Monday, November 28, 2016

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமையும் நவீனமுமான ஒரு கதைசொல்லி




வருடம் 1985. நான் பத்தாம் வகுப்பில் இருக்கும் போது தமிழ்  இரண்டாம் தாளில் சில சிறுகதைகள் பாடத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. என்னவென்று தெரியாமலேயே அதிலுள்ள ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வட்டார வழக்கு தடைகளையும் தாண்டி அதன் சுவாரசியத்தை அந்த இளம் வயதிலேயே உணர முடிந்தது.

நடுத்தர வர்க்க வாழ்வின் அவல நகைச்சுவையை  நையாண்டியுடன் சித்தரிக்கிற சிறுகதையது  என்பதும்  அதை எழுதியவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவரான  'புதுமைப்பித்தன்' என்பது புரிவதற்கும்  அறிவதற்கும் சில வருடங்கள் கடக்க வேண்டியிருந்தாலும் அப்போதைய முதிரா வாசிப்பில் சிறுகதையில் வரும் சிறுமியின் சித்திரம் மிகவும் பிடித்திருந்தது. வர்க்க பேதத்தை உணராமல் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டு வீட்டில் விட அடம் பிடிக்கும் காட்சியும், விருந்தாளியை 'பல்லு மாமா' என்றழைக்கும் குறும்புத்தனமும் அந்தச் சிறுகதையை மறக்க முடியாமல் செய்தன.


***

சிறுகதை எனும் வடிவம் மேற்கிலிருந்து தமிழிற்கு  இறக்குமதியானது என்றாலும் அந்த வடிவம் இங்கு பரவலாக அறிமுகமாவதற்கு முன்பே அதில் உள்ள பல சாத்தியங்களை புதுமைப்பித்தன் முயன்று பார்த்து விட்டார் என்பது பிரமிப்பிற்கு உரியது. உலக இலக்கியத்தில் பரிச்சயம் கொண்டிருந்த அவர், வேறு வேறு பாணிகளில் நிறைய சிறுகதைகளை தமிழில் எழுதினார்.  நடுத்தர வர்க்க வாழ்வின் அவலம், விளிம்பு நிலை மக்களின் நுண்மையான சித்தரிப்புகள், இதிகாச கதையின் மீளுருவாக்கம்  என்று பல வகைகள்.

'அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்து சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.' (மகாமசானம்) என்பது  போன்ற  இன்றைக்கும் நவீனமாகத் தோன்றுகிற வாக்கியங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

புதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்புகள் பல்வேறு வடிவங்களில் வந்து விட்டன.  நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை கையாள்வது பற்றி கேட்பாரே இல்லை. 'சிறந்த சிறுகதைகள்' 'பத்து முத்துகள்' என்ற தலைப்புகளில் இஷ்டம் போல் அடித்து தள்ளுவது ஒரு மோசமான வணிக உத்தியாக மாறி விட்டது. ஒரு முன்னோடி எழுத்தாளரின் படைப்புகளை கால வரிசையில் தொகுத்து பிழையின்றி செம்மை பதிப்பாக கொண்டு வர வேண்டும் என்கிற நாணயமும் அர்ப்பணிப்பும் பெரும்பாலான பதிப்பாளர்களிடம் இல்லை. சில  பதிப்பகங்களே அந்த  நியாயங்களைச் செய்கின்றன. அந்த வகையில் ஆ.இரா.வேங்கடாசலபதியை பதிப்பாசிரியராக கொண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்ட செம்மை பதிப்பு குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் அன்னம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கும் 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுப்பு முக்கியமானது. இது எந்த வகையில் முந்தைய  முயற்சிகளிலிருந்து வேறுபட்டது?

சிறுகதையின் தன்மையைக் கொண்டு அதை ஒரு குறிப்பிட்ட வகைமையில் பகுத்து கீழ்கண்ட  பதினோரு பகுப்புகளாக பிரித்து இந்த தொகுப்பை உருவாக்கியிருக்கிறார். சி.மோகன். மிகுந்த உழைப்பையும் நுண்ணுணர்வுடனான வாசிப்புத் தன்மையையும் கோரும் விஷயம் இது.

1) மாயப் புனைவு, 2) விந்தைப் புனைவு, 3) வேதாந்த விசாரம், 4) புராண, இதிகாசங்கள் - மீள்பரிசீலனை, 5) துப்பறியும் கதைகள், 6) குழந்தை-சிறுவர் - இளைஞர் உலகம், 7) விளிம்பு நிலை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை, 8) எழுத்தாளர் வாழக்கை 9) கால யதார்த்தமும் மனித மனமும், 10) சமூக யதார்த்தமும் காதல் மனமும், 11) தாம்பத்யம்.

சில சிறுகதைகளை ஒரு குறிப்பிட்ட வகைமையில் அடக்க முடியாமல் தவித்த அவஸ்தை உள்ளிட்ட பல விவரங்களை முன்னுரையில் விஸ்தாரமாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான தொகுப்பு நூல் என்று இதைச் சொல்லலாம்.

**

வருடம் 2016. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகளின் தமிழ் பாட நூலை தற்செயலாக புரட்டிப் பார்த்தேன். என் இளம்வயதில் நான் வாசித்து ரசித்த அதே சிறுகதை - 'ஒரு நாள் கழிந்தது', இதிலும் இருந்தது.

"பிடிச்சிருந்துதா?" என்று கேட்டேன்.. "பல்லு மாமா கதைதானே? ம்.." என்றாள் உற்சாகமாய். காலம் அப்படியே உறைந்து நின்றது போன்ற பிரமை.  புதுமைப்பித்தன் எழுத்தின் சாஸ்வதத்திற்கு இதுவொரு சிறிய உதாரணம்.

**

புதுமைப்பித்தன் சிறுகதைகள் / பகுப்பு: சி.மோகன் /முதற்பதிப்பு மே 2016 / 
 வெளியீடு: அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007. 
விலை. ரூ.500/-

நன்றி: அலமாரி - புத்தக மதிப்புரை இதழ்

suresh kannan

No comments: