றிகரமான கவிஞனாகி புகழின் வெளிச்சத்தில் நிற்கும் வாய்ப்பை பெற்று விடுவான். ஆனால் அவனது சுயவாழ்க்கையின் ஆதாரமான அன்பை இழந்து விடுவான். தன்னுடைய கனவு சினிமாவை அதற்கான நம்பிக்கையுடன் மெல்ல உருவாக்கும் ஓர் இளைய இயக்குநனும் இருப்பான்.

சுஜாதாவின் நாவலில் உருவாகியிருக்கும் நடிகன் அருணில் கமல்ஹாசனின் சாயல் நிறைய இருக்கும். ஐரோப்பிய இயக்குநர்களின் மேற்கோள்களை நினைவு கூரும், அவர்களின் திரைக்கதையை வாசிக்கும், நிறைய திரைப்படங்களை பார்க்க விரும்பும், குறும்படம் உருவாக்க விரும்பும் அருணின் கனவுகள் போகிற போக்கில் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவனின் கனவுகளை வணிக வெற்றி என்னும் மலைப்பாம்பு தொடர்ந்து விழுங்கிய படியே பின்னால் வந்து கொண்டிருக்கும். கமல்ஹாசன் இந்த நாவலையே கூட சில பல மாற்றங்களுடன் திரைப்படமாக உருவாக்கியிருந்தால் அதுவொரு அற்புதமான படைப்பாக உருமாறியிருக்கும் எனத் தோன்றுகிறது.


கமலின் மற்ற திரைப்படங்களைக் காட்டிலும் உத்தம வில்லனில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மனோரஞ்சனின் பகுதி அவருடைய அசலான பிம்பத்திற்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படத்தின் மிக முக்கியமான, பாராட்டக்கூடிய அம்சம். புனைவிற்கும் நிஜத்திற்குமான இடைவெளிகள் அதற்கான தடயங்களுடன் வெற்றிகரமாக இத்திரைப்படத்தில் தாண்டப்பட்டிருப்பதால் அது சார்ந்த யூகங்களை உருவாக்கிக் கொள்வதில் தவறில்லை என்று தோன்றுகிறது. இத்திரைப்படத்தில் மனோரஞ்சன் சில பல தடைகளால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன 'யாமினி' உண்மையில் எவர் என்று யூகிப்பது அத்தனை கடினமானதொன்றில்லை. கேன்சர் நோயினால் அந்த நடிகை இறந்து போன அந்த சம்பவத்தைப் போலவே அதே நோயினால் இந்தப் புனைவின் மனோரஞ்சனும் இறந்து போகிறான் என்பது தற்செயலான ஒற்றுமையா அல்லது திட்டமிடப்பட்டதா எனத் தெரியவில்லை.

ஒரு மிகச் சிறந்த நடிகனாக கமல்ஹாசன் தன்னை நிருபித்துக் கொள்ளும் அபாரமான தருணங்கள் மனோரஞ்சன் வரும் பகுதியில் உள்ளன. பல வருடங்களுக்குப் பிறகு தன் மகளைக் காண நேரும் காட்சியில் அது குறித்த மனவெழுச்சி, அவளின் வெறுப்பை ஜீரணிக்க முயன்று மயங்கி விழும் காட்சி, தன் சாவை மகனிடம் சொல்லும் காட்சி, அதன் மூலம் இருவருக்கும் இடையில் இருந்த அதுவரைக்குமான பனித்திரை உடைவது, தன் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட, உதவியாளர் மறைத்த கடிதத்தை அவரையே வாசிக்கச் சொல்லும் தண்டனை கலந்த பிராயச்சித்தத்தை வழங்குவது, தன் பக்க கதையில் தானே உத்தமனாக இருப்பதை மகளிடம் நிரூபிக்கும் விருப்பத்தில் அதன் சாட்சியமான கடிதத்தை மகளையே வாசிக்கச் சொல்வது, கடிதத்தின் இறுதியில் ஒப்பனை கலைக்கப்பட்ட  மனோரஞ்சனின் முகம் புன்னகையுடன் உறைவது என..பல காட்சிகளில் கமல்ஹாசன் எனும் அற்புதமான நடிகனின் கலைநேர்த்தியுடன் கூடிய அனுபவங்கள் பதிவாகியுள்ளன.. இதில் வரும் ஒவ்வொரு துணை பாத்திரமும் அதற்கான தனித்தன்மையுடன் பதிவாகியிருப்பதும் சிறப்பே. நடிகனுக்கு நம்பகமான விசுவாசி சொக்குவாக சிறப்பாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், பணக்கார அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய விளையாட்டுப் பொம்மை போல நடிகனை திருமணம் செய்து கொண்ட பிடிவாதக் குழந்தையாக ஊர்வசி, சாதாரணமான ஒருவனை வணிக உலகில் உச்ச நடிகனாக உயா்த்திய பெருமிதத்துடன் உலவும் விஸ்வநாத் என்று துண்டு துண்டான பல்வேறு குணச்சித்திரங்கள். துணை நடிகருக்கான இவ்வருட தேசிய விருதுப் பட்டியலில் ஆண்ட்ரியாவின் பெயர் நிச்சயம் இடம் பெறும், பெறவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அத்தனை சிறப்பான நடிப்பை அவர் இத்திரைப்படத்தில் வழங்கியிருக்கிறார். யாமினியிடம் இழந்து போன காதலை, மருத்துவர் அர்ப்பணாவிடம் மீட்டுக் கொள்ள மனோரஞ்சன் முயலும் போது அதைப் பொதுவில் சொல்ல முடியாத தவிப்பும் ரகசியமாக வைத்துக் கொள்ள முயலும் தியாகமுமான உணர்வை பல காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கமல்ஹாசன் உருவாக்கும் திரைப்படங்களின் சில சிறப்புகளுக்கான பாராட்டை அவருக்கே வழங்குவதா அல்லது இயக்குநர் என்று அவர் சுட்டிக்காட்டும் அடையாளத்திற்கு வழங்குவதா என்று குழப்பம் வழக்கமாக ஏற்படும். அன்பே சிவம் திரைப்படத்தை சுந்தர்.சி. இயக்கினார் என நாம் நம்ப விரும்பினாலும் அவர் இயக்கிய மற்ற அபத்தமான திரைப்படங்களில் அன்பே சிவத்தின் சிறு தடயத்தைக் கூட காண முடியாது என்பதே காரணம். இதிலும் அவ்வாறே. ரமேஷ் அரவிந்தின் பங்கு என்னவென்று தெரியவில்லையென்றாலும் மனோரஞ்சன் இயங்கும் பகுதியில் பல இடங்களில் அற்புதமாக உபயோகிக்கப்பட்டிருக்கும் திரைமொழியின் உன்னதங்களை வரிசையாக பாராட்டலாம். உதாரணத்திற்கு சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால் மனோரஞ்சன் தன் மகளை முதன்முறையாக சந்திக்கும் காட்சியில் படப்பிடிப்பிற்கென உருவாக்கப்பட்டிருக்கும் புராதனமான பின்புலம் முதலிலும் சமகாலத்தின் பின்புலம் மாறி வரும். மனோரஞ்சன் ஒரு விநாடிக்குள் காலஇயந்திரத்திற்குள் பயணிக்கும் மனவெழுச்சியை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த திரைமொழி உத்தி பாராட்டத்தக்கது. போலவே தன் உதவியாளர் மறைத்த யாமினியின் கடிதம் வாசிக்கப்படும் போது திரையில் வில்லன் என்ற எழுத்திற்கு நிகராக கமலின் உருவம் வந்து நிற்கும். அந்தக் கடிதத்தின் நோக்கில் அவரே வில்லன் என்கிற மயக்கத்தை அந்தக் காட்சியின் அனுபவம் தரும்.

கமல்ஹாசனின் இவ்வாறான மாற்று  முயற்சிகளை சிலாகிக்கும் போது அவற்றை தமிழ் சினிமாவின் அல்லது இந்தியச் சினிமாவின் எல்லைக்குள் நின்றுதான் பாராட்ட வேண்டியிருப்பது ஒரு துரதிர்ஷ்டம். ஒரு பிரதியில் தன்னை பூதாகரமாக இட்டு நிரப்பிக் கொள்ளும் அல்லது அவ்வாறான பிரதிகளைத் தேடும் கமல்ஹாசனின் தன்முனைப்பு மோகம் அவர் முன் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. மனோரஞ்சனின் பாத்திர உருவாக்கத்தின் மூலம் அதிலிருந்து சற்றே சற்று விலகிய வகையில் உத்தம வில்லன் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சிறந்த கதையின் பாத்திர எல்லையை மீறவே மீறாத வகையில் சிறந்த இயக்குநரின் கையில் தம்மை கமல் ஒப்புக் கொடுப்பாராயின் அவரிடமிருந்து சர்வதேச தரத்தில் ஒரு திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை உத்தம வில்லன் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் இதுவொரு நல்ல முயற்சியே.

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த சுஜாதாவின் குறிப்பு இவ்வாறாக முடிகிறது. 'உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.'

1976-ல் எழுதப்பட்டிருக்கும் இந்த நம்பிக்கையை 2015-ம் ஆண்டு வரைக்கும் கூட நம்பிக்கையாகவே நீடிக்கச் செய்து கொண்டேயிருக்கும் கமல்ஹாசனின் மீது ஏமாற்றம் கொள்வதா, அல்லது அபத்தமான ரசனையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் கொண்டு  தமிழ் சினிமாவுலகில் சற்றேனும் விலகி தொடர்ந்து அந்த நம்பிக்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறாரே என ஆறுதல் கொள்வதா அல்லது என்றாவது ஒரு நாள் அந்த நம்பிக்கையை மெய்ப்பித்து விடுவார் என்று மகிழ்ச்சி கொள்வதா என்று தெரியவில்லை. எப்படியாக இருந்தாலும் நம்பிக்கையளிக்கும்  'மனோரஞ்சனுக்கு' வாழ்த்தும் பாராட்டும்.

 
suresh kannan

Wednesday, July 01, 2015

பருக்கை - வீரபாண்டியன் - சாமானியனின் இலக்கியம்



திருமணம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது உணவுப் பந்திகளில் பரிமாறும் இளைஞர்களின் முகத்தை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்? அவர்கள் சாப்பிட்டிருப்பார்களா என்று நம்மில் எத்தனை பேர் உள்ளுக்குள்ளாவது நினைத்திருப்போம்? பெரும்பாலும் இல்லை என்பதுதான் நேர்மையான விடையாக இருக்கும். இல்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் செய்யும் சிறுதவறுகளை கூட மிகைப்படுத்தி 'ஏதோ தாம் அவமானப்படுத்தப்பட்டு விட்டதான'  தோரணையுடன் மிகையாக எதிர்வினையாற்றுபவர்களே அதிகம். கண்ணெதிரேயே பல்வேறு சுவையான உணவுகள் இருக்க,  பசியைக் கிளப்பும் அவற்றின் வாசனையோடு ஆனால் அவற்றை உண்ணவும் முடியாமல் உள்ளுக்குள் தகிக்கும் பசியோடு அவற்றுடனேயே பணியாற்றுவது என்பது எதிரிக்கு கூட தர விரும்பக்கூடாத தண்டனை. அனுபவித்தவர்களால்தான் அதன் கொடுமையை உணர முடியும்.

அவ்வாறாக பணிபுரிய நேர்ந்திருக்கும் படித்த இளைஞர்களின் அவல வாழ்வினைச் சொல்லிச் செல்கிறது வீரபாண்டியனின் 'பருக்கை' நாவல். நவீன தமிழ் இலக்கியம் இதுவரை அணுகாத வாழ்வியல் அனுபவத்தின் பதிவு இது என்று கருதுகிறேன். மன்னர்களின், ஜமீன்தாரர்களின், செல்வந்தர்களின் புகழுரைகளும் சாதனைகளுமே பெரும்பாலும் வரலாறாகவும் இலக்கியமாகவும் அவர்களே வரலாற்று நாயகர்களாக பிரதானமாக முன்நிறுத்தப்பட்டு பதியப்பட்டுக் கொண்டிருந்த வரலாற்று மரபில், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களின், புறக்கணிக்கப்பட்டவர்களின் அழுகையும் அலறலும் துயரமும் வாய்மொழி புலம்பல்களாக, நாட்டார் பாடல்களாக காற்றில் கரைந்து சொற்களாக உறைந்தது போக, ஆய்வாளர்களின் முயற்சியினால் எழுத்தாக பதிவானவை மிக சொச்சமே. 

இந்திய தேசம் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு நடுத்தர வர்க்கத்தினரும் கல்வி கற்க முடிந்ததில் அவர்களின் வாழ்வியல்  சார்ந்த அக/புறஅனுபவங்ளைச் சார்ந்த படைப்புகள் மலர்ந்தன. ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தில் அவர்கள் உள்ள நிலையைப் போலவே இலக்கியத்திலும் புறக்கணிக்கப்பட்டார்கள். இந்த வகைமையில் ஜெயகாந்தன் போன்றவர்கள் முன்னோடிகளாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் சமூகத்திலிருந்தே எழுத வந்தது தொன்னூறுகளில்தான் சாத்தியமானது. 'தலித் இலக்கியம்' எனும் பிரத்யேக வகைமையும் பிறந்தது. 

***

வீரபாண்டியனின் 'பருக்கை' நாவல் பிரதானமாக சாதிய நோக்கில் அல்லாமல் வர்க்க வேறுபாட்டினால் அவதியுறும் இளைஞர்களைப் பற்றி பேசுகிறது.  சமூகத்தின் அடித்தட்டைச் சார்ந்த, கிராமத்து மற்றும் சிறுநகரத்து இளைஞர்கள் கல்விக்காக பெருநகரங்களுக்கு இடம்பெயரும் போது வசிப்பிடத்திற்காகவும் உணவிற்காகவும் அங்கு எதிர்கொள்ள நேரும் துயரங்களையும் கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல செலவுகளைச் சமாளிக்க பல்வேறு வகையான பகுதி நேரப் பணிகளை செய்யும் போது அடையும் அவலங்களையும் பற்றி விவரிக்கிறது. இந்த வகையில், இந்தப் புதினம், தமிழ் இலக்கியத்தின் முக்கியமான கோணம் மற்றும் பதிவு.

இந்தப் புதினத்தில் வரும் இளைஞர்கள் செய்யும் பகுதி நேரப் பணிகளில் பிரதானமாக இருப்பது 'கேட்டரிங்' எனப்படும் உணவுப் பரிசாகரப் பணி. இது ஏன் என்கிற காரணத்தை யூகிப்பது மிக எளிதானது. விடுதிகளில் கிடைக்கும் தரமற்ற, சுவையற்ற உணவுகளை வேறு வழியின்றி சகித்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு சுவையான உணவுகளை ருசிக்கும் அபூர்வமான தருணங்கள் இம்மாதிரியான பணிகளின் மூலம்தான் சாத்தியப்படும். எனவே முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமளவிற்கு இதற்கு அதிகம் வருவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அவ்வாறு உணவுன்பது நடைமுறையில் அத்தனை எளிதான விஷயமல்ல என்பது இந்த நாவலில் விவரிக்கப்படும் துயரமான சம்பவங்களின் மூலம் உணர முடிகிறது. அனைவரும் உண்டு முடித்த பிறகு கடைசியாகவே உணவருந்துவதற்கான வாய்ப்பு,  சமயங்களில் அதுவுமின்றி உணவு காலியாகிப் போவது, விருப்பமான உணவுகள் விரைவில் தீர்ந்து போவது, அதுவரை பசியை அடக்கிக்கொண்டிருந்த காரணத்தினால் பசி மரத்துப் போய் உணவின் மீதான ஆர்வம் குறைவது உள்ளிட்ட பல துன்பமான விஷயங்கள் அதில் நிகழ்கின்றன. பணிகளில் நேரும் தவறுகளுக்காக எதிர்கொள்ள வேண்டிய வசைகளும் அவமானங்களும், பணி செய்ததற்கான சம்பளம் கிடைப்பதிலுள்ள நிச்சயமின்மை போன்றவைகளையும் இந்த இளைஞர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

இளைஞர்களின் பசியுணர்வும் உணவின் மீதான விருப்பமும் அது சார்ந்த ஏக்கமும் ஒரு மூர்க்கமான விலங்கைப் போலவே உள்ளார்ந்து இந்த நாவலின் பெரும்பாலான பகுதிகளை ஆக்ரமித்துக் கொண்டு உலவுகிறது. நல்ல உணவிற்கான வேட்கையும் அலைச்சலும் இந்த நாவலில் தொடர்ந்து விவரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. நன்றாக உணவருந்தி கொண்டாட வேண்டிய வயதில் அது கிடைக்காத ஏக்கத்துடன் அலைவது கொடுமை. இளமையில் வறுமை கொடிது. கேட்டரிங் பணிக்காக செல்லும் போது டீலக்ஸ் பேருந்தின் அதிக கட்டணத்திற்காக தயங்கி சாதாரண பேருந்திற்காக காத்திருப்பது போன்ற பல குறிப்புகள் அவர்களின் வறுமையைச் சொல்கின்றன. ஆனால் இவை வாசகனிடமிருந்து அனுதாபத்தைக் கோரும் நோக்கில் அல்லாமல் இளைஞர்களுக்கேயுரிய உள்ள நையாண்டியோடும் நகைச்சுவைத்தன்மையோடும் பதிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆங்காங்கே வெளிப்படும் சமூகவிமர்சனங்களுடன் அமைந்த உரையாடல்களும் கவனிக்கத்தக்கது. 



இந்தப் புதினத்தில் இயங்கும்  இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதனினும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் வசதிகளையும் பற்றி புகார் கலந்த பெருமூச்சுடன் வரும் ஓர் உரையாடல் குறிப்பும் அதை இன்னொரு நபர் மறுத்து அதன் சமூகநீதி சார்ந்த தேவையை வலியுறுத்தும் பதிலுமாக சமநிலைத்தன்மையுடன் பதிவாகியிருக்கிறது. ஒட்டு மொத்த புதினத்தின் தொனியே ஒரு தனிநபரின் டைரிக்குறிப்புகளைப் போன்ற எளிமையான மொழியுடனும் விவரணைகளுடன் அமைந்துள்ளது. ஒருவகையில் அதுவே இதன் பலவீனமும் கூட. விமர்சன மரபு சார்ந்து எவ்வித சலுகையும் அல்லாமல் கறாரான பார்வையுடன் அணுகினால் இதன் மொழி, கட்டுமானம், அமைப்பு போன்றவை எவ்வித திட்டமிடலும் இல்லாமல் கால் போன போக்கில் செல்லும் பாதை போல மேம்போக்கான பிரதியாக உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்தச் சமூகத்தில் உருவாகி வந்திருக்கும் எழுத்து என்கிற காரணத்தினாலேயே இது வரவேற்கப்பட வேண்டிய அவசியத்தையும் கொண்டிருக்கிறது. அடுத்த முறை எந்த விருந்திற்காவது செல்லும் போது அங்கு உணவு பரிமாறும் இளைஞர்களின் முகங்களை சில நிமிடங்களாவது கவனிக்க வைக்கும் தூண்டுதலை இந்த நாவல் ஏற்படுத்தியிருப்பதே இதன் வெற்றி எனலாம்.

சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருது பெற்றிருக்கும் நூலாசிரியர், வீரபாண்டியனுக்கு வாழ்த்துகள். இவரிடமிருந்து மேலதிகமாக இன்னமும் ஆழமான அனுபவங்களையும், சமூக நோக்கு சார்ந்த படைப்புகளையும் எதிர்பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்த நூல் தந்திருக்கிறது. இந்தப் புதினத்தின் விற்பனை வாய்ப்பு, அது சார்ந்த வணிகம் ஆகியவற்றையெல்லாம் கவலைப்படாமல் இந்த நாவல் உரையாடும் களத்திற்காகவும் அதன் உள்ளடகத்திற்காகவும் வெளியிட்ட பரிசல் செந்தில்நாதனை பாராட்ட வேண்டும். இந்த நூலை அன்புடன் பரிசளித்த நண்பர் கே.என்.சிவராமனுக்கு நன்றி.

பருக்கை
வீரபாண்டியன்
பரிசல் புத்தக நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை-106
விலை : ரூ.160
கைப்பேசி : 9382853646 



suresh kannan