Saturday, November 09, 2019

Searching | 2018 | United States | இயக்குநர் - Aneesh Chaganty





அயல் திரை  - 13
 
திரை சூழ் உலகு


காணாமல் போன தனது மகளை, ஒரு தந்தை தேடுவதுதான் இந்த அமெரிக்க த்ரில்லர் திரைப்படத்தின் ஒரு வரி கதை. ‘இதிலென்ன புதுமை இருக்கிறது? இது போல் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளனவே?’ என்று நீங்கள் வியக்கலாம். ஆம், கதை பழசாக இருக்கலாம். ஆனால் இதன் திரைக்கதை புதுமையானது. இதில் வரும் எதுவுமே நேரடியான காட்சிகள் அல்ல. அனைத்துக் காட்சிகளுமே கணினித் திரை, கைபேசி திரை, கண்காணிப்பு காமிரா திரை என்று திரைக் காட்சிகளின் வழியாகவே முழுத் திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

“படம் முழுவதும் செல்போன், கம்ப்யூட்டர்.. ஸ்கிரீனா.?.. எனில் படம் சலிப்பாக இருக்குமோ?” என்று ஒருவேளை உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்குமளவிற்கு பரபரப்பான திரைக்கதையாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

**

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகரம். சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர் டேவிட் கிம். கணினித்துறையில் பணியாற்றுபவர். பள்ளியில் படிக்கும் தன் மகளான மார்கோட் கிம்முடன் கணினி, கைபேசி, சமூகவலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் எப்போதும் தொடர்பில் இருக்கிறார். இருவரும் நேரில் சந்திப்பது அபூர்வமான விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில், ஒரு நாள் மகளுடனான தகவல் தொடர்பு அறுந்து போகிறது. கைபேசி முதற்கொண்டு எதில் அழைத்தாலும் அவளிடமிருந்து பதில் வரவில்லை. சற்று பதட்டமடையும் அவர், மகளின் பியானோ டீச்சரை கைபேசியில் அழைத்து விசாரிக்கிறார். அவள் ஆறு மாதத்திற்கு முன்பே பியானோ வகுப்பிலிருந்து நின்று போன அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. ஆனால் மாதா மாதம் அதற்கான கட்டணத்தை மகளிடம் இவர் அளித்திருக்கிறார்.

மகளுடன் படிக்கும் வகுப்புத் தோழனை அழைத்து விசாரிக்கிறார். அங்கும் இல்லை. இந்தத் தேடலிலேயே இரண்டு, மூன்று நாட்கள் கடந்து விடுவதால் வேறு வழியின்றி காவல்துறையிடம் புகார் அளிக்கிறார். ரோஸ்மேரி விக் என்கிற பெண் காவல்துறை அதிகாரியிடம் இந்த வழக்கு சென்று சேர்கிறது. ‘நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதீர்கள்’ என்கிற ஆறுதலை அளிக்கிறார் ரோஸ்மேரி.

இதற்கிடையில் மகளின் சமூகவலைத்தள கணக்குகளின் உள்ளே சென்று ஆராய்கிறார் டேவிட். பியானா வகுப்பிற்காக அளிக்கப்பட்ட பணத்தை வேறு எவருக்கோ நன்கொடையாக மகள் அளித்திருப்பதைக் கண்டு வியக்கிறார். ஆனால் பெற்றுக் கொண்டவரின் கணக்கு மூடப்பட்டிருக்கிறது. மகளிடமிருந்து தகவல் அறுந்து போன அந்தக் கணத்தின் முன்பான தருணங்களில் எங்கெல்லாம் இருந்திருக்கிறாள் என்பது குறித்தான வரைபடத்தை உருவாக்குகிறார். இதற்காக மகளின் சமூகவலைத்தள நண்பர்கள் உள்ளிட்டு பலரிடம் விசாரிக்கிறார்.

இந்தத் தகவல்களைின் உதவியுடன் தன்னுடைய விசாரணையை மேற்கோள்ளும் காவல்துறை அதிகாரி, மார்கோட் கிம் பணத்துடன் எங்காவது ஓடியிருக்கலாம் என்கிறார். ஆனால் டேவிட்டுக்கு அதில் நம்பிக்கையில்லை. ‘என் மகள் அந்த மாதிரியான பெண்ணில்லை’ என்று மறுக்கிறார். இதற்கிடையில் ‘மார்கோட் கிம்’மை தான் கொலை செய்ததாக வாக்குமூலம் தருகிறார் ஒருவர். டேவிட்டுக்கு அதிர்ச்சியும் துயரமும் ஏற்படுகிறது.

