Tuesday, November 12, 2019

Article 15 | 2019 | India | இயக்குநர் - Anubhav Sinha





அயல் திரை  - 16

‘சாதி என்னும் நோய்க்கூறு'



உலக சினிமா என்றதுமே சிலபல சினிமா ஆர்வலர்களுக்கு இந்தியா என்பது செளகரியமாக மறந்து போகும். சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ இந்திய திரைப்படக்கலையின் உன்னதத்தை உலக அரங்கிற்கு அடையாளம் காட்டிய முன்னோடியான திரைப்படம். பெருகி வழிந்தோடும் வணிகநோக்கு திரைப்படங்களுக்கு இடையில் ஏறத்தாழ சர்வதேச தரத்திற்கு நிகரான படைப்புகளும் இங்கு உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ அப்படியொரு துணிச்சலான. தரமான முயற்சி. ஆஸ்கர் விருதிற்காக இந்தியத் தரப்பிலிருந்து அனுப்புவதற்கு தேர்வாகியிருந்த திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. (ஆனால் ‘Gully boy’ என்கிற சுமாரான திரைப்படத்தை அனுப்பியிருக்கிறார்கள். நம் ஆஸ்கர் கனவு, கனவாகவே இருக்கட்டும் என்கிற நல்லெண்ணம் போல).

இந்தியாவில் குறிப்பாக கிராமங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் படிநிலைகளின் கொடூரத்தை துணிச்சலாகவும் யதார்த்தமாகவும் ஆர்ப்பாட்டமின்றி அம்பலப்படுத்தியிருக்கும் முக்கியமான திரைப்படம் இது. சாதியத்தோடு சமகால மதவாத அரசியலின் பல்வேறு கூறுகளையும் ஆபத்துக்களையும் உறுத்தாமல் இணைத்திருப்பது இந்தத் திரைப்படத்தை முக்கியமாக்குகிறது.

அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு  சட்டத்தின்  ‘பிரிவு 15’ என்ன சொல்கிறது?  ‘மதம், சாதி, இனம், நிறம், பிறப்பிடம், பாலினம் போன்றவற்றின் காரணமாக அரசு எவரிடமும் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது’ என்கிறது.

1950, ஜனவரி 26 அன்று முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் குடியரசாகி ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் ஆகியும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் இன்னமும் புத்தகங்களில் மட்டுமே பத்திரமாக உள்ளன. அவை நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை. இந்த உண்மையை இந்தத் திரைப்படம் கச்சிதமாக பதிவு செய்துள்ளது. ‘அரசியல் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதை எரிக்கும் முதல் நாளாக நானே இருப்பேன்’ என்று அம்பேத்கர் சொன்னார். அந்தக் கோபத்தையும் இந்தத் திரைப்படம் நேர்மறையாக பதிவாக்கியுள்ளது.

இந்தியாவின் பிரதானமான நோய்மைக்கூறுகளுள் ஒன்று சாதியம். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல இந்தியா முழுக்க சாதி, மத அரசியல் நீக்கமற நிறைந்துள்ளது. நகரங்களில் சற்று கண்ணுக்குத் தெரியாத கிருமி போல இருக்கும் இந்தக் கொடுமை, கிராமப்புறங்களில் அப்பட்டமான முறையில் முகத்தில் அறைவதாக இருக்கிறது. அப்படியொரு இந்தியக் கிராமத்தின் அசலான சித்திரத்தை இந்த திரைப்படம் வலுவாக சித்தரிக்கிறது.

**

டெல்லியில் உயர்கல்வியை முடித்திருக்கும் அயன் ரஞ்சன், ஐரோப்பிய வாசத்தால் அந்த மனநிலையில் வாழ்பவன். “அரசுப் பணியை செய்ய வேண்டும்’ என்கிற தந்தையின் வற்புறுத்தல் காரணமாக இந்தியக் காவல்துறையில் உதவி ஆணையராக (ACP) பதவியேற்கிறான். உள்துறை செயலாளரிடம் ‘கூல் சார்’ என்று இயல்பாக சொன்ன காரணத்திற்காக உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிராமத்திற்கு தூக்கியடிக்கப்படுகிறான்.

கிராமத்தின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே வரும் அயனுக்கு அங்குள்ள சாதியப் படிநிலைகளின் யதார்த்தங்களும் அவை சார்ந்த கொடுமைகளும் மெல்ல உறைக்க ஆரம்பிக்கின்றன.. கடுமையான தாகமாக இருந்தாலும் கூட தாழ்த்தப்பட்ட சாதியினர் விற்கும் நீரை அருந்தாத, அவர்களின் நிழல் கூட மேலே படுவதை விரும்பாத இடைநிலைச்சாதிக்காரர், இவர்களையும் இணைத்து மலினமாக பார்க்கும் ஆதிக்கச் சாதிக்காரர், அவற்றின் உட்பிரிவுகளிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகள் போன்றவை அயனை ஆச்சரியத்திலும் எரிச்சலிலும் ஆழ்த்துகிறது. ஆனால் அவனுடைய கோபத்தால் ஒரு உபயோகமும் இல்லை. கெட்டி தட்டிப் போன சாதியத்தை அவனால் துளி கூட அசைக்க முடியவில்லை. “அவங்களை வெக்க வேண்டிய இடத்துலதான் வெக்கணும்” என்று ஆதிக்க சாதியினர் ஒருபுறம் கொக்கரிக்க, “என்ன சாமி.. பண்றது.. எங்க விதி” என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதை ஏற்றுக் கொள்ளும் அவலத்தில் இருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கிளம்பும்  சில கோபக்கார இளைஞர்களை ‘தீவிரவாதிகள்’ என்கிற முத்திரையோடு அரசு இயந்திரம் வேட்டையாடும் அவலமும் இன்னொரு புறம் நிகழ்கிறது.

**

மூன்று தலித் சிறுமிகள் காணாமல் போன வழக்கோடு அயன் ரஞ்சனின் காவல்துறை பணி ஆரம்பிக்கிறது. அதில் இரண்டு சிறுமிகள் மரத்தில் தூக்கில் தொங்குகிறார்கள். ஒரு சிறுமி என்னவானாள் என்பது தெரியவில்லை. ‘இரு சிறுமிகளுக்கிடையே தகாத உறவு இருந்ததாகவும் அதனால் அவர்களின் பெற்றோர்கள் ஆணவக் கொலை செய்து விட்டதாகவும் காவல்துறை வழக்கை ஜோடிக்கிறது. இதற்காக சிறுமிகளின் தந்தைகளையும் அடித்து உதைத்து கைது செய்கிறது. தங்களின் பிரியமான மகள்களை இழந்ததோடு கொலைப்பழியையும் ஏற்க வேண்டிய பரிதாபமான நிலைக்கு அவர்கள் ஆளாகின்றார்கள்.


அயன் ரஞ்சன் மெல்ல இந்த வழக்கிற்குள் இறங்குகிறான். காணாமல் போன சிறுமி எங்கோ உயிருடன்தான் இருப்பாள் என்று அவனின் உள்ளுணர்வு சொல்கிறது. அவளைக் கண்டுபிடித்து விட்டால் இந்த வழக்கு தொடர்பான விடைகள் கிடைத்து விடும் என்று நம்புகிறான். ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. ஒருபுறம் அரசு இயந்திரமும் இன்னொரு புறம் சாதியமும் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன.

நேர்மையும் மனச்சாட்சியும் உள்ள சில காவல்துறையினரோடு விசாரணையில் இறங்குகிறான் அயன் ரஞ்சன். அந்த ஊரில் தோல் தொழிற்சாலை நடத்தும் செல்வாக்குள்ள நபரான அன்ஷூ என்பவனின் மீது சந்தேகம் வருகிறது. மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக சிறுமிகள் வன்கலவி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் மற்ற தொழிலாளர்கள் அச்சப்பட்டு கூலி உயர்வு கேட்டு போராட மாட்டார்கள் என்பது அவனது திட்டம். “நாங்களா பார்த்து கொடுக்கறதுதான் அவங்க இடம். அவங்களா கேட்டா நசுக்கிடுவோம்” என்று விசாரணையில் எக்காளத்தோடு பதில் சொல்கிறான்.

இந்த உண்மை தெரிந்தாலும் அயன் ரஞ்சனால் அன்ஷூவை எதுவும் செய்யமுடியவில்லை. அன்ஷூவின் செல்வாக்கும் சாதியும் குறிப்பாக கருப்பு ஆடுகளாக இருக்கும் சக அதிகாரிகளின் துரோகமும் அவனுடைய கையைக் கட்டிப் போடுகின்றன. “நீங்க இருந்து போயிடுவீங்க சார்.. நாங்க இங்கயேதான் இருந்தாகணும். வெட்டிப் போட்டுடுவாங்க” என்று பதைபதைக்கிறார் இன்ஸ்பெக்டர் பிரம்மதத். இவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அது சார்ந்த பெருமிதத்தோடு பல கீழ்மைகளைச் செய்கிறார். தெரு நாயின் மீது அன்பையும் கருணையையும் காட்டும் இவர், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலேயே மனிதர்கள் மீது அவற்றைக் காட்ட மறுக்கிறார். இந்த முரண் மிக இயல்பாகப் பதிவாகியுள்ளது.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் மூலம் சிறுமிகள் வன்கலவி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆனால் ரிப்போர்ட் எழுதப் போகும் இளம் மருத்துவரை பிரம்மதத் மிரட்டுகிறார். பிறகு அயன் ரஞ்சன் தரும் துணிச்சல் காரணமாக சாட்சியங்களை வலுவாக்குகிறார் இளம் மருத்துவர்.

ஆனால் ஒருநிலையில் அயன் ரஞ்சனின் அத்தனை முயற்சிகளுக்கும் பெரிய முட்டுக்கட்டையைப் போடுகிறது மேலிடம். இந்த வழக்கு சிபிஐ  விசாரணைக்கு மாற்றப்படுகிறது. சிபிஐ அதிகாரியாக வரும் பணிக்கரும் (நம்ம ஊர் நாசர் இந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்). சாதி மற்றும் அதிகார வெறி கொண்டிருப்பதாகத் தெரிவதால் இந்த வழக்கிற்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏறத்தாழ பறிபோகிறது. அயன் ரஞ்சன் சஸ்பெண்ட் ஆகிறார்.

இந்த வழக்கு என்னவானது, காணாமல் போன சிறுமி கிடைத்தாளா, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா, அயன் ரஞ்சனின் போராட்டம் வெற்றி பெற்றதா என்பதையெல்லாம் இயல்பான காட்சிகளாகவும் அதே சமயத்தில் பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். நேர்மறைத்தன்மையின் அழகு துளிர்க்கும் நையாண்டியின் இறுதிக்காட்சியோடு இந்தப் படம் முடிந்திருப்பதுதான் சிறப்பு.

**

ஏஸிபி அயன்ரஞ்சனாக, ஆயுஷ்மான் குரானா அற்புதமாக நடித்திருக்கிறார். நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலோடு அந்தக் கிராமத்திற்குள் நுழைகிறார் சாதியமும் பழமைவாதமும் நிறைந்திருக்கும் அந்த ஊரில் ஓர் அயல் கிரக ஜீவி போல் தாம் உணர்வதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆயுஷ்மான்.

அயன் ரஞ்சன், காவல்துறையில் உள்ள தன் சக ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களின் சாதியைப் பற்றி விசாரிக்கும் காட்சி முக்கியமானது. அவர்களின் சாதியை அறிவது அவர் நோக்கமல்ல. அதன் மூலம் ஒவ்வொரு சாதியிலும் உள்ள உட்பிரிவுகள், அதனுள்ளும் ‘தான்தான் மேலே’ என்று அடித்துக் கொள்ளும் அபத்தம், ஆதிக்க சாதியினரின் பிரிவுக்குள்ளேயும்  இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், உயர்வு மனப்பான்மைகள் போன்றவற்றை அவல நகைச்சுவையுடன் அந்தக் காட்சி வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றை அடையாளமாக்க முயலும் சமகால அரசின் பல அத்துமீறல்கள் இதில் துண்டுக்காட்சிகளின் வழியாக விரிகின்றன.

கசாப்புக்கடையில் பணிபுரியும் தலித் இளைஞர்கள் நடுத்தெருவில் அடிக்கப்படுவது. சாதியக்கொடுமைகள் காரணமாக மதம் மாறும் தலித் சமூக மக்களை ‘வாருங்கள், இந்துக்களாக ஒன்றிணைந்து நிற்போம்” என்று மதத்தலைவர்கள் தந்திரமாக அரவணைக்க முயல்வது, தலித்களுடன் ஒன்றாக இணைந்து உணவருந்துவதாக பொது மேடையில் நாடகமாடும் மதக்கட்சியினர் அவர்களுக்கான பாத்திரங்களை தனியாக கொண்டு வருவது, சில தலித் தலைவர்களே அறியாமை அல்லது ஆதாயம் காரணமாக கைகோர்த்து நிற்பது, ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேச வற்புறுத்தும் சிபிஐ அதிகாரி … என்று பல காட்சிகள் சமகால அரசியலின் மீது விமர்சனங்களாக அமைந்துள்ளன. இவை திரைப்படத்தின் இடையே உறுத்தாமலும் பிரச்சாரமாக மாறாலும் நிகழ்ந்திருப்பதுதான் அற்புதம்.

**

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பிரச்சினைகளைப் பேசக் கூட ஆதிக்கச் சாதியிலிருந்துதான் ஒருவர் வர வேண்டுமா? என்று அயன் ரஞ்சன் பாத்திரம் குறித்து விமர்சனம் வைக்கப்படுகிறது. அவன் பிறப்பால் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவன் என்பதை விடவும் ‘வெளியில் இருந்து வந்தவன், அந்த நோக்கில் பார்ப்பவன்’ என்பதுதான் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. 

டெல்லியில் உயர்கல்வியை முடித்தாலும் மேலை நாட்டில் சில காலம் ஐரோப்பிய மனநிலையில் வாழ்ந்தாலும் இந்தியாவிலுள்ள சாதியமைப்புகள் பற்றி அவனுக்குத் தெரியாமல் இருக்காது. ஆனால் ஒரு நகரவாசி என்னும் எல்லைக்குள்ளேதான் இவற்றை அவன் அறிவான். கிராமத்திற்குள் நுழையும் போதுதான் சாதி என்னும் நச்சுக்காற்றின் வீச்சை அவனால் துல்லியமாகவும் காத்திரமாகவும் உணர முடிகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாமல் அவனுக்கு மூச்சுத்திணறுகிறது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

மாறாக  கிராமத்து சூழலிலேயே வாழ்பவர்கள் இந்த அவலமான சூழலை மிக இயல்பாக கடக்கின்றார்கள். தினம் தினம் அதனுடனேயே வாழ்வதால் அவர்களுக்கு எதுவும் உறைப்பதில்லை. ‘சாதியைக் காரணம் காட்டி ஒரு சக மனிதனுக்கு கீழ்மைகளைச் செய்கிறோமே” என்று ஆதிக்கச் சாதியினருக்கு உறைப்பதில்லை. இதைப் போலவே இன்னொரு பக்கம், ‘தான் ஏன் இப்படி பல கொடுமைகளைச் சகித்துக் கொள்ள வேண்டும்?” என்பது குறித்த விழிப்புணர்வு தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடமும் இல்லை. “எத்தனையோ காலமா இப்படித்தாங்கய்யா இருக்குது. எதையும் மாத்த முடியாது” என்னும் விரக்தியிலும் ஆண்டைகளை அனுசரிக்க வேண்டிய அச்சத்திலும் இருக்கிறார்கள்.

சகதியிலேயே தொடர்ந்து வாழும் ஒரு நபருக்கு எவ்வாறு அந்த நாற்றம் பழகி அதுவே இயல்பென்று வாழ்கிறாரோ, அப்படியே இவர்களும் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதற்கு மாறாக வெளியில் இருந்து வருபவருக்குத்தான் இந்தச் சூழலின் அபத்தம் அதிகமாக உறைக்கிறது. அயன் ரஞ்சன் அப்படிப்பட்ட ஒருவன் என்பதாகத்தான் பார்க்க முடியும். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் இவ்வாறான கோபத்தில் கிளம்பும் சிலர் ‘பயங்கரவாதிகளாக’ சித்தரிக்கப்பட்டு காவல்துறையால் வேட்டையாடப்படுகிறார்கள்.

**

இந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்ட மிகச் சிறப்பான நடிப்பு என இன்ஸ்பெக்டர் பிரம்மதத்-ஆக நடித்த மனோஜ் பஹ்வா-வை சொல்ல வேண்டும். அடிப்படையில் நகைச்சுவை நடிகரான இவர், இந்த திரைப்படத்தில் இயல்பான எதிர்மறைத்தன்மையை வெளிப்படுத்தி தன் வில்லத்தனத்தை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். சாதியத்தில் ஊறிப்போன ஒரு கிராமத்துக்காரரின் சித்திரத்தையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளார்.

செல்வாக்குள்ள நபர்களிடம் பம்முவதாக இருக்கட்டும், சொந்த சாதிக்காரர்களுக்கு சாதகமாக நடப்பதாகட்டும், தன் பேச்சைக் கேட்காமல் விசாரணையைத் துரிதப்படுத்தும் அயன் ரஞ்சனைப் பார்த்து உள்ளூற தவிப்பதாகட்டும், அவற்றிற்கு சாமர்த்தியமாக முட்டுக்கட்டை போடுவதாகட்டும், தன்னுடைய கீழ்மை வெளிப்பட்டு விடக்கூடாது என்று பதறுவதாகட்டும்.. ஏறத்தாழ அனைத்துக் காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

போலவே வயதான கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் குமுத் மிஸ்ராவின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. காவல்துறையின் நடைமுறை அநீதிக்கும் மனச்சாட்சிக்கும் இடையே தத்தளிப்பவராக வருகிறார். மேலதிகாரியான பிரம்மதத்தை பகைத்துக் கொள்ள முடியாமலும், அதே சமயத்தில் அயன் ரஞ்சனின் நியாயத்திற்கு துணை போக முடியாமலும் இவர் தவிப்பது நன்கு வெளிப்பட்டுள்ளது.

தன் குற்றத்தை வெளிப்படுத்தி சட்டத்தின் கீழ் மாட்டி விடும் கான்ஸ்டபிளை, இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அடித்து “உன்னையெல்லாம் அப்படியே செருப்பு தைக்க விட்ருக்கணும்டா.. நீயெல்லாம் பதவிக்கு வந்ததால்தான் இப்படியெல்லாம் ஆகுது” என்று கொதிக்கும் போது பதிலுக்கு அதிகாரியை கன்னத்தில் அறைந்து ‘நாங்கல்லாம் எத்தனை காலத்திற்கு செருப்பு தைத்துக் கொண்டேயிருப்பது?” என்று வெடிக்கும் காட்சி முக்கியமானது மட்டுமல்ல, அற்புதமானதும் கூட.

Ra.One போன்ற பொழுதுபோக்குத் திரைப்படங்களை இயக்கிய அனுபவ் சின்ஹா-விடமிருந்து இப்படியொரு துணிச்சலான திரைப்படம் வந்திருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. சமகால அரசியலை பல கோணங்களில் எதிர்கொள்ளும் நோக்கில் உருவாகியிருக்கும் திரைப்படம் இது. இவான் முல்லிகனின் அபாரமான ஒளிப்பதிவும் அவசியமான காட்சிகளில் திகிலைக் கிளப்பும் மங்கேஷ் தக்தேயின் அட்டகாசமான பின்னணி இசையும் இத்திரைப்படத்திற்கு வலு சேர்க்கின்றன.

இந்தியாவின் பிரத்யேகமான, பல நூற்றாண்டு கால பிரச்சினையான சாதியத்தைப் பற்றி மிகச் சரியான எதிர்ப்புக்குரலாக எழுந்திருக்கும் இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்றாக இருக்கும். 


(குமுதம் தீராநதி -  NOVEMBER  2019 இதழில் பிரசுரமானது) 

suresh kannan

No comments: