Saturday, December 26, 2009

இருபத்தி நான்கு கண்கள் - ஜப்பானியத் திரைப்படம்

Keisuke Kinoshita-ன் 'Twenty four eyes' (1954) என்கிற இந்தத் திரைப்படம் பள்ளி ஆசிரியை ஒருவரைப் பற்றியது. ஜப்பானிய கிராமமொன்றின் பள்ளிக்கூடத்தில் தன்னுடைய பணியைத் துவங்கிற அவளுடைய வாழ்க்கையை இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னுமான பின்னணியில் சுமார் இருபது வருடங்கள் பின்தொடர்கிறது இத்திரைப்படம்.



தன்னுடைய முதல்வகுப்பை 12 சிறுவ/சிறுமிகளுடன் (அதைத்தான் படத்தின் தலைப்பு குறிப்பிடுகிறது) துவங்குகிற அவள், மிகுந்த தாய்மை உணர்வுடன் குழந்தைகளுக்கு போதிக்கிறாள். அவளுக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற நேச உணர்வு கவித்துவமாகவும் நெகிழ்ச்சியாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் வறுமையும் கல்வியைத் தொடர இயலாத சிறுமிகளின் குடும்பப் பின்னணியும் அவளைத் துயருரச் செய்கிறது. போருக்கு எதிராக உரையாட முடியாத சூழலும் சிப்பாய்களாவதுதான் தமது இலட்சியம் என சிறுவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் அதிகார மையத்தின் செயல்பாடுகளும் அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி ஆசிரியை தொழிலிலிருந்து விலகச் செய்கிறது. கப்பல் படையில் பணிபுரியும் தன்னுடைய கணவனை இழக்கும் அவள் தன்னுடைய குழந்தைகளுடன் வறுமையின் பிடியில் சிக்குகிறாள். பிறகு வயதான காலத்தில் தம்முடைய பழைய பள்ளிக்கே ஆசிரியையாக வருகிறாள். பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் அவளுடைய வறுமையை உணர்ந்து ஒரு சைக்கிளை பரிசாக வழங்குகின்றார்கள். அவர்களுடனான நெகிழ்ச்சியான நினைவுகளுடன் படம் நிறைகிறது.

()

படத்தில் என்னை மிகப் பிரதானமாக கவர்ந்தது இதன் ஒளிப்பதிவு. இதை ஒரு காவியப்படம் என்கிற பிரக்ஞையுடனும் முன்தீர்மானத்துடனும் ஒளிப்பதிவாளர் Hiroyuki Kusuda பதிவு செய்திருக்கிறாரோ என்கிற பிரமிப்பு படம் முழுவதும் என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அந்தக் கிராமத்து நிலப்பகுதிகளின் பிரம்மாண்ட பின்னணியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பிரேம்கள் புகைப்படப் போட்டியில் பரிசு பெற்ற அழகுணர்ச்சியுடனும் கலைத்தன்மையுடனும் இருக்கின்றன. ஒளிப்பதிவு குறித்து ஆர்வம் கொண்டிருப்பவர்கள் தவற விடக்கூடாது படைப்பிது.



ஆசிரியையாக Hideko Takamine மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தாய்மை நிரம்பிய அவரது முகம், மற்றவர்களின் துயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அழுது விடும் அந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. படத்தின் ஊடாக ஜப்பானிய கிராமத்தின் கலாசாரமும் மக்களின் வாழ்க்கை முறையும் வெளிப்படுகிறது. படத்தின் துவக்கத்தில், சைக்கிளை ஓட்டிச் செல்லும் ஆசிரியையையும் அவளுடைய நவீன உடையையும் கிராம மனிதர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். சில பெண்கள் தங்களுடைய நிலையுடன் ஒப்பிட்டு பொறாமை கொள்கின்றனர். பெரும்பாலான சிறுவர்களின் கனவு படையில் சேர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. "ஏன் நீ ஒரு விவசாயி ஆகவோ, மளிகைக்கடைக்காரன் ஆகவோ உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடாது?" என்று மாணவர்களிடம் கேட்கிறாள் ஆசிரியை. "நீங்கள் ஒரு கோழை" என்கிறான் ஒரு சிறுவன். மாணவர்களின் குறும்பு காரணமாக காலை ஒடித்துக் கொள்ளும் ஆசிரியையைக் காண சிறுவர்கள் நீண்ட தூரம் நடந்து வரும் காட்சிகள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை.

அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டு கல்வி கற்றவர்களும் அஞ்சும் சூழ்நிலையை சில காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. போருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட ஒரு புத்தகத்தை வைத்திருந்த காரணத்திற்காக ஒரு ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். "அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் நியாயமானவைகளாத்தானே தோன்றுகின்றன?" என்று ஆசிரியை கேட்கும் போது தலைமையாசிரியர் மிகுந்த பதட்டமடைந்து விடுகிறார். "ஆசிரியர்களாகிய நாம் தேசத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்" என்று அந்தப் புத்தகத்தை எரித்துவிடுகிறார். மேலும் முதலாளித்துவம் பற்றி மாணவர்களுடன் உரையாடும் அவளைக் கண்டிக்கிறார்.

()

ஒளிப்பதிவின் நேர்த்தி ஒருபுறம் எனக்கு 'பதேர் பாஞ்சாலி'யை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது என்றால் மறுபுறம் படத்தின் உள்ளடக்கம், Zhang Yimou-ன் "Not one Less" என்கிற சீனப்படத்தை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. அந்தப்படத்திலும் கிராமத்து வறுமையான பின்னணியும் ஆசிரியை குழந்தைகளின் மீது கொள்ளும் அக்கறையும் நெகிழ்ச்சியாக வெளிப்பட்டிருக்கும்.

படத்தின் இயக்குநர் Keisuke Kinoshita, அகிரா குரோசாவைப் போல் சர்வதேச திரைப்படச் சமூகத்தில் புகழ் பெற்றவர் இல்லையெனினும் ஜப்பானியக் குடும்பங்களில் இவரது திரைப்படங்கள் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. சிறுவயது முதலே திரைப்பட உருவாகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர், பல துறைகளில் உதவியாளராக இருந்த பின்னரே இயக்குநராக முடிந்திருக்கிறது. இவரது பெரும்பாலான திரைப்படங்கள் போரின் பாதிப்பு சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றியே உரையாடுகின்றன.

ஆங்கிலேயக் கல்விமுறை நம்மை ஆட்டு மந்தைக் கூட்டங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைப் பற்றிய எந்தவொரு உணர்வும் இன்றி, சம்பளக் கமிஷனைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத சமகால கல்விச் சூழலை இப்படத்துடன் பொருத்திப் பார்க்கும் போது பெருமூச்சு மாத்திரமே எழுகிறது.

image courtesy: wikipedia

suresh kannan

4 comments:

லேகா said...

சுரேஷ்,

அறிமுகத்திற்கு நன்றி.ஒளிப்பதிவை குறித்த உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகின்றது.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி

Toto said...

ரொம்ப‌ அழ‌கான‌ ப‌கிர்வு ஸார். இதை ப‌டிக்கும்போது தி ரோட் ஹோம் ப‌ட‌த்தின் காட்சிக‌ள் நினைவுக்கு வ‌ருகிற‌து.

-Toto
www.pixmonk.com

Joe said...

நல்ல இடுகை, சுரேஷ்! பகிர்வுக்கு நன்றி.

நேரம் கிடைத்தால் திரைப்படத்தைப் பார்க்க முயல்கிறேன்.