தான் சேகரித்து வைத்திருக்கும் தரவுகளை மீண்டும் ஆராயும் போது அதிர்ச்சியான விஷயம் ஒன்றை கண்டுபிடிக்கிறார் டேவிட். அதைப் பின்தொடர்ந்து செல்லும் போது மேலும் பல ஆச்சரியங்கள் கிடைக்கின்றன. மார்கோட் கிம்மிற்கு என்னதான் ஆனது, குற்றவாளி யார் என்பதையெல்லாம் பிறகு வரும் பரபரப்பான காட்சிகள் விவரிக்கின்றன.

கவனியுங்கள். இத்தனை விவரங்களும் நேரடியான காட்சிகளாக அல்லாமல் கைபேசி, கணினி, வெப்கேம் உள்ளிட்ட திரைகளின் வழியாகவே விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு காட்சியும் திணிக்கப்பட்டதாகவோ, சலிப்பை ஏற்படுத்துவதாகவோ அமையவில்லை. அத்தனை திறமையாக இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

**

கணினி, கைபேசி மற்றும் சமூகவலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திரைப்படம் சுவாரசியத்தையும் மனநெருக்கத்தையும் தரும். அந்த அளவிற்கு பல்வேறு திரைகள் இதில் விரிந்த வண்ணம் உள்ளன. அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறான திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் துவக்கமே விண்டோஸ் 98-ன் கணினித் திரையோடு அறிமுகமாகிறது. பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களின் வழியாக மார்கோட் கிம்மின் இளமைப்பருவமும் அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிகரமான தருணங்களும் நமக்கு அறிமுகமாகின்றன. புற்றுநோயால் இறந்து போகும் தாயின் பிரிவையும் நம்மால் அறிய முடிகிறது.

முழுவதும் திரைகளால் மட்டுமே விரியும் புதுமையான திரைக்கதையில் அமைந்த த்ரில்லர் திரைப்படம் என்றாலும் இதன் மூலம் நாம் பல நுட்பமான விஷயங்களை உணர முடிகிறது.

கைபேசி, கணினி, வெப்-கேம், சிசிடிவி காமிரா, தொலைக்காட்சி, ATM என்று ஒவ்வொரு தினமும் அன்றாடம் எத்தனை திரைகளின் மூலமாக நம் வாழ்க்கை கழிகிறது என்பதை பிரக்ஞைபூர்வமாக இந்த திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்பது போய், ஒரே அறையில் ஆனால் பல திரைக்களுக்கிடையில் கழியும் குறுகிய வாழ்க்கைக்குள் விழுந்து விட்டோம். இந்த திரைப்படத்தின் காட்சிகளின் மூலம்தான் ‘நாம் இத்தனை திரைகளை தினமும் பயன்படுத்துகிறோம் இல்லையா?” என்பது ஆச்சரியத்துடன் உறைக்கிறது. திரைசூழ் உலகு.

இணையமும் கண்காணிப்புச் சமூகமும் தனிநபர் அந்தரங்கம் என்கிற விஷயத்தை மதிப்பில்லாமல் செய்து விடுகின்றன. சமூகவலைத்தளங்களில் நாமே முன்வந்து பதியும் அந்தரங்கத் தகவல்கள் தவிர நம்மை கண்காணிக்கும் பல விஷயங்களின் மூலம் நம்மைப் பற்றிய தனிப்பட்ட செய்திகள் ஏராளமாக கசிந்து கொண்டேயிருக்கின்றன. இவ்வாறு வெளிப்படும் துளித்துளியான தகவல்களை திட்டமிட்டும் கச்சிதமாகவும் இணைத்தால் ஒரு நபரின் அன்றாட நிகழ்வுகளின் அனைத்துத் தகவல்களையும் திரட்டி விட முடியும். அந்த அளவிற்கு நம்மைப் பற்றிய தகவல்களை வாரி இறைத்துக் கொண்டேயிருக்கிறோம். எங்கு செல்கிறோம், எங்கே இருக்கிறோம், என்ன வாங்கினோம் என்பது உள்ளிட்ட பல தகவல்களை பொதுவெளியில் உலவ விடுவதில் அற்பமான இன்பத்தை அடைகிறோம். இதற்குப் பின்னால் பெரிய வணிகப் பின்னலும் இருக்கிறது. நம்முடைய அந்தரங்கத் தகவல்களை அவர்கள் கச்சிதமாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

இது மட்டுமல்ல, முறையான அறிமுகமில்லாத முகமிலி மனிதர்களிடம் உருவாகும் இணையப் பழக்கம் மூலம் பல ஆபத்துக்களையும் ஏமாற்றங்களையும் அடையும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் மார்கோட் கிம், தவறான நபரிடம் தன் பணத்தை இழக்கிறாள். அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள் அவளைச் சிக்கல்களுக்கு இட்டுச் செல்கின்றன.

எந்தவொரு பெற்றோருக்குமே தங்களின் பிள்ளைகளைப் பற்றிய உயர்வான மதிப்பீடுதான் இருக்கும். நல்ல விஷயம்தான். ஆனால் அதை சமநிலையுடன் அணுகுவது முக்கியமானது. தன்னுடைய பிள்ளை ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கியதாக அறிந்தவுடன் அவர்களிடமிருந்து வரும் முதல் வசனமே இதுவாகத்தான் இருக்கும். ‘எங்க பிள்ளையைப் பற்றி எங்களுக்கு நல்லாத் தெரியும். அவன் இந்த மாதிரி தப்பு வழிக்கெல்லாம் போறவன் இல்லை’.

ஒருவர் என்னதான் தம் பிள்ளைகளிடம் நட்புரீதியில் பழகினாலும் அவர்களைப் பற்றிய முழு பின்னணியும் அவருக்குத் தெரியுமா என்றால் தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த அதிர்ச்சியான விஷயத்தையும் இந்த திரைப்படம் பதிவு செய்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் தந்தை பாத்திரத்தின் மூலம் அதை உணர முடிகிறது.  தன்னுடைய மகளுடன் அவர்  நவீன நுட்பங்களின் மூலம் தொடர்ந்து உரையாடினாலும், அன்பைக் காட்டிக் கொண்டிருந்தாலும் அவர்களின் இடையே ஏராளமான இடைவெளியும் இருக்கிறது. தாயின் மரணத்தினால் மகளின் மனதினுள் உறைந்திருக்கும் துயரத்தின் சதவீதத்தை சரியாக கணிக்கத் தவறி விடுகிறார் தந்தை.

தகவல் தொடர்பு சாதனங்களும் வசதிகளும் பெருக பெருகத்தான் மனிதர்களுக்கு நடுவிலான தகவல் இடைவெளியும் அதிகமாகிக் கொண்டே போகிறது என்கிற சுவாரசியமான நகைமுரண் செய்தியை இந்த திரைப்படம் உணர்த்திச் செல்கிறது.

**

அனீஷ் சாகந்தியின் அறிமுகத் திரைப்படம் இது. அனீஷ் சாகந்தி வாஷிங்டனில் பிறந்தவர் என்றாலும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவருடைய பெற்றோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பல்வேறு குறும்படங்களையும் விளம்பரங்களையும் உருவாக்கிய அனீஷ் சாகந்தி, இந்த திரைப்படத்தையும் முதலில் குறும்படமாகவே உருவாக்கத் திட்டமிட்டார். ஆனால் அவரது திறமை காரணமாக முழுநீளத் திரைப்படமாக்குவதற்கான நிதி கிடைத்தது. திரைகளால் மட்டும் விவரிக்கப்படும் திரைக்கதை, முழுநீளத் திரைப்படத்திற்கு தகுதியானதா, அத்தனை நீளத்திற்கு இழுக்க முடியுமா என்றெல்லாம் சந்தேகம் முதலில் இருந்தது. ஆனால் சுவாரசியமான திரைக்கதையின் மூலம் இதைச் சாதித்திருக்கிறார்கள்.

ஒரு திரில்லர் என்பதைத் தாண்டி இணையம், நுட்பம், சமூகவலைத்தளம் போன்றவற்றின் சாதக பாதகங்கள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி உள்ளிட்ட பல விஷயங்களை இந்த திரைப்படம் மிக நுட்பமாக உணர்த்திச் செல்கிறது. இணையப்பயன்பாட்டை அதிகம் மேற்கொள்கிறவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பும் கூட. 

(குமுதம் தீராநதி -  JULY  2019 இதழில் பிரசுரமானது) 


suresh kannan

No comments: