Thursday, December 22, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 20 டிசம்பர்

இன்று எல்லாமே தூக்க தினமாகிப் போனதால் துக்க தினமாகவும் போனது. 



முதலில் பார்க்க கறாராக திட்டமிட்டது, Confessions என்கிற ஜப்பானிய திரைப்படத்திற்கு. தன் மகளைக் கொன்ற சிறுவர்களை பழிவாங்கும் ஒரு டீச்சரைப் பற்றியது. மூளையை உரசிப் பார்க்கும் சற்று சிக்கலான திரைக்கதை. வெவ்வேறு பிரேம்களில் சட்சட்டென்று மாறி சில பல வாக்குமூலங்களின் மூலம் நகர்கிறது. ஆனால் அதற்கேற்ற மனநிலை இல்லாததால் கனவிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இயலாமல் வெளியேறி விட்டேன். 'பிட் படத்திற்கு ஆவலுடன் சென்ற பதின்ம சிறுவர்கள் அது கிடைக்காத ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு ' 'வக்காலி, காட்டுக்குள்ள என்னமா சூப்பரா படமெடுத்திருக்கான்' என்று இரா.முருகனின் ஒரு சிறுகதையில் வருபவன் தன்னை மறைத்துக் கொள்ள முயல்வது போல 'ஒளிப்பதிவு மிக அற்புதமாக இருந்தது' என்று வேண்டுமானாலும் இந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ளலாம். மற்றபடி நிதானமானதெர்ரு மனநிலையில் இதைப் பார்த்திரு்நதால் சுவாரசியமாகத்தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.


அங்கிருந்து விறுவிறுவென்று சத்யம் (Studio 5) தியேட்டருக்கு சென்றது, Nothing's All Bad என்கிற டென்மார்க் திரைப்படத்திற்காக. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கைகள் உள்ளன என்கிற காரணத்திற்காக கால்மணி நேரம் வரிசையில் நின்றும் அனுமதி மறுத்து விட்டார்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. 


ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அங்கிருந்து பிலிம்சேம்பருக்கு ஓடியது 'The Prize' என்னும் பிரெஞ்சு திரைப்படத்திற்காக. ஆனால் அரங்கில் நுழைந்த போது தமிழ் வசனம் கேட்டுக் கொண்டிருந்தது. அடடா! பிரெஞ்சு திரைப்படத்தில் தமிழ் கதாபாத்திரங்களா? என்று ஆனந்த அதிர்ச்சி அடைந்த போதுதான் தெரிந்தது, அது ஜெயபாரதியின் 'புத்ரன்' என்கிற திரைப்படம். ஏதோ டெலிவிஷன் சீரியல் போன்றே இருந்தது. கடந்த சில நாட்களாக நல்ல உருவாக்கங்களைப் பார்த்து விட்டு இப்படி பார்க்கும் போது படு ஏமாற்றமாக இருக்கிறது. எரிச்சலுடன் வெளியே வந்த போது உள்ளே திரையில் அழுது வடிந்து கொண்டிருந்த ஒய்.ஜி. மகேந்திரன் மலர்ச்சியாக நின்று கொண்டிருந்தார். பல ரிடையர்டு நடிகைகளையும் படம் முடிந்து வந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

ஒருவழியாக அரைமணி நேர தாமதத்தி்ல் துவங்கியது பிரெஞ்சு.

கடற்கரைக்கு மிக அருகிலிருக்கும் வீட்டில் தனிமையில் வாழ்கிறார்கள் ஒரு தாயும் மகளும். தந்தை எங்கோ மறைந்து வாழ்கிறார். இருவரும் உயிருக்கு தப்பி இங்கு வந்திருக்கிறார்கள் என்பது மாத்திரம் புரிகிறது. மற்றபடி படு நிதானமான எரிச்சலடைய வைக்கும் திரைக்கதை. இரண்டு சிறுமிகளின் விளையாட்டு உலகம் மிகத் திறமையாக வெளிக் கொண்ரப்பட்டிருக்கிறது. ரொம்பவும் போரடித்ததால் வெளியே வந்து விட்டேன்.

நாளையாவது சிறப்பான நாளாக அமைய வேண்டும். வெறும் புகைப்படங்களை வைத்துக் கொண்டு சினிமா பதிவு எழுதுவது எப்படி என்று இதைப் பார்த்தாவது யாராவது கற்றுக் கொள்ளுங்கள். 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது.

suresh kannan

1 comment:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.'

(ஒரு சிங்கம் சோம்பல் முறித்துவிட்டது....!)