Tuesday, December 22, 2009

ஜெயமோகன் நூல் வெளியீட்டு விழா 19.12.09


பத்து நூல்கள். தேவநேய பாவாணர் நூலக அரங்கம்.

பின்நவீனத்துவ சூழலுக்கு ஏற்றாற் போல் அடுக்குகளில் புத்தகங்கள் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு மரபை கட்டுடைக்கும் இந்த நூலகத்திற்கு அவ்வப்போது செல்வது வழக்கமெனினும் பக்கத்திலிருக்கும் இந்த அரங்கத்திற்கு செல்வது அபூர்வம். காதல் தோல்வியடைந்தவனின் கவிதைப் புத்தகம் மாதிரி அழுது வடிந்து கொண்டிருக்கும் அந்த அரங்கு, இப்போது அறிமுகப்படுத்தப்படும் சினிமா நாயகி போல் பளபளவென்றும் (ஏசி) குளிர்ச்சியோடுமிருந்தது.

(நூலகங்களில் புத்கக அடுக்கு முறை பற்றிப் பேசும் போது The Shawshank Redemption திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக்காட்சி நினைவுக்கு வருகிறது. தொடர்ச்சியான போராட்டத்தைத் தொடர்ந்து அதிகாரிகளின் அனுமதியுடன் சிறையில் நூலகம் ஒன்றை அமைப்பார் Tim Robbins. சக சிறைவாசிகளின் உதவியோடு புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு ஆங்கில புதினத்தைக் காட்டி 'அது எதைப் பற்றியது?' என்று கேட்பார் ஒருவர். "சிறையிலிருந்து தப்பிப்பதற்காக தொடர்ச்சியாக முயலும் ஒருவரைப் பற்றின புதினம்" என்று பதிலளிப்பார் Tim Robbins. "அப்படியென்றால் அதை 'Education' என்ற அடுக்கில் வைத்து விடவா?" என்று குறும்பாக கேட்பார் Morgan Freeman.)

நான் சென்ற போது ஏறக்குறைய அரங்கு நிறைந்து பதிப்பாளர் மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரை நிகழந்து கொண்டிருந்தது. 'எழுத்தாளன் படைப்பிலக்கியத்தைத் தாண்டி எல்லாத் துறையையும் பற்றி கருத்து சொல்ல வேண்டுமா? எனக் கேட்கப்படுகிறது. இன்றைய மெளன சூழ்நிலையில் எழுத்தாளன்தான் அனைத்தையும் பற்றி உரையாட வேண்டியிருக்கிறது' என்று வெளியிடப்படயிருக்கிற நூல்களின் உள்ளடக்கங்களை தர்க்கப்படுத்திக் கொண்டிருந்தார். தலைமை உரை ஆற்றிய டாக்டர் வி.ஜீவானந்தம், (பசுமை இயக்கம்) ஈரோட்டில் மாற்று மருத்துவனை ஒன்றை நடத்திக் கொண்டிருப்பதும், ஜெ.மோவின் நீண்ட கால நண்பர் என்பதும் தெரிந்தது.

மென்மையான குரலில் எனக்கும் புரியும்படியான எளிய ஆங்கிலத்தில் உரையாற்றினார் கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக். (ஜெயமோகனின் மொழிபெயர்ப்பில் இவரது சில சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு அவரது தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததை வாசித்த போது தமிழின் சமகால சிறுகதை உலகம் கிணற்றை விட்டு வெளியே வரவேண்டிய தருணம் ஏற்பட்டிருப்பதை உணர முடிந்தது.) உலகமயமாக்கத்தின் விளைவாக கன்னட சூழ்நிலையில் புத்தக வாசிப்பில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவையும் ஜெ.மோவுடனான நீண்ட கால நட்பையும் விவரித்தார்.

வீட்டுச் சோபாவில் சாய்ந்து கொண்டு 'ஊரின் வெள்ளாமை' பற்றி எச்சில் தெறிக்க விவரிக்கும் விவசாய 'பெரியப்பா' மாதிரி பார்வையாளர்களோடு மிகுந்த அன்யோன்ய மலையாளத்தில் உரையாடினார் கல்பற்றா நாராயணன்.

அப்போது நிகழ்நத ஒரு அதிசயத்தைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். அவர் மலையாளத்தில் உரையாடுவதை குறித்துக் கொண்டு உடனுக்குடன் அதை தமிழில் இலக்கிய வாசனையுடன் கூடிய வாக்கியங்களாக அமைத்து பார்வையாளர்கள் விளங்கிக் கொள்ளும்படி சொன்னார் ஜெயமோகன். கிறிஸ்துவ மதப்பிரச்சாரக் கூட்டங்களின் நினைவு வந்தாலும், என்னைப் பொறுத்தவரை இதை மொழியாளுமை கொண்டவரின் ஒரு சாதனையாகவே காண்கிறேன்.

..அந்தரங்க உறவுகளே சில காலத்திற்குப் பிறகு சலித்துப் போகிற சூழ்நிலையில் ஜெயமோகனுக்கும் தமக்கும் உள்ள நட்பும் உறவும் எவ்வித தடங்கல்களுமின்றி தொடர்கிறதைப் பற்றி விவரித்த கல்பற்றா நாராயணன், எப்போதும் சலிப்பில்லாத உற்சாகத்தோடு இயங்கும் ஜெமோவின் எழுத்து 'தசாவதார' வடிவங்களில் வெளிப்படக்கூடிய வீர்யமுள்ளது" என்றார்.

எப்போது வாசித்தாலும் அப்போதைய காலகட்டத்திற்கு பொருந்திப் போகிற, ஜெமோவின் எழுத்துக்களில் உள்ள நிரந்தரத் தன்மையைப் பற்றி வியந்துப் போற்றின யுவன் சந்திரசேகர் அதை நூலில் உள்ள பொருத்தமான வாக்கியங்களோடு விளக்கினார். 'புன்னகைக்கும் பெருவெளி' என்ற கட்டுரையை மிக அவசியமான பரிந்துரையாக முன்வைத்தார். இணையத்திலிருந்து விலகியே நிற்கும் யுவனை யாராவது விமர்சித்து எழுதினால் மாத்திரமே அதை நண்பர்கள் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வருவதாக சொன்னார். யுவனின் கவனத்தைக் கவருவதின் எளிய வழி, அவரை உச்சமாக திட்டி எழுதுவதே என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

வசந்தபாலனை சாய்ஸில் விட்டுவிடுவோம்.

பர்வீன் சுல்தானா தாம் ஜெமோவின் எழுத்துக்களினால் பாதிக்கப்பட்டிருப்பதை பிரத்யேக பட்டிமன்ற 'உரத்த' குரலில் வெளிப்படுத்தினார். 'உரத்த சிந்தனை' எனும் சொல்லாடல் பட்டிமன்ற பேச்சாளர்களிலிருந்து கிளைத்ததாக இருக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்டார்.

இளைஞரான பெரியாரியவாதி செல்வ புவியரசன், ஜெயமோகன் தம்முடைய எழுத்துக்களில் பெரியாரைப் பற்றியும் திராவிட இயக்கத்தை குறித்தும் திரித்து எழுதினதாக கருதியவைகளை ஆவேசமான குரலில் மறுத்தார். "ஜெயமோகன் ஒரு சினிமா வசனகர்த்தா' என்று சொல்வது எப்படி அபத்தமாக இருக்குமோ அப்படியே 'பெரியார் ஒரு சீர்திருத்தவாதி' என்று அவரை குறுகிய பார்வையில் நோக்குவது". என்றாலும் இவரின் பேச்சில் ஆவேசம் இருந்த அளவிற்கு அழுத்தமோ, உரையாடலில் கோர்வையோ இல்லாமலிருந்ததாக எனக்குத் தோன்றியது. (மொக்கையாக இருந்தாலும் அது தமக்கான ஜால்ராப் பதிவாக இருந்தால் அதை மாத்திரமே தம்முடைய தளத்தில் வெளியிடும் சாரு போன்றவர்கள் மாற்றுச் சிந்தனைகளை அங்கீகரிக்கும் அடிப்படை பாடத்தை இந்நிகழ்விலிருந்து கற்றுக் கொள்ளலாம் என்பதும் தோன்றியது).

வழக்கத்திற்கு மாறாக மதனின் பேச்சு சுவாரசியமாக இருந்தது. சில ஆளுமைகளைப் பற்றியும் சில சமாச்சாரங்களைப் பற்றியும் எளிதில் கருத்து சொல்ல முடியாத ஒரு கட்டுப்பெட்டியான, அராஜகமான சூழ்நிலை தற்போது இருப்பதாகவும் குறைந்தபட்சம் எழுத்தாளர்களாவது அந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்கும் பணியை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்பது இவர் உரையாடலின் சாரமாக இருந்தது.

()

தர்க்கத்தின் அடிப்படையிலேயே உண்ணும் உறங்கும் எழுதும் ஜெயமோகன், ஏற்புரையில் மற்றவர்களின் கருத்துரைகளைப் பற்றி எதிர்வினை செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் முன்னரே தயாரிக்கப்பட்ட பத்து (ரெடிமேட்) சட்டைகளோடு தம்முடைய பேச்சை முடித்துக் கொண்டார். ஜெமோவை சந்தித்து ராட்சசத்தனமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய எழுத்துக்களின் வேகத்தையும் விழாவில் வெளிப்பட்ட உடனடி மொழிபெயர்ப்பின் நேர்த்தியையும் வியந்தேன். நண்பர் சிவராமனின் உதவியோடு ஏற்கெனவே அறிமுகமிருக்கிற சக பதிவர்களோடு உரையாட முடிந்ததோடு சில புதிய பதிவர்களின் அறிமுகமும் நிகழ்நதது. கவிஞர் ராஜசுந்தரராஜனையும் யுவன் சந்திரசேகரையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். தேநீர் அருந்தும் சம்பிராதயத்தோடு அன்றைய நாள் நிறைந்தது.

சாரு மற்றும் ஜெயமோகன் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளிலிருந்த வித்தியாசங்களையும் அவற்றின் பின்னேயிருக்கும் சமூகக் காரணங்களை இன்றைய நுகர்வு கலாசார பின்னணியில் யோசிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. சாரு தம்முடைய நூல் வெளியீட்டு நிகழ்வு இளமைக் கொண்டாட்டமாக நிகழ்ந்ததாக புளகாங்கிதப்படுகிறார். இன்றைய தலைமுறையினர் தம்முடைய இளமை உற்சாகத்தை செலவழிக்க ஒன்றுமில்லாத பரபரப்பான புள்ளிகளை நோக்கி மாத்திரமே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் பின்பு யதார்த்தம் முகத்தில் அறைந்ததும் தெளிந்து அங்கிருந்து விலகி விடுகிறார்கள் என்பதும் தொடர்ச்சியான சமூக நிகழ்வு. சாரு இதிலெல்லாம் மயங்கிப் போகாமல் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிற தம்முடைய எழுத்துக்களை பலப்படுத்திக் கொள்வதன் மூலம்தான் தன்னை மீட்டுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தால் சரி.

துரதிர்ஷ்டவசமாக எஸ்.ரா நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்ல முடியாமலிருந்தது. சென்றிருந்தால் ஞாநி குறித்த சாருவின் இந்த திரித்தல் பேச்சையும் கண்டு கொள்ள இயன்றிருக்கும்.

disclaimer: (நிகழ்வில் உரையாடப்பட்டவை என்னுடைய நினைவிலிருந்து எழுதப்படுவது; கருத்துப் பிழைகள் இருக்கலாம்)

image courtesy: original uploader


suresh kannan

14 comments:

துளசி கோபால் said...

அடடா..... உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை விட்டுட்டேனே.....

பர்வீன் சுல்தானா, பட்டிமன்றப் பேச்சாளரா?

யாருன்னு தெரியாமல் ஒரு குழப்பம் இருந்தது.

இனிய மாலைப்பொழுதாக அமைந்தது.

Unknown said...

//அப்போது நிகழ்நத ஒரு அதிசயத்தைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். அவர் மலையாளத்தில் உரையாடுவதை குறித்துக் கொண்டு உடனுக்குடன் அதை தமிழில் இலக்கிய வாசனையுடன் கூடிய வாக்கியங்களாக அமைத்து பார்வையாளர்கள் விளங்கிக் கொள்ளும்படி சொன்னார் ஜெயமோகன். கிறிஸ்துவ மதப்பிரச்சாரக் கூட்டங்களின் நினைவு வந்தாலும், என்னைப் பொறுத்தவரை இதை மொழியாளுமை கொண்டவரின் ஒரு சாதனையாகவே காண்கிறேன்.
//

மொழியாளுமை தான் என்பதை மறுக்க முடியாதென்றாலும் எனக்கென்னவோ இதைப் படிக்கும்போது மயில்சாமி & விவேக் சென்னைத்தமிழ் & இலக்கியத்தமிழ் மேடைப்பேச்சு நினைவுக்கு வருது ;-)

Ashok D said...

பகிர்வுக்கு நன்றிங்க...

லேகா said...

சுரேஷ்,

ஜெமோவின் புத்தக வெளியீடு குறித்த பதிவுகளுக்கு ஆர்வமாய் இருந்தேன்.

நிகழ்ச்சிக்கு என்னால் வர இயலவில்லை.நிகழ்ச்சி குறித்த உங்க பதிவு அருமை.வெளியான ஜெமோவின் புத்தகங்கள் குறித்தும் சொல்லி இருக்கலாம்..

ரா.கிரிதரன் said...

//பின்நவீனத்துவ சூழலுக்கு ஏற்றாற் போல் அடுக்குகளில் புத்தகங்கள் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டு மரபை கட்டுடைக்கும் இந்த நூலகத்திற்கு//

// பத்து (ரெடிமேட்) சட்டைகளோடு தம்முடைய பேச்சை முடித்துக் கொண்டார்//

ரெடிமேட் உரையோ!!
எழுத்துக்கிடையே இருந்த நக்கலை மிக ரசித்தேன். நல்ல நடையுடன் கூடிய, மிகத் தெளிவான விவரணை.

ரா.கிரிதரன்

Anonymous said...

real youth are not reading JM or CN because they are really the real youth :).Wish tamil has a good looking female authoress who also writes well and with some intelligence.

கானகம் said...

நல்ல விவரனை. சாருவைப் பற்றிய கருத்தைத் தவிர்த்திருக்கலாம்..

Anonymous said...

அந்தப் படத்தில் எதுவும் உள்குத்து இல்லையே:). ஜெமோவிற்கு ஒன்று சாருவிற்கு இரண்டா :). எதற்கும் ஜெமோவின் தளத்தில் இணைப்பைக் கொடுத்து ஜென்மசாபல்யம் அடையவும் :).
பட்டிமன்ற பேச்சாளர் ஜெமோவின் நூல் வெளியீட்டு கூட்டத்தில், ஜோமோவின் அடுத்த விழாவில் வாலி,வைரமுத்துவை எதிர்பார்க்கலாம்.

யுவகிருஷ்ணா said...

சாருமேனியாவால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறீர்கள் என்பது குறித்து மகிழ்ச்சி :-)

துளசி கோபால் said...

விவாதம் சூடாகும் நேரமா இருக்கு இங்கே. இன்னொன்னும் சொல்லிக்கலாம்.

சாரு & ஜெ.மோ கம்பேரிஸனா ஒன்னு கவனிச்சேன்.

அவர் கேரளாவில் என்னைப் பற்றிக் கேளுங்கள்ன்னு சொல்றார்.

இவரது பெருமைகள் கர்நாடகாவில் பரவி இருக்குன்னு விவேக் ஷன்பேக் சொல்றார்.

அவருக்கு 0 டிகிரின்னா இவருக்கு 360 டிகிரி. எல்லாத்திக்கும் பார்வை சுழன்று எல்லாத்தையும் பற்றி எழுதறாருன்னாங்க.

ஆனாலும் தமிழ் படிக்கத்தெரியாத விவேக்கிற்கு ரெண்டு புத்தகம் கிடைச்சதைப் பார்த்து, ஓடிப்போய் 'எடுத்துக்கலாமுன்னு' தோணியதென்னமோ நெஜம்.

கல்பற்றாவின் பேச்சில் ஒன்னு ரெண்டு சொற்களை ஜெ.மோ. மொழி பெயர்க்காம நழுவிட்டார் சபை நாகரிகம் கருதின்னு நினைக்கிறேன்.

அதுலே ஒன்னு 'சும்பிக்க அறியாத்தவண்டே சும்பனம்' :-)


பர்வீன் சுல்த்தானா மெக்காவுக்குப் போகும் புனிதப்பயணத்தின் ஆரம்பத்துலேயே 'பொய்' சொல்லிட்டாங்க.

ஜெமோவும் தன் பத்துச் சட்டைகளில் கருப்பர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இது அமெரிக்காவில் ரேஸியல் ஸ்டேட்மெண்ட் ஆகுது. சொன்னது இந்தியாவில் என்பதால் பரவாயில்லையான்னு தெரியலை.

இதெல்லாம் என் சொந்தக் கருத்துகள்தான்.

குப்பன்.யாஹூ said...

thanks for sharing

Dinesh said...

hmm.. gud one... nan jeyamohan book function pathi entha padhivaravathu pottu erukingalaennu pathaen.. unga padhiva thavar vaera ethum enakku kidakala..

neenga yarachum jeyamohan book review pathi eluthuna blog eruntha engae kudukalamaeee?

ethavathu potos erunthalum upload pannunga?

Boston Bala said...

நன்றி!

ஈசு தமிழ் said...

பர்வீன் சுல்த்தானா ஜெயமோகனின் தீவிர வாசகியாமே ? பட்டிமன்ற பேச்சாளர் வாசகியாக இருக்க கூடாதா என்ன ?